அல்-கித்ர்

புனித குர்ஆனில் இவர் பெயர் குறிப்பிடப்படுவதில்லை, ஆனால் நீதியும் நன்னெறியுமிக்க மறை-ஞான குருவாகவும் அல்லாஹ்வின் வேலைக்காரனாகவும் குர்ஆனில் வர்ணிக்கப்படுகிறார் அல்-கித்ர். துயரப்படும் மானிடர்க்கு உதவிக்கரம் நீட்டுபவராகவும் கடல்களின், நீர்நிலைகளின் காப்பாளராகவும் இஸ்லாமிய மரபில் போற்றப்படுகிறார் அல்-கித்ர். மூஸா நபியை அவர் சந்தித்ததை குர்ஆன் நமக்கு தெரிவிக்கிறது. 

மூஸா நபி ஒருமுறை பேருரையாற்றிக் கொண்டிருந்தார். உரை முடிந்ததும், கூட்டத்திலிருந்து யாரோ கேட்டார்கள் – “மூஸா நபியே, உம்மை விட அதிக ஞானமிக்கவன் விஷய அறிவுள்ளவன் இப்பூமியில் யாரேனும் இருக்கிறாரா?”அதற்கு, மூஸா “இல்லை” என்று கூறினார். தமக்கு மட்டுமே தோராத்-தின் அறிவை, பல்வேறு அற்புத சக்திகளை இறைவன் வழங்கியுள்ளதாக அவர் நினைத்தார். அறிந்துகொள்ளத்தக்க அனைத்தையும் அறிந்தவர் யாருமிலர்; இறை தூதர்களுமே கூட அனைத்து அறிவையும் பெற்றவர்களாக இருக்க முடியாது எனும் அறிதலை உடனுக்குடன் மூஸா நபிக்கு இறைவன் வழங்கினான். மற்றவர்களுக்குத் தெரியாததை அறிந்த ஒருவர் எப்போதும் இருக்கிறார். யாருக்கு, எவ்வளவு அறிவு என்பதைத் தீர்மானிப்பது அல்லாஹ் ஒருவனே. “மேலும், எம்மீது பக்திமிக்க ஊழியக்காரனும் உன்னை விட அதிக அறிவாளியுமான ஒரு நீதிமான் இருக்கிறான்.”

“அல்லாஹ்வே, இவரை நான் எங்கே காணலாம்? நான் அவரைச் சந்தித்து அவரிடமிருந்து ஞானம் பெற விரும்புகிறேன். இந்த நபரின் அடையாளத்தை அறியத்தாருங்கள்” என்று இறைவனிடம் மூஸா கேட்டார்.

அப்போது அல்லாஹ் மூஸாவிடம் நீர் நிறைந்த பாத்திரத்தில் உயிருள்ள மீனை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தி, அந்த மீன் மறைந்து போகும் இடத்தில் தேடிச் செல்லும் மனிதன் இருப்பான் என்ற அடையாளத்தைச் சொன்னார். இறைவன் சொன்ன மாதிரி ஒரு பாத்திரத்தில் மீனை எடுத்தும் கொண்டு ஒரு வேலைக்காரனைத் துணைக்கழைத்துக் கொண்டு மூஸா இறைவன் சொன்ன நபரைத் தேடிக்கிளம்பினார். சில நாட்கள் பயணம் செய்த பின்னர் ஓரிடத்தில் தங்கி அங்கே ஓய்வெடுக்க முடிவு செய்தார். பயணக் களைப்பில் மூஸா ஆழ்ந்து தூங்கிவிட்டார். நெடுநேரத் தூக்கத்திலிருந்து விழித்த போது பாத்திரத்தில் இருந்த மீன் கடலில் விழுந்து மறைந்தொளிந்துவிட்டதாக வேலைக்காரன் மூஸாவிடம் தெரிவித்தான். 

பதினேழாம் நூற்றாண்டு முகலாயர் ஓவியம் – அல் கித்ர்

இனி நடந்ததை குர்ஆன் விவரிக்கிறது.

“இன்னும் மூஸா தன் பணியாளிடம், “ இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக்கணக்கில் நடந்து கொண்டே இருப்பேன்” என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக. அவர்கள் இருவரும் அவ்விரண்டு கடல்களுக்கும் இடையே, ஒன்று சேரும் இடத்தை அடைந்தபோது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்துவிட்டனர். அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக் கொண்டு (நீந்திப் போய்) விட்டது. அவ்விருவரும் அப்புறம் அந்த இடத்தைக் கடந்தபோது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நாம் களைப்பைச் சந்திக்கிறோம் என்று (மூஸா) கூறினார். அதற்கு “அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்.” மேலும் அதை (உங்களிடம்) சொல்வதை சைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை. மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!” என்று பணியாள் கூறினான். (அப்போது) மூஸா, “நாம் தேடி வந்த (இடம்) அதுதான்” என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள். (இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள். நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து ஞானத்தையும் கற்றுத் தந்திருந்தோம்” (18-60,61,62,63,64,65)

“உங்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்கு கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின்தொடரட்டுமா” என்று அவரிடம் மூஸா கேட்டார். 

(அதற்கவர்) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாமாட்டீர்” என்று கூறினார். “(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்?” (என்று கேட்டார்.) 

(அதற்கு) மூஸா,”இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என்று சொன்னார். 

(அதற்கு அவர்) “நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் – நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும்வரை – நீர் என்னிடம் கேட்கக் கூடாது” என்று சொன்னார்.

பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர். (மரக்கலம் கடலில் செல்லலானதும்) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஒட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) காரியத்தை செய்துவிட்டீர்கள்” என்று மூஸா கூறினார்.

(அதற்கு அவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைபிடிக்க முடியாது என்று நான் உமக்கு சொல்லவில்லையா?” என்றார்.

“நான் மறந்துவிட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) சொல்ல வேண்டாம்; இன்னும் என் காரியத்தை சிரமமுள்ளதாக ஆக்கிவிடாதீர்கள்” என்று (மூஸா) கூறினார்.

பின்னர் இருவரும் (மரக்கலத்திலிருந்து இறங்கி) வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்தபோது, அவர் அவனைக் கொன்றுவிடுகிறார். (உடனே மூஸா) “கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக ஒரு பெருங்கேடான காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று கூறினார்.

(அதற்கு அவர்) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா?” என்று கூறினார்.

“இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் என்னை உங்களருகில் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று மூஸா கூறினார்.

பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் உணவளிக்க அவர்கள் மறுத்துவிட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; அதை அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) “நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்.

“இதுதான் எனக்கும் உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்கு அறிவித்துவிடுகிறேன்” என்று அவர் கூறினார்.

“அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டுப்) பழுதாக்க  விரும்பினேன்; (ஏனெனில்) (கொடுங்கோலனான) அரசன் ஒருவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்”

“(அடுத்து) அந்தச் சிறுவனுடைய தாய், தந்தையர்கள் உண்மையான விசுவாசிகள்; அந்தச் சிறுவன் பெரியவனாகி அவ்விருவரையும் வழிமாறச் செய்து குபிரிலும் சேர்த்துவிடுவான் என்று நாம் பயந்தோம்.

“மேலும் அவ்விருவருக்கும் பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்து இருக்கக்கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்

“இனி, (நான் நிமிர்த்தி வைத்த) அந்தச் சுவர் அந்த ஊரிலுள்ள அனாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது. அவ்விருவருடைய தந்தை நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த பின் புதையலை வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நிற்பவை; என் விருப்பு. வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அவற்றின் விளக்கம் இதுதான்” என்று கூறினார். 

(18:66-80)

எண்ணற்ற ஆன்மீக செய்திகளைக் கொண்டுள்ள இவ்வற்புதக் கதை அல்லாஹ் தம் சேவகர்களுக்குத் தரும் ஞானம் இருவகையானது என்கிறது. மனித முயற்சியின் காரணமாக பெறப்படுவது ஒரு வகை. அல்லாஹ்வே நேரடியாக கற்றுத் தரும் ஞானம் இன்னொரு வகை. வாழ்வின் முரண்படும் தன்மையையும் இக்கதை நிகழ்த்திக் காட்டுகிறது. வெளிப்படையான இழப்பு உண்மையில் ஆதாயமாக இருக்கக்கூடும். கொடுஞ்செயலாக நோக்கப்படுவது கருணையின் வெளிப்பாடாக இருக்கக்கூடும். தீமைக்கு நன்மை செய்தல் உண்மையில் நீதியேயன்றி பெருந்தன்மையல்ல.

அல்-கித்ர்-ரும் மூஸாவும் சந்தித்துக் கொண்ட இடம் என நம்பப்படும் ஜிப்ரால்டர் ஜலசந்திக்கருகே கட்டப்பட்டுள்ள பள்ளிவாசல்.

போர் மேகம்

இறைவனுடைய சர்வ வல்லமையின், பெருங்கருணையின் குறியீடாக குர்ஆனில் மேகங்கள் பல முறை வருகின்றன. மிகக் குறிப்பிடத்தக்க வசனங்களுள் ஒன்று கீழ் வருவது –

“இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்;மேலும், (நபியே) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்” (25-48)

பூமியில் வாழ்வதற்கு இன்றியமையாத மழையை அல்லாஹ் அனுப்பும் வழிமுறையாக மேகங்கள் இந்த வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. குர்ஆனில் உள்ள பல வசனங்களிலும் அல்லாஹ்வின் சக்தி மற்றும் இயற்கை உலகின் மீதான கட்டுப்பாட்டின் அடையாளமாக மேகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு இன்னொன்று –

“காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்; (இதில் அகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காபிர்களை சூழ்ந்தவனாகவே இருக்கின்றான். அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அது அவர்களுக்கு ஒளி தரும்போதெல்லாம் அவர்கள் (அதன் துணையுடன்) நடக்கிறார்கள். அவர்களை இருள் சூழ்ந்துகொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள். மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப்புலனையும் பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.” (2-19/20)

மெக்கப் படைகளுக்கும் முஸ்லீம் படைகளுக்கும் நடந்த ஆதிப் போர் பத்ர் என்னும் இடத்தில் நடைபெற்ற போர். நபியின் தலைமையில் நடைபெற்ற இப்போரில் முஸ்லீம்கள் பெற்ற வெற்றியானது முஸ்லீம் சமூகத்தை (உம்மா) ஒரு தற்காப்பு நிலைப்பாட்டிலிருந்து ஸ்திரத்தன்மை மற்றும் விரிவாக்கம் என்னும் நிலைக்கு நகர்த்தும் திருப்புமுனையாக அமைந்தது. குர்ஆனில் குறிப்பிடப்படும் ஒரே போராகவும் இது அமைந்தது. .

பொயு 624 மார்ச் மாதத்தில் குரைஷ்கள் ஆள் பலத்துடன் ஆயுத பலத்துடன் தந்திரோபாய அனுகூலமிக்க ஓர் இடத்தில் பத்ர் நீரோடைக்கருகே முகாமிட்டிருந்தனர். நபிகளின் தலைமையில் மெதினாவிலிருந்து வந்த முஸ்லீம் படை மிகச் சிறிதாக இருந்தது. அவர்கள் முகாமிட்டிருந்த நிலம் வழுக்கு மணல் பரவியதாக இருந்தது. நடக்கும்போதோ, ஓடும்போதோ பாதம் வழுக்கிச் செல்வதாக இருந்தது. நீரோடை மிகத் தொலைவிலிருந்தது. குரைஷ்கள் நீராடியும், குடித்துக் கும்மாளமிட்டும் இரவைக் கழித்தனர். முஸ்லீம்களின் மனதில் பதற்றம். எப்படி போரிட்டு வெல்லப் போகிறோம்? என்ற கேள்வி அவர்களை அலைக்கழித்தது. ஆனால், ஆச்சரியப்படும் விதத்தில் முஸ்லீம்களை தூக்கம் தழுவியது. மிக மிக ஆழமான தூக்கம். சிலைகள் போலத் தூக்கம். எத்தனை ஆழமான தூக்கம் என்றால் ஒவ்வொருவருக்கும் தூக்கத்திலேயே இரவு உமிழ்வு. அதிகாலையில் மேகங்கள் இருண்டு மழை பெய்யத் தொடங்கியது. முஸ்லீம்கள் மழையில் நனைந்து தம் உடலைச் சுத்தப்படுத்திக் கொண்டனர். இயற்கையின் இடையீட்டினால் சடங்கு தூய்மை அமையப்பெற்றது மட்டுமல்லாமல் மழை ஈரம் படிந்து மணல் இறுகி பாதம் வழுக்காமல் நிலத்தில் எளிதாக ஓட முடிந்தது. குரைஷ்கள் முந்தைய நாள் முகாமிட்டிருந்த காய்ந்த சமமான களிமண் நிலம் மழைநீர் ஊறி சேறாகிக் கிடந்தது. குரைஷ்களுக்கு போரின் போது எளிதில் இயங்க முடியா வண்ணம் சேறில் விழுந்தெழுந்து ஓட வேண்டியிருந்தது.

இவ்வாறு, வரலாற்று முக்கியத்துவமிக்க பத்ர் போரில் மேகங்களை அனுப்பி முஸ்லீம்களை வெல்ல வைத்தான் இறைவன்.

இதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுவதாவது –

“(நினைவு கூருங்கள்) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களைப் பொதிந்துகொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், சாத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.” (8-11)

ரியோகனும் பஷோவும்

பஷோவும் ரியோகனும்
சந்தித்தபோது
தத்தம் குடிலைப் பற்றிப் பேசிக் கொண்டனர்
பின்னர் தேநீர் சுட வைக்கச்
சுள்ளி பொறுக்க ரியோகன் சென்றபோது
மதியப் பயணத்துக்கு
அணிய வேண்டிய
கருப்பு அங்கியை
பெட்டிக்கடியில் வைத்து
அழுத்திக் கொண்டிருந்தார் பஷோ

“அதே நீ”

கவிதை புத்தகங்களை அதிகம் சேர்ப்பதில்லை. அடிக்கடி படிக்க வைக்கும் அம்சம் இல்லையெனி்ல் எழுதியவை எளிதில் அழுகிப்போகும் உணவாகி விடும். கதைகள் போலில்லாமல் கவிதைகள் அதிர்வைத் தரவில்லையெனில் புத்தக ஷெல்பின் அடித்தட்டில் சென்றுறங்க வேண்டியதுதான். நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான Sri N Srivatsa அவர்கள் தாம் மொழிபெயர்த்த “முகமுகமாய்ப் பூத்த மரங்கள்” நூலைத் தந்தபோது மறுக்க முடியவில்லை. தலைப்பு எனக்கு பிடிக்கவில்லை. இன்னும் வேறு தலைப்பு வைத்திருக்கலாம் என்று நண்பரிடம் சொன்னேன். கவிதைகளை நேற்றிரவு வாசிக்க ஆரம்பித்த போது என்னுடைய தலைப்பின் மீதான “விமர்சனம்” எத்தனை மேலோட்டமானது என்று உணர்ந்தேன்.

இயல்பான வாசிப்புக்காக தமிழ் மூலத்தைத் தான் முதலில் வாசித்தேன். நண்பர் ஶ்ரீவத்சாவுக்கு போன் செய்து அந்தக் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது “ஏனிந்த ஓரவஞ்சனை?” என்றார். “மொழிபெயர்ப்பை அப்புறம் வாசித்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்” என்றேன்.

கவிதை நூல்கள் பற்றி குறிப்பெழுதுதல் எனக்கு மிகச்சிரமம். ஒரு கவிதை ஏன் அப்பீல் செய்கிறது என்பதற்கான தெளிவான புரிதல் எனக்கில்லை. உணவின் சுவையை சொற்களால் விவரிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நேராக உணவின் விள்ளலை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளலே உணவின் சுவையறிய உதவும்.

தொகுப்பில் பல நல்ல கவிதைகள் உள்ளன. உதாரணத்திற்கு நூலில் வரும் முதல் கவிதையை எடுத்துக் கொள்வோம்.

பல வருடங்களுக்குப் பின்னர் சந்திக்கும் Exஐ எப்போது கடைசியாக சந்தித்தோம் என்ற கேள்வி கவிதைசொல்லியின் மனதில் சுழல்கிறது. சந்திப்பின்போது கைத்தொலைபேசி எண் பகிரப்பட்டது என நாம் புரிந்து கொள்கிறோம். Ex-இன் குறுந்தகவல் வருகிறது. பதினான்கு வருடங்கள் என்று Ex-இன் பதில்! கவிதைசொல்லிக்கு மிக்க மகிழ்ச்சி. கைத்தொலைபேசி தரும் ப்ரைவஸி பழைய நெருக்கத்தை மீண்டும் உயிர்ப்பித்த மகிழ்ச்சி கவிதை சொல்லியை “அதே நீ” என்று குதூகலிக்கச் செய்கிறது. பலவித புதிர்ச்சுவையை எழுப்புகிறது இக்கவிதை.

நண்பரின் மொழிபெயர்ப்பு –

After a very long gap,
we met.
Only upon returning home
I calculated
after how many years.
You beat me to it.
As SMS landed
from the shared
mobile number
‘Fourteen long years’.
I have now reached you
as you were.
The same you.

இந்தக் கருவின் prequel ஆக இன்னொரு கவிதை 12ம் பக்கத்தில் வருகிறது.

“Distant laughter
Distant stare
Relationships
which cannot be
boxed in by courts”

தூரத்தை விலக்கி virtual நெருக்கத்தை மீளப்பெற்ற மகிழ்ச்சி நிலைக்கட்டும் என்று வாசகனை எண்ண வைக்கிறது – “அதே நீ”

கோயில் மரம் – ரீ-மிக்ஸ் அல்லது ரீ-டன்

கோயில் மரம்
கோயிலை தனக்குள் அடக்கி வளர்கிறது
பாம்பென வேர்கள் படர்ந்து
இறுகின சந்நிதிகள்
காலி சந்நிதானத்துள்
பிரதிஷ்டை கொள்ள ஓடியது வேர்
மரங்கள் கடவுளாகி மறைந்த பின்னர்
சட்டகத்தில் தொங்கவிட
ஓடும் வேர்களின் பின்னணியில்
ஒரு புகைப்படம்

(பதினைந்தாவது முறையாக திருத்தியது)

மூலப்பதிவு : மரக்கோயில்

உயிர் காக்கும் சீருடை உயிரெடுக்கும்

1971 எனும் ஹிந்தித் திரைப்படம். இரவுணவுக்குப் பிறகு காலை சாய்த்தவாறே தரையில் உட்கார்ந்துகொண்டு யூட்யூபை மேய்ந்தபோது கண்ணில் பட்டது. மனோஜ் பாஜ்பாய் நடித்திருக்கிறார் என்று அறிந்தபோது சில நிமிடங்கள் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். கச்சிதமான திரைக்கதை. மிகைத்தனமில்லாத நடிப்பு. நாடகீய வசனங்கள், மார்தட்டல்கள் – இவை சற்றும் கலக்காத படம்.

1971இன் இந்தியா – பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானிய தளபதி மேஜர் ஜெனரல் நியாசி தனது 93,000 துருப்புக்களுடன் இந்தியாவின் ஈஸ்டர்ன் கமாண்ட் தலைமைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோராவிடம் சரணடைந்தார், இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய இராணுவ சரணடைதல்.. அவர்கள் அனைவரையும் கௌரவமாக தாயகம் அனுப்பி வைத்தது இந்தியா.

யுத்தத்தில் அடைந்த தோல்வியோ அல்லது உலக அரங்கில் சங்கடத்தை ஏற்படுத்திய சரணடைதலோ – எதுவெனத் தெரியவில்லை…போரின் கிழக்கு முன்னணியில் பாகிஸ்தான் சிறைப்பிடித்த இந்திய வீரர்களை பாகிஸ்தான் ஜெனீவா மரபின் படி நடத்தவில்லை. “எங்களிடம் இந்திய ராணுவ வீரர்கள் சிறைப்பட்டிருக்கவில்லை” என்று உலகிற்கு சொல்லிக் கொண்டிருந்தது பாகிஸ்தான். செஞ்சிலுவை போன்ற நிறுவனங்கள் நாட்டுக்கு விஜயம் செய்தும் அவர்களால் பாகிஸ்தானிய சிறைகளில் இந்திய நாட்டு போர்க்கைதிகளையும் கண்ணில் காட்டவில்லை. காணாமல் போன 54 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களைத் தந்து பாகிஸ்தானிய அரசாங்கத்திடம் இந்தியா பல தடவை முறையிட்ட போதும் ஒரு வீரரும் எங்களிடம் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்து வந்தது. ஆனால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய வீரர்கள் கடைசியாக 1988 வரை பாகிஸ்தானில் காணப்பட்டனர். அவர்களுக்கு என்ன ஆனது, அவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கின்றனர் என்று ஒரு தகவலும் இல்லை.

1971 திரைப்படம் பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய ராணுவ வீரர்களின் அவல நிலையைச் சித்திரிக்கிறது. மிக இயல்பான காட்சியமைப்பு. படத்தின் சில காட்சிகள் The Great Escape ஆங்கிலப் படத்தை நினைவு படுத்தினாலும் – நிலப்பரப்பைக் கையாண்டவிதம், கதைச் சம்பவங்கள் நடக்கும் காலக் குறிப்புகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கும் விதம், வீராப்பு வசனங்கள் இல்லாத உரையாடல்கள், தாய்நாட்டுப் பெருமிதத்தை சுட்டாத சமன் குலையாத திரைக்கதை – ஆகியவை ஒர் உயர் ரக போர் படத்தை பார்த்த திருப்தியைத் தந்தன.

சக்லாலா கேம்பிலிருந்து ஆறு இந்திய வீரர்களை தப்பிக்க உதவுவது பாகிஸ்தானிய ராணுவ சீருடை. இந்திய எல்லையை நோக்கி ஓடும் மேஜர் சூரஜ் சிங்கை (மனோஜ் பாஜ்பாய்) பாகிஸ்தானிய ராணுவம் துரத்தி வர, எல்லையைத் தாண்டும் பாகிஸ்தானிய ராணுவ வீரன் என்றெண்ணி இந்தியத் தரப்பு சுட இரு நாடுகளுக்கும் இடையிலிருக்கும் No Man’s Landஇல் விழுந்து இறக்கிறான். எந்தப் பக்கத்தில் நாமிருக்கிறோம் என்பதன் குறியீடு சீருடை. தப்பிப்பதற்கு உதவும் சீருடை எல்லை தாண்ட உதவவில்லை. சீருடை அணியாமல் இருந்தால் எல்லையை அடைந்திருக்க முடியாது. சீருடையைக் களைந்து அம்மணமாக ஓடியிருந்தால் என்ன நடந்திருக்கும்? ஏதோ ஒரு பைத்தியக்காரன் செய்வதறியாமல் உள்ளே நுழைகிறான் என்று இந்தியத் தரப்பு அவனை நோக்கி அனுதாபத்துடன் அணுகியிருக்குமா? தப்பிக்காமல் நெடுநாட்களாக பாகிஸ்தானில் சிக்கியிருக்கும் 1965 போர்க்கைதிகள் பாராக் 6 என்னும் இடத்திற்கும் அடைக்கப்பட்டு சித்தம் பிறழ்ந்து போகிறார்கள் என்று படத்தில் வரும் குறிப்பு எதை உணர்த்துகிறது? சித்தம் பிறழ்ந்து போனவர்கள் அணியும் சீருடை பற்றிக் கவலைப்படுவார்களா? நாடு, குடும்பம் என்பனவும் ஒரு வித பக்க சார்பு தானே? பாராக் 6 அல்லது எல்லையில் இறத்தல் – இரண்டில் எது சிறப்பு?

Masaki Kobayashi இயக்கிய ஆங்கிலத் திரைப்படம் எழுப்பிய அதே வினாக்களை திரும்ப இந்திய மொழியில் எழுப்புகிறது 1971. ஒரு கஜல் பாடகி தப்பிச் செல்லும் இந்திய வீரர்களைக் காட்டிக் கொடுக்காமல் பாகிஸ்தானிய மனித உரிமை கமிஷனுக்குத் தகவல் தரும் காட்சி குறிப்பிடத் தகுந்தது. இரு புற மக்களை இணைக்கும் பாலமாக கலைஞர்கள் இருக்க முடியும் எனில் Fawad Khan-கள் மும்பை வந்து ந்டிப்பது ஏன் தடை செய்யப்பட்டிருக்கிறது? கலைஞர்கள் சீருடை அணிந்திருக்கவில்லை என்பது ஒரு காரணமாய் இருக்குமோ?

படத்தில் ஒரு காட்சி – இந்திய ராணுவ வீரர்கள் சக்லாலா கேம்புக்கு ஒரு லாரியில் அழைத்துச் செல்லப்படுகையில் ராம் குர்ட்டுவிடம் கேட்பான்

“பாகிஸ்தானில் பஞ்சாபிக்கள் இருக்கிறார்களா?”
“இருக்கிறார்கள்”
“பாகிஸ்தானில் சிந்திக்கள் இருக்கிறார்களா?”
“இது என்ன கேள்வி…இருக்கிறார்கள்”
“பாகிஸ்தானில் முஸ்லீம்கள் இருக்கிறார்களா?”
“அடேய்…..இருக்காங்கடா”
“இவங்கல்லாம் இந்தியாவிலயும் இருக்காங்க…அப்புறம் எதுக்கு பாகிஸ்தான்?”
“ அடேய்…..தெரியாம தப்பு நடந்துருச்சு”

இதுவும் கடந்து போகும்

ஏறத்தாழ இருபத்தியைந்து வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறேன். ஓர் இடத்திலும் அங்கேயே தங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. ஏக்கத்துடன் அந்த நிலப்பரப்புகளை நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் கஷ்மீர் ஒரு வித நினைவேக்கத்தை ஏற்படுத்துகிறது. அது ஏன் என புரிந்துகொள்ள முயல்கிறேன். அதன் பழங்கால வரலாறு, தொன்மம், இலக்கியம் என்று அனைத்தையும் தாகத்துடன் படிக்கிறேன். ஒரு சுற்றுலா பிரதேசம் இத்தகைய அதிர்வை தருமா? பழைய தோழி தெருவில் நடந்து செல்ல திண்ணையிலிருந்து ஏக்கத்துடன் அவள் பார்வையில் படாமல் நோக்குவது போல் கஷ்மீர் பற்றி படித்த வண்ணமிருக்கிறேன். கல்ஹணரின் ராஜதரங்கிணி – முன்-நவீன இந்தியாவின் ஒரே வரலாற்று நூல் – மொழிபெயர்ப்பு நூலின் இரண்டு பெரும்பாகங்களை வாங்கி புத்தக அலமாரியை நிரப்புகிறேன். பிரிவினைவாதிகளை ஆதரிக்கிறாரோ எனும் சந்தேகத்தில் பல வருடங்களாக வாசிக்காமல் வைத்திருந்த பஷாரத் பீரின் நூலை (curfewed night) ஒரே நாளில் வாசித்து முடிக்கிறேன். நான் வாசிக்கவிருக்கும் அடுத்த சல்மான் ருஷ்டியின் நாவலாக Shalimar the clown-ஐ தேர்ந்தெடுக்கிறேன். யூ-ட்யூபில் கஷ்மீரி கிரிக்கெட் வீரர் உம்ரன் மலிக்-கின் தந்தையாருடைய பேட்டியை பார்க்கிறேன். பெய்ஜிங் குளிர் கால ஒலிம்பிக்கில் alpine skiing 🎿 விளையாட்டில் இந்தியாவிற்காக பங்கு பெற்ற முகம்மது ஆரிஃப் கான் குல்மரக் (gulmarg) பனிச்சரிவுகளில் பயிற்சி செய்யும் காணொலியை தேடிக் கொண்டிருக்கிறேன். உறக்கத்துக்கு முன் சடங்காக வாசிக்கும் கவிதைகள் எல்லாம் இப்போது கஷ்மீர சித்தர் லல்லேஸ்வரி எழுதியதாகவே இருக்கின்றன. 1384இல் மீர் சையத் அலி ஹம்தானி அவர்களின் பேருரையை கேட்டு இஸ்லாத்தை நான் தழுவியிருப்பேனா என்ற ஊகசிந்தனையில் அடிக்கடி ஆழ்கிறேன். புராதன இந்தியாவில் மிக அதிக அளவில் வர்ணக்கலப்பும் சாதிக்கலப்பும் நிகழ்ந்த பூமி இன்று ஒற்றை அடையாளம் எனும் குழிக்குள் தன் சவத்தை தானே இறக்கிக் கொண்டிருக்க, அதன் பன்முகத்தன்மையை மீட்டெடுத்து அதனுள் புது ரத்தம் பாய்ச்சும் மந்திரநிகழ்வு ஏதேனும் சாத்தியமா என்ற கனவில் மூழ்குகிறேன். நூறடிக்கு ஒருவர் என போர் உடையில் ஆயுதங்களுடன் நிற்கும் ராணுவ வீரர்களின் பிம்பங்கள் அதே கனவில் புகையாக கலைந்து போகின்றன. காவா தேனீர்ப் பொடி இருக்கிறது. அதைப் பருகப் பொருத்தமான கஷ்மீரத்தின் குளிர்ச்சியைத் தேடுகிறேன். ஷாலிமார் பாகில் பார்த்த சினார் மரத்தின் அசைவை ஏன் ஒலிப்பதிவு செய்து வைத்துக் கொள்ளவில்லை என்று கேட்டுக் கொள்கிறேன். கஷ்மீரில் வசிக்காமலேயே தன் முன்னோர்களின் பூமியைத் தன் ஒவ்வொரு படைப்பிலும் இணைத்துக் கொள்ளும் ருஷ்டியைப் புரிந்து கொள்ள முடிகிறது. கஷ்மீர் மீதான என்னுடைய ஈர்ப்பை புரிந்து கொள்ள முடியவில்லை. ஈர்ப்பு நெடுநாள் நிலைக்காது என்பர். இன்ப வேதனை நிலைக்கும் வரை நிலைக்கட்டும். கஷ்மீரக்கவி அமின் கமிலின் நன்னம்பிக்கை தெறிக்கும் வரிகளைப் போல் innocence மீண்டும் பூக்களாய் மலர்ந்து கைதட்டி மகிழட்டும் – என் மனதிலும் என் காதல் பூமியிலும்.

—-

பனி

தோட்டத்திற்குள் வந்தது பனி நேற்றிரவு
சோகச் செய்தி சொன்னது
இரவு முழுவதும் சொன்னது
மசூதியிலும் கோவிலிலும் ஒவ்வொரு பூசாரியும் சொல்வதை
மலரின் காதில் கிசுகிசுத்து அழுதது:
“உலகம் மரணகரமானது;
சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியை மறைக்கிறது.
அழுகையுடன் வருகிறோம், அழுகையுடன் செல்கிறோம்.”

காலை சூரியன் உதித்தது,
மனதின் குழப்பம் தெளிந்து கண்கள் சுற்றி பார்த்தன.
பயத்தால் சுருங்கியது பனி,
இருண்ட இரவின் தூதர் ஓடிவிட்டார்.
பூக்கள் சிரித்தன, மொட்டுகள் –
மகிழ்ச்சியில் கைதட்டி மலர்ந்தன.

—-

(சினார் மரம் – கஷ்மீரின் அடையாளம்)

சுவரில் ஒரு கடிதம்

பெல்ஷஸார் – விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் டேனியலின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பாபிலோனின் பட்டத்து இளவரசன். விவிலியத் தொன்மத்தில் பாபிலோனியப் பேரரசன் நெபுகத் நெஸாரின் மகன் என்று குறிப்பிடப்படும் பெல்ஷஸார் வரலாற்று ரீதியாக நெபுகத் நெஸாருக்குப் பின் வந்த நெபோடினஸ் என்னும் அரசனின் மகனாவான். டேனியலின் புத்தகத்தில் வரும் தொன்மக் கதையின் படி பெல்ஷஸார் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவ்விருந்தில் அவனுடைய பிரபுக்கள், அமைச்சர்கள், மனைவிகள், அந்தப்புரப் பெண்கள் எனப் பெருந்திரளாக அனைவரும் கலந்துகொண்டனர். நெபுகத் நெஸார் ஜெருசலேமைக் கைப்பற்றி யூதர்களின் தலைமைக் கோயிலிலிருந்து எடுத்து வந்த கோப்பைகளையும் பாத்திரங்களையும் விருந்தில் மதுவருந்த பயன்படுத்துமாறு ஆணையிடுகிறான் பெல்ஷஸார். விருந்தினர் அனைவரும் அந்தக் கோப்பைகளில் மதுவூற்றி அருந்துகின்றனர். பின்னர் அக்கோப்பைகளின் மூலப்பொருட்களான தங்கம், வெண்கலம், வெள்ளி முதலானவற்றுக்கான தேவதைகளை வணங்குகின்றனர். அப்போது விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அறையின் சுவரொன்றில் ஓர் ஆண் கரம் தோன்றுகிறது. சுவரில் பின் வரும் சொற்கள் எழுதப்படுகின்றன. அந்தச் சொற்களின் அர்த்தம் ஒருவருக்கும் புரியவில்லை. அமைச்சர் ஒருவரை அழைத்து ஜெருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அழைத்துவரப்பட்ட யூதர்களிலேயே அறிவு மிக்கவரும் பலவித மொழிகளை அறிந்தவருமான டேனியலை கூட்டிவரப் பணிக்கிறான். டேனியல் அங்கு வந்தவுடன் சுவரில் காணப்படும் சொற்களின் அர்த்தத்தைச் சொன்னால் பாபிலோனிய நாட்டின் மூன்றாவது அதிகாரமிக்கவனாக ஆக்குவதாகச் சொல்கிளான். டேனியல் தனக்கு பரிசோ பதவியோ வேண்டாம் என்று மறுத்துவிட்டு அர்த்தத்தை மட்டும் சொல்கிறார்.

מנא מנא תקל ופרסין
Mede Mede Tekel Upharsin

“Mene, தேவன் உமது ராஜ்யத்தின் நாட்களை எண்ணி, அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறார் ;Tekele, நீ எடைபோடப்பட்டாய்…உன் எடை குறைந்து காணப்படுகிறது ; “UPHARSIN”, உனது ராஜ்யம் பாரசீகர்களுக்குக் கொடுக்கப்படும்.”

அன்றிரவே பெல்ஷஸார் பாரசீகர்களால் கொல்லப்படுகிறான். பாபிலோனை பாரசீக பேரரசர் டரியஸ் கைப்பற்றுகிறார். டரியஸ் பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்களை ஜுடேயாவுக்கே திரும்ப அனுப்பிவைக்கிறார்.

That very night Belshazzar the Chaldean (Babylonian) king was killed, and Darius the Mede received the kingdom.

— Daniel 5:30–31[1]

மூன்று நகரங்கள்

துணுக்கு (trivia) எனக்கு மிகவும் பிடித்த வாசிப்பு வகைமை. வெவ்வேறு வடிவங்களில் அதனை எழுதிப் பார்த்தல் – கட்டுரைகளில் அவற்றை அடுக்குதல், உரையாடல்களுக்கு நடுவே அவற்றை புகுத்துதல், நாவலின் நெடும்பத்திகளில் அவற்றை பதிவுசெய்தல், கவிதைகளில் குறிப்பாக்குதல் என – பல விதங்களில் விரியும். இந்தியாவில் எல்லைகளில் இருக்கும் மூன்று நாடுகளில் உள்ள மூன்று நகரங்களைப் பற்றிய துணுக்கு தோரணத்தை என்றோ எழுதினேன்.

மீர்ப்பூர்

அறுபதுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் மீர்ப்பூரில் ஜீலம் ஆற்றுக்கு மேல் மிகப் பெரிய அணை கட்டப்பட்டது. உலகின் ஏழாவது பெரிய அணையான மங்ளா டேம் கட்டப்பட்ட போது 1,10,000 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வேறு இடங்களுக்கு நகர வேண்டியிருந்தது. அவர்கள் வசித்துவந்த கிராமங்கள் நீருக்கடியில் மூழ்கின. பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடாக பாகிஸ்தானிய அரசு பிரிட்டிஷ் வேலை அனுமதியை (work permit) வழங்கியது. இன்று பிரிட்டனில் வசிக்கும் பாகிஸ்தானியர்களில் “மிர்ப்பூரிகள்” எழுபது விழுக்காடு. வடக்கு இங்கிலாந்தின் மேற்கு யார்க்‌ஷைரில் உள்ள ப்ராட்ஃபர்ட் நகரில் வசிக்கும் கிட்டத்தட்ட அனைத்து பாகிஸ்தானியரும் மிர்ப்பூரிகள். Smart Mirpuris. They knew how to negotiate.

சில்ஹேட்

மிர்ப்பூரிகள் போன்று பங்க்ளாதேஷின் சில்ஹேட் (Sylhet) நகர் பூர்வீக மக்களும் அதிகம் இங்கிலாந்தில் குடியேறியவர்கள். பங்க்ளாதேஷின் மூன்றாவது பெரிய நகரம் சில்ஹேட். ஈஸ்ட் இந்தியா கம்பெனி காலத்திலருந்தே கப்பல்களில் சிற்றேவலர்களாக ( lascars) பணியாற்ற சில்ஹேட்டியர்கள் மிகவும் விருப்பங்காட்டினார்கள். முதன் முதலாக லண்டனில் இந்திய உணவகத்தை 1810 இல் தொடங்கியவர் சில்ஹேட்டியிலிருந்து வந்த வங்க முஸ்லீம் ஷேக் தீன்மொஹமட். இன்றும் லண்டனின் புகழ் பெற்ற இந்திய உணவகங்களை சில்ஹேட்காரர்களே நடத்துகிறார்கள். இதற்காகவே உள்ளூர் சில்ஹேட்காரர்கள் வெளிநாட்டுக்கு குடியேறியவர்களை ‘லண்டனி’ என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்கள். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் சில்ஹேட்டிலுருந்து பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் குடியேற்றம் தொடர்ந்தது. வங்க சுதந்திரப் போரின் போதும் அதற்கு முன்னரான 1970இன் பல உயிர்களை பலி வாங்கிய போலா சூறாவளியின் போதும் குடியேற்றம் உச்சத்தை தொட்டது.

நீர்க்கொழும்பு

கதுநாயக விமான நிலையத்தில் இறங்கி E3 வழியில் கொழும்பு செல்கையில் வலப்புறத்தில் மிக அழகான Lagoon தென்படும். Negombo Lagoon என்பது அதன் பெயர். கடலோர விடுதிகள், அழகான பல சர்ச்சுகள் என்று பயணிகளுக்கான பல கவர்ச்சிகளை கொண்டுள்ள Negombo-வை தமிழில் நீர்க்கொழும்பு என்று அழைக்கிறார்கள். இருபத்தியைந்துக்கும் மேலான சர்ச்சுகள் இருப்பதால் நீர்க்கொழும்பை குட்டி ரோம் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஊரின் பெயர்க்காரணமாக இரண்டு தொன்மங்கள் வழங்குகின்றன. சிங்களர்கள் நிகம்போ என்ற பெயர் மீகமூவ எனும் பழைய பெயரிலிருந்து மருவியது என்கிறார்கள். தமிழர்கள் நிகும்பள என்னும் பெயரிலிருந்து மருவியது என்கிறார்கள். நிகும்பளன் என்பவன் இராமாயணத்தில் வரும் ஒரு பாத்திரம். இவன் இராவணனின் மைத்துனன்.

இந்த தோரணம் இன்னும் முழுமையடையவில்லை. மீர்ப்பூருக்கும் சில்ஹேட்டுக்கும் இடையே மேலை நாட்டுக்குக் குடிபெயர்தல் எனும் பொதுப்புள்ளி இருக்கிறது. நீர்க்கொழும்பிற்கு? இத்தாலியில் டைரேனியன் கடலின் கரையில் அமைந்துள்ள Negombo எனும் ஊருடன் ஏதேனும் தொடர்பு இருக்குமா?

தொடர்பு படுத்தல் கற்பனையின், எழுத்தின் இன்றியமையா அங்கம். தொடர்புபடுத்தலின் நீட்சி புனைவின் ஆரம்பம் என்ற சொந்த தியரி ஒன்று என்னிடத்தில் உண்டு.

மணிமேகலை – குறிப்புகளின் குவியல்

இப்போது இல்லாது மறைந்து போன பௌத்த பூமியை மறு-கற்பனை செய்ய வைக்கிறது மணிமேகலை காப்பியம். பாத்திரங்கள் தமிழகத்தில் வசித்தன ; தமிழ் பேசின. ஆனால் காப்பியத்தின் பௌத்த தரிசனம் ஒற்றை மொழியியல்-நில அடிப்படையிலானதன்று. சர்வ-தேசிய, சர்வ-மொழி அடிப்படையிலானது. கதையில் பல்வேறு தமிழரல்லாத பாத்திரங்கள். சுதமதி வங்காளப் பெண். புண்ணியராசன் இந்தோனேசியாவின் ஜாவா பெருந்தீவை ஆளும் மன்னன். ஆபுத்திரனின் தாயார் கங்கைச் சமவெளியிலிருந்து (வாராணசி) கன்னியாகுமரி வந்தவள். மகாபாரதக் குறுங்கதை வருகிறது. திருக்குறள் வருகிறது. தூரத்தீவுகளில் வசிக்கும் பழங்குடிகள் வருகின்றனர். வஞ்சி, காஞ்சி, காவிரிப்பூம்பட்டினம் – கதையில் வரும் நகரங்கள் சித்தரிக்கப்படும் விதம் அவை காஸ்மோபாலிட்டன் நகரங்கள் என நம்மை உணர வைக்கின்றன. வேத காலத்து ரிஷிகள் குறிப்பிடப்படுகின்றனர். தாந்திரீக பௌத்தக் குறியீடுகள் கதை நெடுக காணப்படுகின்றன. பௌத்தத்தை ஒரு சர்வ தேச சமயப்பண்பாடாக தமிழில் பதிவு செய்கிறது இந்த அற்புதக் காப்பியம்.

மணிமேகலை காப்பியம் சித்தரிக்கும் பௌத்தப் பெருநிலம் சேர, சோழ, பாண்டிய,பல்லவ நாடுகளை உள்ளடக்கியது மட்டுமல்ல. ஆந்திரம், கபிலவாஸ்து, காசி, கயா, வங்கம் என்னும் பிற பிரதேசங்களையும் உள்ளடக்கியது. அது மணி பல்லவம், ஆடம்ஸ் பீக் வாயிலாக இலங்கை, தரும சாவகன் எனும் சான்றோன் உலவும் சாவகம் என்று அன்றைய பௌத்த ஆசியா முழுதும் விரிகிறது.

மகாபாரதம்

மகாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் வரும் கௌசிக முனிவர் நாய்க்கறி உண்ணும் கதையை தீவதிலகை மணிமேகலைக்கு சொல்கிறாள். பசிப்பிணியின் கொடுமையையும் அதனைத் தீர்ப்போரது பெருமையையும் தீவதிலகை மணிமேகலைக்கு அறிவுறுத்துகிறாள்.

“புன்மரம் புகையப் புகையழல் பொங்கி

மன்னுயிர் மடிய மழைவளம் சுரத்தலின்

அரசுதலை நீங்கிய வருமறை யந்தணன்

இருநில மருங்கின் யாங்கணுந் திரிவோன்

அரும்பசி களைய வாற்றுவது காணான்

திருந்தா நாயூன் தின்னுத லுறுவோன்

இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்

வந்து தோன்றிய வானவர் பெருந்தகை

மழைவளந் தருதலின் மன்னுயி ரோங்கிப்

பிழையா விளையுளும் பெருகிய தன்றோ”

(மணிமேகலை : பாத்திரம் பெற்ற காதை 11: 82-91)

“புல்லும் மரமும் கரியுமாறு புகையை உடைய தீ போல வெப்பம் மிகுத்து உயிர்கள் அழியுமாறு மழையாகிய செல்வம் மறைந்து போனமையால் அரசு புரிதலினின்றும் நீங்கிய அரிய மறைகளையுணர்ந்த அந்தணனாகிய விசுவாமித்திரன் பெரிய பூமியிடத்து யாண்டும் சுற்றுகின்றவன் அரிய பசியை நீக்க உதவுவதாகிய உணவு ஒன்றையுங் காணாதவனாய் சிறிதும் பொருந்தாத நாயின் ஊனைத் தின்னத் தொடங்குவோன் உண்ணுமுன் செய்தற்குரிய தேவ பலியினைச் செய்கின்ற பொழுது அவன் முன்னர் வெளிப்பட்ட அமரர் தலைவன் மழைவளத்தை அளித்தலான் உயிர்கள் மிகுத்து தப்பாத விளைவும் மிகுந்த தன்றோ”

திகிலூட்டும் பிறவிக்கதைகள்

“தீவ திலகை செவ்வனந் தோன்றிக்

கலங்கவிழ் மகளிரின் வந்தீங் கெய்திய

இலங்குதொடி நல்லாய் யார்நீ என்றலும்

எப்பிறப் பகத்துள் யார்நீ யென்றது

பொற்கொடி யன்னாய் பொருந்திக் கேளாய்”

கோமுகி ஏரியில் அமுதசுரபியின் காவல் தேவதை தீவதிலகை மணிமேகலையை பார்த்ததும் கேட்கும் கேள்வி : யார் நீ?

மணிமேகலை என்ன பதில் சொல்வது என்று குழம்பி பின்னர் சொல்கிறாள் : யார் நீ என நீ வினவியது எந்த பிறப்பின் நிகழ்ச்சி குறித்து?

The King and the Clown in South Indian Myth and Poetry நூலில் David Shulman இதுபற்றி சொல்கிறார் : “the Tamil Buddhist exploration of the cognitive experience of reincarnation finds the resulting awareness to be baffling, even terrifying”

புண்ணியராசன் மணிபல்லவத்தை அடைந்து தன் முன் பிறவி உடம்பின் எலும்புகளை தோண்டியெடுக்கும் காட்சி நிச்சயம் terrifying தான்!

வள்ளுவரும் சாத்தனாரும்

மருதி என்பாளுடன் சதுக்கப்பூதம் உரையாடும் கட்டத்தில் திருவள்ளுவரை மேற்கோள் காட்டுவார் மணிமேகலை ஆசிரியர்.

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றஅப்

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்”

(மணிமேகலை : 22 : 59-61)

சுடுகாட்டுக் காட்சிகள்

“என்புந் தடியு முதிரமு மியாக்கையென்

றன்புறு மாக்கட் கறியச் சாற்றி

வழுவொடு கிடந்த புழுவூன் பிண்டத்து

அலத்தகம் ஊட்டிய அடிநரி வாய்க்கொண்

டுலப்பி லின்பமோ டுளைக்கு மோதையும்

கலைப்புற அல்குல் கழுகுகுடைத் துண்டு

நிலைத்தலை நெடுவிளி யெடுக்கு மோதையும்

கடகஞ் செறிந்த கையைத் தீநாய்

உடையக் கவ்வி யோடுங்கா வோதையும்

சாந்தந் தோய்ந்த ஏந்தின வனமுலை

காய்ந்தபசி யெருவைக் கவர்ந்தூ ணோதையும்

பண்புகொள் யாக்கையின் வெண்பலி யரங்கத்து

மண்கனை முழவ மாக…….”

(மணிமேகலை : 6 : 107 – 119)

சார்ங்கலன் எனும் பார்ப்பனச் சிறுவன் ஒரு காட்டில் தனிவழிச் செல்கையில் காணும் காட்சிகளை, கேட்ட சத்தங்களை சாத்தனார் மேற்கண்ட வரிகளில் சொல்கிறார்.

“எலும்பும் சதையும் குருதியுமாகியவற்றை உடம்பு என்று அதன் மேல் அன்பு வைக்கின்ற மக்களுக்கு அறியக் கூறும் வண்ணம் புழுக்கள் மலிந்த ஊண் பிண்டமாகி விழ்ந்து கிடந்த உடலில் செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற அடிகளை நரி வாயிலே கவ்விக் கொண்டு கேடில்லாத இன்பத்துடன் ஊளையிடுகின்ற ஒலியும், உடையை ஒழித்த அல்குலைக் கழுகு குடைந்து உண்டு நிலத்தின் கண் பெரிய கூவுதலைச் செய்யும் ஓசையும், கடகமணிந்த கையைத் தீயநாய் உடையுமாறு கவ்விக் கொண்டு இடும் ஒடுங்காத முழக்கமும், சந்தனம் பூசப்பெற்ற இளங்கொங்கையை பசி கொண்ட பருந்து கவர்ந்துண்ணும் ஓசையும், இனிமையுடைய உடல்கள் வெந்த சாம்பற்குவையாகிய அரங்கில்….”

1616

அமுதசுரபியைப் பெற்ற பிறகு ஆகாய மார்க்கமாக காவிரிப்பூம்பட்டினம் திரும்புகிறாள் மணிமேகலை. மணிமேகலா தெய்வம் அறிவுறுத்தியபடி அரவண அடிகளைச் சந்தித்து மணிமேகலா தீவில் நடந்தவற்றை எடுத்துக் கூறுகிறாள்.

உலகில் அவதரிக்கப் போகின்ற வருங்கால புத்தர் (மைத்ரேய புத்தர்) பற்றி அரவண அடிகள் மணிமேகலைக்குச் சொல்கிறார். கீழ்க்கண்ட வரிகளில் புத்தர் 1616ம் ஆண்டில் பிறப்பார் என்று சொல்லப்படுகிறது. அது எந்த அப்தம் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

“சக்கர வாளத்துத் தேவ ரெல்லாம்

தொக்கொருங் கீண்டித் துடிதலோ கத்து

மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப

இருள்பரந்து கிடந்த மலர்தலை உலகத்து

விரிகதிர்ச் செல்வன் தோன்றின னென்ன

ஈரெண் ணூற்றோ டீரெட் டாண்டில்

பேரறி வாளன் தோன்றுமதற் பிற்பாடு

பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி

இரும்பெரு நீத்தம் புகுவது போல

அளவாச் சிறுசெவி யளப்பரு நல்லறம்

உளமலி யுவகையோ டுயிர்கொளப் புகூஉம்”

( அறவணர்த் தொழுத காதை : 12 : 72-82 )

“சக்கரவாளத்திலுள்ள தேவரனைவரும் சேர்ந்து ஒன்றாகக் கூடித் துடிதலோகத்துள்ள (dusita heaven) சிறந்த தேவன் திருவடிகளில் விழுந்து இரக்க, இருள் பரவிய அகன்ற பூமியின் கண் விரிந்த கிரணங்களையுடைய பரிதிவானவன் தோன்றினாற் போல ஆயிரத்து அறுநூற்றுப் பதினாறாம் ஆண்டில் புத்தன் தோன்றுவான். அதன் பின்பு பெரிய குளத்திலுள்ள மதகாகிய சிறிய வழியில் மிகப்பெரிய வெள்ளம் புகுவதைப் போல பேரளவில்லாத சிறிய செவிகளின் வழியே அளத்தற்கரிய நல்லறங்கள் உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியோடு உயிர்கள் ஏற்றும்படி புகாநிற்கும்”

புத்த துதி

அமுதசுரபியைப் பெற்றதும் மணிமேகலை அளவற்ற மனமகிழ்ச்சி கொண்டாள் ; புத்த தேவரைப் பலவாறு துதித்தாள்.

“மாரனை வெல்லும் வீர நின்னடி

தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்னடி

பிறர்க்கறம் முயலும் பெரியோய் நின்னடி

துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி

எண்பிறக் கொழிய இருந்தோய் நின்னடி

கண்பிறர்க் களிக்குங் கண்ணோய் நின்னடி

தீமொழிக் கடைத்த செவியோய் நின்னடி

வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி

நரகர் துயர்கெட நடப்போய் நின்னடி

உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி

வணங்குதல் அல்லது வாழ்த்தலென் நாவிற்

கடங்கா து…….”

“மாரனை வென்ற வீரனே நின் திருவடிகளை, தீய வழிகளாகிய மிக்க பகையை நீக்கினோய் நின் திருவடிகளை, ஏனையோர்க்கு அறம் உண்டாதற்கு முயல்கின்ற பெரியோய் நின் திருவடிகளை, சுவர்க்க இன்பத்தை வேண்டாத பழையோனே நின் திருவடிகளை, மக்களுடைய எண்ணங்கள் எட்டாமற் பின்னே மேற்பட்ட நிலையிற் சென்றோய் நின் திருவடிகளை, உயிர்கட்கு ஞானத்தை அளிக்கும் மெய்யுணர்வுடையோய் நின் திருவடிகளை, தீயமொழிகளை கேளாதிருக்குமாறு அடைக்கப்பட்ட காதினை உடையோனே நின் திருவடிகளை, மெய்மொழிகள் சிறந்த நாவினையுடையோய் நின் திருவடிகளை, நரகத்திலிருப்போரின் துன்பம் நீங்குமாறு ஆண்டுச் சென்றோய் நின் திருவடிகளை, நாகர்களின் துன்பத்தை நீக்குவோய் நின் திருவடிகளை வணங்குதலேயன்றி வாழ்த்துதல் என் நாவில் அடங்காது”

மணிமேகலை : பாத்திரம் பெற்ற காதை : 11 : 61-72

இராமாயணம்

விருச்சிக முனிவன் இட்ட சாபத்தால் அடங்காப் பசியால் அவதியுறுகிறாள் காயசண்டிகை. இராமாயணத்தில் இராமர் பாலம் கட்ட முயன்ற போது எல்லாக் குரங்குகளும் கொண்டு வந்து போட்ட மலை, கற்களை இக்கடல் விழுங்கியதுபோல எல்லா உணவுப் பொருள்களையும் அவளின் வயிறு கரைத்துவிடுகிறது என்ற உவமை வழியாக இராமயணக் கதையை எடுத்தாள்கிறது மணிமேகலை.

நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி

அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று

குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்

அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு

இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்

பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்

(உலக அறவி புக்க காதை, 10-20)

முருகன்

முருகப்பெருமான் பற்றிய குறிப்புகளும் மணிமேகலையில் உண்டு.

கார் அலர் கடம்பன் அல்லன்

(பளிக்கறை புக்க காதை அடி 49)

குருகு பெயர்க்குன்றம் கொன்றோன் அன்ன முருகச் செவ்வி முகத்து

( மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை, 12-13)

கடம்ப மாலை அணிந்தவன் முருகன்.

கிரௌஞ்சம் என்ற பறவை பெயர் கொண்ட மலையைப் பிளந்துச் சிங்கமுகனைக் கொன்றவன் முருகன்.

+++++

உரை : ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப்பிள்ளை