ருபைய்யத்துக்கு இன்னொரு தமிழ் மொழிபெயர்ப்பு ஏன் ?

ரூமி பல காலமாக என்னை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கவிதைகள் என்னை புதிர்சுவைக்குள் மூழ்கி தத்தளிக்க வைக்கின்றன. அவர் எழுதிய பர்ஸிய மொழியில்  இயங்கிய மேலும் சிலரும் ரூமியுடன் சேர்ந்து என்னை மேலும் பித்து நிலைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஹபீஸ், சொராப் செபெஹ்ரி, ஓமர் கய்யாம் – இம்மூவரும் ரூமியுடன் சில காலம் முன்னர் சேர்ந்து கொண்டவர்கள். இவர்களை வாசிப்பது ஆங்கில மொழியாக்கம் வாயிலாக என்பது ஒரு குறை. முக்கால் வாசி மொழிபெயர்ப்புகள் மூலத்தை சரியான வகையில் பிரதிபலிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. எனினும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வாயிலாகவாவது நம்மால் வாசிக்க முடிகிறதேயென்று திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதுதான். 

Rumi & Hafez

ஹஃபிஸ் கிட்டத்தட்ட ரூமி போலத்தான். படிமங்களும் குறியீடுகளும் நிறைந்த சுஃபி இலக்கியத்தின் பிதாமகர்கள் இவ்விருவரும். செபெஹ்ரி ஒரு நவீன கவி. ஓவியக் கலையிலும் தேர்ந்தவர் என்பதால் அவருடைய சொற்களுக்கு வர்ண தூரிகையின் குணம் உண்டு. இருப்பினும் ரூமி, ஹபீஸ் போன்றோரின் படைப்புகளைப் போன்று செபெஹ்ரியின் அனைத்து கவிதைகளையும் எளிதாக உளவாங்கிக் கொள்ள முடிவதில்லை. வாசகரின் உழைப்பை அதிகம் கோருபவையாக உள்ளன செபெஹ்ரியின் கவிதைகள். 

Sohrab Sepehri

ரூமிக்கும் இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த ஓமர் கய்யாம் வேறு ரகம். கணிதவியல், வானவியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்த கய்யாம் வாசகர்களை நன்கு ‘நக்கலடிக்கிறார்’. “எதைப் பற்றி எழுதியிருக்கிறேன் கண்டு பிடியுங்கள்” என்றுசவால் விடுகிறார். மது, போதை, என கிடடத்தட்ட அனைத்து “ருபைய்யத்”களிலும்  வருவதைப் பார்த்து “இது நம்ம ஆளு” என்று “குடிமக்கள்” அவரை கொண்டாடுவதை பார்த்தால் தன் கல்லறையிலிருந்து ஓமர் கய்யாம் வயிறு குலுங்க சிரிக்கக்கூடும். 

எட்வர்ட் பிட்ஸ்ஜரால்ட்-டின் உலக புகழ் பெற்ற மொழியாக்கம் ஓமர் கய்யாமின் மீது உலக அரங்கில்  வெளிச்சம் பாய்ச்சியது. ஈரடிகள் எனப்படும் ருபைய்யத்களை வெறித்தனமாக தன் வாழ்நாள் முழுதும் திரும்பத்திரும்ப மொழிபெயர்த்து வந்தார் எட்வர்ட். முதல்பதிப்புக்கு பிறகு தன் மொழிபெயர்ப்பில் பல திருத்தங்களை அவர் செய்தாலும் அவருடைய முதல் பதிப்பு கிட்டத்தட்ட ஒரு மறு-ஆக்கம் என்று பல பர்ஸிய மொழி வல்லுனர்களால் கருதப்படுகிறது. 

கவிமணியின் தமிழ்மொழிபெயர்ப்பு ஒன்று ருபைய்யத்துக்கு உண்டு. அதிலிருந்து கீழ்வரும் வரிகள் மிகப்பிரபலம் :-

வெய்யிற்கேற்ற நிழலுண்டு  வீசும் தென்றல் காற்றுண்டு 
கையில் கம்பன் கவியுண்டு  கலசம் நிறைய மதுவுண்டு 
தெய்வகீதம் பலவுண்டு  தெரிந்து பாட நீயுண்டு
 வையந் தருமிவ் வனமன்றி  வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

கவிமணியின் மொழிபெயர்ப்பு இனிமையானது. மரபுக்கவிதை வடிவத்தில்  அவர் மறு ஆக்கமாக அதை மொழிபெயர்த்திருந்தார். இந்த மொழிபெயர்ப்பில் வரும் “கம்பன் கவி” என்னும் motif ஓமர் கய்யாமின் உலகில் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோல நம் மரபின் motif-களை பல இடங்களில் கவிமணி பயன்படுத்தியிருப்பார். மறு ஆக்கம் என்பதனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. எனினும், குறியீடுகளை, படிமங்களை திரும்ப திரும்ப சொல்லும் சுஃபி இலக்கியத்தின் ஒரு தன்மை கவிமணியின் மறு – ஆக்கத்தில் இல்லாமல் போய்விட்டதோ எனும் சம்சயம் எனக்குண்டு.

ஊழ் வலிமை, தர்க்கங்களின் பயனற்ற தன்மை, கடவுட்தன்மையின் துளி உலக விஷயங்களில் இருத்தல், கடந்த கால சோகங்கள் மற்றும் எதிர்கால கவலைகள் – இவற்றை ஒதுக்கி இன்றைய பொழுதில் மட்டும் கவனம்செலுத்துதல் – ஆகிய தரிசனங்களை வழங்கும் motif-கள் இந்தியமரபிலும் உண்டு. கவிமணியின் மொழிபெயர்ப்பில் அவை உரிமையுடன் பயன்படுத்தப்பட்டிருப்பது ருபைய்யத்தின் சுஃபி தன்மையை நீர்க்கச் செய்கிறதோ என்று நான் நினைக்கிறேன்.

ருபைய்யத்துக்கு ஒரு நவீன தமிழிலான மொழிபெயர்ப்புக்கு இடமிருக்கிறது. மரபு வடிவத்தின் வரம்புகளின்றி வசனநடையிலான மொழிபெயர்ப்பு சுஃபி தரிசனங்களை உள்ளவாறே தமிழில் நிகழ்த்திக்காட்ட உதவும். ஒரே irony – மொழிபெயர்க்க இன்னொரு மொழிபெயர்ப்பையே – எட்வர்ட் பிட்ஸ்ஜெரால்டையே நம்பவேண்டியிருக்கிறது! சுமார் ஏழெட்டு ருபைய்யத்களை சாம்பிளுக்காக மொழிபெயர்த்தேன்.  அனைத்து ருபைய்யத்துக்களையும் மொழிபெயர்க்கும் திட்டம் உண்டு.

—–

ஜாம்ஷிட் மன்னன்
குடித்து கும்மாளமிட்ட
சபைகளில்
சிங்கமும் பல்லிகளும்
குதித்து விளையாடுகின்றன
கிறித்துவர்களை
வேட்டையாடிய பஹ்ராம்
மீளாத் துயிலில் கிடக்க 
அவன் தலையை காலால் 
உருட்டியது ஒரு வனக்கழுதை

__

வாதம், முயற்சி
என முடிவிலி தேடலில்
எத்தனை காலம்?
பழமற்றோ
கசந்த பழத்துடனோ
கவலையில் மூழ்குவதை விட
கனிந்த திராட்சையுடன்
 சந்தோஷத்தில் திளைப்பது சிறந்தது.

__

தோழர்களே
வெகுகாலம் கழித்து
வீட்டில் 
என் புது திருமணத்திற்கான
கொண்டாட்டம்
என் படுக்கையிலிருந்து
மலட்டு தர்க்கத்தை துரத்தி 
விவாகரத்து செய்துவிட்டு
திராட்சைக் கொடிமகளை 
மனைவியாய்க் கொண்டேன்

— 

கோப்பையை நிரப்பு ;
நம் காலுக்கு கீழ்
காலம் நழுவிச் செல்லுதல் பற்றி 
பேசிப் பயன் என்ன?
பிறக்காத நாளையும்
இறந்த நேற்றும் –
இவற்றுக்காக கவலைப்படுதல் வியர்த்தம்,
இன்று இனிதாயுள்ளபோது!
(XXXVII)

__

 சுழலும் சொர்க்கத்திடமே
 நான் கேட்டேன்-
“இருட்டில் தடுமாறும்
சிறு குழந்தைகளை வழிநடத்த
என்ன விளக்கை வைத்துள்ளது ஊழ்?”
சொர்க்கம் சொன்னது : “கண்மூடித்தனமான புரிதல்”

__

உள்ளே வெளியே
மேலே, சுற்றியெங்கும், கீழே –
வேறொன்றுமில்லை
சின்ன பெட்டிக்குள் நடக்கும் 
மந்திர நிழல்கூத்து 
மெழுகுவர்த்தியே சூரியன் 
அதைச் சுற்றி
வேதாள உருவங்கள்
வருவதும் போவதுமாய்

 __ 

ஆற்று விளிம்பில்
ரோஜாக்களின் வீச்சு
மூத்த கய்யாமிடம் 
செந்நிற, பழம்பானம்
இருண்ட கோப்பையுடன்
தேவன் உன்னை அணுகுகையில் 
அதை எடுத்துக்கொள் 
தயங்காதே
        (XLVIII)

__

யாரும் இதற்கு பதிலளித்ததில்லை ;
துரதிர்ஷ்டகரமாக பண்ணப்பட்ட
கிண்ணமொன்று மௌனம் காத்து
பின்னர் பேசியது:
“மோசமான அனைத்துடனும் 
சாய்வு கொண்டிருத்தலால்
அவர்கள் என்னை நிந்திக்கிறார்கள்;
குயவனின் கை அதிர்ந்ததா என்ன?” 
       ( LXIII)

__ 

Omar Khayyam

கனவுக்குள் புகுந்த சிங்கம்

ஒரு நாள் என் கனவுக்குள் சிங்கமொன்று நுழைந்துவிட்டது. சுதந்திரமாக உலவிவந்த வனாந்தரப் பிரதேசத்திலிருந்து கடத்திவரப்பட்டு பின்னர் விலங்குகள் சரணாலயத்துக்குள்ளோ அல்லது சர்க்கஸில் கேளிக்கை ஜந்துவாகவோ அடைக்கப்பட்டுவிட்ட கோபம் அதனுள் பல நாட்களாகக் கனன்று எப்படியோ என் கனவுக்குள் நுழைந்து தப்பிக்க முயன்றது. சிங்கத்தின் கோபம் பற்றி நீ எப்படி அறிவாய் என்று வாசகர்கள் யாரேனும் கேள்வி கேட்கலாம். நம்பிக்கையின்மையை துறந்து என் கனவுக்குள் சிங்கம் நுழைந்ததை முழுதாக நம்பும் அவர்கள் தர்க்கரீதியாக “சிங்கத்தின் சீற்றம் இயற்கையானது” என்ற காரணத்தைத் தவிர சிங்கம் கோபமாயிருப்பதற்கான வேறெந்த காரணத்தையும் நம்ப மாட்டார்கள்.

உண்மையை‌ முதலிலேயே சொல்லி விடுகிறேன்! கனவில் நிஜமாகவே சிங்கம் வந்ததா என்பதை நான் பார்க்கவில்லை. இல்லை ஆரம்பத்தில் இருந்து சொன்னால் சரியாக புரியும்! ஒரு நாள் என் கனவில் முக பரிச்சயம் இல்லாத பெயர் அறியாத சிலருடன் ஒரு மேடான பகுதியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.நின்றிருந்தது யாருடன் என்று விழிப்பு நிலையில் யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் என் நண்பர்களா? அல்லது வெறும் பரிச்சயங்களா? அவர்களின் முகங்கள் ஞாபகமில்லை. கனவுகளில் வரும் முகங்கள் பொதுவாக அதிகமும் ஞாபகத்தில் இருப்பதில்லை. சிங்கம் நுழைந்த கனவில் நான் யாருடன் நிற்கிறேன் என்பது தெரியாவிட்டாலும் அவர்களுடன் மகிழ்வாக பேசிக் கொண்டிருக்கிறேன். கனவில் உரையாடும் காட்சி மௌனப்படம் போலவே நகர்கிறது. இது திரைப்படம் எனில் இயக்குனர் அங்கு பேசி நின்றிருந்த காட்சியை நல்ல இசையால் நிரப்பியிருப்பார்.

நாங்கள் நின்றிருந்த சில தப்படிகள் பின்னால் குறுக்கலாக ஒரு சரிவு. ஒரு வட்டமாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்த எங்களுக்குப் பின்னால் சரிவில் சிங்கமொன்று ஓடிப் போனதாக வட்டத்தில் நின்றிருந்த ஒருவர் சொல்லவும் வட்டம் ஒரு கணத்தில் கலைந்து போனது. அவர் சொன்னபடி பார்த்தால் சிங்கம் ஓடிப்போன சமயத்தில் அது என் முதுகுக்கு சில தப்படிகள் பின்னால் குறுக்காக ஓடியிருக்க வேண்டும். அதன் கோபத்தை ஆற்றிக் கொள்ள ஏதுவாக நின்று கொண்டிருந்த எங்களை அது ஏன் பார்க்கவில்லை என்ற கேள்விக்கு ஒரு விளக்கமும் இல்லை. சொல்லப்போனால் அதற்குப் பிறகு நாங்கள் அப்போது செய்த காரியத்தை நாங்கள் தர்க்க ரீதியாக விளக்கவே முடியாது. சிங்கம் ஓடின திசையிலேயே நாங்கள் தப்புவதற்காக ஓடினோம். சரிவுப்பாதையிலிருந்து பாதை வலப்புறமாகச் சென்றது. பாதையில் சிங்கம் என் பார்வையில் சிங்கம் படவில்லை. பாதையின் போக்கில் சிங்கம் வளைந்து சென்றிருக்கலாம். சிங்கம் சென்றிருக்கக் கூடிய பாதைக்கு எதிர்ப்பாதையில் அல்லவா நான் ஓடியிருக்க வேண்டும்? என்னுடன் இருந்தவர்களும் எனக்கு பின்னாலேயே ஓடி வந்தார்கள். தர்க்க ஒழுங்கு பற்றி கவலைப்பட அது சமயமில்லை. ஓடி ஒளிந்துகொள்வது தான் எங்கள் உடனடித் தேவையாய் இருந்தது.

கனவில் வரும் சொல்லாடலை யார் நிகழ்த்துகிறார்கள்? கனவைக் காண்பவரே கனவின் சம்பவங்களை பாத்திரங்களை கட்டுப்படுத்தும் கனவுகளை Lucid Dream என்று மனோதத்துவாசிரியர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட புத்தம்புது பிரிண்ட் திரைப்படத்தை காண்பது போன்று தெளிவாக விரிந்த இந்தக் கனவுக் காட்சியை Lucid Dream என்று சொல்லலாமோ?

ஐம்பது அடி ஓடியிருப்போம். சரிவு முடிந்து பாதை தட்டையானபோது வலப்பக்கம் ஒரு கதவு தென்பட்டது. கதவை லேசாக தொட்டதும் திறந்து கொண்டது. அதற்குள் முதலில் நான் நுழைந்தேன். என் பின்னால் ஓடி வந்தவர்களும் அந்த அறைக்குள் ஒருவர்பின் ஒருவராக நுழைந்து கொண்டார்கள். உள்ளே நான்கைந்து க்யூபிக்கில்-களில் கம்பியூட்டர் திரைகளைப் பார்த்துக் கொண்டு சில பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சிங்கம் ஓடிய விஷயத்தையோ அதற்குப் பயந்து அது ஓடிய பாதையிலேயே ஓடிய எங்களின் முட்டாள்தனத்தையோ அறியாதவர்களாக அமைதியுடன் பதற்றமின்றி இருந்தார்கள். அறைக்கு வெளியே நிகழ்ந்து கொண்டிருந்த இயல்பான வெளிச்ச-இருள் மாற்றங்களின் பாதிப்பின்றி ஒளி விளக்குகளின் ஒரே சீரான செயற்கை வெளிச்சத்தில் எந்நேரமும் மூழ்கியிருக்கும் அறை போலும் அது. உள்ளே நுழைந்த எங்களின் பதற்றம் அந்த அறையில் ஏற்கனவே இருந்தவர்களின் முகபாவங்களில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எங்களைப் பார்த்து அளவெடுத்தது போன்று புன்னகைத்தார்கள். எங்களின் அதிரடி உள் நுழைவு அவர்களை தொந்தரவுபடுத்தியதாக அவர்கள் காட்டிக் கொள்ளவில்லை. நாங்கள் ஏன் உள்ளே நுழைந்தோம்? வெளியே என்ன நடக்கிறது? என்ற விவரங்களை அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வங்காட்டவில்லை.

நான் எங்கிருக்கிறேன்? இந்த அலுவலகம் இங்கு ஏன் இருக்கிறது? இந்த அலுவலகத்திலிருந்தா சிங்கம் தப்பித்து ஓடியது? இல்லை…இருக்காது…அலுவலகத்துக்கு பின்புறம்..அல்லது முன்புறம் ஜூ உள்ளதோ…அங்கிருந்துதான் சிங்கம் தப்பியிருக்குமா? இல்லையேல் இந்த அறைக்கு முன்புறத்தில் சர்க்கஸ் கம்பெனி ஏதாவது கூடாரமிட்டிருக்குமா? ஜூவிலிருந்தோ சர்க்கஸ் கூடாரத்திலிருந்தோ சிங்கம் வெளியே வந்திருக்கலாம். ஜூவும் அலுவலகமும் அல்லது சர்க்கஸும் அலுவலகமும் ஒரே வளாகத்தில் உள்ளதோ….

அதுவரை அந்தக் கனவு ஒரு மௌனக்கனவாக இருந்தது. “சிங்கம் வெளியே துரத்துது..சத்தம் கேட்கலியா?” என்று என்னுடன் ஓடி வந்தவர்களில் ஒருவன் அலுவலகத்திலிருப்பவர்களிடம் கேட்கிறான். அந்தப் புள்ளியில் அந்தக் கனவு “”டாக்கி”யானது. பதில் எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

வெளியிலிருந்து வரும் சத்தங்களில் என் செவிகள் பதிந்திருந்தன. ஆட்கள் பரபரப்பாக ஓடும் சத்தம் கேட்கிறது. அலுவலக அறையின் பின் புறத்திலிருந்து சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்கிறது. நாங்கள் நுழைந்த மெயின் கதவுக்கு நேரெதிராக இன்னொரு கதவு தெரிந்தது. அது அலுவலகத்தின் இன்னொரு வெளிப்புறத்தில் திறக்கும் போல இருந்தது. நாங்கள் முதலில் நுழைந்த கதவு போல் இல்லாமல் இந்த கதவு குறுகலாக திறந்தது. நான் லேசாக அந்தக் கதவைத் திறந்து வெளியே பார்க்க எத்தனித்தேன். சின்னதாக திறந்து வெளியே நோக்கினேன். ஒரு சின்ன பையன் தலைப்பாகையுடன் கதவருகே நின்றிருந்தான். அவன் செக்யூரிட்டியாக இருப்பான் என்று நினைத்தேன். சீருடை அணிந்திருக்கவில்லை. செக்யூரிட்டியாக இருக்க முடியாது. அவன் இடது கையில் வலையைப் பிடித்திருந்தான். இன்னொரு கையில் ஒரு மூங்கிற்கழி இருந்தது. அந்தக் கழியினால் தரையை தட்டியபடி நின்றிருந்தான். அறைக்குள்ளிருந்து வெளியே ஜாக்கிரதையாக தலையை வெளியே நீட்டிய எனக்கு அவனைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. “உள்ளே போங்க…பயப்படாதீங்க…சிங்கத்தைப் புடிச்சிடுவோம்” என்று தன்னம்பிக்கையுடன் சொன்னான். எங்களை ஆசுவாசப்படுத்த விரும்பினான் போல. கழியை இன்னுமொருமுறை தரையில் தட்டினான். நான் சின்னக் கதவை அடைத்துவிட்டு அலுவலகவாசிகள் வேலை செய்து கொண்டிருந்த முக்கிய அறைக்கு திரும்பினேன். என்னுடன் கூட ஓடி வந்தவர்கள் ஓய்வின்றி உலாத்திக் கொண்டிருந்தார்கள். அலுவலக அறையில் ஏற்கனவே இருந்தவர்களோ இமை கொட்டாமல் கணிணித் திரையைப் பார்த்தபடி அசைவின்றி உட்கார்ந்திருந்தார்கள்.

வெளியே சத்தம் குறைந்திருந்தது போன்று தோன்றியது. ஒருவர் பின் ஒருவராக வெளியே செல்லலாம் என்று முடிவானது. எந்த கதவின் வழியாக நுழைந்தோமோ அந்த கதவை திறப்பதாக திட்டம். திறப்பதற்கு முன் மீண்டுமொரு முறை கதவின் மேல் காதை வைத்து கேட்டேன். ஒரு சத்தமும் இல்லை. ஓரிரு நிமிடங்கள் என் காது கதவில் பதிந்தே இருந்தது. சிங்கத்தின் கர்ஜனை, அது ஓடும் சத்தம், கழி தரையில் தட்டப்படும் ஓசை எதுவும் கேட்கவில்லை. ஹ்ம்ம்…எதுவும் ஆகாது…சிங்கத்தைப் பிடித்திருப்பார்கள்…கூண்டில் அடைத்திருப்பார்கள்…கதவைத் திறந்து முதலடியைக் கவனமாக அறைக்கு வெளியே வைத்தேன்.

+++++

என் கைத்தொலைபேசி பாடியது…நான்கு மணிக்கு அலார்ம் வைத்திருந்தேன். இல்லை…அலார்ம் இல்லை…இந்நேரத்தில் யார் அழைக்கிறார்கள்? போர்வையை விலக்கிவிட்டு எழுந்து மேசையில் இருந்த கைத்தொலைபேசியை எடுத்தேன். யாரோ புரியாத மொழியில் ஏதோ கேட்டார்கள். இரண்டு முறை “யார் நீங்கள்” என்று கேட்டேன். அழைத்தவருக்கு என் இந்தி புரியவில்லை. அவர் என்ன மொழி பேசினார் என்பது எனக்கு தெரியவில்லை. அழைப்பை துண்டித்துவிட்டு நேரம் பார்த்தேன். மூன்றரை ஆகியிருந்தது. படுக்கைக்குத் திரும்பினேன்

+++++

//மன நல சிகிச்சையில் கனவுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தலை உத்தியாக முதன்முதலில் பயன்படுத்தியவர் சிக்மண்ட் ப்ராய்ட். அவருடைய சீடர் கார்ல் யங்-கும் கனவுகளின் பகுப்பாய்வை மன நல மருத்துவ உத்தியாக பயன்படுத்தினார். கனவுகளை இருவரும் வெவ்வேறு விதத்தில் அணுகினர். ப்ராய்டு கனவுகளை ஆழ்மனத்தில் அடக்கி வைக்கப்பட்ட ஆசைகளின் இயக்கிகளாக அணுகினார். யங் அதற்கு எதிரான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். தீர்வை நோக்கிய படைப்பாற்றலின் வெளிப்பாடாக கனவுகளை அணுகினார். கனவு காண்பவனுடன் ஒத்துப் போகாதவற்றைக் கூட ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் ஆசைகளின் இயக்கிகள் என ப்ராய்டு பகுப்பதை யங் விமர்சித்தார். கனவு காண்பவனுடன் ஒத்துப் போனாலொழிய கனவுப் பகுப்பாய்வு எந்த வித பயனையும் தராது என்றார் யங்.//

டாக்டர் முகர்ஜியின் சேம்பருக்கு முன்னர் காத்துக்கிடந்த போது மைய மேசையில் வைக்கப்பட்டிருந்த இன்றைய மனோதத்துவம் இதழில் ஒரு கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன். கட்டுரையை முடிப்பதற்குள் டாக்டர் முகர்ஜி அறையை விட்டு வெளியே வந்து உள்ளே வருமாறு என்னைப் பணித்தார்.

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மன நல ஆலோசனைக்காக டாக்டர் முகர்ஜியை ஆறு மாதங்களாக சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

“உலகின் மிகவும் பழமையான காப்பியம் – கில்கமேஷ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு நான் பதில் தருவேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை போலும். இடைவெளிவிடாமல் கில்கமேஷ் காவியத்தைப் பற்றி அவரே சிறுகுறிப்பு வரைந்தார். “இறவா வரத்தை நாடிச் செல்லும் அரச குமாரன் கில் கமேஷ். அதற்கான அவனது முயற்சிகளை புராணக்கதை வடிவில் விவரிக்கும் காப்பியம் அது. கில் கமேஷுக்கு காவியம் நெடுக பல கனவுகள் வருகின்றன. காப்பியத்தின் போக்கில் கனவுகள் முன் உணர்வுக் கருவிகளாக அவனுக்கு உதவுகின்றன. பாபிலோனியர்களுக்கும் சரி எகிப்தியர்களுக்கும் சரி கனவுகள் என்பன மனிதர்களை தெய்வங்கள் தொடர்பு கொள்ளும் வழி என்று கருதினர்.”

பொதுவாக எப்போதும் என்னை அதிகமாக பேசச் சொல்லும் முகர்ஜி இன்று பேசும் மூடில் இருக்கிறார். அவர் பேச்சில் கவனம் செலுத்தாமல் என் எண்ணம் அலை பாய்ந்தது. மன அழுத்தம் காரணமான பதற்றம் மற்றும் அதீத கவலை என அலை பாயும் மனதுடன் ஆறு மாதம் முன்னர் டாக்டர் முகர்ஜியின் உதவியை நாடினேன். ஆரம்பத்தில் மாத்திரைகள் சாப்பிடச் சொன்னார். மாத்திரைகள் நரம்புகளில் செரடோனின் ரசாயனத்தை சரியாக சுரக்கச் செய்யும் அல்லது அதீதமாக சுரக்கும் செரடோனினை கட்டுப்படுத்தும். மாத்திரைகளுடன் கூடவே உளவியல் ஆலோசனையும் இணையாகச் செல்ல வேண்டும். மன அழுத்தத்திற்கான புறக்காரணிகளைப் பற்றி விரிவாகப் பேசுதல், பிரக்ஞை வெளிச்சம் படாத அடக்கி வைக்கப்பட்ட உணர்வு நிலைகளின் மேல் கருணையுடன் கூடிய கவனத்தைப் பாய்ச்சுதல், சுய கருணையுடன் அதீத எதிர்பார்ப்புகளின் எடையைக் குறைத்தல், ஒப்பீடு, கழிவிரக்கம் என எண்ணத்தில் படிந்த ஓட்டடைகளை விலக்குதல் – பல இலக்குகளை மாதம் இரு முறை நடக்கும் சந்திப்புகளில் முகர்ஜியின் உதவியால் அடைய முயன்றிருக்கிறேன். ஆனால் சில வாரங்களாக லேசான குற்றவுணர்ச்சி. எத்தனை முன்னேற்றம் கண்டிருக்கிறேன் என்பதை புறவயமாக அளவிடமுடியாத் தன்மை என்னை சற்று தொந்தரவு செய்கிறது. பதற்றம் குறைந்திருக்கிறது ; அலுவலகத்தில் அதிகாரியின் படுத்தல்களை என் முதுகுக்குப் பின் அவர் செய்யும் சதிகளை அதிக உணர்ச்சிக் கலப்பு இல்லாமல் எதிர்கொள்ளும் வித்தையில் ஓரளவு தேர்ச்சி பெற்று வருகிறேன். “இதெல்லாம் ஏன் நடக்கிறது?” என்ற கேள்வி சிந்தனையில் எழுந்து என்னை அவ்வப்போது நிலைகொள்ளாமல் வைக்கிறது. இதை மட்டும் சற்று சரி செய்து விட்டால் அமைதி திரும்பிவிடும். தொடர்ந்து இன்னும் எத்தனை மாதங்கள் இப்படி உளவியல் மருத்துவரை சார்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் சங்கடப் படுத்திக் கொண்டிருந்தது. முகர்ஜியின் திறமை மீதான சந்தேகத்தின்பாற்பட்டதில்லை இது. மன நல மருத்துவரை அணுகியது நான்தான். அவரிடம் செல்வதை எப்போது நிறுத்த வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். அதே வேளையில் முகர்ஜியின் அயராத முயற்சிகள் உரிய, பொருத்தமான முடிவை எய்தும் வரை பொறுமையாக அவருடன் ஒத்துழைத்தலும் மிக அவசியம் என்றும் நான் நினைக்கிறேன். சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததா என்பதை என் உள் அறிதல் வாயிலாக மட்டுமே உணர்தல் சாத்தியம் என்று முகர்ஜி ஆரம்ப சந்திப்புகளில் சொல்லியிருக்கிறார்.

ஆறு மாத சிகிச்சைக்குப் பிறகு முகர்ஜி புது வித நுட்பத்தை உபயோகிக்க விரும்பினார். சமீபத்தில் நான் கண்ட கனவைப் பற்றி ஒரு குறிப்பு எழுதிக் கொண்டு வருமாறு சென்ற சந்திப்பில் டாக்டர் முகர்ஜி சொல்லியிருந்தார்.

சிங்கக் கனவைப் பற்றி எத்தனை தகவல்கள் ஞாபகத்தில் இருந்தனவோ அத்தனை தகவல்களையும் என் குறிப்பில் சேர்த்திருந்தேன்.

கனவுப் பகுப்பாய்வு இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மனோ தத்துவ மருத்துவர்களால் பரவலாக பயன் படுத்தப்பட்டது. இப்போதெல்லாம் மனோ தத்துவ சிகிச்சைக் கருவியாக கனவுப்பகுப்பாய்வு அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக இந்தியாவில். ஆனால், அயல் நாடுகளில் ‘psycho-analysis’ மற்றும் ‘gestalt psychology’ என்னும் மனோதத்துவப் பிரிவுகளில் கனவுகளின் பகுப்பாய்வு பரவலாக உபயோகத்தில் உள்ளது.

“சிங்கக் கனவு சுவாரஸ்யமாயிருக்கிறது. நீங்கள் பகுதி நேர எழுத்தாளர் என்பதால் சுவையாக அதை பதிவு செய்திருக்கிறீர்கள். இந்தக் கனவில் உம்முடைய இப்போதைய மன நிலைக்கான விடை இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா?”

எப்படி துவங்குவது என்று தெரியவில்லை. சில நொடிகள் தயங்கினேன்.

“இணைய தளங்களில் கனவுகளுக்கான பொருள் கொள்ளலைப் பற்றி அறிய முயன்றேன். ஆனால் பல்லி சொல்லுக்குப் பலன் என்று பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படுவதைப் போல எளிதான விஷயமாக இருக்கவில்லை. கனவுகளுக்கு ஒரு பொதுவான கருப்பொருள் இருப்பதில்லை. சிங்கம் பற்றிய கனவுக்கான பொருள்விளக்கம் பொதுவான ராசி பலன் வாசிப்பது போன்று ஒத்திசைவற்ற உணர்வைத் தந்தது.”

கையோடு கொண்டுவந்திருந்த நோட்புக்கில் குறித்து வைத்திருந்தனவற்றை வாசித்துக் காண்பித்தேன்.

“வலிமை, தைரியம், கம்பீரம் மற்றும் பெருமிதச் சிந்தனை – இவற்றின் குறியீடு சிங்கம். சிறுமைகளிலிருந்து விடுபட்டவர்க்கே சிங்கக்கனவு தோன்றும்.”

“சிங்கத்தை கனவில் காணுதல், மேலே சொன்ன குணங்களை விட, போராட்டத்தையே அதிகமாகக் குறிக்கிறது. போராட்டத்தில் வெற்றி பெற்று பல்வேறு பிரயாசங்களிலும் தலைவனாக மிளிர்வதையும் சிங்கத்தை கனவில் காணுதல் குறிக்கிறது.”

“திருமணமாகாத பெண்ணின் கனவில் சிங்கம் வந்தால் அவளுக்கு திருமணமாகும்.”

“ஓர் இளம் வாலிபனின் கனவில் சிங்கம் வந்தால் யதார்த்த வாழ்க்கையில் எதிரி ஒருவனால் எளிதில் அவனது இடம் எடுத்துக் கொள்ளப்படும்.”

“ஒரு சர்க்கஸில் சிங்கம் நடிப்பது போல கனவு வந்தால், உன் வாழ்க்கையில் எளிதாக கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படக் கூடிய கஷ்டங்கள் உருவாகும் என்று பொருள் கொள்ளலாம்.”

“உன் கண்களின் முன்னால் சிங்கம் எதையாவது தின்னுவது போன்ற கனவு வந்தால், உன் யதார்த்த வாழ்வின் பிரச்னைகள் வித்தியாசமான வழிகளில் தீரும்.”

“ஓர் இளஞ்சிங்கத்தை நீ உன் கனவில் பார்த்தால் யதார்த்தத்தில் உன் வியாபாரக் கூட்டாளிகளினால் தொல்லைகள் ஏற்படும்.”

“கர்வமாக நடைபோடும் சிங்கத்தை கனவில் பார்த்தால், குடும்பப் பிரசினைகளின் சாத்தியம் உண்டு என்று பொருள் ; ஆனால் உன் வாழ்க்கைக் கூட்டாளியின் துணை கொண்டு அப்பிரச்னைகளை தீர்த்துவிடக் கூடும்.”

நான் படித்துக் காட்டியதும் முகர்ஜி சிரித்தார்.

“சிங்கம் கனவில் வருவதை எப்படி பொருள் கொள்ளலாம் என்பதை தேடினால் இளஞ்சிங்கம், பெண் சிங்கம், ஆண் சிங்கம், சிங்கத்துடன் விளையாடுதல், சிங்கம் கனவு காண்பவனை துரத்துதல் என்று விதவிதமாக விளக்கங்கள் போட்டிருக்கிறார்கள். சிங்கம் வருகிறது என்று கேள்விப்பட்டவுடனேயே அறைக்குள் சென்று தாழ் போட்டுக்கொண்டு ஒளிந்து கொண்ட கனவில் சிங்கத்தை பார்க்கவேயில்லை. ஆனால் சிங்கம் பற்றிய பயம் இருந்தது. கனவில் இல்லாமல் இருந்த சிங்கத்தை எப்படி பொருள் கொள்வது?”

இன்னும் பலமாக சிரித்தார் முகர்ஜி. இதற்கு முன்னர் நடந்த அமர்வுகள் இத்தனை லேசாக சென்றிருக்கவில்லை.

மன நல சிகிச்சையின் போது கனவை பொருள் விளக்கம் கொள்ளுதலில் பல வித வழிமுறைகள் உள்ளதாகக் கூறி அதில் ஒரு சிலவற்றை விளக்கினார். “நீ சொன்ன ராசி பலன் மாதிரியான பொருள் கொள்ளல் நமது கலாசாரத்திலிருந்து பெறப்படுவது. கனவுகளை பொருள் கொள்ளலில் கலாசார விழுமியங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. எனினும் மன நல சிகிச்சையில் கனவில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் நிஜ வாழ்க்கையில் யாரை எதை குறிக்கிறது என்பதை கனவு காண்பவர் அடையாளங்காணுதலிலிருந்து கனவுப் பகுப்பாய்வு தொடங்குகிறது”

முகர்ஜி அன்றைய அமர்வை விரைவில் முடித்துக் கொண்டார். அடுத்த சந்திப்புக்கு வரும்போது நான் எழுதித் தந்த கனவு பற்றி நன்கு யோசித்துக் கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.

“உன் கனவுக் குறிப்பை வாசித்தபோது ஹெமிங்வேயின் ஓல்ட்மேன் அண்ட் தி ஸீ நாவல் என் ஞாபகத்துக்கு வந்தது. அதில் கிழவன் சாண்டியாகோ அடிக்கடி சிங்கங்களை கனவில் காண்பான். அதுவும் குழுக்களாக சிங்கங்கள் உலா வருவதாகக் கனவு காண்பான். நீ பார்த்த இணைய தளத்தில் சாண்டியாகோவின் கனவுக்கு என்ன பொருள்விளக்கம் தந்திருப்பார்கள்?”

+++++

வீடு திரும்பியதும் பக்கம் பக்கமாக குறிப்புகள் எழுதினேன்.

என் கண்ணுக்குத் தெரியாத சிங்கம் என்னுள் பயத்தை ஏற்படுத்தியது. என் மீது மட்டுமல்ல. என்னுடன் பேசிக் கொண்டிருந்த மேலும் சிலருக்கும் தான். கண்ணுக்குத் தெரியாத சிங்கம் என் அதிகாரியைக் குறிக்கிறதா? இல்லை. என் பயங்கள், பாதுகாப்பின்மை – இவைகளைத்தான் கூண்டில் இருந்து தப்பித்திருக்கக்கூடிய சிங்கம் குறிக்கிறதா? பயங்களும் பாதுகாப்பின்மையும் கண்ணுக்குப் புலப்படா மனக்குணங்கள். அவற்றுக்குப் பயந்து நான் ஒதுங்கிய அறை ஏன் என் அலுவலகத்தையொத்து இருக்கிறது. அங்கிருந்தோர் யாரும் பயந்தது மாதிரி தெரியவில்லை. அறைக்குள் வந்து ஒதுங்கிய நானும் என்னுடன் வந்தவர்களுந்தான் பயத்துடன் பதற்றத்துடன் இருந்தோம். ஆனால் சிங்கத்தை பிடிப்பதற்கான ஆயத்தங்கள் அறையின் மூடிய இரு கதவுகளுக்குப் பின்னால் நடந்து கோண்டிருந்ததற்கான அத்தனை சங்கேதங்களும் எனக்கு தெரிந்தன. சத்தங்கள் கேட்டன. தலைப்பாகையிட்ட இளைஞன் ஒருவன் எனக்கு உறுதி தந்தானே சிங்கம் பிடிபட்டுவிடும் என! என் பதற்றங்கள் எல்லாம் கற்பிதங்கள் என்று இந்த கனவு சொல்கிறதோ?

வேறு மாதிரி யோசித்தேன்.

சிங்கம் அந்த அதிகாரியைக் குறிக்கிறது. அவர் தன் நடத்தையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிராமல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலரின் மனதில் மட்டும் பாதுகாப்பின்மையை அச்சத்தை உருவாக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து தப்பிக்க முடியாமல் ஓடி அலுவலகம் போன்று தெரிந்த அறையில் தஞ்சம் புகுகிறேன். ஆனால் அந்த அறையில் இருந்த மற்றவர்கள் போல என்னால் சஞ்சலமுறாமல் இருக்க முடிவதில்லை. எப்படியாவது அதிகாரியிடமிருந்து தப்புதலே என் விழைவாக இருக்கிறது!

இன்னும் வேறு மாதிரி யோசித்தேன்.

கதவைத் திறந்து வெளியே வந்த எனக்கு அங்கே என்ன காத்திருந்தது? மூன்று சாத்தியப்பாடுகள்! (1) வெளியே யாரும் இல்லை. சிங்கம் கண்ணில் தென்படவில்லை. ஆபத்து விலகிவிடுகிறது. (2) எனக்காக சிங்கம் அமைதியாக கதவுக்கு வெளியே காத்திருக்கிறது. அதனுடன் சண்டை போடுகிறேன். அதை வென்றேடுக்கிறேன். (3) அறைக்கு வெளியே காத்திருந்த சிங்கம் என்னைத் தாக்கி என்னைக் கொன்று போட்டுவிடுகிறது.

டாக்டர் படித்து விட்டு என்னிடம் திருப்பியளித்த கனவுக் குறிப்பை மீண்டும் வாசித்தேன்.

மீண்டும் இன்னொரு குறிப்பு எழுதினேன்.

சிங்கத்துக்கு ஏன் கோபம்? காட்டிலிருந்து கடத்தி வரப்பட்டு கூண்டில் பொழுதுபோக்கிற்காக அடைக்கப்பட்ட சிங்கத்தின் உணர்வுகள் பற்றி நமக்கு என்ன தெரியும்? அதிகாரியின் சொந்த பிரச்னைகள், அபிலாஷைகள், பொறுப்புகள், பாதுகாப்பின்மை – இவற்றைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? ஒரு சக மனிதனாக அவனும் நம்மைப் போல பலங்களுடனும் பலவீனங்களுடனும் இருப்பவன் தானே…….

எழுதுவதை நிறுத்தினேன். என் மேசையின் மேல் இருந்த மினியேச்சர் சாரநாத் தேசியச் சின்னத்தின் திசைக்கொன்றாக நான்கு புறங்களைப் பார்க்கும் சிங்க ரூபங்களை நோக்கினேன். சிங்கக் கனவு எனக்களிக்கும் தகவல் என்ன?

சூழமைவு இல்லாமல் எந்த நிகழ்வுக்கும் அர்த்தம் கற்பித்தல் இயலாத காரியம். சூழமைவைப் பொறுத்து ஒரே நிகழ்வுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் கற்பிக்கலாம். நம்மை நடுநாயகமாய் வைத்தே நமக்கான அர்த்தங்களை நாம் பெறுகிறோம். The Phenomena of Shared Dreams சாத்தியம் என்று வைத்துக் கொண்டால், இதே கனவுக்கான பொருள்விளக்கத்தை சிங்கத்திடம் கேட்டால் அது என்ன பதிலளிக்கும்? அந்த அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்களில் ஒருவரின் (அவர் நிஜ மனிதராக இருக்கும் பட்சத்தில்) கண்ணோட்டத்தில் இந்த கனவு என்ன அர்த்தத்தை கொடுக்கும்?

கனவு கண்ட அந்த இரவில் கைத்தொலைபேசி ரிங் ஆனதும் கண்விழித்து எழுந்தது போன்று சடக்கென ஒரு தெளிவு. சடோரி!

நாம் கண்ட கனவை நம் கண்ணோட்டத்தில் பொருள்விளக்கம் கொள்கிறோம். ஒரு திரைப்பட இயக்குனரின் கட் போல நம் கனவின் பொருள்விளக்கம் நம்முடைய கட். வாழ்க்கை யாருடைய கட்? வாழ்க்கை எல்லா உயிர்களின் கூட்டுக் கனவு என்பதாக யோசித்தால் ஒருவரின் கண்ணோட்டத்தில் மட்டும் வாழ்வின் நிகழ்வுகளை எப்படி பொருள் கொள்ள முடியும்? “இதெல்லாம் எனக்கு ஏன் நடக்கிறது?” என்ற வினா அடிப்படையில் மிகவும் அபத்தமானது ; நம் சுய கண்ணோட்டத்திலிருந்து எழுவது.

நான் நான். அதிகாரி அதிகாரி. நான் என் எல்லைக்குள் என் பலங்களுடன் பலவீனங்களுடன் இருக்கிறேன். என் அதிகாரி அவருக்குரிய எல்லையில் இருக்கிறார். அவருடைய பலங்களை பலவீனங்களை நடத்தையை மிகையாகப் பொருட்படுத்தி என்னுடைய சுய முக்கியத்துவத்தை அதிகமாக கற்பனை செய்து கொள்ளும் பழக்கந்தானே அடிப்படையில் என்னுள் பதற்றத்தை உண்டு பண்ணுகிறது. பாதிப்புக்குள்ளாகும் தன்மை – நானோ என் அதிகாரியோ – அனைவருக்கும் பொதுவன்றோ?

+++++

அன்றிரவு நிம்மதியாக உறங்கினேன். முகர்ஜி குறிப்பிட்ட சுமேரியக் காப்பிய நாயகன் கில்கமெஷ் காணும் கனவொன்றில் வானிலிருந்து விழும் கோடரியை அவன் அணைத்துக் கொள்வதைப் போல என் மேசையில் இருக்கும் சாரநாத்தின் சாக்கிய சிம்மங்களை கைகளில் இடுக்கியவாறே தூக்கம். கடலில் சுறாக்களுடன் கடுமையாகப் போராடி தலை சேதமுறாமல், பிற பாகங்களை சுறாக்கள் பிய்த்தெடுத்துவிட எலும்புகளின் அமைப்பு மட்டும் எஞ்சியிருந்த மிகப்பெரிய மர்லின் மீனுடன் அதிகாலை கரை திரும்பிய பிறகு சாண்டியாகோ அடித்துப்போட்டாற்போல என்னை மாதிரிதான் தூங்கியிருப்பான்.

+++++

நன்றி : பதாகை

இன்று சனிக்கிழமை

முதலில் மின்னஞ்சல் வந்தது. மிக எளிதில் யார் வேண்டுமென்றாலும் மின்னஞ்சல்கள் அனுப்பிவிடுவர். அவற்றையெல்லாம் படிக்கும் பொறுப்பு பெறுநருடையது. அனுப்பியவர் தன் கடமையை செய்துவிட்டார். அவர் இளைப்பாறப் போய்விடுவார். எத்தகைய தகவல்களை அறிவுறுத்தல்களை மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவது என்ற வரையறை இல்லாமல் எல்லாவற்றையும் அஞ்சலில் எழுதிவிடல் சாதாரணமானதாகப் போய்விட்டது. அனைவருக்கும் ஓர் ஓட்டு என்பது மாதிரி அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி. மேலதிகாரிகள் நேரில் புன்னகை மன்னர்கள் ; மின்னஞ்சலில் பராசக்திகள் ; மனோகராக்கள். விடுமுறை நாட்களில் தொலைபேசியில் தொல்லை கொடுக்க மாட்டார்கள். வார இறுதி உங்களின் சொந்த நேரம் என்ற நல்வசனம் பேசுவார்கள். மின்னஞ்சலில் ஓரிரு வரிகளிலான அர்ச்சனைகள் சனி, ஞாயிறு நெடுக வந்து விழுந்து கொண்டேயிருக்கும். அவற்றில் ஒன்றிரண்டுக்கு கூட பதிலளிக்காவிடில் திங்கட்கிழமையன்று வேறு காரணங்களைச் சொல்லி “விமர்சிப்பார்கள்” ; எந்த காரணத்துக்கு ‘விமர்சனம்’ என்று தெரிந்துவிட்டால் அதிகாரியின் செயல் திறன் கூர்மையடையவில்லை என்று பொருள்.

மின்னஞ்சலுக்குப் பிறகு வந்த குட்டிச்சாத்தான் வாட்ஸ் அப். அனைவரின் கைத்தொலைபேசியிலும் பதுங்கிக் கொண்டு இந்த குட்டிச்சாத்தான் பண்ணும் அக்கிரமங்கள் சொல்லி மாளாது. அதிகாரிகள் சப்ஜெக்ட்டுக்கு ஒன்று என வாட்ஸப் குழுக்களை சிருஷ்டித்து கண் மூடி திறப்பதற்குள் மக்களை இட்டு நிரப்பி ‘ராஜாங்க’ விஷயங்களை கையாள்வார்கள். அதிகாலை கண் விழித்து தூக்கக் கலக்கத்தில் நண்பர்கள் யாராவது தகவல் ஏதேனும் அனுப்பியிருக்கிறார்களா என்று பார்க்கப்போனால் முந்தைய நாளிரவு தூக்கம் வராமல் நிறுவன வாட்ஸப் குழுக்களில் “ஆணை” முட்டைகளை இட்டிருப்பார் மேலதிகாரி. அந்த முட்டைகள் எல்லாம் குழு அங்கத்தினர்களின் பதில்களாக குஞ்சு பொறித்திருக்கும். எல்லாவற்றையும் விட்டு விலகி நிற்கலாம் என்று அமைதியாக இருக்கவே முடியாது. ஏனெனில் என்னுடைய பதில் குஞ்சை காணாமல் வாட்சப் குழுவிலேயே என் பெயரை விளித்து கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளையும் வரிசையாக நிறுத்தி வைத்திருப்பார் அதிகாரி.

நிரலிகளின் அட்டகாசம் இன்றைய சனிக்கிழமையும் தொடர்கிறது. சலிப்பு மேலிடுகிறது. மேலோட்டமான சில பதில்களை டைப்பிட்டு நிரலியை மூடி வைத்த போது மனமெங்கும் வெறுப்புணர்வு. தப்பி ஓடிவிட வேண்டும் என்பது மாதிரியான மனோநிலை. இந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேட வேண்டும் என்ற எண்ணம் சில மாதங்களாகவே நீடிக்கிறது. வாய்ப்புகள் எதுவும் கையில் சிக்கவில்லை. அவை சிக்காமலேயே போய் விடுமோ என்ற அச்சம் இபபோதெல்லாம் அடிக்கடி மனதை வாட்டுகிறது. வயது ஐம்பதை தொடுகிறது. நிறுவனங்களில் இளைஞர்களை பணியமர்த்த விரும்பும் போக்கு அதிகரித்து வரும் இந்நாட்களில் ஏற்கனெவே சீனியர் சிட்டிசன் அந்தஸ்தை அடைந்துவிட்டது மாதிரியான தாழ்வுணர்ச்சி தலை தூக்குகிறது.

நம்பிக்கைச் சிக்கலுக்கு என்ன மருந்து? மேலதிக நம்பிக்கை. நம்மை மீறிய சக்தியின் மேலான நம்பிக்கை. நம்முடைய பிரச்னைகளுக்கு நம்முடைய திறனை நம்பாமல் வேறொன்றை – இருக்கிறதா அல்லது இல்லையா என்று தெரியாத ஒன்றை – நம்புவதா என்ற கேள்வி தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிடும் என்றாலும் எப்படியோ ஒரு தெளிவு பிறந்தால் சரி – பிறக்கிறதா என்று பார்த்து விடுவோமே என்ற எண்ணத்துடன் படுக்கையின் மேல் கிடந்த அந்த புத்தகத்தை கையில் எடுத்தேன்.

தேடல்கள் அனைத்துமே curosity-யின் குழந்தைகள். பதற்றமும் பயமும் Curiosity-யாக வடிவ மாற்றம் கொள்ளும் தருணத்தில் நம்பிக்கை பூர்வ காத்திருப்பு என்கிற ஆன்மீக வாயிலுக்குள் நுழைந்து விட முடிகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவர் ஆத்திகராயிருக்கலாம் ; நாத்திகராயிருக்கலாம் ; யாரும் எதுவாகவேனும் இருந்து விட்டு போகலாம் ; நம்பிக்கை பூர்வ காத்திருப்பு என்னும் குணம் வயதான தளர்ந்தோரின் கையில் இருக்கும் கைத்தடி போன்றது. (இந்த குறிப்பிட்ட உவமைக்கான காரணம் கட்டுரையின் முடிவில் வரும்).

புத்தக கிரிக்கெட் விளையாடுபவன் போல் புத்தகத்தின் ஒரு பக்கத்தை குறிப்பின்றி திறந்தேன்.

+++++

ஹேமத்பந்த் இப்போது பாபா சமாதானம் நிலைநாட்டும் பாகத்தை ஏற்றுக்கொண்ட மற்றொரு வேடிக்கையான சம்பவத்தைக் கூறுகிறார். தாமோதர் கன்ஷ்யாம் பாபரே என்று அழைக்கப்பட்ட அன்னாசின்சினிகர் என்ற அடியவர் ஒருவர் இருந்தார். அவர் எளிமையானவர். முரடர். நேர்மையானவர். அவர் எவரையும் லட்சியம் செய்யமாட்டார். எப்போதும் கண்டிப்பாக பேசி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்ற ரீதியிலேயே எல்லாவற்றையும் நடத்துவார். வெளிப்படையாகக் கடுமையாகவும் வசப்படாதவராகவும் இருந்த போதும் அவர் நற்பண்பாளர். கள்ளமற்றிருந்தார். எனவே சாயிபாபா அவரை நேசித்தார் (படுக்கையில் கிடந்த புத்தகம்ஸ்ரீ சாயி சத் சரித்திரம்ஹேமத்பந்த் என்ற புனைபெயர் கொண்ட ஸ்ரீ கோவிந்தராவ் ரகுநாத் தபோல்கர் அவர்கள் எழுதிய மராட்டிய மூலத்திலிருந்து இந்திரா கேர் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில நூல்). ஒருநாள், ஒவ்வொருவரும் தங்கள் வழியில் சேவை செய்வதைப் போன்று, அன்னாவும் பாபாவின் கைப்பிடியை பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். அம்மா என்று பாபாவாலும் மாவிசிபாய் என்று பிறராலும் அழைக்கப்பட்ட கிழவிதவையான வேணுபாய் கௌஜால்கி வலது புறத்தில் அமர்ந்து கொண்டு அவளுக்கே உரிய விதத்தில் சேவை செய்தாள். மாவிசிபாய் தூயவுள்ளம் கொண்ட முதியவள். அவள் தன் இரு கைகளையும் கோர்த்துக்கொண்டு பாபாவின் அடிவயிற்றைச்சுற்றி அழுத்தமாகப் பதித்துப் பிசைந்தாள். அடிவயிறே தட்டையாகிவிடும்படி வேகமாக பிசைந்தாள். பாபா இப்படியும் அப்படியுமாக அசைந்து புரண்டு கொண்டிருந்தார். மற்றொரு புறமிருந்து அன்னா நிதானத்துடன் இருந்தார். ஆனால் மாவிசி பாயின் அசைவுகளுடன் அவள் முகமும் அசைந்தது. ஒரு சமயத்தில் அவளது முகம் அன்னாவின் முகத்திற்கு வெகுஅருகே வந்துவிட்டது. வேடிக்கையான பண்பு கொண்ட மாவிசிபாய் “ஓ இந்த அன்னா ரொம்ப கெட்டவன். அவன் என்னை முத்தமிட விரும்புகிறான். அவனுக்கு தலை நரைத்தும் ஆசை நரைக்கவில்லை” என்றாள். இச்சொற்கள் அன்னாவை கோபாவேசம் கொள்ளச் செய்தன. முஷ்டியை மடக்கிவிட்டுக் கொண்டு அவர் “நான் ஒரு கெட்ட கிழவன் என்றா சொல்கிறாய். நான் அவ்வளவு முட்டாளா? ஏன் வீணே என்னுடன் சண்டையை ஆரம்பிக்கிறாய்?” என்றார். அங்கு குழுமியிருந்தவர்கள் அனைவரும் இருவரின் வாய்ச்சண்டையை வெகுவாக ரசித்தனர். அவர்கள் இருவரையுமே பாபா மிகவும் நேசித்தார். சண்டையை நிறுத்த விரும்பிய அவர் இவ்விஷயத்தை மிகத்திறமையுடன் கையாண்டார். “அன்னா, ஏன் அனாவசியமாக கூச்சலையும் குழப்பத்தையும் உண்டாக்குகிறாய்? ஒரு மகன் தாயை முத்தமிடுவதில் என்ன தவறிருக்கிறது?” என்றார். பாபாவின் இம்மொழிகளைக் கேட்டவுடன் அனைவரும் மனமகிழ்ச்சியுடன் நகைத்தனர்.

+++++

ஹேமத்பந்த் பாபாவின் லீலைகளை ஒவ்வொன்றாகச் சொல்லி ஒவ்வொரு லீலைக்கும் பின்னர் தொக்கி நின்ற அர்த்தத்தின் தன்னுடைய புரிந்து கொள்ளலை வாசகரிடம் பகிர்வார். மேற்சொன்ன சம்பவத்திற்கான அவரின் குறிப்பு என்னுள் பல திறப்புகளை ஏற்படுத்தியது.

“A person may be burst out laughing while being caned and dissolve into tears when hit by a merest flower! It is the feeling that causes these waves of emotion. Who does not have this experience?”

+++++

நிரலிகள் இன்றி ஏது வாழ்வு? மேற்பகிர்ந்த மேற்கோளின் தமிழாக்கத்தை நிலைத்தகவலாக இடும் எண்ணம் பிறந்தது. முகநூல் நிரலியைத் திறக்கவும் செய்தேன். Feeling மற்றும் Emotion – இவ்விரு சொற்களின் சரியான தமிழ் இணைச்சொல்லை நான் அறிந்திருக்கவில்லை. கூகிள் மொழிபெயர்ப்பு நிரலி இரண்டு சொற்களுக்கும் உணர்வு என்றும் உணர்ச்சி என்றும் தமிழ்ப்படுத்தியது. இரண்டு சொற்களையும் ஒன்றுக்கு மாற்றாகவே இத்தனை நாள் பயன்படுத்தி வந்ததால் உணர்வும் உணர்ச்சியும் ஒன்றையே குறிக்கிறது என்று இதுநாள் வரை நினைத்து வந்தேன். ஆனால் மேற்சொன்ன மேற்கோளில் Feeling என்ற சொல்லும் Emotion என்ற சொல்லும் ஒன்றைக் குறிக்கவில்லை என்பது விளங்கினாலும் இரண்டு சொற்களுக்கும் இடையிலான சரியான வித்தியாசத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினேன்.

உணர்வு என்பதும் உணர்ச்சி என்பதும் வெவ்வேறாக இருக்கலாம் என்று என் மனைவி சொன்னார். தமிழ் விக்சனரி இணைய தளத்தில் இவ்விரு பதங்களின் அர்த்தத்தை நோக்கினேன்.

உணர்ச்சி – நம் மனதில் உணரப்படும் அறிவற்ற உணர்வு.

நமக்குத் தேவையான உணர்ச்சியை அறிவுப் பூர்வமாக சிந்தனை செய்து, நமக்கு வேண்டும் என ஏற்கும் திறனை உணர்வு என்கிறோம்

கொஞ்சம் தெளிவாவது போலிருந்தது. இணையத்தில் மேலும் என் ஆய்வுகளைத் தொடர்ந்தேன்.

உணர்ச்சிகள் பொருண்மைத் தன்மை படைத்தவை. ஒரு வெளிப்புற தூண்டுதலால் உடனடியாக ஏற்படும் மனோநிலை. உணர்ச்சிகள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளின் பரிணாமங்களின் வழியாக நம் ஜீன்களுக்குள் நுழைந்தவை. அவை சிக்கலானவை. பல வித பொருண்மையியல் மற்றும் அறிவார்ந்த எதிருணர்ச்சிக் குறிப்புகளை உள்ளடக்கியவை. உதாரணத்திற்கு ஒரு வனாந்தரத்தில் உலவுகையில் ஒரு சிங்கம் நம் வழியில் வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். உடன், நம்முள் பயம் தொற்றிக்கொண்டு விடுகிறது. ரத்த ஓட்டம், மூளை இயக்கம், முக பாவம் மற்றும் உடல் மொழி – இவைகள் வாயிலாக உணர்ச்சிகள் புறவயமாக அளக்கப்படக் கூடியவை. மூளையின் வெளிப்புறத்தில் ஓடும் துணை நரம்புகள் (subcortical) உணர்ச்சிகளை பதனிட்டு கடத்திச் செல்பவை. அவை முரண் தன்மை மிக்கவை ; தருக்க ஒழுங்கில் அடங்காதவை.

உணர்வுகள் நம் தலையில் உலவுபவை ; சொந்த, அனுபவ ரீதியாக பெற்ற உணர்ச்சியின் எதிர்க் குறிப்புகள் அவை. ஆங்கிலத்தில் 3000த்துக்கும் மேலான உணர்வுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக ஐநூறுக்கும் மேலான உணர்வுகளை மக்கள் எளிதில் அடையாளம் காண்பர். ஆனால் அவர்களிடம் உணர்ச்சிகளை பட்டியலிடச் சொன்னாலோ ஐந்து முதல் பத்து வகை உணர்ச்சிகள் மட்டுமே தேறும். உணர்ச்சிகள் உலகளாவிய ரீதியில் பொதுவானவை ; முதலில் வருபவை. அவை எந்த வித உணர்வாக பின்னர் மாறும் என்பது தனிப்பட்ட குணாம்சம், அனுபவம், நம்பிக்கைகள் போன்றவற்றைப் பொறுத்தது. உதாரணத்திற்கு, ஒரு விலங்கியல் பூங்காவில் கூண்டிற்குள் இருக்கும் சிங்கத்தை காண்கிறோம். அப்போது எழும் நமது உணர்வு ஆர்வம் மற்றும் வியப்பு முதலானவையாக இருக்கலாம் ; விலங்குகள் சிறையிலிடப்படக் கூடாது என்னும் கருத்துடையவராக இருப்போமாயின் கசப்புணர்வும் எழலாம்.

உணர்வைப் பற்றி (Feeling), உணர்ச்சியைப் பற்றி (Emotion) மேலும் யோசித்த போது ஒரு சமன்பாடு எனக்கு விளங்கியது :- Feeling = Emotion + Cognitive Input

+++++

அன்னா – மாவிசிபாய் சம்பவத்துக்குத் திரும்புவோம். ஷீர்டி பாபா அன்னாவுக்கு சொன்னது மாதிரி – அன்னாவும் மாவிசிபாயும் மகன் – தாய் உணர்வு மேவிய எண்ணங்களைக் கொண்டிருப்பாராயின் வாய்ச்சண்டை மூண்டிருக்காது. மாவிசிபாய் வாக்குவாதம் என்னும் புறத்தூண்டுதலை வெளிப்படுத்தினாலும் அதனால் தூண்டப்பெறாதவராக அன்னாவினுடைய அன்புணர்வு சண்டையைத் தவிர்த்திருக்கும்.

உணர்ச்சி உணர்வுக்கு முந்தையது என்று மனோதத்துவம் விவரித்தாலும் உணர்வு ஏற்கனவே நம் மனக்கூடத்தில் குவிந்திருப்பதால் தீயஉணர்ச்சிக்கு மாற்றாக நல்லுணர்வை அதிகமும் நாம் சேகரித்து வைக்கலாம். வெறுமனே மனக்கரையை தொட்டுப் போகும் அழகிய அலைகளாக மட்டுமே உணர்ச்சியை காணும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

+++++

நிரலிகள் ஏராளம் – மின்னஞ்சல், வாட்ஸப், முகநூல், இணையம் என. அவற்றில் பொறிக்கப்படும் “ஆணை” முட்டைகள் வெறும் எண்ணியல் துண்மிகள். அவற்றுக்கு பதில் சொல்லும் முறை நம் உணர்விலிருந்து எழுகிறது. அதற்கு மட்டுமே நாம் பொறுப்பாளிகள். நம் பதிலுக்கு நம் அதிகாரிகளுள் எழும் உணர்ச்சிகளுக்கு நாம் பொறுப்பல்ல.

+++++

சனிக்கிழமை மதியம் வாட்ஸ்அப்பில் அதிகம் “ஆணை” முட்டைகள் இடப்படவில்லை. மின்னஞ்சலிலும் அமைதி தவழ்ந்தது. நண்பர் சுவாமி நாதன் வாட்ஸ்அப்பில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய சமீபத்திய வலைப்பூ இடுகையை பகிர்ந்திருந்தார். கடவுளும் கைத்தடியும் – அனுபவமா புனைவா தெரியவில்லை. அது சொல்ல வந்திருக்கும் கருத்து என் உணர்வில் நிறைந்தது.

IMG_2549

நகர்ந்த ஸ்தம்பங்கள்

வைசாலியில் உள்ள அசோக ஸ்தம்பம்
வைசாலியில் உள்ள அசோக ஸ்தம்பம்

அசோகர் என்ற ஒருவர் இருந்தாரா அல்லது வெறும் தொன்மக்கதைகளில் சித்தரிக்கப்படும் பாத்திரமா என்ற ஐயம் துவக்க கால பிரிட்டிஷ்-இந்திய வரலாற்றறிஞர்களிடையே இருந்து வந்தது. “அசோகாவதானம்” என்னும் இரண்டாம் நூற்றாண்டு சம்ஸ்கிருத நூலொன்றும்,  இலங்கையின் நாளாகமங்களான  – தீபவம்சம், மகாவம்சம் – இரண்டும் புராணக்கதையின் மிகைப்படுத்தல்களோடு அசோகரின் வாழ்க்கை சம்பவங்களை சித்தரிக்கின்றன. ஒரு நாடகீயமான பாத்திரம் போன்று கலிங்கப் பெரும் போரை நிகழ்த்தி பின்னர் போரை வெறுத்து பௌத்த நெறிமுறையின் படி தேசத்தை ஆண்டு வந்தவர் என்றவாறு மேற்சொன்ன பௌத்த இலக்கியங்களில் அசோகர் பற்றிய குறிப்புகள்  வந்தாலும் அசோகரின் ஆட்சி பற்றிய உறுதியான வரலாற்றுப் பதிவுகள் கிடைக்காமலேயே இருந்தன. அசோக சக்கரவர்த்தியைப் பற்றிய தொன்மச் செய்திகளே ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளாக உலவி வந்தன.

James Prinsep என்னும் ஆங்கிலேயர் தில்லியில் இருக்கும் ஒரு ஸ்தம்பத்தில் பொறிக்கப்பட்டிருந்த பிராமி வடிவ எழுத்துகளைப் புரிந்துகொண்டது ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. “தேவனாம்பிய” (தெய்வங்களுக்கு பிரியமானவன்) “பியதஸ்சி” (மக்களை அன்புடன் கருதுபவன்) போன்ற பட்டப்பெயர்கள் தில்லி ஸ்தம்பத்தில் மட்டுமில்லாமல் வேறு ஸ்தம்பங்களிலும் பொறிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

19ம் நூற்றாண்டில் துணைக்கண்டம்  முழுமையும் (இந்தியா, நேபால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்) அசோகரின் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. ஸ்தம்பங்களிலும், கற்பாறைகளிலும், குகைச்சுவர்களிலும் பொறிக்கப்பட்ட  அரசாணைகள், பிரகடனங்கள் எல்லாம்  அசோகரின் சீர்திருத்தங்களையும் கொள்கைகளையும் குடிமக்களுக்கு வழங்கிய அறிவுரைகளையும் நவீன உலகிற்கு பறை சாற்றின. நன்னெறிகளின் அடித்தளத்தில் ஒரு பேரரசை நிறுவிய ஆற்றல் மிகு பேரரசரின் நுண்ணறிவை இக்கல்வெட்டுகள் நமக்கு அறியத்தந்தன. இந்திய வரலாற்றின் மிகப் பழமையான, குறிப்பிடத்தக்க நீளமான, முழுதும் புரிந்து கொள்ளப் பட்ட கல்வெட்டுகள் அசோகர் காலத்தவை தாம்!

அசோகரின் கலைத்திட்டங்களுள் முதன்மையானவை மௌரியப் பேரரசு முழுமையும் அவர் நிறுவிய தூண் சாசனங்கள். 40 முதல் 50 அடி உயரத்தினதாய் வான் நோக்கிய தூண்கள். அவைகள் இரண்டு வித கற்களிலிருந்து சமைக்கப்பட்டவை – தூணின் நடுக்கம்பத்திற்கு ஒன்று ; தூண் சிகரத்திற்கு இன்னொன்று. நடுக்கம்பம் ஒற்றைக் கல்லிலிருந்து வெட்டப்பட்டதாக இருக்கும். மதுராவிலும் காசிக்கு முப்பது கிலோ மீட்டர் தெற்கில் இருக்கும் சுனார் பகுதியிலிருந்தும் இருந்த சுரங்கங்களில் வெட்டப்பட்டு தூண்கள் நிறுவப்பட்ட இடங்களுக்கு தள்ளிச் செல்லப்படும். ஒவ்வொரு தூணும் கிட்டத்தட்ட 50 டன் எடை கொண்டவை. இன்று 19 தூண்களே எஞ்சியிருக்கின்றன ; அவற்றிலும் பல உடைந்த துண்டுகளாகிவிட்டன.

பௌத்த சமயக் கொள்கைகளை அடிக்கோடிட்டுக் காட்டும் பொருட்டு நிறுவப்பட்ட தூண்களின் சிகரத்தில்  விலங்குகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பௌத்த சமயத்தின் பரவலான சின்னமாக இருக்கும் தாமரை மலரை தலைகீழாக்கி அதன் மேல் விலங்குகளின் சிலை அமைக்கப்பட்டிருக்கும் ; சிங்கம் அல்லது நின்ற நிலை அல்லது உட்கார்ந்த நிலையில் மாடு.

சில ஸ்தம்பங்களில் சமர்ப்பண கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தேதிகள் குறிப்பிடப்பட்டு அசோகர்  புரவலர் என்ற தகவலும் அவற்றில் இருக்கும் பிராமி எழுத்தே கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் மேற்குப்பகுதியில் காணப்பட்ட கல்வெட்டுகளில் சமஸ்கிருதத்துக்கு தொடர்புடைய எழுத்து வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதிகளில் உள்ள ஸ்தம்பங்களின் கல்வெட்டுகள் அசோகர் காலத்து மகதி மொழியில் செதுக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட ஸ்தம்பத்தில் அரமைக் மற்றும் கிரேக்க மொழிகளில் செதுக்கப்பட்டுள்ளது. தன் முடியரசின் பல்வேறு பண்பாட்டு, இனக்  குழுக்களைச்  சென்றடைய அசோகர்  விழைந்ததின் பிரதிபலிப்பாக இதைக் கொள்ளலாம். சில கல்வெட்டுகள் மதச் சார்பற்றவையாக இருக்கின்றன. கலிங்கப்  பேரழிவிற்கு அசோகர் மன்னிப்பு கேட்கிறார் ; மக்களின் நலமே தன்  குறிக்கோள் என்று உறுதி கூறுகிறார். சில கல்வெட்டுகள் அசோகர் மக்களுக்கு செய்த நன்மைகளை புகழ்ந்து கூறும் முகமாக செதுக்கப்பட்டுள்ளன.

அசோகர் ஸ்தம்பங்கள் பிற்காலத்தில் வந்த சில பேரரசர்களின் கவனத்தை கவர்ந்தன. புராதன கௌஷம்பி நகரத்தில் நிறுவப்பட்ட ஸ்தம்பம் இன்று அலஹாபாத்தில் திரிவேணி சங்கமத்துக்கு அருகில் முகலாயப் பேரரசர் அக்பர் கட்டிய கோட்டைக்குள் காணப்படுகிறது. கௌஷம்பியில் இருந்த தூணின் சிகரமாய் இருந்த விலங்குச் சிலை தூணின் அலஹாபாத்  நகர்வுக்கு முன்னர் அகற்றப்பட்டிருக்கலாம்.  அலகாபாத் ஸ்தம்பத்தில் பிராமி எழுத்தில் அசோகரின்  கல்வெட்டில்  கி மு 232ம் ஆண்டின் தேதியிடப்பட்டிருக்கிறது. அதே ஸ்தம்பத்தில் குப்தவம்சப் பேரரசர் சமுத்திரகுப்தர் கி பி 375 இல் குப்தர் கால பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் தான் பெற்ற வெற்றிகளைப் பற்றி பெருமிதத்துடன் பேசுகிறார். அதே ஸ்தம்பத்தில் பாரசீக மொழியில் முகலாயப் பேரரசர் ஜஹாங்கிரும் ஒரு கல்வெட்டை பதிந்திருக்கிறார்.

அலஹாபாதின் அசோகா ஸ்தம்பம் போல், தில்லியில் இருக்கும் இரண்டு அசோக ஸ்தம்பங்களும் முறையே மீரட் மற்றும் அம்பாலாவில் இருந்து இடம் பெயர்ந்தவை. 14ம் நூற்றாண்டில் தில்லியை ஆண்ட பெரோஸ் ஷா துக்ளக் என்கிற  சுல்தானால் நகர்த்தப்பட்டவை. இவ்விரண்டு ஸ்தம்பங்களிலும் சிகரம் இல்லை.

ஆப்கானிய நகரம் காண்டஹாரில் எழுப்பப்பட்ட ஸ்தம்பம் இன்று காபூலில் இருக்கும் தேசிய மியுசியத்தினுள் இருக்கிறது. இந்த ஸ்தம்பத்தில் தான் அரமைக், கிரேக்க மொழிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

சாரனாத்தின் அசோக ஸ்தம்பத்தை அலங்கரித்த நான்கு சிங்கங்களின் சிகரம் அதிமுக்கியமானது. நம்  தேசியச் சின்னம் கூட. ஒற்றைத் தொகுதியான பளபளப்பூட்டப்பட்ட மணற் பாறையில் செதுக்கப்பட்டது. நான்கு ஆசிய சிங்கங்கள் பின்னுக்குப் பின்னாக நிற்பதை சித்தரிக்கிறது. ஒரு வட்டச்சட்டத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கின்றன அந்த சிங்கச்சிலைகள். வட்டச்சட்டத்தைச்  சுற்றி செதுக்கப்பட்ட யானை, ஓடும் குதிரை, மாடு, சிங்கம் – இவற்றுக்கிடையிடையே 24 ஆரங்களையுடைய  சக்கரங்கள். எல்லாம் மணி வடிவ தலைகீழ்த் தாமரையின் மேல் வைக்கப்பட்டுள்ளன.

பௌத்த நெறியின் குறியீடாக சிங்கச் சின்னத்தை பார்க்க முடியும். பௌத்த மரபுகளில் சிங்கத்தை புத்தரின் குறியீடாக சித்தரிப்பது வழக்கம். நான்கு சிங்கங்கள் நான்கு  திசைகளில் நோக்குவது சம முக்கியத்துவம் கொண்ட நான்கு விஷயங்களைக் குறிப்பதாகக் கருதலாம். அவைகளை  நால்வகை வாய்மைகள் (Four Noble Truths ) என்றும் சொல்லலாம்  வட்டச்சட்டத்தில் காணப்படும் நான்கு விலங்குகளுக்கும் குறியீட்டர்த்தம் உண்டு. புத்தரின் தாய் புத்தரைக் கருவுற்ற போது அவர் வயிற்றுக்குள் யானை நுழைந்ததைப் போல கனவு கண்டாள் ; யானை புத்தரின் பிறப்பைக் குறிக்கிறது. புத்தரின் இளமைப்பருவத்தை மாடு குறிக்கிறது. மனைவியை விட்டு விலகி புத்தர் தேடலில் ஈடுபட்டதை குறிப்பது ஓடும் குதிரை. நிர்வாண நிலையை புத்தர் எய்தியதை குறிப்பது சிங்கம். புத்தர் போதித்த தர்மத்தை சக்கரம் குறிக்கிறது.

+++++

மார்ச் மாதத்தில் ஒரு நாள்  பின் மதியம்  சாரநாத் சிதிலங்களைக் காணச் சென்றேன் ;   உடைந்து கிடந்த அசோகா ஸ்தம்பத்தை மூடிய கண்ணாடி அறைக்குள் பூட்டி வைத்திருக்கிறார்கள். அசோகர் சிங்கங்கள் மெருகு குலையாத பளபளப்புடன் சாரநாத் மியுசியத்தினுள் இருக்கிறது. ஸ்தம்பத்தின் மேல் சிங்கச்சின்னத்தையும் அதன் மேல் ஒரு காலத்தில் இருந்த தர்ம சக்கரத்தையும் என் மனக்கண் முன்னால்  தோற்றுவித்தேன். சிதிலங்கள் மறைந்து அசோகர் ஸ்தம்பத்துக்கு பின்னிருந்த மூல கந்த குடி விகாரமும் வளாகத்தில் இருந்த மற்ற விகாரஙகளும் அவற்றுக்கெல்லாம் பின்னணியில் இருந்த தமேக் ஸ்துபமும் (இப்போது தரை மட்டமாகியிருக்கும்) தர்ம ராஜிக ஸ்தூபமும் என பல நூற்றாண்டுகளுக்கு முன்னதான காட்சிகள் உயிர் பெற்றன. இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னம் நினைவுக்காட்சிகள் நகர்ந்த போது விகாரைகள் ஸ்தம்பங்கள் ஏதுமில்லை. பசுமையான காட்டுக்கு நடுவே  மான்கள் துள்ளிக் குதித்தாடின. கால வரிசையில்லாமல் காட்சிகள் மாறிக் கொண்டேயிருந்தன. வேறொரு காட்சியில் துருக்கிய தளபதியொருவனின் படைகளால் வளாகத்தில் இருந்த சைத்யங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. புத்தர் சிலைகள் அருவங்களாக்கப்பட்டன. காலத்தின் இன்னோர் அசைவில் தமேக் ஸ்துபத்திலிருந்து உருவப்பட்ட செங்கற்களின் பொதி  கழுதைகளின் மேல் ஏற்றப்பட்டு காசி நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டன.  ஒருமுறை பொதியினுள் கிடைத்த புத்தரினுடைய தியானக் கூழாங்கல்லொன்று  குப்பையெனக்  கருதப்பட்டு நதிக்குள் எரியப்பட்டது. பின்னொரு காட்சியில் கன்னிங்ஹாம் பிரபு தமேக் ஸ்தூபத்தினுள் இறங்கி அதன் சுவர்களுக்குள் பொறிக்கப்பட்டிருந்த ‘யெ தம்ம ஹேதுப்ப பவ’ என்னும்  பாலி சுலோகத்தை வாசிக்க முயன்று கொண்டிருந்தார்.

சுற்றுலா பயணிகளுக்கான இருக்கையில் அமர்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்த இளஞ்ஜோடியொன்றை  சீருடையிட்ட காவலாளி  ஒருவன் அங்கிருந்து விரட்டிக் கொண்டிருந்த சத்தம் நிகழ்காலத்துக்கு அழைத்து வந்தது.  மண் தரையில் பரவியிருந்த என்னை விட நான்கு மடங்கு நெடிய என் நிழலை நோக்கியவாறு  வெகு நேரம் அங்கே நின்றிருந்தேன்.

பிரதிபலிப்பு


மிருகக் காட்சி சாலையின்

முகப்பில்

கம்பீரமாக

தசைகள் புடைக்க

மிடுக்குடன்

வீரமாக உறுமுவது போல

நிற்கும் சிங்கத்தின் சிலை.

கூண்டுக்குள்

பிடறி எலும்பு தெரிய

ரோமம் உதிர்ந்து

பாவப் பட்ட பார்வையுடன்

தரையில் போடப்பட்ட காய்ந்த புற்களை

நக்கிக் கொண்டிருக்கும்

நிஜச் சிங்கம்.