திரும்பாதிருத்தல் மற்றும் பிற கவிதைகள் – எமிலி டிக்கின்ஸன்

A Book

“He ate and drank the precious words,

His spirit grew robust;

He knew no more that he was poor,

Nor that his frame was dust.

He danced along the dingy days,

And this bequest of wings

Was but a book. What liberty

A loosened spirit brings!”

(XXI)

புத்தகம்

மதிப்புமிக்கச் சொற்களை தின்று குடித்துவிட்டான்

அவனின் ஆன்மவுணர்வு பெருக்கெடுத்து வளர்ந்தது

அதற்குப்பின், தான் ஏழை என்பதை மறந்துவிட்டான்

அவனின் தேகம் உடைந்துவிழுவது என்பதையும்

மங்கலான நாட்களை ஆடிக்கழிக்க முடிந்தது

பெற்ற இறக்கைகள் புத்தகமன்றி வேறில்லை

இறுக்கம் களைந்த ஆன்மா கொணரும்

சுதந்திரமே சுதந்திரம்!

“I had no time to hate, because

The grave would hinder me,

And life was not so ample I

Could finish enmity.

Nor had I time to love; but since

Some industry must be,

The little toil of love, I thought,

Was large enough for me.”

வெறுக்க நேரமில்லை என்னிடம், ஏனெனில்

கல்லறை என்னைத் தடுக்கும்

மற்றும், வாழ்க்கை மிதமிஞ்சியதாக இல்லை

என் பகையை தீர்த்துக்கொள்ளுமளவிற்கு.

நேசிக்கவோ நேரமே போதவில்லை, ஆனால்

கொஞ்சம் மெனக்கெடல் அவசியமென்பதால்

அன்பிற்கான சிறு உழைப்பு மட்டும்

எனக்கு போதுமானதாய் இருந்தது என்றெண்ணினேன்

(XXII)

Unreturning.

‘T was such a little, little boat

That toddled down the bay!

‘T was such a gallant, gallant sea

That beckoned it away!

‘T was such a greedy, greedy wave

That licked it from the coast;

Nor ever guessed the stately sails

My little craft was lost!”

(XXIII)

திரும்பாதிருத்தல்

குடாக்கரையில் தள்ளாடும்

இது மிக மிகச் சின்ன படகு

தள்ளிப்போகச் சைகை காட்டும்

அது மகத்தான பெருங்கடல்

கரையிலிருந்து தீண்டியது

பொறாமை மிகுந்த ஓர் அலை

கம்பீரமிக்க கப்பல்களாலும் கண்டுபிடிக்கவியலாமல்

தொலைந்துபோனது என் மரக்கலம்

(XXIII)

“Whether my bark went down at sea,

Whether she met with gales,

Whether to isles enchanted

She bent her docile sails;

By what mystic mooring

She is held to-day, —

This is the errand of the eye

Out upon the bay.”

(XXIV)

என் சிறு நாவாய் கடலில் இறங்கிச் சென்றது

அது புயலைச் சந்தித்ததா

அல்லது தனது பணிவான பாய்மரத்தை கீழிறக்கி

மயங்கவைக்கும் தீவுகளை அடைந்ததா

எத்தகைய புதிர் நங்கூரப் பிணைப்பில்

அது இன்று பூட்டப்பட்டிருக்கிறது,-

கண்கள் விடுக்கும் செய்தி இது

கடற்கரைக்கு அருகிருந்து

(XXIV)

“Belshazzar had a letter, —

He never had but one;

Belshazzar’s correspondent

Concluded and begun

In that immortal copy

The conscience of us all

Can read without its glasses

On revelation’s wall.”

(XXV)

பெல்ஷஸாரிடம் ஒரு கடிதம்

ஒரே ஒரு கடிதம்

பெல்ஷஸாரின் செய்தியாளர்

அந்த அழியாப் பிரதியில்

தொடங்கி முடித்த

அனைவரின் மனசாட்சியை

நம்மால் வாசிக்க முடியும்

அதன் கோப்பைகளில்லா

வெளிப்படுத்தும் சுவரில்

பெல்ஷஸார் – விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் டேனியலின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பாபிலோனின் பட்டத்து இளவரசன். விவிலியத் தொன்மத்தில் பாபிலோனியப் பேரரசன் நெபுகத் நெஸாரின் மகன் என்று குறிப்பிடப்படும் பெல்ஷஸார் வரலாற்று ரீதியாக நெபுகத் நெஸாருக்குப் பின் வந்த நெபோடினஸ் என்னும் அரசனின் மகனாவான். டேனியலின் புத்தகத்தில் வரும் தொன்மக் கதையின் படி பெல்ஷஸார் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவ்விருந்தில் அவனுடைய பிரபுக்கள், அமைச்சர்கள், மனைவிகள், அந்தப்புரப் பெண்கள் எனப் பெருந்திரளாக அனைவரும் கலந்துகொண்டனர். நெபுகத் நெஸார் ஜெருசலேமைக் கைப்பற்றி யூதர்களின் தலைமைக் கோயிலிலிருந்து எடுத்து வந்த கோப்பைகளையும் பாத்திரங்களையும் விருந்தில் மதுவருந்த பயன்படுத்துமாறு ஆணையிடுகிறான் பெல்ஷஸார். விருந்தினர் அனைவரும் அந்தக் கோப்பைகளில் மதுவூற்றி அருந்துகின்றனர். பின்னர் அக்கோப்பைகளின் மூலப்பொருட்களான தங்கம், வெண்கலம், வெள்ளி முதலானவற்றுக்கான தேவதைகளை வணங்குகின்றனர். அப்போது விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அறையின் சுவரொன்றில் ஓர் ஆண் கரம் தோன்றுகிறது. சுவரில் பின் வரும் சொற்கள் எழுதப்படுகின்றன. அந்தச் சொற்களின் அர்த்தம் ஒருவருக்கும் புரியவில்லை. அமைச்சர் ஒருவரை அழைத்து ஜெருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அழைத்துவரப்பட்ட யூதர்களிலேயே அறிவு மிக்கவரும் பலவித மொழிகளை அறிந்தவருமான டேனியலை கூட்டிவரப் பணிக்கிறான். டேனியல் அங்கு வந்தவுடன் சுவரில் காணப்படும் சொற்களின் அர்த்தத்தைச் சொன்னால் பாபிலோனிய நாட்டின் மூன்றாவது அதிகாரமிக்கவனாக ஆக்குவதாகச் சொல்கிளான். டேனியல் தனக்கு பரிசோ பதவியோ வேண்டாம் என்று மறுத்துவிட்டு அர்த்தத்தை மட்டும் சொல்கிறார்.

מנא מנא תקל ופרסין

Mede Mede Tekel Upharsin

"Mene, தேவன் உமது ராஜ்யத்தின் நாட்களை எண்ணி, அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறார் ;Tekele, நீ எடைபோடப்பட்டாய்…உன் எடை குறைந்து காணப்படுகிறது ; "UPHARSIN", உனது ராஜ்யம் பாரசீகர்களுக்குக் கொடுக்கப்படும்.”

அன்றிரவே பெல்ஷஸார் பாரசீகர்களால் கொல்லப்படுகிறான். பாபிலோனை பாரசீக பேரரசர் சைரஸ் கைப்பற்றுகிறார். சைரஸ் பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்களை ஜுடேயாவுக்கே திரும்ப அனுப்பிவைக்கிறார்.

வெளிப்படுத்தும் சுவர் – எமிலி கேதலிக் சமய நம்பிக்கை கொண்டிருந்தவர். இங்கு அவர் சுவர் எனக் குறிப்பிடுவது ஜெருசலேமின் அழிந்து போன சாலமன் கட்டிய யூதர்களின் தலைமைக் கோயிலின் சுவர் (Wailing Wall) சிதிலத்தை. யூதர்கள் சுவர் முன்னால் நின்று அழும் சடங்கில் அவர்கள் அழும் காரணத்தை இறைவன் பெல்ஷஸாருக்கு அளித்த தகவலோடு ஒப்பு நோக்குகிறார் எமிலி.

தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் – ஈரானிய நாவல் குறித்து

தெஹ்ரானில் ஒரு உயரமான கட்டிடம். மிகவும் வேறுபட்ட சமூக நிலைமைகள், மத அல்லது மத சார்பற்ற நோக்குநிலைகள், தார்மீக அல்லது ஒழுக்கக்கேடான நடத்தைகளை பிரதிபலிக்கும் அண்டை வீட்டார். பழமைவாத குடும்பங்கள், மூர்க்கத்தனமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட இளைஞர்கள் (மது, போதைப்பொருள், தேவையற்ற டீனேஜ் கர்ப்பம்), தொழில்முறை குற்றவாளிகள், ஏன் ஒரு செக்ஸ் வொர்க்கர் கூட – எல்லாம் கலப்பு, எல்லாம் முரண், எல்லாம் புதிர்.

ரேடியோவில் மதச் சொற்பொழிவு ஒலிபரப்பை கேட்டுக்கொண்டே கொடூரமான கொலையைச் செய்கிறார்கள் குற்றவாளிகள். அந்தச் சொற்பொழிவில் வரும் மேற்கோள் – “தொழுநோயாளியின் கையில் பன்றி எலும்பு” – மனித இருப்பின் பரிதாபகரமான தன்மையின் வரையறை – ஷியா இஸ்லாமின் புனித இமாம்களில் ஒருவர் தந்தது. செக்ஸ் வொர்க்கர் நம்பிக்கையின்றி காதலிக்கிறாள். படித்த தாய் மூடநம்பிக்கை மற்றும் அதிசய சிகிச்சையின் மூலம் நோய்வாய்ப்பட்ட குழந்தை நலம்பெற ஆசைப்படுகிறாள். மிதமிஞ்சிய பணம் புரளும் குற்றவுலகம், அதில் ஊழலும் கலந்துள்ளது. பின்னணியில், சத்தமில்லாத, மிகவும் மாசுபட்ட பெருநகரத்தின் இடைவிடாத ஓசை. ஈரான் அதன் அனைத்து முரண்பாடுகளிலும் சிக்கலான தன்மையிலும், அங்கு வாழ்ந்த அனைவருக்கும் சாட்சியமளிக்கிறது. எனினும், இறுதி முடிவு விரக்தி தருவதல்ல. ஆனால் மனித பலவீனங்களை இரக்கத்துடன் நோக்குவது.

மையத்தன்மையற்ற கதை சொல்லல். ஒரு திரைப்படத்தின் ஸ்க்ரிப்ட் போல எழுதப்பட்டுள்ள நாவல். ஒரு காட்சிப் பொருளாய் ஒரு புறநகர்ச் சமூகத்தின் சித்திரிப்பு. நூறு பக்கம் மட்டுமே. இரண்டாயிரங்களின் முக்கிய ஈரானிய எழுத்தாளராக மொஸ்தஃபா மஸ்தூரை நிலை நிறுத்திய படைப்பு.

நிச்சயமாக ஈரான் எனும் தேசம் சாடர்கள் (Chador) /அயத்துல்லாக்கள் நிரம்பிய தேசம் மட்டுமல்ல, அதே நேரம் இளம் ட்வீட்டர்கள் மற்றும் மேற்கத்திய சார்பு மதச்சார்பின்மைவாதிகள் மட்டுமே நிரம்பிய தேசமுமல்ல.

அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் அல்லது பத்திரிகையாளர்களை விட அதிகம் உண்மையைச் சொல்ல முனைபவர்கள் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள். அவர்களைக் கேட்போம். மொஸ்தஃபா மஸ்தூர் ஈரானைப் பற்றிச் சொல்வதைக் கேட்போம்.

தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் – மொஸ்தஃபா மஸ்தூர்
தமிழில் – பீ எம் எம் இர்ஃபான்
சீர்மை பதிப்பக வெளியீடு

கோன்யா

நீல நிற மினார்கள்

என்னை அழைக்கும்

அந்த கட்டிடத்தின் கைகள்

காபிக்கடைகள்

தொங்கும் கபாப்கள்

ஜலசந்தியின் விஸ்தாரம்

நகரும் மனபிம்பங்கள்

இனிப்பு வகைகளுடன் போட்டியிடும்

நெடும் வரலாற்றின் வாசனை

மயக்கமுற்றோர் போல

நேர்த்தியாய்ச் சுழலும் டெர்வீஷ்கள்

தூரத்தில் தெரியும்

அந்தக் கல்லறை

பல ஆண்டுகளாய்

அழைக்கும் மௌனத்தின் சத்தம்

என் காதில் இரைகிறது

கவிஞர் – தத்துவவாதி

அல்லாமா இக்பால் போன்ற ஓர் ஆளுமை துணைக்கண்டம் அதற்கு முன்னர் கண்டதில்லை. கவி நயமும் தத்துவமும் அவருள்ளில் ஒருங்கே குடி கொண்டிருந்தன. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்ட அவர் தத்துவம் கற்பித்தார். சட்டம் பயிற்சி செய்தார். அரசியலில் ஈடுபட்டார். இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார். பாகிஸ்தானை உருவாக்கும் யோசனையை ஆதரித்ததால் அங்கு தேசியக் கவிஞராக போற்றப்பட்டபோதும், இந்தியாவின் மகத்துவத்தைக் கொண்டாடும் புகழ்பெற்ற தேசபக்தி பாடலை எழுதினார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால் சர் பட்டம் வழங்கப்பட்டு ‘சர்’ முகமது இக்பால் என்று அழைக்கப்பட்டார். “The Spirit of philosophy is one of free enquiry. It suspects all authority” என்று முழங்கிய இக்பால் 1920களில் மதராஸ் முஸ்லீம் அசோசியேஷன் எனும் அமைப்பின் அழைப்பில் சென்னை, ஹைதராபாத், அலிகர் ஆகிய நகரங்களில் நிகழ்த்திய உரைகளைத் தொகுத்து 1930இல் “இஸ்லாத்தில் மத சிந்தனையின் மறுசீரமைப்பு” எனும் நூலை வெளியிட்டார். இஸ்லாமிய தத்துவ மரபுகளையும் மனித அறிவுச் செயல்முறையின் பல களங்களிலும் ஏற்பட்டிருந்த சமீபத்திய முன்னேற்றங்களையும் கருத்தில் கொண்டு முஸ்லீம் மத தத்துவத்தை மறுகட்டமைக்கும் முயற்சியாக இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

மனிதனின் உள் மற்றும் புற வாழ்வின் மாற்றமும் வழிகாட்டுதலும் மதத்தின் இன்றியமையாத நோக்கமாக இருப்பதால், அறிவியலின் கோட்பாடுகளைக் காட்டிலும் மதத்திற்கு அதன் இறுதிக் கொள்கைகளுக்கான பகுத்தறிவு அடித்தளம் மிக அத்தியாவசியமாக உள்ளது. ஆனால் நம்பிக்கையை நியாயப்படுத்துவது என்பது மதத்தை விட தத்துவத்தின் மேன்மையை ஒப்புக்கொள்வது ஆகாது. மதம் என்பது துறை சார்ந்த விவகாரம் அல்ல. அது வெறும் சிந்தனையோ, உணர்வோ அல்லது நடவடிக்கையோ அல்ல; அது முழு மனிதனின் வெளிப்பாடு.

சிந்தனையும் உள்ளுணர்வும் அடிப்படையில் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை. அவை ஒரே வேரிலிருந்து தோன்றி ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன. ஒன்று யதார்த்தத்தை துண்டு துண்டாகப் புரிந்துகொள்கிறது, மற்றொன்று அதை அதன் முழுமையுடன் புரிந்துகொள்கிறது.

சிந்தனை அடிப்படையில் வரையறைக்குட்பட்டது; இந்த காரணத்திற்காக அதனால் எல்லையின்மையை அடைய முடியாது என்ற கருத்து, அறிவில் சிந்தனையின் இயக்கம் பற்றிய தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்டது. கான்ட்,அல்-கஸாலி – இருவருமே சிந்தனையை, அறிவின் செயல்பாட்டில், அதன் சொந்த எல்லைக்கு அப்பாற்பட்டது என்பதைக் காணத் தவறிவிட்டனர். எண்ணத்தை முடிவுறாததாகக் கருதுவது தவறு; அதன் போக்கில், வரையறைக்குட்பட்ட எண்ணம் எல்லையின்மையுடன் கைகுலுக்கும் தன்மையுடையது.

கடந்த ஐநூறு ஆண்டுகளாக இஸ்லாத்தில் மதச் சிந்தனை நிலையானதாக எந்தவித அசைவுமின்றி இருந்து வருகிறது. ​​​​​​நவீன வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆன்மீக ரீதியாக இஸ்லாமிய உலகத்தின் மேற்கு நோக்கிய வேகமான நகர்வு. இந்த இயக்கத்தில் எந்த தவறும் இல்லை, ஏனெனில் ஐரோப்பிய கலாச்சாரம், அதன் அறிவுசார் அணுகுமுறையில், இஸ்லாமிய கலாச்சாரத்தினுடைய முக்கியமான கட்டங்களின் மேலதிக வளர்ச்சி மட்டுமே. ஐரோப்பிய கலாச்சாரத்தின் திகைப்பூட்டும் வெளிப்புறமானது இஸ்லாமின் இயக்கத்தை தடுத்து நிறுத்தி, அந்தக் கலாச்சாரத்தின் உண்மையான உள்நிலையை உள்வாங்கிக் கொள்ளாமல் செய்துவிடுமோ என்பது மட்டுமே இஸ்லாமியர்களின் பயம். ​​​​​​​​ எனவே, இஸ்லாத்தின் மறுமலர்ச்சியுடன், ஐரோப்பாவின் சிந்தனைகள் மற்றும் அவை எட்டிய முடிவுகள், இஸ்லாத்தின் இறையியல் சிந்தனையின் மறுசீரமைப்பிலும், தேவைப்பட்டால். மறுகட்டமைப்பிலும், எவ்வளவு தூரம் உதவக்கூடும் என்பதை சுதந்திரமான உணர்வில் ஆராய்வது அவசியம்.

இந்த நூலில் மொத்தம் ஏழு கட்டுரைகள் உள்ளன. முதல் கட்டுரையைத் தான் இதுவரை வாசித்திருக்கிறேன். ​​​​​​​​”காஷ்மீரி பிராமணர்களின் வாரிசு ஆனால் ரூமி மற்றும் தப்ரிஸின் ஞானத்தை அறிந்தவன்” என்று தம் நண்பர்களிடையே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொண்ட அல்லாமா இக்பால் ஞானம் மற்றும் சமய அனுபவங்குறித்து விரித்துரைக்கும் முதல் கட்டுரை சுவையாக இருந்தது. மற்ற கட்டுரைகளை வாசிக்க காத்திருக்க முடியவில்லை. பெருநாளுக்குப் பிறகு இந்த நூலின் வாசிப்பைத் தொடரலாம் என்றிருக்கிறேன்.

மடாலயம் எனுந்தலைப்பில் இக்பால் எழுதிய சிறுகவிதை ஒன்று –

அடையாளங்கள் மற்றும் சின்னங்களில் பேசுவது இந்த காலத்துக்கானதில்லை,
கலைநயத்தோடு இளிப்பவர்களின் கலை எனக்கு தெரியாது;
‘எழுந்திரு, கடவுளின் பெயரால்!’ என்று சொன்னவர்கள் இப்போது இல்லை.
உயிருடன் இருப்பவர்கள் எல்லோரும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் கல்லறை தோண்டுபவர்கள்

புல்லே ஷா எனும் மனிதநேயர்

புல்லே ஷாவைப் பற்றி அறியப்படும் தகவல்கள் தொன்மங்கள் போல தொனிக்கின்றன. அவர் பிறந்த துல்லியமான தேதி மற்றும் பிறந்த இடம் குறித்து வரலாற்றாசிரியர்களிடையே உடன்பாடு இல்லை. அவரது வாழ்க்கை பற்றிய சில “தகவல்கள்” அவரின் எழுத்துக்களிலிருந்தும் பிற “தகவல்கள்” வாய்வழி மரபுகள் வாயிலாகவும் பெறப்பட்டவை.

ஷா ஹுசைன் (1538 – 1599), சுல்தான் பாஹு (1629 – 1691), மற்றும் ஷா ஷரஃப் (1640 – 1724) போன்ற கவிஞர்களின் வரிசையில் பஞ்சாபி கவிதையின் சூஃபி பாரம்பரியத்தை செழுமைப்படுத்தியவர் புல்லே ஷா.

பிரபல சிந்தி சூஃபி கவிஞரான ஷா அப்துல் லத்தீப் பட்டாய் (1689-1752) வாழ்ந்த காலத்திலேயே புல்லே ஷா வாழ்ந்தார். அவரது ஆயுட்காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பிற கவிஞர்கள் – ஹீர் ரஞ்சா காவியப் புகழ், பஞ்சாபி கவிஞர் வாரிஸ் ஷா (1722 – 1798), சாச்சல் சர்மஸ்த் எனும் புனைபெயரோடு புகழ்பெற்ற சிந்தி சூஃபி கவிஞர் அப்துல் வஹாத் (1739 – 1829). உருது கவிஞர்களில், புல்லே ஷா வாழ்ந்த காலத்திலேயே ஆக்ராவில் மிர் தாகி மிர் (1723 – 1810) வாழ்ந்தார்.

புல்லே ஷாவின் காலத்தில் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையேயான வகுப்புவாத மோதல்கள் வலுத்தன. அந்த நேரங்களில் பாபா புல்லே ஷா பஞ்சாப் குடிமக்களுக்கு நம்பிக்கை மற்றும் அமைதியின் கலங்கரை விளக்கமாக இருந்தார். புல்லே ஷா பாண்டோக்கில் இருந்தபோது, ​​சீக்கியர்களால் சில முஸ்லிம்களைக் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக, தங்கள் கிராமத்தின் வழியாகச் சென்ற சீக்கிய இளைஞனை முஸ்லிம்கள் கொன்றனர். பாபா புல்லே ஷா அந்த அப்பாவி சீக்கியரின் கொலையைக் கண்டித்தார். அதனால் பாண்டோக்கின் முல்லாக்கள் மற்றும் முஃப்திகளால் கண்டிக்கப்பட்டார். வன்முறைக்கு வன்முறை பதில் அல்ல என்று சொன்னதோடு ஔரங்கசீப்பால் சிரச்சேதம் செய்யப்பட்ட சீக்கிய குரு தேக் பகதூர் ஒரு காஜி (இஸ்லாமிய மதப் போர்வீரர் என்பதற்கான சொல்) என்றும் புல்லே ஷா வர்ணித்தார்.

ஔரங்கசீப் இசை மற்றும் நடனத்தை தடைசெய்து இவை ​​இஸ்லாத்தில் ஹராம் என்று அறிவித்தார். தடையை மதிக்காது பஞ்சாபில் கிராமம் கிராமமாகச் சென்று தனது காஃபிகள்ளைப் பாடி நடனமாடினார் புல்லே ஷா.

சீக்கியர்களின் கடைசி குருவாகிய குரு கோவிந்த் சிங்கின் புரட்சிகர உணர்வைப் பாராட்டினார், அவரை மத சுதந்திரத்தின் ‘பாதுகாவலர்’ என்று அழைத்தார். அதை ஒரு நுட்பமான நையாண்டியில் கூறினார்:

நஹ் கரூன் அப் கீ,
நஹ் கரூன் பாத் தாப் கீ.
கர் நா ஹோத்தே குரு கோவிந்த் சிங்,
சுன்னத் ஹோதி சப் கீ.

நான் நேற்று அல்லது நாளை பற்றி பேசவில்லை;
இன்று பற்றி பேசுகிறேன்.
கோவிந்த் சிங் மட்டும் இல்லாதிருந்தால்,
அவர்கள் அனைவரும் இஸ்லாமியராகியிருப்பர்

கடைசி வரியின் நகைச்சுவை தமிழ் பொழிபெயர்ப்பில் சரியாக வாராது. “இஸ்லாமைத் தழுவ கட்டாயப்படுத்தப்பட்டிருப்பர்” என்ற அர்த்தத்தைத் தரும் வகையில் சுன்னத் என்ற விருத்த சேதனத்துக்கான சொல்லைப் பயன்படுத்தினார்.

பண்டா சிங் பைராகி (கடைசி சீக்கிய குருவுக்குப் பின் வந்த சீக்கியப் படைகளின் தளபதி) புல்லே ஷாவின் சமகாலத்தவர். குரு கோவிந்த் சிங்கின் இரண்டு மகன்கள் ஔரங்கசீப்பால் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக, சாதாரண முஸ்லிம்களைக் கொன்று பழிவாங்கினார். அவர் தனது பழிவாங்கும் பிரச்சாரத்தை கைவிட பண்டா சிங் பைராகியை சமாதானப்படுத்த முயன்றார் பாபா புல்லே ஷா. குரு கோவிந்த் சிங்கின் மகன்கள் மீதும், அப்பாவி சீக்கியர்கள் மீது விழுந்த அதே வாள் அப்பாவி முஸ்லிம்கள் மீதும் விழுந்ததாக புல்லே ஷா அவரிடம் கூறினார். எனவே அப்பாவி முஸ்லீம்களைக் கொல்வது அவுரங்கசீப்பின் அடக்குமுறைக்கு தீர்வாகாது என அறிவுறுத்தினார்.

புல்லே ஷாவின் எழுத்துக்கள் அவரை ஒரு மனிதநேயவாதியாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன – அவரைச் சுற்றியுள்ள உலகின் சமூகவியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குபவராக, தாய்நாடான பஞ்சாப் கடந்து சென்று கொண்டிருக்கும் கொந்தளிப்பை விவரிப்பவராக, அதே நேரத்தில் கடவுளைத் தேடுபவராக. ஷரியாத் (பாதை), தரீகத் (கவனித்தல்), ஹகீகத் (உண்மை) மற்றும் மர்ஃபத் (ஒன்றுபடல்) ஆகிய நான்கு நிலைகளில் மூலம் அவரது சூஃபித்துவ ஆன்மீகப் பயணத்தை அவரது கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன. வாழ்க்கை மற்றும் மனிதநேயம் குறித்த சிக்கலான அடிப்படைப் பிரச்சினைகளை தன் எழுத்தில் எளிமையுடன் அவர் கையாண்ட விதம் அவர் மேல் பஞ்சாபிகளுக்கு இருந்த ஈர்ப்பின் பெருங்காரணம். எனவேதான், அவரது காஃபிகளை (அவர் எழுதிய பஞ்சாபி கவிதையின் ஈரடி வடிவம்) பலர் இசைப்படுத்தயுள்ளனர் – சாதாரண தெருப் பாடகர்கள் முதல் புகழ்பெற்ற சூஃபி பாடகர்களான வடாலி சகோதரர்கள், அபிதா பர்வீன் மற்றும் பத்தனே கான், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிய கலைஞர்களின் ஒருங்கிணைந்த டெக்னோ கவாலி ரீமிக்ஸ்கள் முதல் ராக் இசைக்குழு ஜூனூன் வரை.

புல்லே ஷாவின் பிராபல்யம் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் என சமச்சீராக அனைத்து வகுப்பினரிடையேயும் பரவியிருக்கிறது. இந்த சூஃபியைப்பற்றி நமக்கு கிடைக்கும் பெரும்பாலான எழுத்துகள் இந்து, சீக்கிய எழுத்தாளர்கள் அவரைப்பற்றி எழுதியவை.

ராபி ஷெர்கில் கிடாரை வைத்துக்கொண்டு பாடும் இசைவீடியோவை நீங்கள் பார்த்திருக்கக்கூடும் – புல்லா கீ ஜானா மேய்ன் கோன்! புல்லே ஷாவின் மிகப்பிரசித்தமான கவிதையின் இசைவடிவம் அது. மிகப்பிரபலமான பாடல். லின்க் கமென்டில்.

சூபி ஞானி புல்லே ஷாவின் தர்கா (கசூர், பாகிஸ்தான்)

ஹதீஸ் பயில்விக்கும் சேல்ஸ் டெக்னிக்

“டஸாமுஹ்” என்றொரு அரபிச்சொல் பரஸ்பர சகிப்புத்தன்மை மற்றும் மத, கலாச்சார வேறுபாடுகளை பரஸ்பரம் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. இஸ்லாம் குறித்து முஸ்லீம்கள் அல்லாதோரின் பொதுப்புத்தியில் நிலவும் எண்ணப்போக்கை இந்தக் கருத்தியல் உடைக்கிறது. நபிகள் தமது நம்பிக்கையை எப்படி மக்களிடையே பரப்பினார் என்பதை சில தினங்கள் முன்னர் எழுதிய குறிப்பில் சொல்லியிருக்கிறேன்.

இஸ்லாம் சகிப்புத்தன்மை மற்றும் எளிமையின் மதம்; கருத்துச் சுதந்திரத்திற்கு போதுமான இடத்தை அது அளிக்கிறது. அல்லாஹ்வின் செய்தியை கண்ணியமான முறையில் மற்றவர்களுக்கு எடுத்துரைக்கவும், உண்மையின் பாதையை நோக்கி மக்களை அழைக்கவும் இயன்றதைச் செய்ய இஸ்லாம் கற்றுக்கொடுக்கிறது. அதற்குப் பிறகு அவ்வழைப்பை ஏற்பதும் நிராகரிப்பதும் அவர்களிடமே உள்ளது. ஆனால் தமது எண்ணங்களை மக்கள் மீது திணிக்க முஸ்லீம்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

“(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்கவேண்டாம்; இன்னும், நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: “நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று (அவர்களிடம்) கூறுவீராக. “நீங்கள் எவ்விஷயத்தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அதைப்பற்றி அல்லாஹ் கியாம நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்” (22:67-69)

இன்னோர் இடத்தில் அல்லாஹ் சொல்கிறான் :-

“(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன் அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.” (16:125)

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையிலிருந்தே சகிப்புத்தன்மையின் பல பாடங்களைப் பெறலாம். அவரது முழு ஆளுமையும் வாழ்க்கை முறையும் ஒரு சீரான வாழ்க்கையை நடத்துவதற்கு ஒருவர் கைக்கொள்ள வேண்டியவைகளென பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய குணங்களை நிரூபிக்கிறது. ஒருமுறை, ஒரே ஒரு உண்மையான மதத்தை நிரூபிப்பதற்காக அல்லாஹ் ஏன் கஷ்டங்களை உண்டுபண்ணி பொய்யான கடவுள்களை வலுக்கட்டாயமாக இடிப்பதில்லை என்று சிலர் நபிகள் நாயகம் அவர்களிடம் கேட்ட தருணத்தில் எல்லாம் வல்ல இறைவன் பின்வரும் குர்ஆன் வசனத்தை அவருள் இறக்கினான் :

“அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும் நாங்களோ எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்க மாட்டோம்; இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவையென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்” என்று முஷ்ரிக்குகள் கூறுகின்றனர். இப்படித்தான் இவர்களுக்கு முன்னம் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுவத்தை) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்பு உண்டா? (இல்லை) – 16:35

சகிப்புத்தன்மையும் பொறுமையும் இறைவனின் இயல்பு எனும்போது நம் முடிவுகளை மற்றவர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்க நாம் யார் ?

உழைப்பு வாழ்க்கையை விற்பனைத்துறையில் கழித்துக் கொண்டிருப்பவன் நான். விற்பனைப் பணியாளர்களுக்கு வேதாகமங்கள் என்ன அறிவுறுத்துகின்றன என்னும் பொருளில் திரட்டப்பட்ட மேற்கோள் தொகுப்பில் ஓர் ஹதீஸ் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆம்! என்னைப் போன்ற விற்பனைப் பணியாளர்களும் சகிப்புத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார் நபிகள்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லா அறிவித்தார்: “விற்கும்போதும், வாங்கும்போதும், பணத்தைக் கேட்கும்போதும் சகிப்புத்தன்மையுள்ள ஒரு மனிதனுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக.” (ஸஹீஹ் புகாரி).

இந்த மாதம் விற்பனை இலக்கை எட்ட அருளாளன் எனக்கு வகை செய்யட்டும்!

குர்ஆனும் விவிலியமும்

இயேசுவைப் பற்றிய இஸ்லாமின் பார்வை குறித்து சில தினங்கள் முன் எழுதியிருந்தேன். போதனைகள், நம்பிக்கைகள் இவற்றைப் பொறுத்தமட்டில் விவிலியமும் குர்ஆனும் தனித்துவமான பார்வையைக் கொண்டவை. இரண்டு சகோதர நம்பிக்கை அமைப்புகளுக்குள் குறிப்பிடத்தகுந்த வித்தியாசங்கள் உண்டு.

இவ்விரண்டு சமயங்களுக்கிடையிலான நுணுக்கமான வித்தியாசங்களைப் பற்றி சிந்திக்கையில் எனக்கு வைதீக பௌத்த நம்பிக்கைகளுக்கிடையிலான ஒப்பீடு நினைவுக்கு வரும் – “look same yet distinct”.

இந்தக் குறிப்பின் நோக்கம் வித்தியாசங்கள் குறித்து சிந்திப்பது இல்லை. சொல்லப்போனால், குர்ஆனிலும் விவிலியத்திலும் உள்ள ஒரே மாதிரியான அர்த்தங்களை வெளிப்படுத்தும் அல்லது பொதுவான கருப்பொருட்களைக் கொண்ட வசனங்களைப் பகிர்வது.

உதாரணத்திற்கு, விவிலியமும் சரி குர்ஆனும் சரி கடவுளையும் சக மனிதர்களையும் நேசிக்கச் சொல்கின்றன.

குர்ஆன் 2:195 – “அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; நன்மை செய்யுங்கள்; அல்லாஹ் முஹ்ஸின்களை – நன்மை செய்வோரை – நேசிக்கின்றான்.”

மத்தேயு 23:37-39 – “இயேசு அதற்கு,, “‘உன் தேவனாகிய கர்த்தரை நேசிக்க வேண்டும். முழு இதயத்தோடும் ஆத்துமாவோடும் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்.’ இது தான் முதலாவது மிக முக்கியமானதுமான கட்டளை. இரண்டாவது கட்டளையும் முதலாவது கட்டளைப் போன்றதே ‘நீ உன்னை நேசிப்பதைப்போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.’

இதே கருத்தைச் சொல்லும் இன்னொரு உதாரணம் :-

குர்ஆன் 2:286 – “அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”

மத்தேயு 6:9-13 – “நீங்கள் ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

ஈகையின் முக்கியத்துவம் குறித்து –

குர்ஆன் 2:273 – “பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.”

லூக்கா 12:33 – “உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுவதுமில்லை, பூச்சி அழிப்பதுமில்லை.”

தெய்வீக அன்பே இஸ்லாத்தின் மையம்

இஸ்லாத்தின் மையமும் முஸ்லிம்களின் முதன்மையான அக்கறையும் கடவுள் நம்பிக்கை. கடவுள் ஒருமை (“தவ்ஹித்”) எனும் அடிப்படையில் நிறுவப்பட்டது இஸ்லாமிய நம்பிக்கை. கடவுளின் முழுமையான ஒருமை மற்றும் ஆழ்நிலை பற்றிய இந்த நம்பிக்கை இஸ்லாமிய பிரகடனத்தில் வெளிப்படுத்தப்படுகிறது – “அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதர்”

நம்பிக்கைப் பிரகடனத்திற்கு மேலதிகமாக, இஸ்லாமிய நம்பிக்கை குர்ஆனின் தெய்வீக வெளிப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டது. முஹம்மது நபிக்கு கேப்ரியல் தேவதை மூலம் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் வார்த்தை இது.

பிரார்த்தனை, தொண்டு, உண்ணாவிரதம் மற்றும் ஹஜ் யாத்திரை ஆகியவை இஸ்லாமிய நம்பிக்கையின் மைய நடைமுறைகள். இவையும் கடவுளை வணங்குவதையும் அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக, கடவுள் நம்பிக்கை மற்றும் அவரது விருப்பத்திற்கு அடிபணிதல் இஸ்லாமிய நம்பிக்கையின் அடித்தளம் மற்றும் முஸ்லீம் அடையாளம்.

நண்பர் Kollu Nadeem கீழ்க்கண்ட வசனத்தை இன்று மதியம் வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார்.

“(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள்.
(9:24)

கடவுள் மைய நம்பிக்கை வழி விளைந்த கடவுள் மீதான அன்பு – இதை மட்டுமே செயல்முறையாக வைத்து ஆசாரங்களை சமூக இறுக்கங்களை கலாசாரங்களை மீறும் தத்துவ முறையே சூஃபித்துவம்.

13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற பாரசீக கவிஞர், ஆன்மீகவாதி, சூஃபி ரூமி. இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரிய ஆன்மீக குருக்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். அவருடைய கவிதைகள் – இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் போதனைகள், குறிப்பாக சூஃபித்துவம் – ஆகியவற்றால் செறிவூட்டப்பட்டவை.

ரூமியின் கவிதையின் மையக் கருப்பொருள்களில் ஒன்று தெய்வீக அன்பின் கருத்து. இது கடவுளின் அன்பு மற்றும் கருணை மீதான இஸ்லாமிய நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது. அவரது பல கவிதைகளில், ரூமி கடவுளை அன்பான மற்றும் இரக்கமுள்ள சக்தியாக சித்தரிக்கிறார், அது படைப்பின் அனைத்து அம்சங்களிலும் உள்ளது என்றும் கூறுகிறார். பிரார்த்தனை, தியானம் மற்றும் சேவைச் செயல்கள் மூலம் கடவுளுடன் தனிப்பட்ட உறவை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்துகிறார்.

ரூமியின் கவிதையில் உள்ள மற்றொரு முக்கியமான கொள்கை கடவுள் ஒருமை பற்றிய இஸ்லாமிய நம்பிக்கையின் மையமாகும். ரூமி எல்லாமும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதையும் கடவுளில் உள்ள அனைத்து படைப்புகளின் இறுதி ஒற்றுமையையும் பற்றி அடிக்கடி பேசுகிறார். இந்த ஒற்றுமையின் ஆழமான விழிப்புணர்வை அடைவதற்காக, பொருள் உலகின் பற்றை மற்றும் மாயைகளை கடந்து செல்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்துகிறார்.

ரூமியின் கவிதைகள் இஸ்லாமியக் கொள்கையான பணிவு மற்றும் கடவுளின் எல்லையற்ற சக்தி மற்றும் ஞானத்தின் முகத்தில் ஒருவரின் சொந்த வரம்புகளை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது. ஒருவருடைய சொந்த விருப்பங்களையும் வெறுப்புகளையும் கடவுளின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவர் அடிக்கடி பேசுகிறார்,

ஒட்டுமொத்தமாக, ரூமியின் கவிதைகள் இஸ்லாமிய கொள்கைகள் மற்றும் போதனைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இஸ்லாமிய பாரம்பரியத்தின் ஆழமான ஆன்மீக நுண்ணுணர்வைப் பிரதிபலிக்கிறது.

சுய-உதவிப் புத்தகங்களின் அணுகுமுறையுடன் “செக்யூலர் ஃபீல்” தொனிக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் இஸ்லாம் தோலுரிக்கப்பட்டு சில ரூமி கவிதைகள் தட்டையான வாசிப்பாக அமைகின்றன. (அதனாலேயே ரூமி மேற்கோள் எதையும் இக்குறிப்பில் சேர்க்கவில்லை.)

சரணடைதலின் கண்ணீர் – நிஷா மன்சூர்

நண்பர் நிஷா மன்சூர் அவர்களின் கவிதை. அவர் அனுமதியுடன் இங்கு பகிரப்படுகிறது.

————————————————————

ஆதித்தந்தை உகுத்த கண்ணீர்
இன்னும் மழையாய்ப் பொழிந்து
மண்ணை நெகிழ வைத்து
இறைஞ்சுதலால் விண்ணை நிரப்புகிறது,
“எமது கரங்களாலேயே
எமக்குத் தீங்கிழைத்துக் கொண்டோம் ரட்சகனே”

யூப்ரடீஸ் நதியில் ஓடிக் கொண்டிருந்த
யாகூபின் கண்ணீர் நதி
கிணற்றில் வீசப்பட்ட முழுநிலவின்
வியர்வையை நுகர்ந்தபின் அருள்நதியானது.

யூசுஃபின் பின்சட்டைக் கிழிசலில் சம்மணமிட்டிருக்கும்
ஒழுக்கத்தின் முத்திரை
ஆழியூழி காலம்வரை
வல்லிருளை வெல்லுமொளியாக
நின்றிலங்கிக் கொண்டிருக்கும்.

ஹூத் ஹூதின் சொற்கள் மலர வைத்தன
சுலைமானின் புன்னகையை.

முகமறியா பெருமகனின் ஆன்ம வலிமை
கொணர்ந்தது,
கண்ணிமைக்கும் நேரத்தில் பல்கீசின் சிம்மாசனத்தை.

சிற்றெரும்புகள் புற்றேகித் தஞ்சமடையும் தருணம்
பூமியதிர்ந்து பதிந்தன,
சுலைமானின் குதிரைப்படைக் குளம்புகளின் தடங்கள்.

கரையான்கள் அரித்து அஸா உதிர்ந்து சுலைமான் சரியும்வரை
ஜின்கள் உணரவில்லை,
சுவாசமின்மையின் தடயத்தை

எறும்புகளை உதாரணம் காட்டத் தயங்காத பரம்பொருள் கேட்டது,
“மனு ஜின் கூட்டத்தாரே உங்கள் இறைவனின் அருட்கொடைகளில்
நீங்கள் எதனைப் பொய்யாக்குவீர்கள் ?”

எம் இதயமும் உயிரும் சமர்ப்பணமாகும்
முகில் கமழும் நயினார் முஹம்மது ரசூல் பகர்ந்தார்,
“உங்களது வெற்றியின் மீது
நான் பேராவல் கொண்டுள்ளேன்”*

ஜகமெங்கும் ஒலிக்கிறது,
வெற்றியின் ஓங்கார முழக்கம்.

“மற்றவர்கள் எத்தகையினராயினும் என்கொடிய
வல்வினை அகற்ற வசமோ
மலை இலக்கென நம்பினேன் நம்பினேனென்று
வந்தெனுட் குடிகொள்குவையோ.”*

#

*திட்டமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்களுடைய வெற்றியில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப்பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கின்றார்’. (9:128).

*குணங்குடி மஸ்தான் பாடல் வரிகள்.

அல்-கித்ர்

புனித குர்ஆனில் இவர் பெயர் குறிப்பிடப்படுவதில்லை, ஆனால் நீதியும் நன்னெறியுமிக்க மறை-ஞான குருவாகவும் அல்லாஹ்வின் வேலைக்காரனாகவும் குர்ஆனில் வர்ணிக்கப்படுகிறார் அல்-கித்ர். துயரப்படும் மானிடர்க்கு உதவிக்கரம் நீட்டுபவராகவும் கடல்களின், நீர்நிலைகளின் காப்பாளராகவும் இஸ்லாமிய மரபில் போற்றப்படுகிறார் அல்-கித்ர். மூஸா நபியை அவர் சந்தித்ததை குர்ஆன் நமக்கு தெரிவிக்கிறது. 

மூஸா நபி ஒருமுறை பேருரையாற்றிக் கொண்டிருந்தார். உரை முடிந்ததும், கூட்டத்திலிருந்து யாரோ கேட்டார்கள் – “மூஸா நபியே, உம்மை விட அதிக ஞானமிக்கவன் விஷய அறிவுள்ளவன் இப்பூமியில் யாரேனும் இருக்கிறாரா?”அதற்கு, மூஸா “இல்லை” என்று கூறினார். தமக்கு மட்டுமே தோராத்-தின் அறிவை, பல்வேறு அற்புத சக்திகளை இறைவன் வழங்கியுள்ளதாக அவர் நினைத்தார். அறிந்துகொள்ளத்தக்க அனைத்தையும் அறிந்தவர் யாருமிலர்; இறை தூதர்களுமே கூட அனைத்து அறிவையும் பெற்றவர்களாக இருக்க முடியாது எனும் அறிதலை உடனுக்குடன் மூஸா நபிக்கு இறைவன் வழங்கினான். மற்றவர்களுக்குத் தெரியாததை அறிந்த ஒருவர் எப்போதும் இருக்கிறார். யாருக்கு, எவ்வளவு அறிவு என்பதைத் தீர்மானிப்பது அல்லாஹ் ஒருவனே. “மேலும், எம்மீது பக்திமிக்க ஊழியக்காரனும் உன்னை விட அதிக அறிவாளியுமான ஒரு நீதிமான் இருக்கிறான்.”

“அல்லாஹ்வே, இவரை நான் எங்கே காணலாம்? நான் அவரைச் சந்தித்து அவரிடமிருந்து ஞானம் பெற விரும்புகிறேன். இந்த நபரின் அடையாளத்தை அறியத்தாருங்கள்” என்று இறைவனிடம் மூஸா கேட்டார்.

அப்போது அல்லாஹ் மூஸாவிடம் நீர் நிறைந்த பாத்திரத்தில் உயிருள்ள மீனை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தி, அந்த மீன் மறைந்து போகும் இடத்தில் தேடிச் செல்லும் மனிதன் இருப்பான் என்ற அடையாளத்தைச் சொன்னார். இறைவன் சொன்ன மாதிரி ஒரு பாத்திரத்தில் மீனை எடுத்தும் கொண்டு ஒரு வேலைக்காரனைத் துணைக்கழைத்துக் கொண்டு மூஸா இறைவன் சொன்ன நபரைத் தேடிக்கிளம்பினார். சில நாட்கள் பயணம் செய்த பின்னர் ஓரிடத்தில் தங்கி அங்கே ஓய்வெடுக்க முடிவு செய்தார். பயணக் களைப்பில் மூஸா ஆழ்ந்து தூங்கிவிட்டார். நெடுநேரத் தூக்கத்திலிருந்து விழித்த போது பாத்திரத்தில் இருந்த மீன் கடலில் விழுந்து மறைந்தொளிந்துவிட்டதாக வேலைக்காரன் மூஸாவிடம் தெரிவித்தான். 

பதினேழாம் நூற்றாண்டு முகலாயர் ஓவியம் – அல் கித்ர்

இனி நடந்ததை குர்ஆன் விவரிக்கிறது.

“இன்னும் மூஸா தன் பணியாளிடம், “ இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக்கணக்கில் நடந்து கொண்டே இருப்பேன்” என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக. அவர்கள் இருவரும் அவ்விரண்டு கடல்களுக்கும் இடையே, ஒன்று சேரும் இடத்தை அடைந்தபோது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்துவிட்டனர். அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக் கொண்டு (நீந்திப் போய்) விட்டது. அவ்விருவரும் அப்புறம் அந்த இடத்தைக் கடந்தபோது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நாம் களைப்பைச் சந்திக்கிறோம் என்று (மூஸா) கூறினார். அதற்கு “அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்.” மேலும் அதை (உங்களிடம்) சொல்வதை சைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை. மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!” என்று பணியாள் கூறினான். (அப்போது) மூஸா, “நாம் தேடி வந்த (இடம்) அதுதான்” என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள். (இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள். நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து ஞானத்தையும் கற்றுத் தந்திருந்தோம்” (18-60,61,62,63,64,65)

“உங்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்கு கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின்தொடரட்டுமா” என்று அவரிடம் மூஸா கேட்டார். 

(அதற்கவர்) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாமாட்டீர்” என்று கூறினார். “(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்?” (என்று கேட்டார்.) 

(அதற்கு) மூஸா,”இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என்று சொன்னார். 

(அதற்கு அவர்) “நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் – நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும்வரை – நீர் என்னிடம் கேட்கக் கூடாது” என்று சொன்னார்.

பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர். (மரக்கலம் கடலில் செல்லலானதும்) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஒட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) காரியத்தை செய்துவிட்டீர்கள்” என்று மூஸா கூறினார்.

(அதற்கு அவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைபிடிக்க முடியாது என்று நான் உமக்கு சொல்லவில்லையா?” என்றார்.

“நான் மறந்துவிட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) சொல்ல வேண்டாம்; இன்னும் என் காரியத்தை சிரமமுள்ளதாக ஆக்கிவிடாதீர்கள்” என்று (மூஸா) கூறினார்.

பின்னர் இருவரும் (மரக்கலத்திலிருந்து இறங்கி) வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்தபோது, அவர் அவனைக் கொன்றுவிடுகிறார். (உடனே மூஸா) “கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக ஒரு பெருங்கேடான காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று கூறினார்.

(அதற்கு அவர்) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா?” என்று கூறினார்.

“இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் என்னை உங்களருகில் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று மூஸா கூறினார்.

பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் உணவளிக்க அவர்கள் மறுத்துவிட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; அதை அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) “நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்.

“இதுதான் எனக்கும் உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்கு அறிவித்துவிடுகிறேன்” என்று அவர் கூறினார்.

“அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டுப்) பழுதாக்க  விரும்பினேன்; (ஏனெனில்) (கொடுங்கோலனான) அரசன் ஒருவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்”

“(அடுத்து) அந்தச் சிறுவனுடைய தாய், தந்தையர்கள் உண்மையான விசுவாசிகள்; அந்தச் சிறுவன் பெரியவனாகி அவ்விருவரையும் வழிமாறச் செய்து குபிரிலும் சேர்த்துவிடுவான் என்று நாம் பயந்தோம்.

“மேலும் அவ்விருவருக்கும் பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்து இருக்கக்கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்

“இனி, (நான் நிமிர்த்தி வைத்த) அந்தச் சுவர் அந்த ஊரிலுள்ள அனாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது. அவ்விருவருடைய தந்தை நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த பின் புதையலை வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நிற்பவை; என் விருப்பு. வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அவற்றின் விளக்கம் இதுதான்” என்று கூறினார். 

(18:66-80)

எண்ணற்ற ஆன்மீக செய்திகளைக் கொண்டுள்ள இவ்வற்புதக் கதை அல்லாஹ் தம் சேவகர்களுக்குத் தரும் ஞானம் இருவகையானது என்கிறது. மனித முயற்சியின் காரணமாக பெறப்படுவது ஒரு வகை. அல்லாஹ்வே நேரடியாக கற்றுத் தரும் ஞானம் இன்னொரு வகை. வாழ்வின் முரண்படும் தன்மையையும் இக்கதை நிகழ்த்திக் காட்டுகிறது. வெளிப்படையான இழப்பு உண்மையில் ஆதாயமாக இருக்கக்கூடும். கொடுஞ்செயலாக நோக்கப்படுவது கருணையின் வெளிப்பாடாக இருக்கக்கூடும். தீமைக்கு நன்மை செய்தல் உண்மையில் நீதியேயன்றி பெருந்தன்மையல்ல.

அல்-கித்ர்-ரும் மூஸாவும் சந்தித்துக் கொண்ட இடம் என நம்பப்படும் ஜிப்ரால்டர் ஜலசந்திக்கருகே கட்டப்பட்டுள்ள பள்ளிவாசல்.