My Octopus Teacher

முக்குளிப்பவர் ஒருவருடன் நட்புகொள்ளும் ஓர் ஆக்டோபஸ் பற்றிய ஆவணப்படம் My Octopus Teacher. இரைகளை வேட்டையாடும் முறை, வேட்டையாட வரும் உயிரினங்களிடமிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் என தன் வாழும் முறையை படம் பிடிக்க மனித நண்பனை அனுமதித்தது போல் ஒத்துழைத்திருக்கிறது அந்த ஆக்டோபஸ். மை வீசி இரைக்காகத் துரத்தும் உயிரினங்களின் பார்வையிலிருந்து மறைந்து போதல், தோலின் நிறம், அமைப்பு, உடலின் வடிவம் அனைத்தையும் கண நேரத்தில் மாற்றிக்கொண்டு வேட்டையாட வரும் மிருகங்களின் கண்ணில் படாதிருத்தல், சுறா போன்ற மூர்க்கமான மிருகங்களிடமிருந்து புத்தி சாதுர்யத்தால் தப்பித்தல் – மனித இனம் தோன்றுவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்ட ஆக்டோபஸ் அதன் ஒவ்வொரு இயக்கத்திலும் நம்மை பெருவியப்புக் கொள்ளச் செய்கிறது. அது தன் இரையை வேட்டையாடும் விதமோ நம் வியப்பை பல மடங்கு உயர்த்திவிடுகிறது. அதன் எண்கைகளின் அதிவேகம் ஆக்டோபஸ்ஸின் இரை தேடுதலின் முக்கிய அம்சம். இரையினத்துக்கேற்ற மாதிரி வேட்டைத் திட்டத்தை மாற்றிக்கொள்ளுதல் இன்னொரு சிறப்பம்சம். நண்டை வேட்டையாடுகையில் கைக்கொள்ளும் உத்தியை அது சிப்பி மீனை வேட்டையாடும் போது கைக்கொள்வதில்லை. வேட்டையின்போது அதன் கைகள் துண்டித்துவிடுகையில் காயங்களுக்குத் தானே சுயசிகிச்சை செய்து கைகளை மீள்-வளர்ச்சி செய்துகொள்ளும் விதம் – வியப்பின் சிகரம்! இனப்பெருக்கம் இந்த உயிரினத்தின் மரணத்துக்கு வித்திட்டுவிடுகிறது. ஆண் ஆக்டோபஸ் புணர்ச்சிக்குப் பிறகு சுய-அழிவை நோக்கிப் பயணப்படுகிறது. உணவு உட்கொள்ளாமல், செல்கள் வளர்ச்சியுறாமல், அதன் இயக்கங்களை ஒருங்கிணைக்காமல் மிக எளிதில் வேட்டையாடப்படும் விதத்தில் வளைய வருகிறது. பெண் ஆக்டோபஸ் முட்டைகளை அடைகாக்கும் வரை உயிர் தறிக்கிறது. பிறகு அதுவும் மரணத்தை தழுவி விடுகிறது. இந்த senescence என்னும் உயிரியல் செயல்முறை வேறு சில கடல்வாழ் உயிரினங்களிலும் உள்ளதாம்! ஆவணப்படத்தில் நாயகி ஆக்டோபஸ்ஸை வேட்டையாட முயன்று தோற்றுப்போன சுறாமீன் இறுதியில் அதன் இறந்த உடலைப் புசிப்பது நல்ல சோகநாடகம்!

கனவுக்குள் புகுந்த சிங்கம்

ஒரு நாள் என் கனவுக்குள் சிங்கமொன்று நுழைந்துவிட்டது. சுதந்திரமாக உலவிவந்த வனாந்தரப் பிரதேசத்திலிருந்து கடத்திவரப்பட்டு பின்னர் விலங்குகள் சரணாலயத்துக்குள்ளோ அல்லது சர்க்கஸில் கேளிக்கை ஜந்துவாகவோ அடைக்கப்பட்டுவிட்ட கோபம் அதனுள் பல நாட்களாகக் கனன்று எப்படியோ என் கனவுக்குள் நுழைந்து தப்பிக்க முயன்றது. சிங்கத்தின் கோபம் பற்றி நீ எப்படி அறிவாய் என்று வாசகர்கள் யாரேனும் கேள்வி கேட்கலாம். நம்பிக்கையின்மையை துறந்து என் கனவுக்குள் சிங்கம் நுழைந்ததை முழுதாக நம்பும் அவர்கள் தர்க்கரீதியாக “சிங்கத்தின் சீற்றம் இயற்கையானது” என்ற காரணத்தைத் தவிர சிங்கம் கோபமாயிருப்பதற்கான வேறெந்த காரணத்தையும் நம்ப மாட்டார்கள்.

உண்மையை‌ முதலிலேயே சொல்லி விடுகிறேன்! கனவில் நிஜமாகவே சிங்கம் வந்ததா என்பதை நான் பார்க்கவில்லை. இல்லை ஆரம்பத்தில் இருந்து சொன்னால் சரியாக புரியும்! ஒரு நாள் என் கனவில் முக பரிச்சயம் இல்லாத பெயர் அறியாத சிலருடன் ஒரு மேடான பகுதியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.நின்றிருந்தது யாருடன் என்று விழிப்பு நிலையில் யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் என் நண்பர்களா? அல்லது வெறும் பரிச்சயங்களா? அவர்களின் முகங்கள் ஞாபகமில்லை. கனவுகளில் வரும் முகங்கள் பொதுவாக அதிகமும் ஞாபகத்தில் இருப்பதில்லை. சிங்கம் நுழைந்த கனவில் நான் யாருடன் நிற்கிறேன் என்பது தெரியாவிட்டாலும் அவர்களுடன் மகிழ்வாக பேசிக் கொண்டிருக்கிறேன். கனவில் உரையாடும் காட்சி மௌனப்படம் போலவே நகர்கிறது. இது திரைப்படம் எனில் இயக்குனர் அங்கு பேசி நின்றிருந்த காட்சியை நல்ல இசையால் நிரப்பியிருப்பார்.

நாங்கள் நின்றிருந்த சில தப்படிகள் பின்னால் குறுக்கலாக ஒரு சரிவு. ஒரு வட்டமாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்த எங்களுக்குப் பின்னால் சரிவில் சிங்கமொன்று ஓடிப் போனதாக வட்டத்தில் நின்றிருந்த ஒருவர் சொல்லவும் வட்டம் ஒரு கணத்தில் கலைந்து போனது. அவர் சொன்னபடி பார்த்தால் சிங்கம் ஓடிப்போன சமயத்தில் அது என் முதுகுக்கு சில தப்படிகள் பின்னால் குறுக்காக ஓடியிருக்க வேண்டும். அதன் கோபத்தை ஆற்றிக் கொள்ள ஏதுவாக நின்று கொண்டிருந்த எங்களை அது ஏன் பார்க்கவில்லை என்ற கேள்விக்கு ஒரு விளக்கமும் இல்லை. சொல்லப்போனால் அதற்குப் பிறகு நாங்கள் அப்போது செய்த காரியத்தை நாங்கள் தர்க்க ரீதியாக விளக்கவே முடியாது. சிங்கம் ஓடின திசையிலேயே நாங்கள் தப்புவதற்காக ஓடினோம். சரிவுப்பாதையிலிருந்து பாதை வலப்புறமாகச் சென்றது. பாதையில் சிங்கம் என் பார்வையில் சிங்கம் படவில்லை. பாதையின் போக்கில் சிங்கம் வளைந்து சென்றிருக்கலாம். சிங்கம் சென்றிருக்கக் கூடிய பாதைக்கு எதிர்ப்பாதையில் அல்லவா நான் ஓடியிருக்க வேண்டும்? என்னுடன் இருந்தவர்களும் எனக்கு பின்னாலேயே ஓடி வந்தார்கள். தர்க்க ஒழுங்கு பற்றி கவலைப்பட அது சமயமில்லை. ஓடி ஒளிந்துகொள்வது தான் எங்கள் உடனடித் தேவையாய் இருந்தது.

கனவில் வரும் சொல்லாடலை யார் நிகழ்த்துகிறார்கள்? கனவைக் காண்பவரே கனவின் சம்பவங்களை பாத்திரங்களை கட்டுப்படுத்தும் கனவுகளை Lucid Dream என்று மனோதத்துவாசிரியர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட புத்தம்புது பிரிண்ட் திரைப்படத்தை காண்பது போன்று தெளிவாக விரிந்த இந்தக் கனவுக் காட்சியை Lucid Dream என்று சொல்லலாமோ?

ஐம்பது அடி ஓடியிருப்போம். சரிவு முடிந்து பாதை தட்டையானபோது வலப்பக்கம் ஒரு கதவு தென்பட்டது. கதவை லேசாக தொட்டதும் திறந்து கொண்டது. அதற்குள் முதலில் நான் நுழைந்தேன். என் பின்னால் ஓடி வந்தவர்களும் அந்த அறைக்குள் ஒருவர்பின் ஒருவராக நுழைந்து கொண்டார்கள். உள்ளே நான்கைந்து க்யூபிக்கில்-களில் கம்பியூட்டர் திரைகளைப் பார்த்துக் கொண்டு சில பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சிங்கம் ஓடிய விஷயத்தையோ அதற்குப் பயந்து அது ஓடிய பாதையிலேயே ஓடிய எங்களின் முட்டாள்தனத்தையோ அறியாதவர்களாக அமைதியுடன் பதற்றமின்றி இருந்தார்கள். அறைக்கு வெளியே நிகழ்ந்து கொண்டிருந்த இயல்பான வெளிச்ச-இருள் மாற்றங்களின் பாதிப்பின்றி ஒளி விளக்குகளின் ஒரே சீரான செயற்கை வெளிச்சத்தில் எந்நேரமும் மூழ்கியிருக்கும் அறை போலும் அது. உள்ளே நுழைந்த எங்களின் பதற்றம் அந்த அறையில் ஏற்கனவே இருந்தவர்களின் முகபாவங்களில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எங்களைப் பார்த்து அளவெடுத்தது போன்று புன்னகைத்தார்கள். எங்களின் அதிரடி உள் நுழைவு அவர்களை தொந்தரவுபடுத்தியதாக அவர்கள் காட்டிக் கொள்ளவில்லை. நாங்கள் ஏன் உள்ளே நுழைந்தோம்? வெளியே என்ன நடக்கிறது? என்ற விவரங்களை அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வங்காட்டவில்லை.

நான் எங்கிருக்கிறேன்? இந்த அலுவலகம் இங்கு ஏன் இருக்கிறது? இந்த அலுவலகத்திலிருந்தா சிங்கம் தப்பித்து ஓடியது? இல்லை…இருக்காது…அலுவலகத்துக்கு பின்புறம்..அல்லது முன்புறம் ஜூ உள்ளதோ…அங்கிருந்துதான் சிங்கம் தப்பியிருக்குமா? இல்லையேல் இந்த அறைக்கு முன்புறத்தில் சர்க்கஸ் கம்பெனி ஏதாவது கூடாரமிட்டிருக்குமா? ஜூவிலிருந்தோ சர்க்கஸ் கூடாரத்திலிருந்தோ சிங்கம் வெளியே வந்திருக்கலாம். ஜூவும் அலுவலகமும் அல்லது சர்க்கஸும் அலுவலகமும் ஒரே வளாகத்தில் உள்ளதோ….

அதுவரை அந்தக் கனவு ஒரு மௌனக்கனவாக இருந்தது. “சிங்கம் வெளியே துரத்துது..சத்தம் கேட்கலியா?” என்று என்னுடன் ஓடி வந்தவர்களில் ஒருவன் அலுவலகத்திலிருப்பவர்களிடம் கேட்கிறான். அந்தப் புள்ளியில் அந்தக் கனவு “”டாக்கி”யானது. பதில் எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

வெளியிலிருந்து வரும் சத்தங்களில் என் செவிகள் பதிந்திருந்தன. ஆட்கள் பரபரப்பாக ஓடும் சத்தம் கேட்கிறது. அலுவலக அறையின் பின் புறத்திலிருந்து சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்கிறது. நாங்கள் நுழைந்த மெயின் கதவுக்கு நேரெதிராக இன்னொரு கதவு தெரிந்தது. அது அலுவலகத்தின் இன்னொரு வெளிப்புறத்தில் திறக்கும் போல இருந்தது. நாங்கள் முதலில் நுழைந்த கதவு போல் இல்லாமல் இந்த கதவு குறுகலாக திறந்தது. நான் லேசாக அந்தக் கதவைத் திறந்து வெளியே பார்க்க எத்தனித்தேன். சின்னதாக திறந்து வெளியே நோக்கினேன். ஒரு சின்ன பையன் தலைப்பாகையுடன் கதவருகே நின்றிருந்தான். அவன் செக்யூரிட்டியாக இருப்பான் என்று நினைத்தேன். சீருடை அணிந்திருக்கவில்லை. செக்யூரிட்டியாக இருக்க முடியாது. அவன் இடது கையில் வலையைப் பிடித்திருந்தான். இன்னொரு கையில் ஒரு மூங்கிற்கழி இருந்தது. அந்தக் கழியினால் தரையை தட்டியபடி நின்றிருந்தான். அறைக்குள்ளிருந்து வெளியே ஜாக்கிரதையாக தலையை வெளியே நீட்டிய எனக்கு அவனைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. “உள்ளே போங்க…பயப்படாதீங்க…சிங்கத்தைப் புடிச்சிடுவோம்” என்று தன்னம்பிக்கையுடன் சொன்னான். எங்களை ஆசுவாசப்படுத்த விரும்பினான் போல. கழியை இன்னுமொருமுறை தரையில் தட்டினான். நான் சின்னக் கதவை அடைத்துவிட்டு அலுவலகவாசிகள் வேலை செய்து கொண்டிருந்த முக்கிய அறைக்கு திரும்பினேன். என்னுடன் கூட ஓடி வந்தவர்கள் ஓய்வின்றி உலாத்திக் கொண்டிருந்தார்கள். அலுவலக அறையில் ஏற்கனவே இருந்தவர்களோ இமை கொட்டாமல் கணிணித் திரையைப் பார்த்தபடி அசைவின்றி உட்கார்ந்திருந்தார்கள்.

வெளியே சத்தம் குறைந்திருந்தது போன்று தோன்றியது. ஒருவர் பின் ஒருவராக வெளியே செல்லலாம் என்று முடிவானது. எந்த கதவின் வழியாக நுழைந்தோமோ அந்த கதவை திறப்பதாக திட்டம். திறப்பதற்கு முன் மீண்டுமொரு முறை கதவின் மேல் காதை வைத்து கேட்டேன். ஒரு சத்தமும் இல்லை. ஓரிரு நிமிடங்கள் என் காது கதவில் பதிந்தே இருந்தது. சிங்கத்தின் கர்ஜனை, அது ஓடும் சத்தம், கழி தரையில் தட்டப்படும் ஓசை எதுவும் கேட்கவில்லை. ஹ்ம்ம்…எதுவும் ஆகாது…சிங்கத்தைப் பிடித்திருப்பார்கள்…கூண்டில் அடைத்திருப்பார்கள்…கதவைத் திறந்து முதலடியைக் கவனமாக அறைக்கு வெளியே வைத்தேன்.

+++++

என் கைத்தொலைபேசி பாடியது…நான்கு மணிக்கு அலார்ம் வைத்திருந்தேன். இல்லை…அலார்ம் இல்லை…இந்நேரத்தில் யார் அழைக்கிறார்கள்? போர்வையை விலக்கிவிட்டு எழுந்து மேசையில் இருந்த கைத்தொலைபேசியை எடுத்தேன். யாரோ புரியாத மொழியில் ஏதோ கேட்டார்கள். இரண்டு முறை “யார் நீங்கள்” என்று கேட்டேன். அழைத்தவருக்கு என் இந்தி புரியவில்லை. அவர் என்ன மொழி பேசினார் என்பது எனக்கு தெரியவில்லை. அழைப்பை துண்டித்துவிட்டு நேரம் பார்த்தேன். மூன்றரை ஆகியிருந்தது. படுக்கைக்குத் திரும்பினேன்

+++++

//மன நல சிகிச்சையில் கனவுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தலை உத்தியாக முதன்முதலில் பயன்படுத்தியவர் சிக்மண்ட் ப்ராய்ட். அவருடைய சீடர் கார்ல் யங்-கும் கனவுகளின் பகுப்பாய்வை மன நல மருத்துவ உத்தியாக பயன்படுத்தினார். கனவுகளை இருவரும் வெவ்வேறு விதத்தில் அணுகினர். ப்ராய்டு கனவுகளை ஆழ்மனத்தில் அடக்கி வைக்கப்பட்ட ஆசைகளின் இயக்கிகளாக அணுகினார். யங் அதற்கு எதிரான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். தீர்வை நோக்கிய படைப்பாற்றலின் வெளிப்பாடாக கனவுகளை அணுகினார். கனவு காண்பவனுடன் ஒத்துப் போகாதவற்றைக் கூட ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் ஆசைகளின் இயக்கிகள் என ப்ராய்டு பகுப்பதை யங் விமர்சித்தார். கனவு காண்பவனுடன் ஒத்துப் போனாலொழிய கனவுப் பகுப்பாய்வு எந்த வித பயனையும் தராது என்றார் யங்.//

டாக்டர் முகர்ஜியின் சேம்பருக்கு முன்னர் காத்துக்கிடந்த போது மைய மேசையில் வைக்கப்பட்டிருந்த இன்றைய மனோதத்துவம் இதழில் ஒரு கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன். கட்டுரையை முடிப்பதற்குள் டாக்டர் முகர்ஜி அறையை விட்டு வெளியே வந்து உள்ளே வருமாறு என்னைப் பணித்தார்.

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மன நல ஆலோசனைக்காக டாக்டர் முகர்ஜியை ஆறு மாதங்களாக சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

“உலகின் மிகவும் பழமையான காப்பியம் – கில்கமேஷ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு நான் பதில் தருவேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை போலும். இடைவெளிவிடாமல் கில்கமேஷ் காவியத்தைப் பற்றி அவரே சிறுகுறிப்பு வரைந்தார். “இறவா வரத்தை நாடிச் செல்லும் அரச குமாரன் கில் கமேஷ். அதற்கான அவனது முயற்சிகளை புராணக்கதை வடிவில் விவரிக்கும் காப்பியம் அது. கில் கமேஷுக்கு காவியம் நெடுக பல கனவுகள் வருகின்றன. காப்பியத்தின் போக்கில் கனவுகள் முன் உணர்வுக் கருவிகளாக அவனுக்கு உதவுகின்றன. பாபிலோனியர்களுக்கும் சரி எகிப்தியர்களுக்கும் சரி கனவுகள் என்பன மனிதர்களை தெய்வங்கள் தொடர்பு கொள்ளும் வழி என்று கருதினர்.”

பொதுவாக எப்போதும் என்னை அதிகமாக பேசச் சொல்லும் முகர்ஜி இன்று பேசும் மூடில் இருக்கிறார். அவர் பேச்சில் கவனம் செலுத்தாமல் என் எண்ணம் அலை பாய்ந்தது. மன அழுத்தம் காரணமான பதற்றம் மற்றும் அதீத கவலை என அலை பாயும் மனதுடன் ஆறு மாதம் முன்னர் டாக்டர் முகர்ஜியின் உதவியை நாடினேன். ஆரம்பத்தில் மாத்திரைகள் சாப்பிடச் சொன்னார். மாத்திரைகள் நரம்புகளில் செரடோனின் ரசாயனத்தை சரியாக சுரக்கச் செய்யும் அல்லது அதீதமாக சுரக்கும் செரடோனினை கட்டுப்படுத்தும். மாத்திரைகளுடன் கூடவே உளவியல் ஆலோசனையும் இணையாகச் செல்ல வேண்டும். மன அழுத்தத்திற்கான புறக்காரணிகளைப் பற்றி விரிவாகப் பேசுதல், பிரக்ஞை வெளிச்சம் படாத அடக்கி வைக்கப்பட்ட உணர்வு நிலைகளின் மேல் கருணையுடன் கூடிய கவனத்தைப் பாய்ச்சுதல், சுய கருணையுடன் அதீத எதிர்பார்ப்புகளின் எடையைக் குறைத்தல், ஒப்பீடு, கழிவிரக்கம் என எண்ணத்தில் படிந்த ஓட்டடைகளை விலக்குதல் – பல இலக்குகளை மாதம் இரு முறை நடக்கும் சந்திப்புகளில் முகர்ஜியின் உதவியால் அடைய முயன்றிருக்கிறேன். ஆனால் சில வாரங்களாக லேசான குற்றவுணர்ச்சி. எத்தனை முன்னேற்றம் கண்டிருக்கிறேன் என்பதை புறவயமாக அளவிடமுடியாத் தன்மை என்னை சற்று தொந்தரவு செய்கிறது. பதற்றம் குறைந்திருக்கிறது ; அலுவலகத்தில் அதிகாரியின் படுத்தல்களை என் முதுகுக்குப் பின் அவர் செய்யும் சதிகளை அதிக உணர்ச்சிக் கலப்பு இல்லாமல் எதிர்கொள்ளும் வித்தையில் ஓரளவு தேர்ச்சி பெற்று வருகிறேன். “இதெல்லாம் ஏன் நடக்கிறது?” என்ற கேள்வி சிந்தனையில் எழுந்து என்னை அவ்வப்போது நிலைகொள்ளாமல் வைக்கிறது. இதை மட்டும் சற்று சரி செய்து விட்டால் அமைதி திரும்பிவிடும். தொடர்ந்து இன்னும் எத்தனை மாதங்கள் இப்படி உளவியல் மருத்துவரை சார்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் சங்கடப் படுத்திக் கொண்டிருந்தது. முகர்ஜியின் திறமை மீதான சந்தேகத்தின்பாற்பட்டதில்லை இது. மன நல மருத்துவரை அணுகியது நான்தான். அவரிடம் செல்வதை எப்போது நிறுத்த வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். அதே வேளையில் முகர்ஜியின் அயராத முயற்சிகள் உரிய, பொருத்தமான முடிவை எய்தும் வரை பொறுமையாக அவருடன் ஒத்துழைத்தலும் மிக அவசியம் என்றும் நான் நினைக்கிறேன். சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததா என்பதை என் உள் அறிதல் வாயிலாக மட்டுமே உணர்தல் சாத்தியம் என்று முகர்ஜி ஆரம்ப சந்திப்புகளில் சொல்லியிருக்கிறார்.

ஆறு மாத சிகிச்சைக்குப் பிறகு முகர்ஜி புது வித நுட்பத்தை உபயோகிக்க விரும்பினார். சமீபத்தில் நான் கண்ட கனவைப் பற்றி ஒரு குறிப்பு எழுதிக் கொண்டு வருமாறு சென்ற சந்திப்பில் டாக்டர் முகர்ஜி சொல்லியிருந்தார்.

சிங்கக் கனவைப் பற்றி எத்தனை தகவல்கள் ஞாபகத்தில் இருந்தனவோ அத்தனை தகவல்களையும் என் குறிப்பில் சேர்த்திருந்தேன்.

கனவுப் பகுப்பாய்வு இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மனோ தத்துவ மருத்துவர்களால் பரவலாக பயன் படுத்தப்பட்டது. இப்போதெல்லாம் மனோ தத்துவ சிகிச்சைக் கருவியாக கனவுப்பகுப்பாய்வு அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக இந்தியாவில். ஆனால், அயல் நாடுகளில் ‘psycho-analysis’ மற்றும் ‘gestalt psychology’ என்னும் மனோதத்துவப் பிரிவுகளில் கனவுகளின் பகுப்பாய்வு பரவலாக உபயோகத்தில் உள்ளது.

“சிங்கக் கனவு சுவாரஸ்யமாயிருக்கிறது. நீங்கள் பகுதி நேர எழுத்தாளர் என்பதால் சுவையாக அதை பதிவு செய்திருக்கிறீர்கள். இந்தக் கனவில் உம்முடைய இப்போதைய மன நிலைக்கான விடை இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா?”

எப்படி துவங்குவது என்று தெரியவில்லை. சில நொடிகள் தயங்கினேன்.

“இணைய தளங்களில் கனவுகளுக்கான பொருள் கொள்ளலைப் பற்றி அறிய முயன்றேன். ஆனால் பல்லி சொல்லுக்குப் பலன் என்று பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படுவதைப் போல எளிதான விஷயமாக இருக்கவில்லை. கனவுகளுக்கு ஒரு பொதுவான கருப்பொருள் இருப்பதில்லை. சிங்கம் பற்றிய கனவுக்கான பொருள்விளக்கம் பொதுவான ராசி பலன் வாசிப்பது போன்று ஒத்திசைவற்ற உணர்வைத் தந்தது.”

கையோடு கொண்டுவந்திருந்த நோட்புக்கில் குறித்து வைத்திருந்தனவற்றை வாசித்துக் காண்பித்தேன்.

“வலிமை, தைரியம், கம்பீரம் மற்றும் பெருமிதச் சிந்தனை – இவற்றின் குறியீடு சிங்கம். சிறுமைகளிலிருந்து விடுபட்டவர்க்கே சிங்கக்கனவு தோன்றும்.”

“சிங்கத்தை கனவில் காணுதல், மேலே சொன்ன குணங்களை விட, போராட்டத்தையே அதிகமாகக் குறிக்கிறது. போராட்டத்தில் வெற்றி பெற்று பல்வேறு பிரயாசங்களிலும் தலைவனாக மிளிர்வதையும் சிங்கத்தை கனவில் காணுதல் குறிக்கிறது.”

“திருமணமாகாத பெண்ணின் கனவில் சிங்கம் வந்தால் அவளுக்கு திருமணமாகும்.”

“ஓர் இளம் வாலிபனின் கனவில் சிங்கம் வந்தால் யதார்த்த வாழ்க்கையில் எதிரி ஒருவனால் எளிதில் அவனது இடம் எடுத்துக் கொள்ளப்படும்.”

“ஒரு சர்க்கஸில் சிங்கம் நடிப்பது போல கனவு வந்தால், உன் வாழ்க்கையில் எளிதாக கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படக் கூடிய கஷ்டங்கள் உருவாகும் என்று பொருள் கொள்ளலாம்.”

“உன் கண்களின் முன்னால் சிங்கம் எதையாவது தின்னுவது போன்ற கனவு வந்தால், உன் யதார்த்த வாழ்வின் பிரச்னைகள் வித்தியாசமான வழிகளில் தீரும்.”

“ஓர் இளஞ்சிங்கத்தை நீ உன் கனவில் பார்த்தால் யதார்த்தத்தில் உன் வியாபாரக் கூட்டாளிகளினால் தொல்லைகள் ஏற்படும்.”

“கர்வமாக நடைபோடும் சிங்கத்தை கனவில் பார்த்தால், குடும்பப் பிரசினைகளின் சாத்தியம் உண்டு என்று பொருள் ; ஆனால் உன் வாழ்க்கைக் கூட்டாளியின் துணை கொண்டு அப்பிரச்னைகளை தீர்த்துவிடக் கூடும்.”

நான் படித்துக் காட்டியதும் முகர்ஜி சிரித்தார்.

“சிங்கம் கனவில் வருவதை எப்படி பொருள் கொள்ளலாம் என்பதை தேடினால் இளஞ்சிங்கம், பெண் சிங்கம், ஆண் சிங்கம், சிங்கத்துடன் விளையாடுதல், சிங்கம் கனவு காண்பவனை துரத்துதல் என்று விதவிதமாக விளக்கங்கள் போட்டிருக்கிறார்கள். சிங்கம் வருகிறது என்று கேள்விப்பட்டவுடனேயே அறைக்குள் சென்று தாழ் போட்டுக்கொண்டு ஒளிந்து கொண்ட கனவில் சிங்கத்தை பார்க்கவேயில்லை. ஆனால் சிங்கம் பற்றிய பயம் இருந்தது. கனவில் இல்லாமல் இருந்த சிங்கத்தை எப்படி பொருள் கொள்வது?”

இன்னும் பலமாக சிரித்தார் முகர்ஜி. இதற்கு முன்னர் நடந்த அமர்வுகள் இத்தனை லேசாக சென்றிருக்கவில்லை.

மன நல சிகிச்சையின் போது கனவை பொருள் விளக்கம் கொள்ளுதலில் பல வித வழிமுறைகள் உள்ளதாகக் கூறி அதில் ஒரு சிலவற்றை விளக்கினார். “நீ சொன்ன ராசி பலன் மாதிரியான பொருள் கொள்ளல் நமது கலாசாரத்திலிருந்து பெறப்படுவது. கனவுகளை பொருள் கொள்ளலில் கலாசார விழுமியங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. எனினும் மன நல சிகிச்சையில் கனவில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் நிஜ வாழ்க்கையில் யாரை எதை குறிக்கிறது என்பதை கனவு காண்பவர் அடையாளங்காணுதலிலிருந்து கனவுப் பகுப்பாய்வு தொடங்குகிறது”

முகர்ஜி அன்றைய அமர்வை விரைவில் முடித்துக் கொண்டார். அடுத்த சந்திப்புக்கு வரும்போது நான் எழுதித் தந்த கனவு பற்றி நன்கு யோசித்துக் கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.

“உன் கனவுக் குறிப்பை வாசித்தபோது ஹெமிங்வேயின் ஓல்ட்மேன் அண்ட் தி ஸீ நாவல் என் ஞாபகத்துக்கு வந்தது. அதில் கிழவன் சாண்டியாகோ அடிக்கடி சிங்கங்களை கனவில் காண்பான். அதுவும் குழுக்களாக சிங்கங்கள் உலா வருவதாகக் கனவு காண்பான். நீ பார்த்த இணைய தளத்தில் சாண்டியாகோவின் கனவுக்கு என்ன பொருள்விளக்கம் தந்திருப்பார்கள்?”

+++++

வீடு திரும்பியதும் பக்கம் பக்கமாக குறிப்புகள் எழுதினேன்.

என் கண்ணுக்குத் தெரியாத சிங்கம் என்னுள் பயத்தை ஏற்படுத்தியது. என் மீது மட்டுமல்ல. என்னுடன் பேசிக் கொண்டிருந்த மேலும் சிலருக்கும் தான். கண்ணுக்குத் தெரியாத சிங்கம் என் அதிகாரியைக் குறிக்கிறதா? இல்லை. என் பயங்கள், பாதுகாப்பின்மை – இவைகளைத்தான் கூண்டில் இருந்து தப்பித்திருக்கக்கூடிய சிங்கம் குறிக்கிறதா? பயங்களும் பாதுகாப்பின்மையும் கண்ணுக்குப் புலப்படா மனக்குணங்கள். அவற்றுக்குப் பயந்து நான் ஒதுங்கிய அறை ஏன் என் அலுவலகத்தையொத்து இருக்கிறது. அங்கிருந்தோர் யாரும் பயந்தது மாதிரி தெரியவில்லை. அறைக்குள் வந்து ஒதுங்கிய நானும் என்னுடன் வந்தவர்களுந்தான் பயத்துடன் பதற்றத்துடன் இருந்தோம். ஆனால் சிங்கத்தை பிடிப்பதற்கான ஆயத்தங்கள் அறையின் மூடிய இரு கதவுகளுக்குப் பின்னால் நடந்து கோண்டிருந்ததற்கான அத்தனை சங்கேதங்களும் எனக்கு தெரிந்தன. சத்தங்கள் கேட்டன. தலைப்பாகையிட்ட இளைஞன் ஒருவன் எனக்கு உறுதி தந்தானே சிங்கம் பிடிபட்டுவிடும் என! என் பதற்றங்கள் எல்லாம் கற்பிதங்கள் என்று இந்த கனவு சொல்கிறதோ?

வேறு மாதிரி யோசித்தேன்.

சிங்கம் அந்த அதிகாரியைக் குறிக்கிறது. அவர் தன் நடத்தையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிராமல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலரின் மனதில் மட்டும் பாதுகாப்பின்மையை அச்சத்தை உருவாக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து தப்பிக்க முடியாமல் ஓடி அலுவலகம் போன்று தெரிந்த அறையில் தஞ்சம் புகுகிறேன். ஆனால் அந்த அறையில் இருந்த மற்றவர்கள் போல என்னால் சஞ்சலமுறாமல் இருக்க முடிவதில்லை. எப்படியாவது அதிகாரியிடமிருந்து தப்புதலே என் விழைவாக இருக்கிறது!

இன்னும் வேறு மாதிரி யோசித்தேன்.

கதவைத் திறந்து வெளியே வந்த எனக்கு அங்கே என்ன காத்திருந்தது? மூன்று சாத்தியப்பாடுகள்! (1) வெளியே யாரும் இல்லை. சிங்கம் கண்ணில் தென்படவில்லை. ஆபத்து விலகிவிடுகிறது. (2) எனக்காக சிங்கம் அமைதியாக கதவுக்கு வெளியே காத்திருக்கிறது. அதனுடன் சண்டை போடுகிறேன். அதை வென்றேடுக்கிறேன். (3) அறைக்கு வெளியே காத்திருந்த சிங்கம் என்னைத் தாக்கி என்னைக் கொன்று போட்டுவிடுகிறது.

டாக்டர் படித்து விட்டு என்னிடம் திருப்பியளித்த கனவுக் குறிப்பை மீண்டும் வாசித்தேன்.

மீண்டும் இன்னொரு குறிப்பு எழுதினேன்.

சிங்கத்துக்கு ஏன் கோபம்? காட்டிலிருந்து கடத்தி வரப்பட்டு கூண்டில் பொழுதுபோக்கிற்காக அடைக்கப்பட்ட சிங்கத்தின் உணர்வுகள் பற்றி நமக்கு என்ன தெரியும்? அதிகாரியின் சொந்த பிரச்னைகள், அபிலாஷைகள், பொறுப்புகள், பாதுகாப்பின்மை – இவற்றைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? ஒரு சக மனிதனாக அவனும் நம்மைப் போல பலங்களுடனும் பலவீனங்களுடனும் இருப்பவன் தானே…….

எழுதுவதை நிறுத்தினேன். என் மேசையின் மேல் இருந்த மினியேச்சர் சாரநாத் தேசியச் சின்னத்தின் திசைக்கொன்றாக நான்கு புறங்களைப் பார்க்கும் சிங்க ரூபங்களை நோக்கினேன். சிங்கக் கனவு எனக்களிக்கும் தகவல் என்ன?

சூழமைவு இல்லாமல் எந்த நிகழ்வுக்கும் அர்த்தம் கற்பித்தல் இயலாத காரியம். சூழமைவைப் பொறுத்து ஒரே நிகழ்வுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் கற்பிக்கலாம். நம்மை நடுநாயகமாய் வைத்தே நமக்கான அர்த்தங்களை நாம் பெறுகிறோம். The Phenomena of Shared Dreams சாத்தியம் என்று வைத்துக் கொண்டால், இதே கனவுக்கான பொருள்விளக்கத்தை சிங்கத்திடம் கேட்டால் அது என்ன பதிலளிக்கும்? அந்த அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்களில் ஒருவரின் (அவர் நிஜ மனிதராக இருக்கும் பட்சத்தில்) கண்ணோட்டத்தில் இந்த கனவு என்ன அர்த்தத்தை கொடுக்கும்?

கனவு கண்ட அந்த இரவில் கைத்தொலைபேசி ரிங் ஆனதும் கண்விழித்து எழுந்தது போன்று சடக்கென ஒரு தெளிவு. சடோரி!

நாம் கண்ட கனவை நம் கண்ணோட்டத்தில் பொருள்விளக்கம் கொள்கிறோம். ஒரு திரைப்பட இயக்குனரின் கட் போல நம் கனவின் பொருள்விளக்கம் நம்முடைய கட். வாழ்க்கை யாருடைய கட்? வாழ்க்கை எல்லா உயிர்களின் கூட்டுக் கனவு என்பதாக யோசித்தால் ஒருவரின் கண்ணோட்டத்தில் மட்டும் வாழ்வின் நிகழ்வுகளை எப்படி பொருள் கொள்ள முடியும்? “இதெல்லாம் எனக்கு ஏன் நடக்கிறது?” என்ற வினா அடிப்படையில் மிகவும் அபத்தமானது ; நம் சுய கண்ணோட்டத்திலிருந்து எழுவது.

நான் நான். அதிகாரி அதிகாரி. நான் என் எல்லைக்குள் என் பலங்களுடன் பலவீனங்களுடன் இருக்கிறேன். என் அதிகாரி அவருக்குரிய எல்லையில் இருக்கிறார். அவருடைய பலங்களை பலவீனங்களை நடத்தையை மிகையாகப் பொருட்படுத்தி என்னுடைய சுய முக்கியத்துவத்தை அதிகமாக கற்பனை செய்து கொள்ளும் பழக்கந்தானே அடிப்படையில் என்னுள் பதற்றத்தை உண்டு பண்ணுகிறது. பாதிப்புக்குள்ளாகும் தன்மை – நானோ என் அதிகாரியோ – அனைவருக்கும் பொதுவன்றோ?

+++++

அன்றிரவு நிம்மதியாக உறங்கினேன். முகர்ஜி குறிப்பிட்ட சுமேரியக் காப்பிய நாயகன் கில்கமெஷ் காணும் கனவொன்றில் வானிலிருந்து விழும் கோடரியை அவன் அணைத்துக் கொள்வதைப் போல என் மேசையில் இருக்கும் சாரநாத்தின் சாக்கிய சிம்மங்களை கைகளில் இடுக்கியவாறே தூக்கம். கடலில் சுறாக்களுடன் கடுமையாகப் போராடி தலை சேதமுறாமல், பிற பாகங்களை சுறாக்கள் பிய்த்தெடுத்துவிட எலும்புகளின் அமைப்பு மட்டும் எஞ்சியிருந்த மிகப்பெரிய மர்லின் மீனுடன் அதிகாலை கரை திரும்பிய பிறகு சாண்டியாகோ அடித்துப்போட்டாற்போல என்னை மாதிரிதான் தூங்கியிருப்பான்.

+++++

நன்றி : பதாகை

படைத்தோனின் அறிகுறிகள்

ஒரு வருடமாக தினமும் இரவு குர்ஆன் வாசிக்கிறேன். படைத்தோனின் வல்லமை நம் முன் நிறைந்திருக்க அவனின் இருப்பை ஐயங்கோள்ளுதல் பேதமை என்கிறது குர்ஆன். அதன் வரிகளில் பேசப்படும் படைப்பின் அழகு மிகவும் தனித்துவமானது. குறைபட்ட என் சொற்களில் இதோ ஒரு தாழ்மையான சிறு முயற்சி.



படைத்தோனின் அறிகுறிகள்

உறுதியாய்
பதிக்கப்பட்ட மலைகள்
என் போலன்றி,
சற்றும் அசையாதவை
தூண்களில்லா சுவர்க்கங்கள்
தனிமையை போக்கக்
கூடவே பயணிக்கும் நதிகள்
பகலில் வழிகாட்டிகள்
இரவில் நட்சத்திரங்கள்
வானில் வரிசையாக
பறக்கும் பறவைகள்
கொட்டும் மழை
கொழிக்கும் பயிர்கள்
திறந்து விடப்பட்ட
ஒன்றில் ஒன்று
கலவாத சமுத்திரங்கள்
வணிகக் கப்பல்கள்
மிதந்து செல்ல கடல்கள்
உண்ணச் சுவையான மீன்கள்
வலிமையான காற்று
ஊதிக் கலைந்த மேகங்கள்
படைத்தவனைத் தேடிக் களைத்து
படைத்தவற்றை பார்க்க மட்டும் முடிந்தது என்னால்
தன் கையில் வைத்து
பூமிப்பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருப்பவனே
உன்னை பார்க்க வைப்பாயா
உன்னை கேட்க வைப்பாயா
முறையிடுகிறேன் அவனிடம்
இரண்டு நாட்களில்
ஏழு சுவர்க்கங்களை சமைத்தவன்
கிப்லாவை நோக்கி
என்னை மண்டியிட வைத்தான்
நண்பர்கள்
கால்நடைகள்
அனைத்தையும்
என்னையும்
சிறந்த அச்சினால்
கருவறைக்குள் உருவாக்கியவன்
அனைத்தும் பார்ப்பவன்
அனைத்தும் கேட்பவன்
என்னையும் பார்க்கிறான்
என்னையும் கேட்கிறான்
நம்பிக்கை கொள்ளச் செய்பவன்
பயங் கொள்ளச் செய்பவன்
இரண்டும் அவனே
படைத்தோனின் படைப்புகள்
நம்பிக்கையூட்டுகின்றன
படைத்தோனை நினையாதபோது
பயந்தோன்றுகிறது
பூமியெனும் ஓய்விடத்தின் மீது
வானமெனுந்திரை போட்டிருக்கிறான்
புசிக்க ஓராயிரம் கனி வகைகள்
காடுகளில் விலங்குகளை நிறைத்திருக்கிறான்
அவனடையாளங்களில்லா
இடமேது இப்பிரபஞ்சத்தில்
அவன் என்னை பார்க்கிறான்
அவன் என்னை கேட்கிறான்
சந்தேகங்கள் தவறன்று
நிரூபணம் கேட்ட ஆபிரகாமும்
இறைத்தூதனன்றோ
மூலிகைகள்
ஆலிவ்கள்
திராட்சைகள்
இன்னும் பலவற்றில் உள்ளன
அவனிருப்பின் அறிகுறிகள்
அவனே சிறந்தவன்
கருணை மயமானவன்

ஆப்பிள் தோட்டம்

பீம்தாலிலிருந்து நைனிடால் நகருக்குள் நுழையாமல் பவாலி என்னும் ஊர் வழியாக ராணிகேத்-தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு கோயிலுக்கருகே ஓட்டுநர் வண்டியை நிறுத்துகிறார். இந்தியில் ஏதோ ஒரு பெயரை சொல்கிறார். அவர் என்ன பெயரைச் சொன்னார் என்பதை சிரத்தையுடன் கவனிக்கவில்லை. ஓட்டுநர் வண்டியை நிறுத்தியது பிடிக்கவில்லை. சீக்கிரமே ராணிகேத் சென்றடைய வேண்டும் என்றிருந்தது எனக்கு. அங்கு ஒரு ரிஸார்ட்டில் ஒரு suite புக் செய்திருந்தேன். “எனக்கு தேநீர் குடிக்க வேண்டும்” என்றார் ஓட்டுநர். வேண்டா வெறுப்பாக காரிலிருந்து இறங்கினேன். மனைவியும் என் இளைய மகளும் கூட இறங்கினார்கள். பெரியவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.

அது ஒரு ஆசிரமம். துர்கா தேவி சந்நிதியும், அனுமார் சந்நிதியும் இருந்தன. சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிந்தனர். கோயிலின் பின்புறம் ஒரு சுவாமிஜியின் சிலை இருந்தது. சுவாமிஜிக்களுக்கு நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனக்கு அதிகம் ரசிக்கவில்லை. ஆனால் ஒன்று கவனித்தேன். கோயில் செல்வச் செழிப்புடன் இருந்தது. புத்தம்புதுக் கோயிலைப் போல் இருந்தது. கோயிலை விட்டு வெளியேறுவதற்கு முன் சுண்டல் பிரசாதத்தை பெற்றுக் கொண்டோம்.

கோயிலையொட்டி சிற்றோடை இருந்தது. அதை அசுத்தப்படுத்த வேண்டாம் என்ற அறிவுறுத்தலில் அது நதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மழைக்காலத்தில் அது நதியாக உருமாறலாம். நதியில் அதிக நீர் மட்டம் இல்லை. பூச்சிகளைப் போல் சின்னஞ்சிறு மீன்கள் கூட்டமாய் நீந்திக் கொண்டிருந்தன. ஒரு சிறுவன் பிஸ்கட்டுத் துண்டின் பொடியை நீரில் வீசினான் ; நூற்றுக்கணக்கான மீன்கள் அப்பொடியைக் கவ்விக்கொள்ளும் போட்டியில் அழகாக ஒரு புள்ளியில் குவியும் காட்சி மிக ரம்மியமாய் இருந்தது. ஒரு கணந்தான். மீண்டும் மீன்கள் தத்தம் திசைகளில் பிரிந்து சென்றன.

நாங்கள் கோயிலுக்கு வெளியே வந்தோம். ஓட்டுனர் வண்டியைக் கிளப்பிய போது கோயிலின் பெயர் என்ன என்று கேட்டேன். kainchi dham என்றார். Kainchi என்றால் கத்திரிக்கோல் என்று அர்த்தம் ; dham என்றால் தலம்.

+++++

கைடுகளுடனான உரையாடல் பல விஷயங்களை அறியத் தூண்டியிருக்கின்றன. கைடுகள் மிஸ்-கைடு செயவது வாடிக்கையான விஷயம் என்றாலும் கைடுகள் அவசியம். வரலாற்றுச் சின்னங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்கும் செயல் முறை எளிமையாகுதல் கைடுகளினால் மட்டுமே சாத்தியம். அவர்கள் தரும் வரலாற்றுத்தகவல்கள் நம்மை உண்மைத்தகவல்களை நோக்கிய உந்துதலை ஏற்படுத்தும். சில வருடம் முன்னர் ஓர் ஆங்கிலேய நண்பருக்குத் துணையாக ஆக்ரா சென்றேன். நடுவில் ஒரு கைடை எங்கள் காரில் ஏற்றிக் கொண்டோம். அவர் பெயர் அன்வர். டிப்டப்பாக கருப்பு கோட், கருப்பு கண்ணாடி அணிந்து சினிமா ஸ்டார் போல தோற்றமளித்தார். வி ஐ பி கைடு என்ற அடையாள அட்டையை காண்பித்தார். நானும் நண்பன் அட்ரியனும் பெருமிதப்பட்டோம். அன்றைய ஒரு நாளைக்கு நாங்களிருவரும் அன்வரின் தயவில் வி ஐ பிக்கள் ஆனோம். வழக்கம் போல தாஜ்மகால் நுழைவுச்சீட்டை நீண்ட வரிசையில் நிற்காமலேயே வாங்கினோம். தாஜ்மகாலுக்குள் பல்வேறு விளக்கங்களை கொடுத்துக் கொண்டே ஒரு தகவலை எங்களிடம் சொன்னார் அன்வர். இஸ்தான்புல்லின் நீல மசூதியை கட்டிய ஆர்கிடெக்ட்தான் தாஜ்மகாலையும் கட்டினார். அந்த தகவல் எனக்கு பயங்கர ஆச்சரியத்தை தந்தது. அட்ரியன் இஸ்தான்புல் நீல மசூதியை பார்த்திருக்கிறான். நான் திரைப்படங்களில் நீல மசூதியை பார்த்திருக்கிறேன். கடைசியாக நான் பார்த்தது ஏக் தா டைகர் இந்திப்படத்தில். சல்மான் கானும் கட்ரினா கைஃபும் நீல மசூதியின் பின்னணியில் ரொமான்ஸ் செய்து கொண்டிருப்பார்கள். நீல மசூதிக்கும் தாஜ்மகாலுக்கும் ஒரு தொடர்பும் இல்லையென்பதை உரிய தரவுகள் வாயிலாக மறுத்துக் கூறும் அறிவு அன்வரின் உதவியால்தான் கிட்டியது. நீல மசூதி கட்டி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகே தாஜ்மகால் கட்டும் பணி துவங்கியது. தாஜ்மகால் முழுமையாக கட்டி முடிக்கப்பட 21 வருடங்களானது. அன்வரை சந்தித்திருக்காவிட்டால் தாஜ்மகாலின் ஆர்க்கிடெக்ட் உஸ்தாத் அகமது லஹோரி என்பது எனக்கு தெரிய வாய்ப்பே இல்லை. அன்வர் கொடுத்த தகவல் ஏற்படுத்திய ஆச்சரியவுணர்ச்சி தாளாமல் அந்த தகவலை சரி பார்க்கும் உந்துதல் மேலிட நான் திரட்டிய மேலதிக தகவல்கள் முகலாய பேரரசு பற்றி நானறிய உதவியது. பொய்மையும் வாய்மையிடத்து என்பது இது தான் போல! அன்வருக்கு என் நன்றிகள்!

blue mosque

ராணிகேத் வந்தடைந்த அடுத்த நாள் குமாவோன் மலைச்சாலைகளில் நாற்பத்தியைந்து கிலோ மீட்டர் பயணம் செய்து துனகிரி வைஷ்ணோ தேவி கோயில் போய்ச் சேர்ந்தோம். அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது குகுசினா என்னும் இடம். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் ட்ரெக்கிங் செய்து பாபாஜி குகையை அடைய வேண்டும். அது தான் எங்கள் இலக்கு. துனகிரி அம்மன் கோயிலின் சாலையோரத் திருப்பத்தில் நபினை சந்தித்தோம். நபு என்பது அவன் செல்லப்பெயர். நாற்பது வயதிருக்கும் அவனுக்கு. சராசரி குமாவோன் வாசிகளின் அச்சுஅசல் நபு. அவன் நெற்றியில் பொட்டு. செவ்வாய்க்கிழமையாதலால் வைஷ்ணோ தேவி கோவிலில் நல்ல கூட்டம்! வாடகை ஜீப்புகள் எல்லாம் பிஸி. குகுசினா வரை எங்கள் காரிலேயே போவது என முடிவு செய்தோம். முன்னிருக்கையில் நபு. பின்னிருக்கைகளில் எங்கள் குடும்பம்.

Kainchi Dham – சுவாமிஜியைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதவன் காடு தாண்டி மலை தாண்டி பாபாஜி குகைக்கு குடும்பத்துடன் வருகை தருவதன் பின் என்ன அர்த்தம்? இது முரணாகாதா? தயவு செய்து குழம்ப வேண்டாம். இது ஒரு காதல்! பல வருடம் முன்னர் – எந்த வருடம் என்று ஞாபகமில்லை – படித்த புத்தகத்தின் 34ம் அத்தியாயம் என்னுள் ஏற்படுத்திய ரசாயன மாற்றம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் இது ஒரு சாரமில்லாத வெற்று ஆர்வமாகக்கூட இருக்கலாம். என்னை இதயபூர்வமாக அழைத்தால் நான் அங்கு தோன்றுவேன் என்று தன் பிரியப்பட்ட சீடனுக்கு உறுதி தந்த அந்த மரணமிலா குரு மகாவதார் என்ற அடைமொழியால் பக்தர்களால் போற்றப்படுகிறார். பாபாஜி பற்றிய வரலாற்று பூர்வ தகவல்கள் மிகச் சொற்பம். எனினும் Para Gliding, Apple Garden, Highest Golf Course முதலான ராணிகேத்தின் ஈர்ப்புகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு புதல்விகளின் விருப்பமின்மையையும் புறக்கணித்துவிட்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு அதிகம் பேர் போகாத ஒரு குகைக்கு நான் போவதை பகுத்தறிவு கொண்டு எப்படி விளக்குவது? என் வாழ்க்கை என் விருப்பம் என்று சொல்வது எளிதாயிருக்கும்.

ஒரு புத்தகம் விவரிக்கும் சம்பவம் இத்தனை ஆர்வத்தையா ஏற்படுத்தும்? பொன்னியின் செல்வன் விவரிக்கும் அனுராதபுரம் நகரப்பகுதி வர்ணனைகள் படிக்கப் பிடித்தன. சிவகாமியின் சபதத்தில் வரும் வாதாபி நகர வர்ணனைகளுந்தான்! புத்தக வர்ணனைகளுக்காக மட்டும் அனுராதபுரத்துக்கோ வாதாபிக்கோ (இந்நாளைய பதாமி) டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. இந்த குகைக்கு வர வேண்டும் என்ற விழைவுக்கும் காரணகாரியமான ஒரு விடை இருக்குமென்று எனக்கு தோன்றவில்லை.

பழைய காதலியை மறக்க முடியாமல் அவளின் பழைய விலாசத்துக்கு கடிதம் எழுதுதலை உணர்ச்சி பூர்வ விஷயம் என்றில்லாமல் வேறு எப்படி புரிந்து கொள்வது? பழைய காதலி எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. அவளிடம் தொடர்பு கொள்ளவேண்டும் என்ற தவிப்பேற்படும்போது அவள் இருந்த விலாசம் என்று நாம் கேள்விப்பட்ட இடத்துக்கு கடிதம் அனுப்புகிறோம். அது போலவே இது!

autobiography_yogi_book

பாபாஜி குகை ட்ரெக்கிங் கஷ்டமாக இருந்தது. ஃபிட்னெஸ் கொஞ்சம் கூட இல்லாமல் தஸ்புஸ்ஸென்று மூச்சு விட்டுக் கொண்டே ஏறினேன். என் குடும்பத்தினர் வேகமாக ஏறி எனக்கு முன்னால் சென்றுவிட்டனர். காவி ஜிப்பா போட்டுக் கொண்டு ஓர் இளைஞர் இறங்கி வந்து கொண்டிருந்தார். அவரிடம் இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்டேன். பதினைந்து நிமிடங்கள் என்றார். எங்கிருந்து வருகிறீர்கள் என்று நான் அவரிடம் கேட்டதற்கு சிட்னி என்றார். ஏன் வந்தீர்கள் என்று கேட்டேன். ஒரு புத்தகத்தின் 34ம் அத்தியாயம் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேனே அந்த புத்தகத்தின் பெயரைச் சொன்னார்.

பாபாஜி குகைக்கு சற்று முன்னர் ஒரு மண்டபம் கட்டியிருந்தார்கள். மகாவதார் பாபாஜி லாஹிரி மஹாஷயருக்காக தோற்றுவித்த மந்திர மாளிகையைக் குறிப்பதான இடத்தில் கட்டிய மண்டபம் இது என்பது நபுவின் தகவல்.

பாபாஜி குகையில் சற்று நேரம் அமைதியாக கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தோம். மூச்சு வாங்குதல் நின்றது. நபு குகையைப் பற்றி பேசலானான். அவன் சிறுவயதினனாக இருந்த போது பாபாஜி குகை திறந்திருந்ததாகவும் அதற்குள் இறங்கி உள்ளே சென்றால் இருட்போர்வையில் இனிய சுகந்தங்களின் வாசனை மூக்கை துளைக்குமாம். ஆனந்த உணர்வு மேலிடுமாம். குகைக்குள் டார்ச் லைட்டுகள் வேலை செய்யாதாம். அமெரிக்கர் ஒருவர் ஆர்வமிகுதியில் ஆய்வு செய்கிறேன் என்று குகைக்குள் புகுந்து வெகுநேரமாக வெளியே வராமல் யோகதா ஆசிரமக்காரர்கள் அவரை குகையிலிருந்து வெளிக்கொணர்ந்த போது சித்தம் கலங்கிய நிலையில் இருந்ததாகவும் இதன் காரணமாக குகை வாசல் அடைக்கப்பட்டது எனவும் நபு சொன்னான். நபு சொன்னது விறுவிறுப்பைக் கூட்டிற்று எனினும் அது எத்தனை உண்மையாக இருக்கும் என்ற ஐயம் எழாமலில்லை. உத்தராகண்ட் மாநிலத்தில் பல சுற்றுலா தலங்களில் பார்த்திருக்கிறேன். கைடுகள் இது போன்ற மந்திரம் மாய விஷயங்களை அதிகம் கலந்து பேசுவார்கள். மாநில சுற்றுலா துறையின் வரவேற்பு வளைவுகளும் போர்டுகளும் “தேவ்பூமி” என்னும் உரிச்சொல்லுடன் உத்தராகண்டை விவரித்துக் கொள்வது போலத்தான் இது!

நாங்கள் குகையிலிருந்து இறங்கத் தொடங்குகையில் வெளிநாட்டு ஜோடி ஒன்று குகையை நோக்கி ஏறி வந்தார்கள். அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். இத்தாலியின் மிலானோ நகரத்திலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களும் அந்த புத்தகத்தின் பெயரைச் சொன்னார்கள்.

நபுவுக்கும் அந்த புத்தகத்தின் ஆசிரியருக்கும் இடையில் என்ன வித்தியாசம்? எழுத்தாற்றல் என்பதைத் தவிர வேறென்ன? எழுதப்பட்ட சொற்கள் சக்தி படைத்தவையாக ஆகின்றன என்பதற்கு ஒரு ஆதாரம் என்றால் இந்த புத்தகத்தைச் சொல்லலாம் என்பது என் கருத்து. மனிதசக்தி உடல்-மனம் என்னும் இருமையின் எல்லைகளை தகர்த்துவிடக் கூடியது என்பதன் சிறு துளி சொற்களின் துணை கொண்டு நமக்கு விவரிக்கப்பட்டிருக்கும்.

நபு என்னுடனும் என் மனைவியுடனும் பேசிக் கொண்டே வந்தான். அவனுடைய குடும்ப வாழ்க்கை, அவனுடைய மனைவியின் மறைவுக்குப் பிறகு மறுமணம் செத்துக்கொள்ளாதிருந்தது, சுவாமி சத்யேஸ்வரானந்தா-வுடனான அவனுடைய தொடர்பு (அவனுக்கு நபின் என்று பெயரிட்டது அவர்தானாம் – குமோவோன்காரனுக்கு வங்காள மொழிப்பெயர் வந்ததன் ரகசியம் இவ்வாறு துலங்கியது), குக்குசினாவில் இருக்கும் ஒரே ஓட்டலின் சொந்தக்காரர் ஜோஷியுடன் அவனுடைய மனஸ்தாபம் என்று பல தகவல்களைப் பகிர்ந்தான். நடிகர் ரஜினிகாந்த் பாபாஜியிடமிருந்து பெற்ற மூன்று மந்திரங்கள், அசைவ உணவு சாப்பிடும் போது அவற்றை ரஜினிகாந்த் சொல்லாமல் இருக்க வேண்டும் என்று பாபாஜி அறிவுறுத்தியது என்று அவன் ஒன்றன்பின் ஒன்றாக தகவல்களை பகிரும் போது நானும் பாபா திரைப்படம் பார்த்திருக்கிறேன் என்று சொல்லலாமா என யோசித்தேன். ஆனால் சொல்லவில்லை. நபுவுக்கு சென்னை எக்ஸ்பிரஸ் என்றொரு செல்லப்பெயர் உண்டாம். பாபாஜி குகைக்கு வருவோரில் 60% தென்னிந்தியர்கள் என்று ஒரு புள்ளிவிவரம் தந்தான். அவர்களுக்கெல்லாம் நபுவே கைடாக இருப்பதால் இந்த பெயர் வழங்குகிறதாம். நபுவுக்கும் பிற வடஇந்தியர்கள் போல தென்னிந்திய மாநிலத்தவர்களை மாநில வாரியாக பாகுபடுத்த தெரியவில்லை. எனவே அவன் சொன்ன கணக்குப்படி 60% முழுக்க தமிழர்களாக இருப்பார்கள் என்று சொல்வது கடினம். அதிகமாக தென்னிந்தியர்கள் பாபாஜி குகைக்கு வருவதற்கு காரணம் ரஜினிகாந்த் என்று நபு நம்புகிறான்.

வழியில் ஒரு குடிசை வீடு. அங்கு சற்று நேரம் இளைப்பாறினோம். குடிசைக்காரர் குடிசையில் டீக்கடை நடத்துகிறார். கேட்டால் மேகியும் செய்து தருவார். உத்தராக்கண்ட் மலைப்பிரதேசங்களில் மேகி கிட்டத்தட்ட கோதுமை போல அரிசி போல staple food. டீ வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். நானும் என் மனைவியும் தமிழில் பேசுவதைக் கேட்ட குடிசைக்காரர் எனக்கு குடிசை வாசலில் தொங்கும் ஒரு புகைப்படத்தை காட்டினார். நடிகர் ரஜினிகாந்த் கையில் தடியுடனும் தலைப்பாகையுடனும் ஜிப்பா அணிந்து நிற்கும் புகைப்படம். நாங்கள் உட்கார்ந்திருந்த குடிசை வாசலில் எடுக்கப்பட்ட புகைப்படம். 2013 இல் எடுக்கப்பட்ட படம் என்றார். 2013க்குப் பிறகு அவர் வரவில்லை என்றும் சொன்னார். அந்த ஒற்றை குடிசையைத் தாண்டாமல் ரஜினிகாந்த்தால் கூட நிச்சயம் பாபாஜி குகைக்குச் சென்றிருக்க முடியாது. தகவல் – ஆதாரம் என்னும் ரயில்பாதையில் பயணிக்கிறது தர்க்கம். தர்க்கம் வாழ்க்கையின் இன்றியமையா அங்கம். நாம் வாழ்கிறோம் என்பதற்கு நமக்கு தர்க்கம் தேவைப்படுகிறது. நிரூபித்தல் வாழ்க்கையின் தவிர்க்க முடியா செயல்முறை.

லாஹிரி மஹாஷயர் பாபாஜியை ரத்தமும் சதையுமாக சந்தித்ததாக சொல்லப்படும் சம்பவத்தில் தர்க்கம் அணுவளவும் இல்லை எனினும் 400 கி மீ பயணம் செய்திருக்கிறேன் ; எதற்கும் மெனக்கெடாத நான் ஐந்து கி மீ டரெக்கிங் செய்து அந்த குகையை அடைந்திருக்கிறேன். நான் வந்த தூரத்தை விட அதிக தூரத்திலிருந்து வந்தவர்களை சந்தித்திருக்கிறேன். 1861லிருந்து 1935 வரை பாபாஜியை வெவ்வேறு கட்டத்தில் சந்தித்தவர்கள் பகிர்ந்த அனுபவங்களை பற்றி வாசித்திருக்கிறேன். அவற்றை வாசிக்கும் போது நம்பிக்கையின்மையை என்னால் தவிர்த்துவிட முடிகிறது. திறந்திருந்த பாபா குகையிலிருந்து வந்த சுகந்தம் பற்றி நபி சொல்லும் போது எனக்கு ஆதாரம் வேண்டியிருக்கிறது. முரண்கள் நிறைந்த மனித வாழ்க்கையின் அங்கமாகிய நானும் முரண்கள் நிரம்பியவனாகவே இருக்கிறேன். தர்க்கம் ஒரு வாள். அதை ஏந்தி நாம் விரும்பாதவற்றை வெட்டித் தள்ளுகிறோம். நமக்கு விருப்பமானவற்றின் திசையில் அந்த வாளை சுழற்றாமல் இருக்கிறோம்.

neemkaroli baba
Neem Karoli Baba

குகுசினா வந்த பிறகு குமாவோனில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி எங்கள் பேச்சு திரும்பியது. Kainchi Dham பார்த்தீர்களா என்று கேட்டான் நபு. நீம் கரோலி பாபா பற்றி சொன்னான். கத்திரிக்கோல் தலத்தில் நான் பார்த்த சிலை நீம் கரோலி பாபாவினுடையது. – “ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் கம்பெனி தொடங்குவதற்கு முன்னர் பல வியாபாரம் தொடங்கி நொடித்துப் போனார் ; இந்தியா வந்து நீம் கரோலி பாபாவிடம் வந்து தன் குறையை சொன்னார். பாபாவின் கையில் ஓர் ஆப்பிள் இருந்தது. ஆப்பிள் பாபாவுக்கு மிகவும் பிடித்தது. அந்த ஆப்பிளை சிறிது கடித்து சீடன் ஸ்டிவ்-க்கு தந்தார். இனிமேல் அனைத்தும் வெற்றியில் முடியும் என்று ஆசீர்வதித்தார். ஆப்பிள் உலகின் மிகப் பெரிய டெக்னாலஜி கம்பெனியானது. தன் நிறுவனத்துக்கு ஆப்பிள் என்று ஸ்டிவ் பெயரிட்டதற்கு காரணம் நீம் கரோலி பாபா மீது ஸ்டிவ்க்கு இருந்த பக்தி. ஸ்டீவ் வாயிலாக நீம் கரோலி பாபா பற்றி கேள்விப்பட்ட மார்க் ஸுக்கர்பர்க் (ஃபேஸ் புக்) 2015 இல் Kainchi Dham விஜயம் செய்தார்”

நபு சொன்ன தகவலை இதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஸ்டிவ் ஜாப்ஸுக்கு இந்திய குருவா? ஓர் ஹிப்பியாக ஸ்டீவ் ஜாப்ஸ் எழுபதுகளில் இந்தியா வந்திருப்பதை பற்றி படித்திருக்கிறேன். மகேஷ் யோகி, ரஜ்னீஷ் போன்றவர்கள் அமெரிக்க இளைஞர்களிடையே அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கிளப்பிய கிளர்ச்சியின் விளைவே ஸ்டிவின் இந்திய விஜயத்துக்கு காரணம் என்பதாகவே என் புரிதல்.

நபு சொன்ன விஷயங்களில் என்னை மிகவும் துண்டுதலை உண்டுபண்ணியது ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இந்த தகவல் தான். நீம் கரோலி பாபா யார்? எப்போது வாழ்ந்தார்? நபு சொன்ன விஷயம் உண்மையா? கைடுகள் வழக்கமாக அடித்து விடுவது போன்றதான பொய்த்தகவலா?

மலைப்பிரதேசத்தில் மொபைல் சிக்னல் சரியாக இல்லை. Data Roaming-உம் வேலை செய்யவில்லை. ராணிகேத் ஓட்டலிலும் இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலை இணையத் தொடர்பு கிட்டியது. Did Steve Jobs visit Kainchi Dham? என்ற கேள்விக்கு விடை தேடினேன்.

steve_jobs-apple
Steve Jobs (Founder of Apple)

இரண்டு குறிப்புகள் கிடைத்தன. நீம் கரோலி பாபாவின் பக்தர் ஒருவர் கீர்த்தனை இசையமைப்பாளர். sacred music என்னும் இசை வகைமையின் முன்னோடி எனக் கருதப்படுபவர். அவர் பெயர் ஜெய் உத்தல். உத்தல் படித்த ரீட் கல்லூரியின் மாணவர் ஸ்டீவ் ஜாப்ஸ். மாணவர் ஸ்டீவை ஒரு முறை சந்திக்கும் போது உத்தல் நீம் கரோலி பாபாவுடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். ஸ்டீவ் அந்த உரையாடலில் கிடைத்த விவரங்களால் ஈர்க்கப்பட்டு தன் நண்பர் ஒருவருடன் இந்தியப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்கிறார். அக்டோபர் 1974இல் Kainchi Dham வருகிறார். துரதிர்ஷ்டவசமாக நீம் கரோலி பாபா 1973இலேயே பூதவுடலை துறந்துவிட்டிருக்கிறார். ஸடீவ் பாபாவை சந்திக்கவில்லை. உத்தலுடனான உரையாடலே தன்னை இந்தியா செல்லத் தூண்டியது என்று ஸ்டீவ் பல முறை குறிப்பிட்டுள்ளதாக ஸ்டீவுடன் சேர்ந்து இந்தியா பயணம் சென்ற நண்பர் பிற்காலத்தில் உத்தலுக்கனுப்பிய மின்னஞ்சலொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னொரு குறிப்பு கிருஷ்ண தாஸ் என்று இன்று அறியப்படும் ஜெஃப்ரே கெகல் என்பவரைப் பற்றியது. இவர் நீம் கரோலி பாபாவின் நேரடி சீடர். பாபாவினுடைய தன் முதல் சந்திப்பை பற்றி இவ்வாறு விவரிக்கிறார் :-

“அவருக்கு ஆப்பிள் பழங்கள் பிடிக்கும் என்று கேள்விப்பட்டிருந்தோம். எனவே ஆப்பிள்களை எடுத்து வந்திருந்தோம். எனக்கு வேடிக்கையாய் இருந்தது. ஆப்பிள்களை அவரிடம் கொடுத்தோம். அவற்றை வாங்கிக்கொண்டார். உடன் அந்த ஆப்பிள்களை அறையில் இருந்தவர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டார். “இவருக்கு நான் கொடுத்த ஆப்பிள்கள் பிடிக்கவில்லை போலிருக்கிறது” என்று நினைத்தேன். என்னை நோக்கினார். ‘நான் என்ன செய்தேன்?’ என்று கேட்டார். நான் சொன்னேன் : ‘எனக்கு தெரியாது’. ‘நான் செய்தது சரியா?’ என்று கேட்டார். நான் மீண்டும் ‘எனக்கு தெரியாது’ என்று சொன்னேன். அவர் திரும்பவும் ‘நான் செய்தது சரியா?’ என்று கேட்டார். ‘நீங்கள் செய்யும் எதுவும் சரி’ என்று பதில் சொன்னேன். அவர் சிரித்தார். பிறகு சொன்னார் “ஒருவனுக்கு கடவுள் இருப்பானாயின், அவனுக்கு எதுவும் தேவையில்லை. அவனிடம் ஆசைகள் இராது’ அவர் சொன்னதைக் கேட்டதும் நான் என்னைப் பற்றி யோசித்தேன். என்னிடம் எவ்வளவு ஆசைகள்! நான் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும் என்பதை உணர்ந்தேன். இது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் அவர் என் எண்ணத்தை படித்திருந்ததை எனக்கு காட்டினார். என்னுள்ளில் நான் உணரத்தக்க வகையில் எனக்கு வழி காட்டினார்”

வானிலை சற்று மோசமடைந்திருந்ததால் ஓட்டலிலிருந்து கிளம்ப தாமதமானது. இதனால் தில்லிக்கு கிளம்புமுன் Apple Garden பார்க்கலாம் என்று போட்ட திட்டம் நிறைவேறவில்லை. மோசமான வானிலை காரணமாக Para Gliding spot அன்று மூடியிருந்தது. Golf Course மூடுபனியில் கவிந்திருந்தது. ஓட்டுனர் Kainchi Dham அருகே தேநீர் குடிப்பதற்காக வண்டியை நிறுத்தினார். நாங்கள் காரில் இருந்து வெளியே இறங்கவில்லை. அதே இடத்தில் இரண்டு நாட்கள் முன்னர் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெரியவள் “அப்பா! இந்த கோவிலுக்கு போகவில்லையா?” என்று கேட்டாள். அதற்கு சின்னவள் “நாங்க அன்னிக்கே போயிட்டோம்… இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகணும்னா நீயும் போய் கும்பிட்டுட்டு வந்துடு” என்று பெரியவளைக் கேலி செய்தாள்.

  1. இதில் குறிப்பிடப்படும் புத்தகம் பரமஹம்ச யோகானந்தர் எழுதிய சுயசரிதம் – Autobiography of a Yogi. இந்நூலின் 34ம் அத்தியாயத்தை இணையத்தில் வாசிக்க → https://www.crystalclarity.com/yogananda/chap34.php
  2. நீம் கரோலி பாபா பற்றி → https://en.wikipedia.org/wiki/Neem_Karoli_Baba
  3. ஸ்டீவ் ஜாப்ஸ்-ஸின் இந்திய விஜயத்தின் பிண்ணனி குறித்து → http://www.abc.net.au/radionational/programs/rhythmdivine/jobs-holy-man-and-apple-logo/4609698