Category: Poems

  • கி மு 15-3-44

    பிரம்மாண்டம் ஜாக்கிரதை ஓ மனமே
    உன் இலட்சியங்களை விஞ்ச முடியாவிடில்
    தயக்கங்கலந்த முன்னெச்சரிக்கையுடன்
    அவற்றைப் பின்தொடர்
    முன்னகர்ந்து செல்லச்செல்ல
    மேலதிக விசாரணையும் கவனமும்
    உள்ளவனாய் நீ இருக்கவேண்டும்
    இறுதியில் ஜூலியஸ் சீஸரைப் போன்று
    உச்சியை அடையும்போதோ
    அத்தகைய புகழ்மிக்க மனிதனொருவனின்
    இடத்தை நீ பெறும்போதோ
    தமது பரிவாரங்கள் புடை சூழும் தலைவனைப் போன்று –
    தெருவில் செல்லும் சமயங்களில்
    அதிவிழிப்புடனிருத்தல் மிக அவசியம்
    சந்தர்ப்பவசமாக கும்பலிலிருந்து வெளிப்பட்டு
    கையில் கடிதத்துடன் அர்டெமிடோரஸ் உன்னை அணுகி
    "இக்கடிதத்தை உடனே படியுங்கள்
    உங்களை பாதிக்கும்
    தீவிர விஷயங்கள் இதில் உள்ளன" என்கையில்
    நிற்காமலிராதே
    காரியங்களையோ உரைகளையோ
    ஒத்திவைக்கத் தவறாதே
    உன்னை கும்பிட்டு தலைவணங்குபவர்களிடமிருந்து
    தலை திருப்பாமல் இருந்துவிடாதே
    – அவர்களை பின்னர் சந்தித்துக் கொள்ளலாம் !
    அமைச்சரவை கூட காத்திருக்கட்டும்
    உடனுக்குடன்
    அர்டெமிடோரஸின் எழுத்தை
    நீ வாசித்தேயாக வேண்டும்

    ( The ides of March – by Constantin Cawafy)

  • வரைபடம்

    1
    வரைபடத்தில் காண்கிறேன் வாழப்போகும் வீட்டை
    இடம், வீடு, எங்கு, எப்படி அனைத்தும் பிரக்ஞையில்
    கால ஓட்டம் பிரக்ஞையின் நகர்வு
    பிரக்ஞையை நகர்த்தி வீட்டுக்குள் வந்தடைந்தேன்
    அடுத்த இலக்கை அடைவதற்கு
    வரைபடத்தை காணவில்லை
    பிரக்ஞையை பின்னுக்கு நகர்த்தி
    தொடக்கத்துக்கு வந்தபோது
    பழுப்பேறி உளுத்துப்போன காகிதத்துண்டுகளே இரைந்து கிடந்தன.
    2
    கால இயந்திரத்தில் பயணித்தேன்
    வரைபடத்தை எடுக்க மறக்கவில்லை
    எதிர்காலத்தில் இருந்த
    வீட்டை அடைந்து உள்நுழையாமல்
    வரைபடத்தை மட்டும் சரிபார்த்தவாறு நின்றிருந்தேன்.
    3
    வரைபடத்தை பறக்கவிட்டேன்
    வளைந்து வளைந்து
    காற்றில் அளைந்து
    தரையில் விழும் அழகை ரசித்தேன்

  • மரக்கோயில்

    IMG_2559
    Ta Prohm (an ancient Buddhist temple, nearer to Angkor Wat Complex in Cambodia, built during the reign of  Jayavarman VII). The major sequences of the Angelina Jolie starrer Lara Croft : Tomb Rider was shot here.  This temple is known among the tourists as Tomb Rider Temple.

    கோயிலில் இருந்த மரம்   

    தனக்குள் கோயிலை அடக்கி வளர்கிறது   

    பாம்பென வேர்கள் படர்ந்து  

    இறுகின சன்னிதிகள்

    காலியான சந்நிதானத்துள்

    பிரதிஷ்டை கொள்ள வேண்டி

    ஓடின வேரின் கீழ் நின்று

    புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்

    மரங்கள் கோயில்களுக்குள் புகுந்து

    கடவுளாகி மறைந்த பின்னர்

    சட்டகத்துள் வைத்து தொங்க விட

     

  • ஔரங்கசீப் சாலை

    aurangzeb-road_647_082815051544

    தெருப் பெயர்கள் மாற்றப்பட்டு
    வரலாற்றின் பக்கங்கள் அழிக்கப்பட்டு
    பொது மனதின் பிம்பங்கள் துடைக்கப்பட்டு
    கற்பனையான இறந்த காலத்தின் சித்திரங்கள் வரையப்பட்டு….
    +++++
    தேடிப் போகும் வீடு இன்னும் கிடைக்கவில்லை
    இணைய வரைபடத்தின் புதுப்பதிப்பை இன்னும் தரவிறக்கவில்லை
    குறைவான தகவல் வேகம் தாமதப்படுத்துகிறது
    தேடிப் போகும் மனிதர்களின் பெயர்களும் மாறியிருக்கக் கூடுமா?
    +++++
    கல்லறையிலிருந்து எழுந்து
    வாளேந்தி வடக்கு நோக்கி சென்றதும்
    இன்னொரு கல்லறையிலிருந்து குதித்து
    குதூகலமாய் வடக்கு நோக்கி சென்றதும்
    நடுவழியில் சந்தித்துக் கொண்டன
    ஒன்றின் ஆவேசமும்
    இன்னொன்றின் உவகையும்
    ஒரு தெருவின் பெயர் மாற்றம் பற்றியதென
    இரண்டும் புரிந்து கொண்டபோது
    பெயரற்ற ஒரு காட்டுக்கிடையே இருந்த
    ஓர் இடுகாட்டை அடைந்திருந்தன
    திறந்திருந்த இரு குழிகளுக்குள் இறங்கி
    இளைப்பாற கண் மூடியவை
    பெயர் தெரியா காற்றடித்து
    பெயர் தெரியா மணல் மூடி
    பெயர் தெரியாமல் மறைந்து போயின

  • நஞ்சு

    ??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

    சிறு தளிர்கள்
    உதிர்ந்து விழுந்தன
    மொட்டுகள்
    மூச்சுத் திணறி வாடிப்போயின
    வேர் வழி
    உருவிலா நஞ்சு பரவி
    மரம் தள்ளாடிற்று
    ஒரு மரம் அழித்து
    தரை வழி அடுத்த மரத்துக்குத் தாவி
    அதி விரைவில்
    எதிர்காலத்தின் வனமொன்றை அழித்தது
    கருத்தின் வடிவிலும்
    கொள்கையின் வடிவிலும்
    தீவிரம் என்னும் உடையணிந்து
    வாதம் எனும் மகுடியூதி
    மூளைகளை தூக்கநடனத்தில் ஆழ்த்தி
    விழித்திருப்போரின் உடலை நீலம் பாரிக்க வைத்து
    நஞ்சு இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது.

  • ஏரி – கவிஞர் சல்மா

    ஸல்மா

    ஏரி
    ஏங்கிக் கருமையுற்ற முகத்தோடு
    ஏரி சலனமற்றிருக்கிறது
    சில நாட்களுக்கு முன்
    தயக்கமின்றி உன்னிடமிருந்து
    காலியான மதுக்கோப்பைகளை
    விட்டெறிந்திருந்தாய் அதில்
    மறுக்காமல் பெற்றுக்கொண்டது
    ஏரி
    பிறகொரு நாள்
    நீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக்
    கழுவிச் சாம்பலையும் கரைத்தாய்
    நேற்றுகூடக்
    கசந்துபோன நம் உறவினை
    இகழ்ந்து எச்சில் துப்பினாய்
    தண்ணீரில்
    எந்தக் காலமொன்றில்லாமல்
    எல்லாக் காலங்களிலும்
    உன் கழிவுகளைக் கொட்டி
    உன்னைச் சுத்தப்படுத்தியிருக்கிறாய்
    இன்று இதில் எதையும்
    நினைவுறுத்தாது
    உன் தாகம் தணிக்கத் தயாராகிறாய்
    உன் அசுத்தங்களை
    அடித்துக் கொண்டுபோக
    இது நதியில்லை
    ஏரி
    சலனமற்றுத் தேங்கிய நீர்
    பத்திரமாய்ப் பாதுகாக்கும்
    ஏதொன்றும் தொலைந்துபோகாமல்
    எனது வண்ணத்துப் பூச்சிகள்
    அறைச் சுவரில்
    நான் விட்டுச் சென்ற
    எனது வண்ணத்துப் பூச்சிகள்
    தமது பசை உதிர்ந்து
    பறந்து சென்றிருக்கலாம்
    நான் திரும்புவதற்குள்
     

    பாதைகள்

     அலமாரியில்
    அறைச் சுவரில்
    சுழலும் மின்விசிறியில்
    மோதித் தெறிக்கும் வெளவால்
    பல்லாயிரம் மைல்களுக்கப்பாலிருந்து
    கடலின் நீலத்தையும்
    மலைகளின் கூட்டங்களையும்
    கடந்து வரும் பறவைகள்
    இதுவரை
    தொலைத்ததில்லை
    தம் வழியை
     
    பிறழ்வு
    நான் பார்த்தறியாத
    உலகைக்
    குற்றவுணர்வுகளின் சங்கடங்களின்றி
    எனக்குத் திறந்துவிடும்
    உன் ஆர்வத்தில் தொடங்கிற்று
    நமது உறவின் முதலாவது பிசகு
    வெகுவான பிரயாசைகளுக்கும்
    மூச்சு முட்டல்களுக்கும் பிறகே
    உருவாக்குவேன்
    துளியளவு ஆட்சேபணையை
    வாழ்வின் எழுதப்படாத ஒழுங்குகளைக்
    காதோரத்தில் கிசுகிசுத்துக்கொண்டேயிருக்கும்
    அசரீரிகள்
    இன்றைய உணவை
    இக்காலத்தின் எனது உடைகளை
    அவற்றின் வேலைப்பாடுகளை
    இன்னும் என் உடலில் மறைக்கப்பட
    வேண்டிய அவயவங்களை
    காலில் சுற்றி வீழ்த்தும்
    கண்ணுக்குப் புலப்படாத வேலிகள்
    அச்சுறுத்தித் திருப்பும் என் சுவடுகளை
    தன் வழக்கமான சுற்றுப் பாதைக்கு
    இந்த இருப்பின் தடங்களை
    நாளையும் சரிபார்க்கவென மட்டுமே
    அஸ்தமிக்கும் இந்தப் பொழுது
    யாரோ எப்போதோ சமைத்த சாரமற்ற
    நேற்றைய உணவின்
    விதியிலிருந்து விலகி
    கூடு தேடிச் செல்லும் பறவைகளுக்கு
    இந்த வெற்றுப் படுக்கைகளை
    தந்துவிட்டு
    வெட்டவெளியொன்றில்
    தூங்க ஓரிடம் தேடினால் என்ன?
    இன்று
    ஒரு நாளைக்கேனும்
    இந்த சங்கடங்கள் தன்னால்தானென
    நம்மில் ஒருவர்
    பொறுப்பேற்றால் என்ன
    அல்லது
    நம்மில் ஒருவர் இங்கிருந்து தப்பிச் செல்ல
    இன்னொருவர் உதவினால் என்ன
    இதில் ஏதும் இல்லையெனில்
    ஏதேனும் வழியொன்றைத்
    தேட முயல்வோம்
    இந்த இரவை விடியாமல் செய்ய
    காலப் பதிவு

    விபத்திலிருந்து மீண்ட நாளின் உடை

    நாம் சந்தித்துக் கனிந்திருந்த
    வேளையில் பகிர்ந்திருந்த உணவு
    நெருங்கியவரின் மரணச் செய்தி
    வந்து சேர்க்கையில்
    என் கண்களைக் கடந்த
    சிவப்பு வண்ணக் கார்
    நகர்வதில்லை காலம்
    படிந்து உறைகிறது
    ஒவ்வொன்றின் மீதும்
     (இக்கவிதைகளை வலையேற்ற அனுமதித்த கவிஞர் சல்மாவுக்கு எனது நன்றிகள்)
  • அர்ஜுனன் காதல்கள் – சுபத்திரை

    Jagannath Pantheon
    Jagannath Pantheon

    வான் வெளியைப் போர்த்தி
    பூமியில் இரவாக்கி
    சிறு சிறு துளைகளில்
    வெண்தாரகைகள் வைத்து
    உயிர்களுக்கு நித்ரை தருகிறாள்
    பறவைகளைப் பள்ளியெழுச்சி
    பாடவைத்து இருள் போக்குகிறாள்
    மகாமாயையை ஏவி
    யோகமாயை
    நடத்தும் அளவிலா விளையாட்டு
    இரவும் பகலும் அனவரதமும்

    +++++

    ஒருமுறை
    நித்ரையில் உலகத்தோரை ஆழ்த்தி
    கருவொன்றை மாற்றி
    தன்னைப் புகுத்திக் கொண்டு
    சிசுவாய் வெளிப்பட்டு
    காற்றாய் மறைந்து
    அசரீரியாகி……

    +++++

    இன்னொரு முறை
    சுபத்திரையாகத் தோன்றி
    ஒற்றைப் பார்வையில்
    அர்ஜுனனை வசீகரித்து பித்தாக்கி
    சன்னியாச வேடமிடத் தூண்டி
    அண்ணன் கண்ணனின் சம்மதம் பெற வைத்து
    ரதமொன்றில் ஓட்டிச்செல்லும் எண்ணம் தந்து….

    இயக்கப்படுகிறோம் என்ற எண்ணம் மூளா
    ஓயா இயக்கம்
    திரௌபதியின் மௌன அங்கீகாரம்
    அபிமன்யுவெனும் வீர மகனின் பிறப்பு
    புத்திர சோகம்
    மாயை அருள்பவள்
    மாயைக்குட்பட்டாள்

    +++++

    இன்னொரு முறை
    யோக மாயை
    வெள்ளை யானையை
    கருவாய்த் தாங்கி
    சித்தார்த்தனைப் பெற்றெடுத்தாள்

    மகாமாயையுடன் தொடர்பு விலகாமல்
    பிடியில் சிக்காமல்
    நடு வழியில் நடந்து சித்தார்த்தன்
    தர்மச்சக்கரத்தைச் சுழற்றி புத்தனானான்

    +++++

    “மகாமாயை கொண்டு உன்னை இயக்கிய
    யோக மாயையை நான் இயக்கினேன்
    என்னை நீ இயக்குகிறாய்”
    கண்ணன் சிரிக்கிறான்

     

     

    நன்றி : பதாகை

  • அர்ஜுனன் காதல்கள் – உலூபி

    @ Dolls of India
    @ Dolls of India

    வளைந்தோடும் நதியின் கரையில்
    நீராடும் பார்த்தனின்
    இரு கால்களைச் சுற்றி வந்ததொரு நீள்நாகம்.
    வெட்கத்துடன் முத்தமிடும் இளங்காதலியாய்
    அது பாதத்தை தீண்டிடவும்
    நதியின் ஆழத்திற்கு இழுக்கப்பட்டான்.
    ஒளி ஊடுருவும் மாளிகையின்
    அறையில் விழித்தான்
    வெளியே நாற்புறமும்
    மீன்களும்
    நீர்ப்பாம்புகளும் நீந்திக் கொண்டிருந்தன
    பார்த்தனின் முன் எரிகுண்டம் ;
    நெய்யிட்டு
    தீ வளர்த்தான்.
    அதன் உக்கிரத்துடன் போட்டியிட்டது
    அருகிருந்த பாம்பின் கண்களில்
    படர்ந்திருந்த இச்சைத்தீ.
    கணத்துக்கொரு தரம் வடிவமாற்றம்
    பாம்பு
    பெண்
    பாம்புப்பெண்
    தீச்சடங்கு முடியவும்
    “இது சாட்சி” என்ற சங்கல்பத்துடன்
    பார்த்தனை நோக்கினாள்
    திரௌபதியும் யுதிஷ்டிரனும்
    இணைந்திருந்த அறையினுள்
    விபத்தெனவே நுழைந்ததனால்
    விதித்துக் கொண்ட வனவாசம் ;
    கவர்ந்திழுக்கும்
    சர்ப்பப்பெண்ணுடன்
    கூடுதல் முறையாகுமா?
    பாம்புப்பெண்
    அவனின் மனதோடு மௌனமாய்ப் பேசினாள்
    “சாபமில்லை ; மூத்தோர் சொல்லில்லை
    உமக்கு நீரே வழங்கிக்கொண்ட
    வனவாசத்தில்
    உம் மேல் ஆசையுற்று அணுகுபவளைக்
    கூடுதலில் பாவமில்லை”
    மாலையென காலடியில் சுருண்டது சர்ப்பம்
    மானிடப் பெண்ணாக எழுந்து
    இதழ் குவித்து நெருங்கினாள்
    அர்ஜுனன்
    காமநோய் தீர்க்கும் வைத்தியனானான்.
    நதியின் உயிரினங்கள்
    அறையின் திரையாகின

    oOo

    பின்னொருநாளில்
    நதிக்கரை மேடொன்றில்
    வலியுடன் கண் விழித்தான்
    விஷ பாணம் தாக்கி
    புண்ணான அவனுடலை
    பாம்புப்பெண்
    நாவால் வருடினாள்
    சற்றருகே ஒரு வாலிபன்
    வில்லும் அம்புமாய்
    பின்னே ஒரு வெள்ளைக் குதிரை
    யாரிவன் என்னைப் போல்?
    எங்கிருக்கிறோம்?
    கனவிலா? நனவிலா?
    உடலெங்கும் பாம்பு
    ஊர்ந்து வைத்தியம் பார்த்தது
    சலசலக்கும் நதியில்
    முதலைகள் மூன்று நீந்திச் சென்றன.
    இவைகளை முன்னர் சந்தித்திருக்கிறோமோ?
    இறந்தகால நிகழ்வுகளும்
    நிகழ்கால பிரக்ஞையும்
    ஒன்றிணைந்து குழம்பாகி
    வேறுபாடு காணவியலா கலவையாயின

    oOo

    “விஷமற்ற பாம்பினங்களில்
    நான் அனந்தன் ;
    ஆயிரம் பிரபஞ்சங்கள்
    கடுகளவில் என் தலையில் சுழலுகின்றன”
    கண்ணன் சிரிக்கிறான்

     

    நன்றி : பதாகை

  • அர்ஜுனன் காதல்கள் – உத்திரை

    Brihannala with Uttara (@ Ashok Roy)
    Brihannala with Uttara (@ Ashok Roy)

    அப்பா இருந்தார்
    அம்மா இருந்தாள்
    அண்ணன்மார் இருந்தனர்
    நானும் இருந்தேன்…
    இருந்தேனா?
    கண்ணாடியின் பிம்பத்திடமும்
    நிழற்பிரதிமையிடமும்
    பேசிக் காலங்கழித்திருந்தேன்.
    தென்றலாய் நுழைந்த
    பிருகன்னளை என்னுள்
    ஆனந்தத்தை வீசினா…..
    விகுதிக் குழப்பங்கள்
    நெருடவில்லை!

    +++++

    மிருதுவான கரங்கள்
    கடிவாளத்தை எவ்வாறு ஏந்தும்?
    அங்கம் அசைத்து
    அபிநயம் புரிபவனா குதிரையோட்டி?
    பிருகன்னளை ஆடவனாயிருக்கக்கூடுமா?
    பயந்தோடிய உத்தரகுமாரனுக்கு
    பதிலாக போரிட்டு கௌரவர்களை துரத்தினவன்
    அவனே தானா?
    சைராந்தரி சொல் கேட்டது பிழையோ?

    +++++

    உத்திரையின் நித்திரையில்
    தோன்றிட்ட கனவுக்குள்
    அர்ஜூனனின் கைப்பற்றி
    நடமிட்டாள் உத்திரை.

    +++++

    நனவுலகில்
    கைபிடித்ததோ வேறோர் இளங்கரம்
    பழைய நண்பனுக்கு புது வேடம்
    அர்ஜூன குமாரன் புல்லிய போது
    துளிர்த்த நீர்த்திரை மேல் இமைத்திரை
    அர்ஜுனனாகிய பிருகன்னளையின்
    புன்னகை தழுவிய முகம் மனக்கண்ணில்

    ++++++

    கணவனின் உடலைச் சாம்பலாக்கிய
    சிதைத் தீயின் கரங்கள் வாவென்றழைத்தன
    வயிற்றுச்சிசுவின் எடை
    அழுத்தியது
    குலுங்கியழுத அர்ஜுனனை
    நோக்கி நின்றாள்
    அடுத்த வேடத்துக்குள் நுழைகிறானோ?
    அர்ஜுனனின் பார்வையெல்லைக்குள்
    புலப்படா வேலியொன்றின் பின்
    நிரந்தரமாய் நின்றிருந்தாள் உத்திரை

    +++++

    “குரு,தோழன், மாமன், தந்தை
    மாறும் காலங்கள், மாறும் வேடங்கள்
    உன்னுள் மாறாமல் இருக்கும்
    என்னை உணர் அர்ஜூனா”
    கண்ணன் சிரிக்கிறான்.

     

    நன்றி : பதாகை (ஜூலை 20)

  • அர்ஜுனன் காதல்கள் – ஊர்வசி

    Urvashi_curses_Arjuna

    அலையிலாக் கடலின்
    ஆழத்தில் ஜனனம்;
    நித்ய யுவதி வடிவம்;
    தேவர், மனிதர், அசுரர், கந்தர்வர்
    எண்ணற்றோரைக் கிறங்கடிக்கும்
    ஊர்வசிக்கு இது ஒரு
    புது அனுபவம்.
    மானிடன் ஒருவனின்
    மறுதலிப்பு.

    அர்ஜுனன் அறைக்கு
    சென்று திரும்பியவள்
    கண்களில் ஏமாற்றம்.
    கரை மீறும் நதியலை போல்
    வெகுண்டு
    வேகவேகமாய்
    அலங்காரத்தை கலைத்தாள்.

    உடைகளைக் கழட்டத் தொடங்கியதும்
    கொஞ்சம் அமைதி.
    மார்புக்கச்சைகளை விலக்கியதும்
    மின்னலொளியில் ஒரு முறை
    பார்த்த மானிடன்,
    புருரவஸ்-சின் நிர்வாண நினைவு.
    கூடவே ஜோடி ஆடுகளின் பிம்பமும்.

    குரு வம்சத்து மூதாதையனுடன்
    முயங்கியதால்
    நான் தாய் ஸ்தானமாம்,
    வணக்கத்துக்குரியவளாம்,
    புணர்வதற்கில்லை என்று சொல்லியனுப்பி விட்டான்.
    பாவாடை தரையில் விழவும்
    நினைவுக் குளத்திற்குள்
    மூழ்கும் முன்னர்
    இதழில் புன்சிரிப்பு:
    அர்ஜுனனைக் கைபிடித்திழுத்து
    அருகிருந்து பார்த்த
    அவனது முகம் தோன்றி மறைந்தது-
    “புருரவஸ் ஜாடைதான் உனக்கு”

    +++++

    முட்படுக்கையில்
    கிடப்பவன் போல்
    புரண்டான் அர்ஜுனன்,
    நிர்வாணமாய்
    நீச்சலடிக்கும்
    ஊர்வசியின்
    காட்சி அவன் கனவில்.
    ஹ்ம்ம்ம்…
    சாபமிட்டுச் சென்றவளை
    இனி சந்திக்க முடியாது.
    பெருமூச்சு விடுபட்டு
    ஊர்வசி சூடிய
    ஒற்றை மலரை
    விழ வைத்தது.

    +++++

    “தாயையல்ல அர்ஜுனா,
    நீ நிராகரித்தது மகளை…
    நிம்மதியாய்த் தூங்கு!”
    கண்ணன் சிரிக்கிறான்.

    நன்றி : பதாகை (ஜூலை 13 இதழ்)