அற்புதம்

 

அலறுகிறேன்

அரற்றுகிறேன்

கதறுகிறேன்

பதில் இல்லை

மனம் சற்று அமைதியுற்ற பின்

சரண் அடையும் மனப்பாங்குடன்

வழிகாட்டலை வேண்டுகிறேன்

சுவரின் எழுத்துக்களிலோ

யாரோ யாருடனோ நடத்தும் உரையாடலிலோ

யதேச்சையாக புரட்டிய பக்கத்திலோ

கிடைத்து விடுகிறது எனக்கான பதில்

இது அற்புதம் எனில் நிந்தையாகிவிடும்

மனித குலத்தின் மீதான

மறைமுக நையாண்டி என்று சொல்லிக் கொள்ளலாம்.

 

அறைக்குள் இரு அரவங்கள்

 

 

நான் புழங்கும் அறைக்குள்

இரு அரவங்கள்

கருத்த நிறத்தினவாய் !

அவைகளின் நீளம் மாறும் தன்மையதாய் !

அறையில் பெண்களுடன் முயங்குதலின்

கண்ணாடி பிரதிபலிப்பில்

என் முகம் ஒரு பாம்பின் முகத்தை ஒத்திருக்கிறது.

கொடுங்கனவில் நடுநடுங்கி கண்விழித்து வியர்வை வழிய எழுந்தமர்கையில்

இன்னொரு பாம்பு படமெடுத்து பிரம்மாண்டமாய் நிற்கிறது.

ஒன்று கைக்குட்டை அளவினதாய் சுருங்கினால்

மற்றொன்று வெகு நீளமாய் வளர்ந்திருக்கும்.

இரண்டின் உடல்களும் இடறி

தலைகுப்புற நான் விழுந்தது பலமுறை!

அவற்றில் நான் தலை வைத்து அமைதியாய் உறங்குவதும் அவ்வப்போது நடப்பதுண்டு

அரவங்களிரண்டும் ஒரு நாள் காணாமல் போயின.

அறைக் கண்ணாடி

அன்றோடு என்னை பிரதிபலிப்பதை

நிறுத்திக்கொண்டது.

 

நித்தியத்தின் கண்ணோட்டம்

தபஸிருந்த முனிவருக்கு

நிழலளித்து

காத்திருந்தது மரம்

 

வெளுத்தசடா முடித்திரை பின்னிருந்து

கண்திறந்த முனிவர் மேல்

பச்சையிலைகளின் தூவல்

 

காலத்துக்கப்பால் பயணம் செய்து

கண்விழித்த முனிவரின் உடலில்

காலத்தின் சின்னங்கண்டு சிரித்தது

மார்க்கண்டேய மரம்

 

“உயிரமைப்பே!

நான் ஓர் உயிர்

உன் வாழ்வின் நீளம்

அதிகம் என நகைக்கிறாயோ..! “

 

முனிவர் ஓடையில் குதித்து

ஆனந்தமாய் குளிக்கையில்

இலைகளை அசைத்து

உடலைக் குளிர்வித்தது மரம்

 

இயற்கையின் கருவியே நாமெனும் அறிவை

மரம் எய்தும் முடிவிலி காலம் வரை

காற்றே இலைகளை அசைப்பதை

நித்தியத்தின் படிக்கட்டுகளில் ஏறி

நட்சத்திரமாய் மாறி மின்னப்போகும்

முனிவர் பார்த்துக்கொண்டிருப்பார்

கடைசி

கிடைக்கும்
கிடைக்காது
கிடைக்கும்
கிடைக்காது
நம்பிக்கை
அவநம்பிக்கை
எண்ண முற்களின்
இடையறா
ஊசலாட்டத்தில்
நகரும்
காலம்

அணைந்து
அணைந்து
எரிகிறதா?
எரிந்து
எரிந்து
அணைகிறதா?
கடைசியாக
எரியுமா?
கடைசியாக
அணையுமா?
கடைசிக்கான
காத்திருப்பு
ஓயாத நிலையில்
எரிவது
அணைவது
இரண்டுமே
ஒன்று

கடைசியாக
கிடைக்குமா
கிடைக்காமல் போகுமா
கடைசிக்கான
காத்திருத்தலில்
கிடைத்தல்
கிடைக்காது போதல்
இரண்டின்
வித்தியாசங்களும்
பெயரளவிலேயே!

முடிவது போல்
தெரிந்த சாலை
திரும்பிக் கொண்டிருந்தது
வேறு பெயரைச்
சூடிக்கொண்டு

விடியல் சாட்சி

இன்னும் சிறிது விழித்திருந்தால்

விடியலைச் சந்திக்கலாம்

இதுவரை வாராத தூக்கம்

இப்போது வருமெனின்

முதல் துண்டு வெளிச்சம்

இருளுடன் கலந்து

விடியல் பூக்கும் சித்திரத்தைக் காண முடியாது

இரவெல்லாம் விழித்திருந்தமைக்கு

இந்த ஆறுதல் கிடைக்கட்டும்

உறக்கமின்மை ஒரு பரிசு

புற அமைதியை அனுபவிக்கும் சந்தர்ப்பம்

அக அமைதியை இழந்து

ஒரே தன்மையான

பல்வேறு சிந்தனைகள்

குறுக்கும் நெடுக்குமாக ஓடி

தூக்கத்தை தூர நிறுத்தி

விதிக்கப்பட்ட தண்டனைக்கு சிறு ஊதியம்

தலையோ தலைப்பாகையோ

உருளப்போவது எதுவாயினும் சரி

விடியல் காட்சியைக்

கண்டு களிக்கத் தயாராகிவிட்டேன்

மரக்கோயில்

IMG_2559
Ta Prohm (an ancient Buddhist temple, nearer to Angkor Wat Complex in Cambodia, built during the reign of  Jayavarman VII). The major sequences of the Angelina Jolie starrer Lara Croft : Tomb Rider was shot here.  This temple is known among the tourists as Tomb Rider Temple.

கோயிலில் இருந்த மரம்   

தனக்குள் கோயிலை அடக்கி வளர்கிறது   

பாம்பென வேர்கள் படர்ந்து  

இறுகின சன்னிதிகள்

காலியான சந்நிதானத்துள்

பிரதிஷ்டை கொள்ள வேண்டி

ஓடின வேரின் கீழ் நின்று

புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்

மரங்கள் கோயில்களுக்குள் புகுந்து

கடவுளாகி மறைந்த பின்னர்

சட்டகத்துள் வைத்து தொங்க விட

 

ஔரங்கசீப் சாலை

aurangzeb-road_647_082815051544

தெருப் பெயர்கள் மாற்றப்பட்டு
வரலாற்றின் பக்கங்கள் அழிக்கப்பட்டு
பொது மனதின் பிம்பங்கள் துடைக்கப்பட்டு
கற்பனையான இறந்த காலத்தின் சித்திரங்கள் வரையப்பட்டு….
+++++
தேடிப் போகும் வீடு இன்னும் கிடைக்கவில்லை
இணைய வரைபடத்தின் புதுப்பதிப்பை இன்னும் தரவிறக்கவில்லை
குறைவான தகவல் வேகம் தாமதப்படுத்துகிறது
தேடிப் போகும் மனிதர்களின் பெயர்களும் மாறியிருக்கக் கூடுமா?
+++++
கல்லறையிலிருந்து எழுந்து
வாளேந்தி வடக்கு நோக்கி சென்றதும்
இன்னொரு கல்லறையிலிருந்து குதித்து
குதூகலமாய் வடக்கு நோக்கி சென்றதும்
நடுவழியில் சந்தித்துக் கொண்டன
ஒன்றின் ஆவேசமும்
இன்னொன்றின் உவகையும்
ஒரு தெருவின் பெயர் மாற்றம் பற்றியதென
இரண்டும் புரிந்து கொண்டபோது
பெயரற்ற ஒரு காட்டுக்கிடையே இருந்த
ஓர் இடுகாட்டை அடைந்திருந்தன
திறந்திருந்த இரு குழிகளுக்குள் இறங்கி
இளைப்பாற கண் மூடியவை
பெயர் தெரியா காற்றடித்து
பெயர் தெரியா மணல் மூடி
பெயர் தெரியாமல் மறைந்து போயின

நஞ்சு

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

சிறு தளிர்கள்
உதிர்ந்து விழுந்தன
மொட்டுகள்
மூச்சுத் திணறி வாடிப்போயின
வேர் வழி
உருவிலா நஞ்சு பரவி
மரம் தள்ளாடிற்று
ஒரு மரம் அழித்து
தரை வழி அடுத்த மரத்துக்குத் தாவி
அதி விரைவில்
எதிர்காலத்தின் வனமொன்றை அழித்தது
கருத்தின் வடிவிலும்
கொள்கையின் வடிவிலும்
தீவிரம் என்னும் உடையணிந்து
வாதம் எனும் மகுடியூதி
மூளைகளை தூக்கநடனத்தில் ஆழ்த்தி
விழித்திருப்போரின் உடலை நீலம் பாரிக்க வைத்து
நஞ்சு இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது.

ஏரி – கவிஞர் சல்மா

ஸல்மா

ஏரி
ஏங்கிக் கருமையுற்ற முகத்தோடு
ஏரி சலனமற்றிருக்கிறது
சில நாட்களுக்கு முன்
தயக்கமின்றி உன்னிடமிருந்து
காலியான மதுக்கோப்பைகளை
விட்டெறிந்திருந்தாய் அதில்
மறுக்காமல் பெற்றுக்கொண்டது
ஏரி
பிறகொரு நாள்
நீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக்
கழுவிச் சாம்பலையும் கரைத்தாய்
நேற்றுகூடக்
கசந்துபோன நம் உறவினை
இகழ்ந்து எச்சில் துப்பினாய்
தண்ணீரில்
எந்தக் காலமொன்றில்லாமல்
எல்லாக் காலங்களிலும்
உன் கழிவுகளைக் கொட்டி
உன்னைச் சுத்தப்படுத்தியிருக்கிறாய்
இன்று இதில் எதையும்
நினைவுறுத்தாது
உன் தாகம் தணிக்கத் தயாராகிறாய்
உன் அசுத்தங்களை
அடித்துக் கொண்டுபோக
இது நதியில்லை
ஏரி
சலனமற்றுத் தேங்கிய நீர்
பத்திரமாய்ப் பாதுகாக்கும்
ஏதொன்றும் தொலைந்துபோகாமல்
எனது வண்ணத்துப் பூச்சிகள்
அறைச் சுவரில்
நான் விட்டுச் சென்ற
எனது வண்ணத்துப் பூச்சிகள்
தமது பசை உதிர்ந்து
பறந்து சென்றிருக்கலாம்
நான் திரும்புவதற்குள்
 

பாதைகள்

 அலமாரியில்
அறைச் சுவரில்
சுழலும் மின்விசிறியில்
மோதித் தெறிக்கும் வெளவால்
பல்லாயிரம் மைல்களுக்கப்பாலிருந்து
கடலின் நீலத்தையும்
மலைகளின் கூட்டங்களையும்
கடந்து வரும் பறவைகள்
இதுவரை
தொலைத்ததில்லை
தம் வழியை
 
பிறழ்வு
நான் பார்த்தறியாத
உலகைக்
குற்றவுணர்வுகளின் சங்கடங்களின்றி
எனக்குத் திறந்துவிடும்
உன் ஆர்வத்தில் தொடங்கிற்று
நமது உறவின் முதலாவது பிசகு
வெகுவான பிரயாசைகளுக்கும்
மூச்சு முட்டல்களுக்கும் பிறகே
உருவாக்குவேன்
துளியளவு ஆட்சேபணையை
வாழ்வின் எழுதப்படாத ஒழுங்குகளைக்
காதோரத்தில் கிசுகிசுத்துக்கொண்டேயிருக்கும்
அசரீரிகள்
இன்றைய உணவை
இக்காலத்தின் எனது உடைகளை
அவற்றின் வேலைப்பாடுகளை
இன்னும் என் உடலில் மறைக்கப்பட
வேண்டிய அவயவங்களை
காலில் சுற்றி வீழ்த்தும்
கண்ணுக்குப் புலப்படாத வேலிகள்
அச்சுறுத்தித் திருப்பும் என் சுவடுகளை
தன் வழக்கமான சுற்றுப் பாதைக்கு
இந்த இருப்பின் தடங்களை
நாளையும் சரிபார்க்கவென மட்டுமே
அஸ்தமிக்கும் இந்தப் பொழுது
யாரோ எப்போதோ சமைத்த சாரமற்ற
நேற்றைய உணவின்
விதியிலிருந்து விலகி
கூடு தேடிச் செல்லும் பறவைகளுக்கு
இந்த வெற்றுப் படுக்கைகளை
தந்துவிட்டு
வெட்டவெளியொன்றில்
தூங்க ஓரிடம் தேடினால் என்ன?
இன்று
ஒரு நாளைக்கேனும்
இந்த சங்கடங்கள் தன்னால்தானென
நம்மில் ஒருவர்
பொறுப்பேற்றால் என்ன
அல்லது
நம்மில் ஒருவர் இங்கிருந்து தப்பிச் செல்ல
இன்னொருவர் உதவினால் என்ன
இதில் ஏதும் இல்லையெனில்
ஏதேனும் வழியொன்றைத்
தேட முயல்வோம்
இந்த இரவை விடியாமல் செய்ய
காலப் பதிவு

விபத்திலிருந்து மீண்ட நாளின் உடை

நாம் சந்தித்துக் கனிந்திருந்த
வேளையில் பகிர்ந்திருந்த உணவு
நெருங்கியவரின் மரணச் செய்தி
வந்து சேர்க்கையில்
என் கண்களைக் கடந்த
சிவப்பு வண்ணக் கார்
நகர்வதில்லை காலம்
படிந்து உறைகிறது
ஒவ்வொன்றின் மீதும்
 (இக்கவிதைகளை வலையேற்ற அனுமதித்த கவிஞர் சல்மாவுக்கு எனது நன்றிகள்)

காற்றில் ஆடிய புல்

Buddhaingrass

ஹேது –
காற்று வீசவில்லை
புற்கள் ஆடவில்லை
பிறவிச் சித்திரங்கள் பொறித்த
காலத்திரையின் இடைவெளியினூடே
காற்று உள் நுழைய
மண்ணை முட்டி முளைத்த புல்
இன்னும் சிறிது வளர வேண்டும்

சார்பு –
காற்று வீசி அசைந்த புல்
புல்லை மேய்ந்த இளம் ஆடு
ஆட்டின் மேல் பாய்ந்த புலி
புலியின் மீது பட்ட அம்பு
அம்பு தொடுத்தோன் விற்ற புலித்தோல்
புலித்தோலில் செய்த விசிறி
விசிறியிலிருந்து கிளம்பிய காற்று
புல் மீண்டும் அசையாதிருக்குமா?

சூன்யம் –
காற்று விசினால்
புற்கள் ஆடும்
காற்றும் இல்லை
புல்லும் இல்லை
எது வீசும்? எது ஆடும்?

போதிசத்துவம் –
புற்களின் மேல்
காற்று வீசு
நீயே காற்று

காற்றுக்குள்
புற்களை நடனமிடச் செய்
நீயே புல்

 

நன்றி : பதாகை