Blog

  • ஆண்டிறுதி சிந்தனை

    ஆண்டிறுதிப் பிரதிபலிப்புகள் வாய்மொழியில் சிக்காமல் தப்பித்துக் கொண்டு இருக்கின்றன. உணர்வுகளின் கூட்டமாக அவை எனக்குள் சுழன்று கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு பெயரிட விழைந்தால், "கசப்பு" என்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். "அவமானம்" அல்லது "அவமரியாதை" என்பது போன்ற வர்ணனைகளுக்குப் பொருந்தி வரும் இவ்வருடத்து சம்பவங்களை அனுபவங்களை என் மனதில் தொடர்ந்து அசைபோட்டு ‘ரீப்ளே’ செய்யும் குணம் சோம்பேறித்தனமான மனநிலையை உருவாக்கி, மலரப்போகும் புதிய ஆண்டு பற்றிய உற்சாகத்தை நீக்குகிறது. அசை போடும் அனுபவங்கள் இப்போது கடந்த காலத்தில் உள்ளன. என் இப்போதைய யதார்த்தத்தின் பகுதியாக இல்லை. குளிர்ந்த காற்று, பாதி மடிக்கப்பட்ட பயணக்கட்டுரை புத்தகம், சமையலறையிலிருந்து வரும் சத்தம் – இதுதான் எனது தற்போதைய தருணம். "கசப்பு" என்றோ “அவமதிப்பு" என்றோ இத்தருணத்தை வர்ணிக்கத் தகுமா? இல்லை. அவை வெறுமனே இப்போது என் முன்னே நிகழ்பவை, நான் அவற்றுள் ஒரு பார்வையாளனாக இருக்கிறேன். கடந்த காலத்திற்கு நகர்ந்து விட்ட நிகழ்வுகளை மீண்டும் மனதுக்குள் இயக்கிப் பார்க்காமல் இருப்பதும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எதையும் எதிர்நோக்காமல் இருப்பதும் தாம் சதா நம்மை பார்வையாளனாக வைத்துக் கொள்வதற்கான வழி. #YearEndReflections

  • வொஹு மனோ-வின் தூய்மை

    இனத்தின் தூய்மைக்கு
    மாறாக
    மனத்தின் தூய்மையையே
    நான் விரும்புகிறேன்

    அஹுரா மஸ்டாவின்
    அருளை இழப்பதைவிட
    மனிதர்களின் கோபத்தை
    எதிர்கொள்வது மேல்
    உலகம் முழுவதும்
    நாம் கண்டுபிடித்துவரும்
    பண்டைய நாகரிகங்கள்
    மனத்தின் தூய்மைக்கு
    நேரடி சாட்சி

    மனம் ஒரு வலைப்பின்னல்
    திரும்பத்திரும்ப
    ஒவ்வொரு வினாடியும்
    குறுக்கும் நெடுக்குமாக எண்ணங்கள்
    நல்ல எண்ணங்களை
    உலவ விடுங்கள்
    கெட்ட எண்ணங்களின்
    சுழற்சி இல்லாது போகட்டும்

    வெறுக்கத்தக்க எண்ணங்களில்
    எதிர்மறை உணர்ச்சிகளில்
    மனத் தூய்மை வீணாகியிருந்தால்
    ஒருபோதும்
    பண்டைய நாகரிகங்கள்
    கண்டுபிடிக்கப்பட்டிரா!


    Copyright ©2008 Farida Bamji

    Translation in Tamil : by the blogger

  • Modern Votary of Lotus Sutra

    I had dabbled in lay buddhist practice for a couple of years when I was introduced to Soka Gakkai International, way back in 1997. Like my other pursuits in my life, this practice too fizzled out. Certain friends kept persuading me for a few months. They asked what my reservations were. The obviously honest reasons could have been – my, then, distractions and my consistent laziness. But I did not cite these, as I was an expert impostor – instead I attributed it to the personality cult that was prevalent among its members as the reason. Partially It was an honest answer too. In the SGI monthly meetings wherein the members are asked to share their experience of the practice – a demonstration of the success after chanting the venerable title of the Lotus Sutra – Namu Myoho Range Kyo – I had kept noticing the glorification of the personality of SGI’s Leader Daisaku Ikeda. If it’s a spiritual practice, why should the personality of the group’s leader be invoked? In its ritual prayer, there is a line whereby the members are invoked to pray for the leader. In one of the conversations during a monthly discussions in Mumbai, when I raised these questions, one of the seniors – I don’t remember his name now, he used to be executive director of India’s premier financial institution with high pedigree – took me aside to give a lecture on how negative karma forces one to raise such “pseudo-questions”. The conversation didn’t progress long.

    Subsequently, over the years, due to my keen interest on Japan’s Cultural History, I pursued my reading about various politico-buddhist sects which sprung up post the lull in Buddhist Culture in 13th century Japan. The zen practices which perpetuated the military culture (until Japan got defeated the world war) also maintained the class – caste differences to persist (until Japan embraced the modernity). The personality cult is not new in Japan’s history. The sects and cults continued to thrive in Japanese Culture. This understanding threw light on my experiences when I was practising under the umbrella of SGI. Looking back, I now realise that I was becoming part of a cult, which I came to detest subsequently. Being part of a cult, to me, is akin to imprisonment.

    Another aspect which I disliked about SGI – is its political ambitions. Although the organisation never publicly accepts this – in 1975, the President Ikeda founded the precursor to what later came to be known as Komeito Party – the political arm of SGI, in whose support the current coalition which is in Government survives. Does it remind us of a certain “cultural” organisation at home, which spawned a certain political party?

    As far as the theology that SGI espouses, it draws inspiration from the 13th Century teachings of Nichiren Daishonin, but in an evangelical way. Nichiren’s Buddhism taught its followers that the chanting of the Lotus Sutra helps overcome the Negative Karma. This ideal is re-cycled in a material way, suiting to the needs of modern Japanese and global lay believers – “the essence of Buddhism is the conviction that we have within us at each moment the ability to overcome any problem or difficulty that we may encounter I life”

    Ikeda was a prolific writer. The SGI Magazine used to contain his long essays and the serial of his long autobiography titled “Human Revolution”. Have enjoyed reading those essays.

    Daisaku Ikeda who led Japan’s largest religious organisation died today.

    https://www.japantimes.co.jp/news/2023/11/18/japan/society/daisaku-ikeda-soka-gakkai-founder-dies/

  • திரைக்கதை உருவான கதை

    திரு. கார்த்திக் சுப்புராஜ் கண்ணை கசக்கிக் கொண்டிருந்தார். அடுத்த படத்துக்கான கதைக்கருவை யோசித்து யோசித்து எதுவும் தோன்றாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் ஓர் இயக்குனர் என்பதை அவரால் மறக்க முடியவில்லை. ஏதாவது படம் எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் அவரை துரத்திக் கொண்டிருந்தது. பாகுபலி போன்ற படங்களின் வெற்றியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவருக்கு எங்கிருந்து ஆரம்பிப்பது என்று பொறி தட்டியது. தானியக்கிய ஒரு நல்ல படத்தின் ப்ரான்சைஸ் அல்லது சீக்வல்தான் எடுக்கப்போகும் அடுத்த படம் என்று முடிவெடுத்தார். பார்வையாளர்களை ஈர்ப்பதற்கான அவரின் செயல்முறையில் நல்ல தெளிவு இருந்தது. ஜிகர்தண்டா என்ற பெயர் படத்தின் தலைப்பில் இருந்துவிட்டால் போதும்! ஜிகர்தண்டா பாகம் ஒன்றின் ரசிகர்கள் நிச்சயம் தியேட்டர்களுக்கு வந்து விடுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு இருந்தது.

    நெட்ப்ளிக்ஸைத் திறந்து ப்ரௌஸ் செய்யலானார். ஓர் ஆவணத்தொடர், ஓர் ஆவணப்படம், வெற்றி பெற்ற பான் இந்தியா தெலுங்கு படம் – மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாகப் பார்த்தார். சரி விகிதத்தில் கலக்கலாம் என்று வேலையை ஆரம்பித்தபோது பழங்குடிகள் படும் அவலத்தை சித்திரித்து வெற்றி பெற்ற தமிழ்ப்படம் ஞாபகம் வந்து அதையும் சேர்த்துக் கொண்டார். போன வருடம் பெரும் வெற்றி பெற்ற கன்னடப்படம் ஒன்றையும் ஊறுகாய் போலத் தொட்டுக் கொண்டார். கலவையின் பண்டங்கள் குறித்து முடிவானதும் அதிக நேரம் பிடிக்கவில்லை. முதல் காட்சியில் வழக்கமான “காட்ஃபாதர்” குறிப்பையும் சேர்த்துக் கொண்டார். அதில்லாமல் தமிழ்ப்படம் எடுக்க முடியுமா என்ன? கிளின்ட் ஈஸ்ட்வுட் பாணி தொப்பி ராகவா லாரன்ஸுக்கு நன்றாக இருக்கும். ஆனால் மதுரை கேங்க்ஸ்டர் தொப்பி அணிவானா என்ன? கிளின்ட் ஈஸ்ட்வுட்டை படத்துக்குள் கொண்டுவந்துவிட்டால் தொப்பி அணியலாம். ஈஸ்ட்வுட் படத்தை செர்ஜியோ லியோன் தான் இயக்க வேண்டும் என்று சட்டமேதும் இல்லையாதலால் சத்யஜித் ரே-யின் உதவியாளர் ஒருவர் இயக்குவதாக வைத்துக் கொண்டார் கார்த்திக். இரண்டாம் பாதியை எழுதும் போது வினியோகம் செய்யப்போகும் நிறுவனத்தை திருப்திப் படுத்த வேண்டும் என்று நினைத்தார். பெயரிடப்படாத பெண் முதல்வர் பாத்திரம் மந்திரிகளை செருப்பால் அடிப்பது போல் காட்சி வைத்தால் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வினியோக நிறுவனத்துக்கு ஊக்கம் பிறக்கும். சென்டிமென்ட், சமூகக் கருத்து – இவையில்லாத தமிழ்ப்படங்கள் உப்பில்லாப் பண்டங்கள் என்பதை அறியாதவரா என்ன இயக்குனர்? பச்சடி, துவையலாக படைக்கும் விருந்தில் அவற்றையும் சேர்த்துக் கொண்டார்.

    எழுதி முடித்து நெட்டி முறித்துக் கொண்டிருந்தபோது இசையமைப்பாளர் சந்தோஷ் போனில் அழைத்தார். “காதல் பாட்டு ஒண்ணு வேணும்னு கேட்டீங்களே, மெட்டு தயார், வாட்ஸப்பில் அனுப்பியிருக்கேன்” என்றார். “படத்துல காதல் பாட்டு இல்ல சந்தோஷ், பழங்குடிகள் கோஷ்டியாக பாடும் வனப்பாடல் ஒன்று உண்டு” என்று கார்த்திக் சொன்னபோது “பிரச்சினையில்லை, வாட்ஸப்பில் அனுப்பின அதே சத்தத்தையே யூஸ் பண்ணிக்கலாம். இன்ஃபாக்ட் நீங்க சிச்சவேஷனே சொல்ல வேண்டாம். எந்த சிச்சுவேஷனா இருந்தாலும் அதே டியூன யூஸ் பண்ணலாம். பா ரஞ்சித்தோட அடுத்த படத்துக்காகக்கூட அஞ்சு நிமிஷம் முன்னாடி அவருக்கு இதே டியுன அனுப்பிவச்சேன்” என்றார் சந்தோஷ்.

  • சீட்டுக்கட்டும் மின்னஞ்சலும்

    லூதியானா ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருக்கையில் எனக்கு பக்கத்திருக்கையில் இருந்த சர்தார்ஜி மாலை ஆறே கால் மணிக்கு ஜலந்தருக்குக் கிளம்பும் ரயிலுக்காக முட்டியை கைகளால் அழுத்தியவாறே காத்திருந்தார். அவர் சுவாசம் விடும் சத்தம் என் காதை எட்டியது. அவரிடம் பேச ஆரம்பித்தபோது நாற்பது வருடங்களாக ஒரே குழுமத்தில் வேலை பார்க்கிறவர் என்று தெரிய வந்தது. தினமும் ஐலந்தரிலிருந்து வேலைக்காக லூதியானா வந்து போவது சிரமமாக இல்லையா என்று கேட்டேன். “பல முறை வேலையை விடுகிறேன் என்று சொன்னேன். சும்மா வந்து போங்கன்னு சொல்றாங்க” என்றார். லேசான பொறாமை துளிர் விட்டது நெஞ்சில். டார்கெட், பிசினஸ் என்று அல்லாடும் என்னுடைய நிலையை மனதில் கொண்டு வராமலிருக்கப் பிரயத்தனம் செய்தேன். “பனிரெண்டு மணிக்கு லூதியானா வந்திறங்குவேன். ஆபீஸ் நான்கு கிலோ மீட்டர். பனிரெண்டரைக்கு ஆபீஸ் போனதும் டீ குடித்ததும் கம்ப்யூட்டரை ஆன் செய்வேன்” என்றார். எட்டரைக்கு பஞ்ச் செய்ய வேண்டிய என் நிலைமையை எண்ணி நொந்துபோக ஆரம்பிக்காமல், “இந்த நிறுவனத்தில் எப்போது வேலைக்கு சேர்ந்தீர்கள்?” என்று கேட்டேன். 1990 என்றார். பிப்ரவரி மாதம் என்று வேறு சேர்த்துக் கொண்டார். நான் முதல் வேலைக்குச் சென்ற அதே மாதம், அதே வருடம். 90இல் தொடங்கினால் நாற்பது வருடம் எப்படி ஆகும்? என்னைப் போன்று முப்பத்து மூன்று வருடங்கள்தானே ஆகியிருக்கும் என்று யோசிக்கவில்லை. இரண்டாம் ப்ளாட்ஃபார்மில் அவர் ஏற வேண்டிய ரயில் வருவதாக அறிவிக்கப்பட்டதும், பையிலிருந்து துணியால் சுற்றப்பட்ட ஒன்றை வெளியே எடுத்தார். அது என்ன என்பது போல் அவரை பார்த்தேன். “ரயில் நண்பர்களோடு விளையாட சீட்டுக்கட்டு” என்றார். நான் என் மடிக்கணினியில் ஃப்ளாஷ் ஆன மின்னஞ்சலுக்கு பதிலளிக்கத் தொடங்கினேன்.

  • The Circular Ruins

    The Night Face Up என்றோரு சிறுகதையை 1967இல் எழுதினார் ஹூலியோ கொர்த்தசார். ஒரு மோட்டார் சைக்கிள் விபத்துக்குப் பிறகு கதாநாயகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் யதார்த்தம் – கனவு இரண்டும் மாறிமாறி அடுத்தடுத்து தொகுக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தூங்கிக் கொண்டிருக்கும் அவன், ஒரு சடங்குப் போரில் அஸ்டெக்குகளால் துரத்தப்படுகிறான். மோடேகா பழங்குடிகள் மட்டுமே அறிந்த ஒரு பாதையில் அவன் ஓடிக்கொண்டிருப்பதாக அவன் கனவு காண்கிறான். தாகம், மற்றும் தீவிர காய்ச்சலில் விழிக்கும் அவன் தன் கைகளில் பிளாஸ்டர் கட்டியிருப்பதை நோக்குகிறான். நர்ஸ் அவனுக்கு அளித்த உணவை உண்டுவிட்டு மறுபடியும் தூங்குகிறான். கனவில் அவன் இப்போது மோடேகாக்களின் பாதையிலிருந்து விலகி வேறெங்கோ ஒடிக்கொண்டிருப்பதை உணர்கிறான். கழுத்தில் இருக்கும் தாயத்தைப் பிடித்துக் கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போது அஸ்டெக்குகளிடம் சிக்கி விடுகிறான். மருத்துவமனையிம் மீண்டும் விழித்தெழுகிறான். தனது விபத்திற்குப் பிறகு சுயநினைவற்று இருந்ததைப் பற்றி யோசிக்கிறான். பிறகு உறக்கத்தில் வீழ்ந்தபோது அவன் உடலெங்கும் கயிறுகள் கட்டப்பட்டு தரையில் கிடத்தப்பட்டிருக்கிறான். அவன் கழுத்தில் இருந்த தாயத்து இப்போது காணவில்லை. பூசாரிகள் அவனை தூக்கிச் செல்கிறார்கள். கடைசியாக ஒரு முறை விழித்தெழுந்தான். ஆனால் இப்போது யதார்த்தம் கனவுடன் இணைந்துவிடுகிறது. பூசாரி கையில் கற்கத்தியை நீட்டியவாறே அவனை நோக்கி நெருங்குகிறார். அவன் இனிமேல் விழித்தெழப்போவதில்லை, ஏனெனில் அவன் விழித்துக் கொண்டுதான் இருக்கிறான்.

    போர்ஹேஸின் The Circular Ruins என்ற கதை The Night Face up போன்ற ஒரு கதை. இக்கதையில் கனவுக்குள் கனவு எனும் கருப்பொருளை போர்ஹேஸ் கையில் எடுத்துக் கொண்டுள்ளார். கனவு வாயிலாக ஒரு மனிதனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் ஒரு மந்திரவாதி. நெடுமுயற்சிக்குப் பின்னர் அவன் தங்கியிருக்கும் இடிந்த கோயிலின் தெய்வங்களின் உதவியால் ஒரு மனிதனை கனவில் உருவாக்கிவிடுகிறான். ஆனால், தெய்வங்கள் அவனுக்கு ஒரு நிபந்தனை இடுகின்றன. அவனுக்கு உரிய பயிற்சிகளைத் தந்து அவனை வடக்கே அனுப்பிவிட வேண்டும். மகனுக்கு அனைத்து தந்திரங்களையும் சொல்லிக் கொடுக்கிறான் மந்திரவாதி. அவனை வடக்கே அனுப்பி வைக்குமுன் மகனின் ஞாபகத்தை அழித்துவிடுகிறான். மகனுக்கு தன்னுடைய மூலம் பற்றி அனைத்தும் மறந்துவிட்டது. சில காலம் கழித்து வடக்கில் வரும் ஒருவர் வடக்கில் ஓர் ஆள் நெருப்பின் மீது நடப்பதைப் பற்றி வியந்து சொல்ல மகனுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும் என மந்திரவாதிக்குப் புரிந்துவிடுகிறது. கனவின் அம்சத்தைக் கொண்ட வேதாளம் மட்டுமே தாம் என மகன் அறிந்திருப்பான் என்பதை உணரும் மந்திரவாதிக்கு ஒரே வேதனை. உடனடியாகத் தன்னை அழித்துக் கொண்டு விட எண்ணி எரியும் நெருப்பு தன்னைத் தீண்ட விடுகிறான். ஆனால் நெருப்பு அவனை எரிக்கவில்லை. அப்போது அவனுக்கு தெளிவாகிறது – “,,,he understood that he too was a mere appearance, dreamt by another.”

    கொர்த்தசாரின் கதை – கனவு – யதார்த்தம் இரண்டின் பிரிவைப் பேசுகிறது. போர்ஹேஸின் கதை கனவுக்குள் கனவு. முந்தைய கதையில் ஒரே ஒரு மனிதன் – கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் இருப்பவன் ஒரே மனிதன்.

    போர்ஹேஸின் கதையில் இருவர் – இரண்டுமே கனவு மனிதர்கள். இறுதியில் – கனவு முடிந்த பின்னர் – கனவுக்கு வெளியே கனவு காண்பவன் ஒருவன் இருக்கிறான். அவன் மூன்றாம் மனிதன். இரண்டு கனவுகளையும் தாங்கி நிற்கும் அவன் ஒருவன் அந்தக் கனவுகளுக்கு வெளியே இருக்கிறான்.

    கதையின் கனவு காண்பவர் தான் இன்னொரு மனிதனை மிகுந்த தன்னம்பிக்கையுடன் உருவாக்குவதாக நம்பினாலும், அந்த அனுபவத்துக்கு முரண்பாடாக அவன் தன்னையே ஒரு கனவு என்பதை உணர்வது அவனது அடையாளத்தைச் சிதைக்கிறது.

    கதையின் ஆரம்பத்தில் பிளாட்டோனிக் இலட்சியவாதத்தை மறைமுகமாக ஆதரிப்பதாகத் தோன்றினாலும் — உடனடியாக உணரக்கூடிய உலகத்தைத் தாண்டிய இலட்சிய வடிவங்களின் உலகம் — அந்த உலகமும் ஒரு நிலையற்ற கனவு என்பதைக் கதையின் முடிவில் காட்டுகிறது.

  • Pierre Menard, Author of the Quixote

    ஜே ஜே சில குறிப்புகள் – நாவலை வாசித்துப் பிரமித்துப் போனதுண்டு. இப்படியும் புனைவுகள் எழுத முடியுமா என்றெண்ணி வியந்து போனேன். இலக்கிய அங்கதம் எனும் வகைமை என்பதாக நாவல் படித்த நாட்களில் என் புரிதல்! ஜே ஜே சில குறிப்புகளில் ஒரு கற்பனையான இலக்கிய ஆளுமை உயிர் பெறுகிறார். ஜே ஜே சில குறிப்புகள் நாவல் வெளிவருவதற்கு கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கு முன்னர் Sur பத்திரிக்கையில் வெளியானது – Pierre Menard, Author of the Quixote. இதிலும் ஒரு கற்பனை இலக்கிய ஆளுமை வருகிறார். இந்தக் கதையிலும் கற்பனை இலக்கியவாதி ஏற்கனவே இறந்துவிட்டார். அவருடைய அபிமானி ஒருவர் பட்டியலிட்ட நூல் வரிசை குறித்தான எதிர்வினையாகத் தொடங்குகிறது “சிறுகதை”. எதிர்வினை செய்பவர் இறந்து எழுத்தாளர் மெனார்டின் நெருங்கிய நண்பர் மற்றும் இரசிகர். நூல் பட்டியலில் பிரபலமான நூல்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்ததாகவும் பரவலாக அறியப்படாத பல அரிய நூல்களின் பெயர்கள் விடப்பட்டிருந்தன என்றும் “கட்டுரை”யாசிரியர் குறை பட்டுக் கொள்கிறார். பரவலாக அறியப்படாத, இன்னொருவர் பட்டியலிட்ட வரிசையில் இல்லாத நூல்களின் பட்டியல் கதையில் வருகிறது. இத்தகைய பட்டியல் ஒன்றைப் புனைவில் சேர்ப்பதற்கே நிறைய மேதமை வேண்டும். நம்பத்தகுந்த விதத்தில் வரிசை ஒலிக்க வேண்டும். அப்படியில்லாவிடில், கதை வடிவம் கேலிக்குள்ளாக்கப்பட்டுவிடும். கதையின் நம்பத்தகுந்த தொனி கடைசி வரை தொடர்கிறது. முதல் முறை வாசிப்பவர்களுக்கு இது “இறந்த இலக்கியவாதியின் பங்களிப்பு” குறித்த “கட்டுரையாகவே” தொனிக்கும். மரபார்ந்த சிறுகதையின் தரவடிவமான சிக்கல் – தீர்வு என்ற படிவத்தில் பயணிக்காத இதை எவ்விதத்தில் புனைவு என்று கொள்ள முடியும்?

    சிறுகதையில் புனைவின் அடையாளங்கள் புதைந்துள்ளன. நுணுக்கமான வாசிப்பில் அவை வெளிப்படுகின்றன. ஓரிரு புனைவம்சங்களை மட்டும் இங்கு சொல்கிறேன்.

    (1) கதையின் உள்ளிருக்கும் அங்கதம் – கதையை அற்புதமான இலக்கியப் பகடியாக வாசிக்கலாம். போர்ஹேஸ் இரு இயல்முரண்களைக் கதையில் விவரிக்கிறார். இறந்த எழுத்தாளரின் மீது அளவற்ற மரியாதை வைத்திருக்கும் அவரின் பரம ரசிகன். அந்தப் பரமரசிகனின் மதிப்புரையினுடே நாம் அறியவரும் மறைந்த இலக்கியவாதியின் எழுத்துத்திருட்டுத்தனம். கேள்விக்குரிய சாதனைகளுக்காக மெனார்டை வானளாவப் புகழ்வதைத் தவிர, கதையின் பெரும்பகுதியில், கதைசொல்லி Mme.Henri Bachelier-ஐ (அதாவது மெனார்டின் பிரபலமான நூல்களின் பெயரை மட்டும் நூல் பட்டியலில் சேர்த்தவர்) கடுமையாக விமர்சிக்கிறார். இதில் உள்ள முரண் Mme Bachelier-ம் கதைசொல்லியைப் போலவே மெனார்டின் இரசிகர். தன் பக்கத்தில் இருப்பவரைப் பின்தொடர்வதும், தெளிவில்லாத காரணங்களுக்காக அவரைக் கடுமையாக விமர்சிப்பதும் முரண்நகை.

    (2) மெனார்டின் கலாசாரப் பின்னணியும் பொருந்தா விருப்பமும் – மெனார்ட் பிரெஞ்சு இலக்கியத்தின், கலாசாரத்தின் பின்னணி கொண்டவர் – முழுக்க முழுக்க பிரெஞ்சு கலாசாரத்தில் ஊறியவர். கதையில் “a Symbolist from Nimes, a devotee essentially of Poe, who begat Baudelaire, who begat Mallarme, who begat Valery” என்று அடையாளப்படுத்தப்படுகிறார். மேலும், கதைசொல்லி வரிசைப்படுத்தும் நூல் வரிசையில் “a study of the essential metrical rules of French prose, illustrated with examples taken from Saint-Simon” என்பதுவும் சேர்க்கப்பட்டிருக்கிறது. பிரெஞ்சுப் பின்னணியில் வேரூன்றிய ஒருவருக்கு ஸ்பானிய இலக்கியத்தைப் புரிந்து அதை மீளுருவாக்கம் செய்ய விரும்புவது விந்தையிலும் விந்தை. கதையில் மெனார்ட் ஒரிடத்தில் விளக்குவது மாதிரி அவரால் “குயிக்ஸாட்” இல்லாத உலகை அவரால் எளிதில் கற்பனை செய்துகொள்ள முடிகிறது. அவர் மேலும் சொல்கிறார் – “குயிக்ஸாட் ஒரு தற்செயல். அது தேவையில்லை. கூறியது கூறல் இல்லாமல், அந்த நாவலை என்னால் எழுத முடியுமென என்னால் முன்கூட்டியே திட்டமிட முடியும்”

    (3) பகடியையும் எள்ளலையும் தாண்டி எதை விளையாட்டுத்தனமாக இந்தக் கதை ஆராய முனைகிறது? – ஓர் இலக்கியப் படைப்பை அணுகும் போது நாம் அதன் சூழல் சார்ந்த தகவல்களையும் நம்முடைய பிரக்ஞைக்குள் இழுத்து வருகிறோம் – ஆசிரியரின் அடையாளம், அவர்கள் வாழ்ந்த காலம், அந்தப் பிரதியை அவர் எப்போது எழுதினார், முதலியவற்றை.

    (4) தலைப்பே ஒரு நகைச்சுவை – டான் குயிக்ஸாட் நாவல் ஸ்பானியர்களின் கலாசார அடையாளம்! கதையின் தலைப்பை வாசிக்கும்போதே – Pierre Menard, Author of the Quixote – ஒவ்வொரு ஸ்பானியனும் புன்முறுவல் பூத்து ஏதோ பகடி என்பதை புரிந்து கொள்வான் அல்லது “இது என்ன கிறுக்குத்தனம்” என்பான். உதாரணமாக “கம்ப ராமாயணம் – ஜெயகாந்தன் எழுதியது” என்பது போலத்தான்! (படைப்புக்கு கம்பர் இட்ட பெயர் – இராமாவதாரம் – என்பது தெரியும்!)

  • The Lottery of Babylon

    இதற்கு முன் வாசித்த இரு கதைகளைப் போல The Lottery of Babylon சிக்கலான கதையில்லை. அது கூற வருவதை நேரடியாக கையாள்கிறது. அதன் வடிவம் ஒரு தொன்மக்கதை பாணியிலிருக்கிறது. இதனை ஒரு நவீனத் தொன்மம் என்று வகைப்படுத்தலாம். பாபிலோன் எனும் தொன்ம நாட்டிலிருந்து வெளியேறிய ஒருவன் சொல்லும் கண்ணோட்டத்தில் அமைந்திருக்கிறது கதை. பாத்திரங்கள், நிகழ்வுகள் என்று எதுவும் இல்லை. ஒரு பத்திபோல எழுதப்பட்டிருக்கிறது கதை.

    எதுவும் கிடைக்கும் என்ற ஒழுங்கு நிலவிய பூமியில் எப்போது “சந்தர்ப்பம்” எனும் தன்மை உள்நுழைந்தது? “சந்தர்ப்பம்” என்பதை யார் நிர்வகிக்கிறார்கள்? அது தானாகவே நிகழும் “தற்செயல்” என்று ஏன் ஏற்பதில்லை நாம்? அது ஏன் விளைந்தது எனும் கேள்விக்கு பதில் தேடும் உணர்வு நம்முள் இரண்டாம் இயல்பாக இருக்கிறது. தான் செய்த நல் வினைகளால் நடந்த நல்விளைவென்றும், யாரோ ஒருவர் நம் மீது செய்த தீங்கு எனவும் காரணம் கற்பித்துக் கொற்கிறோம்.

    “சந்தர்ப்பம்” என்ற காரணி இல்லாமல் இருந்திருந்தால் எவ்வளவு சலிப்பாக இருந்திருக்கும்! செய்யும் காரியம் எல்லாமே ஒரே விளைவைத் தரும் என்றிருந்தால், அதனுள் தோல்விக்கான வாய்ப்பு அறவே இல்லாமல் இருந்தால் மனிதனின் சாதனையுணர்வு மறைந்து போய்விடுமல்லவா? அப்படியானால் “சந்தர்ப்பம்” என்னும் காரணியை மனிதனே வரிந்து கொண்டானா? அல்லது ஏதொவொரு பிரபஞ்ச சக்தி “சந்தர்ப்பத்தை” கட்டுப்படுத்துகிறதா? கட்டுப்பாட்டை அந்த பிரபஞ்ச சக்திக்கு அவனாகவே தந்தானா? (ஏடன் தோட்டத்துக் கதை போல). தான் கட்டுப்படுத்தப்படுகிறோம் என்ற உணர்வு அவனுள் “லாட்டரி”யில் இருந்து கிடைக்கும் பரிசு தரும் அதே சிலிர்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறதா? “தண்டனை” என்ற ஒன்று இருப்பதனால்தான் “வெகுமதி” அதிபூரிப்பை தருகிறதோ?

    “லாட்டரி” விளையாட்டை நிர்வகிக்க ஒரு “கம்பெனி’ இருப்பது போல் நம் வாழ்வின் “சந்தர்ப்பங்களை” இயக்கவும் “அதிகார மையம்” என்ற ஒன்று இருக்கிறதா? அதிகாரத்தை “லாட்டரியின்” நுகர்வோர்கள் தான் “கம்பெனிக்கு” ஆதியில் அளித்தார்கள். அதிகாரம் வந்து நுகர்வோர் தம்மை சுய-பலி செய்து கொண்டபோது “கம்பெனி” விஸ்வரூபங்கொண்டு சர்வ வல்லமையால் மனித இனத்தையே கட்டியாள்கிறது. ஆனால், “கம்பெனி” ஒரு இரகசியம். அது எங்கிருக்கிறது என்று யாரும் அறிகிலர். “ஒரு புனிதமான கழிப்பறைக்குள்ளிருந்து “கம்பெனி” செல்லும் வாயில் இருக்கிறது” – புனிதத்தன்மை இங்கு எதைச் சுட்டுகிறது? சர்வாதிகாரத்தை? மத அதிகாரத்தை? இறை வல்லமையை?

    Kafka-பாணியில் சொல்லப்படும் கதைக்குள் Kafkaவுக்கு tribute செலுத்தப்படுகிறது. அந்தப் புனித கழிப்பறையின் பெயர் – Qaphqa.

  • The Garden of Forking Paths

    இந்தக் கதை ஒரு வினோதம். Tlon, Uqbar, Orbius Tertius – கதையைவிட எளிதில் அணுகத்தக்கது. பெரிய அளவில் தத்துவச் சித்திரிப்பு இதில் இல்லை. ஓர் உளவுக் கதை. மர்மக் கதையும் கூட. எட்கர் ஆலன் போ, ஜி கே செஸ்டர்டன் – இவர்களின் மகாரசிகனாக இருந்த போர்ஹேஸ் உளவுக் கதையின் வேகத்தை எளிதில் கதையின் துவக்கத்திலேயே நிறுவி விடுகிறார். முழுக்கதையும் தூக்கிலிடப்படுவதற்காக காத்திருக்கும் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலத்தின் வடிவில் கூறப்படுகிறது. உளவாளி தூக்கிலிடப்படப் போகிறான் என்ற பிரக்ஞையில் நாம் வாசிக்கத் தொடங்குகிறோம் என்றாலும் சாகசத்தின் சூட்டில் உளவாளி மீதான ஆதரவு துளிர் விட்டு கடைசியில் அவனுடைய உளவுச்செயல்திறனை எண்ணி வியக்கிறோம். கதையில் வரும் சாகசத்தின் இறுதியில் உளவாளி தப்பிவிடப் போகிறான் என்ற லேசான உணர்வுடனும் படிக்கிறோம். பாதிக்கதை விறுவிறுவென நகர்ந்து ஒரு சமயத்தில் surreal தன்மையை எய்துவது போல் தோன்றும். கேயாஸ் கோட்பாடு, குவாண்டம் மெக்கானிக்ஸ் – இவற்றின் பாதிப்பை நிகழ்த்தியவாறு நகர்கிறது கதை.

    டெலிபோன் டைரக்டரியிலிருந்து ஆல்பர்ட் என்ற பெயருள்ளவரை random-ஆக தேர்வு செய்து அவரைத் தேடிப்போகும் உளவாளியிடம் அவனுடைய பாட்டனார் எழுதிய நாவல் ஒன்றைப் பற்றிப் பேசுகிறார் ஆல்பர்ட். ஆல்பர்ட்டைத் தேடி உளவாளி ஏன் வந்தான் என்பது இதுவரை வாசகர்களுக்குத் தெளிவு செய்யப்படுவதில்லை. அனைத்து சாத்தியங்களின் வழிகளையும் ஒரே நேரத்தில் தேர்வு செய்வது பற்றிய அந்த நாவலில் ஒவ்வொரு சாத்தியமும் ஒவ்வொரு விதமான முடிவுக்கு இட்டுச் செல்வதை தொடர்ச்சியற்று பேசுவதாக உளவாளியிடம் விளக்கம் கொடுக்கிறார் ஆல்பர்ட்.

    இதற்குள் உளவாளியைத் தேடிக் கொண்டிருக்கும் எதிரி நாட்டுக்காரன் ஆல்பர்ட்டுடன் இருக்கும் உளவாளியைத் தேடி வந்துவிடுகிறான். அவன் உள்ளே நுழைவதற்கு ஓரிரு நிமிடங்களே உள்ளன. உளவாளி அப்போது நாம் எதிர்பார்க்காத ஒன்றைச் செய்கிறான்.

    டெலிபோன் டைரக்ட்டரியில் ஒரு பெயரைத் தேடுதல் எனும் random செயல் ஒரு random தேர்வுக்கு வித்திட்டு ஆல்பர்ட்டின் random முடிவுக்கு எடுத்துச் செல்கிறது. ஆல்பர்ட்டுக்கு உளவாளியின் பாட்டனாரின் வாழ்க்கை பற்றித் தெரிந்திருப்பது யதேச்சை. உளவாளியின் ஆச்சரியமும் தன்னுடைய தாத்தா குறித்துப் பேசுவதில் அவன் அடையும் மகிழ்ச்சியும் கதையில் பதிவு செய்யப்படுகின்றன.

    “எண்ணற்ற எதிர்காலங்களை நோக்கி காலம் என்றென்றும் தன்னைப் பிரித்துக் கொண்டிருக்கிறது, அத்தகைய ஒரு பிரிவில் நான் உங்கள் எதிரி.”- என்று ஆல்பர்ட் சொல்கிறான். “அந்த எதிர்காலம் இப்போது இங்குள்ளது” என்கிறான் உளவாளி.

    குவாண்டம் கோட்பாட்டை எதிரொலிக்கும் விதத்தில், குறிப்பாக, ஷ்ரோடிங்கரின் பூனை சொல்லும் கருத்தை எதிரொலிக்கும் வகையில், கதாபாத்திரங்கள் ஒரே நேரத்தில் இறந்தும், உயிருடனும் உள்ளன. ஒரு அத்தியாயத்தில் மட்டுமே கொல்லப்பட்டு அடுத்த அத்தியாயத்தில் உயிருடன் திரிகின்றன. ஒவ்வொரு கதை சாத்தியத்தையும் உள்ளடக்கிய ஓர் எல்லையற்ற கதையை உருவாக்குவதே, உளவாளியின் தாத்தாவின் யோசனை மட்டுமல்ல, போர்ஹேஸினுடையதும் போல. இது உளவாளியின் கதையா, மர்மக்கதையா என்று கேட்டால் இரண்டுக்கும் விடை ஆம்தான். சற்று கூர்மையாக யோசித்தால், இந்தக் கதை கதை சொல்லலின் இயல்பைப் பற்றிய கதை என்றும் சொல்லலாம்.

    The Garden of Forking Paths – சிறுகதையில் வரும் உளவாளி டாக்டர் யூ ஒரு சிக்கலான பாத்திரம். அவன் ஏன் உளவுத் தொழிலில் ஈடுபட்டான் என்பது கதையில் கூறப்படவில்லை. கதையில் வரும் அவனது சில எண்ணவோட்டங்கள் வாயிலாக அவன் உளவில் ஈடுபட்ட காரணத்தை சற்று ஊகிக்க முடியும். ஜெர்மனிக்காக இங்கிலாந்திலிருந்து உளவு பார்த்த யூ அடிப்படையில் சீனன். அவன் இங்கிலாந்திலிருந்து வந்த ஒருவனை சந்தித்ததாக குறிப்பிடும் போது அவன் ஜெர்மனியில் இருந்தபோது உளவாளியாக பணியமர்த்தப்பட்டான் என்று யூகிக்க முடியும். அவனைச் சந்தித்த போது ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அந்த ஒரு மணி நேரம் சந்தித்த மனிதன் ஜெர்மன் தத்துவவாதி Goetheயாக தொனித்ததாகவும் யூ கூறுகிறான். ஜெர்மனி மீது கொண்ட நேசத்தின் காரணமாக உளவுப் பணியை ஏற்றுக் கொண்டதாக அவன் நினைக்கவில்லை. ஜெர்மனி பற்றி பெரிய மதிப்பேதும் அவனுக்கில்லை. Barbarous என்று ஜெர்மனி பற்றி வர்ணிக்கிறான். சீனாவிலிருந்து அவன் ஏன் ஐரோப்பா வந்தான் என்பதற்கு ஒரு காரணமும் தரப்படுவதில்லை. அகதியாகவோ அரசியல் காரணத்துக்காக நாடு கடத்தப்பட்டவனாகவோ இருக்கலாம். ஒரு வித தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக இருக்கலாம் என்று கதையில் வரும் இரு வரிகள் நம்மை எண்ண வைக்கின்றன.

    “I did it because I sensed that the chief somehow scorned the people of my race – …….I wanted to prove to him that a yellow man could save his armies.”

    தேசம் என்ற கருத்தியல் மீது அவனுக்கு குறிப்பிடத்தக்க நாட்டம் எதுவும் இருந்திருக்க முடியாது என்று அவனுடைய எண்ணவோட்டம் நமக்குத் தெரிவிக்கிறது.

    “I thought that a man can be an enemy of other men, of the moments of other men, but not of a country : not of fireflies, words, gardens, streams of water, sun sets.”

    அவனுடைய குடும்ப மூத்தோர் ஒருவர் சீனாவின் யுன்னான் பிராந்தியத்தின் கவர்னராக இருந்தார் என்ற தகவல் வருகிறது. சீனாவிலிருந்து ஜெர்மனிக்கு உயர் படிப்பு படிக்க வந்தவனாகவும் அவன் இருந்திருக்கலாம்.

    “In a riddle whose answer is chess, what is the only prohibited word?”

    I thought a moment and replied, “The word chess.” - from the short story - The garden of forking paths (by borges)

  • Tlön, Uqbar, Orbis Tertius – ஒரு வாசிப்பு

    போர்ஹேஸ் எழுதிய சிறுகதையொன்றின் ஆங்கில மொழிபெயர்ப்பை அனுப்பி வைக்குமாறு நண்பர் Vasu Devan அவர்களிடம் கேட்டிருந்தேன். அதன் தலைப்பு – Tlon, Uqbar, Orbius Tertius. பொதுவாக போர்ஹேஸின் சிறுகதைகளில் வரிக்கு வரி நிறைய குறிப்புகள் அடங்கியிருக்கும். இந்தக் கதையிலும் இது போலத்தான். நொடிக்கு நொடி இணையத்தில் தேடி அந்தக் குறிப்புகளின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. சில குறிப்புகளைப் புரிந்து கொள்ள சில கட்டுரைகளை வாசிக்க வேண்டியிருந்தது. வாசிப்பாளரின் உழைப்பைக் கோரும் கதைகளையே போர்ஹேஸ் எழுதியுள்ளார். இணையம் எல்லாம் இல்லாத நாட்களில் எழுதப்பட்ட சிறுகதை. இத்தகைய கதைகளை எழுதுவதற்கு எத்தனை வாசித்திருக்க வேண்டும்! அவரின் ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் போது தோன்றும் வியப்புணர்வும் மலைப்புந்தான் இன்றும் தோன்றியது. இந்தக் கதைக்கு நான் வந்தடைந்ததும் ஒரு கட்டுரையில் படித்த குறிப்பு வாயிலாகத்தான். யாருக்கும் தெரியாமல் ஒரு பேரரசன் கொல்லப்பட அவனைப் போல பாவனை காட்டும் ஒரு போலி அரசனாக இன்னொருவன் வாழ்ந்திருக்க அவன் போலி என்று சரியாக ஊகித்து அவனைக் கொன்று அக்கமெனிட் வம்சத்தின் அரசனானார் முதலாம் டேரியஸ். இந்த சம்பவத்தை டேரியஸ் பெஹிஸ்துன் மலைகளில் செதுக்கிய கல்வெட்டுகளில் பதிவு செய்திருக்கிறார். கிரேக்கர் ஹெரடோடஸும் இதைப்பற்றி எழுதிவைத்துள்ளார். இது பற்றி ஏராளமான தொன்மக் கதைகளும் இருக்கின்றன. போலியாக வேடமிட்டு மன்னனான ஜொராஸ்ட்ரிய சமய பூசாரி பற்றிய குறிப்பை மேல் சொன்ன கதையில் போர்ஹேஸ் பயன்படுத்தியுள்ளார் எனுந்தகவலே இந்தக் கதையிடம் என்னைக் கொண்டு போய் சேர்த்தது. குறிப்புகளிலிருந்து கதைகளுக்குச் சென்று குறிப்புகளைத் தரிசித்து இதன் வாயிலாக மேலும் பல குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டு….குறிப்புகளில் தொலைந்து….போர்ஹேஸின் இந்தச் சிறுகதை சேர்க்கப்பட்டுள்ள தொகுப்பின் தலைப்பு Labyrinths….தேடல்களின் பாதையை இதைவிடப் பொருத்தமாக வர்ணித்துவிட முடியுமா?

    “Of the historical names, only one: the impostor magician Smerdis, invoked more as a metaphor.”

    ஐபோனை தொலைத்தல் ஓர் அனுபவம். மனித வாழ்க்கையில் அனுபவிக்கும் பல்வேறு சோக ரசத்தை நாம் தொலைத்த ஐபோனும் நமக்குத் தரும். ஊபர் டாக்ஸியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அந்த போனில் எனக்குத் தெரிந்த ஒருவரைத் தொடர்பு கொண்டேன். அது தான் அந்த போன் என் கைகளில் இருந்த கடைசி நினைவு. சாலையில் நல்ல போக்குவரத்து நெறிசல். டாக்ஸி ஊர்ந்து கொண்டிருந்தது. எப்போது கண்களை மூடினேன் என்று தெரியவில்லை. போன் என் மடியிலிருந்து கார் சீட்டில் விழுந்திருக்கலாம். இதெல்லாம் இப்போது அந்த போன எப்படி தொலைந்து போயிருக்கும் என்று யோசித்து யோசித்து கற்பனையில் அரைகுறை ஞாபகத்தில் உருவாக்கி வைத்துள்ள காட்சிகள். டாக்ஸியில் வீடு வந்திறங்கிய போது இருட்டியிருந்தது. தெரு விளக்கு அன்று எரியாமல் இருந்தது என்ற ஞாபகம் தெளிவாக இருந்தது. காரிலிருந்து இறங்குவதற்கு முன்னம் ஒரு முறை உள்ளே நோட்டம் இட்டிருக்க வேண்டும். இது இப்போது புரிகிறது. காரிலிருந்து இறங்கும் போது ஐபோனை இழக்கப்போகிறேன் என்று முன்னமே தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். பத்து நிமிடங்கள் கழித்து போனை தொலைத்துவிட்டோம் என்ற பிரக்ஞை வந்த பிறகு மறுபடியும் என் வீட்டுவாசலுக்கு வரும் வரை அந்த டாக்ஸி அங்கேயே காத்திருந்திருக்கலாம்.

    அதை இழந்த குற்றவுணர்ச்சி பல மாதங்கள் தொடர்ந்தது. ஐபோனை எவனும் தொலைப்பானா? எத்தனை விலை கொடுத்து வாங்கினோம்?…..என் மேல் நான் கொண்ட கோபம் சில நாட்களுக்கு குறையவேயில்லை. இனிமேல் ஒரு போனும் வாங்குவதில்லை என்ற விரதம் வேறு எடுத்துக் கொண்டேன்.

    அந்த ஐபோன் என் ஞாபகத்தில் நிரந்தரமாக நிலைத்துவிட்டது. அதை நிஜமாகவே தொலைத்தேனா? தொலைத்திருந்தால் அது அடிக்கடி என் ஞாபகத்தில் ஏன் வரப் போகிறது? 

    அந்த ஐபோன் அந்த டாக்ஸியின் அடுத்த பயணியின் கையில் கிடைத்ததெனில் அந்த ஐபோன் என் ஐபோனா? இல்லை அந்தப் பயணிக்கு கிடைத்த ஐபோன். நான் தொலைத்த நேரத்திலிருந்து இன்னொரு பயணியின் கையில் அது கிடைக்கும் நேரம் வரை அந்த ஐபோன் இருந்ததா? இருக்கவில்லை என்று கொள்வோமானால் பயணிக்கு கிடைத்த போன் எந்த போன்? அது நான் தொலைத்த போனின் நகல். இருந்தது என்பது பதிலானால் – தொடர்ச்சியை அந்தப் பொருளுக்கு நாம் வழங்குவதனால் – மறைந்த நிலையில் அந்த ஐபோன் மனிதர்களின் உணர்வாற்றலின் எல்லைக்குள் சிக்காமல் எங்கேனும் இருந்திருக்கும்….Tlos, Uqbar, Orbis Tertius – சிறுகதை ஏற்படுத்திய எண்ண வெடிப்புகளிலிருந்து ஓர் இழையைத் திரிக்கப்போக சிறுகதையில் வரும் ஒன்பது தாமிர நாணயங்கள் ஒன்றிணைந்து  ஐபோனாக நகலெடுத்தது. தொலைத்தல் என்ற வினையே இல்லாத ஒரு பிரதேசத்தை, ஒரு நாட்டை அல்லது ஒரு கோளை நாம் சிருஷ்டிக்க முடியுமானால்…..நிற்க, பொருட்களை எப்படி தொலைக்காமல் இருக்க முடியும்? தொலைத்தால் அது நம் அகத்திலிருந்து நாம் தொலைத்ததாகவே இருக்கும்…அது தொடர்ந்து ஞாபகத்தில் இருக்குமானால் அது எங்கு தொலைந்தது? “இழத்தல்” “கண்டுபிடித்தல்” எனும் வினைச்சொற்கள் ஐபோனுக்கென ஓர் அடையாளத்தை அனுமானிப்பதாலேயே எழுபவை.  ஐபோன் அனெக்டோட் நான் அறியாமலேயே போர்ஹேஸின் கதைக்குள் புகுந்துவிட்டது.  

    __

    மிக சுருக்கமாக, Tlönic கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களைப் பின்வருமாறு  கூறலாம்: a. நேரம் எனும் கருத்தியல் இல்லை. ஒரு ட்லோனிக் சிந்தனைப் பள்ளி நாம் காலவரையறையற்ற, கடந்த மற்றும் எதிர்காலமாக பிரிக்கப்படாத நித்திய நிகழ்காலத்தில் வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது, மற்றொரு பள்ளி  எல்லா நேரமும் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுவிட்டதாகவும், நாம் வாழ்வது நினைவுகளில் மட்டுமே என்றும் வலியுறுத்துகிறது. b. இந்தக் கருத்தின்படி அடையாளம் என்பது கற்பனைக்கு எட்டாதது, ஏனென்றால் எந்தப் பொருளும் காலப்போக்கில் அதன் தொடர்ச்சியை நீட்டிப்பதில்லை (“தொலைந்த ஐபோன்” – முந்தைய ஸ்டேடஸை பார்க்கவும்) c. நேரம் அல்லது பொருளின் தொடர்ச்சி மறுக்கப்படும் உலகில் வேறு எந்த பொது வகையினங்களும் இருக்க முடியாது.

    ட்லோனின் சிந்தனையாளர்களும் ஞானிகளும்  ஒரு இலட்சியவாத உலகக் கண்ணோட்டத்தை ஆதரிக்கின்றனர். ட்லோனின் கலாச்சாரத்தில் உள்ள அனைத்தும் தத்துவ இலட்சியவாதத்தை முன்னிறுத்துகின்றன. Tlönic மொழியியல் மற்றும் தத்துவக் கோட்பாடுகளின் விளக்கத்தில் போர்ஹெஸ் மிக உன்னிப்பாகக் கவனம் செலுத்துகிறார். வெளி என்பது தொடர்ச்சியானதில்லை என்றும், இடைவெளி என்பது வரையறையின்படி தொடர்ச்சியற்றது என்றும், காலத்தின் கண்ணோட்டத்தில் விண்வெளியில் உள்ள இடம் அல்லது பொருள் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்றும் ஞானிகள் கற்பனை செய்திருக்கிறார்கள். இது அடையாளத்தின் தர்க்கரீதியான கொள்கையையும், உலகத்தை உணர்ந்து அதன் பொருள்களை மதிப்பிடுவதற்கு நாம் பழகிய விதத்தையும் பாதிக்கிறது. (நாம் பயன்படுத்தும் ஐபோன் நேற்று நாம் பயன்படுத்திய அதே ஐபோன்தான் என்று நாம் நினைக்கிறோம், ஏனென்றால் அந்த அடையாளத்தை முன்னிறுத்துவது நமக்கு மிகவும் வசதியாக உள்ளது.) 

    Tlön இல், காரணம் மற்றும் விளைவு போன்ற கருத்துகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. அடையாளக் கொள்கை பாதிக்கப்பட்டால், இடஞ்சார்ந்த அல்லது தற்காலிக தொடர்ச்சி இல்லை என்றால், அறிகுறிகள் மற்றும் நிகழ்வுகளுக்கு இடையே எந்த தொடர்பையும் ஏற்படுத்த முடியாது: எரியும் சிகரெட், புகை மற்றும் நெருப்பு ஆகியவை தொடரியல் அல்லது படிநிலையில் பிணைக்கப்படாத ஒரு வரிசையில் தனித்துவமான தருணங்கள் . Tlön கிரகத்தில் அடையாளம் மற்றும் காரணத்தைப் பற்றிய சுருக்கக் கருத்துக்களைக் கருத்திற்கொள்ளும் சாத்தியம் இல்லை. இந்த வரையறையின்படி, அறிவியல் சாத்தியமில்லை. அதற்குப் பதிலாக, als ob (“as if”) கொள்கையில் அடித்தளமிட்ட நூற்றுக்கணக்கான தத்துவங்கள் வெளிப்புறக் குறிப்புடன் எந்தத் தொடர்பையும் கோராத அழகான அமைப்புகளாக வளர்கின்றன – கற்பனாவாத இலக்கியத்தின் அடிப்படை அமைப்பைக் கொண்டவைகளாக. als if கொள்கை என்பது கற்பனாவாத மற்றும் டிஸ்டோபியன் புனைகதை உத்திகளின் அடிப்படையான ஒன்றாகும், அங்கு “எப்படி” எனும் கருதுகோள் அந்தக் கதையின் கண்டுபிடிப்பைத் தொடங்குகிறது. நேரத்தையும் இடத்தையும் தொடர்ச்சியாகக் கருதுவதற்குப் பதிலாக இடைவிடாதவையாகக் கருதுவது Tlonஇன் அடிப்படை உலகக் கண்ணோட்டமாகும், அதே சமயம், ‘als ob’ அடிப்படையிலான கற்பனையான இடத்தைக் கண்டுபிடிப்பதை இது அனுமதிக்கிறது.

     Tlön இல் உள்ள இரண்டு மொழிகளுக்கும் பெயர்ச்சொற்கள் இல்லை. இரு மொழிகளில் ஒன்று கூட்டு உரிச்சொற்களை அடிப்படையாகக் கொண்டது; மற்றொன்று, கூட்டு வினைச்சொற்களில். பெயர்ச்சொற்கள், கொள்கையளவில், சாத்தியமற்றது, ஏனெனில் ஒரு பெயர்ச்சொல்லுக்கான அனுபவ/தருக்க அடிப்படையை வழங்கக்கூடிய தொடர்ச்சியான பொருள் எதுவும் இல்லை. பெயர்ச்சொற்கள் தற்காலிக நிலைகளைக் குறிக்கும் உரிச்சொற்களின் திரட்சியிலிருந்து ட்லோனில் எழுகின்றன.  நிச்சயமாக, இந்த வகை பெயரடை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட முடியும், ஏனெனில், வரையறையின்படி, எந்த நிலையும் காலக்கண்ணொட்டத்தில் மீண்டும் நிகழாது.

    ‘கண்டுபிடிப்பது’ மற்றும் ‘இழப்பது’ போன்ற சில வினைச்சொற்களிலும் இதுவே நடக்கும். இரண்டு செயல்களும் Tlön இல் நினைத்துப் பார்க்க முடியாதவை, ஏனெனில், பொருள்களுக்கு இடையே அடையாளம் இல்லை மற்றும் இடம் மற்றும் நேரம் தொடர்ச்சி இல்லை என்றால், எந்த பொருளையும் இழக்க முடியாது; மீண்டும் கண்டுபிடிக்க முடியாது. ‘இழந்தது’ என்று நாம் கருதும் ஒன்று ஒரு பொருளுக்கு நிகழும்போது, ​​ஒரு வகையான இரண்டாம் நிலைப் பொருள் (இழந்த ஒன்றிலிருந்து தெளிவற்ற வேறுபட்டது) பெருகத் தொடங்குகிறது. இந்த உருத்தோற்றங்கள் Hrönir என்று அழைக்கப்படுகின்றன. அவை கடந்த காலத்தை கண்டுபிடிப்பதற்கும் மாற்றியமைப்பதற்கும் பயன்படுத்தப்படலாம், இது Tlön இல் தொல்பொருளியலை ஆக்கிரமிக்கிறது.

    ஒரு வருடம் கழித்து இன்னொரு ஐபோன் வாங்கினேன். பழைய கறுப்பு நிற ஐபோனின் நகலாக நினைத்து அதன் மேல் வாஞ்சையை செலுத்தாமல், புதுப்பொருள் மீது புதுக்காதல் கொண்டவனாக மகிழ்ச்சியானேன். சிறுகதையின் இறுதியில் வருவது மாதிரி பூமி இன்னும் முழுமையாக Tlon-இன் தாக்குதலுக்கு ஆளாகவில்லை. 

    போர்ஹேஸின் மிக நீளமான கதைகளில் ஒன்றான, ‘Tlön, Uqbar, Orbis Tertius’ பெரும்பாலும் ஊகப் புனைகதை அல்லது சில சமயங்களில் ‘அறிவியல் புனைகதை’ என்று முத்திரை குத்தப்படுகிறது.

    தொலைந்த ஐபோன் பற்றி விலாவாரியாகப் புலம்பிவிட்டு அடுத்த சில பத்திகளிலேயே “உண்மையில் நான் வைத்திருந்தது ஐபோன் இல்லை. வேற்று கிரகத்திலிருந்து வந்த யாரோ விட்டுவிட்டுப் போன திசை காட்டும் கருவி” என்று சொல்லி பின்னர் ஐபோனை மறந்துவிட்டு அந்த வேற்றுக் கிரகம் பற்றி பல தகவல்களை அடுக்கி…..கிரகம் ஒரு கற்பனை என்று அறிவித்துவிட்டால்…அடுக்கிய தகவல்கள் அனைத்தும் கற்பனையென்று தானே ஆகும்……ஐபோன் கதைக்குள் விரியும் ஒரு கோள் பற்றிய கதை….இதைச் “சட்டகக் கதை” என்று வகைப்படுத்துவார்கள்…..ஒரு கதையை வகைப்படுத்துவது போர்ஹேஸுக்கு ஒவ்வாத விஷயம்…..இக்கதையை வகைப்படுத்த வேண்டுமென்றால் போர்கேஸியக் கதை என்று தான் வகைப்படுத்த வேண்டும். ​​​​​​ போர்ஹேஸின் எழுத்து முரண்பாடுகள், கண்ணாடிகளினுடே விரியும்  எல்லையற்ற பிரதிபலிப்புகள், சிக்கலான புதிர்ப்பாதைகள்  ஆகியவற்றால் நிரம்பியிருக்கும். 

    ‘Tlön, Uqbar, Orbis Tertius’ இல், போர்ஹெஸ், ‘பிஷப் பெர்க்லி’ என்று அழைக்கப்படும் ஜார்ஜ் பெர்க்லியைக் குறிப்பிடுகிறார். இந்த ஐரிஷ் தத்துவஞானி அவரது அகநிலை கருத்தியல் கோட்பாட்டிற்கு (‘Subjective Idealism’) மிகவும் பிரபலமானவர். அவரது பெயர் ஒரு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு – பெர்க்லி – இடப்பட்டுள்ளது. பெர்க்லி விவரித்த கோட்பாட்டை சுருக்கமாக ஒரு கேள்வி வடிவத்தில் விளக்குவார்கள் – “​​காட்டில் மரம் விழுந்தால், அதைக் கேட்க யாரும் இல்லை என்றால், அது ஒலி எழுப்புமா?” – என்பது தான் அந்தக் கேள்வி. இதற்கு பெர்க்லியின் பதில் ‘இல்லை’ என்பதாக இருக்கும், ஏனெனில் அவை மனிதர்களால் அந்த ஒலி உணரப்படும்போது மட்டுமே அது ஒலிக்கும்.

    பெர்க்லிக்கும், ட்லோனில் வசிப்பவர்களுக்கும், பொருள் அல்லது பொருட்கூறு – அதாவது, பௌதீகப் ‘பொருள்’ – இல்லை. அது மனத்தால் உணரப்பட்ட ஒரு யோசனை மட்டுமே. நான் வைத்திருந்த ஐபோன் இல்லை, ஆனால் அது இருப்பதை நான் உணர்கிறேன். அவ்வளவே. அது ‘தொலைந்து போனதற்கு அழுத நேரத்திலும்” அது என்னுடனேயே ‘இருந்தது’. நிச்சயமாக, Tlön மக்கள் ஒரு கற்பனை. எனவே முரண்பாடாக, அவர்கள் சொல்வது சரிதான் (அவர்கள் இல்லாமல் இருந்தாலும்): அவர்களின் உலகம் போர்ஹேஸ் வாயிலாக, அவரது கதையின் பக்கங்கள் மூலம் நாம் உணரும் உணர்வுகளின் தொகுப்பாக மட்டுமே உள்ளது.

    ‘Tlön, Uqbar, Orbis Tertius’ இல் போர்ஹெஸ் குறிப்பிடும் பலர் உண்மையான அர்ஜென்டினா நாட்டு ஆளுமைகள். 1940 இல் Sur இதழில் இந்தக் கதையை முதன்முறையாக வாசித்த வாசகர்கள் உண்மை மற்றும் புனைகதை, யதார்த்தம் மற்றும் குழப்பம் – இவற்றின் திசைதிருப்பும் கலவையாக இருப்பதைக் கண்டு அதிர்ந்திருப்பார்கள். 

    தியரியெல்லாம் எழுதியாயிற்று. இந்தக் கதை ஏன் பிடிக்கிறது? 

    – குறிப்புச் சிதறல்கள்

    – தகவல்களைக் கதையில் செதுக்கியுள்ள லாவகம்

    – வகைமைப்படுத்த முடியாத இதன் வடிவம்

    – தத்துவங்களைப் பின்னி ஒரு கதையில் கோர்த்திருக்கும் செயல் திறன்

    – கருவின் விரிந்த தன்மை

    – படித்த வெகுநேரம் கழித்தும் வாசகனை அசை போட வைக்கும் தன்மை

    – மர்மக்கதை போலத் தொடங்கி, அறிவியல் புனைவாக மடை மாறி, தத்துவம், மனோதத்துவம், தொல்லியல் என்று பல துறைகளையும் தொட்டு பின்னர் ஒரு புரளியாக வடிவங்கொண்டு டிஸ்டோபியன் முடிவை எட்டும் அபூர்வம்  

    -செறிவான ஓர் எளிமையான புனைவு