வட்டம்

சிதறிய
மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு
ஓடி வந்த நாயொன்றின் மேல்
கல் வீசப்பட
அது வள்ளென்று குரைத்தவாறு
கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத
ஜாடியின் உள்ளிருந்து விழுந்து
சிதறிய
மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு
ஓடி வந்த நாயொன்றின் மேல்
கல் வீசப்பட
அது வள்ளென்று குரைத்தவாறு
கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத
ஜாடியின் உள்ளிருந்து விழுந்து
சிதறிய
மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு………
ஆரம்பம் எது முடிவெது
என்ற குழப்பத்தில்
ரங்கராட்டினம் போல்
ஒரு வட்டத்தில் இலக்கின்றி
சுழன்று கொண்டிருந்த அது என்ன?
எண்ணவோட்ட்மா? நினைவுப்பெருக்கா?.

சுழன்று கொண்டிருந்த எண்ணத்தை
அல்லது நினைவை
நேர்படுத்துவதற்காய்
இன்னொரு தளத்தில்
செலுத்தும் போது
இயந்திரக் கோளாறு
காரணமாக
விமானம் தரையிறங்குவதாக
அறிவிப்பு.
தரை தட்டும் முன்னர்
நீர் தட்டியது.
தலைகீழ் “ட” வடிவில்
விமானத்தின் சிறகுகள் வளைந்து
துடுப்பு போல இயங்கின
மூழ்காத விமானம்
நீரில் பேருந்தாக
அசுர வேகத்தில்,
வட்டப் பாதையில் ஓடியது
வட்டத்திலிருந்து குதிக்காமல்
கரையை அடைதல் சாத்தியமா?
பதற்றத்துடன் நகர்ந்த
காலத்துளிகளில்
மாமிசத்துண்டுகளை திண்ண வந்து
அடிபட்ட நாயின் அவஸ்தையுடனும்
கண்ணாடி ஜாடியுள்ளிருந்து
விழுந்த மாமிசத் துண்டுகள் போல
எல்லா திக்குகளில் சிதறியும்
ஒய்வற்று சுற்றியது.

சடக்கென விழித்தெழுந்தது உடல் பிரக்ஞை.
அடிவயிற்றில் ஒர் இறுக்கம்.
கழிப்பறை சென்று
விசையுடன் வெளிவரும் குழாய் நீரென
சிறுநீரை கழித்து ஆசுவாசமடைந்த பின்னர்
உறக்கத்தை நிம்மதியாய் தொடர்கையில்
உடல்பிரக்ஞை மீண்டும் மாயமாய் மறைந்து
சுழற்சிக்குள் நுழைந்து
வண்ணத்துப்பூச்சி உருவில்
ஒவ்வொரு மலராக
உட்கார்ந்து உட்கார்ந்து
நீள்வட்டப் பூப்பாதையில்
போய்க் கொண்டிருந்தது..

நன்றி : நவீன விருட்சம் (http://navinavirutcham.blogspot.in/2012/11/v-ganesh.html)

மரம்


மரம் போலவொரு
அழகான கவிதை
என் வாழ்நாளில்
என்னால் எழுத முடியாது.
பசி மிகுந்த
மரத்தின் வாய்
பூமித் தாயின்
வழியும் முலைகளில்
பொருத்தப்பட்டிருக்கும்.
கடவுளை தினமும்
பார்த்துக் கொண்டிருக்கும் மரம்
தன் இலைக் கரங்களை எழுப்பி
தொழுகை புரியும்.
கோடை காலங்களில்
வண்ணாத்திக் குருவியின் கூடுகளை
தொப்பிகளாக அணிந்து கொள்ளும்.
மார்பில் பனி பூசிக் கொண்ட
மரங்கள்
மழையுடன் கூடும்
என் போன்ற முட்டாள்களால்
கவிதை மட்டுமே
கிறுக்க இயலும்
கடவுளால் மட்டுமே
மரத்தினை படைத்தல் சாத்தியம்.

[ ஜாய்ஸ் கில்மர் எழுதிய “Trees” என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம்]

என்னால் உள்ளே நுழைய முடியவில்லை

ஒரு பாழடைந்த கோட்டை முன் நின்று கொண்டிருந்தேன். ஸ்பெயின் நாட்டில் ஓலைட் என்கிற ஊருக்கருகில் இருக்கும் கோட்டையது. கோட்டையின் நுழைவாயிலின் முன் ஒருவன் நின்றிருந்தான். என்னை அவன் உள்ளே நுழையக் கூடாது என்று அவன் சொல்கிறான்.

உள்ளே நுழையக் கூடாது என்று அவன் சொல்வதன் காரணம் என் நுழைவை தடுத்து நிறுத்தி அதன் மூலம் ஒரு விதமான முக்கியத்துவம் பெறுவதைத் தவிர வேறொன்றும் இல்லை என்று என் உள்ளுணர்வு சொன்னது. நான் வெகு தூரத்திலிருந்து வந்திருப்பதை சொன்னேன். அவனுக்கு வெகுமதி தர முயற்சி செய்தேன். அவனுடன் பணிவாகப் பேசினேன். இது பாழடைந்த கோட்டை தானே என்றும் குறிப்பிட்டேன். திடீரென்று அந்த பாழடைந்த கோட்டையில் நுழைவது எனக்கு அதி முக்கியமாகப் போய்விட்டது.

அவன் திரும்பவும் சொன்னான் “மீண்டும் சொல்கிறேன். நீங்கள் உள்ளே நுழையலாகாது” ஒரே ஒரு வழி தான். அவன் தடுப்பதை பொருட்படுத்தாது உள்ளே போக வேண்டும். பார்க்கலாம், உள்ளே நுழையு முன் அவன் என்னை பிடித்து தள்ளுகிறானா என்று! நான் கதவருகில் செல்கிறேன். அவன் என்னை தடுத்து நிறுத்தவில்லை. வெறுமனே என்னைப் பார்த்த வண்ணம் நிற்கிறான்.

அந்தக் கோட்டையைப் பார்த்து விட்டு வெளியே வரும் போது, இரண்டு சுற்றுலாப் பயணிகள் கோட்டையைக் காண நடந்து வருவதைப் பார்த்தேன். வாயிலில் நின்றவன் அவர்களை தடுக்க முயலவில்லை. என்னுடைய எதிர்ப்பு புதிதான, முட்டாள் தனமான விதிமுறைகளை கண்டுபிடிக்கும் வேலையிலிருந்து அக்கிழவனுக்கு ஒய்வு வாங்கித் தந்துவிட்டது போலும். சிலமுறை இச்சமூகம் நம்மால் புரிந்து கொள்ளவே முடியாத சில்லறை விஷயங்களுக்காக போரிடச் சொல்கிறது. இதில் விசித்திரம் என்னவென்றால், அவ்விஷயங்களின் முக்கியத்துவத்தை நாம் என்றுமே கண்டுபிடிக்க முடியாது.

(TRANSLATION OF THE ESSAY – “I CAN’T GET IN” – FROM THE BOOK – “LIKE THE FLOWING RIVER” WRITTEN BY PAULO COELHO)