Blog

  • தவளைக்கு சிக்கிய மீன் – ந பெரியசாமி

    ஹோசூரில் வசிக்கும் கவிஞர் ந பெரியசாமி – என் நண்பரும் கூட – பரவலாக பல இணைய இதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார், நவீன விருட்சம், பண்புடன், வல்லினம், திண்ணை – முக்கியமான எல்லா இதழ்களிலும் இவரது படைப்புகள் வந்திருக்கின்றன. அவர் எழுதியவற்றில் என்னை மிகவும் கவர்ந்த இரு கவிதைகளை கீழே பதிவிடுகின்றேன். பெரியசாமியின் வலைதள சுட்டி : http :// naperiyasamy.blogspot.com

    தவளைக்கு சிக்கிய மீன்

    குளக்கரையிலிருந்து தவளை
    நீர் அதிர
    சிரித்தது சிக்கிய மீன்
    எனை பிடித்தென் செய்வாய்?
    ஏளனம் தரையில் வழிந்தது
    மனித வசிப்பிட சிறையிலடைப்பேன்
    அங்கு உன் பெயர் தொட்டிமீன்
    சிறார்கள் உணவிடுவார்கள்
    தாளில்
    பிறப்பித்த மீனை
    துணைக்கு மிதக்கச் செய்வர்
    கழிவில் கசடான நீரை
    மறவாது மாற்றம் செய்வர்
    உனது வளர்ச்சிக்கு உண்டங்கு ஊசி
    பெருமையின் அடையாளமாவாய்
    வந்துபோவோரெல்லாம் வேடிக்கையில் மகிழ்வர்
    ஒளிரூட்டி கதகதப்பாக்குவார்கள்
    ஒத்துப்போக ஓடித்திரியலாம்
    முரண்கொள்ள செத்து மிதப்பாய்
    வீசி எறிய வேரொன்று இடம் நிரப்பும்
    என்றாவது விடுவிக்கவும்படலாம்
    வதை என்பதறியும் சிசு அவதரிக்க…

    கசப்பு

    சோம்பிக் கிடந்த குழாயிலிருந்து
    மழையை வரவழைத்துக்
    கழுவிய இரு பாகற்காயை
    துண்டாடினேன்
    அலுப்பூட்ட விரும்பவில்லை
    பொன்நிறமாகிட
    வதக்கினேன்
    சுவையறிய சிறுதுண்டை
    நாக்கிலிட்டேன்
    ஊறி ஊறி வழிந்த எச்சில்கள்
    உடலுள் வளர்த்தது
    ஒரு வேப்பமரத்தை

  • காலைத் தேனீர் – கவிஞர் றியாஸ் குரானா

    நண்பர் றியாஸ் குரானாவின் கவிதைகள் ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு அர்த்த தளத்திற்கு இட்டுச்செல்லும் வல்லமை பொருந்தியவை. சமீபத்தில் அவருடைய வலைதளத்தில் (http : maatrupirathi.blogspot.com) கீழ்க்கண்ட கவிதையை படித்து மிகவும் ரசித்தேன். 

    காலைத் தேனீர்

    றியாஸ் குரானா

    காலாவதியாகிப்போன நாளொன்றின்
    காலைப் பொழுதிற்காக
    காத்திருக்கிறேன்.

    கடந்தது மீள வராது

    ஆயினும்
    நான் சந்தித்தேயாக வேண்டும்

    அந்திப் பொழுதிலிருந்து
    பின்நோக்கி நடக்கிறேன்

    அல்லது சிந்திக்கிறேன்

    கொஞ்ச நேரம்
    எதுவும் தெரியவேயில்லை

    அது எனது பகல் தூக்கம்

    பின்னோக்கி வருவதுபோல்
    பாவனை செய்தபோதும்
    திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்

    ;காரணம்

    கனவில் அவள் தந்த கடிதத்தை
    வாங்கிச் செல்கிறாள்

    அதுபோல இருந்தது

    அதுதான் நிகழ்ந்தது

    பின்னோக்கி வரும்போது
    தந்தது வாங்கியதாக மாறிவிடும் அல்லவா

    மன்னியுங்கள்
    மீண்டும் சிந்திக்கலாம்

    உச்சி வெயில்

    சூட்டை அதிகரிக்கும்
    ஆடைகளை உடுத்துகிறேன்

    நிலத்தினுள் இறங்கிவிட்ட,
    நான் குளித்த நீரையெல்லாம்
    கிணற்றுக்குள் ஊற்றுகிறேன்

    தலைமயிர்களுக்குள் தங்கிய ஈரமும்
    வடித்தெடுக்கப்படுகிறது

    சந்தையிலிருந்த மிகவேகமாக
    சைக்கிளை பின்நோக்கிச் செலுத்துகிறேன்

    எல்லோரும் என்னை அதிசயமாகப் பார்த்தபடி
    முன்னோக்கிச் சென்றுகொன்டிருக்கின்றனர்

    ஏனெனில், அவர்கள்
    கடந்துபோன காலைப்பொழுதை சந்திக்கும்
    முயற்ச்சியில் இறங்கவில்லை

    முதல்முறை சந்தைக்கு போகும்போது
    நானும் அவனும்
    அருகருகே பேசிக்கொண்டு போனோம்

    இப்போது நாங்கள் தனியே பேசிக்கொண்டு
    அவன் முன்னோக்கியும்
    நான் பின்நோக்கியும் விரைகிறோம்

    சரியாக வீட்டில் வந்து நின்றது

    பறவைகளின் ஒலிகள்
    வெளியில் பரபரப்பாக இருக்கின்றன

    தற்போது காலைப்பொழுது

    இனி முன்னோக்கிப் பயணிக்கலாம்

    ஆவிபறக்க
    தேனீர் அருந்திக் கொண்டிருக்கிறேன்

    இந்தத் தேனீரைத்
    தவறவிட்டதனால்,

    ஒரு பகற்பொழுதை
    முன்னோக்கியும் பின்னோக்கியும்
    கடந்துசெல்ல வேண்டிவந்தது

    இரண்டுமுறை.

    நன்றி : றியாஸ் குரானா

    சுட்டி : http://maatrupirathi.blogspot.in/2012/03/blog-post.html

  • நவயுகக்காதலர்கள்

    மற்றவர்கள் குழுமியிருந்தபோது
    அக்கறையுடன் நலம் விசாரித்தான்.
    தனித்துவிடப்பட்டபோது
    மௌனமாயிருந்து அன்னியமானான்.
    இவனை பேசவைக்க
    சற்றுமுன் கூட்டமாய்
    நின்றிருந்த நண்பர்களை
    மீளச்சொல்ல வேண்டும்

    திரைப்படம் சென்றோம்
    நண்பர் குழாமுடன்.
    அவனுக்கு
    படம் பிடிக்கவில்லையாம்.
    எனக்கும் பிடிக்கவில்லை
    அவன் என் பக்கத்து இருக்கையில்
    அமராதது!

    எல்லோரும்
    விடுதியில்
    அளவின்றி உண்டு மகிழ
    இவன்
    குளிர் பானம் மட்டும்
    போதுமென்றான்.
    நான் தந்த
    சிக்கன் துண்டுகளை கூட
    நண்பனுக்கீந்தான்.

    நண்பர் குழுவுடன்
    என் வீடு வரை
    வந்தெனை இறக்கிவிட்டபோது
    அவன்
    இருந்த திசை நோக்காமல்
    முதுகு காட்டி நடந்தேன்.

    +++++
    அவசரத்தில்
    மறந்து போய்
    வைத்துவிட்ட கைத்தொலைபேசி
    புத்தக அலமாரியில்
    புதைந்து கிடந்தது.
    முப்பது குறுஞ்செய்திகள்
    அவனிடமிருந்து.
    சினம் விலகி
    உடன் பதிலளிக்கலானாள்.
    விரல் வலிக்க
    இரவு முழுக்க
    அவனை காதலித்தாள்
    குறுஞ்செய்தி வாயிலாக.

  • புலம்பெயர்வு

    வீட்டின் பின்புறம் இருந்த பூந்தொட்டிகளுக்கு நீருற்றிக்கொண்டிருந்தாள் ரிவோலி. சனிக்கிழமை மதியம். சாம்பல் நிறவானம். நவம்பர் மாதத்தில் மஞ்சள் நிறவானத்தை பார்ப்பது அபூர்வம். பொதுவாக சனிக்கிழமை ரிவோலியின் வீட்டில் அவளுடைய மாணவர்கள் வருவது வழக்கம். இன்று யாரும் வரவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தோட்டத்தில் உலாத்திக்கொண்டிருந்தாள்.

    பக்கத்து பங்களாக்காரர்கள் உறங்கிக்கொண்டிருப்பார்கள். வெள்ளியிரவு லேட்நைட் பார்டிகளிலிருந்து அதிகாலை வந்து, அசதி நீங்காமல் தூக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும். அங்கு இரு இளம் பெண்கள் தத்தம் காதலருடன் வசிக்கிறார்கள். அங்கு வசிக்கும் ஒரு ஆடவன், ரிவொலியின் மாணவன். வங்கதேசத்தில் உள்ள சிலேட் நகரிலிருந்து முனைவர் பட்டம் பெற டொரொண்டொ வந்தவன். ரிஸ்வான் என்று பெயர். அவனுடைய காதலி – ரிபெக்கா – சட்டம் பயில்கிறாள். கனடாவைச்சேர்ந்தவள். மற்ற ஜோடியைப்பற்றி ரிவோலிக்கு அதிகம் தெரியாது. ரிஸ்வான் ரிவோலியின் வீட்டிற்கு வழக்கமாக வந்து போகிறவன். ஒரிரு முறை அவனது காதலி ரிபெக்காவும் அவனோடு வந்திருக்கிறாள்.

    இந்த ரிஸ்வான் ரிபெக்காவுடன் கடைசி வரை இருப்பானா? பால் வடியும் முகம் கமிட்மெண்டுக்கு அடையாளமாகாது. அப்படியிருந்தால், தேவ்-வும் என்னுடன் இருந்திருப்பான். தனியாக இருக்கும் பொழுதுகளில் எல்லாம் தேவ் பற்றிய சிந்தனை திரும்ப திரும்ப வருகிறது.

    எங்கு போனார்கள் டேனியலும், சிவப்பெருமாளும்? சனிக்கிழமை மதியம் அவர்கள் செய்யும் ஆய்வு சம்பந்தமான உரையாடலுக்காக வருகிறேன் என்ற மாணவர்கள். டேனியலை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றாள். அவர்களிருவரும் பல்கலைக்கழகத்தில் இருந்தால். அங்கே வந்து கூட உரையாட தயார் என்று சொல்லலாம் என்று நினைத்தாள். டேனியல் போனை எடுக்கவில்லை.

    குளியலுக்கு பின்னர், புத்துணர்வு மீண்டது போலிருந்தது. பாஸ்டா செய்து சாப்பிட்டாள். உப்பு குறைவாக போய் விட்டது. பாதி சாப்பிட்டுவிட்டு, மீதியை ஃப்ரிட்ஜ்-ஜில் வைத்தாள். டேனியலிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. சிவ பெருமாள் தன் உறவினர்களின் இல்லத்திற்கு போய் விட்டபடியாலும், டேனியலின் காதலியின் பிறந்த நாள் விழா ஞாயிறன்று வருவதால் அதன் ஆயத்தப்பணிகளில் காதலிக்கு உதவி புரியவேண்டியிருப்பதாலும், சனிக்கிழமை மதியம் வர இயலாது என்று தெரிவித்திருந்தான். முன்னரே தெரிந்திருந்தால், ரிவோலி தன் தோழிகளிருவரை சந்திக்க சென்றிருப்பாள்.

    தில்லிக்கு போன் செய்து, தந்தையுடன் பேசினாள். “எப்படியிருக்கிறாய்?” என்ரு வாஞ்சையுடன் கேட்டார் ரிவோலியின் தந்தை – சுரேந்திர மெஹ்ரா. பிசினசிலிருந்து ஒய்வு பெற்று கோயில், ஆன்மீகம், நண்பர்கள் என்று காலத்தை கழித்து கொண்டிருக்கிறார். “நீ சம்பாதிக்க வேண்டுமென்று என்ன இருக்கிறது? அவ்வளவு தூரம் சென்று ஆசிரியையாக பணியாற்றும் உனக்கு நம் ஊரில் எளிதாக அதே வேலை கிடைத்து விடாதா? என் பக்கத்தில் இங்கே, தில்லியில் நீ இருக்கலாகாதா?” என்று பலமுறை மன்றாடிக்கேட்டிருக்கிறார். அப்பொதேல்லாம், ஒரு வறட்டு மௌனத்தை விட வேறு பதில் இருந்ததில்லை ரிவோலியிடம். அண்ணனிடம், அண்ணியிடம் மாதம் ஒருமுறை பேசுவதோடு சரி. அண்ணனின் குழந்தைகளிடம் சிற்ப்பான பரிவோ உறவுமுறையோ ரிவோலிக்கு இதுவரை இருந்ததில்லை. அப்படி வருவதற்கான சந்தர்ப்பமும் நிகழவில்லை, ஏனெனில், ரிவோலி தில்லி சென்று அவர்களையெல்லாம் சந்தித்து ஐந்தாறு ஆண்டுகளாகி விட்டன.

    அப்பாவிடம் சில நிமிடங்கள் பேசியபிறகு, சைக்கிளை ஒட்டிக்கொண்டு, பல்கலைகழக கிளப்புக்கு போனாள். கொஞ்ச நேரம் டென்னிஸ் விளையாடினாள். அவளுடன் விளையாட்டில் பங்கு பெற்ற தோழியுடன் உட்கார்ந்து அரட்டை கொஞ்ச நேரம். பின்னர் இருவரும் சேர்ந்து திரைப்படம் காண முடிவு செய்தார்கள். “கறுப்பு அன்னம்” என்ற ஆங்கிலப்படம். ரிவோலி இரண்டு மணி நேரங்களுக்கு திரைப்படத்தில் லயித்திருந்தாள். கூட வந்த தோழி, திரைப்படம் முடிந்தவுடனேயே விடைபெற்றாள். ரிவோலி இரவு உணவை ரெஸ்டாரண்டில் தனியாக உண்ண வேண்டியதாகி விட்டது.

    வீட்டுக்கு திரும்பிய அரை மணி நேரத்தில், தொலைக்காட்சி ஒடிக்கொண்டிருந்த சத்தத்தையும் மீறி ஹாலில் இருந்த சோபாவில் கண்ணயர்ந்தாள். ஒரு மணியிருக்கும். சடக்கென்று விழித்து, உதட்டில் வழிந்த எச்சிலை துடைத்துக்கொண்டாள். தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, படுக்கையறையில் சென்று படுத்தாள். தூக்கம் விலகி விட்டது. நெடுநேரம், நிலையில்லாத சிந்தனைகள். புரண்டு, புரண்டு, மெத்தையே உஷ்ணமாகியது போல பட்டது. அறை ஹீட்டர் அனணக்க வேண்டுமோ? படுக்கையிலிருந்து எழுந்து, ஃப்ரிட்ஜிலிருந்து வைன் பாட்டிலை திறந்து இரண்டு மடக்கு விழுங்கினாள். பாதி படித்து, டேபிளில் மேல் மடித்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய எழுத்தாளர் ஒருவர் எழுதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நாவலை படிக்க ஆரம்பித்தாள்.

    ஞாயிறு காலையில், ரிவோலி விழித்தபோது ஒரே தலைவலி. பால் சேர்க்காமல் காபி குடித்தாள். தேவ் சரியான காபி குடியன். நாளைக்கு ஐந்தாறு முறை குடிப்பான். ரிவோலிக்கு தேவ்வுடன் வசிக்க ஆரம்பிக்கும் முன்னதாக காபி குடிக்கும் பழக்கம் இருந்ததில்லை. காபி குடிக்க ஆரம்பித்ததே, படுதலைவலியென்று, தலை துவட்டும் துண்டை தலையில் கட்டிக்கொண்டு ரிவோலி சயனித்திருந்த ஒரு ஞாயிறன்று தான். சுடச்சுட காபி போட்டு எடுத்து வந்தான். “இந்த அமிர்தத்தை பருகிப்பார்…உன் தலைவலி ஓடிப்போய்விடும்” என்றபடி அவள் அருகில் அமர்ந்து காபிக்கோப்பையை தந்தான். அவன் தோள்களில் சாய்ந்து கொண்டே அருந்தினாள். தலைவலி போனது காபியாலா? அல்லது தேவ்வின் அணைப்பினாலா?

    ரிவோலியுடன் வாழ்ந்த நாட்களில், அவனிடம் மது அருந்தும் பழக்கமிருந்ததில்லை. இப்போது குடிக்க ஆரம்பித்திருக்கலாம். தெரியாது. ரிவோலிக்கு மதுப்பழக்கம் தொற்றிவிட்டிருந்தது. தேவ் அவள் வாழ்க்கையை விட்டு நீங்கிய கொஞ்ச நாட்களில் குடிக்க ஆரம்பித்தாள். ஒரு வருடம் முன்பு, குடல் வியாதி வந்து, சிகிச்சை பெற்றபோது குடிக்கும் பழக்கத்தை மட்டுப்படுத்திக்கொண்டாள்.

    தன் கடந்த வாழ்க்கையின் அங்கம் தேவ். கடந்த காலத்தை முழுதும் மறத்தல் சாத்தியமானதா? தேவ்வின் மேல் நான் கொண்டிருந்த காதல் தர்ககபூர்வமானதல்ல! காதலில் விழுதல் என்ற சொற்றொடர் எத்துனை பொருத்தமானது? குழியை தேர்ந்தெடுத்தா விழுகிறோம்? விபத்தாக, எந்த திட்டமிடலும் இல்லாமல் தானே விழுகிறோம்.

    வெதுவெதுப்பான ஷவர்க்குளியல்! வழக்கத்தை விட அதிகமான நேரம் குளித்தாள். ஒற்றை துண்டை அணிந்தவண்ணம், கண்ணாடியை பார்த்தவாறு, கேசத்தை துடைத்தாள். காதுக்கு மேல், ஒரிரு வெள்ளை முடிகள் எட்டிப்பார்த்தன. கத்திரிக்கோலினால் வெட்டினாள். வெட்டப்பட்ட வெள்ளை முடிகளை, சன்னல் வெளிச்சத்தில் பார்த்தபடியே தடவிக்கொடுத்தாள். தேவ்-வையும் இது மாதிரி தன் வாழ்க்கையிலிருந்து வெகு முன்னரே எடுத்தெரிந்திருக்க வேண்டும். ஏன் முடியாமல் போயிற்று? வேண்டாமென்று வெட்டிய வெள்ளை முடியை தூக்கி எறிய மனமில்லாமல் தடவிக்கொடுப்பது மாதிரியான ஒரு தெரிவை நான் செய்தேன்.

    ரிவோலியும் தேவ்வும் அமெரிக்கா வந்து டெக்ஸாசில் உள்ள ஹண்ட்ஸ்வில் நகரில் உயர் படிப்பு படிக்க ஆரம்பித்த நாட்களில் நடந்த ஒர் உரையாடல் ரிவோலியின் நினைவுத்திரையில் ஒடிற்று.

    “நான் ஒரு ப்ரேக்மடிஸ்ட்…இத்தனை வருடம் காதலித்தது, அமெரிக்கா வரை ஒன்றாக படிக்க வந்து சேர்ந்தது வரை ஓகே. சேர்ந்து ஒரே வீட்டில் இருப்பது கூட சரிதான். ஆனால் ஒன்றை நீ கருத்தில் வைத்து முடிவெடு. என் வீட்டில் என் பெற்றோர் நம் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள். ட்ரெடிஷனல் மார்வாரி பிசினஸ் குடும்பத்தில் பிறந்தவன் நான். எங்கள் கம்யூனிடியை விட்டு வேறு யாரையும் திருமணம் செய்தல் முடியவே முடியாத ஒன்று.”

    தேவ் மேற்கண்டவற்றை ஒரு சலனமுமில்லாமல் சொன்னான். ரிவோலி ஒரு வெறுமையான முகபாவத்துடன் கேட்டுக்கொண்டாள். குழப்பமா? அல்லது கோபமா? கடுமையாக ஏமாற்றப்படும் உணர்வா? எதை அவள் முகம் பிரதிபலித்தது? இரண்டு தினங்கள் இருவருக்குமிடையில் ஒரு சம்பாஷணையும் நடக்கவில்லை. தேவ் ஹாலில் படுத்துக்கொண்டான். படுக்கையறை கதவை சார்த்திக்கொண்டு, வெகுநேரம் சிந்தித்தாள். மூன்றாவது நாளிரவு, படுக்கையறைக்குள் தேவ் அனுமதிக்கப்பட்டான்.

    “உன்னைக்கண்டு பித்தேறி, நீ படித்த கல்லூரியின் ஹாஸ்டல் சுவரை தாண்டிக்குதித்து, நள்ளிரவில் உன் அறை புகுந்து என் காதலை நானேதான் சொன்னேன். அமேரிக்காவில் படிக்கவேண்டும் என்ற உன்னுடைய இலட்சியத்துக்கு குறுக்கே நிற்காமல், அதே சமயம் உன்னை விட்டு பிரியக்கூடாது என்ற எண்ணத்தால், என் குடும்பத்தினரிடம் பிடிவாதம் பிடித்து, நீ சேர்ந்த அதே பல்கலைக்கழகத்தில் சேர்ந்து…..இதெல்லாம் எதற்காக? உன் மேல் கொண்ட கட்டுப்பாடில்லா நிபந்தனையற்ற காதலால்….இனிமேலும் நிபந்தனை விதிக்க மாட்டேன்…உன் படிப்பு முடியும் வரை சேர்ந்தே இருப்போம்…” – என்றாள் ரிவோலி. சொற்கள் தெளிவாக வெளிப்பட்டன.

    “படிப்பிற்கு பிறகு நான் உன்னை திருமணம் செய்யாமல் போனால்..?” – வினவினான் தேவ். புன்னகைத்த மாதிரி இருந்தது.

    “உன் மனம் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உன் பெற்றோர்களிடம் நீ எனக்காக பேசுவாய்”

    “அப்படி பேசாமல் போய், வீட்டில் பார்த்து வைக்கும் பெண்ணை நான் கல்யாணம் செய்து கொண்டால்…?” – புன்னகையுடன் கேட்டான் தேவ். அவன் கைகள் ரிவோலியின் இடைப்பகுதியை லேசாக துழாவிக்கொண்டிருந்தன.. அவள் பதில் கூறுமுன் அவள் இதழ்களை அழுத்தி முத்தமிட்டான்.

    வெள்ளை முடிகளை குப்பையில் எறிந்தாள்.

    அவள் பேராசிரியராக இருக்கும் பல்கலைக்கழகத்தில் கணக்கராக இருக்கும் ஆஃப்ரோ-கரிபியப்பெண் – க்ரிஸ்டினா என்பவள் ரிவோலியின் நண்பி. ட்ரினிடாடில் பிறந்து வளர்ந்தவள். புசுபுசுவென்று சுருண்ட முடியும், உச்ச சாரிரமும் கொண்டவள். ரிவோலி தங்கியிருக்கும் ஊரிலிருந்து பத்து மைல் தள்ளியிருந்த ஒரு கிராமத்தில், டையமண்ட்ஸ் இன் என்ற பெயர் கொண்ட ஒர் அழகான பப் (pub) இருந்தது. எல்லா ஞாயிறு மாலைகளும் ரிவோலியும் க்ரிஸ்டினாவும் அங்கு போவது வழக்கம். அன்று வழக்கத்திற்கு மாறாக ரிவோலி கோனியாக் அருந்தினாள். பபில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ரிஸ்வானும் ரிபெக்காவும் அன்று அந்த பபில் இருந்தார்கள். ரிஸ்வான் ரிவோலியைப்பார்த்து கையாட்டினான்.

    க்ரிஸ்டினாவின் நகைச்சுவையுடன் கூடிய பேச்சை கேட்டு சிரித்துக்கொண்டிருந்தாள். வார்த்தைக்கு வார்த்தை புணர்ச்சியின் ஆங்கிலச்சொல்லை சேர்த்து சேர்த்து க்ரிஸ்டினா பேசிக்கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது.

    ரிவோலியின் கைத்தொலைபேசி கூவியது. பபில் நிலவிய சத்ததில் கைத்தொலைபேசியின் அலறல் காதில் விழவில்லை. க்ரிஸ்டினா தான் சொன்னாள். கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு பபின் வாசலுக்கு வந்தாள். ரிவோலியின் அண்ணியுடைய அக்கா டொரொன்டொவில் வசிக்கிறாள். அவளுடைய அழைப்புதான் அது.

    “ஓ! பபில் இருக்கிறாயா?” – அண்ணியின் அக்காவின் குரலில் ஏளனம் தொனித்தது.

    “இல்லை…இன்று திருமணப்பெண்கள் கொண்டாடும் கர்வாசௌத்…நீ தனியே இருப்பாயே….இன்று இரவு எங்கள் வீட்டில் சாப்பிட அழைக்கலாமென்று பார்த்தேன்….என் கணவரும் காரில் உன்னை அழைத்து வருகிறேன் என்றார்…நீ பிஸி போலிருக்கிறது”

    கைத்தொலைபேசி வைக்கப்பட்டதும் ரிவோலி கசப்பாக உணர்ந்தாள். கண்மண் தெரியா கோபவுணர்வு நெஞ்சில் பெருக்கெடுத்தது. இரண்டு மூன்று பெக் மதுவை வேகமாக குடித்தாள்.

    “எனி திங் ராங்?” என்று க்ரிஸ்டினா கேட்டாள்.

    ஒன்றுமில்லை என்று பொருள் படும்படியாக புணர்ச்சியின் ஆங்கிலச்சொல்லை ரிவோலியும் பயன்படுத்தியதும் இருவரும் குபீரென சிரித்தனர்.

    திடீரென்று, க்றிஸ்டினாவிடம் சொல்லிக்கொண்டு ரிவோலி வீட்டுக்கு கிளம்பினாள். பபின் வாசலை அடைந்ததும் வாந்தியெடுத்தாள். அவள் வாந்தியெடுப்பதை பார்த்த ரிஸ்வானும் ரிபெக்காவும் அவளை காரில் உட்காரவைத்தனர். ரிஸ்வான் காரை செலுத்திச்சென்று, ரிவோலியை வீட்டில் விட்டான்.

    திங்கள் கிழமை ரிவோலி விழிக்கும் போது எட்டரை மணியாகிவிட்டது. அன்று அவளுடைய முதல் லெக்சர் ஒன்பது மணிக்கு இருந்தது. உடல் நிலை சரியில்லையென்று விடுப்பெடுத்துக்கொண்டாள். இது மாதிரி திட்டமிடப்படாத, கடைசி நேர விடுமுறை எடுப்பது அவ்வளவாக நிகழுந்ததில்லை.

    காபி போட்டுக்குடித்து தலைவலியை விரட்ட சோம்பலாக இருந்தது. சோஃபாவில் அமர்ந்து, கண்ணை மூடி உட்கார்ந்திருந்தாள். முந்தைய நாள் மாலை நடந்ததை எண்ணி, ரிவோலிக்கு தன் மீதே வெறுப்பு வந்தது. தன்னைப்பற்றி நெருங்கிய உறவினர்களே வம்பு பேசியும் அவளை கொஞ்சம் கூட பாதிக்காது இருந்திருக்கிறது. எவளோ ஒரு தூரத்து உறவுக்காரி நக்கல் பண்ணியதால் இத்தனை சலனம் ஏன் ஏற்பட்டது?

    தில்லியிலிருந்து அண்ணனின் போன் செய்தான். சேம விசாரிப்புக்கு பிறகு அவன் சொன்ன செய்தி ரிவோலியினுள்ளில் அதிசயமாக எந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கவில்லை.

    “கேள்விப்பட்டாயா? ஒரு துயரகரமான சம்பவம். உன் பழைய நண்பன் – தேவ் – தன் மனைவி, தன் மூன்று வயது மகன் – இவர்களை தன் கைத்துப்பாக்கியால் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டான்….கலிபோர்னியவில் உள்ள சான்ஹொசேயில் வசித்து வந்திருக்கிறான். ஒரு வருடம் முன்னர் பங்குசந்தையில் எல்லா முதலீடுகளையும் இழந்ததால், மனனிலை சரியில்லாமல் அலைந்திருக்கிறான்… சி என் என்னில் காட்டுகிறார்கள் பார்…”

    சி என் என்னில் தேவ்வின் பழைய புகைப்படமொன்றை ஸ்டில்லாக காட்டிக்கொண்டிருந்தார்கள். ரிவோலி எடுத்த புகைப்படம். எட்டு வருடங்களுக்கு முன்னர் நயாகராவில் எடுத்தது.

    பின் குறிப்பு : ரிவோலி கனடாவிலிருந்து தாயகம் திரும்பிவந்துவிட்டாள். சண்டிகர் நகரில் வாழ்கிறாள். வழக்கறிஞர் ஒருவரை மணந்து கொண்டாள். அவளுக்கு ஆறு மாதம் முன்பு ஒர் அழகான பெண் குழந்தை பிறந்தது.

    (நன்றி : திண்ணை) – http://puthu.thinnai.com/?p=8895

  • சந்தை

    வீட்டில் செய்த
    பண்டங்களை
    விற்க
    கடைகடையாய் ஏறி இறங்கினேன்.
    ஒரு கடைகாரனும்
    என் பண்டத்தை கடையில் வைத்து விற்க
    சம்மதிக்கவில்லை…
    பண்டங்களை
    நானே தின்று தீர்க்கவேண்டியதாகிவிட்டது.
    அடுத்த நாளும்
    பண்டங்களை செய்தேன்..
    விற்பனை செய்ய
    தெருவெங்கும்
    கூவிச்சென்றேன்.
    யார் வீட்டு
    கதவுகளும் திறக்கவில்லை
    காசு கொடுத்து
    வானொலியில் என் பண்டத்தின் பெயரை
    ஒலிக்கச்செய்தேன்.
    ஒன்று கூட விற்கவில்லை.
    சுவரொட்டிகளும்
    விளம்பரங்களும்
    பத்திரிக்கைகளும்
    எதனாலும்
    கைகூடவில்லை விற்பனை.
    நடுத்தெருவில்
    வீசியெறிந்தேன்
    என் பண்டத்தை.
    வீதியெங்கும் சிதறிக்கிடந்தவற்றை
    என்னவென்று பார்த்து
    பின்னர் சுவைத்தனர்.
    அடுத்த நாள்
    பண்டத்தை
    சமைக்கத்துவங்கிய போது
    வாசலெங்கும்
    நுகர்வோர்களின் வரிசை.

  • வாயிற்காவலன்

    கூட்டம் பெருகிவிட்ட

    சிற்றுண்டி நிலையத்தில்

    வருபவர்களை

    வாயிலில் காக்கவைத்து

    உள்ளிருக்கும்

    கூட்டம் தணிந்த பின்

    காத்திருப்போரை

    உள்ளே விடும்

    வாயிற்காவலனொருவனை பார்த்தேன்.

    நிகழ்கால இருப்பை பொறுக்காமல்

    நிற்காமல் நகரும் நினைவுகள்.

    இறந்த கால அவஸ்தைகளை அசை போடும் ;

    எதிர் காலத்தை எண்ணி

    அல்லலுறும்.

    உள் புகும் நினைவுகளை

    வாயிலில் நிறுத்தி

    பரிசோதித்து

    வடிகட்டி உள்ளனுப்பும்

    காவலனொருவன் எனக்கு கிடைப்பானா?

  • சொல்

    குதூகலம்.
    மகிழ்ச்சி.
    சந்தோஷம்.
    உவகை.

    சொற்கள்
    உணர்வின் அடையாளமாக
    பரிமாறப்பட்டன.
    திகட்டிவிட்டதென்று
    எழுந்து கொள்ள முடியாமல்
    முற்றுப்புள்ளி எங்கோ போய் ஒளிந்திருந்தது.

    அலுப்பு
    சலிப்பு
    வெறுப்பு
    இயலாமை

    சொற்களில்லாமல்
    சொன்னது
    உடல் மொழி.

    சொற்கள்
    முற்றுப்புள்ளியை
    அழைத்து வந்து
    பொருத்திக்கொண்டு
    அமைதியாயின.

    புன்னகை
    புன்முறுவல்
    குறும்புப்பார்வை
    வெடுக்கென எழுதல்

    உடல்மொழி
    கட்டைவிரலை
    உயர்த்திக்காட்டி
    வெளியேறியது…

    சொற்கள்
    அமைதியாய்
    காகிதத்தில் வந்தமர்ந்தன
    கவிதையாக.

    இறுமாப்புடன்
    திரும்பிய
    உடல்மொழி
    கவிதையாக
    உருக்கொண்ட
    சொற்களைக்கண்டு
    மோனமாகி
    நெற்றி அகன்று
    சிந்தனை வயப்பட்டது.

    ”வாய் வார்த்தையாகும் சொற்கள்
    எழுத்துருவாகியும் பேசுகின்றன.”

    சிந்தனையும்
    சொற்களாகவே வெளிப்படுவதை
    உணர்ந்த
    உடல் மொழி
    மரியாதையாய்
    தலை குனிந்தது.

    சொற்கள் நிரம்பிய
    கவிதை புத்தகத்தின்
    பக்கங்கள் காற்றில் புரண்டன.

  • அறை முழுதும் அரவங்கள்

    சிறுவயதிலிருந்தே நாகசொப்பனம் கண்டு அச்சத்தில் பலமுறை தூக்கம் விழித்திருக்கிறேன். சிறுவயதில் பாம்புக்கனவு வந்து தூக்கத்தில் கத்தினால், என் தாய்க்கு பக்கத்தில் தூங்கக்கிடைக்கும். வாலிபனான பிறகுகூட பாம்புக்கனவுகள் தொடர்ந்தன. இளமையில் காம உணர்ச்சி மிகுந்திருப்பதால் பாம்புக்கனவு வரக்கூடும் என்று சொன்னார்கள். ஒரு ஜோசியன் ஏன் ஜாதகத்தை பார்த்துவிட்டு, "உங்கள் கண்ணுக்கு நாக தரிசனம் அடிக்கடி கிடைத்து கொண்டிருக்கும்" என்றார். அவை கனவு தரிசனங்களா ? அல்லது நிஜ தரிசனங்களா? என்று தெளிவு படுத்தவில்லை. திருமணமான பிறகும் பாம்புகள் கனவில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. இப்போதெல்லாம் பாம்புகள் வருவது வெகுவாக குறைந்துவிட்டது.

    சிறுவயதிலும் இளம் வயதிலும் பாம்புகள் கனவில் பயமுறுத்தும். ஆனால் பொதுவாக ஒற்றை பாம்பு தான் வரும். திருமணமான பிறகு வந்த கனவுகளில் பாம்புகள் ஏராளமாக வரும். நானிருக்கும் ஓர் அறையின் எல்லா அறைகலனிலும் ஒவ்வொரு பாம்பும் படமெடுத்து நிற்பது போன்ற கனவுகள். சாதுவாக படமெடுத்து நிற்கும். சாந்த சொருபமாக த்யானத்தில் ஈடுபடுபவை போல தோற்றமளிக்கும். அல்லது என் தூக்கத்தில் வரும் கனவுக்குள் நுழைந்து அவைகள் படமேடுத்தபடியே உறங்குகின்றனவோ? நான் பயத்தில் வியர்த்திருப்பேன். சப்தநாடியும் ஒடுங்கியிருக்கும். கனவிலிருந்து விடுபட்டவுடன், அந்த பாம்புகளின் சாந்தசொருபத்தை இன்னும் கொஞ்சநேரம் பார்த்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றும்.

    இப்போதெல்லாம் பாம்புக்கனவுகள் அதிகமாக வருவதில்லை. கடைசியாக வந்த பாம்புக்கனவில், நான் பாம்புகளோடு பேசிக்கொண்டிருப்பது போல வந்தது.

    உண்மையாக சொல்லப்போனால், பாம்பை அதன் இயற்கை சூழ்நிலையில் இதுவரை நான் பார்த்ததில்லை. பாம்புப்பண்ணைகளிலும், விலங்குகள் சரணாலயங்களிலும் தூர நின்று பார்த்திருக்கிறேன். இயற்கை சூழ்நிலையில் பார்த்தால் பயந்துபோவேன் என்றுதான் நினைக்கிறேன். இரவு நேரங்களில் கழிவறையில் சிறுநீரோ மலமோ கழிக்கும்போது "பாம்பு இந்த கழிவறையில் நுழைந்தால் என்ன செய்வது?" என்ற சிந்தனை தோன்றி என்னை சில்லிட வைக்கும். நேரிடையாக தோன்றாமல், நினைத்த மாத்திரத்தில் நெஞ்சில் பயமுட்ட வல்ல ஒரே ஜந்து பாம்புதானே!

    சில வாரங்களுக்கு முன் தென்னிந்தியாவில் உள்ள சுற்றுலாத்தலமொன்றில் ஐந்து நட்சத்திர ஓட்டலோன்றில் காபி பருகிக்கொண்டிருந்தேன். எனக்கு பக்கத்து மேசையில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த இளம் தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு வயதான மகனுடன் அமர்ந்து உணவு உண்டுகொண்டிருந்தனர். மகன் மேசையைச்சுற்றி ஓடிக்கொண்டு விளையாட்டு காட்டிகொண்டிருந்தான். ஒரு சமயத்தில் கால் தடுக்கி விழப்போனபோது, அவனை தாங்கி நான் பிடித்தேன். பின்னர், நன்றியுணர்ச்சியுடன் என்னை அவர்களுடன் சேர்ந்தமர அழைத்தார்கள்.

    ஜிம் வட ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் நகரை சேர்ந்தவர். ஜிம்மின் மனைவி – எலிசபெத்தும் டார்வின் நகரை சார்ந்தவர். அவர்களிருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னர், அவர்கள் நடத்தும் நிறுவனத்தின் கிளையை இந்தியாவில் துவங்கும் நோக்கத்துடன் வந்தனர். இந்தியாவில் ஒரிரு வருடம் வசிக்கும் எண்ணமிருந்தது. சுற்றுலாத்தலத்தையொட்டிய சிறு நகரத்தில் சொகுசு பங்களாவொன்றை வாடகைக்கு எடுத்திருந்தனர்.

    பங்களாவின் உரிமையாளர் அந்த வீட்டின் ஒரறையை மட்டும் பூட்டி வைத்திருந்தார். பழைய தட்டுமுட்டு சாமான்களும், பரம்பரை அறைகலன்களும் உள்ளேயிருந்தன. அறைகலன்களோடு குடியிருந்த பாம்புகளைப்பற்றி யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை. ஒரு நாள், சமையலறையில் தேநீர் தயாரிக்க வந்த ஜிம் கேஸ் அடுப்புக்கு கீழ் படுத்திருந்த பாம்பை பார்த்தார். தொலைக்காட்சியில் வரும் வனவிலங்குகள் பற்றிய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் பார்க்கும் ஜிம் படுத்திருந்த பாம்பைக்கண்டு “த்ரில்” ஆனார். ஒரு குச்சியின் உதவியுடன், லாவகமாக பாம்பை எடுத்து, கொல்லைப்புறத்தில் உள்ள மதிலுக்கு வெளியே இருந்த வயல் பகுதிக்குள் எரிந்தார். கிட்டத்தட்ட இரு நாளைக்கு ஒருமுறை பாம்பை எடுத்து வெளியே எறியும் பயிற்சி நடந்தது. சில நாட்களுக்கு பிறகு, படுக்கையறையின் தரையில் ஒரு பாம்பு காணப்பட்டது. அப்பொது, ஜிம்மின் மகன் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தான். எலிசபெத் தோட்டக்காரனை அழைத்து, அந்த பாம்பை அப்புறப்படுத்தினாள்.

    பாம்பின் வரவு பெருக ஆரம்பிக்கவே, ஜிம் வீட்டின் உரிமையாளரை அழைத்து பூட்டியிருந்த அறையை திறக்க வைத்தார். திறந்த அறைக்குள், அவர்கள் கண்ட காட்சி படு பயங்கரமாக இருந்ததாம்…..கிட்டத்தட்ட நாற்பது – ஐம்பது நாகங்கள் அந்த அறைக்குள் காணப்பட்டன. வீட்டுக்காரர் வாயடைத்துப்போனாராம்…..பல வருடங்களாக பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த அந்த அறையின் ஃப்ளோரிங்கை மாற்றும் பேச்சு வந்த போதெல்லாம், கஞ்சத்தனப்பட்டு தட்டிக்கழித்து வந்தது மிகப்பெரும் தவறுதானென ஒப்புக்கொண்டார்.

    ஜிம்மும் எலிசபெத்தும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்ததன் பிண்ணனி இதுதான். வேறு ஒரு பங்களா கிடைக்கும் வரை தங்கியிருப்பார்கள். ”வீட்டு சாமான்களை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். ”சாமான்களை வேறு வீடு வாடகைக்கு கிடைத்த பிறகே போய் எடுத்து வர வேண்டும்?” என்றார் ஜிம். ”சாமான்களை எடுக்கப்போகும் போதும் பாம்புகள் அங்கு இருக்குமா?” என்று கேட்கலாமென்று பார்த்தேன் ; கேட்கவில்லை.

    அன்று இரவு கனவில் மீண்டும் பாம்புகள் விஜயம் செய்யும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பாம்புக்கனவு வரவில்லை. நீண்டதொரு ரயிலில், பெயர் தெரியாத ஒர் இடத்திற்கு போவது போல் கனவு கண்டேன். கனவில் ரயில் பாம்புப்புற்றுகள் நிறைந்த ஒர் இடத்தை தாண்டி சென்றது. பாம்புகளெதுவும் புற்றிலிருந்து எட்டிப்பார்க்கவில்லை.

    ஒன்று அறிய ஆசை. நிஜம்மாகவே, பாம்புப்புற்றுகளில் பாம்புகள் வாழ்கின்றனவா?

    ஒரு குட்டிக்கதை

    புறநகரின் ஆள் அரவமில்லாத மாளிகையொன்றில் அரவங்கள் புகுந்து மொய்த்தன. மாளிகைவாசிகள் குலை நடுங்கி வெளியெறினர். பாம்பு பிடிக்கும் மனிதர்களை கூட்டி வந்தனர். பாம்புகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே நடந்த யுத்தத்தில் ஒவ்வொரு உயிரிழந்த பாம்புக்கும் ஒன்றன் பின் ஒன்றாக பாம்புகள் வந்து கொண்டேயிருந்தன. மனிதர்கள் சோர்வுற்று இறுதியில் அம்மாளிகையை பாம்புகளின் ஆலயமாக ஆக்கினர். ஆலயம் என்றாலும் பக்தர்களெல்லாரும் தூர நின்றே தரிசிப்பார்கள். பின்னர் புராணக்கதைகள் புனையப்பட்டு அவ்வாலயம் பெயரும் புகழும் பெற்றது.

    மாளிகையையொட்டி பூ விற்கும் கடைகள், அர்ச்சனை தட்டு விற்பவர்கள், பக்தர்களின் உடைமைகளை பாதுகாப்பவர்கள் என்று பலருக்கும் வயிறு நிறைந்தது. நெரிசல் அதிகமாகி, வெளிச்சம் அதிகமாகி… பாம்புகள் ஆலயத்தை விட்டு அகன்றன. ஆலயத்தின் வாசலில் சில பாம்புகள் உயிரை விட்டன. தூர நின்று வழிபடும் பக்தர்களோ பாம்புகள் இல்லாத ஆலயத்தில் பாம்புகள் இருப்பதாக எண்ணி பாம்புத்தெய்வங்களை வழிபடுகின்றனர்.

    பாம்பில்லாததோர் இடத்தை ஆலயமாக தொழுவது பகுத்தறிவன்று என்று சொல்லி ஒரு சாரார் கொடிபிடித்தனர். அவர்கள் குரலோங்க பாம்பாலயத்தை தொழுவது நின்றது. மாளிகை வாசிகளின் வழித்தோன்றல்கள் திரும்பி வந்து புனருத்தாரணம் செய்து வசிக்கத்துவங்கினர். வீட்டின் பின்னே ஒளிந்திருந்த குட்டிப்பாம்பை வளர்த்தனர். அங்கு இப்போது பாம்புகளின் சரணாலயம் இருக்கிறது. நூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் அங்கு வேலை செய்கின்றனர். இப்போது அந்த மாளிகையில் பாம்புகள் – மனிதர்கள் இருவரும் வாழ்கின்றனர்.

    +++++

    என்னை மிகவும் கவர்ந்த பாம்பு பற்றிய கவிதையொன்றை கீழே தருகின்றேன்.

    கவிதையின் தலைப்பு : பேட்டி***

    எழுதியவர் : எம் டி முத்துகுமாரசாமி

    கிடா விழுங்கும் மலைப்பாம்பல்ல
    நான் என அறிய
    வீசினால் தண்ணீர்
    அடித்தால் செத்தது
    தாண்டினால் பழுது
    கக்கினால் ரத்தினம்
    கடித்தால் விடம்
    சுருட்டினால்
    பைந்நாகப் பாய்
    விரித்தால்
    சிவலிங்கக் குடை
    தரிசித்தால்
    தன் வாலைத் தானே கவ்வுமிது.

    *** “நீர் அளைதல்”கவிதை தொகுதியிலிருந்து.

    கவிதை தொகுதியைதரவிறக்க : https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0BzHCwqQ3UxT7ZDNmYjQ1YzctNTk1Ni00MjMyLThkODktNGNmOTYyYjMyMGNi&hl=en_US

  • வாசல்

    சிற்றூரில்

    வாழ்ந்திருந்த சிறுவயதில்

    விடியற்காலம்

    வாசற்படியில்

    நான் படிக்கும் சத்தத்தோடு

    விதவிதமான பறவைகளின்

    சத்தங்களும் சேரும்

    சேவலின் கூவல்

    காகங்களின் கரைச்சல்

    குருவி, மைனாக்கள், மற்றும்

    பெயர் தெரியா பறவைகள்

    வரும் பகலுக்காக

    ஆயத்தமாகும் சத்தங்கள்

    இப்போதெல்லாம்

    விடியற்காலத்தை

    சந்திப்பதேயில்லை

    பறவைகளின்

    சத்தமும் கேட்பதேயில்லை

    வாசல் மட்டும் இருக்கிறது….

    பக்கத்து ஃப்ளாட்டின்

    செருப்புகள் சிதறி

  • தோற்றுப்போன கவிதை முயற்சி

    என் கவிதைக்கான
    கருப்பொருளாக
    நீரைத் தேர்ந்தெடுத்தேன்.
    பீய்ச்சியடித்த ஊற்று,
    மணலில் சீறிப்பாய்ந்து
    பாறைகளைத்தள்ளி
    விரையும் காட்டாறு.
    அதி உச்சியின் மேலிருந்து
    கொட்டும் அருவி.
    சமவெளிகளில்
    நகரும் நதி.
    கிளைக்கும் கால்வாய்கள்.
    புனித நகரங்களின்
    இரு மருங்கிலும்
    படரும் ஜீவ நதி.
    அணைகளால்
    தடுக்கப்பட்ட ஒட்டத்தை
    தன் மட்டத்தை உயர்த்தி
    மீட்டெடுத்து
    கடும் வேகத்தில் பயணமாகி,
    பரந்து விரிந்த கடலுடன்
    சங்கமமாகி
    தன் அடையாளமிழக்கும்
    ஆறு.
    குழாயிலிருந்து
    விடுபட்டு
    கழுவியில் நிறைந்து,
    குழிந்து,
    வெளிச்செல்லும்குழாயின்
    உள் புகும்
    நகராட்சி நீர்.
    துணியால் பிழியப்பட்டு
    துணிக்கு ஈரத்தன்மையை ஈந்து
    தன்னை அசுத்தமாக்கி
    வாளியில் நிறைந்து
    வாடிய செடியின் மேல்
    கொட்டப்பட்டு
    மண்ணுக்குள் ஐக்கியமாகி
    மந்திரம் போல் செடியை துளிர வைத்து….
    நீரை
    சொற்களுக்குள் அடக்க
    முடியவில்லை என்னால்.
    காதுக்குள் நீர் நுழைந்த அவஸ்தை
    என் சிந்தனையில்.
    நீரின் எந்த வடிவங்களும்
    என் கவிதைக்குள்
    சிக்கவில்லை.
    முழுமையோ
    வடிவமோ பெறாமல்
    நின்று போனது என் கவிதை முயற்சி.
    களைப்பை போக்க
    கண்ணாடிகோப்பையில்
    நிரம்பியிருந்த தண்ணீரைப்பருகினேன்.
    நான் பருகிய நீர்
    என் உடல் உப்பை எடுத்துக்கொண்டு
    வியர்வையாக
    வெளிப்பட்டு
    மண்ணில் சிந்தி
    மறைந்து போனது.
    சிந்திய இடத்தில்
    முளைத்திருந்த
    உலர்ந்த புற்களுக்கு
    பச்சையம் வழங்கும் திட்டமோ?