Tag: கனவு

  • கொட்டும் பனிப்பொழிவில் – பெருந்தேவியின் கவிதை குறித்து


    கொட்டும் பனிப்பொழிவில்

    புள்ளியாக நடந்துவருகிறான் ஒருவன்
    அவனாகத்தான் இருக்க வேண்டும்
    அவன் எப்படி இங்கே?
    அவன் மாதிரிதான் தெரிகிறது
    அங்கே இரவு
    அவன் கனவில் பனி பொழிகிறது
    புள்ளியாக நடந்துவருகிறாள் ஒருத்தி
    அவள் எப்படி அங்கே?
    அவள் மாதிரிதான் தெரிகிறது
    விதிர்த்து எழுந்திருக்கிறான்
    ஆடைவிலகிய தொடையிலிருந்து
    தனது காலை மெல்ல எடுக்கிறான்
    சத்தமின்றி திரும்பப் படுக்கிறான்
    அவனுடைய கனவு முடிந்துவிட்டது
    அவளது பகல் முடிய
    பல மணி நேரம் இருக்கிறது

    அவன் அவளைத் தாண்டிச்செல்கிறான்
    அவன் மாதிரி இருந்த அவன்
    அவனாக இருந்திருந்தால்
    தாண்டிச் சென்றிருக்கமாட்டான்
    அவள் கண்களை மூடிக்கொள்கிறாள்
    கண்களுக்குள் பொழிகிறது பனி
    எதுவும் நடக்காததைப் போல

    அவன் கனவிலிருந்து விழித்திருக்க மாட்டான்
    அவள் மாதிரி இருந்த அவள்
    அவளாக மட்டும் இருந்திருந்தால்
    ஆடை விலகிய தொடைக்கு மேல்
    மீண்டும் தன் காலைப் போடுகிறான்
    எதுவும் நடக்காததைப் போல

    பெருந்தேவி

    கவிதை என்பது கருத்தையோ உணர்வையோ பகிரும் விஷயம் என்ற பொதுவான வரையறை கவிதையை கவிதையாகக் காட்டுவது எது என்ற கேள்வியை எழுப்புகிறது. நேரடியாக ஓர் உரைநடையாகவே அதனைச் சொல்லிவிடலாமில்லையா? பின் கவிதை எதற்கு வேண்டும்?

    கவிதை புரிவதில்லை என்று பொதுவாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு வாசிக்கப் பழகவில்லை என்று எளிதில் எதிர்வினை தந்துவிட முடியும் என்றாலும், அந்தக் குற்றச்சாட்டு ஏன் வைக்கப்படுகிறது என்று சிந்திக்கும்போது எனக்குத் தோன்றுவது – கவிதை ஒரு வடிவம். அதன் வடிவத்தை உணரப் பழகினாலொழிய கவிதையை ரசிக்க முடியாது!

    வடிவம் எதைச் சார்ந்தது? மொழியையா, சொல்லையா, வரிகளின் அடுக்கையா,…….மொழி சார்ந்த சொல் சார்ந்த உத்திகள் கவிதைகளின் இன்றியமையா அங்கமாக இருந்த காலங்கள் உண்டு. இவ்வுத்திகளை உதறிக் கிளர்ந்தெழுந்த நவீனக்கவிதைகள் தகவலை, படிமத்தை, உணர்வைப் பகிரும் விதத்தில் காட்டும் புதுமைப்படுத்தல்களை வடிவம் என்பதாகக் கொள்ளலாம். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு முகவாகில் இருப்பது போல எழுதப்படும் ஒவ்வொரு நவீனக் கவிதையும் ஒவ்வொரு வடிவத்தை பூணுகிறது. அகவற்பா, வெண்பா முதலான இலக்கணம் சார்ந்த வடிவங்கள் காலாவதியான பிறகும் ‘சொன்னதைத் திரும்பச் சொல்லல்” கவிதையின் அம்சமாக இல்லாமல் போகவில்லை. ஆனால் “சொல்லும் விதத்தை மாற்றாமல் சொல்லுதல்” நிச்சயம் தேய்வழக்காகிவிட்டது.

    எழுதப்படும் வடிவங்கள் உணரப்படாமல், ஈர்க்காமல் போகும்போது வாசகர்கள் அதனை “புரியவில்லை” என்கின்றனர். மொழிரீதியான புரிதலை நாம் இங்கு பேசவில்லை. கவிதையை உள்வாங்கி ரசிக்க அதன் வடிவ அமைப்பை உணர்தலின் அவசியத்தைப் பேசுகிறோம்.

    இந்த நீண்ட பீடிகையை என்னால் சில மணி நேரங்கள் முன்னர் எழுதியிருக்க முடியாது. ஏனெனில், அப்போது பெருந்தேவி எழுதி ஃபேஸ்புக்கில் இட்டிருந்த “கொட்டும் பனிப்பொழிவில்” கவிதையை படித்திருக்க மாட்டேன். 

    கவிதையை முதல் முறை படித்த போது எது என்னை ஈர்த்தது?

    கொட்டும் பனியில் ஒரு புள்ளியாகத் துவங்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் அவன்! – நீண்ட காலர்களுடன் நீளமான குளிர் கால அங்கியணிந்து, கௌபாய் தொப்பியைத் தறித்துச் சாலையில் நம்மை (வாசகனை நோக்கி!) வந்து கொண்டிருக்கும் ஆணுருவம் ஒரு noir படத்தின் ஆரம்பக்காட்சி போல நம் மனக்கண்ணில் ஓடத் துவங்குகிறது. – என்னை முதலில் ஈர்த்தது இந்த மனச்சித்திரந்தான்.

    அடுத்தடுத்த வரிகளை முதல் முறை வாசித்தபோது – கனவின் காட்சிகள் யதார்த்தத்தில் இணைவது ஆற்றல் மிகு உத்தியாக என் ஆர்வத்தை நீட்டித்தது.

    “ஆடை விலகிய தொடை” – புலன்சார் சித்திரத்தை என்னுள் வரைவதோடு நிற்காமல், ஒரு புதிராகவும் வளர்கிறது. கவிதையின் இறுதியில் திரும்பவரும் “ஆடை விலகிய தொடை” “யாருடைய தொடை?” எனும் வினாவை எழுப்பி அதன் விடை என்னவாக இருக்கும் என்ற ஊகத்தின் இன்பத்தில் கவிதையனுபவம் அரும்பத் தொடங்கியது. புதிருக்கான விடை கிடைத்துவிட்டால் கவித்துவ உணர்வு விடைபெற்றுக் கொள்ளும் அபாயம் உண்டு எனும் பிரக்ஞையை அடைவது தான் கவிதை வாசித்தலின் படி நிலைகளில் உயர்வதற்கான அறிகுறி.

    மேற்சொன்ன மூன்று அம்சங்கள் “கொட்டும் பனிப்பொழிவில்” கவிதைக்கான உடனடி ஈர்ப்பை என்னுள் ஏற்படுத்தியவுடன், கவிதையினுள் ஆழச்செல்லும் ஆர்வம் இன்னமும் பெருகிற்று.

    அவளின் கனவில் அவன் வருவதும், அவன் கனவில் அவள் வருவதும் என இரு கனவுகள் பின்னிப்பிணைவது போல முதலில் தோன்றிற்று. Inception திரைப்படம் தோற்றுவித்த அதே உற்சாகத்தை என்னுள் கிளர்த்தியது. முதலில் அவள் கனவு காண்கிறாளா? பின்னர் அவன் கனவு காண்கிறானா? அவளின் கனவு அவனின் கனவுக்குள் நுழைந்து விடுகிறதா? என்றவாறு கனவுப்பாதையில்  திளைத்தது வடிவப்புதுமை சிந்தனையுள் நிகழ்த்திய வேதியியல் மாற்றம் – கவிதையின்பம் என்பது இத்தகைய திளைத்தல் தானோ! கவிதை ரசிக மனம் இந்தத் திளைத்தலுடன் திருப்தியுற்றுவிடவில்லை. காதலியின் உருவ அழகை ரசித்துவிட்டு அதோடு நிற்காமல் அவளின் வடிவ அழகை ரசிக்க யத்தனிப்பது போன்று – கவிதை வாயிலாக கவிஞர் சொல்ல வருவது என்ன? – தகவலா, உணர்வா, அல்லது வெறும் படிமம் மட்டுமா? முழுப்புதிரையும் அவிழ்க்க கவிதையின் வடிவத்தைக் கலைத்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றிற்று 

    சில குறிப்புகளைக் கவிதையை தன்னுள் அடக்கிவைத்துக் கொண்டிருக்கிறது. “அங்கே இரவு” என்பது முதல் குறி . “அவளது பகல் முடிய பல மணி நேரம் இருக்கிறது” என்பது இரண்டாம் குறி. 

    அவளுக்கு பகல் அவனுக்கு இரவு – அவனும் அவளும் உலகத்தின் வெவ்வேறு நேர மண்டலங்களில் வசிக்கிறார்கள். Distance Love எனும் கருப்பொருளைக் கவிதை பேசுகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

    கவிதை ஒற்றைக் கருப்பொருளை மட்டும் கொண்டிருக்கவில்லை. காதல் முக்கோணம் எனும் கருப்பொருளும் கவிதையில் காணக்கிடைக்கிறது. “ஆடை விலகிய தொடை” – யாருடைய தொடை எனும் கேள்விக்கான விடையை கவிதாசிரியர் தராமல் போனது வடிவமைப்பின் சிகரம் என்று நினைக்கிறேன். பல ஊகங்களை நம் மனதுள் கிளப்பிவிடுகிறது. அவன் யாருடன் படுத்திருக்கிறான்? அவன் மனைவியுடனா? காதலியுடனா? அருகில் இல்லாமல் வெகுதொலைவில் வசிப்பதால் காதலியுடனான நெருக்கத்தை அனுபவிக்க முடியாமல் இருப்பதன் காரணமாக ஏதொவொரு விலைமாதுடன் படுத்திருக்கிறானா? வாசகன் மனதில் எழும் இத்தகைய கேள்விகள் வாசிக்கும் கவிதை மீதான ஈடுபாட்டை உயர்த்துகிறது. 

    அவனுக்கு வேறு துணை இருக்கிறதெனில் வேறொரு நேர மண்டலத்தில் வசிக்கும் அவளுக்கு இதைப் பற்றி தெரியுமா என்னும் கரிசனம் வாசகனான என்னில் எழுந்தது. அவளுக்குத் தெரிந்தால் அவளது சோகம் இன்னும் எத்தனை மடங்கு அதிகமாகும்! பனிபொழியும் தெருவில் நடப்பவன் அவனைப் போல் இருக்கிறான் என்று அவனை சற்று நேரம் நோக்கும் அவள் “இது அவனில்லை” என்று உணர்ந்த பிறகு அவள் தன் கண்களை மூடிக் கொள்கிறாள். இது அவனில்லை, அவனைத் தவிர வேறு எவனையும் இந்தக் கண்கள் காணக்கூடாது என்று தன் கண்களை மூடிக் கொள்கிறாளோ? “கண்களுக்குள் பொழிகிறது பனி” என்ற வரியில் கவிச்சுவை பொங்குவதை உணர வேண்டுமானால் அவள் மீதான கரிசனவுணர்வு வாசகனுள் பொங்குதல் அவசியமாகும். “கண்ணீர் விட்டு உறைந்து போய்விட்டன அவள் கண்கள்” என்பதைத்தான் “கண்களுக்குள் பொழிகிறது பனி” என்ற வரி சொல்கிறது என்பதாகப் புரிந்து கொண்டேன். பனி என்பது உறைந்த நீர்!   

    கவிதையில் காணப்படும் இன்னொரு குறிச்சொல் – “எதுவும் நடக்காததைப் போல”. அவன் எங்கோ, அவள் எங்கோ “எதுவும் நடக்காததைப் போல” தத்தம் இயல்பான வாழ்க்கையைத் தொடர்கின்றனர். இருவருக்குமிடையிலான நேசத்தை இருவரும் உணர்ந்தேயிருக்கிறார்கள். அவள் கண்ணீர் விடுகிறாள். அவனுடைய கனவில் “அவள் போல தோன்றுபவள் அவளில்லை” என்று உணர்ந்தவுடனேயே அவன் விழித்துக் கொண்டுவிடுகிறான். உடனடியாக அவனுடைய படுக்கைத்துணையின் மீது போட்டிருந்த காலை விலக்கித் திரும்பப்படுத்துக் கொள்கிறான். 

    “கனவின் காட்சிகள் யதார்த்தத்தில் இணைவது” என்ற அம்சம் முதல் ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று ஏற்கனவே சொன்னேனில்லையா? அது தோற்ற மயக்கம் என்பது கவிதையின் மூன்றாம் மட்ட அர்த்தப்படுத்தலில் (அதாவது முழுக்கக் கலைத்துப் போடுதலில்) விளங்கிவிடுகிறது. இந்தத் தோற்ற மயக்கம் சில வரிகளை ஒழுங்கு மாற்றிப் படித்துப் பார்க்கும் போது விலகி விடுகிறது.

    கவிதையை பத்தி பிரித்து வாசித்துப் பார்ப்போமா?  (கவிஞர் என்னை மன்னிப்பாராக!)

    புள்ளியாக நடந்துவருகிறான் ஒருவன்

    அவனாகத்தான் இருக்க வேண்டும்

    அவன் எப்படி இங்கே? 

    அவன் மாதிரிதான் தெரிகிறது     (1)

    — 

    அங்கே இரவு

    அவன் கனவில் பனி பொழிகிறது

    புள்ளியாக நடந்துவருகிறாள் ஒருத்தி

    அவள் எப்படி அங்கே?

    அவள் மாதிரிதான் தெரிகிறது

    விதிர்த்து எழுந்திருக்கிறான்

    ஆடைவிலகிய தொடையிலிருந்து

    தனது காலை மெல்ல எடுக்கிறான்

    சத்தமின்றி திரும்பப் படுக்கிறான்

    அவனுடைய கனவு முடிந்துவிட்டது  (2)

    அவளது பகல் முடிய

    பல மணி நேரம் இருக்கிறது         (3)

    அவன் அவளைத் தாண்டிச்செல்கிறான்

    அவன் மாதிரி இருந்த அவன்

    அவனாக இருந்திருந்தால்

    தாண்டிச் சென்றிருக்கமாட்டான்

    அவள் கண்களை மூடிக்கொள்கிறாள்

    கண்களுக்குள் பொழிகிறது பனி

    எதுவும் நடக்காததைப் போல         (4)

    அவன் கனவிலிருந்து விழித்திருக்க மாட்டான்

    அவள் மாதிரி இருந்த அவள்

    அவளாக மட்டும் இருந்திருந்தால்

    ஆடை விலகிய தொடைக்கு மேல்

    மீண்டும் தன் காலைப் போடுகிறான்

    எதுவும் நடக்காததைப் போல          (5)

    பத்தி எண்கள் 1 மற்றும் 4 – அவளின் கண்ணோட்டம்

    பத்தி எண்கள் 2 மற்றும் 5 – அவனின் கண்ணோட்டம்

    பத்தி எண் 3 – கவிதை சொல்லியின் குரல் – தொலைதூரத்தை, நேர மண்டலத்தை பூடகமாக சுட்டுகிறது

    பத்தி எண் 3 நீங்கலாக, கவிதை இரண்டு கண்ணோட்டத்தில் செல்கிறது. இரண்டு கண்ணோட்டங்களும் வரிகளை அடுக்கும் விதத்தில் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன. அவன் கனவு காண்பது கவிதையில் வருகிறது. கவிதை முழுக்கவும் அவன் கனவு காணவில்லை. ஒரு கட்டத்தில் அவன் விழித்துக் கொள்கிறான். அவள் கனவு காணவில்லை. யதார்த்தத்துக்குள் தான் இருக்கிறாள். வரிகளை பிசைந்து எழுதப்பட்டுள்ள விதத்தில் கனவு, கனவுக்குள் கனவு, யதார்த்தத்திலிருந்து கனவு, கனவிலிருந்து யதார்த்தம் என்பன போன்றவை மயக்கத்தைத் தோற்றுவித்து கவிதையைச் சுவையுள்ளதாக்குகின்றன. இந்த மயக்க விளைவு இல்லாமல் போயிருந்தாலும் இந்தக் கவிதை தன்னளவில் முழுமையான கவிதையாகவே திகழ்ந்திருக்கும், எனினும் குழந்தைக்கு என்ன உடை அணிவிப்பது என்ற முடிவை எடுக்கும் தாயைப் போல கவிஞரே தீர்மானிக்கிறார் கவிதை பூணும் வடிவத்தை!

    சொல்ல வரும் எளிதான கருத்து, இரண்டு படிமங்கள், வடிவப்புதுமை – மூன்றையும் சரியான விகிதத்தில் கலந்து ஓர் அரிய கவிதையனுபவத்தைத் தருகிறார்  பெருந்தேவி. 

    ஒரு கவிதை நம்மை ஈர்ப்பதில் ரசனை பெரும்பங்கு வகிக்கிறது. உணவு, உடை, நிறம் போல கவிதையின் பொருள் கொள்ளும் முறை அவரவர் பார்வை. எனவே, இந்தக் குறிப்பு தரும் பொருள் மட்டுமே இக்கவிதைக்கான ஒரே பொருள் என்று கொள்ள முடியாது. இக்கவிதையை வாசிக்கும் இன்னொருவர் வேறுவிதமாகப் பொருள் கொள்ளக்கூடும். கவிதை எழுதி முடிக்கப்பட்ட பிறகு அது கவிஞனைச் சாராத தனித்த இருப்பைக் கொள்கிறது என்று சொல்வது இதனால்தான். இதன் காரணமாகவே ஒவ்வொரு வெற்றிகரமான கவிதையையும் அதன் வாசகர்களே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

  • The Circular Ruins

    The Night Face Up என்றோரு சிறுகதையை 1967இல் எழுதினார் ஹூலியோ கொர்த்தசார். ஒரு மோட்டார் சைக்கிள் விபத்துக்குப் பிறகு கதாநாயகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் யதார்த்தம் – கனவு இரண்டும் மாறிமாறி அடுத்தடுத்து தொகுக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தூங்கிக் கொண்டிருக்கும் அவன், ஒரு சடங்குப் போரில் அஸ்டெக்குகளால் துரத்தப்படுகிறான். மோடேகா பழங்குடிகள் மட்டுமே அறிந்த ஒரு பாதையில் அவன் ஓடிக்கொண்டிருப்பதாக அவன் கனவு காண்கிறான். தாகம், மற்றும் தீவிர காய்ச்சலில் விழிக்கும் அவன் தன் கைகளில் பிளாஸ்டர் கட்டியிருப்பதை நோக்குகிறான். நர்ஸ் அவனுக்கு அளித்த உணவை உண்டுவிட்டு மறுபடியும் தூங்குகிறான். கனவில் அவன் இப்போது மோடேகாக்களின் பாதையிலிருந்து விலகி வேறெங்கோ ஒடிக்கொண்டிருப்பதை உணர்கிறான். கழுத்தில் இருக்கும் தாயத்தைப் பிடித்துக் கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போது அஸ்டெக்குகளிடம் சிக்கி விடுகிறான். மருத்துவமனையிம் மீண்டும் விழித்தெழுகிறான். தனது விபத்திற்குப் பிறகு சுயநினைவற்று இருந்ததைப் பற்றி யோசிக்கிறான். பிறகு உறக்கத்தில் வீழ்ந்தபோது அவன் உடலெங்கும் கயிறுகள் கட்டப்பட்டு தரையில் கிடத்தப்பட்டிருக்கிறான். அவன் கழுத்தில் இருந்த தாயத்து இப்போது காணவில்லை. பூசாரிகள் அவனை தூக்கிச் செல்கிறார்கள். கடைசியாக ஒரு முறை விழித்தெழுந்தான். ஆனால் இப்போது யதார்த்தம் கனவுடன் இணைந்துவிடுகிறது. பூசாரி கையில் கற்கத்தியை நீட்டியவாறே அவனை நோக்கி நெருங்குகிறார். அவன் இனிமேல் விழித்தெழப்போவதில்லை, ஏனெனில் அவன் விழித்துக் கொண்டுதான் இருக்கிறான்.

    போர்ஹேஸின் The Circular Ruins என்ற கதை The Night Face up போன்ற ஒரு கதை. இக்கதையில் கனவுக்குள் கனவு எனும் கருப்பொருளை போர்ஹேஸ் கையில் எடுத்துக் கொண்டுள்ளார். கனவு வாயிலாக ஒரு மனிதனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் ஒரு மந்திரவாதி. நெடுமுயற்சிக்குப் பின்னர் அவன் தங்கியிருக்கும் இடிந்த கோயிலின் தெய்வங்களின் உதவியால் ஒரு மனிதனை கனவில் உருவாக்கிவிடுகிறான். ஆனால், தெய்வங்கள் அவனுக்கு ஒரு நிபந்தனை இடுகின்றன. அவனுக்கு உரிய பயிற்சிகளைத் தந்து அவனை வடக்கே அனுப்பிவிட வேண்டும். மகனுக்கு அனைத்து தந்திரங்களையும் சொல்லிக் கொடுக்கிறான் மந்திரவாதி. அவனை வடக்கே அனுப்பி வைக்குமுன் மகனின் ஞாபகத்தை அழித்துவிடுகிறான். மகனுக்கு தன்னுடைய மூலம் பற்றி அனைத்தும் மறந்துவிட்டது. சில காலம் கழித்து வடக்கில் வரும் ஒருவர் வடக்கில் ஓர் ஆள் நெருப்பின் மீது நடப்பதைப் பற்றி வியந்து சொல்ல மகனுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும் என மந்திரவாதிக்குப் புரிந்துவிடுகிறது. கனவின் அம்சத்தைக் கொண்ட வேதாளம் மட்டுமே தாம் என மகன் அறிந்திருப்பான் என்பதை உணரும் மந்திரவாதிக்கு ஒரே வேதனை. உடனடியாகத் தன்னை அழித்துக் கொண்டு விட எண்ணி எரியும் நெருப்பு தன்னைத் தீண்ட விடுகிறான். ஆனால் நெருப்பு அவனை எரிக்கவில்லை. அப்போது அவனுக்கு தெளிவாகிறது – “,,,he understood that he too was a mere appearance, dreamt by another.”

    கொர்த்தசாரின் கதை – கனவு – யதார்த்தம் இரண்டின் பிரிவைப் பேசுகிறது. போர்ஹேஸின் கதை கனவுக்குள் கனவு. முந்தைய கதையில் ஒரே ஒரு மனிதன் – கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் இருப்பவன் ஒரே மனிதன்.

    போர்ஹேஸின் கதையில் இருவர் – இரண்டுமே கனவு மனிதர்கள். இறுதியில் – கனவு முடிந்த பின்னர் – கனவுக்கு வெளியே கனவு காண்பவன் ஒருவன் இருக்கிறான். அவன் மூன்றாம் மனிதன். இரண்டு கனவுகளையும் தாங்கி நிற்கும் அவன் ஒருவன் அந்தக் கனவுகளுக்கு வெளியே இருக்கிறான்.

    கதையின் கனவு காண்பவர் தான் இன்னொரு மனிதனை மிகுந்த தன்னம்பிக்கையுடன் உருவாக்குவதாக நம்பினாலும், அந்த அனுபவத்துக்கு முரண்பாடாக அவன் தன்னையே ஒரு கனவு என்பதை உணர்வது அவனது அடையாளத்தைச் சிதைக்கிறது.

    கதையின் ஆரம்பத்தில் பிளாட்டோனிக் இலட்சியவாதத்தை மறைமுகமாக ஆதரிப்பதாகத் தோன்றினாலும் — உடனடியாக உணரக்கூடிய உலகத்தைத் தாண்டிய இலட்சிய வடிவங்களின் உலகம் — அந்த உலகமும் ஒரு நிலையற்ற கனவு என்பதைக் கதையின் முடிவில் காட்டுகிறது.

  • ஷிண்டோ

    சோகம் நம்மை
    ஆட்கொள்ளுகையில்
    நினைவுகளின், கவனத்தின்
    சின்ன சாகசங்களால்
    நாம் சில கணங்கட்கு
    காக்கப்படுகிறோம்:
    கனியின் சுவை, நீரின் சுவை
    கனவு நமக்குத் திரும்பித்தரும் முகம்,
    நவம்பர் மாதத்துவக்கத்தின் மல்லிகைகள்,
    திசைகாட்டியின் முடிவிலாத் தாபம்,
    தொலைந்துவிட்டதாய் நினைத்த புத்தகம்,
    லத்தின மொழிப் பாவகையின் சீர்,
    வீட்டைத் திறக்கும் சிறு சாவி,
    சந்தனம் அல்லது நூலகத்தின் வாசனை,
    ஒரு நிழற்சாலையின் பழமையான பெயர்,
    வரைபடத்தின் நிறங்கள்,
    சற்றும் எதிர்பாராத சொல்வரலாறு,
    மெருகேற்றிய நகம்,
    நாம் எதிர்பார்த்திருந்த சந்திப்பு,
    பனிரெண்டு முறை இருளில் கேட்கும் மணியோசை,
    நாம் எதிர்பார்க்காத உடல்வலி.
    எண்பது லட்சம் ஷிண்டோ தெய்வங்கள்
    நம் பூமியில் பயணித்தவண்ணம் இருக்கின்றன
    பணிவான அத்தெய்வங்கள் நம்மைத் தொட வருகின்றன
    தொடுகி்ன்றன, பின் சுற்றித் திரிகின்றன.

    - போர்ஹேஸ்

    (Translated from the English translation by Paul Weinfield)

  • இதுவும் கடந்து போகும்

    ஏறத்தாழ இருபத்தியைந்து வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறேன். ஓர் இடத்திலும் அங்கேயே தங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. ஏக்கத்துடன் அந்த நிலப்பரப்புகளை நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் கஷ்மீர் ஒரு வித நினைவேக்கத்தை ஏற்படுத்துகிறது. அது ஏன் என புரிந்துகொள்ள முயல்கிறேன். அதன் பழங்கால வரலாறு, தொன்மம், இலக்கியம் என்று அனைத்தையும் தாகத்துடன் படிக்கிறேன். ஒரு சுற்றுலா பிரதேசம் இத்தகைய அதிர்வை தருமா? பழைய தோழி தெருவில் நடந்து செல்ல திண்ணையிலிருந்து ஏக்கத்துடன் அவள் பார்வையில் படாமல் நோக்குவது போல் கஷ்மீர் பற்றி படித்த வண்ணமிருக்கிறேன். கல்ஹணரின் ராஜதரங்கிணி – முன்-நவீன இந்தியாவின் ஒரே வரலாற்று நூல் – மொழிபெயர்ப்பு நூலின் இரண்டு பெரும்பாகங்களை வாங்கி புத்தக அலமாரியை நிரப்புகிறேன். பிரிவினைவாதிகளை ஆதரிக்கிறாரோ எனும் சந்தேகத்தில் பல வருடங்களாக வாசிக்காமல் வைத்திருந்த பஷாரத் பீரின் நூலை (curfewed night) ஒரே நாளில் வாசித்து முடிக்கிறேன். நான் வாசிக்கவிருக்கும் அடுத்த சல்மான் ருஷ்டியின் நாவலாக Shalimar the clown-ஐ தேர்ந்தெடுக்கிறேன். யூ-ட்யூபில் கஷ்மீரி கிரிக்கெட் வீரர் உம்ரன் மலிக்-கின் தந்தையாருடைய பேட்டியை பார்க்கிறேன். பெய்ஜிங் குளிர் கால ஒலிம்பிக்கில் alpine skiing 🎿 விளையாட்டில் இந்தியாவிற்காக பங்கு பெற்ற முகம்மது ஆரிஃப் கான் குல்மரக் (gulmarg) பனிச்சரிவுகளில் பயிற்சி செய்யும் காணொலியை தேடிக் கொண்டிருக்கிறேன். உறக்கத்துக்கு முன் சடங்காக வாசிக்கும் கவிதைகள் எல்லாம் இப்போது கஷ்மீர சித்தர் லல்லேஸ்வரி எழுதியதாகவே இருக்கின்றன. 1384இல் மீர் சையத் அலி ஹம்தானி அவர்களின் பேருரையை கேட்டு இஸ்லாத்தை நான் தழுவியிருப்பேனா என்ற ஊகசிந்தனையில் அடிக்கடி ஆழ்கிறேன். புராதன இந்தியாவில் மிக அதிக அளவில் வர்ணக்கலப்பும் சாதிக்கலப்பும் நிகழ்ந்த பூமி இன்று ஒற்றை அடையாளம் எனும் குழிக்குள் தன் சவத்தை தானே இறக்கிக் கொண்டிருக்க, அதன் பன்முகத்தன்மையை மீட்டெடுத்து அதனுள் புது ரத்தம் பாய்ச்சும் மந்திரநிகழ்வு ஏதேனும் சாத்தியமா என்ற கனவில் மூழ்குகிறேன். நூறடிக்கு ஒருவர் என போர் உடையில் ஆயுதங்களுடன் நிற்கும் ராணுவ வீரர்களின் பிம்பங்கள் அதே கனவில் புகையாக கலைந்து போகின்றன. காவா தேனீர்ப் பொடி இருக்கிறது. அதைப் பருகப் பொருத்தமான கஷ்மீரத்தின் குளிர்ச்சியைத் தேடுகிறேன். ஷாலிமார் பாகில் பார்த்த சினார் மரத்தின் அசைவை ஏன் ஒலிப்பதிவு செய்து வைத்துக் கொள்ளவில்லை என்று கேட்டுக் கொள்கிறேன். கஷ்மீரில் வசிக்காமலேயே தன் முன்னோர்களின் பூமியைத் தன் ஒவ்வொரு படைப்பிலும் இணைத்துக் கொள்ளும் ருஷ்டியைப் புரிந்து கொள்ள முடிகிறது. கஷ்மீர் மீதான என்னுடைய ஈர்ப்பை புரிந்து கொள்ள முடியவில்லை. ஈர்ப்பு நெடுநாள் நிலைக்காது என்பர். இன்ப வேதனை நிலைக்கும் வரை நிலைக்கட்டும். கஷ்மீரக்கவி அமின் கமிலின் நன்னம்பிக்கை தெறிக்கும் வரிகளைப் போல் innocence மீண்டும் பூக்களாய் மலர்ந்து கைதட்டி மகிழட்டும் – என் மனதிலும் என் காதல் பூமியிலும்.

    —-

    பனி

    தோட்டத்திற்குள் வந்தது பனி நேற்றிரவு
    சோகச் செய்தி சொன்னது
    இரவு முழுவதும் சொன்னது
    மசூதியிலும் கோவிலிலும் ஒவ்வொரு பூசாரியும் சொல்வதை
    மலரின் காதில் கிசுகிசுத்து அழுதது:
    “உலகம் மரணகரமானது;
    சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியை மறைக்கிறது.
    அழுகையுடன் வருகிறோம், அழுகையுடன் செல்கிறோம்.”

    காலை சூரியன் உதித்தது,
    மனதின் குழப்பம் தெளிந்து கண்கள் சுற்றி பார்த்தன.
    பயத்தால் சுருங்கியது பனி,
    இருண்ட இரவின் தூதர் ஓடிவிட்டார்.
    பூக்கள் சிரித்தன, மொட்டுகள் –
    மகிழ்ச்சியில் கைதட்டி மலர்ந்தன.

    —-

    (சினார் மரம் – கஷ்மீரின் அடையாளம்)

  • சியால்கோட்டுக்கு கனவி்ல் பயணமாதல்

    ஒரு நகரத்திற்குப் பயணமானபோது அங்கு பார்த்த ஒரு வீதி பலமுறை என் கனவில் வந்த ஒரு வீதிக் காட்சியைப் போலவே இருந்தது. ஒரு பக்கம்
    வரிசையாக வீடுகள். இன்னொரு பக்கம் அடர்த்தியாக வளர்ந்த மரங்களுக்கிடையே ஓடும் சிறு நதி. நகருக்கு நடுவே இருக்கும் புகழ்பெற்ற பிரம்மாண்டமான ஏரிக்கு நடுவே அழகான வண்ணவண்ணப் படகு வீடுகள் தெரிந்தன. ஏரியைச் சுற்றி இன்னும் கொஞ்ச தூரம் சென்று புற நகரை அடைந்த போது நான் பார்த்த தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய பேருந்து நிலையமும் என் கனவில் ஒரு கட்டில் போட்டு அதில் நான் படுத்திருந்த இடத்தைப் போலவே இருந்தது. கனவில் அந்த இடம் ரொம்ப கூட்டமாய் இருந்தது. நிஜத்தில் அந்த பேருந்து நிலையம் காலியாய் இருந்தது. என் கனவில் வந்தது போன்றே ஷட்டருடனான கடைகள் இருந்தன. ஆனால் மூடியிருந்தன.

    கனவில் நான் இருக்கும் இடம் பாகிஸ்தானின் நகரம் ஒன்று என்பதாக நினைத்துக் கொண்டிருப்பேன். சியால் கோட்டாக இருக்கலாம் என்று கனவுக்குள் எண்ணம் ஓடும். நிஜத்தில் பார்த்த நகரத்துக்கும் ஊக நகருக்கும் இடையே உள்ள தொலைவு இருநூறு கிலோமீட்டர் தான். இருநூறு கிலோமீட்டர் என்று சொல்லிக் கொள்வது எத்தனை presumptuous! நடுவே எல்லை இருக்கிறது. எல்லையில் பிரச்னை. எல்லையின் தொலைவு பற்றியச் சிக்கல். கனவுக்கும் நிஜத்துக்கும் இடையில் உள்ள இடைவெளியை இருநூறு கிலோமீட்டராக எப்படி சுருக்கிவிட முடியும்? கனவில் நான் எல்லை தாண்டியதாக எண்ணியது பிழை. எல்லைக்குள்ளாகத்தான் இருந்திருக்கிறேன். கனவின் எல்லைக்குள்.

    கண்ட கனவில் வந்த மனிதர்களை கவனிக்கவில்லை. அறிவிப்பு பலகைகள், பேருந்து எழுத்துகள் எதுவும் கனவில் தோன்றவில்லை. அவை தந்திருக்கக்கூடிய தகவல் கொண்டு இடத்தை சரியாக அனுமானித்திருக்கலாம். கனவு என்பதே நமக்கு நாம் சொல்லிக் கொள்வதும் உணர்ந்து கொள்வதும் தான். பலகைகளில் பேருந்துகளில் எழுத்துகள் தெரிந்திருந்தாலும் அவை நமக்குத் தெரிந்த மொழியில் எழுதப்படாவிட்டாலும் நாம் நினைத்துக் கொண்ட ஊரின் மொழியாகவே அது நமக்குத் தெரியும். போர்டில் ஃபார்ஸி எழுதப்பட்டிருக்கலாம். தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்தவனுக்கு கனவில் வரும் ஃபார்ஸியை வாசித்துவிட முடியும் பிரக்ஞையில் அவனறிந்த மொழியாகிய தமிழ் கொண்டு. கனவுகளின் மொழி பிரக்ஞையின் மொழி.

    நிஜப்பேருந்து நிலையம் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு பல வருடங்களாகிவிட்டனவாம். சியால்கோட்டுக்கு ஐம்பதுகளின் முடிவு வரை பேருந்துகள் சென்று கொண்டிருந்தனவாம்! இந்தத் தகவலின் துணை கொண்டு அடுத்த முறை கனவில் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்தால் சியால்கோட்டுக்கு பேருந்து பிடித்துச் சென்றுவிடலாம். சியால்கோட்டில் அதே வீதிக்காட்சியையும் பார்த்துவிடுவோம். ஏனெனில் வீதிக்காட்சியை பிரக்ஞைக்குள் ஏற்றிக்கொண்டால் கனவில் அதனை இருநூறு கிலோமீட்டர் நகர்த்துவது அத்தனை சிரமமில்லை. ”நிஜமாகவே” சியால்கோட்டிற்குள்ளும் அதே பேருந்து நிலையத்தை வந்தடைந்து விடுவோம்.

  • கனவுக்குள் புகுந்த சிங்கம்

    ஒரு நாள் என் கனவுக்குள் சிங்கமொன்று நுழைந்துவிட்டது. சுதந்திரமாக உலவிவந்த வனாந்தரப் பிரதேசத்திலிருந்து கடத்திவரப்பட்டு பின்னர் விலங்குகள் சரணாலயத்துக்குள்ளோ அல்லது சர்க்கஸில் கேளிக்கை ஜந்துவாகவோ அடைக்கப்பட்டுவிட்ட கோபம் அதனுள் பல நாட்களாகக் கனன்று எப்படியோ என் கனவுக்குள் நுழைந்து தப்பிக்க முயன்றது. சிங்கத்தின் கோபம் பற்றி நீ எப்படி அறிவாய் என்று வாசகர்கள் யாரேனும் கேள்வி கேட்கலாம். நம்பிக்கையின்மையை துறந்து என் கனவுக்குள் சிங்கம் நுழைந்ததை முழுதாக நம்பும் அவர்கள் தர்க்கரீதியாக “சிங்கத்தின் சீற்றம் இயற்கையானது” என்ற காரணத்தைத் தவிர சிங்கம் கோபமாயிருப்பதற்கான வேறெந்த காரணத்தையும் நம்ப மாட்டார்கள்.

    உண்மையை‌ முதலிலேயே சொல்லி விடுகிறேன்! கனவில் நிஜமாகவே சிங்கம் வந்ததா என்பதை நான் பார்க்கவில்லை. இல்லை ஆரம்பத்தில் இருந்து சொன்னால் சரியாக புரியும்! ஒரு நாள் என் கனவில் முக பரிச்சயம் இல்லாத பெயர் அறியாத சிலருடன் ஒரு மேடான பகுதியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.நின்றிருந்தது யாருடன் என்று விழிப்பு நிலையில் யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் என் நண்பர்களா? அல்லது வெறும் பரிச்சயங்களா? அவர்களின் முகங்கள் ஞாபகமில்லை. கனவுகளில் வரும் முகங்கள் பொதுவாக அதிகமும் ஞாபகத்தில் இருப்பதில்லை. சிங்கம் நுழைந்த கனவில் நான் யாருடன் நிற்கிறேன் என்பது தெரியாவிட்டாலும் அவர்களுடன் மகிழ்வாக பேசிக் கொண்டிருக்கிறேன். கனவில் உரையாடும் காட்சி மௌனப்படம் போலவே நகர்கிறது. இது திரைப்படம் எனில் இயக்குனர் அங்கு பேசி நின்றிருந்த காட்சியை நல்ல இசையால் நிரப்பியிருப்பார்.

    நாங்கள் நின்றிருந்த சில தப்படிகள் பின்னால் குறுக்கலாக ஒரு சரிவு. ஒரு வட்டமாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்த எங்களுக்குப் பின்னால் சரிவில் சிங்கமொன்று ஓடிப் போனதாக வட்டத்தில் நின்றிருந்த ஒருவர் சொல்லவும் வட்டம் ஒரு கணத்தில் கலைந்து போனது. அவர் சொன்னபடி பார்த்தால் சிங்கம் ஓடிப்போன சமயத்தில் அது என் முதுகுக்கு சில தப்படிகள் பின்னால் குறுக்காக ஓடியிருக்க வேண்டும். அதன் கோபத்தை ஆற்றிக் கொள்ள ஏதுவாக நின்று கொண்டிருந்த எங்களை அது ஏன் பார்க்கவில்லை என்ற கேள்விக்கு ஒரு விளக்கமும் இல்லை. சொல்லப்போனால் அதற்குப் பிறகு நாங்கள் அப்போது செய்த காரியத்தை நாங்கள் தர்க்க ரீதியாக விளக்கவே முடியாது. சிங்கம் ஓடின திசையிலேயே நாங்கள் தப்புவதற்காக ஓடினோம். சரிவுப்பாதையிலிருந்து பாதை வலப்புறமாகச் சென்றது. பாதையில் சிங்கம் என் பார்வையில் சிங்கம் படவில்லை. பாதையின் போக்கில் சிங்கம் வளைந்து சென்றிருக்கலாம். சிங்கம் சென்றிருக்கக் கூடிய பாதைக்கு எதிர்ப்பாதையில் அல்லவா நான் ஓடியிருக்க வேண்டும்? என்னுடன் இருந்தவர்களும் எனக்கு பின்னாலேயே ஓடி வந்தார்கள். தர்க்க ஒழுங்கு பற்றி கவலைப்பட அது சமயமில்லை. ஓடி ஒளிந்துகொள்வது தான் எங்கள் உடனடித் தேவையாய் இருந்தது.

    கனவில் வரும் சொல்லாடலை யார் நிகழ்த்துகிறார்கள்? கனவைக் காண்பவரே கனவின் சம்பவங்களை பாத்திரங்களை கட்டுப்படுத்தும் கனவுகளை Lucid Dream என்று மனோதத்துவாசிரியர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட புத்தம்புது பிரிண்ட் திரைப்படத்தை காண்பது போன்று தெளிவாக விரிந்த இந்தக் கனவுக் காட்சியை Lucid Dream என்று சொல்லலாமோ?

    ஐம்பது அடி ஓடியிருப்போம். சரிவு முடிந்து பாதை தட்டையானபோது வலப்பக்கம் ஒரு கதவு தென்பட்டது. கதவை லேசாக தொட்டதும் திறந்து கொண்டது. அதற்குள் முதலில் நான் நுழைந்தேன். என் பின்னால் ஓடி வந்தவர்களும் அந்த அறைக்குள் ஒருவர்பின் ஒருவராக நுழைந்து கொண்டார்கள். உள்ளே நான்கைந்து க்யூபிக்கில்-களில் கம்பியூட்டர் திரைகளைப் பார்த்துக் கொண்டு சில பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சிங்கம் ஓடிய விஷயத்தையோ அதற்குப் பயந்து அது ஓடிய பாதையிலேயே ஓடிய எங்களின் முட்டாள்தனத்தையோ அறியாதவர்களாக அமைதியுடன் பதற்றமின்றி இருந்தார்கள். அறைக்கு வெளியே நிகழ்ந்து கொண்டிருந்த இயல்பான வெளிச்ச-இருள் மாற்றங்களின் பாதிப்பின்றி ஒளி விளக்குகளின் ஒரே சீரான செயற்கை வெளிச்சத்தில் எந்நேரமும் மூழ்கியிருக்கும் அறை போலும் அது. உள்ளே நுழைந்த எங்களின் பதற்றம் அந்த அறையில் ஏற்கனவே இருந்தவர்களின் முகபாவங்களில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எங்களைப் பார்த்து அளவெடுத்தது போன்று புன்னகைத்தார்கள். எங்களின் அதிரடி உள் நுழைவு அவர்களை தொந்தரவுபடுத்தியதாக அவர்கள் காட்டிக் கொள்ளவில்லை. நாங்கள் ஏன் உள்ளே நுழைந்தோம்? வெளியே என்ன நடக்கிறது? என்ற விவரங்களை அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வங்காட்டவில்லை.

    நான் எங்கிருக்கிறேன்? இந்த அலுவலகம் இங்கு ஏன் இருக்கிறது? இந்த அலுவலகத்திலிருந்தா சிங்கம் தப்பித்து ஓடியது? இல்லை…இருக்காது…அலுவலகத்துக்கு பின்புறம்..அல்லது முன்புறம் ஜூ உள்ளதோ…அங்கிருந்துதான் சிங்கம் தப்பியிருக்குமா? இல்லையேல் இந்த அறைக்கு முன்புறத்தில் சர்க்கஸ் கம்பெனி ஏதாவது கூடாரமிட்டிருக்குமா? ஜூவிலிருந்தோ சர்க்கஸ் கூடாரத்திலிருந்தோ சிங்கம் வெளியே வந்திருக்கலாம். ஜூவும் அலுவலகமும் அல்லது சர்க்கஸும் அலுவலகமும் ஒரே வளாகத்தில் உள்ளதோ….

    அதுவரை அந்தக் கனவு ஒரு மௌனக்கனவாக இருந்தது. “சிங்கம் வெளியே துரத்துது..சத்தம் கேட்கலியா?” என்று என்னுடன் ஓடி வந்தவர்களில் ஒருவன் அலுவலகத்திலிருப்பவர்களிடம் கேட்கிறான். அந்தப் புள்ளியில் அந்தக் கனவு “”டாக்கி”யானது. பதில் எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

    வெளியிலிருந்து வரும் சத்தங்களில் என் செவிகள் பதிந்திருந்தன. ஆட்கள் பரபரப்பாக ஓடும் சத்தம் கேட்கிறது. அலுவலக அறையின் பின் புறத்திலிருந்து சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்கிறது. நாங்கள் நுழைந்த மெயின் கதவுக்கு நேரெதிராக இன்னொரு கதவு தெரிந்தது. அது அலுவலகத்தின் இன்னொரு வெளிப்புறத்தில் திறக்கும் போல இருந்தது. நாங்கள் முதலில் நுழைந்த கதவு போல் இல்லாமல் இந்த கதவு குறுகலாக திறந்தது. நான் லேசாக அந்தக் கதவைத் திறந்து வெளியே பார்க்க எத்தனித்தேன். சின்னதாக திறந்து வெளியே நோக்கினேன். ஒரு சின்ன பையன் தலைப்பாகையுடன் கதவருகே நின்றிருந்தான். அவன் செக்யூரிட்டியாக இருப்பான் என்று நினைத்தேன். சீருடை அணிந்திருக்கவில்லை. செக்யூரிட்டியாக இருக்க முடியாது. அவன் இடது கையில் வலையைப் பிடித்திருந்தான். இன்னொரு கையில் ஒரு மூங்கிற்கழி இருந்தது. அந்தக் கழியினால் தரையை தட்டியபடி நின்றிருந்தான். அறைக்குள்ளிருந்து வெளியே ஜாக்கிரதையாக தலையை வெளியே நீட்டிய எனக்கு அவனைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. “உள்ளே போங்க…பயப்படாதீங்க…சிங்கத்தைப் புடிச்சிடுவோம்” என்று தன்னம்பிக்கையுடன் சொன்னான். எங்களை ஆசுவாசப்படுத்த விரும்பினான் போல. கழியை இன்னுமொருமுறை தரையில் தட்டினான். நான் சின்னக் கதவை அடைத்துவிட்டு அலுவலகவாசிகள் வேலை செய்து கொண்டிருந்த முக்கிய அறைக்கு திரும்பினேன். என்னுடன் கூட ஓடி வந்தவர்கள் ஓய்வின்றி உலாத்திக் கொண்டிருந்தார்கள். அலுவலக அறையில் ஏற்கனவே இருந்தவர்களோ இமை கொட்டாமல் கணிணித் திரையைப் பார்த்தபடி அசைவின்றி உட்கார்ந்திருந்தார்கள்.

    வெளியே சத்தம் குறைந்திருந்தது போன்று தோன்றியது. ஒருவர் பின் ஒருவராக வெளியே செல்லலாம் என்று முடிவானது. எந்த கதவின் வழியாக நுழைந்தோமோ அந்த கதவை திறப்பதாக திட்டம். திறப்பதற்கு முன் மீண்டுமொரு முறை கதவின் மேல் காதை வைத்து கேட்டேன். ஒரு சத்தமும் இல்லை. ஓரிரு நிமிடங்கள் என் காது கதவில் பதிந்தே இருந்தது. சிங்கத்தின் கர்ஜனை, அது ஓடும் சத்தம், கழி தரையில் தட்டப்படும் ஓசை எதுவும் கேட்கவில்லை. ஹ்ம்ம்…எதுவும் ஆகாது…சிங்கத்தைப் பிடித்திருப்பார்கள்…கூண்டில் அடைத்திருப்பார்கள்…கதவைத் திறந்து முதலடியைக் கவனமாக அறைக்கு வெளியே வைத்தேன்.

    +++++

    என் கைத்தொலைபேசி பாடியது…நான்கு மணிக்கு அலார்ம் வைத்திருந்தேன். இல்லை…அலார்ம் இல்லை…இந்நேரத்தில் யார் அழைக்கிறார்கள்? போர்வையை விலக்கிவிட்டு எழுந்து மேசையில் இருந்த கைத்தொலைபேசியை எடுத்தேன். யாரோ புரியாத மொழியில் ஏதோ கேட்டார்கள். இரண்டு முறை “யார் நீங்கள்” என்று கேட்டேன். அழைத்தவருக்கு என் இந்தி புரியவில்லை. அவர் என்ன மொழி பேசினார் என்பது எனக்கு தெரியவில்லை. அழைப்பை துண்டித்துவிட்டு நேரம் பார்த்தேன். மூன்றரை ஆகியிருந்தது. படுக்கைக்குத் திரும்பினேன்

    +++++

    //மன நல சிகிச்சையில் கனவுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தலை உத்தியாக முதன்முதலில் பயன்படுத்தியவர் சிக்மண்ட் ப்ராய்ட். அவருடைய சீடர் கார்ல் யங்-கும் கனவுகளின் பகுப்பாய்வை மன நல மருத்துவ உத்தியாக பயன்படுத்தினார். கனவுகளை இருவரும் வெவ்வேறு விதத்தில் அணுகினர். ப்ராய்டு கனவுகளை ஆழ்மனத்தில் அடக்கி வைக்கப்பட்ட ஆசைகளின் இயக்கிகளாக அணுகினார். யங் அதற்கு எதிரான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். தீர்வை நோக்கிய படைப்பாற்றலின் வெளிப்பாடாக கனவுகளை அணுகினார். கனவு காண்பவனுடன் ஒத்துப் போகாதவற்றைக் கூட ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் ஆசைகளின் இயக்கிகள் என ப்ராய்டு பகுப்பதை யங் விமர்சித்தார். கனவு காண்பவனுடன் ஒத்துப் போனாலொழிய கனவுப் பகுப்பாய்வு எந்த வித பயனையும் தராது என்றார் யங்.//

    டாக்டர் முகர்ஜியின் சேம்பருக்கு முன்னர் காத்துக்கிடந்த போது மைய மேசையில் வைக்கப்பட்டிருந்த இன்றைய மனோதத்துவம் இதழில் ஒரு கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன். கட்டுரையை முடிப்பதற்குள் டாக்டர் முகர்ஜி அறையை விட்டு வெளியே வந்து உள்ளே வருமாறு என்னைப் பணித்தார்.

    பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மன நல ஆலோசனைக்காக டாக்டர் முகர்ஜியை ஆறு மாதங்களாக சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

    “உலகின் மிகவும் பழமையான காப்பியம் – கில்கமேஷ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு நான் பதில் தருவேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை போலும். இடைவெளிவிடாமல் கில்கமேஷ் காவியத்தைப் பற்றி அவரே சிறுகுறிப்பு வரைந்தார். “இறவா வரத்தை நாடிச் செல்லும் அரச குமாரன் கில் கமேஷ். அதற்கான அவனது முயற்சிகளை புராணக்கதை வடிவில் விவரிக்கும் காப்பியம் அது. கில் கமேஷுக்கு காவியம் நெடுக பல கனவுகள் வருகின்றன. காப்பியத்தின் போக்கில் கனவுகள் முன் உணர்வுக் கருவிகளாக அவனுக்கு உதவுகின்றன. பாபிலோனியர்களுக்கும் சரி எகிப்தியர்களுக்கும் சரி கனவுகள் என்பன மனிதர்களை தெய்வங்கள் தொடர்பு கொள்ளும் வழி என்று கருதினர்.”

    பொதுவாக எப்போதும் என்னை அதிகமாக பேசச் சொல்லும் முகர்ஜி இன்று பேசும் மூடில் இருக்கிறார். அவர் பேச்சில் கவனம் செலுத்தாமல் என் எண்ணம் அலை பாய்ந்தது. மன அழுத்தம் காரணமான பதற்றம் மற்றும் அதீத கவலை என அலை பாயும் மனதுடன் ஆறு மாதம் முன்னர் டாக்டர் முகர்ஜியின் உதவியை நாடினேன். ஆரம்பத்தில் மாத்திரைகள் சாப்பிடச் சொன்னார். மாத்திரைகள் நரம்புகளில் செரடோனின் ரசாயனத்தை சரியாக சுரக்கச் செய்யும் அல்லது அதீதமாக சுரக்கும் செரடோனினை கட்டுப்படுத்தும். மாத்திரைகளுடன் கூடவே உளவியல் ஆலோசனையும் இணையாகச் செல்ல வேண்டும். மன அழுத்தத்திற்கான புறக்காரணிகளைப் பற்றி விரிவாகப் பேசுதல், பிரக்ஞை வெளிச்சம் படாத அடக்கி வைக்கப்பட்ட உணர்வு நிலைகளின் மேல் கருணையுடன் கூடிய கவனத்தைப் பாய்ச்சுதல், சுய கருணையுடன் அதீத எதிர்பார்ப்புகளின் எடையைக் குறைத்தல், ஒப்பீடு, கழிவிரக்கம் என எண்ணத்தில் படிந்த ஓட்டடைகளை விலக்குதல் – பல இலக்குகளை மாதம் இரு முறை நடக்கும் சந்திப்புகளில் முகர்ஜியின் உதவியால் அடைய முயன்றிருக்கிறேன். ஆனால் சில வாரங்களாக லேசான குற்றவுணர்ச்சி. எத்தனை முன்னேற்றம் கண்டிருக்கிறேன் என்பதை புறவயமாக அளவிடமுடியாத் தன்மை என்னை சற்று தொந்தரவு செய்கிறது. பதற்றம் குறைந்திருக்கிறது ; அலுவலகத்தில் அதிகாரியின் படுத்தல்களை என் முதுகுக்குப் பின் அவர் செய்யும் சதிகளை அதிக உணர்ச்சிக் கலப்பு இல்லாமல் எதிர்கொள்ளும் வித்தையில் ஓரளவு தேர்ச்சி பெற்று வருகிறேன். “இதெல்லாம் ஏன் நடக்கிறது?” என்ற கேள்வி சிந்தனையில் எழுந்து என்னை அவ்வப்போது நிலைகொள்ளாமல் வைக்கிறது. இதை மட்டும் சற்று சரி செய்து விட்டால் அமைதி திரும்பிவிடும். தொடர்ந்து இன்னும் எத்தனை மாதங்கள் இப்படி உளவியல் மருத்துவரை சார்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் சங்கடப் படுத்திக் கொண்டிருந்தது. முகர்ஜியின் திறமை மீதான சந்தேகத்தின்பாற்பட்டதில்லை இது. மன நல மருத்துவரை அணுகியது நான்தான். அவரிடம் செல்வதை எப்போது நிறுத்த வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். அதே வேளையில் முகர்ஜியின் அயராத முயற்சிகள் உரிய, பொருத்தமான முடிவை எய்தும் வரை பொறுமையாக அவருடன் ஒத்துழைத்தலும் மிக அவசியம் என்றும் நான் நினைக்கிறேன். சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததா என்பதை என் உள் அறிதல் வாயிலாக மட்டுமே உணர்தல் சாத்தியம் என்று முகர்ஜி ஆரம்ப சந்திப்புகளில் சொல்லியிருக்கிறார்.

    ஆறு மாத சிகிச்சைக்குப் பிறகு முகர்ஜி புது வித நுட்பத்தை உபயோகிக்க விரும்பினார். சமீபத்தில் நான் கண்ட கனவைப் பற்றி ஒரு குறிப்பு எழுதிக் கொண்டு வருமாறு சென்ற சந்திப்பில் டாக்டர் முகர்ஜி சொல்லியிருந்தார்.

    சிங்கக் கனவைப் பற்றி எத்தனை தகவல்கள் ஞாபகத்தில் இருந்தனவோ அத்தனை தகவல்களையும் என் குறிப்பில் சேர்த்திருந்தேன்.

    கனவுப் பகுப்பாய்வு இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மனோ தத்துவ மருத்துவர்களால் பரவலாக பயன் படுத்தப்பட்டது. இப்போதெல்லாம் மனோ தத்துவ சிகிச்சைக் கருவியாக கனவுப்பகுப்பாய்வு அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக இந்தியாவில். ஆனால், அயல் நாடுகளில் ‘psycho-analysis’ மற்றும் ‘gestalt psychology’ என்னும் மனோதத்துவப் பிரிவுகளில் கனவுகளின் பகுப்பாய்வு பரவலாக உபயோகத்தில் உள்ளது.

    “சிங்கக் கனவு சுவாரஸ்யமாயிருக்கிறது. நீங்கள் பகுதி நேர எழுத்தாளர் என்பதால் சுவையாக அதை பதிவு செய்திருக்கிறீர்கள். இந்தக் கனவில் உம்முடைய இப்போதைய மன நிலைக்கான விடை இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா?”

    எப்படி துவங்குவது என்று தெரியவில்லை. சில நொடிகள் தயங்கினேன்.

    “இணைய தளங்களில் கனவுகளுக்கான பொருள் கொள்ளலைப் பற்றி அறிய முயன்றேன். ஆனால் பல்லி சொல்லுக்குப் பலன் என்று பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படுவதைப் போல எளிதான விஷயமாக இருக்கவில்லை. கனவுகளுக்கு ஒரு பொதுவான கருப்பொருள் இருப்பதில்லை. சிங்கம் பற்றிய கனவுக்கான பொருள்விளக்கம் பொதுவான ராசி பலன் வாசிப்பது போன்று ஒத்திசைவற்ற உணர்வைத் தந்தது.”

    கையோடு கொண்டுவந்திருந்த நோட்புக்கில் குறித்து வைத்திருந்தனவற்றை வாசித்துக் காண்பித்தேன்.

    “வலிமை, தைரியம், கம்பீரம் மற்றும் பெருமிதச் சிந்தனை – இவற்றின் குறியீடு சிங்கம். சிறுமைகளிலிருந்து விடுபட்டவர்க்கே சிங்கக்கனவு தோன்றும்.”

    “சிங்கத்தை கனவில் காணுதல், மேலே சொன்ன குணங்களை விட, போராட்டத்தையே அதிகமாகக் குறிக்கிறது. போராட்டத்தில் வெற்றி பெற்று பல்வேறு பிரயாசங்களிலும் தலைவனாக மிளிர்வதையும் சிங்கத்தை கனவில் காணுதல் குறிக்கிறது.”

    “திருமணமாகாத பெண்ணின் கனவில் சிங்கம் வந்தால் அவளுக்கு திருமணமாகும்.”

    “ஓர் இளம் வாலிபனின் கனவில் சிங்கம் வந்தால் யதார்த்த வாழ்க்கையில் எதிரி ஒருவனால் எளிதில் அவனது இடம் எடுத்துக் கொள்ளப்படும்.”

    “ஒரு சர்க்கஸில் சிங்கம் நடிப்பது போல கனவு வந்தால், உன் வாழ்க்கையில் எளிதாக கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படக் கூடிய கஷ்டங்கள் உருவாகும் என்று பொருள் கொள்ளலாம்.”

    “உன் கண்களின் முன்னால் சிங்கம் எதையாவது தின்னுவது போன்ற கனவு வந்தால், உன் யதார்த்த வாழ்வின் பிரச்னைகள் வித்தியாசமான வழிகளில் தீரும்.”

    “ஓர் இளஞ்சிங்கத்தை நீ உன் கனவில் பார்த்தால் யதார்த்தத்தில் உன் வியாபாரக் கூட்டாளிகளினால் தொல்லைகள் ஏற்படும்.”

    “கர்வமாக நடைபோடும் சிங்கத்தை கனவில் பார்த்தால், குடும்பப் பிரசினைகளின் சாத்தியம் உண்டு என்று பொருள் ; ஆனால் உன் வாழ்க்கைக் கூட்டாளியின் துணை கொண்டு அப்பிரச்னைகளை தீர்த்துவிடக் கூடும்.”

    நான் படித்துக் காட்டியதும் முகர்ஜி சிரித்தார்.

    “சிங்கம் கனவில் வருவதை எப்படி பொருள் கொள்ளலாம் என்பதை தேடினால் இளஞ்சிங்கம், பெண் சிங்கம், ஆண் சிங்கம், சிங்கத்துடன் விளையாடுதல், சிங்கம் கனவு காண்பவனை துரத்துதல் என்று விதவிதமாக விளக்கங்கள் போட்டிருக்கிறார்கள். சிங்கம் வருகிறது என்று கேள்விப்பட்டவுடனேயே அறைக்குள் சென்று தாழ் போட்டுக்கொண்டு ஒளிந்து கொண்ட கனவில் சிங்கத்தை பார்க்கவேயில்லை. ஆனால் சிங்கம் பற்றிய பயம் இருந்தது. கனவில் இல்லாமல் இருந்த சிங்கத்தை எப்படி பொருள் கொள்வது?”

    இன்னும் பலமாக சிரித்தார் முகர்ஜி. இதற்கு முன்னர் நடந்த அமர்வுகள் இத்தனை லேசாக சென்றிருக்கவில்லை.

    மன நல சிகிச்சையின் போது கனவை பொருள் விளக்கம் கொள்ளுதலில் பல வித வழிமுறைகள் உள்ளதாகக் கூறி அதில் ஒரு சிலவற்றை விளக்கினார். “நீ சொன்ன ராசி பலன் மாதிரியான பொருள் கொள்ளல் நமது கலாசாரத்திலிருந்து பெறப்படுவது. கனவுகளை பொருள் கொள்ளலில் கலாசார விழுமியங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. எனினும் மன நல சிகிச்சையில் கனவில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் நிஜ வாழ்க்கையில் யாரை எதை குறிக்கிறது என்பதை கனவு காண்பவர் அடையாளங்காணுதலிலிருந்து கனவுப் பகுப்பாய்வு தொடங்குகிறது”

    முகர்ஜி அன்றைய அமர்வை விரைவில் முடித்துக் கொண்டார். அடுத்த சந்திப்புக்கு வரும்போது நான் எழுதித் தந்த கனவு பற்றி நன்கு யோசித்துக் கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.

    “உன் கனவுக் குறிப்பை வாசித்தபோது ஹெமிங்வேயின் ஓல்ட்மேன் அண்ட் தி ஸீ நாவல் என் ஞாபகத்துக்கு வந்தது. அதில் கிழவன் சாண்டியாகோ அடிக்கடி சிங்கங்களை கனவில் காண்பான். அதுவும் குழுக்களாக சிங்கங்கள் உலா வருவதாகக் கனவு காண்பான். நீ பார்த்த இணைய தளத்தில் சாண்டியாகோவின் கனவுக்கு என்ன பொருள்விளக்கம் தந்திருப்பார்கள்?”

    +++++

    வீடு திரும்பியதும் பக்கம் பக்கமாக குறிப்புகள் எழுதினேன்.

    என் கண்ணுக்குத் தெரியாத சிங்கம் என்னுள் பயத்தை ஏற்படுத்தியது. என் மீது மட்டுமல்ல. என்னுடன் பேசிக் கொண்டிருந்த மேலும் சிலருக்கும் தான். கண்ணுக்குத் தெரியாத சிங்கம் என் அதிகாரியைக் குறிக்கிறதா? இல்லை. என் பயங்கள், பாதுகாப்பின்மை – இவைகளைத்தான் கூண்டில் இருந்து தப்பித்திருக்கக்கூடிய சிங்கம் குறிக்கிறதா? பயங்களும் பாதுகாப்பின்மையும் கண்ணுக்குப் புலப்படா மனக்குணங்கள். அவற்றுக்குப் பயந்து நான் ஒதுங்கிய அறை ஏன் என் அலுவலகத்தையொத்து இருக்கிறது. அங்கிருந்தோர் யாரும் பயந்தது மாதிரி தெரியவில்லை. அறைக்குள் வந்து ஒதுங்கிய நானும் என்னுடன் வந்தவர்களுந்தான் பயத்துடன் பதற்றத்துடன் இருந்தோம். ஆனால் சிங்கத்தை பிடிப்பதற்கான ஆயத்தங்கள் அறையின் மூடிய இரு கதவுகளுக்குப் பின்னால் நடந்து கோண்டிருந்ததற்கான அத்தனை சங்கேதங்களும் எனக்கு தெரிந்தன. சத்தங்கள் கேட்டன. தலைப்பாகையிட்ட இளைஞன் ஒருவன் எனக்கு உறுதி தந்தானே சிங்கம் பிடிபட்டுவிடும் என! என் பதற்றங்கள் எல்லாம் கற்பிதங்கள் என்று இந்த கனவு சொல்கிறதோ?

    வேறு மாதிரி யோசித்தேன்.

    சிங்கம் அந்த அதிகாரியைக் குறிக்கிறது. அவர் தன் நடத்தையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிராமல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலரின் மனதில் மட்டும் பாதுகாப்பின்மையை அச்சத்தை உருவாக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து தப்பிக்க முடியாமல் ஓடி அலுவலகம் போன்று தெரிந்த அறையில் தஞ்சம் புகுகிறேன். ஆனால் அந்த அறையில் இருந்த மற்றவர்கள் போல என்னால் சஞ்சலமுறாமல் இருக்க முடிவதில்லை. எப்படியாவது அதிகாரியிடமிருந்து தப்புதலே என் விழைவாக இருக்கிறது!

    இன்னும் வேறு மாதிரி யோசித்தேன்.

    கதவைத் திறந்து வெளியே வந்த எனக்கு அங்கே என்ன காத்திருந்தது? மூன்று சாத்தியப்பாடுகள்! (1) வெளியே யாரும் இல்லை. சிங்கம் கண்ணில் தென்படவில்லை. ஆபத்து விலகிவிடுகிறது. (2) எனக்காக சிங்கம் அமைதியாக கதவுக்கு வெளியே காத்திருக்கிறது. அதனுடன் சண்டை போடுகிறேன். அதை வென்றேடுக்கிறேன். (3) அறைக்கு வெளியே காத்திருந்த சிங்கம் என்னைத் தாக்கி என்னைக் கொன்று போட்டுவிடுகிறது.

    டாக்டர் படித்து விட்டு என்னிடம் திருப்பியளித்த கனவுக் குறிப்பை மீண்டும் வாசித்தேன்.

    மீண்டும் இன்னொரு குறிப்பு எழுதினேன்.

    சிங்கத்துக்கு ஏன் கோபம்? காட்டிலிருந்து கடத்தி வரப்பட்டு கூண்டில் பொழுதுபோக்கிற்காக அடைக்கப்பட்ட சிங்கத்தின் உணர்வுகள் பற்றி நமக்கு என்ன தெரியும்? அதிகாரியின் சொந்த பிரச்னைகள், அபிலாஷைகள், பொறுப்புகள், பாதுகாப்பின்மை – இவற்றைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? ஒரு சக மனிதனாக அவனும் நம்மைப் போல பலங்களுடனும் பலவீனங்களுடனும் இருப்பவன் தானே…….

    எழுதுவதை நிறுத்தினேன். என் மேசையின் மேல் இருந்த மினியேச்சர் சாரநாத் தேசியச் சின்னத்தின் திசைக்கொன்றாக நான்கு புறங்களைப் பார்க்கும் சிங்க ரூபங்களை நோக்கினேன். சிங்கக் கனவு எனக்களிக்கும் தகவல் என்ன?

    சூழமைவு இல்லாமல் எந்த நிகழ்வுக்கும் அர்த்தம் கற்பித்தல் இயலாத காரியம். சூழமைவைப் பொறுத்து ஒரே நிகழ்வுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் கற்பிக்கலாம். நம்மை நடுநாயகமாய் வைத்தே நமக்கான அர்த்தங்களை நாம் பெறுகிறோம். The Phenomena of Shared Dreams சாத்தியம் என்று வைத்துக் கொண்டால், இதே கனவுக்கான பொருள்விளக்கத்தை சிங்கத்திடம் கேட்டால் அது என்ன பதிலளிக்கும்? அந்த அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்களில் ஒருவரின் (அவர் நிஜ மனிதராக இருக்கும் பட்சத்தில்) கண்ணோட்டத்தில் இந்த கனவு என்ன அர்த்தத்தை கொடுக்கும்?

    கனவு கண்ட அந்த இரவில் கைத்தொலைபேசி ரிங் ஆனதும் கண்விழித்து எழுந்தது போன்று சடக்கென ஒரு தெளிவு. சடோரி!

    நாம் கண்ட கனவை நம் கண்ணோட்டத்தில் பொருள்விளக்கம் கொள்கிறோம். ஒரு திரைப்பட இயக்குனரின் கட் போல நம் கனவின் பொருள்விளக்கம் நம்முடைய கட். வாழ்க்கை யாருடைய கட்? வாழ்க்கை எல்லா உயிர்களின் கூட்டுக் கனவு என்பதாக யோசித்தால் ஒருவரின் கண்ணோட்டத்தில் மட்டும் வாழ்வின் நிகழ்வுகளை எப்படி பொருள் கொள்ள முடியும்? “இதெல்லாம் எனக்கு ஏன் நடக்கிறது?” என்ற வினா அடிப்படையில் மிகவும் அபத்தமானது ; நம் சுய கண்ணோட்டத்திலிருந்து எழுவது.

    நான் நான். அதிகாரி அதிகாரி. நான் என் எல்லைக்குள் என் பலங்களுடன் பலவீனங்களுடன் இருக்கிறேன். என் அதிகாரி அவருக்குரிய எல்லையில் இருக்கிறார். அவருடைய பலங்களை பலவீனங்களை நடத்தையை மிகையாகப் பொருட்படுத்தி என்னுடைய சுய முக்கியத்துவத்தை அதிகமாக கற்பனை செய்து கொள்ளும் பழக்கந்தானே அடிப்படையில் என்னுள் பதற்றத்தை உண்டு பண்ணுகிறது. பாதிப்புக்குள்ளாகும் தன்மை – நானோ என் அதிகாரியோ – அனைவருக்கும் பொதுவன்றோ?

    +++++

    அன்றிரவு நிம்மதியாக உறங்கினேன். முகர்ஜி குறிப்பிட்ட சுமேரியக் காப்பிய நாயகன் கில்கமெஷ் காணும் கனவொன்றில் வானிலிருந்து விழும் கோடரியை அவன் அணைத்துக் கொள்வதைப் போல என் மேசையில் இருக்கும் சாரநாத்தின் சாக்கிய சிம்மங்களை கைகளில் இடுக்கியவாறே தூக்கம். கடலில் சுறாக்களுடன் கடுமையாகப் போராடி தலை சேதமுறாமல், பிற பாகங்களை சுறாக்கள் பிய்த்தெடுத்துவிட எலும்புகளின் அமைப்பு மட்டும் எஞ்சியிருந்த மிகப்பெரிய மர்லின் மீனுடன் அதிகாலை கரை திரும்பிய பிறகு சாண்டியாகோ அடித்துப்போட்டாற்போல என்னை மாதிரிதான் தூங்கியிருப்பான்.

    +++++

    நன்றி : பதாகை

  • நான்

    flowing_dreams_sold_art_photo
    ஒவ்வொரு கனவுகளுக்குள்ளும்

    நுழைவதும் வெளிவருவதுமாகவும்

    இருந்தேன்.

    ஒவ்வொரு கனவிலும்

    எண்ணற்ற நிகழ்வுகள்

    எல்லா நிகழ்வுகளிலும் நான்!

    கனவுகளுக்குள் நான் நுழையவில்லையென்று

    பின்னர் தான் தெரிந்தது

    என்னைச் சுற்றிலும்

    கனவுகள்

    ஓடியும் பாய்ந்தும்

    சென்று கொண்டிருக்கின்றன

    நான் பாய்ந்து செல்லும்

    கனவுகளை நோக்கும் சாட்சியாக மட்டும்

    நின்று கொண்டிருக்கிறேன்.

  • கதவுடன் ஒரு மனிதன் – சச்சிதானந்தன்

    சமீபத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கு கொள்வதற்காக நண்பர் எம்டிஎம் தில்லி வந்திருந்தார். இக்கருத்தரங்கில் பார்வையாளனாக கலந்து கொண்டேன். கருத்தரங்கை மட்டுறுத்தியவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் அவர்கள். சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருக்கும் சச்சிதானந்தன் இரு வருடங்களுக்கு முன்னர் நோபல் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்று சொல்லப் படுகிறது. சாஹித்ய அகாடமியின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு முன்னர் கேரளாவில் ஆங்கிலப் பேராசிரியாக இருந்தார். ஏகப்பட்ட தேசிய சர்வ தேசிய விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

    1996 முதல் தில்லியில் வசிக்கிறாராம். தில்லியில் வசிப்பது பற்றி அவரிடம் கேட்ட போது “எனக்கும் தில்லிக்குமான உறவு அன்பு – வெறுப்பு இரண்டுங் கலந்தது” என்று பதிலளித்தார்.

    இச்சந்திப்புக்கு முன்னர் அவருடைய கவிதைகளைப் படித்ததில்லை. எம்டிஎம் சச்சிதானந்தனின் எழுத்தை சிலாகித்துப் பேசினார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சில கவிதைகளை இணையத்தில் வாசித்தேன். அவருடைய கவிதை நூல்களை வாங்கி ஆழ்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியிருக்கிறது. அவருடைய மூன்று கவிதைத் தொகுதிகளின் தமிழாக்கங்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன என்று அவருடைய இணைய தளம் (http://www.satchidanandan.com/index.html) சொல்கிறது. வாங்க வேண்டும்.

    கவிஞர் சச்சிதானந்தனின் அனுமதியுடன் “A man with a door” என்ற அவருடைய கவிதையின் தமிழாக்கம் கீழே.

    கதவுடன் ஒரு மனிதன்
    ஒரு மனிதன் கதவைச் சுமந்த படி
    நகரத்தெருவினூடே நடக்கிறான் ;
    அவன் அதனுடைய வீட்டை தேடுகிறான்.

    அவனின் மனைவியும்
    குழந்தைகளும் நண்பர்களும்
    அக்கதவின் வழி உள்ளே வருவதை
    அவன் கனவு கண்டிருக்கிறான்.
    இப்போதோ முழுவுலகமும்
    அவனால் கட்டப்படாத வீட்டின்
    கதவினூடே நுழைந்து செல்வதை
    அவன் பார்க்கிறான்.

    கதவின் கனவு
    உலகை விட்டு மேலெழுந்து
    சுவர்க்கத்தின் பொன் கதவாவது.
    மேகங்கள்;வானவிற்கள்
    பூதங்கள், தேவதைகள் மற்றும் முனிவர்கள்
    அதன் வழி நுழைவதை
    கற்பனை செய்கிறது,

    ஆனால் கதவுக்காக காத்திருப்பதோ
    நரகத்தின் உரிமையாளர்.
    இப்போது கதவு வேண்டுவது
    மரமாக மாறி
    இலைச்செறிவுடன்
    தென்றலில் அசைந்தவாறே
    தன்னைச் சுமந்திருக்கும்
    வீடற்றவனுக்கு
    சிறு நிழலைத் தருவதே.

    ஒரு மனிதன் கதவைச் சுமந்த படி
    நகரத்தெருவினூடே நடக்கிறான் ;
    ஒரு நட்சத்திரம் அவனுடன் நடக்கிறது.

    MDM&KSatchidananthan

    (எம்டிஎம், நான், கவிஞர் சச்சிதானந்தன்)

  • அறை முழுதும் அரவங்கள்

    சிறுவயதிலிருந்தே நாகசொப்பனம் கண்டு அச்சத்தில் பலமுறை தூக்கம் விழித்திருக்கிறேன். சிறுவயதில் பாம்புக்கனவு வந்து தூக்கத்தில் கத்தினால், என் தாய்க்கு பக்கத்தில் தூங்கக்கிடைக்கும். வாலிபனான பிறகுகூட பாம்புக்கனவுகள் தொடர்ந்தன. இளமையில் காம உணர்ச்சி மிகுந்திருப்பதால் பாம்புக்கனவு வரக்கூடும் என்று சொன்னார்கள். ஒரு ஜோசியன் ஏன் ஜாதகத்தை பார்த்துவிட்டு, "உங்கள் கண்ணுக்கு நாக தரிசனம் அடிக்கடி கிடைத்து கொண்டிருக்கும்" என்றார். அவை கனவு தரிசனங்களா ? அல்லது நிஜ தரிசனங்களா? என்று தெளிவு படுத்தவில்லை. திருமணமான பிறகும் பாம்புகள் கனவில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. இப்போதெல்லாம் பாம்புகள் வருவது வெகுவாக குறைந்துவிட்டது.

    சிறுவயதிலும் இளம் வயதிலும் பாம்புகள் கனவில் பயமுறுத்தும். ஆனால் பொதுவாக ஒற்றை பாம்பு தான் வரும். திருமணமான பிறகு வந்த கனவுகளில் பாம்புகள் ஏராளமாக வரும். நானிருக்கும் ஓர் அறையின் எல்லா அறைகலனிலும் ஒவ்வொரு பாம்பும் படமெடுத்து நிற்பது போன்ற கனவுகள். சாதுவாக படமெடுத்து நிற்கும். சாந்த சொருபமாக த்யானத்தில் ஈடுபடுபவை போல தோற்றமளிக்கும். அல்லது என் தூக்கத்தில் வரும் கனவுக்குள் நுழைந்து அவைகள் படமேடுத்தபடியே உறங்குகின்றனவோ? நான் பயத்தில் வியர்த்திருப்பேன். சப்தநாடியும் ஒடுங்கியிருக்கும். கனவிலிருந்து விடுபட்டவுடன், அந்த பாம்புகளின் சாந்தசொருபத்தை இன்னும் கொஞ்சநேரம் பார்த்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றும்.

    இப்போதெல்லாம் பாம்புக்கனவுகள் அதிகமாக வருவதில்லை. கடைசியாக வந்த பாம்புக்கனவில், நான் பாம்புகளோடு பேசிக்கொண்டிருப்பது போல வந்தது.

    உண்மையாக சொல்லப்போனால், பாம்பை அதன் இயற்கை சூழ்நிலையில் இதுவரை நான் பார்த்ததில்லை. பாம்புப்பண்ணைகளிலும், விலங்குகள் சரணாலயங்களிலும் தூர நின்று பார்த்திருக்கிறேன். இயற்கை சூழ்நிலையில் பார்த்தால் பயந்துபோவேன் என்றுதான் நினைக்கிறேன். இரவு நேரங்களில் கழிவறையில் சிறுநீரோ மலமோ கழிக்கும்போது "பாம்பு இந்த கழிவறையில் நுழைந்தால் என்ன செய்வது?" என்ற சிந்தனை தோன்றி என்னை சில்லிட வைக்கும். நேரிடையாக தோன்றாமல், நினைத்த மாத்திரத்தில் நெஞ்சில் பயமுட்ட வல்ல ஒரே ஜந்து பாம்புதானே!

    சில வாரங்களுக்கு முன் தென்னிந்தியாவில் உள்ள சுற்றுலாத்தலமொன்றில் ஐந்து நட்சத்திர ஓட்டலோன்றில் காபி பருகிக்கொண்டிருந்தேன். எனக்கு பக்கத்து மேசையில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த இளம் தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு வயதான மகனுடன் அமர்ந்து உணவு உண்டுகொண்டிருந்தனர். மகன் மேசையைச்சுற்றி ஓடிக்கொண்டு விளையாட்டு காட்டிகொண்டிருந்தான். ஒரு சமயத்தில் கால் தடுக்கி விழப்போனபோது, அவனை தாங்கி நான் பிடித்தேன். பின்னர், நன்றியுணர்ச்சியுடன் என்னை அவர்களுடன் சேர்ந்தமர அழைத்தார்கள்.

    ஜிம் வட ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் நகரை சேர்ந்தவர். ஜிம்மின் மனைவி – எலிசபெத்தும் டார்வின் நகரை சார்ந்தவர். அவர்களிருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னர், அவர்கள் நடத்தும் நிறுவனத்தின் கிளையை இந்தியாவில் துவங்கும் நோக்கத்துடன் வந்தனர். இந்தியாவில் ஒரிரு வருடம் வசிக்கும் எண்ணமிருந்தது. சுற்றுலாத்தலத்தையொட்டிய சிறு நகரத்தில் சொகுசு பங்களாவொன்றை வாடகைக்கு எடுத்திருந்தனர்.

    பங்களாவின் உரிமையாளர் அந்த வீட்டின் ஒரறையை மட்டும் பூட்டி வைத்திருந்தார். பழைய தட்டுமுட்டு சாமான்களும், பரம்பரை அறைகலன்களும் உள்ளேயிருந்தன. அறைகலன்களோடு குடியிருந்த பாம்புகளைப்பற்றி யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை. ஒரு நாள், சமையலறையில் தேநீர் தயாரிக்க வந்த ஜிம் கேஸ் அடுப்புக்கு கீழ் படுத்திருந்த பாம்பை பார்த்தார். தொலைக்காட்சியில் வரும் வனவிலங்குகள் பற்றிய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் பார்க்கும் ஜிம் படுத்திருந்த பாம்பைக்கண்டு “த்ரில்” ஆனார். ஒரு குச்சியின் உதவியுடன், லாவகமாக பாம்பை எடுத்து, கொல்லைப்புறத்தில் உள்ள மதிலுக்கு வெளியே இருந்த வயல் பகுதிக்குள் எரிந்தார். கிட்டத்தட்ட இரு நாளைக்கு ஒருமுறை பாம்பை எடுத்து வெளியே எறியும் பயிற்சி நடந்தது. சில நாட்களுக்கு பிறகு, படுக்கையறையின் தரையில் ஒரு பாம்பு காணப்பட்டது. அப்பொது, ஜிம்மின் மகன் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தான். எலிசபெத் தோட்டக்காரனை அழைத்து, அந்த பாம்பை அப்புறப்படுத்தினாள்.

    பாம்பின் வரவு பெருக ஆரம்பிக்கவே, ஜிம் வீட்டின் உரிமையாளரை அழைத்து பூட்டியிருந்த அறையை திறக்க வைத்தார். திறந்த அறைக்குள், அவர்கள் கண்ட காட்சி படு பயங்கரமாக இருந்ததாம்…..கிட்டத்தட்ட நாற்பது – ஐம்பது நாகங்கள் அந்த அறைக்குள் காணப்பட்டன. வீட்டுக்காரர் வாயடைத்துப்போனாராம்…..பல வருடங்களாக பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த அந்த அறையின் ஃப்ளோரிங்கை மாற்றும் பேச்சு வந்த போதெல்லாம், கஞ்சத்தனப்பட்டு தட்டிக்கழித்து வந்தது மிகப்பெரும் தவறுதானென ஒப்புக்கொண்டார்.

    ஜிம்மும் எலிசபெத்தும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்ததன் பிண்ணனி இதுதான். வேறு ஒரு பங்களா கிடைக்கும் வரை தங்கியிருப்பார்கள். ”வீட்டு சாமான்களை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். ”சாமான்களை வேறு வீடு வாடகைக்கு கிடைத்த பிறகே போய் எடுத்து வர வேண்டும்?” என்றார் ஜிம். ”சாமான்களை எடுக்கப்போகும் போதும் பாம்புகள் அங்கு இருக்குமா?” என்று கேட்கலாமென்று பார்த்தேன் ; கேட்கவில்லை.

    அன்று இரவு கனவில் மீண்டும் பாம்புகள் விஜயம் செய்யும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பாம்புக்கனவு வரவில்லை. நீண்டதொரு ரயிலில், பெயர் தெரியாத ஒர் இடத்திற்கு போவது போல் கனவு கண்டேன். கனவில் ரயில் பாம்புப்புற்றுகள் நிறைந்த ஒர் இடத்தை தாண்டி சென்றது. பாம்புகளெதுவும் புற்றிலிருந்து எட்டிப்பார்க்கவில்லை.

    ஒன்று அறிய ஆசை. நிஜம்மாகவே, பாம்புப்புற்றுகளில் பாம்புகள் வாழ்கின்றனவா?

    ஒரு குட்டிக்கதை

    புறநகரின் ஆள் அரவமில்லாத மாளிகையொன்றில் அரவங்கள் புகுந்து மொய்த்தன. மாளிகைவாசிகள் குலை நடுங்கி வெளியெறினர். பாம்பு பிடிக்கும் மனிதர்களை கூட்டி வந்தனர். பாம்புகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே நடந்த யுத்தத்தில் ஒவ்வொரு உயிரிழந்த பாம்புக்கும் ஒன்றன் பின் ஒன்றாக பாம்புகள் வந்து கொண்டேயிருந்தன. மனிதர்கள் சோர்வுற்று இறுதியில் அம்மாளிகையை பாம்புகளின் ஆலயமாக ஆக்கினர். ஆலயம் என்றாலும் பக்தர்களெல்லாரும் தூர நின்றே தரிசிப்பார்கள். பின்னர் புராணக்கதைகள் புனையப்பட்டு அவ்வாலயம் பெயரும் புகழும் பெற்றது.

    மாளிகையையொட்டி பூ விற்கும் கடைகள், அர்ச்சனை தட்டு விற்பவர்கள், பக்தர்களின் உடைமைகளை பாதுகாப்பவர்கள் என்று பலருக்கும் வயிறு நிறைந்தது. நெரிசல் அதிகமாகி, வெளிச்சம் அதிகமாகி… பாம்புகள் ஆலயத்தை விட்டு அகன்றன. ஆலயத்தின் வாசலில் சில பாம்புகள் உயிரை விட்டன. தூர நின்று வழிபடும் பக்தர்களோ பாம்புகள் இல்லாத ஆலயத்தில் பாம்புகள் இருப்பதாக எண்ணி பாம்புத்தெய்வங்களை வழிபடுகின்றனர்.

    பாம்பில்லாததோர் இடத்தை ஆலயமாக தொழுவது பகுத்தறிவன்று என்று சொல்லி ஒரு சாரார் கொடிபிடித்தனர். அவர்கள் குரலோங்க பாம்பாலயத்தை தொழுவது நின்றது. மாளிகை வாசிகளின் வழித்தோன்றல்கள் திரும்பி வந்து புனருத்தாரணம் செய்து வசிக்கத்துவங்கினர். வீட்டின் பின்னே ஒளிந்திருந்த குட்டிப்பாம்பை வளர்த்தனர். அங்கு இப்போது பாம்புகளின் சரணாலயம் இருக்கிறது. நூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் அங்கு வேலை செய்கின்றனர். இப்போது அந்த மாளிகையில் பாம்புகள் – மனிதர்கள் இருவரும் வாழ்கின்றனர்.

    +++++

    என்னை மிகவும் கவர்ந்த பாம்பு பற்றிய கவிதையொன்றை கீழே தருகின்றேன்.

    கவிதையின் தலைப்பு : பேட்டி***

    எழுதியவர் : எம் டி முத்துகுமாரசாமி

    கிடா விழுங்கும் மலைப்பாம்பல்ல
    நான் என அறிய
    வீசினால் தண்ணீர்
    அடித்தால் செத்தது
    தாண்டினால் பழுது
    கக்கினால் ரத்தினம்
    கடித்தால் விடம்
    சுருட்டினால்
    பைந்நாகப் பாய்
    விரித்தால்
    சிவலிங்கக் குடை
    தரிசித்தால்
    தன் வாலைத் தானே கவ்வுமிது.

    *** “நீர் அளைதல்”கவிதை தொகுதியிலிருந்து.

    கவிதை தொகுதியைதரவிறக்க : https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0BzHCwqQ3UxT7ZDNmYjQ1YzctNTk1Ni00MjMyLThkODktNGNmOTYyYjMyMGNi&hl=en_US