மகாகருணை என்னும் தியானம்

எனக்கு மிகவும் பிடித்த திக் நியட் ஹான் கவிதை. இக்கவிதையை வாசிக்கும் போது லோட்டஸ் சூத்ரா நம் நினைவில் வராமல் போகாது. அதில் வரும் ததாகதர் உரை போன்று ஒலிக்கிறது இந்தக் கவிதை. இந்தக் கவிதை வரிகளை கருணை பற்றிய தியானத்திற்கான காட்சி ஊக்கியாக மறைந்த ஜென் மாஸ்டரின் சீடர்கள் பயன்படுத்துவார்களாம்.


இன்றிரவு முழு நிலவு என்பதனால்
நட்சத்திரங்களை நம் பிரார்த்தனையில் அழைப்போம்
பளீரென்ற ஒற்றைக் குவிய மனத்தினூடே
தியானத்தின் ஆற்றல்
இப்பிரபஞ்சத்தை அசைத்துக் கொண்டிருக்கிறது.

அனைத்து வாழும் உயிர்களும்
இன்றிரவு இங்கு குழுமியுள்ளன
அச்சத்தின் சமுத்திரத்தினுள்
இப்பூமி மூழ்குதலைக் காண்பதற்கு

நடுஇரவு மணிச்சத்தம் ஒலித்தவுடன்
பத்து திசைகளிலும் அனைவரும் தம் கைகளை பிணைத்து
மகாகருணை எனும் தியானத்திற்குள் நுழைவர்

வாழ்வின் காயங்களைத் துடைக்கும்
தூய நீரைப் போன்று
இதயத்திலிருந்து கருணை சுரக்கிறது

மன மலையின் உயரங்களிலிருந்து
புத்துயிர் தரும் தண்ணீர்
அருவியாகப் பொழிந்து
நெல் வயல்கள் ஆரஞ்சுப் புதர்கள் வழியே
பாய்ந்து செல்லும்

விஷப்பாம்பொன்று
இவ்வமுதத்தின் ஒரு துளியை
ஒரு புல் தாளின் நுனியிலிருந்து பருகுகிறது
அதன் நாவிலிருந்து
விஷம் மறைந்துவிடுகிறது

மாரனின் அம்புகள்
வாசமிகு மலர்களாக மாற்றம் கொள்கின்றன

நோய் நீக்கும் நீரின்
அற்புதச் செயல் திறன் –
புதிரான பரிமாற்றம்!
ஒரு குழந்தை அந்தப் பாம்பை
அதன் கள்ளங்கபடமற்ற கரங்களில் ஏந்துகிறது

புராதன தோட்டத்தில்
இலைகள் இன்னும் பச்சை
பனி மீது சிரிக்கும்
மின்னும் கதிரொளி
இன்னமும்
புனிதவூற்றின்
கிழக்கு நோக்கிய பாய்ச்சல்

அவலோகிதனின் கையிலிருக்கும்
சிறு கிளையோ
அல்லது என் இதயமோ
நோய் தீர்க்கும் நீர் ஒன்றே

இன்றிரவு
அனைத்து ஆயுதங்களும்
நம் காலடியில் வந்து வீழும்
தூசாக மாறும்

ஒரு மலர்
இரு மலர்கள்
ஒரு கோடி மலர்கள்
பச்சை வயல்களில் தோன்றும்

என் பரிசுத்தக் குழந்தையின் இதழ் சிரிப்புடன்
மீட்பின் வாயில் திறக்கும்

திக் நியத் ஹான் – 1967

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.