Blog

  • தி கான்ஸ்டெண்ட் கார்டனர்

    the-constant-gardener-movie-poster-2005-1020350499

    ஜான் லீகார்ரே (John Le Carre) யின் “The Constant Gardener” நாவல் திரைப்படமாக 2005இல் வெளியானது. நாவலின் தலைப்பே திரைப்படத்துக்கும். எட்டாண்டுகள் முன் வெளியான இத்திரைப்படத்தை நேற்று தொலைக்காட்சியில் பார்த்தேன். தூங்கப் போகலாமா என்று யோசித்துக் கொண்டே சேனல்களை மாற்றிக் கொண்டிருந்த போது ஜீ தொலைக்காட்சியில் இப்படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். நடிகை ரேச்சல் வெய்ஸ் (Rachel Weisz) –க்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற படம் என்று என்று எனக்கு தெரியும். கொஞ்ச நேரம் பார்க்கலாமே என்று துவங்கினேன். இரண்டு மணி வரை படம் முடியும் வரை இருக்கையிலிருந்து எழ முடியவில்லை.

    ரால்ஃப் ஃபீன்ஸ் (Ralph Fienes) எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவர். The English Patient திரைப்படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். கூச்சசுபாவமான ஆர்ப்பாட்டம் காட்டத் தேவையில்லாத பாத்திரங்களில் வெகுவாகப் பொருந்தக் கூடியவர். அதே சமயம் உடல்மொழி மற்றும் முக வெளிப்பாடுகள் வாயிலாக ஒரே பாத்திரத்தின் பல்வேறு பரிமாணங்களை நுட்பமாக வெளிப்படுத்துபவர். முண்ணனி ஹாலிவுட் ஹீரோ நடிகர்களில் அவரைப் போல மிகச்சிலரே வில்லன் பாத்திரங்களில் சோபிக்க முடியும். நேர்மறை கதாநாயகனாக நடிக்கும் பொழுதும் இருண்ட முனைகளை உட்புகுத்தி அப்பாத்திரத்திற்கு நொறுங்கும் தன்மையையும் மனிதத் தன்மையையும் சேர்த்து விடுவார்.

    தி கான்ஸ்டண்ட் கார்டனரிலும் அவருடைய பாத்திரம் மனைவிப் பாத்திரத்தின் மரணத்துக்குப் பிறகு தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கிற கண்ணியமான தூதரக அதிகாரியிலிருந்து காதலின், அதீத உணர்ச்சியின் சுய-சாத்தியப்பாட்டை நிலை நிறுத்தும் பாத்திரமாக மாறுகிறது.

    மனைவி டெஸ்ஸா பாத்திரத்தில் வரும் ரேச்சல் வெய்ஸ் உந்தப்பட்ட, எழுச்சி மிக்க, தடுத்து நிறுத்தவியலா அறப்பணியாளராக பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். துள்ளல் மிகு கண்களுடன் அதிக வயது வித்தியாசமிக்க காதலனிடம் “என்னை உன் காதலியாக அல்லது மனைவியாக,,,இல்லாவிட்டால் வைப்பாட்டியாக…கென்யா கூட்டிச்செல்வாயா?” என்று கேட்கிறார்.

    கென்யாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்காக களப்பணியாளராக வேலை செய்யும் டெஸ்ஸா, ஆப்பிரிக்க நண்பன் ஆர்னால்டோடு சேர்ந்து எய்ட்ஸ் மருந்தை இலவசமாக வினியோகிக்கும் பணியில் இருக்கிறாள். அவர்களிருவரும் சேர்ந்து ஐரோப்பிய மருந்து நிறுவனமொன்று ஒன்றுமறியா ஆப்பிரிக்க ஏழைகளின் மேல் காச நோய்க்கான மருந்தொன்றை பரிசோதனை செய்வதை கண்டு பிடிக்கிறார்கள். பக்க விளைவைத் தரும் அம்மருந்தின் காரணமாக பலரும் மரணமடைகிறார்கள். மரணங்கள் பதிவாவதுமில்லை. மருந்தி பரிசோதனையைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் முழுமூச்சுடன் டெஸ்ஸா இறங்குகிறாள். அவளுக்கு ஆர்னால்ட் பக்கபலமாக இருக்கிறான்.

    வேலை நேரம் போக மற்ற நேரங்களில் எல்லாம் தோட்டத்தை திருத்தும் காரியத்தில் தன்னை அமிழ்த்திக் கொள்ளும் ஜஸ்டின் (ரால்ஃப் ஃபின்ஸ்), டெஸ்ஸாவின் வேலையைப் பற்றியோ நடவடிக்கைகள் பற்றியோ அறியாமல் ஒரு தொலைவை ஏற்படுத்திக் கொண்டுவிடுகிறான். டெஸ்ஸாவின் குழந்தை பிறக்கும் போதே இறந்து விடுகிறது. குழந்தையின் இறப்புக்குப் பிறகு டெஸ்ஸா – ஜஸ்டின் தொலைவு இன்னும் விரிவடைகிறது.

    ஒரு நாள் டெஸ்ஸா கொலை செய்யப்படுகிறாள். ஆர்னால்ட் தான் அவளை கொலை செய்து விட்டான் என்று முதலில் சொல்லப்படுகிறது. ஆர்னால்ட் டெஸ்ஸாவின் காதலன் என்றும் அவதூறு கற்பிக்க முயற்சிகள் நடக்கின்றன. ஆர்னால்டும் டெஸ்ஸா இறந்த நாளன்றே கொல்லப்பட்டது பின்னர் கண்டு பிடிக்கப்படுகிறது.

    மனைவியின் மரணம் ஜஸ்டினுள்ளில் ஆழ்ந்த மாற்றத்தை உண்டு பண்ணுகிறது ; டெஸ்ஸாவின் கொலைப் பிண்ணனி பற்றியும் காரணங்கள் பற்றியும் அறிவதற்கான ஆபத்து நிறைந்ததொரு தேடலில் புகுகிறான்,

    அறப்பணியில் ஈடுபடுவது உள்ளார்ந்த கருணை குணத்தின் காரணமாக இருக்கலாம் ; குற்றவுணர்வாக இருக்கலாம் ; இலாபம் கருதி இருக்கலாம் ; பொது வாழ்வில நற்பெயர் சம்பாதிப்பதற்காக இருக்கலாம். எதுவானாலும் இருக்கட்டும். நன்மையில் முடிந்தால் சரி. ஆனால் பிரச்னை என்னவென்றால் முழுமையான பார்வை கொண்டு பார்த்தாலொழிய அறப்பணி முயற்சிகள் நனமையில் முடிந்ததா என்பதை அறிதல் கடினம். தனிப்பட்ட நபர்களின் அறம் சார்ந்த தொண்டுகள் அதை ஏற்கும் நபரின் மனநிலை, அறப்பணி புரியப்படும் சூழல், அதை ஒழுங்கு படுத்தும் அரசுகளின் போக்குகள், மனப்பான்மைகள் என்று வெவ்வேறு இடைமுகங்கள்! இவ்விடைமுகங்கள் தோற்றுவிக்கும் பல்வேறு விளைவுகள்! இரட்டை வேடம் போடும் உதவி வழங்கும் அரசாங்கங்கள்! சட்டபூர்வ மற்றும் சட்டமீறல் செய்கைகளுக்கிடையேயான எல்லைகளை எளிதில் தாண்டும் இலாப நோக்கு நிறுவனங்கள் ! உதவி பெறும் மக்களின் ஊழல் மிகு உள்ளூர் அரசுகள் மற்றும் நிறுவனங்கள்!

    ஜஸ்டினின் தேடல் சிக்கல் மிகுந்த வலைக்குள் அவனைத் தள்ளி விடுகிறது. சொந்த நாட்டின் பொருளாதார குறிக்கோள்களுக்காக பன்னாட்டு நிறுவன புரியும் அநீதியைத் சுட்டிக்காட்டத் தைரியமில்லாமல் ஊமை நாடகமாடும் தூதரக ஊழியர்கள்! முதலாளிகளுக்கு துணை போகும் அரசு உயர் அதிகாரிகள்! லாபம் ஒன்றை மட்டும் விழைந்து சமூக நலனையும் சர்வ தேச சட்டங்களையும் உடைப்பில் போடும் முதலாளிகள்! வளர்ந்த நாடுகளின் குடிகளின் ’மதிப்பு வாய்ந்த’ உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஆப்பிரிக்க ஏழைகளின் உயிரைக் காவு வாங்கும் சுயநல மருந்து நிறுவனங்கள்! பக்க விளைவைத் தரும் மருந்தை பரிசோதனைக்குட்படுத்தும் நிறுவனத்தின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தாத குற்றவுணர்வில் அறப்பணியில் தன்னைத் தோய்த்து பாவம் கழுவும் விஞ்ஞானிகள்! லஞ்சம் வாங்கி சொந்தக் குடிகளை பலியாக்கும் ஊழல் மருந்துக் கட்டுப்பாடு ஆணையங்கள்! ஜஸ்டின் பல முகங்களை சந்திக்கிறான் ; சில முகமூடிகளையும் அவிழ்த்து அம்பலப்படுத்துகிறான்.

    திரில்லர் பாணியில் கதை வேகமாக நகர்கிறது ; தேடலுக்கு நடுவில் இறந்த மனைவியின் உணர்வுகளின் புரிதல் ஜஸ்டினுக்கு கிட்டுகிறது. டெஸ்ஸா இறந்த ஏரிக்கரையில் டெஸ்ஸாவின் நினைவுகளில் அவன் இருக்கும் போது அவன் கொல்லப்படுகிறான். அவன் கொல்லப்படப்போவது அவனுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தும், தான் கொல்லப்படுவதற்கு ஏதுவாக அவன் கொலையாளிகளுக்காக காத்திருப்பது அக்கொலையை தற்கொலையாக நகர்த்துகிறது. கதையின் முடிவு இந்த த்ரில்லர் படத்தை ஒரு முழுமையான காதற்படமாகவும் ஆக்கிவிடுகிறது.

    ஆப்ரிக்காவை மையப்படுத்தி வெளி வந்த படங்களில் ‘ப்ளட் டயமண்ட்ஸுக்குப்’ பிறகு எனக்கு ’தி கான்ஸ்டண்ட் கார்டனர்’ மிகவும் பிடித்தது. (”ஹோட்டல் ர்வாண்டா” இன்னும் பார்க்கவில்லை!)

    constantgardener1

  • நான்

    flowing_dreams_sold_art_photo
    ஒவ்வொரு கனவுகளுக்குள்ளும்

    நுழைவதும் வெளிவருவதுமாகவும்

    இருந்தேன்.

    ஒவ்வொரு கனவிலும்

    எண்ணற்ற நிகழ்வுகள்

    எல்லா நிகழ்வுகளிலும் நான்!

    கனவுகளுக்குள் நான் நுழையவில்லையென்று

    பின்னர் தான் தெரிந்தது

    என்னைச் சுற்றிலும்

    கனவுகள்

    ஓடியும் பாய்ந்தும்

    சென்று கொண்டிருக்கின்றன

    நான் பாய்ந்து செல்லும்

    கனவுகளை நோக்கும் சாட்சியாக மட்டும்

    நின்று கொண்டிருக்கிறேன்.

  • நம்பிக்கையின் நாளைகள் – அ.முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில் வண்டி

    தமிழ்புனைவுகளின் நாயகர்கள் தமிழநாட்டில் இருப்பதாகத்தான் வர வேண்டும் என்று சில காலம் முன்னர் ஒரு மரபே ஏற்பட்டிருந்தது. எண்பதுகளில் ஒரு வாரப்பத்திரிக்கையில் சிவசங்கரி எழுதிய “47 நாட்கள்” என்ற தொடர்கதையை வாசித்திருக்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு மாப்பிள்ளையை மணமுடிக்கிறாள் கதையின் நாயகி. உண்மையில் அயல்நாட்டு மாப்பிள்ளை அவ்வளவு நல்லவன் இல்லை. அவன் நாயகியை கொடுமைப்படுத்துகிறான். இக்கதை பிறகு திரைப்படமாகவும் வந்தது.

    இன்னொருவிதமான அயல் நாட்டுக் கதைகள் வருவதுண்டு. வறுமையில் வாடும் தமிழ்க்குடும்பத்தில் ஒருவர் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து மலேசியாவிலோ அமெரிக்காவிலோ செட்டில் ஆகிவிடுவார்; குடும்பத்தின் வறுமையை வெளிநாட்டு பணம் அனுப்பி போக்குவார். ஆனால் சொந்த வாழ்க்கையில் அவர் தனிமையை அனுபவிப்பார். அவருக்கு அங்கு விவாகரத்து நிகழும் அல்லது அவள் காதலித்த வெள்ளைக்காரப் பெண்ணை இந்தியாவில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினர் ஏற்காமல் போவார்கள். அயல்நாட்டில் நடப்பதாகச் சித்தரிக்கப்படும் கதைகளில் ஒரு பலமான இந்திய இணைப்பு இருக்கும்.

    அறுபதுகளில் எழுதப்பட்ட “புயலில் ஒரு தோணி”யை நான் சமீபத்தில்தான் வாசித்தேன் என்பதை இங்கு பதிவு செய்தாக வேண்டும்.

    அயல்நாட்டுப் பின்புலத்தில் முழுக்க முழுக்க அயல் நாட்டுப் பாத்திரங்கள் ஏன் தமிழ்க்கதைகளில் உலவக் கூடாது?

    amuttulingam_newa

    இனப்பிரச்னையின் காரணமாக உலகெங்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் அத்தகைய கதைகள் தொண்ணூறுகளில் எழுதப்பட காரணமாயினர். அனுபவங்களின் சேகரத்துக்குப் பிறகே அது இலக்கியம் ஆகிறது . இலங்கைத் தமிழர்களின் கூட்டு அனுபவம் தமிழ் இலக்கியத்திற்கு சமகாலப் போர் அவலங்கள், புலம் பெயர் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள், அனுசரிப்புகளையும் பற்றிய புது முன்னோக்கிலான படைப்புகள் வந்தடையக் காரணமானது. உலகமயமாக்கலும் சர்வதேச கண்ணோட்டத்தில் கதைகள் புனையப்பட இன்னொரு காரணம்.
    அ.முத்துலிங்கத்தின் – மகாராஜாவின் ரயில் வண்டி– அருமையான சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் தனிப்பட்ட அழகு கொண்டவை.. சில முக்கியமான சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. மகாராஜாவின் ரயில் வண்டி, தொடக்கம், ஆயுள், விருந்தாளி, கடன், பூர்வீகம், ஐந்தாவது கதிரை ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

    இத்தொகுதியில் உள்ள “நாளை” என்ற சிறுகதை பெயர் சொல்லப்படாத தேசமொன்றில் நிகழும் போரில் பாதிக்கப்பட்ட இரு சகோதரர்கள் பற்றிய சிறுகதை. பாத்திரங்களுக்கு பெயர்கள் தரப்படவில்லை.
    பெரியவர்கள் பாதிக்கப்படும் அனைத்து வகைகளிலும் யுத்தங்கள் சிறுவர்களையும் பாதிக்கின்றன என்றாலும் சிறுவர்கள் வேறுபட்ட வழிகளில் யுத்தங்களினால் அவதியுறுகின்றனர். பராமரிப்பு, புரிதல் மற்றும் அன்பு இவைகளுக்காக சிறுவர்கள் பெரியவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். பெற்றோரின் மரணம் காரணமாகவோ, குடும்பத்தின் ஜீவனத் தேடுதலில் பெற்றோர் தீவிரமாக ஈடுபடும் காரணமாகவோ, மன அழுத்தத்துக்காளான பெற்றோரின் உணர்வு ரீதியான கவனமிழப்பின் காரணமாகவோ பெற்றோர்-சிறுவர்களுக்கிடையான இணைப்பு போர்க்காலங்களில் அறுபடுகிறது.

    பெற்றோரைத் தொலைத்த சிறுவர்கள் தெரிந்த ஒருவரின் அரவணைப்பில் இருக்கலாம் ; அல்லது உறவினர் யாருடனோ இருக்கலாம் ; அல்லது அனாதை விடுதிகளில் இருக்கலாம். குறிப்பிடத்தக்க விகிதத்தில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரியவர்களின் பாதுகாப்பை இழந்துவிடுகின்றனர். புகலிடச் சூழலில் இவர்கள் “துணையற்ற குழந்தைகள்” (unaccompanied children) என்று அழைக்கப்படுகின்றனர்.

    பெரியவனும் சின்னவனும் துணையற்ற குழந்தைகள். ஆனால் அவர்கள் அகதிகள் முகாமில் தங்கியிருக்கவில்லை. இம்முகாம்களிலிருந்து பல மைல்கள் தாண்டி ஒரு கராஜில் வசிக்கின்றனர். பெரியவனுக்கு பதினோரு வயது ; சின்னவனுக்கு ஆறு வயது. தினமும் பல மைல்கள் நடந்து வேறு வேறு முகாம்களுக்கு சென்று உணவு சேகரிக்கிறார்கள்.

    ஒரு முகாமில் உணவு வண்டியின் வருகைக்காக காத்திருக்கின்றனர். சனங்கள் ஒழுங்கின்றி நின்று வரிசையை குலைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    பெரியவனின் தலையில் சின்னவனின் பொறுப்பு. ஒழுங்கற்ற வரிசையில் சின்னவனை நிற்க விடவில்லை. சின்னவன் எங்கே தொலைந்து போய் விடுவானோ என்ற பயம் பெரியவனுக்கு.

    “அந்த தொக்கையான மனுஷி நாலு பிள்ளையையும் இழுத்துக்கொண்டு முன்னேறினாள். அவள் கைகளில் பெரிய பாத்திரங்கள் இருந்தன. அவள் எல்லாவற்றையும் முன் கூட்டியே போதிய ஏற்பாடுகளுடன் வந்திருந்தாள்”

    உணவு சேகரிப்பதற்காக ஒழுங்கற்று திரண்டு நின்றிருந்த சனத்திரளை அதிகாரம் செய்து பழக்கப்பட்ட முகத்துடன் தடித்த உருவங்கொண்ட பெல்ட், தொப்பி, ஓவர்கோட் அணிந்த ஒரு மனிதன் தன் குரலின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். சிறிது நேரம்தான். திரும்பவும் சனவெள்ளம் பெரியவனைத் தள்ள, சின்னவனின் கைப்பிடி தளர, அவன் தள்ளிக் கொண்டு போகப்படுகிறான். சின்னவனை ஓர் அதிகாரி அழைத்து ஒரு கூடாரம் முன்னர் நிறுத்தி வைக்கிறார். அரை மணி நேரம் சின்னவன் அங்கு காத்திருக்கிறான். அந்த அதிகாரி அண்ணனை தம்பியிடம் சேர்த்து வைக்கிறார்.

    இதற்குள் பல புது வரிசைகள் தோன்றியிருக்கின்றன. எல்லோரும் பெரியவர்களாக நின்றிருக்கிறார்கள். சின்னவனை வரிசையில் நிறுத்தாமல் வேலி ஓரத்தில் நிற்க வைத்து. பெரியவன் தன் பார்வையால் சின்னவனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறான்.

    பெரியவனின் கையில் ஒரு நெளிந்த டின் மட்டுமே. அவனிடம் பாத்திரங்கள் இருந்திருந்தால் அவனுக்கு கொஞ்சம் அதிகமாக சூப் கிடைத்திருக்கும். ஒரு மீசைக்காரன் பெரியவன் கையில் இருந்த அடையாள அட்டையைப் பரிசோதித்து, “இது இங்கே செல்லாதே!” என்று சொல்கிறான்.“இனிமேல் வராதே” என்று அறிவுறுத்தப்படுகிறான். இருந்தாலும் அவனுக்கு ரொட்டியும் சூப்பும் வழங்கப்படுகின்றன.

    சூப் ஊற்றுபவரிடம் “ஆழத்தில் இருந்து கலக்கி ஊற்று” என்று கேட்டுக் கொள்கிறான். சின்னவனுக்கு இன்று சூப்பில் இறைச்சித் துண்டு கிடைக்கும் என்று நம்பிக்கை கொடுத்திருந்தான் பெரியவன். ரொட்டி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது; ஒரு பங்கை பெரியவன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறான். மீதி இரு பகுதிகளை இருவரும் உண்கிறார்கள். சூப்பில் அன்றும் இறைச்சித் துண்டு கிடைக்கவில்லை.
    முகாமில் இருந்து திரும்புகையில் நெடுஞ்சாலையெங்கும் ராணுவ வீரர்கள் காணப்படுகிறார்கள். சிகரெட் புகைத்தபடி நின்றிருந்த ஒரு வீரனை பெரியவன் அணுகுகிறான். ராணுவ வீரன் ஒரு சிகரெட்டை எடுத்து வீசுகிறான். பெரியவன் சிகரெட்டை பற்ற வைத்து புகைக்கிறான். சின்னவனுக்கும் புகைக்க ஆசை. பதினோரு வயதுப் பெரியவன் “நீயும் என்னைப் போல பெரியவன் ஆனதும் பிடிக்கலாம். இப்ப நல்ல பிள்ளையாம்” என்று அறிவுரை சொல்லுமிடம் நம் மனதை இலேசாக்குகிறது. சிறு புன்னகையை நம்முள் தோற்றுவிக்கிறது.
    அவர்கள் கராஜை எட்டும்போது ஒரு நாய் வந்து அவர்கள் அருகில் நிற்கிறது. அக்காட்சி போர், பசி, துயர், அவலம் நிறைந்த காட்சிகளுக்கு நடுவே மனித கருணையின் சாத்தியப்பாட்டின் படிமமாக விரிகிறது.
    ”சின்னவன் கையை நீட்டி ‘அதோ, அதோ’ என்று காட்டினான். அந்த நாய் மறுபடி வந்து நின்றது. மெலிந்து எலும்பும் தோலுமாய் இருந்தது. அதுவும் அகதி நாய்தான். பதிவு கார்ட் இல்லாத நாய். நிலத்தை முகர்ந்து பார்த்தபடி தயங்கி தயங்கி வந்தது.

    ‘அண்ணா, அந்த நாய்க்கு ஒரு பேர் வைப்போமா?” என்றான் சின்னவன்.‘வேண்டாம், பேர் வைத்தால் அதுவும் எங்கள் குடும்பம் ஆகிவிடும்’ பையில் இருந்த ரொட்டியை எடுத்து சரி பாதியாகப் பிய்த்து ஒரு பகுதியை அந்த நாயிடம் கொடுத்தான். அது அந்த ரொட்டியை தூக்கிக்கொண்டு நொண்டி நொண்டி ஓடியது’
    கராஜ் பாதுகாப்பாக இருக்கிறது. உள்ளே வாடையும் இருட்டுமாக இருக்கிறது. பழைய கம்பளிகளை விரித்து படுத்துக் கொள்கிறார்கள். காலையில் சின்னவன் அழும்போது அவனுக்குக் கொடுப்பதற்காக, மீதமான ரொட்டியைப் பெரியவன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறான். சின்னவன் தூங்கி விட்டானென பெரியவன் எண்ணிக் கொண்டிருக்கையில் திடீரென ஊர்ந்து வந்து சின்னவன் கட்டிக் கொள்கிறான். சின்னவன் அழுகிறான். “உன்னைவிட்டு ஒரு நாளும் போக மாட்டேன்” என்று பெரியவன் அவனை அணைத்துக் கொள்கிறான். ’துணையற்ற குழந்தைகளான’ இருவரும் வயதில் மிகச் சிறியவர்கள், எனினும் பெரியவனின் முதிர்ச்சி மற்றும் பரிவு இருட்டான கராஜை நம்பிக்கையொளியால் நிறைக்கும் கணம் அது.
    நாளை என்பது இன்னொரு நாளாக இருக்கலாம்.. ஆனால் நம்பிக்கை நாளை இன்றைய நாளைகளைத் தாள உதவும் நன்னாட்களை நிறைக்கலாம். பெரியவன் அடுத்த நாள் பத்து மைல் தொலைவிலிருந்த இன்னொரு முகாமுக்கு செல்லத் திட்டமிடுவதோடு கதை நிறைவு பெறுகிறது.

    “அங்கே கட்டாயம் இறைச்சி கிடைக்கும். அப்படித்தான் அவன் கேள்விப்பட்டிருந்தான்”

    ”மகாராஜாவின் ரயில் வண்டி” மனித உணர்வுகளின் பல நிறங்களை வார்த்தைகளால் படம் பிடிக்கும் அரிய சிறுகதைகளின் சிறப்பான தொகுப்பு.

    மொழி, இனம் தாண்டிய பொதுவான மனிதப் பிரச்சினைகளை, அழகியலைப் பேசவருகையில் பெயரிலா பாத்திரங்கள் பேசுபொருளின் எல்லையற்ற தன்மையை விவரிக்க மிகவும் உகந்தவை என்று இச்சிறுகதைகளை வாசிக்கையில் எனக்கு தோன்றியது.

    “நாளை” சிறுகதை போலவே “தொடக்கம்” சிறுகதையிலும் கதை நிகழும் நாடோ, கதைசொல்லியின் இன அடையாளங்களோ சுட்டப்படுவதில்லை. உலகமயமாகிய வியாபாரச்சூழலில் மும்மாத நிதியறிக்கைகளும், பங்குகளின் விலை வரைபடங்களும் மட்டுமே முக்கியமானவையாகப் போன காலத்தில், காலக்கெடுக்களை சந்திப்பதற்கான ஓட்டங்கள் மட்டுமே சாசுவதம் என்றாகி விட்டபிறகு, உலக மையமே அலுவலகமும் அதில் இருப்பவர்களும் என்று ஆகிவிடுகிறது. உலகத்தை நோக்குவது அலுவலக அறையின் ஜன்னலின் பரப்பளவைச் சார்ந்ததாகவும் ஆகிவிடுகிறது, வெறுமை மிஞ்சி தீரா வேலைப்பளு தரும் அழுத்தத்தில் சலித்துப்போய் கதைசொல்லி திறந்திருந்த அலுவலக ஜன்னலின் வழி நுழைந்து இறந்துபோன பறவையின் சொந்த ஊர், அது எந்தெந்த தேசங்களின் மேல் பறந்தது என்பன போன்ற விவரங்களை இணையத்தில் (”வையவிரிவலை” – ஆசிரியரின் மிக அழகான சொற்பிரயோகம்!) சேகரிக்கிறான். போர்டு ரூமில் முதலாளிகள் அவனுடைய பிரெசெண்டேஷனுக்காக பொறுமையின்றி காத்திருக்கின்றனர். ஆறஅமர பறவை பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டுபோய் போர்ட் மீட்டிங்கில் பறவை பற்றிய சிறு சொற்பொழிவாற்றுகிறான்.

    “ஆயுள்” கதையின் தொடக்கத்தில் “இது காதல் கதையல்ல” என்ற குறிப்பு வாசிக்கக் கிடைக்கிறது. கதையின் கடைசி பத்தி வரை ஒரு காதல் கதை போல நகரும் கதை. இலக்கிலாமல் சதா பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாடோடி வரலாற்றுக்கு முந்திய காலம் அவன் கையிலிருக்கும் பிளாஸ்டிக் குடுவை எல்லாருடைய கவனத்தையும் கவர்கிறது – ஹொன்ஸா கூல் என்கிற ஆதிவாசிப் பெண்ணைத் தவிர.
    நாடோடிக்கு அவள்மேல் ஈர்ப்பு. வழக்கத்திற்கு மாறாக அப்பெண்ணின் கிராமத்திலேயே தங்கிவிடுகிறான். இயற்கை சார்ந்த கிராமவாசிகளின் வாழ்க்கை அவனுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. “என்னை மண்ந்து கொள்வாயா?” என்று அவன் கேட்கும்போது ஹொன்ஸாகூல் அவனை விரட்டிவிடுகிறாள் .நாடோடி அசரவில்லை. ஹோன்சாகூலை திருமணம் செய்துகொள்ளும் ஆசையை தெரிவிக்கிறான். அவருக்கு ,சம்மதம்தான். ஆனால் கிராம மரபுப்படி ஹோன்சாகூலின் சம்மதத்தைப் பெற்றால்தான் திருமணம் சாத்தியம்.

    மழைக்காலம் துவங்கும் அறிகுறி தோன்றவும், அங்கிருந்து கிளம்ப முடிவெடுக்கிறான், போகுமுன்னர் ஹோன்ஸாகூலை மீண்டுமொரு முறை சந்தித்து அவளிடம் பிளாஸ்டிக் குடுவையை நீட்டுகிறான். ஹொன்சாகூல் அவன் தந்த குடுவையின் நேர்த்தியில் மனதைப் பறிகொடுக்கிறாள். “குடுவையை என் ஞாபகமாக வைத்துக் கொள். நான் திரும்பி வந்து உன்னை திருமணம் செய்து கொள்வேன்” என்று நாடோடி சொல்கிறான்.
    இரு வருடங்கள் காத்திருந்தும் நாடோடி திரும்பி வரவில்லை. அவள் கிராமவாசியொருவனை மணக்கிறாள். சீக்கிரமே மணத்தை முறித்துக் கொண்டு விடுகிறாள். அவள் மணமுடித்த கணவன், அவளுடைய தந்தை – ஒவ்வொருவராக இறந்துவிடுகிறார்கள். குடுவை அவளுடைய குடிசையிலேயே கிடக்கிறது. ஒரு நாள் அவளும் இறந்து போனாள். பல வருடங்கள் கடக்கின்றன. குடிசையும் சிதிலமாகி மண்ணோடு மண்ணாகி விடுகிறது. சடலங்களும் மண்ணோடு மண்ணாகின. அந்த குடுவையும் மண்ணில் புதைந்து விடுகிறது. ஆனால் சாகவில்லை. அதன் ஆயுள் நானூறு ஆண்டுகள். நூறு வருடம்தான் கழிந்திருக்கிறது. அது அழிந்துபோக இன்னும் முன்னூறு ஆண்டுகள் இருந்தன. “ஆயுள்” நிச்சயமாக காதல் கதை இல்லை!

    மார்பகப் புற்றுநோயின் காரணமாக மார்பகம் நீக்கப்பட்ட பெண்களின் மனவலியை நுணுக்கமாகச் சொல்லும் அழகிய சிறுகதை – பூர்வீகம். யுக்ரேய்ன் நாட்டின் தலைநகரான கீவ் நகரில் வசிக்கும் அனா என்கிற அன்னலட்சுமி சேரகோவ் ”பூர்வீகம் தேடுவதை இனி விட்டுவிட வேண்டும். இன்னும் நூறு வருடங்களில் எல்லோரும் ஒரே இனம்தான்” என்று சொல்லிக்கொண்டே வைன் குடிப்பாள். அவள் அதிகம் குடித்து நிதானமிழக்கவும், கதைசொல்லியும் மற்றவர்களும் அவளை அழைத்துக்கொண்டு அவளுடைய ஓட்டல் அறையில் விடுவார்கள். அப்போது கண்ணகி போன்று தன்னிரு மார்பையும் கழட்டி அவர்கள் மீது அனா வீசுவாள். பஞ்சு போன்ற அவளின் மார்பகங்களின் ரகசியம் கதைசொல்லிக்கு ஆறு மாதம் கழித்து அனாவின் மரணச்செய்தியைப் படிக்கும்போதுதான் தெரிய வருகிறது.

    தம்பதிகளுக்கிடையே ஏற்படும் சுவையான பாலியல் அரசியலை அழகுறச் சொல்லும் ”ஐந்தாவது கதிரை”

    வெளிப்பூச்சில் அதி நவீனமாக வளைய வரும் குடும்ப அங்கத்தினர்களின் உண்மையான வண்டவாளம் இரவில் தெரிய வரும் “மகாராஜாவின் ரயில் வண்டி” சிறுகதையின் கதைசொல்லி எல்லாவற்றையும் பார்த்து துல்லியமாகப் பகிர்ந்து கொண்டாலும் அந்நிகழ்வுகளை அவன் எவ்வளவு புரிந்து கொண்டான் என்பதை நாம் அறிய மாட்டோம். ரோஸலின் என்கிற பதின்பருவ அழகி வாயைத் திறந்தால் பொய்! தான் படிக்கும் பள்ளியைப் பற்றிக் கூட அளந்து விடும் பகட்டு ! கதை சொல்லிக்கோ அவளின் பெயரை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவாள் என்று கேட்கவில்லையே என்ற ஏக்கம். கதை சொல்லிக்கு பல வருடங்களுக்குப் பிறகு யூகமாகப் புரிந்தாலும், நீள் சதுர பிஸ்கட்டை சாப்பிடும் போதெல்லாம் (ரோஸலின் வாசித்த) கிட்டாரின் மணம் வருவதை இன்னும் தவிர்க்க முடியாமல் இருக்கிறது.

    மகாராஜாவின் ரயில் வண்டி சிறுகதைத் தொகுதியை வாங்கி இரண்டு வருடங்களாகிவிட்டன. புதுப்புத்தகங்களை முகர்ந்தால் ஒரு மணம் வரும் ;புத்தகங்களை முகர்ந்து பார்க்கும் பழக்கமுள்ள எனக்கு இரண்டு வருடங்கள் முன்னர் வாங்கிய இப்புத்தகத்தில் இருந்து இன்னும் வாசனை வந்து கொண்டேயிருக்கிறது என்று தோன்றுகிறது. நீங்களும் வாங்கி முகர்ந்து பார்க்கலாம்!

    புத்தகம் : மகாராஜாவின் ரயில் வண்டி
    ஆசிரியர் : அ.முத்துலிங்கம்
    வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

    நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=29293)

  • My Worries

    No Worries @ Fig Jam Studio
    No Worries @ Fig Jam Studio

    ( My daughter Puja Ganesh is thirteen years old. I have heard her mom telling that Puja is trying to write poems, but never once poems were shown to me. Puja is very inventive of finding odd places to hide her little copy in which she scribbles. This evening, I read the above lines in my iPad…perhaps she forgot that I will see it….or may be she wanted me to read it this time!? )

    My worries

    Years have passed, so quickly,
    I don’t even remember, when I was three.
    Imagining about the future years to come,
    Panicky and frustrated, I become.
    The age of maturity has touched me,
    But still the idea of mere future has not occurred to me.
    Will I be musician or a doctor,
    an artist or a dancer?
    But someone has said not to worry about the future
    All I need, is to plan and be happy about the present.

  • தாகூர் பைத்தியம்

    rabindranath_tagore_03

    இளைஞனாக பாரதிப் பித்து பிடித்தலைந்த நாட்கள் இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றன. இப்போது நடு வயதில் வேறொரு பித்து பிடித்தாட்டுகின்றது.

    குரு தேவரின் Hungry stones சிறுகதையை ஒரு விபத்தாக படிக்க நேர்ந்தது. இரண்டாம் காதல் என்று தான் இவ்விபத்தை வர்ணிக்க வேண்டும்! 1910இல் மேக்மில்லன் நிறுவனம் சர்வதேச பதிப்பாக வெளியிட்ட Hungry Stones and other stories  சிறுகதைத் தொகுதியில்  ரவீந்திரரின் முக்கியமான சில சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. வங்க மொழி மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களின் பெயரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதில்லே என்று சொல்ல வைக்கும்! சி.எஃப்.ஆண்ட்ரூஸ், சகோதரி நிவேதிதா (முதல் குருநாதர் பாரதியாரின் ஆன்மீக குரு!) போன்றோர்….The Victory என்ற ஒரு சிறுகதை ரவீந்திரர் ஆங்கிலத்திலேயே எழுதியது. தொகுதியில் ஒவ்வொரு கதையும் முத்து! Hungry Stones சிறுகதை படிக்க படிக்க பேரின்பம்! நெஞ்சை உருக வைக்கும் காபூலிவாலா சிறுகதையும் இத்தொகுதியில் உள்ளது.

    அதற்கப்புறம் ரவீந்திரரின் பல சிறுகதைகளைப் படித்தேன். சமீபத்தில் படித்தது Broken Nest (‘Nashtaanir’). புகழ் பெற்ற இக்குறுநாவலை ஒரே அமர்வில் நான் வாசித்து முடித்த போது இரவு பனிரெண்டு. இரவு முழுதும் புரண்டு புரண்டு படுத்தேன். தூங்கவேயில்லை. சிந்தனையை புரட்டி போட்ட நாவல். இந்நாவலை சத்யஜித்ரே ‘சாருலதா’ என்ற பெயரில் படமாக்கியிருப்பதாக அறிந்தேன். அந்தப் படத்தைப் பார்த்தால் என்ன அவஸ்தையாகுமோ தெரியவில்லை. கோரா, கைரெபாய்ரெ, சதுரங்கா – இந்த நாவல்களையும் விரைவில் படித்து முடித்து விட வேண்டும். தாகூரை வாசிக்காமல் நாற்பது வருடங்களை வீணாகக் கழித்து விட்டேன்.

    ஆங்கில மொழிபெயர்ப்புகளே வாசகரை பித்துப்பிடிக்க வைக்கும் போது பெங்காலியில் குரு தேவரின் நூல்களைப் படித்தால்……பெங்காலி நண்பர்கள் வெறித்தனமாக ரவீந்திரரைக் கொண்டாடுவது கொஞ்சமும் ஆச்சரியம் தரும் விஷயமில்லை!

    ரவீந்திரரின் கதையொன்றின் தமிழ் மொழிபெயர்ப்புக்கான சுட்டியொன்றை கீழே தருகிறேன்……மொழிபெயர்ப்பாளர் யார் தெரியுமா? சாதாரணப்பட்டவர் இல்லீங்க……முதல் பத்தியில ஒருத்தர சொன்னேன் இல்லியா…அவரேதான்…..

    https://docs.google.com/file/d/0B7SRknDGRb6JZ1g4aTJ3NFZIejQ/edit?usp=sharing

     

    hungry-stones-and-other-stories-400x400-imadgcfqdengz8jd

  • மனம் – மகாயான பௌத்தப் பார்வை

    bodhidharma

    மன அமைப்பு
    ஒரு பிரஸ் ரிப்போர்ட்டர் பார்ப்பவற்றையெல்லாம் தன் காமிராவில் பதிந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்புகிறார். தலைமை அலுவலகம் காமிராவில் பதிந்த காட்சிகளையும் வர்ணனைகளையும் பார்த்து கிரகித்து நல்ல செய்தியா கெட்ட செய்தியா, செய்தித்தாளில் இடம்பெறத் தக்கதா இல்லையா என்று அலசி ஆராய்ந்து ஒரு முடிவெடுக்கும்.

    மனம் இயங்குவதும் இப்படித்தான்! ரிப்போர்ட்டர் என்பது புலன்கள் (கண், காது, வாய், மூக்கு, தொடுவுணர்ச்சி)! ரிப்போர்ட்டர் தன் காமிராவில் பதிந்த செய்திக்குறிப்பு அப்புலன்களை ஒட்டிய மனங்கள். மகாயான பௌத்தம் ஒவ்வொரு புலனுக்கும் ஒரு மனமிருப்பதாக சொல்கிறது. கண் ஒரு பூனையைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது பூனை, அது கருமை நிறமுள்ளதாக இருக்கிறது. அதன் கண்கள் சிவப்பாக இருக்கின்றன என்றெல்லாம் கண் பார்த்தவற்றின் தகவல்-அர்த்தங்களை பட்டியலிட அக்கண்ணுடன் சேர்ந்த ஒரு மனம் இருக்கிறது. அது கண் – மனம்; இது போலவே மற்ற புலன்களுக்குத் துணையாகவும் மனங்கள் இயங்குவதாக லங்காவதார சூத்திரம் சொல்கிறது. தலைமை அலுவலகமாக இயங்கி புலன்கள் பதிவு செய்தவை, கிரகித்தவையெல்லாவற்றையும் எத்தகைய தன்மை கொண்டவை, அவை நல்லனுபவங்களா, வேண்டுவனவையா, என்றெல்லாம் பகுத்து, புலன் – மனங்களின் உயர் அடுக்காக செயல் பட்டுவரும் மனம் ஒன்று இருக்கிறது. ஐம்புலன்கள் மற்றும் புலன் மனங்கள் வந்திணையும் மையப்புள்ளி! அது தான் பகுக்கும் அல்லது சிந்திக்கும் மனம். நன்மை-தீமை, நல்லது-கெட்டது, சுகம்-துக்கம், வேண்டியது – வேண்டாதது என்றவாறு ஐம்புலன்-மனதினால் அறியப்பட்ட / பெறப்பட்ட அனுபவங்களை பகுக்கின்ற இயல்பு கொண்டதால் பகுக்கும் மனம் என்று அது கொள்ளப்படுகிறது.

    அனுபவங்கள் பகுக்கப்பட்ட பிறகு அவற்றின் மேல் தீர்ப்புகள் இடப்படுகின்றன. வழங்கப்பட்ட தீர்ப்புக்கேற்றவாறு அவ்வனுபவம் விரும்பத்தக்கதாகவோ வெறுக்கத்தக்கதாகவோ ஆகிறது. இவ்வாறு தொடர்ந்தும் பின்னிப்பிணைந்தவாறும் மனம் எனும் முழு அமைப்பும் இயங்குகிறது.

    மன அமைப்பின் இயக்கம்

    மன அமைப்பின் இயக்கங்களை மூன்று வழிகளில் பிரிக்கலாம்.

    மனத்தின் இயக்கங்கள் சாதாரணமாக புறவுலகில் காணும் பொருளின் தக்க கூறுகளை முதலில் கிரகித்துக் கொள்ளும். புலன் மனதில் அதற்கேற்ற புரிதலும் உணர்ச்சியும் எழும் ; மற்ற புலன்களிலும், புலன் – மனங்களிலும் கூடவோ குறையவோ புரிதலும் உணர்ச்சியும் எழும், ஒவ்வொரு தோல் துளைகளிலும்…ஏன் உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் கூட புரிதலும் உணர்ச்சியும் தோன்றும். பொருட்களை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்று தளம் முழுமையும் புரிந்துணர்ந்து கொள்ளப்படுகிறது.

    இரண்டாம் இயக்கமாக இப்புரிந்துணர்வுகள் பகுக்கும் மனதுடன் எதிர்வினை புரிந்து ஈர்ப்புகள், வெறுப்புகள், உணர்ச்சிகள், செயல்கள் மற்றும் பழக்கங்கள் முதலானவற்றை தோற்றுவிக்கின்றன.

    மூன்றாவது இயக்கம் பகுக்கும் மனதின் வளர்ச்சி, முன்னேற்றம், துவக்கமிலா காலம் முதல் திரட்டப்பட்டு வளர்ந்த பழக்க சக்தி – இவற்றைப் பொறுத்ததாக எழும்.. திரட்டப்பட்ட பழக்க சக்தி உலகளாவிய மனதிலிருந்து பெறப்படுவதாக மகாயான பௌத்தம் விவரிக்கிறது. உலகளாவிய மனம் என்றால் என்ன? உலகளாவிய மனத்தை சமஸ்கிருதக் கலைச்சொல் – ஆலயவிஞ்ஞான – என்ற பிரயோகத்தின் மூலம் சுட்டுகிறது லங்காவதார சூத்திரம். மன – அமைப்பின் முக்கியமான கருத்தாக்கம் – வாசனைகள் (‘வாசனா’) வாசனா என்பது ஞாபகம். ஒரு செயல் செய்த பின் எஞ்சியிருப்பது தான் வாசனா. எஞ்சியிருப்பது ஒரு மனோகாரணியாக இருக்கலாம் அல்லது பின்னால் எழப்போகிற ஜடம் அல்லது நிகழ்வுக்கான மூலக்கூறாக இருக்கலாம். செயல்களின் எச்சங்கள் வெடித்தெழ தயார் நிலையில் இருக்கிற உள்ளார்ந்த ஆற்றலாக ‘ஆலயத்துக்குள்’ சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஞாபகங்களின் குவியல் அல்லது பழக்கங்களின் ஆற்றல் ஒரு தனி உயிருக்கானது மட்டுமில்லை. எல்லா உயிர்களினாலும் அனுபவிக்கப்பட்ட ஞாபகங்களின், பழக்கங்களின் மொத்த குவியலாக அது இருக்கிறது. துவக்கமிலா காலம் முதல் எல்லா நிகழும் எல்லாவற்றையும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் விதைகள் ஒரு தனி உயிரை மட்டும் சார்ந்தது என்று சொல்ல முடியாது. தனி உயிரைத் தாண்டி எல்லா உயிருக்கும் பொதுவானது. ஆதியில் ‘ஆலயம்’ தனித்தன்மை வாய்ந்த அறிவு மற்றும் பீடிப்பு போன்ற மாசுக்கள் எட்ட முடியாத தூய்மை கொண்டதாக இருந்தது. தூய்மை என்பது தருக்கபூர்வமாக பொதுத்தன்மையை குறிக்கிறது ; மாசு என்பது வெவ்வேறு வடிவங்களில் பற்றுதலை ஏற்படுத்தும் தனிப்பண்புகொள்ளும் தன்மையை குறிக்கிறது. சுருக்கமாக, இவ்வுலகம் ஞாபகத்தில் இருந்து துவங்குகிறது ; ஞாபகம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ‘ஆலயம்’ தீங்கானது இல்லை. தவறாக பகுக்கும் தன்மையின் தாக்கத்திலிருந்து விலக முடியுமானால், ‘ஆலயத்தை’ மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கும் மன அமைப்பானது உண்மையான ஞானத்தை நோக்கி பிரிந்து செல்லமுடியும் என்பது தான் லங்காவதார சூத்திரத்தின் சாரம்.

    அனாத்ம வாதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பௌத்தம் உலகளாவிய மனம் என்ற கருப்பொருள் பற்றி பேசுவது தகாதது என்று தேரவாத பௌத்தர்கள் இக்கருத்தியலை ஒப்புக்கொள்வதில்லை. தேரவாதத்துக்கும் மகாயானத்துக்குமான முக்கியமான வேறுபாடு இங்கிருந்து தான் தொடங்குகிறது,

    மகாயான பௌத்தர்கள் இக்குற்றச்சாட்டை எப்படி எதிர் கொள்கிறார்கள்?

    பேராசிரியர் D.T Suzuki சொல்கிறார் : அனாத்ம வாதத்தை புறவுலகிற்குப் பொருத்தி விரிவுபடுத்துவதன் விளைவாக எழும் கிளைக் கருத்தியலே உலகளாவிய மனம். இரண்டு கருத்துகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை தாம். எல்லா பொருட்களுக்கும் உயிர்களுக்கும் ஆன்மா இல்லை என்று சொல்வது எல்லா இருத்தல்களுக்கும் இடையே ஒரு சிக்கலான உறவுமுறை இருப்பதை அங்கீகரிப்பதாகும். சார்புடைத் தோற்றத்தை கண்டறிந்த போதே இச்சிக்கலான உறவு முறையை புத்தர் கவனித்திருக்கிறார், ஆனாலும் அவருடைய உடனடி ஆர்வம் சீடர்களின் பேதைமைகளை பற்றுதல்களை விலக்குவதிலேயே இருந்த படியால், அனாத்மாவாதத்தின் முதற்படிகளை விளக்குவதோடு புத்தர் நின்றுவிட்டார். பௌத்த மதச் சிந்தனைகள் அனுபவங்களின் வளர்ச்சியினால், மனோதத்துவம் மீப்பொருண்மையையியலாக வளர்ந்தது ; சூன்யதா கோட்பாடு மகாயான பௌத்தர்களின் கருத்தில் அமர்ந்தது. அனைத்து பொருட்களும் ஆன்மா என்கிற சுயமற்றவை என்பதை வேறு மாதிரியாக சொல்லும் வழிதான் சூன்யதா தத்துவம். அனாத்ம வாதம் நிறுவப்பட்டபிறகு மகாயான பௌத்தர்களின் சூன்யதா (All things are empty), நிஷ்வபாவம் (without self-substance), அனுத்பாதம் (unborn) போன்ற கோட்பாடுகள் முக்கியமான அனுமானங்களே”

    இச்சிறு கட்டுரையை எழுத உதவிய நூல்கள் : (1) பேராசிரியர் D.T Suzuki எழுதிய லங்காவதார சூத்திரக் கட்டுரைகள், (2) அவருடைய மாணவர் Dwight Goddard எழுதிய லங்காவதார சூத்திரம் ; சுருக்கம்

    lankavatara

  • காவியக் கவிஞர் – பகுதி 2

    தைரியத்துடன் செயல் படுங்கள். அரச குடும்பத்தின் செல்வம் இங்கிருந்து மீளாமல் இருக்கட்டும். சாதாரண பெண்கள் தத்தம் வர்க்கத்தில் பிறந்த காதலர்களையே ஈர்ப்பார்கள்; ஆனால் உயர்ந்தோர் தாழ்ந்தோர், எல்லா வர்க்கத்தோரையும் உணர்வால் வளைப்பவரே சிறந்த பெண்கள்”

    உதயனின் பேச்சைக் கேட்ட பெண்கள் உடன் இளவரசனைக் கவரும் வேலையில் இறங்கினர்.

    ஏதோ பயம் கொண்டவர்கள் போல ஆனந்தம் தரும் சில சைகைகளை புருவங்களினால், பார்வைகளால், கொஞ்சும் வார்த்தைகளினால், புன்னகைகளால், அங்க அசைவுகளால் செய்தார்கள்.

    அரச ஆணையின் விளைவால், இளவரசனின் மென்மைத் தன்மையால், போதையூட்டும் காதல் உணர்வின் சக்தியால், அவர்கள் சங்கோஜத்தை களைந்தனர். பெண் யானைக் கூட்டங்களோடு இமய மலைக் காடுகளில் வலம் வரும் ஆண் யானையைப் போல மகளிர் சூழ தோட்டத்தில் இளவரசன் வலம் வந்தான். தேவ மங்கையரால் விப்ராஜனின் இன்ப வனத்தில் சூழப்பட்ட விவாஸ்வத் போல மகளிரின் கவனம் அவன் மேலிருக்க அத்தோட்டத்தில் இளவரசன் பிரகாசித்தான். பின்னர் சில பெண்கள் போதையின் தாக்கத்தில் சிக்குண்டவர்கள் போல் நடித்தவாறே, தம்முடைய உறுதியான, வட்டமான, நெருக்கமான குலை போன்ற அழகான மார்பகங்களால் அவனைத் தொட்டனர். பொய்யாக ஒருத்தி தடுக்கி விழுந்து, தோள்களிலிருந்து தொங்கும் கொடி போன்ற தன்னிளங்கைகளால் அவனுடைய தோளை மடக்கினாள்.

    Ajanta Cave Painting

    மது வாசனை வீசும் தாமிர நிறமான கீழ் உதடுகளை அசைத்து ஒருத்தி “ஒரு இரகசியத்தைக் கேள்” என்று அவன் காதில் முணுமுணுத்தாள். அவனுடைய கரத்தின் தொடுதலைப் பெற்றுவிடும் நம்பிக்கையில் களிம்பு தடவி ஈரம் படிந்த ஒருத்தி அவனிடம் ஆணையிடுபவள் போல் “இங்கு ஒரு கோடு வரை” என்று சொன்னாள்.

    இன்னொருத்தி போதையை சாக்காய்க் கொண்டு இடையின் மேகலை காணும் வண்ணம், திரும்பத் திரும்ப நீல நிற மேலாடையை வீழ வைத்துக் கொண்டிருந்தாள். அது இருட்டான வானத்தில் தோன்றி மறையும் மின்னலைப் போன்றதாய் இருந்தது. தங்களுடைய தங்க ஆபரணங்கள் சத்தமிடும் வண்ணம் சிலர் மேலும் கீழுமாக நடந்தனர்; அப்போது ஒளி ஊடுருவக் கூடிய ஆடையால் மறைக்கப்பட்ட அவர்களின் இடைப்பாகங்கள் தெரிந்தன. ஏராளமான மாம்பூக்கள் மலர்ந்திருந்த மாங்கிளைகளில் சாய்ந்தவாறு, தங்கஜாடிகளைப் போன்ற தம் மார்பகங்களைக் காட்டியவாறு மற்ற பெண்கள் நின்றிருந்தனர். தாமரை-விழி கொண்ட இன்னொரு பெண் தாமரைப் படுக்கையிலிருந்து எடுத்த ஒரு தாமரையுடன் தாமரை முகங் கொண்ட இளவரசனின் பக்கத்தில் பத்மஶ்ரீ போல் நின்று கொண்டாள்.

    இன்னொருத்தி அபிநயங்கள் பிடித்து பாடலொன்று பாடினாள் ; அவனுடைய அலட்சியத்தை பொருட்படுத்தாது அவள் பார்த்த பார்வை “நீர் உம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்” என்று சொல்வது போலிருந்தது. இன்னொருத்தி செந்நிறமான முகத்தில் தன் புருவங்களால் விற்களை வரைந்து அவனைப் போன்று பாவனை காட்டினாள் ; அவனுடைய பவித்திரமான நடத்தையை கேலி செய்வது போல சைகைகளைக் காட்டினாள். எழிலான வட்ட முலைகளும் காதணிகளும் சேர்ந்து குலுங்கும் படி சிரித்துக் கொண்டே ஒருத்தி “ஐயா, முடித்துவிடுங்கள்” என்று கூறி அவனைக் கிண்டல் செய்தாள்.

    இவர்களிடமிருந்து அவன் பின் வாங்கத் துவங்கிய போது, சிலர் பூமாலைகளைக் கயிறாக வீசி அவனைத் தடுத்தனர்; சிலர் மறைமுகக் கிண்டல் தொனிக்கும் மெலிதான வார்த்தைகளை அங்குசத்தைப் போல பயன் படுத்தி அவனைத் தடுத்தனர். கைகளில் பழுத்த மாம்பழத்தைப் பிசைந்து கொண்டு , அவனுடன் விவாதிக்க விரும்புபவள் போல், காமத்தால் தடுமாறிய குரலில் ”யாருடையது இம்மலர்?” என்றாள்.

    ஆணின் நடை-தோற்றப் பாவனையில் ஒருத்தி ”பெண்கள் உங்களை வெற்றி கொண்டார்கள்; நீங்கள் சென்று இப்பூமியை வென்று வாருங்கள்” என்றாள். நீலத் தாமரை மணம் கமழும் இன்னொருத்தி தன் கண்களைச் சுழற்றி, மிகையான உற்சாகம் காரணமாக தெளிவற்ற வார்த்தைகளில் இளவரசனை நோக்கி இவ்வாறு பேசலானாள்:

    “பிரபு! தங்ககூண்டில் அடைபட்டதைப் போன்று குயில் பாட்டு ஒலிக்க, தேன் மணக்கும் மலர்களால் சூழப்பட்ட இம்மாமரத்தைப் பாருங்கள் தீயால் எரிக்கப்படுவன போல் தேனீக்கள் ஒலியெழுப்பும் இவ்விடத்தில் காதலர்களின் துயரைப் பெருக்கும் அசோக மரங்களைப் பாருங்கள் மஞ்சற் களிம்பு பூசிய ஒரு பெண் வெண்ணிற ஆடை அணிந்த ஓர் ஆணைத் தழுவி நிற்பது போல் சிறு மாங்கிளையொன்று திலக மரங்களை தழுவியிருப்பதைப் பாருங்கள் பெண்களுடைய நகங்களின் அழகில் மயங்கி தலை சுற்றியது போல் வளைந்து அரக்கு போல ஒளிரும் குருவக மலர்களைக் காணுங்கள்.

    வெண்ணிற ஆடை பூண்டு சயனித்திருக்கும் சிவந்த பெண்ணைப் போல சிந்துவார புதர்கள் கரைகளில் வளர்ந்து நிற்கும் ஏரியைப் பாருங்கள். பெண்களின் அளப்பரிய வலிமையைக் கவனத்தில் கொள்க; மீன் கொத்தும் வாத்தொன்று ஒரு வேலைக்காரனைப் போல தன் துணையைப் பின் தொடர்வதைப் பாருங்கள். உணர்ச்சியூட்டும் குயிலொன்றின் அழைப்பைக் கேளுங்கள் ; எதிரொலி போன்று பதில் தரும் இன்னொரு குயிலின் சத்ததையும் கேளுங்கள். பறவைகளுக்குள் அதீத உணர்ச்சியை ஏற்படுத்தும் இளவேனிற்காலம், எதைப் பற்றி சிந்திப்பது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்த அறிவாளிக்குள் எதையும் ஏற்படுத்தாதோ?”

    காதல் வயப்பட்டிருந்த மனத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்த இளம்பெண்கள் இவ்வாறு பல விதங்களில் இளவரசனைக் கவர முனைந்தார்கள். இத்தகைய மருட்சிகளால் கொஞ்சமும் அசைவுறாத மனதினனாக இளவரசன் புலன்களின் மேலான கட்டுப்பாட்டை இழக்காமல் இருந்தான். தவிர்க்க இயலா மரணத்தின் இயல்பு பற்றிய சிந்தனையின் பாற்பட்ட அவன் வேதனைப்படவும் இல்லை; உவகை கொள்ளவும் இல்லை. அவர்களின் கால்கள் வாய்மையில் நிலைப்பட்டதாக இல்லாமல் இருப்பதை அந்த உயர்ந்த மனிதன் கண்டு கொண்டான்; ஒரே சமயத்தில் உறுதியாகவும் குழப்பத்திலும் இருந்த மனதில் இவ்வாறு எண்ணலானான்.

    ”முதுமையால் அழிக்கப்படக் கூடிய மேனி எழிலின் போதையில் சிக்குண்டிருக்கும் இப்பெண்கள் இளமையின் நிரந்தரமின்மையை அறிய மாட்டார்களா? நோய்களே இயற்கையின் விதி என்றிருக்கும் இவ்வுலகு பற்றிய பயம் சிறிதுமின்றி உல்லாசமாயிருக்கும் இவர்கள் நோய்வாய்ப்பட்டவர்களை இதுவரை கண்டதில்லை போலிருக்கிறது! குழப்பம் கொஞ்சமும் இல்லாமல், விளையாட்டும் சிரிப்புமாக வளைய வரும் இவர்களைக் காணும் போது எல்லாவற்றையும் கபளிகரம் செய்து விடும் மரணம் பற்றியதான அறியாமை மிக்கவர்கள் என்றே தோன்றுகிறது.

    மூப்பு, பிணி மரணம் பற்றி அறிந்த மனிதன், சிரிப்பதை விடுங்கள், உட்காரவோ, நிற்கவோ அல்லது படுக்கவோ கூட மாட்டானே! ஒரு மரம் மலர்களை, கனிகளை இழந்து வீழும் போதோ அல்லது வெட்டப்டும் போது, இன்னொரு மரம் அழாமலும் வருத்தப்படாமலும் இருப்பது போல, வயதானவர்களையும், நோய்வாய்ப்பட்டவர்களையும், செத்தவர்களையும் பார்த்தும் கூட பொருட்படுத்தாமல், கலங்காமல் இருப்பவர்கள் பகுத்தறிவற்றவர்களாகவே இருப்பார்கள்.”

    சிந்தனையில் மூழ்கி, புலனுணர்ச்சியில் ஆர்வமில்லாதவனாய் நின்றிருந்த இளவரசனை நோக்கி உலகியல் நடத்தையில், சாத்திரங்களில் வல்லுனனான உதயன் நட்பு மேலிட உரைக்கலானான் :

    ”தகுதி வாய்ந்தவன் என்ற காரணத்தினால் அரசர் என்னை உன் தோழனாக நியமித்தார்; அவர் என்னிடம் வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்துவதற்காக உன்னிடம் பேச விழைகிறேன். நட்பின் பண்பு மூவகைப்பட்டது. நண்பனை இலாபமற்ற செயல்களில் ஈடுபடவிடாமல் தடுப்பது, இலாபம் தரும் செயல்களில் அவன் ஈடுபட தூண்டுகோலாக இருப்பது மற்றும் கஷ்டங்களின் போது கூடவே இருப்பது. நண்பனாக ஏற்றுக் கொண்ட பிறகு, என் கடமைகளில் இருந்து விலகி, உன் நலன்களைப் பேணாதவனாக இருப்பேனாயின், நட்பு விதிகளை வழுவினவனாக ஆவேன்.

    உன் நண்பனாக இருக்கும் காரணத்தால் நான் இதை சொல்வது அவசியமாகிறது; இப்பெண்களுக்கு உரிய கவனத்தை நீ தராமல் இருப்பது, இளைஞனாகவும் சுந்தரனாகவும் இருக்கும் உனக்கு பெருமை தரக் கூடியது அல்ல. போலியாகவேனும் சரி, பெண்களை நிறைவு செய்வது சாலச் சிறந்தது, அவர்களுடைய நாணத்திற்கு எதிர்வினையாகவோ அல்லது நம்முடைய சுகத்திற்காகவோ! நல்ல பண்புகள் அன்பின் பிறப்பிடமாக இருப்பன. பெண்கள் மரியாதையை விரும்புபவர்கள். பணிவும் இணக்கமும் பெண்களின் இதயங்களை பிணைப்பன.

    உன் இதயம் இஷ்டப்படாவிடினும், நீ மரியாதையுடன் அவர்களை சந்தோஷப்படுத்துவது உன் அழகின் தன்மைக்கு பொருத்தமானதாக இருக்கும். பணிவன்பு மகளிரின் மருந்து; பணிவன்பு ஒர் அழகான ஆபரணம்; பணிவன்பிலாத அழகு மலர்களில்லா புதர் போன்றது. உண்மையான உணர்வுடன் அவர்களை ஏற்றுக்கொள்; அரிய புலனின்பங்களை பெறுகையில் நீ கழித்தொதுக்கக்கூடாது. காதல் உயர்ந்தபட்ச நன்மையைத் தரும் என்றே, புரம்தரா எனும் தேவன் (குறிப்பு : புத்தசரிதத்தில் இந்த பெயரே வருகிறது. இப்பாத்திரத்தை இந்திரன் என்ற பெயரில் நாம் அறிவோம்) கௌதமரின் மனைவி அகல்யாவின் மீது காதலில் விழுந்தான். சோமனின் மனைவி ரோகிணியை மணமுடிக்க அகஸ்தியர் கேட்டாரென்று மரபு சொல்கிறது. ரோகிணி போலவே இருக்கும் லோபமுத்திரையை அவர் மனைவியாகப் பெற்றார்.

    கடும் தபசிற்குப் பெயர் போன பிரகஸ்பதி உதாத்யரின் மனைவி மமதாவுடன் உறவு கொண்டு பாரத்வாஜரைப் பெற்றார். பிரகஸ்பதியின் மனைவியிடமிருந்து சந்திரன் புதனைப் பெற்றான். ஆசையை அடக்கிய பழம்பெரும் முனிவர் பராசரர் காளி எனும் மீனுக்குப் பிறந்தவளை யமுனா நதிக்கரையில் அணுகினார். அக்சமாலா எனும் கீழ் ஜாதிப் பெண்ணுடன் கூடி முனிவர் வசிஷ்டர் கபிஞ்சலாடன் எனும் மகனைப் பெற்றார். ஆயுட்காலம் முடிகின்ற தருணத்திலும் விஸ்வாசி என்கிற தேவமங்கையுடன் களியாட்டமிட்டான் யயாதி.

    பெண்ணுடனான புணர்ச்சி மரணத்தில் முடியும் என்ற சாபம் இருந்தும் கௌரவ வம்ச மன்னன் பாண்டு, மாத்ரியின் சௌந்தர்யத்தில் மயங்கி காதலின் இன்பங்களுக்கு தன்னை பலி கொடுத்தான். இது போனற உயர் நிலை மாந்தர் பலர் உடல் சுகம் பொருட்டு இழிவானதெனினும் புலனின்பங்களை துய்த்திருக்கின்றனர். வீரியம், இளமை, அழகு – எல்லாமிருந்தும் உனக்கு உரிமையாக வரும் இன்பங்களை நீ வெறுக்கிறாய்.”

    dancing_girls

    மறைகள் சொல்லும் மரபைச் சுட்டிக்காட்டி பேசப்பட்ட புறப்பகட்டான சொற்களைக் கேட்ட இளவரசன் இடி-மேகத்தின் குரலில் பதிலளித்தான் :-

    “என் மீதான உன் நட்பினை உன் சொற்கள் எனக்கு நன்கு புரிய வைத்தன. என்னைப் பற்றிய உன் தவறான மதிப்பீடுகளுக்கான என் பதில்களைக் கேள். புலன் வழிப் பொருட்களை நான் வெறுக்கிறேன் என்றில்லை ; இவ்வுலகம் முழுமையும் அவற்றில் லயித்திருக்கின்றன என்பதை நான் அறிவேன். ஆனால் என் மனம் அவற்றில் மகிழ்வதில்லை. ஏனெனில் அவற்றை நான் நிலையற்றவையாகக் கருதுகிறேன்.

    முப்பிணிகள் இல்லாமல் இருந்திருந்தால் நானும் புலன் வழிப் பொருட்களின் இன்பத்தை அனுபவித்திருக்கக்கூடும். பெண்களின் அழகும் சௌந்தர்யமும் என்றும் அழியாதனவாக இருந்திருந்தால், எவ்வளவு கெட்டவையாக இருந்தாலும் என் மனம் காதலின்பத்தை துய்த்திருக்கும். அவர்களின் சௌந்தர்யத்தை மூப்பு பருகிவிட்ட பிறகு, அவர்களுக்கே அது அருவெருப்பாக இருக்கும் ; அதனுடைய இன்பம் மனமயக்கத்தின் காரணமாகவே எழத்தக்கது.

    மரணம், மூப்பு, பிணி இவற்றுக்கு இரையாகப் போகிற ஒரு மனிதன் அவனைப் போன்று முப்பிணிக்கு இரையாகப் போகிற இன்னொருவரோடு குழப்பமில்லாமல் உறவாடுதல் பறவைகள் மற்றும் விலங்குகளின் நிலைக்கு சமானமானதன்றி வேறில்லை. வலிமையான மனிதர்களெல்லாம் உணர்ச்சிகளுக்கு அடிமையானவர்கள் என்கிற உன் வாதம் அவர்களெல்லாம் அழிந்து போனார்கள் என்பதைப் பார்க்கும் போது, மனதுக்குள் பதட்டத்தைத் தான் உண்டு பண்ண வேண்டும்.

    அழியும் தன்மையுடைத்தும், புலன் வழிப்பொருட்களில் பற்றை ஏற்படுத்தக்கூடியதும், சுயக்கட்டுப்பாட்டை அடையச் செய்யாத எதையும் நான் உண்மையான சிறப்புடையதென்று எப்போதும் கருத மாட்டேன். போலித்தனத்தை பயன்படுத்தியாவது ஒருவன் பெண்களுடன் சம்பந்தப்படுத்திக் கொண்டு விட வேண்டும் என்று நீ சொல்வதைப் பொறுத்த வரை, போலித்தனமான மரியாதையுடன் நான் என்றும் ஒத்துப்போக முடியாது.

    நேர்மையற்ற இணக்கத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. முழுமனதுடன் சேராத ஒன்றுதலை நாம் அறவே ஒதுக்க வேண்டும். இது போன்று இருக்கும் போது, பழிப்புக்கிடமான உணர்வுகளுக்குள் என்னை அழைத்து தவறான பாதைக்குள் அனுப்ப வேண்டாம். விரைந்தோடும் உணர்வுகளில் நீ அர்த்தத்தை காண்பாயானால், உன் மனம் உறுதி மிக்கதாகவும் வலுவானதாகவும் இருக்க வேண்டும். மரணப்பாதையில் படைப்பை அவதானிக்கும் போது, மிகக் கடுமையான அபாயத்துக்கு நடுவே, நீ புலன் வழிப் பொருட்களின் மீது பற்றுடன் இருக்கிறாய்.

    பிணி, மூப்பு, நோய்கள் பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருப்பதால், எனக்கோ பயமாகவும் கடும் மன உளைச்சலாகவும் இருக்கிறது. உலகமே தீயில் எரிவதை நான் உணர்வதால், மன சமாதானம் கிட்டுவதில்லை. திருப்தியும் அடைவதில்லை. மரணம் இன்றியமையாதது என்று அறிந்தவனின் நெஞ்சில் ஆசை எழுந்ததென்றால், அழுவதற்கு பதிலாக பெரிய ஆபத்தில் உவகை கொள்ளும் அவன் இதயம் இரும்பாலானது என்று நான் கருதுவேன்.”

    முழுமையான தீர்மானத்துடன் உணர்ச்சிகளுக்கு எதிராக இளவரசன் சொற்பொழிவை ஆற்றி முடித்தவுடன் கதிரவன் மேற்கு மலையின் பின்னர் மறைந்து கொண்டான்.

    அணிந்த மாலைகளும் ஆபரணங்களும் பயனற்றுப் போயின ; அவர்களின் அற்புதமான கலைகளும் கொஞ்சல்களும் வீணாயின ; நம்பிக்கைகள் விரக்தியாக மாறிய பிறகு, காதற்கடவுளை தம் இதயங்களுக்கு அடியில் அமிழ்த்தி வைத்துக் கொண்டு பெண்களெல்லாம் நகருக்கு திரும்பினர். மாலையில் நகரத்துப் பெண்கள் எல்லாம் பூங்காவில் இருந்து நீங்கியவுடன் பூமியாளும் மன்னனின் மகன் அனைத்தின் நிலையாமை பற்றியும் சிந்தித்தவாறே தன் குடிலுக்குள் நுழைந்தான்.

    Source : Ashvagosha’s Buddhacarita ; the Act of Buddha – English Translation from Sanskrit by E.H.Johnston

    நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=28557)

  • கச்சாமி – ஷோபா சக்தியின் சிறுகதை – ஒரு மதிப்புரை

    தத்துவங்களின் குறியீடாக விக்கிரகங்கள் உருவாக்கப்படுகின்றன. தத்துவங்களை ஆழமாக தியானிக்கும் பொருட்டு உருவான மதங்கள் சிந்திக்கும் பயிற்சியில்லாத சாமானியர்களுக்காக விக்கிரகங்களை படைத்துக்கொண்டன. “புத்தரைத் தேடாதே ; புத்த நிலையைத் தேடு” என்று முழங்கினார் புத்தர். ஆனால் தேரவாத பௌத்தத்திலிருந்து கிளைத்த பல்வேறு பௌத்த பிரிவுகள் புத்தரை ஆசானாக குருவாக மனிதராக மட்டும் எண்ணாமல் பரமனாகவும் ஆக்கின. பிரம்மாண்ட புத்தர் சிலைகள் காந்தாரத்தில் உருவாகத் தொடங்கின. பின்னர் பௌத்த உலகெங்கும் புத்தர் சிலைகள், விக்கிரகங்கள் பல்கிப் பெருகின. தியான நிலைப் புத்தர், பரி நிர்வாண நிலையில் புத்தர், பொன்னால் செய்யப்பட்ட புத்தர், புத்தரின் முன் பிறவிகள் என்று புனையப்பட்ட ஜாதகக் கதைகளின் ஒவ்வொரு நாயகனின் உருவிலும் புத்தர், என்று புத்தரின் திருவுருவங்கள் விகாரைகளிலும், ஸ்தூபங்களிலும், ஓவியங்களிலும் புத்தகங்களிலும் சித்தரிக்கப்படலாயின.

    முதலில் சமூகக் குறியீடுகளாகப் புரிந்து கொள்ளப்பட்டு, பின்னர் அரசியல் குறியீடுகளாகவும் இனக் குறியீடுகளாகவும் சமயக் குறியீடுகள் செயல்படுகின்றன என்பது கண்கூடு. காவியங்களினால், தத்துவநூல்களினால், காலகாலமாக நிற்கும் சிலைகளினால், பொது நினைவுகளில் அமைதியாக நிறுவப்படும் இக்குறியீடுகள், சமன் சிந்தனையற்ற மனங்களில் பெருமிதம், கர்வம், மேட்டிமைத்தனம் முதலான உணர்ச்சிகளை எழுப்ப வல்லனவாகின்றன. சிறுபான்மையினராய் இருக்கும் வேற்று நம்பிக்கையுடையோரின் மேல் அடையாள வன்முறையை திணிக்கும் சாதனங்களாகவும் பெரும்பான்மை சமூகத்தினரின் உபயோகத்துக்குள்ளாகின்றன.

    இலக்கியத்தில் குறியீடுகளை பயன் படுத்துதல் ஓர் உத்தி; சொல்ல வந்த கருத்தை பூடகமாக சொல்வதற்கும், வாசக அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் அவை ஏற்றவை. சக்தி வாய்ந்த படிமங்கள் சித்தரிக்கப்படும் சிறுகதைகள் வாசகரின் நினைவுகளில் நெடுங்காலம் தங்கும். மிகவும் பேசப்படும் சிறுகதைகளில் குறியீடுகளின் தக்க, பயனுறுதி மிக்க பயன்பாடு இன்றியமையாத அங்கமாயுள்ளது.

    shoba_shakthi

    ஷோபா சக்தியின் கச்சாமி (http://www.shobasakthi.com/shobasakthi/?p=1081) சிறுகதையினூடே புத்தர் வருகிறார் – கெய்லாவின் முதுகில் வரையப்பட்ட tattoo-வாக, நிலத்தில் கண்டெடுக்கப்பட்டு பின்னர் உடைத்து புதைக்கப்படும் புராதன சிலையாக, புளியங்குளத்தில் இன்னும் பிரசன்னமாகாத புத்தராக. ஒவ்வோர் இடத்திலும் புத்தரின் படிமம் நம்முள் வெவ்வேறு உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.

    கதை சொல்லியும் அவருடைய தோழியும் இலங்கையில் சுற்றுலா செல்கிறார்கள். தோழி தன் முதுகில் புத்தர் தியானம் செய்யும் சித்திரமொன்றை tattoo – குத்திக்கொண்டிருக்கிறாள். அது தெரியும் வண்ணம் உடை அணிந்திருந்ததால் போலீஸ் காரர்கள் விசாரிக்கிறார்கள். “புத்தரின் உருவத்தை உடலில் பச்சை குத்துவது தண்டனைக்குரிய குற்றம்” என்று அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கதை சொல்லியை அவனுடைய பூர்வீக கிராமத்துக்கு அழைத்து செல்வதாய் சொல்லியிருந்த தோழிக்கு ஏமாற்றவுணர்ச்சியில் ஆத்திரம் ; கோபம் மேலிட பிரச்னையை முடிவு செய்ய இலங்கையை விட்டு இருபத்தி நான்கு மணி நேரத்தில் வெளியேற முடிவு செய்கிறார்கள்.

    கதை சொல்லி இனப்பிரச்னையின் காரணமாக புலம் பெயர்ந்தவர்களில் ஒருவன். தான் ஆறு ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்குச் செல்லும் வழித்தடத்தை கண்டிக்கருகே அவன் காண்கிறான். அவன் ஏன் சிறை செய்யப்பட்டான் என்ற காரணம் சொல்லப்படவில்லை. கடந்தகால நினைவுகள் ஒரு சிறைவாசமாக அவன் மனதை பாரமாக அழுத்துவதை சொல்வதாக இதைக் கொள்ளலாம்.

    முன்னதாக வியட்நாமிலிருந்து இலங்கை செல்லும் எண்ணம் கதை சொல்லிக்கு வருகிறது ; காலியாகப் போய்விட்ட சொந்த ஊரில் தங்குவதற்கென்று ஓர் உறவினர் கூட இல்லாமல் போய் சந்திப்பதற்கென ஒருவரும் இல்லாமல் போன பிறகு கடந்த கால கசப்பான நினைவுகளின் வேதனையை தனியாக இருந்து தாங்கிக் கொள்ள இயலாது என்ற காரணத்தினாலோ என்னவோ “நீ என்னை யாழ்ப்பாணம் கூட்டிக் கொண்டு செல்வாயா?” என்று ஒரு சின்னக் குழந்தை போல கெய்லாவிடம் கேட்கிறான்.

    கெய்லாவின் free-spiritedness சம்பவங்கள் வாயிலாக தெளிவுற சொல்லப்படுகின்றன. கட்டுப்பாடுகளை ஏற்காத கிளர்ச்சியை கோபத்தினால் வெளிப்படுத்தும் கெய்லா, காதலன் தன் பூர்வீகத்தை காணாமல் திரும்பக் கூடாது என்ற அக்கறை மேலிட தன்னுடைய tattoo வை அழிக்க தன் முதுகில் ஊற்றிக் கொள்ளும் எரி சாராயம் free-spirit-ஐ வரம்புக்குள் அடக்கி வைக்கும் சட்டத்தின் இரும்புக்கரங்களின் குறியீடு. தோழமையின் பாற்பட்ட தாய்மை கலந்த அன்பின் பரிமாணமாகவும் இதைக் கொள்ளலாம்.

    Tattoo அழிந்து கருத்துப்போயிருந்த கெய்லாவின் முதுகுப்புற காயம் கதைசொல்லியின் மனதில் ஒரு பழைய நினைவைக் கிளறுகிறது. மலையகத் தமிழர்களை வன்னிக்காட்டுப் பகுதிகளில் குடியேற்றுவதற்கான இயக்கத்தில் கதை சொல்லி பங்கு பெற்ற போது நிகழ்ந்த சம்பவம். கதை சொல்லியும் அவனுடைய நண்பர்களும் செல்வா நகர் என்ற புது காலனியை சமைப்பதற்காக ஒரு நாள் குழி தோண்டிக் கொண்டிருந்த போது புத்தர் சிலையொன்று தட்டுப் படுகிறது. புத்தர் சிலை அவ்விடத்தில் கிடைத்தது என்று தெரிந்தால் வன்னி மண் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்பதை மறுப்பார்கள். பிக்குக்கள் வழிபாடுகளுக்கும், தொல்பொருளியலார் ஆய்வுகளுக்கும் வந்து குவிவார்கள் என்று சொல்லி பாதிரியார் ஒருவர் அச்சிலையை உடைத்து விடுமாறு ஆலோசனை கூறுகிறார்.

    புத்தரைக் கீழே போட்டுவிட்டு, நான் அலவாங்கால் முதல் அடியை புத்தரின் மார்பில் இறக்கினேன். சிலையிலிருந்து ‘கிலுங் கிலுங்‘ எனச் சில்லறை நாணயங்கள் குலுங்குவது போல ஒலி எழுந்தது. அலவாங்கு என் கைகளிலிருந்து துள்ளப் பார்த்தது. ஏதோ நூதனமான கல்லில் சிலையை உருவாக்கியிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். மூன்றாவது அடியில் புத்தரின் மார்பு இரண்டாகப் பிளந்தது. நாங்கள் மூவரும் ஆள்மாறி ஆளாக அடித்து அந்தச் சிலையைத் தூள் தூளாக்கினோம். ஒவ்வொரு அடிக்கும் ‘கிலுங் கிலுங்‘ என்ற ஒலி எழுந்துகொண்டேயிருந்தது. சிலையைச் சல்லிக் கற்களாகச் சிதைத்தோம். அந்தக் கற்களைகாட்டின் எல்லாத் திசைகளிலும் சில்லஞ் சில்லமாகக் குழிதோண்டிப் புதைத்தோம்

    பெரும்பான்மையரின் நோக்கின்படி வரலாறுகள் திரிக்கப்படுவதையும் அதனால் எழும் அச்சங்களின் பொருட்டு அதே வரலாறு இருட்டடிப்புக்குள்ளாக்கப்படுவதையும் மிக அழகாக எடுத்துக் கூறும் பகுதி இது. வரலாற்று உண்மைகள் ஏற்றுக் கொள்ளப்படும்போது அவை முரண்பட்டிருக்கும் இரு தரப்பினரையும் சுத்திகரித்துப் பிணைக்கிறதென்றால், உண்மைகள் குறித்த பெருமிதங்களும் அச்சங்களும் இருவரையும் பொய்மையால் பிணிக்கின்றன.

    கதை சொல்லியும் கெய்லாவும் பயணம் செய்யும் பஸ் புளியங்குளத்தருகே செல்வா நகருக்கருகில் நிற்கிறது. கதை சொல்லி தூங்குவதைப் போல கண்ணை இறுக மூடி தலை கவிழ்ந்திருக்கிறான். பேருந்துக்கு வெளியே “இந்த இடத்தில் புத்தர் சிலையொன்றை நிர்மாணிக்கப் போகிறோம் ; தானம் செய்யுங்கள்” என்று யாரோ உண்டியல் குலுக்குகிறார்கள். ஏற்கெனவே உடைத்தெறியப் பட்ட பழைய புத்தர் சிலை புதைந்திருந்த இடத்தில் ஒரு புதிய சிலை வரவிருக்கிறது ; அதற்கு முன்னரே சிங்களக் குரல்கள் வந்து விட்டதை கண்ணை மூடியவாறே கதை சொல்லி கேட்கிறான்..

    பஸ் நகரத் தொடங்கியவுடன் கெய்லா கதை சொல்லியில் தோள்களில் ஆதுரமாய சாய்ந்து கொள்ள, அவளின் காயத்தை அன்புடன் வருடி விடுகையில் கதைசொல்லியின் உள்ளங் கைகளில் புத்தர் இருந்தார் என்று சொல்லி கவித்துவமாக முடிகிறது கதை.

    +++++

    ஒரு ஜென் குட்டிக் கதை – கரிய மூக்கு புத்தர்

    ஒரு பெண் புத்தத் துறவி தன்னொளி பெறுவதற்காக அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். அவள் தங்கத்தால் வெகு அழகாக புத்தச் சிலை ஒன்றினைச் செய்தாள். எங்கு சென்றாலும் அந்தச் சிலையைக் கூடவே எடுத்துச் செல்வாள்.

    நாட்கள் கடந்தன. அப்படியே நடந்து கொண்டிருந்தவள், அமைதியான ஆனால் இயற்கை அழகுடன் இருந்த ஒரு கிராமத்திற்கு வந்தாள். அங்கு இருந்த சிறிய புத்தக் கோயிலை மிகவும் பிடித்து விட்டது. அங்கேயே வசிப்பது என முடிவெடுத்தாள். அந்தச் சிறிய கோயிலில் பல புத்தர் சிலைகள் இருந்தன.

    தன்னுடைய தங்கச்சிலைக்கு நறுமணப் பொருட்களை (சாம்பிராணி, ஊதுவத்தி) எற்றி வைக்க ஆசைப் பட்டாள். ஆனால் அந்த சின்னக் கோயிலில் இருந்த மற்ற புத்த விக்கிரங்களுக்கு தன்னுடைய நறுமணப் பொருட்கள் செல்லக் கூடாது என முடிவெடுத்தவள், அதற்காக ஒரு கூம்பு வடிவினால் ஆன புனல் ஒன்றினைத் தயாரித்தாள். சாம்பிராணி ஏற்றியதும், அது அவளுடைய புத்த விக்கிரத்திற்கு மட்டுமே போகும்படி செய்தாள். சாம்பிராணியும் புத்தரின் முகத்திற்கு அருகில் மட்டுமே சென்றது. ஆனால் கொஞ்ச நாட்களில் தங்க புத்தரின் மூக்கு கறுத்துப் போய் மிகவும் அசிங்கமாகிவிட்டது

  • காவியக் கவிஞர் – பகுதி 1

    ”மனதின் சாராம்சம் நிரந்தரமான தூய்மையை கொண்டதாக இருந்தாலும், அறியாமையின் தாக்கம் சூழல்-சார் மனதை சாத்தியமாக்குகிறது. சூழல் சார்ந்ததாக இருந்தாலும், மனம் நிரந்தரமானது ; மாசுமறுவற்றது ; சுத்தமானது ; மாற்றங்களுக்கு உட்படாதது. அதனுடைய மூல இயல்பு பிரத்யேகத்தன்மையில்லாமல் இருப்பதால், பல்வேறு முறையிலான இருப்பை எங்கும் சிருஷ்டி செய்தவாறு இருந்தாலும், அது தனக்குள் ஒரு மாற்றமுமிலாமல் தன்னை உணர்கிறது.

    விஷயங்களின் ஒட்டுமொத்தத்தின் ஒற்றைத் தன்மை ஏற்கப்படாத போது, பிரத்யேகத்தன்மையுடன் கூடிய அறியாமை எழுகிறது ; சூழல்-சார் மனதின் எல்லா நிலைகளும் வளர்கிறது. இக்கோட்பாட்டின் முக்கியத்துவம் ஆழமானது ; புத்தர்களைத் தவிர யாராலும் புரிந்து கொள்ள இயலாதது.” (more…)

  • நகரத்துப் பசுக்கள்

    cows-animale_400

    தீனீ போட்டு கட்டுப்படியாகாமல்
    விரட்டப்பட்ட நோஞ்சான் பசுக்கள்
    தெருக்களில் திரிந்தன
    வெள்ளைப் பசு
    முள்மரங்களை
    சுவாசம் பிடித்த படி நின்றது
    மஞ்சள் பசு
    சாலையோரங்களில் போடப்பட்ட
    கற்குவியற்களை நாவினால் தொடுகிறது.
    வெள்ளைப்பசுவின்
    இளங்கன்று
    பிளாஸ்டிக் குப்பைகளை
    ஆர்வத்துடன் நோக்குகிறது
    மாலை வீடு திரும்பாத
    பசுக்களைத்
    தேடி வந்த உரிமையாளன்
    மயங்கிக் தெருவில் கிடந்த பசுக்களை
    லாரியில் ஏற்றி வீட்டுக்கெடுத்து செல்கிறான்.

    இப்போதெலாம்
    பசுக்கள் வீதிகளில் அலைவதில்லை
    நவநாகரீக கோசாலையில்
    சுகமாய்க் காலங் கழிக்கின்றன
    காசு கொடுத்து
    பசுக்களுக்கு உணவூட்டிச் செல்கின்றனர் வாடிக்கையாளர்கள்
    இன்னுமொரு கிளை திறப்பதற்காக
    உரிமையாளன்
    கிராமத்திலிருந்து
    மேலும் பசுக்களை
    நகருக்கு அழைத்து வருகிறான்.