காஷ்மீர் ரிப்போர்ட்

பெருநிலப்பரப்பில் வழிபாட்டுரிமை என்று பேசப்படுவது காஷ்மீரிகளுக்கு மீண்டும் மீண்டும் தொடர்ந்து மறுக்கப்படும் ஒன்று. 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கூட, காஷ்மீரின் முக்கியச் சின்னமான ஜாமியா மஸ்ஜித் 136 நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது. இது முதல் முறை அல்ல. இது போன்று கடந்த ஐம்பதாண்டுகளில் பலமுறை வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதி மூடப்பட்டிருக்கிறது.

ஹஸ்ரத் பாலுக்குச் சென்ற போது அங்கு வைக்கபட்டிருந்த அறிவிப்பு பலகை எனக்கு அதிர்ச்சியைத் தந்தது – “இது ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமே ; வேறு எந்தச் செயல்களும் அனுமதிக்கப்படாது”. தொழுகை செய்ய வருபவர்களை இப்படியா பயமுறுத்துவது?

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது ஆறு மாதங்களுக்கு, காஷ்மீர் மக்கள் பட்ட இன்னல்கள் நெஞ்சை உலுக்கின. ஆறு மாதங்கள் மொபைல் இணைப்புகள் இல்லாமல் வாழ்வதை கற்பனை செய்து பாருங்கள்! டெல்லியில் தற்போதைய ஆட்சியும் அதன் முக்கிய இரட்டையரும் இங்கு அதிகம் விரும்பப்படுவதில்லை என்பது கண்கூடு.

உ.பி முதல்வர் டெம்ப்ளேட்டில் செயல்படுகிறார் தற்போதைய லெஃப்டினன்ட் கவர்னர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (8/5/2022), இந்தியத் தொல்லியல் கழகத்தின் (ஏ எஸ் ஐ) பாதுகாப்பில் இருக்கும் வரலாற்று நினைவுச்சின்னத்திற்குள் முன்னறிவிப்பின்றி நிழைந்து ஹோமம் நடத்துகிறார். இது இதுவரை கேள்விப்படாத ஒன்று. இதற்கு ஏஎஸ்ஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ராணுவத்தின் பங்கு பற்றி பலரிடம் பேசினேன். ஊக்கமளிக்கும் கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு கடைக்காரரிடம் நான் கேட்ட கேள்விக்கு – அவர் இந்தியாவை வெறுக்கிறாரா என்றால் – சுருக்கமான பதில் – “ஆம், அது இயற்கைதானே”.

ஒவ்வொரு 20 அடிக்கும் ஒரு முழு ஆயுதமேந்திய சிப்பாய் தெருக்களைக் கண்காணிப்பதைக் காணலாம்.

விரும்பத்தகாத அரசியல் பார்வைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், காஷ்மீரிகள் மிகவும் இனிமையாகவும், மரியாதையாகவும், விருந்தோம்பல் மிக்கவர்களாகவும் இருப்பதைக் கண்டேன்.

பல சீக்கியர்கள் காஷ்மீரில் வாழ்வதைப் பார்த்தேன். பஹல்காமில் ஒரு சீக்கியரும் ஒரு காஷ்மீரியும் பங்காளிகளாக நடத்தும் ஓர் உணவகத்தில் உணவுண்டேன். சீக்கியர்கள் பள்ளத்தாக்கில் வாழும்போது பண்டிட்கள் ஏன் வெளியேற்றப்பட்டனர் என்பது குழப்பமாக உள்ளது.

நாங்கள் தில்லி திரும்ப விமானத்தைப் பிடிக்க விமான நிலையத்தை அடையும் அதே நேரத்தில், விமான நிலையப் பகுதிக்கு அருகிலிருக்கும் அலுவலகமொன்றில் வேலை பார்க்கும் ஒரு காஷ்மீரி பண்டிட் (மீள்குடியேற்றத் திட்டத்தில் பள்ளத்தாக்கு திரும்பியவர்) வேலையிடத்திலேயே இரு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தெற்கு காஷ்மீரில் இன்னும் மிலிடன்ஸி ஓயவில்லை. சுற்றுலாப் பயணிகளைச் ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்கள் முடிந்தவரை நெடுஞ்சாலை NH44 வழியாக மட்டுமே ஓட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக அனந்த்நாக் செல்லும் சில உள் சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

தி காஷ்மீரி ஃபைல்ஸ் பிரபலமான திரைப்படம் அல்ல – நான் சந்தித்த கடைக்காரர்களிடம் நடத்தப்பட்ட முறைசாரா கருத்துக்கணிப்பின் அடிப்படையில். ஒரு சால்வை விற்பனையாளர் குறிப்பிட்டார் – நாங்கள் படத்தை எங்கே பார்ப்பது? – ஆம், இரண்டு தசாப்தங்களாக முழு பள்ளத்தாக்கிலும் சினிமா அரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் இல்லை. நம்ப முடிகிறதா?

இந்தக் கோடையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரை மொய்க்கின்றனர். ஐனவரியிலிருந்து மே மாதத் தொடக்கம் வரை ஏழு லட்சம் சுற்றுலாப் பயணிகளை காஷ்மீர் வரவேற்றுள்ளது. இதை ஒரு மகிழ்ச்சி தரும் முன்னேற்றமாக சராசரி காஷ்மீரிகள் கருதுகின்றனர்.

படம்: ஜாமியா மஸ்ஜித், ஶ்ரீநகர் – காஷ்மீரிகளின் மத-கலாச்சார நரம்பு மையம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.