ஊர்பேர்

சராசரிக்கதிகமான நினைவாற்றல் எனக்குண்டு என்ற மிதப்பில் இத்தனை வருடங்களாக இருந்தவனுக்கு ஊர்களின் பெயர்களை மறந்து போகிறேன் என்பதை ஏற்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஒரு வாரம் முன் சென்ற ஊரை நினைவில் கொண்டு வர முயல்கிறேன். மனதின் காட்சியில் வீட்டிலிருந்து காரில் கிளம்பிய நேரம் ஞாபகமிருக்கிறது. தெருமுக்கில் இருந்த பிக் பஸார் கடையை கடந்து சென்றது, ஹூடா ஐங்ஷன் வந்தபோது நஜஃப்கர் வழியாகச் செல்லலாம் என்று ஓட்டுனர் சொல்கையில் லேசாக தலையாட்டியது – எல்லாம் மனக்காட்சியில் தெளிவாக வந்து விழுந்தன. நஜஃப்கர் தாண்டியதும் குறுகலான சந்தில் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கினோம். சற்று தூரத்தில் காரில் சிஎன்ஜி குறைவு என்பதால் அதை நிரப்புவதற்காக நின்ற போது யாரோ எனக்கு போன் செய்தார்கள். யார் போன் செய்தது? மனைவியோ குழந்தைகளோ நிச்சயமாக இல்லை. அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு என்று எண்ணுகிறேன். ஞாயிற்றுக்கிழமை அல்லவா பயணமானோம்? அலுவலகத்திலிருந்தோ வாடிக்கையாளர்களிடமிருந்தோ அழைப்பு வந்திருக்க முடியாது. சிஎன்ஜி நிரப்பிய பின்தான் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கிக் கொண்டோமோ? ஊர் பேரை நினைவுபடுத்திக் கொள்ளச் சென்ற மனப்பயணம் வேறு சிலவற்றையும் நான் மறந்து போகிறேன் என்பதை புலப்படுத்தியது.

எந்த ஊரை நோக்கிப் பயணம் என்பது மூலவினா. அதற்கு விடையளிக்கும் வழியில் நிறைய துணைவினாக்கள். யார் போன் செய்தார்கள்? எனக்கு ஓட்டுனர் பெயரும் ஞாபகமில்லை. காய்கறிச் சந்தை நெரிசல் முதலில் வந்ததா? சிஎன்ஜிக்காக நின்றது முதலில் வந்ததா? தெளிவு என்பது கூரான ஞாபக சக்திதான். இல்லை..அப்படியும் சொல்லிவிட முடியாது. தெளிவு என்பது தெளிவான மன நிலை. நினைவுத் துல்லியம் தெளிவின் முக்கிய அங்கம் என்று சொல்லிக் கொள்ளலாம். 

சிஎன்ஜி ஸ்டேஷனுக்கப்பால் என் மனப்பயணம் நின்றுபோனது. எதையாவது பற்றி நிற்காவிடில் கீழே விழுந்துவிடுவோமில்லையா?  பிடி தளர்ந்து தடுமாறுகையில் ஏதாவது ஒரு நினைவைப் பிடித்துக் கொண்டால் நம் இருப்பு உறுதியாகும்.

குர்கான் வரைபடத்தை விரித்தேன். பக்கத்தில் என்னென்ன ஊர்கள் இருக்கின்றன?  நஜஃப்கரை நோக்கி விரலை நகர்த்தினேன். அதைச் சுற்றி பல ஊர்கள், கிராமங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ரோகிணி, பகதூர்கர், பவானா……வெறும் பெயர்கள்…..எல்லாம் பெயர்கள்…தலையை அசைத்தேன். பெயர்கள் வைக்காவிடில் ஊர்களுக்கென தனித்த அடையாளம் ஏதேனும் இருக்குமா? வீடுகளும், வயல்களும், குளங்களும், மேடுகளும் பள்ளங்களும் – அவற்றின் எண்ணிக்கைகளும், வடிவங்களும், அமைப்புகளும் மாறுந்தன்மையை வைத்து…குழப்பமாய் இருக்கிறது…என் உடல் எங்கே? நான் இருக்கிறேனா…எனக்கு நினைவிருக்கிறது..எனவே நான் இருக்கிறேன்…எதையோ உதறுவது போல் சைகை செய்தேன்…

“உடம்பை அசைக்காதீங்க” – எனக்கு யாரோ ஊசி போட்டுக் கொண்டிருந்தார்கள். முக கவசம் அணிந்திருந்தனர். 

சற்றுத் தள்ளி ஒரு பெண் சதுர கண்ணாடி பதித்த கதவினுடே நோக்குகிறாள். ஒரு வித பயத்துடன் நின்றிருந்தாள். கண்ணில் நீர் படிந்திருந்தது. மனக்காட்சி மாறிவிட்டதா? ஊர் பெயர் மறந்ததை நான் இன்னும் மறக்கவில்லை. புதுக்காட்சியிலும் பழைய காட்சியைத் தொடர விழைந்தேன். 

என் தலையை யாரோ நேராகப் பிடித்துக் கொண்டனர். கதவு பக்கம் என் முகத்தை திருப்ப முடியவில்லை. வெண்ணிற திரையை….சுவரை வெறித்து மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த போதும் “என்ன பெயர் என்ன பெயர்” என்று மனதில் அசை போட்டபடியிருந்தேன். என் கால்களை யாரோ தூக்கினார்கள். எதையோ யாரோ தூக்குவது மாதிரி எடையற்று உணர்ந்தேன். 

“நான் எந்த ஊருக்குப் போனேன். ” – என்று உரக்கக் கேட்டேன். உதடு மட்டும் அசைந்ததா எனத் தெரியவில்லை. நான் சொன்னது யார்க்கும் கேட்கவில்லை. யாரும் கேட்க பிரயாசப்பட்டதாகவும் தெரியவில்லை. என்னைச் சுற்றிலும் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கதவினூடே நின்றிருப்பவள் இன்னும் அழுது கொண்டிருப்பாளா? அவள் அழுகை நின்றதாவெனத் தெரியவில்லை. அழுகை வந்தது. கண்ணீர் சிந்தினேனா என்று சந்தேகமாய் இருக்கிறது. நான் அழுகிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வது தான் பிரக்ஞையின் அடையாளமா? வேறொரு காட்சிக்குள் என்னை யாரோ தள்ளிவிட்டார்கள்….காட்சிகள் ஏதுமில்லை. இருட்டு அறைக்குள் நுழைந்துவிட்டேன். எங்கிருக்கிறேன். இது வேறோரு காட்சியா? அல்லது வேறொரு எண்ணமா? வடிவங்களும் சிந்தனைகளும் பிணைந்து என்னை நெருக்குவது போல் இருந்தது. காட்சிகள் இல்லாத புதுக்காட்சியா? இல்லை…நானே என்னை இந்த இருட்டுக்குள் என்னைத் தள்ளிக்கொண்டேனோ?

பித்ரு கடன் செய்யும் போது ஓதும் மந்திரங்கள் எங்கிருந்தோ ஒலித்தன. என் பெயர், என் தந்தையார் பெயர், தந்தையாரின் தந்தையார் பெயர் – இவற்றைச் சொல்லி வசு, ருத்ர, ஆதித்யர்களாக உருவகிக்கும் மந்திரங்களின் உச்சரிப்பு…பெயர்கள்…பெயர்கள்…பெயர்கள்.

நன்றி : சொல்வனம் (https://solvanam.com/2023/03/26/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/amp/)

திருவண்ணாமலை

நாம் கவனமாக இருக்கிறோம். மரியாதையாகப் பேசுதல், கடுஞ்சொற்களை பயன்படுத்தாதிருத்தல், எல்லா குறைகளையும் பொறுமையாக செவிமடுத்தல், எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் உரிய  விளக்கங்களை இயன்ற வரை தருதல், உயர்மட்டம் எடுக்கும் முடிவுகளை பூச்சுகள் எதுவும் இல்லாமல் உடனுக்குடன் அறியத்தருதல், விடுப்பு வேண்டுகோள்களை நிராகரிக்காமல் இருத்தல், கான்பரன்ஸ் அறையின் கதவை மூடாமல் சர்வஜாக்கிரதையாக சந்திப்புகளை நிகழ்த்துதல், தப்பித்தவறி கூட சொந்த வாழ்க்கை குறித்து எதுவும் கேட்டுவிடாதிருத்தல்..….இதற்கு மேல் என்ன செய்ய….…பிஓஎஸ்எச் கையேட்டின் ஒரு ஷரத்தைக் கூட இதுவரை மீறியதில்லை.   ஆனால் இவர்கள் வேலையை விட்டுச் செல்லும்போது சேற்றை வீசிவிட்டு செல்வார்கள்…நிலமென்னும் நல்லாள் காட்டும் அதே பொறுமையை கடைபிடிப்பதோடு அல்லாமல் கூடவே மாறாப் புன்னகையைச் சூடிக் கொண்டு வழியனுப்ப வேண்டும்.  

நிரந்தரமாகவே நம்மைப் பற்றி கீழே, பக்கவாட்டில், வெளியே என அனைவரிடமும்  விசாரித்தவாறே இருக்கும்  மேலதிகாரிகள் இத்தகைய சமயங்களில் சும்மாவா இருப்பார்கள்?

இப்போதே இங்கிருந்து நீங்கிச் சென்றுவிட வேண்டும்! உடனடியாக…எவன் கண்ணிலும் படாமல்…ஆனால் முடியவேயில்லையே! கண்ணுக்குப் புலப்படா சங்கிலிகள் உடலெங்கும் கட்டப்பட்டுள்ளன. அந்தச் சங்கிலிகளுக்கு  பயம் என்று  பெயர் வைத்துக் கொள்ளலாமா? பயம் எங்கு உள்ளது? மனத்திலா? அல்லது உடலிலா? 

சென்ற வாரம் ஒரு நண்பருடன் போனில் நடத்திய உரையாடல் நினைவில் வந்தது. பல வருடங்களுக்குப் பின்னர் அந்த நண்பருக்கு போன் செய்திருந்தேன். திருவண்ணாமலையில் இருப்பதாகச் சொன்னார். கொச்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தவர் அவர். நிறுவனத்துக்கு என்னாயிற்று என்று கேட்டேன். வேலையாட்களிடம் ஒப்படைத்துவிட்டதாகச்  சொன்னார். அடேங்கப்பா….கிட்டத்தட்ட 25 கோடி வியாபாரம் செய்யும் நிறுவனத்தின் முதலாளி வேலையாட்களிடம் ஒப்படைத்திருப்பதாகச் சொல்கிறாரே என்று அவருடைய தைரியத்தை வியந்தேன். திருவண்ணாமலையில் வேறு ஏதாவது தொழில் தொடங்கியிருக்கிறாரோ! இல்லையாம்! ஓர் ஆசிரமத்திற்கருகே வீடெடுத்துத்  தங்கி ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்துவருகிறாராம்! மனைவியும் மகனும் கூட  விரைவில் அவருக்கு ஒத்தாசையாக அவர் பணி செய்யும் ஆசிரமத்துக்கே  வந்துவிடப் போகிறார்களாம்! 

“எதிர்காலம் குறித்து பயம் இல்லையா” என்ற என் கேள்விக்கு –

“திருவண்ணாமலை வந்து சில நாட்கள் தங்கிப்பார்…உடல் குறித்த பயம் நீங்கிவிடும்” என்றார் 

“பயம் மனத்தில் அல்லவா இருக்கிறது?” 

“பயம் உடலில் இருக்கிறது. உடலிலிருந்து பயம் நீங்கும் போது மனதிலிருந்து நீங்கிவிடும்”

கீழ்ப்படியாமை சொட்ட கடும் சொற்களை தாங்கியவாறே “நான் வேலையை விட்டுச் செல்ல நீதான் காரணம்” என்னும்படி நீண்ட குற்றச்சாட்டு பட்டியலுடன் வந்த ராஜினாமா மின்னஞ்சலை வாசித்த போதும், இதை மேலதிகாரிக்கு அனுப்பியபின் அவரிடமிருந்து வரவிருக்கும் “சிசிடிவி ஏன் சரியாக வேலை செய்யவில்லை? அதை நீ அணைத்து வைத்திருக்கிறாயா?” என்பது போன்ற ஐயம் பொங்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிச்சொல்லி இன்னொரு அக்கினிப்பிரவேசம் செய்ய வேண்டிய சாத்தியக்கூறை யோசித்தபோதும், அடிவயிற்றில் “விர்விர்” என்று ஏதோ உள்ளூர இழுக்கும் மெல்லிய ஆனால் மிகத் தெளிவான வலியற்ற வலி உணர்வை உற்று கவனித்த போது, நண்பர் சொன்னது சரியென்றுபட்டது. உடலில் உள்ளது பயம். உடலில்தான் உள்ளது பயம். திருவண்ணாமலை செல்வதைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்த இரண்டரைக்கு நான்கு கண்ணாடி அறையை உடனடியாக திருவண்ணாமலையாக மாற்ற ஏதேனும் உபாயம் உண்டா என நண்பனிடம் அடுத்த தொலைபேசி உரையாடலில் கேட்கவேண்டும்.

நன்றி : சொல்வனம் (https://solvanam.com/2023/03/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-2/amp/)

பொருத்தம் பார்த்த குருவி – யஸுனாரி கவாபாடா

—-

சுய மகிழ்வுத் தனிமைக்கு நெடுங்காலமாய்ப் பழக்கப்பட்டுவிட்ட அவன் மற்றவர்களுக்குத் தன்னைத் தரும் அழகியலுக்காக ஏங்கத் தொடங்கினான். “தியாகம்” என்னும் சொல்லின் பெரும்பொருள் அவனுக்குத் தெளிவாயிற்று. மானுடம் என்னும் உயிரியின் வாழ்க்கையை கடந்த காலத்திலிருந்து எதிர் காலத்துக்கு எடுத்துச் செல்லும் ஒரே நோக்கம் கொண்ட ஒற்றை விதையாக தன்னுடைய சிறிய தன்மையை உணர்வதில் அவன் திருப்தியடையத் துவங்கினான். தாவரங்கள் தனிமங்கள் போன்ற பல்வேறு வகையினங்களுடன் சேர்த்து மனித இனம் என்பது இந்தப் பிரபஞ்சத்தில் மிதந்துலவும் ஒற்றைப் பரந்த உயிரமைப்பின் ஒரு சின்னத் தூண் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்ற எண்ணத்தின் மீதும், பிற விலங்குகள் மற்றும் தாவரங்களை விட அதிக விலைமதிப்பு ஏதும் அதற்கில்லை என்ற எண்ணத்தின் மீதுங்கூட அனுதாபங்கொள்ளத் தொடங்கினான்.

“சரி”

அவனுடைய மூத்த உறவினள் ஒரு வெள்ளி நாணயத்தைக் கண்ணாடி நிலையின் மேல் சுண்டினாள். பின், அதை தன் உள்ளங்கைக்குக் கீழ் அமிழ்த்திப் பிடித்துக் கொண்டு, தீவிரமான முகபாவத்துடன் அவனை உற்று நோக்கினாள். மந்தமான மனச்சோர்வான பார்வையை அவளின் வெள்ளைக் கரத்தின் மீது பதித்தான். “பூ” என்றான்.

“பூ? இதற்கு முன் முதலில் நீ முடிவெடுக்க வேண்டும். பூ விழுந்தால் அந்தப் பெண்ணை மணந்து கொள்வாயா?”

“மணக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம்”

“ஆ….தலை!”

“அப்படியா”

“இது என்ன முட்டாள்தனமாக பதில்?”

அவனுடைய உறவினள் சத்தம் போட்டுச் சிரித்தாள். அந்தப் பெண்ணின் புகைப்படத்தை கீழே எறிந்துவிட்டு அந்த அறையிலிருந்து எழுந்து சென்று விட்டாள். அவள் அதிகம் சிரிக்கக் கூடியவள். அவளின் தெளிவான சிரிக்கும் குரல் வெகு நேரம் ஒலித்தது. இது அவ்வீட்டு ஆண்களினுள் ஒரு விசித்திரமான விதத்தில் செவிவழிப் பொறாமையைக் கிளப்பியது.

புகைப்படத்தை பொறுக்கியெடுத்து அவன் அந்தப் பெண்ணைப் பார்த்தான். இந்தப் பெண்ணை மணப்பது நல்லது என்று எண்ணினான். இந்த அளவு அவனால் நேசத்தை உணர முடிகிறதென்றால், தங்கள் தலைவிதியை மூத்த சகோதரர்களிடமும் தந்தைகளிடமும் ஒப்படைத்துவிட்டு அவனை மணக்க ஜப்பானில் நிறைய பெண்கள் தயாராக இருக்க வேண்டும். அது எத்தனை அழகான விஷயம் என்று அவன் எண்ணினான். அசிங்கம் என்பது தான் மட்டுமே…எண்ணத்திரியை இழந்தான், ஏனெனில் அற்பமான சுய பிரக்ஞை அவனுக்கு விழிப்புணர்வைத் தந்தது.

“சரியாகச் சொன்னால், திருமணத் துணையைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு லாட்டரி மாதிரி. ஒரு நாணயத்தைச் சுண்டி முடிவெடுப்பது போன்றது” – அவனுடைய உறவுக்காரப் பெண் இதைச் சொன்னபோது, அவளுடைய உள்ளங்கைக்குள் இருக்கும் வெள்ளி நாணயத்திடம் தன் தலைவிதியை ஒப்படைப்பதில் அவன் உற்சாகமாகக் கூட உணர்ந்தான். ஆனால், அவள் அவனை வெறுமனே கேலி செய்கிறாள் என்பதை விளங்கிக்கொண்ட பின்னர், வராண்டாவின் விளிம்பில் இருந்த குட்டி ஏரியின் மீது அவன் தன் தனிமைப் பார்வையைத் திருப்பினான்.

என்னுடைய மனைவியாக வேண்டியவள் வேறொருத்தியாக இருப்பாளென்றால், அவளின் முகம் நீரில் பிரதிபலிக்கட்டும் என்று ஏரியிடம் பிரார்த்தித்தான். கால, வெளியூடாக காண முடியும் என்று அவன் நம்பினான். அந்த அளவுக்கு அவன் தனிமையில் இருந்தான்.

நீரின் மேற்பரப்பை உன்னிப்பாகப் பார்த்தபோது, கடவுள் எறிந்த கூர்மையான கருங்கல் ஒன்று அவனது பார்வைத் துறையில் சரிந்தது. இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்த ஒரு ஜோடிக் குருவிகள் கூரையிலிருந்து நீரில் விழுந்தன.

“இது இப்படித்தானோ!” என்று முணுமுணுத்தான்.

நீரின் மேற்பரப்பில் சலசலப்பு பரவி மீண்டும் அமைதி படர்ந்தது. மிக ஆர்வத்துடன் ஏரியை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். நீரின் அமைதியான மேற்பரப்பைப் போல அவனது இதயம் ஒரு கண்ணாடியாக ஆனது. திடீரென்று ஓர் ஒற்றைக் குருவியின் பிம்பம் அதில் தெரிந்தது. அந்தக் குருவி பாடியது. பாட்டின் அர்த்தம் இது தான்:

“குழப்பத்தில் தொலைந்திருக்கும் உங்களுக்கு உங்களின் மனைவியாகப் போகும் பெண்ணின் உருவத்தை நான் காட்டினாலும் ஒரு வேளை நீங்கள் நம்பாமல் போகலாம். அதனால், உங்களின் அடுத்த பிறப்பில் உங்களின் மனைவியாகப் போகும் பெண்ணின் பிம்பத்தைக் காட்டுகிறேன்.”

அவன் குருவியிடம் பேசினான், “குருவியே உனக்கு நன்றி. குருவியாக மறு பிறப்பெடுத்து அடுத்த ஜென்மத்தில் உன்னை நான் மணப்பேன் என்றால், இதோ இந்தப் பெண்ணையே இவ்வுலகில் மணந்துகொள்கிறேன். ஒருவன் அவனுடைய அடுத்த பிறப்பின் தலைவிதியைப் பார்த்துவிட்டான் என்றால், இப்பிறப்பின் இவ்வுலகில் அவன் இழக்கப்போவது எதுவுமில்லை. என் அடுத்த உலகின் அன்பான அழகான மனைவி எனக்கு இவ்வுலகில் எனக்கான திருமண முடிவை எடுத்திருக்கிறாள்”

புகைப்படத்தில் இருக்கும் பெண்ணுக்கு தெளிவான மனதின் வாழ்த்துகளுடன் அவன் கடவுளின் பெருந்தன்மையை உணர்ந்தான்.


யசுனாரி கவாபாடாவின் “உள்ளங்கைக் கதைகள்” தொகுப்பிலிருந்து

ஆங்கிலம் வழி தமிழாக்கம் – கணேஷ் வெங்கட்ராமன்

சியால்கோட்டுக்கு கனவி்ல் பயணமாதல்

ஒரு நகரத்திற்குப் பயணமானபோது அங்கு பார்த்த ஒரு வீதி பலமுறை என் கனவில் வந்த ஒரு வீதிக் காட்சியைப் போலவே இருந்தது. ஒரு பக்கம்
வரிசையாக வீடுகள். இன்னொரு பக்கம் அடர்த்தியாக வளர்ந்த மரங்களுக்கிடையே ஓடும் சிறு நதி. நகருக்கு நடுவே இருக்கும் புகழ்பெற்ற பிரம்மாண்டமான ஏரிக்கு நடுவே அழகான வண்ணவண்ணப் படகு வீடுகள் தெரிந்தன. ஏரியைச் சுற்றி இன்னும் கொஞ்ச தூரம் சென்று புற நகரை அடைந்த போது நான் பார்த்த தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய பேருந்து நிலையமும் என் கனவில் ஒரு கட்டில் போட்டு அதில் நான் படுத்திருந்த இடத்தைப் போலவே இருந்தது. கனவில் அந்த இடம் ரொம்ப கூட்டமாய் இருந்தது. நிஜத்தில் அந்த பேருந்து நிலையம் காலியாய் இருந்தது. என் கனவில் வந்தது போன்றே ஷட்டருடனான கடைகள் இருந்தன. ஆனால் மூடியிருந்தன.

கனவில் நான் இருக்கும் இடம் பாகிஸ்தானின் நகரம் ஒன்று என்பதாக நினைத்துக் கொண்டிருப்பேன். சியால் கோட்டாக இருக்கலாம் என்று கனவுக்குள் எண்ணம் ஓடும். நிஜத்தில் பார்த்த நகரத்துக்கும் ஊக நகருக்கும் இடையே உள்ள தொலைவு இருநூறு கிலோமீட்டர் தான். இருநூறு கிலோமீட்டர் என்று சொல்லிக் கொள்வது எத்தனை presumptuous! நடுவே எல்லை இருக்கிறது. எல்லையில் பிரச்னை. எல்லையின் தொலைவு பற்றியச் சிக்கல். கனவுக்கும் நிஜத்துக்கும் இடையில் உள்ள இடைவெளியை இருநூறு கிலோமீட்டராக எப்படி சுருக்கிவிட முடியும்? கனவில் நான் எல்லை தாண்டியதாக எண்ணியது பிழை. எல்லைக்குள்ளாகத்தான் இருந்திருக்கிறேன். கனவின் எல்லைக்குள்.

கண்ட கனவில் வந்த மனிதர்களை கவனிக்கவில்லை. அறிவிப்பு பலகைகள், பேருந்து எழுத்துகள் எதுவும் கனவில் தோன்றவில்லை. அவை தந்திருக்கக்கூடிய தகவல் கொண்டு இடத்தை சரியாக அனுமானித்திருக்கலாம். கனவு என்பதே நமக்கு நாம் சொல்லிக் கொள்வதும் உணர்ந்து கொள்வதும் தான். பலகைகளில் பேருந்துகளில் எழுத்துகள் தெரிந்திருந்தாலும் அவை நமக்குத் தெரிந்த மொழியில் எழுதப்படாவிட்டாலும் நாம் நினைத்துக் கொண்ட ஊரின் மொழியாகவே அது நமக்குத் தெரியும். போர்டில் ஃபார்ஸி எழுதப்பட்டிருக்கலாம். தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்தவனுக்கு கனவில் வரும் ஃபார்ஸியை வாசித்துவிட முடியும் பிரக்ஞையில் அவனறிந்த மொழியாகிய தமிழ் கொண்டு. கனவுகளின் மொழி பிரக்ஞையின் மொழி.

நிஜப்பேருந்து நிலையம் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு பல வருடங்களாகிவிட்டனவாம். சியால்கோட்டுக்கு ஐம்பதுகளின் முடிவு வரை பேருந்துகள் சென்று கொண்டிருந்தனவாம்! இந்தத் தகவலின் துணை கொண்டு அடுத்த முறை கனவில் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்தால் சியால்கோட்டுக்கு பேருந்து பிடித்துச் சென்றுவிடலாம். சியால்கோட்டில் அதே வீதிக்காட்சியையும் பார்த்துவிடுவோம். ஏனெனில் வீதிக்காட்சியை பிரக்ஞைக்குள் ஏற்றிக்கொண்டால் கனவில் அதனை இருநூறு கிலோமீட்டர் நகர்த்துவது அத்தனை சிரமமில்லை. ”நிஜமாகவே” சியால்கோட்டிற்குள்ளும் அதே பேருந்து நிலையத்தை வந்தடைந்து விடுவோம்.

ஒரு முடிவிலாக் குறிப்பு

மே 14, 2018

எல்லாம் சுமுகமாகச் சென்று கொண்டிருந்தன.சென்ற வருடம் ஒரு நாள் தொடங்கியது. மார்ச் மாதம். தேதி நினைவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மோசமடையும் என்பார்களே அதை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டியது. மோசமடைந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்று எத்தனை யோசித்தும் தெளிவை எட்ட முடியவில்லை. வேலைகள் ஒழுங்காகவே போய்க் கொண்டிருந்தன. எனினும் என்னை மீறி ஏதோ நடக்கிறது. என்ன அது? சில மாதங்களுக்குள்ளேயே அனைத்தும் மாறி விட்டன. என் தோழர்கள் குறுகிய இடைவெளியில் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். நண்பர்கள் என்று அலுவலகத்தில் ஒருவரும் எஞ்சியிருக்கவில்லை. இருப்பவர்கள் யாரும் என் நண்பர்கள் இல்லை. அலுவலகத்தில் நண்பர்கள் தேவையில்லை எனும் பண்பாடு எப்போது நுழைந்தது என்ற பிரக்ஞையற்று இருந்திருக்கிறேன். விற்பனை சரிய தொடங்கியது. ஒரு விற்பனை மேலாளரின் உழைப்பை யாரும் பார்க்கப் போவதில்லை. உழைப்பு விற்பனை எண்ணாக மாறாத வரை வில்லாக வளைந்து எலும்புகளை முறித்துக் கொண்டாலும் யாரும் சட்டை செய்யப் போவதில்லை.

இது ஒரு தற்காலிக நிலை. விரைவில் அனைத்தும் சரியாகி விடும் என்று நம்பிக்கையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. ஏறிக்கொண்டு போகும் வயது, சராசரியை விட சற்று அதிகமாக ஈட்டும் ஊதியம் -இவற்றையெல்லாம் விட என்னைத் துன்பப்படுத்திய மிகப் பெருங்கவலை – சரிந்து கொண்டிருக்கும் என் தன்னம்பிக்கை. பயம் வந்தால் ஒருவனின் உழைப்பு பெருகும் என்று தான் நான் இதுநாள் வரை எண்ணிக் கொண்டிருந்தேன். இதற்கு முன்னர் எனக்கு வந்த நெருக்கடிகளின் போது பயம் பெருகும் போது உழைப்பையும் முயற்சியையும் பெருக்க வேண்டும் என்ற பாடத்தை நான் கற்று வைத்திருந்தேன். ஆனால் நம்பிக்கையின்மை இம்முறை என் உழைப்பை மந்தமாக்கியது.

ஒரு சனிக்கிழமை என் தொலைபேசி ஒலித்தது. விடுமுறை நாள். வீட்டில் தான் இருந்தேன். மனம் அமைதியாய் இல்லை. போன் செய்தவர் என் அதிகாரி. போனை எடுக்க நான் தயக்கம் காட்டினேன். இந்த தயக்கம் அசாதாரணமானது. அதிகாரி என்னை உரித்து சாப்பிட்டுவிடுவாரா? ஏன் பயப்படுகிறேன்? அவர் கேட்கக் கூடிய கேள்விகளுக்கு பதில் இல்லாமல் போகாது என்ற அடிப்படை நம்பிக்கையைக் கூட இழந்திருக்கிறேன் என்ற புரிதல் என்னை தூக்கிவாரிப் போட்டது. ஏதாவது முடிவெடுக்கும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தேன். உதவியை நாடுவது என்று உடன் முடிவெடுத்தேன்.

நான் உதவியை நாடி ஆறு மாதமிருக்கும். புகை மூட்டம் விலகத் தொடங்கியிருந்தது. சிந்தனைக்குள் அதீத உணர்ச்சி புகும் வேகத்தை மட்டுப்படுத்தும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றிருந்தேன். நரம்புகளினூடே அதீதமாய் சுரக்கும் பய ரசாயனத்தை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் வேலை செய்யத் தொடங்கியிருந்தன. ஒரு நாள் என் மன நல மருத்துவரை கேட்டேன். “ஆறு மாதம் முன்னர் எனக்கு நடந்தது என்ன?” அதற்கு அவர் சொன்ன பதில் – “ஆறு மாதம் முன்னர் என்னை சந்திக்க வந்த போது நீங்கள் Acute Depression-இல் இருந்தீர்கள்’

புறக்காரணிகளில் ஒரு மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. அதே அலுவலகம். அதே சக ஊழியர்கள். அதே அதிகாரி. அதே சூழல். பயத்தின் தூண்டலில் பதற்றப்படுதலை நிறுத்தப் பழகியிருந்தேன். நகரும் தன்மை கொண்ட இலக்குகளின் இயல்பை என் அகவயமாக உற்று நோக்கத் தொடங்கியிருந்தேன். இது தான், இது மட்டும் தான் என் இலக்கு. இந்த இலக்கு மட்டும்தான் என்னை வரையறுக்கும் என்பதாக ஒற்றை இலக்கில் தொங்கிக் கொண்டிருப்பது வியர்த்தம். இலட்சியம் நல்ல விஷயம். ஆனால் அதன் மேல் முழு கனத்தையும் போட்டுப் பயனில்லை. வளைந்து செல்லும் ஒரு நதியைப் போன்று சூழலுக்கேற்றவாறு நம் ஆசைகள், லட்சியங்கள் எல்லாம் சற்று வளைந்து கொடுக்கட்டும். Physiologically, our body cannot be in perpetual state of anxiety. It has to return to its equilibrium. பிரக்ஞை பூர்வமாக சுய-அன்புடன் உணர்வு நிலைகளை manage செய்தால் கட்டுப்பாடின்றி பதற்றம், அச்சம் என்னும் உணர்ச்சிகள் பீறிடும் வாய்ப்பு குறையும். Let us Count our Blessings. முதலில் நம் மீது நாம் கருணை கொள்வோம். நம்மை பற்றிய அதிகமான எதிர்பார்ப்பின் காரணமாக நம்மை நாமே (மன ரீதியாக) வதைத்துக் கொள்வதை நிறுத்துவோம். ஆசைகள் நம்மை இயக்கத் தொடங்கிவிட்டால் நம் மீது நம் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். நான் ஆசைப்படலாம். ஆனால் ஆசைகள் நம்மைக் கட்டுப்படுத்தலாகாது. தடைகள் இறுதி வரை தோன்றிக் கொண்டிருக்கும். வாழ்வில் இதுவரை தாண்டி வந்த தடைகளை நினைவுபடுத்திக் கொள்வோம். இதுவரை பெற்ற வெற்றிகளை எண்ணி மீண்டும் மகிழ்ச்சி கொள்வோம். நம்பிக்கைச் சுடரை இறுதி வரை அணையாமல் காப்போம்.

சென்ற வருடம் முழுதும் தன் பதற்றத்தை பாதுகாப்பின்மையை தாள முடியாமல் என்னை பந்தாடிய அதிகாரி இந்த வருடம் அமைதியாகிவிட்டார். வேறு வேலை தேடிக் கொண்டிருப்பதாக அரசல் புரசலாக பேச்சு. விரைவில் அவர் வேலையை விட்டுச் சென்று விடலாம். சூழல் மாறலாம். புதுச் சூழல் வேறு வித மாற்றங்களுக்கு வித்திடலாம். மாற்றம் இப்படித்தானிருக்கும் எனற ஒற்றைப் பரிமாணத்தில் நான் நிச்சயம் யோசிக்கப் போவதில்லை. உறுதியளிக்கப்பட்ட elevation கிடைத்துவிடும் என்ற கண்மூடித்தனமான எதிர்பார்ப்பு சென்ற வருடம் சுக்குநூறாக உடைக்கப்பட்ட பின்னர் நடந்த அகநாடகம் எனக்கு ஆசானாக இருந்து வழி காட்டும். நம் அனுபவங்கள் நமக்கான தொடரும் case-study.

+++++

மடிக்கணினியின் முகப்புத் திரையினுள் குப்பையைப் போல் குவிந்து கிடந்த மின்கோப்புகளில் ஒன்றைத் திறந்தபோது மூன்றரை வருடங்கள் முன்பு நான் எனக்காக எழுதிக் கொண்ட குறிப்பு கண்ணில் பட்டது. வாசிக்கையில் ஒரு கதை போன்று சுவாரஸ்யமாய் இருந்தது. எனக்கு நானே சிரித்துக் கொண்டேன்.

மூன்றரை வருடம் முன்னர் குறிப்பை எழுதியதற்குப் பிறகு இது என்னுடைய வாசிப்புக்கு மட்டும் என வைத்துக் கொண்டேன். வழக்கமாக அனுப்பும் இணைய இதழ்களுக்கு அனுப்பி வைக்கவில்லை. எனது வலைப்பக்கத்திலும் இடவில்லை. எழுதியதையெல்லாம் பொதுத் தளத்தில் பகிரும் வியாதி உச்சத்திலிருந்த போதும் இதை மட்டும் ஏன் பகிராமல் வைத்துக் கொண்டேன் என்று எனக்கு இன்று விளங்கவில்லை.

என்னைப் பொறுத்த வரை முழுக்க முழுக்க நிஜம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த இந்தக் குறிப்பின் உள்ளடக்கம் ஒரு புனைவைப் போன்று ஒலித்தது என்பதுதான் இப்போதைய உண்மை. சுழலும் டைட்டில்கள் வந்த பின்னரும் ஒரு Bio-Pic திரைப்படத்தின் கதாநாயகப் பாத்திரம் இறக்காத வரை அப்பாத்திரத்தின் நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள் நிகழ்ந்தவாறிருக்கும் எனும் பிரக்ஞையை இடைநீக்கம் செய்யும் போதுதான் படத்தின் முடிவை ரசிக்க முடியும். முடிவில்லாமல் ஒரு புனைகதை நீண்டு கொண்டிருந்தால் – எத்தனை வலிமையான எழுத்தென்றாலும் – ஓரு கட்டத்தில் வாசிப்பு சலிப்பு தட்டிப் போகும்.

ஐநூறு சொற்களில் எனக்கு நானே எழுதிக்கொண்ட குறிப்பு ஒரு சிறுகதை வடிவத்தைப் பூண்டிருந்தது. எனினும், மனவியல் சிக்கலுக்கு தீர்வைத் தேடிக் கொண்டதான பாவனையில் உற்சாகத்துடன் நான் எழுதிய அந்தக் குறிப்பு தரமான சிறுகதையாக அமையுமா எனும் ஆய்வுக்குள் நுழைவதல்ல என் நோக்கம்.

வாசித்து முடித்ததும் என்ன தோன்றியது? பயணித்த பாதையின் விவரிப்பு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இந்தக் குறிப்பு எழுதி முடித்த பிறகு வந்த நாட்களில் தொழில் வாழ்க்கை நான் முற்றிலும் ஊகித்திருக்க முடியாத திசையில் பயணப்பட்டது.

குறிப்பினில் கூறப்பட்டபடி அக நாடகத்தின் படிப்பினை உதவியாக இருந்தது என்று சொல்ல முடியாதெனினும் சுயத்துடனான உரையாடலில் சில தெளிவான அணுகுமுறையை சட்டகத்தை (தற்காலிகமாகவேனும்) எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. குறிப்பில் பதிவு செய்த சம்பவங்கள் – குறிப்பாக எந்த சம்பவங்களைப் பற்றியும் விரிவாக எழுதவில்லை ; வெறும் கொடி காட்டலோடு சரி – நடந்த பின்னரான தொழில் வாழ்க்கை பற்றி விவரமாகச் சொல்லுமளவுக்கு அது ஒன்றும் அதிசுவாரஸ்யமானதொன்றுமில்லை. தனியார் வேலையிலிருக்கும் ஆயிரமாயிரம் மனிதர்களின் வாழ்வில் வழக்கமாக நடப்பதுதான். சாகசமோ விறுவிறுப்போ அதிகம் இல்லாது அதிகாரம் மட்டுமே ஜெயிக்கும் அக்கப்போர்தான்.

  1. உயரதிகாரி வேலையிலிருந்து நீங்குதல்

  2. தற்காலிக மகிழ்ச்சி

  3. மீண்டும் பணிவுயர்வு பற்றிய எதிர்பார்ப்பு

  4. ஆனால், அயல் நாட்டுத் தலைமையலுவலகத்திலிருந்து மாற்றலாகிவந்த ஒருவருக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்படல்

  5. புதிய அதிகாரி என்னிடமிருந்த கொஞ்சநஞ்ச அதிகாரங்களையும் பறித்துக் கொள்ளல்

  6. வேலை சார்ந்த சுதந்திரங்கள் மட்டுப்படுத்தப்படல்

  7. வியாபாரக் கொள்முதல் சார்ந்த லஞ்சம் பற்றி உயர் மட்டத்துக்கு துப்புத் தரப்போக அது குறித்த அதிகார விசாரணையை என் மீதே ஏவினார் அயல் நாட்டு அதிகாரி. (பழைய அதிகாரி போலவே இவரும் தொடர்ந்து எரிச்சல் படுத்திவந்தார் ; நான் என் வேலையை விட்டுவிட்டுப் போக வேண்டும் என்ற பழைய அதிகாரியின் அதே எண்ணந்தான் இவருக்கும் இருந்தது என்று இப்போது தோன்றுகிறது.)

  8. பெருந்தொற்று ஊரடங்கின் போது அதிகாரி சொந்த நாடு சென்றுவிட தொழிற்சாலை முடங்கியது. தாய் நிறுவனத்திலிருந்து சம்பளப் பட்டுவாடாவுக்கான நிதி ஆதரவு கிடைக்கப் போவதில்லை எனும் சமிக்ஞை தெரிந்தவுடன் கடுமையான உழைப்பின் உதவியால் குறைந்த காலத்துள் வியாபாரத்தை மீட்டெடுத்து ஊழியர் அனைவருக்கும் தொடர்ந்து நேரத்தில் சம்பளம் கிடைக்க வழிவகை செய்தல். (அடுத்தவர்கள் இதை ஒரு சாதனையாக ஒப்புக் கொள்வார்களோ மாட்டார்களோ – “அதற்குத் தகுந்த கூலி உனக்கு வழங்கப்பட்டுவிட்டது” – என்னைப் பொறுத்த வரை எனது நலிந்த தொழில் வாழ்க்கையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இது இருக்கப் போகிறது என்ற எண்ணம் எனக்குண்டு.)

  9. பெருந்தொற்று காரணமாக விமானங்கள் பறக்காததால் நிறுவனத்தை நிர்வகிக்க அயல் நாட்டிலிருந்து யாரையும் அனுப்ப முடியவில்லை என்ற சாக்கில் அதல பாதாள விலையில் முகந்தெரியாத முதலீட்டாளருக்கு இந்திய நிறுவனம் விற்கப்படல்.

  10. நிறுவனம் விற்கப்பட்ட அடுத்த நாள் கம்பீரமாக நடை போட்டு மீண்டும் அலுவலகத்துக்குள் நுழைந்தார் முதலீட்டாளர் அதாவது (குறிப்பில் நான் சொல்லியிருந்த) பழைய அதிகாரி. அவர் தான் இப்போது முதலாளி.

அதற்குப் பிறகு சொல்ல வேண்டிய அவசியமில்லை. இறங்குமுகந்தான். மனஅழுத்தம், மனச்சோர்வு, மனக்கவலை – இவற்றை தாற்காலிகமாகத் துறந்தேன். பகுப்பாய்வு செய்யும் அவசியம் இருக்கவில்லை. அவமதிப்புகளை அமைதியாய் சகித்துக் கொள்ளவில்லை. சொற்களைச் சொற்களால் எதிர் கொண்டேன். கேவலப்படுத்துதல்கள் மின்னஞ்சல்களில் தொடர்ந்த போது வழக்கமாக மௌனம் காக்கும் என் இயல்பில் மாற்றம் வந்தது. சரி சமமாக முதலாளியான அதிகாரிக்கு பதிலளித்தேன். நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் காரணமாக குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்கு யாரையும் வேலையை விட்டுக் கழித்து விட முடியாது என்பதால் பிடிக்காதவர்கள் எல்லாம் அவர்களாகவே வேலையை விடும் சூழலை உருவாக்கினார் அதிகாரி.

பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் போது ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு சிறு அறையில் கிட்டத்தட்ட முப்பது பேரை உட்கார வைத்து வியாபார தந்திரோபாயம் குறித்த உரையாடல் நடத்தியதுதான் அவர் புரிந்த ஈனச் செயல்களுக்கெல்லாம் திலகம். அந்தச் சந்திப்பிற்குப் பின் நிறுவனத்தில் பெரும்பாலானோர்க்கு கொரொனா தொற்று. இரு ஊழியர்கள் உயிரிழந்தனர். எனக்கும் கோரொனா வந்து மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆனது. நல்ல வேளை எனக்கு ஒன்றும் ஆகவில்லை. இதில் “விசித்திரம்” என்னவெனில் முன்னாள் அதிகாரி / இந்நாள் முதலாளியை மட்டும் கொரோனா அண்டவேயில்லை. சக ஊழியர்களின் மரணச் செய்தியைக் கேட்ட பிறகு “இது தான் அந்தக் கணம்” என்று தோன்ற மின்னஞ்சலில் என் ராஜிநாமாவை அனுப்பி வைத்தேன்.

ஏறிக்கொண்டு போகும் வயது பற்றி குறிப்பில் கூறியிருப்பேன். வாஸ்தவத்தில் அது அத்தனை பெரிய தடையாக இருக்கவில்லை. நல்ல நிறுவனத்தில், நல்ல பதவி, நல்ல சம்பளத்தோடு வேறு வேலை உடனே கிடைத்தது. என் திறமையின் காரணமாக எனக்கு கிடைத்த வேலை என்பதான என் நம்பிக்கையை – “பெருந்தொற்றுக் காலத்தில் வேலை கிடைப்பதே கடினம் ; நீ அதிர்ஷ்டக் காரன்” என்று கூறி – லேசாகக் கீறினார்கள் சில நண்பர்கள். வாயு வெளியேறியது. பெருந்தொற்றுக் காலத்தில் நிறுவனங்களின் மோசமான நிதி நிலைமை காரணத்தால் வேலையை இழந்த சில நண்பர்கள் வாயிலிருந்தும் வேறு சில துவாரங்களிலிருந்தும் உஷ்ணப்புகை.

குறிப்பை ஓர் இடத்தில் முடித்ததை போல இங்கேயே என் தொழில் வாழ்க்கைக் கதையையும் முடிக்கலாமா? சுப முடிவு போல தோற்றமளிக்கும் இதை முடிவு என்று எண்ணினால் ஒரு feel good திரைப்படம் அளிக்கும் சுகத்தை உணரலாம். இது ஒரு வளைவுதான் சாலையின் முடிவல்ல என்று எண்ணிக் கொண்டு…ஓடும் பேருந்தில் ஏறி இருக்கையில் அமரும்வரை ஏற்படும் அதிர்வைப் போல் புது வேலையில் சில மாதங்களாய்த் தள்ளாடிக் கொண்டிருக்கிறேன்.

“உன் பதவி உன் வேலை பற்றிய விவரணத்தைத் தருகிறது என்று எண்ணிவிடாதே” என்று நிறுவனத் தலைவர் முதல் நாளில் சொன்னதிலிருந்தே பிடித்தது கிலி. “மேலே உயர உயர நிறுவனத்திற்கிருக்கும் உன் மீதான எதிர்பார்ப்பும் உன்னுடைய வேலை விவரணமும் வேறு வேறாகத் தான் இருக்கும்” என்று கூடுதல் வியாக்கியானம் வேறு. நேர் முகத்தின்போது என் கீழ் நான்கு பேர் வேலை செய்வார்கள் என்று கூறப்பட்டது. அந்த நால்வரை இங்கு வந்து சேர்ந்தது முதல் தேடிக் கொண்டிருக்கிறேன். அலுவலகத்தின் எந்த மூலையில் அவர்கள் ஒளிந்திருக்கிறார்களென்று தெரியவில்லை. ஒன்றுக்கு இரண்டு உயரதிகாரிகள் எனக்கு. இருவருக்கும் நான் பதில் சொல்ல வேண்டும். ஒருவர் வாயே திறக்கமாட்டார். எதுவும் கேட்க மாட்டார். வேலை பற்றிய சந்தேகங்களுக்கு பதிலளிப்பது அவருடைய கடமையே இல்லை என்பது போல மௌனியாய் இருப்பதே அவர் வாடிக்கை. இன்னொரு அதிகாரியோ எப்போது பார்த்தாலும் “அது என்னாச்சு இது என்னாச்சு” ரகம். என்னைப் பேசவே விட மாட்டார். “உன் குதிரையைப் பிடித்து வைத்துக்கொள்” என்ற சொற்றொடரை அவரிடமிருந்து அடிக்கடி கேட்க வேண்டியிருக்கிறது. கடிவாளம் மாட்டிக்கொண்ட உணர்வுதான் எனக்கு.

“நம் அனுபவங்கள் நமக்கான தொடரும் case-study” என்ற குறிப்பின் கடைசி வரியை மூன்றரை வருடங்களுக்குப் பிறகு இப்போது படித்துப் பார்க்கிறபோது பாசாங்கு எழுத்து என்று தான் என்னை விமர்சித்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. அதை உண்மையாக உள் வாங்கிக் கொண்டவனாக இருந்தால் நான் ஏன் சென்ற வாரம் (புது வேலை காரணமாக எழும்) பதற்ற உணர்வுகளைத் தணிக்க உதவியை நாட வேண்டும்?. அரை மணி நேரம் நான் சொன்னதைக் கேட்ட ஆலோசகர் – “இப்போதைய அதிகாரிகளோ முந்தைய அதிகாரியோ – உங்களுள்ளிருக்கும் சின்னப்பையன் அவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறான் என்ற கேள்விக்கு பதில் காணாத வரை……” என்று சொல்லி நிறுத்தினார். அவர் என்ன சொல்லிவிடப்போகிறாரோ எனும் சிறு பதற்றத்தில் நான் அவரை நோக்கிக் கொண்டிருந்தேன். “வரப்போகும் சில வார அமர்வுகளில் இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்” என்று சொல்லி சிறு காகிதத்தில் ஆலோசனைக் கட்டணத்தை எழுதி என் கையில் திணித்தார்.

குறிப்பை அடக்கி வைத்திருந்த மின் கோப்பினை மின் மறுசுழற்சித் தொட்டிக்குள் தள்ளினேன். இந்தக் குறிப்பு இனிமேல் தேவைப்படாது. புதிதாக இன்னொரு குறிப்பெழுதும் வேளை வந்துவிட்டது.

நன்றி : சொல்வனம்

நுழைவாயில்

காடு வழியே செல்லும் அந்த மண் பாதை லாகூரையும் முல்தானையும் இணைக்கிறது. இரு பெரு வணிக நகரங்களுக்கிடையே சம தூரத்தில் இருந்தது துலம்பா எனும் பழம் பெரும் ஊர். அங்கு அதிக மக்கள் தொகை இல்லை. துலம்பாவைத் தாண்டியதுமே அடர்த்தியான காடு இரு மருங்கிலும். மிருகங்கள் மட்டுமல்லாது இரவுக் கொள்ளையர்களின் அபாயமும் நிலவியது. பயணம் செல்லும் பல வணிகர்கள் கத்தி குத்துப்பட்டு சாலையோரங்களில் இறந்து கிடப்பதை மறுநாள் பகலில் பயணம் செல்வோர் காண்பதுண்டு. இரவு நெருங்கும் முன்னரே துலம்பாவை அடுத்துள்ள காட்டுப் பிரதேசத்தை பயணிகள் கடந்து விட விழைவார்கள். இல்லையேல் துலம்பாவில் இரவைக் கழிப்பார்கள். துலம்பாவில் சத்திரங்கள் ஏதும் இல்லை. பயணிகள் துலம்பாவாசிகளின் வீட்டுக் கதவுகளைத் தட்டி அவர்கள் வீட்டில் தங்கலாமா எனக் கேட்பார்கள். இது அசௌகரியந்தான். எத்தனை பேர் “உள்ளே வாருங்கள் ; எங்கள் அறைகள் ஏதாவதொன்றில் தங்கி கொள்ளுங்கள்” என்று சொல்லி அந்நியர்களுக்கு தங்கள் வீட்டுக் கதவை திறந்துவிடுவார்கள்?

லாகூரின் வணிகர் – தரம்பால் அடிக்கடி துலம்பாவைக் கடந்து முல்தான் செல்வார். காஷ்மீரக் கம்பளங்களை விநியோகம் செய்யும் தொழில் செய்து கொண்டிருந்தார். குதிரை பூட்டிய வண்டியில் கம்பளங்களை அடுக்கிக் கொண்டு ஓர் உதவியாள் சகிதம் மாதம் ஓரிரு முறை அவர் முல்தானுக்கு பயணம் செய்வதுண்டு. துலம்பாவில் இருந்த அவருடைய நண்பரின் குடும்பம் எமினாபாதுக்கு குடி பெயர்ந்துவிட்ட பிறகு துலம்பாவில் அவருக்கு தங்கும் பிரசினை. அதற்காகவே சில மாதங்கள் முல்தானுக்கு செல்வதை நிறுத்தி வைத்திருந்தார். முல்தானில் அவருடைய முகவராக இருப்பவர் லாகூர் வந்தபோது துலம்பாவுக்கு முன்னதான காட்டுப் பிரதேசத்தில் ஒரு பெரிய சத்திரத்தைக் கண்டதாகச் சொன்னார். அந்த சத்திரத்தை சஜ்ஜன் – கஜ்ஜன் எனும் மாமன் – மருமகன் ஜோடி நடத்தி வருவதாகவும் அந்த சத்திரத்துக்கு நல்ல கூட்டம் வருவதாகவும் என்று கூடுதல் தகவல்களையும் வேறு தந்தார். சில மாதங்களாக முல்தான் வாடிக்கையாளர்களை சந்திக்காததால் நிலுவைத் தொகை பெருத்திருந்தது.

அடுத்த பயணத்தின் போது சஜ்ஜன் – கஜ்ஜன் சத்திரத்தை தேடிக் கண்டு பிடித்தார். முக்கிய சாலையிலிருந்து சற்று தள்ளி இருந்தது சத்திரம். ஆனாலும் சாலையில் செல்வோரின் கண்ணில் படும்படியாகவும் இருந்தது. தரம்பால் சத்திரத்துக்கு சென்ற அன்று ஏறத்தாழ பத்து பேர் சத்திரத்தில் தங்கியிருந்தனர். அவர்களில் இருவர் தரம்பாலின் நண்பர்கள் கூட. நண்பர்களில் ஒருவர் மனைகள் வாங்கி விற்பவர். இன்னொருவர் லாகூர் நகரின் மிகப்பிரசித்தமான பட்டு வியாபாரி. அவர்கள் இருவரையும் பார்த்ததும் கையை ஆட்டி “எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். இருவருமே “லாகூர் திரும்பிக் கொண்டிருக்கிறோம்” என்றார்கள். அவர்களும் முல்தான் செல்பவர்களாக இருந்தால் வழித்துணையாக இருக்கும் என்று எண்ணினார் தரம்பால்.

அப்போது தான் கிட்டத்தட்ட ஒரே உயரம், முகஜாடை கொண்ட இருவர் அவரை அணுகினர். அவர்களில் சற்று வயதானவர் தனது வலது கையை சிரம் வரை உயர்த்தி “சலாம்..என்னை சஜ்ஜன் என்பார்கள்” என்றார். “சலாம் சஜ்ஜன்…உங்களைப் பற்றி கேள்விப்பட்டேன்” என்று சம்பிரதாயமாக தரம்பால் பதிலளித்தார். “இது என் மருமகன் கஜ்ஜன்” அதற்கு பதில் ஏதும் எதிர்பார்க்கவில்லை சஜ்ஜன். “மருமகனே, வாசலில் சென்று இவரின் உடைமைகளை எடுத்து வா” என்றார்.

“என் உதவியாள் என் சரக்குக்கு காவலாக வண்டியில் இருப்பான்” என்றார் தரம்பால்.

“எங்கள் வாடிக்கையாளர்களின் சரக்குகளுக்கும் நாங்கள் பொறுப்பாளிகள் ; உங்கள் வண்டியை நீங்கள் சத்திரத்துக்குள்ளேயே நிறுத்திக் கொள்ளலாம். எங்கள் சமையலைறையில் சமையல் வேலைகள் முடிந்ததும் உங்கள் உதவியாள் அங்கு இளைப்பாறிக் கொள்ளலாம்”

தரம்பாலுக்கு வசதியான ஒரு தனியறை வழங்கப்பட்டது. அங்கு சற்று நேரம் களைப்பாறிய பின்னர் அறை வாசலில் வைக்க்கப்பட்டிருந்த வாளியிலிருந்து நீரெடுத்து முகம் கழுவிக் கொண்டார். அவர் அறை கதவிலிருந்து புல்வெளியைத் தாண்டி சத்திரத்தின் நுழைவாயிலை நோக்கினார். நுழைவாயிலின் வளைந்த சிகரத்தில் அகல் விளக்குகள் ஏற்றப் பட்டிருந்தன. அப்பியிருக்கும் இருட்டில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டிருப்பதாலேயே நுழைவாயில் புலப்பட்டது. முப்பது வருடங்களாக இவ்வழியில் பயணம் செய்து கொண்டிருப்பவர். இப்போதெல்லாம் சலிப்பே மிஞ்சுகிறது. இது சலிப்பு மட்டுமா? உயிர்ப் பயம் கூட. இந்த சாலையில் பயணம் செய்கையில் அவரின் நண்பர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களின் பிணங்கள் கூட கிடைக்கவில்லை. இந்த பிரயாணங்களை நிறுத்தும் வழி புரியவில்லை. வாடிக்கையாளர்களை கைவிட முடியவில்லை. அவர்கள் வாயிலாக ஈட்டும் லாபம் இன்றும் இனிக்கவே செய்கிறது. திடிரென்று வண்டி ஞாபகம் வந்தது. இருட்டில் அது எங்கு நிற்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. நுழை வாயில் நோக்கி நடந்தார். மற்ற அறைகள் எல்லாம் அடைத்துக் கிடந்தன. புல் தரையில் லேசான ஈரம். நடக்க சுகமாயிருந்தது. சத்திரக் காரர்கள் பரவாயில்லை. நாளைக் காலை இவர்களுக்கு நல்ல சன்மானம் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

“உங்கள் வண்டி நுழைவாயிலுக்கு உட்புறம் நிற்கிறது. உங்கள் உதவியாள் உணவருந்திக் கொண்டிருக்கிறான்” – சஜ்ஜனின் குரல் – “வாருங்கள் உங்கள் வண்டி வரை செல்வோம்”

சஜ்ஜனின் கையில் சிறு தீப்பந்தம். சீராக எரிந்து கொண்டிருந்து.

நுழைவு வாயிலுக்கும் புல் தரைக்குமான இடைவெளியில் குதிரை வண்டி நின்று கொண்டிருந்தது. குதிரை அருகேயே ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. வண்டியில் உள்ள சரக்குகள் பற்றிக் கேட்டான் சஜ்ஜன்.

“காஷ்மீர்க் கம்பளம்” என்றார் தரம்பால்

“நிறைய சரக்கை முல்தான் கொண்டுப்போகிறீர்களே” எனக் கேட்டான் சஜ்ஜன்

“ஆம், முப்பது வருடங்களாக இவ்வியாபாரத்தில் இருக்கிறேன். முல்தானில் எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள்”

“நானும் உங்களின் வாடிக்கையாளன் ஆகப் போகிறேன். எனது பத்து அறைகளிலும் கம்பளம் விரிக்கலாமென்றிருக்கிறேன். நீங்கள் எனக்கு நல்ல கழிவு தர வேண்டும்”

“நிச்சயமாக.”

“உங்கள் உணவு தயார். நானே அறைக்கு எடுத்து வந்து பரிமாறுகிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நீங்கள் சாப்பிட்டு முடித்ததும் கம்பளங்களின் விலை பற்றிப் பேசி முடிவெடுத்துவிடுவோம்”

அறையை நோக்கிச் சென்றார்கள். அறையின் வாசலில் உணவுத் தட்டோடு கஜ்ஜன் காத்திருந்தான். மூவரும் அறைக்குள் சென்றார்கள்.

+++++

பதினைந்து நாட்கள் ஆன பின்னர் தான் தரம்பாலின் உறவினர்களுக்கு பிரக்ஞை வந்தது. தரம்பால் லாகூர் திரும்பவேயில்லை. முல்தானில் இருந்த முகவரை லாகூர் வரவழைத்து விசாரித்த போது தரம்பால் முல்தான் போய்ச் சேரவில்லை என்பது தெரிந்தது. தரம்பாலின் உறவினர்கள் சிலர் லாகூர்-முல்தான் பாதையெங்கும் விசாரித்தனர். முல்தானில் அவரின் பல நண்பர்களுடன் பேசினர். கஜ்ஜன்-சஜ்ஜன் சத்திரத்தையும் விடவில்லை. ஆனால் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. "பல பிரயாணிகள் வந்து சத்திரத்தில் ஒரு ராத்திரி தங்குகிறார்கள் ; மறுநாள் காலை சென்றுவிடுகிறார்கள். இதில் எத்தனை பேரை நாங்கள் நினைவில் வைத்துக் கொள்வோம்? நீங்கள் சொல்பவர் எங்களது சத்திரத்தில் வந்து தங்கவேயில்லை என்று சொல்ல முடியாது; இங்கிருந்து அவர் சென்ற பின்னர் அவருக்கு என்ன ஆனது என்பது பற்றி நாங்கள் என்ன சொல்ல முடியும்?" – கஜ்ஜனும் சஜ்ஜனும் ஒரே குரலில் சொன்னது. துலம்பாவாசிகளின் துணை கொண்டு தரம்பாலின் உறவினர்கள் காட்டுப் பகுதிகளில் பல வாரங்களாக தேடினார்கள். தரம்பாலின் அல்லது உதவியாளின் சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை.

+++++

துறவிகளை அவர்கள் அணிந்திருக்கும் உடையை வைத்து, தறித்திருக்கும் சின்னங்களை வைத்து அவர் ஹிந்துவா அல்லது முஸ்லீமா என்று எளிதில் கண்டுபிடித்து விட முடியும். ஹிந்து துறவிகள் காவி அணிவார்கள். முஸ்லீம்கள் பச்சை அணிவார்கள். முஸ்லீம்கள் மண்டை தொப்பி அணிவார்கள். ஹிந்து துறவிகள் தம் தலைமுடியை திறந்தவாறு விட்டுவிடுவார்கள். துலம்பாவுக்கடுத்த காட்டுப் பிரதேச சாலையில் தன் நண்பருடன் நடந்து கொண்டிருக்கும் இந்த பெரியவரின் சமய அடையாளத்தை அவர் அணிந்திருப்பவற்றை வைத்து கண்டுபிடிக்க இயலாது. இந்த மனிதர் முஸ்லீம் சூபிக்களைப் போல நீள சொக்காய் அணிந்திருந்தார். ஆனால் அது பச்சை நிறமில்லை. அது காவி. ஃபகீர்கள் போட்டுக் கொள்வது போல அவரின் இடுப்பில் ஒரு வெள்ளை பட்டையை போட்டுக் கொண்டிருந்தார். தலையில் ஒரு தொப்பி இருந்தது. ஆனால் அது டர்பனால் மறைக்கப்பட்டிருந்தது. மரச் செருப்புகளை தறித்திருந்தார். தன் சமய அடையாளத்தை நீர்க்கச் செய்யும் முயற்சி போன்று தோன்றியது அவர் உடை அணியும் விதம்.

சத்திரங்களின் வசதி அவருக்கு தேவையற்றதாயிருந்தது. இல்லற வாழ்க்கையை விட்டு நீங்கிய பின் அவர் மேற்கொண்ட பிரயாணங்களில் சாலையோர மரத்தினடியில் உறங்கவே அவர் விரும்பினார். அவருடன் நடந்த அவரின் நண்பனுக்கு அத்தனை மனவுறுதி இருக்கவில்லை. வெறும் அன்பின் நிமித்தம் கூட நடந்த நண்பன் அவருடன் உரிமையுடன் விவாதம் செய்தான். அன்றிரவு மரத்தடியில் உறங்க அவனுக்கு விருப்பமில்லை. மதியத்திலிருந்தே அவருடன் வார்த்தை யுத்தம். இருட்டத் தொடங்கிவிட்டது.

"வா மர்தானா..அந்த ஆலமரத்தினடியில் அமர்ந்து இன்றைய இரவைக் கழிப்போம்" என்றார் பாபா (பெரியவர்). பாபா அதை சொல்லும் நேரத்தில் அவர்கள் இருவரும் கஜ்ஜன் – சஜ்ஜன் சத்திரத்துக்கு முன்னால் வந்தடைந்திருந்தனர்.

ஆலமரத்தினடியில் அன்றிரவை கழிப்பதில் விருப்பமில்லை என்பதை மர்தானா மீண்டுமொரு முறை பாபாவிடம் வலியுறுத்தினான். "நான் சொல்வதை நீங்கள் கேட்கவில்லையென்றால் உங்களுடன் இந்த பயணத்தில் இனி வர மறுப்பேன்". மர்தானா உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்ததை பாபா காதில் விழவில்லை. கஜ்ஜன் – சஜ்ஜன் சத்திரத்தின் நுழை வாயில் அவர் பார்வையில் பட்டது. சில கணங்கள் அந்த சத்திரத்தின் வாயிற்சிகரத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு பெயரை அவர் வாய் முணுமுணுத்தது. பிறகு, மர்தானாவை நோக்கித் திரும்பி "உன் இஷ்டப்படியே ஆகட்டும்…இன்றிரவை எதிரில் இருக்கும் சத்திரத்தில் கழிப்போம்" என்றார்.

பொதுவாக யோகிகளும் சாதுக்களும் இந்த சத்திரத்தை அண்டுவது கிடையாது. பணக்கார வணிகர்களை, அரச அதிகாரிகளை விரும்பி வரவேற்பதை பழக்கமாகக் கொண்டிருந்த சஜ்ஜனுக்கு யோகிகளையும் சாதுக்களையும் வரவேற்பதில் ருசி கிடையாது. சத்திரத்துக்கு வந்த அன்றைய விருந்தினர்களைக் கண்டவுடன் கஜ்ஜனும் சஜ்ஜனும் அதிருப்தியடைந்தனர். அவர்கள் தம் அதிருப்தியை முகத்தில் காட்டவில்லை. பாபாவையும் மர்தானாவையும் வரவேற்று உணவளித்து உபசரித்த பிறகு அவர்களின் அறையை காண்பித்துக் கொடுத்தனர். விருந்தினர்களிடமிருந்து கொள்ளையடிப்பது தினமும் நிகழ்த்துவது தான். தொடர்ந்து பணக்கார விருந்தினர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இந்த பாபாவிடம் உண்மையான விருந்தோம்பலை காட்டிவிட்டுப் போவோமே என்று சஜ்ஜன் நினைத்திருக்கலாம்!

விடுதியில் அன்று அதிகம் விருந்தினர்கள் இல்லை. மூன்று அறைகளில் மட்டுமே விருந்தினர் இருந்தனர். மூன்று அறைகளும் மூடிய பிறகு முன்னிரவில் மாமனும் மருமகனும் சமையலறையில் சந்தித்தனர்.

"அவ்விருவரையும் உயிருடன் விடுவதா அல்லது கொல்வதா?" – மாமனாகிய சஜ்ஜன் கேட்டான்.

"இந்த இரண்டு ஃபகீர்களைக் கொன்று என்ன பயன்? நமக்கு உபயோகமான எதுவும் அவர்களிடம் இருக்குமெனத் தோன்றவில்லை. அவர்கள் இருவரும் அதிக நாள் இங்கே இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒரு நாளோ இரண்டு நாளோ தங்கிக் கொள்ளட்டுமே" – கஜ்ஜனின் பதில்.

"கஜ்ஜன், நீ சின்னப் பையன். இந்த புனித ஆசாமிகளைப் பற்றி நீ இன்னும் அறிந்திருக்கவில்லை. பயண வழியில் கொள்ளையடிக்கப்படப் போகும் பயம் காரணமாக செல்வந்தர்கள் பலர் இந்த மாதிரி சாது வேஷம் போட்டுக்கொள்வதுண்டு. அவர்களிருவரும் லாகூர் நகரின் பெரிய வணிகர்கள் என்பது என் யூகம். பாதுகாவலர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் மிச்சம் பிடிக்க இது ஓரு வழி”

“அவர்கள் வணிகர்கள் என்றால் எங்கே அவர்களின் உடைமைகள்? இருவரும் வெறும் கையை வீசிக் கொண்டல்லவா வந்தார்கள்?”

“தம் உடைமைகளை காட்டுக்குள், மயானத்துக்கருகே, எங்கேனும் மறைத்து வைத்து விட்டு இங்கே நுழைந்திருக்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”

“இல்லை மாமா, எனக்கென்னவோ நீங்கள் அவர்களைப் பற்றி தவறாகக் கணிக்கிறீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது. பார்க்க மிகவும் எளிமையாக இருக்கிறார்கள். எனினும், அவர்களை நீங்கள் கொல்லத்தான் வேண்டுமென்று சொன்னால் அந்த காரியத்தில் ஒத்தாசையாய் இருப்பேன். ஆனால், துறவிகளின் கோபத்துக்கு ஆளாவதை எண்ணி அஞ்சுகிறேன். அவர்கள் பல மந்திர சக்திகளை பெற்றவர்களாக இருந்தால்..அவர்கள் நிஜமாகவே கடவுளின் மனிதர்களாக இருந்தால்..”

“முட்டாள்தனமாகப் பேசாதே…இது கலியுகம்…இவ்வுலகத்தில் புனிதர்கள் யாரும் எஞ்சியிருக்கவில்லை. அனைவரும் ஏமாற்றுக்காரர்கள். ஆன்மீகத்தை வியாபாரமாக ஆக்கிவிட்டவர்கள்”

+++++

மர்தானா மகிழ்ச்சியாயிருந்தான். அவனுடைய வேண்டுகோளுக்கு பாபா செவி மடுத்தது அவனுக்கு உற்சாகத்தை தந்தது. பாபாவுடன் பேச முயன்றான். பாபா பதிலேதும் அளிக்காமல் எதை பற்றியோ யோசனையில் இருந்தார். மர்தானாவுக்கு குற்றஉணர்வு ஏற்பட்டது. அவருடைய விருப்பத்துக்கு மாறாக அவரை சத்திரத்துக்குள் அழைத்து வந்துவிட்டது தான் பாபாவின் மௌனத்துக்கு காரணமாக இருக்கும் என்று நினைத்தபோது அளவிலா வருத்தம் மேலிட்டது. அறையின் ஓர் ஓரத்தில் பதான்கள் மீட்டும் ரூபாப் இசைக்கருவி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து மீட்டத் தொடங்கினான் மர்தானா. உருக்கமான இசை பிறந்ததும் பாபா கண்ணை மூடியவாறே தியானம் செய்பவர் போல இருந்தார். சில நிமிடங்களில் மர்தானாவின் இசையோடு அவரின் குரலும் சேர்ந்து கொண்டது. அவர் உதட்டிலிருந்து புனித குர்பானி வெளிப்பட்டது.

“பித்தளை ஒளிரும், பளபளக்கும், ஆனால் தேய்த்தால், அதன் கருந்தன்மை தோன்றுகிறது. கழுவினால், அதன் அசுத்தம் அகல்வதில்லை, ஆயிரம் முறை கழுவினாலும் ; என்னுடன் பயணப்படுபவர்கள் மட்டுமே என் நண்பர்கள் ; எங்கு கணக்குகள் கேட்கப்படுகின்றதோ, அங்கு அவர்கள் என்னுடைய வரிசையில் நிற்பார்கள்"

பாபா பாடலை நிறுத்திய பின்னும் மர்தானாவின் ரூபாப் இசை தொடர்ந்தது. பாபாவின் களைப்பு நீங்கிவிட்டது போலிருந்தது. அவர் வெளிப்படுத்திய சொற்கள் அவரின் களைப்பை முற்றிலும் உறிஞ்சிவிட்டதோ என்னமோ! மர்தானாவுக்கு தெளிவாகத் தெரிந்தது. பாபாவின் வரிகள் தன்னை நோக்கியது. அவரின் செய்தி தனக்காகத்தான் என்று அவன் உணர்ந்தான். அவன் கண்ணிலிருந்து அமைதியாக கண்ணீர் உருண்டோடியது. இசையின் சத்தத்தில் தன் உணர்ச்சிகளை கரைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அறைக்கு வெளியே கையில் கத்தியுடன் காத்துக் கொண்டிருந்த சஜ்ஜனுக்கும் கஜ்ஜனுக்கும் கூட பாபாவின் குர்பானி காதில் விழுந்தது. அறைக்குள்ளிருக்கும் இருவரை மிரட்டி அவர்கள் தம் உடைமைகளை ஒளித்து வைத்திருக்கும் இடத்தை கேட்டுக் தெரிந்து கொண்டு பின்னர் தீர்த்துக் கட்டிவிடும் நோக்கத்துடன் அறைக்கு வெளியே வந்து நின்றவர்களை கட்டிப் போட்டது பாபா பாடிய குர்பானி. மர்தானா அளவுக்கு நெகிழவில்லையெனினும் சஜ்ஜனுக்கு பாபா பாடுவது தம்மைப் பற்றியோ எனும் சந்தேகம் துளிர் விட்டது. இசை நிற்கட்டும் எனக் காத்திருக்கலானான்.

பாபா மீண்டும் பாடத் துவங்கினார்

“ எல்லா பக்கங்களிலும் வர்ணம் பூசப்பட்ட வீடுகள், மாளிகைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் உள்ளன; ஆனால் அவை உள்ளே காலி, பயனற்ற இடிபாடுகள் போல நொறுங்குவன அவை. வெள்ளை இறகுகள் கொண்ட ஹெரோன்கள் புனித ஆலயங்களில் வாழ்பவை, அவை உயிரினங்களைக் கிழித்து சாப்பிடுகின்றன, எனவே அவை வெள்ளை என்று குறிக்கப்படுவதில்லை. என் உடல் செமல் மரம் போன்றது; என்னைப் பார்த்து, மற்றோர் முட்டாளாகிறார்கள். அதன் பழங்கள் பயனற்றவை-என் உடலின் குணங்களைப் போலவே. குருடன் ஓருவன் பாரமான சுமையைச் சுமக்கிறான், மலைகள் வழியாக அவன் பயணம் மிக நீளமானது. என் கண்களால் பார்க்க முடியும், ஆனால் என்னால் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. நான் எப்படி மேலே ஏறி மலையை கடக்க முடியும்? சேவை செய்வதிலும், நல்லவராக இருப்பதிலும், புத்திசாலித்தனமாக இருப்பதிலும் என்ன நன்மை இருக்கிறது? ஓ நானக், கடவுளின் நாமத்தை ஜெபித்தவாறிருங்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.”

அறைக்கு வெளியே கத்தியுடன் நின்றிருந்த சஜ்ஜனின் உடலில் ஓர் அதிர்வு. "மாமா என்னாச்சு" என்று கேட்டான். சஜ்ஜன் அதற்கு பதில் சொல்லாமலேயே கதவை லேசாகத் தொட்டான். திறந்து கொண்டது. பாபா இருந்த அறை தாழிடப்பட்டிருக்கவில்லை. அறைக்குள் நுழைந்தான் சஜ்ஜன். அவன் கையில் இருந்த கத்தியைப் பார்த்து மர்தானாவுக்கு உதறல். ஆனால் அடுத்த கணம் வேறு அதிசயம் நடந்தது. தரையில் அமர்ந்திருந்த பாபாவின் பாதத்துக்கருகே கத்தியை வைத்துவிட்டு அவர் காலில் வந்து விழுந்தான். பாபா அமைதியாய் இருந்தார். அவரில் ஒரு சலனமும் இல்லை.

மாமாவின் செய்கைகள் கஜ்ஜனுக்கு சுத்தமாக விளங்கவில்லை. மாமாவின் வழியில் மாறாமல் செல்லும் மருமகனுக்கு வேறென்ன தெரியும்!. மாமாவைப் போல அவனும் பாபா முன்னர் மண்டியிட்டான்.

பாபா அன்று மாலை உதிர்த்த பெயரை அறையில் இருந்த அனைவர் காதில் விழும்படி மீண்டும் உதிர்த்தார்.

"தரம்பால்….தரம்பால்"

சுல்தான்பூரில் பாபா இல்லறவாசியாக இருந்தபோது திவானின் அலுவலகத்தில் கொள்முதல் அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் கம்பளம் விற்க வந்த தரம்பாலுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு பற்றி மர்தானா ஏற்கனவே அறிந்திருந்தான். பாபாவைச் சந்திக்க சுல்தான்பூர் வரும் சமயங்களில் அவனும் தரம்பாலை ஓரிரு முறை சந்தித்திருக்கிறான்.

சஜ்ஜனுக்கு ஒருவாறு புரிந்தது.

"எத்தனை பேரைக் கொன்றிருப்பேன் என்பதற்கு ஒரு கணக்கு கிடையாது" – அவனாகவே ஒப்புக்கொண்டான்.

"ஹ்ம்ம்..இந்த கம்பளம்" என்று பாபா சொன்னபோது அவனுக்கு இன்னும் நன்கு புரிந்தது.

"பாபா..நீங்கள் யார்"

"என் பெயர் நானக்"

+++++

அடுத்த நாளிலிருந்து சத்திரம் கடவுள் இல்லமாக மாறியது. சமய வேற்றுமை பாராமல் அனைவர்க்கும் அங்கே இடமளிக்கப்பட்டது. உணவு இலவசமாக வழங்கப்பட்டது. செல்வந்தன் – வறியவன் என்னும் வேற்றுமைகள் அங்கே பாராட்டப்படவில்லை. சாதி வேறுபாடுகள் கடவுள் இல்லத்தில் அனுமதிக்கப்படவில்லை. நுழைவாயிலில் புதிய பெயர் பொறிக்கப்பட்டது. குருத்வாரா. சீக்கிய மரபின் முதல் குருத்வாரா அது. பாகுபாடின்றி உணவளிக்கும் பழக்கம் முதல் குருத்வாராவாகிய சஜ்ஜன் – கஜ்ஜன் சத்திரத்திலிருந்து தொடங்கியது. இதுவே லங்கர் மரபாக இன்றைய குருத்வாராக்களிலும் தொடர்கிறது.

+++++

நன்றி : சொல்வனம்

கனவுக்குள் புகுந்த சிங்கம்

ஒரு நாள் என் கனவுக்குள் சிங்கமொன்று நுழைந்துவிட்டது. சுதந்திரமாக உலவிவந்த வனாந்தரப் பிரதேசத்திலிருந்து கடத்திவரப்பட்டு பின்னர் விலங்குகள் சரணாலயத்துக்குள்ளோ அல்லது சர்க்கஸில் கேளிக்கை ஜந்துவாகவோ அடைக்கப்பட்டுவிட்ட கோபம் அதனுள் பல நாட்களாகக் கனன்று எப்படியோ என் கனவுக்குள் நுழைந்து தப்பிக்க முயன்றது. சிங்கத்தின் கோபம் பற்றி நீ எப்படி அறிவாய் என்று வாசகர்கள் யாரேனும் கேள்வி கேட்கலாம். நம்பிக்கையின்மையை துறந்து என் கனவுக்குள் சிங்கம் நுழைந்ததை முழுதாக நம்பும் அவர்கள் தர்க்கரீதியாக “சிங்கத்தின் சீற்றம் இயற்கையானது” என்ற காரணத்தைத் தவிர சிங்கம் கோபமாயிருப்பதற்கான வேறெந்த காரணத்தையும் நம்ப மாட்டார்கள்.

உண்மையை‌ முதலிலேயே சொல்லி விடுகிறேன்! கனவில் நிஜமாகவே சிங்கம் வந்ததா என்பதை நான் பார்க்கவில்லை. இல்லை ஆரம்பத்தில் இருந்து சொன்னால் சரியாக புரியும்! ஒரு நாள் என் கனவில் முக பரிச்சயம் இல்லாத பெயர் அறியாத சிலருடன் ஒரு மேடான பகுதியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.நின்றிருந்தது யாருடன் என்று விழிப்பு நிலையில் யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் என் நண்பர்களா? அல்லது வெறும் பரிச்சயங்களா? அவர்களின் முகங்கள் ஞாபகமில்லை. கனவுகளில் வரும் முகங்கள் பொதுவாக அதிகமும் ஞாபகத்தில் இருப்பதில்லை. சிங்கம் நுழைந்த கனவில் நான் யாருடன் நிற்கிறேன் என்பது தெரியாவிட்டாலும் அவர்களுடன் மகிழ்வாக பேசிக் கொண்டிருக்கிறேன். கனவில் உரையாடும் காட்சி மௌனப்படம் போலவே நகர்கிறது. இது திரைப்படம் எனில் இயக்குனர் அங்கு பேசி நின்றிருந்த காட்சியை நல்ல இசையால் நிரப்பியிருப்பார்.

நாங்கள் நின்றிருந்த சில தப்படிகள் பின்னால் குறுக்கலாக ஒரு சரிவு. ஒரு வட்டமாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்த எங்களுக்குப் பின்னால் சரிவில் சிங்கமொன்று ஓடிப் போனதாக வட்டத்தில் நின்றிருந்த ஒருவர் சொல்லவும் வட்டம் ஒரு கணத்தில் கலைந்து போனது. அவர் சொன்னபடி பார்த்தால் சிங்கம் ஓடிப்போன சமயத்தில் அது என் முதுகுக்கு சில தப்படிகள் பின்னால் குறுக்காக ஓடியிருக்க வேண்டும். அதன் கோபத்தை ஆற்றிக் கொள்ள ஏதுவாக நின்று கொண்டிருந்த எங்களை அது ஏன் பார்க்கவில்லை என்ற கேள்விக்கு ஒரு விளக்கமும் இல்லை. சொல்லப்போனால் அதற்குப் பிறகு நாங்கள் அப்போது செய்த காரியத்தை நாங்கள் தர்க்க ரீதியாக விளக்கவே முடியாது. சிங்கம் ஓடின திசையிலேயே நாங்கள் தப்புவதற்காக ஓடினோம். சரிவுப்பாதையிலிருந்து பாதை வலப்புறமாகச் சென்றது. பாதையில் சிங்கம் என் பார்வையில் சிங்கம் படவில்லை. பாதையின் போக்கில் சிங்கம் வளைந்து சென்றிருக்கலாம். சிங்கம் சென்றிருக்கக் கூடிய பாதைக்கு எதிர்ப்பாதையில் அல்லவா நான் ஓடியிருக்க வேண்டும்? என்னுடன் இருந்தவர்களும் எனக்கு பின்னாலேயே ஓடி வந்தார்கள். தர்க்க ஒழுங்கு பற்றி கவலைப்பட அது சமயமில்லை. ஓடி ஒளிந்துகொள்வது தான் எங்கள் உடனடித் தேவையாய் இருந்தது.

கனவில் வரும் சொல்லாடலை யார் நிகழ்த்துகிறார்கள்? கனவைக் காண்பவரே கனவின் சம்பவங்களை பாத்திரங்களை கட்டுப்படுத்தும் கனவுகளை Lucid Dream என்று மனோதத்துவாசிரியர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட புத்தம்புது பிரிண்ட் திரைப்படத்தை காண்பது போன்று தெளிவாக விரிந்த இந்தக் கனவுக் காட்சியை Lucid Dream என்று சொல்லலாமோ?

ஐம்பது அடி ஓடியிருப்போம். சரிவு முடிந்து பாதை தட்டையானபோது வலப்பக்கம் ஒரு கதவு தென்பட்டது. கதவை லேசாக தொட்டதும் திறந்து கொண்டது. அதற்குள் முதலில் நான் நுழைந்தேன். என் பின்னால் ஓடி வந்தவர்களும் அந்த அறைக்குள் ஒருவர்பின் ஒருவராக நுழைந்து கொண்டார்கள். உள்ளே நான்கைந்து க்யூபிக்கில்-களில் கம்பியூட்டர் திரைகளைப் பார்த்துக் கொண்டு சில பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சிங்கம் ஓடிய விஷயத்தையோ அதற்குப் பயந்து அது ஓடிய பாதையிலேயே ஓடிய எங்களின் முட்டாள்தனத்தையோ அறியாதவர்களாக அமைதியுடன் பதற்றமின்றி இருந்தார்கள். அறைக்கு வெளியே நிகழ்ந்து கொண்டிருந்த இயல்பான வெளிச்ச-இருள் மாற்றங்களின் பாதிப்பின்றி ஒளி விளக்குகளின் ஒரே சீரான செயற்கை வெளிச்சத்தில் எந்நேரமும் மூழ்கியிருக்கும் அறை போலும் அது. உள்ளே நுழைந்த எங்களின் பதற்றம் அந்த அறையில் ஏற்கனவே இருந்தவர்களின் முகபாவங்களில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எங்களைப் பார்த்து அளவெடுத்தது போன்று புன்னகைத்தார்கள். எங்களின் அதிரடி உள் நுழைவு அவர்களை தொந்தரவுபடுத்தியதாக அவர்கள் காட்டிக் கொள்ளவில்லை. நாங்கள் ஏன் உள்ளே நுழைந்தோம்? வெளியே என்ன நடக்கிறது? என்ற விவரங்களை அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வங்காட்டவில்லை.

நான் எங்கிருக்கிறேன்? இந்த அலுவலகம் இங்கு ஏன் இருக்கிறது? இந்த அலுவலகத்திலிருந்தா சிங்கம் தப்பித்து ஓடியது? இல்லை…இருக்காது…அலுவலகத்துக்கு பின்புறம்..அல்லது முன்புறம் ஜூ உள்ளதோ…அங்கிருந்துதான் சிங்கம் தப்பியிருக்குமா? இல்லையேல் இந்த அறைக்கு முன்புறத்தில் சர்க்கஸ் கம்பெனி ஏதாவது கூடாரமிட்டிருக்குமா? ஜூவிலிருந்தோ சர்க்கஸ் கூடாரத்திலிருந்தோ சிங்கம் வெளியே வந்திருக்கலாம். ஜூவும் அலுவலகமும் அல்லது சர்க்கஸும் அலுவலகமும் ஒரே வளாகத்தில் உள்ளதோ….

அதுவரை அந்தக் கனவு ஒரு மௌனக்கனவாக இருந்தது. “சிங்கம் வெளியே துரத்துது..சத்தம் கேட்கலியா?” என்று என்னுடன் ஓடி வந்தவர்களில் ஒருவன் அலுவலகத்திலிருப்பவர்களிடம் கேட்கிறான். அந்தப் புள்ளியில் அந்தக் கனவு “”டாக்கி”யானது. பதில் எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

வெளியிலிருந்து வரும் சத்தங்களில் என் செவிகள் பதிந்திருந்தன. ஆட்கள் பரபரப்பாக ஓடும் சத்தம் கேட்கிறது. அலுவலக அறையின் பின் புறத்திலிருந்து சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்கிறது. நாங்கள் நுழைந்த மெயின் கதவுக்கு நேரெதிராக இன்னொரு கதவு தெரிந்தது. அது அலுவலகத்தின் இன்னொரு வெளிப்புறத்தில் திறக்கும் போல இருந்தது. நாங்கள் முதலில் நுழைந்த கதவு போல் இல்லாமல் இந்த கதவு குறுகலாக திறந்தது. நான் லேசாக அந்தக் கதவைத் திறந்து வெளியே பார்க்க எத்தனித்தேன். சின்னதாக திறந்து வெளியே நோக்கினேன். ஒரு சின்ன பையன் தலைப்பாகையுடன் கதவருகே நின்றிருந்தான். அவன் செக்யூரிட்டியாக இருப்பான் என்று நினைத்தேன். சீருடை அணிந்திருக்கவில்லை. செக்யூரிட்டியாக இருக்க முடியாது. அவன் இடது கையில் வலையைப் பிடித்திருந்தான். இன்னொரு கையில் ஒரு மூங்கிற்கழி இருந்தது. அந்தக் கழியினால் தரையை தட்டியபடி நின்றிருந்தான். அறைக்குள்ளிருந்து வெளியே ஜாக்கிரதையாக தலையை வெளியே நீட்டிய எனக்கு அவனைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. “உள்ளே போங்க…பயப்படாதீங்க…சிங்கத்தைப் புடிச்சிடுவோம்” என்று தன்னம்பிக்கையுடன் சொன்னான். எங்களை ஆசுவாசப்படுத்த விரும்பினான் போல. கழியை இன்னுமொருமுறை தரையில் தட்டினான். நான் சின்னக் கதவை அடைத்துவிட்டு அலுவலகவாசிகள் வேலை செய்து கொண்டிருந்த முக்கிய அறைக்கு திரும்பினேன். என்னுடன் கூட ஓடி வந்தவர்கள் ஓய்வின்றி உலாத்திக் கொண்டிருந்தார்கள். அலுவலக அறையில் ஏற்கனவே இருந்தவர்களோ இமை கொட்டாமல் கணிணித் திரையைப் பார்த்தபடி அசைவின்றி உட்கார்ந்திருந்தார்கள்.

வெளியே சத்தம் குறைந்திருந்தது போன்று தோன்றியது. ஒருவர் பின் ஒருவராக வெளியே செல்லலாம் என்று முடிவானது. எந்த கதவின் வழியாக நுழைந்தோமோ அந்த கதவை திறப்பதாக திட்டம். திறப்பதற்கு முன் மீண்டுமொரு முறை கதவின் மேல் காதை வைத்து கேட்டேன். ஒரு சத்தமும் இல்லை. ஓரிரு நிமிடங்கள் என் காது கதவில் பதிந்தே இருந்தது. சிங்கத்தின் கர்ஜனை, அது ஓடும் சத்தம், கழி தரையில் தட்டப்படும் ஓசை எதுவும் கேட்கவில்லை. ஹ்ம்ம்…எதுவும் ஆகாது…சிங்கத்தைப் பிடித்திருப்பார்கள்…கூண்டில் அடைத்திருப்பார்கள்…கதவைத் திறந்து முதலடியைக் கவனமாக அறைக்கு வெளியே வைத்தேன்.

+++++

என் கைத்தொலைபேசி பாடியது…நான்கு மணிக்கு அலார்ம் வைத்திருந்தேன். இல்லை…அலார்ம் இல்லை…இந்நேரத்தில் யார் அழைக்கிறார்கள்? போர்வையை விலக்கிவிட்டு எழுந்து மேசையில் இருந்த கைத்தொலைபேசியை எடுத்தேன். யாரோ புரியாத மொழியில் ஏதோ கேட்டார்கள். இரண்டு முறை “யார் நீங்கள்” என்று கேட்டேன். அழைத்தவருக்கு என் இந்தி புரியவில்லை. அவர் என்ன மொழி பேசினார் என்பது எனக்கு தெரியவில்லை. அழைப்பை துண்டித்துவிட்டு நேரம் பார்த்தேன். மூன்றரை ஆகியிருந்தது. படுக்கைக்குத் திரும்பினேன்

+++++

//மன நல சிகிச்சையில் கனவுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தலை உத்தியாக முதன்முதலில் பயன்படுத்தியவர் சிக்மண்ட் ப்ராய்ட். அவருடைய சீடர் கார்ல் யங்-கும் கனவுகளின் பகுப்பாய்வை மன நல மருத்துவ உத்தியாக பயன்படுத்தினார். கனவுகளை இருவரும் வெவ்வேறு விதத்தில் அணுகினர். ப்ராய்டு கனவுகளை ஆழ்மனத்தில் அடக்கி வைக்கப்பட்ட ஆசைகளின் இயக்கிகளாக அணுகினார். யங் அதற்கு எதிரான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். தீர்வை நோக்கிய படைப்பாற்றலின் வெளிப்பாடாக கனவுகளை அணுகினார். கனவு காண்பவனுடன் ஒத்துப் போகாதவற்றைக் கூட ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் ஆசைகளின் இயக்கிகள் என ப்ராய்டு பகுப்பதை யங் விமர்சித்தார். கனவு காண்பவனுடன் ஒத்துப் போனாலொழிய கனவுப் பகுப்பாய்வு எந்த வித பயனையும் தராது என்றார் யங்.//

டாக்டர் முகர்ஜியின் சேம்பருக்கு முன்னர் காத்துக்கிடந்த போது மைய மேசையில் வைக்கப்பட்டிருந்த இன்றைய மனோதத்துவம் இதழில் ஒரு கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன். கட்டுரையை முடிப்பதற்குள் டாக்டர் முகர்ஜி அறையை விட்டு வெளியே வந்து உள்ளே வருமாறு என்னைப் பணித்தார்.

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மன நல ஆலோசனைக்காக டாக்டர் முகர்ஜியை ஆறு மாதங்களாக சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

“உலகின் மிகவும் பழமையான காப்பியம் – கில்கமேஷ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு நான் பதில் தருவேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை போலும். இடைவெளிவிடாமல் கில்கமேஷ் காவியத்தைப் பற்றி அவரே சிறுகுறிப்பு வரைந்தார். “இறவா வரத்தை நாடிச் செல்லும் அரச குமாரன் கில் கமேஷ். அதற்கான அவனது முயற்சிகளை புராணக்கதை வடிவில் விவரிக்கும் காப்பியம் அது. கில் கமேஷுக்கு காவியம் நெடுக பல கனவுகள் வருகின்றன. காப்பியத்தின் போக்கில் கனவுகள் முன் உணர்வுக் கருவிகளாக அவனுக்கு உதவுகின்றன. பாபிலோனியர்களுக்கும் சரி எகிப்தியர்களுக்கும் சரி கனவுகள் என்பன மனிதர்களை தெய்வங்கள் தொடர்பு கொள்ளும் வழி என்று கருதினர்.”

பொதுவாக எப்போதும் என்னை அதிகமாக பேசச் சொல்லும் முகர்ஜி இன்று பேசும் மூடில் இருக்கிறார். அவர் பேச்சில் கவனம் செலுத்தாமல் என் எண்ணம் அலை பாய்ந்தது. மன அழுத்தம் காரணமான பதற்றம் மற்றும் அதீத கவலை என அலை பாயும் மனதுடன் ஆறு மாதம் முன்னர் டாக்டர் முகர்ஜியின் உதவியை நாடினேன். ஆரம்பத்தில் மாத்திரைகள் சாப்பிடச் சொன்னார். மாத்திரைகள் நரம்புகளில் செரடோனின் ரசாயனத்தை சரியாக சுரக்கச் செய்யும் அல்லது அதீதமாக சுரக்கும் செரடோனினை கட்டுப்படுத்தும். மாத்திரைகளுடன் கூடவே உளவியல் ஆலோசனையும் இணையாகச் செல்ல வேண்டும். மன அழுத்தத்திற்கான புறக்காரணிகளைப் பற்றி விரிவாகப் பேசுதல், பிரக்ஞை வெளிச்சம் படாத அடக்கி வைக்கப்பட்ட உணர்வு நிலைகளின் மேல் கருணையுடன் கூடிய கவனத்தைப் பாய்ச்சுதல், சுய கருணையுடன் அதீத எதிர்பார்ப்புகளின் எடையைக் குறைத்தல், ஒப்பீடு, கழிவிரக்கம் என எண்ணத்தில் படிந்த ஓட்டடைகளை விலக்குதல் – பல இலக்குகளை மாதம் இரு முறை நடக்கும் சந்திப்புகளில் முகர்ஜியின் உதவியால் அடைய முயன்றிருக்கிறேன். ஆனால் சில வாரங்களாக லேசான குற்றவுணர்ச்சி. எத்தனை முன்னேற்றம் கண்டிருக்கிறேன் என்பதை புறவயமாக அளவிடமுடியாத் தன்மை என்னை சற்று தொந்தரவு செய்கிறது. பதற்றம் குறைந்திருக்கிறது ; அலுவலகத்தில் அதிகாரியின் படுத்தல்களை என் முதுகுக்குப் பின் அவர் செய்யும் சதிகளை அதிக உணர்ச்சிக் கலப்பு இல்லாமல் எதிர்கொள்ளும் வித்தையில் ஓரளவு தேர்ச்சி பெற்று வருகிறேன். “இதெல்லாம் ஏன் நடக்கிறது?” என்ற கேள்வி சிந்தனையில் எழுந்து என்னை அவ்வப்போது நிலைகொள்ளாமல் வைக்கிறது. இதை மட்டும் சற்று சரி செய்து விட்டால் அமைதி திரும்பிவிடும். தொடர்ந்து இன்னும் எத்தனை மாதங்கள் இப்படி உளவியல் மருத்துவரை சார்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் சங்கடப் படுத்திக் கொண்டிருந்தது. முகர்ஜியின் திறமை மீதான சந்தேகத்தின்பாற்பட்டதில்லை இது. மன நல மருத்துவரை அணுகியது நான்தான். அவரிடம் செல்வதை எப்போது நிறுத்த வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். அதே வேளையில் முகர்ஜியின் அயராத முயற்சிகள் உரிய, பொருத்தமான முடிவை எய்தும் வரை பொறுமையாக அவருடன் ஒத்துழைத்தலும் மிக அவசியம் என்றும் நான் நினைக்கிறேன். சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததா என்பதை என் உள் அறிதல் வாயிலாக மட்டுமே உணர்தல் சாத்தியம் என்று முகர்ஜி ஆரம்ப சந்திப்புகளில் சொல்லியிருக்கிறார்.

ஆறு மாத சிகிச்சைக்குப் பிறகு முகர்ஜி புது வித நுட்பத்தை உபயோகிக்க விரும்பினார். சமீபத்தில் நான் கண்ட கனவைப் பற்றி ஒரு குறிப்பு எழுதிக் கொண்டு வருமாறு சென்ற சந்திப்பில் டாக்டர் முகர்ஜி சொல்லியிருந்தார்.

சிங்கக் கனவைப் பற்றி எத்தனை தகவல்கள் ஞாபகத்தில் இருந்தனவோ அத்தனை தகவல்களையும் என் குறிப்பில் சேர்த்திருந்தேன்.

கனவுப் பகுப்பாய்வு இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மனோ தத்துவ மருத்துவர்களால் பரவலாக பயன் படுத்தப்பட்டது. இப்போதெல்லாம் மனோ தத்துவ சிகிச்சைக் கருவியாக கனவுப்பகுப்பாய்வு அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக இந்தியாவில். ஆனால், அயல் நாடுகளில் ‘psycho-analysis’ மற்றும் ‘gestalt psychology’ என்னும் மனோதத்துவப் பிரிவுகளில் கனவுகளின் பகுப்பாய்வு பரவலாக உபயோகத்தில் உள்ளது.

“சிங்கக் கனவு சுவாரஸ்யமாயிருக்கிறது. நீங்கள் பகுதி நேர எழுத்தாளர் என்பதால் சுவையாக அதை பதிவு செய்திருக்கிறீர்கள். இந்தக் கனவில் உம்முடைய இப்போதைய மன நிலைக்கான விடை இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா?”

எப்படி துவங்குவது என்று தெரியவில்லை. சில நொடிகள் தயங்கினேன்.

“இணைய தளங்களில் கனவுகளுக்கான பொருள் கொள்ளலைப் பற்றி அறிய முயன்றேன். ஆனால் பல்லி சொல்லுக்குப் பலன் என்று பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படுவதைப் போல எளிதான விஷயமாக இருக்கவில்லை. கனவுகளுக்கு ஒரு பொதுவான கருப்பொருள் இருப்பதில்லை. சிங்கம் பற்றிய கனவுக்கான பொருள்விளக்கம் பொதுவான ராசி பலன் வாசிப்பது போன்று ஒத்திசைவற்ற உணர்வைத் தந்தது.”

கையோடு கொண்டுவந்திருந்த நோட்புக்கில் குறித்து வைத்திருந்தனவற்றை வாசித்துக் காண்பித்தேன்.

“வலிமை, தைரியம், கம்பீரம் மற்றும் பெருமிதச் சிந்தனை – இவற்றின் குறியீடு சிங்கம். சிறுமைகளிலிருந்து விடுபட்டவர்க்கே சிங்கக்கனவு தோன்றும்.”

“சிங்கத்தை கனவில் காணுதல், மேலே சொன்ன குணங்களை விட, போராட்டத்தையே அதிகமாகக் குறிக்கிறது. போராட்டத்தில் வெற்றி பெற்று பல்வேறு பிரயாசங்களிலும் தலைவனாக மிளிர்வதையும் சிங்கத்தை கனவில் காணுதல் குறிக்கிறது.”

“திருமணமாகாத பெண்ணின் கனவில் சிங்கம் வந்தால் அவளுக்கு திருமணமாகும்.”

“ஓர் இளம் வாலிபனின் கனவில் சிங்கம் வந்தால் யதார்த்த வாழ்க்கையில் எதிரி ஒருவனால் எளிதில் அவனது இடம் எடுத்துக் கொள்ளப்படும்.”

“ஒரு சர்க்கஸில் சிங்கம் நடிப்பது போல கனவு வந்தால், உன் வாழ்க்கையில் எளிதாக கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படக் கூடிய கஷ்டங்கள் உருவாகும் என்று பொருள் கொள்ளலாம்.”

“உன் கண்களின் முன்னால் சிங்கம் எதையாவது தின்னுவது போன்ற கனவு வந்தால், உன் யதார்த்த வாழ்வின் பிரச்னைகள் வித்தியாசமான வழிகளில் தீரும்.”

“ஓர் இளஞ்சிங்கத்தை நீ உன் கனவில் பார்த்தால் யதார்த்தத்தில் உன் வியாபாரக் கூட்டாளிகளினால் தொல்லைகள் ஏற்படும்.”

“கர்வமாக நடைபோடும் சிங்கத்தை கனவில் பார்த்தால், குடும்பப் பிரசினைகளின் சாத்தியம் உண்டு என்று பொருள் ; ஆனால் உன் வாழ்க்கைக் கூட்டாளியின் துணை கொண்டு அப்பிரச்னைகளை தீர்த்துவிடக் கூடும்.”

நான் படித்துக் காட்டியதும் முகர்ஜி சிரித்தார்.

“சிங்கம் கனவில் வருவதை எப்படி பொருள் கொள்ளலாம் என்பதை தேடினால் இளஞ்சிங்கம், பெண் சிங்கம், ஆண் சிங்கம், சிங்கத்துடன் விளையாடுதல், சிங்கம் கனவு காண்பவனை துரத்துதல் என்று விதவிதமாக விளக்கங்கள் போட்டிருக்கிறார்கள். சிங்கம் வருகிறது என்று கேள்விப்பட்டவுடனேயே அறைக்குள் சென்று தாழ் போட்டுக்கொண்டு ஒளிந்து கொண்ட கனவில் சிங்கத்தை பார்க்கவேயில்லை. ஆனால் சிங்கம் பற்றிய பயம் இருந்தது. கனவில் இல்லாமல் இருந்த சிங்கத்தை எப்படி பொருள் கொள்வது?”

இன்னும் பலமாக சிரித்தார் முகர்ஜி. இதற்கு முன்னர் நடந்த அமர்வுகள் இத்தனை லேசாக சென்றிருக்கவில்லை.

மன நல சிகிச்சையின் போது கனவை பொருள் விளக்கம் கொள்ளுதலில் பல வித வழிமுறைகள் உள்ளதாகக் கூறி அதில் ஒரு சிலவற்றை விளக்கினார். “நீ சொன்ன ராசி பலன் மாதிரியான பொருள் கொள்ளல் நமது கலாசாரத்திலிருந்து பெறப்படுவது. கனவுகளை பொருள் கொள்ளலில் கலாசார விழுமியங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. எனினும் மன நல சிகிச்சையில் கனவில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் நிஜ வாழ்க்கையில் யாரை எதை குறிக்கிறது என்பதை கனவு காண்பவர் அடையாளங்காணுதலிலிருந்து கனவுப் பகுப்பாய்வு தொடங்குகிறது”

முகர்ஜி அன்றைய அமர்வை விரைவில் முடித்துக் கொண்டார். அடுத்த சந்திப்புக்கு வரும்போது நான் எழுதித் தந்த கனவு பற்றி நன்கு யோசித்துக் கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.

“உன் கனவுக் குறிப்பை வாசித்தபோது ஹெமிங்வேயின் ஓல்ட்மேன் அண்ட் தி ஸீ நாவல் என் ஞாபகத்துக்கு வந்தது. அதில் கிழவன் சாண்டியாகோ அடிக்கடி சிங்கங்களை கனவில் காண்பான். அதுவும் குழுக்களாக சிங்கங்கள் உலா வருவதாகக் கனவு காண்பான். நீ பார்த்த இணைய தளத்தில் சாண்டியாகோவின் கனவுக்கு என்ன பொருள்விளக்கம் தந்திருப்பார்கள்?”

+++++

வீடு திரும்பியதும் பக்கம் பக்கமாக குறிப்புகள் எழுதினேன்.

என் கண்ணுக்குத் தெரியாத சிங்கம் என்னுள் பயத்தை ஏற்படுத்தியது. என் மீது மட்டுமல்ல. என்னுடன் பேசிக் கொண்டிருந்த மேலும் சிலருக்கும் தான். கண்ணுக்குத் தெரியாத சிங்கம் என் அதிகாரியைக் குறிக்கிறதா? இல்லை. என் பயங்கள், பாதுகாப்பின்மை – இவைகளைத்தான் கூண்டில் இருந்து தப்பித்திருக்கக்கூடிய சிங்கம் குறிக்கிறதா? பயங்களும் பாதுகாப்பின்மையும் கண்ணுக்குப் புலப்படா மனக்குணங்கள். அவற்றுக்குப் பயந்து நான் ஒதுங்கிய அறை ஏன் என் அலுவலகத்தையொத்து இருக்கிறது. அங்கிருந்தோர் யாரும் பயந்தது மாதிரி தெரியவில்லை. அறைக்குள் வந்து ஒதுங்கிய நானும் என்னுடன் வந்தவர்களுந்தான் பயத்துடன் பதற்றத்துடன் இருந்தோம். ஆனால் சிங்கத்தை பிடிப்பதற்கான ஆயத்தங்கள் அறையின் மூடிய இரு கதவுகளுக்குப் பின்னால் நடந்து கோண்டிருந்ததற்கான அத்தனை சங்கேதங்களும் எனக்கு தெரிந்தன. சத்தங்கள் கேட்டன. தலைப்பாகையிட்ட இளைஞன் ஒருவன் எனக்கு உறுதி தந்தானே சிங்கம் பிடிபட்டுவிடும் என! என் பதற்றங்கள் எல்லாம் கற்பிதங்கள் என்று இந்த கனவு சொல்கிறதோ?

வேறு மாதிரி யோசித்தேன்.

சிங்கம் அந்த அதிகாரியைக் குறிக்கிறது. அவர் தன் நடத்தையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிராமல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலரின் மனதில் மட்டும் பாதுகாப்பின்மையை அச்சத்தை உருவாக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து தப்பிக்க முடியாமல் ஓடி அலுவலகம் போன்று தெரிந்த அறையில் தஞ்சம் புகுகிறேன். ஆனால் அந்த அறையில் இருந்த மற்றவர்கள் போல என்னால் சஞ்சலமுறாமல் இருக்க முடிவதில்லை. எப்படியாவது அதிகாரியிடமிருந்து தப்புதலே என் விழைவாக இருக்கிறது!

இன்னும் வேறு மாதிரி யோசித்தேன்.

கதவைத் திறந்து வெளியே வந்த எனக்கு அங்கே என்ன காத்திருந்தது? மூன்று சாத்தியப்பாடுகள்! (1) வெளியே யாரும் இல்லை. சிங்கம் கண்ணில் தென்படவில்லை. ஆபத்து விலகிவிடுகிறது. (2) எனக்காக சிங்கம் அமைதியாக கதவுக்கு வெளியே காத்திருக்கிறது. அதனுடன் சண்டை போடுகிறேன். அதை வென்றேடுக்கிறேன். (3) அறைக்கு வெளியே காத்திருந்த சிங்கம் என்னைத் தாக்கி என்னைக் கொன்று போட்டுவிடுகிறது.

டாக்டர் படித்து விட்டு என்னிடம் திருப்பியளித்த கனவுக் குறிப்பை மீண்டும் வாசித்தேன்.

மீண்டும் இன்னொரு குறிப்பு எழுதினேன்.

சிங்கத்துக்கு ஏன் கோபம்? காட்டிலிருந்து கடத்தி வரப்பட்டு கூண்டில் பொழுதுபோக்கிற்காக அடைக்கப்பட்ட சிங்கத்தின் உணர்வுகள் பற்றி நமக்கு என்ன தெரியும்? அதிகாரியின் சொந்த பிரச்னைகள், அபிலாஷைகள், பொறுப்புகள், பாதுகாப்பின்மை – இவற்றைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? ஒரு சக மனிதனாக அவனும் நம்மைப் போல பலங்களுடனும் பலவீனங்களுடனும் இருப்பவன் தானே…….

எழுதுவதை நிறுத்தினேன். என் மேசையின் மேல் இருந்த மினியேச்சர் சாரநாத் தேசியச் சின்னத்தின் திசைக்கொன்றாக நான்கு புறங்களைப் பார்க்கும் சிங்க ரூபங்களை நோக்கினேன். சிங்கக் கனவு எனக்களிக்கும் தகவல் என்ன?

சூழமைவு இல்லாமல் எந்த நிகழ்வுக்கும் அர்த்தம் கற்பித்தல் இயலாத காரியம். சூழமைவைப் பொறுத்து ஒரே நிகழ்வுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் கற்பிக்கலாம். நம்மை நடுநாயகமாய் வைத்தே நமக்கான அர்த்தங்களை நாம் பெறுகிறோம். The Phenomena of Shared Dreams சாத்தியம் என்று வைத்துக் கொண்டால், இதே கனவுக்கான பொருள்விளக்கத்தை சிங்கத்திடம் கேட்டால் அது என்ன பதிலளிக்கும்? அந்த அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்களில் ஒருவரின் (அவர் நிஜ மனிதராக இருக்கும் பட்சத்தில்) கண்ணோட்டத்தில் இந்த கனவு என்ன அர்த்தத்தை கொடுக்கும்?

கனவு கண்ட அந்த இரவில் கைத்தொலைபேசி ரிங் ஆனதும் கண்விழித்து எழுந்தது போன்று சடக்கென ஒரு தெளிவு. சடோரி!

நாம் கண்ட கனவை நம் கண்ணோட்டத்தில் பொருள்விளக்கம் கொள்கிறோம். ஒரு திரைப்பட இயக்குனரின் கட் போல நம் கனவின் பொருள்விளக்கம் நம்முடைய கட். வாழ்க்கை யாருடைய கட்? வாழ்க்கை எல்லா உயிர்களின் கூட்டுக் கனவு என்பதாக யோசித்தால் ஒருவரின் கண்ணோட்டத்தில் மட்டும் வாழ்வின் நிகழ்வுகளை எப்படி பொருள் கொள்ள முடியும்? “இதெல்லாம் எனக்கு ஏன் நடக்கிறது?” என்ற வினா அடிப்படையில் மிகவும் அபத்தமானது ; நம் சுய கண்ணோட்டத்திலிருந்து எழுவது.

நான் நான். அதிகாரி அதிகாரி. நான் என் எல்லைக்குள் என் பலங்களுடன் பலவீனங்களுடன் இருக்கிறேன். என் அதிகாரி அவருக்குரிய எல்லையில் இருக்கிறார். அவருடைய பலங்களை பலவீனங்களை நடத்தையை மிகையாகப் பொருட்படுத்தி என்னுடைய சுய முக்கியத்துவத்தை அதிகமாக கற்பனை செய்து கொள்ளும் பழக்கந்தானே அடிப்படையில் என்னுள் பதற்றத்தை உண்டு பண்ணுகிறது. பாதிப்புக்குள்ளாகும் தன்மை – நானோ என் அதிகாரியோ – அனைவருக்கும் பொதுவன்றோ?

+++++

அன்றிரவு நிம்மதியாக உறங்கினேன். முகர்ஜி குறிப்பிட்ட சுமேரியக் காப்பிய நாயகன் கில்கமெஷ் காணும் கனவொன்றில் வானிலிருந்து விழும் கோடரியை அவன் அணைத்துக் கொள்வதைப் போல என் மேசையில் இருக்கும் சாரநாத்தின் சாக்கிய சிம்மங்களை கைகளில் இடுக்கியவாறே தூக்கம். கடலில் சுறாக்களுடன் கடுமையாகப் போராடி தலை சேதமுறாமல், பிற பாகங்களை சுறாக்கள் பிய்த்தெடுத்துவிட எலும்புகளின் அமைப்பு மட்டும் எஞ்சியிருந்த மிகப்பெரிய மர்லின் மீனுடன் அதிகாலை கரை திரும்பிய பிறகு சாண்டியாகோ அடித்துப்போட்டாற்போல என்னை மாதிரிதான் தூங்கியிருப்பான்.

+++++

நன்றி : பதாகை

காகிதத்தின் ஆயுசு

 

ரொம்ப நாளாக ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த வெண் காகிதம் அன்று காலை ஒரு மேசையின் மேல் வைக்கப்பட்டது. காகிதத்தை இத்தனை நாள் ஒளித்து வைத்தவன் அந்த காகிதத்தில் சில குறிப்புகளையும் பெயர்களையும் ஒரு நீண்ட கணக்கையும் எழுதி வைத்திருந்தான். ஐந்தாறு தொலைபேசி எண்களும் அந்த காகிதத்தில் கிறுக்கப்பட்டிருந்தன. காகிதத்தின் சொந்தக்காரன் அன்று பல முறை அந்த காகிதத்தை திரும்ப திரும்ப நோக்கிக் கொண்டிருந்தான். அதன் மேல் அன்று ஏற்படுத்தப்பட்ட சுருக்கங்கள் அந்த காகிதத்துக்கு அத்தனை சுகமாயிருக்கவில்லை. இலேசாக வியர்த்திருந்த கையினால் அந்த காகிதத்தை அவன் ஒவ்வொரு முறை ஏந்தியபோது ஒரு சில இடங்களில் லேசாக உப்புச்சுவையான ஈரம் படிந்தது.

அது வைக்கப்பட்டிருந்த மேசையின் பரப்பெங்கும் அந்த காகிதத்தைப் போலவே நூற்றுக்கணக்கான காகிதங்கள். அந்தக் காகித மலையின் மேல் இந்த காகிதத்தில் குறிப்புகளை எழுதி வைத்தவன் எந்த கவனத்தையும் காட்டவில்லை. இந்த காகிதத்தை மட்டும் அடிக்கடி கையில் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். சற்று நேரங்கழித்து அவன் தொலைபேசியில் பேசினான். இந்த காகிதத்துக்கு மனிதர்கள் பேசும் மொழி புரியாது. அவர்கள் பேசும் குரலின் ஏற்ற இறக்கம் மட்டும் அதற்கு நன்கு புலனாகும். தொலைபேசியில் யாருடனோ சண்டையிடும் குரலில் பேசுபவன் போல் நம் காகிதத்துக்கு தெரிந்தது. இரண்டு மின்விசிறிகள் சுழன்று அந்த சின்ன அறையை குளுமைப்படுத்திக் கொண்டிருந்தன. காகித மலையிலிருந்து சில காகிதங்கள் தரையில் விழுந்ததை போனில் பேசிக்கொண்டிருந்தவன் கண்டு கொள்ளவில்லை. காகிதம் சடக்கென மேசையின் விளிம்பு வரை புரண்டு சில கணங்களில் கீழே விழுந்து தரையைத் தொட்டது. மிருதுவான தரை. மின்விசிறி தந்த காற்று அறைக்கதவு இருந்த திசையில் காகிதத்தை நகர்த்தியது. தரையில் ஏற்கனவே சில காகிதங்கள் படிந்திருந்தன. இந்த காகிதம் வேகமாக முன்னேறியது. காகிதத்துக்கு தாம் பிற காகிதங்களுடன் போட்டியில் இருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படவில்லை. கிட்டத்தட்ட அறையின் கதவை அது எட்டுவதற்கும் கதவு திறக்கப்படுவதற்கும் சரியாக இருந்தது. சோடாபுட்டி கண்ணாடி அணிந்த பருத்த சரீரமுள்ள ஒருவர் தரையில் கிடந்த காகிதத்தை எடுத்தார். தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவன் திடுக்கென போனை கட் செய்து அதிர்ந்தவாறு எழுந்து நின்றான்.

அடுத்த சில நிமிடங்களில் காகிதத்தை தன் மேசையில் வைத்து தன் இருகைகளாலும் பிடித்தவாறு அந்த கண்ணாடிக்காரர் அவர் எதிரில் அமர்ந்திருந்த காகிதத்தில் எழுதியவனைப் பார்த்து கடும் வார்த்தைகளால் ஏசிக் கொண்டிருந்தார். அவர் ஏசலில் மிரட்டலும் சரிபங்கில் கலந்திருந்தது. காகிதத்தில் எழுதியவன் தலையைத் தொங்கப்போட்டவாறு அமர்ந்திருந்தான். எந்த கணத்திலும் அழுகைவெடிக்கும் போலிருந்தது. அரைமணி நேரம் திட்டித் தீர்த்தார் கண்ணாடிக்காரர். சற்று களைத்துப் போய் அமைதியானார். கண்ணாடியைக் கழற்றி கைக்குட்டையால் துடைக்கத் தொடங்கினார். கண்மூடி திறக்கும் வேளையில் தான் எழுதிய காகிதத்தை மேசையிலிருந்து எடுத்து கையால் உருட்டி வாயில் திணித்து வேகமாக மெள்ள ஆரம்பித்தான் அதுவரை அழுதுவிடுபவன் போல் முகத்தை வைத்திருந்தவன். அவனுடைய மெள்ளலில் அறைவுற்ற காகிதத்துண்டுகளை – வாயை ஆவெனத் திறந்தவாறு அதிர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்த – கண்ணாடிக்காரரின் முகத்தில் துப்பினான்.

ஏழு முப்பத்தாறு

அவள் மிக நிதானமாக  தன் உடைகளைக் களைந்து கொண்டிருந்தாள். படுக்கையறையின் விளக்கு பளிச்சென எரிந்து கொண்டிருந்தது. பீரோவில் பதிக்கப்பட்டிருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்று தன் உடலைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். அவன்  தயாராக இருந்தான். அவனுடைய வேகத்தை உதாசீனப்படுத்துபவள் போல் தன் கூந்தலால் தன் மார்பை மூடிக்கொண்டு கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிம்பத்தின் அழகை பருகியபடி நின்றிருந்தாள். மெள்ள அவனருகில் வந்து அவள் படுத்துக் கொண்ட அடுத்த வினாடி ஆடு மேயும் புல் தரையானாள். அவன் அவள் மேல் இயங்கினான். இரவு நேர அமைதியிலும் விரையும் உணர்வை அவனால் நிறுத்த முடிவதில்லை. சதாசர்வ வினாடியும் அவனுள் ரயில் ஓடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. மெதுவாக நிதானமாக காரியத்தில் லயித்து செய்வதன் மகிழ்ச்சியை கைவிட்டு வருடங்களாகிவிட்டன. அவளின் அதிஅற்புதமான உடலின் கீழ்ப்புறத்தில் முகம் பதித்து கொண்டிருந்தாலும் செய்கையில் லயிக்காமல் கவனம் அளைந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட  வேண்டிய அலுவலகப்பணி போல் பதற்றம் படர்ந்ததோர், அர்த்தமற்ற வேகம் அவனுடைய பிரசன்னத்தை உறிஞ்சியது.

அவள் நிதானமாக தன் இரு கைகளை நகர்த்தி தலைக்கு மேல் வைத்துக் கொண்டாள். பிறகு சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை  கையில் வைத்துக் கொண்டு தன் முக பிம்பத்தை விதவிதமாக புன்னகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள். இடப்புறம் இருந்த ஒரு கண்ணாடிப்பேழையிலிருந்து ஒரு தின்பண்டத்தை எடுத்து வாயில் போட்டுச் சவைத்துக்  கொண்டிருந்தாள். அவன் உச்சத்துக்குப் போவது போல் தெரிந்த சமயத்தில் மட்டும் லேசாக அவள் கவனம் சிதறியது. ஒரேயொரு முறை “ஹ்ம்” என்று முனகினாள். அவள் முனகும் சத்தம் அவன் காதில் விழுந்ததும் சிறு மகிழ்ச்சி அவனுள். பின்னர் கடமையை முடித்த உணர்வில் தன் கட்டுப்பாட்டை சிறிது இழக்கும் சுதந்திரம் கிட்டிவிட்டதாக எண்ணி பரவசத்தை ஒரு நொடி அனுபவித்து விட்டு அவளின் வலப்புறம் வந்து விழுந்தான். சுவாசம் இரைந்தது. அவன் மெல்லிய தொந்தி மேலும் கீழுமாக விம்மியது. கழுத்தில் வியர்வை அருவி. அயர்ந்து கண்ணை மூடினான்  

+++++

ஊதுபத்தி முத்தமிட்டதும் பட்டாசுத் திரியின் நீளத்தைக் குறைத்துக் கொண்டு தீக்கனல் நகர்வது போல் உஸ்-ஸென ஒரு சத்தம் கேட்டது. கனகம் மறைந்து கொண்டிருந்தாள். கால்விரல்கள் தொடங்கி ஒவ்வொரு அங்கமாக அவள் மறைந்து கொண்டிருந்தாள். அவள் கண்கள் அகல விரிந்த வண்ணம் அவனை நோக்கி எள்ளி நகையாடுவது போல் அவனைப்பார்த்தன. அவன் “கனகம்..கனகம்” என்று கூவினான். அவள் சிரம் மட்டும் மறைவதற்கு மிச்சம். “சிவா…சென்று வருகிறேன்” என்று சொன்னாள். “எங்கே செல்கிறாய் கனகம்?” என்று கத்தினான். “அப்பா வீட்டுக்கு…நாசிக் செல்கிறேன்..என்னைத் தேடாதீர்கள்”. கனகம் மறைவதை சிவாவால் தடுக்க முடியவில்லை.

வேட்டியை அணிந்து படுக்கையறை கதவை திறந்து முன்னறைக்கு வந்தான். விரிக்கப்பட்ட பாய் மேல் படுத்துக் கொண்டிருந்த அவன் வாரிசுகளையும் காணவில்லை.    

ஏழு முப்பத்தியாறு மணிக்கு முதலாம் பிளாட்பார்மிலிருந்து புறப்பட்டு சி எஸ் டி செல்லும் ஸ்லோ வண்டி தான் அவன் நிரந்தரமாய் பயணம் செய்யும் மும்பை லோக்கல். புளி முட்டையென அடைந்தபடி பயணம் செய்யும் மும்பைகர்களுக்கு ஜன்னலோர இருக்கை ஒரு சிம்மாசனம் மாதிரி. அவனுக்கு இன்று சிம்மாசனம். வழக்கமாய் அவனுடன் பயணம் செய்யும் சுபா அன்று வரவில்லை. அவள் உட்காரும் ஜன்னலோர இருக்கையில் இன்று சிவா அமர்ந்து கொண்டான். அவன் உட்காரும் இடத்தில் பருமனான பீகார்க்காரர். “சுனியேகா…ஹம் கா கெஹ்ரெ ஹெய்ன்!” என்று யாருடனோ போனில் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். உரையாடலை முடித்தவுடன் அழுத்தமாக உரசி அவனை அரைக்க ஆரம்பித்தார். எல்லாம் சில நிமிடங்களுக்குத்தான். ரயில் கிளம்பி வேகம் பிடித்ததும் எத்தனை அசவுகர்யத்திலும் அவரவர் உட்கார்ந்திருக்கும் அல்லது நின்றிருக்கும் இடத்தை சுற்றி கண் தெரியா வட்டத்துக்குள் அடங்கிவிடுவர்.

சுபா அன்று ஏன் வரவில்லை? அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்கப் போவது பற்றி முன்னதாகவே அவள் சொல்லிவிடுவாள். இருவரும் சேர்ந்து பயணம் செய்ய ஆரம்பித்த நாளிலிருந்து ஒரே ஒரு முறை மட்டும் அவள் சொல்லவில்லை. அப்போது அவள் தொடர்ந்து ஏழு-எட்டு நாட்கள் வரவில்லை. திரும்பி வந்த போது கணவன் ரிதேஷை மருத்துவமனையில் சேர்த்திருந்தது என்று சொன்னாள். அவன் அதிகம் அதைப்பற்றி துருவித்துருவி கேட்கவில்லை. குடும்ப விஷயங்களை பற்றி அதிகம் விசாரிக்காத அவனின் குணம் அவளுக்கு ரொம்பவும் பிடித்ததாக அவள் அடிக்கடி சொல்வாள்.

ரிதேஷ் சிவாவுக்கும் சிநேகிதன். பல வருடங்களாக நண்பர்கள். மும்பை வந்த புதிதில் ஒரே அறையில் தங்கிய நாட்களிலிருந்தான நட்பு. சுபாவை ரிதேஷின் திருமணத்திற்குப் பிறகே அறிவான். ஆனால் சிவாவின் தோழி என்று ஆனதெல்லாம் அண்மைய தினங்களில் தான். அதற்கு முன்னர் நண்பனின் மனைவி என்ற மரியாதையான தூரத்தில் தான் பழக்கம். விபத்தாக ஒரு நாள் அவளை ஏழு முப்பத்தியாறு லோக்கலில் சந்திக்க நேர்ந்தது. இதே மாதிரியான விபத்துச் சந்திப்பு தொடர்ந்து மூன்று முறை நிகழ்ந்தது. அதற்குப் பின்னர் அவர்களின் சந்திப்புகள் விபத்தாக இல்லாமல் திட்டமிட்டே தொடர்ந்தன. சுபா அவனுக்காக குறிப்பிட்ட இடத்தில் காத்திருப்பாள். வண்டி பிளாட்பாரத்துக்கு வந்த பின்னர் முட்டியடித்து ஏறி சுபாவுக்காக ஜன்னலோர இருக்கையை பிடித்து வைப்பான் சிவா. எதிரெதிர் சீட்டிலோ அல்லது பக்கத்திலோ உட்கார்ந்து கொள்வார்கள். எதிர் சீட்டை விட பக்கத்தில் உட்கார்ந்த நாட்கள் அதிகம். மாலையில் வேலை நேரம் முடிந்ததும் இருவரும் சேர்ந்தே வருவார்கள் என்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பும் லோக்கல் என்றில்லாமல் எந்த நேரம் அவர்கள் சி எஸ் டி வருகிறார்களோ அதைப் பொறுத்து இரயிலை பிடிப்பார்கள்.

மழை கொட்டும் நாட்களில் கூட இருவரும் ஒரே இரயிலில் தான் சேர்ந்து பயணிப்பார்கள். அப்படியான ஒரு மழை நாளில் நகரம் நீரில் மூழ்கிய போது சிவாவும் சுபாவும் தத்தம் அலுவலகத்திலேயே தங்கியிருக்க வேண்டியதாயிற்று. அன்றிரவு அவர்கள் இருவரும் தென்மும்பை முழுக்க மகிழ்ச்சியாய் காலாற நடந்தார்கள். கேட் வே ஆப் இந்தியாவில் சற்று நேரம் கடலைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். இரவு பனிரெண்டு மணிக்கு முன்னதாக தத்தம் அலுவலகத்துக்கு திரும்பினர். அடுத்த நாள் மதியம் ரயில்கள் ஒடத் தொடங்கியதும் இருவரும் சேர்ந்து தானே திரும்பினர். ரிதேஷ் கார் எடுத்துக் கொண்டு வந்து தானே ஸ்டேஷனுக்கு வெளியே காத்திருந்தபடியால் சுபா வெளியேறி பத்து நிமிடங்களுக்குப் பின்பு சிவா ஸ்டேஷனுக்கு வெளியே வந்தான். பெருமழை நாளிரவு காற்றாட அவர்கள் தென்மும்பையை வலம் வந்தபோது சுபா சில நிமிடங்களுக்கு தன் கையை அவனுடைய கையுடன் கோர்த்துக் கொண்டு நடந்ததை அடிக்கடி நினைத்துப் பார்த்து பரவசமடைவான்.

சிவாவின் மனைவி கனகத்துக்கு சுபாவைக் கண்டால் சுத்தமாகப் பிடிக்காது. ரிதேஷும் சுபாவும் அவன் வீட்டுக்கு வருவது சில வருடங்கள் முன்னர் நின்றுவிட்டது. சிவாவுக்கு இரண்டாம் குழந்தை பிறந்த போது சுபா நடந்து கொண்ட விதம் விசித்திரமாயிருந்தது. இரண்டாம் குழந்தைக்கு கர்ப்பமானதை பற்றி ஏன் தனக்கு தெரிவிக்கவில்லை என்று கனகத்தை கடிந்து கொண்டாள். இரண்டு தோழிகள் செல்லமாய் கோபித்துக் கொள்வது போல இருக்கவில்லை அது. சிவாவும் ரிதேஷும் தான் நண்பர்கள். கனகத்துக்கும் சுபாவுக்கும் நட்பெல்லாம் கிடையாது. கணவர்கள் நண்பர்கள் என்பதால் ஒரு தொடர்பு. அவ்வளவே. “தனக்கு இன்னும் குழந்தை பொறக்கலையேன்னு ஒரு பொறாமை” என்று கனகம் சிவா காதில் முணுமுணுத்தது அநேகமாக ரிதேஷ் – சுபா காதில் விழுந்திருக்கும். அதனாலோ என்னமோ சுபாவும் ரிதேஷும் சிவா வீட்டுக்கு வந்தது அன்றே கடைசி.

இரு குடும்பங்களுக்கிடையிலான தூரம் சுபா மற்றும் சிவாவுக்கிடையிலான ரகசிய நட்புக்கு ஏதுவாக இருந்தது. “என்ன! ரயிலில் மட்டும் சந்தித்துக் கொள்ளும் அளவுக்குச் சுருங்கிவிட்டது நம் நட்பு” என்று அவ்வப்போது குறைப்பட்டுக் கொள்வது போல் சொல்வாள். “ஆனாலும் இது எனக்கு பிடித்து தான் இருக்கு” என்று அவன் தன் தோளால் இடிப்பாள்.

சில நாட்கள் அவள் வாய் பேசாமலேயே பயணிப்பாள். என்ன ஆச்சு என்று அவன் கேட்டால் பதில் ஏதும் சொல்ல மாட்டாள். அவள் கண்கள் பனித்தது போல் இருக்கும். “ரிதேஷோட சண்டையா?” என்பான். அவள் “ரிதேஷோட என்னிக்கும் சண்டை போட்டது கிடையாது. சாது அவர். கூட தங்கியிருக்கே மாமியார்க் கிழவி தான்” என்று சொல்லி ஜன்னலுக்கு வெளியே பார்வையை பதித்துக் கொள்வாள்.

தாதர் ஸ்டேஷன் வந்த போது பருமனான பீஹார்க்காரரின் குரட்டையொலி உச்சத்தை எட்டியிருந்தது. தாதர் ஸ்டேஷனில் பாதி கம்பார்ட்மெண்ட் காலியானது. தன்னிருக்கையிலிருந்து சிவா எழுந்து நின்று கொண்டான்.

சிவா தன் தலைமை அதிகாரியிடம் ஒரு சந்திப்பில் இருந்த போது சுபா எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தாள். அந்த எஸ் எம் எஸ் படிக்கப்படாமலே இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு எஸ் எம் எஸ். போன் அதிர்தலை அப்போது தான் ‘கவனித்தான். அனுப்புனரின் பெயரை பார்த்ததும் அவனுள் ஓர் உற்சாகம். சந்திப்பு முடிவடைந்த பின் சிகரெட் இடைவெளி எடுத்துக் கொள்வதற்காக அலுவலக வாசலுக்கு வந்தான்.

முதல் எஸ் எம் எஸ் : “ஆஃபிஸ் போயிட்டியா…மாமியாரை கூப்டுகிட்டு அவர் ஹைதராபாத் போயிருக்கார்.. என் நாத்தனார் வீட்டுக்கு…கனகம் நாசிக் போயிட்டதா சொன்னியே, அவள் என்னிக்கு திரும்பறா?…ராத்திரி வீட்டுக்கு சாப்பிட வாயேன்”

இரண்டாம் எஸ் எம் எஸ் : “என்ன பிசியா? மாமியார்க் கிழவி போன் பண்ணிச்சு…நான் லேடி டாக்டர் கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கேன்..போய்ட்டு வரேன்…ஒரு மணி நேரத்துல திரும்பி வருவேன்”

சிகரெட் புகைத்து முடித்து விட்டு கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தான். நகைச்சுவை எனும் போர்வையில் நேரடியாகவும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளில் மறைமுகமாகவும் அவன் அவளிடம் பலமுறை வெளிப்படுத்திய விருப்பமும் வேண்டுகோளும் அது தான். இத்தனை நாள் அவற்றையெல்லாம் புறக்கணித்து வந்திருக்கிறாள். இன்று அவளாகவே வீட்டுக்கு அழைக்கிறாள். ரிதேஷும் அவன் அம்மாவும் இதற்கு முன்னர் பலமுறை ஹைதராபாத் சென்றிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அவன் அவள் வீட்டுக்கு வரும் விஷயத்தை பிரஸ்தாபித்தபோது “டோன்ட் டாக் நான்-சென்ஸ்” என்று சொல்லிவிட்டவள் இன்று ஏன் அழைக்கிறாள்? எண்ணங்களை அனுபவமாக மாற்றும் வாய்ப்பா இல்லையேல் பெண்டாட்டி ஊருக்கு சென்றிருப்பதால் தினமும் ஓட்டலில் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்வதற்குப் பதிலாக ஒருநாளாவது வீட்டுச் சாப்பாடு சாப்பிடட்டுமே என்ற கரிசனமா? என்னவும் நடக்கலாம் என்னும் சாத்தியத்தை யோசிக்கையில் அவனுள் ஒரு சிலிர்ப்பு. மொபைல் போனை கையில் வைத்து உருட்டிக் கொண்டே யோசித்தான்.

ஏழாம் மாடியில் இருந்த பிளாட்டின் மணியை அழுத்தினேன். ஜாளிக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மெயின் கதவு திறந்ததும் அவள் தெரிந்தாள். இடைவரை நீளும் கூந்தலில் அவள் வைத்துக் கொண்டிருந்த மல்லிகைப் பூக்களின் வாசத்தை நுகர்வதாக உணர்ந்தேன். நான் உள்ளே நுழைந்ததும் கதவு சார்த்தப்பட்டது. எனக்கு வியர்த்திருந்தது. ஹாலில் ஏஸி இயங்கும் சத்தம் லேசாக வந்தது. கருப்பு நிற சேலை அணிந்திருந்தாள். வெண்முத்துப் பல் தெரிய புன்னகைத்தாள்.

கை, கால் அலம்பிக் கொள்ள டவல் கொடுத்தாள். முகம் கழுவி ஈரத்தை துடைக்கும் போது ஒரு கணத்துக்கு நான் எங்கிருக்கிறேன் என்ற கேள்வி எழுந்தது. “க….” என்று வாயைத் திறப்பதற்குள் என் பார்வையில் சுபா தெரிந்தாள். சுபாவுடன் அவள் வீட்டில் தனியாக இருக்கிறோம் என்ற எண்ணம் என்னுள் ஊடுருவியது.

அவள் எனக்கு சாதம் பரிமாறிக் கொண்டிருக்கிறாள். சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், பாயசம் என்று அமர்க்களமான சமையல். “எதுக்கு இவ்வளவு அயிட்டம்?” என்று சுபாவிடம் கேட்டேன். “முதல் தரம் இல்லையா..அதனால் தான்” என்றாள். அவள் கண்கள் மின்னின. சமையலறை சென்று ஒவ்வொன்றாய் எடுத்து வந்து பரிமாறும் போது அவள் நடையில் இருந்த துள்ளல் கவனிக்கக் கூடியதாய் இருந்தது. “ நீ சாப்பிடலியா?” என்று கேட்டேன். “இல்லை..விரதம்…உப்பில்லாத அயிட்டம் தான் சாப்பிடுவேன்” என்றாள்.

ரசம் சாப்பிட்ட பிறகு தயிர் பரிமாறவில்லை. தட்டில் சாதத்தை போட்டு தயிருக்கு பதிலாக இளஞ்சூடான பாலை ஊற்றினாள். “உவ்வே…என்ன செய்கிறாய்?” என்று கேட்கிறேன். “ ஏன் பால் சாதம் சின்ன வயசிலே சாப்பிட்டதில்லையாக்கும்?” என்று கேட்டுக் கண்ணடிக்கிறாள். அவள் என்னருகே வந்து தட்டில் சர்க்கரையைத் தூவி தன் கையால் பிசையும் போது அவள் உடல் லேசாக என்னை மோதுகிறது. அவள் புடவையின் தலைப்பு சொருகிய இடுப்பின் வெண்மை என்னை சுண்டியிழுக்கிறது. இரண்டு கவளத்தை எனக்கு ஊட்டி விடுகிறாள். நான் போதும் என்கிறேன். “இன்னும் ஒரு வாய் பால் சாதம் சாப்பிட்டாக வேண்டும்” என்று சொல்லி என் தலையை பிடித்துக் கொண்டு என் வாயில் திணிக்கிறாள். “தட்ஸ் லைக் எ குட் பாய்” என்று சொல்லி சிரிக்கிறாள். தட்டில் எஞ்சியிருந்த பால் சாதத்தை அவள் சாப்பிட்டு முடிக்கிறாள்.

அவள் பாத்திரங்களை கழுவி முடித்து சமையலறையை துடைத்து முடிக்கும் வரை ஹாலில் காத்திருக்கிறேன். “டீ வி வேணும்னா போட்டுக்குங்க” என்கிறாள். “இல்லை…பரவாயில்லை” என்று சொல்லிவிட்டு சோபாவுக்குப் பக்கத்தில் இருந்த ஏதோவொரு ஆங்கிலப்பத்திரிக்கையையின் பக்கங்களைப்  புரட்டுகிறேன்.

வெண்ணிற கூந்தல் கொண்ட, உயரமான நடிகை ஒருத்தி ஒற்றை இறகை தன்னிரு கைகளில் ஏந்தி வனப்பு மிக்க தன் முலைகளை  பார்வையாளர்களின் கண்ணில் படாமல் மறைத்தபடி கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருக்கும் அந்த புகைப்படத்தில் பக்கவாட்டில் நின்றிருந்த குட்டையான ஆனால் மிடுக்கான ஒரு நாயகன் நாயகியின் கழுத்தில் முத்தத்தை பதித்துக் கொண்டிருந்தான். அடுத்த பக்கத்தில் வெளியாகியிருந்த படத்தில் அதே நடிகை இம்முறை சிங்காரம் செய்து கொண்டு படுக்கையின் ஒரு தலையணையில் கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள். அந்த தலையணைக்கு இணையான இன்னொரு தலையணையில் அழகான வேலைப்பாடுகள் கொண்ட ஒரு முகமூடி வைக்கப்பட்டிருக்கிறது. மேலை நாடுகளில் வெளியாகியிருந்த ஒரு திரைப்படத்துக்கான விமர்சன கட்டுரையின் அங்கமாக அந்தப் படங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த திரைப்படத்தின் இயக்குனர் படத்தை முடித்துவிட்டு அதன் ரிலீசுக்கு முன்னரே காலமாகியிருந்தார்.

பாத்திரங்களை தேய்க்கும் சத்தம் வந்து கொண்டிருந்தது. என் முகம் ஆங்கிலப்பத்திரிக்கையின் திரைப்பட விமர்சனக் கட்டுரையின் படங்களில் பதிந்திருக்கிறது. இந்நேரம் சுபா பாத்திரங்ளை தேய்த்து முடித்திருக்க வேண்டுமே….ஐயோ…நேரம் ஓடிக் கொண்டிருக்கிறதே….கையில் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிக்கை ஒரு பாம்பைப் போல என் கைகளில் நெளிந்து கொண்டிருந்தது. சுபாவைப் பார்க்க முடியவில்லை. அவள் சமையலறையிலிருந்து இன்னும் வெளியே வந்தபாடில்லை. “சுபா..சுபா” என்று குரலெழுப்பினேன். அதல பாதாளத்தில் இருந்து ஒலிப்பது மாதிரி ஒலித்த என் குரல் எனக்கே  கேட்கவில்லை. பாத்திரம் தேய்க்கும் ஒலி பூதாகாரமாக வளர்ந்து கொண்டே வந்தது. பத்திரிக்கையை உதறிவிட்டு என் காதை பொத்திக்கொண்டேன்.

போன் ஒலிக்கிறது. சுபா அழைக்கிறாள். சிவா ஹல்லோ சொன்னதும் சுபாவின் குரல் ஓய்வில்லாமல் ஒலிக்கிறது. “ஹாய்…நேத்து ராத்திரி மாமியாரோட பெரிய சண்டை….ரொம்ப பிடுங்கல் தாங்கல…ஒண்ணு நான் இருக்கணும் இல்லை உங்கம்மா இருக்கணும்னு ரிதேஷ் கிட்ட சொல்லிட்டேன்…பாவம்…எனக்கும் அம்மாவுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு ரொம்ப பாடுபடுகிறான்…ஆனால் என்னை எதிர்த்து அவனால் பேசி விட முடியுமா….கனகம் இன்னும் திரும்பி வரலை தானே?…டின்னர் பிளான் ஓகே தானே?” மூச்சு விடாமல் பேசுகிறாள்.

“சுபா…கனகத்தோட போன் வந்துது…என் மாமனார் சீரியசா இருக்காராம்…இன்னிக்கி சாயந்திரம் நாசிக் போகணும்”

“…..”

“ஹல்லோ…ஹல்லோ”

லைன் துண்டிக்கப்பட்டுவிட்டது எனப் புரியாமல் சிவா சிறிது நேரம் ஹல்லோ சொல்லிக் கொண்டிருந்தான். ஏன் துண்டித்துவிட்டாள்? நண்பனுடன் வாடிக்கையாகக் கொள்ளும் சிறு பிணக்கா? அல்லது தானழைக்கும் போது பொய்க்காரணம் சொல்லி மறுதலிக்கிறான் என்கிற ஏமாற்றவுணர்வால் தோன்றிய ஆக்ரோஷமா? அவள் திரும்ப போனில் அழைப்பாள் என்ற எதிர்பார்ப்பு நேரமாக ஆக வலுவிழந்து கொண்டே வந்தது. எனினும் ஒரு கடினமான தெரிவைச் செய்ய வேண்டிய ஓர் இக்கட்டான கட்டத்துக்குள் சிக்காமல் வாயில் வந்த பொய்க்காரணம் தன்னைக் காத்தது என்ற தெளிவு அவனுள் நிம்மதியை பிறப்பிக்கச் செய்தது. அத்தெரிவின் அறம் மற்றும் ஒழுக்கப் பரிமாணங்களெல்லாவற்றையும் விட அவனுடைய மறுப்பின் உண்மையான காரணம் என்ன என்பதை அவன் அறிந்தேயிருந்தான். எதிர்பார்ப்புக்கும் அனுபவத்துக்கும் இடையே இருக்கக் கூடிய முரண்…பால் சாதத்தின் எதிர்பார்ப்புச் சுவை அனுபவச் சுவைக்கு மாறாக இருந்தால்….அனுபவத்தின் சுவை வேறாக இருந்து..அது அவனுக்குப் பிடிக்காமல் போய்…இதே முரண் அனுபவம் சுபாவுக்கும் ஏற்பட்டு..நட்பை நிரந்தரமாக இழந்துவிட்டால்….சிறிது நேரம் கழித்து அமைதியாக யோசிக்கும் போது தன்னுடைய முடிவை சுபா நிச்சயம் புரிந்து கொள்வாள் என்று சிவா நம்பினான்.

அடுத்த நாள் சிவா ஏழு முப்பத்தியாறில் செல்லவில்லை. அன்று அவன் சுபாவின் கண்ணில் படாமல் இருத்தல் சரியாக இருக்கும் என்று எண்ணினான். மூன்றாம் பிளாட்பார்மில் இருந்து கிளம்பும் ஏழு நாற்பத்திரெண்டு விரைவு வண்டியில் ஏறினான்.

அதற்கடுத்து வந்த நாட்களில் முதல் பிளாட்பார்மில் வழக்கமாக சுபா காத்திருக்கும் இடத்தில் அவன் கண்களில் அவள் தென்படுவதில்லை. ஏழு முப்பத்தியாறில் விபத்துச் சந்திப்புகளும் நிகழ்வதில்லை. தானேயிலும் சரி ; மும்பையிலும் சரி ; சுபா சிவாவின் கண்ணில் படவில்லை. பால் சாதத்தை மன-நாசியில் முகர்ந்தவாறே மனித நெரிசல் மிக்க ஏழு முப்பத்தியாறில் அவன் ரயில் பயணங்கள் தொடர்ந்தன.

ஒரு நாள் அவன் வீட்டு வாசலை யாரோ தட்டினார்கள். அன்று அவன் அலுவலகம் செல்லவில்லை. நேரத்தை தூங்கிக் கழித்துக் கொண்டிருந்தான். வாசற்கதவை திறந்தவனின் முன்னால் நின்றிருந்தாள் சுபா. அதிர்ச்சியா ஆனந்தமா என்று பகுக்க முடியாத ஓர் உணர்வில் வாயடைத்து நின்றான். அவன்  வாய் திறக்க இயலாதவாறு இருந்தன பின்வந்த சுபாவின் செய்கைகள். கேள்விகள் கேட்கவோ மறுப்பு சொல்லவோ பிணங்கவோ இதுவல்ல நேரம் என்று உணர்ந்தவர்களாய் தாமதிக்காமல் ஒருவரில் ஒருவர் கலக்க ஆரம்பித்தனர். கூடல் நிகழ்வுகள் நேரக்கட்டமைப்புக்கு வெளியே நடந்தன. ரயில் ஓடும் சத்தம் அவனுள் அன்று கேட்கவில்லை. விரைவுணர்வு விடை பெற்றுக் கொண்டது. சுபாவின் கவனம் முகம் பார்க்கும் கண்ணாடியிலோ தின்பண்டம் நிரப்பி வைக்கப்பட்ட பேழையிலோ செல்லவில்லை. பங்கெடுப்பு இருவர் தரப்பிலும் குறைவில்லாமல் இருந்தது. கூடல் நிறைவு பெற்ற பின் சந்தோஷத்தின் உச்சியில் அவனை ஏற்றிச் சென்றதற்கு நன்றி செலுத்துமுகமாக அவளுக்கு இறுதி முத்தம் கொடுத்த போது சுபா கனகமாக மாறியிருந்தாள்.

+++++

கனகத்தையே அவன் நோக்கிக் கொண்டிருந்தான்.  புன்னகை நிரந்தரமாக படிந்தது போன்ற பாவனையில் இதழ்களை வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள் கனகம். அப்போது தான் சிவாவுக்கு நேரப்பிரக்ஞை வந்தது. அன்று என்ன கிழமை , இரவா அல்லது பகலா என்ற தெளிவு எதுவும் இல்லாதவனாய். அவன் மேல் படர்ந்திருந்த  கனகத்தின் கரத்தை மெள்ள விலக்கிவிட்டு எழுந்தான்.

வேட்டியணிந்து படுக்கையறைக் கதவை திறந்து கொண்டு முன்னறைக்கு வந்தான். அவன் வாரிசுகள் இருவரும் பாய்களில் நிம்மதியாய் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். சுவர்க்கடிகாரம் 7.36இல் நின்று போயிருந்தது.     

(காலச்சுவடு நவம்பர் 18 இதழில் வெளியானது)

காணாமல் போனவன்

யார் கண்ணிலும் படாத படி காணாமல் போய் விட வேண்டும் என்று பல முறை எனக்கு தோன்றியிருக்கிறது. முன்னர் இல்லாத வகையில் இம்முறை எண்ணத்தின் தீவிரம் அதிகமாய் இருந்தது. அதைச் செயல் படுத்தாமல் இருக்க முடியாது என்று தோன்றிற்று. என் இதயத்துக்கு நெருக்கமானவர்களின் பார்வையில் நான் படுவது நின்று போய் சில காலம் ஆகியிருக்கிறது. நான் தான் அதை உணராமலேயே இருந்திருக்கிறேன். மற்றவர்கள் கண்ணில் காணாமல் போனதும் என் மனப்பரப்பில் நிம்மதி பரவிற்று. நிம்மதி மட்டுமல்ல. அசாதாரண சுகமும். இதற்கு முன்னர் உணர்ந்திராத இலேசான தன்மையையும் அடைந்தேன்.

என் தம்பி சதா பத்தாம் வகுப்பில் தோல்வியுற்று வீட்டில் இருந்து ஓடிய பிறகு அவன் ஒரு ஹீரோவாக ஆனான். சிறுவயதில் கடைசி பென்ச் நண்பர்களின் சகவாசத்தில் படிக்காமல் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமல் திரிந்து வந்தான் அவன். “அவிழ்த்து விட்ட கழுதை” “உதவாக்கறை” என்றேல்லாம் பட்டப் பெயர்கள் தாங்கி உலவினான். ஒருநாள் அவன் வீட்டிலிருந்து விலகி எங்கோ சென்று விட்டான். அவன் காணாமல் போனதும் வீட்டில் எல்லோரும் கவலைப்பட்டனர். ஊரெங்கும் அவனைத் தேடி நானும் என் தந்தையாரும் அலைந்தோம். தெரிந்த நண்பர்கள் எல்லோரிடமும் விசாரித்தோம். “பையனைக் கரித்து கொட்டியே வீட்டை விட்டு துரத்தியடிச்சுட்டீங்களே!” என்று அம்மா அப்பாவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நாள் கழித்து கோயம்புத்தூர் அத்தையிடமிருந்து கடிதம் வந்தது. (பதினைந்து பைசா தபாலட்டையில் கோழிக்கிறுக்கலான கையெழுத்தில்!) சதா ஒரு வாரம் அவர்கள் வீட்டில் வந்து விட்டு போனானாம். ஊருக்கு நலமுடன் திரும்பினானா என்று கேட்டு எழுதியிருந்தார்கள். தொடர்ந்து இது மாதிரி உறவினர்களிடமிருந்து கடிதங்கள் வந்த வண்ணம் இருந்தன. ஹைதராபாத் மாமா, ஜபல்பூர் பெரியப்பா, சென்னை பெரிய தாத்தா – இவர்களெல்லாம் கடிதம் எழுதினார்கள். வீட்டுக்கு வரும் கடிதங்கள் எல்லாம் “சதா இப்போது எந்த ஊரில் இருக்கிறான்?” என்பதை அறியும் ஆவலில் வாசிக்கப்பட்டன. சதா பற்றிய தகவல் வருவது நின்ற போதும் கவலையுணர்ச்சி ஏதும் எஞ்சியிருக்கவில்லை. பல வருடங்கள் கழித்து ரிஷி-முனி மாதிரி காடான தாடியுடனும் கூடவே ஒரு மணிப்பூர்க் காரியுடனும் வந்து என்னை சந்தித்தான். நான் அப்போது தான் பம்பாயில் குடியேறியிருந்தேன். என்னை விட நான்கு வருடங்கள் சின்னவனான சதா அந்த மணிப்பூர்க்காரியை “உன்னுடைய பாபி” என்று அறிமுகப்படுத்தினான். அவனுக்கு அப்போது ”பாபி” வந்திருக்கவில்லை. ஒரு காகிதத்துள் பொடியை போட்டுச் சுருட்டி சிகரெட்டாக புகைத்தான் சதா. அவன் பாதி புகைத்துவிட்டு அவளிடம் தருவான். அவளும் புகைப்பாள். சதாவும் மணிப்பூர்க்காரியும் இரண்டு – மூன்று நாட்கள் என்னுடன் தங்கியிருந்தார்கள். வீட்டை விட்டு ஓடிப்போன சதா இப்போதெல்லாம் பற்றி யாரும் கேட்பதில்லை. இந்தியாவின் ஒரு மூலையில் எங்கோ மணிப்பூர்க்காரியுடன் அவன் சுற்றிக் கொண்டிருப்பான் என்ற நம்பிக்கை குடும்பத்தில் இன்றளவும் நிலவுகிறது.

சொந்தங்கள் விலகி தூரமாய்ப் போவது மாதிரி தான் காணாமல் போவதும். கொஞ்ச நேரம் தேடப்படுவோம். பின்னர் காணாமல் போன உண்மையை எல்லோரும் ஜீரணித்ததும் தேடுதல் கை விடப்படும். பாதிப்புக்குள்ளான நெருங்கிய உறவுகள் தத்தம் வாழ்க்கையைத் தொடர்ந்துவிடுவார்கள். மரணத்திற்கும் காணாமல் போதலுக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிலுமே உடம்பு இருப்பதில்லை. சிலரது நினைவுகளில் காணாமல் போனவர் நிறைந்திருக்கலாம். தான் விட்டுச்சென்ற வாழ்க்கையை எண்ணி காணாமல் போனவர் மருகாத வரை, மற்றவர்களின் நினைவுகளில் வருதலும் வராமல் இருத்தலும் அவருக்கு என்ன நட்டத்தை ஏற்படுத்தி விடக்கூடும்?

வர்ஷா என்னைத் தேடுவாளா? எப்படித் தேடுவாள்? அவள் பக்க உறவு என்று யாரும் இல்லை. அவளை வளர்த்த பெரியப்பா குடும்பம் வெளிநாட்டில் இருக்கிறது. கிட்டத்தட்ட அனாதை போலத்தான். தர்மேஷ் என்னைத் தேடி அலைகிறானோ? காவல் நிலையத்து நடைமுறைகளைச் செய்து தருவது அவனுக்கு மிக எளிதாக இருக்கும். அவனே ஒரு போலீஸ் காரன் என்பதால். என் பக்கத்து ஃப்ளாட்டில் இருந்தான். ஒரு காலத்தில் என் நெருங்கிய நண்பனாக இருந்தவன். இப்போதெல்லாம் அப்படி இல்லை. அவன் வர்ஷாவுடன் பேசும் சமயங்களில் ஐந்தடி ஏழங்குல உயரமான நான் அவன் கண்களுக்கு காணாமல் போய் விடுகிறேன்.

நான் எங்கிருக்கிறேன் என்பதை அவர்கள் இருவராலும் கண்டு பிடிக்கவே முடியாது. அவர்கள் தேடிக் கண்டுபிடிக்க முடியா தொலைவுக்குச் சென்று விடுவேன். அசைக்க முடியா நம்பிக்கை எனக்குள் வந்திருந்தது. இது வரை அப்படி நான் உணர்ந்ததில்லை. சுய ஐயம் நிரம்பிய மனிதனாய் இத்தனை காலமாய் உலவி வந்தேன். ஓர் இயந்திரம் போல. இயங்கிக் கொண்டிருத்தல் மட்டுமே எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்றெண்ணிக் கொண்டிருந்தேன். வர்ஷாவின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வது, என் ஆறு வயது மகன் மகேஷை வளர்த்து பெரிய ஆளாக்குவது – இவ்விரண்டையும் தவிர வேறெதுவும் என் இலக்காக இருக்கவில்லை. வர்ஷாவின் அபிலாஷைகள் என்ன என்பதை எவ்வளவு புரிந்து வைத்திருந்தேன் என்பது என்பது வேறு விஷயம். நம் குடும்பம், சிறு தேவைகள், சின்ன திருப்திகள் என்ற நடுத்தர குடும்ப அளவுகோலில் அளக்கப்பட்ட விழைவுகள் தாம் அவளுள் ஆரம்ப காலத்தில் இருந்தன. எது அவளை மாற்றியது? பம்பாய் எனும் ராட்சத நகரமா? அதன் இயந்திரத்தனமான ஓட்டமா? அல்லது என்னுடைய ஓட்டமா? பொருளியல் பகட்டு அல்லது சமூக அந்தஸ்து என்கிற மாயவலையில் அவள் சூழ்ந்திருக்கிறாள் என்ற என் கணிப்பு சரியா எனப் புரியவில்லை. என் கணிப்பு உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அவள் தரப்பு நியாயம் எனக்குப் புரியாமல் இல்லை. பெரியப்பா குடும்பத்தினரால் ஒரு வேலைக்காரி போல நடத்தப்பட்ட வாழ்க்கை ; இளம் வயதிலேயே தாய்-தந்தையரை இழந்தது என கிட்டத்தட்ட அனாதை போல் வளர்ந்த ஒருத்தி பாதுகாப்பின்மையில் தத்தளிப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை. அவளுடைய பாதுகாப்பின்மையை என்னால் ஏன் போக்க முடியவில்லை என்ற கேள்விக்கு என்னிடம் ஒரு விடையும் இல்லை. அவளிடம் என்னை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்ற தூண்டுதலை என்னால் கடைசி வரை களைந்தெறிய முடியாமல் போனது தான் எங்களுடைய விலகலை வேகப்படுத்தியதோ?. நான் அவளுக்கு ஏற்றவன் என்பதை நிலைநிறுத்த வேண்டும் என்ற ஒரே இச்சை அவள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஓர் இயந்திரமாய் என்னை மாற்றியிருந்தது. புதுப் புது வேலைகளாக மாறிய வண்ணம் இருந்தேன். நெடுங்காலம் வேலை பார்த்த பம்பாய் நிறுவனத்தில் வழங்கப்பட்ட சம்பளம் போதவில்லையெனச் சொல்லிக் கொண்டிருந்தாள். அதிக சம்பளத்துக்காக அடிக்கடி வேலை மாற்றம் செய்து கொண்டேன். கோஹ்லாப்பூரில் ஒரு பால் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை செய்தேன். குடும்பம் பம்பாயிலேயே இருந்தது. பின்னர் நாசிக்கில் சமையற் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனத்தில் இரண்டு வருடம். மாதம் ஒரு முறையோ அல்லது இரு மாதங்களுக்கொரு முறையோ என்றுதான் பம்பாய் வந்து குடும்பத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வர்ஷா என்றால் மழை. சிறு வயதிலிருந்தே கண்டிப்பும் கட்டிறுக்கமுமாக வளர்க்கப்பட்ட எனக்கு என் வாழ்வின் மழையாக அவள் வந்தாள். அவளுள் நான் ஆனந்தமாக நனைந்த நாட்கள் உண்டு. ஆனால் அவளிடமிருந்து வெகு தொலைவு வந்து விட்ட எண்ணத்தை கோஹ்லாப்பூர் – நாசிக் தினங்கள் என்னுள் தோற்றுவித்தன. பம்பாய் வரும் நாட்களில் மகேஷும் என்னிடமிருந்து விலகிப் போவதை கவனித்திருந்தேன். மகேஷுடனான தூரத்தை நீக்கி விட வேண்டும் என்ற உந்துதல் அதிகமாயிற்று. ஆனால் நாசிக் வேலையைத் தூக்கி எறியும் தைரியம் வரவில்லை. என் பழைய பம்பாய் நிறுவனத்தை மீண்டும் அணுகி வேலை கேட்டேன். சம்பளத்தில் சமரசம் செய்து கொண்டேன். வர்ஷாவுக்கு சம்பள விஷயம் அவ்வளவு திருப்தி தரவில்லை. “நீங்க சரியான ஏமாளியா இருக்கீங்க. இப்போ பம்பாய்ல ஒண்ணா சேர்ந்து இருக்கறதா முக்கியம். செலவுகள் அதிகரிச்சுகிட்டே போகுதே அது உங்களுக்குத் தெரியலியா?” ஒரு சராசரி இல்லறத்தலைவியின் புலம்பல்களாக அதை எடுத்துக் கொண்டாலும் நான் பம்பாய் வராமல் இருப்பதைத்தான் இவள் விரும்புகிறாளோ என்ற சந்தேகம் பேயாக என்னுள் ஒட்டிக்கொண்டது.

சொன்னதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே நாசிக் வேலையிலிருந்து “ரிலீவ்” ஆகி தங்கியிருந்த அறையைக் காலி செய்துவிட்டு பம்பாய்க்குப் புறப்பட்ட மாலை! பேருந்தில் ஏறியதும் மழை பெய்ய ஆரம்பித்தது. வீடியோ டெக்கில் “ஏக் தூஜே கேலியே” படம் போட்டுக் கொண்டிருந்தார்கள். விதவையாக வரும் சந்தியா என்கிற பாத்திரம் வாசு என்கிற பாத்திரத்துக்கு நடனம் பயில்வித்துக் கொண்டிருந்தது. பஸ்சுக்கு வெளியே நான்கு மணிக்கு இருக்க வேண்டிய வெளிச்சம் தொலைந்து போயிருந்தது. பேருந்து ஓர் இருட்டான அறைக்குள் நுழைந்து விட்டதோ என்னும்படி மேகங்களின் கருமை பகலை இருட்டாக்கியிருந்தது. மனதில் அளைந்த இனம் புரியா பயவுணர்வு! அதற்கான வெளிப்படையான காரணத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை. சொந்த வீட்டுக்குச் செல்லும் போது ஏற்படும் உற்சாகம் பல மாதங்களாக என்னுள் இல்லாமல் போனதை அதற்கு முன்னர் கூட அவதானித்ததுண்டு. உற்சாகமின்மை பயவுணர்வாக மாறிவிட்டதோ? ”பயமும் ஓர் எண்ணமாகத் தான் நம்முள்ளில் இருக்கிறது. எண்ணத்தை மாற்று ; உணர்வு மாறிவிடும்.” என்று சுய-உரையாடலில் ஈடுபட்டேன். கை முஷ்டியை இறுக்கிக் கொண்டேன்.

குரூரமான க்ளைமாக்ஸுடன் படம் முடிவடைந்ததும் பஸ்ஸில் கொஞ்சம் அமைதி. கஸாரா காட்-டை பஸ் கடந்து பஸ் சமவெளியில் இறங்கியது. பாதையில் மழை ஈரம் கொஞ்சமும் இல்லை. கணவாயின் அந்தப் புறம் பெய்த மழை இந்தப் புறம் இல்லை. ஈரத்தின் சுவடின்றி மண் காய்ந்து கிடந்தது. ஒரே நிலப்பரப்பு. ஆனாலும் ஓரிடத்தில் மழை. வேறோரிடத்தில் மழையில்லை. எந்த இடத்தில் ஈரத்தரை முடிந்து ஈரமற்ற தரை தொடங்கியது என்பதைக் கவனிக்கவில்லை. பயண மும்முரத்தில் பாதையைக் கவனிக்காமல் விட்டது என் யதார்த்ததை பிரதிபலித்தது. வர்ஷாவுடனான என் வாழ்க்கையிலும் எப்போது ஈரம் விலகியது?

செம்பூரில் வந்திறங்கிய போது ரொம்ப நேரமாகிவிட்டது. இரண்டொரு ஆட்டோ ரிக்‌ஷாக்காரர்களுக்கு முலுண்ட் வரை செல்ல மனமில்லை. ஆட்டோ கிடைத்து வீடு வந்து சேர்ந்த போது காம்ப்ளெக்ஸின் எல்லா ஃப்ளாட்டுகளிலும் லைட்கள் அணைக்கப்பட்டு காரிருளில் மூழ்கியிருந்தன. வாட்ச்மேன்கள் கேபினில் மட்டும் சின்ன பேட்டரி லைட் ஒளிர்ந்தது. இரண்டு கூர்க்காக்களும் விழித்திருந்தனர். ”லிஃப்ட் ரிப்பேர் சார்…உங்க ஃப்ளொர்ல இருக்கற தர்மேஷ் சாப் அணைச்சு வச்சிருக்க சொல்லியிருக்கார்” என்றான் ஒருவன். பின்னர் இன்னொருவனைப் பார்த்து “ஆறாம் ஃப்ளோர்ல லைட் எரியுதா பாரு” என்று சொன்னான். இருவரும் கேலிப் புன்னைகை புரிந்தது போல் தெரிந்தது. ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. வெளிச்சம் குறைவாக இருந்தது. கூர்க்காக்களின் புன்னகை ஒரு பிரமையாக இருக்கலாம்!.

படியேற வேண்டியதாயிற்று. கையில் இருந்த லக்கேஜ்கள் கனத்தன. தர்மேஷின் அபார்ட்மெண்ட் கதவு திறந்து கிடந்தது. அவன் எப்போதுமே ஃப்ளாட்டின் கதவை திறந்து போட்டுக் கொண்டு தான் தூங்குவான். ஏன் அப்படி என்று கேட்டால் ”போலீஸ்காரன் வீட்டுக்கு எந்த திருடன் வர்றான்னு பார்க்கறேன்” என்று பதில் சொல்வான். தர்மேஷ் ஃப்ளாட்டைத் தொட்டடுத்த என் ஃப்ளாட்டின் பஸ்ஸரை அழுத்தியதும் உடனடி கதவு திறந்தது. ஏதோ கதவுக்குப் பின்னாலேயே இத்தனை நேரம் தயாராய் நின்றிருந்த மாதிரி!

ஹால் விளக்கு போடப்படவில்லை. வர்ஷாவை இது வரை காணாத ரூபத்தில் கண்டேன். குட்டையான பாவாடை அணிந்திருந்தாள். அவள் அணிந்திருந்த பாவாடை கால்மூட்டைத் தொடவில்லை. என்னுடைய பழைய சட்டை ஒன்றை அணிந்திருந்தாள். புடைவையைத் தவிர வேறோர் உடையை அவள் அணிந்து பார்த்திராத எனக்கு ‘என் முன்னால் நிற்பது வர்ஷாவா இல்லை ; வேறு யாரோ மோகினியா’ என்ற எண்ணம் ஓடியது. பரபரப்பு உள்ளோடும் மனவெழுச்சியோடு ஃபளாட்டுக்குள் நுழைந்தேன். எப்போதும் படிய வாரி, பின்னிய கூந்தலுடன் இருப்பவள் அன்றிரவு குழலைக் கலைத்து விட்டிருந்தாள். பஸ் பயணத்தில் முகர்ந்த மழையின் வாசம் ஞாபகத்துக்கு வந்தது.

“வரப்போறீங்கன்னு முன்னாடியே சொன்னா என்ன? ஒண்ணும் சாப்பிடறதுக்கு இல்ல….படுங்க…காலையில பாக்கலாம்” – குரலில் கடுமை தெறித்தது.

அவள் ஒற்றைக் காலில் கொலுசு அணிந்திருந்தாள். இதுவும் புதிது. படுக்கையறையில் என்னிடமிருந்து கொஞ்சம் தள்ளி படுத்தாள். எங்கிருந்தோ ஜன்னலில் வந்த ஒளியில்….ஒளியா அல்லது இருட்டு பழகி விட்டதா…தெரியவில்லை…அவளின் சலவைக் கல் போன்ற வழவழு கால்கள் மின்னின. விரலால் அவள் கால்களை வருடும் ஆசை முளைவிட்டது. அவளிடம் பேச்சு கொடுத்தேன்.

“மகேஷ் எங்க…காணல”

“தர்மேஷ் வீட்டுல விளையாடிட்டிருந்தான்…அங்கயே படுத்துக் தூங்கிட்டான்….தர்மேஷ் அங்கயே தூங்கட்டும்னுட்டார்….”

அவள் கவர்ச்சி என்னுள் ஏற்படுத்திய மயக்க நிலை என் சிந்தனையை ஊமையாக்கியது. சில நிமிடங்கள் தாம். திடுக்கென ஒரு கரு நிறப் போர்வையை எடுத்து உச்சி முதல் பாதம் வரை மூடிக் கொண்டாள். நடுநிசியின் அமைதியில் கீழே கேட்டுக்கருகே வாட்ச்மேன்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

எட்டு மணி லோக்கலில் ஜனக்கடலுக்கு நடுவே நின்ற படி பயணம் செய்தேன். என் பழைய நண்பர்கள் – வைர-குரியர் படேல் பாயும் கூட்டுறவு வங்கியொன்றில் காசாளராக வேலை செய்யும் ஆரேகரும் என் கண்ணில் பட்டார்கள். என்னைப் பார்த்து கையாட்டி அவர்கள் உட்கார்ந்திருந்த கடைசி வரி இருக்கைகளுக்கருகே வரச் சொன்னார்கள். நான் தலையாட்டி “இங்கேயே நின்று கொள்கிறேன்” என்பது போல சைகை செய்தேன். வி டி ஸ்டேஷன் வந்ததும் அவர்கள் இறங்குவதற்கு முன்னமே இறங்கிச் சென்றேன். வேலையில் சேர இன்னும் ஒரு வாரம் இருந்தது. எனினும் கூட்டம் அலை மோதும் காலை எட்டு மணி ரயிலேறி “டவுனுக்கு” வருவதற்கு என்ன காரணம்? ”ஏதோ ஃபார்மாலிடிக்காக என்னை வரச் சொல்லியிருக்கிறார்கள்?” என்று பொய் சொன்னதும் “வீட்டிலேயே இருங்களேன். இன்னிக்கும் வெளியில் போகணுமா?” என்று வர்ஷா கேட்கவில்லை. முந்தைய வாரம் நண்பர்களுடன் ‘டவுனுக்குப்’ போன போது அக்பரல்லிஸுக்குப் பக்கத்தில் இருந்த ஓர் ஆடையகத்தில் உடை வாங்கியதாகவும் அதன் உயரத்தைக் குறைப்பதற்கென்று தைக்கக் கொடுத்திருப்பதாகவும், அதே ஆடையகத்துக்குப் போய் வாங்கி வருமாறும் ஒரு டோக்கனை என்னிடம் தந்தாள். வி டி ஸ்டேஷனுக்கு வெளியே டி என் ரோட்டின் இடப்புற நடைமேடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடித்துக் கொண்டும் மோதிக் கொண்டும் மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். நான் சாலைக்குள் இறங்கி ஓரமாக நடந்தேன். நியூ எம்பயர் தியேட்டரில் ஒன்பது மணிக்கே டிக்கெட் வாங்குவதற்காக மக்கள் காத்திருந்தனர். தியேட்டர் முகப்பில் இருந்த போஸ்டரில் அமிதாப்பச்சனின் இரு கைகளிலும் விலங்கிடப்பட்டிருந்தன. ஆக்ரோஷப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். போலீஸ் சீருடையிட்ட ப்ரான் கம்பீரமாய் நின்றிருந்தார். பம்பாய்க்கே உரித்தான காற்றின் வாசமும் ஈரப்பதமும் என் நாசியையும் சருமத்தையும் ஊடுருவின. காதணிகள் விற்பவர்கள், தர்பூசணிப் பழத்தையும் அன்னாசிப் பழத்தையும் வெட்டி துண்டுகளாக விற்பவர்கள், பழைய புத்தகக்காரர்கள் எல்லோரும் அதிசுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். ஃப்ளோரா ஃபவுண்டெனுக்கு வலப்புறம் இருந்த சாலையில் திரும்பி அக்பரல்லிஸ் பல்துறை அங்காடிக்கு இரண்டு கடைகள் தள்ளி இருந்த ஆடையகத்தை அடைந்தேன். டோக்கனைச் சரிபார்த்து திருத்திய ஆடையை என்னிடம் கொடுத்தார் கடைக்காரர். கூடவே துணிக்கான வவுச்சரையும் கொடுத்தார். வவுச்சருடன் பணம் செலுத்தியதற்கான கடனட்டை விற்பனை ரசிது “பின்” செய்யப்பட்டிருந்தது. வர்ஷாவிடம் கடனட்டை கிடையாது. கடனட்டைக்குச் சொந்தக்காரரின் பெயர் விற்பனை ரசீதில் ‘இம்ப்ரிண்ட்” செய்யப்பட்டிருந்தது. தர்மேஷ் வி கோரே.

என் கால்கள் இலக்கின்றி நடந்தன. தெற்கு பம்பாயில் அன்று என் கால்கள் படாத இடம் இல்லை என்று சொல்லலாம். கேட்வே ஆஃப் இந்தியாவில் கடல் சற்று தள்ளிப் போயிருந்தது. லியோபோல்ட் கஃபேயில் வழக்கமாகக் காணப்படும் கூட்டம் இல்லை. கொலாபாவின் செருப்பு கடைகள், காலாகோடாவுக்கருகே வீதியின் இரு புறங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்கள், ஓட்டல் பிரெசிடெண்டின் வாசலில் காத்திருந்த கருப்பு-மஞ்சள் டாக்ஸிகள், ஒபெராய் ஓட்டலுக்கு வெளியே நின்றிருந்த சுற்றுலா பயணிகள், அரபிக்கடலோரத்தில் போடப்பட்ட பாறைகள், கைகளைப் பின்னிக்கொண்டும் தோள்களை உரசிக்கொண்டும் கடற்கரைச்சுவரில் உட்கார்ந்திருந்த ஜோடிகள், பிஸ்ஸா – ஆன் – தி – பே உணவகத்துக்கு வெளியே போடப்பட்டிருந்த இருக்கைகள் – கடந்து போகும் சித்திரங்களாக எல்லாம் நகர்ந்து கொண்டிருந்தன. நியூ எம்பயரில் ஓடும் திரைப்படமே ஈராஸ் தியேட்டரிலும் ஓடியது. காலியா. ஈராஸ் தியேட்டரை ஒட்டிய சிற்றுண்டி நிலையத்தில் கிஷோர் குமாரின் குரலில் “ஜஹான் தெரி யெ நஸர் ஹே” என்ற பாடல் அதிக கனபரிமாணத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. சர்ச்-கேட்டுக்குப் போகும் சப்-வேயில் இருந்த மருந்துக் கடையில் நுழைந்தேன். பின்னர் ஜன சமுத்திரத்தில் ஒரு புள்ளியாகக் காணாமல் போனேன்.

+++++

மற்றவர்கள் கண்ணுக்குப் படாமல் வர்ஷாவின் வாழ்க்கையில் நிகழ்வதை அறிய ஆவல் என்னைத் தூண்டவும், மீண்டும் நான் வாழ்ந்த வீட்டுக்குச் சென்று பார்க்க முடிவு செய்தேன். எண்ண ரூபமாய் அங்கு அலைந்து திரிவதில் என்ன தடை ஏற்படப் போகிறது? ஆறாம் ஃப்ளோரை அடைந்தேன். தர்மேஷ் ஃப்ளாட், என் பழைய ப்ளாட் – இரண்டின் கதவுகளும் திறந்து கிடந்தன. தர்மேஷ் வீட்டில் மகேஷ் இருக்கிறானா என்று பார்த்தேன். இல்லை. என் வீட்டின் ஹால் காலியாகஇருந்தது. அன்று வி டி போன போது நான் எடுத்துச் சென்றிருந்த தோல் கைப்பை ஜன்னல் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்தது. திறந்திருந்த ஜிப்பர் வழி நோக்கினேன். உடை, ரசீது, மருந்துக் கடையில் வாங்கிய மாத்திரைப் புட்டி எல்லாம் இருந்தன. புட்டி காலி. ஒரு மாத்திரை கூட மிச்சமில்லை. அறையில் ஊதுபத்தி நெடி. சுவரில் என் உருவம் தாங்கிய சட்டகத்துக்கு மாலை போடப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் மாலை. படுக்கையறையில் வர்ஷா அழும் சத்தம் கேட்டது. கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். அவள் அடிக்கடி அணியும் பச்சை நிறச் சேலை. அடர் சிவப்பு நிற ரவிக்கை. ரவிக்கைச் சட்டையின் கை முழங்கை வரை நீண்டிருந்தது. கட்டிலுக்கருகே தர்மேஷ் நின்றிருந்தான். அவன் கை அவள் உச்சந்தலை முடியை மென்மையாக வருடிக் கொண்டிருந்தது. அவள் தன் முகத்தை அவன் இடுப்பில் புதைத்தவாறு அழுது கொண்டிருந்தாள். கணவாய்க்கு ஒரு புறத்தில் பெய்த மழையில் கணவாயின் மறுபுறம் நனையவில்லை. மற்றவர்கள் கண்ணுக்கு மட்டும் காணாமல் போயிருந்த நான் எனக்கும் காணாமல் போகும் சமயம் வந்து விட்டது. ஊதுபத்திப் புகைக்குள் புகுந்து காணாமல் போனேன்.

+++++

கருங்கற்கள் குவியலின் மேல் சாய்ந்த படி கண்ணயர்ந்திருந்தேன். முதுகுப் புறம் சில கற்களின் கூர்மையான முனைகள் குத்தின. கண்களைத் திறந்தேன். சமிக்ஞை கோளாறின் காரணமாக கௌஹாத்தி செல்லும் ரயில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நின்றிருந்தது. ரெய்ப்பூர் நகரம் தாண்டி ஏறத்தாழ ஐம்பது கிலோமீட்டர் தூரம் கடந்திருந்தது. என்னைப் போலவே பொது வகுப்பில் அமர்ந்திருந்த வேறு பயணிகளு ரயிலிலிருந்து இறங்கியிருந்தனர். கிழவி ஒருத்தி கொய்யாப்பழத் துண்டுகளைக் கூவி விற்றுக் கொண்டிருந்தாள். ஒரு சின்னப் பையன் தண்ணீர் விற்றுக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து ஐந்து பைசாவுக்கு ஒரு கோப்பை தண்ணீர் வாங்கி முகம் கழுவிக் கொண்டேன். ரயில் இப்போதைக்கு கிளம்பாது போலிருந்தது. அந்த ரயிலை விட்டுவிடுவது என்று முடிவு செய்தேன். தண்டவாளத்தை ஒட்டிய வயலில் மெதுவாக இறங்கினேன். வரப்பு வழியாக நடந்து ஒரு கிராமத்தை அடைந்தேன். கிராமத்தினுள் மூடிக்கிடந்த தபாலாபீஸைக் கடக்கையில் எனக்கு சதாவின் ஞாபகம் வந்தது. அவன் போய்ச் சென்று தங்கிய இடங்களிலிருந்தெல்லாம் எங்கள் உறவினர்கள் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்கள். வர்ஷாவுக்கு கடிதம் போட்டு என் நலத்தைத் தெரிவிக்கும் வாய்ப்பை நான் யாருக்கும் கொடுக்கவில்லை.

நன்றி : சொல்வனம்