Hazrat Bal, Sri Nagar, Kashmir (from Dal Lake Side)
பேக்கேஜ் டூரில் திட்டமிட்டிருந்த அனைத்து இடங்களையும் பார்த்தாயிற்று. சஷ்மேஷாய் தோட்டமும் பரிமஹலும் பார்க்க முடியவில்லை. கவர்னர் வந்ததனால் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு இவ்விரு ஸ்தலங்களிலும் அன்று அனுமதி இல்லை. எங்களுடன் ஒட்டுனராக வந்திருந்த குல்ஸார் அன்று களைத்திருந்தார். ஷாலிமார் பாக்-குக்கு வெளியே நினைவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு டாக்ஸி நின்றிருந்த இடத்துக்குத் திரும்பியபோது குல்சாருடன் நின்று கொண்டிருந்த பிட்டு aka ஹஷீமைச் சந்தித்தேன். தன்னை தில்லிக்காரன் என்று சொல்லிக் கொண்டார். கிழக்கு தில்லியிலுள்ள ஷாட்ரா பகுதியில் அவர் வீடு இருக்கிறதாம். பொதுவாக ஶ்ரீநகரில் வெளி மாநிலத்துக் காரர்கள் எவரையும் டாக்ஸி ஓட்ட விட மாட்டார்கள். அவர் எப்படி ஶ்ரீநகரில் டாக்ஸி ஓட்டுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. குல்ஸார் எங்களை ஓட்டல் வாசலில் விட்டுச் சென்றவுடன் அருகிருந்த டீக்கடையில் காஷ்மீரப் பானம் காவா அருந்திக் கொண்டிருந்தோம். ஹஷீமுக்கு நாங்கள் தங்கியிருந்த ஓட்டல் எப்படித் தெரிந்தது எனத் தெரியவில்லை. டீக்கடையை விட்டு நாங்கள் வெளியே வந்தபோது எங்களைப் பார்த்து கையாட்டினார். பேக்கேஜ் டூரில் இடம்பெற்றிராத ஹஸ்ரத் பால் தர்கா ஷரீஃபுக்கு ஹஷீமுடன் போகலாமென உடனடியாக முடிவெடுத்தேன்.
ஹஸ்ரத் பால் சென்றடைந்தபோது இரவுப் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. என்னை உள்ளே அனுமதிப்பார்களா என்று சந்தேகமாக இருந்தது. தலைமுடியை மறைக்கும் படி குல்லா அணிய வேண்டும் என்ற பிரக்ஞை இல்லாமல் உள்ளே நுழைந்துவிட்டேன். ஹஷீம் தன் குல்லாவை எடுத்து வந்திருந்தார். பிராரத்தனைக் கூடத்துக்கு முன்னதாக காவலர்கள் நின்றிருந்தனர். தயக்கத்துடன் நடந்து வந்து கொண்டிருந்த என்னைப் பார்த்து ஒரு காவலர் என் பெயர் என்ன என்று கேட்டார். என்ன பெயர் சொல்வது என்று சில கணம் தயங்கினேன். பின்னர் அசல் பெயரைச் சொன்னேன். அவர் ஏற்கனவே நான் இந்து என்று ஊகித்திருக்க வேண்டும். “இரவுப் பிரார்த்தனை முடிந்த பின் நீங்கள் உள்ளே செல்லலாம்” என்றார் போலீஸ்காரர். தர்காவின் பின் புறம் இருந்த டால் ஏரிக்கருகே நின்று காத்துக் கொண்டிருந்தோம். தொழுகை அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. மைக்கில் ஒலித்த தொழுகையில் கவனத்தை குவித்து ஏரியின் மேல் பார்வையை பதித்திருந்தேன்.
பிரார்த்தனை முடிந்தது. நாங்கள் பிரதான வாயில் வழியாக முதல் பிரார்த்தனை பகுதிக்குச் சென்றோம். அந்தப் பகுதியில் சிலர் இன்னமும் அமர்ந்து தொழுகை செய்து கொண்டிருந்தனர். கையை எப்படி வைத்துக்கொள்வது? அவ்வப்போது கோயிலில் கையைக் கூப்புவது போல் வைத்துக் கொண்டேன். இது தர்காவல்லவா? கை கூப்புதல் சரியாக இருக்காது. கையைக் கட்டிக் கொண்டேன். நான் இயல்பாக இல்லை என்று எனக்கே தெரிந்தது. தொழுகையில் இருந்த சிலரைத் தாண்டி கண்ணாடிக்குள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான டயரி போன்ற ஒன்றை எனக்கு ஹஷீம் காண்பித்தார். கறுப்பு மையில் மணிமணியாக அரபி மொழியில் குர்ஆன் மூலமும் ஒவ்வொரு அடிக்கு கீழே சிவப்பு மையில் பர்சியனில் அந்த அடியின் அர்த்தமும் எழுதப்பட்டிருந்தன. பர்சியனை உர்து என்று சொன்னார் ஹஷீம். தொழுகையாளர்களுக்கு எங்களின் பேச்சு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக ஹஷீமுடன் அதிகம் பேசவில்லை. “இந்த குர்ஆனை போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் ஹஷீம். அதைக் கண்டு கொள்ளாமல் நான் மூலப்பிரார்த்தனை அறைக்குள் சென்றேன். தொழுகை முடிந்து மக்கள் எழுந்தனர். குர்ஆன் ஓதிய அந்த இளவயது மௌல்வியிடம் சென்று ஒவ்வொருவராய் கைகுலுக்கி விடை பெற்றனர். மௌல்வி அங்கிருந்து கிளம்பும் முன்னர் என்னைப் பார்த்தார். பின் என்னருகே வந்து கை கொடுத்தார். “சப் கைரியத்?” என்று வினவினார். நான் தெற்கிலிருந்து வருவதாகச் சொன்னேன். அது ஒரு சம்பிரதாயமான பேச்சு. நான் தெற்கா, மேற்கா, வடக்கா என்று என் belongingness குறித்த குழப்பம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு! மௌல்வி “குதா ஹாஃபீஸ்” எனச் சொல்லி இன்னுமொரு முறை கைகுலுக்கி விடை பெற்றார்.
பின்னர் ஒரு முதியவர் என்னை அணுகி என் பெயரைக் கேட்டார். ஹஸ்ரத் பால் ஷரீஃப் பற்றிய தகவல்களை எனக்குச் சொல்லலானார். நபிகள் நாயகத்தின் ரெலிக் எந்தெந்த நாட்களில் பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும் என்று விவரமளித்தார். நான் சற்றும் எதிர்பாராத வகையில் ரெலிக் இருக்கும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். மூடியிருந்த அறையின் பூட்டுகளில் என் தலையை லேசாக இடித்த மாதிரி வைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு பணித்தார். அவர் சொன்னது மாதிரி செய்து இரு நிமிடங்கள் கண்ணை மூடி பிரார்த்தனை செய்தேன். அந்த இரு நிமிடங்களில் சில கணங்களுக்கு தவறுதலாக என் கரங்களை கூப்பினேன். என் தலையில் கையை வைத்து வாழ்த்தினார் அம்முதியவர்.
ஓட்டலுக்குத் திரும்பும் வழியில் ஹஷீம் கேட்டார் – “கண்ணாடிக்குள் வைத்திருந்த அந்த கையெழுத்து குர்ஆன் பிரதியை ஏன் போட்டோ எடுக்கவில்லை? உங்களுக்கு வரலாற்று விஷயங்களில் மிகுந்த ஆர்வம் இருக்கும் என நினைத்தேன்.”
“அஃப்கோர்ஸ்…அந்தப் புத்தகத்தில் என்ன விசேஷம்?”
“முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் தன் கையால் எழுதிய குர்ஆன் அது என்று சொன்னேனே”
“எப்போதய்யா சொன்னீர்?”
“நான் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் கை கூப்பி நின்றிருந்தீர்களே”
வெட்டி உரையாடல்கள், எப்போதாவது சில நண்பர்களுடைய அறிமுகம் என நடைமுறை வாழ்க்கையில் காணும் அனுபவங்களை ஒத்தவாறு சுவையற்றதாகவே சமூக வளைதளங்களில் நேரம் கழிந்து வந்தது. இடும் கருத்துகள் ஏதோ இந்தவுலகை மாற்றியமைக்கப்போவது போலக் கூவுதற்கும் சொந்த வாழ்க்கையின் முன்னேற்றங்களை பறைசாற்றிக் கொள்வதற்குமான அரங்காக மட்டுமே சமூக வளைதளங்களைப் பயன்படுத்தி வந்த எனக்கு அவற்றுக்கு உயிர் காக்கும் வல்லமை உண்டு என்ற நேரடி அனுபவத்தைத் தந்த நாள் 23/4/2021.
கொவிட் பாசிடிவாகி ஏழு நாட்களாகியிருந்தன. ஜூரம் குறையவில்லை. 22ந்தேதி நடுஇரவு SPO2 தொண்ணூறாக குறைந்துவிட்டது. இரண்டு மணி நேரம் கழித்து 86. மனைவிக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. சில பெரிய மருத்துவமனைகளுக்கு போன் செய்தாள். மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்குமா என்று கேட்டவுடன் இல்லை என்ற ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி லைனை கட் செய்தார்கள். ஊரில் நண்பர்களுக்கு போன் செய்து என் காதில் விழாவண்ணம் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். கையைப் பிசைந்து கொண்டிருந்தாள். என் ஜுரத்தை விட அவளின் அவஸ்தை எனக்கு மிகுந்த சங்கடமளித்தது.
நண்பர் ஒருவரை அழைத்துக் களைத்துப் போயிருந்த குரலில் மெதுவாகப் பேசினேன். தொண்டை வறண்டு போயிருந்தது. அவரின் பதிலை கண்ணை மூடிக்கொண்டே கேட்டேன். தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனை கிடைப்பது அரிது என்றார். அவருக்கும் கொவிட் பாசிடிவ். ட்வீட் செய்கிறேன் என்று அவர் சொன்ன போது அவநம்பிக்கையோடு தான் போனை வைத்தேன். ஆனால் முற்றிலும் எதிர்பாராதபடி என் நண்பர் இட்ட சின்ன டிவிட்டர் நிலைத்தகவலை படித்துவிட்டு அறிமுகமில்லாத அரசியல் பிரமுகரின் தொண்டர் ஒருவர் அதிகாலை ஐந்து மணிக்கு தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார்.
படுக்கைத் தட்டுப்பாடு நிலவிய இரண்டாம் அலை நாட்களில் நடுத்தர அளவிலான மருத்துவமனையில் எனக்கு இடம் கிடைத்ததையும்,
ஸ்கேனிங் சென்டரில் மிக நீண்ட க்யூ வரிசையில் நான் நின்றிருந்த போது அந்தத் தொண்டர் போனில் யாருடனோ பேசி என்னுடைய முறை உடனடியாக வரும்படி செய்ததையும்,
விதிமுறைக்கெதிராக மார்பு ஸ்கேன் ரிப்போர்ட் வரும் முன்னதாகவே (CT Severity Score 17/25) மருத்துவமனை என்னை அனுமதித்துக் கொண்டதையும்,
அனைத்து மருத்துவமனைகளிலும் பிராண வாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த வேளையில் நான் படுத்திருந்த சிறு மருத்துவமனைக்கு மட்டும் ஒரு சின்ன லாரி நிறைய சிலிண்டர் கிடைத்ததையும் –
அற்புதம் என்ற சொல்லினாலன்றி வேறெந்த சொல்லால் குறிப்பது? நன்றியுணர்வு ஆன்மாவின் மது என்பார் ரூமி. என் உயிர் காக்கப்பட்ட நன்றியுணர்வின் போதை என் வாழ்நாளெல்லாம் நீடித்திருக்கும்.
ட்வீட் செய்த நண்பர் பெயர் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அவர் பெயரை இங்கே குறிப்பிடவில்லை.
சில வருடங்களுக்கு முன்னர் பௌத்த இலக்கியத்தை மூல நூல்களிலிருந்து மட்டுந்தான் வாசிப்பது என்று ஆரம்பித்தேன். சக்கரவாளம் நூல் வடிவில் கொண்டு வரும் திட்டம் ஏதும் இல்லாத நாட்கள் அவை. லங்காவதாரம், லோட்டஸ் சூத்திரம், பிரஜ்ன பாரமித சூத்திரம் என்று நேரடி மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்து அர்த்தம் புரிந்து கொள்ள யத்தனித்தேன். இதன் அடிப்படையில் என்னால் ஒரு கட்டுரையோ பத்தியோ எழுதிவிட முடியாது என்று எனக்குத் தெளிவாயிற்று. விரைவிலேயே அம்முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று. சத்சங்கம், கதாகாலட்சேபம் என ஆத்திகர்களின் பிரயத்தனத்தைப் புரிந்து கொண்ட தருணம் அது. விகாரங்களில், புத்த கோயில்களில் நடக்கும் தம்ம உரைகளைக் கேட்கத் தொடங்கினேன். முக்கால் வாசி நான் கேட்ட உரைகள் அனைத்துமே இணைய வழி. எந்தவொரு சமய நெறியானாலும் அதற்கு விளக்கம் மற்றும் மறு விளக்கம் தருவோர் அந்த சமய மரபை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தும் பணியை ஆற்றுகின்றனர்,
அசுவகோஸரும், நாகார்ஜுனரும், பின்னால் வந்த ஆச்சாரியர்களும் பௌத்த நெறியை விளக்கியும், காலத்துக்கும் சமூக மாற்றத்துக்கும் ஏற்ற மாதிரி மறு விளக்கங்களைத் தந்தும் பௌத்த மரபை உயிர்ப்புடன் வைப்பதில் அரும் பணியாற்றினர். நம்முடைய காலத்தில் அத்தகைய ஆசாரியர்களாக நான் கருதுவது இருவரை. ஒருவர் வணக்கத்துக்குரிய தலாய் லாமா. இன்னொருவர் ஜனவரி 22 அன்று நம்மிடமிருந்து விடை பெற்றுக் கொண்ட வியட்நாமிய ஜென் சாது தீக் நியட் ஹான்.
இருவரும் நெருங்கிய நண்பர்கள். திக் நியட் ஹான் இறந்த சில மணி நேரங்களில் தலாய் லாமா வெளியிட்ட இரங்கல் கடிதத்தில் “நான் என் நெருங்கிய நண்பனை இழந்துவிட்டேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இருவருமே நல்ல பேச்சாளர்கள். பௌத்த கோட்பாடுகளை சம காலத்திய மொழியில் அதிகம் மேற்கோள்கள் காட்டாமல் எளிய விதத்தில் விளக்க வல்லவர்கள். பௌத்தத்தின் முதன்மைக் கோட்பாடான பிரதீத்ய சமுத்பாதம் ( சார்பியல் கோட்பாடு) பற்றி ஒரு மேலை நாட்டினர் கேட்ட கேள்விக்கு தலாய் லாமா அவர்கள் ஒரு மேசையை உதாரணம் காட்டி விளக்கினார். அவரின் பதில் எனக்களித்த புரிதலை அதற்கு முன்னர் நான் எட்டியிருக்கவில்லை. ஒரு முறை பிரஜ்ன பாரமித சூத்திரம் பற்றி ஒரு முக நூல் லைவ்-வில் அவர் உரையாற்றும் போது “சூன்யதா” கோட்பாடு என்பது எப்படி பிரதீத்ய சமுத்பாதக் கோட்பாட்டில் மையங் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவுற விளக்கினார். தலாய் லாமாவின் இவ்விரு உரைகளைக் கேட்டு உள்வாங்கிக் கொண்டதனாலேயே தேரவாதம், மகாயானப் பிரிவை – வெறும் “அகடமிக்கான” “செயற்கையான” வகைப்படுத்தல் – என்று இலங்கைச் சாது வால்போலா எழுதியதை படித்தபோது அதனுடன் ஒத்துப் போக முடிந்தது.
ஒரு காணொளியில் ஓர் இளம்பெண் “மனதில் எதிர்மறை எண்ணங்கள் வராமல் இருக்கச் செய்வது எப்படி?” என தலாய் லாமாவைக் கேட்டாள்.
“எதிர் மறை உணர்ச்சிகள் இரண்டோடு தொடர்புடைத்து. ஒன்று, சுயத்தை மையப்படுத்திக் கொள்ளும் மனப்பான்மை. (Self-centred Attitude). இரண்டு, நம் கண் முன் தெரிவனவற்றை அவை தோன்றுவது மாதிரியே நிஜம் எனக் கருதிவிடல். (Grasping)”
அனாத்மன், சூன்யதா தத்துவங்களைச் சற்று லேசாக விளக்கிவிட்டுத் தொடர்கிறார்.
“பிரஜ்னாவை வளர்த்துக் கொள்வதும், உபாயா-வை அதாவது கருணையை நிலை நிறுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ளுதலுமே எதிர்மறை உணர்ச்சிகளை முழுமையாக அகற்றும் வழி”
திக் நியாட் ஹான் அவர்கள் Being Peace என்னும் தன்னுடைய நூலில் பிரஜ்னாவும் உபாயாவும் ஒன்றே என்கிறார். தெளிவாய் புரிந்து கொள்ளுதலும் பிற உயிர்களிடம் அன்பு செலுத்துவதும் ஒன்றே என்கிறார். ஒருவரைத் தெளிவாக புரிந்து கொண்டால் அவர் மேல் அன்பு செலுத்துதலின்றி வேறொன்றும் செய்யத் தோன்றாது. நல்ல புரிதலை வளர்த்தெடுக்க அனைத்து உயிர்களையும் கருணை விழிகளுடன் நோக்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். புரிதல் நிபந்தனையற்ற அன்புக்கு வித்திடும். அன்பு நிலையில் இயல்பாகவே மக்களின் துன்பத்தை தணிக்கும் காரியங்களில் நம் மனமும் உடலும் ஈடுபடும். விழித்திருத்தல், அறிதல், புரிதல், அன்புடைத்தல்- இந்நான்கையும் தன்னிடத்தே கொண்டிருப்போன் புத்தன். புத்தன் நம் அனைவரிலும் இருக்கிறான்.
புத்தம் சரணம் கச்சாமி எனும் போது புத்தனும் என்னில் சரணடைகிறான் என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாம் பாதியில்லாமல் முதல் பாதி பூர்த்தியாகாது அல்லவா? ஆனால், விழித்திருத்தல், புரிதல், அன்பு முதலானவற்றை கருத்தியல் ரீதியாக இல்லாமல் நம் பழக்கத்தில் உறையும் இயலபான குணங்களாக நாம் கொண்டிருக்க வேண்டும் என்று புத்தன் அவசியப்படுகிறான். நாம் அனைவருமே புத்தர்கள், ஏனெனில் நம் வாயிலாகவே புரிதலும் அன்பும் உணரக் கூடியதாகவும் செயல்திறனுள்ளவையாகவும் மாறும். பௌத்தம் உண்மையாக இருக்க வேண்டுமானால் “புத்தகாயம்” இருத்தல் அவசியம் – விழிப்பு நிலையின் அடிப்படையில் எழும் செய்கையின் உடலகம். புத்தகாயம் இல்லாவிடில் பௌத்தம் என்பது வெறும் சொல்லாக மட்டுமே இருக்கும்.
நடைமுறை ரீதியில் புத்தகாயம் என்னும் பௌத்த மீப்பொருண்மையியலின் கருத்தை இதை விட எளிதாக எவராலும் புரிய வைக்க முடியாது. எனவேதான் மறைந்த ஜென்குருவின் நூல்கள் பௌத்த பாதையின் உண்மையான வழிகாட்டிகளாக உள்ளன.
நூறுக்கும் மேலான பௌத்த நூல்களை ஆங்கிலத்தில் மேலை வாசகர்களுக்காக எழுதியவர் திக் நியாட் ஹான். அவர் எழுதிய “தி ஆர்ட் ஆப் மைண்ட்புல்னஸ்” ஒரு கிளாசிக். அதை படித்தது பல வருடங்களுக்கு முன்னால். பௌத்தத்தின் அடிப்படைப் புரிதல் இல்லாமலே கூட எளிதில் அணுகத் தக்க நூலாக அது இருந்தது. பின்னர் பௌத்த கோட்பாட்டுப் பரிச்சயம் வந்த பிறகு அந்நூலை மறு வாசிப்பு செய்த போது திக் நியாட் ஹான் பௌத்தத்துக்கு செய்யும் அரும்பணியின் ஆழமும் அகலமும் நன்கு புரிந்தது.
புராதன பௌத்த கோட்பாடுகளைச் சம காலத்தில் மேற்கு நாட்டார் அணுகும் வண்ணம் எளிமையான அறிமுகம் செய்து வைக்கின்றன அவருடைய நூல்கள். அதே சமயம், சுய உதவி நூல்களைப் போல் ஒலிக்கும் நூல்களல்ல அவை. ஜென் பௌத்த மரபை, அவர் பிறந்து வளர்ந்த வியட்நாமில் புழங்கும் மகாயான பௌத்த மரபை நீர்க்கச் செய்யாமல் நூல்களை எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் எழுதிய கடைசி நூல் மிகச் சமீபத்தில் அக்டோபர் 2021இல் வெளியாகியிருக்கிறது.
2014இல் மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டு முடங்கிய அவர் எத்தகைய முன்னேற்றமும் இல்லாமல் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பிரான்ஸில் ஒரு மருத்துவமனையில் இருந்தார். ஒரு நாள் தம்மை தென் பிரான்ஸில் இருக்கும் அவருடைய ப்ளம் கிராம மடாலயத்துக்கே எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். பிரான்ஸ் மடாலயத்துக்குத் திரும்பிய சில வாரங்களில் அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. “தோட்டத்தில் உலாவவும், மரத்தடியில் அமரவும், பறவைகள் ஒலியைக் கேட்கவும்” தம்மால் முடிவதாக ஒரு பத்தியில் குறிப்பிட்டிருந்தார். ரத்தக்கசிவின் காரணமாக பேசும் சக்தியை இழந்திருந்த அவர் கடைசி வரை பேச முடியாமலேயே இருந்தார்.
2016இல் தாயகம் வியட்நாமுக்கு அருகில் இருக்கும் தாய்லாந்தில் உள்ள அவருடைய மடாலயத்தில் தங்க விருப்பப்பட்டார். 2016இல் அவர் தாய்லாந்துக்கு வந்தார். தாய்நாட்டில் அவர் துறவறம் பெற்ற ட்யூ (tueh) புத்த கோயிலில் வந்து தங்க வியட்நாம் அரசாங்கத்திடம் பல முறை அனுமதி வேண்டினார். இறுதியில் 2018இல் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர் தன் பயணத்தை எங்கு 1951இல் துவக்கினாரோ அந்தப் புத்த கோயிலிலேயே இறக்கும் வரை தங்கியிருந்தார்.
1966இல் அமெரிக்க பயணத்தில் இருந்த போது தாய் நாட்டுக்கு திரும்பும் அனுமதி மறுக்கப்பட்டது. போருக்கெதிராகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தவர் – தென் வியட்நாமும் சரி வட வியட்நாமின் கம்யூனிஸ்ட் போராளிகளும் சரி – இரு சாராருக்கும் வேண்டாதவர் ஆனார். 1966 இல் அமெரிக்காவில் அவர் விட்ட ஓர் அறிக்கை வியட்நாமில் மட்டுமில்லை, வல்லரசான அமெரிக்க அரசிடமிருந்தும் அவரை தூரப்படுத்தியது. அந்த அறிக்கையில் அவர் சொன்னது : “நான் எவர் பக்கத்திலும் இல்லை. அமைதியின் பக்கம் இருக்கிறேன். போர் நிறுத்தமே நான் வேண்டுவது. எந்த அரசியல் நிலைப்பாட்டையும் நான் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை.” 1966 இலிருந்து 39 வருடங்கள் அவர் அகதியாக இருந்தார். பிரான்ஸ் அவருக்கு அடைக்கலம் தந்தது.
கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங் அவர்களுடனான திக் நியாட் ஹானின் நட்பு அமெரிக்க மக்களிடையே வியட்நாம் ஆக்கிரமிப்புக்கெதிரான கருத்து வலுப்பெற காரணமாக அமைந்தது. துறவி கேட்டுக் கொண்டதற்கிணங்கி மார்டின் லூதர் கிங் தன் உரைகளில் வியட்நாம் போர் எதிர்ப்பையும் ஒர் அஜெண்டாவாக சேர்த்துக் கொண்டார். திக் நியாட் ஹானின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தார். எப்போதும் நடப்பது போல் போரில் ஈடுபட்ட இரு பக்கத்தைச் சார்ந்தவருக்கே நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மார்டின் லூதர் கிங் தன் பரிந்துரையைப் பற்றி இரகசியமாக வைத்துக் கொள்ளாமல் ஒரு பேட்டியில் பகீரங்கமாகச் சொல்லிவிட்டார் என்பதால் நோபல் பரிசு இறுதிப்பட்டியலில் துறவியின் பெயர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று நோபல் கமிட்டி விளக்கம் அறிவித்தது. “மென்மையான உள்ளங்கொண்ட இந்த வியட்நாமியத் துறவியை விட (பரிசுக்கு) தகுதியானவர் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. அமைதிக்கான அவரது யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டால் உலக சகோரத்துவத்துக்கும் மனித குலத்திற்கும் ஒரு அழியா நினைவுச்சின்னத்தை உருவாக்கும்” – இது மார்டின் லூதரின் சொற்கள்.
அறுபதுகளில் போர் உச்சத்தில் இருந்தபோது திக் நியட் ஹான் மற்றும் அவருடைய சங்கத்துறவிகள் ஒரு தீர்மானம் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருந்தன. குண்டுகளால் மக்கள் காயப்பட்டுக் கொண்டிருக்கையில் துறவிகள் தம் போக்கில் தியானத்தில் மூழ்கியிருக்க வேண்டுமா? அல்லது மடாலயத்தை விட்டு வெளியே வந்து தெருக்களில் குண்டடி பட்டு வீழ்ந்துகிடக்கும் மக்களுக்கு உதவிகள் செய்து அவர்கள் உயிர் காக்க வேண்டுமா? அவர்கள் இரண்டையும் செய்ய முடிவெடுத்தனர். மக்களின் உயிரைக் காத்தல் மற்றும் அதை மனக்கவனப்பயிற்சிக்குள் (mindfulness practice) மக்கள் பணியை உள்ளடக்கியவாறு செய்தல் – இப்படிப் பிறந்தது தான் திக் நியட் ஹான் உருவாக்கிய பௌத்த சமயக் கொள்கை – Socially Engaged Buddhism.
“சமூக ஈடுபாடு கொண்ட பௌத்தம் என்பது அனைத்து உயிர்களின் முழுமையான, சிக்கலான, ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தன்மையைப் புரிந்துகொள்வதில் இருந்து எழும் ஒரு தர்ம நடைமுறையாகும். எல்லா உயிர்களையும் காப்போம் என்பது போதிசத்துவர் சபதம். நமது விடுதலையும் பிறர் விடுதலையும் பிரிக்க முடியாதவை என்பதை அறிவதும், தர்மத்தின் கண்ணால் உலகைப் பார்ப்பதும், கருணையுடன் உறுதியோடு தக்க செயல் புரிதலும் இதன் அம்சங்களாகும்.” (Donald Rothberg and Hozan Alan Senauke, from the essay – Turning Wheel).
சமூக ஈடுபாடுள்ள பௌத்தம் குறித்த கோட்பாட்டு அடிப்படைகளை 1951இல் எழுதிய ஒரு கட்டுரை நூலில் விரிவாக எழுதியிருந்தார் திக் நியட் ஹான். வியட்நாம் போரின் போது கொள்கைக்கு செயல் வடிவம் கொடுக்க வாய்ப்பு அமைந்தது. ஆசியாவிலும் மேற்கிலும் இருந்த பௌத்த அமைப்புகளுக்கிடையிலான தொடர்புகளை நிறுவி பௌத்த அறநெறிகளின் அடிப்படையிலான சமூக-அரசியல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வியட்நாம் போர் நல்ல கேஸ்-ஸ்டடியாக அமைந்தது. போருக்குப் பின்னர், அடிப்படைகளைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தியும் கிடைத்த அனுபவங்களின் பாடங்களை மேற்படி சேர்த்து செம்மைப் படுத்தியும் சமூக பௌத்தத்தை தான் இறக்கும் வரை முன்னெடுத்தவாறிருந்தார்.
மகாயான நூல்களில் போதிசத்துவர்கள் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி போலவே சமூக ஈடுபாட்டு பௌத்தத்திற்கென்று திக் நியட் ஹான் 1993இல் உருவாக்கிய பதினான்கு உறுதி மொழிகளில் நான்காவது உறுதிமொழி இது – “ துன்பத்தை தவிர்க்கவோ, துன்பத்தைக் காண்கையில் கண்களை மூடிக் கொள்ளவோ வேண்டாம். உலக வாழ்க்கையில் துன்பத்தின் இருத்தலைப் பற்றிய விழிப்புணர்வை இழக்க வேண்டாம். சந்தித்தல்கள், உரையாடல்கள், இயங்குதல்கள் வாயிலாக துன்பப்படுபவர்களுடன் தொடர்பில் இருக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டாம். இத்தகைய வழிமுறைகளைக் கைக்கொள்ளுதல் மூலமாக உலகின் துன்ப வாழ்க்கைப் பற்றிய பிரக்ஞையை உம்மிலும் மற்றவர்களிலும் எழுப்புங்கள்”
தாய் நாட்டிலிருந்து பல்லாயிரம் மைல் தொலைவில் நெடுங்காலம் வசிக்கும் கட்டாயம். கடந்த நான்காண்டுகளாக அவர் ட்யூ கோயிலில் தங்கியிருந்து தன் இறுதி நாட்களை கழித்த சமயங்களிலும் உளவாளிகளைப் பக்தர் வேடத்தில் வேவு பார்க்க அரசு அனுப்பியதாகச் சொல்கிறார்கள். தலாய் லாமாவுக்கும் கிட்டத்தட்ட இதே மாதிரியான சிக்கல்கள். தாய்நாட்டிலிருந்து வேறு நாட்டில் தஞ்சம் கோர வேண்டிய சூழ்நிலை. சொந்த தேசத்துக்கு, அவர் வசித்த பொடாலா மாளிகைக்கு அவர் திரும்பிச் செல்வது நடக்காத காரியம் என்னும் கசப்பான உண்மையின் போதம். எனினும், இவ்விரு குருமார்களையும் காணும்போதும் அவர்களின் உரைகளைக் கேட்கும் போதும் பார்வையாளர்களின் மனதில் வந்தமரும் அமைதி அவ்விருவரின் “புத்தகாயங்களின்” நீட்சி என்பதாக எண்ண முடியும். தம் விடுதலை மற்றவர்களின் விடுதலையைச் சார்ந்திருக்கிறது என்பதை உள்வாங்கியவர்களாய், ஒவ்வோர் அடியையும் உள்வாங்கிய உண்மையின் வழி நடத்தலில் எடுத்துவைப்பதாகக் கொள்ளமுடியும்.
பிரஜ்னபாரமித சூத்திர விளக்கக் கட்டுரையொன்றில் இலை பற்றிய குட்டிக் கதையொன்றைக் கூறுவார் திக் நியாட் ஹான். – “இலையுதிர் காலத்தில் ஒரு நாள் ஒர் இலையுடம் பேசிக் கொண்டிருந்தேன். ‘இலையுதிர் காலம் என்பதாலும் மற்ற இலைகள் உதிர்ந்துவிட்டதாலும் பயமா என்று அந்த இலையிடம் கேட்டேன். இலை என்னிடம், ‘இல்லை. வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் நான் உயிருடன் இருந்தேன். நான் கடினமாக உழைத்து மரத்தை வளர்க்க உதவினேன், என்னில் பெரும்பகுதி இம்மரத்தில் உள்ளது. தயவு செய்து நான் இந்த வடிவம் மட்டுமே என்று சொல்லாதீர்கள், ஏனென்றால் இந்த இலை வடிவம் என்னில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. நான் முழு மரம். நான் ஏற்கனவே மரத்தின் உள்ளே இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும், நான் மீண்டும் மண்ணுக்குச் செல்லும்போது மரத்தை தொடர்ந்து வளர்ப்பேன். அதனால்தான் நான் கவலைப்படவில்லை. நான் இந்த கிளையை விட்டு தரையில் கிடக்கும்போது நான் மரத்தை கை அசைத்து அவளிடம், ‘நான் உங்களை விரைவில் சந்திப்பேன்’ என்று கூறுவேன்.”
புத்தகாயத்தை தட்டி எழுப்புதலைத் தன் வாழ்நாள் பணியாகச் செய்து கொண்டிருப்போர் மரணிப்பதில்லை. பிற உயிர்களின் விடுதலையைத் தன் விடுதலையாக எண்ணி வாழ்ந்தோர் இறந்தும் மற்றவர்களுடனேயே உதிரத் தயாராக இருக்கும் இலை போல காற்றாக வெளியாக வானாக மேகமாக தங்கிவிடுகிறார்கள்.
இலை குட்டிக் கதை இடம் பெற்ற அதே கட்டுரையின் இறுதியில் இவ்வாறு குறிப்பிடுகிறார் –
“நாளை, நான் தொடர்ந்து இருப்பேன். ஆனால் நீங்கள் என்னை மிகவும் கவனமாக தேடிப் பார்க்க வேண்டும். நான் பூவாகவோ, இலையாகவோ இருப்பேன். உங்களுக்கு வணக்கம் சொல்வேன். நீங்கள் போதுமான கவனத்துடன் இருந்தால் என்னை அடையாளம் கண்டுகொள்வீர்கள். வணக்கம் சொல்வீர்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்.”
எனக்கு மிகவும் பிடித்த திக் நியட் ஹான் கவிதை. இக்கவிதையை வாசிக்கும் போது லோட்டஸ் சூத்ரா நம் நினைவில் வராமல் போகாது. அதில் வரும் ததாகதர் உரை போன்று ஒலிக்கிறது இந்தக் கவிதை. இந்தக் கவிதை வரிகளை கருணை பற்றிய தியானத்திற்கான காட்சி ஊக்கியாக மறைந்த ஜென் மாஸ்டரின் சீடர்கள் பயன்படுத்துவார்களாம்.
இன்றிரவு முழு நிலவு என்பதனால் நட்சத்திரங்களை நம் பிரார்த்தனையில் அழைப்போம் பளீரென்ற ஒற்றைக் குவிய மனத்தினூடே தியானத்தின் ஆற்றல் இப்பிரபஞ்சத்தை அசைத்துக் கொண்டிருக்கிறது.
அனைத்து வாழும் உயிர்களும் இன்றிரவு இங்கு குழுமியுள்ளன அச்சத்தின் சமுத்திரத்தினுள் இப்பூமி மூழ்குதலைக் காண்பதற்கு
நடுஇரவு மணிச்சத்தம் ஒலித்தவுடன் பத்து திசைகளிலும் அனைவரும் தம் கைகளை பிணைத்து மகாகருணை எனும் தியானத்திற்குள் நுழைவர்
வாழ்வின் காயங்களைத் துடைக்கும் தூய நீரைப் போன்று இதயத்திலிருந்து கருணை சுரக்கிறது
மன மலையின் உயரங்களிலிருந்து புத்துயிர் தரும் தண்ணீர் அருவியாகப் பொழிந்து நெல் வயல்கள் ஆரஞ்சுப் புதர்கள் வழியே பாய்ந்து செல்லும்
விஷப்பாம்பொன்று இவ்வமுதத்தின் ஒரு துளியை ஒரு புல் தாளின் நுனியிலிருந்து பருகுகிறது அதன் நாவிலிருந்து விஷம் மறைந்துவிடுகிறது
மாரனின் அம்புகள் வாசமிகு மலர்களாக மாற்றம் கொள்கின்றன
நோய் நீக்கும் நீரின் அற்புதச் செயல் திறன் – புதிரான பரிமாற்றம்! ஒரு குழந்தை அந்தப் பாம்பை அதன் கள்ளங்கபடமற்ற கரங்களில் ஏந்துகிறது
புராதன தோட்டத்தில் இலைகள் இன்னும் பச்சை பனி மீது சிரிக்கும் மின்னும் கதிரொளி இன்னமும் புனிதவூற்றின் கிழக்கு நோக்கிய பாய்ச்சல்
அவலோகிதனின் கையிலிருக்கும் சிறு கிளையோ அல்லது என் இதயமோ நோய் தீர்க்கும் நீர் ஒன்றே
இன்றிரவு அனைத்து ஆயுதங்களும் நம் காலடியில் வந்து வீழும் தூசாக மாறும்
ஒரு மலர் இரு மலர்கள் ஒரு கோடி மலர்கள் பச்சை வயல்களில் தோன்றும்
என் பரிசுத்தக் குழந்தையின் இதழ் சிரிப்புடன் மீட்பின் வாயில் திறக்கும்
– நொடிக்கு நொடி மாறும் அழகிய ஓவியம் – சிறு குறை கொண்ட என் மகன் – தொடர் வெற்றி காணும் என் மகள் – பல சத்தங்களை எதிரொலிக்கும் பள்ளத்தாக்கு – தாகங்கொண்ட நெஞ்சில் வந்து வீழும் ஒரு துளி – சாலையோர வாக்குவாதம் – ஒவ்வொரு வரியும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட கவிதை – முன்னூறாயிரம் கடவுளர் உறையும் பிரதேசம் – சில சமயம் விமர்சனத்துக்குள்ளாகும் பிரதி – மேடு பள்ளங்களாலான அழகிய மலைப்பாதை – பெரும்பாறைகளைத் தாவி நகரும் காட்டாறு – நெடிதுயர்ந்த கோபுரத்தின் துளைகளில் ஒதுங்கி நிற்கும் பறவைக் கூட்டம் – பிரகாரச் சுவர்களில் வீசும் புராதன வாசனை – நகர நதிக்கரையில் தேங்கும் மாசு நுரை – ரூஃப் டாப்பிலிருந்து தெரியும் குடிசைக் கடல் – பணி நிலையங்களின் கீபோர்ட் கீச்சு – ராம் – ரஹீமீன் ஊடல்களும் கூடல்களும் நிறைந்த முடிவற்ற நாடகம் – குல்லாக்களின் டர்பன்களின் நிறம் படிந்த நெற்றிகளின் டிசைன் கலவை – வித்தியாசங்களுக்கு பெயரளித்து கூறு செய்யப்பட்டு நடக்கும் அணிவகுப்பு. – இன்னும் நிறைய….. மிக முக்கியமாக என் சுவாசம்
பிரிந்தபோது இருவருக்கும் மிக வருத்தம் இருவருமே அதை நாடவில்லை நிலவிய சூழல்தான் காரணம் பிழைத்தலுக்கான அவசியம் ஒருவரை வெகுதூரம் துரத்தியிருந்தது – அமெரிக்காவுக்கோ கனடாவுக்கோ அவர்களின் காதல் முன்பு போலிருக்கவில்லை ஈர்ப்பு மெதுவாக குறைந்து கொண்டு வந்தது ஈர்ப்பு வெகுவாக குறைந்தும் விட்டது எனினும், பிரிவிற்கு அது காரணமில்லை சூழல்தான் காரணம்- ஒரு வேளை அவர்களின் உணர்வு முழுக்க மறையுமுன் காலம் அவர்களை முழுதாக மாற்றிவிடுமுன்
ஊழானது கலைஞனாகத் தோன்றி இருவரையும் பிரித்திருக்கலாம் ஒருவருக்கு மற்றவர் என்றுமே இருபத்தி நான்கு வயது அழகான இளம் வாலிபராகவே நினைவில் நிற்கவேண்டுமென்பதற்காக
எல்லாம் சுமுகமாகச் சென்று கொண்டிருந்தன.சென்ற வருடம் ஒரு நாள் தொடங்கியது. மார்ச் மாதம். தேதி நினைவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மோசமடையும் என்பார்களே அதை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டியது. மோசமடைந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்று எத்தனை யோசித்தும் தெளிவை எட்ட முடியவில்லை. வேலைகள் ஒழுங்காகவே போய்க் கொண்டிருந்தன. எனினும் என்னை மீறி ஏதோ நடக்கிறது. என்ன அது? சில மாதங்களுக்குள்ளேயே அனைத்தும் மாறி விட்டன. என் தோழர்கள் குறுகிய இடைவெளியில் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். நண்பர்கள் என்று அலுவலகத்தில் ஒருவரும் எஞ்சியிருக்கவில்லை. இருப்பவர்கள் யாரும் என் நண்பர்கள் இல்லை. அலுவலகத்தில் நண்பர்கள் தேவையில்லை எனும் பண்பாடு எப்போது நுழைந்தது என்ற பிரக்ஞையற்று இருந்திருக்கிறேன். விற்பனை சரிய தொடங்கியது. ஒரு விற்பனை மேலாளரின் உழைப்பை யாரும் பார்க்கப் போவதில்லை. உழைப்பு விற்பனை எண்ணாக மாறாத வரை வில்லாக வளைந்து எலும்புகளை முறித்துக் கொண்டாலும் யாரும் சட்டை செய்யப் போவதில்லை.
இது ஒரு தற்காலிக நிலை. விரைவில் அனைத்தும் சரியாகி விடும் என்று நம்பிக்கையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. ஏறிக்கொண்டு போகும் வயது, சராசரியை விட சற்று அதிகமாக ஈட்டும் ஊதியம் -இவற்றையெல்லாம் விட என்னைத் துன்பப்படுத்திய மிகப் பெருங்கவலை – சரிந்து கொண்டிருக்கும் என் தன்னம்பிக்கை. பயம் வந்தால் ஒருவனின் உழைப்பு பெருகும் என்று தான் நான் இதுநாள் வரை எண்ணிக் கொண்டிருந்தேன். இதற்கு முன்னர் எனக்கு வந்த நெருக்கடிகளின் போது பயம் பெருகும் போது உழைப்பையும் முயற்சியையும் பெருக்க வேண்டும் என்ற பாடத்தை நான் கற்று வைத்திருந்தேன். ஆனால் நம்பிக்கையின்மை இம்முறை என் உழைப்பை மந்தமாக்கியது.
ஒரு சனிக்கிழமை என் தொலைபேசி ஒலித்தது. விடுமுறை நாள். வீட்டில் தான் இருந்தேன். மனம் அமைதியாய் இல்லை. போன் செய்தவர் என் அதிகாரி. போனை எடுக்க நான் தயக்கம் காட்டினேன். இந்த தயக்கம் அசாதாரணமானது. அதிகாரி என்னை உரித்து சாப்பிட்டுவிடுவாரா? ஏன் பயப்படுகிறேன்? அவர் கேட்கக் கூடிய கேள்விகளுக்கு பதில் இல்லாமல் போகாது என்ற அடிப்படை நம்பிக்கையைக் கூட இழந்திருக்கிறேன் என்ற புரிதல் என்னை தூக்கிவாரிப் போட்டது. ஏதாவது முடிவெடுக்கும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தேன். உதவியை நாடுவது என்று உடன் முடிவெடுத்தேன்.
நான் உதவியை நாடி ஆறு மாதமிருக்கும். புகை மூட்டம் விலகத் தொடங்கியிருந்தது. சிந்தனைக்குள் அதீத உணர்ச்சி புகும் வேகத்தை மட்டுப்படுத்தும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றிருந்தேன். நரம்புகளினூடே அதீதமாய் சுரக்கும் பய ரசாயனத்தை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் வேலை செய்யத் தொடங்கியிருந்தன. ஒரு நாள் என் மன நல மருத்துவரை கேட்டேன். “ஆறு மாதம் முன்னர் எனக்கு நடந்தது என்ன?” அதற்கு அவர் சொன்ன பதில் – “ஆறு மாதம் முன்னர் என்னை சந்திக்க வந்த போது நீங்கள் Acute Depression-இல் இருந்தீர்கள்’
புறக்காரணிகளில் ஒரு மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. அதே அலுவலகம். அதே சக ஊழியர்கள். அதே அதிகாரி. அதே சூழல். பயத்தின் தூண்டலில் பதற்றப்படுதலை நிறுத்தப் பழகியிருந்தேன். நகரும் தன்மை கொண்ட இலக்குகளின் இயல்பை என் அகவயமாக உற்று நோக்கத் தொடங்கியிருந்தேன். இது தான், இது மட்டும் தான் என் இலக்கு. இந்த இலக்கு மட்டும்தான் என்னை வரையறுக்கும் என்பதாக ஒற்றை இலக்கில் தொங்கிக் கொண்டிருப்பது வியர்த்தம். இலட்சியம் நல்ல விஷயம். ஆனால் அதன் மேல் முழு கனத்தையும் போட்டுப் பயனில்லை. வளைந்து செல்லும் ஒரு நதியைப் போன்று சூழலுக்கேற்றவாறு நம் ஆசைகள், லட்சியங்கள் எல்லாம் சற்று வளைந்து கொடுக்கட்டும். Physiologically, our body cannot be in perpetual state of anxiety. It has to return to its equilibrium. பிரக்ஞை பூர்வமாக சுய-அன்புடன் உணர்வு நிலைகளை manage செய்தால் கட்டுப்பாடின்றி பதற்றம், அச்சம் என்னும் உணர்ச்சிகள் பீறிடும் வாய்ப்பு குறையும். Let us Count our Blessings. முதலில் நம் மீது நாம் கருணை கொள்வோம். நம்மை பற்றிய அதிகமான எதிர்பார்ப்பின் காரணமாக நம்மை நாமே (மன ரீதியாக) வதைத்துக் கொள்வதை நிறுத்துவோம். ஆசைகள் நம்மை இயக்கத் தொடங்கிவிட்டால் நம் மீது நம் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். நான் ஆசைப்படலாம். ஆனால் ஆசைகள் நம்மைக் கட்டுப்படுத்தலாகாது. தடைகள் இறுதி வரை தோன்றிக் கொண்டிருக்கும். வாழ்வில் இதுவரை தாண்டி வந்த தடைகளை நினைவுபடுத்திக் கொள்வோம். இதுவரை பெற்ற வெற்றிகளை எண்ணி மீண்டும் மகிழ்ச்சி கொள்வோம். நம்பிக்கைச் சுடரை இறுதி வரை அணையாமல் காப்போம்.
சென்ற வருடம் முழுதும் தன் பதற்றத்தை பாதுகாப்பின்மையை தாள முடியாமல் என்னை பந்தாடிய அதிகாரி இந்த வருடம் அமைதியாகிவிட்டார். வேறு வேலை தேடிக் கொண்டிருப்பதாக அரசல் புரசலாக பேச்சு. விரைவில் அவர் வேலையை விட்டுச் சென்று விடலாம். சூழல் மாறலாம். புதுச் சூழல் வேறு வித மாற்றங்களுக்கு வித்திடலாம். மாற்றம் இப்படித்தானிருக்கும் எனற ஒற்றைப் பரிமாணத்தில் நான் நிச்சயம் யோசிக்கப் போவதில்லை. உறுதியளிக்கப்பட்ட elevation கிடைத்துவிடும் என்ற கண்மூடித்தனமான எதிர்பார்ப்பு சென்ற வருடம் சுக்குநூறாக உடைக்கப்பட்ட பின்னர் நடந்த அகநாடகம் எனக்கு ஆசானாக இருந்து வழி காட்டும். நம் அனுபவங்கள் நமக்கான தொடரும் case-study.
+++++
மடிக்கணினியின் முகப்புத் திரையினுள் குப்பையைப் போல் குவிந்து கிடந்த மின்கோப்புகளில் ஒன்றைத் திறந்தபோது மூன்றரை வருடங்கள் முன்பு நான் எனக்காக எழுதிக் கொண்ட குறிப்பு கண்ணில் பட்டது. வாசிக்கையில் ஒரு கதை போன்று சுவாரஸ்யமாய் இருந்தது. எனக்கு நானே சிரித்துக் கொண்டேன்.
மூன்றரை வருடம் முன்னர் குறிப்பை எழுதியதற்குப் பிறகு இது என்னுடைய வாசிப்புக்கு மட்டும் என வைத்துக் கொண்டேன். வழக்கமாக அனுப்பும் இணைய இதழ்களுக்கு அனுப்பி வைக்கவில்லை. எனது வலைப்பக்கத்திலும் இடவில்லை. எழுதியதையெல்லாம் பொதுத் தளத்தில் பகிரும் வியாதி உச்சத்திலிருந்த போதும் இதை மட்டும் ஏன் பகிராமல் வைத்துக் கொண்டேன் என்று எனக்கு இன்று விளங்கவில்லை.
என்னைப் பொறுத்த வரை முழுக்க முழுக்க நிஜம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த இந்தக் குறிப்பின் உள்ளடக்கம் ஒரு புனைவைப் போன்று ஒலித்தது என்பதுதான் இப்போதைய உண்மை. சுழலும் டைட்டில்கள் வந்த பின்னரும் ஒரு Bio-Pic திரைப்படத்தின் கதாநாயகப் பாத்திரம் இறக்காத வரை அப்பாத்திரத்தின் நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள் நிகழ்ந்தவாறிருக்கும் எனும் பிரக்ஞையை இடைநீக்கம் செய்யும் போதுதான் படத்தின் முடிவை ரசிக்க முடியும். முடிவில்லாமல் ஒரு புனைகதை நீண்டு கொண்டிருந்தால் – எத்தனை வலிமையான எழுத்தென்றாலும் – ஓரு கட்டத்தில் வாசிப்பு சலிப்பு தட்டிப் போகும்.
ஐநூறு சொற்களில் எனக்கு நானே எழுதிக்கொண்ட குறிப்பு ஒரு சிறுகதை வடிவத்தைப் பூண்டிருந்தது. எனினும், மனவியல் சிக்கலுக்கு தீர்வைத் தேடிக் கொண்டதான பாவனையில் உற்சாகத்துடன் நான் எழுதிய அந்தக் குறிப்பு தரமான சிறுகதையாக அமையுமா எனும் ஆய்வுக்குள் நுழைவதல்ல என் நோக்கம்.
வாசித்து முடித்ததும் என்ன தோன்றியது? பயணித்த பாதையின் விவரிப்பு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இந்தக் குறிப்பு எழுதி முடித்த பிறகு வந்த நாட்களில் தொழில் வாழ்க்கை நான் முற்றிலும் ஊகித்திருக்க முடியாத திசையில் பயணப்பட்டது.
குறிப்பினில் கூறப்பட்டபடி அக நாடகத்தின் படிப்பினை உதவியாக இருந்தது என்று சொல்ல முடியாதெனினும் சுயத்துடனான உரையாடலில் சில தெளிவான அணுகுமுறையை சட்டகத்தை (தற்காலிகமாகவேனும்) எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. குறிப்பில் பதிவு செய்த சம்பவங்கள் – குறிப்பாக எந்த சம்பவங்களைப் பற்றியும் விரிவாக எழுதவில்லை ; வெறும் கொடி காட்டலோடு சரி – நடந்த பின்னரான தொழில் வாழ்க்கை பற்றி விவரமாகச் சொல்லுமளவுக்கு அது ஒன்றும் அதிசுவாரஸ்யமானதொன்றுமில்லை. தனியார் வேலையிலிருக்கும் ஆயிரமாயிரம் மனிதர்களின் வாழ்வில் வழக்கமாக நடப்பதுதான். சாகசமோ விறுவிறுப்போ அதிகம் இல்லாது அதிகாரம் மட்டுமே ஜெயிக்கும் அக்கப்போர்தான்.
உயரதிகாரி வேலையிலிருந்து நீங்குதல்
தற்காலிக மகிழ்ச்சி
மீண்டும் பணிவுயர்வு பற்றிய எதிர்பார்ப்பு
ஆனால், அயல் நாட்டுத் தலைமையலுவலகத்திலிருந்து மாற்றலாகிவந்த ஒருவருக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்படல்
புதிய அதிகாரி என்னிடமிருந்த கொஞ்சநஞ்ச அதிகாரங்களையும் பறித்துக் கொள்ளல்
வேலை சார்ந்த சுதந்திரங்கள் மட்டுப்படுத்தப்படல்
வியாபாரக் கொள்முதல் சார்ந்த லஞ்சம் பற்றி உயர் மட்டத்துக்கு துப்புத் தரப்போக அது குறித்த அதிகார விசாரணையை என் மீதே ஏவினார் அயல் நாட்டு அதிகாரி. (பழைய அதிகாரி போலவே இவரும் தொடர்ந்து எரிச்சல் படுத்திவந்தார் ; நான் என் வேலையை விட்டுவிட்டுப் போக வேண்டும் என்ற பழைய அதிகாரியின் அதே எண்ணந்தான் இவருக்கும் இருந்தது என்று இப்போது தோன்றுகிறது.)
பெருந்தொற்று ஊரடங்கின் போது அதிகாரி சொந்த நாடு சென்றுவிட தொழிற்சாலை முடங்கியது. தாய் நிறுவனத்திலிருந்து சம்பளப் பட்டுவாடாவுக்கான நிதி ஆதரவு கிடைக்கப் போவதில்லை எனும் சமிக்ஞை தெரிந்தவுடன் கடுமையான உழைப்பின் உதவியால் குறைந்த காலத்துள் வியாபாரத்தை மீட்டெடுத்து ஊழியர் அனைவருக்கும் தொடர்ந்து நேரத்தில் சம்பளம் கிடைக்க வழிவகை செய்தல். (அடுத்தவர்கள் இதை ஒரு சாதனையாக ஒப்புக் கொள்வார்களோ மாட்டார்களோ – “அதற்குத் தகுந்த கூலி உனக்கு வழங்கப்பட்டுவிட்டது” – என்னைப் பொறுத்த வரை எனது நலிந்த தொழில் வாழ்க்கையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இது இருக்கப் போகிறது என்ற எண்ணம் எனக்குண்டு.)
பெருந்தொற்று காரணமாக விமானங்கள் பறக்காததால் நிறுவனத்தை நிர்வகிக்க அயல் நாட்டிலிருந்து யாரையும் அனுப்ப முடியவில்லை என்ற சாக்கில் அதல பாதாள விலையில் முகந்தெரியாத முதலீட்டாளருக்கு இந்திய நிறுவனம் விற்கப்படல்.
நிறுவனம் விற்கப்பட்ட அடுத்த நாள் கம்பீரமாக நடை போட்டு மீண்டும் அலுவலகத்துக்குள் நுழைந்தார் முதலீட்டாளர் அதாவது (குறிப்பில் நான் சொல்லியிருந்த) பழைய அதிகாரி. அவர் தான் இப்போது முதலாளி.
அதற்குப் பிறகு சொல்ல வேண்டிய அவசியமில்லை. இறங்குமுகந்தான். மனஅழுத்தம், மனச்சோர்வு, மனக்கவலை – இவற்றை தாற்காலிகமாகத் துறந்தேன். பகுப்பாய்வு செய்யும் அவசியம் இருக்கவில்லை. அவமதிப்புகளை அமைதியாய் சகித்துக் கொள்ளவில்லை. சொற்களைச் சொற்களால் எதிர் கொண்டேன். கேவலப்படுத்துதல்கள் மின்னஞ்சல்களில் தொடர்ந்த போது வழக்கமாக மௌனம் காக்கும் என் இயல்பில் மாற்றம் வந்தது. சரி சமமாக முதலாளியான அதிகாரிக்கு பதிலளித்தேன். நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் காரணமாக குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்கு யாரையும் வேலையை விட்டுக் கழித்து விட முடியாது என்பதால் பிடிக்காதவர்கள் எல்லாம் அவர்களாகவே வேலையை விடும் சூழலை உருவாக்கினார் அதிகாரி.
பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் போது ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு சிறு அறையில் கிட்டத்தட்ட முப்பது பேரை உட்கார வைத்து வியாபார தந்திரோபாயம் குறித்த உரையாடல் நடத்தியதுதான் அவர் புரிந்த ஈனச் செயல்களுக்கெல்லாம் திலகம். அந்தச் சந்திப்பிற்குப் பின் நிறுவனத்தில் பெரும்பாலானோர்க்கு கொரொனா தொற்று. இரு ஊழியர்கள் உயிரிழந்தனர். எனக்கும் கோரொனா வந்து மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆனது. நல்ல வேளை எனக்கு ஒன்றும் ஆகவில்லை. இதில் “விசித்திரம்” என்னவெனில் முன்னாள் அதிகாரி / இந்நாள் முதலாளியை மட்டும் கொரோனா அண்டவேயில்லை. சக ஊழியர்களின் மரணச் செய்தியைக் கேட்ட பிறகு “இது தான் அந்தக் கணம்” என்று தோன்ற மின்னஞ்சலில் என் ராஜிநாமாவை அனுப்பி வைத்தேன்.
ஏறிக்கொண்டு போகும் வயது பற்றி குறிப்பில் கூறியிருப்பேன். வாஸ்தவத்தில் அது அத்தனை பெரிய தடையாக இருக்கவில்லை. நல்ல நிறுவனத்தில், நல்ல பதவி, நல்ல சம்பளத்தோடு வேறு வேலை உடனே கிடைத்தது. என் திறமையின் காரணமாக எனக்கு கிடைத்த வேலை என்பதான என் நம்பிக்கையை – “பெருந்தொற்றுக் காலத்தில் வேலை கிடைப்பதே கடினம் ; நீ அதிர்ஷ்டக் காரன்” என்று கூறி – லேசாகக் கீறினார்கள் சில நண்பர்கள். வாயு வெளியேறியது. பெருந்தொற்றுக் காலத்தில் நிறுவனங்களின் மோசமான நிதி நிலைமை காரணத்தால் வேலையை இழந்த சில நண்பர்கள் வாயிலிருந்தும் வேறு சில துவாரங்களிலிருந்தும் உஷ்ணப்புகை.
குறிப்பை ஓர் இடத்தில் முடித்ததை போல இங்கேயே என் தொழில் வாழ்க்கைக் கதையையும் முடிக்கலாமா? சுப முடிவு போல தோற்றமளிக்கும் இதை முடிவு என்று எண்ணினால் ஒரு feel good திரைப்படம் அளிக்கும் சுகத்தை உணரலாம். இது ஒரு வளைவுதான் சாலையின் முடிவல்ல என்று எண்ணிக் கொண்டு…ஓடும் பேருந்தில் ஏறி இருக்கையில் அமரும்வரை ஏற்படும் அதிர்வைப் போல் புது வேலையில் சில மாதங்களாய்த் தள்ளாடிக் கொண்டிருக்கிறேன்.
“உன் பதவி உன் வேலை பற்றிய விவரணத்தைத் தருகிறது என்று எண்ணிவிடாதே” என்று நிறுவனத் தலைவர் முதல் நாளில் சொன்னதிலிருந்தே பிடித்தது கிலி. “மேலே உயர உயர நிறுவனத்திற்கிருக்கும் உன் மீதான எதிர்பார்ப்பும் உன்னுடைய வேலை விவரணமும் வேறு வேறாகத் தான் இருக்கும்” என்று கூடுதல் வியாக்கியானம் வேறு. நேர் முகத்தின்போது என் கீழ் நான்கு பேர் வேலை செய்வார்கள் என்று கூறப்பட்டது. அந்த நால்வரை இங்கு வந்து சேர்ந்தது முதல் தேடிக் கொண்டிருக்கிறேன். அலுவலகத்தின் எந்த மூலையில் அவர்கள் ஒளிந்திருக்கிறார்களென்று தெரியவில்லை. ஒன்றுக்கு இரண்டு உயரதிகாரிகள் எனக்கு. இருவருக்கும் நான் பதில் சொல்ல வேண்டும். ஒருவர் வாயே திறக்கமாட்டார். எதுவும் கேட்க மாட்டார். வேலை பற்றிய சந்தேகங்களுக்கு பதிலளிப்பது அவருடைய கடமையே இல்லை என்பது போல மௌனியாய் இருப்பதே அவர் வாடிக்கை. இன்னொரு அதிகாரியோ எப்போது பார்த்தாலும் “அது என்னாச்சு இது என்னாச்சு” ரகம். என்னைப் பேசவே விட மாட்டார். “உன் குதிரையைப் பிடித்து வைத்துக்கொள்” என்ற சொற்றொடரை அவரிடமிருந்து அடிக்கடி கேட்க வேண்டியிருக்கிறது. கடிவாளம் மாட்டிக்கொண்ட உணர்வுதான் எனக்கு.
“நம் அனுபவங்கள் நமக்கான தொடரும் case-study” என்ற குறிப்பின் கடைசி வரியை மூன்றரை வருடங்களுக்குப் பிறகு இப்போது படித்துப் பார்க்கிறபோது பாசாங்கு எழுத்து என்று தான் என்னை விமர்சித்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. அதை உண்மையாக உள் வாங்கிக் கொண்டவனாக இருந்தால் நான் ஏன் சென்ற வாரம் (புது வேலை காரணமாக எழும்) பதற்ற உணர்வுகளைத் தணிக்க உதவியை நாட வேண்டும்?. அரை மணி நேரம் நான் சொன்னதைக் கேட்ட ஆலோசகர் – “இப்போதைய அதிகாரிகளோ முந்தைய அதிகாரியோ – உங்களுள்ளிருக்கும் சின்னப்பையன் அவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறான் என்ற கேள்விக்கு பதில் காணாத வரை……” என்று சொல்லி நிறுத்தினார். அவர் என்ன சொல்லிவிடப்போகிறாரோ எனும் சிறு பதற்றத்தில் நான் அவரை நோக்கிக் கொண்டிருந்தேன். “வரப்போகும் சில வார அமர்வுகளில் இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்” என்று சொல்லி சிறு காகிதத்தில் ஆலோசனைக் கட்டணத்தை எழுதி என் கையில் திணித்தார்.
குறிப்பை அடக்கி வைத்திருந்த மின் கோப்பினை மின் மறுசுழற்சித் தொட்டிக்குள் தள்ளினேன். இந்தக் குறிப்பு இனிமேல் தேவைப்படாது. புதிதாக இன்னொரு குறிப்பெழுதும் வேளை வந்துவிட்டது.
சொல்வனம் இணைய இதழில் வந்த உங்கள் ‘ஒரு முடிவிலாக் குறிப்பு’ (https://solvanam.com/2021/11/28/ஒரு-முடிவிலாக்-குறிப்பு/) படித்தேன். புனைவா வாழ்க்கைக் குறிப்பா தெரியவில்லை, ஆனால் அதன் வலிமை என்னையும் கொஞ்சம் வாழ்க்கையை பற்றிச் சிந்திக்கத் தூண்டியது. இதோ அளிக்கிறேன், ஒரு தத்துவக் குறிப்பு.
நட்பாஸ்
நம் சிக்கல்களுக்கு நம்மைத் தவிர வேறு யாரும் தீர்வு காண முடியாது. நம் பிரச்சினைகள்தான் நாம், இவற்றால்தான் நாம் நாமாய் இருக்கிறோம். எந்த ஒரு விஷயத்திலும் தனி நபராய் என் பிரச்சினை வேறு யாருக்கும் அதே மாதிரி இருக்க வாய்ப்பில்லை. சிலந்தி, வலை பின்னுவது போல் உணர்ச்சிகளாலும் எண்ணங்களாலும் செயல்களாலும் நம்மைச் சுற்றி நாமே கண்ணுக்குத் தெரியாத இழைகளால் ஒரு வலை பின்னிக் கொள்கிறோம். துரதிருஷ்டவசமாக, நாமே அதில் சிக்கிக் கொள்ளவும் செய்கிறோம். (நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் சிலந்தி வலை அதன் மனதின் பருண்ம வடிவம் என்று சொல்லும் இந்தக் கட்டுரையை பாருங்கள் – The Thoughts of a Spiderweb, Quanta Magazine https://www.quantamagazine.org/the-thoughts-of-a-spiderweb-20170523/)
நாம் பின்னிய வலைகளில் சிடுக்கு ஏற்படுகிறது என்றால், அதற்கு காரணம் நாம்தான், அது நம்மில் ஒரு அங்கமும்கூட. வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு அதன் வேர்கள் நம் இதயத்தோடு பிணைந்து நம்மில் ஒன்றியிருப்பது தெரிய வாய்ப்பில்லை. அவர் எவ்வளவு நியாயமாக பேசினாலும், அவரது தர்க்கம் எத்தனை வலுவானதாக இருந்தாலும், நம்மை அது காப்பாற்றக் கூடியதல்ல. நம் மனதுக்கு நியாயம் என்று தோன்றுவது, நம்மைச் சரியான திசையில் கொண்டு செல்லும் என்பது உறுதியல்ல. அறிவுரைகள் சரியாகவே இருந்தாலும் அது தீர்வு காண உதவாது. வேறொருவர் அப்படிச் செய்ய முடியும், ஆனால் என்னைப் போன்ற ஒருவனுக்கு இதில் என்ன தவறு, நம்மால் முடிகிற வேலைதானே என்று இருக்கும், இருந்தாலும் ஒன்றும் பண்ண முடியாது. காரணம், அவர் வேறு மாதிரி, நான் வேறு மாதிரி.
எனவே யாராக இருந்தாலும் இந்த புரிதலுடனும் தன்னடக்கத்துடனும்தான் நாம் தீர்வு சொல்ல வேண்டும்.
உலகில் வெற்றி பெற்றவர்களைப் பார்க்கிறோம் – விஞ்ஞானிகள், பெரும்பணக்காரர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், அரசியல்வாதிகள். உலகில் தலை சிறந்த அறிவு, மிக அதிக பணம், ஆகச் சிறந்த புகழ், அதிகாரம், எதுவும் போதுமானதாக இல்லை. இவர்கள் வாழ்க்கையைப் பார்த்தால் மிக மோசமான மன வேதனை, காயங்கள், செயல்கள் இருக்கும். குடும்பத்தை கவனித்துக் கொள்ள மாட்டார்கள், மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள், மணமுறிவு, போதைப் பழக்கம், தற்கொலை. வெற்றியோ, அதன் பயன்களோ, உபகரணங்களோ மனதுக்கு மகிழ்ச்சியோ ஆறுதலோ தருவதற்கு தம்மளவில் போதுமானதாக இருப்பதில்லை.
அதே சமயம் தெருவில் நடைபாதை பிச்சைக்காரன் பின்னால் கூட ஒரு நாய் போகிறது, அவனும் அதற்கு ஏதோ ஒன்றை சாப்பிடப் போடுகிறான். மனதுக்கு நல்லது எது என்று பார்த்தால், தன்னலமின்மை என்றுதான் தோன்றுகிறது. நான் எனது என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதற்கு மாறாக, நம்மைச் சுற்றி இருப்பவர்கள் வாழ்வை ஏதோ ஒரு வகையில் இன்னும் நன்றாக வாழத்தக்க ஒன்றாய் மாற்ற முயற்சி செய்பவர்கள். அவர்களுக்கும் மன அழுத்தம் வரலாம், அச்சம், அவநம்பிக்கை ஏற்படலாம். ஆனால் அவர்கள் குடும்பத்தை தவிக்க விடுவதில்லை, போதைக்கு அடிமையாவது இல்லை, தற்கொலை செய்து கொள்வதில்லை.
அகத்தின் மீது ஒரு போர்வை போல் இருப்பது சுயம். ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு வகையில் இறுக்கமாய் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சிலரே அதை மூச்சு முட்டும் அளவு இழுத்துப் போர்த்துக் கொள்கிறார்கள், கஷ்டப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் அதை விட அபூர்வமானது நிர்வாணம். இந்த அபூர்வ மனிதர்கள் எல்லாம் பிறருக்கு என்று இருக்கிறார்கள், ஒருவன் பிறருக்கு தருவதை எல்லாம் தனக்கே தந்து கொள்கிறான் என்று புதிர் போடுகிறார்கள்.
பிறருக்காக வாழ்பவர்கள் வாழ்வில் எத்தனை நெருக்கடி இருந்தாலும், எத்தனை அவலம் இருந்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அவர்கள் எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டு அதை அளவிட முடியாது. எவ்வளவு கொடுக்கிறார்கள், என்னவாக இருக்கிறார்கள் என்பதுதான் அவர்கள் வாழ்வின் அர்த்தம். ஒரு பணக்காரனைப் பற்றி, “He is worth Billions,” என்கிறோம். ஆனால் ஒரு அம்மா அல்லது அப்பாவைப் பற்றி, அவர்தான் குடும்பத்துக்கு எல்லாம் என்கிறோம். யார் மதிக்கிறார்களோ இல்லையோ, இவர்கள் வண்டி இழுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் என்ன செய்தோம் என்பது அல்ல, நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் இறுதி அளவை. செய்து முடிந்தவுடன் ஒன்றுமில்லை என்று கையைத் தட்டி விட்டுக் கொண்டே போக வேண்டியதுதான்.
செய்ததை வைத்துக் கொண்டிருப்பது, செய்ய வேண்டியதைப் பற்றிய கவலைகளை வளர்த்துக் கொண்டிருப்பது, வாழ்க்கையைச் சிக்கலாக்குகிறது. நம்மையே சிக்கலான ஆட்கள் ஆக்குகிறது. இதற்கு மாறாக, இப்போது என்ன இருக்கிறதோ, அதிலிருந்து பிறருக்கு கொடுப்பது, நம்மை விடுவிக்கிறது. என்ன செய்வது பிடித்திருக்கிறதோ, எது சுலபமாக இருக்கிறதோ, அதை நன்றாகச் செய்வது என்று இருக்கும்போது எல்லாம் சரியாய்த் தொடர்கின்றன. எனக்கு கணிதம் பிடித்திருக்கிறது, கவிதை பிடிக்கிறது என்றால் நான் கணித மேதையாகவோ நோபல் கவிஞனாகவோ ஆகாதபோதும், அதனால் ஒரு பைசா பிரயோசனப்படாதபோதும், என் ரசனை, என் நேசம், நான் கற்றுக் கொண்டது என் வாழ்வை ஏதோ ஒரு வகையில் வளமைப்படுத்துகிறது.
இதை எல்லாம் இன்னொருத்தார் எனக்கு வேறு சொற்களில் சொல்லலாம், ஆனால் உண்மையை நான் என் கண்களால் காண வேண்டும், என் இதயம் கொண்டு நான் உணர வேண்டும். அதுதான் உள்ளே இறங்கும், எனக்கு உதவும். பிறர் சொல்வதல்ல, நானே கற்றுக் கொள்வது.
நாமே இவ்வுலகம். நமதே இவ்வுலகம். நாம் இவ்வுலகின் நாயகர்கள். நம்மைப் பற்றி மட்டுமே நினைத்து இதை நாசமாக்கிக் கொள்ளலாம், நம்மைக் குறைத்துக் கொண்டு பிறருக்கு இடம் கொடுத்து, இதை நல்லதாக்கிக் கொள்ளலாம். பெரிய பெரிய விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதில்லை. குறுகிய மானப்பான்மையிலும் உணர்வின்மையிலும் நம்மையொத்த இந்த தன்னலம் கொண்டு உழலும் அவல மனிதர்களுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய நன்மையும் மாற்றம் அளிக்கும்.
இந்த அர்த்தத்தில்தான் பிறருக்கு கொடுப்பதெல்லாம் நமக்கே கொடுத்துக் கொண்டதாகிறது. நம் வாழ்வு இவ்வாறுதான் செழுமையடைகிறது. பணத்தால் அல்ல, புகழால் அல்ல, அறிவால் அல்ல, சக மனித உறவுகளில்தான் வாழ்வின் மதிப்பு கூடுகிறது. இதயத்தில் என்ன இருக்கிறது, அதிலிருந்து என்ன வருகிறது என்பதுதான் கேள்வி. ஏனெனில், இதயம்தான் காயப்படுகிறது, தனிமையை உணர்கிறது, வலியால் துடிக்கிறது. பிறரை இணைத்துக் கொள்வதில், இன்னும் விரிவதில், ஆழப்படுவதில் அது குணமடைகிறது.
முன்னர் அனிமேக்கள் என்றாலே ஓர் ஒவ்வாமை எனக்கிருந்தது. என் புதல்விகள் இருவரும் இருபத்தி நான்கு மணி நேரமும் ரத்தமாய்ச் சொட்டும் அனிமேக்களை அலுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இத்தனை கொடூரமான அனிமேக்களைப் பார்ப்பதனால்தான் ஜப்பானில் அதிகம் பேர் தற்கோலை செய்து கொள்கிறார்கள் என்ற என் உலர் நகைச்சுவை அனுமானத்தை அவர்கள் முன் வைத்த போது சின்னவள் சொன்னாள் – அருமையான ஐடியா அப்பா! கிப்லி ஸ்டூடியோக்காரர்கள் இதே கருப்பொருளில் கூட ஓர் அனிமே தயாரித்துவிடுவார்கள்-என்றாள். இதெல்லாம் நான் “பர்ஃபெக்ட் ப்ளூ” அனிமே திரைப்படத்தைப் பார்க்கும் வரைதான்.
புதல்விகளுடன் அதிக நேரம் செலவழிப்பதில்லை என்று என்னிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் மனைவி. அவரின் வாதங்களுக்கு எதிர் வாதங்களை அடுக்க முடியாமல் நான் திணறிக் கொண்டிருந்த போது உதவிக்கு வந்தாள் மூத்தவள். தன் மடிக்கணினியைத் தொலைக்காட்சியோடு இணைத்து ஒன்றன்பின் ஒன்றாக டிஜிடல் விளம்பர பேனர்கள் குதித்துக் கொண்டிருக்கும் ஓர் இணைய தளத்திற்கு ஏகி “பர்ஃபெக்ட் ப்ளூ” படத்தை ஓட்டினாள். நான் மட்டுமல்ல மனைவியும் சண்டையிடும் ஆர்வத்தை இழந்து அமைதியானார். சின்னவளும் எங்களுடன் சேர்ந்து கொண்டாள். இப்படத்தை அவள் பல முறை பாரத்திருக்கிறாள். ஆனாலும் அடுத்து என்ன நடக்கும் என்று ஒரு குறிப்பும் தராமல் முதல் தடவையாக படத்தைப் பார்க்கும் அதே ஆர்வத்துடன் பார்த்தாள்.
கற்பனாவாதம் – யதார்த்தம் இரண்டையும் சேர்த்துக் கட்டிய திரைக்கதையமைப்பு. இரண்டும் சரிவிகிதத்தில் கலந்து எது கற்பனாவாதம் எது யதார்த்தம் என்ற குழப்பத்தை எழுப்பியவாறே காட்சிகள் பயணப்படும். அனிமேக்களின் பலம் அவற்றில் பயன்படுத்தப்படும் நிறங்கள். அமெரிக்க சூப்பர் ஹீரோ கார்ட்டூன்களிடமிருந்து மிகவும் மாறுபட்ட அனுபவத்தை அனிமேக்கள் நமக்குத் தருவதில் வெற்றி பெறுவதன் காரணம் இருண்மைக் கருக்கள் மட்டுமல்ல ; அனிமேக்களின் வியக்கத்தக்க நிறக்கூட்டும் தான். பெரும்பாலான அனிமேக்களில் செயற்திறனுடன் பயன்படுத்தப்படும் மட்டுப்படுத்தப்பட்ட உயிரூட்டல் (limited animation) எனும் உத்தி அனிமேவை கார்ட்டூன்களிலிருந்து வித்தியாசப்படுத்தும் இன்னோர் அம்சம். இயக்கமும் நகர்வும் கார்ட்டூனுக்கு இன்றியமையாதவை. மட்டுப்படுத்தப்பட்ட உயிரூட்டல் உத்தி வாயிலாக கலைத் தரத்தை நிலை நிறுத்துபவை அனிமே.
அனிமேக்களையும் கார்ட்டூனையும் ஒப்பிடுவதே பிழையானது என்றாள் பெரியவள். “கார்ட்டூன்கள் பொதுவாக ஓவியங்களின் முன்மாதிரிகளாகவோ ஆய்வுகளுக்கெனவோ பயன்படுத்தப்பட்டன. இப்போதெல்லாம் நகைச்சுவை மற்றும் நையாண்டிக்கான கேலிச்சித்திரங்களாகவே கார்ட்டூன்கள் வரையப்படுகின்றன. அனிமேக்கள் பெரும்பாலும் வாழ்க்கைச் சிக்கல்கள் அல்லது மனித உணர்வுகளுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள விஷயங்களில் கவனம் செலுத்துக்கின்றன. வன்முறை சார்ந்த பாலியல் சார்ந்த கருப்பொருள்களை அனிமேக்கள் தைரியமாகச் சித்திரிக்கின்றன. கார்ட்டூன்களின் முக்கியக் குறிக்கோள் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதே” – பரவாயில்லையே, நிறைய யோசித்து வைத்திருக்கிறார்களே புதல்விகள் என்று அப்புறம் பெருமிதப்பட்டுக் கொள்ளலாமென்று படத்தில் கவனம் செலுத்தலானேன்.
பாப் பாடகியாய் பிரபலமடைந்த மீமா நடிகையாக முடிவு செய்கிறாள். நடிப்பு அவ்வளவு எளிதாக இல்லை. திரும்பத் திரும்ப டேக் வாங்கும் போது அவள் சலிப்படைகிறாள். பாப் பாடகியாக இருந்த நாட்களை அசை போடுவது நிற்கவேயில்லை. முன்னாள் பாடகி தன் முடிவில் அவ்வப்போது சந்தேகம் கொண்டாலும் முன் வைத்த காலை பின் வைக்கவில்லை. நடிக்கும் டீ வி தொடரில் குழு வன்புணர்வுக் காட்சியில் நடிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறாள். வனபுணர்வுக் காட்சியில் நடிப்பது அவளின் இமேஜுக்கு குழி பறிக்கும் என்ற அவளுடைய மேனேஜர் ரூமியின் அறிவுறுத்தலை உதாசீனப்படுத்திவிட்டு துணிச்சலாக நடிக்கத் தயாராகிறாள். யதார்த்தத்தில் மீமா எடுக்கும் முடிவுகள் அவளின் அகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தன்னுடைய பாப் பாடகி பிம்பம் அவளைத் தொடர்ந்து அலைக்கழிப்பதாக உணர்கிறாள். அவளுடைய வெறி பிடித்த ரசிகன் ஒருவன் பின் தொடர்ந்தவாறிருக்கிறான். மொட்டைக் கடிதம், மிரட்டல்கள், தபால் வெடிகுண்டு என்று அவனின் stalking மிகத் தீவிரமடைகின்றது. மேனேஜர் ரூமிக்கு மீமாவின் முடிவுகள் ஏமாற்றத்தை அளிக்கின்றன. உடையில்லாமல் கவர்ச்சி போட்டோக்கள் எடுத்துக் கொள்கிறாள் மீமா. முக்கியப் பத்திரிக்கைகளின் நடுப்பக்கங்களில் மீமாவின் புகைப்படங்கள் வெளியாகி மிக்க வரவேற்பு பெறுகின்றன. வெறிபிடித்த ரசிகனுக்கு மன உளைச்சல் அதிகமாகிறது. ரூமி வேலையை விட்டு நின்று கொள்கிறாள். கற்பனை – யதார்த்தம் இரண்டுக்குமான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது மீமாவுக்கு. அவளுடைய ஏஜன்ட், கவர்ச்சிப் படங்கள் எடுத்த போட்டோகிராஃபர் என ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகிறார்கள். தூங்கி விழித்தவுடன் என்ன கனவு கண்டோம் என்ற தெளிவிலாமல் யதார்த்தத்தினுள் விழித்திருக்கிறோமா அல்லது கனவிலேயே விழித்திருக்கிறோமா எனும் மயக்கத்தில் புழங்குகிறாள் மீமா. முகம் பார்க்கும் கண்ணாடி வழியே, அறையில் விளக்கொளிரும் இரவு நேரத்தில் ஜன்னல் கண்ணாடியினூடே அவளின் பாப் பாடகி ஆளுமை சதா பரிகசித்தவாறு இருக்கிறது. அவள் நடிக்கும் தொலைக்காட்சித் தொடரின் சம்பவங்களும் யதார்த்தத்தின் சம்பவங்களோடு இணைந்து கொள்கின்றன.
கிரகித்துக் கொள்ளவும் உற்றுக் கவனிக்கவும் இப்படத்தில் நிறைய உள்ளன. பித்துப் பிடிக்க வைக்கும் எடிட்டிங் மற்றும் சற்றும் எதிர்பாராத திருப்பங்கள் வாயிலாக மிக அனுபவம் வாய்ந்த திரில்லர் பட பார்வையாளர்களையும் பர்ஃபெக்ட் ப்ளூ திக்குமுக்காட வைக்கும்.
அன்றைய நாளில் நடந்த வருத்தமான நிகழ்வுகளை மனக்கவலையுடன் எண்ணியவாறே கதையின் மூலப்பாத்திரம் படுக்கையில் குப்புறப்படுத்திருக்கிறது. அங்குமிங்குமாக பொருட்கள் (அழகாக) சீர் குலைந்து கிடக்கின்றன. அறையின் ஓரத்தில் உள்ள மீன் தொட்டிக்குள் நீந்தும் மீன்களும் நகராமல் அடிவாரத்தில் இருந்த படி கண்ணாடியூடாக மூல பாத்திரத்தை நோக்கிக் கொண்டிருக்கின்றன. அறையின் கூரையின் வழியாக காமிரா படுக்கையை நோக்கினால் எப்படித் தெரியுமோ அதே போல ஒரு பறவைப் பார்வையாக அறை முழுதும் நமக்குக் காட்சிப்படுத்தப் படுகிறது. தன்னை யாரோ stalk செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கவலையில் இருக்கும் மூல பாத்திரத்தை கிராபிக் சித்திரிப்பு வாயிலாக பார்வையாளர்களையே stalk செய்ய வைக்கிறது திரைப்படம். இந்த ஓவியத்தை எங்கோ பார்த்திருக்கிறோம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது – இது தான் என் வாட்ஸப் டிபி – என்றாள் சின்னவள்.
படத்தின் நடுவே சின்னவள் சொன்ன ஒரு குறிப்பு என்னைத் தொந்தரவு செய்தது. சற்று ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. கடந்த பத்தாண்டுகளில் வெளியான படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படமொன்று இந்த பர்பெக்ட் ப்ளூவின் தழுவல் என்றாள். அவள் குறிப்பிட்டது டேரன் அரனோஃப்ஸ்கியின் பிளாக் ஸ்வான் படத்தை. பிளாக் ஸ்வான் பற்றி அந்தக் காலத்தில் கட்டுரை கூட எழுதியுள்ளேன். (ப்ளாக் ஸ்வான்))
ஒரு பெண் கலைஞர் அவரின் தொழில் வாழ்க்கையின் அதிகரிக்கும் அழுத்தங்களின் விளைவால் யதார்த்தத்தின் பிடியை இழந்து பித்து நிலைக்குள் வீழ்கிறாள். இது 2010இல் வெளியான பிளாக் ஸ்வானின் கதைச் சுருக்கம் மட்டுமில்லை. பிளாக் ஸ்வான் வெளியாவதற்கு பதிமூன்று வருடங்கள் முன்னதாக ஜப்பானில் வெளிவந்த பர்ஃபெக்ட் ப்ளுவின் கதைச் சுருக்கமும் இதுவே தான்.
அனிமே படங்களின் விசிறியாக இல்லாதவர்கள் பர்ஃபெக்ட் ப்ளூ படம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பது கூட அரிது. ஆனால் சடோஷி கோன் எனும் இயக்குனரின் மாஸ்டர் பீஸ் இது என்று புகழப்படுகிறது, சைகலாஜிகல் த்ரில்லர் வகைமைப் படங்களின் ரசிகர்களுக்கு பர்ஃபெக்ட் ப்ளூ முக்கியமான படமாகக் கொண்டாடப்படுகிறது. ப்ளாக் ஸ்வானும் ஒரு மைல்கல் படமாகக் கருதப்படுகிறது. நடிகை நடலி போர்ட்மேனுக்கு அகாடமி விருதைப் பெற்றுத் தந்ததோடு விமர்சகர்களின் பாராட்டு, வணிக ரீதியான வெற்றி – இரண்டையும் ஒருங்கே பெற்ற படம்.
கரு, முக்கியப் பாத்திரப் படைப்பு மற்றும் விஷுவல்கள் – இவ்விஷயங்களில் இரண்டு கதைகளுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமை. பிளாக் ஸ்வான் இயக்குனர் டேரன் இரு படங்களுக்கிடையிலான ஒற்றுமைகளை ஏற்கிறார். ஆனால் பர்பெக்ட் ப்ளூவின் தாக்கம் பிளாக் ஸ்வான் என்பதை மறுக்கிறார்.
பிளாக் ஸ்வான் நினா என்னும் பால்லரீனாவின் கதையைச் சொல்கிறது. ஸ்வான் லேக் என்னும் நாட்டிய நாடகத்தின் மூல பாத்திரத்தைப் பெறும் போட்டியில் பங்கேற்கும்போது தன் இயல்பு நிலையைத் தக்க வைக்கப் போராடுகிறாள் நினா. பர்பெக்ட் ப்ளூவின் மீமா பாப் பிரபலம் என்னும் தன் நிலையைத் துறந்து தீவிர நடிகையாகும் முயற்சியில் யதார்த்தத்தின் பிடியை இழக்கிறாள். மேலோட்டமாக இரு வெவ்வேறு பாத்திரங்களின் வேறுபட்ட கதையைச் சொன்னாலும் இரண்டு படங்களின் கருவும் சொல்ல வரும் கருத்தும் மிகவும் ஒத்திருக்கின்றன.
இரண்டு கதைகளும் ஒரே மாதிரியான கதைக்களத்தைக் கொண்டுள்ளன. இரண்டு கதாபாத்திரங்களும் மிகவும் அழுத்தமான சூழல்களைச் சந்திக்கின்றன. இது அவர்களின் அடையாளம் குறித்த கேள்விகளை அவர்களுள் எழுப்புவதோடு இறுதியில் அவர்களின் ஆன்மாவை குழப்பும் ஓர் doppelganger-ஐ உருவாக்குகிறது. நினா ஒரு நடன கலைஞராக இருப்பதன் அழுத்தத்தால் பாதிக்கப்படுவது போல, மீமாவும் ஜப்பானிய பிரபலம் எனும் தகுதியின் கடுமையான எதிர்பார்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இரு பாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்னைகள் தொழில் வாழ்க்கையிலும் கசிவது இரண்டு படங்களில் காணப்படும் இன்னொரு ஒற்றுமை. நினாவைப் பொறுத்தவரை இது அவளின் தாயின் ரூபத்தில் வருகிறது. மீமாவின் சூழ்நிலையில் ஒரு ஸ்டாக்கர் ரசிகர் வாயிலாக வருகிறது. தமக்கு நெருக்கமானவர்களால் கட்டமைக்கப்பட்ட innocent என்னும் பிம்பத்தை உடைத்தெறிந்து இரு பாத்திரங்களுமே படங்களின் குறிப்பிட்ட கட்டத்தில் பாலியல் விழிப்புணர்வை எய்துகின்றன. இரண்டு நாயகிகளும் தமக்குத் தாமே ஓர் உளவியல் போரில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக கற்பனைக்கும் யதார்த்தத்துக்குமிடையிலான கோடுகளை மங்கவைக்கும் மாயத்தோற்றம் ஏற்படுகிறது.
படத்தைப் பார்த்து முடித்தவுடன் சற்று நேரத்துக்கு அலசல் தொடர்ந்தது. பெரியவள் முன் வைத்த முன்னோக்கு படத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியாக இருந்தது. – “நான் இதை coming of age வகைமை படமாகப் பார்க்கிறேன். இளம் பாப் பாடகியின் தொழில் வாழ்க்கை எத்தனை நாள் நீடிக்கும்? நடிப்புத் தொழில் மீமாவின் நடைமுறைத் தேர்வு. மேலதிக புகழும் அங்கிகாரமும் பெறுவதற்கான வழி. ஆனால் இந்த மாற்றம் எளிதானதல்ல. பழைய அனுபவங்களின் சாதனையுணர்வை புதுத் தொழில் உடனடியாக கொடுத்துவிடாது. பழைய தொழில் வாழ்க்கை பற்றிய இழப்புணர்வில் ஆழ்ந்திருப்பது புது யதார்த்தத்தை ஏற்பதாகாது. அந்த இழப்புணர்விலிருந்து மீளாமல் புதுத் தொழிலின் சாத்தியங்களை அறுவடை செய்ய இயலாது. பிளாக் ஸ்வானிலிருந்து இவ்விதத்தில் இப்படம் மாறுபடுகிறது என்பது என் எண்ணம்.”
பத்தாண்டுகளுக்கு மேலாக பணி புரிந்த நிறுவனத்திலிருந்து விலகி வேறொரு நிறுவனத்தில் உயர் பதவியேற்றுள்ள நான் இந்த மாற்றத்தை எப்படி எதிர்கொள்கிறேன்? பரிச்சயமான சூழலில் நன்கு பழக்கமான சக-அலுவலர்களுடன் வேலை செய்வது ஏறத்தாழ இரண்டாம் இயல்பாக மாறி விடுகிறது. செய்து முடித்த வெற்றிகரமான பணிகள், அடைந்த இலக்குகள், கிடைத்த அங்கிகாரம் – இவையெல்லாம் நினைவில் அடிக்கடி வருகின்றன. பழகிய நண்பர்கள் தொடர்பு கொள்ளும் போது நினைவேக்கத்துடன் பழைய அனுபவங்களைப் பேசுதல் ஒரு விதத்தில் அபத்தமாகவும் உள்ளது. நானே விரும்பி எடுத்துக்கொண்ட வாய்ப்புதானே இது? புதிது புதிதாகத் தானே தெரியும்? ஆனாலும் புது அலுவலகத்தின் எந்த விஷயத்தையும் பழைய அனுபவங்களோடு ஒப்பிடுதல் சதா மனதில் நிகழ்ந்தவாறுள்ளது. புது சகாக்களை பழைய சகாக்களுடன் புது வேலையமைப்புகளை பழையவற்றுடன்….ஒப்பீடுகள் ஓய்வதில்லை. நாம் புது நிறுவனத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவோமா…நம் வேலைக்கு அங்கிகாரம் கிட்டுமா…நம் அதிகாரிகள் நம்மை அமைதியாய் வேலை செய்ய விடுவார்களா….புதிய அதிகாரி புது சகாக்களும் நம்மைப் பற்றி மட்டமாக எடை போடுகிறார்களோ….நான் எப்போது தப்பு செய்வேன் என்று ஆர்வமாய் காத்திருக்கிறார்களோ…தோல்விப்பயம் நம்மை பிடித்தாட்டுகிறதே….பாதுகாப்பின்மை நம் குரல் வளையைக் கவ்வுகிறதே…கோபமும் உதவியற்ற உணர்வும் ஒருசேர கோர தாண்டவம் ஆடுகின்றனவே….முகத்தில் கடிதத்தை வீசியெறிந்துவிட்டு நகர்ந்துவிடலாமா….தோன்றும் எல்லா எண்ணங்களையும் செயற்படுத்தாமல் இருப்பது எத்தனை பெரிய வரப்பிரசாதம்! நினா யதார்த்தத்திலிருந்து தூர தூர விலகி்…தமக்குள்ளேயே போரில் ஈடுபட்டு…பிடியிழந்து…திரும்பவியலா பாதையில் செல்வது போல நாம் எண்ணுகின்றவற்றுக்கும் நமக்கமையும் யதார்த்தத்துக்கும் இடையிலான வெளி அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளுவது மாற்றத்தை நாம் ஏற்றுக் கொள்வதற்கான முதல் புள்ளி. வேலை மாற்றம் மட்டுமில்லை…வாழ்வின் எந்த மாற்றமும் எளிதானதல்ல…மீமாவைத் தள்ளாடச் செய்த புது மாற்றம், புதுத் தெரிவு – நடிப்புத் தொழில் என்றில்லை, எந்த வித மாற்றமாயிருந்தாலும் – நம்மையும் தள்ளாட வைக்கும்….
“அப்பா…அப்பா….” – சத்தம் போட்டு அழைத்து மனைவி கொடுத்தனுப்பிய தேநீரை என் கையில் கொடுத்தாள் சின்னவள்.
“டேரன் அரனோஃப்ஸ்கி சுட்டதுக்கே இப்படி அதிர்ச்சி ஆனா எப்படி? நோலனும் சடோஷி கோன் கிட்டர்ந்து சுட்டுருக்கார்…உனக்கு புடிச்ச இன்செப்ஷன் படத்துக்கு ‘இன்ஸ்பிரேஷன்’ எதுன்னு நெனைக்கிற? சடோஷி கோன் இயக்கிய அனிமே படம் Paprika தான்….அடுத்த அதிர்ச்சிக்கு தயாரா?” – என்று கேட்டாள்.