Tag: கருத்து

  • பகவத் கீதையும் பவுத்தமும்

    பகவத் துதியை ஒரு கருத்தியலாக முன் வைத்த நூல் பகவத் கீதை. இதனை பக்தி மார்க்கம் என்று வகைப்படுத்துகிறது பகவத் கீதை. இதே நூலில் வலியுறுத்தப்படும் ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் – இரண்டையும் சேர்த்து வீடு – பேறடைய மூன்று மார்க்கங்களைத் தொகுத்தது கீதை. பவுத்தத்தின் மும்மணிகள் – புத்தம், தம்மம், சங்கம் போலவே ஏற்கனவே இருந்த ஞானம், கர்மம் – ஆகிய இரண்டோடு “பக்தி” என்ற ஒன்றை இணைத்தது வைதீக மதம். “பகவத் கீதையின் கருத்துக்கள் களவாடப்பட்டவை” என்ற பொருளில் யாரோ ஒருவர் பேசிய குறுங்-காணொளியை ஓரிரு தினங்கள் முன் கேட்டபோது “களவாடல்” என்று எப்படிக் கூற முடியும் என்ற கேள்வி எழுந்தது. பவுத்தத்தின் எழுச்சிக்கு வைதீக மதத்தின் எதிர்வினை என்றுதான் இதைச் சொல்ல முடியும்.

    பவுத்தம் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் சமூகத்தின் உயரடுக்கு வர்க்கங்களையும் ராஜரீக விஷயங்களில் சம்பந்தப்பட்டிருந்த க்ஷத்திரியர்களையும் அது அதிகம் ஈர்த்தது. இவ்விரண்டு குழுக்களின் ஆதரவில் அது வரை தழைத்து வந்திருந்த வைதீக மற்றும் சாதாரணர்களின் ‘இந்து’ மதம் தம்முடைய ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கக் கூடும். இக்கால கட்டத்தில் பவுத்தத்தின் மீதான பல்வேறு “ஆத்திக எதிர்வினைகளை” – விலங்குப்பலியை தடை செய்தல், சாதிக்கட்டுப்பாடுகளை இறுக்குதல், ‘இந்து’ சமயத்தின் மிகசச்செயல் திறன் மிக்க ஆயுதமான “உட்கிரகித்தல்” போன்றவைகளை – ‘இந்து’ மதம் கைக்கொண்டது. புத்தரை விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக உள்ளிழுக்க முயன்றது. புத்தர் விஷ்ணுவின் அவதாரமானதற்கு சொல்லப்படும் காரணம் – “தவறான போதனையால் எதிரிகளை தவறாக வழிநடத்தி அவர்களை பாவக்குழியில் தள்ளவே ; இதற்காகவே வேத யாகங்களை ஒழிப்பை புத்தர் பேசினார்.” “ஒன்பதாவது அவதாரம்” எனும் அடிப்படையில் புத்தர் பற்றிய புராணக்கதைகளுக்கு சீரழிந்த பவுத்தம் எந்த ஆட்சேபனையும் அளிக்காத காலகட்டங்களில் தம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் புத்தரின் வழிபாட்டை பவுத்த உபாசகர்கள் மேற்கொள்ள வைதீக மதம் அரை மனதுடன் சம்மதித்ததும் பின்னர் நடந்தது.

    “பகவத் கீதையின்” கருத்துக்கள் “பவுத்தத்திலிருந்து” பெறப்பட்டவையா என்ற கேள்விக்கு வருவோம். கீதையில் வரும் அர்ஜுனனின் தடுமாற்றத்தை (அதாவது, யுத்தம், அதனால் எழக்கூடிய விளைவுகளின் பாதிப்பு – கர்மா அல்லது செயலின்மை ஆகியவற்றின் வாயிலாக புனிதமான சாதிக் கடமையை மீறுதல்) பல க்ஷத்திரியர்கள் மற்றும் உயரடுக்கு வர்க்கங்கள் அக்கால கட்டத்தில் எதிர்கொண்டிருக்கக் கூடிய சூழலின் உருவகமாக பார்க்க முடியும். கர்ம மார்க்கம் (அதாவது வர்ணம் அல்லது சாதி சார்ந்த கர்மம்) மற்றும் வைதிக அமைப்பின் குறியீடாக கிருஷ்ணர் போதிக்கும் “செயலாற்று” என்னும் அறிவுரையைக் கருத முடியும். “செயலற்று” இருப்பது பவுத்தத்தின் லட்சியமான துறவறத்தைக் (Monastic Withdrawal) குறிப்பதாகக் கொள்ளலாம்.

    அர்ஜுனன் (பவுத்தப்பாதையில் சென்ற க்ஷத்திரியர்கள் மற்றும் பிற உயர் வர்க்கத்தினர்) செயலற்ற தன்மையைத் (பௌத்தம்) தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக செய்ய வேண்டிய வர்ணக் கடமைகளை அணுகுவதற்கான ஒரு புதிய வழியை கிருஷ்ணர் (பிரம்மம்) முன்வைக்கிறார். தனிப்பட்ட ஆசை அல்லது உள்நோக்கத்துடன் செய்யப்படும் செயல்கள் மட்டுமே கர்மாவைப் பாதிக்கும் என்றும் கிருஷ்ணர் கூறுகிறார். மற்ற எல்லா செயல்களும் (எ.கா. வர்ணக் கடமையின் காரணமாக மட்டுமே செய்யப்படும் கருமங்கள்) ஒருவருடைய கர்மாவை பாதிக்காது. அடிப்படையில் இது பிந்தைய வகை செயலின்மைக்கு (“Monastic Withdrawal”) ஒத்ததானதாக ஆக்குகிறது.

    குறைந்த தத்துவ நாட்டம் கொண்டவர்கள் பௌத்தத்தால் பெரிதும் ஈர்க்கப்படவில்லை என்பதைக் கண்டுகொண்ட வைதிகர்கள் மதத்துக்குள் உணர்ச்சிக் காரணியை நியாயப்படுத்தும் விதமாக பக்தி மார்க்கத்தின் கருத்தியலை, அதன் சிறப்பை கீதையில் விவரிக்கின்றனர்.

    சுருக்கமாக சொல்லப்போனால், பகவத் கீதையில் வரும் பக்தி-மார்க்கக் கொள்கையின் வளர்ச்சியை பௌத்தத்திற்கு வைதீகர்கள் தந்த எதிர்வினையாகப் பார்க்க முடியும். மேலும், பௌத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், பொதுவாக பண்டைய பிராமணியத்தினால் மிகவும் அதிருப்தி அடைந்தவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய பண்டைய இந்தியாவின் சமூக உயரடுக்கிற்கு விரும்பத்தக்கதான ஒரு பிரபல மதமாக முறைப்படுத்தியதில் பகவத் கீதை பெரும்பங்காற்றியிருக்கிறது எனலாம். .

    பகவத் கீதைக்கும் பௌத்தத்துக்கும் என்ன தொடர்பு? வைதீக சமய நூலுக்கும் பௌத்தத்தின் அடிப்படைச் சிந்தனைக்கும் என்ன ஒற்றுமை இருக்க முடியும்? ஆத்மன்/பிரம்மம் கருப்பொருள் பகவத் கீதையின் அடிப்படை. இரண்டையும் மறுக்கும் அனாத்ம தத்துவம் பௌத்தம். ஆச்சாரிய நாகார்ஜுனர் இயற்றிய நூலான “சதுஸ்தவா”-வில் ஒரு செய்யுள் வரும்.

    “பகவானே, உம்மிடம் சிந்தனையில்லை, பாகுபாடில்லை, நோக்கங்களில்லை, எனினும் உயிரினங்களின் நன்மைக்காக ஒரு புத்தரின் பணியை இவ்வுலகில் பற்றின்றி செய்கிறீர்.” – சதுஸ்தவா (நாகார்ஜுனர்)

    கிட்டத்தட்ட இதே போன்ற கருத்து போல் ஒலிக்கும் பகவத் கீதையின் வசனம் ஒன்றுண்டு.

    “மூவுலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை ஏதுமில்லை. எனக்குத் தேவையோ, நான் அடைய வேண்டியதோ ஏதுமில்லை. இருந்தும் நான் விதிக்கப்பட்ட கடமைகளில் ஈடுபட்டுள்ளேன்” என்ற கீதையின் சுலோகம் (பகவத் கீதை – 3:22).

    ஒரே பொருள் கொண்ட வசனங்கள் இரண்டும். ஆனால் கோட்பாட்டுப் பின்னணியில் பொருத்தும் போது அர்த்தம் மாறுபடுகின்றது.

    நாகார்ஜுனரின் கருத்துப்படி – எதற்கும் சார்பற்ற சுயம் இல்லை. அனைத்தும் மற்றவற்றைச் சார்ந்தே உள்ளன. மாயை அல்லது பிரமையே உலகின் அனைத்து பொருட்களும். சாரமில்லை. நிரந்தர இருத்தல் எதற்கும் எவர்க்கும் இல்லை. எல்லாமே அநித்தியம். இவ்வுண்மையை உணர்ந்து நிர்வாண நிலையில் இருக்கும் புத்தருக்கு சிந்தனையோ, பாகுபாடோ, பற்றோ, கடமையோ, தேவைகளோ, நோக்கங்களோ எதுவும் இருக்காது. கடமையில் ஈடுபடுபவர் போல தோற்றமே நான் காண்பது. அனைத்தும் சூன்யம்.

    இப்போது மேல்சொன்ன சதுஸ்தவாவின் செய்யுளை படித்துப்பார்த்தால் நாகார்ஜுனர் என்ன சொல்ல வருகிறார் என்பது விளங்கும்.

    கீதையில் பேசுபவன் கடவுள், அவதாரம், பிரம்மமே அவன், அவன் நிலையானவன், அழிவற்றவன், மூலகாரணம் அவனே, அவனுக்கு காரணங்கள் எதுவும் இல்லை, மூவுலகையும் படைத்து, காத்து, அழித்து, மீண்டும் படைப்பவனுக்கு அடைய என்ன இருக்கிறது? ஆனாலும் அவன் கடமையில் ஈடுபடுகிறான். அர்ஜுனனுக்கு ரதமோட்டுகிறான். அவனே கடமை புரியும் போது க்ஷத்திரியனாக போர் புரியும் கடமை கொண்ட அர்ஜுனன் மனந்தளரலாமா? மயக்கமுறலாமா? உணர்ச்சியற்ற சாந்த நிலை அவனுக்கானதில்லை. அவனுக்கு விதிக்கப்பட்ட போரை அவன் புரிந்துதானாக வேண்டும்.

    சதுஸ்தவா-வின் இந்தச் செய்யுளைத் தழுவி பகவத் கீதையின் ஆசிரியர் எழுதினாரா அல்லது நாகார்ஜுனர் பகவத் கீதையை வாசித்துவிட்டு இந்தச் செய்யுளை இயற்றினாரா என்ற தகவல் தெரியாத வரை யாரைப் பார்த்து யார் எழுதினார்கள் என்பது பற்றி எப்படி தீர்ப்பு சொல்வது?

    இரண்டு தத்துவங்களும் பல நூற்றாண்டுகளாக வாதிட்டும் விவாதம் செய்தும் உரையாடியபடியே இருந்தன. தத்துவ நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளாமல் வடிவங்கள், தொன்மங்கள், முறைகள் என அனைத்தையும் இரு மரபுகளும் கொடுத்தல் வாங்கல் செய்திருக்கின்றன. காப்பியங்களைக் கூட இரு சமய இலக்கியங்கள் பகிர்ந்துகொண்டுள்ளன. மணிமேகலை, புத்தசரிதா எனும் காப்பியங்களில் வரும் இராமாயண, மகாபாரத குறிப்புகளை உதாரணமாகக் கூறலாம்.

    பகவத் கீதையில் “நிர்வாணா” எனும் பௌத்த கலைச்சொல் இரண்டு இடங்களில் உபயோகிக்கப்படுகின்றன.

    “பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்திலேனும் இதில் நிலைகொள்வோன் பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.” (2-72, மொழிபெயர்ப்பு : மகாகவி பாரதி)

    தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.

    *இருமைகளை (*நன்மை – தீமை; குளிர் – சூடு; இன்பம் – துன்பம் என எல்லாப் பொருள்களைப் பற்றி நிற்கும் இரட்டை நிலைகள்) வெட்டிவிட்டுத் தம்மைத்தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சியெய்தும் ரிஷிகள் பாவங்களொழிந்து பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.

    விருப்பமும், சினமும் தவிர்ந்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது. (5-24/25/26, மொழிபெயர்ப்பு : மகாகவி பாரதி)

    “நிர்வாணா” என்ற பவுத்த கலைச்சொல் இங்கு கடன் வாங்கப்பட்டுள்ளது. அக்கால பவுத்தர்களை குழப்பும் எண்ணத்துடன் இது செய்யப்பட்டிருக்கலாம். பவுத்தத்திற்கு முந்தைய வேதக் கருத்தியலான “பிரம்மம்” எனும் மீப்பொருண்மையியல் முழுமையுடன் பவுத்த நிர்வாண நிலை இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு கலைச்சொற்களின் பொருளையும் தெரிந்தோர்இந்தச்சூழலமைவில் எப்படி பொருள் கொள்ளப்பட வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி கூறுகிறார் : “பவுத்தர்களின் நிர்வாணம் ஷுன்யதா ; கீதை சொல்லும் நிர்வாணம் சாந்தி ; பிரம்மத்துள் ஒன்றாதல் எனும் பொருளில் பிரம்ம-நிர்வாணம் என்று கீதை சொல்கிறது.”

    அதெப்படி பவுத்த கலைச்சொல்லை இந்து சமய நூலில் சேர்க்கலாம் என்போர்க்கு தெவிஜ்ஜ சுத்தத்தை உதாரணம் காட்டலாம்.

    பிராமண இளைஞனுக்கு தம்மத்தை போதிக்கும் ததாகதர் வேத பாரம்பரியத்தின் கலைச்சொல்லைப் பயன்ப்டுத்துவதைப் பாருங்கள் :-

    “நீ சொல்வதைப் போல பிக்கு கோபத்திலிருந்து விடுபட்டவர், தீமையிலிருந்து விடுபட்டவர், மனத்தில் தூய்மையானவர், தனக்குத் தானே எஜமானர்; பிரம்மாவும் கோபத்திலிருந்து விடுபட்டவர், தீமையிலிருந்து விடுபட்டவர், மனத்தில் தூய்மையானவர், அவருக்கு அவரே எஜமானர். அது போல, கோபம் இல்லாதவனாகவும், தீமை இல்லாதவனாகவும், மனத்தூய்மை உடையவனாகவும், தன்னைத் தானே எஜமானனாகவும் கொண்ட பிக்கு, மரணத்திற்குப் பிறகு, உடலைக் கரைத்து, அதே பிரம்மாவுடன் ஐக்கியமாக வேண்டும், அத்தகைய நிலை எல்லா வழிகளிலும் சாத்தியம்”

    பகவத் கீதை கருத்துகளைக் களவாடிற்று! திக்க நிகாயம் கருத்துகளைக் களவாடிற்று என்பதெல்லாம் மடத்தனம். ஒரே கலாசார நிலத்தில் விளைந்த வாதமுறைகளை, கூறுமுறைகளை இரு பெரும் மரபுகளும் எடுத்தாண்டன என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

  • Kashmir’s Transition to Islam – by Ishaq Khan – விமர்சனம்

    வரலாற்று மூலங்களைத் திறந்த மனதுடன் அதே சமயம் விமர்சன பூர்வமாக அணுகுதல் அதிமுக்கியம். இல்லையேல் வெறும் விவாதமாக முடிந்துவிடக்கூடும். கருத்து நிலைகளுக்கேற்றவாறு சாயும் அணுகுமுறை வரலாற்றாளர்களின் பலவீனமாகக் கருதப்படும். என்னுடைய பார்வையில், இஷாக் கான் அவர்களின் Kashmir’s Transition to Islam ஒரு பலவீனமான நூல் என்றே சொல்வேன்.

    இஷாக் கான் இரண்டு பார்வைகளை முன் வைக்கிறார். (1) Syncretism – அதாவது சமயங்களின் சேர்ந்தியங்குதல் – எனும் கருத்தை அவர் நிராகரிக்கிறார். இஸ்லாம் கஷ்மீரின் புராதன கலாசார அம்சங்களை ஏற்றுக் கொண்டதை மாறும் முறை என்று வர்ணிக்கிறார். இஸ்லாமின் இறுதி இலக்கு “ஷரியா” எனப்படும் இஸ்லாமிய உயர் கொள்கைகளே என்கிறார். (2) நந்த் ரிஷியும் அவருக்குப் பின் வந்த ரிஷிகளும் கஷ்மீரியத் என்ற அடையாளத்தை இஸ்லாத்தின் அடிப்படைச் சித்திரத்தின் பின்ணனியில் வரைய வந்தவர்கள்.

    இரண்டு பார்வைகளும் பிரச்னைக்குரியவை. கஷ்மீர தேசியவாதத்தின் அடிப்படை முழுவதையும் “இஸ்லாம்” எனும் ஒற்றை அடையாளத்தில் சுருக்க நினைத்த குழுக்களின் குரல் வலுத்த (“அயல் நாட்டு உதவியுடன் வலுக்க வைக்கப்பட்ட”) தொண்ணூறுகளில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் – கஷ்மீரக் கலாசாரத்தின் சிறப்பியல்பு என்று கஷ்மீரின் தற்கால சாதாரண நபர்களும் பெருமிதங்கொள்ளும் ஒன்றை மறுக்கிறது. சமயங்களின் ஒருங்கிணைவு என்ற ஒன்றும் இல்லை. பிராமணர்களின் சாதீயத்தால் பாதிக்கப்பட்ட வெகுஜனங்கள் இஸ்லாமைத் தழுவுதலுக்குச் சலுகையாக அவர்களின் முந்தைய கலாசாரத்தின் அம்சங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டன. இது இறுதியானதில்லை. கஷ்மீரில் இஸ்லாம் மாறும் தன்மையதாக இருக்கிறது. எனவே, சமயங்களின் ஒருங்கிணைவு இலக்கில்லை. இதற்கான தரவுகளை ஆசிரியர் தெளிவாகத் தரவில்லை. நந்த் ரிஷி-யின் பாடல்களில் இருக்கும் இந்து, பௌத்த அடையாளங்களை அவரின் ஆரம்ப காலச் சிந்தனை என்று சுருக்கிவிடும் இஷாக் கான், லல்லா எனும் சைவ சித்தரை முழுவதுமாக இஸ்லாத்தில் பொருத்திக் கொள்கிறார்.

    கங்கைச் சமவெளியில் சாதீய கொடுமைகளுக்கு எதிராக பக்தி இயக்கம் பரவி பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இஸ்லாத்தின் பரவலை கட்டுப்படுத்தியது என்பதை ஏற்கும் இஷாக் கான், கஷ்மீரில் பக்தி இயக்கம் தோல்வியுற்றது என்று கூறும்போது இஸ்லாம் பிராமணரல்லாத வெகுஜனங்களை அரவணைத்துக் கொண்டதுதான் என்று எளிதில் கூறி விடுகிறார். இதே நிலைமை கங்கைச் சமவெளியில் ஏன் கை கூடவில்லை என்ற கேள்விக்கு பதிலேதும் சொல்லாமலேயே சென்று விடுகிறார் இஷாக் கான்.

    சுல்தான் சிக்கந்தர் இந்துக் கோயில்களை அழித்ததைப் பதிவு செய்யும் ராஜதரங்கிணி நூல் மீது ஆசிரியருக்கு ஏனோ மனத்தாங்கல்! இஸ்லாமிய அரசர்களை காலரீதியாக பெரும்பான்மையான இடங்களில் தெளிவுடன் பதிவு செய்யும் ராஜதரங்கிணியின் விடுபடல்களுக்கு காரணம் கற்பித்தல் எந்த அளவுக்கு வரலாற்று அணுகுமுறை எனத் தெரியவில்லை? சுல்தான் சிக்கந்தரின் சிலை உடைப்புகளுக்கான பழியை புதிதாக மதம் மாறிய முன்னாள் பிராமணர் சுக பட்டர் மீது பழியைப் போடுகிறது ராஜதரங்கிணி! புது இஸ்லாமியராக தமது விசுவாசத்தை நிரூபிக்க சுக பட்டர் செய்த கொடுமைகள் என்று பதிவு செய்யும் ராஜ தரங்கிணி – மீர் அலி சைய்யத் ஹம்தானி-பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதற்கு காரணமாக ராஜ தரங்கிணியின் பிராமண ஆசிரியர்களினுடைய மனச்சாய்வு என்கிறார் இஷாக் கான். ஆனால் சைய்யத் ஹம்தானியின் புதல்வர் – முகம்மது ஹம்தானி கஷ்மீருக்கு வந்து, சுல்தானுடைய சபையின் அங்கமாக இருந்ததை ஜோனராஜா (ராஜ தரங்கிணியின் ஆசிரியர்களுள் ஒருவர்) கூறுவதை மேற்கோள் காட்டுகிறார்.

    லல்லா குறித்தும் ராஜ தரங்கிணி மௌனம் சாதிப்பதை சதி என்ற நோக்கில் நோக்குகிறார் இஷாக் கான். லல்லா குறித்து வரலாற்று ரீதியாக நமக்கு அறியத்தருபவை இஸ்லாமியர்களின் குறிப்புகளே என்பது உண்மைதான். இந்த கூற்று ஒன்றை வைத்துக் கொண்டு லல்லாவை இஸ்லாமுக்கு நெருக்கமானவர் என்று புத்தகம் முழுதும் கூறிச் செல்கிறார். 17ம் நூற்றாண்டின் இஸ்லாமிய குறிப்பாளர்கள் ஹைதர் மாலிக் சதுரா, ஹஸன் பின் அலி கஷ்மீரி போன்றவர்களும் லல்லா பற்றி எதுவும் சொல்லவில்லை. அதைப் பற்றி இஷாக் கான் வாய் திறக்கவில்லை.

    லல்லாவை இஸ்லாமுக்கு நெருக்கமானவர் என்று காட்டுவதற்கு அவர் தரும் ஆதாரங்கள் தொன்மங்களின் அடிப்படையிலானவை. தொன்மங்களைக் கேள்விக்குட்படுத்தவேயில்லை இஷாக் கான். முகம்மது ஹம்தானியை குருவாகக் கொண்டிருந்தவர் என்ற இஸ்லாமியர்களின் தொன்மக்கதையை ஐயமின்றி ஏற்றுக் கொண்டுவிடும் இஷாக் கான் ஶ்ரீ காந்த சித்தர் என்பவரை லல்லேஸ்வரியின் குருவாகக் கூறும் இந்துக்களின் தொன்மங்களை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்.

    லல்லாவின் கருத்துகளைத் தமக்கிஷ்டமான வகையில் வளைத்துக் கொள்ளும் இயல்பும் நூல் முழுக்கக் காணக்கிடைக்கிறது. உதாரணத்திற்கு, பக்கம் 75இல் கீழ்க்கண்ட லல்லாவின் வாக்- மேற்கோள் காட்டப்படுகிறது –

    “வெட்கத்தின் தளைகளை உடைத்தெறிவது எப்போது?
    ஏளனத்தை கேலியை அலட்சியம் செய்வது எப்போது?
    தகுதியின் உடைகளை நிராகரிப்பது எப்போது?
    என் மனதை ஆசைகள் தாக்கிக் கொண்டிருந்தால்”

    இஷாக் கான் அவர்களுக்கு மேற்சொன்ன வாக் – லல்லா வாழ்ந்த காலத்தின் சமூக வேற்றுமைகளை விவரிக்கிறதாம்!

    இன்னொரு உதாரணம் – பக்கம் 74

    “சிவன், எங்குமுள்ள, அனைத்திலும் உறைகிறான்
    எனவே, இந்துவையும், முஸ்லீமையும் பிரித்துப் பார்க்காதீர்
    ஞானமுண்டெனில் உம்மை அறிக
    பிரபுவின் உண்மை ஞானம் அதுவே”

    இஷாக் கானின் கருத்துப்படி மேற்சொன்ன வாக் பிராமணர்களைத் தாக்குகிறதாம்! சடங்கியல்கள் மட்டுமே அறியாமையைத் தெளிவிக்காது – என்ற கருத்து உபனிடத காலப் பழசு என்பதை இஷாக் கான் அறியாதவர் போலிருக்கிறது.

    புழங்கும் தொன்மக் கதைகளின்படி, தன்னுடைய மானசீக குருவாக வரித்துக் கொண்ட லல்லாவை அவதாரம் என்கிறார் நூருத்தின் எனும் நந்த் ரிஷி தன்னுடைய ஒரு பாடலில் –

    “பத்மன்புராவின் அந்த லல்லா
    திருப்தியடையும் வரை தெய்வீக அமுதைக் குடித்தவள்
    எங்களுக்கு அவதாரம் அவள்
    கடவுளே, அதே ஆன்மீக ஆற்றலை எனக்கும் அளித்தருள்!” – பக்கம் 77

    அதே பக்கத்தில் இஷாக் கான் கூறுவது –

    “That Lalla, as an ardent lover of Siva, succeeded in reviving Saivism is an argument belied by the very silence of our Saivite chroniclers and poets of her near-contemporary and later times. What is, however, of significance to remember from the viewpoint of social history is the historical dimension of her elevation to avatar by a devout Muslim like Nuruddin”

    இந்தப் பத்தியில் வெளிப்படும் முரண்களைப் பாருங்கள்! சைவத்தின் மறுமலர்ச்சியில் லல்லா வெற்றி பெறவில்லை என்று உறுதிபடக் கூறும் இஷாக் கான் அதற்களிக்கும் ஆதாரம் அவளின் சமகாலக் குறிப்பாளர்கள் அவளைப் பதிவு செய்யாததைக் குறிப்பிடுவது! அவளை “அவதாரம்” என்று நூருத்தின் எனும் ஆசாரமான முஸ்லீம் புகழ்வது சமூக வரலாற்றுப் பரிமாணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இஷாக் கான் ஜிலேபி சுற்றுவதைத் தான் கஷ்மீர சமூகவியலாளர்கள் “Syncretism” என்கிறார்கள்.

    நந்த் ரிஷி இஸ்லாமிய சூபி என்பதற்கு மறு கருத்தில்லை. ஆனால், இரண்டாம் தலைமுறை இஸ்லாமியர் என்ற முறையில் அவருடைய தந்தையின் முதல் மதத்தின் தொப்புள் கொடி உறவு அவரின் கவிதைகளில் வெளிப்படுவதை “ஆரம்பகாலம்” என்று கூறுவது நந்த் ரிஷியின் சமயச்சேர்ந்தியல் இலக்கை மறுப்பதாகும். கால வரிசை அடிப்படையிலான நந்த் ரிஷியின் பாடல்கள் தொகுப்பு இன்று வரை வெளிவரவில்லை எனும் போது தமது ஊகத்தை ஒரு வரலாறாக கட்டமைப்பது பிழையான அணுகுமுறை.

  • அஷெம் வஹு – ஜோராஸ்ட்ரியர்களின் முதன்மை மந்திரம்

    ஜோராஸ்ட்ரிய சமயத்தின் வேதம் ஜென்ட் அவெஸ்தா. அது ஐந்து தொகுதிகளைக் கொண்டது. காதா, யஸ்னா, வெந்திதாத், விஸ்ப்-ராத், யஷ்ட். குர்தா அவெஸ்தா அடுத்த படியில் உள்ள புனித நூல் தொகுப்பு. குர்தா அவெஸ்தாவின் பாராயணத்தின் முடிவில் ஜொராஸ்ட்ரியர்கள் சொல்லும் மந்திரம் அஷெம் வஹு. இது தியான வழிபாடு. மிகப் பழமையான இந்த வழிபாட்டிற்கு பலவித மறுவிளக்கங்கள்.

    அவெஸ்தன் மொழியின் சிக்கலான தன்மை மற்றும் கூறப்படும் கருத்துகள் காரணமாக குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடும் பல மொழியாக்கங்கள் உள்ளன. ஆனால் மந்திரத்தை உச்சரிக்கையில் நம் சிந்தனையில் அதன் அர்த்தம் தன்னிச்சையாக வந்து மனதில் படியும் என்பது ஜொராஸ்ட்ரியர்களின் ஐதீகம்.

    aṣ̌əm vohū vahištəm astī
    uštā astī uštā ahmāi
    hyat̰ aṣ̌āi vahištāi aṣ̌əm

    அஷெம் வஹு வஹிஸ்தேம் அஸ்தி
    உஷ்டா அஸ்தி உஷ்டா அம்மாய்
    யத் அஷாய் வஹிஸ்தாய் அஷெம்

    ஆஷா எனப்படுவதன் முக்கியத்துவத்தை அதன் ஆற்றலைப் பேசுகிறது இந்த மந்திரம். ஆஷா எனும் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன.

    ஆஷா என்பது ஒரு சிக்கலான மற்றும் அதிக நுணுக்கமான பொருளைக் கொண்ட ஒரு ஜோராஸ்ட்ரியன் கருத்து. இது பொதுவாக ‘சத்தியம்’ மற்றும் ‘நன்னடத்தை’ ‘சரித்தன்மை’ அல்லது ‘நீதி’, ஒழுங்கு’ மற்றும் ‘சரியாகச் செயல்படுதல்’ எனப் பலப்பல அர்ததங்களைக் கொண்டது. குர்தா அவெஸ்தாவுக்கும் பழமையான ஜென்ட் அவெஸ்தாவில் ‘ர்த’ என்ற சொல் ‘ஆஷா’வின் இணைச்சொல். சூழல் சார்ந்த தாக்கங்களுக்கு இணங்க ஆஷாவின் அர்த்தம் வகுத்துக் கொள்ளப்படுகிறது. உலகம் ஆஷா என்ற சொல்லிலிருந்து துவங்கிற்று என்பது சமய நம்பிக்கை. “அழகு”, ”தூய்மை” – இன்னும் எத்தனையோ அர்த்தங்கள் அதற்கு!

    இந்த மந்திரத்தின் பொதுவான கருத்து என்ன?

    “ஆஷாவில் சிறந்த நன்மை இருக்கிறது
    அதுவே மகிழ்ச்சி; எவன் ஆஷாவைக் கடைப்பிடிக்கிறானோ அவனுக்கு மகிழ்ச்சி”

    (நவ்ரோஸ் தின சிறப்புப் பதிவு)

  • கொலைகாரனுக்கும் கொலையுண்டவனுக்கும் பொதுவான மாயை – தேவ்தத் பட்டநாயக்

    பாண்டவர்கள் யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்தின் முடிவில் சிறப்பு மரியாதை அளிக்க கிருஷ்ணனை அழைத்தனர். இதனால் தனக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதாக நினைத்த சிசுபாலன், கிருஷ்ணனைத் திட்ட ஆரம்பித்தான். எல்லாரும் கோபப்பட்டார்கள், ஆனால் கிருஷ்ணன் கோபப்படவில்லை. அத்தனையையும் அவன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். இருந்தாலும், நூறாவது வசைக்குப் பின், கிருஷ்ணன் கூர்மையான தன் சக்கரத்தை வீசியெறிந்து சிசுபாலன் தலையைத் துண்டித்தான். காரணம், மன்னிப்பின் எல்லையைக் கடந்து விட்டான் சிசுபாலன்.
     
    சார்லி ஹெப்டோ, பகடிகளைத் தாங்கி வரும் பிரஞ்சு மொழி வார இதழ். அது கார்ட்டூன்களைப் பதிப்பித்தது- ஆத்திரமூட்டும் கேலிச்சித்திரங்கள். அவற்றை இதுவரை நான் பார்த்தது இல்லை. அங்கு பணிபுரிபவர்களை யாரும் கொல்லாமல் இருந்திருந்தால், நான் பார்த்திருக்கவே மாட்டேன். ஆனால் அதற்குப்பின் சார்லி ஓர் ஆளாகியது, பலியாள் ஆனது, கருத்துச் சுதந்திரத்துக்கான போராட்டத் தியாகியானது. கொலையைக் கண்டித்து நாமும் ஹீரோக்கள் ஆனோம். நாங்களும் சார்லிக்கள்தான் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு பாரிஸில் பல லட்சக்கணக்கானவர்கள் ஊர்வலம் போனார்கள்.
     
    சார்லியின் கொலைகாரர்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளூம் இடத்தில் ஊர்வலம் நடக்குமா? அது அனுமதிக்கப்படுமா? யார் அந்தக் கொலைகாரர்கள்? முஸ்லிம்களா, கெட்ட முஸ்லிம்களா, பைத்தியக்கார முஸ்லிம்களா, இசுலாமியர்களாக அல்லாத முஸ்லிம்களா? பெஷாவரின் பள்ளிச் சிறுவர்கள் மீதான தாக்குதல் போலவே, இதையும் தலையங்கங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. பெஷாவரில் பலியானவர்கள் கொலை செய்யத் தூண்டவில்லை; பெற்றோர்கள் வேண்டுமானால் செய்திருக்கலாம்.
     
    சார்லி விஷயத்தில் தூண்டுதல் இதுதான்: தங்கள் இறைத்தூதர் அவமதிக்கப்பட்டதாக, எனவே இசுலாமும் அவமதிக்கப்பட்டதாக, அவர்கள் நினைத்தார்கள். எனினும் சார்லியோ, “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்!” என்ற கோஷத்துக்குப் பேர் போன மண்ணின் சட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இசுலாமும் சகோதரத்துவம் பேசுகிறது (அரபி மொழியில், உம்மா), சமத்துவமும் பேசுகிறது. ஆனால் அந்த அளவுக்கு சுதந்திரத்தைப் பேசுவதில்லை. இசுலாம் என்றால் கீழ்ப்படிதல் என்றுதான் பொருள்- அமைதியை ஏற்படுத்தும் இறைவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிதல்.
     
    அளவைக்கு உட்பட்டதைக் கையாளுதல்
     
    சமத்துவத்திலும், தங்களுக்கே உரிய வகையிலான சுதந்திரத்திலும் நம்பிக்கை கொண்டிருக்கும் இந்த இரு சகோதரர்கள் ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்வது என்று தீர்மானித்தார்கள். ஒருவர் உணர்வுகளையும், மற்றவர் உடல்களையும். உணர்வுகளின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு அளவைகள் கிடையாது. உடல்கள் மீதான வன்முறையைக் கணக்கெடுக்க முடியும். அதனால் பின்னது நிரூபிக்கப்படக்கூடிய குற்றமாகிறது; அதிலும் குறிப்பாக, நம்பிக்கையை மட்டுமே சார்ந்த, சமயம் போன்ற ஒன்றை நோக்கி ஏவப்படும் உணர்வுபூர்வமான வன்முறை விஷயத்தில், உடல்களின் மீதான வன்முறையே பெரியதொரு குற்றமாகிறது.
     
    இதுதான் பிரச்சினை: கணக்கெடுத்தல்- அறிவியலின், புறவயப்பட்ட பார்வையின் கால்கோள். 
     
    எதை நம்மால் கணக்கெடுக்க முடியுமோ, அதை நம்மால் கையாள முடியும். ஆனால், அளவைக்கு அப்பாற்பட்டதை என்ன செய்ய? அது முக்கியமா என்ன? உணர்வுகளை அளந்து பார்க்க முடியாது. மனதை அளந்து பார்க்க முடியாது, எனவேதான் தீவிர அறிவியலாளர்கள் உளவியலையும் இயங்குமுறை அறிவியலையும் போலி அறிவியல்கள் என்று சொல்கின்றனர். கடவுளை அளந்து பார்க்க முடியாது. எனவே, விஞ்ஞானியைப் பொறுத்தவரை, கடவுள் மெய்யல்ல, நம்பிக்கை என்று வேண்டுமானால் சொல்லலாம். இது முஸ்லிம்களுக்கு எரிச்சலாக இருக்கிறது, அவர்களைப் பொறுத்தவரை கடவுள் இருப்பது உண்மை. அளந்து பார்க்கக்கூடிய உண்மையாக இல்லாமல் இருக்கலாம், ஆனாலும்கூட உண்மைதான். இது அகவயப்பட்ட உண்மை. என் உண்மை. அது முக்கியமா இல்லையா?  
     
    அகவயப்பட்ட உண்மையை நாம் எங்கு வைத்து பேச முடியும்: மெய் என்றா புனைவு என்றா? சிலர் தங்களுக்கு என்று “கருத்துச் சுதந்திரம்” என்பதை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், வேறு சிலர் தங்களுக்கு என்று, “ஒரு கடவுள், மெய்யான ஒரே கடவுள்” எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டுமே அகவயப்பட்ட உண்மைகள். இவை நம் யதார்த்தத்துக்கு வடிவம் தருகின்றன. இவை முக்கியமாக இருக்கின்றன. ஆனால் நமக்குத்தான் இவற்றை எங்கு வைத்துப் புரிந்து கொள்வது என்பது தெரியாது. ஏன் என்றால், இவற்றை அளந்து பார்க்க முடியாது.  
     
    சார்லியின் கேலிச்சித்திரங்கள் முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்படுத்திய காயத்தை நம்மால் கணக்கெடுக்க முடியாது. முஸ்லிம் சமுதாயத்தின் கூருணர்வுகள், அல்லது மிகையான கூருணர்வுகள் எவ்வளவு என்று நம்மால் மதிப்பிட முடியாது. ஆனால், கொலைகாரர்களின் செயல்களால் ஏற்பட்ட விளைவுகளைக் கணக்கெடுக்க முடியும். எனவே, நாம் சுலபமாய் வன்முறையைக் கண்டனம் செய்ய முடியும். காயப்படுத்தியது, கோபப்படுத்தியது, அவமானப்படுத்தியது என்பதே ஒரு சிலருக்கு துப்பாக்கிகளைத் தூக்கப் போதுமானதாக இருந்தது என்பது அளந்து பார்க்க முடியாத அனுமானம், நம்பிக்கை. பகுத்தறிவு பேசும் நாத்திகனுக்கு நம்பிக்கை என்பது கேலிக்குரிய விஷயம். 
     
    புத்திஜீவி தன் சொற்களால் காயப்படுத்த முடியும். போர்வீரன் தன் ஆயுதங்களால் காயப்படுத்த முடியும். முன்னது ஏற்புடையதாய் உள்ள, ஏன் ஊக்குவிப்பும் அளிக்கப்படும், உலகில் நாம் வாழ்கிறோம்,  பின்னது அப்படியல்ல. உலகளாவிய கிராமத்தில் பாவிக்கப்படும் நவ-பார்ப்பனியம் இது. சிந்திக்கத் தெரிந்தவர்களும் பேசத் தெரிந்தவர்களும், அடிப்பவர்களையும் கொலை செய்பவர்களையும்விட உயர்ந்தவர்கள்- சொல்லம்புகளால் ஏற்பட்ட காயங்கள் ஆழமானவையாகவும், நீண்டகால தாக்கம் கொண்டவையாகவும், ஆறாவடுவாய் எக்காலத்துக்கும் புண்படுத்துபவையாகவும் இருந்தாலும் இது இப்படிதான். அகிம்சையைக் கடைபிடித்த சாது காந்தி, இவ்வாறே மூர்க்க வன்முறையாளன் கோட்சேவுக்கு எதிராய் நிறுத்தப்படுகிறார். புத்திஜீவியான எனக்கு, கோபத்தைத் தூண்டும் உரிமை இருக்கிறது; ஆனால் வன்முறையை மட்டுமே அறிந்த, நாகரிகமற்ற உனக்கு, கோபப்படும் உரிமை கிடையாது, உனக்குத் தெரிந்த ஒரே வழியில் பதில் சொல்லும் உரிமை கிடையாது. அப்படியே உனக்கு கோபம் வந்தாலும், நீ என் மொழியில்தான் பேச வேண்டும், உன் மொழியில் அல்ல, மூளையைக் கொண்டு, உடல் வலுவைக் கொண்டல்ல- ஏனெனில் மூளையே உயர்ந்தது. புத்திஜீவி பிராமணன் நான்தான் விதிகளை வரைகிறேன். உனக்கு இது புரிகிறதா?
     
    அகிம்சையே புதுக்கடவுள், உண்மையான ஒரே கடவுள். நாம் வன்முறை என்று சொல்லும்போது, உடலையும் உடைமையையும் தாக்கும் நாகரிகமற்றவனின் வன்முறையை மட்டுமே பேசுகிறோம். புத்திஜீவிகளாய் உள்ள உயர்ந்தோர் ஏற்படுத்தும் மனக்காயங்கள் வன்முறையாய்க் கருதப்படுவதில்லை. எனவே  புத்திஜீவிகள் என்ற வகையில் இந்து சமயத்தைத் திரைப்படங்களில் (ராஜ்குமார் ஹிரானியும் ஆமிர் கானும் எடுத்த பிகே), புத்தகங்களில் (வெண்டி டோனிகரின் “இந்துகள்: ஒரு மாற்று வரலாறு) கேலி செய்ய நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டுமென்றோ, புத்தகங்களைக் கூழாக்க வேண்டுமென்றோ போராடுபவர்கள் மூர்க்கர்கள், நாகரிகமற்றவர்கள், வன்முறையாளர்கள், குடிமைச் சமூகச் சொல்லாடலின் எதிரிகள். சார்லி கொலைகாரர்கள் அளவுக்கு மோசமில்லை, ஆனால் இவர்களும் அந்தப் பாதையில் போவதாகத்தான் தெரிகிறது.
     
    சிந்தனையாளனின் இடம்
     
    விவாதங்களை, ரத்தம் சிந்தாத மூர்க்கப் போர்களாய், உளப் போர்களாய்க் காண நாம் மறுக்கிறோம். பட்டிமன்றங்களைப் போர்க்களங்களாக நாம் பார்ப்பதில்லை. உளச் சித்திரவதை என்பது மெய்யல்ல, அது ஒரு கருத்துருவாக்கம் மட்டுமே என்று சொல்லப்படுகிறது, அதை மதிப்பிட முடியாது, எனவே நிருபிக்க முடியாது. தன் மனைவியின் மனதைச் சித்திரவதைக்கு உள்ளாக்கும் கணவனைக் கைது செய்யவே முடியாது; மனைவியை அடிக்கும் கணவனைப் பிடித்து விடலாம். நாம்  பின்னதைப் புரிந்துணர்வோடு பார்க்கிறோம், ஆனால் முன்னதைப் பொருட்படுத்துவதில்லை (அவள் ஓவர் சென்சிடிவாக இருக்கிறாள் என்று சமாதானம் சொல்கிறோம்). உளச்சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட மனைவி தன் கணவனைக் கொலை செய்தால், அவளுக்குதான் சிறைத்தண்டனை அளிப்போம், கணவனுக்கு அல்ல. அவளது குற்றத்தை நிருபிக்க முடியும், அவனது குற்றத்துக்கு எதுவும் செய்ய முடியாது.
     
    சிந்தனையாளன் வினையாற்றுவதில்லை என்று சொல்கிறோம். எனவே, சிந்தனையாளனால் தூண்டப்பட்ட கொலைகள் கண்டுகொள்ளப்படாமல் போகின்றன. உடலின் மொழி மட்டுமே அறிந்த நாகரிகமற்றவன் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும்போது, சிந்தனையாளன்- வன்முறைக்கு வித்திட்டவன்-, சிரித்துக் கொண்டிருக்கிறான். உள்ளத்தின் மீது தொடுக்கப்பட்ட போர் இரக்கமற்ற துல்லியத்துடன் தொடர்கிறது.
     
    மாயை என்பதன் வேர்ச்சொல் சமஸ்கிருதத்தில் மா, மதிப்பிடு, என்பதாகும். நாம் அதை காட்சிப்பிழை அல்லது பிரமை என்று புரிந்து கொள்கிறோம். ஆனால், சரியாகச் சொன்னால், மதிப்பீடுகளை கொண்டு கட்டமைக்கப்பட்ட உலகம் என்றுதான் பொருட்படும். இவ்வாறாகவே, அறிவியல் புலம், பகுத்தறிவின் பாற்பட்ட புலம், மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்த உலகம், மாயை. இது நல்லதுமில்லை, கெட்டதுமில்லை. இது ஒரு தீர்ப்பல்ல. இது ஓர் அவதானிப்பு. அளவைகளால் அமைந்த உலகம் தனக்குப் புலப்படுவதை மட்டுமே கூர்ந்து நோக்கும், புலன்களுக்கு அப்பாற்பட்டவற்றைக் காணும் பார்வையை இழக்கும். மதிப்பீட்டு உண்மையை முழுமையற்ற மெய்யெனக் கருதாமல், முழுமெய்யெனக் கொள்ளும். 
     
    இறைத்தூதரைத் தார்மிக அறவுணர்வுடன் கெக்கலித்துக் கேலி செய்பவர்கள் மாயையில் இருக்கின்றனர். அதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு கோபப்படுபவர்களும் மாயையில் இருக்கின்றனர். கொலைகாரன் மாயையில் இருக்கிறான், கொலையுண்டவனும் மாயையில் இருக்கிறான். இவர்களில் ஒருவனை பலியுண்டவனாகவும் மற்றவனைக் கொடியவனாகவும் கருதுபவர்களும் மாயையில் இருக்கின்றனர். நாம் அனைவரும் நம்மால் உருவாக்கப்பட்ட யதார்த்தங்களில் கட்டுண்டிருக்கிறோம்; சிலர், அளவைகள் அடிப்படையிலும் சிலர் மதிப்பீடுகளைப் பொருட்படுத்தாமலும் வாழ்கிறோம். ஒவ்வொருவரும் பிறரை நிராகரிப்பதில் ஆவலாய் இருக்கிறோம், அவர்களை ஒன்றுமில்லாமல் செய்யப் பார்க்கிறோம்: மாற்றான் நாகரிகமற்றவனாக, கல்வி கற்பிக்கப்படவேண்டியவனாக இருக்கிறான். கொலை செய்யப்பட வேண்டிய புத்திஜீவியாகவும் மாற்றான் இருக்கிறான்.
     
    அடிப்படையில், மாயையே நம்மை மதிப்பிடச் செய்கிறது. ஏனெனில், நாம் அளவிடும்போது, எது பெரிது எது சிறிது என்றும் எது மேல் எது கீழ் என்றும் எது சரி எது தவறு என்றும் எது முக்கியம் எது முக்கியமில்லை என்றும் யோசிக்கிறோம். வெவ்வேறு அளவைகள் வெவ்வேறு மதிப்பீடுகளுக்குக கொண்டு செல்கின்றன. தான் ஒரு ஹீரோ என்றும் தியாகி என்றும் வெண்டி டோனிகர் நம்புகிறார், தன் எழுத்தைக் கொண்டு சபால்டர்ன் இந்தியனுக்காக அவர் போராடுவதாய் நம்புகிறார். அவர் சனாதன தர்மத்தை வேண்டுமென்றே பிழையாய் புரிந்துகொள்வதை எதிர்க்கும் ஹீரோ என்று தீனநாத் பத்ரா நம்புகிறார். பிகே தடை செய்யப்பட வேண்டும் என்று கோரும் உரிமை தனக்கு உள்ளது என்று பாபா ராம்தேவ் எண்ணுகிறார். நாம் நினைத்த மாதிரியே, கருத்துச் சுதந்திரம், பகுத்தறிவு என்று பதில் சொல்லிக் கொண்டு, அந்தத் திரைப்படத்தைத் தயாரித்தவர்கள் சிரித்தபடியே சில்லறையை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். எல்லாரும் தத்தம் மாயையில் சரியாகவே இருக்கின்றனர்.
     
    ஒவ்வொரு வினைக்கும் விளைவுண்டு. விளைவுகள் நல்லவையாக இருக்கலாம், அல்லது தீயவையாக இருக்கலாம் – ஆனால்  பின்னோக்கியே அதை அறிய முடியும். புத்தொளிக் காலமே காலனியக் காலமாகவும் இருந்தது. உலக யுத்தங்கள் முதல் உறைபனி யுத்தங்கள் வரை, இருபதாம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான யுத்தங்கள், சமயச் சார்பற்றவை. வன்முறையற்ற சிந்தனை, வன்முறையற்ற சொற்களாய் வெளிப்பட்டு வன்முறைச் செயலுக்குக் காரணமாகிறது. கனியை அளவிட முடியும், விதையை அளந்தறிய முடியாது. வித்து வேறு கனி வேறு என்றும், எண்ணம் வேறு செயல் வேறு என்றும் பிரித்துப் பார்ப்பது வினையையும் எதிர்வினையையும் பிரித்துப் பார்ப்பது போன்றது. இதன் விளைவாய் தவறான புரிதலுக்கு வருகிறோம், தவறான தீர்வுகளை அளிக்கிறோம். கொலைகாரன் கருத்தை அழிப்பதில்லை. கருத்து மேலும் பல கொலைகாரர்களை உருவாக்குகிறது. 
     
    வழியோடு போவது வழியோடே வரும். வன்முறைக்கு எதிரான வெஞ்சினம் கேலிச்சித்திரங்களுக்கு எதிரான வெஞ்சினத்தை வளர்க்கிறது. இந்து தத்துவம் (இந்துத்வ தத்துவமல்ல), இதை கர்மவினை என்று அழைக்கிறது. வன்முறையற்ற வெஞ்சினத்தையோ வன்முறைப் போராட்டங்களையோ கைவிட்டு இந்தச் சுழலை உடைக்கும் விருப்பம் நமக்கில்லை. மாயை, கர்மவினை போன்ற கருத்துருவாக்கங்கள் செயலூக்கத்தைப் பாழாக்குவதால் மேலைமயமாக்கப்பட்ட மனதை அவை கோபப்படுத்துகின்றன: தங்கள் அளவீட்டுக் கருவிகளைக் கொண்டு இந்த உலகைக் காப்பாற்றுவதில் தீர்மானமாக இருப்பவர்கள், மானுட நிலை குறித்த இந்த நுட்பமான அவதானிப்பை, ‘விதி விட்ட வழி என்று இருத்தல்’ என நிராகரிக்கின்றனர். 
     
    முன்னொரு பிறவியில் சிசுபாலன், வைகுந்தக் கதவுகளின் காவலன் ஜெயனாக இருந்தான். சனகாதி ரிஷிகளை அனுமதிக்க மறுத்ததால் கோபித்து, அவன் விஷ்ணுவை விட்டு தொலைவில், பூமியில் பிறக்கக் கடவான், என்று சபித்தனர் ரிஷிகள். தன் வேலையைத்தான் செய்ததாக வாதாடினான் காவல்கார ஜெயன். ஆனால் சாபம் விலகவில்லை, ஜெயன் சிசுபாலனாய்ப் பிறந்தான். விஷ்ணு அவனுக்கு மோட்சம் அளிப்பதாக வாக்கு கொடுத்திருந்தார், தான் பூமியை விட்டுச் சீக்கிரம் செல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் சிசுபாலன், வைதலைக் கொண்டே வாழ்த்தும் விபரீத பக்தியில் ஈடுபட்டான். எனவே அவன் கிருஷ்ணனை ஏசினான், கிருஷ்ணன்தான் விஷ்ணு என்பதையும் தன் ஏச்சு கிருஷ்ணனை வினையாற்றச் செய்யும் என்பதையும் அவன் நன்றாகவே அறிந்திருந்தான். மன்னிப்புக்கு ஓர் எல்லையுண்டு. ஆனால் அன்புக்கு எல்லைகள் இருக்க முடியாது.
     
     
    (Devdutt Pattanaik writes and lectures on mythology in modern times. Visit: www.devdutt.com )
     

    தமிழாக்கம் – நட்பாஸ்

  • நஞ்சு

    ??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

    சிறு தளிர்கள்
    உதிர்ந்து விழுந்தன
    மொட்டுகள்
    மூச்சுத் திணறி வாடிப்போயின
    வேர் வழி
    உருவிலா நஞ்சு பரவி
    மரம் தள்ளாடிற்று
    ஒரு மரம் அழித்து
    தரை வழி அடுத்த மரத்துக்குத் தாவி
    அதி விரைவில்
    எதிர்காலத்தின் வனமொன்றை அழித்தது
    கருத்தின் வடிவிலும்
    கொள்கையின் வடிவிலும்
    தீவிரம் என்னும் உடையணிந்து
    வாதம் எனும் மகுடியூதி
    மூளைகளை தூக்கநடனத்தில் ஆழ்த்தி
    விழித்திருப்போரின் உடலை நீலம் பாரிக்க வைத்து
    நஞ்சு இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது.

  • சுட்டுணர்வு

    சில வாரங்களுக்கு முன்னர் நான் வலைப்பதிவிட்ட “தர்மகீர்த்தியின் பரிசோதனை”  கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டது ; அதில் வரும் pure sensation எனும் கலைச்சொல்லை தூய உணர்ச்சி என்ற உரிச்சொல்லாக மொழி பெயர்த்திருந்தேன். தூய உணர்ச்சி என்னும் சொல் முழுமையான திருப்தியை ஏற்படுத்தவில்லை. கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்து அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். பிறகு கட்டுரையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி சிந்திக்க சரியான நேரம் அமையவில்லை.

    நேற்று ஒரு முகநூல் உரையாடலின் போது மணிமேகலையின் 29-ம் அத்தியாயத்தில் ஒன்றைத் தேட வேண்டியிருந்தது. எதையோ தேடும் போது முன்னர் தேடிக் கிடைக்காது போன பொருள் கண்ணுக்குத் தட்டுப்படுமே அது மாதிரி கீழ்க்கண்ட வரிகள் என் பார்வையில் பட்டன.

    ஆதி சினேந்திர னளவை யிரண்டே

    ஏதமில் பிரத்தியங் கருத்தள வென்னச்

    சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி

    விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்

    மற்றவை யனுமா னத்துமடை யும்மென    (29 : 47-51)

    “ஒரு பொருளின் பொருண்மை மட்டும் கண்டுணரும் உணர்வை காட்சியளவை என்று மேற்கொண்டு பிறராற் கொள்ளப்படும் பெயர், சாதி, குணம், தொழில் என்பவை கருத்தளவையிலும் அடங்கும் என அவற்றை இலக்கண மேற்கொள்ளாது நீக்கி விட்டனர்”

    – ஔவை.துரைசாமிப் பிள்ளை உரை

    Pure sensation என்ற சொற்றொடரை சுட்டுணர்வு என்று மொழி பெயர்த்திருக்க வேண்டும் ; மணிமேகலை ஆசிரியர் வேறோர் இடத்திலும் சுட்டுணர்வை வரையறுத்திருக்கிறார்.

    “சுட்டுணர் வெனப்படுவது ஏனைப் பொருளுண்மை மாத்திரை காண்டல்” (26 : 61-62)

    சுட்டுணர்வு நிர்விகற்ப காட்சி ; நாம சாதிக் குணக்கிரியையின் வைத்து உணரும் உணர்வு சவிகற்பக் காட்சி. இவற்றை முறையே இந்திரிய ஞானம் என்றும் விசிட்ட ஞானமென்றும் கூறுவர். திக்நாகர் நாம சாதி முதலியவற்றை “பஞ்சவித கற்பனை” என்று குறிப்பிடுகிறார். சுட்டுணர்வென்பது சவிகற்ப காட்டிக்கு அடிப்படை ; சுட்டுணர்வு சவிகற்ப காட்சிக்கு வித்திடாவிடின் அது குறையுடையதாகும். இக்குறையை தருக்கவியல் நூலார் “பிரமாணாபாசங்கள்” எட்டனுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.