Tag: மதம்

  • இறைத்தோட்டம்

    ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமிய சிந்தனைகளையும் ஆளுமைகளைப்பற்றியும் தினம் ஓரிரு குறிப்புகளாக ஃபேஸ் புக்கில் பதிந்தேன். அதைத் தொகுத்து நண்பர் Uvais Ahamed அவர்களுக்கு சில மாதங்கள் முன் அனுப்பியிருந்தேன். இரு வாரங்கள் முன் என்னைத் தொடர்பு கொண்டு தொகுப்பு நூல் வடிவில் தயாராகிக் கொண்டிருக்கிறது எனும் செய்தியைத் தெரிவித்து ஆச்சரியத்திலாழ்த்தினார்.

    “இறைத்தோட்டம்” நூலை சென்னை புத்தக சந்தையில் வாங்கலாம். சீர்மை பதிப்பக வெளியீடு.

    கணேஷ் வெங்கட்ராமன் மதங்களின் வரலாறுகள், அவற்றின் பொதுத்தன்மைகள் என்ற கருத்துலகில் சஞ்சரிப்பதில் விருப்பங்கொண்டவர். புத்த மதம் பற்றிய அவரின் புத்தகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒருவரின் பார்வையிலிருந்து ஆராய்வதில் ஆர்வம் காட்டிவருகிறார். இஸ்லாமிய வரலாறு, தொன்மங்கள், அறிவாளுமைகள் என இஸ்லாத்தின் வண்ணமயமான நாகரிகப் பங்களிப்புகளைப் பற்றி சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் ரம்ஜான் மாதம் முழுக்க எழுதியவற்றின் தொகுப்பு இது.

    (பின்னட்டை குறிப்பு)

  • காதலும் பிற பூதங்களும்

    Of Love and other demons –1510இல் ஸ்பானிய மொழியில் எழுதப்பட்ட The Four Books of Amadius of Gaul எனும் புதினம் பற்றிய ஒரு குறிப்பு நாவலில் வருகிறது. பிஷப்பின் தேவாலயத்தில் பாதிரி-நூலகராக இருக்கும் டீலோரா அந்நாவலை பல ஆண்டுகளுக்கு முன் பாதி வாசித்திருக்கிறார். அந்த நாவலுக்கு கத்தோலிக்க சர்ச்சுக்கள் உலகெங்கும் தடை விதித்திருக்கின்றன. தமது சர்ச் நூலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் நூல்களின் வரிசையிலிருந்து அந்நாவலின் பிரதி தொலைந்து போய் விடுவதால் நாவலின் முடிவு என்ன என்பதை அவர் அறியமுடியவில்லை. பின்னர் ஒருமுறை அந்நாவல் பிரதி அவர் கண்ணில் கிடைக்கிறது. அதனை கையில் ஏந்தி தடவிப்பார்க்கிறார். Chivalric Romance எனும் இலக்கிய வகைமைப் புதினப் பிரதியைப் பார்த்த பிறகு ஒரு ரீஜண்ட் போல சாகசவுணர்வுடன் அவர் எடுக்கும் முடிவுகள் துன்பியல் முடிவைத் தருகிறது. பாதி வாசித்த புதினத்தின் இளவரச-நாயகனாய்த் தன்னை டிலோரா கற்பனை செய்து கொண்டிருக்கக் கூடும்.

    அடிமை வியாபாரம் உச்சத்தில் இருக்கும் தென் அமெரிக்கத் துறைமுக நகரத்தில் செல்வந்த ஜோடியொன்றின் மகள் சீர்வா மரியா வீட்டில் இருக்கும் அடிமைகளால் வளர்க்கப்படுகிறாள். ஆப்பிரிக்க அடிமைகள் பேசும் யோருபா போன்ற மொழிகளைச் சரளமாகப் பேசும் மரியாவை வித்தியாசமாகப் பார்க்கிறது காலனீய சமூகம். அவளை ஒரு வெறிநாய் கடித்த பின்னர் கண்டிப்பாக அவளுக்கு Rabies பீடிக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அது பீடிக்காத போது மரியாவைப் பேய் பிடித்துக் கொண்டதாக கத்தோலிக்க சர்ச் பேயோட்டுவதற்காக இழுத்துச் சென்று விடுகிறது.

    1740களின் தென் அமெரிக்கத் துறைமுக நகரமொன்றில் கொடூரமான கத்தோலிக்க தேவாலயத்தால் ஓர் அப்பாவியான, ஆதரவற்ற 13 வயது சிறுமி மீது சமய நிறுவனம் இழைக்கும் வன்முறையின் உருவப்படம் இந்த நாவல். மதம் மற்றும் தார்மீகப் பிரச்னைகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான கதைக்கருவை – மத ஆதிக்கத்தின் மூலம் அடையப்பட்ட தென் அமெரிக்காவின் மீதான ஸ்பானிய காலனித்துவத்தின் சூழலில் – உருவாக்கியிருக்கிறார் மார்க்கேஸ்.

    நாவல் பேசும் அடிப்படை பிரச்னையை நாத்திகம் பேசும் மருத்துவர் அப்ரெனுன்ஸியோ ஓர் உரையாடலில் அழகுற சுருக்கிக் கூறிவிடுகிறார் – “மரணத்தின் மதம் உங்களிடம் உள்ளது, அதை எதிர்கொள்ளும் மகிழ்ச்சியையும் தைரியத்தையும் அது உங்களுள் நிரப்புகிறது. நான் அவ்வாறு இல்லை; உயிருடன் இருப்பது மட்டுமே அத்தியாவசியமான விஷயம் என்று நம்புபவன் நான்.”

    அவள் அடைக்கப்பட்டிருக்கும் அறையில் பல இரவுகள் மரியாவுடன் கழிக்கும் டிலோரா ஏதாவது ஓர் இரவில் ரகசியமாகத் தான் வரும் வழியாக அவளை அழைத்துச் சென்றிருக்கலாமே என்று யோசித்துக் கொண்டே வாசிக்கையில் அந்த வழியைப் பயன்படுத்தி வேறொருவர் தப்பித்துச் சென்றுவிட பாதிரியார் பயன்படுத்தும் சுரங்க வழி அடைபட்டுவிடுகிறது. நாவலின் முடிவில் பேயோட்ட வரும் பிஷப்பின் வயிற்றை மரியா எட்டி உதைக்கும் கட்டம் கண நேர மகிழ்வைத் தருகிறது. கலக உணர்வுகளை அடக்கும் அதிகாரத்தின் மூர்க்கத்தனத்தை நாவலில் பதிவு செய்கிறார் மார்க்கேஸ்.

  • காஷ்மீர்ரிப்போர்ட்

    பெருநிலப்பரப்பில் வழிபாட்டுரிமை என்று பேசப்படுவது காஷ்மீரிகளுக்கு மீண்டும் மீண்டும் தொடர்ந்து மறுக்கப்படும் ஒன்று. 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கூட, காஷ்மீரின் முக்கியச் சின்னமான ஜாமியா மஸ்ஜித் 136 நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது. இது முதல் முறை அல்ல. இது போன்று கடந்த ஐம்பதாண்டுகளில் பலமுறை வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதி மூடப்பட்டிருக்கிறது.

    ஹஸ்ரத் பாலுக்குச் சென்ற போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஓர் அறிவிப்பு பலகை எனக்கு அதிர்ச்சியைத் தந்தது – “இது ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமே ; வேறு எந்தச் செயல்களும் அனுமதிக்கப்படாது”. தொழுகை செய்ய வருபவர்களை இப்படியா பயமுறுத்துவது?

    சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது ஆறு மாதங்களுக்கு, காஷ்மீர் மக்கள் பட்ட இன்னல்கள் நெஞ்சை உலுக்கின. ஆறு மாதங்கள் மொபைல் இணைப்புகள் இல்லாமல் வாழ்வதை கற்பனை செய்து பாருங்கள்! டெல்லியில் தற்போதைய ஆட்சியும் அதன் முக்கிய இரட்டையரும் இங்கு அதிகம் விரும்பப்படுவதில்லை என்பது கண்கூடு.

    உ.பி முதல்வர் டெம்ப்ளேட்டில் செயல்படுகிறார் ஜம்மு காஷ்மீரின் தற்போதைய லெஃப்டினன்ட் கவர்னர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (8/5/2022), இந்தியத் தொல்லியல் கழகத்தின் (ஏ எஸ் ஐ) பாதுகாப்பில் இருக்கும் வரலாற்று நினைவுச்சின்னத்திற்குள் முன்னறிவிப்பின்றி நுழைந்து ஹோமம் நடத்தியிருக்கிறார். இதுவரை கேள்விப்படாத ஒன்று. இதற்கு ஏஎஸ்ஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ராணுவத்தின் பங்கு பற்றி பலரிடம் பேசினேன். ஊக்கமளிக்கும் கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு கடைக்காரரிடம் நான் கேட்ட கேள்விக்கு – அவர் இந்தியாவை வெறுக்கிறாரா என்றால் – சுருக்கமான பதில் – “ஆம், அது இயற்கைதானே”.

    ஒவ்வொரு 20 அடிக்கும் ஒரு முழு ஆயுதமேந்திய சிப்பாய் தெருக்களைக் கண்காணிப்பதைக் காணலாம்.

    விரும்பத்தகாத அரசியல் பார்வைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், காஷ்மீரிகள் மிகவும் இனிமையாகவும், மரியாதையாகவும், விருந்தோம்பல் மிக்கவர்களாகவும் இருப்பதைக் கண்டேன்.

    பல சீக்கியர்கள் காஷ்மீரில் வாழ்வதைப் பார்த்தேன். பஹல்காமில் ஒரு சீக்கியரும் ஒரு காஷ்மீரியும் பங்காளிகளாக நடத்தும் ஓர் உணவகத்தில் உணவுண்டேன். சீக்கியர்கள் பள்ளத்தாக்கில் வாழும்போது பண்டிட்கள் ஏன் வெளியேற்றப்பட்டனர் என்பது குழப்பமாக உள்ளது.

    நாங்கள் தில்லி திரும்ப விமானத்தைப் பிடிக்க விமான நிலையத்தை அடையும் அதே நேரத்தில், விமான நிலையப் பகுதிக்கு அருகிலிருக்கும் அலுவலகமொன்றில் வேலை பார்க்கும் ஒரு காஷ்மீரி பண்டிட் (மீள்குடியேற்றத் திட்டத்தில் பள்ளத்தாக்கு திரும்பியவர்) வேலையிடத்திலேயே இரு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    தெற்கு காஷ்மீரில் இன்னும் மிலிடன்ஸி ஓயவில்லை. சுற்றுலாப் பயணிகளைச் ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்கள் முடிந்தவரை நெடுஞ்சாலை NH44 வழியாக மட்டுமே ஓட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக அனந்த்நாக் செல்லும் சில உள் சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

    தி காஷ்மீரி ஃபைல்ஸ் பிரபலமான திரைப்படம் அல்ல – நான் சந்தித்த கடைக்காரர்களிடம் நடத்தப்பட்ட முறைசாரா கருத்துக்கணிப்பின் அடிப்படையில். ஒரு சால்வை விற்பனையாளர் குறிப்பிட்டார் – நாங்கள் படத்தை எங்கே பார்ப்பது? – ஆம், இரண்டு தசாப்தங்களாக முழு பள்ளத்தாக்கிலும் சினிமா அரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் இல்லை. நம்ப முடிகிறதா?

    இந்தக் கோடையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரை மொய்க்கின்றனர். ஐனவரியிலிருந்து மே மாதத் தொடக்கம் வரை ஏழு லட்சம் சுற்றுலாப் பயணிகளை காஷ்மீர் வரவேற்றுள்ளது. இதை ஒரு மகிழ்ச்சி தரும் முன்னேற்றமாக சராசரி காஷ்மீரிகள் கருதுகின்றனர்.

    படம்: ஜாமியா மஸ்ஜித், ஶ்ரீநகர் – காஷ்மீரிகளின் மத-கலாச்சார நரம்பு மையம்