அறைக்குள் இரு அரவங்கள்

 

 

நான் புழங்கும் அறைக்குள்

இரு அரவங்கள்

கருத்த நிறத்தினவாய் !

அவைகளின் நீளம் மாறும் தன்மையதாய் !

அறையில் பெண்களுடன் முயங்குதலின்

கண்ணாடி பிரதிபலிப்பில்

என் முகம் ஒரு பாம்பின் முகத்தை ஒத்திருக்கிறது.

கொடுங்கனவில் நடுநடுங்கி கண்விழித்து வியர்வை வழிய எழுந்தமர்கையில்

இன்னொரு பாம்பு படமெடுத்து பிரம்மாண்டமாய் நிற்கிறது.

ஒன்று கைக்குட்டை அளவினதாய் சுருங்கினால்

மற்றொன்று வெகு நீளமாய் வளர்ந்திருக்கும்.

இரண்டின் உடல்களும் இடறி

தலைகுப்புற நான் விழுந்தது பலமுறை!

அவற்றில் நான் தலை வைத்து அமைதியாய் உறங்குவதும் அவ்வப்போது நடப்பதுண்டு

அரவங்களிரண்டும் ஒரு நாள் காணாமல் போயின.

அறைக் கண்ணாடி

அன்றோடு என்னை பிரதிபலிப்பதை

நிறுத்திக்கொண்டது.

 

அர்ஜுனன் காதல்கள் – உலூபி

@ Dolls of India
@ Dolls of India

வளைந்தோடும் நதியின் கரையில்
நீராடும் பார்த்தனின்
இரு கால்களைச் சுற்றி வந்ததொரு நீள்நாகம்.
வெட்கத்துடன் முத்தமிடும் இளங்காதலியாய்
அது பாதத்தை தீண்டிடவும்
நதியின் ஆழத்திற்கு இழுக்கப்பட்டான்.
ஒளி ஊடுருவும் மாளிகையின்
அறையில் விழித்தான்
வெளியே நாற்புறமும்
மீன்களும்
நீர்ப்பாம்புகளும் நீந்திக் கொண்டிருந்தன
பார்த்தனின் முன் எரிகுண்டம் ;
நெய்யிட்டு
தீ வளர்த்தான்.
அதன் உக்கிரத்துடன் போட்டியிட்டது
அருகிருந்த பாம்பின் கண்களில்
படர்ந்திருந்த இச்சைத்தீ.
கணத்துக்கொரு தரம் வடிவமாற்றம்
பாம்பு
பெண்
பாம்புப்பெண்
தீச்சடங்கு முடியவும்
“இது சாட்சி” என்ற சங்கல்பத்துடன்
பார்த்தனை நோக்கினாள்
திரௌபதியும் யுதிஷ்டிரனும்
இணைந்திருந்த அறையினுள்
விபத்தெனவே நுழைந்ததனால்
விதித்துக் கொண்ட வனவாசம் ;
கவர்ந்திழுக்கும்
சர்ப்பப்பெண்ணுடன்
கூடுதல் முறையாகுமா?
பாம்புப்பெண்
அவனின் மனதோடு மௌனமாய்ப் பேசினாள்
“சாபமில்லை ; மூத்தோர் சொல்லில்லை
உமக்கு நீரே வழங்கிக்கொண்ட
வனவாசத்தில்
உம் மேல் ஆசையுற்று அணுகுபவளைக்
கூடுதலில் பாவமில்லை”
மாலையென காலடியில் சுருண்டது சர்ப்பம்
மானிடப் பெண்ணாக எழுந்து
இதழ் குவித்து நெருங்கினாள்
அர்ஜுனன்
காமநோய் தீர்க்கும் வைத்தியனானான்.
நதியின் உயிரினங்கள்
அறையின் திரையாகின

oOo

பின்னொருநாளில்
நதிக்கரை மேடொன்றில்
வலியுடன் கண் விழித்தான்
விஷ பாணம் தாக்கி
புண்ணான அவனுடலை
பாம்புப்பெண்
நாவால் வருடினாள்
சற்றருகே ஒரு வாலிபன்
வில்லும் அம்புமாய்
பின்னே ஒரு வெள்ளைக் குதிரை
யாரிவன் என்னைப் போல்?
எங்கிருக்கிறோம்?
கனவிலா? நனவிலா?
உடலெங்கும் பாம்பு
ஊர்ந்து வைத்தியம் பார்த்தது
சலசலக்கும் நதியில்
முதலைகள் மூன்று நீந்திச் சென்றன.
இவைகளை முன்னர் சந்தித்திருக்கிறோமோ?
இறந்தகால நிகழ்வுகளும்
நிகழ்கால பிரக்ஞையும்
ஒன்றிணைந்து குழம்பாகி
வேறுபாடு காணவியலா கலவையாயின

oOo

“விஷமற்ற பாம்பினங்களில்
நான் அனந்தன் ;
ஆயிரம் பிரபஞ்சங்கள்
கடுகளவில் என் தலையில் சுழலுகின்றன”
கண்ணன் சிரிக்கிறான்

 

நன்றி : பதாகை

சிவமரம்

withered tree

பட்டுப்போன மரமொன்று
பரம சிவன் போல் தெரிந்தது
உயரமான மரத்தின்
இரு புறத்திலும்
இரு கரங்களென
பெருங்கிளைகள்
மேல் நோக்கி வளைந்த
இடப்புற கிளையின்
இறுதியில் பிரிந்துயர்ந்திருக்கும்
திரிசூலக் கிளைகள்
முன் நோக்கி வளைந்து
கண்ணில் படா தண்டத்தின் பிரிவில்
தொங்கும் கையென
வலப்புறக் கிளை
தண்டின் உச்சியில்
உருண்டைச் சிரத்தை நினைவு படுத்தும்
கொத்தான கிளைகள்
பறவைகள் காலி செய்துவிட்டுப் போன
கூடுகள்
சிரப்பாகத்திற்குக் கீழ்
சுற்றியிருந்தது ஒரு கொம்பு வீரியன்
சிவனே என்று
இருந்த மரத்தின் தலையில்
ஆகாய கங்கை வந்தமர்ந்து
கூடுகளில்
நீர் நிரம்பி வழிந்து
வேர்களை ஈரப்படுத்தவும்….
மரமெங்கும்
இலைகள் துளிர்த்தன
சிவனுருவை இழந்தது சிவமரம்
மரத்தடியில்
யானை வடிவத்தில்
கல்லொன்று முளைத்தது
அழகு மயிலொன்று
அன்றாடம் புழங்கியது
புதருக்குள்
குடிபெயர்ந்த கொம்பு வீரியன்
மறைவில் நின்று
தினமும் மயிலை பார்த்தது

அறை முழுதும் அரவங்கள்

சிறுவயதிலிருந்தே நாகசொப்பனம் கண்டு அச்சத்தில் பலமுறை தூக்கம் விழித்திருக்கிறேன். சிறுவயதில் பாம்புக்கனவு வந்து தூக்கத்தில் கத்தினால், என் தாய்க்கு பக்கத்தில் தூங்கக்கிடைக்கும். வாலிபனான பிறகுகூட பாம்புக்கனவுகள் தொடர்ந்தன. இளமையில் காம உணர்ச்சி மிகுந்திருப்பதால் பாம்புக்கனவு வரக்கூடும் என்று சொன்னார்கள். ஒரு ஜோசியன் ஏன் ஜாதகத்தை பார்த்துவிட்டு, "உங்கள் கண்ணுக்கு நாக தரிசனம் அடிக்கடி கிடைத்து கொண்டிருக்கும்" என்றார். அவை கனவு தரிசனங்களா ? அல்லது நிஜ தரிசனங்களா? என்று தெளிவு படுத்தவில்லை. திருமணமான பிறகும் பாம்புகள் கனவில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. இப்போதெல்லாம் பாம்புகள் வருவது வெகுவாக குறைந்துவிட்டது.

சிறுவயதிலும் இளம் வயதிலும் பாம்புகள் கனவில் பயமுறுத்தும். ஆனால் பொதுவாக ஒற்றை பாம்பு தான் வரும். திருமணமான பிறகு வந்த கனவுகளில் பாம்புகள் ஏராளமாக வரும். நானிருக்கும் ஓர் அறையின் எல்லா அறைகலனிலும் ஒவ்வொரு பாம்பும் படமெடுத்து நிற்பது போன்ற கனவுகள். சாதுவாக படமெடுத்து நிற்கும். சாந்த சொருபமாக த்யானத்தில் ஈடுபடுபவை போல தோற்றமளிக்கும். அல்லது என் தூக்கத்தில் வரும் கனவுக்குள் நுழைந்து அவைகள் படமேடுத்தபடியே உறங்குகின்றனவோ? நான் பயத்தில் வியர்த்திருப்பேன். சப்தநாடியும் ஒடுங்கியிருக்கும். கனவிலிருந்து விடுபட்டவுடன், அந்த பாம்புகளின் சாந்தசொருபத்தை இன்னும் கொஞ்சநேரம் பார்த்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றும்.

இப்போதெல்லாம் பாம்புக்கனவுகள் அதிகமாக வருவதில்லை. கடைசியாக வந்த பாம்புக்கனவில், நான் பாம்புகளோடு பேசிக்கொண்டிருப்பது போல வந்தது.

உண்மையாக சொல்லப்போனால், பாம்பை அதன் இயற்கை சூழ்நிலையில் இதுவரை நான் பார்த்ததில்லை. பாம்புப்பண்ணைகளிலும், விலங்குகள் சரணாலயங்களிலும் தூர நின்று பார்த்திருக்கிறேன். இயற்கை சூழ்நிலையில் பார்த்தால் பயந்துபோவேன் என்றுதான் நினைக்கிறேன். இரவு நேரங்களில் கழிவறையில் சிறுநீரோ மலமோ கழிக்கும்போது "பாம்பு இந்த கழிவறையில் நுழைந்தால் என்ன செய்வது?" என்ற சிந்தனை தோன்றி என்னை சில்லிட வைக்கும். நேரிடையாக தோன்றாமல், நினைத்த மாத்திரத்தில் நெஞ்சில் பயமுட்ட வல்ல ஒரே ஜந்து பாம்புதானே!

சில வாரங்களுக்கு முன் தென்னிந்தியாவில் உள்ள சுற்றுலாத்தலமொன்றில் ஐந்து நட்சத்திர ஓட்டலோன்றில் காபி பருகிக்கொண்டிருந்தேன். எனக்கு பக்கத்து மேசையில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த இளம் தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு வயதான மகனுடன் அமர்ந்து உணவு உண்டுகொண்டிருந்தனர். மகன் மேசையைச்சுற்றி ஓடிக்கொண்டு விளையாட்டு காட்டிகொண்டிருந்தான். ஒரு சமயத்தில் கால் தடுக்கி விழப்போனபோது, அவனை தாங்கி நான் பிடித்தேன். பின்னர், நன்றியுணர்ச்சியுடன் என்னை அவர்களுடன் சேர்ந்தமர அழைத்தார்கள்.

ஜிம் வட ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் நகரை சேர்ந்தவர். ஜிம்மின் மனைவி – எலிசபெத்தும் டார்வின் நகரை சார்ந்தவர். அவர்களிருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னர், அவர்கள் நடத்தும் நிறுவனத்தின் கிளையை இந்தியாவில் துவங்கும் நோக்கத்துடன் வந்தனர். இந்தியாவில் ஒரிரு வருடம் வசிக்கும் எண்ணமிருந்தது. சுற்றுலாத்தலத்தையொட்டிய சிறு நகரத்தில் சொகுசு பங்களாவொன்றை வாடகைக்கு எடுத்திருந்தனர்.

பங்களாவின் உரிமையாளர் அந்த வீட்டின் ஒரறையை மட்டும் பூட்டி வைத்திருந்தார். பழைய தட்டுமுட்டு சாமான்களும், பரம்பரை அறைகலன்களும் உள்ளேயிருந்தன. அறைகலன்களோடு குடியிருந்த பாம்புகளைப்பற்றி யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை. ஒரு நாள், சமையலறையில் தேநீர் தயாரிக்க வந்த ஜிம் கேஸ் அடுப்புக்கு கீழ் படுத்திருந்த பாம்பை பார்த்தார். தொலைக்காட்சியில் வரும் வனவிலங்குகள் பற்றிய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் பார்க்கும் ஜிம் படுத்திருந்த பாம்பைக்கண்டு “த்ரில்” ஆனார். ஒரு குச்சியின் உதவியுடன், லாவகமாக பாம்பை எடுத்து, கொல்லைப்புறத்தில் உள்ள மதிலுக்கு வெளியே இருந்த வயல் பகுதிக்குள் எரிந்தார். கிட்டத்தட்ட இரு நாளைக்கு ஒருமுறை பாம்பை எடுத்து வெளியே எறியும் பயிற்சி நடந்தது. சில நாட்களுக்கு பிறகு, படுக்கையறையின் தரையில் ஒரு பாம்பு காணப்பட்டது. அப்பொது, ஜிம்மின் மகன் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தான். எலிசபெத் தோட்டக்காரனை அழைத்து, அந்த பாம்பை அப்புறப்படுத்தினாள்.

பாம்பின் வரவு பெருக ஆரம்பிக்கவே, ஜிம் வீட்டின் உரிமையாளரை அழைத்து பூட்டியிருந்த அறையை திறக்க வைத்தார். திறந்த அறைக்குள், அவர்கள் கண்ட காட்சி படு பயங்கரமாக இருந்ததாம்…..கிட்டத்தட்ட நாற்பது – ஐம்பது நாகங்கள் அந்த அறைக்குள் காணப்பட்டன. வீட்டுக்காரர் வாயடைத்துப்போனாராம்…..பல வருடங்களாக பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த அந்த அறையின் ஃப்ளோரிங்கை மாற்றும் பேச்சு வந்த போதெல்லாம், கஞ்சத்தனப்பட்டு தட்டிக்கழித்து வந்தது மிகப்பெரும் தவறுதானென ஒப்புக்கொண்டார்.

ஜிம்மும் எலிசபெத்தும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்ததன் பிண்ணனி இதுதான். வேறு ஒரு பங்களா கிடைக்கும் வரை தங்கியிருப்பார்கள். ”வீட்டு சாமான்களை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். ”சாமான்களை வேறு வீடு வாடகைக்கு கிடைத்த பிறகே போய் எடுத்து வர வேண்டும்?” என்றார் ஜிம். ”சாமான்களை எடுக்கப்போகும் போதும் பாம்புகள் அங்கு இருக்குமா?” என்று கேட்கலாமென்று பார்த்தேன் ; கேட்கவில்லை.

அன்று இரவு கனவில் மீண்டும் பாம்புகள் விஜயம் செய்யும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பாம்புக்கனவு வரவில்லை. நீண்டதொரு ரயிலில், பெயர் தெரியாத ஒர் இடத்திற்கு போவது போல் கனவு கண்டேன். கனவில் ரயில் பாம்புப்புற்றுகள் நிறைந்த ஒர் இடத்தை தாண்டி சென்றது. பாம்புகளெதுவும் புற்றிலிருந்து எட்டிப்பார்க்கவில்லை.

ஒன்று அறிய ஆசை. நிஜம்மாகவே, பாம்புப்புற்றுகளில் பாம்புகள் வாழ்கின்றனவா?

ஒரு குட்டிக்கதை

புறநகரின் ஆள் அரவமில்லாத மாளிகையொன்றில் அரவங்கள் புகுந்து மொய்த்தன. மாளிகைவாசிகள் குலை நடுங்கி வெளியெறினர். பாம்பு பிடிக்கும் மனிதர்களை கூட்டி வந்தனர். பாம்புகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே நடந்த யுத்தத்தில் ஒவ்வொரு உயிரிழந்த பாம்புக்கும் ஒன்றன் பின் ஒன்றாக பாம்புகள் வந்து கொண்டேயிருந்தன. மனிதர்கள் சோர்வுற்று இறுதியில் அம்மாளிகையை பாம்புகளின் ஆலயமாக ஆக்கினர். ஆலயம் என்றாலும் பக்தர்களெல்லாரும் தூர நின்றே தரிசிப்பார்கள். பின்னர் புராணக்கதைகள் புனையப்பட்டு அவ்வாலயம் பெயரும் புகழும் பெற்றது.

மாளிகையையொட்டி பூ விற்கும் கடைகள், அர்ச்சனை தட்டு விற்பவர்கள், பக்தர்களின் உடைமைகளை பாதுகாப்பவர்கள் என்று பலருக்கும் வயிறு நிறைந்தது. நெரிசல் அதிகமாகி, வெளிச்சம் அதிகமாகி… பாம்புகள் ஆலயத்தை விட்டு அகன்றன. ஆலயத்தின் வாசலில் சில பாம்புகள் உயிரை விட்டன. தூர நின்று வழிபடும் பக்தர்களோ பாம்புகள் இல்லாத ஆலயத்தில் பாம்புகள் இருப்பதாக எண்ணி பாம்புத்தெய்வங்களை வழிபடுகின்றனர்.

பாம்பில்லாததோர் இடத்தை ஆலயமாக தொழுவது பகுத்தறிவன்று என்று சொல்லி ஒரு சாரார் கொடிபிடித்தனர். அவர்கள் குரலோங்க பாம்பாலயத்தை தொழுவது நின்றது. மாளிகை வாசிகளின் வழித்தோன்றல்கள் திரும்பி வந்து புனருத்தாரணம் செய்து வசிக்கத்துவங்கினர். வீட்டின் பின்னே ஒளிந்திருந்த குட்டிப்பாம்பை வளர்த்தனர். அங்கு இப்போது பாம்புகளின் சரணாலயம் இருக்கிறது. நூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் அங்கு வேலை செய்கின்றனர். இப்போது அந்த மாளிகையில் பாம்புகள் – மனிதர்கள் இருவரும் வாழ்கின்றனர்.

+++++

என்னை மிகவும் கவர்ந்த பாம்பு பற்றிய கவிதையொன்றை கீழே தருகின்றேன்.

கவிதையின் தலைப்பு : பேட்டி***

எழுதியவர் : எம் டி முத்துகுமாரசாமி

கிடா விழுங்கும் மலைப்பாம்பல்ல
நான் என அறிய
வீசினால் தண்ணீர்
அடித்தால் செத்தது
தாண்டினால் பழுது
கக்கினால் ரத்தினம்
கடித்தால் விடம்
சுருட்டினால்
பைந்நாகப் பாய்
விரித்தால்
சிவலிங்கக் குடை
தரிசித்தால்
தன் வாலைத் தானே கவ்வுமிது.

*** “நீர் அளைதல்”கவிதை தொகுதியிலிருந்து.

கவிதை தொகுதியைதரவிறக்க : https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0BzHCwqQ3UxT7ZDNmYjQ1YzctNTk1Ni00MjMyLThkODktNGNmOTYyYjMyMGNi&hl=en_US

நிலம்

நிலம் என்ற ஒன்று படைக்கப்பட்டிராவிடில், சிருஷ்டி செய்யப்பட்ட உயிரினங்கள் எங்கு வாழ்ந்திருக்கக்கூடும்? எல்லாமே நீர் வாழ் உயிரினமாகவே இருந்திருக்குமா?. நிலமும் நீரும் உயிரினங்கள் வருவதற்கு முன்னரேயே உருவாகிவிட்டனவே!

நிலத்துக்கேன்றும், நீருக்கேன்றும் தனித்தனி உயிரினங்கள் தோன்றின. பரந்து, விரிந்திருக்கும் நிலத்தின் ஒவ்வொரு பரப்பிலும், அப்பரப்பின் இயற்கையின் தனித்தனி உருவைப்போல விதம் விதமான உயிரினங்கள் ஜீவித்து வருகின்றன. புரியாத ஏதோ ஒரு கடமையை இவ்வுயிரினங்களுக்கு இயற்கை அளித்திருக்கிறது.

ஒவ்வொரு புவியியல் பகுதிகளிலும், நிலத்தின் உரு மாறுகிறது. பள்ளத்தாக்கு, மலை நிலம், வயற்காடு, வெப்பமண்டல காடு, எவ்வளவோ உரு? அங்கங்கு வாழும் உயிரினங்களும், அந்தந்த நிலத்துக்கேற்றவாறு உள்ளன. சில மிருகங்கங்கள், சில பிரதேசங்களில் மட்டுமே வாழ்கின்றன. ஒட்டகத்தைக்காண பாலைவனமும், கரடிகளைக்காண குளிர் பிரதேசமும் போகவேண்டியிருக்கிறது.

+++++

உலகத்திலே நுகர்ந்து அனுபவிக்க பல பொருள்களும், விஷயங்களும் இருக்கின்றன. வெறும் பொருட்கள் மட்டும் இருந்திருந்தால், அனுபவம் முழுமை பெற்றிருக்காது. பொருட்களின் அழகையும் நுண்மையையும் ரசிக்க, உணர்ச்சி என்ற ஒன்றும் தேவையாயிருக்கிறது. கண்ணுக்குத் தெரியும் பொருளோடு, உணர்ச்சி என்ற கண்ணுக்கு தெரியாத கருவியும் இணைந்து அப்பொருளுக்கும் அப்பொருளை நுகர்பவருக்கும் ஓர் அர்த்தத்தை அளிக்கின்றன.

உணர்சசிக்கருவிகள் பல்வேறு வகைப்பட்டன – பயபக்தி, உறுதி, தன்னம்பிக்கை, திறன், நிச்சயம், சந்தோஷம், சுகம், தயை, தைரியம், தீர்மானம், உற்சாகம், ஆவல், ஆற்றல், கிளர்ச்சி, எதிர்பார்ப்பு, எழுச்சி, சிறப்புத்தன்மை, ஆச்சர்யம், உவகை, நன்றி, போற்றும்தன்மை, கவர்ச்சி, வசீகரம், நம்பிக்கை, நகைச்சுவை, ஊக்கம், அக்கறை, சுறுசுறுப்பு, அன்பு, விளையாட்டுத்தன்மை, அமைதி, இன்பம், பலம், பெருமை, நேர்மறை, ஸ்திரம், கம்பீரம், மேன்மை, சிலிர்ப்பு – வரிசை அனகோண்டா பாம்பு மாதிரி மிக நீளமானது.

பயம் மற்றும் வன்முறை சார்ந்த உணர்ச்சிகள், நேர்மறைக்கு மாறான உணர்ச்சிகள். எதிர்மறை உணர்ச்சிகள். தன்னைக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற தற்காப்பு உணர்வின் மறுவடிவமாக அவைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

எல்லா உணர்ச்சிகளும் எல்லாருக்கும் ஒரே அளவினதாய் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சாதாரண ஒரு செல் உயிரினத்திலிருந்து, சிக்கலான படைப்புகள் வரை பல படைக்கப்பட்டிருக்கின்றன. சிக்கலான உயிரினங்களுக்கு சிக்கலான, மேலே குறிப்பிட்ட குறிப்பிடப்படாத பல உணர்ச்சிக்கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. எந்த உணர்ச்சி எப்போது உபயோகிக்கப்படும் என்று சொல்வது மிகக்கடினம். அந்த உயிரினத்தின் ஆளுமையையும், சமூக பழக்கங்களையும், அப்போதைய மனநிலையையும் பொறுத்தது. இதற்கும் மேலாக அந்த உயிரினத்தின் தன்னினைவுடன் இயங்கும் அறிவை பொறுத்தது.

+++++

பொருள் ஒன்று. ஆனால் அதைக்காணும்போது ஏற்படும் உணர்ச்சிகள் வெவ்வேறு. கருநிறமான, நீளமான பாம்பு. பயவுணர்ச்சியை ஏற்படுத்தலாம். அல்லது அறியும் ஆவலை ஏற்படுத்தலாம். கொன்றுபோடும் வன்முறையை எண்ணத்தை உண்டாக்கலாம். அதே இன பெண் பாம்புக்கு காதல் உணர்ச்சியை தரலாம்.

+++++

கரும்பாம்பு கரும்பு விளை வயலின்னடுவே நகர்ந்து கொண்டிருந்தது. விவசாயி புற்களை வெட்டிக்கொண்டிருந்தான். புதர்போன்று பருமனான வளர்ந்திருந்த புற்களுக்கு நடுவே சுருண்டுபடுத்தது. அதே இடத்தில் சருகு, வாடிய தழைகள் என்று குப்பைகூடமாக இருந்ததால், ஒரு பாதுகாப்பான உணர்வுடன் பாம்பு இளைப்பாரிக்கொண்டிருந்தது. விவசாயியின் மண்வெட்டி புதரை நெருங்கியதும், தனது வேகத்தைக்கூட்ட, பாவம் ஒரு நொடியில், பாம்பு இரு துண்டுகளாக ஆனது. தலைப்பாகம் கொஞ்சம் அசைவதைப் பார்த்த விவசாயி, அதனை இன்னொரு வெட்டு வெட்டினான்.

என்னென்ன உணர்ச்சிகள் இந்த காட்சியில் பயன்படுத்தப்பட்டன? –
பாம்பு : களைப்பு, பாதுகாப்பு, சுகம், கவனமின்மை.
விவசாயி : சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, கவனமின்மை, வன்முறை

கவனமின்மை இரு வரிசைகளிலும் வருகிறது. கவனமாய் இருப்பது யாருடைய பொறுப்பு? பெரும்சிக்கல் இல்லாத “தொடர்ந்து வாழ்தல்” என்ற எளிய இலக்கை மட்டுமே கொண்ட ஓர் உயிரினத்தினுடையதா? அல்லது தானே சிந்திக்கும் திறம் கொண்ட, சுற்றுபுறத்தை திட்டமிட்ட நடவடிக்கை மூலம் ஓரளவு கட்டியாள தெரிந்த உயிரினத்தினுடையதா?

நிலத்தை சரி செய்து கொண்டிருந்த விவசாயி, "பாம்பு இருக்கலாம், எனவே கவனத்துடன் பாம்பைக்கொல்லாமல், தன் வேலையை செய்ய வேண்டும்" என்ற எண்ணம் கொண்டவனாக இருப்பது அவசியமா? அல்லது "தெரியாத்தனமாக படுத்திருக்கும் பாம்பை மிதித்து விடுவேன் எனவே கவனத்துடன் வேலை செய்து, பாம்பைக்கண்டால், அதை வெட்டி எரிந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்"? என்று இருப்பது அவசியமா?

+++++

அதே விவசாயி அதே நிலத்தில் சிலகாலம் கழித்து உழுதுகொண்டிருந்தான். அவன் மனைவியும், இரு வயதே ஆன மகனும் கூட வயலுக்கு வந்திருந்தார்கள். மதியவுணவு உண்டபிறகு, விவசாயி உழுவதை தொடர்ந்தான். நிலத்துக்கு நடுவில் இருந்த மரத்தின் நிழலில், அவன் மனைவி மரத்தில் சாய்ந்து
உட்கார்ந்தபடியே உறங்கலானாள். பக்கத்திலேயே, விரிக்கப்பட்ட துண்டில் மகன் உறங்கிக்கொண்டிருந்தான். ஒரு பாம்பொன்று, குழந்தையின் காலுக்கு மிக அருகே ஊர்ந்துகொண்டிருந்தது. சடக்கென்று கண் விழித்த தாய் பாம்பை நோக்க, கையில் வைத்த தடியை வைத்து அடிக்க முயற்சிக்க, அது சரியாக பாம்பின் மேல் படவில்லை. பாம்பு அவ்விடத்திலிருந்து அகலுவதற்கு முன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் காலை கொத்திவிட்டுபோனது.

இந்த நிகழ்வை நோக்குமிடத்து, தாயின் தாய்ப்பாசம் மேலிட, பிழையான குறியுடன் குச்சி எரிந்து, பாம்பின் தற்காப்பு உணர்வை எழுப்பி, குழந்தையை கொத்தவைத்தது என்று கருத இடமுள்ளதல்லவா?.

+++++

சரியான வைத்தியம் சமயத்தில் கிட்டாததால், விவசாயியின் மகன் இறந்து போனான். மகன் இறந்த துயரத்தில், விவசாயி, விவசாயத்திலிருந்து கொஞ்ச காலம் விலகியிருந்தான். கிட்டத்தட்ட ஒரு வருடம், நிலத்தில் எதுவும் பயிரிடவில்லை. நிலம் கவனிப்பாரற்று, புற்களும் புதர்களும் பெருகின. பக்கத்து நிலத்தின் உரிமையாளன், விவசாயியை அணுகி "நீயோ பயிர் எதுவும் பண்ணவில்லை…உன் நிலத்தை எனக்கு விற்றுவிடேன்" என்று சொல்லவும், உறக்கத்திலிருந்து விழிப்பவன் போல "இல்லை…இல்லை…அது என் நிலம்…இந்த முறை பயிரிடலாமேன்றிருக்கிறேன்" என்று சொன்னான். விரைவிலேயே, சில குடியானவர்களை கூட்டிக்கொண்டு, தானும் நிலத்தில் மண்டிக்கிடந்த புதர்களை விலக்கி சீர் செய்ய வந்தான். நிலத்தை உழுவதர்க்கேற்றவாறு, தயார் செய்து முடித்தபோது, ஏறத்தாழ ஐம்பது பாம்புகள் இறந்திருந்தன.

உணர்ச்சி என்பது ஒற்றை உயிரினம் என்ற அலகில் நோக்கும்போது அளக்கத்தக்கதாய், அறவரைமுறைக்கு உட்பட்டதாய் இருக்கவேண்டும் என்ற கட்டாயப்போக்கு பொதுவாக நிலவிவருகிறது. அதுவே ஓர் உயிரினத்தொகுதி என்ற அலகில் நோக்கும்போது, இன்னொரு வலிய உயிரினத்தின் முன்னேற்றம் என்ற அளவுகோலில் அடங்கிப்போகிறது.

+++++

மூன்று வருடங்களுக்கு பிறகு விவசாயி அந்த நிலத்தை அடுத்த நில உரிமையாளனுக்கு விற்றான். நகரத்தில் இருக்கும் தன் அண்ணன் தொடங்கிய பட்டறையில் போய் வேலை செய்யப்போவதாகவும், மகளை நல்ல கல்லூரியில் சேர்க்க நகரவாசம் உதவும் என்றும், மகனின் நினைவுகளை மறக்க கிராமத்தை விட்டு விலகியிருப்பது உதவும் என்றும் தன நண்பர்களிடம் சொல்லிக்கொண்டான்.

விவசாயியிடம் நிலத்தை வாங்கியவரிடம் சிலர் வம்பு பேசினார்கள் – "மூன்று வருஷமாகவே, அவன் நிலத்தில் மகசூல் ரொம்ப கம்மி. எலித்தொல்லை மற்றும் பிற கொறிக்கும் பிராணிகளின் தொல்லை அதிகமாகவே ஆயிட்டுது. கெமிகல்ஸ் அது இதுன்னு யூஸ் பண்ணிப்பார்த்தான்யா..ஒண்ணும் முடியலே…"

"அதுக்கென்ன, நம்ம கிட்ட கோயம்புத்தூர் அக்ரிகல்ச்சர் யுனிவர்சிட்டி-ல படிச்ச மேனேஜர் இருக்காரே…கவலை எதுக்கு"

+++++

விவசாயியின் குடும்பம் ஊரை அடுத்த கோயிலுக்கு வெளியே இருந்த பாம்புபுற்றுக்கு பால் வைத்து படையல் செய்துவிட்டே கிளம்பிப்போனது.

+++++