சேறும் கழிப்பிடமும்


சேறு

சேறில் விழுந்த அனுபவம் ஒன்று அண்மையில் ஏற்பட்டது. அலுவலகம் முடிந்து மெட்ரோ ரயில் நிலையம் வரை ஆட்டோ ரிக்‌ஷாவில் செல்வது வழக்கம். என்றுமில்லாத அதிசயமாக ஒரு மாலையில் கேட்-டுக்கருகில் என் அதிகாரி என்னை தன் காரில் ஏற்றிக் கொண்டு சென்றார். அவர் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்தில் விட்டு விடுவதாக திட்டம். வழக்கமாக அவருடைய காரில் பயணிக்கும் செகரட்டரி ஷிகா அன்று வேலைக்கு வராததால், இப்பாக்கியம் எனக்கு கிடைத்தது.

செக்டர் 55-ஐ அடைய இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று NH-8 வழியாக மானேசர் டால், ஹீரோ ஹோண்டா சௌக், ஜர்சா ஜங்ஷன்…பிறகு சிக்னேச்சர் டவரிலிருந்து வலப்புறம் திரும்பி கால்ஃப் கோர்ஸ் ரோடு வழியாக செக்டர் 55-ஐ அடைவது. இன்னொன்று, மானேசர் டால் தாண்டியவுடன் ராங் சைட் எடுத்து வலப்புற சர்வீஸ் ரோடில் நுழைந்து நூறடி தாண்டிய பிறகு வலப்புறம் செல்லும் காட்டு வழியாக செல்வது.

“காட்டு வழி” என்றால் நிஜமாகவே காடு அல்ல. காடு மிக சீக்கிரமாகவே நகரமாகிக் கொண்டிருந்தது. அங்கும் இங்குமாக ராட்சத கட்டிடங்கள் முளைத்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் பாதை மட்டும் மண் பாதைதான். இந்தியாவின் சில பிரபலமான கட்டிட நிறுவனங்களின் ஆடம்பர அபார்ட்மெண்டுகள் வானத்தை தொட்டன. பாதைகளோ, கடைகண்ணிகளோ இல்லாத இடத்தில் யார் வீடுகளை வாங்குவார்கள் என்று எனக்கு தோன்றிய கவலை கட்டிட நிறுவனங்களுக்கு இருந்ததாக தெரியவில்லை.

மண் பாதைக்குள் நுழையும் வரை அலுவலகத்தின் என் சக ஊழியர்களை பற்றி ஏதேனும் வம்பை என் வாயிலிருந்து வரவழைக்கும் எண்ணத்தில் வேண்டுவிடை தரும் வினாக்களாக கேட்டுக் கொண்டு வந்தார் பாஸ். நான் மசியவில்லை. ஷார்ட்-பிட்ச் பந்துகளுக்கு தலையை குனியும் பேட்ஸ்மேன் போல எந்த விடைகளையும் தராமல் சமாளித்தேன்.

நான் சேறு என்று சொன்னது பாஸின் காரில் சேர்ந்து பயணம் பண்ணுவதை குறிக்கும் உருவகமாக என்று நினைத்திட வேண்டாம். புதர்களாக மண்டிக்கிடந்த ஒரிடத்தில் மூன்று மண் பாதைகள் பிரிந்தன. நன்றாக இருட்டிவிட்டிருந்தது. பாஸ் அமைதியாக என்னைப் பார்த்தார். நான் ஒன்றும் சொல்லவில்லை. வலப்புறமாக பிரிந்த பாதையில் வண்டிகள் சென்ற தடங்கள் தெரிந்தன. டக்கென்று பாஸ் காரை அந்த பாதையில் திருப்பினார் (வீசினார் என்று தான் சொல்ல வேண்டும்!). பாதை இறங்கியது. இல்லை…பாதை இல்லை. கார் இறங்கியது. இருட்டு காரணமாக மண்ணில் படிந்திருந்த ஈரம் தெரியாமல் போனது. காரின் டயர் ஈர மண்ணில் புதைந்தது. கார் முன்னாலும் செல்லவில்லை. பின்னாலும் செல்லவில்லை. பாஸ் குற்றவுணர்வுடன் பார்த்தார்.

நான் இறங்க எத்தனித்தேன். ஜவ்வு மாதிரி ஏதோவொன்றில் என் ஷூ ஒட்டியது. நான் ஒரு சகதியில் இறங்கியிருக்கிறேன். இரண்டு ஷூவும் ஆழ மண்ணில் பதிந்திருந்தன. நான் மிகுந்த விசையுடன் ஒரு காலை எடுக்க முயற்சித்த போது சாக்ஸ் அணிந்த பாதம் மட்டும் வெளி வந்தது. உடல் சமநிலை தவறி சாக்ஸ் அணிந்த ஒற்றைக் காலை சேற்றிலேயே வைக்க வேண்டியதாகிவிட்டது. கால் சேற்றில் மூழ்கா வண்ணம் காக்கிறவன் போல் என் கையை காலிடம் கொண்டு போவதற்காக குனிகையில் மீண்டும் ஒரு சறுக்கல். சேற்றிலேயே விழுந்து என் புட்டம் சேறில் உட்கார்ந்துவிட்டது. சுதாரித்து எழுந்து நின்றேன். கழண்டு போன ஷூவை கையில் எடுத்தேன். ஸ்லோ-மோஷனில் மெல்ல சேறை விட்டு வெளியே வந்தேன்.

தர்ம சங்கடத்துடன் பாஸ்-சை நோக்கினேன். பாஸ் நான் சேறில் விழுந்ததை கண்டு கொள்ளவில்லை. அவர் டிரைவர் சீட்டில் இருந்து இறங்கி யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார். அவர் இறங்கிய பக்கத்தில் சேறு இருக்கவில்லை. சேறுக்குள் வண்டியை ஒட்டிச் சென்றாலும் சேற்றில் காலை வைக்காமல் அவர் இறங்கிவிட்டார். அவர் வீட்டு வாட்ச்மேன் ஒரு ஜீப்பை அனுப்பினான். இரும்புச் சங்கிலியைக் கட்டி ஜீப்பால் கார் பின்னால் இழுக்கப் பட்டது. செக்டர் 55 வந்தடைந்ததும் நான் காரில் இருந்து இறங்கினேன். சேறு பூசிய கால் சட்டையுடன் மெட்ரோ ஸ்டேஷனுக்குள் நுழைய அவமானமாக இருந்தது. ரேடியோ கேப் ஒன்றை பிடித்து வீடு வந்தடைந்தேன் (டாக்ஸி ஃபேர் : 800 ரூபாய்). கேப் டிரைவர் இறங்கும் போது நான் உட்கார்ந்திருந்த சீட்டில் பூசியிருந்த மண்ணைப் பார்த்து முணுமுணுத்தான். வீட்டில் மனைவி ”என்ன அசிங்கம் பண்ணிட்டு வந்திருக்கீங்க?” என்று சத்தம் போட்டாள்.

சுத்தமாக குளித்து விட்டு ஷுவில் ஒட்டியிருந்த சகதியை நீக்க ஆரம்பித்தேன். ஒருவாறு ஷூக்களை சுத்தம் செய்த பின்னர், ’நாளை ஷிகா ஆஃபீசுக்கு வந்தால் தேவலை’ என்ற எண்ணம் ஓடியது. ஷிகாவுடன் போகும்போதும் பாஸ் இன்று வந்த காட்டுப் பாதை வழியாகத்தான் போவாரா?


கழிப்பிடம்

குஜராத்தில் உள்ள ஒரு பெரிய கூட்டுறவு நிறுவனத்துக்கு நாங்கள் சப்ளை செய்திருந்த சாக்கலேட் சுவை தரும் வாசனைப் பொடியை தரப்பிரச்னை காரணமாக நிராகரித்து விட்டார்கள். ஃபோனில் நன்கு டோஸ் அளித்துவிட்டு நேரில் வாருங்கள் என்று வாடிக்கையாளர் ஆணையிட்டார். அடுத்த நாள் காலை குஜராத் கிளம்பிப் போனேன். நான் செய்த தவறு – குஜராத் செல்கிறேன் என்று முன்னரே இதைப் பற்றி பாஸுக்கு சொல்லாதது. இதனால் பாஸ் ரொம்ப கோபம் அடைந்து விட்டார். நான் வாடிக்கையாளரின் வசவுகளை நேரில் வாங்கிக் கொண்டிருக்கும் போதே ஃபோன் மூலமாக பாஸின் திட்டுகளையும் கேட்டுக் கொண்டிருந்தேன். மாதமொரு முறை லண்டன் தலைமை அலுவலகத்துடன் நிகழும் மாதாந்திர பிசினஸ் ரிவ்யூ டெலி-கான்ஃபரென்ஸ் நடக்கும் தினம் பார்த்து நான் குஜராத் போனது தவறு தான். கஸ்டமர் ஆணையிட்டாலும் அதிகாரின் ஆணை தானே முதன்மையானது. மீட்டிங் முடிந்தவுடன் உடன் அடுத்த விமானத்திலேயே தில்லி திரும்ப வருமாறு அறிவுறுத்தப்பட்டேன்.

ஏற்கெனவே செய்திருந்த முன்பதிவை மாற்றினேன்; மதியம் இரண்டு மணி கிளம்பும் விமானத்தை பிடிப்பதற்காக காரோட்டியை அகமதாபாதை நோக்கி வேகமாக காரை செலுத்தச் சொன்னேன். ஒன்றரை மணி நேரத்தில் காந்தி நகரை எட்டினோம். “சார், நான் கார் ஓட்டும் பணிக்கு புதிதாக வந்தவன். எனக்கு வாந்தி வருகிற மாதிரி தோன்றுகிறது. சில நிமிஷங்களுக்கு காரை நிறுத்தட்டுமா?” என்று கேட்டான் டிரைவர்.

ஒரு பழைய கட்டிடம் முன்னால் காரை நிறுத்தினான் டிரைவர். “சார் நிம்பு பானி (லெமன் ஜூஸ்”) குடித்து விட்டு வந்து விடுகிறேன்” என்றான். எனக்கும் அடிவயிறு முட்டிக் கொண்டு வந்தது. அவசரமாக போக வேண்டும். நானும் காரில் இருந்து இறங்கி,கழிப்பிடம் எங்காவது இருக்குமா என்று பார்த்தேன். வாயில் வெற்றிலையை குதப்பிய வண்ணம் சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்த ஒருவரை கேட்டேன். “இக்கட்டிடத்தின் உள்ளே படிக்கட்டுகளுக்கு பக்கத்தில் இருக்கும்” என்றார்.

நான் வேகமாக கழிப்பிடத்தை அணுகினேன். ஒரே இருட்டாக இருந்தது. லைட்டை போட மாட்டார்களோ? யூரினல்கள் கூட தெரியவில்லை. அவ்வளவு இருட்டு. வேறு கழிப்பிடத்தை தேடி போகலாமா என்று ஒரு நொடி யோசித்தேன். சிறுநீர் தானே கழிக்க வேண்டும்! இதற்கு லைட் எதற்கு? குத்து மதிப்பாக ஒர் இடத்தில் நின்று கொண்டு ஜிப்பை திறந்து சிறுநீர் கழிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் குப்பென்று அடித்தது துர்வாசனை. வயிற்றை குழப்பிக் கொண்டு வந்தது. ஒரே சிறுநீர் நாற்றம். கழித்துக் கொண்டிருக்கிற சிறுநீரை நிறுத்த முடியாதே! இரண்டு மணி நேரம் காரில் ஏ சி யில் பயணித்த காரணத்தினாலோ என்னவோ, சிறு நீர் வந்து கொண்டே இருந்தது. வாந்தி எடுக்கிற உணர்வு முட்டியது. நெடுநாளாக சுத்தம் செய்யப்படாத அக்கழிப்பிடத்தின் துர்வாசனையில் திக்குமுக்காடிப்போனேன். சிறு நீர் கழித்து முடித்தவுடன் அவசரமாக ஜிப்பை போட்டுக்கொண்டு வெளியேறும் தருணத்தில், திடீரென்று லைட் எறிய ஆரம்பித்தது. மின்சாரம் திரும்பியிருக்கக் கூடும். மிகச் சில வினாடிகளுக்கு ஓட்டையான யூரினல்களையும் வடியாமல் தேங்கிக் கிடந்த சிறுநீர் வெள்ளத்தையும் பார்த்தேன். முடியவில்லை. வாயை அடைத்துக் கொண்டே வெளியே ஓடி வந்தேன். கட்டிட வாசலில் கட்டுப் படுத்த முடியாமல் வாந்தியெடுக்கும் போது என் கைகள் என் வாந்தியால் ஈரமாகியிருந்தன. நான் வாந்தியெடுப்பதை பார்த்து நிம்பு பானி குடித்துக் கொண்டிருந்த டிரைவர் எனக்காக இன்னொரு பாட்டில் நிம்பு பானி வாங்கி வந்தான். அந்த பாட்டிலை நான் கடைசி வரை திறக்கவில்லை. பல மணி நேரங்களுக்கு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ முடியவில்லை.

பின் குறிப்பு : நான் அனுப்பிய ஒரு சிறுகதை பிரசுரிக்கத் தக்கதல்ல என்று ஒர் இலக்கிய இதழ் திருப்பி அனுப்பி விட்டது. ”off-beat கதைகளை மட்டுமே நாங்கள் போடுகிறோம். எங்கள் இதழில் வெளி வரும் கதைகளை தொடர்ந்து படியுங்கள். எப்படியான கதைகளை எங்கள் எடிட்டோரியல் போர்டு தேர்வு செய்கிறது என்று உங்களுக்கு புரியும்” என்றார்கள். அவ்விதழின் கடந்த பத்து இதழ்களில் வெளியான சிறுகதைகளை ஒன்று விடாமல் வாசித்தேன். அக்கதைகளில் அதிகமாக வந்த தீம்-ஐ குறிச்சொல்லாக வைத்து கதை எழுதுவது என்று முடிவு செய்தேன். அப்படியான ஒரு முயற்சிதான் இந்த இடுகை. அப்பத்திரிக்கையின் இம்மாத இதழில் ஒரு சிறுகதையும் வெளியாகவில்லை. இப்பதிவை நான் முன்னரே எழுதி, அவர்களுக்கு அனுப்பியிருந்தால் ஒரு வேளை வந்திருக்கலாம்.

Advertisement

1 Comment

  1. Venkat Manian says:

    Good attempt in short story writing. Keep it up !

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.