Blog

  • முன்னுரை

    மிகச்சிறு வயதில் 1982 -இல் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடெங்கும் பள்ளிகளில், கல்லூரிகளில், வானொலிகளில், பொதுவிடங்களில் விமரிசையாக கொண்டாடினார்கள். அந்த நாட்களில் தான் பாரதியின் கவிதைகள் எனக்கு அறிமுகமாயின. எனக்கும் கவிதை எழுதவேண்டுமென்ற ஆசை உருவானது. என் அப்பாவின், முழுதும் உபயோகிக்கப்படாத பழைய டைரிகளில் கிறுக்கத்தொடங்கினேன். கிறுக்கினவற்றை ஒளித்துத்தான் வைத்திருந்தேன். என் அம்மாவோ அல்லது என் சகோதரர்களோ, யாரோ கண்டுபிடித்து என் கிறுக்கல்களை படித்துவிட்டார்கள். பின்னர், சிலகாலம் என் குடும்பத்திற்குள் "கவிஞன்" என்ற பெயரோடு "புகழுடன்’ வலம் வந்தேன்.

    சில பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவைக்கலாமென்ற எண்ணத்துடன், கிறுக்கல்களை டைப்-செய்ய என் அப்பாவிடம் கொடுத்தேன். அப்பா பல மாதங்களாகியும் அவற்றை டைப்-அடித்து எனக்கு கொண்டு தரவில்லை. எப்போது கேட்டாலும் அலுவலக டைபிஸ்ட்-இடம் கொடுத்திருப்பதாகசொல்வார். அலுவலகத்தில் ஆங்கிலத்திலேயே கடிதங்கள், ஆவணங்கள் எல்லாம் டைப்-அடிக்கப்பட்டதனாலோ என்னமோ, டைபிஸ்ட்-டுக்கு தமிழ் தட்டச்சு வராது போலும் என்று நான் விட்டுவிட்டேன். என் கவிதை கிறுக்கல்களை இப்படித்தான் நான் இழந்தேன்.

    பின்னர் நான் 10 -ஆம் வகுப்புக்கு சென்றேன். நிறைய மதிப்பெண் எடுக்கவேண்டுமென்று எல்லாரும் விரும்பினார்கள். எனவே கொஞ்சகாலம் என் "குடும்பப்புலவர்" பதவியை துறக்க தீர்மானித்தேன். 10 -ம் வகுப்பில் பொதுத்தேர்வில் எத்தனை மதிப்பெண் எடுத்தேன் என்று நினைவில்லை. நான் இதுவரை வேலை செய்த எட்டு நிறுவனங்களிலும் யாரும் ஒருநாள் கூட என் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களைப்பற்றி கேட்டதேயில்லை.

    பத்தாம் வகுப்பு விடுமுறையின் போது என் ஒரு புதிய திசையில் பயணிக்க முடிவு செய்தேன். கவிதைகளை விடுத்து சிறுகதைகள் புனையும் எண்ணம் உதயமானது. கவிஞனாக இருந்தது போதும், என் சிறுகதை திறமையை இவ்வுலகுக்கு காட்ட முடிவு செய்தேன். ஒரு பக்ககதைகளாக இருபது கதைகள் எழுதியிருப்பேன். அதற்குள் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து, 11 -ம் வகுப்பு சேர வேண்டியதாகிவிட்டது. அதுவும் முதல்முறையாக ஆங்கில வழியில் படிக்கவேண்டிவந்தது. bowler எடுக்கிற ரன்கள் மாதிரி மார்க்குகள் ரொம்ப குறைச்ச்சலானது. ஆங்கில அறிவை ஏற்றுவது இன்றியமையாததானது. எனவே, கிரிக்கெட் கமெண்டரி கேட்டு எனது ஆங்கிலத்தை உயர்த்த அரும்பாடுபட்டேன். 12 -வது வரும்போது, எனது பள்ளியில் எனக்கு கருணைகாட்டி தமிழ்வழிக்கு மாறிக்கொள்ளும் சலுகை தந்தார்கள். Debit வரவு என்றானது. dividend பங்காதாயம் ஆனது. எந்த குழப்பமும் அடையாமல் 12 -ம் வகுப்பை முடித்தேன். (இல்லை, 12 ம் வகுப்பு மதிப்பெண்களும் ஞாபகத்தில் இல்லை.)

    கல்லூரி படிக்கும் காலங்களில், நான் எழுதிய சிறுகதைகளை படிக்கலாமென்று, வீடு முழுதும் சல்லடை போட்டு தேடியதில் நான் எழுதிய சிறுகதைகள் அடங்கிய நோட்புக் எங்கே போனதேன்றே தெரியவில்லை. அம்மாவைக்கேட்டேன். "தெரியலியேடா…செய்தித்தாள்களுடன் சேர்ந்து உன் நோட்புக்கும் எடைக்குப்போயிருக்குமோ?" என்ற சந்தேகத்தை எழுப்பினாள். அன்றுதான் ஒரு நல்ல எழுத்தாளனை தமிழிலக்கிய உலகம் இழந்தது.

    பிறகு வாழ்க்கை வெகு வேகமாக ஓட ஆரம்பித்தது. மூச்சுவிடுவதற்குள் எனக்கு 42 வயது ஆகிவிட்டது. எனக்கு திரும்பவும் இளைஞனாக மாற வேண்டுமென்ற எண்ணம் வந்தது. இளைஞனாவதற்கு முன்னர் நான் என்னசெய்துகொண்டிருந்தேன் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது நான் புலவனாகவும் எழுத்தாளனாகவும் திகழ்ந்த நாட்கள் நெஞ்சில் காட்சிகளாக ஓடின. அக்கணமே இந்த வலைதளத்தை துவங்கினேன். இப்போது மீண்டும் "கிறுக்க" தொடங்கியிருக்கிறேன். ஒரு வித்தியாசம், இப்போதெல்லாம் சிறுகதை மற்றும் கவிதை இரண்டையும் எழுதுகிறேன். இருபது வருடங்களுக்கு முன்னாலிருந்த முகமும் உடலும் எனக்கு வந்துவிடலாம். இன்னும் கொஞ்சநாட்களில் என் நண்பர்களுக்கு கூட நான் அடையாளம் தெரியாமல் போகக்கூடும்.

    இந்தமுறை எழுதுவதை நிறுத்தக்கூடாது. முன்னர் நான் எழுதியவற்றை எடைக்காரனுக்கு இழந்ததுபோல இம்முறை நடக்காது. ஏனென்றால், மடிக்கணினியை யாரும் எடைக்கு போடமாட்டார்கள்தானே !

  • மொட்டின் வாசம்

    ஒரு கோட்டை வீழ்ந்த
    வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கும்போது
    கைப்பற்றாத கோட்டைகளை
    எண்ணத்தொடங்கினான்
    எண்ணிக்கை முடியும் முன்னரே
    வீழ்ந்த கோட்டையை வேறு யாரோ
    எடுத்துக்கொண்டனர்
    மன்னன் இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறான்
    கம்பிகளையும் நாட்களையும்
    +++++
    வரப்போகும் மனைவியின்
    புகைப்பட உருவிற்கு
    முடிவிலா முத்தங்கள்
    நிச்சயதார்த்தம் முறிந்தது
    மனைவியாகப்போகிறவள்
    வேறுயாருக்கோ நிஜத்தில்
    முத்தம் கொடுத்தாளாம்.
    இவனுக்கு வேறு புகைப்படம் கிடைத்தது
    இவனின் முத்தங்கள் தொடர்கின்றன
    +++++
    இலக்கை முதலில் அடைந்துவிடும்
    வெறியில்
    பாதை தாண்டி ஓடிவிட்டான்
    பந்தயத்திலிருந்து விலக்கிவிட்டார்கள்
    அடுத்த பந்தயம் நடக்க
    நாட்கள் பிடிக்கும்
    நகத்தைக்கடித்து நகத்தைக்கடித்து
    காத்திருந்ததில்
    ஓடுவது மறந்துவிட்டது

  • பணமும் பிணமும்

    கழுத்துசுருக்கை தளர்த்திக்கொண்டே
    விண்ணப்பத்தை நிராகரித்தார்.
    விதிமுறையை தளர்த்த முடியாதாம்.
    கைப்பையின் உள்ளில்
    கட்டப்பட்டிருந்த பணக்கட்டை தளர்த்தியதில்
    விதிமுறைகள் தளர்ந்து நீர்த்துப்போயின.
    +++++
    எண்கள் சதி செய்து
    போதுமான அளவில் வராமல் போகவே
    சேரப்போன கல்லூரியில்
    எண்களை எடுத்துவாருங்கள் என்றார்கள்.
    உருவிலா எண்ணை
    சலவை நோட்டாய் உரு தந்து
    எடுத்துவந்தபோது
    கல்லூரிப்பூட்டுகள் களிப்படைந்து
    தானாகவே திறந்துகொண்டன.
    +++++
    கதவு என்பது அவளின்
    காரணப்பெயர்
    எந்த சட்டையிலும்
    முதலிரு பட்டன்களை தைத்துக்கொண்டதேயில்லை.
    முழுக்கதவு திறப்பது மட்டும்
    உண்டியலில் இவன் இடும்
    வெள்ளி தங்கக்காசுகளுக்காகத்தான்
    +++++
    “எல்லாம் கிடைச்சிடுச்சு
    காசு இருந்தாப்லே”
    என்று போதையில் பாடிக்கொண்டு
    படியில் சறுக்கியவன்
    கடைசிப்படியில் அமர்ந்திருந்த
    ராப்பிச்சைக்காரனின் மடியில் விழுந்து
    ரத்தம் கசிந்து இறந்தான்.
    +++++
    படியெங்கும் விழுந்திருந்த
    நோட்டுகள் ராப்பிச்சையின்
    கைக்குப்போன பின்னும்
    உயிர் வந்தபாடில்லை.
    இரு பாதசாரிகள்
    அவன் கையின், கழுத்தின்
    நகைகளை கழற்றி பணக்காரரானார்கள்.
    எனினும் மூச்சு திரும்பவில்லை.
    அவனின் ஆவி
    மேலூலகத்தில் பரிதவித்தது
    பூவுலகில் அனாதையாய் கிடக்கும்
    தன்னுடைய பூதவுடலை பார்த்து.
    +++++
    உயிரிழந்த பின்னால்
    அற்புதவிளக்குகூட
    அல்லாவுதீனை அடக்கம் செய்யாமலேயே
    வேறு எஜமானுக்கு
    சேவைசெய்ய சென்று விடுகின்றது.

  • வீடு திரும்புதல்

    தினமும் படுக்கையிலிருந்து எழும்ப தாமதமாகிறது. பல நாள், படுக்கையிலிருந்து நேராக குளியலரைக்குத்தாவி முகம் கழுவி, உடையணிந்து அலுவலகம் கிளம்பும் கட்டாயத்துக்குள்ளாக வேண்டியிருக்கிறது. இதில் மனைவி தரும் "பெட் காபி" கூட குடிக்க முடியாமல் போய்விடுகிறது.

    "குழந்தை அதிகாலை பள்ளிக்கு கிளம்பி செல்கிறது. அதற்கு என்றாவது "டாட்டா" சொல்லியிருக்கிறீர்களா? உங்களுக்கு உங்கள் ஆபிஸ் உங்கள் தூக்கம் – இவைதான் முக்கியம். குழந்தை பெற்றால் மட்டும் போதாது. அன்பு காட்டவும் தெரிந்திருக்க வேண்டும்." மனைவியிடமிருந்து பெறும் தினசரி அர்ச்சனை. அவள் "கிளம்பிசெல்கிறது" என்று அக்றினையில் சொன்னது என்னை இல்லை. என் மகள் நிவேதாவை. அன்பின் மிகுதியாக.

    நிவேதா ஆறு மணிக்கு விழித்து, தயாராகி, அவளுடைய அம்மாவுடன் தெரு இறுதிக்கு சென்று, பஸ்சுக்காக காத்திருந்து நல்ல பிள்ளையாக பள்ளிக்கு சென்றுவிடுவாள். நான் எட்டு மணிக்கு குறைவாக விழித்ததாக ஞாபகமே இல்லை. சீக்கிரம் எழுந்துவிடலாம் தான், ஆனால் அதற்கு சீக்கிரம் தூங்கிவிடுவது அவசியம்.மாலை எட்டு மணியாகிறது வீடு திரும்புவதற்கு.இரவு உணவு உட்கொண்டு, மனைவியுடன் சிறிது நேரம் பேசி, அவள் தூங்கும்போது மணி பத்தாகிவிடுகிறது. பிறகுதான், எனது படிக்கும் நேரம் தொடங்குகிறது.

    எனக்கு பிடித்த எழுத்தாளர்களின் நூல்களை, இரு பக்கம் படித்துவிட்டு, இரு மணிநேரம் யோசிப்பேன். சில வாக்கியங்கள் என்னுள் வெகு ஆழமாக ஊடுருவும். அதைப்பற்றியே நெடு நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருப்பேன். பிடித்த வரிகளைக்கோடிட்டு அதனை ஒரு வெற்றுக்காகிதத்தில் எழுதிப்பார்ப்பேன். அப்படி எழுதிப்பார்கையில் வேறு ஏதாவது அர்த்தம் பிடிபடுகிறதா என்று பார்ப்பேன்.
    தூங்குவதற்கு முன்னாள் ஒரு இலக்கியப்புத்தகத்தை படிப்பதில் உபயோகம் என்னவென்றால் படித்த வரிகளை மனதில் அமைதியுடன் அசை போடலாம்.

    பகல் நேரம் முழுக்க அலுவல்களில் கழிந்துவிடுவதால், மனம் ஏதாவது ஒன்றில் உழன்றவண்ணம் இருக்கிறது. இரவின் அமைதியில், நிசப்தத்தின் சுகத்தில் சுந்தர ராமசாமியுடனோ புதுமைப்பித்தனுடனோ எண்ணவுலகத்தில் சஞ்சரிப்பது மனதை குளுமைப்படுத்துவது போல் இருக்கிறது. (இந்த இரு புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பெயர்களை வெறுமனே இங்கு எழுதவில்லை. இவர்களில் ஒருவர் சற்று நேரத்தில் மேற்கோள் காட்டபடுவார்.) ஆனால் சிறு பிரச்னை. நான் படுக்கையறை விளக்கை உடனே அணைக்காமல், வெகுநேரம் விழித்திருப்பதால், ஒரு சுந்தரியுடனோ அல்லது புவனேஸ்வரியுடனோ குறுஞ்செய்தி பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக என் மனைவி எண்ணிவிடுகிறாள். அதிர்ஷ்டவசமாக, அவள் தூக்கத்தில் இருப்பதால், கோபம் கொள்வது பகல் வரும்வரை தள்ளிவைத்துவிடுகிறாள். இப்போதெல்லாம் கைத்தொலைபேசியை ஹாலிலேயே வைத்துவிட்டுத்தான் படுக்கையறைக்குப்போகிறேன். ஒரு சண்டைக்கான சந்தர்ப்பம் மிச்சம் பாருங்கள்.

    +++++

    ஒரு நாளிரவு சுந்தர.ராமசாமியின் "அகம்" என்ற சிறுகதை படித்தேன். ஜானு என்ற சிறுமியை பற்றியது.

    சிறுவயதில், எனக்கு "டீஸல்" நெடி அலர்ஜி. பேருந்தில் போகும்போதோ பெட்ரோல் விற்கும் இடங்களில் நிற்கும்போதோ ஒரு மாதிரியான அவஸ்தை உண்டாகும். பேருந்தில் என் பக்கத்தில் உட்கார்ந்தவர்கள் அசிரத்தையாய் இருந்தால் தொப்பலாக நனைந்துபோவார்கள்.

    “அகம்” சிறுகதையை படிக்கும்போது அதே போன்றதோர் அவஸ்தையால் வயிறு பிசைவது போன்ற சங்கடமேற்பட்டது.

    ஜானு பள்ளி போகும் சிறுமி. அம்மாவுடன் இருக்கிறாள். அப்பா வேலை சம்பந்தமாக வேறெங்கோ இருக்கிறார். ஜானுவுக்கு அப்பாமேல் அளவு கடந்த பாசம். ஆனால், அப்பா வருடத்திற்கு ஒரு முறைதான் வருவார். அவள் அம்மா மருத்துவர் ஒருவருடன் "நெருக்கமாக" இருக்கிறாள். முதலில் ஜானுவுக்கு அந்த மருத்துவர் "மாமா"வை பிடித்துதான் இருந்தது. நாள் போகப்போக ஒருவெறுப்பு. பிக்னிக் போனால், அம்மாவும் டாக்டரும் ஜானுவை கார்-இல் தனியே உட்காரவைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். மருத்துவர் முன்னால் அம்மா ஜானுவிடம் அகம்பாவமாக நடந்துகொள்ளுகிறாள். மருத்துவரை ஜானு புறக்கணித்தாலும் அம்மாவிற்கு பிடிப்பதில்லை. ஒரு முறை ஜானு-வுக்கு காய்ச்சல் வரும்போது மூர்க்கத்தனமாக டாக்டரிடம் நடந்து ஊசி போடவிடாமல் செய்கிறாள். அப்போதுதான், அம்மாவிற்கு கொஞ்சம் உரைக்கிறது. மருத்துவரை இனிமேல் வரவேண்டாம் என்று சொல்ல, மருத்துவர் கோபமாகி "நீ என்ன உத்தமியா?" என்று மிரட்டி, அம்மாவை அவளுடைய அறைக்கு வலுக்கட்டாயமாக இழுத்து செல்கிறார். இதைக்கண்ட ஜானு, உணர்ச்சிவேகத்தில், டாக்டரின் காருக்குள் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கேன்-ஐ திறந்து ஊற்றி காரை எரிக்கப்போக, தீ வீட்டுக்குள்ளும் பரவி. மூவரும் கரிந்து இறந்துபோகிறார்கள்.

    கதையை இப்படி முடித்து விட்டாரே என்று எழுத்தாளரின் மேல் வந்த கோபத்தை விட, பொருளீட்ட வெகுதூரம் போய், மனைவி மற்றும் மகளின் மனநிலையையே புரிந்துகொள்ளாத அந்த முகம் தெரியாத பாத்திரத்தின் மேல் அதிககோபம் வந்தது.

    +++++

    நிவேதா தானே தனக்குள் பேசிக்கொண்டு ஓரங்கநாடகம் போன்று எதையோ அவளுடைய படிக்கும் அறையில் அரங்கேற்றிகொண்டிருந்தாள். அதை கதவுமறைவில் ஒளிந்துகொண்டு இன்னும் கொஞ்ச நேரம் ரசித்திருக்க வேண்டும். என்னை பார்த்த மாத்திரத்தில் ஓரங்கநாடகம் நின்றுபோனது. அரைகுறையாக உடைந்த முன்பல்லைகாட்டி புன்னகை செய்தாள்.
    "என்னம்மா செல்லம்…பண்ணிட்டிருக்கே?"
    "சும்மா" – கன்னம் குழி விழுகிறதோ லேசாக? நான் ஏன் இதை முன்னரே கண்டிருக்கவில்லை?
    "இந்த தடவை செல்லத்துக்கு பொறந்த நாளுக்கு என்ன வேணும்? "
    இதற்குள் மனைவி எங்கள் உரையாடலில் புகுந்தாள். "அடேங்கப்பா…என்ன ஆச்சர்யம்…அப்பாவுக்கு நிவேதா செல்லத்தோட பர்த்டே ஞாபகம் இருக்கே? – என் கையில் கைதொலைபேசியோ அல்லது புத்தகமோ இல்லையே!

    அப்புறம் எங்கள் உரையாடல் வேறு திசையில் சென்று விட்டது. லௌகீகமாக. நிவேதாவின் கன்னக்குழியை பற்றி மனைவியிடம் பேச மறந்தேபோனேன்.

    நிவேதாவின் பிறந்த நாளன்று வைகறை துயிலெழுந்து வாழ்த்து சொல்லவேண்டுமென்ற என் திட்டம் தவிடுபொடியானது. எட்டு மணிக்கு தான் எழுந்தேன். கொத்தவரங்காயை கத்தியால் நறுக்கிகொண்டிருந்த மனைவி சுப்ரபாதம் பாடாரம்பித்தாள். வெங்கடேச பெருமாளுக்கு ஏற்கனவே பாடிவிட்டபடியால், இரண்டாவது தடவை எனக்கு, அதுவும் தமிழில்.

    "குழந்தையோட பிறந்தநாள்னு பேரு…உங்களுக்கே கார்த்தாலே எழுந்து விஷ் பண்ணனும்னு கூட தோணலை.. ஹும் என்ன சொல்றது"

    +++++

    அலுவலகம் செல்லாமல் நேராக ஒரு அன்பளிப்புகள் வாங்கும் கடைக்கு சென்றேன். பொம்மைகள், விளையாட்டு பொருள்கள், எழுது பொருட்கள், கார்ட்டூன் குறுந்தட்டுகள், என்று எல்லாவற்றையும் பார்த்தேன். எதை வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில், கடைக்குள்ளின் ஓர் ஓரத்தில், ஒரு மேசை போட்டு அதற்கு பின்னால் நின்றிருந்த பெண்ணை பார்த்தேன். இல்லை அவள் புன்னகைக்கும்போது கன்னகுழி தோன்றவில்லை. சர்வேதேச கருணை இல்லங்களுக்கு நிதியளிக்கும் ஒரு நிறுவனத்தின் பெயரிட்ட பலகை மேசையில் இருந்தது. அணுகி விவரங்களை விசாரித்ததில், விசித்திரமான ஒரு திட்டத்தை பற்றி சொன்னாள். ஏதாவது அன்பளிப்பு வாங்க வருபவர்கள், இந்த நிதி நிறுவனத்துக்கு நன்கொடையளித்தால் அவர்கள் வாங்கும் அன்பளிப்பில் 50 % கழிவு அளிக்கப்படும். அந்த கடைக்காரர்களுக்கு இது எந்த விதத்தில் லாபமென்று எனக்கு புரியவில்லை. நான் நன்கொடை எதுவும் அளிக்கவில்லை. நிவேதாவுக்கு ஒரு பார்பி பொம்மையை வாங்கினேன்.

    அலுவலகத்துக்கு அதை எடுத்துப்போனேன். சக ஊழியர்கள், "என்னப்பா யாருக்கு பரிசு வாங்கிகிட்டு போறீங்க? கேர்ள்பிரெண்ட்-க்கா?" என்று கேலி பண்ணினார்கள். வண்ணக்காகிதம் கொண்டு பாக் செய்யப்பட்ட அந்த பார்பி டாலை, பேருந்தில் கொண்டுபோனால் வசதியாக இருக்காது. சக ஊழியர்கள் வாயினால் சொன்னதை, சக பயணிகள் மனதிலேயே நினத்துக்கொள்ளக்கூடும். எனவே, ஆட்டோ-வில் வீட்டுக்கு போகலாமென்று முடிவெடுத்தேன்.

    +++++

    பரிசுப்பொருள் வீட்டை அடையும் முன்னரே தொலைந்துபோனது. எவ்வளவு யோசித்தும், பார்பி பொம்மையை எப்படி இழந்தோமென்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. காலையில் வாங்கினேன் அதை அலுவலகம் எடுத்துவந்தேன். நண்பர்கள் அதைப்பற்றி சிலாகித்தபோது கூட, என் மேசையின் பக்கவாட்டிலேயே கிடந்தது. சாப்பாட்டு இடைவேளை முடிந்து திரும்பியபோதும் பொம்மை பத்திரமாகவே இருந்தது. ஆட்டோவில் ஏறும்போது…..? அதை எடுத்துக்கொண்டோமா?…ஆட்டோ பழுதுபட்டு பாதியிலேயே நின்றதே…அப்போது அந்த பொம்மை கையில் இருந்ததா? மழை தூற்ற ஆரம்பித்தபோது, அதில் நனைந்து கொண்டிருந்தபோது….ஹும் இல்லை…அப்போது பொம்மை என் கையில் இல்லை…வந்த பேருந்தில் முட்டியடித்து ஏறியபோது…இல்லை…எனவே, ஆட்டோ-வில் இருந்திருக்கவேண்டும்…அல்லது…நாளை அலுவலகம் போய் தான் பார்க்கவேண்டும்… பஸ் ஸ்டாப்-இலிருந்து ஆமை நடை போட்டு வீடு வந்தேன்.

    "என்னங்க இவ்வளவு லேட்டு…இத்தனை நேரம் நிவேதா உங்களுக்காகத்தான் முழிச்சிண்டிருந்தாள்..அப்பா வாங்கி குடுத்த கிப்டு அவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது…அதுவும் சர்ப்ரைஸ்-ஆ உங்க ஆபிஸ்பையன் மூலமா சாயந்திரம் வீட்டுக்கு அனுப்பிவச்சது . அது எனக்கு ரொம்ப பிடிசிருந்தது"

    +++++

    படுக்கைக்கு வந்தேன்…இன்று புத்தகம் படிக்கலாமா நேற்று படித்துக்கொண்டிருந்த சிறுகதை தொகுதியில் இன்னும் ஒரு கதை மிச்சமிருந்தது.

    தலையணைக்கு கீழே ஒரு உறை இருந்தது…அதை எடுத்தேன்…

    "நிவேதா இன்னிக்கி ஸ்கூலுக்கு தன்னோட பிரெண்ட்ஸ்-க்கு குடுக்க டாபி எடுத்துக்கிட்டுப்போனா..அப்போ அவ கிளாஸ் டீச்சர் நிவேதா கிட்ட இந்த டாபி பாக்கெட்டை ஒரு கருணையில்லத்துக்கு கொடுத்தா…உனக்கு பரிசு கூப்பன் கிடைக்கும். அத வச்சி உனக்கு புடிச்சது ஏதாவது வாங்கிக்கலாம்னு சொல்லியிருக்காங்க …இவ உடனே டாபிஸ் எல்லாத்தையும் டொனேட் பண்ணிட்டா…அப்பாக்கு இத சர்ப்பரைஸ்-ஆ குடுக்கணும்னு கிப்ட் கூப்பன்-அ உங்க தலகாணிக்கு கீழே வச்சிட்டு தூங்கிட்டா" – பெருமையும் மகிழ்ச்சியும் பொங்கிய குரலில் மனைவி பேசினாள்…

    அன்று இரவு படுக்கையறையின் லைட் சீக்கிரமே அணைந்துவிட்டது.

  • ஓவியப்பெண்

    நன்னம்பிக்கை
    நெடுநாள் காத்திருப்பு முடிவடையும்.
    ஓவியப்பெண் முகம் திரும்பாமலேயே
    வேறு அருங்காட்சியகத்துக்கு போய்விடுவாள்.
    வீட்டுக்கு இன்று திரும்பிப்போய்
    "தண்ணி"யடிக்கவேண்டும்

    கஞ்சத்தனம்
    ஓவியப்பெண் உடையணியாமாலேயே
    நிதர்சனமாய் பிரசன்னமானாள்.
    சட்டகத்துக்கு நேர்கீழே நின்று பார்த்துக்கொண்டிருந்தவனை
    காபி பருக அழைத்தாள்.
    "காபி சரி. அப்புறம் உடை வாங்கித்தா என்று கேட்காதே"

    சுயநலம்
    சட்டகத்துள் நிர்வாணமான முதுகைக்காட்டி
    சொரிந்து விடுமாறு கேட்டுக்கொண்ட
    ஓவியப்பெண்ணை யாரும் செவிமடுக்கவில்லை !
    "பாவிகள்…என்னை வரைந்த ஓவியனின் பிரஷை
    ஏலத்தில் போட்டுவிட்டார்கள்"

    ஜீவகாருண்யம்
    ஓவியன் என்னை சேர்த்து
    ஓர் எறும்பையும் வரைந்துவிட்டான்.
    சாய்வாக குப்புற படுக்கவைத்து
    கொஞ்சம் எனக்கு வசதி பண்ணித்தந்த ஓவியன்
    பாவம், எறும்பை சுவரில் ஏற வைத்துவிட்டான்

  • காத்திருத்தல் எனும் நாடகம்

    எதிர்பார்க்கின்ற நிகழ்வுக்கும் நிகழ்காலத்திற்கும் உள்ள இடைவெளி,
    காலவோட்டத்துடன் எதிர்பார்ப்பு சேரும்போது உருவாகும் உள்ளுணர்ச்சி
    காத்திருத்தல் !
    காத்திருத்தல் அவஸ்தை
    காத்திருத்தல் சுகம்

    +++++

    எதிர்பார்ப்பு மறைந்தால் காத்திருப்பும் இறந்துபோகும்.
    காத்திருத்தல் இல்லாவிடில்
    காலவோட்டத்தின் வெறுமை பூதாகரமாய் காட்சியளிக்கும்.
    காலவோட்டத்தின் உணர்வு கலந்த அர்த்தப்படுத்தலே எதிர்பார்ப்பு

    +++++

    எதிர்பார்ப்பு சுயநல வண்ணம் கொண்டு
    நாடகம் போல முன்னரே எழுதப்பட்ட
    ஒவ்வொரு காட்சியும் நிகழ்வாகவேண்டுமென்று அடம்பிடிக்கும்.
    எதிர்பார்ப்பு லட்சிய வண்ணம் பூண்டு
    காட்சிகள் எப்படி நகர்ந்தாலும் கவலையுறாமல்
    உச்சக்காட்சியின் சுபத்தையே கனவு காணும்.

    +++++

    எதிர்பார்ப்பே இல்லையென்றாலும் நிகழ்வுகள் இருக்கும்.
    நிகழ்வுகள் நாடகக்காட்சிகளின் ஒழுங்குடன் நகரா.
    உச்சக்காட்சி என்ற ஒன்றுமிராது.
    முடிவிலா நாடகமாய் நிகழ்வுகள்.
    காட்சியின் கதையின் அர்த்தங்களை
    நடிகர்களே கற்பித்துக்கொள்வார்கள்.

    அர்த்தம் கற்பித்தலில் எதிர்பார்ப்புகள் உருவாகின்றன.
    எதிர்பார்ப்புகள் உச்சக்காட்சியை அடையாளம் காட்டும்.

    +++++

    களைத்துப்போன நடிகர்கள்
    கிளைக்கதையின் முடிவையே
    காவிய முடிவென்று அறிவித்துவிட்டு
    இளைப்பாற போய்விடுவார்கள்.

  • பேரம்

    ஆங்கிலத்தில் லவ்-ஹேட் உறவு என்று சொல்வார்கள். அதாவது, ஒருவருடன் தினமும் நெருங்கிய தொடர்புடன் இயங்க
    வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, அந்த நபருடன் முழுக்க ஒத்துப்போகாமல் அதே சமயம் அவரை முழுக்க தள்ளமுடியாமல் இருக்கும் ஒரு நிலை. உதாரணமாக, எனது பாஸ்-ஐ எடுத்துக்கொள்ளலாம். அவரை எனக்கு பிடிப்பதில்லை. ஆனால், அதை செயலிலோ சொல்லிலோ காட்டமுடியாது. பாடி-லேங்வெஜ் என்று சொல்லப்படும், உடல் மொழி-யை வைத்து பிரியமின்மையை தெரியப்படுத்தினாலோ அவருக்கு உடன் பிடிபட்டுவிடுகிறது. முன்னை விட மூர்க்கமாக தன் முட்டாள்தனமான உரையாடல்களை தொடர்வார். பலமுறை, அவர் பேச்சை கேட்டபடியே, கைத்தொலைபேசியில் குறுஞ்செய்தியொன்றை உடன் வேலை செய்யும் உத்தியோகஸ்தருக்கு அனுப்பி, இன்டர்-காம் மூலமாக பேசச்சொல்லவேண்டியிருக்கிறது. "சார், ___ (என் பெயர்) உங்களுடன் இருக்கிறாரா?…போலந்திலிருந்து வாடிக்கையாளரின் அழைப்பு வந்தது…ஏதோ அவசரமாக பேசவேண்டுமாம்.."..உடனே "போலந்து வாடிக்கையாளருக்கு" போன் செய்ய அனுப்பப்பட்டு விடுவேன்.

    +++++

    என்னுடைய பாஸ்-சுடைய பாஸ் ஒருவர் இருக்கிறார். அவரை எக்ஸ் என்று அழைப்போம். எக்ஸ் என்னுடைய பாஸ்-சிடம் "என்ன புதிதாக வியாபாரம் கொண்டு வந்தீர்கள்?" என்று கேட்டால், "___ (என் பெயர்) னைத்தான் கேட்கவேண்டும்?" என்று பதில் வரும்.
    "S நிறுவனத்திடமிருந்து ஒரு பேமென்ட் வராமல் இருந்ததே?"
    "__ (என் பெயர்) பாலோ பண்ணிட்டிருந்தான்"
    "அடுத்த மூணு மாச விற்பனை பட்ஜெட்படி போகுமா?"
    "போகும்-னு __ (என் பெயர்) சொன்னான்"

    மேற்கண்ட உரையாடலை படித்தால், எக்ஸ் நேராக என்னிடம் பேசினால் துல்லியமான தகவல் கிட்டுவதுடன், நேரமும் மிச்சமாகுமே என்று தோன்றுகிறதா? எனக்கும் பலமுறை தோன்றியது.

    ஒருமுறை நான், பாஸ் மற்றும் எக்ஸ் தில்லியிலிருந்து வந்த ஒரு வாடிக்கையாளருக்கு விருந்தளித்தோம். அந்த விருந்திற்கு வாடிக்கையாளர் தன்னுடைய ஒன்று விட்ட பெரியப்பாவின் மாப்பிள்ளையும் அழைத்து வந்திருந்தார். விருந்திற்கு வந்த மாப்பிள்ளை சார் தான் புதிதாக துவக்க இருக்கும் நேந்திரங்காய் வறுவல் வியாபாரத்தைப்பற்றி பிரஸ்தாபித்து அதற்க்கான சில ஆலோசனைகளை பெறும் நோக்கில் எக்சிடம் சில கேள்விகளை எழுப்பினான்.
    "இதற்க்கு நான் பதிலளிப்பதைவிட ___ (பாஸ்-சின் பெயர்) பதிலளித்தால் ரொம்ப உபயோகமாக இருக்கும். சந்தையியல் துறையில் வல்லுனராக எங்கள் தொழிலில் மதிக்கப்படுபவர் அவர்" என்றவாறே ஐஸ்-ஐ எடுத்து தன்னுடைய கோப்பைக்குள் போட்டார். அந்த ஐஸ் தவறி பாஸ்-சின் தட்டில் விழுந்தது.
    பாஸ்-சின் பெருமிதத்துடன் புன்னகைத்தார் – அது அவர் தட்டில் விழுந்த ஐஸ்-சுக்கா அல்லது எக்ஸ் தந்த உயர்வு நவிற்சி அறிமுகத்துக்கா என்பது தெரியவில்லை.
    மாப்பிள்ளை சார்-இடம் பேச ஆரம்பித்தார் பாஸ். "ஒன்று செய்யுங்கள்…நாளை என்னை என் அலுவலகத்தில் வந்து சந்தியுங்கள். நேந்திரங்காய் வறுவல் மார்கெட்டை பற்றியும் சமீபத்திய போக்குகள் பற்றியும் சில தெளிவுகளை எங்களுக்கு அளிக்கிறேன். அதை வைத்து உங்களுடைய திட்டத்தை நீங்கள் மேலும் துல்லியமாக செதுக்கிக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த திசு காகிதங்களை எடுத்து வாயை முடிக்கொண்டு தன் உதட்டை சுத்தப்படுத்திக்கொண்டார்.

    அடுத்த நாள், மாப்பிள்ளை சார் என்னிடம் அனுப்பி வைக்கப்பட்டார். "பாஸ்-சை சந்தித்தீர்களா?" என்று கேட்டேன்.
    "ஆம், சந்தித்தேன். அவர் உங்களைப்பற்றி உயர்வாகச்சொன்னார். உங்களுக்கு சிற்றுண்டிஉணவுபொருட்களை விற்பதில் நல்ல அனுபவம் உண்டாமே?"
    அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வெறுமனே விழித்தேன். கிட்டத்தட்ட அரை மணிநேர உரையாடலுக்கு பிறகு மாப்பிள்ளை சார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. "நான் கிளம்புகிறேன்" என்றார். எங்கள் நிறுவனத்தின் வியாபாரக்குறி பொறித்த தொப்பியை மாப்பிள்ளை சாருக்கு அன்பளிப்பாக கொடுத்தேன். "வெளியே வெயில் அதிகமாக இருக்கிறது. இதனை இங்கேயே அணிந்துகொண்டு வெளியே செல்கிறேன்" என்று சொல்லி தொப்பியை போட்டுக்கொண்டார்.

    பாஸ் புதுமை மிகு வழிகளில் அதிர்ச்சி கொடுக்கப்போகிறார் என்பதே தெரியாவண்ணம் பல உத்திகளை கையாள்வதில் விற்பன்னர். முக்கியமாக, நகைச்சுவையை கூட கோபஉருவில் அளிப்பார். அவருக்கு கோபம் வரும்போது நகைச்சுவை பண்ணுகிறாரோ என்று தோன்றும்.

    வியாபார விஷயங்களில் முடிவேடுக்காமை என்ற குணத்தை கோபம், வாதம் போன்றவற்றால் அபாரமாக மறைத்து விடுவார். அவருடைய சினம் கலந்த, இயலாமை தோய்ந்த திறனாய்வுகளை கேட்கும்போது பொறுமை இழக்காமல் இருப்பது கடினம். "நாமே ஏதாவது பார்த்துக்கொள்ளலாம்" என்று பலமுறை அவரை முடிவேடுக்கவைக்கும் இக்கட்டிலிருந்து நானே காப்பாற்றிவிடுவேன், எங்கெல்லாம் அவரே முடிவெடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது, நிறைய பேச்சுகேட்கும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டே அணுக வேண்டியிருக்கும்.

    +++++
    நகமும் சதையுமாய் கூடிக்குலாவிக்கொண்டிருந்த பாஸ்-சுக்கும் எக்ஸ்-க்கும் நடுவே சில இடைவெளிகள் விழுந்தன. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் எக்ஸ்-சின் அறையே கதியாகக்கிடந்த பாஸ், இப்போதெல்லாம் தனது அறையிலேயே கழிக்கவேண்டியதாயிற்று.

    இன்டெர்-காமில் அன்புடன் விளித்து என்னை கூப்பிட்டார். தேனும் பாலுமாய் வார்த்தைகள் வெளிவந்தன.

    "உனக்கு ஞாபகம் இருக்கும்…உன்னை நானே நேர்முகம் செய்து வேலைக்கு நியமனம் செய்தேன். நான் வேறுவேலைக்கு போய்விட்டால், அங்கேயும் நான் உன்னை அழைத்துக்கொண்டு போகமுடியும்"

    "சார் என்ன ஆயிற்று? வேலையை விட்டு நீங்குவதைப்பற்றி இப்போது ஏன் பேசுகிறீர்கள்?"

    "இல்லை…இவ்விடம் நமக்கு ஏற்றதில்லை.." – விரக்தி பொங்கியது அவர் பேச்சில். கடைசி வரை ஏனிந்த விரக்தி என்பது எனக்கு பிடிபடவில்லை. கொஞ்சம்கூட அர்த்தமேற்படுத்தாத வார்த்தைகளை மணிக்கணக்காக பேசுவதில்தான் அவர் வித்தகர் ஆயிற்றே?

    +++++

    ஒரு வாரத்துக்கு பிறகு பாஸ் – எக்ஸ் உறவு சுமுகமாகிவிட்டது. முன்னர்போல், 3 மணி சீரியலை எக்ஸ்’ன் அறையின் சுவரில் பொருத்தப்பட்ட டி வி-யிலேயே மீண்டும் இருவரும் பார்க்கத்தொடங்கினார்கள்.

    +++++

    ஊதியஉயர்வுக்காலம் வந்தது. ஊழியர்களின் நெஞ்சில் எதிர்பார்ப்புகள். எனக்கும்தான். கழிந்த வருடத்தில் என்னுடைய செயல்திறனாலும் உழைப்பாலும் நல்ல விற்பனை நிகழ்ந்திருந்தது என்று நான் நம்பினேன். ஒருநாள் பாஸ் எல்லாருக்கும் மின்னஞ்சல் அனுப்பிஇருந்தார். அந்த "நல்ல"செய்தியை எல்லா ஊழியரிடமும் தனிப்பட்டமுறையில் பேசி தகுந்த விளக்கத்துடன் அளித்திருக்கவேண்டுமென்று பாஸ்-சோ எக்ஸ்-சோ நினைக்கவில்லை. செய்தி இதுதான் : "போதுமான லாபமின்மையாலும், அண்மையான எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள தொழில் விரிவாக்கங்களுக்கு தேவையான ரொக்கநிலமையை பராமரிக்கும் பொருட்டும் பணியாளர்களின் ஊதியத்திருத்தங்கள் ஆறு மாதங்களுக்கு தள்ளிவைக்கப்படுகின்றன."

    +++++

    பாஸ் மீண்டும் வேலை மாறுவது பற்றி பேசவில்லை. நிறுவனம் பாஸ்-க்கு புதிய சொகுசு கார் வழங்கியிருந்தது. பாஸ்-சும் எக்ஸ்-சும் தினமும் சேர்ந்தே அலுவலகம் வந்தார்கள். பாஸ் தன்னுடைய புது கார்-இல் எக்ஸ்-சை தினமும் கூட்டிவந்தார். நிறுவனம் பங்குதாரர்களுக்கு 25 % பங்காதாயம் அறிவித்தது. ஊழியர்கள் ஆறு மாதமுடிவுக்காக காத்திருந்தார்கள்.

    +++++

    நான் 6 மாதம் காத்திருக்கவில்லை. வேறு ஒரு நிறுவனம் என்னை வேலையில் சேரும்படி அழைத்தனர். ஆனால் நான் கேட்ட சம்பளத்தை தர ஏனோ தயங்கினர். புது நிறுவனம் யோசித்துக்கொண்டிருந்த வேளையிலேயே நான் கையிலிருந்த வேலையை ராஜினாமா செய்தேன். பாஸ் என்னை தடுத்து நிறுத்த சாம, தான, பேத தண்டம் எல்லாவற்றையும் பயன்படுத்தினார். கடைசியாக, எனக்கு மட்டும் சிறப்பு ஊதியஉயர்வு கடிதத்தை கொடுத்து, ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டினார். நான் நாளை சொல்லுகிறேன் என்று அக்கடிதத்தின் நகலை மட்டும் எடுத்துக்கொண்டேன். நான் கேட்ட சம்பளத்தை தர புது நிறுவனம் ஒத்துக்கொண்டது.

    +++++

    அடுத்த வருட ஊதியஉயர்வு காலம் வரை கூட பாஸ் வேலையில் பிழைக்கவில்லை என்ற செய்தி நண்பர்கள் மூலம் என்னை எட்டியது. பாவம், எக்ஸ்! அவரே கார்-ஐ ஒட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு வரவேண்டும்.

  • பரிமாணம்

    இந்த ஞாயிறும் ரவியின் ஏமாற்றம் தொடர்ந்தவண்ணம் இருந்தது. சில பேருக்கு மட்டும் எண்ணியபடி எல்லாம் எப்படி நிறைவேறுகிறது? அவனை பல நாட்களாக பாதித்து வரும் கேள்வி இதுதான். புதிதாக வெளியாகி இருந்த ஒரு திரைப்படத்தைப்பற்றி எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அனேகமாக, அவனது வகுப்பில் எல்லா மாணவர்களும் அந்த படத்தை பார்த்துவிட்டார்கள். படத்தில் வரும் கதாநாயகனின் நடிப்பைபற்றியும், அப்படத்தில் அறிமுகமான அழகான முகம் கொண்ட அந்த நடிகையை பற்றியும் சக மாணவர்கள் பேச்சை கேட்டு அலுத்துப்போய்விட்டது. நாலு வாரங்களாக எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை முதல் நண்பகல் வரை அப்பாவிடம் அனுமதி கேட்டு இவன் சலித்து விட்டான். ஆனால், அந்த சினிமா-வுக்குபபோக ரவியை அனுமதிக்கக்கூடாது என்ற நிலை அவனது அப்பாவுக்கு கொஞ்சமும் திகட்டவில்லை. பக்கத்து வீட்டு சந்துரு அதே திரைப்படத்தை இரண்டாவது முறையாக கூட பார்த்துவிட்டான். ஊரிலிருந்து வந்திருந்த தன்னுடைய மாமாவுடன் சென்று வந்திருக்கிறான்.

    அப்பாவின் தாராளவாதமின்மை எங்கிருந்து ஜனித்தது? ஏன் இந்த குருரமான பிடிவாதம்? 2 ரூபாய் கூட மகனின் சந்தோஷத்துக்காக செலவழிக்க முடியாதா? அம்மா-விடம் புலம்பி ஒரு பயனும் இல்லை. "நான் என்னடா செய்வது? அப்பா கொடுக்கமாட்டேன் என்கிறார். நான் என்ன சம்பாதிக்கிறேனா? திருடியா தரமுடியும்" என்பது மாதிரியான கழிவிரக்கம் நிரம்பிய வசனங்களையே கேட்கவேண்டிவரும்.

    +++++

    25 வருடங்களுக்குப்பிறகே அவன் அந்த படத்தை காண முடிந்தது. ஒரு புதன் கிழமை மதியம் அந்தப்படம் தொலைக்காட்சியில் வந்தது. காய்ச்சல் என்று அலுவலகத்திற்கு போகாமல் இருந்ததால், அந்தப்படத்தை காணும் சந்தர்ப்பம் கிட்டியது. அந்த படத்தை காணும்பொழுதுதான் மேற்கண்ட பிளாஷ்பாக் அவன் நெஞ்சில் ஓடியது,

    அந்தப்படத்தில் அறிமுகமான நடிகையில் சமீப புகைப்படத்தை ஒரு பத்திரிக்கையில் போட்டிருந்தார்கள். இளமையழகு உருமாறி வசீகரமான பாட்டி உரு வந்திருந்தது. வயதான காலத்தில் வசீகரமான உருவம் என்பது சிலருக்கே வாய்க்கிறது. ரவியின் அம்மா, அப்பா இருவருமே மிக வயதானவர்களாக ஆகிவிட்டார்கள். சகோதரனுடன் மும்பையில் வசிக்கிறார்கள்.

    இளவயதின் அழகு இயல்பாக அமைகிறது. பருவத்தில் ஆணாகட்டும், பெண்ணாகட்டும் எழிலுடன் தெரிகிறார்கள். வருடங்கள் நகரத்துவங்க, கவர்ச்சி விலக ஆரம்பிக்கிறது. ஆனால் வயதான பிறகு, வணங்கத்தக்க ஒரு வசீகரத்தை சில பேரால் அடையமுடிகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கடைசிகால புகைப்படங்களில் எப்படி இருந்தார்! அவ்வசீகரம் எங்கிருந்து வருகிறது என்பதற்கு ரவியிடம் ஒரு தியரி இருந்தது. உள்ளிருக்கும் அமைதியும் திருப்தியுமே வசீகரத்தை வயதான காலங்களில் தருகிறது என்று அவன் எண்ணினான். இந்த எண்ணம், அறிவியல்பூர்வமானதா என்பது பற்றி அவன் அதிகம் யோசித்ததில்லை. எல்லா எண்ணங்களும், அபிப்ராயங்களும் அறிவியல்விதிகளுக்குள் அடங்கவேண்டுமென்ற பிடிவாதமும் அவனிடத்தில் இல்லை.

    +++++

    ஐந்தாறு வருடங்களாக திரும்ப திரும்ப அழைத்தும் தில்லியின் கடும்குளிரையும் சுடும்வெயிலையும் காரணம்காட்டி வராமல் இருந்த, அம்மாவும் அப்பாவும் ஒருநாள் திடீரென்று ரவியின் வீட்டிற்கு விஜயம் செய்தனர். குளிர்காலம் ஆரம்பிக்க இன்னும் இருமாதங்களே இருந்தன. குளிர்காலம் தொடங்கிய பின்னும், ரவியின் வீட்டிலேயே தொடர்ந்து தங்கினர். ரவியின் மனைவி – மாலாவுக்கு இது கொஞ்சம் புதிதுதான். ரவி-க்கு திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப்பின்னர், தொடர்ச்சியாக இரு மாதங்கள் தங்குவது இதுதான் முதல் முறை.

    +++++

    கல்யாணமான புதிதில், மாலாவிற்கு மஞ்சள் காய்ச்சல் வந்தது. அப்போதெல்லாம், ரவியின் பெற்றோர்கள் தனியே வசித்து வந்தார்கள். ரவியின் சகோதரன் வெளிநாட்டில் வசித்து வந்தநேரமது. ரவி தன் அம்மாவிற்கு போன் செய்து "மாலாவுக்கு மஞ்சள் காய்ச்சல். அவளை கவனித்துக்கொள்ள ஓரிரு வாரங்கள் வந்து என்னோடு தங்கியிருப்பாயா? எனக்கு கல்யாணமான பின்னர் குடித்தனம் வைக்கக்கூட நீயும் அப்பாவும் வரவில்லை" என்று கேட்டான். அதற்கு அம்மா அளித்த பதிலைக்கேட்ட பிறகு அதிக நேரம் அந்த போன்-உரையாடல் நீடிக்கவில்லை. "நீ கணவன் ஆகிவிட்டாய். உன் பெண்டாட்டியை பார்த்துக்கொள்ள தெரிந்துகொள்ள வேண்டும். இனிமேயும் என்மேல் சார்ந்திருக்கக்கூடாது" ரவியும் சீக்கிரமே பெற்றோரின்மேல் உணர்வுபூர்வமாக சாராமல் இருப்பது எப்படி என்று கற்றுக்கொண்டான். ஆனாலும், சமூகப்பார்வையில் கடமையாக கருதப்படும் பெற்றோர்களுக்கு செய்யப்படும் எல்லா செயல்களையும் மறக்காமல் புரிந்தான். ஒரு நல்ல மகனில்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதில் அவன் உறுதியாய் இருந்தான்.

    ரவியின் சகோதரன் – சுரேஷ் – வேலையிழந்து இந்தியா திரும்பினான். மும்பை-யில் ஒரு அதி சொகுசான அபார்ட்மென்ட் வாங்கினான். தன்னோடு வந்து இருங்கள் என்று ரவி பலமுறை அழைத்தும் தில்லி வராத பெற்றோர்கள், சுரேஷ் அழைத்ததும் பூர்விக கிராம வீட்டைவிற்று, சுரேஷ்-இன் குடும்பத்துடன் இருக்க மும்பை வந்தார்கள்.

    கிரகப்ரவேசத்திற்குப்போனபோது, சுரேஷ்-இன் புது அபார்ட்மெண்டை பார்த்து வியந்துபோன மாலா "நமது ஒரு படுக்கையறை, ஹால் கிட்சன் வீடு உங்கள் பெற்றோர்களுக்கு வசதி குறைவானதாகத்தான் படும்" என்று ரவியின் காதுக்குள் முணுமுணுத்தாள்.

    +++++

    அம்மாவும் அப்பாவும் ரவியின் வீட்டிற்கு வந்து முன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. மும்பை-இலிருந்து சகோதரனிடம் அம்மா தன் கைத்தொலைபேசியில் பேசுவது வெகுவாகக்குறைந்திருந்தது. அப்படி போன் வந்தாலும், அம்மா கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு, அடுத்த அறைக்கு போய் யாருமே கேட்காத படி பேசலானாள். சத்தம் போட்டே தொலைபேசியில் பேசும் பழக்கம் கொண்ட ரவியின் குடும்பத்திற்கு இது புதுசு. போன்-இல் மேள்ளபெசுவது நாகரீகம்தான். ஆனால், அந்த நாகரீகம் நான் பேசிக்கொள்வதை இவன் கேட்கக்கூடாது என்ற எண்ணத்தில் மட்டும் பேணப்பட்டால்? ரவிக்கு அம்மாவின் "நாகரீகம்" ரசிக்கவில்லை.

    +++++

    ரவியும் சுரேஷும் அதிகம் போன்-இல் பேசிக்கொள்வதில்லை. பொங்கலுக்கும், தீபாவளிக்கும் என்றுதான் பேசிக்கொள்வார்கள். "எப்படி இருக்கே" என்ற கேள்விக்கு பதில் சொன்ன பின் அப்புறம் என்ன பேசுவது என்ற குழப்பத்தில், போன்-இல் மௌனம் நிலவும். அந்த மௌனம் ரவிக்கு துக்கத்தை ஏற்படுத்தும்.

    சுரேஷ் ஒருநாள் போன் பண்ணினான்.
    "நீ அடுத்து மும்பை எப்போ வரப்போறே…ஆபீஸ் விஷயமா அப்பப்போ வருவியே!"
    "இப்போதைக்கு எதுவும் சந்தர்ப்பம் இல்ல…ஏன் கேட்கறே?"
    "இல்ல…அப்படி வந்தேன்னா அப்பாவோட சில டாகுமென்ட்ஸ் இங்கே இருக்கு…அத நீ எடுத்துகிட்டு போகலாம்"

    ரவிக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. "இப்போ என்ன அவசரம்…அப்பா ஒண்ணும் எங்கிட்ட சொல்லலியே" என்றான். "அப்பகிட்ட பேசிக்கோ" என்று சுரேஷ் சொன்னான்.

    அப்பா "என்ன டாகுமென்ட்…அம்மா எதாவது சொன்னாளா?" என்று மழுப்பினார். ரவி-க்கு எதுவும் நன்றாகப்படவில்லை.

    +++++

    மாலா மும்பை-இலிருந்து அப்பா பெயருக்கு ஒரு கூரியர் வந்ததாகவும், அதிலிருந்து வந்த ஒரு டாகுமென்ட்-இல் அப்பா கையெழுத்திட்டதாகவும் சொன்னாள். எல்லாம் ஒரே ஊகம்தான். இரண்டாவது மகனிடமே எதுவும் சொல்லவேண்டும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை. மருமகளிடமா சொல்வார்கள்?

    +++++

    டாகுமென்ட்ஸ் பற்றிய மர்ம சீக்கிரமே துலங்கியது. ஒரு சனிக்கிழமை மாலை, ரவியின் அம்மாவும் அப்பாவும்
    வீட்டருகே இருந்த குருவாயுரப்பன் கோவிலுக்கு சென்றிருந்தனர். அந்நேரம் அப்பாவின் பெயருக்கு வந்திருந்த கூரியரை ரவி பெற்றுக்கொண்டான். வந்த உறையின் வாய் திறந்திருந்தது. கூரியர் கம்பெனி அந்த தபாலை சரியாகக் கையாளவில்லை போலும்!

    எல் ஐ சி பாலிசி-க்கு எதிராக அப்பா ஒரு கடன் வாங்கியிருக்கிறார். எண்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையும் வந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

    +++++
    "இ…இது எப்போ வந்தது?" – அப்பாவின் குரலில் தடுமாற்றம்.
    "இது என்னதுப்பா…இந்த வயசுல லோன்…உனக்கென்ன தேவை…அப்படி இருந்தா நான் வாங்கிக்கொடுக்க மாட்டேனா?" – கோபம், ஏமாற்றம், அக்கறை – மூன்றும் சரிசம விகிதத்தில் கலந்து பணிவுடன் கேட்டான் ரவி.
    "இ..இல்லப்பா…எனக்கு எதுவும் வேண்டாம்" – அப்பாவின் விழி நேருக்கு நேர் பார்க்காதது போல் ரவிக்கு தோன்றியது.
    "அப்போ இந்த லோன்?" – ரவி விசாரணையை தொடர்ந்தான்.
    அப்பா அம்மாவை நோக்கினார். அம்மாவும் மெளனமாக "நீங்களே சொல்லுங்க" என்று சொன்னார் போலிருந்தது. அப்பா புரிந்து கொண்டு, கன்னத்தை சொரிந்து கொண்டு "உனக்கு இது தெரிஞ்சிருக்காதுன்னு தான் நினைக்கிறேன்…ஏன்னா இத்தனை வருடங்களா இதைப்பத்தி உன்னையும் சேர்த்து யாரு கிட்டயும் இதை சொல்லலே…நீ வேறு மாதிரி நினைக்கக்கூடாது… உன் அண்ணன் இந்தியா திரும்பி வந்ததிலிருந்தே வேலை கிடையாது….சிங்கப்பூரில் வாங்கிய சம்பளமே இங்கும் கிடைக்கவேண்டும் என்ற எதிர் பார்ப்பிலோ, ஆரம்பத்தில் வந்த வேலைகளை உன் அண்ணன் நிராகரிச்சான்…பின்னர் கெடைச்ச ஒரு வேலையில தன்னை சரியாய் ட்ரிட் பண்ணவில்லைஎன்று விட்டுட்டு வந்தான். அதுக்கப்புறம் பல மாதங்களாகவே ஒரு வேலைக்கும் அப்ளை பண்ணாமலேயே இருந்தான்…நானும் அம்மாவும் அவனை போர்ஸ் செஞ்சு பல வேலைகளுக்கு அப்ளை பண்ண வச்சோம்..என்னமோ தெரியலே ஒரு வேலையிலும் அவன் செலக்ட் ஆகலை…இவன் தப்பா..இல்லாட்டி ரொம்ப நாள் கேப் விழுந்துட்ட காரணத்தால் நிறுவனங்கள் இவனை ரிஜெக்ட் செய்யுதான்னு தெரியலை…"

    அப்பாவின் கண் கலங்கியது மாதிரி இருந்தது. அம்மாவோ அழுகையை கட்டுபடுத்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இரு வயதான மனிதர்களின் துக்கம், மாலாவின் மனதையும் உருக்கியிருக்கவேண்டும். பரிவுடன் அம்மாவின் தோள்களை தொட்டாள்.

    "வயதான காலத்தில் குழந்தைகளுக்கு பாரமாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில்தான் சுரேஷுக்கும் உனக்கும் கல்யாணமான பிறகும் கிராமத்திலேயே இருந்தோம். எனது நிதிகளையும் நானோ அம்மாவோ மகன்களின் மேல் சார்ந்திருக்காமல் இருக்கும்படியே திட்டமிட்டேன்…ஆனால் இரு மகன்களில் ஒரு மகன் என்னை நம்பியே இருப்பான் என்று எனக்கு தெரியாமல் போய் விட்டது. சுரேஷ் தன் எல்லா சேமிப்பையும் கரைத்து வீடு வாங்கியதோடு சரி. அவன் குடும்பம் என்னுடைய பென்ஷன் மற்றும் நிரந்தர வைப்பு நிதி வட்டியிலேயே நடக்கிறது. இப்போது நானும் அம்மாவும் உன்னுடன் இருப்பதால், எங்களுக்காக அவன் செலவு எதுவும் செய்யவேண்டியதில்லை."

    "இந்த லோன் கூட சுரேஷின் மூத்த பையனின் கல்லூரி சேர்க்கைகாகத்தான்..இன்னும் மெச்சூர் ஆகாமல் இருக்கிற என்னோட ஒரே பாலிசிய வச்சு வாங்கினேன்"

    அம்மா கொஞ்சம் அமைதியான மாதிரி தெரிந்தது. மாலா அம்மாவுக்கு நீர் பருகத்தந்தாள். கழுத்தின் உருண்டை உருள "கடகட"வென்று அம்மா தண்ணீர் குடித்தாள்.

    "நீ சுரேஷ் மாதிரி இல்லை. எதையும் சமயோசிதமா யோசிச்சு நடுநிலையான நோக்கில் முடிவெடுப்பாய். எந்த நிலைமையிலும் உன் கால்கள் தரையில் ஊன்றியிருக்கும். வானத்துக்கு ஆசை பட்டு நிற்கும் நிலத்தை எப்போதும் இழக்கமாட்டாய்…உண்மையாசொல்றேன், உங்க அண்ணன்கிட்ட இல்லாத உன்னோட ரெசிலீயன்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்…"

    தான் அப்பாவை பற்றி அறிந்திருப்பதை விட அப்பா தன்னை பற்றி நன்றாக அறிந்திருக்கிறார் என்பதை ரவி உணர்ந்தான்.

    +++++

    அம்மா தொலைகாட்சி பார்க்க ஆரம்பித்திருந்தாள். எம் எஸ் பற்றிய ஒரு டாகுமெண்டரி ஓடிக்கொண்டிருந்தது. "பாவயாமி ரகுராமம்" பாடிக்கொண்டிருந்தார் எம் எஸ். அடுத்த அறையில் அப்பா ரவியின் பையனுக்கு கணக்கு பாடம் சொல்லிகொடுக்க ஆரம்பித்தார். ரவிக்கு அப்பாவும் அம்மாவும் அன்று மாலைதான் மும்பையிலிருந்து வந்திறங்கியது போல் பட்டது.

  • தெரிவு

    எனது நண்பன் – கார்த்திக்குக்கு, எங்களது HR அணியிடமிருந்து வந்த ஈமெயில் எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. “அனுபவமிக்க, ஏற்றுமதி வியாபாரத்தை பெருக்க வல்ல மூத்த நிர்வாகியை தேடுகிறோம். உங்களின் தற்குறிப்பை ஒரு வேலைவாய்ப்பு இணைய தளத்தில் கண்டோம். எனவே உங்களை தொடர்புகொள்கிறோம்”

    கார்த்திக் கரிசனத்துடன் “என்னடா உங்க ஆளுங்க இன்னொரு மேலாளரை தேடுறாங்களா? ஏதேனும் பிரச்சனையா?” என்று கேட்டான். “அதெல்லாம் ஒன்னுமில்லடா…நிறுவன விரிவாக்கத்துக்காக இன்னொரு ஆளை நியமனம் பண்ணுவாங்களா இருக்கும்?” என்று தைரியத்தை செயற்கையாக எனது குரலில் வரவழைத்து பதில் சொன்னேன்.

    எங்களது சிறு நிறுவனத்தில் எத்தனை விற்பனை மேலாளர்கள் வேண்டும்? ஒருவனான நானே, பல சமயங்களில் வேலை-இல்லாமல் இருக்கிறேன். குறிப்பிட்ட பருவத்தில் விளையும் மூலிகைகளை பதப்படுத்தும் வியாபாரத்தில் இருக்கும் நிறுவனத்தில், விற்பனை மேலாளரின் வேலை சில மாதங்களுக்கே. மற்ற நேரங்களில் எல்லாம், விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் அனுப்புகை ஒருங்கிணைப்பே மிஞ்சும். பல சமயம், குறைந்த வேலையின் அளவு என்னை-யே ரொம்ப கவலைபடுத்தும்.

    ஆனால் இது நான் கொஞ்சம்கூட எதிர்பாராதது. இந்த சின்ன நிறுவனத்தின் ஏற்றுமதியை நோக்குவதற்கு நான் மட்டும் போதாதா?. சமீபத்தில் வாங்கிய வீட்டுக்கடனை நினைத்துப்பார்த்தேன். பயம் நிறைந்த ஒரு சஞ்சலமான உடல் உணர்வை எனது வயிற்றுப்பகுதியில் உணர்ந்தேன். இப்போது வரும் சம்பளத்தில் தவணையை கட்டுவதே கடினமாகத்தான் இருக்கிறது. வேலை வேறு போய்விட்டால்?

    பாஸ்-சின் அறைக்கு போனேன். ஒரு வணிக நாளேட்டில் தன முகத்தை பதித்து எதையோ வாசித்துக் கொண்டிருந்தார். படபடப்புடன் என் நண்பனுக்கு வந்த ஈமெயில்-ஐ பற்றி சொன்னேன். அந்த ஈமெயில்-ஐ காட்டவும் செய்தேன். அமைதியாக அதைப்படித்த முதன்மை நிர்வாக அதிகாரி, “எனக்கு தெரியவில்லை…டைரக்டர்-இடம் பேசுகிறேன் இதைப்பற்றி…நீ எதுவும் கவலைப்பட வேண்டியதில்லை”

    முகவாட்டத்துடன் அவருடைய அறை-இலிருந்து வெளியே வந்தேன். பத்து வருடங்களாக இதே நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். புது வேலை தேடுவது எப்படி என்பதே மறந்துவிட்டிருந்தேன். அப்படி வேறு வேலை கிடைத்தாலும், புது சூழ்நிலையில் தாக்குப்பிடிக்கும் திறன் என்னிடம் இருக்கிறதா? என் மீதே எனக்கு சந்தேகம்.

    +++++

    அடுத்த இரண்டு நாட்களுக்கு எனது பாஸ் அலுவலகத்துக்கு வரவில்லை. வைரல் காய்ச்சல் என்று கேள்விப்பட்டேன்.

    எனது அமைதியின்மை தொடர்ந்தது. நேராக HR மேனேஜர்-ஐ சென்று கேட்டு விடலாமா? “என்னை தூக்கி எரிய திட்டமிடுகிறீர்களா?” என்று ! எப்படி போய்க்கேட்பது? அவர் இத்தகைய செய்திகளை ரகசியமாகத்தானே வைத்திருப்பார்?

    இதைப்பற்றி நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாக இருக்கும் எனது பாஸ்-சும் தெரியாது என்று சொல்கிறாரே? கபட நாடகம் ஆடுகிறாரோ? தொழிற்சாலை நிர்வாகம், நிதி, கொள்முதல் மற்றும் விற்பனை என்று எல்லாவற்றிற்கும் பொறுப்பை ஏற்று, இயக்குனர் வாரியத்திற்கு நேரடியாக பதில்சொல்லும் அளவிற்கு உயர்ந்த பொறுப்பை வகிப்பவருக்கு ஒரு விற்பனை மேலாளரை தேடுவது பற்றி எப்படி தெரியாமலிருக்கும்?

    +++++

    கார்த்திக் திரும்பவும் போன் செய்தான். “நீ தப்பா நினைக்கலேன்னா நான் இந்த வேலைக்கு அப்ளை பண்ணட்டுமா?” – ஒரு மாதிரியான தயக்கம் தொனிக்கும் குரலில் எழுந்தது இந்த வேண்டுகோள். என்ன பதில் சொல்வது?

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் ஒரு குளிர்பான நிறுவனத்தில் ஒரு நல்ல வேலை கிடைத்தது என்று, தன் குடும்பத்துடன் அங்கு குடி பெயர்ந்தான் கார்த்திக். வசதியான வாழ்க்கை. நல்ல சம்பளம் என்று நன்றாகத்தான் இருந்தான். திடீரென்று ஒரு நாள் தன் வேலையை இழந்தான். அவன் சொன்னவரையில், அவனுடைய உயர் அதிகாரிக்கு இந்தியனான இவனை பிடிக்கவில்லை என்பதே காரணம். வேலை இழந்தபின்னும், வேறு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆஸ்திரேலியாவிலேயே இன்னொரு ஒரு வருடம் ஓட்டினான். சேமிப்பு கரைந்தபோது, இந்திய திரும்பி வந்தான். நல்ல வேலையாக, இந்தியா திரும்பி வந்தவுடன் அவன் மனைவிக்கு ஒரு வேலை கிடைத்தது.

    இவனையோ துரதிர்ஷ்டம் இந்தியாவிலும் விடவில்லை. நல்ல படிப்பு, நல்ல முன்னனுபவம் இருந்தும்,அவன் எதிர்பார்த்த வேலை எதுவும் அவனுக்கு அமையவில்லை. ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த காரணத்தால், அவனுடைய குடும்பத்தினருக்கு வாழ்க்கைத்தரத்தை இந்தியா வந்தும் சுருக்கிக்கொள்ள முடியாமல் போனது. மனைவியின் சம்பளம் மட்டும் அவர்களின் வாழ்க்கைத்தரத்துக்கு போதுமானதாக இருக்கவில்லை. சில பொதுவான நண்பர்கள் மூலம் கார்த்திக்கின் உயரும் கடன்சுமை பற்றி நான் கேள்விப்பட்டிருந்தேன்.

    எப்போது அவனிடம் பேசினாலும், வேலையின்மை அல்லது துரதிர்ஷ்டம் – இவற்றைபற்றியே பேசிக்கொண்டிருப்பான். அவனுடைய நல்ல உள்ளத்திற்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் துணை நிற்கக்கூடாதா என்று எண்ணிக்கொள்வேன்.

    எந்தத்திருப்புமுனையும் இல்லாமல் சோர்வுற்ற நேரத்திலும், ஒரு நல்ல நண்பனாக தனக்கு வந்த நேர்முக அழைப்பை பற்றி எனக்கு சொல்லி என்னை எச்சரிக்கைப்படுத்திய அவன் உள்ளம் என்னை உருகவைத்தது. என்னுடைய பாதுகாப்பின்மை என்னிடமிருந்து விலகியது.

    “நீ அப்ளை பண்ணுடா…உன்னுடைய முன்னனுபவத்துக்கு ஏற்ற வேலைடா…உன்னுடைய திறமைக்கு, இந்த வேளையில் நன்றாகவே ஜொலிக்க முடியும்…என்ன இன்பர்மேஷன் வேணும்னாலும் கேளு…நான் சொல்றேன்…”

    “ரொம்ப தேங்க்ஸ் டா”

    +++++

    விடுமுறையிலிருந்து திரும்பிய பிறகும் பாஸ்-சின் மௌனம் தொடர்ந்தது. நான் அவரிடம் பேசிய விஷயத்தை பற்றியோ என்ன நிகழ்கிறது என்றோ அவர் ஒரு விளக்கமும் வழங்கவில்லை. கார்த்திக்கை வேலைக்கு விண்ணப்பிக்க சொன்ன பிறகு, இதைப்பற்றி எந்த விளக்கமும் தேவை இல்லை என்ற மனநிலையிலேயே நானும் இருந்தேன்.

    +++++

    ஒரு வேலைவாய்ப்பு ஆலோசகரிடம் சில ஆலோசனைகளை எடுத்துக்கொண்டேன். புது பயோ-டாடாவை தயார் செய்தேன். இரண்டு-முன்று நிறுவனங்களின் நேர்முகங்களுக்கும் சென்று வந்தேன். பல வருடங்களாக வேலை செய்தும் மிக அதிகமான சம்பளம் வாங்காமல் ஏன் இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல திணறினேன். உண்மையாகக்கூறினால், நான் ஏன் இந்த நிறுவனத்தில் இத்தனை வருடங்களாக வேலை பார்த்துவருகிறேன் என்று எனக்கே தெரியவில்லை?

    +++++

    கார்த்திக் என்னை அப்புறம் தொடர்புகொள்ளவில்லை. அவனுடைய நேர்முகம் நடந்ததா என்றோ எப்படி நடந்தது என்றோ நான் அறிய முயலவில்லை.

    +++++

    தோல் பதனிடும் நிறுவனத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. பெரிய நிறுவனம். பெரிய நிறுவனங்களில் நான் எப்போதும் வேலை செய்தது இல்லை. ஏற்கெனவே நடந்த நேர்முகங்களில் நான் சரியாக பதிலளிக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு இருந்தது. கார்த்திக்கிடமிருந்து ஆலோசனை பெற்றாலென்ன? அவனுக்குதான் பல பெரிய நிறுவனங்களில் பல காலம் வேலை செய்த அனுபவம் இருக்கிறதே!

    கார்த்திக் போன்-ஐ எடுத்தவுடன் “நூறு வயசுடா” என்றான்.
    “என்ன அப்படி சொல்றே?”
    “உங்க நிறுவனத்திலிருந்து எனக்கு ஜாப் ஆப்பர் இன்னிக்கு தான் வந்தது”
    ஒரு புறம் மகிழ்ச்சி.மறுபுறம் சோகம்.
    “கங்கிராஜுலேஷன்” என்றேன்.
    “நீ எனக்கு கீழ வேலை பண்ணுவியாடா?”
    “….”
    “உங்க பாஸ்-அ கழட்டிவிடப்போறாங்க அடுத்த வாரம்…தன்னோட காரியதரிசிய மொலேஸ்ட் பண்ண முயற்சித்ததா வந்த கம்ப்ளைன்ட்-இல் தன்னுடைய தப்பை உங்க பாஸ் ஒத்துக்கிட்டார்…வேறு வேலை தேடிக்கொள்ள அவர் கேட்ட ரெண்டு மாசம் டைம் அடுத்த வாரம் முடிவடையுது…இன்னும் பத்து நாளைக்குள்ள என்னை ஜாயின் பண்ண சொல்றாங்க…நீ என்னடா சொல்றே?…நான் பாஸ்-ஆ இல்லாம ஒரு குழு அங்கத்தினன் மாதிரி உன்கூட வேலை செய்வேன்…நீ கொஞ்சம் கூட கவலைப்பட வேண்டாம்”

    கார்த்திக்-கின் வேலையின்மை பிரச்னை முடிவுக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சியே. ஒரு நண்பனே பாஸ்-ஆக வருவதிலும் பிரச்னைகள் இருக்கக்கூடும். ஆனால் அதைப்பற்றி அப்போது யோசிக்கவேண்டுமென்று நான் கருதவில்லை.

    பாஸ்-இன் அறையிலிருந்து நூறடி தூரத்திலேயே என் அறை இருக்கிறது. பாஸ்-இன் மன்மத லீலைகள் இவ்வளவு நடந்திருக்கிறது…நான் அறிந்திருக்கவே இல்லை. ஆனால் நண்பனுக்கு வந்த நேர்முக அழைப்பு பற்றிய செய்தி மட்டும் என்னை எட்டி…பாதுகாப்பின்மை, அமைதியின்மை, உள்ளநெகிழ்ச்சி, விட்டுகொடுக்குமுணர்வு என்று பல்வேறான உணர்ச்சிப்ரவாகங்களை என்னுள் எழுப்பியிருக்கிறது. எந்த செய்தி நம்மை அடையும் என்பதும அவை எத்தகைய உணர்வுகளை நம்முள் எழுப்பும் என்பதும் எதை பொறுத்து அமைகிறது? இதற்கு விடை தெரியாது. ஆனால், எப்போது ஒரு குறிப்பிட்ட கணத்தில் பாதுகாப்பின்மையை இழந்து விட்டுக்கொடுப்போம் என்ற உணர்வு தோன்றியதோ.அப்போது என்னுள் ஏதோ ஒன்றுதான் அந்த உணர்வு மாற்றத்தை தெரிவு செய்திருக்கக்கூடும் என்ற திடீர் உட்பார்வை எனக்கு ஆழமான ஆனந்தத்தை அளித்தது. இப்போது என்னுள் தெளிவு நிறைந்திருந்தது. சூழ்நிலைக்கு கட்டுப்பட்டு வேலை தேட ஆரம்பித்த நான், இக்கணம்முதல் தன்னினைவுடன் தெரிவு செய்து வேலையை தேடவேண்டும்.

    “உனக்கு கீழ வேலை பன்னரதுலே ஒரு பிரச்னையும் இல்ல..சந்தோஷம்தான்…உனக்கு நான் எதுக்கு போன் பண்ணேன்னா, ஒரு நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்திருக்கு…அதுக்கான தயாரிப்பில் நீ எனக்கு கொஞ்சம் உதவி செய்வாயா?”

  • நிலம்

    நிலம் என்ற ஒன்று படைக்கப்பட்டிராவிடில், சிருஷ்டி செய்யப்பட்ட உயிரினங்கள் எங்கு வாழ்ந்திருக்கக்கூடும்? எல்லாமே நீர் வாழ் உயிரினமாகவே இருந்திருக்குமா?. நிலமும் நீரும் உயிரினங்கள் வருவதற்கு முன்னரேயே உருவாகிவிட்டனவே!

    நிலத்துக்கேன்றும், நீருக்கேன்றும் தனித்தனி உயிரினங்கள் தோன்றின. பரந்து, விரிந்திருக்கும் நிலத்தின் ஒவ்வொரு பரப்பிலும், அப்பரப்பின் இயற்கையின் தனித்தனி உருவைப்போல விதம் விதமான உயிரினங்கள் ஜீவித்து வருகின்றன. புரியாத ஏதோ ஒரு கடமையை இவ்வுயிரினங்களுக்கு இயற்கை அளித்திருக்கிறது.

    ஒவ்வொரு புவியியல் பகுதிகளிலும், நிலத்தின் உரு மாறுகிறது. பள்ளத்தாக்கு, மலை நிலம், வயற்காடு, வெப்பமண்டல காடு, எவ்வளவோ உரு? அங்கங்கு வாழும் உயிரினங்களும், அந்தந்த நிலத்துக்கேற்றவாறு உள்ளன. சில மிருகங்கங்கள், சில பிரதேசங்களில் மட்டுமே வாழ்கின்றன. ஒட்டகத்தைக்காண பாலைவனமும், கரடிகளைக்காண குளிர் பிரதேசமும் போகவேண்டியிருக்கிறது.

    +++++

    உலகத்திலே நுகர்ந்து அனுபவிக்க பல பொருள்களும், விஷயங்களும் இருக்கின்றன. வெறும் பொருட்கள் மட்டும் இருந்திருந்தால், அனுபவம் முழுமை பெற்றிருக்காது. பொருட்களின் அழகையும் நுண்மையையும் ரசிக்க, உணர்ச்சி என்ற ஒன்றும் தேவையாயிருக்கிறது. கண்ணுக்குத் தெரியும் பொருளோடு, உணர்ச்சி என்ற கண்ணுக்கு தெரியாத கருவியும் இணைந்து அப்பொருளுக்கும் அப்பொருளை நுகர்பவருக்கும் ஓர் அர்த்தத்தை அளிக்கின்றன.

    உணர்சசிக்கருவிகள் பல்வேறு வகைப்பட்டன – பயபக்தி, உறுதி, தன்னம்பிக்கை, திறன், நிச்சயம், சந்தோஷம், சுகம், தயை, தைரியம், தீர்மானம், உற்சாகம், ஆவல், ஆற்றல், கிளர்ச்சி, எதிர்பார்ப்பு, எழுச்சி, சிறப்புத்தன்மை, ஆச்சர்யம், உவகை, நன்றி, போற்றும்தன்மை, கவர்ச்சி, வசீகரம், நம்பிக்கை, நகைச்சுவை, ஊக்கம், அக்கறை, சுறுசுறுப்பு, அன்பு, விளையாட்டுத்தன்மை, அமைதி, இன்பம், பலம், பெருமை, நேர்மறை, ஸ்திரம், கம்பீரம், மேன்மை, சிலிர்ப்பு – வரிசை அனகோண்டா பாம்பு மாதிரி மிக நீளமானது.

    பயம் மற்றும் வன்முறை சார்ந்த உணர்ச்சிகள், நேர்மறைக்கு மாறான உணர்ச்சிகள். எதிர்மறை உணர்ச்சிகள். தன்னைக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற தற்காப்பு உணர்வின் மறுவடிவமாக அவைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

    எல்லா உணர்ச்சிகளும் எல்லாருக்கும் ஒரே அளவினதாய் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சாதாரண ஒரு செல் உயிரினத்திலிருந்து, சிக்கலான படைப்புகள் வரை பல படைக்கப்பட்டிருக்கின்றன. சிக்கலான உயிரினங்களுக்கு சிக்கலான, மேலே குறிப்பிட்ட குறிப்பிடப்படாத பல உணர்ச்சிக்கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. எந்த உணர்ச்சி எப்போது உபயோகிக்கப்படும் என்று சொல்வது மிகக்கடினம். அந்த உயிரினத்தின் ஆளுமையையும், சமூக பழக்கங்களையும், அப்போதைய மனநிலையையும் பொறுத்தது. இதற்கும் மேலாக அந்த உயிரினத்தின் தன்னினைவுடன் இயங்கும் அறிவை பொறுத்தது.

    +++++

    பொருள் ஒன்று. ஆனால் அதைக்காணும்போது ஏற்படும் உணர்ச்சிகள் வெவ்வேறு. கருநிறமான, நீளமான பாம்பு. பயவுணர்ச்சியை ஏற்படுத்தலாம். அல்லது அறியும் ஆவலை ஏற்படுத்தலாம். கொன்றுபோடும் வன்முறையை எண்ணத்தை உண்டாக்கலாம். அதே இன பெண் பாம்புக்கு காதல் உணர்ச்சியை தரலாம்.

    +++++

    கரும்பாம்பு கரும்பு விளை வயலின்னடுவே நகர்ந்து கொண்டிருந்தது. விவசாயி புற்களை வெட்டிக்கொண்டிருந்தான். புதர்போன்று பருமனான வளர்ந்திருந்த புற்களுக்கு நடுவே சுருண்டுபடுத்தது. அதே இடத்தில் சருகு, வாடிய தழைகள் என்று குப்பைகூடமாக இருந்ததால், ஒரு பாதுகாப்பான உணர்வுடன் பாம்பு இளைப்பாரிக்கொண்டிருந்தது. விவசாயியின் மண்வெட்டி புதரை நெருங்கியதும், தனது வேகத்தைக்கூட்ட, பாவம் ஒரு நொடியில், பாம்பு இரு துண்டுகளாக ஆனது. தலைப்பாகம் கொஞ்சம் அசைவதைப் பார்த்த விவசாயி, அதனை இன்னொரு வெட்டு வெட்டினான்.

    என்னென்ன உணர்ச்சிகள் இந்த காட்சியில் பயன்படுத்தப்பட்டன? –
    பாம்பு : களைப்பு, பாதுகாப்பு, சுகம், கவனமின்மை.
    விவசாயி : சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, கவனமின்மை, வன்முறை

    கவனமின்மை இரு வரிசைகளிலும் வருகிறது. கவனமாய் இருப்பது யாருடைய பொறுப்பு? பெரும்சிக்கல் இல்லாத “தொடர்ந்து வாழ்தல்” என்ற எளிய இலக்கை மட்டுமே கொண்ட ஓர் உயிரினத்தினுடையதா? அல்லது தானே சிந்திக்கும் திறம் கொண்ட, சுற்றுபுறத்தை திட்டமிட்ட நடவடிக்கை மூலம் ஓரளவு கட்டியாள தெரிந்த உயிரினத்தினுடையதா?

    நிலத்தை சரி செய்து கொண்டிருந்த விவசாயி, "பாம்பு இருக்கலாம், எனவே கவனத்துடன் பாம்பைக்கொல்லாமல், தன் வேலையை செய்ய வேண்டும்" என்ற எண்ணம் கொண்டவனாக இருப்பது அவசியமா? அல்லது "தெரியாத்தனமாக படுத்திருக்கும் பாம்பை மிதித்து விடுவேன் எனவே கவனத்துடன் வேலை செய்து, பாம்பைக்கண்டால், அதை வெட்டி எரிந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்"? என்று இருப்பது அவசியமா?

    +++++

    அதே விவசாயி அதே நிலத்தில் சிலகாலம் கழித்து உழுதுகொண்டிருந்தான். அவன் மனைவியும், இரு வயதே ஆன மகனும் கூட வயலுக்கு வந்திருந்தார்கள். மதியவுணவு உண்டபிறகு, விவசாயி உழுவதை தொடர்ந்தான். நிலத்துக்கு நடுவில் இருந்த மரத்தின் நிழலில், அவன் மனைவி மரத்தில் சாய்ந்து
    உட்கார்ந்தபடியே உறங்கலானாள். பக்கத்திலேயே, விரிக்கப்பட்ட துண்டில் மகன் உறங்கிக்கொண்டிருந்தான். ஒரு பாம்பொன்று, குழந்தையின் காலுக்கு மிக அருகே ஊர்ந்துகொண்டிருந்தது. சடக்கென்று கண் விழித்த தாய் பாம்பை நோக்க, கையில் வைத்த தடியை வைத்து அடிக்க முயற்சிக்க, அது சரியாக பாம்பின் மேல் படவில்லை. பாம்பு அவ்விடத்திலிருந்து அகலுவதற்கு முன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் காலை கொத்திவிட்டுபோனது.

    இந்த நிகழ்வை நோக்குமிடத்து, தாயின் தாய்ப்பாசம் மேலிட, பிழையான குறியுடன் குச்சி எரிந்து, பாம்பின் தற்காப்பு உணர்வை எழுப்பி, குழந்தையை கொத்தவைத்தது என்று கருத இடமுள்ளதல்லவா?.

    +++++

    சரியான வைத்தியம் சமயத்தில் கிட்டாததால், விவசாயியின் மகன் இறந்து போனான். மகன் இறந்த துயரத்தில், விவசாயி, விவசாயத்திலிருந்து கொஞ்ச காலம் விலகியிருந்தான். கிட்டத்தட்ட ஒரு வருடம், நிலத்தில் எதுவும் பயிரிடவில்லை. நிலம் கவனிப்பாரற்று, புற்களும் புதர்களும் பெருகின. பக்கத்து நிலத்தின் உரிமையாளன், விவசாயியை அணுகி "நீயோ பயிர் எதுவும் பண்ணவில்லை…உன் நிலத்தை எனக்கு விற்றுவிடேன்" என்று சொல்லவும், உறக்கத்திலிருந்து விழிப்பவன் போல "இல்லை…இல்லை…அது என் நிலம்…இந்த முறை பயிரிடலாமேன்றிருக்கிறேன்" என்று சொன்னான். விரைவிலேயே, சில குடியானவர்களை கூட்டிக்கொண்டு, தானும் நிலத்தில் மண்டிக்கிடந்த புதர்களை விலக்கி சீர் செய்ய வந்தான். நிலத்தை உழுவதர்க்கேற்றவாறு, தயார் செய்து முடித்தபோது, ஏறத்தாழ ஐம்பது பாம்புகள் இறந்திருந்தன.

    உணர்ச்சி என்பது ஒற்றை உயிரினம் என்ற அலகில் நோக்கும்போது அளக்கத்தக்கதாய், அறவரைமுறைக்கு உட்பட்டதாய் இருக்கவேண்டும் என்ற கட்டாயப்போக்கு பொதுவாக நிலவிவருகிறது. அதுவே ஓர் உயிரினத்தொகுதி என்ற அலகில் நோக்கும்போது, இன்னொரு வலிய உயிரினத்தின் முன்னேற்றம் என்ற அளவுகோலில் அடங்கிப்போகிறது.

    +++++

    மூன்று வருடங்களுக்கு பிறகு விவசாயி அந்த நிலத்தை அடுத்த நில உரிமையாளனுக்கு விற்றான். நகரத்தில் இருக்கும் தன் அண்ணன் தொடங்கிய பட்டறையில் போய் வேலை செய்யப்போவதாகவும், மகளை நல்ல கல்லூரியில் சேர்க்க நகரவாசம் உதவும் என்றும், மகனின் நினைவுகளை மறக்க கிராமத்தை விட்டு விலகியிருப்பது உதவும் என்றும் தன நண்பர்களிடம் சொல்லிக்கொண்டான்.

    விவசாயியிடம் நிலத்தை வாங்கியவரிடம் சிலர் வம்பு பேசினார்கள் – "மூன்று வருஷமாகவே, அவன் நிலத்தில் மகசூல் ரொம்ப கம்மி. எலித்தொல்லை மற்றும் பிற கொறிக்கும் பிராணிகளின் தொல்லை அதிகமாகவே ஆயிட்டுது. கெமிகல்ஸ் அது இதுன்னு யூஸ் பண்ணிப்பார்த்தான்யா..ஒண்ணும் முடியலே…"

    "அதுக்கென்ன, நம்ம கிட்ட கோயம்புத்தூர் அக்ரிகல்ச்சர் யுனிவர்சிட்டி-ல படிச்ச மேனேஜர் இருக்காரே…கவலை எதுக்கு"

    +++++

    விவசாயியின் குடும்பம் ஊரை அடுத்த கோயிலுக்கு வெளியே இருந்த பாம்புபுற்றுக்கு பால் வைத்து படையல் செய்துவிட்டே கிளம்பிப்போனது.

    +++++