Tag: வலிமை

  • இப்னு கல்துனின் சுழற்சிக் கோட்பாடும் இஸ்லாமிய இறையியலுடன் அதன் தொடர்பும்

    இப்னு கல்துன் (1332–1406) – னுடைய magnum opus என்று கருதப்படும் “முகாதிமா” நூலில் நாகரிகங்களின் (அதாவது வம்சங்களின், அரசுகளின், ஆட்சி அமைப்புகளின்) எழுச்சி மற்றும் வீழ்ச்சியை விளக்கும் ஒரு சுழற்சி வரலாற்றுக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். அவரது கருத்துக்கள் இஸ்லாமிய இறையியலில், குறிப்பாக தெய்வீக விருப்பம், நீதி (‘adl’) மற்றும் உலக அதிகாரத்தின் நிலையற்ற தன்மை (dunya) ஆகியவற்றின் அடிப்படையில் வேரூன்றியிருந்தன.

    இப்னு கல்துனின் சுழற்சி வரலாற்றுக் கோட்பாடு

    நாகரீகங்கள் அவற்றின் தவிர்க்க முடியாத வீழ்ச்சிக்கு முன் மூன்று முக்கிய நிலைகளைக் கடந்து செல்கின்றன என்று இப்னு கல்துன் முன்மொழிந்தார்:

    1. எழுச்சி (நாடோடி வலிமை & Asabbiya ) – நாகரிகங்கள் வலுவான Asabbiya (சமூக ஒற்றுமை) கொண்ட ஒரு குழுவுடன் தொடங்குகின்றன. பாலைவன பழங்குடியினர் அல்லது போர்வீரர் குழுக்களிடையே பெரும்பாலும் காணப்படும் இந்த ஒற்றுமை, அவர்களை வெற்றி பெற்று ஆட்சியை நிறுவ துணை செய்கிறது. புதிய ஆளும் வர்க்கம் எளிமை, ஒழுக்கம், நீதி உணர்வு ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்டு எழுச்சியடைகிறது.

    2. சிகரம் (அதிகாரத்துவ ஸ்திரத்தன்மை / செழிப்பு) – ஆட்சிக்கு வந்ததும், ஆளும் உயரடுக்கு அதிகாரத்தை மையப்படுத்தி நிர்வாக நிறுவனங்களை உருவாக்குகிறது. பொருளாதாரம், கலைகள், கலாச்சாரம் செழித்து வளர்கிறது. இருப்பினும், ஆட்சியாளர்கள் ஆடம்பரத்திலும் வசதியிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக மாறும்போது Asabbiya பலவீனமடையத் தொடங்குகிறது.

    3. சரிவு (ஊழல் மற்றும் ஒற்றுமை இழப்பு) : ஆட்சியாளர்கள் தங்கள் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, பழங்குடி வீரர்களுக்குப் பதிலாக கூலிப்படையினரை நம்பியிருக்க்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகின்றனர். ஊழல், அநீதி, அதிக வரிவிதிப்பு ஆகியவை அரசை பலவீனப்படுத்துகின்றன. இறுதியில், வலுவான Asabbiya-வுடன் ஒரு புதிய குழு உருவாகிறது. பழைய வம்சத்தை தூக்கியெறிந்து, சுழற்சியை புதிதாகத் தொடங்குகிறது.

    இஸ்லாமிய இறையியல் தொடர்புகள்

    1. உலக அதிகாரத்தின் நிலையற்ற தன்மை – உலக அதிகாரம் தற்காலிகமானது என்ற குர்ஆனியக் கருத்தை இப்னு கல்தூனின் சுழற்சி பிரதிபலிக்கிறது:

    “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும், நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகிறாய்”

    குர்ஆன் 3:26)

    நாகரிகங்கள் உயர்ந்து வீழ்ச்சியடைவது போல, செல்வமும் அதிகாரமும் அல்லாஹ்வின் சோதனைகள் (ஃபித்னா, குர்ஆன் 8:28).

    2. ஒழுக்கம், நெறிமுறை தலைமைத்துவம் – இஸ்லாமிய இறையியல் நீதி (‘adl’)யை வலியுறுத்துகிறது. ஆட்சியாளர்கள் நீதியைக் கைவிட்டு ஊழல் செய்யும்போது நாகரிகங்கள் வீழ்ச்சியடைகின்றன என்னும் இப்னு கல்தூன் கோட்பாடு குர்ஆனின் எச்சரிக்கையுடன் ஒத்துப்போகிறது:

    “அல்லாஹ் நம்பிக்கைப் பத்திரங்களை அவை யாருக்குக் கிடைக்க வேண்டுமோ அவர்களிடம் ஒப்படைக்கும்படியும், மக்களிடையே நீங்கள் தீர்ப்பளிக்கும்போது நீதியுடன் தீர்ப்பளிக்கும்படியும் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்.” (குர்ஆன் 4:58)

    3. தெய்வீக விருப்பத்தின் பங்கு (Qadar) – இப்னு கல்துனின் கோட்பாடு சமூக, பொருளாதார சக்திகளை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், வரலாறு தெய்வீக விருப்பத்தின்படி (Qadar) விரிவடைகிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், ஊழ்வலி வாத விளக்கங்களைப் போலல்லாமல், மனித agency-யை வலியுறுத்தினார் – சமூகங்கள் அவற்றின் சொந்த தார்மீகச் சிதைவின் காரணமாக வீழ்ச்சியடைகின்றன, முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதிகளினால் அல்ல.

    4. மனநிறைவுக்கு எதிரான எச்சரிக்கைகள் – வெற்றியில் விளையும் ஆணவம், மனநிறைவுக்கு எதிராக குர்ஆனும் ஹதீஸும் மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றன. ஆட்சியாளர்கள் மிகவும் வசதியடைந்து, நீதியுணர்வை இழந்துவிடும்போது நாகரிகங்கள் வீழ்ச்சியடைகின்றன என்று இப்னு கல்துன் குறிப்பிட்டார். – “எத்தனையோ ஊர்களை – அநியாயம் செய்த நிலையில் அவற்றை நாம் அழித்திருக்கிறோம்; அவற்றின் முகடுகள் மீது அவை விழுந்து கிடக்கின்றன; எத்தனையோ கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன; எத்தனையோ வலுவான மாளிகைகள் பாழ்பட்டுக் கிடக்கின்றன.” (குர்ஆன் 22:45)

    #ரம்ஜான்போஸ்ட் : 8.3.2025

  • சரணடைதலின் கண்ணீர் – நிஷா மன்சூர்

    நண்பர் நிஷா மன்சூர் அவர்களின் கவிதை. அவர் அனுமதியுடன் இங்கு பகிரப்படுகிறது.

    ————————————————————

    ஆதித்தந்தை உகுத்த கண்ணீர்
    இன்னும் மழையாய்ப் பொழிந்து
    மண்ணை நெகிழ வைத்து
    இறைஞ்சுதலால் விண்ணை நிரப்புகிறது,
    “எமது கரங்களாலேயே
    எமக்குத் தீங்கிழைத்துக் கொண்டோம் ரட்சகனே”

    யூப்ரடீஸ் நதியில் ஓடிக் கொண்டிருந்த
    யாகூபின் கண்ணீர் நதி
    கிணற்றில் வீசப்பட்ட முழுநிலவின்
    வியர்வையை நுகர்ந்தபின் அருள்நதியானது.

    யூசுஃபின் பின்சட்டைக் கிழிசலில் சம்மணமிட்டிருக்கும்
    ஒழுக்கத்தின் முத்திரை
    ஆழியூழி காலம்வரை
    வல்லிருளை வெல்லுமொளியாக
    நின்றிலங்கிக் கொண்டிருக்கும்.

    ஹூத் ஹூதின் சொற்கள் மலர வைத்தன
    சுலைமானின் புன்னகையை.

    முகமறியா பெருமகனின் ஆன்ம வலிமை
    கொணர்ந்தது,
    கண்ணிமைக்கும் நேரத்தில் பல்கீசின் சிம்மாசனத்தை.

    சிற்றெரும்புகள் புற்றேகித் தஞ்சமடையும் தருணம்
    பூமியதிர்ந்து பதிந்தன,
    சுலைமானின் குதிரைப்படைக் குளம்புகளின் தடங்கள்.

    கரையான்கள் அரித்து அஸா உதிர்ந்து சுலைமான் சரியும்வரை
    ஜின்கள் உணரவில்லை,
    சுவாசமின்மையின் தடயத்தை

    எறும்புகளை உதாரணம் காட்டத் தயங்காத பரம்பொருள் கேட்டது,
    “மனு ஜின் கூட்டத்தாரே உங்கள் இறைவனின் அருட்கொடைகளில்
    நீங்கள் எதனைப் பொய்யாக்குவீர்கள் ?”

    எம் இதயமும் உயிரும் சமர்ப்பணமாகும்
    முகில் கமழும் நயினார் முஹம்மது ரசூல் பகர்ந்தார்,
    “உங்களது வெற்றியின் மீது
    நான் பேராவல் கொண்டுள்ளேன்”*

    ஜகமெங்கும் ஒலிக்கிறது,
    வெற்றியின் ஓங்கார முழக்கம்.

    “மற்றவர்கள் எத்தகையினராயினும் என்கொடிய
    வல்வினை அகற்ற வசமோ
    மலை இலக்கென நம்பினேன் நம்பினேனென்று
    வந்தெனுட் குடிகொள்குவையோ.”*

    #

    *திட்டமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்களுடைய வெற்றியில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப்பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கின்றார்’. (9:128).

    *குணங்குடி மஸ்தான் பாடல் வரிகள்.

  • ஒரு தத்துவக் குறிப்பு – நட்பாஸ்

    சிறப்புப் பதிவு : நட்பாஸ் 

    திரு கணேஷ் வெங்கட்ராமன் அவர்களுக்கு,

    சொல்வனம் இணைய இதழில் வந்த உங்கள் ‘ஒரு முடிவிலாக்  குறிப்பு’ (https://solvanam.com/2021/11/28/ஒரு-முடிவிலாக்-குறிப்பு/) படித்தேன். புனைவா வாழ்க்கைக் குறிப்பா தெரியவில்லை, ஆனால் அதன் வலிமை என்னையும் கொஞ்சம் வாழ்க்கையை பற்றிச் சிந்திக்கத் தூண்டியது. இதோ அளிக்கிறேன், ஒரு தத்துவக் குறிப்பு.

    நட்பாஸ் 

    நம் சிக்கல்களுக்கு நம்மைத் தவிர வேறு யாரும் தீர்வு காண முடியாது. நம் பிரச்சினைகள்தான் நாம், இவற்றால்தான் நாம் நாமாய் இருக்கிறோம். எந்த ஒரு விஷயத்திலும் தனி நபராய் என் பிரச்சினை வேறு யாருக்கும் அதே மாதிரி இருக்க வாய்ப்பில்லை. சிலந்தி, வலை பின்னுவது போல் உணர்ச்சிகளாலும் எண்ணங்களாலும் செயல்களாலும் நம்மைச் சுற்றி நாமே கண்ணுக்குத் தெரியாத இழைகளால் ஒரு வலை பின்னிக் கொள்கிறோம். துரதிருஷ்டவசமாக, நாமே அதில் சிக்கிக் கொள்ளவும் செய்கிறோம். (நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் சிலந்தி வலை அதன் மனதின் பருண்ம வடிவம் என்று சொல்லும் இந்தக் கட்டுரையை பாருங்கள் – The Thoughts of a Spiderweb, Quanta Magazine https://www.quantamagazine.org/the-thoughts-of-a-spiderweb-20170523/)

    நாம் பின்னிய வலைகளில் சிடுக்கு ஏற்படுகிறது என்றால், அதற்கு காரணம் நாம்தான், அது நம்மில் ஒரு அங்கமும்கூட. வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு அதன் வேர்கள் நம் இதயத்தோடு பிணைந்து நம்மில் ஒன்றியிருப்பது தெரிய வாய்ப்பில்லை. அவர் எவ்வளவு நியாயமாக பேசினாலும், அவரது தர்க்கம் எத்தனை வலுவானதாக இருந்தாலும், நம்மை அது காப்பாற்றக் கூடியதல்ல. நம் மனதுக்கு நியாயம் என்று தோன்றுவது, நம்மைச் சரியான திசையில் கொண்டு செல்லும் என்பது உறுதியல்ல. அறிவுரைகள் சரியாகவே இருந்தாலும் அது தீர்வு காண உதவாது. வேறொருவர் அப்படிச் செய்ய முடியும், ஆனால் என்னைப் போன்ற ஒருவனுக்கு இதில் என்ன தவறு, நம்மால் முடிகிற வேலைதானே என்று இருக்கும், இருந்தாலும் ஒன்றும் பண்ண முடியாது. காரணம், அவர் வேறு மாதிரி, நான் வேறு மாதிரி.

    எனவே யாராக இருந்தாலும் இந்த புரிதலுடனும் தன்னடக்கத்துடனும்தான் நாம் தீர்வு சொல்ல வேண்டும்.

    உலகில் வெற்றி பெற்றவர்களைப் பார்க்கிறோம் – விஞ்ஞானிகள், பெரும்பணக்காரர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், அரசியல்வாதிகள். உலகில் தலை சிறந்த அறிவு, மிக அதிக பணம், ஆகச் சிறந்த புகழ், அதிகாரம், எதுவும் போதுமானதாக இல்லை. இவர்கள் வாழ்க்கையைப் பார்த்தால் மிக மோசமான மன வேதனை, காயங்கள், செயல்கள் இருக்கும். குடும்பத்தை கவனித்துக் கொள்ள மாட்டார்கள், மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள், மணமுறிவு, போதைப் பழக்கம், தற்கொலை. வெற்றியோ, அதன் பயன்களோ, உபகரணங்களோ மனதுக்கு மகிழ்ச்சியோ ஆறுதலோ தருவதற்கு தம்மளவில் போதுமானதாக இருப்பதில்லை.

    அதே சமயம் தெருவில் நடைபாதை பிச்சைக்காரன் பின்னால் கூட ஒரு நாய் போகிறது, அவனும் அதற்கு ஏதோ ஒன்றை சாப்பிடப் போடுகிறான். மனதுக்கு நல்லது எது என்று பார்த்தால், தன்னலமின்மை என்றுதான் தோன்றுகிறது. நான் எனது என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதற்கு மாறாக, நம்மைச் சுற்றி இருப்பவர்கள் வாழ்வை ஏதோ ஒரு வகையில் இன்னும் நன்றாக வாழத்தக்க ஒன்றாய் மாற்ற முயற்சி செய்பவர்கள். அவர்களுக்கும் மன அழுத்தம் வரலாம், அச்சம், அவநம்பிக்கை ஏற்படலாம். ஆனால் அவர்கள் குடும்பத்தை தவிக்க விடுவதில்லை, போதைக்கு அடிமையாவது இல்லை, தற்கொலை செய்து கொள்வதில்லை.

    அகத்தின் மீது ஒரு போர்வை போல் இருப்பது சுயம். ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு வகையில் இறுக்கமாய் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சிலரே அதை மூச்சு முட்டும் அளவு இழுத்துப் போர்த்துக் கொள்கிறார்கள், கஷ்டப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் அதை விட அபூர்வமானது நிர்வாணம். இந்த அபூர்வ மனிதர்கள் எல்லாம் பிறருக்கு என்று இருக்கிறார்கள், ஒருவன் பிறருக்கு தருவதை எல்லாம் தனக்கே தந்து கொள்கிறான் என்று புதிர் போடுகிறார்கள்.

    பிறருக்காக வாழ்பவர்கள் வாழ்வில் எத்தனை நெருக்கடி இருந்தாலும், எத்தனை அவலம் இருந்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அவர்கள் எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டு அதை அளவிட முடியாது. எவ்வளவு கொடுக்கிறார்கள், என்னவாக இருக்கிறார்கள் என்பதுதான் அவர்கள் வாழ்வின் அர்த்தம். ஒரு பணக்காரனைப் பற்றி, “He is worth Billions,” என்கிறோம். ஆனால் ஒரு அம்மா அல்லது அப்பாவைப் பற்றி, அவர்தான் குடும்பத்துக்கு எல்லாம் என்கிறோம். யார் மதிக்கிறார்களோ இல்லையோ, இவர்கள் வண்டி இழுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் என்ன செய்தோம் என்பது அல்ல, நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் இறுதி அளவை. செய்து முடிந்தவுடன் ஒன்றுமில்லை என்று கையைத் தட்டி விட்டுக் கொண்டே போக வேண்டியதுதான்.

    செய்ததை வைத்துக் கொண்டிருப்பது, செய்ய வேண்டியதைப் பற்றிய கவலைகளை வளர்த்துக் கொண்டிருப்பது, வாழ்க்கையைச் சிக்கலாக்குகிறது. நம்மையே சிக்கலான ஆட்கள் ஆக்குகிறது. இதற்கு மாறாக, இப்போது என்ன இருக்கிறதோ, அதிலிருந்து பிறருக்கு கொடுப்பது, நம்மை விடுவிக்கிறது. என்ன செய்வது பிடித்திருக்கிறதோ, எது சுலபமாக இருக்கிறதோ, அதை நன்றாகச் செய்வது என்று இருக்கும்போது எல்லாம் சரியாய்த் தொடர்கின்றன. எனக்கு கணிதம் பிடித்திருக்கிறது, கவிதை பிடிக்கிறது என்றால் நான் கணித மேதையாகவோ நோபல் கவிஞனாகவோ ஆகாதபோதும், அதனால் ஒரு பைசா பிரயோசனப்படாதபோதும், என் ரசனை, என் நேசம், நான் கற்றுக் கொண்டது என் வாழ்வை ஏதோ ஒரு வகையில் வளமைப்படுத்துகிறது.

    இதை எல்லாம் இன்னொருத்தார் எனக்கு வேறு சொற்களில் சொல்லலாம், ஆனால் உண்மையை நான் என் கண்களால் காண வேண்டும், என் இதயம் கொண்டு நான் உணர வேண்டும். அதுதான் உள்ளே இறங்கும், எனக்கு உதவும். பிறர் சொல்வதல்ல, நானே கற்றுக் கொள்வது.

    நாமே இவ்வுலகம். நமதே இவ்வுலகம். நாம் இவ்வுலகின் நாயகர்கள். நம்மைப் பற்றி மட்டுமே நினைத்து இதை நாசமாக்கிக் கொள்ளலாம், நம்மைக் குறைத்துக் கொண்டு பிறருக்கு இடம் கொடுத்து, இதை நல்லதாக்கிக் கொள்ளலாம். பெரிய பெரிய விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதில்லை. குறுகிய மானப்பான்மையிலும் உணர்வின்மையிலும் நம்மையொத்த இந்த தன்னலம் கொண்டு உழலும் அவல மனிதர்களுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய நன்மையும் மாற்றம் அளிக்கும்.

    இந்த அர்த்தத்தில்தான் பிறருக்கு கொடுப்பதெல்லாம் நமக்கே கொடுத்துக் கொண்டதாகிறது. நம் வாழ்வு இவ்வாறுதான் செழுமையடைகிறது. பணத்தால் அல்ல, புகழால் அல்ல, அறிவால் அல்ல, சக மனித உறவுகளில்தான் வாழ்வின் மதிப்பு கூடுகிறது. இதயத்தில் என்ன இருக்கிறது, அதிலிருந்து என்ன வருகிறது என்பதுதான் கேள்வி. ஏனெனில், இதயம்தான் காயப்படுகிறது, தனிமையை உணர்கிறது, வலியால் துடிக்கிறது. பிறரை இணைத்துக் கொள்வதில், இன்னும் விரிவதில், ஆழப்படுவதில் அது குணமடைகிறது. 

  • இரண்டு நண்பர்கள் இரண்டு பாடங்கள்

    சில சமயங்களில், குறிப்பாக, பதற்றமாகக் கழிந்த நாளின் இரவுப்போதில் கவிதை வாசிக்கத் தோன்றும். இப்போதெல்லாம் அதிகமும் இரண்டு கவிஞர்களின் கவிதைகள் தாம் மனதை ஆற்றுப்படுத்துபவையாக இருக்கின்றன. ரூமி மற்றும் ரியோகன். மெல்ல மெல்ல மனதின் பரபரப்பை குறைத்து உறக்கத்துக்கு முன்னதான ஆல்பா ஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்பவையாய் உள்ளன இவ்விருவரின் கவிதைகளும். இது என் சொந்த அனுபவந்தான். எல்லோருக்குமே இக்கவிதைகள் இதே குளிர்ச்சியை அளிக்குமா எனத் தெரியாது.

    சொந்த வாழ்வில் கிடைத்த ஓர் அனுபவம் அளவற்ற மன அவஸ்தையை கொடுத்து கொண்டிருந்தது. சதா அது பற்றிய சிந்தனையோட்டத்தினால் என் மனத்தில் மிகுந்த உளைச்சல். உடனடியாக அந்த அனுபவத்தின் விளைவைச் சரி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. என்ன செய்யவேண்டும் என்று தெரியும். ஆனால் செய்யமுடியாத சூழ்நிலை. உதவியற்ற ஒரு நிலை. 

    நேற்றிரவு தூக்கமே வரவில்லை. கவனத்தை திசை திருப்ப பலவிதங்களில் முயன்றேன். ரூமி ஞாபகம் வந்தார். The Essential Rumi புத்தகத்தைப் புரட்டினேன். எந்த  குறிப்பான நோக்கமுமில்லாமல் ஒரு பக்கத்தில் நின்றேன். 

    எனக்கென்ன ஆசையா
    அவளோடு காலங்கழிக்க
    அவள் பூசிக் கொள்ளும் வாசனையோ
    அல்லது அணிந்து கொள்ளும் பிரகாசமான உடைகளோ –
    இவை காரணமல்ல
    அவளுடைய வெறுப்பு படிந்த பார்வையை
    சகித்துக் கொள்ளுதல்
    என்னுள் வலிமையையும் பொறுமையையும் வளர்த்தெடுக்கிறது
    அவள் என் பயிற்சி
    இன்னோரு துருவப்பாதி இல்லாவிடில்
    எதுவும் தெளிவுறுவதில்லை
    இரு பதாகைகள்
    ஒன்று கருப்பு இன்னொன்று வெள்ளை
    இரண்டுக்கும் நடுவில் அன்றோ தீர்வு பிறக்கிறது
    பாரோவுக்கும் மோசஸுக்கும்
    நடுவில் செங்கடல் போல

    மெலிதான அதிர்வு என்னுள். என்னுடைய சங்கடத்தை ரூமி அறிந்து கொண்டாரோ? எந்த அனுபவக் கூண்டுக்குள் சிக்கியுள்ளாயோ அதனுள்ளேயே இரு. வலிமையையும் பொறுமையையும் வளர்த்தெடு.

    The Essential Rumi-யை மூடி வைத்தேன். One Robe One Bowl எனும் ரியோகனின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை கையிலெடுத்தேன். கண்ணை மூடிக் கொண்டு ஒரு பக்கத்தை பிரித்தேன்.

    அழகு இருந்தால்
    அசிங்கம் இருந்தாக வேண்டும்
    சரி என்ற ஒன்று இருந்தால்
    தவறு என்ற ஒன்றும் இருந்தாக வேண்டும்
    அறிவும் பேதைமையும் ஓர் இணை
    மயக்கமும் ஞானமும்
    பிரிக்கப்பட முடியாதவை
    இது பழைய உண்மை
    புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதென
    நினைக்காதே
    “இது வேண்டும் அது வேண்டும்”
    என்பது முட்டாள்தனமின்றி வேறில்லை
    நான் உனக்கொரு ரகசியத்தைச் சொல்வேன்
    “அனைத்து பொருட்களும் நிரந்தரமில்லாதவை”

    ரியோகனுக்கும் என்னுடைய கவலை பற்றித் தெரிந்துவிட்டிருக்கிறது !  “இது வேண்டும் அது வேண்டும்” என விழைவது முட்டாள்தனமின்றி வேறில்லை என்று வைகிறார் ரியோகன். “எதுவும் நிரந்தரமில்லை” என்றொரு “ரகசியத்தையும்” பகிர்ந்திருக்கிறார். 

    நண்பர்கள் கொடுத்த பாடங்களை அளவிலா ஆச்சரிய உணர்வுடன் சிந்தித்தவாறே தூங்கிப்போனேன்.