Tag: பனி

  • பனித்திணைக் கவிதைகள் – ஶ்ரீவள்ளி



    பனி நூறு
    பனி ஆறு

    அவள் கூற்று

    நள்ளிரவில் முதுபனியில்
    உடல்தளர்ந்த பழுப்புக் கரடி
    கொல்லைக் கதவைத் தட்டுகிறது
    மின் திரையில் தெரிகிறது
    உனக்காக இல்லை, கரடியே
    கூடத்தில் பரிமாறியிருக்கும்
    ஸ்ட்ராபெர்ரி பழக்கொத்து
    காக்க வைத்தவன் இன்னும் வரவில்லை
    சிசிடிவி காமிரா
    வருங்காலத்தைக் காட்டுவதில்லை
    எப்போதுமே
    திறக்கச் சந்தர்ப்பம் தராத
    இந்த வாசற்கதவு எதற்காக?

    (பாடியவர்: ஸ்ரீவள்ளி)


    பனி நூறு
    பனி ஏழு

    தோழி கூற்று

    முந்தைய நாள் பெய்த பனிப் பொழிவில்
    குழந்தைகள் ஆடினர்
    பொம்மை செய்தனர்
    கை கால் உடலோடு
    யாரும் பார்க்காதபோது
    அது உயிர்த்திருக்க வேண்டும்
    இன்று இளம் வெயில்
    பாதிக் கை காணோம்
    பாதிக் கால் சரிந்துவிட்டது
    ஒரு பக்கம் காது இல்லை
    அதன் முன் மண்டியிட்டு
    அவள் இறைஞ்சுகிறாள்
    நினைவூட்டக் கேட்கிறாள்
    அவன் தந்த வாக்குறுதியை
    மூளிச் சிலை என்றாலும்
    அது பனியின் தெய்வம்
    பிற நிலங்களின் தெய்வங்களைப் போல
    அதுவும் பேசுவதில்லை

    (பாடியவர்: ஸ்ரீவள்ளி)

    —————————————————————

    Journey to the west என்ற சீன மொழியின் நாவல் ஒன்றை எழுதியவரின் பெயர் உண்டு. யார் அவர், அவர் அடையாளம் போன்ற எந்த தகவலும் இன்றில்லை. அலியும் நிமோவும் நாவலை எழுதியவரின் பெயர் குர்பான் சையத். விசித்திரமான பெயர் கொண்ட இந்த ஆசிரியர் யார் என்று நாவல் வெளிவந்து நூறாண்டுகளாகியும் கண்டுபிடிக்கப்படவில்லை. யார் ஆசிரியர் என அறியப்பட முடியவில்லை என்பது முக்கியமில்லை. இரண்டு நாவல்களும் இன்றளவும் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் முக்கியம். முகமிலாத ஒருவர் இலக்கியப் படைப்புகள் எழுதுவதில் உள்ள சௌகர்யம் அவரின் அடையாளம் சார்ந்த தகவல்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லாததால் வாசகரை உறுத்தாது. ஶ்ரீவள்ளி-யைப் பொறுத்த மட்டில் கவிதைகள் மட்டுமே அவரின் அடையாளம். அடையாளம் சார்ந்த குறுகிய எல்லைக்குள் உலவும் கட்டாயமேதுமில்லை ஶ்ரீவள்ளிக்கு. விரிந்து கொண்டே போகும் வானம் ஶ்ரீவள்ளி. “பல நிறங்கள் உண்டு பனி ரோஜாவுக்கு” என்று கவியெழுதும் ஶ்ரீவள்ளி உருவமற்று இருப்பது புதிரன்று. இந்தப் பாணியில், பெயரற்று ஆனால் இந்த வகைமையில் பிறழாது பின்னர் ஸ்ரீவள்ளியின் பெயரில் எதிர்காலத்தில் கவிதைகள் எழுதப்படலாம் – உமர் கயாம் பெயரில் நமக்கு கிடைத்திருக்கும் பல ருபாயியாத்கள் பிற்காலத்தில் முகமறியா அடையாளமில்லா பிறர் எழுதியவை என்று நமக்குத் தெரிய வந்தது போல்.

  • கொட்டும் பனிப்பொழிவில் – பெருந்தேவியின் கவிதை குறித்து


    கொட்டும் பனிப்பொழிவில்

    புள்ளியாக நடந்துவருகிறான் ஒருவன்
    அவனாகத்தான் இருக்க வேண்டும்
    அவன் எப்படி இங்கே?
    அவன் மாதிரிதான் தெரிகிறது
    அங்கே இரவு
    அவன் கனவில் பனி பொழிகிறது
    புள்ளியாக நடந்துவருகிறாள் ஒருத்தி
    அவள் எப்படி அங்கே?
    அவள் மாதிரிதான் தெரிகிறது
    விதிர்த்து எழுந்திருக்கிறான்
    ஆடைவிலகிய தொடையிலிருந்து
    தனது காலை மெல்ல எடுக்கிறான்
    சத்தமின்றி திரும்பப் படுக்கிறான்
    அவனுடைய கனவு முடிந்துவிட்டது
    அவளது பகல் முடிய
    பல மணி நேரம் இருக்கிறது

    அவன் அவளைத் தாண்டிச்செல்கிறான்
    அவன் மாதிரி இருந்த அவன்
    அவனாக இருந்திருந்தால்
    தாண்டிச் சென்றிருக்கமாட்டான்
    அவள் கண்களை மூடிக்கொள்கிறாள்
    கண்களுக்குள் பொழிகிறது பனி
    எதுவும் நடக்காததைப் போல

    அவன் கனவிலிருந்து விழித்திருக்க மாட்டான்
    அவள் மாதிரி இருந்த அவள்
    அவளாக மட்டும் இருந்திருந்தால்
    ஆடை விலகிய தொடைக்கு மேல்
    மீண்டும் தன் காலைப் போடுகிறான்
    எதுவும் நடக்காததைப் போல

    பெருந்தேவி

    கவிதை என்பது கருத்தையோ உணர்வையோ பகிரும் விஷயம் என்ற பொதுவான வரையறை கவிதையை கவிதையாகக் காட்டுவது எது என்ற கேள்வியை எழுப்புகிறது. நேரடியாக ஓர் உரைநடையாகவே அதனைச் சொல்லிவிடலாமில்லையா? பின் கவிதை எதற்கு வேண்டும்?

    கவிதை புரிவதில்லை என்று பொதுவாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு வாசிக்கப் பழகவில்லை என்று எளிதில் எதிர்வினை தந்துவிட முடியும் என்றாலும், அந்தக் குற்றச்சாட்டு ஏன் வைக்கப்படுகிறது என்று சிந்திக்கும்போது எனக்குத் தோன்றுவது – கவிதை ஒரு வடிவம். அதன் வடிவத்தை உணரப் பழகினாலொழிய கவிதையை ரசிக்க முடியாது!

    வடிவம் எதைச் சார்ந்தது? மொழியையா, சொல்லையா, வரிகளின் அடுக்கையா,…….மொழி சார்ந்த சொல் சார்ந்த உத்திகள் கவிதைகளின் இன்றியமையா அங்கமாக இருந்த காலங்கள் உண்டு. இவ்வுத்திகளை உதறிக் கிளர்ந்தெழுந்த நவீனக்கவிதைகள் தகவலை, படிமத்தை, உணர்வைப் பகிரும் விதத்தில் காட்டும் புதுமைப்படுத்தல்களை வடிவம் என்பதாகக் கொள்ளலாம். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு முகவாகில் இருப்பது போல எழுதப்படும் ஒவ்வொரு நவீனக் கவிதையும் ஒவ்வொரு வடிவத்தை பூணுகிறது. அகவற்பா, வெண்பா முதலான இலக்கணம் சார்ந்த வடிவங்கள் காலாவதியான பிறகும் ‘சொன்னதைத் திரும்பச் சொல்லல்” கவிதையின் அம்சமாக இல்லாமல் போகவில்லை. ஆனால் “சொல்லும் விதத்தை மாற்றாமல் சொல்லுதல்” நிச்சயம் தேய்வழக்காகிவிட்டது.

    எழுதப்படும் வடிவங்கள் உணரப்படாமல், ஈர்க்காமல் போகும்போது வாசகர்கள் அதனை “புரியவில்லை” என்கின்றனர். மொழிரீதியான புரிதலை நாம் இங்கு பேசவில்லை. கவிதையை உள்வாங்கி ரசிக்க அதன் வடிவ அமைப்பை உணர்தலின் அவசியத்தைப் பேசுகிறோம்.

    இந்த நீண்ட பீடிகையை என்னால் சில மணி நேரங்கள் முன்னர் எழுதியிருக்க முடியாது. ஏனெனில், அப்போது பெருந்தேவி எழுதி ஃபேஸ்புக்கில் இட்டிருந்த “கொட்டும் பனிப்பொழிவில்” கவிதையை படித்திருக்க மாட்டேன். 

    கவிதையை முதல் முறை படித்த போது எது என்னை ஈர்த்தது?

    கொட்டும் பனியில் ஒரு புள்ளியாகத் துவங்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் அவன்! – நீண்ட காலர்களுடன் நீளமான குளிர் கால அங்கியணிந்து, கௌபாய் தொப்பியைத் தறித்துச் சாலையில் நம்மை (வாசகனை நோக்கி!) வந்து கொண்டிருக்கும் ஆணுருவம் ஒரு noir படத்தின் ஆரம்பக்காட்சி போல நம் மனக்கண்ணில் ஓடத் துவங்குகிறது. – என்னை முதலில் ஈர்த்தது இந்த மனச்சித்திரந்தான்.

    அடுத்தடுத்த வரிகளை முதல் முறை வாசித்தபோது – கனவின் காட்சிகள் யதார்த்தத்தில் இணைவது ஆற்றல் மிகு உத்தியாக என் ஆர்வத்தை நீட்டித்தது.

    “ஆடை விலகிய தொடை” – புலன்சார் சித்திரத்தை என்னுள் வரைவதோடு நிற்காமல், ஒரு புதிராகவும் வளர்கிறது. கவிதையின் இறுதியில் திரும்பவரும் “ஆடை விலகிய தொடை” “யாருடைய தொடை?” எனும் வினாவை எழுப்பி அதன் விடை என்னவாக இருக்கும் என்ற ஊகத்தின் இன்பத்தில் கவிதையனுபவம் அரும்பத் தொடங்கியது. புதிருக்கான விடை கிடைத்துவிட்டால் கவித்துவ உணர்வு விடைபெற்றுக் கொள்ளும் அபாயம் உண்டு எனும் பிரக்ஞையை அடைவது தான் கவிதை வாசித்தலின் படி நிலைகளில் உயர்வதற்கான அறிகுறி.

    மேற்சொன்ன மூன்று அம்சங்கள் “கொட்டும் பனிப்பொழிவில்” கவிதைக்கான உடனடி ஈர்ப்பை என்னுள் ஏற்படுத்தியவுடன், கவிதையினுள் ஆழச்செல்லும் ஆர்வம் இன்னமும் பெருகிற்று.

    அவளின் கனவில் அவன் வருவதும், அவன் கனவில் அவள் வருவதும் என இரு கனவுகள் பின்னிப்பிணைவது போல முதலில் தோன்றிற்று. Inception திரைப்படம் தோற்றுவித்த அதே உற்சாகத்தை என்னுள் கிளர்த்தியது. முதலில் அவள் கனவு காண்கிறாளா? பின்னர் அவன் கனவு காண்கிறானா? அவளின் கனவு அவனின் கனவுக்குள் நுழைந்து விடுகிறதா? என்றவாறு கனவுப்பாதையில்  திளைத்தது வடிவப்புதுமை சிந்தனையுள் நிகழ்த்திய வேதியியல் மாற்றம் – கவிதையின்பம் என்பது இத்தகைய திளைத்தல் தானோ! கவிதை ரசிக மனம் இந்தத் திளைத்தலுடன் திருப்தியுற்றுவிடவில்லை. காதலியின் உருவ அழகை ரசித்துவிட்டு அதோடு நிற்காமல் அவளின் வடிவ அழகை ரசிக்க யத்தனிப்பது போன்று – கவிதை வாயிலாக கவிஞர் சொல்ல வருவது என்ன? – தகவலா, உணர்வா, அல்லது வெறும் படிமம் மட்டுமா? முழுப்புதிரையும் அவிழ்க்க கவிதையின் வடிவத்தைக் கலைத்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றிற்று 

    சில குறிப்புகளைக் கவிதையை தன்னுள் அடக்கிவைத்துக் கொண்டிருக்கிறது. “அங்கே இரவு” என்பது முதல் குறி . “அவளது பகல் முடிய பல மணி நேரம் இருக்கிறது” என்பது இரண்டாம் குறி. 

    அவளுக்கு பகல் அவனுக்கு இரவு – அவனும் அவளும் உலகத்தின் வெவ்வேறு நேர மண்டலங்களில் வசிக்கிறார்கள். Distance Love எனும் கருப்பொருளைக் கவிதை பேசுகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

    கவிதை ஒற்றைக் கருப்பொருளை மட்டும் கொண்டிருக்கவில்லை. காதல் முக்கோணம் எனும் கருப்பொருளும் கவிதையில் காணக்கிடைக்கிறது. “ஆடை விலகிய தொடை” – யாருடைய தொடை எனும் கேள்விக்கான விடையை கவிதாசிரியர் தராமல் போனது வடிவமைப்பின் சிகரம் என்று நினைக்கிறேன். பல ஊகங்களை நம் மனதுள் கிளப்பிவிடுகிறது. அவன் யாருடன் படுத்திருக்கிறான்? அவன் மனைவியுடனா? காதலியுடனா? அருகில் இல்லாமல் வெகுதொலைவில் வசிப்பதால் காதலியுடனான நெருக்கத்தை அனுபவிக்க முடியாமல் இருப்பதன் காரணமாக ஏதொவொரு விலைமாதுடன் படுத்திருக்கிறானா? வாசகன் மனதில் எழும் இத்தகைய கேள்விகள் வாசிக்கும் கவிதை மீதான ஈடுபாட்டை உயர்த்துகிறது. 

    அவனுக்கு வேறு துணை இருக்கிறதெனில் வேறொரு நேர மண்டலத்தில் வசிக்கும் அவளுக்கு இதைப் பற்றி தெரியுமா என்னும் கரிசனம் வாசகனான என்னில் எழுந்தது. அவளுக்குத் தெரிந்தால் அவளது சோகம் இன்னும் எத்தனை மடங்கு அதிகமாகும்! பனிபொழியும் தெருவில் நடப்பவன் அவனைப் போல் இருக்கிறான் என்று அவனை சற்று நேரம் நோக்கும் அவள் “இது அவனில்லை” என்று உணர்ந்த பிறகு அவள் தன் கண்களை மூடிக் கொள்கிறாள். இது அவனில்லை, அவனைத் தவிர வேறு எவனையும் இந்தக் கண்கள் காணக்கூடாது என்று தன் கண்களை மூடிக் கொள்கிறாளோ? “கண்களுக்குள் பொழிகிறது பனி” என்ற வரியில் கவிச்சுவை பொங்குவதை உணர வேண்டுமானால் அவள் மீதான கரிசனவுணர்வு வாசகனுள் பொங்குதல் அவசியமாகும். “கண்ணீர் விட்டு உறைந்து போய்விட்டன அவள் கண்கள்” என்பதைத்தான் “கண்களுக்குள் பொழிகிறது பனி” என்ற வரி சொல்கிறது என்பதாகப் புரிந்து கொண்டேன். பனி என்பது உறைந்த நீர்!   

    கவிதையில் காணப்படும் இன்னொரு குறிச்சொல் – “எதுவும் நடக்காததைப் போல”. அவன் எங்கோ, அவள் எங்கோ “எதுவும் நடக்காததைப் போல” தத்தம் இயல்பான வாழ்க்கையைத் தொடர்கின்றனர். இருவருக்குமிடையிலான நேசத்தை இருவரும் உணர்ந்தேயிருக்கிறார்கள். அவள் கண்ணீர் விடுகிறாள். அவனுடைய கனவில் “அவள் போல தோன்றுபவள் அவளில்லை” என்று உணர்ந்தவுடனேயே அவன் விழித்துக் கொண்டுவிடுகிறான். உடனடியாக அவனுடைய படுக்கைத்துணையின் மீது போட்டிருந்த காலை விலக்கித் திரும்பப்படுத்துக் கொள்கிறான். 

    “கனவின் காட்சிகள் யதார்த்தத்தில் இணைவது” என்ற அம்சம் முதல் ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று ஏற்கனவே சொன்னேனில்லையா? அது தோற்ற மயக்கம் என்பது கவிதையின் மூன்றாம் மட்ட அர்த்தப்படுத்தலில் (அதாவது முழுக்கக் கலைத்துப் போடுதலில்) விளங்கிவிடுகிறது. இந்தத் தோற்ற மயக்கம் சில வரிகளை ஒழுங்கு மாற்றிப் படித்துப் பார்க்கும் போது விலகி விடுகிறது.

    கவிதையை பத்தி பிரித்து வாசித்துப் பார்ப்போமா?  (கவிஞர் என்னை மன்னிப்பாராக!)

    புள்ளியாக நடந்துவருகிறான் ஒருவன்

    அவனாகத்தான் இருக்க வேண்டும்

    அவன் எப்படி இங்கே? 

    அவன் மாதிரிதான் தெரிகிறது     (1)

    — 

    அங்கே இரவு

    அவன் கனவில் பனி பொழிகிறது

    புள்ளியாக நடந்துவருகிறாள் ஒருத்தி

    அவள் எப்படி அங்கே?

    அவள் மாதிரிதான் தெரிகிறது

    விதிர்த்து எழுந்திருக்கிறான்

    ஆடைவிலகிய தொடையிலிருந்து

    தனது காலை மெல்ல எடுக்கிறான்

    சத்தமின்றி திரும்பப் படுக்கிறான்

    அவனுடைய கனவு முடிந்துவிட்டது  (2)

    அவளது பகல் முடிய

    பல மணி நேரம் இருக்கிறது         (3)

    அவன் அவளைத் தாண்டிச்செல்கிறான்

    அவன் மாதிரி இருந்த அவன்

    அவனாக இருந்திருந்தால்

    தாண்டிச் சென்றிருக்கமாட்டான்

    அவள் கண்களை மூடிக்கொள்கிறாள்

    கண்களுக்குள் பொழிகிறது பனி

    எதுவும் நடக்காததைப் போல         (4)

    அவன் கனவிலிருந்து விழித்திருக்க மாட்டான்

    அவள் மாதிரி இருந்த அவள்

    அவளாக மட்டும் இருந்திருந்தால்

    ஆடை விலகிய தொடைக்கு மேல்

    மீண்டும் தன் காலைப் போடுகிறான்

    எதுவும் நடக்காததைப் போல          (5)

    பத்தி எண்கள் 1 மற்றும் 4 – அவளின் கண்ணோட்டம்

    பத்தி எண்கள் 2 மற்றும் 5 – அவனின் கண்ணோட்டம்

    பத்தி எண் 3 – கவிதை சொல்லியின் குரல் – தொலைதூரத்தை, நேர மண்டலத்தை பூடகமாக சுட்டுகிறது

    பத்தி எண் 3 நீங்கலாக, கவிதை இரண்டு கண்ணோட்டத்தில் செல்கிறது. இரண்டு கண்ணோட்டங்களும் வரிகளை அடுக்கும் விதத்தில் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன. அவன் கனவு காண்பது கவிதையில் வருகிறது. கவிதை முழுக்கவும் அவன் கனவு காணவில்லை. ஒரு கட்டத்தில் அவன் விழித்துக் கொள்கிறான். அவள் கனவு காணவில்லை. யதார்த்தத்துக்குள் தான் இருக்கிறாள். வரிகளை பிசைந்து எழுதப்பட்டுள்ள விதத்தில் கனவு, கனவுக்குள் கனவு, யதார்த்தத்திலிருந்து கனவு, கனவிலிருந்து யதார்த்தம் என்பன போன்றவை மயக்கத்தைத் தோற்றுவித்து கவிதையைச் சுவையுள்ளதாக்குகின்றன. இந்த மயக்க விளைவு இல்லாமல் போயிருந்தாலும் இந்தக் கவிதை தன்னளவில் முழுமையான கவிதையாகவே திகழ்ந்திருக்கும், எனினும் குழந்தைக்கு என்ன உடை அணிவிப்பது என்ற முடிவை எடுக்கும் தாயைப் போல கவிஞரே தீர்மானிக்கிறார் கவிதை பூணும் வடிவத்தை!

    சொல்ல வரும் எளிதான கருத்து, இரண்டு படிமங்கள், வடிவப்புதுமை – மூன்றையும் சரியான விகிதத்தில் கலந்து ஓர் அரிய கவிதையனுபவத்தைத் தருகிறார்  பெருந்தேவி. 

    ஒரு கவிதை நம்மை ஈர்ப்பதில் ரசனை பெரும்பங்கு வகிக்கிறது. உணவு, உடை, நிறம் போல கவிதையின் பொருள் கொள்ளும் முறை அவரவர் பார்வை. எனவே, இந்தக் குறிப்பு தரும் பொருள் மட்டுமே இக்கவிதைக்கான ஒரே பொருள் என்று கொள்ள முடியாது. இக்கவிதையை வாசிக்கும் இன்னொருவர் வேறுவிதமாகப் பொருள் கொள்ளக்கூடும். கவிதை எழுதி முடிக்கப்பட்ட பிறகு அது கவிஞனைச் சாராத தனித்த இருப்பைக் கொள்கிறது என்று சொல்வது இதனால்தான். இதன் காரணமாகவே ஒவ்வொரு வெற்றிகரமான கவிதையையும் அதன் வாசகர்களே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

  • இதுவும் கடந்து போகும்

    ஏறத்தாழ இருபத்தியைந்து வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறேன். ஓர் இடத்திலும் அங்கேயே தங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. ஏக்கத்துடன் அந்த நிலப்பரப்புகளை நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் கஷ்மீர் ஒரு வித நினைவேக்கத்தை ஏற்படுத்துகிறது. அது ஏன் என புரிந்துகொள்ள முயல்கிறேன். அதன் பழங்கால வரலாறு, தொன்மம், இலக்கியம் என்று அனைத்தையும் தாகத்துடன் படிக்கிறேன். ஒரு சுற்றுலா பிரதேசம் இத்தகைய அதிர்வை தருமா? பழைய தோழி தெருவில் நடந்து செல்ல திண்ணையிலிருந்து ஏக்கத்துடன் அவள் பார்வையில் படாமல் நோக்குவது போல் கஷ்மீர் பற்றி படித்த வண்ணமிருக்கிறேன். கல்ஹணரின் ராஜதரங்கிணி – முன்-நவீன இந்தியாவின் ஒரே வரலாற்று நூல் – மொழிபெயர்ப்பு நூலின் இரண்டு பெரும்பாகங்களை வாங்கி புத்தக அலமாரியை நிரப்புகிறேன். பிரிவினைவாதிகளை ஆதரிக்கிறாரோ எனும் சந்தேகத்தில் பல வருடங்களாக வாசிக்காமல் வைத்திருந்த பஷாரத் பீரின் நூலை (curfewed night) ஒரே நாளில் வாசித்து முடிக்கிறேன். நான் வாசிக்கவிருக்கும் அடுத்த சல்மான் ருஷ்டியின் நாவலாக Shalimar the clown-ஐ தேர்ந்தெடுக்கிறேன். யூ-ட்யூபில் கஷ்மீரி கிரிக்கெட் வீரர் உம்ரன் மலிக்-கின் தந்தையாருடைய பேட்டியை பார்க்கிறேன். பெய்ஜிங் குளிர் கால ஒலிம்பிக்கில் alpine skiing 🎿 விளையாட்டில் இந்தியாவிற்காக பங்கு பெற்ற முகம்மது ஆரிஃப் கான் குல்மரக் (gulmarg) பனிச்சரிவுகளில் பயிற்சி செய்யும் காணொலியை தேடிக் கொண்டிருக்கிறேன். உறக்கத்துக்கு முன் சடங்காக வாசிக்கும் கவிதைகள் எல்லாம் இப்போது கஷ்மீர சித்தர் லல்லேஸ்வரி எழுதியதாகவே இருக்கின்றன. 1384இல் மீர் சையத் அலி ஹம்தானி அவர்களின் பேருரையை கேட்டு இஸ்லாத்தை நான் தழுவியிருப்பேனா என்ற ஊகசிந்தனையில் அடிக்கடி ஆழ்கிறேன். புராதன இந்தியாவில் மிக அதிக அளவில் வர்ணக்கலப்பும் சாதிக்கலப்பும் நிகழ்ந்த பூமி இன்று ஒற்றை அடையாளம் எனும் குழிக்குள் தன் சவத்தை தானே இறக்கிக் கொண்டிருக்க, அதன் பன்முகத்தன்மையை மீட்டெடுத்து அதனுள் புது ரத்தம் பாய்ச்சும் மந்திரநிகழ்வு ஏதேனும் சாத்தியமா என்ற கனவில் மூழ்குகிறேன். நூறடிக்கு ஒருவர் என போர் உடையில் ஆயுதங்களுடன் நிற்கும் ராணுவ வீரர்களின் பிம்பங்கள் அதே கனவில் புகையாக கலைந்து போகின்றன. காவா தேனீர்ப் பொடி இருக்கிறது. அதைப் பருகப் பொருத்தமான கஷ்மீரத்தின் குளிர்ச்சியைத் தேடுகிறேன். ஷாலிமார் பாகில் பார்த்த சினார் மரத்தின் அசைவை ஏன் ஒலிப்பதிவு செய்து வைத்துக் கொள்ளவில்லை என்று கேட்டுக் கொள்கிறேன். கஷ்மீரில் வசிக்காமலேயே தன் முன்னோர்களின் பூமியைத் தன் ஒவ்வொரு படைப்பிலும் இணைத்துக் கொள்ளும் ருஷ்டியைப் புரிந்து கொள்ள முடிகிறது. கஷ்மீர் மீதான என்னுடைய ஈர்ப்பை புரிந்து கொள்ள முடியவில்லை. ஈர்ப்பு நெடுநாள் நிலைக்காது என்பர். இன்ப வேதனை நிலைக்கும் வரை நிலைக்கட்டும். கஷ்மீரக்கவி அமின் கமிலின் நன்னம்பிக்கை தெறிக்கும் வரிகளைப் போல் innocence மீண்டும் பூக்களாய் மலர்ந்து கைதட்டி மகிழட்டும் – என் மனதிலும் என் காதல் பூமியிலும்.

    —-

    பனி

    தோட்டத்திற்குள் வந்தது பனி நேற்றிரவு
    சோகச் செய்தி சொன்னது
    இரவு முழுவதும் சொன்னது
    மசூதியிலும் கோவிலிலும் ஒவ்வொரு பூசாரியும் சொல்வதை
    மலரின் காதில் கிசுகிசுத்து அழுதது:
    “உலகம் மரணகரமானது;
    சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியை மறைக்கிறது.
    அழுகையுடன் வருகிறோம், அழுகையுடன் செல்கிறோம்.”

    காலை சூரியன் உதித்தது,
    மனதின் குழப்பம் தெளிந்து கண்கள் சுற்றி பார்த்தன.
    பயத்தால் சுருங்கியது பனி,
    இருண்ட இரவின் தூதர் ஓடிவிட்டார்.
    பூக்கள் சிரித்தன, மொட்டுகள் –
    மகிழ்ச்சியில் கைதட்டி மலர்ந்தன.

    —-

    (சினார் மரம் – கஷ்மீரின் அடையாளம்)

  • ஒரு கை

    zen2-03
    “நான் எண்ணற்ற பௌத்தர்களுக்கும் ஏழை-எளியவர்களுக்கும் தான தர்மங்கள் செய்கிறேன் ; பல புத்த கோயில்களுக்கு நிவந்தங்கள் அளிக்கிறேன். இத்தகைய செயல்கள் எனக்கு என்ன மாதிரியான நல்-விளைவுகளைத் தரும்?” என்று அரசன் கேட்டபோது தயக்கமோ, முதன்முதலாக தென் – சீனாவின் பேரரசனைச் சந்திக்கிறோம் என்ற வியப்புணர்வோ இல்லாமல் அந்த அயல் நாட்டு பௌத்தர் மறுப்பது போல் தலையசைத்து, “ஒரு விளைவும் தராது”என்றார்.

    அரசன் நெற்றி சுருக்கினான்; பிறகு சுதாரித்துக் கொண்டு, வினவினான். “புத்தர் இருக்கிறாரா? அவரைக் காணுதல் சாத்தியமா?”

    இம்முறை போதி தர்மர் பதிலளிக்கச் சில வினாடிகள் எடுத்துக் கொண்டார்,. “இல்லை”

    போதி தர்மரின் பதில்கள் அரசனுக்குச் சினமளித்தன. “. என் முன் நில்லாதீர். இங்கிருந்து எங்காவது சென்று விடுங்கள்”என்று அவன் ஆணையிட்டதும். போதி தர்மர் புன்னகைத்தார். அவர் உதடுகள் திறந்த மாதிரி தெரியவில்லை என்றாலும் உள்ளுக்குள் ஒரு பதற்றமுமில்லாமல் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் விழிகள் சபையோருக்கு உணர்த்தின.

    சில வினாடிகளில் அவர் அவையை விட்டு நீங்கினார். அவையில் மௌனம் வெகு நேரம் நீடித்தது. அரசனின் கேள்விகளுக்குப் பின்னர் தொக்கி நின்ற குணங்களைப் புரிந்து சுருக்கமான பதில் தந்து போதி தர்மர் காத்த மௌனத்திற்கும், சபையோரின் மௌனத்திற்கும் புரியாததொரு பொதுத்தொடர்பு இருந்தது போன்று தோன்றியது. சபை வேறொரு அலுவல் எதுவுமின்றி அன்று கலைந்தது.

    பேரரசன் வூ-வுக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை. அந்தப்புர நங்கையரிடமும் அவன் செல்லவில்லை. அவையை விட்டு நீங்கும்முன் போதி தர்மர் பார்த்த பார்வை அரசனுக்குள் ஒரு வித அவஸ்தையை ஏற்படுத்தியிருந்தது. அவர் நீங்கிய பிறகு சபையோரின் கண்கள் வெட்கமுற்று அரசனின் பார்வையைத் தவிர்த்தது மாதிரி தோன்றியது பிரமையா அல்லது உண்மையா?

    மந்திரிகளிடமோ அதிகாரிகளிடமோ யாரிடமும் அன்று சபையில் நடந்தவற்றைப் பற்றி அவனால் பேச முடியவில்லை. அப்படி பேசினால், அவர்கள் இவனை ஏளனமாகப் பார்த்து சிரிப்பார்களோ? சிரிக்கமாட்டார்கள். பேரரசன் முன் தைரியத்துடன் எதிர் வார்த்தை பேச அவர்கள் எல்லாம் என்ன போதி தர்மர்களா!

    கோபமாக போதி தர்மரை விரட்டியடித்து விட்டாலும்வூ-வுக்கு போதி தர்மர் மேல் உள்ளுர கோபம் வரவில்லை என்பதுதான் உண்மை. சாதாரண குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளித்து பல மணி நேரங்கள் ஆனபின்னர், குற்றவாளிகள் மேல் எழுந்த அடக்கவொண்ணா சினம் காரணமாக தான் முன்னர் அளித்த தண்டனையை மரண தண்டனையாக மாற்றச் சொல்லியிருக்கிறான். இம்முறையோ அந்த பௌத்தரை துரத்தி அனுப்பியிருக்காமல் இருந்திருக்கலாமோ என்ற சிந்தனை ஏற்பட்டு வூ-வுக்கு குற்றவுணர்ச்சி அதிகரித்தது.

    அடுத்த நாள், நான் – ஜின்-னுக்குக் கிளம்ப வேண்டும். அவனுடைய முன்னாள் தளபதியும் இந்நாள் பௌத்த துறவியுமான ஷென் – குவாங்-கை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

    நான் – ஜின் நகர மத்தியில் இருந்த பூங்காவொன்றில் மக்கள் திரளாகக். கூடியிருந்தனர். பல போர்களில் தலைமையேற்று வெற்றி கண்டு பேரரசின் எல்லைகளை விஸ்தரித்த ஷென் – குவாங் சில வருடங்களுக்கு முன் பௌத்த சமயத்தை தழுவி துறவு ஏற்றிருந்தார். நாடெங்கும் சுற்றி மக்களுக்கு பௌத்த சமயம் பற்றியும் சீன சாம்ராச்சியத்தின் பழம்பெருமைகள் பற்றியும் உரைகள் நிகழ்த்தி வந்தார் அவர். அன்றும் நல்ல கூட்டம் ; குறிப்பாக, இளைஞர் கூட்டம் அலை மோதியது.

    பேரரசர் வூ-வின் சபையிலிருந்து துரத்தி விரட்டப்பட்ட போதி தர்மர் கூட்டத்தின் முதல் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அங்கு இருந்த மக்கள் திரளில் போதி தர்மரை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. கருத்த தோல், சுருங்கிய கன்னங்கள், நல்ல உயரம், தீர்க்கமான பெரிய கண்கள்

    வழக்கம் போல தேச பக்தி பாடலை பாடி தன் உரையைத் தொடங்கினார் ஷென் – குவாங். கூட்டத்தில் சலசலப்பு. துறவிகளுக்கான அங்கி அணிந்திருந்த ஷென் – குவாங் இரு கைகளால் சைகைகள் புரிந்தவாறு பேசினார். சாக்கிய முனியின் அரச குடிப்பிறப்பு பற்றியும் சிறு வயதில் அவருக்குப் பயில்விக்கப்பட்ட வீரக்கலைகள் பற்றியும் அவர் பேசியபோது, சீன மக்களும் அத்தகைய கலைகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று சொன்னார். அவர் பேச்சு ஒரு மணி நேரம் தொடர்ந்தது.

    ஷென் – குவாங்-கின் உரையை கவனத்துடன் கேட்ட போதிதர்மர் உரை முடிந்தவுடன் அங்கிருந்து நகர்கையில் ஷென் – குவாங்-கின் உதவியாளர் ஒருவர் அவரை அணுகினார் ; ஷென் – குவாங் அழைத்து வரச் சொன்னதாக சொன்னார், தலையை ஆட்டி “ஹ்ம்ம்- செல்லலாம்”என்று பதிலளித்த போதிதர்மர் ஷென் – குவாங்-கிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.

    “எங்கிருந்து வருகிறீர்கள்?” – கம்பீரமான குரலில் முன்னாள் தளபதி வினவினார்.

    தலையை சற்றுச் குனிந்தவாறே மெலிந்த குரலில் பதில் சொன்னார் போதி தர்மர்.

    “ஹ்ம்ம் வெகு தொலைவிலிருந்து வருகிறீர்கள்”

    போதி தர்மர் ஷென் – குவாங்கின் முகத்தை நோக்கிக் கொண்டிருந்தார்.

    “நான் பேசும்போது உங்களைப் பார்த்தேன். நான் சொல்லிய சில வார்த்தைகளை ஆமோதிப்பது போல தலையசைத்தீர்கள் ; பல சமயம் மறுப்பது போன்று உங்கள் தலையை பலமாக ஆட்டினீர்…அதற்கு என்ன அர்த்தம்?”

    “எப்போதெல்லாம் உங்கள் கருத்து சரியென்று எனக்குப் பட்டதோ அப்போதெல்லாம் ஆமோதித்தேன்; சரியென்று படாதபோது மறுத்தேன்”

    ஷென் – குவாங் போதி தர்மரை எரித்து விடுவது போன்று பார்த்தார்.

    “நான் யாரென்று உமக்கு தெரியாது…சீனப் போர்படை தளபதியாக இருந்தவன். என் பேச்சைக் கேட்பவர்கள் படையில் இன்னும் இருக்கிறார்கள்”என்று சொல்லி நிறுத்தினார்.

    போதிதர்மர் ஒரு சலனமும் இல்லாமல் புன்னகைத்தார். வெண் பற்கள் ஒளிர்ந்தன. அவர் சிரிக்கும்போது அவருடைய கண்களும் சேர்ந்து சிரித்தன.

    ஷென் – குவாங் முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரைவிட்டுத் திரும்பி, அவ்விடத்திலிருந்து நகர்ந்தார். உதவியாட்கள் ஷென் – குவாங்கின் கட்டளைக்காக காத்திருந்தனர். ஷென் – குவாங்கின் கண்கள் கோபத்துடன் காணப்பட்டாலும் அவர் ஒன்றும் சொல்லவில்லை ; மௌனமாயிருந்தார். போதி தர்மர் அவர் பார்வையிலிருந்து விலகும்வரை வாயிலையே நோக்கிக் கொண்டிருந்தார்.

    பேரரசர் வூ இரண்டு நாட்கள் கழித்து நான் – ஜிங் வந்து பால்ய சினேகிதரைச் சந்தித்தார். இருவருமே போதிதர்மர் பற்றிய தத்தம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இருவராலும் நீலக் கண் கொண்ட புத்தபிக்‌ஷுவை தம் நினைவுகளிலிருந்து அகற்ற இயலவில்லை.

    போதி தர்மர் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு சிஷ்யர்களோ புரவலர்களோ யாரும் இல்லை. வூ-வின் ஒற்றர்கள் போதி தர்மரை தேடிய வண்ணம் இருந்தார்கள். ஷென் – குவாங்கின் சீடர்கள் சீனாவின் பல்வேறு புத்த விகாரங்களிலும் அயல்-நாட்டு பௌத்தரைத் தேடினர். ஒரு கட்டத்தில் அந்த சன்னியாசி சீனாவை விட்டுச் சென்றிருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.

    ஆண்டுகள் பல சென்றன. வெய் பேரரசனின் ஆளுகைக்குட்பட்ட வட-சீனத்தின் வட எல்லையில் இருந்த மலைக்குகையொன்றில் ஒரு துறவி கண்களைத் திறந்தவாறே குகையின் சுவற்றைப் பார்த்துக் கொண்டு பல வருடங்களாக அமர்ந்திருக்கிறார் என்ற செய்தி ஷென் – குவாங்-கை எட்டியது. அது பல வருடங்களுக்கு முன் அவர் சந்தித்த “நீலக் கண் காட்டுமிராண்டியாக இருக்கலாம் என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டது. கிடைத்த செய்திகளின்படி சுவர் நோக்கி அமர்ந்திருந்த துறவியின் அங்க அடையாளங்கள் நான் – ஜிங்கில் சந்தித்த இந்தியத் துறவியின் அங்க அடையாளங்களுடன் ஒத்துப் போயின.

    பகை ராச்சியத்துக்குள் வூ-வால் நுழைய முடியாது. மாறுவேடம் அணிந்து வட-சீனாவுக்குள் நுழையும் திட்டத்தை வூ பிரஸ்தாபித்தபோது ஒற்றர் படை அதனை நிராகரித்துவிட்டது. ஷென் – குவாங் இப்போது நாடறிந்த பௌத்த துறவி. எனவே அவர் வட-சீனாவில் நுழைவதில் பிரச்னை இருக்காது. ஷென் –குவாங் தானே சென்று காட்டுமிராண்டி பௌத்தனை தென் – சீனாவுக்கு அழைத்து வருவதாக உறுதியளித்தார்.

    வட-சீனாவின் வட எல்லை மலைக் குகையை அடைய பல மாதங்கள் பிடித்தன. ஷென் – குவாங்-குடன் வந்த உதவியாளர்கள் எல்லாம் வழியிலேயே இறந்து போயினர். மலையடிவாரத்தை அடைந்தபோது அவர் குழுவில் ஷென் – குவாங் மட்டுமே மிஞ்சியிருந்தார்.

    ஆயிரம் ஆடிகள் மலையில் ஏறி குகையை கண்டு பிடித்தார் ஷென் – குவாங் . சுவற்றைப் பார்த்தபடி கண்களை திறந்திருக்க போதி தர்மர் உட்கார்ந்திருந்தார். ஜடாமுடியாக அவரின் கேசம் நீண்டு, முடிச்சிட்டு வளர்ந்திருந்தது. புதராக முகமெல்லாம் தாடி. கண்கள் இமைக்காமல் சுவரை வெறித்து நோக்கியபடி இருந்தன. புருவங்கள் இல்லாமல் பிறந்தவரோ என்ற கேள்வி ஷென் – குவாங்கின் உள்ளத்தில் பூத்தது. நான் – ஜிங்கில் பாரத்தபோது போதிதர்மருக்கு புருவம் இருந்ததே!

    ஷென் – குவாங் “காட்டு-மிராண்டி”என்று உரக்க அழைத்தார். அதட்டினார். தோளைத் தட்டி கூப்பிட்டார். போதி தர்மரிடமிருந்து ஒரு மறுமொழியும் இல்லை. அவரின் சுவாசம் ஓருவித தாளலயத்துடன் குகையெங்கும் எதிரொலித்தது.

    அன்றிரவே ஷென் – குவாங்-குக்கு கடும் குளிர்க் காய்ச்சல் பீடித்தது. கிராமத்துக்காரர்கள் ஷென் – குவாங்கிற்கு உணவும் மருந்தும் எடுத்து வந்தார்கள். சில நாட்களில் அவர் குணமானார். கிராம மக்கள் வருவதோ, தீபமேற்றிச் செல்வதோ, ஷென் – குவாங் அதே குகையில் தன்னுடன் இருந்து உணவு உண்பதோ, குகையை வளைய வருவதோ போதி தர்மருக்கு ஓர் இடையூறும் தரவில்லை. சுவரோடு சுவராக உயிரற்ற சிலை போல் அமர்ந்திருந்தார். விளக்கேற்றப்படாத நாட்களில்கூட அக்குகை ஒளியுடன் திகழ்வதாக ஷென் – குவாங்குக்குத் தோன்றியது.

    மாதங்கள் பல சென்றன. ஷென் – குவாங்-கின் விண்ணப்பங்கள், அழைப்புகள், கூவல்கள் எதுவும் போதி தர்மர் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.

    குளிர் காலத்தில் ஒரு நாள் குகை வாசலை பனி மூடியது. அச்சிறு குகையில் போதி தர்மரும், ஷென் – குவாங்கும் மட்டும் இருந்தனர். ஷென் – குவாங்கிற்கு உணவு கொடுக்க கிராமத்தார் யாரும் பல வாரங்களாக வரவில்லை. பசி மீறி மயக்க நிலையில் ஷென் – குவாங் தரையில் விழுந்தார். சுவர் முன் ஒரு கல் போல உட்கார்ந்திருந்த போதி தர்மரை காண முடியாமல் போனது ; அவரது கண்கள் மூடியே கிடந்தன. மிகப் பிரயத்தனப்பட்டு சுவர்ப் பக்கம் ஒரு முறை நோக்கினார். போதி தர்மரைச் சுற்றி ஒளி வட்டம் பிரகாசமாய்ச் சூழ்ந்திருப்பது போல அரை மயக்கத்திலிருந்த ஷென் – குவாங்குக்கு தோன்றியது. மனதுள் அழுகை பீறிட்டு எழுந்தது. கண்ணீர்த் துளியும் தோன்றாத அளவுக்கு அவர் உடல் வலுவிழந்திருந்தது.

    வலது கைக்கு தரையில் ஏதோ தட்டுப்பட்டது. ஒரு முனை கூர்மையாக இருந்த கனமாக கல். உணர்ச்சி அலை மோத, கொஞ்சநஞ்ச சக்தியை ஒன்று திரட்டி. ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு, அக்கல்லால் தன் இடது கையை பலமுறை குத்திக் கொண்டார் ;. ரத்தம் பெருகி வழிந்தது. முட்டிக்குக் கீழ் தன் இடது கையை பெயர்த்தெடுத்தார். வலது கையால் அதை போதி தர்மர் முன் வீசியெறிந்தார். சுவற்றுக்கும் போதிதர்மருக்கும் இடையில் இருந்த இடைவெளியில் ஷென் – குவாங்கின் இடக்கை விழுந்தது.

    போதி தர்மரின் தலை ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அன்று அசைந்தது. ஷென் – குவாங் தரையில் குற்றுயிராகக் கிடந்தார்.

    ஷென் – குவாங்கை தன் மடியில் கிடத்தி வெட்டப்பட்ட இடக்கையின் நீள் வெட்டு தோற்றத்தை போதிதர்மர் சோதித்துக் கொண்டிருந்தபோது குகைவாயிலின் பனிக் கதவை உடைத்துக் கொண்டு கிராமத்தினர் குகைக்குள் நுழைந்தனர்.

    Bodhidharma_and_Huike-Sesshu_Toyo

    984072310_Hpu6F-S-1

    நன்றி : பதாகை (http://padhaakai.com/2014/03/23/bodhi-dharma/)

  • மரம்


    மரம் போலவொரு
    அழகான கவிதை
    என் வாழ்நாளில்
    என்னால் எழுத முடியாது.
    பசி மிகுந்த
    மரத்தின் வாய்
    பூமித் தாயின்
    வழியும் முலைகளில்
    பொருத்தப்பட்டிருக்கும்.
    கடவுளை தினமும்
    பார்த்துக் கொண்டிருக்கும் மரம்
    தன் இலைக் கரங்களை எழுப்பி
    தொழுகை புரியும்.
    கோடை காலங்களில்
    வண்ணாத்திக் குருவியின் கூடுகளை
    தொப்பிகளாக அணிந்து கொள்ளும்.
    மார்பில் பனி பூசிக் கொண்ட
    மரங்கள்
    மழையுடன் கூடும்
    என் போன்ற முட்டாள்களால்
    கவிதை மட்டுமே
    கிறுக்க இயலும்
    கடவுளால் மட்டுமே
    மரத்தினை படைத்தல் சாத்தியம்.

    [ ஜாய்ஸ் கில்மர் எழுதிய “Trees” என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம்]