எனக்கு மிகவும் பிடித்த திக் நியட் ஹான் கவிதை. இக்கவிதையை வாசிக்கும் போது லோட்டஸ் சூத்ரா நம் நினைவில் வராமல் போகாது. அதில் வரும் ததாகதர் உரை போன்று ஒலிக்கிறது இந்தக் கவிதை. இந்தக் கவிதை வரிகளை கருணை பற்றிய தியானத்திற்கான காட்சி ஊக்கியாக மறைந்த ஜென் மாஸ்டரின் சீடர்கள் பயன்படுத்துவார்களாம்.
இன்றிரவு முழு நிலவு என்பதனால் நட்சத்திரங்களை நம் பிரார்த்தனையில் அழைப்போம் பளீரென்ற ஒற்றைக் குவிய மனத்தினூடே தியானத்தின் ஆற்றல் இப்பிரபஞ்சத்தை அசைத்துக் கொண்டிருக்கிறது.
அனைத்து வாழும் உயிர்களும் இன்றிரவு இங்கு குழுமியுள்ளன அச்சத்தின் சமுத்திரத்தினுள் இப்பூமி மூழ்குதலைக் காண்பதற்கு
நடுஇரவு மணிச்சத்தம் ஒலித்தவுடன் பத்து திசைகளிலும் அனைவரும் தம் கைகளை பிணைத்து மகாகருணை எனும் தியானத்திற்குள் நுழைவர்
வாழ்வின் காயங்களைத் துடைக்கும் தூய நீரைப் போன்று இதயத்திலிருந்து கருணை சுரக்கிறது
மன மலையின் உயரங்களிலிருந்து புத்துயிர் தரும் தண்ணீர் அருவியாகப் பொழிந்து நெல் வயல்கள் ஆரஞ்சுப் புதர்கள் வழியே பாய்ந்து செல்லும்
விஷப்பாம்பொன்று இவ்வமுதத்தின் ஒரு துளியை ஒரு புல் தாளின் நுனியிலிருந்து பருகுகிறது அதன் நாவிலிருந்து விஷம் மறைந்துவிடுகிறது
மாரனின் அம்புகள் வாசமிகு மலர்களாக மாற்றம் கொள்கின்றன
நோய் நீக்கும் நீரின் அற்புதச் செயல் திறன் – புதிரான பரிமாற்றம்! ஒரு குழந்தை அந்தப் பாம்பை அதன் கள்ளங்கபடமற்ற கரங்களில் ஏந்துகிறது
புராதன தோட்டத்தில் இலைகள் இன்னும் பச்சை பனி மீது சிரிக்கும் மின்னும் கதிரொளி இன்னமும் புனிதவூற்றின் கிழக்கு நோக்கிய பாய்ச்சல்
அவலோகிதனின் கையிலிருக்கும் சிறு கிளையோ அல்லது என் இதயமோ நோய் தீர்க்கும் நீர் ஒன்றே
இன்றிரவு அனைத்து ஆயுதங்களும் நம் காலடியில் வந்து வீழும் தூசாக மாறும்
ஒரு மலர் இரு மலர்கள் ஒரு கோடி மலர்கள் பச்சை வயல்களில் தோன்றும்
என் பரிசுத்தக் குழந்தையின் இதழ் சிரிப்புடன் மீட்பின் வாயில் திறக்கும்
பிரிந்தபோது இருவருக்கும் மிக வருத்தம் இருவருமே அதை நாடவில்லை நிலவிய சூழல்தான் காரணம் பிழைத்தலுக்கான அவசியம் ஒருவரை வெகுதூரம் துரத்தியிருந்தது – அமெரிக்காவுக்கோ கனடாவுக்கோ அவர்களின் காதல் முன்பு போலிருக்கவில்லை ஈர்ப்பு மெதுவாக குறைந்து கொண்டு வந்தது ஈர்ப்பு வெகுவாக குறைந்தும் விட்டது எனினும், பிரிவிற்கு அது காரணமில்லை சூழல்தான் காரணம்- ஒரு வேளை அவர்களின் உணர்வு முழுக்க மறையுமுன் காலம் அவர்களை முழுதாக மாற்றிவிடுமுன்
ஊழானது கலைஞனாகத் தோன்றி இருவரையும் பிரித்திருக்கலாம் ஒருவருக்கு மற்றவர் என்றுமே இருபத்தி நான்கு வயது அழகான இளம் வாலிபராகவே நினைவில் நிற்கவேண்டுமென்பதற்காக
பிரம்மாண்டம் ஜாக்கிரதை ஓ மனமே
உன் இலட்சியங்களை விஞ்ச முடியாவிடில்
தயக்கங்கலந்த முன்னெச்சரிக்கையுடன்
அவற்றைப் பின்தொடர்
முன்னகர்ந்து செல்லச்செல்ல
மேலதிக விசாரணையும் கவனமும்
உள்ளவனாய் நீ இருக்கவேண்டும்
இறுதியில் ஜூலியஸ் சீஸரைப் போன்று
உச்சியை அடையும்போதோ
அத்தகைய புகழ்மிக்க மனிதனொருவனின்
இடத்தை நீ பெறும்போதோ
தமது பரிவாரங்கள் புடை சூழும் தலைவனைப் போன்று –
தெருவில் செல்லும் சமயங்களில்
அதிவிழிப்புடனிருத்தல் மிக அவசியம்
சந்தர்ப்பவசமாக கும்பலிலிருந்து வெளிப்பட்டு
கையில் கடிதத்துடன் அர்டெமிடோரஸ் உன்னை அணுகி
"இக்கடிதத்தை உடனே படியுங்கள்
உங்களை பாதிக்கும்
தீவிர விஷயங்கள் இதில் உள்ளன" என்கையில்
நிற்காமலிராதே
காரியங்களையோ உரைகளையோ
ஒத்திவைக்கத் தவறாதே
உன்னை கும்பிட்டு தலைவணங்குபவர்களிடமிருந்து
தலை திருப்பாமல் இருந்துவிடாதே
– அவர்களை பின்னர் சந்தித்துக் கொள்ளலாம் !
அமைச்சரவை கூட காத்திருக்கட்டும்
உடனுக்குடன்
அர்டெமிடோரஸின் எழுத்தை
நீ வாசித்தேயாக வேண்டும்
ரூமி பல காலமாக என்னை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கவிதைகள் என்னை புதிர்சுவைக்குள் மூழ்கி தத்தளிக்க வைக்கின்றன. அவர் எழுதிய பர்ஸிய மொழியில் இயங்கிய மேலும் சிலரும் ரூமியுடன் சேர்ந்து என்னை மேலும் பித்து நிலைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஹபீஸ், சொராப் செபெஹ்ரி, ஓமர் கய்யாம் – இம்மூவரும் ரூமியுடன் சில காலம் முன்னர் சேர்ந்து கொண்டவர்கள். இவர்களை வாசிப்பது ஆங்கில மொழியாக்கம் வாயிலாக என்பது ஒரு குறை. முக்கால் வாசி மொழிபெயர்ப்புகள் மூலத்தை சரியான வகையில் பிரதிபலிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. எனினும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வாயிலாகவாவது நம்மால் வாசிக்க முடிகிறதேயென்று திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
Rumi & Hafez
ஹஃபிஸ் கிட்டத்தட்ட ரூமி போலத்தான். படிமங்களும் குறியீடுகளும் நிறைந்த சுஃபி இலக்கியத்தின் பிதாமகர்கள் இவ்விருவரும். செபெஹ்ரி ஒரு நவீன கவி. ஓவியக் கலையிலும் தேர்ந்தவர் என்பதால் அவருடைய சொற்களுக்கு வர்ண தூரிகையின் குணம் உண்டு. இருப்பினும் ரூமி, ஹபீஸ் போன்றோரின் படைப்புகளைப் போன்று செபெஹ்ரியின் அனைத்து கவிதைகளையும் எளிதாக உளவாங்கிக் கொள்ள முடிவதில்லை. வாசகரின் உழைப்பை அதிகம் கோருபவையாக உள்ளன செபெஹ்ரியின் கவிதைகள்.
Sohrab Sepehri
ரூமிக்கும் இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த ஓமர் கய்யாம் வேறு ரகம். கணிதவியல், வானவியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்த கய்யாம் வாசகர்களை நன்கு ‘நக்கலடிக்கிறார்’. “எதைப் பற்றி எழுதியிருக்கிறேன் கண்டு பிடியுங்கள்” என்றுசவால் விடுகிறார். மது, போதை, என கிடடத்தட்ட அனைத்து “ருபைய்யத்”களிலும் வருவதைப் பார்த்து “இது நம்ம ஆளு” என்று “குடிமக்கள்” அவரை கொண்டாடுவதை பார்த்தால் தன் கல்லறையிலிருந்து ஓமர் கய்யாம் வயிறு குலுங்க சிரிக்கக்கூடும்.
எட்வர்ட் பிட்ஸ்ஜரால்ட்-டின் உலக புகழ் பெற்ற மொழியாக்கம் ஓமர் கய்யாமின் மீது உலக அரங்கில் வெளிச்சம் பாய்ச்சியது. ஈரடிகள் எனப்படும் ருபைய்யத்களை வெறித்தனமாக தன் வாழ்நாள் முழுதும் திரும்பத்திரும்ப மொழிபெயர்த்து வந்தார் எட்வர்ட். முதல்பதிப்புக்கு பிறகு தன் மொழிபெயர்ப்பில் பல திருத்தங்களை அவர் செய்தாலும் அவருடைய முதல் பதிப்பு கிட்டத்தட்ட ஒரு மறு-ஆக்கம் என்று பல பர்ஸிய மொழி வல்லுனர்களால் கருதப்படுகிறது.
கவிமணியின் தமிழ்மொழிபெயர்ப்பு ஒன்று ருபைய்யத்துக்கு உண்டு. அதிலிருந்து கீழ்வரும் வரிகள் மிகப்பிரபலம் :-
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு தெய்வகீதம் பலவுண்டு தெரிந்து பாட நீயுண்டு வையந் தருமிவ் வனமன்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ!
கவிமணியின் மொழிபெயர்ப்பு இனிமையானது. மரபுக்கவிதை வடிவத்தில் அவர் மறு ஆக்கமாக அதை மொழிபெயர்த்திருந்தார். இந்த மொழிபெயர்ப்பில் வரும் “கம்பன் கவி” என்னும் motif ஓமர் கய்யாமின் உலகில் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோல நம் மரபின் motif-களை பல இடங்களில் கவிமணி பயன்படுத்தியிருப்பார். மறு ஆக்கம் என்பதனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. எனினும், குறியீடுகளை, படிமங்களை திரும்ப திரும்ப சொல்லும் சுஃபி இலக்கியத்தின் ஒரு தன்மை கவிமணியின் மறு – ஆக்கத்தில் இல்லாமல் போய்விட்டதோ எனும் சம்சயம் எனக்குண்டு.
ஊழ் வலிமை, தர்க்கங்களின் பயனற்ற தன்மை, கடவுட்தன்மையின் துளி உலக விஷயங்களில் இருத்தல், கடந்த கால சோகங்கள் மற்றும் எதிர்கால கவலைகள் – இவற்றை ஒதுக்கி இன்றைய பொழுதில் மட்டும் கவனம்செலுத்துதல் – ஆகிய தரிசனங்களை வழங்கும் motif-கள் இந்தியமரபிலும் உண்டு. கவிமணியின் மொழிபெயர்ப்பில் அவை உரிமையுடன் பயன்படுத்தப்பட்டிருப்பது ருபைய்யத்தின் சுஃபி தன்மையை நீர்க்கச் செய்கிறதோ என்று நான் நினைக்கிறேன்.
ருபைய்யத்துக்கு ஒரு நவீன தமிழிலான மொழிபெயர்ப்புக்கு இடமிருக்கிறது. மரபு வடிவத்தின் வரம்புகளின்றி வசனநடையிலான மொழிபெயர்ப்பு சுஃபி தரிசனங்களை உள்ளவாறே தமிழில் நிகழ்த்திக்காட்ட உதவும். ஒரே irony – மொழிபெயர்க்க இன்னொரு மொழிபெயர்ப்பையே – எட்வர்ட் பிட்ஸ்ஜெரால்டையே நம்பவேண்டியிருக்கிறது! சுமார் ஏழெட்டு ருபைய்யத்களை சாம்பிளுக்காக மொழிபெயர்த்தேன். அனைத்து ருபைய்யத்துக்களையும் மொழிபெயர்க்கும் திட்டம் உண்டு.
—–
ஜாம்ஷிட் மன்னன் குடித்து கும்மாளமிட்ட சபைகளில் சிங்கமும் பல்லிகளும் குதித்து விளையாடுகின்றன கிறித்துவர்களை வேட்டையாடிய பஹ்ராம் மீளாத் துயிலில் கிடக்க அவன் தலையை காலால் உருட்டியது ஒரு வனக்கழுதை
__
வாதம், முயற்சி என முடிவிலி தேடலில் எத்தனை காலம்? பழமற்றோ கசந்த பழத்துடனோ கவலையில் மூழ்குவதை விட கனிந்த திராட்சையுடன் சந்தோஷத்தில் திளைப்பது சிறந்தது.
__
தோழர்களே வெகுகாலம் கழித்து வீட்டில் என் புது திருமணத்திற்கான கொண்டாட்டம் என் படுக்கையிலிருந்து மலட்டு தர்க்கத்தை துரத்தி விவாகரத்து செய்துவிட்டு திராட்சைக் கொடிமகளை மனைவியாய்க் கொண்டேன்
—
கோப்பையை நிரப்பு ; நம் காலுக்கு கீழ் காலம் நழுவிச் செல்லுதல் பற்றி பேசிப் பயன் என்ன? பிறக்காத நாளையும் இறந்த நேற்றும் – இவற்றுக்காக கவலைப்படுதல் வியர்த்தம், இன்று இனிதாயுள்ளபோது! (XXXVII)
__
சுழலும் சொர்க்கத்திடமே நான் கேட்டேன்- “இருட்டில் தடுமாறும் சிறு குழந்தைகளை வழிநடத்த என்ன விளக்கை வைத்துள்ளது ஊழ்?” சொர்க்கம் சொன்னது : “கண்மூடித்தனமான புரிதல்”
__
உள்ளே வெளியே மேலே, சுற்றியெங்கும், கீழே – வேறொன்றுமில்லை சின்ன பெட்டிக்குள் நடக்கும் மந்திர நிழல்கூத்து மெழுகுவர்த்தியே சூரியன் அதைச் சுற்றி வேதாள உருவங்கள் வருவதும் போவதுமாய்
__
ஆற்று விளிம்பில் ரோஜாக்களின் வீச்சு மூத்த கய்யாமிடம் செந்நிற, பழம்பானம் இருண்ட கோப்பையுடன் தேவன் உன்னை அணுகுகையில் அதை எடுத்துக்கொள் தயங்காதே (XLVIII)
__
யாரும் இதற்கு பதிலளித்ததில்லை ; துரதிர்ஷ்டகரமாக பண்ணப்பட்ட கிண்ணமொன்று மௌனம் காத்து பின்னர் பேசியது: “மோசமான அனைத்துடனும் சாய்வு கொண்டிருத்தலால் அவர்கள் என்னை நிந்திக்கிறார்கள்; குயவனின் கை அதிர்ந்ததா என்ன?” ( LXIII)
சில சமயங்களில், குறிப்பாக, பதற்றமாகக் கழிந்த நாளின் இரவுப்போதில் கவிதை வாசிக்கத் தோன்றும். இப்போதெல்லாம் அதிகமும் இரண்டு கவிஞர்களின் கவிதைகள் தாம் மனதை ஆற்றுப்படுத்துபவையாக இருக்கின்றன. ரூமி மற்றும் ரியோகன். மெல்ல மெல்ல மனதின் பரபரப்பை குறைத்து உறக்கத்துக்கு முன்னதான ஆல்பா ஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்பவையாய் உள்ளன இவ்விருவரின் கவிதைகளும். இது என் சொந்த அனுபவந்தான். எல்லோருக்குமே இக்கவிதைகள் இதே குளிர்ச்சியை அளிக்குமா எனத் தெரியாது.
சொந்த வாழ்வில் கிடைத்த ஓர் அனுபவம் அளவற்ற மன அவஸ்தையை கொடுத்து கொண்டிருந்தது. சதா அது பற்றிய சிந்தனையோட்டத்தினால் என் மனத்தில் மிகுந்த உளைச்சல். உடனடியாக அந்த அனுபவத்தின் விளைவைச் சரி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. என்ன செய்யவேண்டும் என்று தெரியும். ஆனால் செய்யமுடியாத சூழ்நிலை. உதவியற்ற ஒரு நிலை.
நேற்றிரவு தூக்கமே வரவில்லை. கவனத்தை திசை திருப்ப பலவிதங்களில் முயன்றேன். ரூமி ஞாபகம் வந்தார். The Essential Rumi புத்தகத்தைப் புரட்டினேன். எந்த குறிப்பான நோக்கமுமில்லாமல் ஒரு பக்கத்தில் நின்றேன்.
எனக்கென்ன ஆசையா
அவளோடு காலங்கழிக்க
அவள் பூசிக் கொள்ளும் வாசனையோ
அல்லது அணிந்து கொள்ளும் பிரகாசமான உடைகளோ –
இவை காரணமல்ல
அவளுடைய வெறுப்பு படிந்த பார்வையை
சகித்துக் கொள்ளுதல்
என்னுள் வலிமையையும் பொறுமையையும் வளர்த்தெடுக்கிறது
அவள் என் பயிற்சி
இன்னோரு துருவப்பாதி இல்லாவிடில்
எதுவும் தெளிவுறுவதில்லை
இரு பதாகைகள்
ஒன்று கருப்பு இன்னொன்று வெள்ளை
இரண்டுக்கும் நடுவில் அன்றோ தீர்வு பிறக்கிறது
பாரோவுக்கும் மோசஸுக்கும்
நடுவில் செங்கடல் போல
மெலிதான அதிர்வு என்னுள். என்னுடைய சங்கடத்தை ரூமி அறிந்து கொண்டாரோ? எந்த அனுபவக் கூண்டுக்குள் சிக்கியுள்ளாயோ அதனுள்ளேயே இரு. வலிமையையும் பொறுமையையும் வளர்த்தெடு.
The Essential Rumi-யை மூடி வைத்தேன். One Robe One Bowl எனும் ரியோகனின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை கையிலெடுத்தேன். கண்ணை மூடிக் கொண்டு ஒரு பக்கத்தை பிரித்தேன்.
அழகு இருந்தால்
அசிங்கம் இருந்தாக வேண்டும்
சரி என்ற ஒன்று இருந்தால்
தவறு என்ற ஒன்றும் இருந்தாக வேண்டும்
அறிவும் பேதைமையும் ஓர் இணை
மயக்கமும் ஞானமும்
பிரிக்கப்பட முடியாதவை
இது பழைய உண்மை
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதென
நினைக்காதே
“இது வேண்டும் அது வேண்டும்”
என்பது முட்டாள்தனமின்றி வேறில்லை
நான் உனக்கொரு ரகசியத்தைச் சொல்வேன்
“அனைத்து பொருட்களும் நிரந்தரமில்லாதவை”
ரியோகனுக்கும் என்னுடைய கவலை பற்றித் தெரிந்துவிட்டிருக்கிறது ! “இது வேண்டும் அது வேண்டும்” என விழைவது முட்டாள்தனமின்றி வேறில்லை என்று வைகிறார் ரியோகன். “எதுவும் நிரந்தரமில்லை” என்றொரு “ரகசியத்தையும்” பகிர்ந்திருக்கிறார்.
நண்பர்கள் கொடுத்த பாடங்களை அளவிலா ஆச்சரிய உணர்வுடன் சிந்தித்தவாறே தூங்கிப்போனேன்.
மலைகளின் உச்சிகளிலிருந்து காடுகளினூடே கிராமங்களினூடே வளைந்து செல்லும் பாதையில் தான் வந்தவழியை பின்திரும்பி நோக்குகிறாள் தன் முன்னம் பரந்து விரியும் கடலை நோக்குகிறாள் இதற்குள் நுழைவது என்பது நிரந்தரமாக மறைந்துபோவதைத் தவிர வேறேதுமில்லை ஆனால் வேறு வழியில்லை!
நதி பின்திரும்பிச் செல்ல முடியாது யாரும் பின்திரும்பிச் செல்ல முடியாது இந்த இருப்பில் பின்திரும்பிச் செல்லுதல் சாத்தியமில்லை கடலுள் நுழையும் இடர்பாட்டை அது சந்தித்துத்தானாக வேண்டும்! ஏனெனில் அப்போதுதான் அதன் பயம் விலகும் ஏனெனில் அங்குதான் நதி ஒன்றைப் புரிந்து கொள்ளும் – இது கடலுக்குள் மறைந்து போவதைப் பற்றியதன்று, கடலாக மாறுவதைப் பற்றியது
I saw a doorkeeper who made the guests wait at the entrance of a crowded eatery and let them in as the rush became thin. Memories that cannot tolerate the present state and pass without a pause. Mull over sufferings of the past. Think about the future and fret. Can I get a doorkeeper who would stop the intrusive memories at the doorstep, check and filter through inside?