திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் ஸஜ்தா

In 2014, in Iraq’s northern city of Mosul one of its most well-known shrines was destroyed by the ISIS – the Tomb of Jonah. The shrine was built on what is regarded as the burial site of the biblical prophet known in the Quran as Yunus.

நினிவே நகரம் நீண்ட காலமாக அல்லாஹ்வின் செய்தியை மறந்து சிலை வழிபாடும் பாவமும் நிறைந்த நகரமாக மாறியிருந்தது. நகரவாசிகளைத் தனது ஒளியின் பாதையில் வழிநடத்த நினிவே நகரவாசிகளுள் ஒருவராகப் பிறந்திருந்த யூனுஸ் நபியை ஒரு தூதராக அனுப்ப முடிவு செய்தான் அல்லாஹ்.

யூனுஸ் நபி உடனடியாக தனது இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கினார். தனது மக்களை அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் சிலை வழிபாட்டைத் தவிர்க்குமாறும் அழைப்பு விடுத்தார். அவருக்கு முன் பிறந்த தீர்க்கதரிசிகள் நிராகரிக்கப்பட்டதைப் போலவே ஆனால் நினிவே மக்களால் யூனுஸும் நிராகரிக்கப்பட்டார். அல்லாஹ்வின் பயங்கர கோபத்தை அவர்களுக்கு நினைவூட்டி அவர்களை அல்லாஹ்வின் பாதைக்கு வர அழைத்தார். அவர்களோ, “நாங்களும் எங்கள் முன்னோர்களும் பல ஆண்டுகளாக இந்த தெய்வங்களை வணங்குகிறோம், இதனால் எங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை” என்றனர்.

நபி யூனுஸ் அவர்களுக்கு உதவ விரும்பினார், அதனால் தன் விடாமுயற்சியைக் கைவிடவில்லை. அவர்களின் அறியாமையைப் பரிவுடன் அணுகினார். அவர்களின் கடுமையான வார்த்தைகளைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அல்லாஹ்வின் தண்டனை குறித்து எச்சரித்தவண்ணமிருந்தார்.

மேலும் யூனுஸின் வார்த்தைகளை வெற்று அச்சுறுத்தல்களாக நினைத்து தாங்கள் சிறிதும் பயப்படவில்லை என்று தெரிவித்தனர். யூனுஸ் நபி மனம் உடைந்தார்; அவர் தனது மக்களை கைவிட்டார். தன்னை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தை ஏற்கும் ஒரு சமூகத்தை வெகு தொலைவில் கண்டடையலாம் என்ற நம்பிக்கையில், அல்லாஹ்வின் அனுமதியின்றி, நினிவே நகரத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

நினிவேயின் அமைதியான வானம், அல்லாஹ்வின் கோபத்தைத் துப்புவதற்குத் தயாராவதுபோல் சிவப்பாக மாறியது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மலை உச்சியில் தங்களுக்கு மேலேயிருந்த வானத்தை பயம் நிறைந்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அல்லாஹ்வின் தண்டனையைப் பற்றிய யூனுஸின் எச்சரிக்கையை அவர்கள் நினைவு கூர்ந்தனர், மேலும் அவர்கள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலையைக் கண்டு அஞ்சினர். புதிய நம்பிக்கையுடன், முழங்காலில் விழுந்தனர்; கைகளை நீட்டி அல்லாஹ்வின் மன்னிப்பையும் கருணையையும் வேண்ட ஆரம்பித்தார்கள். இந்த நேர்மையான மனந்திரும்புதலால் தூண்டப்பட்ட அல்லாஹ், தண்டனையை நீக்கி, குடிமக்களை மன்னித்து, அவர்கள் மீது தனது ஆசீர்வாதங்களைப் பொழிந்தான்.

வானம் தெளிந்தபோது மக்கள் தங்கள் அன்பிற்குரிய நபி யூனுஸ் அல்லாஹ்வின் பாதையில் அவர்களை வழிநடத்தும் பொருட்டு பாதுகாப்பாக நினிவேவுக்குத் திரும்பி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்,

நினிவேயை விட்டு வெளியேறிய யூனுஸ் நபி தனது மக்களை விட்டு வெகுதூரம் சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு சிறிய பயணிகள் கப்பலில் ஏறினார். கப்பல் பகலில் அமைதியான நீரில் நகர்ந்தது; ஆனால் இரவு வந்தவுடன் சூறாவளி கப்பலைத் தொட்டது. கப்பலை அங்குமிங்குமாக உலுக்கியது. கடல் நீர் மெல்ல மெல்ல புகுந்து, கப்பலை மெதுவாக மூழ்க ஆரம்பித்தது. பணியாளர்களும் பயணிகளும் உயிருக்கு அஞ்சத் தொடங்கினர்.

இரவு முழுவதும் சூறாவளி தொடர்ந்ததால் கப்பலின் சுமையைக் குறைப்பதற்காக சாமான்கள் மற்றும் மற்ற அனைத்து அதிகப்படியான சுமைகளையும் தூக்கி எறியுமாறு கப்பலின் மாலுமி உத்தரவிட்டார். அறிவுறுத்தப்பட்டபடி பணியாளர்கள் கப்பலின் அதிகப்படியான சுமையை வெளியேற்றினர்; ஆனால், கப்பல் இன்னமும் கனமாக இருந்ததால் தொடர்ந்து மூழ்கிக் கொண்டிருந்தது. கேப்டனுக்கு வேறு வழியில்லை – அவர் தனது பணியாளர்கள் மற்றும் பயணிகளின் உயிரைக் காப்பாற்ற யாரோ ஒருவரின் உயிரைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் இருந்த பொதுவான நடைமுறையை செயல்படுத்தும் விதமாக பலி கொடுக்கப்படும் பயணியைத் தேர்வு செய்ய கேப்டன் சீட்டு குலுக்கிப் போட முடிவு செய்தார்.

சீட்டு போடப்பட்டு யூனுஸ் நபியின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. யூனுஸ் ஓர் இளைஞர், நேர்மையானவர், ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதை சகபயணிகள் அறிந்திருந்தனர், எனவே அவர்கள் அவரை வெளியேற்ற மறுத்து மீண்டும் சீட்டு குலுக்கிப்போடும்படி கேப்டனை வேண்டிக் கொண்டனர்.

மீண்டும் சீட்டு குலுக்கிப் போடப்பட்டது. யூனுஸின் பெயரே மீண்டும் வந்தது. யூனுஸை தூக்கி எறிய மறுத்து, “நாங்கள் யூனுஸை இழக்கப் போவதில்லை. அவர் படகில் இருப்பது எம்மீது ஆசீர்வாதம். படகில் இருக்கும் சிறந்த மனிதர் அவர்; நாங்கள் அவரை அகற்றப் போவதில்லை” என்றனர் பணியாளர்கள். எனவே அவர்கள் மூன்றாவது முறையாக சீட்டு எடுத்தார்கள், யூனுஸின் பெயரே மீண்டும்! பயணிகள் குழப்பமடைந்தனர். யூனுஸ் நபி இது அல்லாஹ்வின் தீர்ப்பு என்பதை அறிந்திருந்தார். தனது இறைவனின் அனுமதியின்றி தனது மக்களை விட்டுவிட்டு வந்ததுதான் இதற்குக் காரணம் என்பதாக உணர்ந்தார். யூனுஸ் கப்பலில் இருந்து இருண்ட கொடூரமான அலைகளுக்குள் குதித்தார்.

அல்லாஹ் கட்டளையிட்டபடி கடலில் உள்ள மிகப்பெரிய திமிங்கிலம் யூனுஸை விழுங்கியது. சுயநினைவின்றி இருந்த யூனுஸ் இருளால் சூழப்பட்டிருப்பதைக் கண்டு எழுந்தார்.

தனது கல்லறையில் தான் வந்தடைந்திருப்பதாக அவர் நம்பினார்; ஆனால் சற்று நேரத்தில் ஒன்று தெளிவானது. அவர் தனது கல்லறைக்குள் இல்லை. ஒரு பெரிய மீனின் வயிற்றுக்குள் இருப்பதை உணர்ந்தார்.

திமிங்கிலத்தின் ஆழமான வயிற்றில் இருந்த யூனுஸ் நபி அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்து, “யா அல்லாஹ், இதுவரை யாரும் உனக்கு ஸஜ்தா செய்யாத இடத்தில், ஒரு மீனின் வயிற்றில் நான் உனக்கு ஸஜ்தா செய்கிறேன்” என்று கூறினார். அல்லாஹ்வை அழைத்தார், “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. நீ பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் அநியாயம் செய்பவர்களில் ஒருவனாக இருந்தேன்.” (21:87) ஆழ்கடலின் உயிரினங்கள் யூனுஸின் மனமுருகும் பிரார்த்தனையைக் கேட்டு திமிங்கிலத்தைச் சுற்றி ஒன்று கூடி அல்லாஹ்வின் புகழைக் கொண்டாடின.

இரக்கமுள்ள அல்லாஹ் யூனுஸின் மனந்திரும்புதலால் பெரிதும் ஈர்க்கப்பட்டான். தனது தூதரை அருகிலுள்ள கரையில் துப்புமாறு திமிங்கிலத்திற்கு கட்டளையிட்டான். திமிங்கிலம் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அருகில் உள்ள கரைக்குச் சென்று யூனுஸை வெளியேற்றியது. திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்த அமிலங்களின் விளைவாக யூனுஸின் உடல் வீக்கமடைந்தது. சுடும் சூரியன், பலமாக வீசும் காற்று – இவற்றினால் யூனுஸுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே யூனுஸுக்கு பக்கத்தில் மீது நிழல் தரும் மரம் வளருமாறு அல்லாஹ் செய்தான். உணவும் நிழலும் அவருக்குக் கொடுக்குமாறு மரத்தைப் பணித்தான். அவரை மன்னிக்கும்படி நேர்மையான அழைப்பை யூனுஸ் விடுத்திராவிட்டால் மறுமை நாள் வரை திமிங்கிலத்தின் வயிற்றிலேயே இருந்திருக்க நேரிட்டிருக்கும் என்ற தகவலை அவருக்குத் தெரிவித்தான் அல்லாஹ்.

யூனுஸ் முழுமையாக குணமடைந்ததும், தனது பணியை முடிக்க நினிவேக்கு திரும்பினார். தனது சொந்த ஊருக்கு யூனுஸ் திரும்பி வந்ததில் நினிவே நகர மக்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர். நினிவேயின் அனைத்து மக்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். யூனுஸ் தனது மக்களுடன் சேர்ந்து தனது இறைவனுக்கு ஸஜ்தா செய்து அவருடைய அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

ரம்ஜான்போஸ்ட் – 18-3-2024

அஷெம் வஹு – ஜோராஸ்ட்ரியர்களின் முதன்மை மந்திரம்

ஜோராஸ்ட்ரிய சமயத்தின் வேதம் ஜென்ட் அவெஸ்தா. அது ஐந்து தொகுதிகளைக் கொண்டது. காதா, யஸ்னா, வெந்திதாத், விஸ்ப்-ராத், யஷ்ட். குர்தா அவெஸ்தா அடுத்த படியில் உள்ள புனித நூல் தொகுப்பு. குர்தா அவெஸ்தாவின் பாராயணத்தின் முடிவில் ஜொராஸ்ட்ரியர்கள் சொல்லும் மந்திரம் அஷெம் வஹு. இது தியான வழிபாடு. மிகப் பழமையான இந்த வழிபாட்டிற்கு பலவித மறுவிளக்கங்கள்.

அவெஸ்தன் மொழியின் சிக்கலான தன்மை மற்றும் கூறப்படும் கருத்துகள் காரணமாக குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடும் பல மொழியாக்கங்கள் உள்ளன. ஆனால் மந்திரத்தை உச்சரிக்கையில் நம் சிந்தனையில் அதன் அர்த்தம் தன்னிச்சையாக வந்து மனதில் படியும் என்பது ஜொராஸ்ட்ரியர்களின் ஐதீகம்.

aṣ̌əm vohū vahištəm astī
uštā astī uštā ahmāi
hyat̰ aṣ̌āi vahištāi aṣ̌əm

அஷெம் வஹு வஹிஸ்தேம் அஸ்தி
உஷ்டா அஸ்தி உஷ்டா அம்மாய்
யத் அஷாய் வஹிஸ்தாய் அஷெம்

ஆஷா எனப்படுவதன் முக்கியத்துவத்தை அதன் ஆற்றலைப் பேசுகிறது இந்த மந்திரம். ஆஷா எனும் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன.

ஆஷா என்பது ஒரு சிக்கலான மற்றும் அதிக நுணுக்கமான பொருளைக் கொண்ட ஒரு ஜோராஸ்ட்ரியன் கருத்து. இது பொதுவாக ‘சத்தியம்’ மற்றும் ‘நன்னடத்தை’ ‘சரித்தன்மை’ அல்லது ‘நீதி’, ஒழுங்கு’ மற்றும் ‘சரியாகச் செயல்படுதல்’ எனப் பலப்பல அர்ததங்களைக் கொண்டது. குர்தா அவெஸ்தாவுக்கும் பழமையான ஜென்ட் அவெஸ்தாவில் ‘ர்த’ என்ற சொல் ‘ஆஷா’வின் இணைச்சொல். சூழல் சார்ந்த தாக்கங்களுக்கு இணங்க ஆஷாவின் அர்த்தம் வகுத்துக் கொள்ளப்படுகிறது. உலகம் ஆஷா என்ற சொல்லிலிருந்து துவங்கிற்று என்பது சமய நம்பிக்கை. “அழகு”, ”தூய்மை” – இன்னும் எத்தனையோ அர்த்தங்கள் அதற்கு!

இந்த மந்திரத்தின் பொதுவான கருத்து என்ன?

“ஆஷாவில் சிறந்த நன்மை இருக்கிறது
அதுவே மகிழ்ச்சி; எவன் ஆஷாவைக் கடைப்பிடிக்கிறானோ அவனுக்கு மகிழ்ச்சி”

(நவ்ரோஸ் தின சிறப்புப் பதிவு)

படைத்தோனின் அறிகுறிகள்

ஒரு வருடமாக தினமும் இரவு குர்ஆன் வாசிக்கிறேன். படைத்தோனின் வல்லமை நம் முன் நிறைந்திருக்க அவனின் இருப்பை ஐயங்கோள்ளுதல் பேதமை என்கிறது குர்ஆன். அதன் வரிகளில் பேசப்படும் படைப்பின் அழகு மிகவும் தனித்துவமானது. குறைபட்ட என் சொற்களில் இதோ ஒரு தாழ்மையான சிறு முயற்சி.



படைத்தோனின் அறிகுறிகள்

உறுதியாய்
பதிக்கப்பட்ட மலைகள்
என் போலன்றி,
சற்றும் அசையாதவை
தூண்களில்லா சுவர்க்கங்கள்
தனிமையை போக்கக்
கூடவே பயணிக்கும் நதிகள்
பகலில் வழிகாட்டிகள்
இரவில் நட்சத்திரங்கள்
வானில் வரிசையாக
பறக்கும் பறவைகள்
கொட்டும் மழை
கொழிக்கும் பயிர்கள்
திறந்து விடப்பட்ட
ஒன்றில் ஒன்று
கலவாத சமுத்திரங்கள்
வணிகக் கப்பல்கள்
மிதந்து செல்ல கடல்கள்
உண்ணச் சுவையான மீன்கள்
வலிமையான காற்று
ஊதிக் கலைந்த மேகங்கள்
படைத்தவனைத் தேடிக் களைத்து
படைத்தவற்றை பார்க்க மட்டும் முடிந்தது என்னால்
தன் கையில் வைத்து
பூமிப்பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருப்பவனே
உன்னை பார்க்க வைப்பாயா
உன்னை கேட்க வைப்பாயா
முறையிடுகிறேன் அவனிடம்
இரண்டு நாட்களில்
ஏழு சுவர்க்கங்களை சமைத்தவன்
கிப்லாவை நோக்கி
என்னை மண்டியிட வைத்தான்
நண்பர்கள்
கால்நடைகள்
அனைத்தையும்
என்னையும்
சிறந்த அச்சினால்
கருவறைக்குள் உருவாக்கியவன்
அனைத்தும் பார்ப்பவன்
அனைத்தும் கேட்பவன்
என்னையும் பார்க்கிறான்
என்னையும் கேட்கிறான்
நம்பிக்கை கொள்ளச் செய்பவன்
பயங் கொள்ளச் செய்பவன்
இரண்டும் அவனே
படைத்தோனின் படைப்புகள்
நம்பிக்கையூட்டுகின்றன
படைத்தோனை நினையாதபோது
பயந்தோன்றுகிறது
பூமியெனும் ஓய்விடத்தின் மீது
வானமெனுந்திரை போட்டிருக்கிறான்
புசிக்க ஓராயிரம் கனி வகைகள்
காடுகளில் விலங்குகளை நிறைத்திருக்கிறான்
அவனடையாளங்களில்லா
இடமேது இப்பிரபஞ்சத்தில்
அவன் என்னை பார்க்கிறான்
அவன் என்னை கேட்கிறான்
சந்தேகங்கள் தவறன்று
நிரூபணம் கேட்ட ஆபிரகாமும்
இறைத்தூதனன்றோ
மூலிகைகள்
ஆலிவ்கள்
திராட்சைகள்
இன்னும் பலவற்றில் உள்ளன
அவனிருப்பின் அறிகுறிகள்
அவனே சிறந்தவன்
கருணை மயமானவன்

பேய்கள்

பேய்கள் காற்றின் வடிவில் ஊடுருவிடுமாம்
அச்சமும் பதற்றமும் உள்ள திசை நோக்கி
பலமாய் வீசுவதே அவற்றின் வாடிக்கையாம்
உள் சுரக்கும் நம்பிக்கை காற்றை கன்னத்தில் சற்று பதுக்கி வைத்திருந்து
அவற்றை நோக்கி ஊதியதும்
நீர் பட்டுக் கரையும்
உலர் கரியமில வாயுவின்
புகை போலாகும் பேய்கள்

(Adapted from an idea shown in the movie Under the Shadow)

கொலைகாரனுக்கும் கொலையுண்டவனுக்கும் பொதுவான மாயை – தேவ்தத் பட்டநாயக்

பாண்டவர்கள் யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்தின் முடிவில் சிறப்பு மரியாதை அளிக்க கிருஷ்ணனை அழைத்தனர். இதனால் தனக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதாக நினைத்த சிசுபாலன், கிருஷ்ணனைத் திட்ட ஆரம்பித்தான். எல்லாரும் கோபப்பட்டார்கள், ஆனால் கிருஷ்ணன் கோபப்படவில்லை. அத்தனையையும் அவன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். இருந்தாலும், நூறாவது வசைக்குப் பின், கிருஷ்ணன் கூர்மையான தன் சக்கரத்தை வீசியெறிந்து சிசுபாலன் தலையைத் துண்டித்தான். காரணம், மன்னிப்பின் எல்லையைக் கடந்து விட்டான் சிசுபாலன்.
 
சார்லி ஹெப்டோ, பகடிகளைத் தாங்கி வரும் பிரஞ்சு மொழி வார இதழ். அது கார்ட்டூன்களைப் பதிப்பித்தது- ஆத்திரமூட்டும் கேலிச்சித்திரங்கள். அவற்றை இதுவரை நான் பார்த்தது இல்லை. அங்கு பணிபுரிபவர்களை யாரும் கொல்லாமல் இருந்திருந்தால், நான் பார்த்திருக்கவே மாட்டேன். ஆனால் அதற்குப்பின் சார்லி ஓர் ஆளாகியது, பலியாள் ஆனது, கருத்துச் சுதந்திரத்துக்கான போராட்டத் தியாகியானது. கொலையைக் கண்டித்து நாமும் ஹீரோக்கள் ஆனோம். நாங்களும் சார்லிக்கள்தான் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு பாரிஸில் பல லட்சக்கணக்கானவர்கள் ஊர்வலம் போனார்கள்.
 
சார்லியின் கொலைகாரர்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளூம் இடத்தில் ஊர்வலம் நடக்குமா? அது அனுமதிக்கப்படுமா? யார் அந்தக் கொலைகாரர்கள்? முஸ்லிம்களா, கெட்ட முஸ்லிம்களா, பைத்தியக்கார முஸ்லிம்களா, இசுலாமியர்களாக அல்லாத முஸ்லிம்களா? பெஷாவரின் பள்ளிச் சிறுவர்கள் மீதான தாக்குதல் போலவே, இதையும் தலையங்கங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. பெஷாவரில் பலியானவர்கள் கொலை செய்யத் தூண்டவில்லை; பெற்றோர்கள் வேண்டுமானால் செய்திருக்கலாம்.
 
சார்லி விஷயத்தில் தூண்டுதல் இதுதான்: தங்கள் இறைத்தூதர் அவமதிக்கப்பட்டதாக, எனவே இசுலாமும் அவமதிக்கப்பட்டதாக, அவர்கள் நினைத்தார்கள். எனினும் சார்லியோ, “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்!” என்ற கோஷத்துக்குப் பேர் போன மண்ணின் சட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இசுலாமும் சகோதரத்துவம் பேசுகிறது (அரபி மொழியில், உம்மா), சமத்துவமும் பேசுகிறது. ஆனால் அந்த அளவுக்கு சுதந்திரத்தைப் பேசுவதில்லை. இசுலாம் என்றால் கீழ்ப்படிதல் என்றுதான் பொருள்- அமைதியை ஏற்படுத்தும் இறைவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிதல்.
 
அளவைக்கு உட்பட்டதைக் கையாளுதல்
 
சமத்துவத்திலும், தங்களுக்கே உரிய வகையிலான சுதந்திரத்திலும் நம்பிக்கை கொண்டிருக்கும் இந்த இரு சகோதரர்கள் ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்வது என்று தீர்மானித்தார்கள். ஒருவர் உணர்வுகளையும், மற்றவர் உடல்களையும். உணர்வுகளின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு அளவைகள் கிடையாது. உடல்கள் மீதான வன்முறையைக் கணக்கெடுக்க முடியும். அதனால் பின்னது நிரூபிக்கப்படக்கூடிய குற்றமாகிறது; அதிலும் குறிப்பாக, நம்பிக்கையை மட்டுமே சார்ந்த, சமயம் போன்ற ஒன்றை நோக்கி ஏவப்படும் உணர்வுபூர்வமான வன்முறை விஷயத்தில், உடல்களின் மீதான வன்முறையே பெரியதொரு குற்றமாகிறது.
 
இதுதான் பிரச்சினை: கணக்கெடுத்தல்- அறிவியலின், புறவயப்பட்ட பார்வையின் கால்கோள். 
 
எதை நம்மால் கணக்கெடுக்க முடியுமோ, அதை நம்மால் கையாள முடியும். ஆனால், அளவைக்கு அப்பாற்பட்டதை என்ன செய்ய? அது முக்கியமா என்ன? உணர்வுகளை அளந்து பார்க்க முடியாது. மனதை அளந்து பார்க்க முடியாது, எனவேதான் தீவிர அறிவியலாளர்கள் உளவியலையும் இயங்குமுறை அறிவியலையும் போலி அறிவியல்கள் என்று சொல்கின்றனர். கடவுளை அளந்து பார்க்க முடியாது. எனவே, விஞ்ஞானியைப் பொறுத்தவரை, கடவுள் மெய்யல்ல, நம்பிக்கை என்று வேண்டுமானால் சொல்லலாம். இது முஸ்லிம்களுக்கு எரிச்சலாக இருக்கிறது, அவர்களைப் பொறுத்தவரை கடவுள் இருப்பது உண்மை. அளந்து பார்க்கக்கூடிய உண்மையாக இல்லாமல் இருக்கலாம், ஆனாலும்கூட உண்மைதான். இது அகவயப்பட்ட உண்மை. என் உண்மை. அது முக்கியமா இல்லையா?  
 
அகவயப்பட்ட உண்மையை நாம் எங்கு வைத்து பேச முடியும்: மெய் என்றா புனைவு என்றா? சிலர் தங்களுக்கு என்று “கருத்துச் சுதந்திரம்” என்பதை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், வேறு சிலர் தங்களுக்கு என்று, “ஒரு கடவுள், மெய்யான ஒரே கடவுள்” எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டுமே அகவயப்பட்ட உண்மைகள். இவை நம் யதார்த்தத்துக்கு வடிவம் தருகின்றன. இவை முக்கியமாக இருக்கின்றன. ஆனால் நமக்குத்தான் இவற்றை எங்கு வைத்துப் புரிந்து கொள்வது என்பது தெரியாது. ஏன் என்றால், இவற்றை அளந்து பார்க்க முடியாது.  
 
சார்லியின் கேலிச்சித்திரங்கள் முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்படுத்திய காயத்தை நம்மால் கணக்கெடுக்க முடியாது. முஸ்லிம் சமுதாயத்தின் கூருணர்வுகள், அல்லது மிகையான கூருணர்வுகள் எவ்வளவு என்று நம்மால் மதிப்பிட முடியாது. ஆனால், கொலைகாரர்களின் செயல்களால் ஏற்பட்ட விளைவுகளைக் கணக்கெடுக்க முடியும். எனவே, நாம் சுலபமாய் வன்முறையைக் கண்டனம் செய்ய முடியும். காயப்படுத்தியது, கோபப்படுத்தியது, அவமானப்படுத்தியது என்பதே ஒரு சிலருக்கு துப்பாக்கிகளைத் தூக்கப் போதுமானதாக இருந்தது என்பது அளந்து பார்க்க முடியாத அனுமானம், நம்பிக்கை. பகுத்தறிவு பேசும் நாத்திகனுக்கு நம்பிக்கை என்பது கேலிக்குரிய விஷயம். 
 
புத்திஜீவி தன் சொற்களால் காயப்படுத்த முடியும். போர்வீரன் தன் ஆயுதங்களால் காயப்படுத்த முடியும். முன்னது ஏற்புடையதாய் உள்ள, ஏன் ஊக்குவிப்பும் அளிக்கப்படும், உலகில் நாம் வாழ்கிறோம்,  பின்னது அப்படியல்ல. உலகளாவிய கிராமத்தில் பாவிக்கப்படும் நவ-பார்ப்பனியம் இது. சிந்திக்கத் தெரிந்தவர்களும் பேசத் தெரிந்தவர்களும், அடிப்பவர்களையும் கொலை செய்பவர்களையும்விட உயர்ந்தவர்கள்- சொல்லம்புகளால் ஏற்பட்ட காயங்கள் ஆழமானவையாகவும், நீண்டகால தாக்கம் கொண்டவையாகவும், ஆறாவடுவாய் எக்காலத்துக்கும் புண்படுத்துபவையாகவும் இருந்தாலும் இது இப்படிதான். அகிம்சையைக் கடைபிடித்த சாது காந்தி, இவ்வாறே மூர்க்க வன்முறையாளன் கோட்சேவுக்கு எதிராய் நிறுத்தப்படுகிறார். புத்திஜீவியான எனக்கு, கோபத்தைத் தூண்டும் உரிமை இருக்கிறது; ஆனால் வன்முறையை மட்டுமே அறிந்த, நாகரிகமற்ற உனக்கு, கோபப்படும் உரிமை கிடையாது, உனக்குத் தெரிந்த ஒரே வழியில் பதில் சொல்லும் உரிமை கிடையாது. அப்படியே உனக்கு கோபம் வந்தாலும், நீ என் மொழியில்தான் பேச வேண்டும், உன் மொழியில் அல்ல, மூளையைக் கொண்டு, உடல் வலுவைக் கொண்டல்ல- ஏனெனில் மூளையே உயர்ந்தது. புத்திஜீவி பிராமணன் நான்தான் விதிகளை வரைகிறேன். உனக்கு இது புரிகிறதா?
 
அகிம்சையே புதுக்கடவுள், உண்மையான ஒரே கடவுள். நாம் வன்முறை என்று சொல்லும்போது, உடலையும் உடைமையையும் தாக்கும் நாகரிகமற்றவனின் வன்முறையை மட்டுமே பேசுகிறோம். புத்திஜீவிகளாய் உள்ள உயர்ந்தோர் ஏற்படுத்தும் மனக்காயங்கள் வன்முறையாய்க் கருதப்படுவதில்லை. எனவே  புத்திஜீவிகள் என்ற வகையில் இந்து சமயத்தைத் திரைப்படங்களில் (ராஜ்குமார் ஹிரானியும் ஆமிர் கானும் எடுத்த பிகே), புத்தகங்களில் (வெண்டி டோனிகரின் “இந்துகள்: ஒரு மாற்று வரலாறு) கேலி செய்ய நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டுமென்றோ, புத்தகங்களைக் கூழாக்க வேண்டுமென்றோ போராடுபவர்கள் மூர்க்கர்கள், நாகரிகமற்றவர்கள், வன்முறையாளர்கள், குடிமைச் சமூகச் சொல்லாடலின் எதிரிகள். சார்லி கொலைகாரர்கள் அளவுக்கு மோசமில்லை, ஆனால் இவர்களும் அந்தப் பாதையில் போவதாகத்தான் தெரிகிறது.
 
சிந்தனையாளனின் இடம்
 
விவாதங்களை, ரத்தம் சிந்தாத மூர்க்கப் போர்களாய், உளப் போர்களாய்க் காண நாம் மறுக்கிறோம். பட்டிமன்றங்களைப் போர்க்களங்களாக நாம் பார்ப்பதில்லை. உளச் சித்திரவதை என்பது மெய்யல்ல, அது ஒரு கருத்துருவாக்கம் மட்டுமே என்று சொல்லப்படுகிறது, அதை மதிப்பிட முடியாது, எனவே நிருபிக்க முடியாது. தன் மனைவியின் மனதைச் சித்திரவதைக்கு உள்ளாக்கும் கணவனைக் கைது செய்யவே முடியாது; மனைவியை அடிக்கும் கணவனைப் பிடித்து விடலாம். நாம்  பின்னதைப் புரிந்துணர்வோடு பார்க்கிறோம், ஆனால் முன்னதைப் பொருட்படுத்துவதில்லை (அவள் ஓவர் சென்சிடிவாக இருக்கிறாள் என்று சமாதானம் சொல்கிறோம்). உளச்சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட மனைவி தன் கணவனைக் கொலை செய்தால், அவளுக்குதான் சிறைத்தண்டனை அளிப்போம், கணவனுக்கு அல்ல. அவளது குற்றத்தை நிருபிக்க முடியும், அவனது குற்றத்துக்கு எதுவும் செய்ய முடியாது.
 
சிந்தனையாளன் வினையாற்றுவதில்லை என்று சொல்கிறோம். எனவே, சிந்தனையாளனால் தூண்டப்பட்ட கொலைகள் கண்டுகொள்ளப்படாமல் போகின்றன. உடலின் மொழி மட்டுமே அறிந்த நாகரிகமற்றவன் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும்போது, சிந்தனையாளன்- வன்முறைக்கு வித்திட்டவன்-, சிரித்துக் கொண்டிருக்கிறான். உள்ளத்தின் மீது தொடுக்கப்பட்ட போர் இரக்கமற்ற துல்லியத்துடன் தொடர்கிறது.
 
மாயை என்பதன் வேர்ச்சொல் சமஸ்கிருதத்தில் மா, மதிப்பிடு, என்பதாகும். நாம் அதை காட்சிப்பிழை அல்லது பிரமை என்று புரிந்து கொள்கிறோம். ஆனால், சரியாகச் சொன்னால், மதிப்பீடுகளை கொண்டு கட்டமைக்கப்பட்ட உலகம் என்றுதான் பொருட்படும். இவ்வாறாகவே, அறிவியல் புலம், பகுத்தறிவின் பாற்பட்ட புலம், மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்த உலகம், மாயை. இது நல்லதுமில்லை, கெட்டதுமில்லை. இது ஒரு தீர்ப்பல்ல. இது ஓர் அவதானிப்பு. அளவைகளால் அமைந்த உலகம் தனக்குப் புலப்படுவதை மட்டுமே கூர்ந்து நோக்கும், புலன்களுக்கு அப்பாற்பட்டவற்றைக் காணும் பார்வையை இழக்கும். மதிப்பீட்டு உண்மையை முழுமையற்ற மெய்யெனக் கருதாமல், முழுமெய்யெனக் கொள்ளும். 
 
இறைத்தூதரைத் தார்மிக அறவுணர்வுடன் கெக்கலித்துக் கேலி செய்பவர்கள் மாயையில் இருக்கின்றனர். அதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு கோபப்படுபவர்களும் மாயையில் இருக்கின்றனர். கொலைகாரன் மாயையில் இருக்கிறான், கொலையுண்டவனும் மாயையில் இருக்கிறான். இவர்களில் ஒருவனை பலியுண்டவனாகவும் மற்றவனைக் கொடியவனாகவும் கருதுபவர்களும் மாயையில் இருக்கின்றனர். நாம் அனைவரும் நம்மால் உருவாக்கப்பட்ட யதார்த்தங்களில் கட்டுண்டிருக்கிறோம்; சிலர், அளவைகள் அடிப்படையிலும் சிலர் மதிப்பீடுகளைப் பொருட்படுத்தாமலும் வாழ்கிறோம். ஒவ்வொருவரும் பிறரை நிராகரிப்பதில் ஆவலாய் இருக்கிறோம், அவர்களை ஒன்றுமில்லாமல் செய்யப் பார்க்கிறோம்: மாற்றான் நாகரிகமற்றவனாக, கல்வி கற்பிக்கப்படவேண்டியவனாக இருக்கிறான். கொலை செய்யப்பட வேண்டிய புத்திஜீவியாகவும் மாற்றான் இருக்கிறான்.
 
அடிப்படையில், மாயையே நம்மை மதிப்பிடச் செய்கிறது. ஏனெனில், நாம் அளவிடும்போது, எது பெரிது எது சிறிது என்றும் எது மேல் எது கீழ் என்றும் எது சரி எது தவறு என்றும் எது முக்கியம் எது முக்கியமில்லை என்றும் யோசிக்கிறோம். வெவ்வேறு அளவைகள் வெவ்வேறு மதிப்பீடுகளுக்குக கொண்டு செல்கின்றன. தான் ஒரு ஹீரோ என்றும் தியாகி என்றும் வெண்டி டோனிகர் நம்புகிறார், தன் எழுத்தைக் கொண்டு சபால்டர்ன் இந்தியனுக்காக அவர் போராடுவதாய் நம்புகிறார். அவர் சனாதன தர்மத்தை வேண்டுமென்றே பிழையாய் புரிந்துகொள்வதை எதிர்க்கும் ஹீரோ என்று தீனநாத் பத்ரா நம்புகிறார். பிகே தடை செய்யப்பட வேண்டும் என்று கோரும் உரிமை தனக்கு உள்ளது என்று பாபா ராம்தேவ் எண்ணுகிறார். நாம் நினைத்த மாதிரியே, கருத்துச் சுதந்திரம், பகுத்தறிவு என்று பதில் சொல்லிக் கொண்டு, அந்தத் திரைப்படத்தைத் தயாரித்தவர்கள் சிரித்தபடியே சில்லறையை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். எல்லாரும் தத்தம் மாயையில் சரியாகவே இருக்கின்றனர்.
 
ஒவ்வொரு வினைக்கும் விளைவுண்டு. விளைவுகள் நல்லவையாக இருக்கலாம், அல்லது தீயவையாக இருக்கலாம் – ஆனால்  பின்னோக்கியே அதை அறிய முடியும். புத்தொளிக் காலமே காலனியக் காலமாகவும் இருந்தது. உலக யுத்தங்கள் முதல் உறைபனி யுத்தங்கள் வரை, இருபதாம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான யுத்தங்கள், சமயச் சார்பற்றவை. வன்முறையற்ற சிந்தனை, வன்முறையற்ற சொற்களாய் வெளிப்பட்டு வன்முறைச் செயலுக்குக் காரணமாகிறது. கனியை அளவிட முடியும், விதையை அளந்தறிய முடியாது. வித்து வேறு கனி வேறு என்றும், எண்ணம் வேறு செயல் வேறு என்றும் பிரித்துப் பார்ப்பது வினையையும் எதிர்வினையையும் பிரித்துப் பார்ப்பது போன்றது. இதன் விளைவாய் தவறான புரிதலுக்கு வருகிறோம், தவறான தீர்வுகளை அளிக்கிறோம். கொலைகாரன் கருத்தை அழிப்பதில்லை. கருத்து மேலும் பல கொலைகாரர்களை உருவாக்குகிறது. 
 
வழியோடு போவது வழியோடே வரும். வன்முறைக்கு எதிரான வெஞ்சினம் கேலிச்சித்திரங்களுக்கு எதிரான வெஞ்சினத்தை வளர்க்கிறது. இந்து தத்துவம் (இந்துத்வ தத்துவமல்ல), இதை கர்மவினை என்று அழைக்கிறது. வன்முறையற்ற வெஞ்சினத்தையோ வன்முறைப் போராட்டங்களையோ கைவிட்டு இந்தச் சுழலை உடைக்கும் விருப்பம் நமக்கில்லை. மாயை, கர்மவினை போன்ற கருத்துருவாக்கங்கள் செயலூக்கத்தைப் பாழாக்குவதால் மேலைமயமாக்கப்பட்ட மனதை அவை கோபப்படுத்துகின்றன: தங்கள் அளவீட்டுக் கருவிகளைக் கொண்டு இந்த உலகைக் காப்பாற்றுவதில் தீர்மானமாக இருப்பவர்கள், மானுட நிலை குறித்த இந்த நுட்பமான அவதானிப்பை, ‘விதி விட்ட வழி என்று இருத்தல்’ என நிராகரிக்கின்றனர். 
 
முன்னொரு பிறவியில் சிசுபாலன், வைகுந்தக் கதவுகளின் காவலன் ஜெயனாக இருந்தான். சனகாதி ரிஷிகளை அனுமதிக்க மறுத்ததால் கோபித்து, அவன் விஷ்ணுவை விட்டு தொலைவில், பூமியில் பிறக்கக் கடவான், என்று சபித்தனர் ரிஷிகள். தன் வேலையைத்தான் செய்ததாக வாதாடினான் காவல்கார ஜெயன். ஆனால் சாபம் விலகவில்லை, ஜெயன் சிசுபாலனாய்ப் பிறந்தான். விஷ்ணு அவனுக்கு மோட்சம் அளிப்பதாக வாக்கு கொடுத்திருந்தார், தான் பூமியை விட்டுச் சீக்கிரம் செல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் சிசுபாலன், வைதலைக் கொண்டே வாழ்த்தும் விபரீத பக்தியில் ஈடுபட்டான். எனவே அவன் கிருஷ்ணனை ஏசினான், கிருஷ்ணன்தான் விஷ்ணு என்பதையும் தன் ஏச்சு கிருஷ்ணனை வினையாற்றச் செய்யும் என்பதையும் அவன் நன்றாகவே அறிந்திருந்தான். மன்னிப்புக்கு ஓர் எல்லையுண்டு. ஆனால் அன்புக்கு எல்லைகள் இருக்க முடியாது.
 
 
(Devdutt Pattanaik writes and lectures on mythology in modern times. Visit: www.devdutt.com )
 

தமிழாக்கம் – நட்பாஸ்

தைரியம், அமைதி, நம்பிக்கை

How to Have Courage Calmness And Confidence - Paramahansa Yogananda

வெற்றி, ஆரோக்கியம் மற்றும் விவேகம் – இவைகள் ஆன்மாவின் இயற்கைக் குணங்கள். பலவீனமான சிந்தனைகளுடனும் பழக்கவழக்கங்களுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளுதலும் மனதை ஒரு நிலைப்படுத்துதல், விடாமுயற்சி மற்றும் தைரியம் – இவற்றின் பற்றாக்குறைகளுமே வறுமை, நோய், மற்றும் இன்ன பிறவற்றால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணங்களாகும்.

உன் வெற்றிக்கான மனத்திறனை அச்ச எண்ணங்கள் கொண்டு நீயே முடக்கி விடுகிறாய். வெற்றியும், உடல்-மன பூரணத்துவமும் மனிதனின் உள்ளார்ந்த பண்புகளாகும் ஏனெனில் அவன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறான். தன் பிறப்புரிமைக்கு பாத்தியதை ஆவதற்கு, முதலில் அவன் தன்னுடைய வரம்பெல்லைகள் என்று கருதிக்கொள்ளும் கற்பனையை விலக்கிக் கொள்ள வேண்டும்……

உண்மையான போர்வீரன்
நன்மை பயக்கும் மாறுதல்களை தைரியமாக தழுவிக்கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களுக்கான நம்பிக்கைகள் தோல்விப்பயத்தால் எதிர்க்கப்படும் வரை, மனம் ஒரு போதும் அமைதியில் அமையாது. எனவே, மாறுதல்களை ஏற்பது மட்டுமே வாழ்வின் ஒரே மாறிலி. நமது வாழ்க்கை வெற்றி- தோல்விகளின், நம்பிக்கை-ஏமாற்றங்களின் முடிவிலா ஊர்வலம். ஒரு கணம், சோதனகள் எனும் புயற்காற்றால் நாம் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறோம் ; சில கணங்களுக்குப் பிறகு, சாம்பல் நிற மேகங்களை வெள்ளிக் கோடுகள் வெளிச்சப்படுத்துகின்றன ; திடீரென்று வானம் மீண்டும் நீல நிறம் கொள்ளுகிறது.

அறிவார்ந்த கோட்பாடுகளைப் பற்றி பேசிக்கொண்டே வாழ் நாட்களை வீணடித்து சாய்வு-நாற்காலியில் அமர்ந்து “தேடுபவனுடன்’ ஒப்பு நோக்கப்படும்போது, உண்மையாக தேடுபவன் தன் முன்னால் இருக்கும் கடின உழைப்பில் மனம் தேற்றிக் கொள்கிறான். உண்மையான போர்வீரன், அச்சமாக இருந்தாலும், தன் கை தேவைப்படும்போது தைரியமாக போர்க்களத்தில் குதிக்கிறான். ஆல்ப்ஸ் மலையின் உயரங்கள் நெஞ்சில் கலக்கமேற்படுத்தினாலும், மலையேறுபவன் உறுதியுடன் உயரங்களை அடையும் முயற்சியில் ஈடுபடுகிறான். உண்மை-தேடுபவன் தனக்கு சொல்லிக்கொள்கிறான் : “பூரணத்துவம் அடையும் பணி எவ்வளவு கடினமானது என்பதை நான் அறிவேன். ஆனால். அதற்காக என் எல்லாவற்றையும் நான் அளிப்பேன். கடவுளின் உதவியால், இக்காரியத்தில் நான் வெற்றி அடைவேன்” ஆழ்ந்த தினசரி தியான முயற்சிகளால் சதை-நணவுணர்ச்சியை கையகப்படுத்தி, மறந்திருந்த உள்ளுறை தெய்வீக ஆனந்தமெனும் விழிப்புணர்வை மீட்டெடுக்கிறான்.

பக்தனே, மனம் தேற்றிக்கொள். அதீதப்புலனின்பம், தோல்வி, ஏமாற்றங்களினால் உண்டான வறட்சிக் காலத்தில் எத்துணை பிளவுகளையும் வறட்சியையும் உன் இதயத்தின் மண் கொண்டிருந்தாலும், உள்ளார்ந்த நற்கருணையின் அமைதி பெருக்கினால் நீர் பட்டு மென்மையாகும். வதங்கிப் போன உன் ஆன்ம உற்சாகம் புதுப்பிக்கப்படும். ஒரு முறையாவது கடவுள் நற்கருணையின் திராட்சை ரசம் அருந்து. ஆர்வமிகுந்து ஆன்மீக தளத்தில் நீ தினமும் புதுப்பிக்கப்பட்ட ஆன்ம உணர்வெனும் மண்ணில் உழைத்து, ஆன்ம வெற்றி எனும் விதைகளை விதைத்து, அவை தெய்வீக ஆனந்தமெனும் பயிராய் நெடுக வளரக் காண்பாய். தொந்தரவு என்று நீ கருதும் எதையாவது எதிர்கொள்ளுகையில் ஊக்கமிழந்து, தோற்கடிக்கப்படுவதற்குப் பதிலாக நீ கற்றுக்கொள்ள வேண்டியதை என்னவென்று காணவும், சவாலை சந்திக்க தேவையான பலத்தையும் விவேகத்தையும் அதிகப்படுத்தவும் ஒரு சந்தர்ப்பத்தைத் தந்த பரம பிதாவிற்கு நன்றி செலுத்து.

வாழ்வின் சோதனைகளை மகிழ்ச்சியுடனும் தைரியத்துடன் சந்திக்கும் போது தான் கருமச்சுமைகள் குறைகின்றன. எதற்காவது உன் பயம் இன்னும் தொடருமானால், நீ கருமவினைகளிலிருந்து விடுபடவில்லையென்றே அர்த்தம். கருமத்தை சிதறடிக்க, நீ சந்திக்க வேண்டிய சோதனைகளை தவிர்க்க முயலாதே. கடவுளின் ஆனந்தம் நிறை அகத்தினுள் வசிப்பதன் வாயிலாக சோதனைகளிலிருந்து தைரியமாக மேலேழு.

தைரியம் பெற சில உறுதிமொழி
கஷ்டங்கள் போல் தோன்றுகிறவற்றை சமாளிக்க தேவையான தைரியமும், பலமும் அறிவுத்திறனும் எல்லா கணங்களிலும் உன்னிடம் இருக்கிறது. மனதளவில், உடலளவில் அசைவற்று இரு ; சமநிலை நிலவும் உன் உள்ளுறை மையத்தில் ஓய்வெடு ; அங்கு உன் பரம பிதவுடன் தொடர்புறவில் இரு. அவர் உனக்கு வழி காட்டுவார்.

கடவுள்-அமைதியெனும் மாறாத உள் நினைவில், நான் முதலில், கடைசியில், எல்லா நேரங்களிலும் பாதுகாப்பை தேடுவேன்.

நல் மனசாட்சியெனும் கொத்தளத்தில் நான் பாதுகாக்கப்படுகிறேன். என் பழைய இருட்டை நான் எரித்து விட்டேன். என் கவனமெல்லாம் என் இன்றைய ஒரு நாளில் மட்டும் தான்.

எல்லாப் பிர்சினைகளுக்கும் ஒரு சரியான தீர்வு உண்டு. இத்தீர்வினைக் காணும் விவேகமும் அறிவுத்திறனும், அதை முன்னெடுத்துச் செல்லும் பலமும் தைரியமும் என்னுள் உண்டு.

கடவுள் என்னுள்ளிலும் என்னைச் சுற்றியும் இருக்கிறார் ; என்னைக் காக்கிறார். எனவே, அவருடைய வழிகாட்டும் ஒளியை அடைத்து என்னை தவறெனும் குழியில் விழ வைக்கிற பயமெனும் பேரிருட்டை வெளியேற்றுவேன்.

இரகசிய பயம் பதற்றத்தையும் கவலையையும் உருவாக்குகிறது ; இறுதியான வீழ்ச்சியையும் தருகிறது. நம்முடைய திறமையில் நமக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும் ; சரியான காரணத்தின் வெற்றியிலும் நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த குணங்களைப் பெற்றிருக்காவிடில், எண்ணக்குவிப்பின் மூலமாக நம் மனதில் அவற்றை நாமே உருவாக்க வேண்டும், உறுதியான, நீண்ட, தொடர்ந்த பயிற்சியினால் இதை சாதிக்க முடியும்.

முதற்கண், நம்முடைய குறைகளை நாம் கண்டறிய வேண்டும். உதாரணத்திற்கு, நமக்குள் மனத்திண்மைக் குறைபாடு இருக்குமானால், அக்குணத்தின் மேல நம் எண்ணத்தைக்குவிப்போம் ; பிரக்ஞை மிகுந்த முயற்சிகளினால், நம்முள் மனத்திண்மையை நம்மால் பெருக்க முடியும்.

பயத்திலிருந்து நம்மை நாம் விடுவிக்க விரும்பினால், தைரியம் என்ற குணத்தின் மேல் நாம் தியானம் செய்ய வேண்டும் ; குறுகிய காலத்தில், பயமெனும் அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுதலை பெற்று விடுவோம். எண்ணக்குவிப்பு மற்றும் தியானம் மூலம், நம்மை நாம் ஆற்றல் மிக்கவராகவும், கவனத்தை குவிக்க இயல்பவராகவும் நம்மை ஆக்கிக் கொள்ள முடியும். தொடர்ந்த பயிற்சி ஒரு முயற்சியும் இன்றி ஒற்றைப் பிரசினையின் மேல் நம் எல்லா ஆற்றலையும் குவித்தலை சாத்தியமாக்கும். இது நம்முடைய இரண்டாவது இயல்பாகவும் மாறி விடும். இப்புது குணத்தை பெற்றிருப்பதன் வாயிலாக, பொருள் மற்றும் ஆன்மீக இலக்குகளை நம்மால் எளிதில் அடைய முடியும்.

துக்கம் புறநிலை இருப்பு இல்லாதது. வாய்மொழி வழி தொடர்ந்து பிரஸ்தாபிப்பதன் மூலம், அது இருக்கிறது. உன் மனதில் அதை மறுதளித்தால், அது இல்லாமல் போகிறது. இதை நான் ’ஹீரோயிஸம்’ என்பேன் ; அவனுடைய தெய்வீக அல்லது மூல இயற்கை என்பேன். துக்கத்திலிருந்து விடுதலை பெறுதற்கு, மனிதன் தன்னுடைய ”ஹீரோயிஸம்” மிகுந்த சுயத்தை வெளிப்படுத்துதல் அவசியம்.

ஒரு சாதாரண மனிதனுள்ளில் “ஹீரோயிஸம்” மற்றும் தைரியத்தின் பற்றாக்குறையே துக்கத்தின் ஆணிவேர். ”ஹீரோயிஸத்தின்” கூறு ஒருவனின் மனத்தில் குறையும் போது, கடந்து செல்லும் துக்கங்களுக்கு அவன் மனம் எளிதில் இணக்கமானதாக ஆகிறது. மனதின் வெற்றி வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை தருகிறது ; மனதின் தோல்வி துக்கத்தை தருகிறது. ஒவ்வொரு மனிதனுள்ளும் வெற்றிவீரன் விழித்திருக்கும் வரை, ஒரு துக்கமும் அவனுடைய இதயத்தை தொட இயலாது.

தொடர்ச்சியான பிரசினைகளை தோற்கடிப்பதைத் தவிர இவ்வாழ்க்கை ஒன்றுமில்லாதது. உன் கையில் தீர்வுக்குக் காத்திருக்கும் ஒவ்வொரு பிரசினையும் வாழ்க்கை உனக்கு விதித்திருக்கும் கட்டாயக் கடமையாகும். ஒரு தனி மனிதன் சூழ்நிலையின் மட்டத்துக்கு கீழ் மூழ்கும் போது, கெட்ட நேரத்தின் பாதிப்புக்கு சரணடைகிறான். அவனுள் பொதிந்திருக்கும் வீர தைரியத்தின் உதவியால், சூழ்நிலையைத் தாண்டி அவன் எழும்பொழுது, வாழ்வின் அனைத்து நிலைகளும், அவை எத்தனை அச்சுறுத்தும் படியாக இருந்தாலும் பனிப்போர்வை விலகி வானிலிருந்து எட்டிப்பார்க்கும் இதமான சூரிய ஒளி போன்றதாக இருக்கும். சாதாரண மனிதனின் துக்கங்கள் வாழ்வு நிலைகளின் உள்ளார்ந்தவை அல்ல. அவைகள் மனித மனத்தின் பலவீனங்களிலிருந்து பிறப்பவை.உன்னுள்ளிருக்கும் வெற்றிவீரனை விழித்தெழ வை; உன்னுள் உறங்கும் வீரனை தட்டி எழுப்பு;ஒரு துக்கமும் உன் சாளரத்தை இருட்டாக்காது.

[Translation of Excerpts from the Book “How to have Courage, Calmness and Confidence” By Paramahansa Yogananda, Publisher : Ananda Sangha Publications]