ஷிண்டோ

சோகம் நம்மை
ஆட்கொள்ளுகையில்
நினைவுகளின், கவனத்தின்
சின்ன சாகசங்களால்
நாம் சில கணங்கட்கு
காக்கப்படுகிறோம்:
கனியின் சுவை, நீரின் சுவை
கனவு நமக்குத் திரும்பித்தரும் முகம்,
நவம்பர் மாதத்துவக்கத்தின் மல்லிகைகள்,
திசைகாட்டியின் முடிவிலாத் தாபம்,
தொலைந்துவிட்டதாய் நினைத்த புத்தகம்,
லத்தின மொழிப் பாவகையின் சீர்,
வீட்டைத் திறக்கும் சிறு சாவி,
சந்தனம் அல்லது நூலகத்தின் வாசனை,
ஒரு நிழற்சாலையின் பழமையான பெயர்,
வரைபடத்தின் நிறங்கள்,
சற்றும் எதிர்பாராத சொல்வரலாறு,
மெருகேற்றிய நகம்,
நாம் எதிர்பார்த்திருந்த சந்திப்பு,
பனிரெண்டு முறை இருளில் கேட்கும் மணியோசை,
நாம் எதிர்பார்க்காத உடல்வலி.
எண்பது லட்சம் ஷிண்டோ தெய்வங்கள்
நம் பூமியில் பயணித்தவண்ணம் இருக்கின்றன
பணிவான அத்தெய்வங்கள் நம்மைத் தொட வருகின்றன
தொடுகி்ன்றன, பின் சுற்றித் திரிகின்றன.

- போர்ஹேஸ்

(Translated from the English translation by Paul Weinfield)

கண்ணாடிக்குள் ஒரு புத்தகம்

Hazrat Bal, Sri Nagar, Kashmir (from Dal Lake Side)

பேக்கேஜ் டூரில் திட்டமிட்டிருந்த அனைத்து இடங்களையும் பார்த்தாயிற்று. சஷ்மேஷாய் தோட்டமும் பரிமஹலும் பார்க்க முடியவில்லை. கவர்னர் வந்ததனால் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு இவ்விரு ஸ்தலங்களிலும் அன்று அனுமதி இல்லை. எங்களுடன் ஒட்டுனராக வந்திருந்த குல்ஸார் அன்று களைத்திருந்தார். ஷாலிமார் பாக்-குக்கு வெளியே நினைவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு டாக்ஸி நின்றிருந்த இடத்துக்குத் திரும்பியபோது குல்சாருடன் நின்று கொண்டிருந்த பிட்டு aka ஹஷீமைச் சந்தித்தேன். தன்னை தில்லிக்காரன் என்று சொல்லிக் கொண்டார். கிழக்கு தில்லியிலுள்ள ஷாட்ரா பகுதியில் அவர் வீடு இருக்கிறதாம். பொதுவாக ஶ்ரீநகரில் வெளி மாநிலத்துக் காரர்கள் எவரையும் டாக்ஸி ஓட்ட விட மாட்டார்கள். அவர் எப்படி ஶ்ரீநகரில் டாக்ஸி ஓட்டுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. குல்ஸார் எங்களை ஓட்டல் வாசலில் விட்டுச் சென்றவுடன் அருகிருந்த டீக்கடையில் காஷ்மீரப் பானம் காவா அருந்திக் கொண்டிருந்தோம். ஹஷீமுக்கு நாங்கள் தங்கியிருந்த ஓட்டல் எப்படித் தெரிந்தது எனத் தெரியவில்லை. டீக்கடையை விட்டு நாங்கள் வெளியே வந்தபோது எங்களைப் பார்த்து கையாட்டினார். பேக்கேஜ் டூரில் இடம்பெற்றிராத ஹஸ்ரத் பால் தர்கா ஷரீஃபுக்கு ஹஷீமுடன் போகலாமென உடனடியாக முடிவெடுத்தேன்.

ஹஸ்ரத் பால் சென்றடைந்தபோது இரவுப் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. என்னை உள்ளே அனுமதிப்பார்களா என்று சந்தேகமாக இருந்தது. தலைமுடியை மறைக்கும் படி குல்லா அணிய வேண்டும் என்ற பிரக்ஞை இல்லாமல் உள்ளே நுழைந்துவிட்டேன். ஹஷீம் தன் குல்லாவை எடுத்து வந்திருந்தார். பிராரத்தனைக் கூடத்துக்கு முன்னதாக காவலர்கள் நின்றிருந்தனர். தயக்கத்துடன் நடந்து வந்து கொண்டிருந்த என்னைப் பார்த்து ஒரு காவலர் என் பெயர் என்ன என்று கேட்டார். என்ன பெயர் சொல்வது என்று சில கணம் தயங்கினேன். பின்னர் அசல் பெயரைச் சொன்னேன். அவர் ஏற்கனவே நான் இந்து என்று ஊகித்திருக்க வேண்டும். “இரவுப் பிரார்த்தனை முடிந்த பின் நீங்கள் உள்ளே செல்லலாம்” என்றார் போலீஸ்காரர். தர்காவின் பின் புறம் இருந்த டால் ஏரிக்கருகே நின்று காத்துக் கொண்டிருந்தோம். தொழுகை அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. மைக்கில் ஒலித்த தொழுகையில் கவனத்தை குவித்து ஏரியின் மேல் பார்வையை பதித்திருந்தேன்.

பிரார்த்தனை முடிந்தது. நாங்கள் பிரதான வாயில் வழியாக முதல் பிரார்த்தனை பகுதிக்குச் சென்றோம். அந்தப் பகுதியில் சிலர் இன்னமும் அமர்ந்து தொழுகை செய்து கொண்டிருந்தனர். கையை எப்படி வைத்துக்கொள்வது? அவ்வப்போது கோயிலில் கையைக் கூப்புவது போல் வைத்துக் கொண்டேன். இது தர்காவல்லவா? கை கூப்புதல் சரியாக இருக்காது. கையைக் கட்டிக் கொண்டேன். நான் இயல்பாக இல்லை என்று எனக்கே தெரிந்தது. தொழுகையில் இருந்த சிலரைத் தாண்டி கண்ணாடிக்குள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான டயரி போன்ற ஒன்றை எனக்கு ஹஷீம் காண்பித்தார். கறுப்பு மையில் மணிமணியாக அரபி மொழியில் குர்ஆன் மூலமும் ஒவ்வொரு அடிக்கு கீழே சிவப்பு மையில் பர்சியனில் அந்த அடியின் அர்த்தமும் எழுதப்பட்டிருந்தன. பர்சியனை உர்து என்று சொன்னார் ஹஷீம். தொழுகையாளர்களுக்கு எங்களின் பேச்சு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக ஹஷீமுடன் அதிகம் பேசவில்லை. “இந்த குர்ஆனை போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் ஹஷீம். அதைக் கண்டு கொள்ளாமல் நான் மூலப்பிரார்த்தனை அறைக்குள் சென்றேன். தொழுகை முடிந்து மக்கள் எழுந்தனர். குர்ஆன் ஓதிய அந்த இளவயது மௌல்வியிடம் சென்று ஒவ்வொருவராய் கைகுலுக்கி விடை பெற்றனர். மௌல்வி அங்கிருந்து கிளம்பும் முன்னர் என்னைப் பார்த்தார். பின் என்னருகே வந்து கை கொடுத்தார். “சப் கைரியத்?” என்று வினவினார். நான் தெற்கிலிருந்து வருவதாகச் சொன்னேன். அது ஒரு சம்பிரதாயமான பேச்சு. நான் தெற்கா, மேற்கா, வடக்கா என்று என் belongingness குறித்த குழப்பம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு! மௌல்வி “குதா ஹாஃபீஸ்” எனச் சொல்லி இன்னுமொரு முறை கைகுலுக்கி விடை பெற்றார்.

பின்னர் ஒரு முதியவர் என்னை அணுகி என் பெயரைக் கேட்டார். ஹஸ்ரத் பால் ஷரீஃப் பற்றிய தகவல்களை எனக்குச் சொல்லலானார். நபிகள் நாயகத்தின் ரெலிக் எந்தெந்த நாட்களில் பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும் என்று விவரமளித்தார். நான் சற்றும் எதிர்பாராத வகையில் ரெலிக் இருக்கும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். மூடியிருந்த அறையின் பூட்டுகளில் என் தலையை லேசாக இடித்த மாதிரி வைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு பணித்தார். அவர் சொன்னது மாதிரி செய்து இரு நிமிடங்கள் கண்ணை மூடி பிரார்த்தனை செய்தேன். அந்த இரு நிமிடங்களில் சில கணங்களுக்கு தவறுதலாக என் கரங்களை கூப்பினேன். என் தலையில் கையை வைத்து வாழ்த்தினார் அம்முதியவர்.

ஓட்டலுக்குத் திரும்பும் வழியில் ஹஷீம் கேட்டார் – “கண்ணாடிக்குள் வைத்திருந்த அந்த கையெழுத்து குர்ஆன் பிரதியை ஏன் போட்டோ எடுக்கவில்லை? உங்களுக்கு வரலாற்று விஷயங்களில் மிகுந்த ஆர்வம் இருக்கும் என நினைத்தேன்.”

“அஃப்கோர்ஸ்…அந்தப் புத்தகத்தில் என்ன விசேஷம்?”

“முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் தன் கையால் எழுதிய குர்ஆன் அது என்று சொன்னேனே”

“எப்போதய்யா சொன்னீர்?”

“நான் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் கை கூப்பி நின்றிருந்தீர்களே”

“!?()/-@&₹@“

இன்று சனிக்கிழமை

முதலில் மின்னஞ்சல் வந்தது. மிக எளிதில் யார் வேண்டுமென்றாலும் மின்னஞ்சல்கள் அனுப்பிவிடுவர். அவற்றையெல்லாம் படிக்கும் பொறுப்பு பெறுநருடையது. அனுப்பியவர் தன் கடமையை செய்துவிட்டார். அவர் இளைப்பாறப் போய்விடுவார். எத்தகைய தகவல்களை அறிவுறுத்தல்களை மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவது என்ற வரையறை இல்லாமல் எல்லாவற்றையும் அஞ்சலில் எழுதிவிடல் சாதாரணமானதாகப் போய்விட்டது. அனைவருக்கும் ஓர் ஓட்டு என்பது மாதிரி அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி. மேலதிகாரிகள் நேரில் புன்னகை மன்னர்கள் ; மின்னஞ்சலில் பராசக்திகள் ; மனோகராக்கள். விடுமுறை நாட்களில் தொலைபேசியில் தொல்லை கொடுக்க மாட்டார்கள். வார இறுதி உங்களின் சொந்த நேரம் என்ற நல்வசனம் பேசுவார்கள். மின்னஞ்சலில் ஓரிரு வரிகளிலான அர்ச்சனைகள் சனி, ஞாயிறு நெடுக வந்து விழுந்து கொண்டேயிருக்கும். அவற்றில் ஒன்றிரண்டுக்கு கூட பதிலளிக்காவிடில் திங்கட்கிழமையன்று வேறு காரணங்களைச் சொல்லி “விமர்சிப்பார்கள்” ; எந்த காரணத்துக்கு ‘விமர்சனம்’ என்று தெரிந்துவிட்டால் அதிகாரியின் செயல் திறன் கூர்மையடையவில்லை என்று பொருள்.

மின்னஞ்சலுக்குப் பிறகு வந்த குட்டிச்சாத்தான் வாட்ஸ் அப். அனைவரின் கைத்தொலைபேசியிலும் பதுங்கிக் கொண்டு இந்த குட்டிச்சாத்தான் பண்ணும் அக்கிரமங்கள் சொல்லி மாளாது. அதிகாரிகள் சப்ஜெக்ட்டுக்கு ஒன்று என வாட்ஸப் குழுக்களை சிருஷ்டித்து கண் மூடி திறப்பதற்குள் மக்களை இட்டு நிரப்பி ‘ராஜாங்க’ விஷயங்களை கையாள்வார்கள். அதிகாலை கண் விழித்து தூக்கக் கலக்கத்தில் நண்பர்கள் யாராவது தகவல் ஏதேனும் அனுப்பியிருக்கிறார்களா என்று பார்க்கப்போனால் முந்தைய நாளிரவு தூக்கம் வராமல் நிறுவன வாட்ஸப் குழுக்களில் “ஆணை” முட்டைகளை இட்டிருப்பார் மேலதிகாரி. அந்த முட்டைகள் எல்லாம் குழு அங்கத்தினர்களின் பதில்களாக குஞ்சு பொறித்திருக்கும். எல்லாவற்றையும் விட்டு விலகி நிற்கலாம் என்று அமைதியாக இருக்கவே முடியாது. ஏனெனில் என்னுடைய பதில் குஞ்சை காணாமல் வாட்சப் குழுவிலேயே என் பெயரை விளித்து கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளையும் வரிசையாக நிறுத்தி வைத்திருப்பார் அதிகாரி.

நிரலிகளின் அட்டகாசம் இன்றைய சனிக்கிழமையும் தொடர்கிறது. சலிப்பு மேலிடுகிறது. மேலோட்டமான சில பதில்களை டைப்பிட்டு நிரலியை மூடி வைத்த போது மனமெங்கும் வெறுப்புணர்வு. தப்பி ஓடிவிட வேண்டும் என்பது மாதிரியான மனோநிலை. இந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேட வேண்டும் என்ற எண்ணம் சில மாதங்களாகவே நீடிக்கிறது. வாய்ப்புகள் எதுவும் கையில் சிக்கவில்லை. அவை சிக்காமலேயே போய் விடுமோ என்ற அச்சம் இபபோதெல்லாம் அடிக்கடி மனதை வாட்டுகிறது. வயது ஐம்பதை தொடுகிறது. நிறுவனங்களில் இளைஞர்களை பணியமர்த்த விரும்பும் போக்கு அதிகரித்து வரும் இந்நாட்களில் ஏற்கனெவே சீனியர் சிட்டிசன் அந்தஸ்தை அடைந்துவிட்டது மாதிரியான தாழ்வுணர்ச்சி தலை தூக்குகிறது.

நம்பிக்கைச் சிக்கலுக்கு என்ன மருந்து? மேலதிக நம்பிக்கை. நம்மை மீறிய சக்தியின் மேலான நம்பிக்கை. நம்முடைய பிரச்னைகளுக்கு நம்முடைய திறனை நம்பாமல் வேறொன்றை – இருக்கிறதா அல்லது இல்லையா என்று தெரியாத ஒன்றை – நம்புவதா என்ற கேள்வி தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிடும் என்றாலும் எப்படியோ ஒரு தெளிவு பிறந்தால் சரி – பிறக்கிறதா என்று பார்த்து விடுவோமே என்ற எண்ணத்துடன் படுக்கையின் மேல் கிடந்த அந்த புத்தகத்தை கையில் எடுத்தேன்.

தேடல்கள் அனைத்துமே curosity-யின் குழந்தைகள். பதற்றமும் பயமும் Curiosity-யாக வடிவ மாற்றம் கொள்ளும் தருணத்தில் நம்பிக்கை பூர்வ காத்திருப்பு என்கிற ஆன்மீக வாயிலுக்குள் நுழைந்து விட முடிகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவர் ஆத்திகராயிருக்கலாம் ; நாத்திகராயிருக்கலாம் ; யாரும் எதுவாகவேனும் இருந்து விட்டு போகலாம் ; நம்பிக்கை பூர்வ காத்திருப்பு என்னும் குணம் வயதான தளர்ந்தோரின் கையில் இருக்கும் கைத்தடி போன்றது. (இந்த குறிப்பிட்ட உவமைக்கான காரணம் கட்டுரையின் முடிவில் வரும்).

புத்தக கிரிக்கெட் விளையாடுபவன் போல் புத்தகத்தின் ஒரு பக்கத்தை குறிப்பின்றி திறந்தேன்.

+++++

ஹேமத்பந்த் இப்போது பாபா சமாதானம் நிலைநாட்டும் பாகத்தை ஏற்றுக்கொண்ட மற்றொரு வேடிக்கையான சம்பவத்தைக் கூறுகிறார். தாமோதர் கன்ஷ்யாம் பாபரே என்று அழைக்கப்பட்ட அன்னாசின்சினிகர் என்ற அடியவர் ஒருவர் இருந்தார். அவர் எளிமையானவர். முரடர். நேர்மையானவர். அவர் எவரையும் லட்சியம் செய்யமாட்டார். எப்போதும் கண்டிப்பாக பேசி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்ற ரீதியிலேயே எல்லாவற்றையும் நடத்துவார். வெளிப்படையாகக் கடுமையாகவும் வசப்படாதவராகவும் இருந்த போதும் அவர் நற்பண்பாளர். கள்ளமற்றிருந்தார். எனவே சாயிபாபா அவரை நேசித்தார் (படுக்கையில் கிடந்த புத்தகம்ஸ்ரீ சாயி சத் சரித்திரம்ஹேமத்பந்த் என்ற புனைபெயர் கொண்ட ஸ்ரீ கோவிந்தராவ் ரகுநாத் தபோல்கர் அவர்கள் எழுதிய மராட்டிய மூலத்திலிருந்து இந்திரா கேர் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில நூல்). ஒருநாள், ஒவ்வொருவரும் தங்கள் வழியில் சேவை செய்வதைப் போன்று, அன்னாவும் பாபாவின் கைப்பிடியை பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். அம்மா என்று பாபாவாலும் மாவிசிபாய் என்று பிறராலும் அழைக்கப்பட்ட கிழவிதவையான வேணுபாய் கௌஜால்கி வலது புறத்தில் அமர்ந்து கொண்டு அவளுக்கே உரிய விதத்தில் சேவை செய்தாள். மாவிசிபாய் தூயவுள்ளம் கொண்ட முதியவள். அவள் தன் இரு கைகளையும் கோர்த்துக்கொண்டு பாபாவின் அடிவயிற்றைச்சுற்றி அழுத்தமாகப் பதித்துப் பிசைந்தாள். அடிவயிறே தட்டையாகிவிடும்படி வேகமாக பிசைந்தாள். பாபா இப்படியும் அப்படியுமாக அசைந்து புரண்டு கொண்டிருந்தார். மற்றொரு புறமிருந்து அன்னா நிதானத்துடன் இருந்தார். ஆனால் மாவிசி பாயின் அசைவுகளுடன் அவள் முகமும் அசைந்தது. ஒரு சமயத்தில் அவளது முகம் அன்னாவின் முகத்திற்கு வெகுஅருகே வந்துவிட்டது. வேடிக்கையான பண்பு கொண்ட மாவிசிபாய் “ஓ இந்த அன்னா ரொம்ப கெட்டவன். அவன் என்னை முத்தமிட விரும்புகிறான். அவனுக்கு தலை நரைத்தும் ஆசை நரைக்கவில்லை” என்றாள். இச்சொற்கள் அன்னாவை கோபாவேசம் கொள்ளச் செய்தன. முஷ்டியை மடக்கிவிட்டுக் கொண்டு அவர் “நான் ஒரு கெட்ட கிழவன் என்றா சொல்கிறாய். நான் அவ்வளவு முட்டாளா? ஏன் வீணே என்னுடன் சண்டையை ஆரம்பிக்கிறாய்?” என்றார். அங்கு குழுமியிருந்தவர்கள் அனைவரும் இருவரின் வாய்ச்சண்டையை வெகுவாக ரசித்தனர். அவர்கள் இருவரையுமே பாபா மிகவும் நேசித்தார். சண்டையை நிறுத்த விரும்பிய அவர் இவ்விஷயத்தை மிகத்திறமையுடன் கையாண்டார். “அன்னா, ஏன் அனாவசியமாக கூச்சலையும் குழப்பத்தையும் உண்டாக்குகிறாய்? ஒரு மகன் தாயை முத்தமிடுவதில் என்ன தவறிருக்கிறது?” என்றார். பாபாவின் இம்மொழிகளைக் கேட்டவுடன் அனைவரும் மனமகிழ்ச்சியுடன் நகைத்தனர்.

+++++

ஹேமத்பந்த் பாபாவின் லீலைகளை ஒவ்வொன்றாகச் சொல்லி ஒவ்வொரு லீலைக்கும் பின்னர் தொக்கி நின்ற அர்த்தத்தின் தன்னுடைய புரிந்து கொள்ளலை வாசகரிடம் பகிர்வார். மேற்சொன்ன சம்பவத்திற்கான அவரின் குறிப்பு என்னுள் பல திறப்புகளை ஏற்படுத்தியது.

“A person may be burst out laughing while being caned and dissolve into tears when hit by a merest flower! It is the feeling that causes these waves of emotion. Who does not have this experience?”

+++++

நிரலிகள் இன்றி ஏது வாழ்வு? மேற்பகிர்ந்த மேற்கோளின் தமிழாக்கத்தை நிலைத்தகவலாக இடும் எண்ணம் பிறந்தது. முகநூல் நிரலியைத் திறக்கவும் செய்தேன். Feeling மற்றும் Emotion – இவ்விரு சொற்களின் சரியான தமிழ் இணைச்சொல்லை நான் அறிந்திருக்கவில்லை. கூகிள் மொழிபெயர்ப்பு நிரலி இரண்டு சொற்களுக்கும் உணர்வு என்றும் உணர்ச்சி என்றும் தமிழ்ப்படுத்தியது. இரண்டு சொற்களையும் ஒன்றுக்கு மாற்றாகவே இத்தனை நாள் பயன்படுத்தி வந்ததால் உணர்வும் உணர்ச்சியும் ஒன்றையே குறிக்கிறது என்று இதுநாள் வரை நினைத்து வந்தேன். ஆனால் மேற்சொன்ன மேற்கோளில் Feeling என்ற சொல்லும் Emotion என்ற சொல்லும் ஒன்றைக் குறிக்கவில்லை என்பது விளங்கினாலும் இரண்டு சொற்களுக்கும் இடையிலான சரியான வித்தியாசத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினேன்.

உணர்வு என்பதும் உணர்ச்சி என்பதும் வெவ்வேறாக இருக்கலாம் என்று என் மனைவி சொன்னார். தமிழ் விக்சனரி இணைய தளத்தில் இவ்விரு பதங்களின் அர்த்தத்தை நோக்கினேன்.

உணர்ச்சி – நம் மனதில் உணரப்படும் அறிவற்ற உணர்வு.

நமக்குத் தேவையான உணர்ச்சியை அறிவுப் பூர்வமாக சிந்தனை செய்து, நமக்கு வேண்டும் என ஏற்கும் திறனை உணர்வு என்கிறோம்

கொஞ்சம் தெளிவாவது போலிருந்தது. இணையத்தில் மேலும் என் ஆய்வுகளைத் தொடர்ந்தேன்.

உணர்ச்சிகள் பொருண்மைத் தன்மை படைத்தவை. ஒரு வெளிப்புற தூண்டுதலால் உடனடியாக ஏற்படும் மனோநிலை. உணர்ச்சிகள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளின் பரிணாமங்களின் வழியாக நம் ஜீன்களுக்குள் நுழைந்தவை. அவை சிக்கலானவை. பல வித பொருண்மையியல் மற்றும் அறிவார்ந்த எதிருணர்ச்சிக் குறிப்புகளை உள்ளடக்கியவை. உதாரணத்திற்கு ஒரு வனாந்தரத்தில் உலவுகையில் ஒரு சிங்கம் நம் வழியில் வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். உடன், நம்முள் பயம் தொற்றிக்கொண்டு விடுகிறது. ரத்த ஓட்டம், மூளை இயக்கம், முக பாவம் மற்றும் உடல் மொழி – இவைகள் வாயிலாக உணர்ச்சிகள் புறவயமாக அளக்கப்படக் கூடியவை. மூளையின் வெளிப்புறத்தில் ஓடும் துணை நரம்புகள் (subcortical) உணர்ச்சிகளை பதனிட்டு கடத்திச் செல்பவை. அவை முரண் தன்மை மிக்கவை ; தருக்க ஒழுங்கில் அடங்காதவை.

உணர்வுகள் நம் தலையில் உலவுபவை ; சொந்த, அனுபவ ரீதியாக பெற்ற உணர்ச்சியின் எதிர்க் குறிப்புகள் அவை. ஆங்கிலத்தில் 3000த்துக்கும் மேலான உணர்வுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக ஐநூறுக்கும் மேலான உணர்வுகளை மக்கள் எளிதில் அடையாளம் காண்பர். ஆனால் அவர்களிடம் உணர்ச்சிகளை பட்டியலிடச் சொன்னாலோ ஐந்து முதல் பத்து வகை உணர்ச்சிகள் மட்டுமே தேறும். உணர்ச்சிகள் உலகளாவிய ரீதியில் பொதுவானவை ; முதலில் வருபவை. அவை எந்த வித உணர்வாக பின்னர் மாறும் என்பது தனிப்பட்ட குணாம்சம், அனுபவம், நம்பிக்கைகள் போன்றவற்றைப் பொறுத்தது. உதாரணத்திற்கு, ஒரு விலங்கியல் பூங்காவில் கூண்டிற்குள் இருக்கும் சிங்கத்தை காண்கிறோம். அப்போது எழும் நமது உணர்வு ஆர்வம் மற்றும் வியப்பு முதலானவையாக இருக்கலாம் ; விலங்குகள் சிறையிலிடப்படக் கூடாது என்னும் கருத்துடையவராக இருப்போமாயின் கசப்புணர்வும் எழலாம்.

உணர்வைப் பற்றி (Feeling), உணர்ச்சியைப் பற்றி (Emotion) மேலும் யோசித்த போது ஒரு சமன்பாடு எனக்கு விளங்கியது :- Feeling = Emotion + Cognitive Input

+++++

அன்னா – மாவிசிபாய் சம்பவத்துக்குத் திரும்புவோம். ஷீர்டி பாபா அன்னாவுக்கு சொன்னது மாதிரி – அன்னாவும் மாவிசிபாயும் மகன் – தாய் உணர்வு மேவிய எண்ணங்களைக் கொண்டிருப்பாராயின் வாய்ச்சண்டை மூண்டிருக்காது. மாவிசிபாய் வாக்குவாதம் என்னும் புறத்தூண்டுதலை வெளிப்படுத்தினாலும் அதனால் தூண்டப்பெறாதவராக அன்னாவினுடைய அன்புணர்வு சண்டையைத் தவிர்த்திருக்கும்.

உணர்ச்சி உணர்வுக்கு முந்தையது என்று மனோதத்துவம் விவரித்தாலும் உணர்வு ஏற்கனவே நம் மனக்கூடத்தில் குவிந்திருப்பதால் தீயஉணர்ச்சிக்கு மாற்றாக நல்லுணர்வை அதிகமும் நாம் சேகரித்து வைக்கலாம். வெறுமனே மனக்கரையை தொட்டுப் போகும் அழகிய அலைகளாக மட்டுமே உணர்ச்சியை காணும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

+++++

நிரலிகள் ஏராளம் – மின்னஞ்சல், வாட்ஸப், முகநூல், இணையம் என. அவற்றில் பொறிக்கப்படும் “ஆணை” முட்டைகள் வெறும் எண்ணியல் துண்மிகள். அவற்றுக்கு பதில் சொல்லும் முறை நம் உணர்விலிருந்து எழுகிறது. அதற்கு மட்டுமே நாம் பொறுப்பாளிகள். நம் பதிலுக்கு நம் அதிகாரிகளுள் எழும் உணர்ச்சிகளுக்கு நாம் பொறுப்பல்ல.

+++++

சனிக்கிழமை மதியம் வாட்ஸ்அப்பில் அதிகம் “ஆணை” முட்டைகள் இடப்படவில்லை. மின்னஞ்சலிலும் அமைதி தவழ்ந்தது. நண்பர் சுவாமி நாதன் வாட்ஸ்அப்பில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய சமீபத்திய வலைப்பூ இடுகையை பகிர்ந்திருந்தார். கடவுளும் கைத்தடியும் – அனுபவமா புனைவா தெரியவில்லை. அது சொல்ல வந்திருக்கும் கருத்து என் உணர்வில் நிறைந்தது.

IMG_2549

ஆப்பிள் தோட்டம்

பீம்தாலிலிருந்து நைனிடால் நகருக்குள் நுழையாமல் பவாலி என்னும் ஊர் வழியாக ராணிகேத்-தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு கோயிலுக்கருகே ஓட்டுநர் வண்டியை நிறுத்துகிறார். இந்தியில் ஏதோ ஒரு பெயரை சொல்கிறார். அவர் என்ன பெயரைச் சொன்னார் என்பதை சிரத்தையுடன் கவனிக்கவில்லை. ஓட்டுநர் வண்டியை நிறுத்தியது பிடிக்கவில்லை. சீக்கிரமே ராணிகேத் சென்றடைய வேண்டும் என்றிருந்தது எனக்கு. அங்கு ஒரு ரிஸார்ட்டில் ஒரு suite புக் செய்திருந்தேன். “எனக்கு தேநீர் குடிக்க வேண்டும்” என்றார் ஓட்டுநர். வேண்டா வெறுப்பாக காரிலிருந்து இறங்கினேன். மனைவியும் என் இளைய மகளும் கூட இறங்கினார்கள். பெரியவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.

அது ஒரு ஆசிரமம். துர்கா தேவி சந்நிதியும், அனுமார் சந்நிதியும் இருந்தன. சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிந்தனர். கோயிலின் பின்புறம் ஒரு சுவாமிஜியின் சிலை இருந்தது. சுவாமிஜிக்களுக்கு நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனக்கு அதிகம் ரசிக்கவில்லை. ஆனால் ஒன்று கவனித்தேன். கோயில் செல்வச் செழிப்புடன் இருந்தது. புத்தம்புதுக் கோயிலைப் போல் இருந்தது. கோயிலை விட்டு வெளியேறுவதற்கு முன் சுண்டல் பிரசாதத்தை பெற்றுக் கொண்டோம்.

கோயிலையொட்டி சிற்றோடை இருந்தது. அதை அசுத்தப்படுத்த வேண்டாம் என்ற அறிவுறுத்தலில் அது நதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மழைக்காலத்தில் அது நதியாக உருமாறலாம். நதியில் அதிக நீர் மட்டம் இல்லை. பூச்சிகளைப் போல் சின்னஞ்சிறு மீன்கள் கூட்டமாய் நீந்திக் கொண்டிருந்தன. ஒரு சிறுவன் பிஸ்கட்டுத் துண்டின் பொடியை நீரில் வீசினான் ; நூற்றுக்கணக்கான மீன்கள் அப்பொடியைக் கவ்விக்கொள்ளும் போட்டியில் அழகாக ஒரு புள்ளியில் குவியும் காட்சி மிக ரம்மியமாய் இருந்தது. ஒரு கணந்தான். மீண்டும் மீன்கள் தத்தம் திசைகளில் பிரிந்து சென்றன.

நாங்கள் கோயிலுக்கு வெளியே வந்தோம். ஓட்டுனர் வண்டியைக் கிளப்பிய போது கோயிலின் பெயர் என்ன என்று கேட்டேன். kainchi dham என்றார். Kainchi என்றால் கத்திரிக்கோல் என்று அர்த்தம் ; dham என்றால் தலம்.

+++++

கைடுகளுடனான உரையாடல் பல விஷயங்களை அறியத் தூண்டியிருக்கின்றன. கைடுகள் மிஸ்-கைடு செயவது வாடிக்கையான விஷயம் என்றாலும் கைடுகள் அவசியம். வரலாற்றுச் சின்னங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்கும் செயல் முறை எளிமையாகுதல் கைடுகளினால் மட்டுமே சாத்தியம். அவர்கள் தரும் வரலாற்றுத்தகவல்கள் நம்மை உண்மைத்தகவல்களை நோக்கிய உந்துதலை ஏற்படுத்தும். சில வருடம் முன்னர் ஓர் ஆங்கிலேய நண்பருக்குத் துணையாக ஆக்ரா சென்றேன். நடுவில் ஒரு கைடை எங்கள் காரில் ஏற்றிக் கொண்டோம். அவர் பெயர் அன்வர். டிப்டப்பாக கருப்பு கோட், கருப்பு கண்ணாடி அணிந்து சினிமா ஸ்டார் போல தோற்றமளித்தார். வி ஐ பி கைடு என்ற அடையாள அட்டையை காண்பித்தார். நானும் நண்பன் அட்ரியனும் பெருமிதப்பட்டோம். அன்றைய ஒரு நாளைக்கு நாங்களிருவரும் அன்வரின் தயவில் வி ஐ பிக்கள் ஆனோம். வழக்கம் போல தாஜ்மகால் நுழைவுச்சீட்டை நீண்ட வரிசையில் நிற்காமலேயே வாங்கினோம். தாஜ்மகாலுக்குள் பல்வேறு விளக்கங்களை கொடுத்துக் கொண்டே ஒரு தகவலை எங்களிடம் சொன்னார் அன்வர். இஸ்தான்புல்லின் நீல மசூதியை கட்டிய ஆர்கிடெக்ட்தான் தாஜ்மகாலையும் கட்டினார். அந்த தகவல் எனக்கு பயங்கர ஆச்சரியத்தை தந்தது. அட்ரியன் இஸ்தான்புல் நீல மசூதியை பார்த்திருக்கிறான். நான் திரைப்படங்களில் நீல மசூதியை பார்த்திருக்கிறேன். கடைசியாக நான் பார்த்தது ஏக் தா டைகர் இந்திப்படத்தில். சல்மான் கானும் கட்ரினா கைஃபும் நீல மசூதியின் பின்னணியில் ரொமான்ஸ் செய்து கொண்டிருப்பார்கள். நீல மசூதிக்கும் தாஜ்மகாலுக்கும் ஒரு தொடர்பும் இல்லையென்பதை உரிய தரவுகள் வாயிலாக மறுத்துக் கூறும் அறிவு அன்வரின் உதவியால்தான் கிட்டியது. நீல மசூதி கட்டி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகே தாஜ்மகால் கட்டும் பணி துவங்கியது. தாஜ்மகால் முழுமையாக கட்டி முடிக்கப்பட 21 வருடங்களானது. அன்வரை சந்தித்திருக்காவிட்டால் தாஜ்மகாலின் ஆர்க்கிடெக்ட் உஸ்தாத் அகமது லஹோரி என்பது எனக்கு தெரிய வாய்ப்பே இல்லை. அன்வர் கொடுத்த தகவல் ஏற்படுத்திய ஆச்சரியவுணர்ச்சி தாளாமல் அந்த தகவலை சரி பார்க்கும் உந்துதல் மேலிட நான் திரட்டிய மேலதிக தகவல்கள் முகலாய பேரரசு பற்றி நானறிய உதவியது. பொய்மையும் வாய்மையிடத்து என்பது இது தான் போல! அன்வருக்கு என் நன்றிகள்!

blue mosque

ராணிகேத் வந்தடைந்த அடுத்த நாள் குமாவோன் மலைச்சாலைகளில் நாற்பத்தியைந்து கிலோ மீட்டர் பயணம் செய்து துனகிரி வைஷ்ணோ தேவி கோயில் போய்ச் சேர்ந்தோம். அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது குகுசினா என்னும் இடம். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் ட்ரெக்கிங் செய்து பாபாஜி குகையை அடைய வேண்டும். அது தான் எங்கள் இலக்கு. துனகிரி அம்மன் கோயிலின் சாலையோரத் திருப்பத்தில் நபினை சந்தித்தோம். நபு என்பது அவன் செல்லப்பெயர். நாற்பது வயதிருக்கும் அவனுக்கு. சராசரி குமாவோன் வாசிகளின் அச்சுஅசல் நபு. அவன் நெற்றியில் பொட்டு. செவ்வாய்க்கிழமையாதலால் வைஷ்ணோ தேவி கோவிலில் நல்ல கூட்டம்! வாடகை ஜீப்புகள் எல்லாம் பிஸி. குகுசினா வரை எங்கள் காரிலேயே போவது என முடிவு செய்தோம். முன்னிருக்கையில் நபு. பின்னிருக்கைகளில் எங்கள் குடும்பம்.

Kainchi Dham – சுவாமிஜியைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதவன் காடு தாண்டி மலை தாண்டி பாபாஜி குகைக்கு குடும்பத்துடன் வருகை தருவதன் பின் என்ன அர்த்தம்? இது முரணாகாதா? தயவு செய்து குழம்ப வேண்டாம். இது ஒரு காதல்! பல வருடம் முன்னர் – எந்த வருடம் என்று ஞாபகமில்லை – படித்த புத்தகத்தின் 34ம் அத்தியாயம் என்னுள் ஏற்படுத்திய ரசாயன மாற்றம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் இது ஒரு சாரமில்லாத வெற்று ஆர்வமாகக்கூட இருக்கலாம். என்னை இதயபூர்வமாக அழைத்தால் நான் அங்கு தோன்றுவேன் என்று தன் பிரியப்பட்ட சீடனுக்கு உறுதி தந்த அந்த மரணமிலா குரு மகாவதார் என்ற அடைமொழியால் பக்தர்களால் போற்றப்படுகிறார். பாபாஜி பற்றிய வரலாற்று பூர்வ தகவல்கள் மிகச் சொற்பம். எனினும் Para Gliding, Apple Garden, Highest Golf Course முதலான ராணிகேத்தின் ஈர்ப்புகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு புதல்விகளின் விருப்பமின்மையையும் புறக்கணித்துவிட்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு அதிகம் பேர் போகாத ஒரு குகைக்கு நான் போவதை பகுத்தறிவு கொண்டு எப்படி விளக்குவது? என் வாழ்க்கை என் விருப்பம் என்று சொல்வது எளிதாயிருக்கும்.

ஒரு புத்தகம் விவரிக்கும் சம்பவம் இத்தனை ஆர்வத்தையா ஏற்படுத்தும்? பொன்னியின் செல்வன் விவரிக்கும் அனுராதபுரம் நகரப்பகுதி வர்ணனைகள் படிக்கப் பிடித்தன. சிவகாமியின் சபதத்தில் வரும் வாதாபி நகர வர்ணனைகளுந்தான்! புத்தக வர்ணனைகளுக்காக மட்டும் அனுராதபுரத்துக்கோ வாதாபிக்கோ (இந்நாளைய பதாமி) டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. இந்த குகைக்கு வர வேண்டும் என்ற விழைவுக்கும் காரணகாரியமான ஒரு விடை இருக்குமென்று எனக்கு தோன்றவில்லை.

பழைய காதலியை மறக்க முடியாமல் அவளின் பழைய விலாசத்துக்கு கடிதம் எழுதுதலை உணர்ச்சி பூர்வ விஷயம் என்றில்லாமல் வேறு எப்படி புரிந்து கொள்வது? பழைய காதலி எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. அவளிடம் தொடர்பு கொள்ளவேண்டும் என்ற தவிப்பேற்படும்போது அவள் இருந்த விலாசம் என்று நாம் கேள்விப்பட்ட இடத்துக்கு கடிதம் அனுப்புகிறோம். அது போலவே இது!

autobiography_yogi_book

பாபாஜி குகை ட்ரெக்கிங் கஷ்டமாக இருந்தது. ஃபிட்னெஸ் கொஞ்சம் கூட இல்லாமல் தஸ்புஸ்ஸென்று மூச்சு விட்டுக் கொண்டே ஏறினேன். என் குடும்பத்தினர் வேகமாக ஏறி எனக்கு முன்னால் சென்றுவிட்டனர். காவி ஜிப்பா போட்டுக் கொண்டு ஓர் இளைஞர் இறங்கி வந்து கொண்டிருந்தார். அவரிடம் இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்டேன். பதினைந்து நிமிடங்கள் என்றார். எங்கிருந்து வருகிறீர்கள் என்று நான் அவரிடம் கேட்டதற்கு சிட்னி என்றார். ஏன் வந்தீர்கள் என்று கேட்டேன். ஒரு புத்தகத்தின் 34ம் அத்தியாயம் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேனே அந்த புத்தகத்தின் பெயரைச் சொன்னார்.

பாபாஜி குகைக்கு சற்று முன்னர் ஒரு மண்டபம் கட்டியிருந்தார்கள். மகாவதார் பாபாஜி லாஹிரி மஹாஷயருக்காக தோற்றுவித்த மந்திர மாளிகையைக் குறிப்பதான இடத்தில் கட்டிய மண்டபம் இது என்பது நபுவின் தகவல்.

பாபாஜி குகையில் சற்று நேரம் அமைதியாக கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தோம். மூச்சு வாங்குதல் நின்றது. நபு குகையைப் பற்றி பேசலானான். அவன் சிறுவயதினனாக இருந்த போது பாபாஜி குகை திறந்திருந்ததாகவும் அதற்குள் இறங்கி உள்ளே சென்றால் இருட்போர்வையில் இனிய சுகந்தங்களின் வாசனை மூக்கை துளைக்குமாம். ஆனந்த உணர்வு மேலிடுமாம். குகைக்குள் டார்ச் லைட்டுகள் வேலை செய்யாதாம். அமெரிக்கர் ஒருவர் ஆர்வமிகுதியில் ஆய்வு செய்கிறேன் என்று குகைக்குள் புகுந்து வெகுநேரமாக வெளியே வராமல் யோகதா ஆசிரமக்காரர்கள் அவரை குகையிலிருந்து வெளிக்கொணர்ந்த போது சித்தம் கலங்கிய நிலையில் இருந்ததாகவும் இதன் காரணமாக குகை வாசல் அடைக்கப்பட்டது எனவும் நபு சொன்னான். நபு சொன்னது விறுவிறுப்பைக் கூட்டிற்று எனினும் அது எத்தனை உண்மையாக இருக்கும் என்ற ஐயம் எழாமலில்லை. உத்தராகண்ட் மாநிலத்தில் பல சுற்றுலா தலங்களில் பார்த்திருக்கிறேன். கைடுகள் இது போன்ற மந்திரம் மாய விஷயங்களை அதிகம் கலந்து பேசுவார்கள். மாநில சுற்றுலா துறையின் வரவேற்பு வளைவுகளும் போர்டுகளும் “தேவ்பூமி” என்னும் உரிச்சொல்லுடன் உத்தராகண்டை விவரித்துக் கொள்வது போலத்தான் இது!

நாங்கள் குகையிலிருந்து இறங்கத் தொடங்குகையில் வெளிநாட்டு ஜோடி ஒன்று குகையை நோக்கி ஏறி வந்தார்கள். அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். இத்தாலியின் மிலானோ நகரத்திலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களும் அந்த புத்தகத்தின் பெயரைச் சொன்னார்கள்.

நபுவுக்கும் அந்த புத்தகத்தின் ஆசிரியருக்கும் இடையில் என்ன வித்தியாசம்? எழுத்தாற்றல் என்பதைத் தவிர வேறென்ன? எழுதப்பட்ட சொற்கள் சக்தி படைத்தவையாக ஆகின்றன என்பதற்கு ஒரு ஆதாரம் என்றால் இந்த புத்தகத்தைச் சொல்லலாம் என்பது என் கருத்து. மனிதசக்தி உடல்-மனம் என்னும் இருமையின் எல்லைகளை தகர்த்துவிடக் கூடியது என்பதன் சிறு துளி சொற்களின் துணை கொண்டு நமக்கு விவரிக்கப்பட்டிருக்கும்.

நபு என்னுடனும் என் மனைவியுடனும் பேசிக் கொண்டே வந்தான். அவனுடைய குடும்ப வாழ்க்கை, அவனுடைய மனைவியின் மறைவுக்குப் பிறகு மறுமணம் செத்துக்கொள்ளாதிருந்தது, சுவாமி சத்யேஸ்வரானந்தா-வுடனான அவனுடைய தொடர்பு (அவனுக்கு நபின் என்று பெயரிட்டது அவர்தானாம் – குமோவோன்காரனுக்கு வங்காள மொழிப்பெயர் வந்ததன் ரகசியம் இவ்வாறு துலங்கியது), குக்குசினாவில் இருக்கும் ஒரே ஓட்டலின் சொந்தக்காரர் ஜோஷியுடன் அவனுடைய மனஸ்தாபம் என்று பல தகவல்களைப் பகிர்ந்தான். நடிகர் ரஜினிகாந்த் பாபாஜியிடமிருந்து பெற்ற மூன்று மந்திரங்கள், அசைவ உணவு சாப்பிடும் போது அவற்றை ரஜினிகாந்த் சொல்லாமல் இருக்க வேண்டும் என்று பாபாஜி அறிவுறுத்தியது என்று அவன் ஒன்றன்பின் ஒன்றாக தகவல்களை பகிரும் போது நானும் பாபா திரைப்படம் பார்த்திருக்கிறேன் என்று சொல்லலாமா என யோசித்தேன். ஆனால் சொல்லவில்லை. நபுவுக்கு சென்னை எக்ஸ்பிரஸ் என்றொரு செல்லப்பெயர் உண்டாம். பாபாஜி குகைக்கு வருவோரில் 60% தென்னிந்தியர்கள் என்று ஒரு புள்ளிவிவரம் தந்தான். அவர்களுக்கெல்லாம் நபுவே கைடாக இருப்பதால் இந்த பெயர் வழங்குகிறதாம். நபுவுக்கும் பிற வடஇந்தியர்கள் போல தென்னிந்திய மாநிலத்தவர்களை மாநில வாரியாக பாகுபடுத்த தெரியவில்லை. எனவே அவன் சொன்ன கணக்குப்படி 60% முழுக்க தமிழர்களாக இருப்பார்கள் என்று சொல்வது கடினம். அதிகமாக தென்னிந்தியர்கள் பாபாஜி குகைக்கு வருவதற்கு காரணம் ரஜினிகாந்த் என்று நபு நம்புகிறான்.

வழியில் ஒரு குடிசை வீடு. அங்கு சற்று நேரம் இளைப்பாறினோம். குடிசைக்காரர் குடிசையில் டீக்கடை நடத்துகிறார். கேட்டால் மேகியும் செய்து தருவார். உத்தராக்கண்ட் மலைப்பிரதேசங்களில் மேகி கிட்டத்தட்ட கோதுமை போல அரிசி போல staple food. டீ வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். நானும் என் மனைவியும் தமிழில் பேசுவதைக் கேட்ட குடிசைக்காரர் எனக்கு குடிசை வாசலில் தொங்கும் ஒரு புகைப்படத்தை காட்டினார். நடிகர் ரஜினிகாந்த் கையில் தடியுடனும் தலைப்பாகையுடனும் ஜிப்பா அணிந்து நிற்கும் புகைப்படம். நாங்கள் உட்கார்ந்திருந்த குடிசை வாசலில் எடுக்கப்பட்ட புகைப்படம். 2013 இல் எடுக்கப்பட்ட படம் என்றார். 2013க்குப் பிறகு அவர் வரவில்லை என்றும் சொன்னார். அந்த ஒற்றை குடிசையைத் தாண்டாமல் ரஜினிகாந்த்தால் கூட நிச்சயம் பாபாஜி குகைக்குச் சென்றிருக்க முடியாது. தகவல் – ஆதாரம் என்னும் ரயில்பாதையில் பயணிக்கிறது தர்க்கம். தர்க்கம் வாழ்க்கையின் இன்றியமையா அங்கம். நாம் வாழ்கிறோம் என்பதற்கு நமக்கு தர்க்கம் தேவைப்படுகிறது. நிரூபித்தல் வாழ்க்கையின் தவிர்க்க முடியா செயல்முறை.

லாஹிரி மஹாஷயர் பாபாஜியை ரத்தமும் சதையுமாக சந்தித்ததாக சொல்லப்படும் சம்பவத்தில் தர்க்கம் அணுவளவும் இல்லை எனினும் 400 கி மீ பயணம் செய்திருக்கிறேன் ; எதற்கும் மெனக்கெடாத நான் ஐந்து கி மீ டரெக்கிங் செய்து அந்த குகையை அடைந்திருக்கிறேன். நான் வந்த தூரத்தை விட அதிக தூரத்திலிருந்து வந்தவர்களை சந்தித்திருக்கிறேன். 1861லிருந்து 1935 வரை பாபாஜியை வெவ்வேறு கட்டத்தில் சந்தித்தவர்கள் பகிர்ந்த அனுபவங்களை பற்றி வாசித்திருக்கிறேன். அவற்றை வாசிக்கும் போது நம்பிக்கையின்மையை என்னால் தவிர்த்துவிட முடிகிறது. திறந்திருந்த பாபா குகையிலிருந்து வந்த சுகந்தம் பற்றி நபி சொல்லும் போது எனக்கு ஆதாரம் வேண்டியிருக்கிறது. முரண்கள் நிறைந்த மனித வாழ்க்கையின் அங்கமாகிய நானும் முரண்கள் நிரம்பியவனாகவே இருக்கிறேன். தர்க்கம் ஒரு வாள். அதை ஏந்தி நாம் விரும்பாதவற்றை வெட்டித் தள்ளுகிறோம். நமக்கு விருப்பமானவற்றின் திசையில் அந்த வாளை சுழற்றாமல் இருக்கிறோம்.

neemkaroli baba
Neem Karoli Baba

குகுசினா வந்த பிறகு குமாவோனில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி எங்கள் பேச்சு திரும்பியது. Kainchi Dham பார்த்தீர்களா என்று கேட்டான் நபு. நீம் கரோலி பாபா பற்றி சொன்னான். கத்திரிக்கோல் தலத்தில் நான் பார்த்த சிலை நீம் கரோலி பாபாவினுடையது. – “ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் கம்பெனி தொடங்குவதற்கு முன்னர் பல வியாபாரம் தொடங்கி நொடித்துப் போனார் ; இந்தியா வந்து நீம் கரோலி பாபாவிடம் வந்து தன் குறையை சொன்னார். பாபாவின் கையில் ஓர் ஆப்பிள் இருந்தது. ஆப்பிள் பாபாவுக்கு மிகவும் பிடித்தது. அந்த ஆப்பிளை சிறிது கடித்து சீடன் ஸ்டிவ்-க்கு தந்தார். இனிமேல் அனைத்தும் வெற்றியில் முடியும் என்று ஆசீர்வதித்தார். ஆப்பிள் உலகின் மிகப் பெரிய டெக்னாலஜி கம்பெனியானது. தன் நிறுவனத்துக்கு ஆப்பிள் என்று ஸ்டிவ் பெயரிட்டதற்கு காரணம் நீம் கரோலி பாபா மீது ஸ்டிவ்க்கு இருந்த பக்தி. ஸ்டீவ் வாயிலாக நீம் கரோலி பாபா பற்றி கேள்விப்பட்ட மார்க் ஸுக்கர்பர்க் (ஃபேஸ் புக்) 2015 இல் Kainchi Dham விஜயம் செய்தார்”

நபு சொன்ன தகவலை இதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஸ்டிவ் ஜாப்ஸுக்கு இந்திய குருவா? ஓர் ஹிப்பியாக ஸ்டீவ் ஜாப்ஸ் எழுபதுகளில் இந்தியா வந்திருப்பதை பற்றி படித்திருக்கிறேன். மகேஷ் யோகி, ரஜ்னீஷ் போன்றவர்கள் அமெரிக்க இளைஞர்களிடையே அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கிளப்பிய கிளர்ச்சியின் விளைவே ஸ்டிவின் இந்திய விஜயத்துக்கு காரணம் என்பதாகவே என் புரிதல்.

நபு சொன்ன விஷயங்களில் என்னை மிகவும் துண்டுதலை உண்டுபண்ணியது ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இந்த தகவல் தான். நீம் கரோலி பாபா யார்? எப்போது வாழ்ந்தார்? நபு சொன்ன விஷயம் உண்மையா? கைடுகள் வழக்கமாக அடித்து விடுவது போன்றதான பொய்த்தகவலா?

மலைப்பிரதேசத்தில் மொபைல் சிக்னல் சரியாக இல்லை. Data Roaming-உம் வேலை செய்யவில்லை. ராணிகேத் ஓட்டலிலும் இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலை இணையத் தொடர்பு கிட்டியது. Did Steve Jobs visit Kainchi Dham? என்ற கேள்விக்கு விடை தேடினேன்.

steve_jobs-apple
Steve Jobs (Founder of Apple)

இரண்டு குறிப்புகள் கிடைத்தன. நீம் கரோலி பாபாவின் பக்தர் ஒருவர் கீர்த்தனை இசையமைப்பாளர். sacred music என்னும் இசை வகைமையின் முன்னோடி எனக் கருதப்படுபவர். அவர் பெயர் ஜெய் உத்தல். உத்தல் படித்த ரீட் கல்லூரியின் மாணவர் ஸ்டீவ் ஜாப்ஸ். மாணவர் ஸ்டீவை ஒரு முறை சந்திக்கும் போது உத்தல் நீம் கரோலி பாபாவுடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். ஸ்டீவ் அந்த உரையாடலில் கிடைத்த விவரங்களால் ஈர்க்கப்பட்டு தன் நண்பர் ஒருவருடன் இந்தியப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்கிறார். அக்டோபர் 1974இல் Kainchi Dham வருகிறார். துரதிர்ஷ்டவசமாக நீம் கரோலி பாபா 1973இலேயே பூதவுடலை துறந்துவிட்டிருக்கிறார். ஸடீவ் பாபாவை சந்திக்கவில்லை. உத்தலுடனான உரையாடலே தன்னை இந்தியா செல்லத் தூண்டியது என்று ஸ்டீவ் பல முறை குறிப்பிட்டுள்ளதாக ஸ்டீவுடன் சேர்ந்து இந்தியா பயணம் சென்ற நண்பர் பிற்காலத்தில் உத்தலுக்கனுப்பிய மின்னஞ்சலொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னொரு குறிப்பு கிருஷ்ண தாஸ் என்று இன்று அறியப்படும் ஜெஃப்ரே கெகல் என்பவரைப் பற்றியது. இவர் நீம் கரோலி பாபாவின் நேரடி சீடர். பாபாவினுடைய தன் முதல் சந்திப்பை பற்றி இவ்வாறு விவரிக்கிறார் :-

“அவருக்கு ஆப்பிள் பழங்கள் பிடிக்கும் என்று கேள்விப்பட்டிருந்தோம். எனவே ஆப்பிள்களை எடுத்து வந்திருந்தோம். எனக்கு வேடிக்கையாய் இருந்தது. ஆப்பிள்களை அவரிடம் கொடுத்தோம். அவற்றை வாங்கிக்கொண்டார். உடன் அந்த ஆப்பிள்களை அறையில் இருந்தவர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டார். “இவருக்கு நான் கொடுத்த ஆப்பிள்கள் பிடிக்கவில்லை போலிருக்கிறது” என்று நினைத்தேன். என்னை நோக்கினார். ‘நான் என்ன செய்தேன்?’ என்று கேட்டார். நான் சொன்னேன் : ‘எனக்கு தெரியாது’. ‘நான் செய்தது சரியா?’ என்று கேட்டார். நான் மீண்டும் ‘எனக்கு தெரியாது’ என்று சொன்னேன். அவர் திரும்பவும் ‘நான் செய்தது சரியா?’ என்று கேட்டார். ‘நீங்கள் செய்யும் எதுவும் சரி’ என்று பதில் சொன்னேன். அவர் சிரித்தார். பிறகு சொன்னார் “ஒருவனுக்கு கடவுள் இருப்பானாயின், அவனுக்கு எதுவும் தேவையில்லை. அவனிடம் ஆசைகள் இராது’ அவர் சொன்னதைக் கேட்டதும் நான் என்னைப் பற்றி யோசித்தேன். என்னிடம் எவ்வளவு ஆசைகள்! நான் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும் என்பதை உணர்ந்தேன். இது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் அவர் என் எண்ணத்தை படித்திருந்ததை எனக்கு காட்டினார். என்னுள்ளில் நான் உணரத்தக்க வகையில் எனக்கு வழி காட்டினார்”

வானிலை சற்று மோசமடைந்திருந்ததால் ஓட்டலிலிருந்து கிளம்ப தாமதமானது. இதனால் தில்லிக்கு கிளம்புமுன் Apple Garden பார்க்கலாம் என்று போட்ட திட்டம் நிறைவேறவில்லை. மோசமான வானிலை காரணமாக Para Gliding spot அன்று மூடியிருந்தது. Golf Course மூடுபனியில் கவிந்திருந்தது. ஓட்டுனர் Kainchi Dham அருகே தேநீர் குடிப்பதற்காக வண்டியை நிறுத்தினார். நாங்கள் காரில் இருந்து வெளியே இறங்கவில்லை. அதே இடத்தில் இரண்டு நாட்கள் முன்னர் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெரியவள் “அப்பா! இந்த கோவிலுக்கு போகவில்லையா?” என்று கேட்டாள். அதற்கு சின்னவள் “நாங்க அன்னிக்கே போயிட்டோம்… இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகணும்னா நீயும் போய் கும்பிட்டுட்டு வந்துடு” என்று பெரியவளைக் கேலி செய்தாள்.

  1. இதில் குறிப்பிடப்படும் புத்தகம் பரமஹம்ச யோகானந்தர் எழுதிய சுயசரிதம் – Autobiography of a Yogi. இந்நூலின் 34ம் அத்தியாயத்தை இணையத்தில் வாசிக்க → https://www.crystalclarity.com/yogananda/chap34.php
  2. நீம் கரோலி பாபா பற்றி → https://en.wikipedia.org/wiki/Neem_Karoli_Baba
  3. ஸ்டீவ் ஜாப்ஸ்-ஸின் இந்திய விஜயத்தின் பிண்ணனி குறித்து → http://www.abc.net.au/radionational/programs/rhythmdivine/jobs-holy-man-and-apple-logo/4609698

குறுங்கதைகள்

பழக்கம் எனும் மகாசக்தி

பாதிப் படித்து தலை திருப்பி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. என் படுக்கைக்குப் பக்கத்தில் இவ்வாறு சிதறிக் கிடந்த புத்தகங்களையெல்லாம் “ஷெல்ஃபில்” மனைவி எடுத்துவைத்துவிட்ட தினத்தன்று தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். படுக்கையின் விளிம்பில் கரையாக இருந்த புத்தகங்களின் இழப்புணர்வு தாளாமல் சில புத்தகங்களை மீண்டும் வெளியில் எடுத்து படுக்கைக்கருகே வைத்து கண்ணை மூடிப் படுத்துக் கொண்டேன்.

+++++

நட்பு

நண்பர்களின் தொடர்பில் இருப்பதில்லை என்ற குற்றவுணர்வு வாட்டுவதாக நினைத்து அதை சீர் செய்யும் நடவடிக்கையை எடுக்க நெடுநேரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நண்பனும் என் நினைவில் வரவில்லை. அவர்கள் நினைவிலும் நான் வராமல் இருக்கக்கூடும் என்ற எண்ணம் அளித்த ஆறுதலில் குற்றவுணர்வு கரைந்து போனது.

+++++

பூனைக்கு வந்த காலம்

சில உயர்அதிகாரிகளின் நிலை பாவமாய் இருக்கும். நன்கு அதிகாரம் பண்ணி நம்மை கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவருக்கும் மேலான ஓர் அதிகாரி நம்மை அழைத்து நம் வேலையைப் பற்றிப் பாராட்டிப் பேசும் போது அருகில் இருக்கும் நம் அதிகாரியின் முகம் ரசிக்கத் தக்க ஹாஸ்யக்காரனின் பாவத்தில் காணப்படும். போன வாரம் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தது. பாவ்லா காட்டியவாறே இத்தனை மாதங்களாக அவர் செய்து வந்த ஒரு பணி எதிர்பாராதவிதமாக கைமாறி எனக்களிக்கப்பட்டது. “இனிமேல் நீயும் சீனியர் மேனேஜ்மென்டின் ஒர் அங்கம்” என்று சொல்லி அவர் கைகுலுக்குகையில் “தயவுசெய்து என்னை மேலே போட்டுக் கொடுத்துவிடாதே” என்று சொன்னது அவர் உடல்மொழி.

+++++

திருப்தி

என் நண்பர் ஒருவரிடம் ஏதாவது ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு அதைப் பற்றிச் சொன்னால் உடனே தானும் அதைப் பார்த்துவிட்டதாகச் சொல்லுவார். அதில் நடித்த நடிகர் பெயரைச்சொல்லி அவரின் நடிப்பை குறை சொன்னால் உடனே மறுப்பு சொல்வார் நண்பர். தேர்ந்த விமர்சகர் போல “அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது ;  கொடுக்கப்பட்ட ‘ரோலை’ திருப்தியா செஞ்சுருக்காரு” என்பார். நடிகர் பண்ணிய ‘ரோல்’ என்ன என்று நானும் அவரைக் கேட்பதில்லை ; அவரும் சொல்வதில்லை.

——-

பாத்திரத்தில் நிலைத்திருத்தல்

பெரிய பொய்களை அழகிய வார்த்தைகளுக்குள் அடக்கி கண்களை உருட்டியபடி பேசிக் கொண்டிருந்த அதிகாரியை விரலை லேசாக உயர்த்தி தடுத்து நிறுத்திய வாடிக்கையாளரின் பிரதிநிதி – நல்லா பேசுறிங்க ஆனா என்னால் நம்ப முடியல – என்றார். பொய்களுக்கு எந்த வடிவம் கொடுப்பது என்று புரியாமல் விழித்த அதிகாரி என்னை நோக்கினார். உண்மையை மறைமுகமாக பாதி மறைத்துச் சொல்லும் முயற்சியில் நான் பேசத் தொடங்குவதற்குள் பிரதிநிதி இடைமறித்து – மேல சொல்லுங்க உங்க பொய்ய வச்சு உங்க நிறுவனத்தை எடை போடமாட்டேன் – என்றார். அதிகாரி தப்பித்தோம் பிழைத்தோம் என விடுவிடென்று மின்னல் வேகத்தில் பிரசன்டேஷனை ஓட்டிமுடித்து மடிக்கணினியை மூடினார். வாடிக்கையாளரின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவுடன்  – இது மாதிரி மூஞ்சி முன்னால பேசுறவங்களே பெட்டர் – என்று அதிகாரி என்னிடம் சொன்னபோது – மீட்டிங் முடிஞ்சிருச்சி, இன்னும் எதுக்கு ஸேல்ஸ் பிட்ச் மோட்லயே இருக்கீங்க – என்று கேட்கத் தோன்றிற்று. ஆனால் அப்படிச் சொல்லாமல் – சரியாச் சொன்னீங்க – என்று சொல்லி நானும் பாத்திரத்திலேயே தொடர்ந்து இருந்தேன்.


—–

சிலேடை

போராடும் ஒரு நடிகர் எந்த வேடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார் ; பழுத்த அனுபவஸ்தர்களான மூத்த கார்ப்பரேட் அதிகாரிகளும் எந்த பணியையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். இயக்குனர்களின் வழிநடத்தலின்படி பூணும் கோமாளி வேடமும் இதில் அடக்கம்.

—–

எழுதிப்பார்த்த போது…

அனுபவப் பகிர்வு எளிது. படித்துப் புரிந்து கொண்டதையும் அறிந்துகொண்டதையும் பகிர்தலும் எளிது. புரியாததையும் அறியாததையும் பகிர்தல் அவசியமில்லாதது. தொடர்புறுத்தல் வாயிலாக பெறப்படும் இணைவுகள், வாசிப்பின் நினைவு கூறல்கள், உரிய வடிவம் குறித்த பிரக்ஞை, நிகழ்வுகள் குறித்த தனிப்பட்ட பார்வைகள், கூரிய கவனிப்பு ஆகிய கூறுகள் மனப்பயிற்சியினால் அடையக்கூடியவை. சரியான புரிந்துணர்வை எய்துங்காலை சொற்கள் தம்மைத்தாமே உருப்பெருக்கிக் கொள்ளும். தமக்கான உண்மைகளை எழுதுதலோ பிறருக்கான உண்மைகளை எழுதுதலோ இரண்டுமே அடிப்படையில் ஒன்று என்ற தெளிதல் கைவந்துவிட்டால்  எல்லைகளற்ற எங்கும் பரந்த மைதானத்தில்  எழுத்தோட்டம் நிரந்தரமாய் நிகழ்ந்தவாறிருக்கும். (ஒரு ஃப்லோல வந்தது ; சீரியஸா எடுத்துக்கப்படாது)

உனக்கு ஒருத்தன் கிண்டில் வாங்கித் தந்தது ஒரு தப்பாய்யா? – நட்பாஸ்

சிறப்புப்பதிவு – நட்பாஸ்

சுள்ளிகளை ஆங்கிலத்தில் சில சமயம் கிண்ட்லிங் என்று சொல்கிறார்கள்- கிண்டில் என்ற ஆங்கிலச் சொல்லின் நேர்பொருள் கொளுத்துதல் என்று கொள்ளலாம் (“செம செம செம #எரிதழலில் பொன்னியின் செல்வன்”, தனித்தமிழார்வல டிவீட்).

அமேசான் நிறுவனம் தான் தயாரித்த மின்னூல் வாசிப்புக் கருவிக்கு கிண்டில் என்ற பெயரைப் பரிசீலித்தபோது, இந்த அர்த்தம் வரும் என்று தெரிந்தேதான் இதைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்- அண்மையில் வெளிவந்த அமேசான் சிங்கிள் ஒன்றின் பெயர், I Murdered My Library http://www.amazon.com/gp/product/B00K6JO15A/ (28 பக்கங்கள், இந்திய விலையில் ரூ. 180). விலையையும் தலைப்பையும்விட இந்த ஒற்றைக்கட்டுரையின் முகப்பு அட்டைதான் நம்மை மிரட்டுவதாக இருக்கிறது – http://media.boingboing.net/wp-content/uploads/2014/08/81qANfgNiuL._SL1500_.jpg .

நான் படித்த வினோதமான விமரிசனங்களில் ஒன்று The Inglorious Basterds என்ற படத்துக்கு எழுதப்பட்டிருந்தது. படத்தின் இறுதியில் திரையரங்கு உரிமையாள நாயகி தன் உதவியாளோடு தியேட்டர் கிடங்கிலுள்ள திரைப்படங்களின் பிலிம் ரோல்களைக் கொளுத்தி நாஜி தலைவர்கள் அத்தனை போரையும் பூண்டோடு அழிப்பதாக வரும். இது தொடர்பாக அந்தக் கட்டுரையாளர், தியேட்டர் ஓனரும் காமிரா ஆபரேட்டருமாகச் சேர்ந்து அத்தனை திரைப்படங்களையும் கொளுத்துவதாகக் கதை எழுத சினிமாவின் அழகியலை அறிந்த எவருக்கும் மனம் வராது என்று சொல்லி, இந்தப் படம் குறித்து டாரண்டினோவை என்னதான் புகழ்ந்தாலும் அடிப்படையில் அவரது அழகியல் மூர்க்கத்தனமானது என்று எழுதியிருப்பார். என்னடா இதெல்லாம் மிகையான விமரிசனமாக இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டே அதைப் படித்தேன். ஆனால் இப்படி ஒரு கருவி, அதைத் தயாரித்த நிறுவனம் இப்படி ஒரு அட்டைப்படம் போட்டு, ‘என் நூலகத்தைக் கொன்றேன்’ என்ற தலைப்பு வைத்த மின்னூலை விற்பதைப் பார்க்கும்போது, இதிலெல்லாம் விஷயம் இருக்குமோ என்று தோன்றுகிறது.

அருங்காட்சியகத்தில் உள்ள எகிப்திய பாப்பிரஸ் ரோல்களை எரிப்பதாகவோ, குழந்தைகளை எரிப்பதாகவோ படம் எடுத்தால், என்ன ஒரு மோசமான கற்பனை என்று சொல்வோம் அல்லவா? எதற்கு எதை விலை கொடுப்பது என்று ஒரு அளவுமுறை இருக்கிறது, நாம் எதை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதுதான் அந்தப் பரிமாற்றத்தின் மதிப்பைத் தீர்மானிக்கிறது.

இங்கு, நம்பி கிருஷ்ணன் சொல்வனத்தில் எழுதிய ஒரு கட்டுரையைச் சுட்டுகிறேன் – வாசிப்பின் லட்டைட்டிய இன்பங்கள் http://solvanam.com/?p=34377 . “ஆல்பர்டோ மங்க்வெல் போலந்து நூலகத்தில் இருந்த ஒரு நூலகர் பற்றி எழுதுகிறார். யூதப் புத்தகங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நாட்களில் அந்த நூலகர் தினமும் சில புத்தகங்களாக ஒரு வண்டியில் மறைத்துச் சென்று காப்பாற்றினாராம். அந்தப் புத்தகங்களைப் படிக்க எவரும் பிழைத்திருக்கப் போவதில்லை என்று தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்தார் என்றால் இதை நினைவைக் காக்கும் ஒரு செயல் என்றுதான் சொல்ல வேண்டும். பண்டைய கப்பாலியர்கள் சொற்படி, இந்த உலகம் நாம் வாசிப்பதால் இருப்பதில்லை, நம்மால் வாசிக்கப்படும் சாத்தியத்தில்தான் உருக்கொள்கிறது”.

 

Amazon_Kindle_Paperwhite_2013_35827154_09

காகித நூல்களுக்கு மின்னூல்கள் மாற்றாக முடியுமா? அச்சுக்கு இருக்கும் பருண்மை டிஜிடல் பிம்பங்களுக்கு உண்டா? புத்தகங்களுக்கு எதிராக கிண்டிலை உருவாக்கி (“எரிதழல்”) இன்று எழுத்தாளர்களுக்கு எதிராக வாசகர்களை ஏவத் துவங்கியுள்ள அமேசானை இன்னும் கொடிய சாத்தானாக்க வேண்டுமென்றால், மின்னூல்களின் உலகம் ஆவிகளின் உலகம் என்று சொல்லலாம்: காகித நூல்களுக்கு எதிரான நெருப்பின் சுள்ளிகள் என்று சொல்வதைவிட சிதைகள் என்றுதான் கிண்டிலைச் சொல்ல வேண்டும். இந்தச் சாத்தான் ஒவ்வொரு கணத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். உங்களுக்கு உரியவையாக இருந்தாலும் இந்த மின்னூல்கள் எப்போது வேண்டுமானலும் அமேசான் ஆணையின் பேரில் ஒட்டுமொத்தமாக மறையலாம். என்னிடமுள்ள காகித நூல்களைக் கொளுத்தினால் அதன் சாம்பல்களில் உள்ள எழுத்துகள் என்னைக் குற்றம் சொல்லும். அமேசானுக்கு அந்தக் கவலையில்லை.

ஒரு நூலகத்தின் கொள்ளளவு இருந்தாலும் மின்னூல் வாசிப்புக் கருவிகள் நினைவற்றவை, நினைவுக்கு எதிரானவை. கிண்டில் வாசிப்புக்கு மூர்ச்சைக்குரிய கூறுகள் உண்டு. மயக்க நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் உள்ள வேறுபாடு நினைவின்மை அல்ல, காலமின்மை. விழிப்பு நிலையில் முக்காலமும் உணர்ந்தவர்களாய் இருக்கும் நாம், மயக்க நிலையில் ஏககாலத்தில் இருக்கிறோம்- நிகழ்வோடே பயணிக்கிறோம், அதன் எல்லைகள் நம்மை சுவீகரித்துக் கொள்கின்றன. மின்னூல் வாசிப்பதைப் பட்டியலிட்டு சீராகச் செய்பவர்களுக்கு ஒழிவு கிடைக்கும் பொழுதுகளைக் கிண்டில் கைப்பற்றிக் கொள்கிறது.

காகித நூல்களை வாசிப்பதைவிட மின்னூல்களை வாசிப்பது எளிதாக இருக்கிறது, வசீகரமாகவும் இருக்கிறது. நம் கிண்டிலில் நமக்கான ஒரு நூலகத்தை உருவாக்கி, ஒரு புத்தகம் மாற்றி இன்னொன்று என்று படித்துக் கொண்டே போக முடிகிறது. ஆபிசுக்கு டிபன் பாக்சுடன் புத்தகத்தை எடுத்து வைக்கும் பழக்கம் கொண்ட நான் இப்போது, கிண்டிலை பாண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஏராளமான புத்தகங்கள் வரிசையாய் வெவ்வேறு போல்டர்களில் காத்திருக்கையில், இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தால்தான் அடுத்ததைப் படிக்க முடியுமா என்று அங்கலாய்ப்பாக இருக்கிறது, அந்த அடுத்த புத்தகமும்கூட பதிலுக்கு, “இவன் எப்போடா நம் பக்கம் வருவான்,” என்று என்னை வாசித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் தப்பில்லை. கிண்டிலைத் தொட்டுப் பார்க்கும்போது எனக்கான ஒன்று அதனுள் காத்துக் கொண்டிருப்பதுபோல்தான் இருக்கிறது.

ஆனால் ஒரு மிகப்பெரிய சிக்கல், மின்னூலைப் புரட்டிப் பார்க்க முடியவில்லை. இது ஒரு சாதாரண விஷயமாகத் தெரியலாம். ஆனால் நியாயமாக யோசித்துப் பார்த்தால், முதல் பக்கத்தில் துவங்கி கடைசி பக்கத்தில் முடியும் ரயில் பயணமல்ல வாசிப்பு. ஒரு புத்தகத்தை அட்டை முதல் அட்டை வரை படித்து முடித்தபின், முன்னும் பின்னும் சென்று பக்கங்களுக்கு இடையிலுள்ள இணைப்புகளையும் விலகல்களையும் அலையும்போதுதான் உண்மையான வாசிப்பு துவங்குகிறது. இதனால்தான் சில புத்தகங்களை மீண்டும் மீண்டும் பல பத்தாண்டுகளாகப் படித்துக் கொண்டிருக்கிறோம். புரட்டிப் பார்க்கும்போதுதான் விருப்பப் பகுதிகள் நம் மனதில் மேலும் உறுதியான வடிவம் பெறுகின்றன, கவனிக்காமல் விடப்பட்ட விஷயங்களின் முக்கியத்துவம் புலன்படத் துவங்குகிறது. ஒவ்வொரு வாசிப்பிலும், காசுவலான ஐந்து நிமிட அரையார்வ புரட்டலிலும்கூட, அந்த நூல் மேலும் துலக்கம் பெற்று முழுமையை நோக்கி ஒரு சிறு அளவு பயணிக்கிறது.

நாவல்களையும் சிறுகதைகளையும் யாரும் இப்போதெல்லாம் அதிக அளவில் படிப்பதில்லையே என்ற கேள்விக்கு அசோகமித்திரன் ஒரு பேட்டியில், ஒவ்வொரு காலமும் தனக்குத் தேவையான கலை வடிவத்துக்குதான் ஆதரவு கொடுக்கும் என்றார். நீங்க நல்லா எழுதறீங்க என்ற காரணத்துக்காக உங்களை ஒருத்தர் படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களுக்கு மட்டுமில்லை, டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர் எல்லாருக்கும் இதான் கதி.

சமகாலம் என்பது என்னவோ வெயில் மழை மாதிரி ஆகாயத்திலிருந்து கவிந்து விழுவதல்ல. நாம் உருவாக்கும் கருவிகள்தான் நம் காலமாகின்றன. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தி பரபரப்பாக அடிப்பட்டது. 2002ஆம் ஆண்டுக்குப்பின் ஜெராக்ஸ் கம்பெனி தயாரித்த ஒவ்வொரு கருவியிலும் நாம் நகலெடுக்கும் ஆவணங்களைப் பதிவு செய்து பாதுகாக்கும் ஹார்ட் டிரைவ் ஒன்று இருக்கிறது என்பதுதான் அது. இது எதுக்கு என்று நாம் கேட்கலாம். ஹார்ட் டிரைவ் அவசியப்படும்போது கூடவே இந்த வசதியும் இருந்துவிட்டுப் போகட்டும், காசா பணமா என்பதால் இந்த வசதி.

இணையத்தில் தகவல்கள் சும்மா போய் வந்து கொண்டிருக்கின்றன, எடுத்துப் பார்ப்பது சாத்தியம் என்னும்போது செய்தால் என்ன என்று செய்து பார்ப்பதால்தான் நாம் இன்று ஒவ்வொரு நிமிடமும் உளவு பார்க்கப்பட ஒப்புக் கொண்டிருக்கிறோம்- அரசாங்கம் சும்மா இருந்தாலும் உங்கள் போன் கம்பெனி, அதன் சர்வீஸ் புரோவைடர், ஆன்டிராய்ட் எனில் கூகுள் நிறுவனம், நீங்கள் பயன்படுத்தும் செயலிகளை எழுதிய கம்பெனிகள் உங்களைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

எவ்வளவு சுலபமாக நம் கருவிகளின் திறன்கள் நம் காலத்தைத் தீர்மானிக்கின்றன என்பது ஆச்சரியம்தான். யாரும் ஏதோ திட்டம் போட்டு இன்றைய உளவுச் சமூகத்தை உருவாக்கவில்லை. எப்போதும்போல் கருவிகள் கரணங்களாகின்றன. சைபர் ஸ்பேஸில் செலுத்தப்படும்போது நாம் கண்காணிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.

எனவே இது இருபத்து நான்கு மணி நேர உளவின் காலம், மின்னூல்களின் காலம், எந்திரங்களின் காலம், அந்தரங்க வாசிப்பும், அச்சுநூல்களும் புத்தக அலமாரிகளும் காலாவதியாகிவிட்டன- இந்தப் புலம்பல்களால் பயனில்லை என்று சொல்லலாம். இதுதான் நம் எதிர்காலமாகவும் இருக்கலாம். ஆனால் அதற்காக நம் இழப்புகளுக்காக வருந்தாமல் இருக்க முடியுமா? நாம் இழப்பது அறிதலின் பருண்மக் கூறுகளில் ஒன்று மட்டுமல்ல, நம் அக விகாசத்தின் அவசியத் தன்மையையும் அல்லவா இழக்கிறோம்.

ஆம், நாம் வாசித்ததைப் புரட்டிப் பார்க்க முடியவில்லை என்றால் நமக்குச் சிந்திக்க வழியில்லை என்றுதான் பொருள். அச்சுப்பிரதிக்கு மின்பிம்பங்கள் மாற்று என்றால் அங்கு மெய்ம்மையில் ஓர் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. காகிதநூல்கள் இருக்கும் இடத்தில் கிண்டிலை வைத்துப் பார்ப்பது, அமேசானே சொல்வதுபோல், நூலகத்தில் நெருப்பு வைப்பது போன்றது. மின்னூல்தான் எதிர்காலம் என்பவர்களுக்கு இதில் இழப்பு எதுவும் தெரியாது. சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுப்பவர்கள்தான் உளவு பார்க்கப்படுவதை அநாகரிக அத்துமீறலாக நினைப்பார்கள், நல்ல எழுத்தை மதிக்கத் தெரியாதவர்கள்தான் எழுத்தாளனைவிட வாசகன் முக்கியம் என்பார்கள், யோசிக்க வேண்டிய தேவை இல்லாதவர்கள்தான் பல பத்தாண்டுகளாக புரட்டிப் புரட்டிப் படித்துக் கொண்டிருப்பதில் உள்ள தேடல் பற்றி ஒரு உள்ளுணர்வும் இல்லாமல், வாரம் ஒரு புத்தகம் டவுண்லோட் செய்து அதை அட்டை முதல் அட்டை வரை வாசித்து ஒரு போல்டரில் புதைத்துப் போட்டுவிட்டு அடுத்த புத்தகத்தைப் படித்துக் கொண்டு ரயில், பஸ், கவுண்டர் வரிசை என்று அடுத்தடுத்து போய்க் கொண்டே இருப்பார்கள்.

உன்னை ப்பற்றி தெரியாமல் எவனோ உனக்கு ஓசியில் கிண்டில் கொடுத்தால், அதில் புரட்டிப் பார்த்து படிக்க முடியவில்லை என்பதற்கு இவ்வளவு பெரிய வியாக்கியாயனமா என்று நீங்கள் கேட்கக்கூடும். நியாயமான கேள்விதான், ஆனால் கிண்டிலில் ஒரு புத்தகம் படித்துவிட்டு ஆம்னிபஸ் பதிவு எழுத முயற்சித்துப் பாருங்கள், அப்போதுதான் நான் சொல்லும் கஷ்டம் புரியும். எண்ணற்ற புத்தகங்கள் காத்திருக்கின்றன, ஆனால் எதுவும் ஒரு பதிவு தேற்றப் பயன்படாது என்பதை உணரும்போது நானே தேவலை, நீங்கள் இதைவிட மோசமாகப் பேசுவீர்கள். ​

 
நட்பாஸ் அவர்களின் வலைதள முகவரி : http://livelyplanet.wordpress.com

நினைவூட்டி

SONY DSC

ஞாபகார்த்த இலை
காணாமல் போனது
மரத்திலிருந்து விடுபட்ட
இலையிடமிருந்து நீ பாடம் கற்கவில்லை
புத்தகப்பக்கங்களுக்கு நடுவில்
சிறைப்படுத்தி வைத்திருந்தாய்
புத்தகயாவின்
புனித மரத்தின் இலையது
என்பதை மறந்து போனாயா?

குளம் கோவில் புத்தகம்

golden temple 1
கருணையுள்ளம் பருத்தியாகி
திருப்திகுணம் நூலாகி
தன்னடக்கம் முடிச்சாகி
வாய்மை முறுக்காகி
அமைந்த பூணுலொன்று
உங்களிடம் இருந்தால்
அதை எனக்கு அணிவியுங்கள்
அது அறுந்து போகாது ;
அது அழுக்காகாது ;
எரிந்து போகாது ;
தொலைந்தும் போகாது ;
நானக் சொல்கிறான்
அத்தகைய பூணூலை அணிந்தோரே
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
-குரு நானக்

ஒரு குளம். புனிதக் குளம். ராமதாஸ்பூரில் இருந்த குளம் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. இன்று அக்குளத்தின் பெயரே அவ்வூருக்கும் பெயராக இருக்கிறது.ஆம்.அமிர்தம் நிரம்பிய குளம் என்று அர்த்தம் பெறும் அமிர்த சரஸ் என்கிற அம்ரித்சர் தான் அந்தக் குளத்தின் பெயர். நகரின் பெயரும் அதுவே!

”எப்போது பார்த்தாலும் நேற்று கட்டியது போன்ற தோற்றத்தைத் தரும் கோயிலது” என்று பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பஞ்சாபி நண்பர் என்னிடம் சொன்னது கோயிலுக்குள் நுழைந்ததும் ஞாபகம் வந்தது. மேற்கு வாசலில் இருந்து உள் நுழைந்தேன். மக்களே சேவகர்களாக பணியாற்றி யாத்திரிகர்களின் செருப்பை வாங்கி வைப்பதைப் பார்க்கையில் பணிவு பேசுவதில் இல்லை ; சேவை செய்வதில் இருக்கிறது என்கிற சிந்தனை நம்முள் ஊடுருவுகிறது. கைகளை கழுவி நீர்ப்பாதையில் கால்களைப் பதித்து சுத்தம் செய்து விலாசமான கோயில் வளாகத்தினுள் நுழைந்தால் பிரம்மாண்டமான குளம், அதற்கு நடுவில் தங்கத் தகடுகள் மேவிய ஹர்மந்திர் சாஹிப், குளத்தைச் சுற்றி நடையிடும் ஆயிரக் கணக்கிலான பக்தர்கள், காற்றில் அலைந்து நம் காதுகளை நிரப்பும் குர்பானி, – பொற்கோயிலின் சூழல் நம் மனதை இலேசாக்கி நெகிழ்வு நிலையை நோக்கி செல்ல வைக்கிறது.

golden temple 2

கூட்டம் அலை மோதும் கோவில்கள் என்னுள் ஒரு பதற்றத்தையே ஏற்படுத்தும். எப்போது இக்கூட்டத்தில் இருந்து வெளிவரப்போகிறோம் என்ற எண்ணத்திலேயே கடவுள் தரிசனத்தின் போது மனம் அலை பாய்ந்தவாறு இருக்கும். நம் மீது வந்து மோதும் பக்தர்களின் மீது வெறுப்பும் கோபமும் எழும்.

அகால் தக்த்துக்கு எதிரில் துவங்கும் பக்தர் வரிசையில் நின்று மெதுவாக ஹர்மந்திர் சாஹிப்பை நோக்கி நகர்கையில் ஒரு வித அமைதி நம்மை ஆட்கொள்கிறது. குர்பானி-கீதம் நம்முள் சாந்தவுணர்வை விதைத்து, கூட்டத்தின் மேல் வெறுப்பு தோன்றாமல் செய்கிறது. ஹர்மந்திர் சாஹிப்பில் நுழைந்த பிற்பாடும் யாரும் முட்டி மோதி நம்மை தள்ளுவதில்லை. புனித கிரந்தத்தை விசிறியால் விசிறி பக்தி பண்ணுகிறார்கள் கிரந்திகள். கிரந்தி என்றால் கவனித்துக் கொள்பவர் என்று பொருள். சீக்கிய சமயத்தில் பூசாரிகள் இல்லை.

ஹர்மந்திர் சாஹிப்பின் இரண்டாம் மட்டத்திலும் மூன்றாம் மட்டத்திலும் பக்தர்கள் அமைதியாக குர்பானியை கேட்டுக் கொண்டோ அல்லது குரு கிரந்த் சாஹிப்பின் சில பகுதிகளை வாசித்துக் கொண்டோ அமர்ந்திருக்கிறார்கள்.

ஹர்மந்திர் சாஹிப்புக்கு வெளியே பிரசாதம் தரப்படுகிறது. பிரசாதத்தின் இனிப்பு அனுபவத்தின் இனிப்புடன் ஒன்று சேர்கிறது.

Akaal Takht Akaal Takht

ஹர்மந்திர் சாஹிப்புக்கு நேர் எதிராக வரலாற்று முக்கியத்துவமிக்க அகால் தக்த் இருக்கிறது. அங்கும் பக்தர்கள் குரு கிரந்த் சாஹிப்பை வாசித்தவாறு உட்கார்ந்திருக்கிறார்கள். அகால் தக்த் என்றால் காலமிலா அரியணை என்று பொருள். அகால் தக்த் சீக்கிய மதத்தின் மிக உயர்ந்த சமய அதிகார பீடம். சீக்கிய மதத்தின் பத்தாவது குரு – குரு கோபிந்த் சிங் – அகால் தக்தை தோற்றுவித்தார். குரு கோபிந்த் சிங்குடன் பத்து குருக்களின் வரிசை முற்றுப் பெறுகிறது. இதற்குப் பின் சீக்கிய மதத்தை வழி நடத்துபவையாக – குரு கிரந்த் சாஹிப்பும், அகால் தக்த்தும், சீக்கிய புண்யத்தலங்களும் – இருக்கின்றன.

1984-இல் ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைந்த போது நடைபெற்ற அழிவில் அகால் தக்த்துக்கு வெளியே இருந்த சீக்கியர்களின் புனித கிணறும் ஒன்று. அகால் தக்த் திரும்ப கட்டப்பட்டபோது அக்கிணறை காக்கும் முகமாக அகால் தக்த்துக்குள்ளேயே கிணறு இணைக்கப்பட்டு மாற்றி கட்டப்பட்டது. ஒரு கிரந்தியிடம் அக்கிணறு எங்கிருக்கிறது என்று விசாரித்தேன். அகால் தக்த்தின் அடித்தளத்தில் ஒரு சுரங்கம் மாதிரியான படிகளில் இறங்கி அக்கிணறை தரிசித்தேன். கிணற்றில் ஏதோ வேலை நடந்து கொண்டிருந்தது.

பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டுகளில் முகலாயர்களின் அதிகாரத்துக்கெதிரான அரசியல் அரணாக அகால் தக்த் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. அதன் விளைவாக பல தாக்குதல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது. அவற்றுள் முக்கியமானவையாகக் கருதப்படுபது ஆப்கானிய மன்னன் அஹ்மத் ஷா அப்தாலியின் தாக்குதல். கோவிலின் தூய்மைக்கு பங்கம் விளைவிக்க நூற்றுக் கணக்கான பசுக்களை வதை செய்தானாம் அப்தாலி. 18ம் நூற்றாண்டில் ஆப்கானிய மன்னனின் தூண்டுதலில் பொற்கோயிலுக்குள் குடியாட்டம் போட்டு கோவிலை அசுத்தப்படுத்திய மஸ்ஸார் ரங்கார் என்ற அதிகாரியையும் கோவிலுக்கு பங்கமேற்படுத்தியவர்களில் ஒருவனாகச் சொல்வார்கள். 1984இல் நிகழ்ந்த ஆபரேஷன் ப்ளூஸ்டாரின் போது அகால் தக்த் பீரங்கிகளால் சுடப்பட்டு சின்னாபின்னப் படுத்தப்பட்டது. இந்நிகழ்வு சீக்கியர்களின் மனதில் ஆறா காயத்தை ஏற்படுத்தியிருப்பதை அகால் தக்த்துக்கு வெளியேயிருந்த கல்வெட்டை வாசிக்கும் போது நன்கு உணர முடிந்தது.

குளத்திற்கருகே பல நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். புஷ்டியான ஆரஞ்சு நிற மீன்கள் கரைக்கருகே வாய்களை திறந்தவாறு நீந்திக்கொண்டிருந்தன. அக்குளத்தின் நீரைக் கைகளில் பிடித்து சிறிது அருந்தி, தலையில் தெளித்துக் கொண்டேன். நிஷான் சாஹிப் வாசலுக்கருகே விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் சிறிது நேரம் இளைப்பாறினேன்.

சீக்கிய நூலகம் எங்கிருக்கிறது என்று யாத்திரிகர் ஒருவரிடம் கேட்டேன். ”இன்று ஞாயிற்றுக் கிழமை ; நூலகம் திறந்திருக்காது” என்று சொன்னார். நுழைவு வாயிலுக்கு மேல் சீக்கிய மியுசியம் இருந்தது. சீக்கியர்களின் வரலாற்றை ஓவியங்கள் வாயிலாக சித்தரித்திருந்தார்கள். பல அரிய தகவல்கள் அறியக் கிடைத்தன.

செருப்பணிவதற்காக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்த போது பக்கத்தில் உட்கார்ந்திருந்த சீக்கியர் ஒருவர் “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். அவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். மஹாராஷ்டிராவில் உள்ள நந்தேத் நகரிலிருந்து வந்திருக்கிறார். (நந்தேத் குரு கோபிந்த் சிங் அமரரான தலம் ; புகழ்பெற்ற ஸ்ரீ அஸூர் சாஹிபு குருத்வாரா அங்கு இருக்கிறது.) என்னைப் போலவே அவருக்கும் அம்ரித்சர் வருவது இது தான் முதல்முறை, சீக்கியராக இருந்தாலும் இதற்கு முன் ஹர்மந்திர் சாஹிப் வர சந்தர்ப்பம் அமையவில்லையாம். ’எனக்கும் தான்’ என்றேன். தன் டர்பனைக் காட்டி ”இதை அணிந்தவன் இவ்வளவு காலம் கழித்து வருவது சரியில்லை தானே!” என்று சொல்லி முறுவலித்தார். “நீங்கள் டர்பன் அணிந்திருக்கிறீர்கள் ‘ நான் அணிந்திருக்கவில்லை..அது ஒன்றைத் தவிர வேறு என்ன வித்தியாசம்” என்றேன். அவர் ’மிக சரியாகச் சொன்னீர்கள்’ என்று சொல்லி கையில் வைத்திருந்த சிறு புத்தகத்தை திறந்து குரு கோபிந்த் சிங்கின் ஷபத் ஒன்றை வாசித்துக் காட்டினார். இனிமையான பஞ்சாபி மொழியின் சத்தம் நெஞ்சை நிறைத்தது. அவரிடமிருந்து அந்த ஷபத்தின் அர்த்தத்தை சுருக்கமாக விளங்கிக் கொண்டேன். பின்னர் இணையத்தில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை விகிபீடியாவில் வாசித்தேன்.

“வெவ்வேறு தோற்றங்கொண்டவரானாலும் அனைத்து மனிதரும் ஒருவரே.
வெளிச்சமானவர்களும், இருண்டவர்களும் ; அழகானவர்களும் அழகற்றவர்களும்,
வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்ததனாலேயே
இந்துக்களாகவும் முஸ்லீம்களாகவும் வளர்ந்திருக்கிறார்கள்.
எல்லா மனிதர்களுக்கும் அதே கண்கள், அதே காதுகள் ;
பூமி, காற்று, தீ, நீர் – இவற்றால சமைக்கப்பட்டதே நம் உடல்கள்.
அல்லாவும் பகவானும் ஒரே கடவுளின் நாமங்கள்
புராணங்களிலும் குரானிலும் இதுவே சொல்லப்பட்டிருக்கிறது
எல்லா மனிதர்களும் ஒரே கடவுளின் பிரதிபலிப்புகளே
முழு மனித இனமும் ஒன்றே என்று உணர்”

golden temple4

நம்பிக்கையின் நாளைகள் – அ.முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில் வண்டி

தமிழ்புனைவுகளின் நாயகர்கள் தமிழநாட்டில் இருப்பதாகத்தான் வர வேண்டும் என்று சில காலம் முன்னர் ஒரு மரபே ஏற்பட்டிருந்தது. எண்பதுகளில் ஒரு வாரப்பத்திரிக்கையில் சிவசங்கரி எழுதிய “47 நாட்கள்” என்ற தொடர்கதையை வாசித்திருக்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு மாப்பிள்ளையை மணமுடிக்கிறாள் கதையின் நாயகி. உண்மையில் அயல்நாட்டு மாப்பிள்ளை அவ்வளவு நல்லவன் இல்லை. அவன் நாயகியை கொடுமைப்படுத்துகிறான். இக்கதை பிறகு திரைப்படமாகவும் வந்தது.

இன்னொருவிதமான அயல் நாட்டுக் கதைகள் வருவதுண்டு. வறுமையில் வாடும் தமிழ்க்குடும்பத்தில் ஒருவர் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து மலேசியாவிலோ அமெரிக்காவிலோ செட்டில் ஆகிவிடுவார்; குடும்பத்தின் வறுமையை வெளிநாட்டு பணம் அனுப்பி போக்குவார். ஆனால் சொந்த வாழ்க்கையில் அவர் தனிமையை அனுபவிப்பார். அவருக்கு அங்கு விவாகரத்து நிகழும் அல்லது அவள் காதலித்த வெள்ளைக்காரப் பெண்ணை இந்தியாவில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினர் ஏற்காமல் போவார்கள். அயல்நாட்டில் நடப்பதாகச் சித்தரிக்கப்படும் கதைகளில் ஒரு பலமான இந்திய இணைப்பு இருக்கும்.

அறுபதுகளில் எழுதப்பட்ட “புயலில் ஒரு தோணி”யை நான் சமீபத்தில்தான் வாசித்தேன் என்பதை இங்கு பதிவு செய்தாக வேண்டும்.

அயல்நாட்டுப் பின்புலத்தில் முழுக்க முழுக்க அயல் நாட்டுப் பாத்திரங்கள் ஏன் தமிழ்க்கதைகளில் உலவக் கூடாது?

amuttulingam_newa

இனப்பிரச்னையின் காரணமாக உலகெங்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் அத்தகைய கதைகள் தொண்ணூறுகளில் எழுதப்பட காரணமாயினர். அனுபவங்களின் சேகரத்துக்குப் பிறகே அது இலக்கியம் ஆகிறது . இலங்கைத் தமிழர்களின் கூட்டு அனுபவம் தமிழ் இலக்கியத்திற்கு சமகாலப் போர் அவலங்கள், புலம் பெயர் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள், அனுசரிப்புகளையும் பற்றிய புது முன்னோக்கிலான படைப்புகள் வந்தடையக் காரணமானது. உலகமயமாக்கலும் சர்வதேச கண்ணோட்டத்தில் கதைகள் புனையப்பட இன்னொரு காரணம்.
அ.முத்துலிங்கத்தின் – மகாராஜாவின் ரயில் வண்டி– அருமையான சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் தனிப்பட்ட அழகு கொண்டவை.. சில முக்கியமான சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. மகாராஜாவின் ரயில் வண்டி, தொடக்கம், ஆயுள், விருந்தாளி, கடன், பூர்வீகம், ஐந்தாவது கதிரை ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இத்தொகுதியில் உள்ள “நாளை” என்ற சிறுகதை பெயர் சொல்லப்படாத தேசமொன்றில் நிகழும் போரில் பாதிக்கப்பட்ட இரு சகோதரர்கள் பற்றிய சிறுகதை. பாத்திரங்களுக்கு பெயர்கள் தரப்படவில்லை.
பெரியவர்கள் பாதிக்கப்படும் அனைத்து வகைகளிலும் யுத்தங்கள் சிறுவர்களையும் பாதிக்கின்றன என்றாலும் சிறுவர்கள் வேறுபட்ட வழிகளில் யுத்தங்களினால் அவதியுறுகின்றனர். பராமரிப்பு, புரிதல் மற்றும் அன்பு இவைகளுக்காக சிறுவர்கள் பெரியவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். பெற்றோரின் மரணம் காரணமாகவோ, குடும்பத்தின் ஜீவனத் தேடுதலில் பெற்றோர் தீவிரமாக ஈடுபடும் காரணமாகவோ, மன அழுத்தத்துக்காளான பெற்றோரின் உணர்வு ரீதியான கவனமிழப்பின் காரணமாகவோ பெற்றோர்-சிறுவர்களுக்கிடையான இணைப்பு போர்க்காலங்களில் அறுபடுகிறது.

பெற்றோரைத் தொலைத்த சிறுவர்கள் தெரிந்த ஒருவரின் அரவணைப்பில் இருக்கலாம் ; அல்லது உறவினர் யாருடனோ இருக்கலாம் ; அல்லது அனாதை விடுதிகளில் இருக்கலாம். குறிப்பிடத்தக்க விகிதத்தில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரியவர்களின் பாதுகாப்பை இழந்துவிடுகின்றனர். புகலிடச் சூழலில் இவர்கள் “துணையற்ற குழந்தைகள்” (unaccompanied children) என்று அழைக்கப்படுகின்றனர்.

பெரியவனும் சின்னவனும் துணையற்ற குழந்தைகள். ஆனால் அவர்கள் அகதிகள் முகாமில் தங்கியிருக்கவில்லை. இம்முகாம்களிலிருந்து பல மைல்கள் தாண்டி ஒரு கராஜில் வசிக்கின்றனர். பெரியவனுக்கு பதினோரு வயது ; சின்னவனுக்கு ஆறு வயது. தினமும் பல மைல்கள் நடந்து வேறு வேறு முகாம்களுக்கு சென்று உணவு சேகரிக்கிறார்கள்.

ஒரு முகாமில் உணவு வண்டியின் வருகைக்காக காத்திருக்கின்றனர். சனங்கள் ஒழுங்கின்றி நின்று வரிசையை குலைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பெரியவனின் தலையில் சின்னவனின் பொறுப்பு. ஒழுங்கற்ற வரிசையில் சின்னவனை நிற்க விடவில்லை. சின்னவன் எங்கே தொலைந்து போய் விடுவானோ என்ற பயம் பெரியவனுக்கு.

“அந்த தொக்கையான மனுஷி நாலு பிள்ளையையும் இழுத்துக்கொண்டு முன்னேறினாள். அவள் கைகளில் பெரிய பாத்திரங்கள் இருந்தன. அவள் எல்லாவற்றையும் முன் கூட்டியே போதிய ஏற்பாடுகளுடன் வந்திருந்தாள்”

உணவு சேகரிப்பதற்காக ஒழுங்கற்று திரண்டு நின்றிருந்த சனத்திரளை அதிகாரம் செய்து பழக்கப்பட்ட முகத்துடன் தடித்த உருவங்கொண்ட பெல்ட், தொப்பி, ஓவர்கோட் அணிந்த ஒரு மனிதன் தன் குரலின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். சிறிது நேரம்தான். திரும்பவும் சனவெள்ளம் பெரியவனைத் தள்ள, சின்னவனின் கைப்பிடி தளர, அவன் தள்ளிக் கொண்டு போகப்படுகிறான். சின்னவனை ஓர் அதிகாரி அழைத்து ஒரு கூடாரம் முன்னர் நிறுத்தி வைக்கிறார். அரை மணி நேரம் சின்னவன் அங்கு காத்திருக்கிறான். அந்த அதிகாரி அண்ணனை தம்பியிடம் சேர்த்து வைக்கிறார்.

இதற்குள் பல புது வரிசைகள் தோன்றியிருக்கின்றன. எல்லோரும் பெரியவர்களாக நின்றிருக்கிறார்கள். சின்னவனை வரிசையில் நிறுத்தாமல் வேலி ஓரத்தில் நிற்க வைத்து. பெரியவன் தன் பார்வையால் சின்னவனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறான்.

பெரியவனின் கையில் ஒரு நெளிந்த டின் மட்டுமே. அவனிடம் பாத்திரங்கள் இருந்திருந்தால் அவனுக்கு கொஞ்சம் அதிகமாக சூப் கிடைத்திருக்கும். ஒரு மீசைக்காரன் பெரியவன் கையில் இருந்த அடையாள அட்டையைப் பரிசோதித்து, “இது இங்கே செல்லாதே!” என்று சொல்கிறான்.“இனிமேல் வராதே” என்று அறிவுறுத்தப்படுகிறான். இருந்தாலும் அவனுக்கு ரொட்டியும் சூப்பும் வழங்கப்படுகின்றன.

சூப் ஊற்றுபவரிடம் “ஆழத்தில் இருந்து கலக்கி ஊற்று” என்று கேட்டுக் கொள்கிறான். சின்னவனுக்கு இன்று சூப்பில் இறைச்சித் துண்டு கிடைக்கும் என்று நம்பிக்கை கொடுத்திருந்தான் பெரியவன். ரொட்டி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது; ஒரு பங்கை பெரியவன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறான். மீதி இரு பகுதிகளை இருவரும் உண்கிறார்கள். சூப்பில் அன்றும் இறைச்சித் துண்டு கிடைக்கவில்லை.
முகாமில் இருந்து திரும்புகையில் நெடுஞ்சாலையெங்கும் ராணுவ வீரர்கள் காணப்படுகிறார்கள். சிகரெட் புகைத்தபடி நின்றிருந்த ஒரு வீரனை பெரியவன் அணுகுகிறான். ராணுவ வீரன் ஒரு சிகரெட்டை எடுத்து வீசுகிறான். பெரியவன் சிகரெட்டை பற்ற வைத்து புகைக்கிறான். சின்னவனுக்கும் புகைக்க ஆசை. பதினோரு வயதுப் பெரியவன் “நீயும் என்னைப் போல பெரியவன் ஆனதும் பிடிக்கலாம். இப்ப நல்ல பிள்ளையாம்” என்று அறிவுரை சொல்லுமிடம் நம் மனதை இலேசாக்குகிறது. சிறு புன்னகையை நம்முள் தோற்றுவிக்கிறது.
அவர்கள் கராஜை எட்டும்போது ஒரு நாய் வந்து அவர்கள் அருகில் நிற்கிறது. அக்காட்சி போர், பசி, துயர், அவலம் நிறைந்த காட்சிகளுக்கு நடுவே மனித கருணையின் சாத்தியப்பாட்டின் படிமமாக விரிகிறது.
”சின்னவன் கையை நீட்டி ‘அதோ, அதோ’ என்று காட்டினான். அந்த நாய் மறுபடி வந்து நின்றது. மெலிந்து எலும்பும் தோலுமாய் இருந்தது. அதுவும் அகதி நாய்தான். பதிவு கார்ட் இல்லாத நாய். நிலத்தை முகர்ந்து பார்த்தபடி தயங்கி தயங்கி வந்தது.

‘அண்ணா, அந்த நாய்க்கு ஒரு பேர் வைப்போமா?” என்றான் சின்னவன்.‘வேண்டாம், பேர் வைத்தால் அதுவும் எங்கள் குடும்பம் ஆகிவிடும்’ பையில் இருந்த ரொட்டியை எடுத்து சரி பாதியாகப் பிய்த்து ஒரு பகுதியை அந்த நாயிடம் கொடுத்தான். அது அந்த ரொட்டியை தூக்கிக்கொண்டு நொண்டி நொண்டி ஓடியது’
கராஜ் பாதுகாப்பாக இருக்கிறது. உள்ளே வாடையும் இருட்டுமாக இருக்கிறது. பழைய கம்பளிகளை விரித்து படுத்துக் கொள்கிறார்கள். காலையில் சின்னவன் அழும்போது அவனுக்குக் கொடுப்பதற்காக, மீதமான ரொட்டியைப் பெரியவன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறான். சின்னவன் தூங்கி விட்டானென பெரியவன் எண்ணிக் கொண்டிருக்கையில் திடீரென ஊர்ந்து வந்து சின்னவன் கட்டிக் கொள்கிறான். சின்னவன் அழுகிறான். “உன்னைவிட்டு ஒரு நாளும் போக மாட்டேன்” என்று பெரியவன் அவனை அணைத்துக் கொள்கிறான். ’துணையற்ற குழந்தைகளான’ இருவரும் வயதில் மிகச் சிறியவர்கள், எனினும் பெரியவனின் முதிர்ச்சி மற்றும் பரிவு இருட்டான கராஜை நம்பிக்கையொளியால் நிறைக்கும் கணம் அது.
நாளை என்பது இன்னொரு நாளாக இருக்கலாம்.. ஆனால் நம்பிக்கை நாளை இன்றைய நாளைகளைத் தாள உதவும் நன்னாட்களை நிறைக்கலாம். பெரியவன் அடுத்த நாள் பத்து மைல் தொலைவிலிருந்த இன்னொரு முகாமுக்கு செல்லத் திட்டமிடுவதோடு கதை நிறைவு பெறுகிறது.

“அங்கே கட்டாயம் இறைச்சி கிடைக்கும். அப்படித்தான் அவன் கேள்விப்பட்டிருந்தான்”

”மகாராஜாவின் ரயில் வண்டி” மனித உணர்வுகளின் பல நிறங்களை வார்த்தைகளால் படம் பிடிக்கும் அரிய சிறுகதைகளின் சிறப்பான தொகுப்பு.

மொழி, இனம் தாண்டிய பொதுவான மனிதப் பிரச்சினைகளை, அழகியலைப் பேசவருகையில் பெயரிலா பாத்திரங்கள் பேசுபொருளின் எல்லையற்ற தன்மையை விவரிக்க மிகவும் உகந்தவை என்று இச்சிறுகதைகளை வாசிக்கையில் எனக்கு தோன்றியது.

“நாளை” சிறுகதை போலவே “தொடக்கம்” சிறுகதையிலும் கதை நிகழும் நாடோ, கதைசொல்லியின் இன அடையாளங்களோ சுட்டப்படுவதில்லை. உலகமயமாகிய வியாபாரச்சூழலில் மும்மாத நிதியறிக்கைகளும், பங்குகளின் விலை வரைபடங்களும் மட்டுமே முக்கியமானவையாகப் போன காலத்தில், காலக்கெடுக்களை சந்திப்பதற்கான ஓட்டங்கள் மட்டுமே சாசுவதம் என்றாகி விட்டபிறகு, உலக மையமே அலுவலகமும் அதில் இருப்பவர்களும் என்று ஆகிவிடுகிறது. உலகத்தை நோக்குவது அலுவலக அறையின் ஜன்னலின் பரப்பளவைச் சார்ந்ததாகவும் ஆகிவிடுகிறது, வெறுமை மிஞ்சி தீரா வேலைப்பளு தரும் அழுத்தத்தில் சலித்துப்போய் கதைசொல்லி திறந்திருந்த அலுவலக ஜன்னலின் வழி நுழைந்து இறந்துபோன பறவையின் சொந்த ஊர், அது எந்தெந்த தேசங்களின் மேல் பறந்தது என்பன போன்ற விவரங்களை இணையத்தில் (”வையவிரிவலை” – ஆசிரியரின் மிக அழகான சொற்பிரயோகம்!) சேகரிக்கிறான். போர்டு ரூமில் முதலாளிகள் அவனுடைய பிரெசெண்டேஷனுக்காக பொறுமையின்றி காத்திருக்கின்றனர். ஆறஅமர பறவை பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டுபோய் போர்ட் மீட்டிங்கில் பறவை பற்றிய சிறு சொற்பொழிவாற்றுகிறான்.

“ஆயுள்” கதையின் தொடக்கத்தில் “இது காதல் கதையல்ல” என்ற குறிப்பு வாசிக்கக் கிடைக்கிறது. கதையின் கடைசி பத்தி வரை ஒரு காதல் கதை போல நகரும் கதை. இலக்கிலாமல் சதா பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாடோடி வரலாற்றுக்கு முந்திய காலம் அவன் கையிலிருக்கும் பிளாஸ்டிக் குடுவை எல்லாருடைய கவனத்தையும் கவர்கிறது – ஹொன்ஸா கூல் என்கிற ஆதிவாசிப் பெண்ணைத் தவிர.
நாடோடிக்கு அவள்மேல் ஈர்ப்பு. வழக்கத்திற்கு மாறாக அப்பெண்ணின் கிராமத்திலேயே தங்கிவிடுகிறான். இயற்கை சார்ந்த கிராமவாசிகளின் வாழ்க்கை அவனுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. “என்னை மண்ந்து கொள்வாயா?” என்று அவன் கேட்கும்போது ஹொன்ஸாகூல் அவனை விரட்டிவிடுகிறாள் .நாடோடி அசரவில்லை. ஹோன்சாகூலை திருமணம் செய்துகொள்ளும் ஆசையை தெரிவிக்கிறான். அவருக்கு ,சம்மதம்தான். ஆனால் கிராம மரபுப்படி ஹோன்சாகூலின் சம்மதத்தைப் பெற்றால்தான் திருமணம் சாத்தியம்.

மழைக்காலம் துவங்கும் அறிகுறி தோன்றவும், அங்கிருந்து கிளம்ப முடிவெடுக்கிறான், போகுமுன்னர் ஹோன்ஸாகூலை மீண்டுமொரு முறை சந்தித்து அவளிடம் பிளாஸ்டிக் குடுவையை நீட்டுகிறான். ஹொன்சாகூல் அவன் தந்த குடுவையின் நேர்த்தியில் மனதைப் பறிகொடுக்கிறாள். “குடுவையை என் ஞாபகமாக வைத்துக் கொள். நான் திரும்பி வந்து உன்னை திருமணம் செய்து கொள்வேன்” என்று நாடோடி சொல்கிறான்.
இரு வருடங்கள் காத்திருந்தும் நாடோடி திரும்பி வரவில்லை. அவள் கிராமவாசியொருவனை மணக்கிறாள். சீக்கிரமே மணத்தை முறித்துக் கொண்டு விடுகிறாள். அவள் மணமுடித்த கணவன், அவளுடைய தந்தை – ஒவ்வொருவராக இறந்துவிடுகிறார்கள். குடுவை அவளுடைய குடிசையிலேயே கிடக்கிறது. ஒரு நாள் அவளும் இறந்து போனாள். பல வருடங்கள் கடக்கின்றன. குடிசையும் சிதிலமாகி மண்ணோடு மண்ணாகி விடுகிறது. சடலங்களும் மண்ணோடு மண்ணாகின. அந்த குடுவையும் மண்ணில் புதைந்து விடுகிறது. ஆனால் சாகவில்லை. அதன் ஆயுள் நானூறு ஆண்டுகள். நூறு வருடம்தான் கழிந்திருக்கிறது. அது அழிந்துபோக இன்னும் முன்னூறு ஆண்டுகள் இருந்தன. “ஆயுள்” நிச்சயமாக காதல் கதை இல்லை!

மார்பகப் புற்றுநோயின் காரணமாக மார்பகம் நீக்கப்பட்ட பெண்களின் மனவலியை நுணுக்கமாகச் சொல்லும் அழகிய சிறுகதை – பூர்வீகம். யுக்ரேய்ன் நாட்டின் தலைநகரான கீவ் நகரில் வசிக்கும் அனா என்கிற அன்னலட்சுமி சேரகோவ் ”பூர்வீகம் தேடுவதை இனி விட்டுவிட வேண்டும். இன்னும் நூறு வருடங்களில் எல்லோரும் ஒரே இனம்தான்” என்று சொல்லிக்கொண்டே வைன் குடிப்பாள். அவள் அதிகம் குடித்து நிதானமிழக்கவும், கதைசொல்லியும் மற்றவர்களும் அவளை அழைத்துக்கொண்டு அவளுடைய ஓட்டல் அறையில் விடுவார்கள். அப்போது கண்ணகி போன்று தன்னிரு மார்பையும் கழட்டி அவர்கள் மீது அனா வீசுவாள். பஞ்சு போன்ற அவளின் மார்பகங்களின் ரகசியம் கதைசொல்லிக்கு ஆறு மாதம் கழித்து அனாவின் மரணச்செய்தியைப் படிக்கும்போதுதான் தெரிய வருகிறது.

தம்பதிகளுக்கிடையே ஏற்படும் சுவையான பாலியல் அரசியலை அழகுறச் சொல்லும் ”ஐந்தாவது கதிரை”

வெளிப்பூச்சில் அதி நவீனமாக வளைய வரும் குடும்ப அங்கத்தினர்களின் உண்மையான வண்டவாளம் இரவில் தெரிய வரும் “மகாராஜாவின் ரயில் வண்டி” சிறுகதையின் கதைசொல்லி எல்லாவற்றையும் பார்த்து துல்லியமாகப் பகிர்ந்து கொண்டாலும் அந்நிகழ்வுகளை அவன் எவ்வளவு புரிந்து கொண்டான் என்பதை நாம் அறிய மாட்டோம். ரோஸலின் என்கிற பதின்பருவ அழகி வாயைத் திறந்தால் பொய்! தான் படிக்கும் பள்ளியைப் பற்றிக் கூட அளந்து விடும் பகட்டு ! கதை சொல்லிக்கோ அவளின் பெயரை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவாள் என்று கேட்கவில்லையே என்ற ஏக்கம். கதை சொல்லிக்கு பல வருடங்களுக்குப் பிறகு யூகமாகப் புரிந்தாலும், நீள் சதுர பிஸ்கட்டை சாப்பிடும் போதெல்லாம் (ரோஸலின் வாசித்த) கிட்டாரின் மணம் வருவதை இன்னும் தவிர்க்க முடியாமல் இருக்கிறது.

மகாராஜாவின் ரயில் வண்டி சிறுகதைத் தொகுதியை வாங்கி இரண்டு வருடங்களாகிவிட்டன. புதுப்புத்தகங்களை முகர்ந்தால் ஒரு மணம் வரும் ;புத்தகங்களை முகர்ந்து பார்க்கும் பழக்கமுள்ள எனக்கு இரண்டு வருடங்கள் முன்னர் வாங்கிய இப்புத்தகத்தில் இருந்து இன்னும் வாசனை வந்து கொண்டேயிருக்கிறது என்று தோன்றுகிறது. நீங்களும் வாங்கி முகர்ந்து பார்க்கலாம்!

புத்தகம் : மகாராஜாவின் ரயில் வண்டி
ஆசிரியர் : அ.முத்துலிங்கம்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=29293)

தொடர்பு

வெகு காலமாக
புரட்டப்படாத
புத்தகத்தின் பக்கங்களுக்குள்
கிடந்தது இலை
பச்சை மங்கி
வெண்மைப் பட்டுப் போன
ஆனால் வடிவம் குன்றா
அந்த இலையில்
வாசம் தொலைந்திருந்தது
பழைய புத்தகத்தின்
வாசனையை விரும்பி முகர்கையில்
இலையின் வாசமும்
சேர்ந்து வந்தது.
இலை கிடந்த பக்கத்தில்
காணாமல் போயிருந்த
எழுத்துகள் சில
இலையில் பதிந்திருந்தன