அர்ஜுனன் காதல்கள் – ஊர்வசி

Urvashi_curses_Arjuna

அலையிலாக் கடலின்
ஆழத்தில் ஜனனம்;
நித்ய யுவதி வடிவம்;
தேவர், மனிதர், அசுரர், கந்தர்வர்
எண்ணற்றோரைக் கிறங்கடிக்கும்
ஊர்வசிக்கு இது ஒரு
புது அனுபவம்.
மானிடன் ஒருவனின்
மறுதலிப்பு.

அர்ஜுனன் அறைக்கு
சென்று திரும்பியவள்
கண்களில் ஏமாற்றம்.
கரை மீறும் நதியலை போல்
வெகுண்டு
வேகவேகமாய்
அலங்காரத்தை கலைத்தாள்.

உடைகளைக் கழட்டத் தொடங்கியதும்
கொஞ்சம் அமைதி.
மார்புக்கச்சைகளை விலக்கியதும்
மின்னலொளியில் ஒரு முறை
பார்த்த மானிடன்,
புருரவஸ்-சின் நிர்வாண நினைவு.
கூடவே ஜோடி ஆடுகளின் பிம்பமும்.

குரு வம்சத்து மூதாதையனுடன்
முயங்கியதால்
நான் தாய் ஸ்தானமாம்,
வணக்கத்துக்குரியவளாம்,
புணர்வதற்கில்லை என்று சொல்லியனுப்பி விட்டான்.
பாவாடை தரையில் விழவும்
நினைவுக் குளத்திற்குள்
மூழ்கும் முன்னர்
இதழில் புன்சிரிப்பு:
அர்ஜுனனைக் கைபிடித்திழுத்து
அருகிருந்து பார்த்த
அவனது முகம் தோன்றி மறைந்தது-
“புருரவஸ் ஜாடைதான் உனக்கு”

+++++

முட்படுக்கையில்
கிடப்பவன் போல்
புரண்டான் அர்ஜுனன்,
நிர்வாணமாய்
நீச்சலடிக்கும்
ஊர்வசியின்
காட்சி அவன் கனவில்.
ஹ்ம்ம்ம்…
சாபமிட்டுச் சென்றவளை
இனி சந்திக்க முடியாது.
பெருமூச்சு விடுபட்டு
ஊர்வசி சூடிய
ஒற்றை மலரை
விழ வைத்தது.

+++++

“தாயையல்ல அர்ஜுனா,
நீ நிராகரித்தது மகளை…
நிம்மதியாய்த் தூங்கு!”
கண்ணன் சிரிக்கிறான்.

நன்றி : பதாகை (ஜூலை 13 இதழ்)

ராஞ்சா ராஞ்சா

மணி ரத்னம் இயக்கிய “ராவண்” இந்தித் திரைப்படத்தில் பாடல்களை எழுதியவர் குல்சார் ; அதில் வரும் ஓர் அருமையான பாடலை கேளுங்கள்

பாடலின் முதல் வரி குல்சார் அவர்களுடையதில்லை. சூஃபிக் கவிஞர் புல்ஹே ஷா-வின் பிரசித்தமான கவிதையின் முதல் வரியை குல்சார் இந்தப் பாட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சுரிந்தர் சிங் கோஹ்லி அவர்கள் புல்ஹே ஷா பற்றி எழுதிய கட்டுரைப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். புல்ஹே ஷா ஒரு பஞ்சாபி சூஃபி. (காண்க : ஓ புல்லாவே! நான் யாரென்று நான் அறியேன்! ). புல்ஹே ஷாவின் வாழ்க்கை, காலம், அவருடைய படைப்புகள், சமய சிந்தனைகள் மற்றும் கவிதைப்பாணி – இவை பற்றி விரிவாகப் பேசுகிறார் கோஹ்லி.

பஞ்சாபி சூஃபி கவிதைகளில் வரும் படிமங்களும் குறியீடுகளும் செறிவானவை. பாரசீக சூஃபி கவிதைகளில் யூப்ரடீஸ் – டைக்ரீஸ் இணை நதிகள் ஒரு குறியீடாக வரும் ; அது போல, பஞ்சாபிக் கவிதைகளில் வரும் பிரபலமான படிமங்கள் : கைராட்டினங்கள் சுழற்றும் சகோதரிகள் (trinjhan) மற்றும் செனாப் நதி. பஞ்சாபிகளின் நாட்டார்-காவியக் காதல் கதைகளில் – ஹீர்-ராஞ்சா மற்றும் சோஹ்னி-மாஹிவால் –செனாப் நதி ஒரு முக்கியமான பங்கேற்கிறது. ஹீர்-ராஞ்சா கதை இரு குறியீடுகளை சூஃபிக் கவிதைகளுக்கு ஈந்திருக்கிறது. ஹீர் (ஆஷிக் – காதல் புரிபவன்) மற்றும் ராஞ்சா (மாஷுக் – காதலிக்கப்படுவது). பக்தன் ஹீராக உருவகப்படுத்தப்படுகிறான்/ள் ; அவன்/ள் ராஞ்சாவைத் தேடி அலைகிறான்/ள்.

மேற்சொன்ன இந்தித் திரைப்படப்பாடலின் முதல் வரி இது தான் :

“ராஞ்சா ராஞ்சா கர்தி நி மேய்ன் ஆபே ராஞ்சா ஹோய்”

“தலைவன் ராஞ்சாவின் பெயரை உச்சரித்து உச்சரித்து நானே ராஞ்சாவாகிவிட்டேன்”

இவ்வுலகம் பிறந்த வீடு ; கடவுளிருக்கும் இடம் புகுந்த வீடு என்று படிமமாக்கப்படுகிறது. பிறந்த வீட்டில் இருக்கும் பெண் மற்ற நண்பிகளின் துணை கொண்டு கைராட்டினங்களை (trinjhan) வைத்து இறைவன் எனும் காதலனுக்காக உரிய பரிசுப்பொருட்களை தயார் செய்ய வேண்டும். தன் உடலெனும் கைராட்டினத்தில் வேலை செய்து, நற்பண்புகள் எனும் நூலிழைகளை திரிக்க வேண்டும்.

சூஃபிக்கவிதைகளில் உலகத்தில் வாழ்பவன் பயணி (முசாஃபிர்) என்றும் வணிகன் (சௌதாகர்) என்றும் கூட உருவகப்படுத்தப்படுகிறான். உலகம் பயண வழியில் தென்படும் சத்திரம் (சராய்) ; வணிகர்களும் பயணிகளும் சத்திரத்தில் தங்கும் நேரம் மிகக் குறைவே. புல்ஹே ஷா தம் கவிதையில் ராமர், கிருஷ்ணர் என்கிற குறியீடுகளையும் கடவுளுக்கு பயன் படுத்தியிருக்கிறார்.

ஒரு கவிதையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் :-

“பிருந்தாவனத்தில் பசு மேய்த்தாய்

லங்காவில் சங்கொலி செய்தாய்

மெக்காவில் ஹாஜியாக ஆனாய்

உன் நிறத்தையும் (வடிவத்தையும்) அற்புதமாக

அடிக்கடி மாற்றிக் கொள்கிறாய்

இப்போது உன்னை யாரிடமிருந்து மறைத்துக்கொண்டிருக்கிறாய்?”

துணைக்கண்டத்தின் சூஃபிக் குயில் அபிதா பர்வீனின் காந்தக் குரலில் புல்ஹே ஷாவின் பாடல் “ஜே ரப் மில்தா” என்கிற பாடலைக் கேட்டு இன்புறுங்கள்.

 

 

Source : Bulhe Shah – Surindar Singh Kohli – Sahitya Akademi – 1987 Edition

 

தெரு – றியாஸ் குரானா

http://afremov.com/product.php?productid=18321
http://afremov.com/product.php?productid=18321

றியாஸ் குரானா

தெரு

 

இங்கிருந்து தொடங்குகிறது தெரு.

இல்லை, இது தெருவின் நடுவிலோர் இடம்.

அந்த தெருவின் முடிவடைகிற இடம்.

ஒன்று போல் தென்பட்டாலும்,

ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு

பெயர்களாலும், அடையாளங்களாலும்

நீண்டு கொண்டே இருக்கிறது.

எனது தெருவாகத் தொடங்கி

உனது தெருவாக முடிவடைவதுகூட

ஒரு வசதிக்காகத்தான்.

யாருடைய தெருவில் நாம் நிற்கிறோம்?

அதைக் கண்டு பிடிக்கும் போது

அடையாளமொன்றை பெற்றுக் கொள்கிறோம்.

எங்கிருந்து தொடங்குகிறது

இந்தத் தெரு என ஒரு குழந்தை

கேட்கும் போது,

எல்லாமே விளையாட்டாகிவிடுகிறது.

அப்போது, சலிப்பின்றி விளையாடுவதே

எங்கிருந்தும் தொடங்கலாம் என்பதாகும்.

 

இரு துளி வெயில்

 

துளித்துளியாக விழுந்து கொண்டிருக்கிறது வெயில்.

சில துளிகளை எடுத்து வந்து கோப்பைக்குள்

வைத்திருக்கிறேன்.

ஒன்றில் மற்றது கலந்து விடாமல்

தனித்தனியே உருண்டபடி இருக்கின்றன.

இன்னும் சில நாட்களில் ஒலியெழுப்பவும்

பழக்கிவிடுவேன்.

 

நினைவில் இறந்தவர்

 

நினைவை உருட்டிச் செல்கிறது காற்று

மலை உச்சியிலிருந்து

கீழே தள்ளி விடப்பார்க்கிறது

காப்பாற்ற முயற்சிக்கிறேன்

முடியவில்லை

ஆகையால் நினைவை

சோதிக்கிறேன்

அதனுள் எத்தனை யோசம்பவங்கள்

எத்தனையோ மனிதர்கள்

நினைவின் ஒரு மூலையில்

பல கவிஞர்களும் பல எழுத்தாளர்களும்

பரிதவித்தபடி

காப்பாற்ற முடியவில்லை என்பதால்

நான்திட்டமிட்டுக் கொன்றேன்

என்றுயாரும் கருதக்கூடாது

மலையிலிருந்து கீழே

நினைவு விழுந்துவிட்டது

விழும் போது கடைசியாக

எனது காதுகளில் கேட்ட மரண ஓலம்

,,,,,,,,,,,,,,,,,னுடையது.

இனி புதிதாக நினைவுகளை

நீரூற்றி வளர்க்க வேண்டும்.

 

அடுத்ததாக நான்

 

எனக்கு முன் இந்தப்புத்தகத்தை

புரட்டிப் பார்த்து விட்டுச்

சென்றது காற்று

இத்தனை வேகமாக

புத்தகத்தை விட்டு தப்பிச் சென்றது ஏன்

என யோசிக்கிறேன்

இறகொன்றை ஏற்றிச் செல்வதற்கான

நேரம் நெருங்கி விட்டதால்

போயிருக்கவும் வாய்ப்பிருக்கிறது

எதற்கும் புத்தகத்தை

புரட்டிப் பார்க்கலாம்

முதல் அத்தியாயம்

காற்று தப்பிச் சென்ற காதை.

 

நினைவூட்டி

SONY DSC

ஞாபகார்த்த இலை
காணாமல் போனது
மரத்திலிருந்து விடுபட்ட
இலையிடமிருந்து நீ பாடம் கற்கவில்லை
புத்தகப்பக்கங்களுக்கு நடுவில்
சிறைப்படுத்தி வைத்திருந்தாய்
புத்தகயாவின்
புனித மரத்தின் இலையது
என்பதை மறந்து போனாயா?