Tag: கவலை

  • சிறு கல்லுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி – எமிலி டிக்கின்ஸன்

    சாலையில் தனித்து அலைந்து திரியும்
    இந்தச் சிறு கல்லுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி!
    தொழிற்கள் குறித்து கவலையின்றி,
    அவசரங்களைக் கண்டு பயப்படாமல் !
    அதன் தனிமப்பழுப்பு நிற உடையைத்தான்
    கடந்து செல்லும் இப்பிரபஞ்சமும் அணிந்துள்ளது.
    சூரியனைப் போல சுதந்திரமாக,
    இணைந்தோ அல்லது தனியே ஒளிர்ந்தோ,
    சாதாரண எளிமையில்
    முழுமையான ஆணையை நிறைவேற்றுகிறது


    எமிலி டிக்கின்ஸன்

  • (சங்கியின்) தோல்வி நிலையென நினைத்தால்

    (அனுபவப்பகிரல் – அரசியல்)

    நேற்று வாட்ஸ்-அப்பில் ஒரு பார்வர்டு வந்தது. “வெற்றி பெற்றவர்கள் தோல்வியுற்றவர்கள் போன்று கவலையுறுதலும் தோல்வியுற்றவர்கள் வெற்றி பெற்றவர்கள் போன்று குதுகலிப்பதும் என விசித்திரமான முடிவைத் தந்துள்ளது இந்த தேர்தல்”

    அப்போது நான் நம்பவில்லை! பாஜக தானே ஆளப்போகிறது பிறகென்ன அதன் ஆதரவாளர்களுக்கு துக்கம்? கூட்டாட்சி என்ன புதிதா? அடல் பிஹாரி வாஜ்பாயி ஒரு கூட்டாட்சியைத் தானே தலைமை தாங்கினார்? ஆனால் இது அத்தனை நேரான விஷயமில்லை ; பல நுணுக்கங்கள் பொதிந்தது என்பது இன்று மதியம் தெளிந்தேன்.

    தலையைப் பிளக்கும் வெயிலில் போகலாமா வேண்டாமா என்று யோசித்து சென்றாக வேண்டிய சூழலில் அந்த வாடிக்கையாளர் நிறுவனத்துக்கு இன்று மதியம் சென்றேன். அவர் பெயர் விக்ரம் (உண்மைப் பெயரல்ல). நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். லக்னோ நகரைச் சொந்தவூராகக் கொண்டவராதலால் இயல்பாகவே அவருக்கு நகைச்சுவை வருகிறது என்பது என் எண்ணம். ஆனால் இன்று மதியம் அவரைச் சந்தித்தபோது ஒரு வித மனப்பாரத்துடன் பேசினார்.

    மீட்டிங் அறைக்குள் அவர் வந்ததும் சில நிமிடங்களுக்கு ஒன்றுமே பேசவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பவர் போல எங்கோ நோக்கிக் கொண்டிருந்தார். நான் லேசாக கனைத்தேன். கண் விழித்தவர் போல ஓர் உலர் புன்னகையை வீசினார்.

    “எப்படி இருக்கீங்க” என்று கேட்டேன்.

    “என்ன சொல்றது….” என்று ஆரம்பித்தவர் மீண்டும் அமைதியானார். ஓரிரு நிமிடங்கள் கழித்து “சொல்றதுக்கொண்ணுமில்ல” என்றார்.

    “ஏன் ஏதேனும் பிரசினையா?”

    “இந்த தேசமே பிரச்னை…பாருங்க ஒரு நல்ல கட்சியைத் தோற்க வச்சிருக்காங்க இந்நாட்டு மக்கள்”

    காங்கிரஸ் அனுதாபியாக அவர் இருக்கக்கூடும் என்பதால் வருத்தத்தில் இருக்கிறார் என்று நினைத்தேன்.

    “அழகா ராமர் கோயில் கட்டித் தந்த கட்சிக்கு ஓட்டளிக்க வக்கில்ல….நன்றி கெட்ட உபி மக்கள்.”

    பொதுவாக வாடிக்கையாளர்களுடன் அரசியல் குறித்துப் பேசுவதில்லை. வியாபாரத்தை அது பாதிக்கும் என்ற பழைய எண்ணம் கொண்டவன். எனவே அலுவலக நண்பர்களிடமோ வியாபாரத் தொடர்புகளுடனோ என் அரசியல் குறித்த எண்ணங்களைச் சற்றும் பகிர்வதில்லை. விக்ரம் பேசுவதை தடுத்து நிறுத்தும் நோக்குடன் “சென்ற வாரம் நான் அனுப்பி வைத்த சாம்பிள் வந்து சேர்ந்ததா?” என்று உப்பு பெறாத கேள்வியை முன் வைத்தேன். அவரோ என் கேள்வியைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

    “சாலைகள், ரயில்கள், என எந்த அரசாங்கம் இது மாதிரி செஞ்சிருக்கு…அதுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டாமா?..தேர்தல் நாளில் குல்லு, மணாலி என்று விடுமுறையில் சென்று விடுவது…..தாடி வைத்து குல்லா போட்டவர்கள் அனைவரும் காலை ஏழு மணிக்கே வந்து குத்தோ குத்து என்று எதிர்க்கட்சிக்கு குத்திவிட்டு சென்றிருக்கிறார்கள்..’நம் ஆட்களோ’ தண்ணியடிச்சுகிட்டு ஓட்டல் ரூமில் படுத்துக் கிடந்திருக்கிறார்கள்”

    “சார், அதான் மோதி வந்துட்டாரே….பின்ன என்ன கவலை?” அவருக்கு ஆறுதல் அளிக்கும் என்று சொன்னால் அவர் மனச்சிக்கல் அதிகமானது போல் இன்னும் சத்தமாகப் பேசலானார்

    “நானூறுக்கு மேல் என்று அந்த மனுஷன் கேட்டாரில்ல…அவருக்கு வாக்களிக்கிறது நம் கடமைன்னு தெரிய வேண்டாம்? தப்பு அந்த மனுஷன் மேல….ஆர் எஸ் எஸ் அடிப்படைகளின் படி ஆட்சி செய்யாமல் ஏழைகளுக்கு வீடு தருகிறேன் என்று முஸ்லீம்களுக்கு (அவர் உபயோகித்த உரிச்சொல்லை இங்கு நான் பயன்படுத்த முடியாது) வீடு கட்டிக் கொடுத்த ஆட்சிக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்! எதிர்க் கட்சிகளுக்கு பயந்துகிட்டே ஆண்டால் எவன் ஓட்டு போடுவான்?”

    இவர் என்ன சொல்கிறார்? தான் ஆதரிக்கும் கட்சியை விமர்சிக்கிறாரோ என்று எண்ணினேன். அவர் ஆழ்ந்த வேதனையில் இருக்கிறார் என்று உடன் புரிந்து போனது.

    “அதாரிடேரியனாக ஆளத்தானே 2019இல் ஓட்டளித்தோம்! அந்தப் பிரக்ஞை இல்லாமல் இலவசங்களை அறிவித்துக் கொண்டே போனால்….ஏழைகள் பாழைகள் என்று கூவிக் கொண்டே போனால்…சரியில்லை…எதுவும் சரியில்லை” என்று சொல்லி நிறுத்தினார். அவர் சம நிலைக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கை பூத்தது. ஆனால் அப்பொது நான் ஒரு தவறைச் செய்தேன். “ஆமாம் சார், சமூக நீதிக்காக ஏதாவது பங்களித்திருக்கலாம்” என்றேன். அவர் என்னை மேலுங்கீழும் பார்த்தார்.

    “சமூக நீதியா! அந்த வெண்ணெயல்லாம் எதிர்க்கட்சிங்க தானே பேசும்? ராமர் கோயில் கட்டிக் கொடுத்தவருக்கு எத்தனை செய்யணும்….அவரைத் தோற்கடிச்சிருக்காங்களே!” – விக்ரம் முகத்தைத் திருப்பிக் கொண்டார். சுவர்ப் பக்கமாகத் திரும்பி கண்ணீர் வடிக்கிறாரோ! மேசையில் இருந்த டிஷ்யுவை வேகமாக எடுத்து சுவரைப் பார்த்துக் கொண்டே முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

    எனக்கோ குற்றவுணர்ச்சி! அவரை எப்படி சமாதானப்படுத்துவது! தண்ணீர்ப் பாட்டிலை அவர் பக்கம் தள்ளினேன். தேவையில்லை என்பது போல சைகை செய்துவிட்டு குரலைக் கனைத்துக் கொண்டார்.

    “வீர சாவர்க்கர் சொன்னார் – எனக்கு ஆங்கிலேயர்கள் மீது பயமில்லை, முஸ்லீம்கள் மீது பயமில்லை, இந்துக்கள் மீது தான் பயம். இந்து மதத்தை மதிக்காத இந்துக்களிடமிருந்து தான் இந்து மதத்தைக் காக்க வேண்டும் – நாயுடு, குமார் என்று மொள்ளைமாரிங்களோட சேர்ந்து மோதி ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருப்பது யாரால…இந்துக்களால” என்று முழங்கிய போது அவர் சற்று தெளிவடைந்தது போலத் தெரிந்தார்.

    நான் என் மடிக்கணினியைத் திறந்தேன். அவர் கவனத்தை திசைதிருப்பி எப்படியேனும் பேச வேண்டிய வியாபார விஷயத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும்!

    “800 ஆண்டுகள் முகலாயர்களின் கீழ், பின்னர் 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் கீழ் அடிமைகளாக இருந்திருந்து அடிமைகளாகவே இருக்கப் பழகி விட்டோம்”

    “ஓ…தலித்துகளைச் சொல்லுகிறீர்களா,,,,ஆமாம் சாதீய சமூகத்தில்” – என்று நான் ஏதோ சொல்லி வைக்க, யாக குண்டத்தில் சுள்ளிகளை அள்ளிப் போட்டு விட்டால் பெரிதாகப் பற்றிக் கொள்ளும் தீ போல தன் வார்த்தைகளை உக்கிரமாக வீசினார் –

    “இந்த கெட்ட வார்த்தைகளை காங்கிரஸ் போன்ற குடும்பக் கட்சிகள் மக்களிடையே பழக்கிவிட்டு…..ராகுல் கையில் அந்தச் சிவப்பு நிற அட்டை கொண்ட புத்தகத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு குத்தோ குத்துன்னு குத்தியிருக்காங்க….அயோத்தியில் கூட பாஜகவை தோக்கடிச்சா அடுக்குமா…அந்தக் கோயில் வந்தது யாரால….அந்த மகானுபாவர் கட்டிக் கொடுத்திருக்காட்டி முட்டி போட்டு தொழுகைதான் பண்ண வேண்டியிருந்திருக்கும்”

    விக்ரமின் சீனியர் முகுல் சரியாக அந்நேரமாக அறைக்குள் நுழைந்தார். பேசுபொருள் மாறிவிடும் வாய்ப்புகள் பிரகாசமாயிற்று.

    “அனுப்பிய சாம்பிள் குறித்து” என்று நான் பேச யத்தனித்த என்னை “ஒரு நிமிஷம் கணேஷ்” என்று கூறி மீண்டும் தடுத்தார் விக்ரம்.

    “நேற்றைய டிபாகிள் பத்தித் தான் கணேஷ்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன்”

    “பேசிப் பயன் என்ன….பதினைஞ்சு சீட் ஜெயிச்சுட்டு 240 சீட் ஜெயிச்ச கட்சிகிட்ட உள்நாட்டு விவகாரம், சபாநாயகர், துணை பிரதம மந்திரி என்று பட்டியல் கொடுக்கும் கட்சிகளுடன் காலந்தள்ள வேண்டிய இக்கட்டுக்கு இந்நாட்டு மக்கள் தள்ளிவிட்டு விட்டனர்” – இது முகுல்.

    “குமாரை கூட்டணிக்குள் மோதி தானே இழுத்துகிட்டு வந்தாரு?” என்று அப்பாவித்தனமாகச் சொன்னேன்.

    “இந்தக் கண்றாவிக்காகத் தான் 273 சீட்டுகளை கூட்டணியில்லாமலேயே தலைவர் வென்றிருக்கணும்…அங்கே கோட்டை விட்டுட்டு நாயுடு, குமார் இருவர் கிட்டயும் கையேந்தி நின்னா?”

    காதுகளில் இருந்து ஏதோ வழிவது போல இருந்தது. அதைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். “எக்ஸ்க்யூஸ் மீ” என்று சொல்லி அறைக்குள்ளிருந்து வெளியே வந்து பர்ஸில் வைத்திருந்த பஞ்சை எடுத்து இரண்டாகப் பிரித்து காதுக்கொன்றாக அவற்றை வைத்து அடைத்துக் கொண்டு அறைக்குத் திரும்பினேன்.

    இப்போது முகுல் கண்களில் கண்ணீர்! விக்ரம் டிஷ்யூ பேப்பரால் முகுலின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார். காதுகளில் பஞ்சடைந்திருந்ததால் ஒருவருக்கொருவர் என்ன ஆறுதல் சொல்லிக் கொண்டனர் என்பதைக் கேட்க முடியவில்லை.

  • ஒரு தத்துவக் குறிப்பு – நட்பாஸ்

    சிறப்புப் பதிவு : நட்பாஸ் 

    திரு கணேஷ் வெங்கட்ராமன் அவர்களுக்கு,

    சொல்வனம் இணைய இதழில் வந்த உங்கள் ‘ஒரு முடிவிலாக்  குறிப்பு’ (https://solvanam.com/2021/11/28/ஒரு-முடிவிலாக்-குறிப்பு/) படித்தேன். புனைவா வாழ்க்கைக் குறிப்பா தெரியவில்லை, ஆனால் அதன் வலிமை என்னையும் கொஞ்சம் வாழ்க்கையை பற்றிச் சிந்திக்கத் தூண்டியது. இதோ அளிக்கிறேன், ஒரு தத்துவக் குறிப்பு.

    நட்பாஸ் 

    நம் சிக்கல்களுக்கு நம்மைத் தவிர வேறு யாரும் தீர்வு காண முடியாது. நம் பிரச்சினைகள்தான் நாம், இவற்றால்தான் நாம் நாமாய் இருக்கிறோம். எந்த ஒரு விஷயத்திலும் தனி நபராய் என் பிரச்சினை வேறு யாருக்கும் அதே மாதிரி இருக்க வாய்ப்பில்லை. சிலந்தி, வலை பின்னுவது போல் உணர்ச்சிகளாலும் எண்ணங்களாலும் செயல்களாலும் நம்மைச் சுற்றி நாமே கண்ணுக்குத் தெரியாத இழைகளால் ஒரு வலை பின்னிக் கொள்கிறோம். துரதிருஷ்டவசமாக, நாமே அதில் சிக்கிக் கொள்ளவும் செய்கிறோம். (நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் சிலந்தி வலை அதன் மனதின் பருண்ம வடிவம் என்று சொல்லும் இந்தக் கட்டுரையை பாருங்கள் – The Thoughts of a Spiderweb, Quanta Magazine https://www.quantamagazine.org/the-thoughts-of-a-spiderweb-20170523/)

    நாம் பின்னிய வலைகளில் சிடுக்கு ஏற்படுகிறது என்றால், அதற்கு காரணம் நாம்தான், அது நம்மில் ஒரு அங்கமும்கூட. வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு அதன் வேர்கள் நம் இதயத்தோடு பிணைந்து நம்மில் ஒன்றியிருப்பது தெரிய வாய்ப்பில்லை. அவர் எவ்வளவு நியாயமாக பேசினாலும், அவரது தர்க்கம் எத்தனை வலுவானதாக இருந்தாலும், நம்மை அது காப்பாற்றக் கூடியதல்ல. நம் மனதுக்கு நியாயம் என்று தோன்றுவது, நம்மைச் சரியான திசையில் கொண்டு செல்லும் என்பது உறுதியல்ல. அறிவுரைகள் சரியாகவே இருந்தாலும் அது தீர்வு காண உதவாது. வேறொருவர் அப்படிச் செய்ய முடியும், ஆனால் என்னைப் போன்ற ஒருவனுக்கு இதில் என்ன தவறு, நம்மால் முடிகிற வேலைதானே என்று இருக்கும், இருந்தாலும் ஒன்றும் பண்ண முடியாது. காரணம், அவர் வேறு மாதிரி, நான் வேறு மாதிரி.

    எனவே யாராக இருந்தாலும் இந்த புரிதலுடனும் தன்னடக்கத்துடனும்தான் நாம் தீர்வு சொல்ல வேண்டும்.

    உலகில் வெற்றி பெற்றவர்களைப் பார்க்கிறோம் – விஞ்ஞானிகள், பெரும்பணக்காரர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், அரசியல்வாதிகள். உலகில் தலை சிறந்த அறிவு, மிக அதிக பணம், ஆகச் சிறந்த புகழ், அதிகாரம், எதுவும் போதுமானதாக இல்லை. இவர்கள் வாழ்க்கையைப் பார்த்தால் மிக மோசமான மன வேதனை, காயங்கள், செயல்கள் இருக்கும். குடும்பத்தை கவனித்துக் கொள்ள மாட்டார்கள், மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள், மணமுறிவு, போதைப் பழக்கம், தற்கொலை. வெற்றியோ, அதன் பயன்களோ, உபகரணங்களோ மனதுக்கு மகிழ்ச்சியோ ஆறுதலோ தருவதற்கு தம்மளவில் போதுமானதாக இருப்பதில்லை.

    அதே சமயம் தெருவில் நடைபாதை பிச்சைக்காரன் பின்னால் கூட ஒரு நாய் போகிறது, அவனும் அதற்கு ஏதோ ஒன்றை சாப்பிடப் போடுகிறான். மனதுக்கு நல்லது எது என்று பார்த்தால், தன்னலமின்மை என்றுதான் தோன்றுகிறது. நான் எனது என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதற்கு மாறாக, நம்மைச் சுற்றி இருப்பவர்கள் வாழ்வை ஏதோ ஒரு வகையில் இன்னும் நன்றாக வாழத்தக்க ஒன்றாய் மாற்ற முயற்சி செய்பவர்கள். அவர்களுக்கும் மன அழுத்தம் வரலாம், அச்சம், அவநம்பிக்கை ஏற்படலாம். ஆனால் அவர்கள் குடும்பத்தை தவிக்க விடுவதில்லை, போதைக்கு அடிமையாவது இல்லை, தற்கொலை செய்து கொள்வதில்லை.

    அகத்தின் மீது ஒரு போர்வை போல் இருப்பது சுயம். ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு வகையில் இறுக்கமாய் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சிலரே அதை மூச்சு முட்டும் அளவு இழுத்துப் போர்த்துக் கொள்கிறார்கள், கஷ்டப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் அதை விட அபூர்வமானது நிர்வாணம். இந்த அபூர்வ மனிதர்கள் எல்லாம் பிறருக்கு என்று இருக்கிறார்கள், ஒருவன் பிறருக்கு தருவதை எல்லாம் தனக்கே தந்து கொள்கிறான் என்று புதிர் போடுகிறார்கள்.

    பிறருக்காக வாழ்பவர்கள் வாழ்வில் எத்தனை நெருக்கடி இருந்தாலும், எத்தனை அவலம் இருந்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அவர்கள் எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டு அதை அளவிட முடியாது. எவ்வளவு கொடுக்கிறார்கள், என்னவாக இருக்கிறார்கள் என்பதுதான் அவர்கள் வாழ்வின் அர்த்தம். ஒரு பணக்காரனைப் பற்றி, “He is worth Billions,” என்கிறோம். ஆனால் ஒரு அம்மா அல்லது அப்பாவைப் பற்றி, அவர்தான் குடும்பத்துக்கு எல்லாம் என்கிறோம். யார் மதிக்கிறார்களோ இல்லையோ, இவர்கள் வண்டி இழுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் என்ன செய்தோம் என்பது அல்ல, நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் இறுதி அளவை. செய்து முடிந்தவுடன் ஒன்றுமில்லை என்று கையைத் தட்டி விட்டுக் கொண்டே போக வேண்டியதுதான்.

    செய்ததை வைத்துக் கொண்டிருப்பது, செய்ய வேண்டியதைப் பற்றிய கவலைகளை வளர்த்துக் கொண்டிருப்பது, வாழ்க்கையைச் சிக்கலாக்குகிறது. நம்மையே சிக்கலான ஆட்கள் ஆக்குகிறது. இதற்கு மாறாக, இப்போது என்ன இருக்கிறதோ, அதிலிருந்து பிறருக்கு கொடுப்பது, நம்மை விடுவிக்கிறது. என்ன செய்வது பிடித்திருக்கிறதோ, எது சுலபமாக இருக்கிறதோ, அதை நன்றாகச் செய்வது என்று இருக்கும்போது எல்லாம் சரியாய்த் தொடர்கின்றன. எனக்கு கணிதம் பிடித்திருக்கிறது, கவிதை பிடிக்கிறது என்றால் நான் கணித மேதையாகவோ நோபல் கவிஞனாகவோ ஆகாதபோதும், அதனால் ஒரு பைசா பிரயோசனப்படாதபோதும், என் ரசனை, என் நேசம், நான் கற்றுக் கொண்டது என் வாழ்வை ஏதோ ஒரு வகையில் வளமைப்படுத்துகிறது.

    இதை எல்லாம் இன்னொருத்தார் எனக்கு வேறு சொற்களில் சொல்லலாம், ஆனால் உண்மையை நான் என் கண்களால் காண வேண்டும், என் இதயம் கொண்டு நான் உணர வேண்டும். அதுதான் உள்ளே இறங்கும், எனக்கு உதவும். பிறர் சொல்வதல்ல, நானே கற்றுக் கொள்வது.

    நாமே இவ்வுலகம். நமதே இவ்வுலகம். நாம் இவ்வுலகின் நாயகர்கள். நம்மைப் பற்றி மட்டுமே நினைத்து இதை நாசமாக்கிக் கொள்ளலாம், நம்மைக் குறைத்துக் கொண்டு பிறருக்கு இடம் கொடுத்து, இதை நல்லதாக்கிக் கொள்ளலாம். பெரிய பெரிய விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதில்லை. குறுகிய மானப்பான்மையிலும் உணர்வின்மையிலும் நம்மையொத்த இந்த தன்னலம் கொண்டு உழலும் அவல மனிதர்களுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய நன்மையும் மாற்றம் அளிக்கும்.

    இந்த அர்த்தத்தில்தான் பிறருக்கு கொடுப்பதெல்லாம் நமக்கே கொடுத்துக் கொண்டதாகிறது. நம் வாழ்வு இவ்வாறுதான் செழுமையடைகிறது. பணத்தால் அல்ல, புகழால் அல்ல, அறிவால் அல்ல, சக மனித உறவுகளில்தான் வாழ்வின் மதிப்பு கூடுகிறது. இதயத்தில் என்ன இருக்கிறது, அதிலிருந்து என்ன வருகிறது என்பதுதான் கேள்வி. ஏனெனில், இதயம்தான் காயப்படுகிறது, தனிமையை உணர்கிறது, வலியால் துடிக்கிறது. பிறரை இணைத்துக் கொள்வதில், இன்னும் விரிவதில், ஆழப்படுவதில் அது குணமடைகிறது. 

  • நீலக்குடை

    @ Ben Kelley
    @ Ben Kelley

    வித விதமான

    கவலைகள்

    படைப்பூக்கமிழக்காமல்

    ஒன்றன் பின் ஒன்றாக

    தோன்றிய வண்ணம்

    சங்கிலியை

    அறுத்தெறிந்து

    ஓரிரு மகிழ்ச்சியை

    உளத்துள் புகுத்துவதில் வெற்றி கொண்டு

    உவகை தலை தூக்குகையில்

    அதீத மகிழ்ச்சி

    அபாயம் தரும்

    என்று உள்ளுணர்வு சொல்ல

    மீண்டும் கவலைக்குள் ஆழ்ந்தேன்

    இனி அபாயமில்லை

    என்ற நிம்மதியுணர்வை

    அடையாளம் காணாமல்

    முழுநேரக் கவலையில்

    என்னை புதைத்துக் கொண்டேன்

     +++++

     என் கண்ணீர்த்துளிகளை

    மழைத் துளிகள்

    மறைத்து விடுதல்

    சவுகர்யம்.

    நதி உற்பத்தியாகும்

    இடத்தை மலைகளும்

    குகைகளும்

    மறைத்திருக்குமாம்

    என் கண்ணீர் நதிக்கு இந்த நீலக்குடை

    சாலையோரக் குட்டைகளில்

    சேரும் என் கண்ணிரின் வெள்ளத்தை

    யாரும் அருந்தப் போவதில்லை

    என்ற ஆறுதல் எனக்கு

    குடை, ஆகாயம்,

    மழை, மழை நீர்க்குட்டை, நீல நிறம் –

    இவைகள்

    எனக்கு உற்ற தோழர்கள்

    எனக்கென்ன கவலை

    மழை நிற்கும் வரை !

    கவலையின்றி

    அழுது கொண்டிருக்கலாம்.

     +++++