காகிதத்தின் ஆயுசு

 

ரொம்ப நாளாக ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த வெண் காகிதம் அன்று காலை ஒரு மேசையின் மேல் வைக்கப்பட்டது. காகிதத்தை இத்தனை நாள் ஒளித்து வைத்தவன் அந்த காகிதத்தில் சில குறிப்புகளையும் பெயர்களையும் ஒரு நீண்ட கணக்கையும் எழுதி வைத்திருந்தான். ஐந்தாறு தொலைபேசி எண்களும் அந்த காகிதத்தில் கிறுக்கப்பட்டிருந்தன. காகிதத்தின் சொந்தக்காரன் அன்று பல முறை அந்த காகிதத்தை திரும்ப திரும்ப நோக்கிக் கொண்டிருந்தான். அதன் மேல் அன்று ஏற்படுத்தப்பட்ட சுருக்கங்கள் அந்த காகிதத்துக்கு அத்தனை சுகமாயிருக்கவில்லை. இலேசாக வியர்த்திருந்த கையினால் அந்த காகிதத்தை அவன் ஒவ்வொரு முறை ஏந்தியபோது ஒரு சில இடங்களில் லேசாக உப்புச்சுவையான ஈரம் படிந்தது.

அது வைக்கப்பட்டிருந்த மேசையின் பரப்பெங்கும் அந்த காகிதத்தைப் போலவே நூற்றுக்கணக்கான காகிதங்கள். அந்தக் காகித மலையின் மேல் இந்த காகிதத்தில் குறிப்புகளை எழுதி வைத்தவன் எந்த கவனத்தையும் காட்டவில்லை. இந்த காகிதத்தை மட்டும் அடிக்கடி கையில் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். சற்று நேரங்கழித்து அவன் தொலைபேசியில் பேசினான். இந்த காகிதத்துக்கு மனிதர்கள் பேசும் மொழி புரியாது. அவர்கள் பேசும் குரலின் ஏற்ற இறக்கம் மட்டும் அதற்கு நன்கு புலனாகும். தொலைபேசியில் யாருடனோ சண்டையிடும் குரலில் பேசுபவன் போல் நம் காகிதத்துக்கு தெரிந்தது. இரண்டு மின்விசிறிகள் சுழன்று அந்த சின்ன அறையை குளுமைப்படுத்திக் கொண்டிருந்தன. காகித மலையிலிருந்து சில காகிதங்கள் தரையில் விழுந்ததை போனில் பேசிக்கொண்டிருந்தவன் கண்டு கொள்ளவில்லை. காகிதம் சடக்கென மேசையின் விளிம்பு வரை புரண்டு சில கணங்களில் கீழே விழுந்து தரையைத் தொட்டது. மிருதுவான தரை. மின்விசிறி தந்த காற்று அறைக்கதவு இருந்த திசையில் காகிதத்தை நகர்த்தியது. தரையில் ஏற்கனவே சில காகிதங்கள் படிந்திருந்தன. இந்த காகிதம் வேகமாக முன்னேறியது. காகிதத்துக்கு தாம் பிற காகிதங்களுடன் போட்டியில் இருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படவில்லை. கிட்டத்தட்ட அறையின் கதவை அது எட்டுவதற்கும் கதவு திறக்கப்படுவதற்கும் சரியாக இருந்தது. சோடாபுட்டி கண்ணாடி அணிந்த பருத்த சரீரமுள்ள ஒருவர் தரையில் கிடந்த காகிதத்தை எடுத்தார். தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவன் திடுக்கென போனை கட் செய்து அதிர்ந்தவாறு எழுந்து நின்றான்.

அடுத்த சில நிமிடங்களில் காகிதத்தை தன் மேசையில் வைத்து தன் இருகைகளாலும் பிடித்தவாறு அந்த கண்ணாடிக்காரர் அவர் எதிரில் அமர்ந்திருந்த காகிதத்தில் எழுதியவனைப் பார்த்து கடும் வார்த்தைகளால் ஏசிக் கொண்டிருந்தார். அவர் ஏசலில் மிரட்டலும் சரிபங்கில் கலந்திருந்தது. காகிதத்தில் எழுதியவன் தலையைத் தொங்கப்போட்டவாறு அமர்ந்திருந்தான். எந்த கணத்திலும் அழுகைவெடிக்கும் போலிருந்தது. அரைமணி நேரம் திட்டித் தீர்த்தார் கண்ணாடிக்காரர். சற்று களைத்துப் போய் அமைதியானார். கண்ணாடியைக் கழற்றி கைக்குட்டையால் துடைக்கத் தொடங்கினார். கண்மூடி திறக்கும் வேளையில் தான் எழுதிய காகிதத்தை மேசையிலிருந்து எடுத்து கையால் உருட்டி வாயில் திணித்து வேகமாக மெள்ள ஆரம்பித்தான் அதுவரை அழுதுவிடுபவன் போல் முகத்தை வைத்திருந்தவன். அவனுடைய மெள்ளலில் அறைவுற்ற காகிதத்துண்டுகளை – வாயை ஆவெனத் திறந்தவாறு அதிர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்த – கண்ணாடிக்காரரின் முகத்தில் துப்பினான்.

குண்டூசி

brass_pins_large

நான் உட்கார்ந்திருந்த இருக்கையின் மெத்தை மீது யாரோ சில குண்டூசிகளை தலைகீழாக குத்தி வைத்திருக்கிறார்கள். தெரியாமல் உட்கார்ந்து விட்டேன். சுருக் சுருக்கென குத்திக் கொண்டிருந்தது. ரிசப்ஷனில் அந்த இருக்கையைத் தவிர வேறு இருக்கைகள் காலியாக இல்லை. எழுந்து நின்று கொண்டேன். வேலையில்லாதவர்கள் யாரோ இந்த வேலையை செய்திருக்க வேண்டும். உட்காரும் இருக்கையில் தலைகீழாக குண்டூசியை குத்தி வைத்தவர்களின் எண்ணப் போக்கு என்னவாக இருக்கும்? நான் அவஸ்தை பொறுக்காமல் எழுந்து நிற்பதை குத்தியவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனரோ!

ரிசப்ஷனையும் உள்ளிருக்கும் ஹாலையும் கண்ணாடிச் சுவர் பிரித்தது ;  உள்ளே இருபது முப்பது பேர் தத்தம் இருக்கையில் உட்கார்ந்து வேலையில் ஆழ்ந்திருந்தனர் அல்லது வேலை செய்வது போல் நடித்துக் கொண்டிருந்தனர். வாடிக்கையாளர் ஒருவரை சந்திப்பதற்காக அந்த அலுவலகத்திற்கு வந்திருக்கிறேன். ஏறத்தாழ ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

யாரைப் பார்க்க வந்தேனோ அவர் அமைதியாகப் பேசும் மனநிலையில் இருந்ததாக தெரியவில்லை. போனில் யாரையோ கத்தினார். பின்னர் அறைக்குள் நுழைந்த சக-ஊழியர் ஒருவரின் மேல் சத்தம் போட்டார். . நான்கைந்து நாட்களாக சவரம் செய்யாமல் முளைத்திருந்த முட்தாடியை அடிக்கடி தடவி விட்டுக் கொண்டிருந்தார். தன் உருவத்தை சாந்தமாக வைத்துக் கொள்ள அரும்பாடு பட்டார். நான் சொல்வதை சில நொடிகள் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தவரின் கவனத்தை போனில் வந்த குறுஞ்செய்தியொன்று சிதறடித்தது. அடுத்த நிமிடம் நான் மீண்டும் ரிசப்ஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அவர் தன் மேலதிகாரியைப் பார்த்து விட்டு வரும் வரை காத்திருக்குமாறு பணிக்கப்பட்டேன்.

ரிசப்ஷனில் காத்திருப்போரின் எண்ணிகை கூடியது மாதிரி இருந்தது. ஏற்கெனவே மற்ற இருக்கைகளில் இருந்தவர்கள் இன்னும் உட்கார்ந்திருந்தார்கள்.  குண்டூசி இருக்கையின் விளிம்பில் ஓர் இளைஞன் பதற்றத்துடன் பல்லைக் கடித்தவாறு அமர்ந்திருந்தான். நேர் முகத்திற்கு வந்திருப்பான் என்று நினைத்துக் கொண்டேன்.

பத்து நிமிடங்கள் கழித்து அவர் வரவேற்பறைக்கு வந்தார். நான் இன்னும் அவருக்காக காத்திருந்தது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது போல் தோன்றியது. சலித்துக் கொள்பவர் போல அவர் பார்வை இருந்தது.

அதே அறைக்குள் மீண்டும் சென்றேன். அவர் மேஜையின் மேல் குவிந்திருந்த காகிதங்களின் உயரம் அதிகமாகியிருந்தது. மேலாக இருந்த ஒரு சில காகிதங்களில் கையெழுத்திடலானார். ஏற்கெனவே நான் அவருக்கு சொன்னவற்றை அவரிடம் மீண்டும் சொல்ல வேண்டியதாயிற்று. ஒரிடத்தில் என்னை நிறுத்தினார். முதல் முறையாக அவர் முகத்தில் சிறு புன்னகை. நான் சொன்ன ஏதோ ஒன்று அவர் கவனத்தை கவர்ந்திருக்க வேண்டும். அடுத்த நிமிடம் அவர் என்னை தன் உயர் அதிகாரியிடம் அழைத்துச் சென்றார். சந்திப்பு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்கு தொடர்ந்தது.

அடுத்த நாள் நான் என் அதிகாரியை அழைத்துக் கொண்டு அதே அலுவலகத்திற்குச் சென்றேன். முந்தைய நாள் குண்டூசி குத்தப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்தேன். குண்டூசிகளை யாரோ எடுத்து உட்கார ஏதுவாய் செய்திருந்தார்கள்.

++++++

பல மாதங்களுக்குப் பிறகு அதே வாடிக்கையாளர் அலுவலகத்தின் வரவேற்பறை சுத்தமாக மாறியிருந்தது. ஜன்னல் ஏசிக்கு பதிலாக அறையின் உயரத்தில் அறை ஏசி பொருத்தப்பட்டிருந்தது. இருக்கைகள் எல்லாம் மாற்றப்பட்டிருந்தன. கண்களுக்கு குளிர்ச்சியாக வரவேற்பறை சுவர்கள் புது வர்ணம் பூண்டிருந்தன.  வரவேற்புப் பெண்ணின் பின் புறமாக இருந்த கண்ணாடிச்சுவரில் புது டிசைன் அமைக்கப்பட்டிருந்தது. முன்னாள் குண்டூசி இருக்கை இருந்த இடத்தில் இப்போது வெறோர் இருக்கை. குளிர் பானம் வழங்கப்பட்டது. அதைக் குடித்து முடிக்குமுன்னரே உள்ளே செல்ல அழைப்பு வந்தது.

அவர் மேஜை துடைத்து வைத்தது போன்று இருந்தது. காகிதங்கள் குறைவாக இருந்தன. நான் பேசியதை விட அவர் தான் அதிகமாகப் பேசினார் பேச்சுக்கு நடுவில் கொஞ்சம் வெப்பம் அதிகமாக உணர்ந்தேன். ஏசி சரியாக வேலை செய்யவில்லையோ என்று எண்ணிக் கொண்டிருந்த போது மின்சாரம் போனது. அறை இருட்டில் மூழ்கியது. அவர் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு வியர்க்கத் தொடங்கியது.

அவருக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. முதல் முறையாக அவரைப் பார்க்க வந்த போது இருந்த உதவியற்ற நிலைக்கு திரும்பியது போல் உணர்ந்தேன்.

அடுத்த நாள் அதிகாரியை அழைத்துக் கொண்டு வந்த போதும் அலுவலகத்தில் மின்சாரம் திரும்பியிருக்கவில்லை.  பேட்டரி விளக்கின் ஒளியில் உரையாடினோம். என் அதிகாரி பேசத்தொடங்கியதும் அறையில் அமைதி நிரம்பியது. வாடிக்கையாளரின் உதட்டில் டிரேட் மார்க் சிறு புன்னகை தாண்டவமாடத் தொடங்கிய போது எங்களுக்கெல்லாம் தேநீர் பருகத் தரப்பட்டது.

அதிகாரியின் சமயோசிதம் இல்லாவிடில் வாடிக்கையாளரை அமைதிப்படுத்த முடிந்திருக்குமா என்பது சந்தேகமே! அவர் துணையின்றி என்னால் என்ன செய்து விட முடியும்? சுய-ஐயத்துடன் வரவேற்பறை வாயிலாக வாசலை நோக்கி சென்ற போது மின்சாரம் திரும்ப வந்து அவ்வலுவலகத்தின் அறைகள் ஒளியில் குளித்தன.

+++++

இன்னும் சில காலத்துக்குப் பிறகு தேங்கிக் கிடந்த சில சிறு சிக்கல்களைப் பேசித் தீர்ப்பதற்காக அந்த அலுவலகத்துக்கு சென்ற போது முட்தாடி அதிகாரி இன்னொரு அதிகாரியை அறிமுகப்படுத்தி வைத்தார். புதியவர் ஒரு புள்ளி முடி கூடத் தெரியாமல் முகத்தை சுத்தமாக மழித்திருந்தார். அவர் உதட்டில் புன்னகை நிரந்தரமாக ஒட்ட வைத்தது போலத் தெரிந்தது. அதற்குப் பின் புதியவரை சந்திக்கச் சென்ற போதெல்லாம் அவர் என்னைத் தனியே சந்திக்கவில்லை. மற்ற நிறுவனத்தின் விற்பனையாளர்களையும் சேர்த்தழைத்து சந்திப்பதை அவர் பழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு பட்டி மன்றத்தில் பங்கு பெற்று தன் கட்சி வாதத்தை முன்வைக்கும் உணர்வே ஒவ்வொரு சந்திப்பிலும் எனக்கு ஏற்பட்டது. முட்தாடிக்காரர் போல நெற்றி சுழிக்கும் பழக்கம் அவரிடம் அறவே கிடையாது.

மேஜையில் ஒரு காகிதம் கூட இல்லாமல் இருக்கும். ஒரே ஒரு குண்டூசிக் கூடு நிரம்பி வழியும். அதிலிருந்து ஒரு குண்டூசியை எடுத்து பல் குத்திக் கொண்டே இருப்பார். அவர் குண்டூசியை பக்கத்தில் கிடக்கும் குப்பைக் கூடைக்குள் எறிந்தார் என்றால் சந்திப்பு சில நொடிகளில் முடிவடையப் போகிறது என்று அர்த்தம்.

முட்தாடிக்காரரின் சமயத்தில் இருந்தது போல் அடிக்கடி சென்று சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்படவில்லை. மற்ற நிறுவன விற்பனைப் பிரதிநிதிகள் உள்ளே நுழைந்து விட்டார்கள் என்று என் அதிகாரி கவலைப் பட்டுக் கொண்டே இருப்பார். ஒரு நாள் அவரையும் கூட்டிக் கொண்டு சென்றேன். வரவேற்பறைக்கு வந்து எங்களைத் தன் அறைக்குள் கூட்டிக் கொண்டு போனார் குண்டூசியால் பல் குத்துபவர். அன்று எங்களோடு இன்னும் இரண்டு மூன்று நிறுவனப் பிரதிநிதிகளும் சேர்ந்து கொண்டனர். இசை நாற்காலி விளையாடுவது போன்று மாற்றி மாற்றி ஒவ்வொருவரிடமும் உரையாடினார். என் அதிகாரி திக்குமுக்காடினார். ஒரு முகமான உரையாடல்களுக்கு மட்டும் பழக்கப்பட்ட அவருக்கு இது முற்றிலும் புதிதான அனுபவமாக இருந்தது.

வரவேற்பறை ஏசியைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். தற்காலிகமாக புழுக்கம் அதிகமாகத் தெரிந்தது. என் அதிகாரி முகம் கழுவும் அறைக்கு சென்று திரும்புவதற்கு நேரம் பிடித்தது.

++++++

சில மாதங்களில் என் அதிகாரி வேலையை விட்டு சென்று விட்டார், எங்கு போய்ச் சேர்ந்திருக்கிறார் என்ற தகவல் எங்களுக்கெல்லாம் தெரியாமல் இருந்தது. குண்டூசி பல் குத்துபவரின் நிறுவன அலுவலகத்துக்கு நான் அழைக்கப்பட்டு பல நாட்கள் மாதங்கள் ஆயின. புதிதாக வேலையில் சேர்ந்த என் புது அதிகாரிக்கு எப்படியேனும் அந்த அலுவலகத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகப்படுத்தப்பட வேண்டும் என்ற துடிப்பு அதிகமாக இருந்தது. குண்டூசியால் பல் குத்துபவர் தொலைபேசியில் இனிமையாகப் பேசினார் ; ஆனால் சந்திக்க நேரம் கொடுக்காமல் இருந்தார். ஒரு நாள்  முன்னறிவிப்பில்லாமல் நானும் என் புது அதிகாரியும் அவரைப் பார்க்கச் சென்றோம். குண்டூசியால் பல் குத்துபவரின் பக்கத்தில் இன்னொருவரும் உட்கார்ந்திருந்தார். என் மாஜி-அதிகாரி. ஓரிரு நிமிடங்களுக்கு ஓர் அசாதாரணமான மௌனம். என் மாஜி-அதிகாரி தான் இனிமேல் அந்நிறுவனத்தின் தொடர்பாம். எதிர்கால வியாபார வாய்ப்பு பற்றிய முடிவுகள் எல்லாம் என் மாஜி அதிகாரி தான் எடுப்பாராம். என் புது அதிகாரி அச்சந்திப்பின் போது இயல்புக்கு மாறாக சங்கடத்துடன் நெளிந்து கொண்டிருந்தார். சந்திப்பு சீக்கிரமே முடிந்து விட்டது. பல் குத்துபவருடனான கடைசி சந்திப்பின் போது மிகவும் படபடப்புடன் இருந்த என் முன்னாள் அதிகாரியின் வழக்கமான உடல் மொழியை அன்று காண முடியவில்லை. அவருடன் சில வருடங்கள் சேர்ந்து வேலை பார்த்திருந்தாலும், அன்று போல் என்றும் அவர் அவ்வளவு சிரித்துப் பேசி நான் பார்த்ததில்லை. பாவம் புது அதிகாரி! வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே நிறுவனம் முக்கியமான ஒரு வாடிக்கையாளரை இழக்கும் படி ஆகி விட்டது.

+++++

அதிகாரிகள் வருவதும் போவதுமாக இருக்கின்றனர். எல்லா இடங்களிலும். வாடிக்கையாளருடனான உறவு எப்படி தொடங்குகிறது? எப்படி முடிகிறது? என்பதைக் கணிப்பது மிகக்கடினம். ஒரு விற்பனையாளனான நான் எந்த வாடிக்கையாளருடனான உறவிலும் நிரந்தரமாக என்னைப் பிணைத்துக் கொண்டு விடுவதில்லை. புது வாடிக்கையாளரைப் பெறுவதில் துவக்க முயற்சிகள் ஒரு புறம் இருந்தாலும் புறச் சூழ்நிலைகள் தான் பெரும்பங்கு வகிக்கின்றன. எங்களுடன் வியாபார உறவைத் துண்டித்துக் கொண்ட நிறுவனத்தின் தேவைகள் அதிகரிக்கலாம் ; அவர்களுடைய தற்போதைய சப்ளையர்களின் தரம் குறையலாம் அல்லது அவர்கள் திவாலாகலாம். மூலப் பொருள் தட்டுப்பாடு உண்டாகி மற்ற சப்ளையர்கள் திண்டாடுகையில் எங்கள் நிறுவனத்திடம் மூலப் பொருள் சரக்கு மிதமிஞ்சி இருக்கலாம். மற்ற சப்ளையர்கள் அதிரடியாய் முன்னறிவிப்பின்றி விலைகளை ஏற்றலாம். என் மாஜி-அதிகாரி வேலை விட்டு நீங்கிச் செல்லலாம் அல்லது நீக்கப்படலாம். புதிதாக வரும் அதிகாரிக்கு புது சப்ளையரை கொண்டு வந்து தன் திறமையைக் காட்டும் உந்துதல் வரலாம். எண்ணற்ற சாத்தியக்கூறுகள்!

ஒற்றைக் குண்டூசியால் ஒரு காகிதத்தில் ஓட்டைகள் போட்டுக் கொண்டு நேரங் கழித்துக் கொண்டிருக்கையில் புதிதாகச் சேர்ந்த என் அதிகாரியின் சீட்டைக் கிழித்துவிட்டார்கள் என்ற சேதி என் காதை எட்டியது. வேலையில் சேர்ந்து குறுகிய காலமே ஆனாலும் அவருடைய உத்வேகமும் செயலாற்றலும் நிறுவனத்தின் உள் சூழலை ஓரளவு மாற்றியிருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்த எங்களுக்கு இந்த வேலை நீக்கச் செய்தி அதிர்ச்சி தந்தது. பத்து பனிரெண்டு வருடங்களாக நாற்காலி தேய்ப்பான்களாக மட்டுமே இயங்கி வரும் பிற உயர் அதிகாரிகளை அவருடைய மூர்க்கமான வேகம்  நிலைகுலைய வைத்திருக்கும். என்ன காரணம் சொல்லி அவரை விலக்கினார்கள் என்று யாருக்கும் தெரியப் போவதில்லை. ஒரு மாதத்துக்குள் வேறொருவரை பணி நியமனம் செய்து விட்டார்கள். அவர் இன்னும் பணியில் சேரவில்லை.

என் மாஜி-அதிகாரிக்கு ஒரு நாள் மீண்டும் பாசம் துளிர்த்தது. பழைய சப்ளையரை மீண்டும் முயலுமாறு இப்போது இயக்குனராகிவிட்ட குண்டூசியால் பல் குத்துபவரின் அறிவுறுத்தலின் படி  சந்திக்கக் கூப்பிடுவதாகச் சொன்னார். இந்த தொலைபேசி அழைப்பை சாத்தியமாக்கிய காரணி எதுவாக இருக்கும்? விரைவில் தெரிந்துவிடும். வேலையில் சேரப் போகும் என் புது அதிகாரிக்கு நல்ல அதிர்ஷ்டம் என்று எண்ணிக் கொண்டு அதே வரவேற்பறையில் காத்துக் கொண்டிருக்கையில் சப்ளையர் ஒருவர் எழுதுபொருட்களை ரிசப்ஷனிஸ்ட் மேஜையில் குவித்துக் கொண்டிருந்தார். குண்டூசி டப்பாவொன்றை தவறுதலாக மேஜையின் விளிம்பில் வைத்து விட அது கீழே விழுந்து மூடி உடைந்து வரவேற்பறை எங்கும் குண்டூசிகளாய்ச் சிதறின.

நன்றி : பதாகை

உனக்கு ஒருத்தன் கிண்டில் வாங்கித் தந்தது ஒரு தப்பாய்யா? – நட்பாஸ்

சிறப்புப்பதிவு – நட்பாஸ்

சுள்ளிகளை ஆங்கிலத்தில் சில சமயம் கிண்ட்லிங் என்று சொல்கிறார்கள்- கிண்டில் என்ற ஆங்கிலச் சொல்லின் நேர்பொருள் கொளுத்துதல் என்று கொள்ளலாம் (“செம செம செம #எரிதழலில் பொன்னியின் செல்வன்”, தனித்தமிழார்வல டிவீட்).

அமேசான் நிறுவனம் தான் தயாரித்த மின்னூல் வாசிப்புக் கருவிக்கு கிண்டில் என்ற பெயரைப் பரிசீலித்தபோது, இந்த அர்த்தம் வரும் என்று தெரிந்தேதான் இதைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்- அண்மையில் வெளிவந்த அமேசான் சிங்கிள் ஒன்றின் பெயர், I Murdered My Library http://www.amazon.com/gp/product/B00K6JO15A/ (28 பக்கங்கள், இந்திய விலையில் ரூ. 180). விலையையும் தலைப்பையும்விட இந்த ஒற்றைக்கட்டுரையின் முகப்பு அட்டைதான் நம்மை மிரட்டுவதாக இருக்கிறது – http://media.boingboing.net/wp-content/uploads/2014/08/81qANfgNiuL._SL1500_.jpg .

நான் படித்த வினோதமான விமரிசனங்களில் ஒன்று The Inglorious Basterds என்ற படத்துக்கு எழுதப்பட்டிருந்தது. படத்தின் இறுதியில் திரையரங்கு உரிமையாள நாயகி தன் உதவியாளோடு தியேட்டர் கிடங்கிலுள்ள திரைப்படங்களின் பிலிம் ரோல்களைக் கொளுத்தி நாஜி தலைவர்கள் அத்தனை போரையும் பூண்டோடு அழிப்பதாக வரும். இது தொடர்பாக அந்தக் கட்டுரையாளர், தியேட்டர் ஓனரும் காமிரா ஆபரேட்டருமாகச் சேர்ந்து அத்தனை திரைப்படங்களையும் கொளுத்துவதாகக் கதை எழுத சினிமாவின் அழகியலை அறிந்த எவருக்கும் மனம் வராது என்று சொல்லி, இந்தப் படம் குறித்து டாரண்டினோவை என்னதான் புகழ்ந்தாலும் அடிப்படையில் அவரது அழகியல் மூர்க்கத்தனமானது என்று எழுதியிருப்பார். என்னடா இதெல்லாம் மிகையான விமரிசனமாக இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டே அதைப் படித்தேன். ஆனால் இப்படி ஒரு கருவி, அதைத் தயாரித்த நிறுவனம் இப்படி ஒரு அட்டைப்படம் போட்டு, ‘என் நூலகத்தைக் கொன்றேன்’ என்ற தலைப்பு வைத்த மின்னூலை விற்பதைப் பார்க்கும்போது, இதிலெல்லாம் விஷயம் இருக்குமோ என்று தோன்றுகிறது.

அருங்காட்சியகத்தில் உள்ள எகிப்திய பாப்பிரஸ் ரோல்களை எரிப்பதாகவோ, குழந்தைகளை எரிப்பதாகவோ படம் எடுத்தால், என்ன ஒரு மோசமான கற்பனை என்று சொல்வோம் அல்லவா? எதற்கு எதை விலை கொடுப்பது என்று ஒரு அளவுமுறை இருக்கிறது, நாம் எதை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதுதான் அந்தப் பரிமாற்றத்தின் மதிப்பைத் தீர்மானிக்கிறது.

இங்கு, நம்பி கிருஷ்ணன் சொல்வனத்தில் எழுதிய ஒரு கட்டுரையைச் சுட்டுகிறேன் – வாசிப்பின் லட்டைட்டிய இன்பங்கள் http://solvanam.com/?p=34377 . “ஆல்பர்டோ மங்க்வெல் போலந்து நூலகத்தில் இருந்த ஒரு நூலகர் பற்றி எழுதுகிறார். யூதப் புத்தகங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நாட்களில் அந்த நூலகர் தினமும் சில புத்தகங்களாக ஒரு வண்டியில் மறைத்துச் சென்று காப்பாற்றினாராம். அந்தப் புத்தகங்களைப் படிக்க எவரும் பிழைத்திருக்கப் போவதில்லை என்று தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்தார் என்றால் இதை நினைவைக் காக்கும் ஒரு செயல் என்றுதான் சொல்ல வேண்டும். பண்டைய கப்பாலியர்கள் சொற்படி, இந்த உலகம் நாம் வாசிப்பதால் இருப்பதில்லை, நம்மால் வாசிக்கப்படும் சாத்தியத்தில்தான் உருக்கொள்கிறது”.

 

Amazon_Kindle_Paperwhite_2013_35827154_09

காகித நூல்களுக்கு மின்னூல்கள் மாற்றாக முடியுமா? அச்சுக்கு இருக்கும் பருண்மை டிஜிடல் பிம்பங்களுக்கு உண்டா? புத்தகங்களுக்கு எதிராக கிண்டிலை உருவாக்கி (“எரிதழல்”) இன்று எழுத்தாளர்களுக்கு எதிராக வாசகர்களை ஏவத் துவங்கியுள்ள அமேசானை இன்னும் கொடிய சாத்தானாக்க வேண்டுமென்றால், மின்னூல்களின் உலகம் ஆவிகளின் உலகம் என்று சொல்லலாம்: காகித நூல்களுக்கு எதிரான நெருப்பின் சுள்ளிகள் என்று சொல்வதைவிட சிதைகள் என்றுதான் கிண்டிலைச் சொல்ல வேண்டும். இந்தச் சாத்தான் ஒவ்வொரு கணத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். உங்களுக்கு உரியவையாக இருந்தாலும் இந்த மின்னூல்கள் எப்போது வேண்டுமானலும் அமேசான் ஆணையின் பேரில் ஒட்டுமொத்தமாக மறையலாம். என்னிடமுள்ள காகித நூல்களைக் கொளுத்தினால் அதன் சாம்பல்களில் உள்ள எழுத்துகள் என்னைக் குற்றம் சொல்லும். அமேசானுக்கு அந்தக் கவலையில்லை.

ஒரு நூலகத்தின் கொள்ளளவு இருந்தாலும் மின்னூல் வாசிப்புக் கருவிகள் நினைவற்றவை, நினைவுக்கு எதிரானவை. கிண்டில் வாசிப்புக்கு மூர்ச்சைக்குரிய கூறுகள் உண்டு. மயக்க நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் உள்ள வேறுபாடு நினைவின்மை அல்ல, காலமின்மை. விழிப்பு நிலையில் முக்காலமும் உணர்ந்தவர்களாய் இருக்கும் நாம், மயக்க நிலையில் ஏககாலத்தில் இருக்கிறோம்- நிகழ்வோடே பயணிக்கிறோம், அதன் எல்லைகள் நம்மை சுவீகரித்துக் கொள்கின்றன. மின்னூல் வாசிப்பதைப் பட்டியலிட்டு சீராகச் செய்பவர்களுக்கு ஒழிவு கிடைக்கும் பொழுதுகளைக் கிண்டில் கைப்பற்றிக் கொள்கிறது.

காகித நூல்களை வாசிப்பதைவிட மின்னூல்களை வாசிப்பது எளிதாக இருக்கிறது, வசீகரமாகவும் இருக்கிறது. நம் கிண்டிலில் நமக்கான ஒரு நூலகத்தை உருவாக்கி, ஒரு புத்தகம் மாற்றி இன்னொன்று என்று படித்துக் கொண்டே போக முடிகிறது. ஆபிசுக்கு டிபன் பாக்சுடன் புத்தகத்தை எடுத்து வைக்கும் பழக்கம் கொண்ட நான் இப்போது, கிண்டிலை பாண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஏராளமான புத்தகங்கள் வரிசையாய் வெவ்வேறு போல்டர்களில் காத்திருக்கையில், இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தால்தான் அடுத்ததைப் படிக்க முடியுமா என்று அங்கலாய்ப்பாக இருக்கிறது, அந்த அடுத்த புத்தகமும்கூட பதிலுக்கு, “இவன் எப்போடா நம் பக்கம் வருவான்,” என்று என்னை வாசித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் தப்பில்லை. கிண்டிலைத் தொட்டுப் பார்க்கும்போது எனக்கான ஒன்று அதனுள் காத்துக் கொண்டிருப்பதுபோல்தான் இருக்கிறது.

ஆனால் ஒரு மிகப்பெரிய சிக்கல், மின்னூலைப் புரட்டிப் பார்க்க முடியவில்லை. இது ஒரு சாதாரண விஷயமாகத் தெரியலாம். ஆனால் நியாயமாக யோசித்துப் பார்த்தால், முதல் பக்கத்தில் துவங்கி கடைசி பக்கத்தில் முடியும் ரயில் பயணமல்ல வாசிப்பு. ஒரு புத்தகத்தை அட்டை முதல் அட்டை வரை படித்து முடித்தபின், முன்னும் பின்னும் சென்று பக்கங்களுக்கு இடையிலுள்ள இணைப்புகளையும் விலகல்களையும் அலையும்போதுதான் உண்மையான வாசிப்பு துவங்குகிறது. இதனால்தான் சில புத்தகங்களை மீண்டும் மீண்டும் பல பத்தாண்டுகளாகப் படித்துக் கொண்டிருக்கிறோம். புரட்டிப் பார்க்கும்போதுதான் விருப்பப் பகுதிகள் நம் மனதில் மேலும் உறுதியான வடிவம் பெறுகின்றன, கவனிக்காமல் விடப்பட்ட விஷயங்களின் முக்கியத்துவம் புலன்படத் துவங்குகிறது. ஒவ்வொரு வாசிப்பிலும், காசுவலான ஐந்து நிமிட அரையார்வ புரட்டலிலும்கூட, அந்த நூல் மேலும் துலக்கம் பெற்று முழுமையை நோக்கி ஒரு சிறு அளவு பயணிக்கிறது.

நாவல்களையும் சிறுகதைகளையும் யாரும் இப்போதெல்லாம் அதிக அளவில் படிப்பதில்லையே என்ற கேள்விக்கு அசோகமித்திரன் ஒரு பேட்டியில், ஒவ்வொரு காலமும் தனக்குத் தேவையான கலை வடிவத்துக்குதான் ஆதரவு கொடுக்கும் என்றார். நீங்க நல்லா எழுதறீங்க என்ற காரணத்துக்காக உங்களை ஒருத்தர் படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களுக்கு மட்டுமில்லை, டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர் எல்லாருக்கும் இதான் கதி.

சமகாலம் என்பது என்னவோ வெயில் மழை மாதிரி ஆகாயத்திலிருந்து கவிந்து விழுவதல்ல. நாம் உருவாக்கும் கருவிகள்தான் நம் காலமாகின்றன. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தி பரபரப்பாக அடிப்பட்டது. 2002ஆம் ஆண்டுக்குப்பின் ஜெராக்ஸ் கம்பெனி தயாரித்த ஒவ்வொரு கருவியிலும் நாம் நகலெடுக்கும் ஆவணங்களைப் பதிவு செய்து பாதுகாக்கும் ஹார்ட் டிரைவ் ஒன்று இருக்கிறது என்பதுதான் அது. இது எதுக்கு என்று நாம் கேட்கலாம். ஹார்ட் டிரைவ் அவசியப்படும்போது கூடவே இந்த வசதியும் இருந்துவிட்டுப் போகட்டும், காசா பணமா என்பதால் இந்த வசதி.

இணையத்தில் தகவல்கள் சும்மா போய் வந்து கொண்டிருக்கின்றன, எடுத்துப் பார்ப்பது சாத்தியம் என்னும்போது செய்தால் என்ன என்று செய்து பார்ப்பதால்தான் நாம் இன்று ஒவ்வொரு நிமிடமும் உளவு பார்க்கப்பட ஒப்புக் கொண்டிருக்கிறோம்- அரசாங்கம் சும்மா இருந்தாலும் உங்கள் போன் கம்பெனி, அதன் சர்வீஸ் புரோவைடர், ஆன்டிராய்ட் எனில் கூகுள் நிறுவனம், நீங்கள் பயன்படுத்தும் செயலிகளை எழுதிய கம்பெனிகள் உங்களைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

எவ்வளவு சுலபமாக நம் கருவிகளின் திறன்கள் நம் காலத்தைத் தீர்மானிக்கின்றன என்பது ஆச்சரியம்தான். யாரும் ஏதோ திட்டம் போட்டு இன்றைய உளவுச் சமூகத்தை உருவாக்கவில்லை. எப்போதும்போல் கருவிகள் கரணங்களாகின்றன. சைபர் ஸ்பேஸில் செலுத்தப்படும்போது நாம் கண்காணிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.

எனவே இது இருபத்து நான்கு மணி நேர உளவின் காலம், மின்னூல்களின் காலம், எந்திரங்களின் காலம், அந்தரங்க வாசிப்பும், அச்சுநூல்களும் புத்தக அலமாரிகளும் காலாவதியாகிவிட்டன- இந்தப் புலம்பல்களால் பயனில்லை என்று சொல்லலாம். இதுதான் நம் எதிர்காலமாகவும் இருக்கலாம். ஆனால் அதற்காக நம் இழப்புகளுக்காக வருந்தாமல் இருக்க முடியுமா? நாம் இழப்பது அறிதலின் பருண்மக் கூறுகளில் ஒன்று மட்டுமல்ல, நம் அக விகாசத்தின் அவசியத் தன்மையையும் அல்லவா இழக்கிறோம்.

ஆம், நாம் வாசித்ததைப் புரட்டிப் பார்க்க முடியவில்லை என்றால் நமக்குச் சிந்திக்க வழியில்லை என்றுதான் பொருள். அச்சுப்பிரதிக்கு மின்பிம்பங்கள் மாற்று என்றால் அங்கு மெய்ம்மையில் ஓர் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. காகிதநூல்கள் இருக்கும் இடத்தில் கிண்டிலை வைத்துப் பார்ப்பது, அமேசானே சொல்வதுபோல், நூலகத்தில் நெருப்பு வைப்பது போன்றது. மின்னூல்தான் எதிர்காலம் என்பவர்களுக்கு இதில் இழப்பு எதுவும் தெரியாது. சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுப்பவர்கள்தான் உளவு பார்க்கப்படுவதை அநாகரிக அத்துமீறலாக நினைப்பார்கள், நல்ல எழுத்தை மதிக்கத் தெரியாதவர்கள்தான் எழுத்தாளனைவிட வாசகன் முக்கியம் என்பார்கள், யோசிக்க வேண்டிய தேவை இல்லாதவர்கள்தான் பல பத்தாண்டுகளாக புரட்டிப் புரட்டிப் படித்துக் கொண்டிருப்பதில் உள்ள தேடல் பற்றி ஒரு உள்ளுணர்வும் இல்லாமல், வாரம் ஒரு புத்தகம் டவுண்லோட் செய்து அதை அட்டை முதல் அட்டை வரை வாசித்து ஒரு போல்டரில் புதைத்துப் போட்டுவிட்டு அடுத்த புத்தகத்தைப் படித்துக் கொண்டு ரயில், பஸ், கவுண்டர் வரிசை என்று அடுத்தடுத்து போய்க் கொண்டே இருப்பார்கள்.

உன்னை ப்பற்றி தெரியாமல் எவனோ உனக்கு ஓசியில் கிண்டில் கொடுத்தால், அதில் புரட்டிப் பார்த்து படிக்க முடியவில்லை என்பதற்கு இவ்வளவு பெரிய வியாக்கியாயனமா என்று நீங்கள் கேட்கக்கூடும். நியாயமான கேள்விதான், ஆனால் கிண்டிலில் ஒரு புத்தகம் படித்துவிட்டு ஆம்னிபஸ் பதிவு எழுத முயற்சித்துப் பாருங்கள், அப்போதுதான் நான் சொல்லும் கஷ்டம் புரியும். எண்ணற்ற புத்தகங்கள் காத்திருக்கின்றன, ஆனால் எதுவும் ஒரு பதிவு தேற்றப் பயன்படாது என்பதை உணரும்போது நானே தேவலை, நீங்கள் இதைவிட மோசமாகப் பேசுவீர்கள். ​

 
நட்பாஸ் அவர்களின் வலைதள முகவரி : http://livelyplanet.wordpress.com

காற்று

அறையில் நுழைந்ததும்
வெளிச்சம் உள்நுழைய
சன்னல்கள் திறக்கப்பட்டன.
அனுமதியின்றி
காற்றும் நுழைந்தது.
சரியாக சதுரவடிவில்
கிழித்து போடப்பட்டு
தரையில் சிதறிக்கிடந்த
துண்டு காகிதங்கள்
ஒன்றிணைந்து
மீண்டும் வெற்றுத்தாளானது.
வெண்தாளுக்கு
மஞ்சள் நிறம் பூசியது
மாலை நேர பொன்வெயில்.
யாரும் வரையாமல்
ஒரு பறவையின்
ஒவியமொன்று
மஞ்சள் தாளில் தோன்றியது.
மின்விசிறி
சுழல ஆரம்பித்தது.
சன்னல் திட்டில்
வீற்றிருந்த
பறவையோடு
மஞ்சள்நிற பின்புறத்தில்
பூத்திருந்த
கரும்பறவை ஓவியமும் பறந்துபோனது.
தாள் காகிதத்துண்டுகளாகி, பிரிந்து
முன்னர்போல மூலைக்கொன்றாய்
அலைந்து திரிந்தன.