Tag: வழிபாடு

  • ஈஸ்வரப்பிரம்மம்

    கீதையின் பனிரெண்டாம் அத்தியாயத்தின் முதலாம் சுலோகம் அர்ஜுனனின் கேள்வியிலிருந்து தொடங்குகிறது. எல்லோருக்கும் இருக்கும் சந்தேகந்தான் அர்ஜுனன் வழியாக வெளிப்படுகிறது. இருவகையான வழிபாடுகள் உள்ளன. முதல் வழி – உருவத்துடன் விளங்கும் ஈஸ்வரனின் வழிபாடு. அடுத்த வழி – சுத்தப்பிரம்மத்தின் வழிபாடு. எதை வணங்குவது சிறந்தது? விஷ்ணு என்ற பெயருடன் பாற்கடலில் துயின்று கையில் சங்கு, சக்கரம் ஏந்தியவரும் நீலமேனி உடைத்தவருமானவரைக் கும்பிடுவது சிறந்ததா? அழிக்க முடியாததும் கண்ணில் தென்படாததுமாய் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை வழிபடுவதா? எது சரியான வழி?

    அர்ஜுனன் கேட்ட வினாவிற்கு கிருஷ்ணர் விடையளிக்கிறார். அவருடைய பதில் தெளிவாக எந்த விதக் குழப்பமில்லாமல் இருக்கிறது. சுற்றிவளைத்தும் உருவகங்களில் ஒளித்துவைக்காமலும் இருக்கிறது.

    “என்னிடத்தே மனத்தைச் செலுத்தி நித்திய யோகிகளாய், உயர்ந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுவோர் யாவரோ, அவர்களே யோகத்தில் சிறந்தாரென நான் கருதுகிறேன். “

    உருவத்துடன் விளங்கும் ஈஸ்வரனை வணங்குதல் சிறந்த வழிபாடு என்று குறிப்பிடுகிறார் கிருஷ்ணர். உருவமற்ற பரம்பொருளை வணங்குவது தவறாகுமா? இல்லை. அடுத்து வரும் இரண்டு சுலோகங்களில் அதையும் கூறிவிடுகிறார்.

    “அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் (தெளிவற்றதும்), எங்கும் நிறைந்ததும், கருதொணாததும், நிலையற்றதும், அசைவற்றதும், உறுதி கொண்டதுமாகிய பொருளை யாவர் வழிபடுகின்றனரோ, இந்திரியக் குழாத்தை நன்கு கட்டுப்படுத்தி எங்கும் சமபுத்தியுடையோராய், எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய அவர்களும் என்னையே அடைகிறார்கள்.”

    அப்படியென்றால் முதல் வழி ஏன் சிறந்தது? இரண்டு வழிகளுமே ஒரே இலக்கை அடைகின்றன எனில் ஒரு வழியை சிறப்பானது என்று பகவான் ஏன் குறிப்பிடுகிறார்? “’அவ்யக்த’த்தில் மனம் ஈடுபட்டோர்க்குத் தொல்லையதிகம்”. என்கிறார். ஈச்வர வழிபாடு போன்று சுத்தப் பிரம்மத்தை தியானிப்பது அவ்வளவு எளிதாக கைவரக்கூடியதன்று. “எல்லாத் தொழில்களையும் எனக்கெனத் துறந்து, என்னைப் பரமாகக் கொண்டு, பிறழாத யோகத்தால் என்னை நினைத்து வழிபடுவோர் யாவரோ, என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரண சம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன்.” என்று கூறி ஈஸ்வர வழிப்பாட்டை பகவான் முதன்மையானதாக்குகிறார்.

    பகவத் துதியை பக்தி யோகத்தை முதன்மைக்கு கொண்டு வந்த சமய நூல்களில் ஆதி நூல் பகவத் கீதை. இன்று ஒவ்வோர் இந்துவும் தமது இல்லங்களில் கோயில்களில் பின்பற்றும் கடவுள் வணக்க முறைக்கு இறையியல் அடிப்படையை அளிக்கும் சுலோகங்கள் மேல் சொன்னவை.

    சுத்தப் பிரம்மத்தை தியானிப்பதில் என்ன சிரமம்? உருவமற்ற பிரம்மத்தை தியானிப்பவர்களும் உயர்ந்த வீடுபேறை அடைவார்கள் எனினும் அதை அடையும் வழிகளில் அவர்கள் சிரமங்களை அனுபவிக்கிறார்கள். அவர்கள் முயற்சி போட வேண்டிய முயற்சி இரட்டிப்பாக்கிறது. அழியாத பிரம்மத்தின் மீது அல்லது ஆத்மன் மீது அர்ப்பணிப்புடன் தியானத்தில் ஈடுபடுபவர்கள் ஈஸ்வரனுக்குச் சொந்தமான, எங்கும் நிறைந்திருத்தல், பாவங்களற்ற தன்மை முதலான இறைகுணங்களை தமது சுயத்தின் / ஆத்மாவின் மீது சுமத்தி, பின்னர் அந்த ஆத்மாவை தியானிக்க வேண்டியுள்ளது. உருவமற்ற பிரம்மத்தை தியானிக்கும் வழிபாட்டுடன் ஒப்பிடுகையில் எட்டு இறைகுணங்களை ஈஸ்வரன் மீது உருவகப்படுத்தும் ஈச்வர வழிபாடு செயல் திறன் வாய்ந்தது.

  • அஷெம் வஹு – ஜோராஸ்ட்ரியர்களின் முதன்மை மந்திரம்

    ஜோராஸ்ட்ரிய சமயத்தின் வேதம் ஜென்ட் அவெஸ்தா. அது ஐந்து தொகுதிகளைக் கொண்டது. காதா, யஸ்னா, வெந்திதாத், விஸ்ப்-ராத், யஷ்ட். குர்தா அவெஸ்தா அடுத்த படியில் உள்ள புனித நூல் தொகுப்பு. குர்தா அவெஸ்தாவின் பாராயணத்தின் முடிவில் ஜொராஸ்ட்ரியர்கள் சொல்லும் மந்திரம் அஷெம் வஹு. இது தியான வழிபாடு. மிகப் பழமையான இந்த வழிபாட்டிற்கு பலவித மறுவிளக்கங்கள்.

    அவெஸ்தன் மொழியின் சிக்கலான தன்மை மற்றும் கூறப்படும் கருத்துகள் காரணமாக குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடும் பல மொழியாக்கங்கள் உள்ளன. ஆனால் மந்திரத்தை உச்சரிக்கையில் நம் சிந்தனையில் அதன் அர்த்தம் தன்னிச்சையாக வந்து மனதில் படியும் என்பது ஜொராஸ்ட்ரியர்களின் ஐதீகம்.

    aṣ̌əm vohū vahištəm astī
    uštā astī uštā ahmāi
    hyat̰ aṣ̌āi vahištāi aṣ̌əm

    அஷெம் வஹு வஹிஸ்தேம் அஸ்தி
    உஷ்டா அஸ்தி உஷ்டா அம்மாய்
    யத் அஷாய் வஹிஸ்தாய் அஷெம்

    ஆஷா எனப்படுவதன் முக்கியத்துவத்தை அதன் ஆற்றலைப் பேசுகிறது இந்த மந்திரம். ஆஷா எனும் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன.

    ஆஷா என்பது ஒரு சிக்கலான மற்றும் அதிக நுணுக்கமான பொருளைக் கொண்ட ஒரு ஜோராஸ்ட்ரியன் கருத்து. இது பொதுவாக ‘சத்தியம்’ மற்றும் ‘நன்னடத்தை’ ‘சரித்தன்மை’ அல்லது ‘நீதி’, ஒழுங்கு’ மற்றும் ‘சரியாகச் செயல்படுதல்’ எனப் பலப்பல அர்ததங்களைக் கொண்டது. குர்தா அவெஸ்தாவுக்கும் பழமையான ஜென்ட் அவெஸ்தாவில் ‘ர்த’ என்ற சொல் ‘ஆஷா’வின் இணைச்சொல். சூழல் சார்ந்த தாக்கங்களுக்கு இணங்க ஆஷாவின் அர்த்தம் வகுத்துக் கொள்ளப்படுகிறது. உலகம் ஆஷா என்ற சொல்லிலிருந்து துவங்கிற்று என்பது சமய நம்பிக்கை. “அழகு”, ”தூய்மை” – இன்னும் எத்தனையோ அர்த்தங்கள் அதற்கு!

    இந்த மந்திரத்தின் பொதுவான கருத்து என்ன?

    “ஆஷாவில் சிறந்த நன்மை இருக்கிறது
    அதுவே மகிழ்ச்சி; எவன் ஆஷாவைக் கடைப்பிடிக்கிறானோ அவனுக்கு மகிழ்ச்சி”

    (நவ்ரோஸ் தின சிறப்புப் பதிவு)

  • காஷ்மீர்ரிப்போர்ட்

    பெருநிலப்பரப்பில் வழிபாட்டுரிமை என்று பேசப்படுவது காஷ்மீரிகளுக்கு மீண்டும் மீண்டும் தொடர்ந்து மறுக்கப்படும் ஒன்று. 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கூட, காஷ்மீரின் முக்கியச் சின்னமான ஜாமியா மஸ்ஜித் 136 நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது. இது முதல் முறை அல்ல. இது போன்று கடந்த ஐம்பதாண்டுகளில் பலமுறை வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதி மூடப்பட்டிருக்கிறது.

    ஹஸ்ரத் பாலுக்குச் சென்ற போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஓர் அறிவிப்பு பலகை எனக்கு அதிர்ச்சியைத் தந்தது – “இது ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமே ; வேறு எந்தச் செயல்களும் அனுமதிக்கப்படாது”. தொழுகை செய்ய வருபவர்களை இப்படியா பயமுறுத்துவது?

    சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது ஆறு மாதங்களுக்கு, காஷ்மீர் மக்கள் பட்ட இன்னல்கள் நெஞ்சை உலுக்கின. ஆறு மாதங்கள் மொபைல் இணைப்புகள் இல்லாமல் வாழ்வதை கற்பனை செய்து பாருங்கள்! டெல்லியில் தற்போதைய ஆட்சியும் அதன் முக்கிய இரட்டையரும் இங்கு அதிகம் விரும்பப்படுவதில்லை என்பது கண்கூடு.

    உ.பி முதல்வர் டெம்ப்ளேட்டில் செயல்படுகிறார் ஜம்மு காஷ்மீரின் தற்போதைய லெஃப்டினன்ட் கவர்னர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (8/5/2022), இந்தியத் தொல்லியல் கழகத்தின் (ஏ எஸ் ஐ) பாதுகாப்பில் இருக்கும் வரலாற்று நினைவுச்சின்னத்திற்குள் முன்னறிவிப்பின்றி நுழைந்து ஹோமம் நடத்தியிருக்கிறார். இதுவரை கேள்விப்படாத ஒன்று. இதற்கு ஏஎஸ்ஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ராணுவத்தின் பங்கு பற்றி பலரிடம் பேசினேன். ஊக்கமளிக்கும் கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு கடைக்காரரிடம் நான் கேட்ட கேள்விக்கு – அவர் இந்தியாவை வெறுக்கிறாரா என்றால் – சுருக்கமான பதில் – “ஆம், அது இயற்கைதானே”.

    ஒவ்வொரு 20 அடிக்கும் ஒரு முழு ஆயுதமேந்திய சிப்பாய் தெருக்களைக் கண்காணிப்பதைக் காணலாம்.

    விரும்பத்தகாத அரசியல் பார்வைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், காஷ்மீரிகள் மிகவும் இனிமையாகவும், மரியாதையாகவும், விருந்தோம்பல் மிக்கவர்களாகவும் இருப்பதைக் கண்டேன்.

    பல சீக்கியர்கள் காஷ்மீரில் வாழ்வதைப் பார்த்தேன். பஹல்காமில் ஒரு சீக்கியரும் ஒரு காஷ்மீரியும் பங்காளிகளாக நடத்தும் ஓர் உணவகத்தில் உணவுண்டேன். சீக்கியர்கள் பள்ளத்தாக்கில் வாழும்போது பண்டிட்கள் ஏன் வெளியேற்றப்பட்டனர் என்பது குழப்பமாக உள்ளது.

    நாங்கள் தில்லி திரும்ப விமானத்தைப் பிடிக்க விமான நிலையத்தை அடையும் அதே நேரத்தில், விமான நிலையப் பகுதிக்கு அருகிலிருக்கும் அலுவலகமொன்றில் வேலை பார்க்கும் ஒரு காஷ்மீரி பண்டிட் (மீள்குடியேற்றத் திட்டத்தில் பள்ளத்தாக்கு திரும்பியவர்) வேலையிடத்திலேயே இரு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    தெற்கு காஷ்மீரில் இன்னும் மிலிடன்ஸி ஓயவில்லை. சுற்றுலாப் பயணிகளைச் ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்கள் முடிந்தவரை நெடுஞ்சாலை NH44 வழியாக மட்டுமே ஓட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக அனந்த்நாக் செல்லும் சில உள் சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

    தி காஷ்மீரி ஃபைல்ஸ் பிரபலமான திரைப்படம் அல்ல – நான் சந்தித்த கடைக்காரர்களிடம் நடத்தப்பட்ட முறைசாரா கருத்துக்கணிப்பின் அடிப்படையில். ஒரு சால்வை விற்பனையாளர் குறிப்பிட்டார் – நாங்கள் படத்தை எங்கே பார்ப்பது? – ஆம், இரண்டு தசாப்தங்களாக முழு பள்ளத்தாக்கிலும் சினிமா அரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் இல்லை. நம்ப முடிகிறதா?

    இந்தக் கோடையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரை மொய்க்கின்றனர். ஐனவரியிலிருந்து மே மாதத் தொடக்கம் வரை ஏழு லட்சம் சுற்றுலாப் பயணிகளை காஷ்மீர் வரவேற்றுள்ளது. இதை ஒரு மகிழ்ச்சி தரும் முன்னேற்றமாக சராசரி காஷ்மீரிகள் கருதுகின்றனர்.

    படம்: ஜாமியா மஸ்ஜித், ஶ்ரீநகர் – காஷ்மீரிகளின் மத-கலாச்சார நரம்பு மையம்