டைபுட்ஸு

அமைதியை எண்ணிக் கொண்டே
அமைதியில் புக முயன்றேன்
காலணியின் ஃப்ளிப்ஃப்ளாப் சத்தம்

புத்தனை ஏன் வணங்கவேண்டும்?
வணங்குகையில் எண்ணம் நிற்கும்
காலணியின் சத்தம் மறையும்

எண்ணம் நின்றவுடன் கவனம் பதிப்பது பிறந்ததையா, நிர்வாணத்தையா
அல்லது பரிநிர்வாணத்தையா?

பிறப்பு, நிர்வாணம், பரிநிர்வாணம்
மூன்று கருத்தும் மறைய
டைபுட்ஸூவுக்கு தீபமேற்று

சுடரொளியில் பூச்சிகள் படையெடுக்க
கருணா த்யானத்தில் மூழ்குமுன்
தீபத்தை அணைத்துவிடு

டைபுட்ஸு உயரத்துக்கு
உன் நிழல் வளர்ந்துவிடக்கூடும்
தலையை சற்றுக் குனிந்தபடியிரு

All the time I pray to Buddha
I keep on
killing mosquitoes.
– Kobayashi Issa

புத்த பூர்ணிமா வாழ்த்துகள்
Happy Vesak

ரியோகனும் பஷோவும்

பஷோவும் ரியோகனும்
சந்தித்தபோது
தத்தம் குடிலைப் பற்றிப் பேசிக் கொண்டனர்
பின்னர் தேநீர் சுட வைக்கச்
சுள்ளி பொறுக்க ரியோகன் சென்றபோது
மதியப் பயணத்துக்கு
அணிய வேண்டிய
கருப்பு அங்கியை
பெட்டிக்கடியில் வைத்து
அழுத்திக் கொண்டிருந்தார் பஷோ

திங்கட்கிழமை

திங்கட்கிழமையை
ஒரு நாள் தள்ளி வைத்தால்
அடுத்த தினமும்
திங்கள்
முழுக்கவும் தவிர்த்தால்
ஞாயிறும் திங்கள்
வெள்ளிக்கிழமை மாலையில்
நிரந்தரமாய்த் தங்கிவிட
நேரத்தைக் கேட்டுக் கொண்டேன்
பரிசீலிக்கிறேன்
என்று சொல்லிக்கொண்டே
திங்களுக்கு வெகு அருகில் சென்றுவிட்டது
நேரம் நகர்ந்து சென்ற பின்னர்
நேரும் வெறுமையில்
திக்குத் தெரியாமல்
கண்கள் கூசி
தோராயமாய் திங்களை நோக்கி ஓடினேன்
நேரத்தை நோக்கி
என்று சொன்னால்
இன்னும் பொருந்தும்

பாதையில் கற்கள்

ஒவ்வொரு முறையும்
அதே பாதையில் வழி நடத்துகிறாய்

முட்களற்ற
சமன் செய்யப்பட்ட
இயலுமெனில்
பூக்கள் இறைந்து கிடக்கும் பாதையில்
வழி நடத்தக்கூடாதா!

காலில் குத்திய
கல்லை நோக்குகையில்
பளிச்சென பிரகாசம்
கல்லின் மறு பாதி
இருண்டு கிடந்தது
இருட்டும் பிரகாசமுமாய்
கல்லின் இரு புறங்கள்
கல் இருள்கிறதா
பிரகாசிக்க முயல்கிறதா

புவியும் ஒரு கல்
அதன் இருளின் ஒளியின்
மூலம் ஒன்று

செல்லும் பாதையைச்
சலித்துக் கொள்ளாதே

பாதையில் நடக்கையில்
கவனத்துடன்
ஒரு பாதி இருண்டு
மறு பாதி ஒளிரும் கல்லைத் தேடு

அன்றைய நானும் இன்றைய அவனும்

கல்லூரி கால உயிர் நண்பர்கள்
பழைய பெண் சினேகிதிகள்
அதிகம் சந்திக்காத நெருங்கிய உறவினர்கள்
அனைவரும்
இப்போதும்
என்னை நேசிப்பதாகவே சொல்லுகிறார்கள்
கல்லூரி கால என் நெற்றித் திருநீறையும்
குடும்ப விழாக்களில் பாடிக்காட்டிய சாஜன் திரைப்படப்பாடலையும்
நன்னூல் யாப்பிலக்கண விதிகளை நான் விளக்கிய நாட்களையும்
அடிக்கடி நினைவு கூர்ந்தவாறே!
அவர்கள் அறிந்த நான்
இன்னும் இருக்கிறானா?
அவர்கள் அறியாத அவன்
இங்கிருக்கிறேன்

இந்தியா எனக்கு என்ன?

இந்தியா எனக்கு என்ன?

– நொடிக்கு நொடி மாறும் அழகிய ஓவியம்
– சிறு குறை கொண்ட என் மகன்
– தொடர் வெற்றி காணும் என் மகள்
– பல சத்தங்களை எதிரொலிக்கும் பள்ளத்தாக்கு
– தாகங்கொண்ட நெஞ்சில் வந்து வீழும் ஒரு துளி
– சாலையோர வாக்குவாதம்
– ஒவ்வொரு வரியும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட கவிதை
– முன்னூறாயிரம் கடவுளர் உறையும் பிரதேசம்
– சில சமயம் விமர்சனத்துக்குள்ளாகும் பிரதி
– மேடு பள்ளங்களாலான அழகிய மலைப்பாதை
– பெரும்பாறைகளைத் தாவி நகரும் காட்டாறு
– நெடிதுயர்ந்த கோபுரத்தின் துளைகளில் ஒதுங்கி நிற்கும் பறவைக் கூட்டம்
– பிரகாரச் சுவர்களில் வீசும் புராதன வாசனை
– நகர நதிக்கரையில் தேங்கும் மாசு நுரை
– ரூஃப் டாப்பிலிருந்து தெரியும் குடிசைக் கடல்
– பணி நிலையங்களின் கீபோர்ட் கீச்சு
– ராம் – ரஹீமீன் ஊடல்களும் கூடல்களும் நிறைந்த முடிவற்ற நாடகம்
– குல்லாக்களின் டர்பன்களின் நிறம் படிந்த நெற்றிகளின் டிசைன் கலவை
– வித்தியாசங்களுக்கு பெயரளித்து கூறு செய்யப்பட்டு நடக்கும் அணிவகுப்பு.
– இன்னும் நிறைய…..
மிக முக்கியமாக என் சுவாசம்

அனைவர்க்கும் குடியரசு தின நல் வாழ்த்துகள்

இது ரியோகன் எழுதியதில்லை

கண்கள் மூடிப் படுத்திருக்கிறேன்

ஏதேதோ நினைவுகள்

அடுத்த நாள் பற்றிய எண்ணங்கள்

பகலில் நடந்தவை பற்றிய அசை போடல்கள்

விடியச் சில மணி நேரங்கள்

இத்தருணத்திற்கு மீண்டு இரவைப் பருகினேன்

மூடிய கண்களில் உறக்கம் படிந்தது

நீர் நகரும் சத்தம் கேட்டவாறிருந்தது

யாரோ எதுவோ கால் கழுவிக்கொண்டது

நீரளையும் ஓசை

கரை தட்டிய கால்கள்

தரையில் தள்ளிவிடும் நீர்

மனதில் வந்து தேங்குகிறது

மனம் சுத்தமாகட்டும்

புதுக்காலையில் புது மனம்

1.44 AM Fri 21 Jan

தாயமுருட்டலானார்

விதிகள் என்னென்று தெரியாத
விளையாட்டில்
அன்னை தாயமுருட்ட
தோல்வியுற்ற பரமன்
வெகுண்டெழுந்தார்

துணையற்று
பித்துற்று
தனிமையில்
தவித்திருந்தார்

இன்னும் தவிக்கட்டும்! –
புன்சிரிப்புடன்,
காத்திருக்காதவர் போன்று
அன்னை
நடித்திருந்தார்

தனிமைத்தீயின்
உக்கிரம் பொறுக்காது
தவத்திலாழ்ந்தார் சிவன்
நெடுநாள்
தவத்துள்ளிருந்தவருக்கு
ஒருநாள்
தானாக நகைப்பு

சற்று தூரத்தில்
இமவான் மகளாக
அன்னை
தம் தோழிகளுடன்
பூவனம் நோக்கி வந்து
கொண்டிருந்தார்

அன்னை இப்போது
மறந்து போயிருந்த
தாய விளையாட்டை
நினைவு கூர்ந்த பரமனின்
அகப்புன்முறுவல்
தொடர்ந்தது

“ஒவ்வொரு முறையும்
தாய விளையாட்டை மறந்துவிடுகிறாள் இவள்
எனினும்
ஒவ்வொரு முறையும்
இவளே வெல்கிறாள்”

அப்போது
அவர் மீது
எய்யப்பட
கரும்புவில்லொன்று
தயாராக இருந்தது

மெக்கானிக்

உணர்வுக்கு ஓர் அங்கம்
சிந்தனைக்கு இன்னொன்று
என இருப்பது
வடிவக் கோளாறு
ஒருவருக்கொருவர்
பேசிக்கொள்ளாத
சக ஊழியர் போல்
இதயமும்
மூளையும்
ஆளுக்கொரு திசையில்
இயங்குவது ஒரு

தொழில் நுட்பக் குறைபாடு

இதயம் ஒரு லேசான பொருள்
அதிக மகிழ்ச்சியில்
அதனால் இருக்க முடியாது
அதிக துக்கமும்
அதனால் தாள முடியாது
இவ்விரண்டுமற்று
இருந்துவிட்டுப் போகலாம்
என்றால்
மகிழ்ச்சி-துக்கம்
எனப் பெயரிட்டு
அனுபவங்களின் மேல்
அவற்றை ஏற்றி
யாரோ
விளையாடிக் கொண்டேயிருக்கிறார்கள்

ஞானியும் குடிகாரனும் – ரூமி

ஓர் அச்சில் சுழலுமிப்பிரபஞ்சம்
மேசையைச் சுற்றிச்சுழலட்டும் என் ஆன்மா
ஒரு பிச்சைக்காரனைப்போல்
நீள்வட்டத்தில் சுழலும் கோளைப்போல்
அநாதியாய்
சுதந்திரமாய்

ராணியும் யானையும் கூர்மையாய் நகரும்
சதுரங்கப்பலகையில்
எனினும் உண்மையில் ராஜாவை மையங்கொண்டு
வட்டமிடுகின்றன அவை

காதல் உனது மையமெனில்
உன் விரல்களில் மோதிரமிடப்படும்

அந்திப் பூச்சியினுள்
ஏதோவொன்று தீயினால் பண்ணப்பட்டுள்ளது

ஞானியொருவன்
தூய இன்மையின்
அழிக்கும் முனையைத் தொடுகிறான்

குடிகாரனொருவன்
சிறுநீர் கழிப்பதை
பாவமன்னிப்பாகக் கருதுகிறான்
பிரபுவே, என்னிடமிருந்து
அசுத்தங்களை எடுத்துவிடுங்கள்

பிரபு பதிலளித்தார்
முதலில் அசுத்தத்தின் இயல்பினைப்
புரிந்துகொள்
உனது சாவி வளைந்திருந்தால்
பூட்டு திறக்காது

நான் அமைதியானேன்
அரசன் ஷம்ஸ் வந்து விட்டான்
எப்போதும் நான் மூடும்போது அவன் திறக்கிறான்