புனே டயரி

நேற்று நடந்தது

புனே வந்த தினத்திலிருந்தே தினமும் மழை. நிற்காமல் தூரிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது கனமழையும். அபார்ட்மென்டுக்குப் பின்னால் சிறிய மலைத்தொடர். அதன் சரிவில் கட்டப்பட்ட கட்டிடம். திகில் பட பின்னணி இசை போல இரவு முழுதும் பலமான காற்றின் சத்தம். நேற்று நடு இரவில் போர்வையினால் காதை மறைத்துக் கொண்டு தூங்க முயல்கிறேன். திடீரென நெருப்பு அலார்ம். அடித்துப் போட்டுக் கொண்டு செருப்பு கூட அணியாமல் அபார்ட்மென்டுக்கு வெளியே வருகிறேன். கதவடைத்துக் கொண்டுவிடுகிறது. சாவியை எடுக்க மறந்துவிட்டேன். “ஃபால்ஸ் அலார்ம்” என்கிறார் வாட்ச்மேன். மற்ற பிளாட்டுகளிலிருந்து ஒருவரும் வெளிவரவில்லை. “இது இங்கே அடிக்கடி நடக்கிறது தான்” என்று வாட்ச்மேன் சொன்னதும் “எது? சாவி வீட்டுக்குள்ளேயே இருக்க கதவு வெளியிலிருந்து மூடிக் கொள்வதா?” என்று கடுப்புடன் கேட்கிறேன். “விசிட்டர் லௌன்ஜில் உட்கார்ந்துகிட்டே தூங்குங்க நாளைக்காலை பார்ப்போம்” என்கிறார். விசிட்டர் லௌன்ஜில் காற்றின் சத்தம் கேட்கவில்லை. மழை சத்தம் இல்லை. ரிசப்ஷனில் உறங்கும் வாட்ச்மேனின் பலமான குறட்டை சத்தம் மட்டும். எனக்கு கோபம். போர்வையை எடுத்து வந்திருக்க வேண்டும்! சட்டையையாவது அணிந்து வந்திருக்க வேண்டும். சாவியை மறக்காமல் எடுத்து வந்திருந்தால் செருப்பு அணியாததோ சட்டை அணியாததோ பெரிய தப்பாக தெரிந்திருக்காது. இரு கோடுகள் தத்துவம் என்று ஏதோ சொல்வார்களே!

புனே ஹார்ரர்

நகரத்துக்கு நான் வேண்டா விருந்தாளியோ! என் கேள்வியில் நியாயமிருக்கிறது என்றே நம்புகிறேன். திகிலிசை போன்று வீசும் காற்று, தானே மூடித் தாழ் போட்டுக்கொள்ளும் கதவு, ஆளரவமற்ற, காலியான ப்ளாட்டுகள், ம்….வார இறுதியில் இன்னொரு ஹார்ரர்…அறையில் தனித்திருந்து சலித்துப் போய் ஆறு மணியளவில் வாக்கிங் போகலாம் எனக்கிளம்பினேன். நேற்றிரவு இருந்த வாட்ச்மேனைக் காணோம். வரவேற்பு லாபியில் ஈ, காக்காய் இல்லை. நானூறு மீட்டர் தொலைவில் இருந்த கேட் வரை ஒருவரும் காணவில்லை. கேட்டைத் தாண்டி சாலையில் வந்தாலும் நிலைமையில் மாற்றமில்லை. ரோடில் கார்களோ, லாரிகளோ, ஆட்டோ ரிக்ஷாக்களோ- எவற்றையும் காணோம். ஒரு (மஹாராஷ்டிர) வடைக் கடை இருந்தது. ஷட்டர் போட்டிருந்தார்கள். ஷட்டரை லேசாகத் திறந்து வெளியில் நின்றிருந்த ஆளுக்கு ஒரு பொட்டலத்தை கடைக்காரர் மர்மமான முறையில் கொடுத்துக் கொண்டிருந்தார். பொட்டலத்தை வாங்கிக் கொண்டவர் அடுத்த கணம் காணாமல் போனார். அவர் போன ஸ்கூட்டர் சத்தமிட்டதா என்று இப்போது ஞாபகமில்லை. கடைக்குச் சென்று ஷட்டரைத் தட்டி “டீ கிடைக்குமா?” என்று கேட்டேன். என் பின்னால் யாரேனும் நிற்கிறார்களா என்பது போல் பார்த்தார். “டீ இல்லை, வடை பாவ் மட்டும் இருக்கிறது” என்று சொல்லி யோஜிம்போ திரைப்படத்தில் வரும் விடுதிக்காரர் பாத்திரத்தின் எக்ஸ்பிரஷனைத் தந்தார். நான் டோஷிரோ மிஃபுனே இல்லையே! வேகவேகமாக நடந்து அறைக்கு வந்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டேன். வார இறுதி லாக்டவுன் எப்போது முடிவுக்கு வரும்?

வாஷிங் மெஷின் புதிர்

தங்கச்சங்கிலி இரவல் வாங்கினா- பாமா விஜயம் படப்பாடலை நான் வாழ்வேன் என்று நினைத்ததில்லை. புனேவுக்கு குடி புகுந்த பிறகு வாஷிங் மெஷினை வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன். வீட்டு புரோக்கர் குல்வீர் அறைகலன்களையும் வாடகைக்கு தருகிறேன் என்றான். ஐந்தாறு நாட்களாயின. வாஷிங் மெஷின் வந்த பாடில்லை. ஆடைக்குவியல் வளர்ந்து கொண்டிருந்தது. தினமும் சாவியை கேட்டில் கொடுத்துவிட்டு அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். சாயந்திரம் கேட்டிலிருந்து சாவியைப் பெற்றுக் கொள்ளும் போது “குல்வீர் வந்தாரா” எனக் கேட்பேன். யாரும் வரவில்லை என்று விடை கிடைக்கும். ஒரு நாள் பால்கனியில் நீல நிற வாஷிங் மெஷின் வைக்கப்பட்டிருந்தது. பழைய மெஷின். எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே கண்களையிழந்து பிதுங்கியிருந்தது. ஆடைக்குவியலில் அன்று அணிந்திருந்த ஆடையும் சேர்ந்தது. அடுத்த நாள் விழி பிதுங்கிய மெஷினின் இடத்தில் இன்னொரு மெஷின். அதற்கு பிளாஸ்டிக் ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது. ஸ்விட்ச் ஆன் செய்து பார்த்தேன். தண்ணீர் பிய்ச்சியடித்து தொப்பலாக நனைந்து போனேன். வாஷிங் மெஷின் உருவில் வந்த வாஷிங் “பேசின்” அது என்று புரிந்தது. அடுத்த நாள் வாஷிங் “பேசின்” அங்கேயே கிடந்தது. ஆனால் கூடவே இன்னொரு வாஷிங் மெஷின் சேர்ந்திருந்தது. புதிது போல் தோற்றம் அதற்கு. ஆடைக்குவியலின் உயரத்தை பார்த்து வெட்கம் தாளாமல் சில துணிகளை எடுத்து புதிதாகச் சேர்ந்திருந்த வாஷிங் மெஷினுள் போட்டேன். வரும் வார இறுதியில் தோய்த்துவிட வேண்டும். குல்வீர் சாவியில்லாமல் எப்படி வீட்டுக்குள் வருகிறான் என்ற கேள்வி இன்னமும் குடைந்து கொண்டிருக்கிறது.

தொடரும் ஹார்ரர்

இது முற்றிலும் புதிது. இரண்டு வார இறுதிகளாக நிகழ்வுகளுக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சென்ற வாரம் ஒரு கதை சொல்லல் நிகழ்வு. முரகாமியின் the elephant vanishes கதையை யாரோ வாசிப்பதாக இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த கதை பற்றிய கருத்துகள் பகிரப் படுமாம். இந்த வாரம் toast masters federation-இன் ஒரு நிகழ்வு. Cyber security பற்றி சக அலுவலர் ஒருவர் உரையாற்றப் போகிறாராம்! இவையொன்றும் புதிதல்ல. எது புதிது எனில் வாராது வந்த இரண்டு அழைப்புகளையும் ஏற்றுக் கொள்ளாமல் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு நான் உட்கார்ந்திருப்பதுதான் புதிது.

தொலைந்த சத்தம்

செருப்படி சத்தம்
காதைக் கிழித்தது
பொறுக்கவியலாமல்

சத்தம் நின்றதும்
வாசல் வெளியே
ஒரு ஜோடி செருப்பு

பாதங்கள் எங்கேயென
திசையெல்லாம் அலைகையில்
செருப்படி சத்தத்தின் மாறாத ஞாபகம்

திரும்பவும் அறையில் அடைந்தேன்
செருப்படி சத்தம்
மீண்டுமொருமுறை கேட்குமெனும் நம்பிக்கையில்

ஓய்வு பெற்ற கதை எழுத்தாளரின் கவிதை முயற்சி

இன்னும் இருக்கிறது
வாசலில் சில செருப்புகள்
மோகத்தைக் கொன்று விடு
விலை போகாத எனது 3 கதைகளின்
தலைப்புகளை
மாற்றி எழுதிப் பார்த்தேன்
சில செருப்புகள்
இன்னும் வாசலில் இருக்கிறது
கொன்றுவிடு மோகத்தை!
வேறு மாதிரி மாற்றிப் பார்த்தேன்
வாசலில் கொன்றுவிடு மோகத்தை
இன்னும் சில செருப்புகள் இருக்கிறது
வேற்றுமை உருபை மாற்றி
இன்னொரு சொல்லையும் சேர்க்கலாமா?
என்னுடைய கதையின் தலைப்புகள் தானே!
யாரைக் கேட்க வேண்டும்?
வாசலில் இன்னும் இருக்கும் சில செருப்புகளால் அடிப்பர்
மோகத்தை கொன்று விடு
“எழுத்து” என்ற சொல்
தொக்கி நிற்பதாகக் கொள்ளுங்கள் என்ற
அடிக்குறிப்பு போட்டு விடலாமா என்று யோசித்தேன்.

தொலைந்த என் செருப்புகள்

நடந்து கொண்டேயிருக்கையில்
திடீரென்று
நான் அணிந்திருந்த
என் செருப்புகள்
காணாமல் போயின
அவற்றை தேடி
பல இடங்களிலும்
அலைந்து திரிந்தேன்
வெகு நேரத் தேடலுக்குப் பின்
கிடைத்தன என் செருப்புகள்
அவற்றை என் கையில்
பத்திரமாய் பிடித்துக் கொண்டு
இல்லம் வந்தடைந்தேன்.

வாசல்

சிற்றூரில்

வாழ்ந்திருந்த சிறுவயதில்

விடியற்காலம்

வாசற்படியில்

நான் படிக்கும் சத்தத்தோடு

விதவிதமான பறவைகளின்

சத்தங்களும் சேரும்

சேவலின் கூவல்

காகங்களின் கரைச்சல்

குருவி, மைனாக்கள், மற்றும்

பெயர் தெரியா பறவைகள்

வரும் பகலுக்காக

ஆயத்தமாகும் சத்தங்கள்

இப்போதெல்லாம்

விடியற்காலத்தை

சந்திப்பதேயில்லை

பறவைகளின்

சத்தமும் கேட்பதேயில்லை

வாசல் மட்டும் இருக்கிறது….

பக்கத்து ஃப்ளாட்டின்

செருப்புகள் சிதறி

கனவுப்பயணம்

மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்தேன்.
பாதையை மறைத்துநின்றது பெருங்கல்.
மூச்சிரைக்க, எல்லாபலத்தையும் உபயோகித்து ஒருவாறு, கல்லை ஓரப்படுத்தினேன்.
கல்லைத்தள்ளி விட்டு பார்த்தால், சில அடிதூரத்தில் ஆளுயரக்குன்று!
ஏறிப்போகலாமென்றால் குன்று முழுதும் படுத்திருக்கும் விஷ நாகங்கள்.
வந்த பாதையிலேயே திரும்பிப்போகலாம் என்ற நினைப்பில் திரும்பினால்,
வந்திருந்த பாதையில் முள்செடிகள் முளைத்திருந்தன.
காலின் செருப்பு எங்கே போயின? இப்போது காணோம்!
வலப்புறம் கிடைத்த சிறு நிழலில் சில நிமிட இளைப்பாரலுக்குப்பிறகு, குன்றை திரும்ப நோக்கினால்,
பாம்புகள், வெண்மை திரவமாய் உருகியிருந்தன.
குன்றில் வழுக்கும் திரவத்தை பொருட்படுத்தாமல் ஏறினேன்.
குன்றின் உயரத்தில் ஏறி நோக்கினால்
ஆரம்பித்த இடத்திற்கே வந்தது தெரிந்தது.
கிளம்பிய இடமே இலக்கு என்றால்
பாதை, முற்கள், செருப்பு, நிழல்,
குன்று, பாம்புகள், திரவம்,
இவற்றுக்கெல்லாம் என்ன பொருள்?
படுக்கையில் படுத்தேன்
பார்த்தவற்றுக்கேல்லாம் பொருள் தேடவேண்டும்
என்பது மட்டுமல்ல,
பொருட்களே நினைவில் இருக்கவில்லை.
உறக்கத்தின் பிடியில் நினைவுகள் கரையத்தொடங்கி,
முடிவில், என்னில் ஒன்றும் மிச்சமில்லாதவனாய் நானும் கரைந்துபோனேன்.