மாதவன் சொர்க்கம் செல்கிறான் – பகுதி 3

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விழித்துக்கொள்ளும் கட்டாயமில்லாமல், தன் நேரத்தை தன் விருப்பப்படி பயனபடுத்திக்கொண்டு பணி ஓய்வு பெற்ற ஆரம்ப நாட்களை அனுபவித்தான் மாதவன். ஆனால் மிக விரைவில் மனத்தளர்ச்சிக்கு ஆளானான். தன்னை எதற்கும் பயனற்றவனாக எண்ணத் துவங்கினான் ; சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டவன் போல் வளைய வந்தான் ; வளர்ந்து விட்ட தம் குழந்தைகளால் கைவிடப்பட்டவனானான் ; “நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன்?” என்னும் மிகப் பழைய வினாவுக்கு பதில் தேடும் சிரமத்தை அவன் என்றுமே எடுத்துக்கொண்டிராத காரணத்தால் வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் திறனற்றுப் போனான்.

நேர்மையுடனும், சமர்ப்பண உணர்வுடனும் வாழ்ந்த மாதவன் ஒரு நாள் இறந்து போகிறான் – இவ்வுலகில் வாழும் சண்முகங்களுக்கும், பொன்னுசாமிகளுக்கும், கமலாக்களுக்கும் சாரதாக்களுக்கும் எல்லாருக்கும் நிகழ்வது தான். இவ்விடத்தில் மாதவனுக்கு அடுத்து என்ன நடக்கிறது என்பதை ஹென்ரி ட்ரம்மாண்ட் என்பவர் – ”தி க்ரேட்டஸ்ட் திங் இன் தி வேர்ல்ட்” என்ற அருமையான புத்தகத்தில் எழுதிய – வரிகளிலேயே விவரிக்கிறேன்.

முந்தைய காலங்களில் இருந்தே மக்கள் ஒரு கேள்வியை மாறாமல் கேட்டு வந்திருக்கிறார்கள் : உயர்ந்த நன்மை எது? உன் முன்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை நீ ஒரு முறைதான் வாழ இயலும். மேன்மையான விருப்பப் பொருள், நாடத்தக்க உயர்ந்த பரிசு எது?

உலகின் மிகச் சிறந்த விஷயம் நம்பிக்கை தானென நமக்கு பல ஆண்டுகளாக சொல்லப் பட்டு வந்திருக்கிறது. நூற்றாண்டுகளாக பிரசித்தமான மதத்தின் பிரதான கருத்தை சொல்லும் முயற்சியில் நம்பிக்கை எனும் சொல் அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. நாமும் அதை முக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்ள எளிதில் பழக்கப்பட்டு விட்டோம். ஆனால் நம் நோக்கு தவறு. அதுவே சொல்லப் பட்டிருக்கிறது என்று நாம் நம்புவோமானால், நம் வழி தவறும் வாய்ப்பு அதிகமாகும். 1 கோரிந்தியரின் 13வது அதிகாரம் நம்மை கிறித்துவத்தின் மையத்துக்கு எடுத்துச் செல்கிறது ; அங்கு நாம் வாசிப்பது “இவற்றுள் அன்பே தலைசிறந்தது”

இது பிழையன்று. நம்பிக்கை பற்றி சில வரிகளுக்கு முன்னால் பால் குறிப்பிட்டிருக்கிறார். அவர் சொல்கிறார் : “மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை” மறக்காமல், அடுத்து சில வரிகளில் வேண்டுமென்றே அவர் முரண் படுகிறார் ; “ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன” உடன், கணத்தயக்கமில்லாமல் முடிவை அறிவிக்கிறார் “இவற்றுள் அன்பே தலைசிறந்தது”

இந்த கதையில், மாதவன் மரண நேரத்தில் காப்பாற்றப் படுகிறான் ; வாழும் வாழ்விற்கோர் அர்த்தத்தை தரும் முயற்சியில் மாதவன் ஈடுபடவில்லையெனினும், அவன் அன்பு செலுத்தினான் ; குடும்பத்தை அன்புடன் பராமரித்தான் ; கண்ணியமான முறையில் உழைத்தான். அவனுடைய வாழ்க்கை சுப முடிவை பெற்றிருந்தாலும், அவனுடைய கடைசி நாட்கள் சிக்கலானவையாக இருந்தன.

சிமொன் பெரஸ் ஒரு முறை வேர்ல்ட் எகனாமிக் ஃபோரமில் ஆற்றிய உரையில் காட்டிய மேற்கொள் ஒன்றை இங்கு பங்கிட விரும்புகிறேன் “நன்னம்பிக்கை உள்ளவர் நன்னம்பிக்கை அற்றவர் இருவருமே முடிவில் இறந்து போகிறார்கள் ; ஆனால் இருவரும் தனித்தனி வழிகளில் தத்தம் வாழ்க்கையை வாழ்கிறார்கள்”

[TRANSLATED FROM THE BOOK – LIKE THE FLOWING RIVER – BY PAULO COELHO, CHAPTER HEADING : MANUEL GOES TO PARADISE]