Tag: பக்தி

  • ஏ ஐ 171 விமானமும் மஞ்சுநாதரும்

    ஏ ஐ 171 விமான விபத்தில் ஒருவரைத் தவிர அனைத்து பிரயாணிகளும் விமானிகளும் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களும் செத்துப் போயினர். ஆனால் பகவத் கீதையின் பிரதியொன்று சற்றும் கருகாமல் தப்பித்தது. இது  சமூகஊடகங்களிலும் வாட்ஸப் உரையாடல்களிலும் பகிரப்பட்டது. துளி கூட பச்சாதாபமோ, சக-உணர்வோ இல்லாத மனிதர்கள்! இவர்களின் பக்திவுணர்வு போலியானது! “எனக்கு மட்டும் அருள்! வேறு யாருக்கும் அருளாதே!” என்று இறைவனிடம் வேண்டுவது ஆன்மீகமன்று. “உனக்கு தேங்காய் உடைக்கிறேன், எனக்கு செல்வத்தைக் கொடு, அதைக்கொடு, இதைக்கொடு” என்னும் வியாபாரம்.  பிரார்த்தனை ஆன்மீகத்தின் முக்கியமான அங்கம். ஆனால் அது வியாபார உணர்வில் எழுவதல்ல. அதை புரிந்து கொள்ளும் நுண்ணுணர்வு இவர்களுக்கிருந்தால் ஆன்மீகத்தில் நல்ல தேர்ச்சி கண்டிருப்பார்கள்! 

    பிரயாணிகளை இறந்த பிறரைக் காப்பாற்றாமல் தன்னை மட்டும் காப்பாற்றிக்கொண்ட பகவத் கீதை பிரதி – என்று சொன்னதால் என் மீது பாய்ந்தார் அந்த வாட்ஸப் குழுவின் உறுப்பினர். “புனித நூலை ஏளனம் செய்கிறாய்” என்று என் மீது குற்றஞ்சாட்டினார். “புனித நூலை நீ புரிந்துகொண்ட  லட்சணத்தை ஏளனம் செய்கிறேன்” என்று அவரிடம் எப்படி சொல்லி புரியவைப்பது?

    தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிப் பல பத்தாண்டுகளாக நடந்த கொலை, வன்புணர்வு போன்ற குற்றச்செயல்களை மறைப்பதில் பங்கு வகித்ததாகக் கூறப்படும் தர்மகர்த்தாக்களின் கோயில் ஊழியர்களின் செய்கைகளால் அந்தக் கோயில் அசுத்தப்பட்டிருக்காதா என்ற எண்ணம் கடந்த சில தினங்களாக அலை மோத குறிப்பொன்றை பேஸ்புக்கில் எழுதினேன்.

    “சென்ற வார இறுதியில் என் மகளை அவள் கல்லூரியில் விட்டு வர மணிபால் சென்றிருந்தேன். திங்கள் காலை பெங்களூருக்குத் திரும்ப வரும் போது தவறுதலாக வாகன ஓட்டுனர் வேறு வழியில் சென்று விட அந்தப் பாதை எங்களை தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வாசலுக்கு அழைத்துச் சென்றது. தெரியாமல் இங்கு வந்து விட்டோம். மஞ்சுநாதரை தரிசனம் செய்து விடுவோம் என்ற ஆசை துளிர்விட்டது. இறைவனே அழைத்துள்ளார் எனும் வழக்கமான சென்டிமென்ட் சிந்தனை லேசாக எட்டிப்பார்த்தது. இத்தகைய சந்தர்ப்பங்களை என்றும் தவற விடாத நான் வழக்கத்துக்கு மாறாக “நிற்க வேண்டாம்…வீட்டை நோக்கிச் செல்வோம்” என்று சொன்னேன். என்னுடைய மனைவியும் கோயிலுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டவில்லை. தர்மஸ்தலாவின் கோயிலைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என்பது காரணமாயிருக்கலாம். இது” அனுமார்” கோயிலா என்று கூட அவர் கேள்வி கேட்டார். செய்தியில் வந்து கொண்டிருக்கும் தகவல்களைப் பார்க்கும் போது தரிசனத்துக்கு நிற்காமல் சரியான முடிவை எடுத்திருக்கிறோம் என்று நினைக்கத் தோன்றுகிறது.”  

    என்னுடைய எந்த போஸ்டுக்கும் லைக்கோ கமெண்ட்டோ போடாத நெடுநாளைய நண்பர் உடனே வந்து ஆஜரானார்.

    “மீண்டும் ஒரு முறை அவரை தரிசிக்கும் வாய்ப்பினை அந்த மஞ்சுநாதர் ஏற்படுத்த வேண்டும். அவனருளாலே அவன் தாள் வணங்கி.. நம்மில் பெரும்பாலானோர் நாம் இறைவனை பார்க்க போகிறோம் என்று நினைக்கிறோம். உண்மையில் அந்த இறைவன் நம்மை பார்க்க விரும்பினால் அன்றி அது நடக்காது “

    அவர் இட்ட கமென்டின் தர்க்கப்பிழை குறித்து அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கோயிலுக்குச் செல்வதும் இறைவனைத் தரிசிப்பதும் அனைத்தும் இறைவனின் விருப்பப்படி என்ற கோட்பாட்டை சரியாகப் பொருத்தினால் கோயிலைச் சுற்றி நடந்ததாக கூறப்படும் கொடுமைகள் கூட இறைவனின் விருப்பம் என்பதாகத்தானே இருக்கும்? உரையாடல் உடனே நின்றுவிட்டது. தானாகவே வந்து கமெண்ட் போட்ட நண்பர் உரையாடலைத் தொடர விருப்பம் இல்லை என்று சொல்லி நிறுத்திக் கொண்டார். அவர் என்னுடன் மேற்கூடி பேசாமல் நிறுத்திக் கொண்டது அவர் விருப்பமா அல்லது 

    இறைவனின் விருப்பமா?

    தற்செயலாக தர்மஸ்தலா கோயிலைக் கடந்து பயணிக்கும் வாய்ப்பு அமைந்தது இறைவன் சித்தம் என்று நினைப்பது இயல்பான பழக்கம். அச்சமயத்தில் அங்கு நிற்காமல் பயணத்தைத் தொடர்ந்தது என்னைப் பொறுத்தவரை இயற்கைக்கு மாறான ஒரு விஷயம். ஏன் கோயிலுக்குள் நுழையவில்லை? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது உண்மைதான். அடுத்த இரண்டு நாட்கள் “தர்மஸ்தலா கொலைகள்” பற்றிய செய்திகள் பூதாகாரமாக ஆன்லைன் மீடியாக்களில் ஒலித்தபோது, பின்னோக்குப்  பார்வையில்  கோயிலுக்குச் செல்லாமல் இருந்தது சரிதான் என்ற அகவுணர்வு எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

    பகவத் கீதையைப்பற்றி மரியாதை இல்லாமல் பேசி விட்டேன் என்று சண்டைக்கு வந்தவரும் “அவன் அருளால் தான் அவனை வணங்க முடியும்” என்று சொன்ன அன்பரும் எதை மறந்து பேசுகிறார்கள்?  நியாயவுணர்வும் சக-மனிதர் சார்ந்த பரிவுணர்வும் ஆன்மீகச் செயல்முறையின் அஸ்திவாரம் என்பதை. நியாயவுணர்வற்ற, சகமனிதர் குறித்த பரிவுணர்வற்ற பக்தியுணர்வு அதிகாரத்திற்குத் துணை போகும் தன்மையை எப்போதும் தன்னகத்தே கொண்டுள்ளது. 

    ஸ்வதர்மம் என்று கீதையில் வரும் தத்துவக் கலைச்சொல் எதனை குறிக்கிறது?  தனக்கேயுரித்தான கடமையைப் புரிவது ஸ்வதர்மம் – இது உடல்-புத்தி சார்த்த “அபர தர்மத்தையும்” ஆன்மிகம் சார்ந்த “பர தர்மத்தையும்” ஒன்றிணைந்தது. பக்தி கலந்த அன்பும் சேவையும் பர தர்மம் எனப்படும். உலகியல் சார்ந்த பணிகள் அபர தர்மம் எனப்படும். 

    ஏ ஐ 171 விமானத்தில் உயிரிழந்த மனிதர்கள் – தப்பிப்பிழைத்த பகவத் கீதை பிரதி – இவ்விரண்டில் கீதையை வாசித்துப் புரிந்து கொண்டவனுக்கு எதன் மீது பரிவுணர்வு இயல்பாக எழ வேண்டும்? 

    “அவனருளால் அவன் தாள் வணங்கி…” என்பவரை எடுத்துக் கொள்வோம். கோயில் என்பது இறைவன் இருக்கும் இடம் என்று எண்ணுபவன் அதன் பரிசுத்தத்தை பேணுவான் – பரிசுத்தம் எதில் உள்ளது – நம் செயல்களில் பொதிந்துள்ள அறத்தினில் உள்ளது – நீதியை நிலை நாட்டுதல் அர்ஜுனன் போன்ற வீரனின் கடமை என்று கண்ணன் போதிக்கிறானே! தர்மஸ்தலா கோயிலைச் சுற்றி நடந்த கொலைகள் கொடுமைகள் குறித்த நியாயவுணர்வு பீறிட்டெழ வேண்டியது அக்கோயிலினுடைய இறைவனைப் போற்றும் பக்தர்களின் இன்றியமையா கடமை என்று சொல்லித்தான் புரிய வேண்டுமா என்ன? 

  • பகவத் கீதையும் பவுத்தமும்

    பகவத் துதியை ஒரு கருத்தியலாக முன் வைத்த நூல் பகவத் கீதை. இதனை பக்தி மார்க்கம் என்று வகைப்படுத்துகிறது பகவத் கீதை. இதே நூலில் வலியுறுத்தப்படும் ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் – இரண்டையும் சேர்த்து வீடு – பேறடைய மூன்று மார்க்கங்களைத் தொகுத்தது கீதை. பவுத்தத்தின் மும்மணிகள் – புத்தம், தம்மம், சங்கம் போலவே ஏற்கனவே இருந்த ஞானம், கர்மம் – ஆகிய இரண்டோடு “பக்தி” என்ற ஒன்றை இணைத்தது வைதீக மதம். “பகவத் கீதையின் கருத்துக்கள் களவாடப்பட்டவை” என்ற பொருளில் யாரோ ஒருவர் பேசிய குறுங்-காணொளியை ஓரிரு தினங்கள் முன் கேட்டபோது “களவாடல்” என்று எப்படிக் கூற முடியும் என்ற கேள்வி எழுந்தது. பவுத்தத்தின் எழுச்சிக்கு வைதீக மதத்தின் எதிர்வினை என்றுதான் இதைச் சொல்ல முடியும்.

    பவுத்தம் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் சமூகத்தின் உயரடுக்கு வர்க்கங்களையும் ராஜரீக விஷயங்களில் சம்பந்தப்பட்டிருந்த க்ஷத்திரியர்களையும் அது அதிகம் ஈர்த்தது. இவ்விரண்டு குழுக்களின் ஆதரவில் அது வரை தழைத்து வந்திருந்த வைதீக மற்றும் சாதாரணர்களின் ‘இந்து’ மதம் தம்முடைய ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கக் கூடும். இக்கால கட்டத்தில் பவுத்தத்தின் மீதான பல்வேறு “ஆத்திக எதிர்வினைகளை” – விலங்குப்பலியை தடை செய்தல், சாதிக்கட்டுப்பாடுகளை இறுக்குதல், ‘இந்து’ சமயத்தின் மிகசச்செயல் திறன் மிக்க ஆயுதமான “உட்கிரகித்தல்” போன்றவைகளை – ‘இந்து’ மதம் கைக்கொண்டது. புத்தரை விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக உள்ளிழுக்க முயன்றது. புத்தர் விஷ்ணுவின் அவதாரமானதற்கு சொல்லப்படும் காரணம் – “தவறான போதனையால் எதிரிகளை தவறாக வழிநடத்தி அவர்களை பாவக்குழியில் தள்ளவே ; இதற்காகவே வேத யாகங்களை ஒழிப்பை புத்தர் பேசினார்.” “ஒன்பதாவது அவதாரம்” எனும் அடிப்படையில் புத்தர் பற்றிய புராணக்கதைகளுக்கு சீரழிந்த பவுத்தம் எந்த ஆட்சேபனையும் அளிக்காத காலகட்டங்களில் தம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் புத்தரின் வழிபாட்டை பவுத்த உபாசகர்கள் மேற்கொள்ள வைதீக மதம் அரை மனதுடன் சம்மதித்ததும் பின்னர் நடந்தது.

    “பகவத் கீதையின்” கருத்துக்கள் “பவுத்தத்திலிருந்து” பெறப்பட்டவையா என்ற கேள்விக்கு வருவோம். கீதையில் வரும் அர்ஜுனனின் தடுமாற்றத்தை (அதாவது, யுத்தம், அதனால் எழக்கூடிய விளைவுகளின் பாதிப்பு – கர்மா அல்லது செயலின்மை ஆகியவற்றின் வாயிலாக புனிதமான சாதிக் கடமையை மீறுதல்) பல க்ஷத்திரியர்கள் மற்றும் உயரடுக்கு வர்க்கங்கள் அக்கால கட்டத்தில் எதிர்கொண்டிருக்கக் கூடிய சூழலின் உருவகமாக பார்க்க முடியும். கர்ம மார்க்கம் (அதாவது வர்ணம் அல்லது சாதி சார்ந்த கர்மம்) மற்றும் வைதிக அமைப்பின் குறியீடாக கிருஷ்ணர் போதிக்கும் “செயலாற்று” என்னும் அறிவுரையைக் கருத முடியும். “செயலற்று” இருப்பது பவுத்தத்தின் லட்சியமான துறவறத்தைக் (Monastic Withdrawal) குறிப்பதாகக் கொள்ளலாம்.

    அர்ஜுனன் (பவுத்தப்பாதையில் சென்ற க்ஷத்திரியர்கள் மற்றும் பிற உயர் வர்க்கத்தினர்) செயலற்ற தன்மையைத் (பௌத்தம்) தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக செய்ய வேண்டிய வர்ணக் கடமைகளை அணுகுவதற்கான ஒரு புதிய வழியை கிருஷ்ணர் (பிரம்மம்) முன்வைக்கிறார். தனிப்பட்ட ஆசை அல்லது உள்நோக்கத்துடன் செய்யப்படும் செயல்கள் மட்டுமே கர்மாவைப் பாதிக்கும் என்றும் கிருஷ்ணர் கூறுகிறார். மற்ற எல்லா செயல்களும் (எ.கா. வர்ணக் கடமையின் காரணமாக மட்டுமே செய்யப்படும் கருமங்கள்) ஒருவருடைய கர்மாவை பாதிக்காது. அடிப்படையில் இது பிந்தைய வகை செயலின்மைக்கு (“Monastic Withdrawal”) ஒத்ததானதாக ஆக்குகிறது.

    குறைந்த தத்துவ நாட்டம் கொண்டவர்கள் பௌத்தத்தால் பெரிதும் ஈர்க்கப்படவில்லை என்பதைக் கண்டுகொண்ட வைதிகர்கள் மதத்துக்குள் உணர்ச்சிக் காரணியை நியாயப்படுத்தும் விதமாக பக்தி மார்க்கத்தின் கருத்தியலை, அதன் சிறப்பை கீதையில் விவரிக்கின்றனர்.

    சுருக்கமாக சொல்லப்போனால், பகவத் கீதையில் வரும் பக்தி-மார்க்கக் கொள்கையின் வளர்ச்சியை பௌத்தத்திற்கு வைதீகர்கள் தந்த எதிர்வினையாகப் பார்க்க முடியும். மேலும், பௌத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், பொதுவாக பண்டைய பிராமணியத்தினால் மிகவும் அதிருப்தி அடைந்தவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய பண்டைய இந்தியாவின் சமூக உயரடுக்கிற்கு விரும்பத்தக்கதான ஒரு பிரபல மதமாக முறைப்படுத்தியதில் பகவத் கீதை பெரும்பங்காற்றியிருக்கிறது எனலாம். .

    பகவத் கீதைக்கும் பௌத்தத்துக்கும் என்ன தொடர்பு? வைதீக சமய நூலுக்கும் பௌத்தத்தின் அடிப்படைச் சிந்தனைக்கும் என்ன ஒற்றுமை இருக்க முடியும்? ஆத்மன்/பிரம்மம் கருப்பொருள் பகவத் கீதையின் அடிப்படை. இரண்டையும் மறுக்கும் அனாத்ம தத்துவம் பௌத்தம். ஆச்சாரிய நாகார்ஜுனர் இயற்றிய நூலான “சதுஸ்தவா”-வில் ஒரு செய்யுள் வரும்.

    “பகவானே, உம்மிடம் சிந்தனையில்லை, பாகுபாடில்லை, நோக்கங்களில்லை, எனினும் உயிரினங்களின் நன்மைக்காக ஒரு புத்தரின் பணியை இவ்வுலகில் பற்றின்றி செய்கிறீர்.” – சதுஸ்தவா (நாகார்ஜுனர்)

    கிட்டத்தட்ட இதே போன்ற கருத்து போல் ஒலிக்கும் பகவத் கீதையின் வசனம் ஒன்றுண்டு.

    “மூவுலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை ஏதுமில்லை. எனக்குத் தேவையோ, நான் அடைய வேண்டியதோ ஏதுமில்லை. இருந்தும் நான் விதிக்கப்பட்ட கடமைகளில் ஈடுபட்டுள்ளேன்” என்ற கீதையின் சுலோகம் (பகவத் கீதை – 3:22).

    ஒரே பொருள் கொண்ட வசனங்கள் இரண்டும். ஆனால் கோட்பாட்டுப் பின்னணியில் பொருத்தும் போது அர்த்தம் மாறுபடுகின்றது.

    நாகார்ஜுனரின் கருத்துப்படி – எதற்கும் சார்பற்ற சுயம் இல்லை. அனைத்தும் மற்றவற்றைச் சார்ந்தே உள்ளன. மாயை அல்லது பிரமையே உலகின் அனைத்து பொருட்களும். சாரமில்லை. நிரந்தர இருத்தல் எதற்கும் எவர்க்கும் இல்லை. எல்லாமே அநித்தியம். இவ்வுண்மையை உணர்ந்து நிர்வாண நிலையில் இருக்கும் புத்தருக்கு சிந்தனையோ, பாகுபாடோ, பற்றோ, கடமையோ, தேவைகளோ, நோக்கங்களோ எதுவும் இருக்காது. கடமையில் ஈடுபடுபவர் போல தோற்றமே நான் காண்பது. அனைத்தும் சூன்யம்.

    இப்போது மேல்சொன்ன சதுஸ்தவாவின் செய்யுளை படித்துப்பார்த்தால் நாகார்ஜுனர் என்ன சொல்ல வருகிறார் என்பது விளங்கும்.

    கீதையில் பேசுபவன் கடவுள், அவதாரம், பிரம்மமே அவன், அவன் நிலையானவன், அழிவற்றவன், மூலகாரணம் அவனே, அவனுக்கு காரணங்கள் எதுவும் இல்லை, மூவுலகையும் படைத்து, காத்து, அழித்து, மீண்டும் படைப்பவனுக்கு அடைய என்ன இருக்கிறது? ஆனாலும் அவன் கடமையில் ஈடுபடுகிறான். அர்ஜுனனுக்கு ரதமோட்டுகிறான். அவனே கடமை புரியும் போது க்ஷத்திரியனாக போர் புரியும் கடமை கொண்ட அர்ஜுனன் மனந்தளரலாமா? மயக்கமுறலாமா? உணர்ச்சியற்ற சாந்த நிலை அவனுக்கானதில்லை. அவனுக்கு விதிக்கப்பட்ட போரை அவன் புரிந்துதானாக வேண்டும்.

    சதுஸ்தவா-வின் இந்தச் செய்யுளைத் தழுவி பகவத் கீதையின் ஆசிரியர் எழுதினாரா அல்லது நாகார்ஜுனர் பகவத் கீதையை வாசித்துவிட்டு இந்தச் செய்யுளை இயற்றினாரா என்ற தகவல் தெரியாத வரை யாரைப் பார்த்து யார் எழுதினார்கள் என்பது பற்றி எப்படி தீர்ப்பு சொல்வது?

    இரண்டு தத்துவங்களும் பல நூற்றாண்டுகளாக வாதிட்டும் விவாதம் செய்தும் உரையாடியபடியே இருந்தன. தத்துவ நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளாமல் வடிவங்கள், தொன்மங்கள், முறைகள் என அனைத்தையும் இரு மரபுகளும் கொடுத்தல் வாங்கல் செய்திருக்கின்றன. காப்பியங்களைக் கூட இரு சமய இலக்கியங்கள் பகிர்ந்துகொண்டுள்ளன. மணிமேகலை, புத்தசரிதா எனும் காப்பியங்களில் வரும் இராமாயண, மகாபாரத குறிப்புகளை உதாரணமாகக் கூறலாம்.

    பகவத் கீதையில் “நிர்வாணா” எனும் பௌத்த கலைச்சொல் இரண்டு இடங்களில் உபயோகிக்கப்படுகின்றன.

    “பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்திலேனும் இதில் நிலைகொள்வோன் பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.” (2-72, மொழிபெயர்ப்பு : மகாகவி பாரதி)

    தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.

    *இருமைகளை (*நன்மை – தீமை; குளிர் – சூடு; இன்பம் – துன்பம் என எல்லாப் பொருள்களைப் பற்றி நிற்கும் இரட்டை நிலைகள்) வெட்டிவிட்டுத் தம்மைத்தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சியெய்தும் ரிஷிகள் பாவங்களொழிந்து பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.

    விருப்பமும், சினமும் தவிர்ந்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது. (5-24/25/26, மொழிபெயர்ப்பு : மகாகவி பாரதி)

    “நிர்வாணா” என்ற பவுத்த கலைச்சொல் இங்கு கடன் வாங்கப்பட்டுள்ளது. அக்கால பவுத்தர்களை குழப்பும் எண்ணத்துடன் இது செய்யப்பட்டிருக்கலாம். பவுத்தத்திற்கு முந்தைய வேதக் கருத்தியலான “பிரம்மம்” எனும் மீப்பொருண்மையியல் முழுமையுடன் பவுத்த நிர்வாண நிலை இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு கலைச்சொற்களின் பொருளையும் தெரிந்தோர்இந்தச்சூழலமைவில் எப்படி பொருள் கொள்ளப்பட வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி கூறுகிறார் : “பவுத்தர்களின் நிர்வாணம் ஷுன்யதா ; கீதை சொல்லும் நிர்வாணம் சாந்தி ; பிரம்மத்துள் ஒன்றாதல் எனும் பொருளில் பிரம்ம-நிர்வாணம் என்று கீதை சொல்கிறது.”

    அதெப்படி பவுத்த கலைச்சொல்லை இந்து சமய நூலில் சேர்க்கலாம் என்போர்க்கு தெவிஜ்ஜ சுத்தத்தை உதாரணம் காட்டலாம்.

    பிராமண இளைஞனுக்கு தம்மத்தை போதிக்கும் ததாகதர் வேத பாரம்பரியத்தின் கலைச்சொல்லைப் பயன்ப்டுத்துவதைப் பாருங்கள் :-

    “நீ சொல்வதைப் போல பிக்கு கோபத்திலிருந்து விடுபட்டவர், தீமையிலிருந்து விடுபட்டவர், மனத்தில் தூய்மையானவர், தனக்குத் தானே எஜமானர்; பிரம்மாவும் கோபத்திலிருந்து விடுபட்டவர், தீமையிலிருந்து விடுபட்டவர், மனத்தில் தூய்மையானவர், அவருக்கு அவரே எஜமானர். அது போல, கோபம் இல்லாதவனாகவும், தீமை இல்லாதவனாகவும், மனத்தூய்மை உடையவனாகவும், தன்னைத் தானே எஜமானனாகவும் கொண்ட பிக்கு, மரணத்திற்குப் பிறகு, உடலைக் கரைத்து, அதே பிரம்மாவுடன் ஐக்கியமாக வேண்டும், அத்தகைய நிலை எல்லா வழிகளிலும் சாத்தியம்”

    பகவத் கீதை கருத்துகளைக் களவாடிற்று! திக்க நிகாயம் கருத்துகளைக் களவாடிற்று என்பதெல்லாம் மடத்தனம். ஒரே கலாசார நிலத்தில் விளைந்த வாதமுறைகளை, கூறுமுறைகளை இரு பெரும் மரபுகளும் எடுத்தாண்டன என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

  • Kashmir’s Transition to Islam – by Ishaq Khan – விமர்சனம்

    வரலாற்று மூலங்களைத் திறந்த மனதுடன் அதே சமயம் விமர்சன பூர்வமாக அணுகுதல் அதிமுக்கியம். இல்லையேல் வெறும் விவாதமாக முடிந்துவிடக்கூடும். கருத்து நிலைகளுக்கேற்றவாறு சாயும் அணுகுமுறை வரலாற்றாளர்களின் பலவீனமாகக் கருதப்படும். என்னுடைய பார்வையில், இஷாக் கான் அவர்களின் Kashmir’s Transition to Islam ஒரு பலவீனமான நூல் என்றே சொல்வேன்.

    இஷாக் கான் இரண்டு பார்வைகளை முன் வைக்கிறார். (1) Syncretism – அதாவது சமயங்களின் சேர்ந்தியங்குதல் – எனும் கருத்தை அவர் நிராகரிக்கிறார். இஸ்லாம் கஷ்மீரின் புராதன கலாசார அம்சங்களை ஏற்றுக் கொண்டதை மாறும் முறை என்று வர்ணிக்கிறார். இஸ்லாமின் இறுதி இலக்கு “ஷரியா” எனப்படும் இஸ்லாமிய உயர் கொள்கைகளே என்கிறார். (2) நந்த் ரிஷியும் அவருக்குப் பின் வந்த ரிஷிகளும் கஷ்மீரியத் என்ற அடையாளத்தை இஸ்லாத்தின் அடிப்படைச் சித்திரத்தின் பின்ணனியில் வரைய வந்தவர்கள்.

    இரண்டு பார்வைகளும் பிரச்னைக்குரியவை. கஷ்மீர தேசியவாதத்தின் அடிப்படை முழுவதையும் “இஸ்லாம்” எனும் ஒற்றை அடையாளத்தில் சுருக்க நினைத்த குழுக்களின் குரல் வலுத்த (“அயல் நாட்டு உதவியுடன் வலுக்க வைக்கப்பட்ட”) தொண்ணூறுகளில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் – கஷ்மீரக் கலாசாரத்தின் சிறப்பியல்பு என்று கஷ்மீரின் தற்கால சாதாரண நபர்களும் பெருமிதங்கொள்ளும் ஒன்றை மறுக்கிறது. சமயங்களின் ஒருங்கிணைவு என்ற ஒன்றும் இல்லை. பிராமணர்களின் சாதீயத்தால் பாதிக்கப்பட்ட வெகுஜனங்கள் இஸ்லாமைத் தழுவுதலுக்குச் சலுகையாக அவர்களின் முந்தைய கலாசாரத்தின் அம்சங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டன. இது இறுதியானதில்லை. கஷ்மீரில் இஸ்லாம் மாறும் தன்மையதாக இருக்கிறது. எனவே, சமயங்களின் ஒருங்கிணைவு இலக்கில்லை. இதற்கான தரவுகளை ஆசிரியர் தெளிவாகத் தரவில்லை. நந்த் ரிஷி-யின் பாடல்களில் இருக்கும் இந்து, பௌத்த அடையாளங்களை அவரின் ஆரம்ப காலச் சிந்தனை என்று சுருக்கிவிடும் இஷாக் கான், லல்லா எனும் சைவ சித்தரை முழுவதுமாக இஸ்லாத்தில் பொருத்திக் கொள்கிறார்.

    கங்கைச் சமவெளியில் சாதீய கொடுமைகளுக்கு எதிராக பக்தி இயக்கம் பரவி பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இஸ்லாத்தின் பரவலை கட்டுப்படுத்தியது என்பதை ஏற்கும் இஷாக் கான், கஷ்மீரில் பக்தி இயக்கம் தோல்வியுற்றது என்று கூறும்போது இஸ்லாம் பிராமணரல்லாத வெகுஜனங்களை அரவணைத்துக் கொண்டதுதான் என்று எளிதில் கூறி விடுகிறார். இதே நிலைமை கங்கைச் சமவெளியில் ஏன் கை கூடவில்லை என்ற கேள்விக்கு பதிலேதும் சொல்லாமலேயே சென்று விடுகிறார் இஷாக் கான்.

    சுல்தான் சிக்கந்தர் இந்துக் கோயில்களை அழித்ததைப் பதிவு செய்யும் ராஜதரங்கிணி நூல் மீது ஆசிரியருக்கு ஏனோ மனத்தாங்கல்! இஸ்லாமிய அரசர்களை காலரீதியாக பெரும்பான்மையான இடங்களில் தெளிவுடன் பதிவு செய்யும் ராஜதரங்கிணியின் விடுபடல்களுக்கு காரணம் கற்பித்தல் எந்த அளவுக்கு வரலாற்று அணுகுமுறை எனத் தெரியவில்லை? சுல்தான் சிக்கந்தரின் சிலை உடைப்புகளுக்கான பழியை புதிதாக மதம் மாறிய முன்னாள் பிராமணர் சுக பட்டர் மீது பழியைப் போடுகிறது ராஜதரங்கிணி! புது இஸ்லாமியராக தமது விசுவாசத்தை நிரூபிக்க சுக பட்டர் செய்த கொடுமைகள் என்று பதிவு செய்யும் ராஜ தரங்கிணி – மீர் அலி சைய்யத் ஹம்தானி-பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதற்கு காரணமாக ராஜ தரங்கிணியின் பிராமண ஆசிரியர்களினுடைய மனச்சாய்வு என்கிறார் இஷாக் கான். ஆனால் சைய்யத் ஹம்தானியின் புதல்வர் – முகம்மது ஹம்தானி கஷ்மீருக்கு வந்து, சுல்தானுடைய சபையின் அங்கமாக இருந்ததை ஜோனராஜா (ராஜ தரங்கிணியின் ஆசிரியர்களுள் ஒருவர்) கூறுவதை மேற்கோள் காட்டுகிறார்.

    லல்லா குறித்தும் ராஜ தரங்கிணி மௌனம் சாதிப்பதை சதி என்ற நோக்கில் நோக்குகிறார் இஷாக் கான். லல்லா குறித்து வரலாற்று ரீதியாக நமக்கு அறியத்தருபவை இஸ்லாமியர்களின் குறிப்புகளே என்பது உண்மைதான். இந்த கூற்று ஒன்றை வைத்துக் கொண்டு லல்லாவை இஸ்லாமுக்கு நெருக்கமானவர் என்று புத்தகம் முழுதும் கூறிச் செல்கிறார். 17ம் நூற்றாண்டின் இஸ்லாமிய குறிப்பாளர்கள் ஹைதர் மாலிக் சதுரா, ஹஸன் பின் அலி கஷ்மீரி போன்றவர்களும் லல்லா பற்றி எதுவும் சொல்லவில்லை. அதைப் பற்றி இஷாக் கான் வாய் திறக்கவில்லை.

    லல்லாவை இஸ்லாமுக்கு நெருக்கமானவர் என்று காட்டுவதற்கு அவர் தரும் ஆதாரங்கள் தொன்மங்களின் அடிப்படையிலானவை. தொன்மங்களைக் கேள்விக்குட்படுத்தவேயில்லை இஷாக் கான். முகம்மது ஹம்தானியை குருவாகக் கொண்டிருந்தவர் என்ற இஸ்லாமியர்களின் தொன்மக்கதையை ஐயமின்றி ஏற்றுக் கொண்டுவிடும் இஷாக் கான் ஶ்ரீ காந்த சித்தர் என்பவரை லல்லேஸ்வரியின் குருவாகக் கூறும் இந்துக்களின் தொன்மங்களை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்.

    லல்லாவின் கருத்துகளைத் தமக்கிஷ்டமான வகையில் வளைத்துக் கொள்ளும் இயல்பும் நூல் முழுக்கக் காணக்கிடைக்கிறது. உதாரணத்திற்கு, பக்கம் 75இல் கீழ்க்கண்ட லல்லாவின் வாக்- மேற்கோள் காட்டப்படுகிறது –

    “வெட்கத்தின் தளைகளை உடைத்தெறிவது எப்போது?
    ஏளனத்தை கேலியை அலட்சியம் செய்வது எப்போது?
    தகுதியின் உடைகளை நிராகரிப்பது எப்போது?
    என் மனதை ஆசைகள் தாக்கிக் கொண்டிருந்தால்”

    இஷாக் கான் அவர்களுக்கு மேற்சொன்ன வாக் – லல்லா வாழ்ந்த காலத்தின் சமூக வேற்றுமைகளை விவரிக்கிறதாம்!

    இன்னொரு உதாரணம் – பக்கம் 74

    “சிவன், எங்குமுள்ள, அனைத்திலும் உறைகிறான்
    எனவே, இந்துவையும், முஸ்லீமையும் பிரித்துப் பார்க்காதீர்
    ஞானமுண்டெனில் உம்மை அறிக
    பிரபுவின் உண்மை ஞானம் அதுவே”

    இஷாக் கானின் கருத்துப்படி மேற்சொன்ன வாக் பிராமணர்களைத் தாக்குகிறதாம்! சடங்கியல்கள் மட்டுமே அறியாமையைத் தெளிவிக்காது – என்ற கருத்து உபனிடத காலப் பழசு என்பதை இஷாக் கான் அறியாதவர் போலிருக்கிறது.

    புழங்கும் தொன்மக் கதைகளின்படி, தன்னுடைய மானசீக குருவாக வரித்துக் கொண்ட லல்லாவை அவதாரம் என்கிறார் நூருத்தின் எனும் நந்த் ரிஷி தன்னுடைய ஒரு பாடலில் –

    “பத்மன்புராவின் அந்த லல்லா
    திருப்தியடையும் வரை தெய்வீக அமுதைக் குடித்தவள்
    எங்களுக்கு அவதாரம் அவள்
    கடவுளே, அதே ஆன்மீக ஆற்றலை எனக்கும் அளித்தருள்!” – பக்கம் 77

    அதே பக்கத்தில் இஷாக் கான் கூறுவது –

    “That Lalla, as an ardent lover of Siva, succeeded in reviving Saivism is an argument belied by the very silence of our Saivite chroniclers and poets of her near-contemporary and later times. What is, however, of significance to remember from the viewpoint of social history is the historical dimension of her elevation to avatar by a devout Muslim like Nuruddin”

    இந்தப் பத்தியில் வெளிப்படும் முரண்களைப் பாருங்கள்! சைவத்தின் மறுமலர்ச்சியில் லல்லா வெற்றி பெறவில்லை என்று உறுதிபடக் கூறும் இஷாக் கான் அதற்களிக்கும் ஆதாரம் அவளின் சமகாலக் குறிப்பாளர்கள் அவளைப் பதிவு செய்யாததைக் குறிப்பிடுவது! அவளை “அவதாரம்” என்று நூருத்தின் எனும் ஆசாரமான முஸ்லீம் புகழ்வது சமூக வரலாற்றுப் பரிமாணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இஷாக் கான் ஜிலேபி சுற்றுவதைத் தான் கஷ்மீர சமூகவியலாளர்கள் “Syncretism” என்கிறார்கள்.

    நந்த் ரிஷி இஸ்லாமிய சூபி என்பதற்கு மறு கருத்தில்லை. ஆனால், இரண்டாம் தலைமுறை இஸ்லாமியர் என்ற முறையில் அவருடைய தந்தையின் முதல் மதத்தின் தொப்புள் கொடி உறவு அவரின் கவிதைகளில் வெளிப்படுவதை “ஆரம்பகாலம்” என்று கூறுவது நந்த் ரிஷியின் சமயச்சேர்ந்தியல் இலக்கை மறுப்பதாகும். கால வரிசை அடிப்படையிலான நந்த் ரிஷியின் பாடல்கள் தொகுப்பு இன்று வரை வெளிவரவில்லை எனும் போது தமது ஊகத்தை ஒரு வரலாறாக கட்டமைப்பது பிழையான அணுகுமுறை.

  • தீயை நோக்குதல்

    திருநெடுங்கோதை – தொகுப்பிலிருந்து – பரமேசுவரி – யாவரும் பதிப்பகம்

    உணர்வு, மாற்றம், அழிவு, புதுப்பித்தல் முதலான கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்த, இலக்கிய நடைமுறைகளில் நெருப்பு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. கருப்பொருளாக உவமையாக நெருப்பு பன்னெடுங்காலமாக கவிதைகளில் உலவி வந்திருக்கிறது. சமய இலக்கியங்களிலும் நெருப்பு முக்கியமான அந்தஸ்தைக் கொண்டிருந்தது.

    ரிக் வேதத்தில் வரும் ஒரு துதிப்பாடலில் இப்படி வருகிறது : 

    “யாகங்களின் பிரதான ஆசாரியனும், தெய்வீகமானவனும், பூசாரியாக காணிக்கைகளை  (தெய்வங்களுக்கு) சமர்ப்பிப்பவனும், பெரும் செல்வத்தை உடையவனுமான அக்னியை ஏத்துகிறேன்.”

    வேத உபடநிடதங்களை மொழியாக்கம் செய்ய முயன்ற பாரதியார் அதற்கென வகுத்துக்கொண்ட வடிவத்தை வசனகவிதை என்று அழைத்தார். தீயைப் பற்றிய ஒரு வசன கவிதையில் விரிவான அக்னி சடங்கில் இடப்படுவனவற்றை குறிப்பிட்டு நன்கு எரியுமாறு தீக்குப் பணிக்கிறார்.  

    தீயின் இயல்பே ஒளி. 

    தீ எரிக. 

    அதனிடத்தே நெய் பொழிகின்றோம். 

    தீ எரிக. 

    அதனிடத்தே தசை பொழிகின்றோம். 

    தீ எரிக

    அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம் 

    தீ எரிக. 

    அதற்கு வேள்வி செய்கின்றோம். 

    தீ எரிக. 

    வைதீக சமயத்தின் தீ வேள்விகளை தினமும் புரியும் ஆயிரம் பிராமணர்களை பௌத்த நெறியைத் தழுவ வைத்த பிறகு அவர்களுக்கு என்ன போதிப்பது என்று யோசித்த ததாகதர் அவர்களின் வேள்வித்தீயையே கருப்பொருளாக வைத்து புத்ததம்மத்தை விளக்குகிறார். அவரின் ஞானக்கண்ணில் சம்சார உலகே தீப்பிடித்து எரிகிறது. எரிவதை ஞானப்பார்வையில் நோக்கி சம்சார உலகின் இயல்பை விவரிக்கும் “ஆதித்த பரியாய சுத்தத்தை”க் கூறுகிறார். இது பாலி நெறிமுறையின் மிக முக்கியமான சுத்தம். இந்த சுத்தத்தின் வரிகளைத் தம் புகழ்பெற்ற கவிதையில் குறிப்பாகப் பயன்படுத்தும் கவிஞர் டி எஸ் எலியட் – கிறித்துவத்தின் மலைப் பிரசங்கத்துக்கு ஒப்பானது – என்கிறார்.

    “துறவிகளே, அனைத்தும் எரிகின்றன. என்னவெல்லாம் எரிகின்றன? கண் எரிகிறது. வடிவங்கள் எரிகின்றன. கண்ணின் உணர்வு எரிகிறது. கண்களின் தொடர்பு எரிகிறது. மேலும் கண்ணில் உள்ள தொடர்பைச் சார்ந்து எழுவது எதுவாக இருந்தாலும் – இன்பமாகவோ, துன்பமாகவோ அல்லது இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ – அதுவும் எரிகிறது, எதில் எரிகிறது கண்? மோக நெருப்பால், வெறுப்பின் நெருப்பால், மாயையின் நெருப்பால்,  நான் உங்களுக்குச் சொல்வது,  பிறப்பின், முதுமையின்,  மரணத்தின், துக்கங்களின், புலம்பல்களின், வலிகளின், துயரங்களின் மற்றும் விரக்திகளின் நெருப்பால்.

    “காது எரிகிறது, ஒலிகள் எரிகின்றன …

    “மூக்கு எரிகிறது, நறுமணம் எரிகிறது …

    “நாக்கு எரிகிறது, சுவைகள் எரிகின்றன …

    “உடல் எரிகிறது, தொட்டுணரக்கூடிய உணர்வுகள் எரிகின்றன …

    “புத்தி எரியும். யோசனைகள் எரியும். புத்தியில் உணர்வு எரியும். புத்தியில் தொடர்பு எரியும். மேலும் புத்தியின் தொடர்பைச் சார்ந்து எழும் அனைத்தும் – இன்பமாகவோ, துன்பமாகவோ அல்லது இன்பமாகவோ இல்லை. வலி – அதுவும் எரியும், எதில் எரிகிறது? பேரார்வத்தின் நெருப்பால், வெறுப்பின் நெருப்பால், மாயையின் நெருப்பால், நான் உங்களுக்குச் சொல்வது,  பிறப்பின், முதுமையின்,  மரணத்தின், துக்கங்களின், புலம்பல்களின், வலிகளின், துயரங்களின் மற்றும் விரக்திகளின் நெருப்பால்.”

    நோக்குமிடமெல்லாம் தீ! எனவே தான், பட்டினத்தார் பாடுகிறார் :-

    முன்னை இட்ட தீ முப்புரத்திலே 

    பின்னை இட்ட தீ தென் இலங்கையில் 

    அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே 

    யானும் இட்ட தீ மூள்க மூள்கவே 

    எப்போதெல்லாம் எரியும் நெருப்பு நோக்கப்படுகிறது?  – சமைக்கையில், கொண்டாட்டகாலங்களில் ஏற்றப்படும் விளக்குகளில், முகாம்களில் பற்றவைக்கப்படும் கேம்ப் பயர்-களில், குளிரின்போது வாழ்விடங்களை  வெம்மைப்படுத்த தீ மூட்டப்படுகையில், உலோகத்தை உருக்குதல் போன்ற தொழில் துறை செய்முறைகளில், மதநிகழ்வுகளில் செய்யப்படும் சடங்குகளில், பண்டிகைக்கால ஒளிக்காட்சிகளில், காட்டுத்தீ முதலான விபத்துகளில், தீப்பந்தங்களில் – இது போன்று பல்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு சூழல்களில் நெருப்பு கவனிக்கப்படுகிறது. 

    பக்தியுடன் அல்லது பயத்துடன் அல்லது பற்றற்று பார்க்கப்படும் தீ போலில்லை – கவிஞர் பரமேசுவரி “தீயின் அழிபசி” கவிதையில் வரும் தீ. கவிதைசொல்லி தீயை ஓர் அழகான பொருளைப் பார்ப்பது போல ரசிக்கிறார். அழகின் நிமித்தம் தீயை நோக்குவது ஒரு புதுக்கூறு. 

    கவிதை சொல்லி வீட்டின் கூரையில் அவராகவே தீ வைத்துவிட்டு அது எரிவதை ரசனையுடன் நோக்கிக் கொண்டிருக்கிறார். “நான் அங்கேதான் அமர்ந்திருக்கிறேன்” என்று சொல்கிறார். முதலில் அதை வாசித்தபோது தற்கொலை நிகழ்வை மரணத்தை விருப்பத்துடன் தழுவிக் கொள்ளும் முயற்சி போலத் தொனிக்கிறது, ஆனால், நல்ல வேளை “ஓரமாய் அமர்ந்து” எனப் பின்வரும் வரிகளில் குறிப்பிட்டுவிட்டதால், தற்கொலை இல்லை என்று நிம்மதியடைகிறோம். 

    ‘ஒன்றைப்பற்றி ஒன்று 

    மெல்ல மெல்ல மேலேறிக் 

    கவ்வும் அழகை வியந்திருந்தேன்”

    ஒரு கை இன்னொரு கையைப் பற்றி மேலேறும் நூறு கைகளின் நடனம்!

    கொழுந்துகளின் நாட்டியம், அழலின் ஆட்டம், தழலின் வெப்பம் – அனைத்தையும் கண்ணெடுக்காது ரசிக்கிறார் கவிதைசொல்லி – தழலின் வெப்பத்தை எப்படி கண்ணால் காண முடியும் என்ற கேள்வி எழுகிறது. உணரத்தானே முடியும்!

    தழல் அடங்கிவிடுகிறது. கவிதைசொல்லி அங்கிருந்து நகர்வதாயில்லை. ஒன்றும் இலாமல் அனைத்தையும் தின்று தீர்த்த தீயின் பசி அத்தனை அழகாயிருந்ததாம்!

    பரமேசுவரியின் இந்தக் கவிதையை வாசித்த பிறகு ராபர்ட் ப்ராஸ்ட் எழுதிய புகழ் பெற்ற ஆங்கிலக் கவிதை – தீயும் பனியும் ஞாபகத்துக்கு வந்தது. உலகம் அழியப்போகும் நாளை அக்கவிதையில் கற்பனை செய்கிறார் கவிஞர். உலகம் தீயால் அழியும் என்று சிலர் எண்ணுகின்றனர். வேறு சிலரோ பனியால் அழியும் இவ்வுலகு என்கின்றனர். ஆசைகளைச் சுவைத்தவன் என்பதால் தீயால் அழியும் என்பவர் கட்சியில் தானிருப்பதாகச் சொல்கிறார் கவிதைசொல்லி. ஆனால் இவ்வுலகம் இருமுறை அழியும் என்றிருக்குமானால் போதுமான அளவுக்கு வெறுப்பு பற்றி அறிந்தவன் என்பதால் பனியினால் இவ்வுலகம் அழிவதும் பொருத்தமாக இருக்கும் என்கிறார் கவிதைசொல்லி. ஆசையை நெருப்பாக உவமிக்கும் ராபர்ட் ப்ராஸ்ட் போலவே எண்ணற்ற கவிஞர்கள் தீயை ஆசைக்கு உருவகமாக்கியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்திலும் இதற்கு உதாரணம் உண்டு.

    அற்புதத் திருவந்தாதியில் சிவ பெருமான் இருக்கும் இடமாக காரைக்காலம்மையார் சொல்லும் சுடுகாட்டில் ஒரு பேய் இருந்தது. அதனால் சிவனேயென்று இருக்க முடியவில்லை.  ஒரு கள்ளிப் புதரின் நடுவில் படுத்துக் கொண்டிருந்த பேய் சும்மா இராமல், எரிகின்ற சிதைக்கட்டையை எடுத்து அதில் படிந்திருந்த மையை எடுத்து கண்ணில் மையாகப் பூசி அழகாக உணர்ந்தது. சில வினாடிகள் தாம்! சிதைக்கட்டையின் தீப்பொறி அதன் கண்ணில் பட்டுவிடுகிறது. சூடு பொறுக்க முடியாமல் சினக்கிறது. சத்தம் போட்டு அலறுகிறது. அங்கும் இங்கும் துள்ளிக் குதிக்கிறது. தீயை அணைக்க முயல்கிறது. இத்தகைய காட்டில் இருக்கிறானாம் எம்பெருமான் என்கிறார் காரைக்காலம்மையார். ​​ 

    யார் அந்த பேய் ? ஆசையுள்ளோர் அந்தப் பேய். இந்த உலகம் தான் சுடுகாடு. ஒவ்வோர் ஆசையும் ஒவ்வொரு கொள்ளிக் கட்டை. அனுபவிக்கும் போது முதலில் கொஞ்ச நேரம் இனிமையாக இருக்கும். அப்புறம், சூடு தாங்காமல் எரியும். எதை வேண்டும் என்று எடுத்தோமோ அதையே வேண்டாம் என்று தூக்கி ஏறிய நினைக்கிறோம்.

    கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்

    கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை

    விள்ளவெழுதி வெடுவெடென்ன

    நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்

    துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்சுட்டிட 

    முற்றுஞ் சுளிந்து பூழ்தி

    அள்ளி அவிக்க நின்றாடும்

    எங்கள்அப்பனிடந் திரு ஆலங்காடே

    “தீயின் அழிபசி” கவிதையில் வரும் கவிதைசொல்லி பதற்றமோ சினமோ கொள்ளவில்லை. மாறாக, அமைதியாய் தீ எரிவதை நோக்குகிறார். அவரே சொல்வது போல அது “அத்தனை அழகாக இருந்தது”. எரிந்து போனது அவர் வாழ்ந்த வீடாகக்கூட இருந்திருக்கலாம்! அவருடைய உடமைகள் எல்லாம் அழிந்து போயிருக்கலாம். ஆதித்த பரியாய சுத்தத்தில் புத்தர் விளக்கிய சம்சார உலகின் வெறுமையை உணர்ந்து அமைதிக்குள் புகுந்த தேரியின் மனநிலையை கவிதைசொல்லி “தீயின் அழிபசி” கவிதையில் பிரதிபலிப்பதாக நாம் வாசிக்கலாம். தேரிகதாவில் தேரி ஸுஜாதா கூறுவது போல் –

    தூசியற்ற, மரணமில்லாத,

    உண்மையான தர்மத்தை அறிந்து,

    நான் வெளியே சென்றேன்,

    வீட்டிலிருந்து விலகி வீடற்றவள் ஆனேன்.