தோழியாய் இருந்தவள்
அமைதியானாள்
பின்னர் அன்னையானாள்
அவளுடனிருக்கப் பிரியந்தான்
அவளருகே நிற்க ஆனந்தந்தான்
அந்த ஆனந்தம் தனி ஆனந்தம்
அது பற்றின்மையால் வருவது
அவளருகே நிற்க பற்றின்மை
வெள்ளம் போல் பொங்குகிறது
பின்னர் தூரமாய்
என் குடும்பத்தின் நினைவு
என் குழந்தை கணவனின் நினைவு
ஓடிச் செல்கிறேன்
என் வீட்டை நோக்கி
இத்தனை பற்றின்மை
உடம்புக்காகாது
பின்னர் ஒரு நாள்
அன்னை எனும் தோழி
என் வீட்டுக்கு வந்தாள்
ஒன்றும் பேசவில்லை
அவள் சிரிப்பில் புரிந்தது
பற்றின்மையோ பயம் தருவது?
பற்றன்றோ பயம் தருவது
எண்ணத்தின் ஓட்டம்
எளிதில் உணர்ந்தவளாய்
“பயப்பட ஒன்றும் இல்லை”
என என் காதில் சொன்னாள்
பின்னர் யாரோ அன்னையிடம் கேட்டார்கள்
“இறைவனை அடைவது எப்படி”
“அளவற்ற பற்றினால்,
அடங்கா ஆசையால்”
“அமைதியை அடைவது எப்படி?”
“ ஓய்வற்று வேட்கை கொள்”
![](https://hemgan.blog/wp-content/uploads/2023/11/img_2719-1.jpg?w=688)