ஒரு பாழடைந்த கோட்டை முன் நின்று கொண்டிருந்தேன். ஸ்பெயின் நாட்டில் ஓலைட் என்கிற ஊருக்கருகில் இருக்கும் கோட்டையது. கோட்டையின் நுழைவாயிலின் முன் ஒருவன் நின்றிருந்தான். என்னை அவன் உள்ளே நுழையக் கூடாது என்று அவன் சொல்கிறான்.
உள்ளே நுழையக் கூடாது என்று அவன் சொல்வதன் காரணம் என் நுழைவை தடுத்து நிறுத்தி அதன் மூலம் ஒரு விதமான முக்கியத்துவம் பெறுவதைத் தவிர வேறொன்றும் இல்லை என்று என் உள்ளுணர்வு சொன்னது. நான் வெகு தூரத்திலிருந்து வந்திருப்பதை சொன்னேன். அவனுக்கு வெகுமதி தர முயற்சி செய்தேன். அவனுடன் பணிவாகப் பேசினேன். இது பாழடைந்த கோட்டை தானே என்றும் குறிப்பிட்டேன். திடீரென்று அந்த பாழடைந்த கோட்டையில் நுழைவது எனக்கு அதி முக்கியமாகப் போய்விட்டது.
அவன் திரும்பவும் சொன்னான் “மீண்டும் சொல்கிறேன். நீங்கள் உள்ளே நுழையலாகாது” ஒரே ஒரு வழி தான். அவன் தடுப்பதை பொருட்படுத்தாது உள்ளே போக வேண்டும். பார்க்கலாம், உள்ளே நுழையு முன் அவன் என்னை பிடித்து தள்ளுகிறானா என்று! நான் கதவருகில் செல்கிறேன். அவன் என்னை தடுத்து நிறுத்தவில்லை. வெறுமனே என்னைப் பார்த்த வண்ணம் நிற்கிறான்.
அந்தக் கோட்டையைப் பார்த்து விட்டு வெளியே வரும் போது, இரண்டு சுற்றுலாப் பயணிகள் கோட்டையைக் காண நடந்து வருவதைப் பார்த்தேன். வாயிலில் நின்றவன் அவர்களை தடுக்க முயலவில்லை. என்னுடைய எதிர்ப்பு புதிதான, முட்டாள் தனமான விதிமுறைகளை கண்டுபிடிக்கும் வேலையிலிருந்து அக்கிழவனுக்கு ஒய்வு வாங்கித் தந்துவிட்டது போலும். சிலமுறை இச்சமூகம் நம்மால் புரிந்து கொள்ளவே முடியாத சில்லறை விஷயங்களுக்காக போரிடச் சொல்கிறது. இதில் விசித்திரம் என்னவென்றால், அவ்விஷயங்களின் முக்கியத்துவத்தை நாம் என்றுமே கண்டுபிடிக்க முடியாது.
(TRANSLATION OF THE ESSAY – “I CAN’T GET IN” – FROM THE BOOK – “LIKE THE FLOWING RIVER” WRITTEN BY PAULO COELHO)