Blog

  • கதவுடன் ஒரு மனிதன் – சச்சிதானந்தன்

    சமீபத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கு கொள்வதற்காக நண்பர் எம்டிஎம் தில்லி வந்திருந்தார். இக்கருத்தரங்கில் பார்வையாளனாக கலந்து கொண்டேன். கருத்தரங்கை மட்டுறுத்தியவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் அவர்கள். சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருக்கும் சச்சிதானந்தன் இரு வருடங்களுக்கு முன்னர் நோபல் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்று சொல்லப் படுகிறது. சாஹித்ய அகாடமியின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு முன்னர் கேரளாவில் ஆங்கிலப் பேராசிரியாக இருந்தார். ஏகப்பட்ட தேசிய சர்வ தேசிய விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

    1996 முதல் தில்லியில் வசிக்கிறாராம். தில்லியில் வசிப்பது பற்றி அவரிடம் கேட்ட போது “எனக்கும் தில்லிக்குமான உறவு அன்பு – வெறுப்பு இரண்டுங் கலந்தது” என்று பதிலளித்தார்.

    இச்சந்திப்புக்கு முன்னர் அவருடைய கவிதைகளைப் படித்ததில்லை. எம்டிஎம் சச்சிதானந்தனின் எழுத்தை சிலாகித்துப் பேசினார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சில கவிதைகளை இணையத்தில் வாசித்தேன். அவருடைய கவிதை நூல்களை வாங்கி ஆழ்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியிருக்கிறது. அவருடைய மூன்று கவிதைத் தொகுதிகளின் தமிழாக்கங்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன என்று அவருடைய இணைய தளம் (http://www.satchidanandan.com/index.html) சொல்கிறது. வாங்க வேண்டும்.

    கவிஞர் சச்சிதானந்தனின் அனுமதியுடன் “A man with a door” என்ற அவருடைய கவிதையின் தமிழாக்கம் கீழே.

    கதவுடன் ஒரு மனிதன்
    ஒரு மனிதன் கதவைச் சுமந்த படி
    நகரத்தெருவினூடே நடக்கிறான் ;
    அவன் அதனுடைய வீட்டை தேடுகிறான்.

    அவனின் மனைவியும்
    குழந்தைகளும் நண்பர்களும்
    அக்கதவின் வழி உள்ளே வருவதை
    அவன் கனவு கண்டிருக்கிறான்.
    இப்போதோ முழுவுலகமும்
    அவனால் கட்டப்படாத வீட்டின்
    கதவினூடே நுழைந்து செல்வதை
    அவன் பார்க்கிறான்.

    கதவின் கனவு
    உலகை விட்டு மேலெழுந்து
    சுவர்க்கத்தின் பொன் கதவாவது.
    மேகங்கள்;வானவிற்கள்
    பூதங்கள், தேவதைகள் மற்றும் முனிவர்கள்
    அதன் வழி நுழைவதை
    கற்பனை செய்கிறது,

    ஆனால் கதவுக்காக காத்திருப்பதோ
    நரகத்தின் உரிமையாளர்.
    இப்போது கதவு வேண்டுவது
    மரமாக மாறி
    இலைச்செறிவுடன்
    தென்றலில் அசைந்தவாறே
    தன்னைச் சுமந்திருக்கும்
    வீடற்றவனுக்கு
    சிறு நிழலைத் தருவதே.

    ஒரு மனிதன் கதவைச் சுமந்த படி
    நகரத்தெருவினூடே நடக்கிறான் ;
    ஒரு நட்சத்திரம் அவனுடன் நடக்கிறது.

    MDM&KSatchidananthan

    (எம்டிஎம், நான், கவிஞர் சச்சிதானந்தன்)

  • மிலிந்தனின் கேள்விகள் 2

    milin
    சொல்வனம் இதழ் 80 இல் வெளியான கட்டுரையை வாசித்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “முன்னுரையில் ஆர்வமூட்டும் இரண்டு வினாக்களைப் பட்டியலிட்டு அவற்றிற்கு மிலிந்தா பன்ஹா விடையளிக்கிறது என்றீர்கள்; முழு கட்டுரையிலும் ’ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பது எது?’ மற்றும் ‘ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது?’ என்ற வினாக்களுக்கு விடை இல்லையே” என்றார். மற்ற வாசகர்களுக்கும் இது தோன்றியிருக்கலாம்.

    இவ்விரண்டு வினாக்களுக்கும் “மறுபிறப்பு” என்ற இரண்டாவது அத்தியாயத்தில் விடை இருக்கிறது. அதன் சில பகுதிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்

    (1)

    ”நாகசேனரே, மறு பிறப்பெடுத்த ஒருவன் அதே மனிதனா? அல்லது வேறொருவனா?”

    ”அவனுமில்லை. வேறொருவனுமில்லை”

    ”உதாரணம்?”

    ”பானையில் இருக்கும் பால், தயிராகவும், பின்னர் வெண்ணையாகவும், பிறகு நெய்யாகவும் மாறுகிறது. நெய், தயிர், வெண்ணை இவை எல்லாம் பாலைப் போன்றதே என்று சொல்வது சரியானது அல்ல; ஆனால் அவைகளெல்லாம் பாலில் இருந்து வந்தவையே, எனவே அவைகளெல்லாம் வேறுவேறானவை என்றும் சொல்ல முடியாது”

    (2)

    ”மறுபிறப்பெடுக்காமல் இருக்கப் போகிறவன் அதைப் பற்றி அறிவானா?”

    “ஆம் வேந்தனே”

    ”எப்படி அறிவான்?”

    “மறுபிறப்புக்கான காரணங்களும் சூழ்நிலையும், முடிவுக்கு வருவதன் வாயிலாக. உழாமல், நடாமல், அறுவடை செய்யாமல் இருக்கும் விவசாயி, களஞ்சியம் நிரம்பவில்லை என்பதை அறிவான்.”

    (3)

    ”மறுபிறப்பெடுக்காமல் இருக்கப் போகிறவன் துன்பத்தை உணர்வானா?”

    ”அவன் உடல் வலியை உணரலாம் ; மன வலியை உணர மாட்டான்”

    “அப்படி அவன் வலியை உணர்வானேயானால், அவன் ஏன் உடன் மரணத்தை தழுவி, தத்தளிப்பில்லாமல், துக்கத்தை முடிவுக்கு கொண்டு வரக் கூடாது?”

    ”அருகன் வாழ்வின் மேல் விருப்போ வெறுப்போ கொள்ளாதவன். கனியாத பழத்தை அவன் அசைத்து உதிர்ப்பதில்லை; பழத்தின் முதிர்ச்சிக்காக காத்திருக்கிறான். புத்தரின் முக்கிய சீடரும் வணங்குதற்குரியவருமான சரிபுத்தர் இவ்வாறு கூறுகிறார் :-

    ”மரணமுமில்லை ; நான் நெஞ்சார விரும்புவது வாழ்வுமில்லை.
    சம்பள வேலைக்காரன் போல
    காலம் கடத்துகிறேன்.
    மரணமோ வாழ்க்கையோ அல்ல நான் வேண்டுவது
    கவனத்துடனும் தெளிவான புரிதலுடனும்
    காலம் கடத்துகிறேன்”
    – (தேரகதா 1002-1003)

    (4)

    ”இன்ப உணர்ச்சி ஆரோக்கியமானதா, ஆரோக்கியமற்றதா, அல்லது நடு நிலையானதா?”

    ”இம்மூன்றில் எதுவாகவும் இருக்கலாம்”

    “வணக்கத்துக்குரியவரே, ஆரோக்கியமான நிலைகள் துன்பம் தராதவையாக இருக்குமென்றால், துன்ப உணர்வைத் தருபவை ஒவ்வாதவையாக இருக்குமென்றால், வலியைத் தரும் ஆரோக்கியமான நிலை இல்லாமல்தானே இருக்கும்?” [விளக்கம் : ஆரோக்கியமான கருமங்கள் வலியைத் தருவனவல்ல ஆனால் அக்கருமங்களை செய்தல் கடினம் என்று நாம் எண்ணுவதற்கு காரணம் நம்முடைய பற்றும் வெறுப்புமே. ஒவ்வாத காரியங்களின் விளைவுகள் வலியுணர்ச்சி தருவன ஆனால் அக்காரியங்களைச் செய்து மகிழ்வடையக் காரணம் நம்முடைய மயக்கமே)

    ”அரசனே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதன் ஒரு கையில் சூடான இரும்பு பந்தையும், இன்னொரு கையில் பனிக்கட்டியாலான பந்தையும் எடுத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டால், இரண்டும் அவனுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துமா?”

    ”கண்டிப்பாக”

    “அப்படியானால், உங்களுடைய அனுமானம் தவறாகிப் போகும். அவை இரண்டும் சூடானவையாக இல்லாதிருக்குமானால், சூடு அசௌகரியத்தை ஏற்படுத்துமானால் மற்றும் அவை இரண்டும் குளிர்ச்சியாக இல்லாதிருக்குமானால், குளிர்ச்சி அசௌகரியத்தை தருமானால், அசௌகரியம் சூட்டிலிருந்தோ குளிர்ச்சியிலிருந்தோ எழுவதில்லை என்றுதானே பொருள்?”

    ”உங்களுடன் என்னால் விவாதிக்க இயலாது. தாங்களே விளக்குங்கள்”

    பெரியவர் மன்னனுக்கு அபிதம்மத்தை போதிக்கலானார். “இவ்வுலகோடு இணைந்த இன்பங்கள் ஆறு. துறவோடு இணைந்தவை ஆறு. உலகியல் துக்கங்கள் ஆறு ; துறவு சார்ந்த துக்கங்கள் ஆறு. இரண்டு வகையிலும் நடுநிலை சார்ந்த உணர்ச்சிகள் ஆறு. மொத்தம் முப்பத்தியாறு. இறந்த, நிகழ் மற்றும் வருங்காலம் எனும் மூன்று காலங்களிலும் எழும் முப்பத்தியாறு உணர்ச்சிகள் ; ஆக மொத்தம் நூற்றியெட்டு உணர்ச்சிகள்.”

    (5)

    “நாகசேனரே, மறுபிறப்பெடுப்பது எது?”

    “மனமும் பருப்பொருளும்”

    “இதே மனமும் பருப்பொருளும்தான் மறு பிறவி எடுக்கிறதா?”

    “இல்லை. ஆனால் இம்மனமும் பருப்பொருளும் சேர்ந்து கருமங்களைப் புரிகின்றன. அக்கருமங்களால் இன்னொரு மனமும் பருப்பொருளும் பிறக்கிறது. ஆனால், மனமும் பருப்பொருளும் அதன் முன்னைய கருமங்களின் விளைவுகளிலிருந்து விடுதலையாவதில்லை”

    ”ஏதாவது ஓர் உதாரணம் தாருங்கள்”

    “ஒரு மனிதன் சிறு கனலை ஊதி தன்னை வெப்பப்படுத்திக் கொண்டபிறகு, அக்கனலை அப்படியே எரியவிட்டு அவ்விடத்திலிருந்து அகல்வது போன்றது இது. அக்கனல் பரவி அண்டை வயலொன்றின் விளைச்சலை எரித்து சாம்பலாக்கிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிலத்தின் உரிமையாளன் இம்மனிதனை பிடித்து, அரசன் முன்னால் விசாரணைக்குக் கொண்டு வந்தானென்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அம்மனிதன் “இந்த ஆளின் வயலுக்கு நான் தீ வைக்கவில்லை. நான் அணைக்காமல் விட்டுப் போன தீயும் வயலை எரித்து சாம்பலாக்கிய தீயும் வேறு வேறானவை. எனவே நான் குற்றவாளியல்ல” என்று சொல்கிறான். அம்மனிதன் தண்டிக்கப்படத்தக்கவனா?”

    ”நிச்சயமாக. அவன் என்ன சொன்னாலும் பிந்தைய நெருப்பு முன்னர் பற்றி வைக்கப்பட்டதிலிருந்து வந்தது என்பதே உண்மை”

    ”ஆகையால் இம்மனமும் பருப்பொருளும் சேர்ந்து கருமங்களைப் புரிகின்றன. அக்கருமங்களால் இன்னொரு மனமும் பருப்பொருளும் பிறக்கிறது. ஆனால், மனமும் பருப்பொருளும் அதன் முன்னைய கருமங்களின் விளைவுகளிலிருந்து விடுதலையாவதில்லை”

    (6)

    ”மனம்-பருப்பொருள் பற்றி விளக்கினீர்கள். எது மனம்? எது பருப்பொருள்?”

    ”எதெல்லாம் தூலமோ அது பருப்பொருள், எதெல்லாம் நுட்பமானவைகளோ அகம் சார்ந்த மனநிலைகளோ அது மனம்.”

    “இவையிரண்டும் தனித்தனியே ஏன் பிறப்பதில்லை?”

    ”முட்டையின் கருவும் ஓடும் போன்றது இது. இவையிரண்டும் சேர்ந்தே எழுகின்றன ; நினைவுக்கெட்டாத காலந்தொட்டு இவைகள் இணைந்தே இருக்கின்றன.”

    (7)

    “நினைவுக்கெட்டாத காலம்” என்று நீங்கள் சொல்லும்போது, காலம் என்றால் என்ன? அப்படியொன்று இருக்கிறதா?”

    ”காலம் என்றால் கடந்தது, நிகழ்வது மற்றும் வரப்போவது. சிலருக்கு காலம் என்ற ஒன்று இருக்கிறது ; சில பேருக்கு இல்லை. எங்கு மறுபிறப்பெடுப்பவர்கள் இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் காலம் என்ற ஒன்று இருக்கிறது. எங்கு மறுபிறப்பு எடுக்காமல் இருக்கப் போகிறவர்கள் இருக்கிறார்களொ, அவர்களுக்கெல்லாம் காலம் என்ற ஒன்று இல்லை”

    “சரியாகச் சொன்னீர்கள் நாகசேனரே. நீங்கள் பதிலளிப்பதில் வல்லவர்”

    ~~~0~~~

    Source : Pesala, Bhikkhu (ed.), The Debate of King Milinda: An Abridgement of the Milindapanha. Delhi: Motilal Banarsidass, 1992. Based on Rhys Davids (1890, 1894)

    நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=23844)

    Milinda Panha

  • மிலிந்தனின் கேள்விகள்

    jcmilinda1
    ”மிலிந்தா பன்ஹா” பௌத்த இலக்கியத்தின் ஒரு புகழ் பெற்ற நூல் : ஏறக்குறைய கி.மு முதலாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம். பௌத்த தத்துவங்களை எளிதாகவும் கவனத்தில் கொள்ளத்தக்க வகையிலும் இந்நூல் பேசுகிறது. பாக்ட்ரியா என்ற பிரதேசத்தை ஆண்டு வந்த கிரேக்க மன்னன் மிலிந்தனுக்கும், பௌத்தத் துறவி நாகசேனர் என்பவருக்கும் இடையிலான உரையாடல் வடிவில் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடலில் மிகவும் சுவையான கேள்விகள் எழுப்பப் படுகின்றன. உதாரணத்திற்கு “ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பது எது?ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது?” என்பன போன்ற கேள்விகள்.

    அலெக்ஸாண்டரின் இந்தியப்படையெடுப்புக்குப் பிறகு, பாரசீகத்தைத் தாண்டி அவர் வென்ற தேசங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட நாடு தான் பாக்ட்ரியா. இந்நூலில் வரும் அரசன் மெனாண்டர் ஸோடெர் என்ற பெயர் கொண்ட கிரேக்கன். கிரேக்கப் பேரரசு உடைந்த போது அதன் கிழக்குப் பகுதிகள் பாக்ட்ரியா என்ற தனி நாடானதும், அப்பகுதியை ஆண்டவன். இந்தியப் பாலி மொழி நூல்களில் அவன் ‘மிலிந்த’ என்று குறிப்பிடப்படுகிறான். அவன் பாக்ட்ரியாவை கி.மு 150 இலிருந்து 110 வரை ஆண்டிருக்கலாம் என்று வரலாறு கூறுகிறது. எனவே இந்நூல் புத்தரின் பரிநிர்வாணத்திற்கு கிட்டத்தட்ட 400 வருடங்கள் கழித்து எழுதப்பட்டிருக்கக்கூடும்.

    மிலிந்தனின் தந்தை காலத்தில் பாக்ட்ரியப் பேரரசு உட்பூசல்களால் பிளவுற்றது. மிலிந்தன் காபூல் மற்றும் ஸ்வாட் சமவேளிப் பிரதேசங்களை ஆண்டு வந்தான். பின்னர் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளைத் தன் நாட்டுடன் இணைத்துத் தன் அரசை விரிவுபடுத்தினான். சிந்து சமவெளியை கைப்பற்றியவுடன் புதுத் தலைநகரை நிர்மாணம் செய்தான். “மிலிந்த பன்னா”வின் உரையாடல் நடக்கும் இடமாக கூறப்படும் “சகலா” மிலிந்தனின் தலைநகராக சித்திரிக்கப்படுகிறது. இந்தோ-கிரேக்கர்களின் புராதன நகரமான “சகலா” இப்போது “சியால் கோட்” என்று அழைக்கப்படும் நகரமாகும். “சியால் கோட்” பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் செனாப் மற்றும் ராவி நதிகளுக்கிடையில் உள்ளது. மிலிந்தன் பாக்ட்ரியாவின் எல்லையை இந்தியா வரை நீட்டியவன் என்ற பெருமைக்குரியவன். அவனுடைய ஆட்சிக்காலத்தில் சிந்து நதி டெல்டா, சௌராஷ்டிரா (கத்தியவார்), யமுனா நதிக்கரையருகில் இருக்கும் மதுரா நகர் வரை வடகிழக்கு இந்தியாவை தன் பேரரசுக்குள் உட்படுத்தினான். அவன் தலைநகர் பாடலிபுத்திரத்தையும் கைப்பற்றப்போவதாக அறைகூவல் விட்டான். ஆனால் பாடலிபுத்திரப்படைகளிடம் அவன் தோல்வியுறும் சமயத்தில் பின்வாங்க வேண்டியதாயிற்று. அவன் பௌத்த சமயத்தை தழுவிய பின்னர் பாக்ட்ரியா பௌத்த நாடாக மாறியது. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு பாக்ட்ரியாவின் பிரதேசங்கள் எல்லாம் இஸ்லாமிய நாடுகளாக மாறின என்று வரலாறு நமக்கு சொல்கிறது.

    “மிலிந்த பன்ஹா”வின் அறிமுகத்தில் வரும் நாகசேனரின் வளர்ப்பு பற்றிய கதை, மகாவம்சத்தில் (இலங்கையின் நாளாகமம்) வரும் இளம் “மொகாலிப்புத்த திஸ்ஸரின்” கதையைத் தழுவியதாய் இருக்கிறது. மொகாலிப்புத்த திஸ்ஸ தேரர் மிலிந்தரின் காலத்திற்கு நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர். மேலும் “மிலிந்த பன்ஹா”வில் தேரரின் குறிப்பு இரண்டு இடங்களில் வருவதால், இளம் நாகசேனரின் கதை தேரரின் கதைதான் எனக் கருத முடியும். ஆனால் மகாவம்சத்தை மகாநாமா என்பவர் ஆறாம் நூற்றாண்டில் தான் எழுதினார். எனவே இளம் நாகசேனரின் கதையை “மிலிந்த பன்ஹா”வில் இருந்து மகாநாமா இரவல் வாங்கியிருக்கக் கூடும். ஐந்தாம் நூற்றாண்டில் புத்தகோசர் “மிலிந்த பன்ஹா”விற்கு உரையெழுதியதால், பௌத்த சமயத்தின் வணங்கத்தக்க நூல் என்ற தகுதியை அது பெற்றிருந்தது.

    coin_menander_i_india

    “மிலிந்த டிகா” என்ற மிலிந்த பன்ஹா-வுக்கான உரை நூலில் “மிலிந்த பன்ஹாவின் நூலறிமுகத்தின் பல செய்யுள்கள் மற்றும் இறுதியுரை புத்தகோசரால் எழுதப்பட்டவை” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

    பர்மியப் பாலி புனித நூல்களில் ஒன்றாக “மிலிந்த பன்ஹா” சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமான தேரவாத பௌத்தர்களுக்கு இது முக்கியமான நூலாகும். இதன் மூல நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கலாம். இலங்கையில் பாதுகாக்கப்பட்ட பாலி வடிவம் மற்றும் அதையொட்டிய வழித்தோன்றல் வடிவங்களைத் தவிர வேறேதும் கிடைக்கவில்லை.

    சீன மொழியில் கிடைக்கும் “மிலிந்த பன்ஹா” மூல சமஸ்கிருத பிரதியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்று வல்லுனர்கள் எண்ணுகின்றனர். ஏனெனில் பாலி நூலுக்கும் சீன மொழிபெயர்ப்பு நூலுக்குமிடையே காணப்படும் வேற்றுமைகள்.

    பாலி வடிவத்தின் முதல் மூன்று அத்தியாயங்கள் மட்டுமே சீன வடிவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே பாலி வடிவத்தில் கிடைக்கும் பிற நான்கு அத்தியாயங்கள்: பின்னால் சேர்க்கப்பட்டவையாக இருக்கலாம்.

    சீனப் படைப்பு “நாகசேன பிக்குசூத்ரம்” என்று துறவியின் பெயரைக் கொண்டிருக்கிறது. பாலி வடிவம் “மிலிந்த பன்னா” என்று அரசன் பெயரைக் கொண்டிருக்கிறது.

    பாலி வடிவத்தில் பனிரெண்டு மேலதிக வினாக்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

    மிலிந்தனின் நாகசேனரின் முன்-பிறவிக் கதைகள் இரு வடிவங்களிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன.

    சீன பதிப்பில் “அபிதம்மம்” என்ற சொல் வருவதேயில்லை. ஆனால் பாலி வடிவத்தில் “அபிதம்மம்” பல முறை வருகிறது.
    மிலிந்தனின் கேள்விகள்

    Buddha1

    முன்னுரை

    மிலிந்தன் சாகள நாட்டின் மன்னன். அவன் கலைகளையும் விஞ்ஞானத்தையும் கற்றுத் தேர்ந்தவன். எதையும் பகுத்தறிவு கொண்டு ஆராயும் மனத்தினன். விவாதக் கலையில் வித்தகன். அவனுக்கிருந்த சமய ரீதியான சந்தேகங்களை யாருமே தீர்த்து வைக்க இயலவில்லை. புகழ் பெற்ற ஆசான்களையெல்லாம் வினவியும் கூட கிடைத்த வினாக்கள் அவனை திருப்திப்படுத்தவில்லை.

    இமயமலையில் வாழ்ந்து வந்த எண்ணற்ற அருகர்களில் ஒருவரான அஸகுத்தன் தன்னுடைய அமானுட சக்திகளால் அரசனின் சந்தேகங்கள் பற்றி அறிந்திருந்தான். அரசனுக்கு யாரேனும் உகந்த பதிலளிக்க முடியுமா என்று கேட்க ஒர் அவை கூட்டினான். ஆனால் யாராலும் பதிலளிக்க முடியவில்லை. ஆகையினால், அவையுறுப்பினர்கள் எல்லோரும் மேலோகம் சென்று மகாசேனன் என்கிற கடவுளிடம் சமயத்தைக் காக்க மனித உருக்கொண்டு மண்ணில் வருமாறு வேண்டிக் கொண்டனர். துறவிகளில் ஒருவரான ரோஹணன் என்பவர் மகாசேனன் மனிதனாகப் பிறந்து வளர்ந்து வந்த இடமான கஜாங்கலா என்ற ஊருக்கு செல்ல சம்மதித்தார். அங்கே அவர் மகாசேனன் வளர்ந்து பெரியவனாகும் வரை காத்திருந்தார். பையனின் அப்பா – பிரம்மன் சோனுத்தரன் – என்ற அந்தணர் தன் பையனுக்கு மூன்று வேதங்களை பயில்வித்தார். ஆனால், பாலன் நாகசேனன் :

    “மூன்று வேதங்களும் வெறுமையானவை ; பயனற்றவை
    அவற்றில் நிஜம் இல்லை ; மதிப்பு இல்லை
    அடிப்படை உணமை கூட இல்லை”

    என்று அறிவித்தான்.

    பையன் தயாராகிவிட்டான் என்பதை உணர்ந்த ரோஹணர் அப்போது பிரசன்னமானார். பெற்றோர்கள் சம்மதத்துடன் நாகசேனன் ரோஹணரின் சீடரானான். நாகசேனன் அபிதர்மத்தைக் கற்றான். துறவியாகவும் ஆனான். ரோஹணர் நாகசேனனை வட்டனியா ஆசிரமத்தில் இருந்த அஸகுத்தனிடம் அனுப்பி வைத்தார். அங்கு தங்கியிருந்த காலத்தில் ஒரு மழைப் பருவத்தில் சமயப்பற்றுள்ள ஒரு பெண்ணுக்கு உபதேசம் செய்விக்க நாகசேனன் பணிக்கப்பட்டான். இவ்வுபதேசத்தின் போது அப்பெண்ணும் நாகசேனனும் தம்மத்தின் கண் – எவற்றுக்கெல்லாம் துவக்கம் இருக்கிறதோ அவற்றுக்கெல்லாம் முடிந்து போகும் உள்ளார்ந்த குணம் இருக்கிறது – என்ற அறிவை பெற்றனர். அஸகுத்தன் நாகசேனனை பாடலிபுத்திர நகரத்தில் இருந்த அசோகா பூங்காவில் வசித்து வந்த தம்மராக்கிதர் என்பவரிடம் அனுப்பினார். அங்கே மூன்றே மாதங்களில் திரிபீடகங்களை கற்றுத் தேர்ந்தான். தம்மராக்கிதர் “வெறும் புத்தக அறிவோடு நின்று விடுதல் பயன் தராது” என்று தன் மாணவனுக்கு சொல்லவும், அன்றிரவே நாகசேனர் அருகரானார். பின்னர் இமயமலை சென்று அங்கிருந்த மற்ற அருகர்களுடன் தங்கியிருந்தார். சமயப்படிப்பை முடித்து விட்ட படியால், எவருடனும் சமயத்தைப் பற்றி வாதாடத் தயாராக இருந்தார்.

    அரசன் மிலிந்தன் ஆன்ம வேட்கை கொண்டு சம்கேய்ய மடத்தில் இருந்த ஆயுபாலர் எனும் பிக்குவை சந்தித்தான் ; அவரிடம் கேட்டான் “துறவிகள் உலகவாழ்க்கையை ஏன் துறக்கிறார்கள்?” இதற்கு மூத்தவர் பதிலளித்தார் “ “நல்வழியில் வாழ்வதற்கும் ஆன்மீக அமைதியை அடைதற்கும்” அரசன் தொடர்ந்து கேட்டான் “மரியாதைக்குரியவரே, அப்படியானால் சமயதம்மத்தில் இல்லாத சாதாரண மனிதன் யாராவது இப்படி வாழ்கிறார்களா?” அத்தகையவர்கள் இருக்கிறார்கள் என்று ஆயுபாலர் ஒப்புக்கொண்டார்.

    அரசன் விடவில்லை. “வணக்கத்துக்குரிய ஆயுபாலரே, நீங்கள் இப்படி சுற்றியலைவது ஒரு பயனுக்குமாகாது. உலக வாழ்வைத் துறப்பதும், எளிய காவி உடைகள் அணிதல், தினம் ஒரு முறை மட்டுமே உண்ணுதல், தரையில் படுத்துறங்குதல் போன்று தம்மையே வருத்திக் கொள்ளுதலுமாகிய துறவு வாழ்க்கை முன் ஜென்மத்தில் புரிந்த பாவ வினைகளாலன்றி வேறில்லை. இதில் ஒரு நல்லொழுக்கமும் இல்லை; மெச்சத்தக்க தவிர்ப்பும் இல்லை ; நல்வாழ்க்கையும் இல்லை.”

    அரசன் சொன்னதைக் கேட்டு ஆயுபாலர் அமைதியானார் ; ஒரு பதிலும் பேசவில்லை. அரசனுடன் கூட வந்திருந்த ஐநூறு பாக்ட்ரிய கிரேக்கர்கள் அரசனிடம் சொன்னார்கள் “பெரியவர் மெத்தப் படித்தவர், ஆனால் தன்னம்பிக்கை குன்றியவர். எனவே வாய்மூடி மௌனியாக இருக்கிறார்,” என்றார்கள். அதற்கு அரசன் வார்த்தைகளால் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான் “இந்தியா ஒரு வெறுமையான இடம். இங்குள்ளவர்கள் எல்லாம் அக்கப்போர். என்னுடன் விவாதித்து என் சந்தேகங்களை தீர்க்கப்போகிறவர்கள் இங்கு யாருமிலர்”

    அரசனின் வார்த்தைகளை அங்கிருந்த ஐநூறு பாக்ட்ரிய கிரேக்கர்களும் ஒப்புக்கொண்டதாகத் தெரியவில்லை. அரசன் மேலும் வினவினான் “ என் துணைவர்களே, அப்படியானால் சொல்லுங்கள், என்னுடன் உரையாடி என் குழப்பங்களை தீர்க்க வல்லவர் யாரேனும் இருக்கின்றார்களா?”

    அமைச்சர் தேவமாந்தியர் தொண்டையைக் கனைத்தவாறு பேசலானார் “பேரரசே, நாகசேனர் என்ற பெரியவர் இருக்கிறார், உயர்ந்த சான்றோர். அடக்கமான நடத்தையுடையவராக இருந்தாலும் மிக்க தைரியமிக்கவர். உங்களுடன் விவாதிப்பதற்கு அவரே ஏற்றவர். தற்காலம் அவர் சம்கேய்ய மடத்தில் தான் தங்கியிருக்கிறார். நீங்கள் அவரிடம் சென்று தங்கள் கேள்விகளைத் தொடுக்க வேண்டும்” “நாகசேனர்” என்ற பெயரைக் கேட்டவுடன் மிலிந்தனுக்கு மெய் சிலிர்த்தது; உடலெங்கும் மயிர் கூச்செறிந்தது. ஒரு காவலாளியை அனுப்பித் தான் வருவதாகத் தகவலனுப்பினான். ஐந்நூறு பாக்ட்ரிய கிரேக்கர்கள் புடை சூழ, தன் ராஜ ரதத்தில் ஏறி, நாகசேனர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றான்.

    ஆத்மா – முதல் அத்தியாயத்திலிருந்து சில பகுதிகள்

    அரசன் மிலிந்தன் நாகசேனரை அணுகி அன்பான, நட்பு மிகுந்த வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டான். மரியாதையுடன் நாகசேனருக்கு அருகே அமர்ந்தான். பிறகு நாகசேனரை கேள்வி கேட்கத் தொடங்கினான் :

    “”உங்களது கீர்த்தி எப்படிப் பரவிக் கிடக்கிறது? ஆசார்யரே, உங்கள் நாமம் என்ன?”

    “அரசே, நான் நாகசேனன் என்ற பெயரோடு அறியப்படுபவன். அது சாதாரண பொதுப்பயனுக்காக இருக்கும் அடையாளம் மட்டுமே. நிரந்தரமான, தனித்துவமான பொருளல்ல”

    பிறகு மன்னன் பாக்ட்ரிய கிரேக்கர்களையும் சாதுக்களையும் சாட்சிக்கு அழைத்தான். “நிரந்தரமான தனித்துவத்தை அவருடைய பெயர் குறிக்கவில்லையென இந்த நாகசேனர் சொல்லுகிறார். இதை ஒப்புக்கொள்ளுதல் சாத்தியமா?” பின்னர் நாகசேனரை நோக்கித் திரும்பி, “மரியாதைக்குரிய நாகசேனரே, அது உண்மையென்றால் யாரது உங்களுக்கு உடையை, உணவை, குடிலைக் கொடுத்தது? யார் நன்னெறி மிகுந்த வாழ்க்கை வாழ்கிறார்கள்? அல்லது யார் உயிர்களைக் கொல்கிறார்கள், திருடுகிறார்கள், பிறன்மனை விரும்புகிறார்கள், பொய்யுரைக்கிறார்கள் அல்லது கள் அருந்துகிறார்கள்? நீர் சொல்வது உண்மையென்றால், பலனென்பதும் இல்லை துர்பலன் என்பதும் இல்லை. நல்லவனும் இல்லை. தீயவனும் இல்லை. கர்ம விளைவும் இல்லை. உங்களை யாரவது கொன்று விட்டால், கொலையாளி என அவர்கள் கருதப்பட மாட்டார்கள். ஆசானோ, ஆண்டானோ இருக்க மாட்டார்கள். நீர் நாகசேனர் என்று அழைக்கப்படுகிறீர்கள் என்று சொன்னீர்கள்? யார் அது நாகசேனர்? உங்கள் முடியா? “

    “பேரரசே, அப்படிச் சொல்ல முடியாது.”

    “பின்னர் அது நகமா, பல்லா, தோலா அல்லது உடலின் வேறெதாவதொரு உறுப்பா?”

    “நிச்சயமாக இல்லை.”

    “”பின்னர் அது என்ன உடம்பா, உணர்ச்சிகளா, எண்ணங்களா, அல்லது பிரக்ஞையா? அல்லது இவை எல்லாம் ஒன்றாகக் கலந்ததா? அல்லது இவைகளெல்லாம் அல்லாது புறத்தில் இருக்கும் ஏதோவொன்றா?”

    நாகசேனர் புன்னகை மாறாது பதிலுறுத்தார் “நீங்கள் சொன்னவை எதுவும் இல்லை.”

    “அப்படியானால் ஒரு நாகசேனரையும் இங்கு நான் காணமுடியாது. நாகசேனர் என்பது வெற்றுச்சொல்லே. எங்கள் முன்னால் நாம் யாரைக் காண்கிறோம். உங்களின் பொய்யான மரியாதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோமா நாம்?”

    “ஐயா, உயர்குடியில் பிறந்து வசதியிலும் சொகுசிலும் வளர்ந்திருப்பீர்கள் அல்லவா? நீங்க இங்கு எப்படி வந்தீர்கள் – நடைப்பயணமாகவா அல்லது ரதத்திலா?”

    “ரதத்தில் தான் வந்தேன்.”

    “ரதம் என்றால் என்ன? கொஞ்சம் விளக்குங்கள். ரதம் என்பது அச்சா? அல்லது சக்கரங்களா? அடிப்பீடமா? நுகத்தடியா? அல்லது கடிவாளங்களா? இவையெல்லாம் சேர்ந்ததா ரதம் என்பது? இல்லையெனில் இவையில்லாமல் வேறெதாவதா?”

    “நீங்கள் சொன்னவை எதுவும் இல்லை”

    “அப்படியானால் ரதம் என்பது ஒரு வெற்றுச்சொல் தானே? ரதத்தில் தான் வந்து சேர்ந்தேன் என்று நீங்கள் சொன்னது பொய்யன்றி வேறென்ன? நீங்கள் இந்தியாவின் மன்னர். நீங்கள் யாருக்கு பயந்து பொய் சொல்லும் அவசியம் ஏற்பட்டது?’

    நாகசேனர் பாக்ட்ரிய கிரேக்கர்களையும் சாதுக்களையும் அருகழைத்து சாட்சிகளாக்கினார். “அரசர் மிலிந்தன் இங்கே என்னைச் சந்திக்கும் பொருட்டு ரதத்தில் பயணப்பட்டு வந்ததாக சொன்னார். ஆனால் ரதம் என்றால் என்ன கேட்கையில் அவரால் ஒரு விளக்கமும் தர முடியவில்லை. இதனை ஒப்புக்கொள்ளுதல் சாத்தியமா?”

    ஐந்நூறு பாக்ட்ரிய கிரேக்கர்களும் சாதுக்களும் அவர்களின் ஒப்புதலை ஆரவாரமிட்டு தெரிவித்தனர். மன்னரை நோக்கி “உங்களால் முடியுமானால் இவ்வாதத்திலிருந்து வெளி வாருங்கள்.”

    “வந்தனைக்குரிய ஐயா! நான் பொய் சொல்லவில்லை. நீங்கள் சொன்ன எல்லா பாகங்களும் இருக்கும் காரணத்தால் “ரதம்” என்ற சொல் நான் வந்த வாகனத்தை குறிக்கிறது.”

    “மிக அழகாகச் சொன்னார், அரசர் பிரான் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார். அவர் சொன்னது போலவே முப்பத்திரண்டு வகை உயிர்மங்கள் சேர்ந்து உருவான மனித உடம்பு மற்றும் ஐவகைக் கந்தங்கள் (“உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம்” – மணிமேகலை) – இவைகள் சேர்ந்தே “நாகசேனன்” என்று நான் அழைக்கப்படுகிறேன். ததாகதரின் முன்னிலையில், சகோதரி வாஜீரா சொன்னது போல, பல்வேறு பாகங்கள் இருப்பதாலேயே ரதம் என்று ஒன்றை நாம் அழைக்கிறோம். ஐவகை கந்தங்கள் இருப்பதானாலேயே இருத்தல் என்பதைப் பற்றி பேசுகிறோம்.”

    Yathà hi aïgasambhàra, hoti saddo ratho iti. Evaü
    khandhesu santesu, hoti ’satto’ ti sammutã’ti.

    “மிகவும் அற்புதம் நாகசேனரே…கடினமானதொரு விஷயத்தை மிக எளிதாக, அழகாக விளங்கச் செய்தீர்கள். புத்தர் இங்கிருந்திருந்தால், அவரே உம்முடைய பதிலுக்கு ஒப்புதல் அளித்திருப்பார்.”

    +++++

    அரசன் மிலிந்தன் நாகசேனரை அணுகி அன்பான, நட்பு மிகுந்த வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டான். மரியாதையுடன் நாகசேனருக்கு அருகே அமர்ந்தான். பிறகு நாகசேனரைக் கேள்வி கேட்கத் தொடங்கினான் :

    “(அருகரான பிறகு) எத்தனை மழைப் பருவங்களை கடந்தவர் நீங்கள்?”

    “ஏழு”

    “நீங்கள் உங்கள் ஏழு என்று எப்படி சொல்ல முடியும்? நீங்கள் ஏழா? அல்லது நீங்கள் குற்ப்பிடுவது எண் ஏழையா?”

    நாக சேனர் பதில் கேள்வி கேட்டார் : ”உங்கள் நிழல் தரையில் விழுகிறது. நீங்கள் அரசரா? அல்லது உங்களின் நிழல் அரசரா?”

    ”நானே அரசன், நானிருப்பதால் நிழல் இருக்கிறது.”

    ”எனவே, அரசே, வருடங்களின் எண்ணிக்கை ஏழு. நானல்ல ஏழு; நான் இருப்பதால் என் ஏழு வருகிறது. உங்கள் நிழலுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்புதான் ஏழுடன் எனக்கு இருக்கும் தொடர்பு.”

    ”மிக அற்புதம். மிகவும் நன்றாக இந்த புதிருக்கு விடை கண்டீர்கள்.”

    +++++

    தேவமாந்தியர், அனந்தகாயர் மற்றும் மங்குரா ஆகியோர் பிக்குகளை அரண்மனைக்கு கூட்டிச் செல்வதற்காக நாகசேனரின் குடிலுக்கு வருகின்றனர். அவர்கள் அரண்மனைக்குச் செல்லும் வழியில் அனந்தகாயர் நாகசேனரைப் பார்த்துக் கேட்கிறார் ”ஐயா, நான் உங்களை நாகசேனர் என்றழைக்கும் போது, யார் ”நாகசேனர்”?”

    ”யார் அந்த நாகசேனர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

    “ஆத்மா, வந்து போகிற சுவாசம்.”

    “வெளியே போகிற சுவாசம், அம்மனிதன் உயிருடன் இருக்கும் பட்சத்தில் திரும்பி வரவேண்டும் அல்லவா?”

    “வரவேண்டியதில்லை.”

    “ஊதுகுழலில் ஊதும் இசைக்கலைஞர்கள் அவர்களின் மூச்சை ஊதுகிறார்கள் இல்லையா? அப்போது தானே இசை பிறக்கிறது! அவர்கள் ஊதிய மூச்சு அவர்களிடமே திரும்பி வருகிறதா?”

    ”இல்லை. வருவதில்லை.”

    “பிறகு ஏன் அவர்கள் இறப்பதில்லை?”

    ”உங்களுடன் விவாதிக்கும் திறன் எனக்கில்லை. அது எப்படி என்று சொல்லுங்கள்”

    “சுவாசத்தில் ஆத்மா என்ற ஒன்றில்லை. இந்த உள்வாங்குதலும், வெளிவிடுதலும் உடற்சட்டகத்தின் சக்தியினால் நடப்பவை.”

    நெடுநேரம் நாகசேனர் அபிதம்மத்தின் சாரத்தை பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். அவரின் வாதங்கள் அனந்தகாயருக்கு திருப்தியைத் தந்தன.

    +++++

    பிக்குக்கள் அரண்மனை வந்தடைந்து போஜனம் முடித்ததும், அரசன் கீழிறங்கிய இருக்கையில் அமர்ந்து கொண்டு ”எதைப் பற்றி உரையாடலாம்?” என்று கேட்டான்.

    “நம் உரையாடல் தம்மத்தைப் பற்றி இருக்கட்டும்.”

    ”உங்களின் பயணத்தின் குறிக்கோள் என்ன? இறுதி இலக்கு என்ன?”

    “எங்கள் பயணத்தின் நோக்கம் துக்கங்கள் தணிவதும், மேலதிக துக்கங்களைச் சேகரிக்காமல் இருப்பதும் தான். தத்தளிப்பில்லாமல், எஞ்சிய துக்கங்களின் பூரண அழிவுதான் எமது இறுதி இலக்கு.”

    “சொல்லுங்கள் ஐயா, இது போன்ற உன்னதமான குறிக்கோள்களுக்கா எல்லாரும் சங்கத்தில் சேர்கிறார்கள்?”

    “இல்லை. சிலர் அரசர்களின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பிக்கவும், சிலர் திருடர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கவும், மேலும் சிலர் வறுமையிலிருந்து தப்பிக்கவும், இன்னும் சிலர் கடனீந்தோர்களிடமிருந்து தப்பிக்கவும் சங்கத்தில் சேரக்கூடும். ஆனால் உண்மையான குறிக்கோளுடன் சேருபவர்கள் மிச்சமிருக்கும் ஆசைகளில் இருந்து விடுபடும் நோக்கமுடையவர்கள் தான்.”

    +++++

    அரசன் : “மரணத்திற்குப் பின் மறுபிறப்பெடுக்காதவர் யாராவது இருக்கிறார்களா?

    “ஆம். இருக்கிறார்கள். களங்கங்களில்லாதவன் மறு பிறப்பெடுப்பதில்லை ; களங்கங்களுள்ளவன் மறுபடியும் பிறக்கிறான்.”

    “நீங்கள் மீண்டும் பிறப்பீர்களா?”

    ”மனதில் பற்றொடு நான் இறப்பேனானால், ஆம் ; இல்லையேல், இல்லை.”

    +++++

    “தர்க்க அறிவின் துணையுடன் ஒருவன் மறுபிறப்பிலிருந்து தப்பிக்க இயலுமா?”

    ”தர்க்க அறிவினால் மட்டுமல்ல,ஞானத்தால், நம்பிக்கையால், ஒழுக்கத்தால், அக்கறைத்-தன்மையால், ஆற்றலால் மற்றும் தியானத்தால் கூட ஒருவன் தப்பிக்க இயலும்.”

    ”தர்க்க அறிவும் ஞானமும் ஒன்றா?”

    :இல்லை. விலங்குகளுக்கு அறிவு உண்டு ஆனால் ஞானம் கிடையாது.”

    +++++

    பாலி மொழியில் புதைந்திருந்த பல பொக்கிஷங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நவீன உலகிற்கு ஈந்த டி.ரீஸ் டேவிட்ஸ் “மிலிந்த பன்ஹா” பற்றி இவ்வாறு குறிப்பிட்டார் : “இந்திய உரைநடையின் தலைசிறந்த படைப்பு “மிலிந்த பன்ஹா” என்று நான் நினைக்கிறேன். இலக்கிய கண்ணோட்டத்தில், உலகின் எந்த நாட்டிலும் படைக்கப்பட்ட இவ்வகைக்கான புத்தகங்களில் ஆகச்சிறந்த புத்தகம் இது.”

    Source : Pesala, Bhikkhu (ed.), The Debate of King Milinda: An Abridgement of the Milindapanha. Delhi: Motilal Banarsidass, 1992. Based on Rhys Davids (1890, 1894).

    ரீஸ் டேவிட்-இன் மூல ஆக்கமும் பெசாலாவின் சுருக்கப்பட்ட ஆக்கமும் மின் நூல்களாகக்கிடைக்கின்றன.

    நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=23490)

  • குகை வாயிலில் ஒரு சிலந்தி வலை

    spider and web

    மக்காவின் எல்லா முஸ்லீம்களும் மதினாவிற்கு இடம் பெயர்ந்து விட்டிருந்தனர். நபிகள் நாயகமும் அபு-பக்கரும் மட்டும் எஞ்சியிருந்தனர், மக்காவை விட்டு வெளியேறுவதற்கு அல்லாஹ்-வின் அனுமதிக்காக நபிகள் நாயகம் காத்திருந்தார். இறுதியில் ஒரு நாள் ஜிப்ரீல் அவரிடம் வந்து சொன்னது : ”இன்றிரவு உன்னுடைய படுக்கையில் படுக்காதே” இரவு நெருங்கிய போது, அலியும் நபிகள் நாயகமும் மட்டும் வீட்டில் தனியே இருந்தனர். திடீரென்று, அவர்கள் வீட்டுக்கு வெளியே சில சத்தங்களைக் கேட்டனர்.

    வெளியில் பார்த்தபோது, நபிகளின் எதிரிகள் வீட்டைச் சுற்றி நின்றிருந்ததைக் கண்டனர். நபிகள் அச்சப்படவில்லை. அல்லாஹ் அவருடன் இருப்பதை அவர் அறிந்திருந்தார். அவர் அலியிடம் சொன்னார் : ”நீ என்னுடைய உடையால் உன்னை மறைத்துக் கொண்டு என் படுக்கையில் படுத்துக் கொள். நான் அபு-பக்கருடன் வெளியேறப் போகிறேன். பிறகு நீ எங்களைப் பின் தொடர்ந்து வா”

    நபிகள் வீட்டை விட்டு அந்த இரவே நீங்கினார். இருட்டின் போர்வையில், அவர் அபு-பக்கரின் வீட்டை அடைந்தார் ; அங்கு இரண்டு ஒட்டகங்கள் தயார் நிலையில் இருந்தன. ஓட்டகங்களில் ஏறி, இருவரும் நகரை விட்டு வெளியேறினர். தாவ்ர்-மலையை அடைந்து அங்கு ஒரு குகையில் ஒளிந்திருந்தனர். அக்குகையில் அவர்கள் மூன்று நாட்கள் இருந்தனர். ஒவ்வொரு இரவிலும் அபு-பக்கரின் மகன் அப்துல்லா அவர்களை குகையில் சந்திப்பான். நகரில் நிகழ்வனவற்றை அவன் அவர்களுக்கு தெரிவித்தான். அப்துல்லா சொன்னான் : “மக்காவின் குரைய்ஷ் மிகவும் கோபமாகிவிட்டான். அவர்கள் உங்களை எல்லா திசைகளிலும் தேடி வருகிறார்கள். உங்களைச் சிறைப்பிடிக்க உதவுபவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்”

    ஒரு நாள், குகைக்கு வெளியே அவர்கள் சில குரல்களை கேட்டனர். அவர்களைத் தேடிக் கொண்டு குகை வரை எட்டியிருந்த குரைய்ஷின் ஆட்கள். அபு-பக்கர் பயந்தான். “நாம் எந்த சமயத்திலும் கண்டுபிடிக்கப்பட்டு விடுவோம்” என்று எண்ணினான். ஆனால் நபிகள் நாயகம் “நம்பிக்கை இழக்காதே, அல்லாஹ் நம்முடன் இருக்கிறார்” என்றார். நபிகளைத் தேட வந்தவர்கள் அங்கும் இங்கும் தேடினார்கள் ; பிறகு சென்று விட்டார்கள். ஆச்சர்யமுற்ற அபு-பக்கர் குகைக்கு வெளியே நோக்கிய போது  நுழைவாயிலில் ஒரு சிலந்தி வலை பின்னியிருப்பதைக் கண்டு அதிசயித்தான். கூடவே அதன் பக்கத்தில் ஒரு புறா ஒரு கூட்டை அமைத்திருந்தது. குகைக்குள் ஒருவரும் நுழைந்து தேடாமல் விட்ட காரணம் புரிந்தது.  இருவரும் பத்திரமாக குகையை விட்டு அகன்றனர். ஒரு வழிகட்டியை துணைக்கழைத்துக் கொண்டு பாலைவனத்தைக் கடந்து மதினாவை அடைந்தனர். மதினாவை சென்றடைய அவர்களுக்கு ஏழு நாட்கள் பிடித்தன.

  • ஓய்வு பெற்ற கதை எழுத்தாளரின் கவிதை முயற்சி

    இன்னும் இருக்கிறது
    வாசலில் சில செருப்புகள்
    மோகத்தைக் கொன்று விடு
    விலை போகாத எனது 3 கதைகளின்
    தலைப்புகளை
    மாற்றி எழுதிப் பார்த்தேன்
    சில செருப்புகள்
    இன்னும் வாசலில் இருக்கிறது
    கொன்றுவிடு மோகத்தை!
    வேறு மாதிரி மாற்றிப் பார்த்தேன்
    வாசலில் கொன்றுவிடு மோகத்தை
    இன்னும் சில செருப்புகள் இருக்கிறது
    வேற்றுமை உருபை மாற்றி
    இன்னொரு சொல்லையும் சேர்க்கலாமா?
    என்னுடைய கதையின் தலைப்புகள் தானே!
    யாரைக் கேட்க வேண்டும்?
    வாசலில் இன்னும் இருக்கும் சில செருப்புகளால் அடிப்பர்
    மோகத்தை கொன்று விடு
    “எழுத்து” என்ற சொல்
    தொக்கி நிற்பதாகக் கொள்ளுங்கள் என்ற
    அடிக்குறிப்பு போட்டு விடலாமா என்று யோசித்தேன்.

  • தைரியம், அமைதி, நம்பிக்கை

    How to Have Courage Calmness And Confidence - Paramahansa Yogananda

    வெற்றி, ஆரோக்கியம் மற்றும் விவேகம் – இவைகள் ஆன்மாவின் இயற்கைக் குணங்கள். பலவீனமான சிந்தனைகளுடனும் பழக்கவழக்கங்களுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளுதலும் மனதை ஒரு நிலைப்படுத்துதல், விடாமுயற்சி மற்றும் தைரியம் – இவற்றின் பற்றாக்குறைகளுமே வறுமை, நோய், மற்றும் இன்ன பிறவற்றால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணங்களாகும்.

    உன் வெற்றிக்கான மனத்திறனை அச்ச எண்ணங்கள் கொண்டு நீயே முடக்கி விடுகிறாய். வெற்றியும், உடல்-மன பூரணத்துவமும் மனிதனின் உள்ளார்ந்த பண்புகளாகும் ஏனெனில் அவன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறான். தன் பிறப்புரிமைக்கு பாத்தியதை ஆவதற்கு, முதலில் அவன் தன்னுடைய வரம்பெல்லைகள் என்று கருதிக்கொள்ளும் கற்பனையை விலக்கிக் கொள்ள வேண்டும்……

    உண்மையான போர்வீரன்
    நன்மை பயக்கும் மாறுதல்களை தைரியமாக தழுவிக்கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களுக்கான நம்பிக்கைகள் தோல்விப்பயத்தால் எதிர்க்கப்படும் வரை, மனம் ஒரு போதும் அமைதியில் அமையாது. எனவே, மாறுதல்களை ஏற்பது மட்டுமே வாழ்வின் ஒரே மாறிலி. நமது வாழ்க்கை வெற்றி- தோல்விகளின், நம்பிக்கை-ஏமாற்றங்களின் முடிவிலா ஊர்வலம். ஒரு கணம், சோதனகள் எனும் புயற்காற்றால் நாம் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறோம் ; சில கணங்களுக்குப் பிறகு, சாம்பல் நிற மேகங்களை வெள்ளிக் கோடுகள் வெளிச்சப்படுத்துகின்றன ; திடீரென்று வானம் மீண்டும் நீல நிறம் கொள்ளுகிறது.

    அறிவார்ந்த கோட்பாடுகளைப் பற்றி பேசிக்கொண்டே வாழ் நாட்களை வீணடித்து சாய்வு-நாற்காலியில் அமர்ந்து “தேடுபவனுடன்’ ஒப்பு நோக்கப்படும்போது, உண்மையாக தேடுபவன் தன் முன்னால் இருக்கும் கடின உழைப்பில் மனம் தேற்றிக் கொள்கிறான். உண்மையான போர்வீரன், அச்சமாக இருந்தாலும், தன் கை தேவைப்படும்போது தைரியமாக போர்க்களத்தில் குதிக்கிறான். ஆல்ப்ஸ் மலையின் உயரங்கள் நெஞ்சில் கலக்கமேற்படுத்தினாலும், மலையேறுபவன் உறுதியுடன் உயரங்களை அடையும் முயற்சியில் ஈடுபடுகிறான். உண்மை-தேடுபவன் தனக்கு சொல்லிக்கொள்கிறான் : “பூரணத்துவம் அடையும் பணி எவ்வளவு கடினமானது என்பதை நான் அறிவேன். ஆனால். அதற்காக என் எல்லாவற்றையும் நான் அளிப்பேன். கடவுளின் உதவியால், இக்காரியத்தில் நான் வெற்றி அடைவேன்” ஆழ்ந்த தினசரி தியான முயற்சிகளால் சதை-நணவுணர்ச்சியை கையகப்படுத்தி, மறந்திருந்த உள்ளுறை தெய்வீக ஆனந்தமெனும் விழிப்புணர்வை மீட்டெடுக்கிறான்.

    பக்தனே, மனம் தேற்றிக்கொள். அதீதப்புலனின்பம், தோல்வி, ஏமாற்றங்களினால் உண்டான வறட்சிக் காலத்தில் எத்துணை பிளவுகளையும் வறட்சியையும் உன் இதயத்தின் மண் கொண்டிருந்தாலும், உள்ளார்ந்த நற்கருணையின் அமைதி பெருக்கினால் நீர் பட்டு மென்மையாகும். வதங்கிப் போன உன் ஆன்ம உற்சாகம் புதுப்பிக்கப்படும். ஒரு முறையாவது கடவுள் நற்கருணையின் திராட்சை ரசம் அருந்து. ஆர்வமிகுந்து ஆன்மீக தளத்தில் நீ தினமும் புதுப்பிக்கப்பட்ட ஆன்ம உணர்வெனும் மண்ணில் உழைத்து, ஆன்ம வெற்றி எனும் விதைகளை விதைத்து, அவை தெய்வீக ஆனந்தமெனும் பயிராய் நெடுக வளரக் காண்பாய். தொந்தரவு என்று நீ கருதும் எதையாவது எதிர்கொள்ளுகையில் ஊக்கமிழந்து, தோற்கடிக்கப்படுவதற்குப் பதிலாக நீ கற்றுக்கொள்ள வேண்டியதை என்னவென்று காணவும், சவாலை சந்திக்க தேவையான பலத்தையும் விவேகத்தையும் அதிகப்படுத்தவும் ஒரு சந்தர்ப்பத்தைத் தந்த பரம பிதாவிற்கு நன்றி செலுத்து.

    வாழ்வின் சோதனைகளை மகிழ்ச்சியுடனும் தைரியத்துடன் சந்திக்கும் போது தான் கருமச்சுமைகள் குறைகின்றன. எதற்காவது உன் பயம் இன்னும் தொடருமானால், நீ கருமவினைகளிலிருந்து விடுபடவில்லையென்றே அர்த்தம். கருமத்தை சிதறடிக்க, நீ சந்திக்க வேண்டிய சோதனைகளை தவிர்க்க முயலாதே. கடவுளின் ஆனந்தம் நிறை அகத்தினுள் வசிப்பதன் வாயிலாக சோதனைகளிலிருந்து தைரியமாக மேலேழு.

    தைரியம் பெற சில உறுதிமொழி
    கஷ்டங்கள் போல் தோன்றுகிறவற்றை சமாளிக்க தேவையான தைரியமும், பலமும் அறிவுத்திறனும் எல்லா கணங்களிலும் உன்னிடம் இருக்கிறது. மனதளவில், உடலளவில் அசைவற்று இரு ; சமநிலை நிலவும் உன் உள்ளுறை மையத்தில் ஓய்வெடு ; அங்கு உன் பரம பிதவுடன் தொடர்புறவில் இரு. அவர் உனக்கு வழி காட்டுவார்.

    கடவுள்-அமைதியெனும் மாறாத உள் நினைவில், நான் முதலில், கடைசியில், எல்லா நேரங்களிலும் பாதுகாப்பை தேடுவேன்.

    நல் மனசாட்சியெனும் கொத்தளத்தில் நான் பாதுகாக்கப்படுகிறேன். என் பழைய இருட்டை நான் எரித்து விட்டேன். என் கவனமெல்லாம் என் இன்றைய ஒரு நாளில் மட்டும் தான்.

    எல்லாப் பிர்சினைகளுக்கும் ஒரு சரியான தீர்வு உண்டு. இத்தீர்வினைக் காணும் விவேகமும் அறிவுத்திறனும், அதை முன்னெடுத்துச் செல்லும் பலமும் தைரியமும் என்னுள் உண்டு.

    கடவுள் என்னுள்ளிலும் என்னைச் சுற்றியும் இருக்கிறார் ; என்னைக் காக்கிறார். எனவே, அவருடைய வழிகாட்டும் ஒளியை அடைத்து என்னை தவறெனும் குழியில் விழ வைக்கிற பயமெனும் பேரிருட்டை வெளியேற்றுவேன்.

    இரகசிய பயம் பதற்றத்தையும் கவலையையும் உருவாக்குகிறது ; இறுதியான வீழ்ச்சியையும் தருகிறது. நம்முடைய திறமையில் நமக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும் ; சரியான காரணத்தின் வெற்றியிலும் நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த குணங்களைப் பெற்றிருக்காவிடில், எண்ணக்குவிப்பின் மூலமாக நம் மனதில் அவற்றை நாமே உருவாக்க வேண்டும், உறுதியான, நீண்ட, தொடர்ந்த பயிற்சியினால் இதை சாதிக்க முடியும்.

    முதற்கண், நம்முடைய குறைகளை நாம் கண்டறிய வேண்டும். உதாரணத்திற்கு, நமக்குள் மனத்திண்மைக் குறைபாடு இருக்குமானால், அக்குணத்தின் மேல நம் எண்ணத்தைக்குவிப்போம் ; பிரக்ஞை மிகுந்த முயற்சிகளினால், நம்முள் மனத்திண்மையை நம்மால் பெருக்க முடியும்.

    பயத்திலிருந்து நம்மை நாம் விடுவிக்க விரும்பினால், தைரியம் என்ற குணத்தின் மேல் நாம் தியானம் செய்ய வேண்டும் ; குறுகிய காலத்தில், பயமெனும் அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுதலை பெற்று விடுவோம். எண்ணக்குவிப்பு மற்றும் தியானம் மூலம், நம்மை நாம் ஆற்றல் மிக்கவராகவும், கவனத்தை குவிக்க இயல்பவராகவும் நம்மை ஆக்கிக் கொள்ள முடியும். தொடர்ந்த பயிற்சி ஒரு முயற்சியும் இன்றி ஒற்றைப் பிரசினையின் மேல் நம் எல்லா ஆற்றலையும் குவித்தலை சாத்தியமாக்கும். இது நம்முடைய இரண்டாவது இயல்பாகவும் மாறி விடும். இப்புது குணத்தை பெற்றிருப்பதன் வாயிலாக, பொருள் மற்றும் ஆன்மீக இலக்குகளை நம்மால் எளிதில் அடைய முடியும்.

    துக்கம் புறநிலை இருப்பு இல்லாதது. வாய்மொழி வழி தொடர்ந்து பிரஸ்தாபிப்பதன் மூலம், அது இருக்கிறது. உன் மனதில் அதை மறுதளித்தால், அது இல்லாமல் போகிறது. இதை நான் ’ஹீரோயிஸம்’ என்பேன் ; அவனுடைய தெய்வீக அல்லது மூல இயற்கை என்பேன். துக்கத்திலிருந்து விடுதலை பெறுதற்கு, மனிதன் தன்னுடைய ”ஹீரோயிஸம்” மிகுந்த சுயத்தை வெளிப்படுத்துதல் அவசியம்.

    ஒரு சாதாரண மனிதனுள்ளில் “ஹீரோயிஸம்” மற்றும் தைரியத்தின் பற்றாக்குறையே துக்கத்தின் ஆணிவேர். ”ஹீரோயிஸத்தின்” கூறு ஒருவனின் மனத்தில் குறையும் போது, கடந்து செல்லும் துக்கங்களுக்கு அவன் மனம் எளிதில் இணக்கமானதாக ஆகிறது. மனதின் வெற்றி வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை தருகிறது ; மனதின் தோல்வி துக்கத்தை தருகிறது. ஒவ்வொரு மனிதனுள்ளும் வெற்றிவீரன் விழித்திருக்கும் வரை, ஒரு துக்கமும் அவனுடைய இதயத்தை தொட இயலாது.

    தொடர்ச்சியான பிரசினைகளை தோற்கடிப்பதைத் தவிர இவ்வாழ்க்கை ஒன்றுமில்லாதது. உன் கையில் தீர்வுக்குக் காத்திருக்கும் ஒவ்வொரு பிரசினையும் வாழ்க்கை உனக்கு விதித்திருக்கும் கட்டாயக் கடமையாகும். ஒரு தனி மனிதன் சூழ்நிலையின் மட்டத்துக்கு கீழ் மூழ்கும் போது, கெட்ட நேரத்தின் பாதிப்புக்கு சரணடைகிறான். அவனுள் பொதிந்திருக்கும் வீர தைரியத்தின் உதவியால், சூழ்நிலையைத் தாண்டி அவன் எழும்பொழுது, வாழ்வின் அனைத்து நிலைகளும், அவை எத்தனை அச்சுறுத்தும் படியாக இருந்தாலும் பனிப்போர்வை விலகி வானிலிருந்து எட்டிப்பார்க்கும் இதமான சூரிய ஒளி போன்றதாக இருக்கும். சாதாரண மனிதனின் துக்கங்கள் வாழ்வு நிலைகளின் உள்ளார்ந்தவை அல்ல. அவைகள் மனித மனத்தின் பலவீனங்களிலிருந்து பிறப்பவை.உன்னுள்ளிருக்கும் வெற்றிவீரனை விழித்தெழ வை; உன்னுள் உறங்கும் வீரனை தட்டி எழுப்பு;ஒரு துக்கமும் உன் சாளரத்தை இருட்டாக்காது.

    [Translation of Excerpts from the Book “How to have Courage, Calmness and Confidence” By Paramahansa Yogananda, Publisher : Ananda Sangha Publications]

  • பண்டிகை காட்சிகள்

    firni
    நிறைவு என்ற பதத்துக்கு
    நிறைய என்று பொருள் கொண்டு
    கொண்டாடப்படும் பண்டிகைகளின் போது
    நிறைய வகைகளில் “நிறைய”..
    “கொஞ்சம் நிறைய” “நிறைய நிறைய”
    “சென்ற வருடத்தை விட நிறைய”
    “மைத்துனரின் வீட்டை விட நிறைய”
    என!
    கொஞ்சமிருப்பவரும்
    “நிறைய” காண்பிப்பதற்கு
    நிறைய கடன்களைப் பெற
    நிறைய விழாக்கால வங்கித் திட்டங்களும்.
    அந்தஸ்தை நிரூபிக்க
    நிறைய பரிசுகள் !
    நிறைய உடைகள் !
    நிறைய இனிப்புகள் !
    நிறைய விருந்துகள் !
    நிறைய வாழ்த்தட்டைகள் !
    நிறைய மனநிறைவும் இருக்கும்
    நண்பனொருவன் தன் குடும்பத்தை
    வெளிநாடு அழைத்துச் சென்று
    வெண்பனி சூழ்ந்த
    பயணியர் விடுதிக்குள்
    கொண்டாடியதாய் கேள்விப்படும் வரை !

  • தீவிர வேட்கை

    follow-me-buddha-paintings
    அக்கரையின்றி திரிபவனின் வேட்கை
    படரும் கொடி போல வளரும் ;
    வனத்தில் கனி தேடி சுற்றும் குரங்கு போல்
    அவன் அங்கும் இங்குமாக
    அலைந்து திரிவான்.

    பிசுபிசுப்பு மிக்க
    அருவெறுப்பான தீவிர நாட்டம்
    உன்னை கட்டுப்படுத்தத் துவங்கும் போது
    கடும் மழைக்குப் பின் வளரும் கோரைப்புற்களாய்
    உன் துயரங்கள் வளரத் தொடங்கும்

    மாறாக, இவ்வுலகத்திலேயே,
    அருவெறுப்பான தீவிர வேட்கையிலிருந்து
    நீ விடுபடுவாயானால்
    தாமரை இலையிலிருந்து விலகும் நீர் போல
    உன் துயரங்கள் நீங்கும்

    Digout - Dhammapada_337
    இங்கு குழுமியிருக்கும் எல்லோருக்கும் சொல்கிறேன் ;
    நற்பேறு உண்டாகட்டும் !
    மருந்து வேர்களை தேடுகையில்
    கோரைப் புற்களைக் களைவது போல்
    வேட்கையை தோண்டிக் களையுங்கள்

    காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நாணல்கள் போல்
    மீண்டும் மீண்டும்
    மாரன் உங்களை வெட்டிச் சாய்க்காமல் இருக்கட்டும்

    வேர்கள் பாழடையாமல்
    பலத்துடன் இருந்தால்
    வெட்டப்பட்டாலும்
    மரம் திரும்ப வளர்கிறது
    அது போலவே
    உள்ளுறை வேட்கைகள்
    களைந்தெறியப்படாவிடில்
    துக்கங்கள் திரும்ப திரும்ப
    வந்து கொண்டிருக்கும் (334 – 337)

    சொந்த கருத்துகளால் உந்தப்பட்டும்
    கட்டுக்கடங்கா உணர்ச்சிகளால் ஆளப்பட்டும்
    அழகின் ஈர்ப்பில் கட்டுண்டும் கிடப்பவனின்
    வேட்கை சதா வளர்ந்து கொண்டே இருக்கிறது
    தன்னுடைய பந்தங்களை
    அவனே இறுக்கிக் கொள்கிறான்.

    ஆனால், சிந்தனையை நிறுத்துவதில் ஆனந்தம் கொள்பவனாக,
    எந்நேரமும் அக்கரையாக இருப்பவனாக
    அழுகிய உறுப்புகளின் மேல் பிறழாத கவனத்துடன் திகழ்பவனே
    முடிவை எட்டுபவனாக இருப்பான்
    மாரனுடனான பிணைப்பை வெட்டி எறிபவனும் அவனே! (349-350)

    Dhammapada_352
    பயமின்றி
    கறை படாமல்
    வேட்கையிலிருந்து விடுபட்டு
    முடிவை தொட்டவன்
    ஆகுதலின் அம்புகளை
    பிடித்தெறிய வல்லவன்.
    இந்த உடற் குவியலே
    அவனுடைய கடைசியானதுமாக இருக்கும்.

    பேரார்வத்திலிருந்து விடுதலையாகி
    தத்தளிக்காமல்
    நுட்பமான வெளிப்பாடுகளுடன்
    சத்தங்களின் இணைகளை அறிந்து
    -முதலில் வருவது எது, பின்னர் வருவது எது–
    என்று தெளிவாக தெரிந்தவனாய் இருப்பான்.
    அவன் கடைசி உடல் தறித்த
    அளவிலா நுண்ணறிவு மிக்க பெருமகன். (351-352)

    அனைத்தையும் வெற்றிகொண்டு
    ‘நான்’ என்பதை முழுக்க உணர்ந்து
    எந்த முறையையும்
    பின் பற்றாது
    எல்லாவற்றையும் துறந்து
    வேட்கையின் முடிவில் விடுதலையாகி
    சுயமுயற்சியில்
    எல்லாவற்றின் இயல்பையும் அறிந்த நான்
    யாரை குருவென்று காட்டுவேன்? (353)

    தம்மத்தின் கொடை எல்லா கொடைகளையும் கைப்பற்றும்
    தம்மத்தின் சுவை எல்லா சுவைகளையும்
    தம்மத்தின் இன்பம் எல்லா இன்பங்களையும்
    வேட்கையின் முடிவு எல்லா துயரங்களையும் அழுத்தங்களையும்
    (354)
    Dhammapada_355
    பகுத்துணரும் சக்தி குறைந்த
    மனிதனை செல்வம் அழித்துவிடுகிறது ;
    ஆனால் மறுமையை வேண்டுபவர்களை அழிப்பதில்லை.
    பகுத்துணரும் ஆற்றல் குறைந்து
    செல்வத்தின் மேல் வேட்கையுறுபவன்
    எங்ஙனம் அடுத்தவரை அழிக்கிறானோ
    அது போலவே தன்னையும் அழித்துக்கொள்கிறான். (355)

    நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
    மனிதர்கள், மோகத்தால்.
    மோகமற்று இருப்பவர்களிடம்
    கொடுக்கப்பட்டிருப்பது
    சிறந்த கனியாக முதிர்கிறது.

    நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
    மனிதர்கள், வெறுப்பால்.
    வெறுப்பின்றி இருப்பவர்களிடம்
    கொடுக்கப்பட்டிருப்பது
    சிறந்த கனியாக முதிர்கிறது.

    நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
    மனிதர்கள், தவறான நம்பிக்கையால்.
    தவறான நம்பிக்கையின்றி இருப்பவர்களிடம்
    கொடுக்கப்பட்டிருப்பது
    சிறந்த கனியாக முதிர்கிறது.

    நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
    மனிதர்கள், பேராசைகளின் ஏக்கத்தில்
    பேராசைகளினால் ஏங்காமல் இருப்பவர்களிடம்
    கொடுக்கப்பட்டிருப்பது
    சிறந்த கனியாக முதிர்கிறது (356 – 359)

    (“தம்மபதம்” – இருபத்தி நான்காவது அங்கம் – “தீவிர வேட்கை”)

    (தனிஸ்ஸாரோ பிக்கு என்பவரின் மூல தம்மபதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது)

    நன்றி : http://www.buddhanet.net

    படங்களுக்கு நன்றி : http://www.what-buddha-said.net

  • அருவி சத்தம்

    Water falls in Glassசிறு வயதில் ஒரு முறை என் பெற்றோருடன் ஒர் அருவியைக் காண சென்றிருந்தோம். அன்று மாலை அருவி இருக்கும் இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம். இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. அருவி கொட்டும் சத்தம் தூங்கும் வரை என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று மதியம் நான் கண்ட அருவி ஐநூறு அடி உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருந்தது. தூங்கிய பின்னரும் அக்காட்சி என் கனவுத்திரையில் தெரிந்தது. பின்னிசையாக கேட்ட அருவி சத்தம் கனவிலிருந்தா அல்லது நனவிலிருந்தா என்ற சந்தேகத்துடனேயே அன்றைய இரவு கழிந்தது. அன்று கேட்ட அருவி கொட்டும் சத்தத்தை நான் நெடு நாளாக மறக்கவில்லை.

    நான் வசிக்கும் புறநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஷாப்பிங் மாலில் வார இறுதி நாட்களில் கூட்டம் அள்ளும் போது சத்தம் அருவி சத்தத்தை போல சோவென்று கேட்கிறது. மூடிய கூரைக்குள் கேட்கின்ற சத்தங்கள் புதிரானவை. பாதி சத்தம் மக்களின் குரல்கள் மற்றும் இயக்கங்களால் ஏற்படுகின்றன. மீதி சத்தம் நெடிதுயர்ந்த கூரை வரை நீண்டு தொட்டுத் திரும்பும் எதிரோலியால் ஏற்படுவன. ஷாப்பிங் மாலின் மூன்றாம் அடுக்கில் இருக்கும் கையேந்தி பவன்களும், உட்கார்ந்து உணவருந்தும் விடுதிகளும் தான் அதிக பட்சமான மக்களை ஈர்க்கின்றன. ஆனால் அங்கு உணவருந்தும் யாரும் அப்படியொன்றும் சத்தம் போட்டு பேசுவதாக தெரியவில்லை. ஆனாலும் சத்தம் அங்கிருந்து வருவது போலவே தோன்றும். பெரும்பாலும், இளவயது காதலர்கள் ஒரே ஒரு சாண்ட்விச் ஆர்டர் செய்து, அது பூஞ்சைக் காளான பிடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்து அமைதியாக உண்கிறார்கள். அம்மா அப்பாவுடன் மாலுக்கு வந்திருக்கும் குழந்தைகள் பஞ்சு மிட்டாய் வாங்க க்யூவில் காத்திருக்கும் போது போடும் சத்தம் அதிக டெசிபல் உள்ளதாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. திரைப்படக் காட்சி துவங்குவதற்காக காத்திருக்கும் இளைஞிகள் ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொண்டே போடும் சத்தம் சமயத்தில் அதீதமாக இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் குறைந்து விடும். பல பொருள் சிறப்பங்காடியில் பொது அறிவிப்பு செய்து “அவர் வரவும்…இவர் வரவும்” என்று சொல்லி அழைப்பார்கள். அதன் சத்தம் சிறப்பங்காடியை ஒட்டி இருக்கும் பன்னாட்டு பிராண்ட் காலணி விற்கும் கடையில் அலறும் “டிங்சுக்கு….டிங்சுக்கு” இசையோடு சேரும். பண்பலை வானோலியின் புகழ் பெற்ற ஆர்ஜே ஒருத்தி சிறு மைக்கில் கொஞ்சிப் பேசிக்கொண்டே குலுக்கல் விளையாட்டொன்றுக்கு பங்கேற்பாளர்களை அழைப்பாள். பணக்காரர்களின் மற்றும் உயர் நடுத்தர வர்க்க மக்களின் வீடுகளில் வைக்கப்படும் பீன் – பை இருக்கைகளை அறுபது விழுக்காடு தள்ளுபடியோடு விற்போர் வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டிருப்பார்கள். ப்ளே-சோன்-க்கு வெளியே டோக்கன் வாங்கி தம்முடைய முறைக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன், பேராவலுடன் காத்திருக்கும் சிறுவர்கள் சத்தமிட்டு உரையாடிக் கொண்டிருப்பார்கள். பொம்மை ஹெலிகாப்டர்களால் கட்டப்பட்ட எலக்ட்ரானிக் ரங்கராட்டினம் கட்டுக்கடங்கா ஒசையை தந்து கொண்டிருக்கும். நிழல் குத்துச் சண்டை வீரர்கள் மாதிரி மிண்ணனு திரை முன்னால் கையை ஆட்டியும் வீசியும இளைஞர்கள் கணினி விளையாட்டு விளையாடுகையில், டெர்மினல் விசித்திரமான சப்தங்களை எழுப்பிக் கொண்டிருக்கும்.

    இவ்வெல்லா சத்தங்களும் ஒன்றிணைந்து பெரும் சத்தமாகி கூரையைத் தொட்டு எதிரொலி எழுப்பி…….பக்கத்து மேஜையிலிருந்து டிங்கென்று கண்ணாடி கிளாஸ் கீழே விழுந்தது. நீல நிற பானமொன்று தரையில் ஓடியது. அது நான் உட்கார்ந்திருந்த இடம் நோக்கி வந்தது. ஒரு ஞாயிறன்று எதுவும் ஆர்டர் செய்யாமல், யாருக்காகவும் காத்திருக்காமல் உட்கார்ந்திருந்த காபி கடையை விட்டு வெளியே வந்தேன். என் காலணி சர்சர்ரென்று சத்தமெழுப்பி ஷாப்பிங் மாலின் பெருஞ்சத்தத்தின் மிகச்சிறு அங்கமாக இணைந்தது.

    ++++++

    “இது என்னது? கவிதையா? சிறுகதை மாதிரியும் இல்லை. துணுக்கா இது? துணுக்கு என்றால் எதாவது தகவல் தர வேண்டும். இல்லையேல் நகைச்சுவையாவது தர வேண்டும். சிறுகதையென்றால் குறைந்த பட்சம் 1500 சொற்களாவது இருக்க வேண்டும். எத்தனை சொற்கள் வருகின்றன? எண்ணினாயா?…நிறைய வாசிப்பு இருக்க வேண்டும். ஆழமான வாசிப்பும் இருக்க வேண்டும். அப்போது தான் நன்கு எழுத முடியும். ஒரு சிறுகதை ஏதாவது ஒரு பிரச்னையை கையாள வேண்டும். ஒர் அழுத்தமான உணர்வை கருவாக கொண்டிருக்க வேண்டும். இது எதுவும் உன்னுடைய சிறுகதைகள் எதிலும் தென்படவில்லை.”

    புகழ் பெற்ற எழுத்தாளர் (பு.பெ.எ) சொல்லுவதை ராகவன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். ஐந்தாறு நாவல்கள் ; நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் ; கவிதைத் தொகுதி ஒன்று என பு.பெ.எ- தமிழ் இலக்கிய உலகின் ஒரு பிரசித்தமான படைப்பாளியாக இருந்தார்.

    ”நான் எப்பொதிருந்து எழுத ஆரம்பித்தேன் தெரியுமா? ஐம்பது வயதில் தான். அது ஏன் தெரியுமா? என்னால் ஐம்பது எட்டுவதற்கு முன்னாலேயே எழுதியிருந்திருக்க முடிந்திருக்கலாம். எழுதுவது என்பது ஒரு பொறுப்பான விஷயம் என்பதை நான் அறிந்திருந்தேன்.”

    ”சிறு வயதில் இருந்து சிறு துண்டுப் பிரசுரத்திலிருந்து, குழந்தை நாவல்கள், காவியங்கள், கவிதைகள்…..நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.”

    ”இன்று கூட நான் எழுதும் என் படைப்புகள் எனக்கு பூரண திருப்தியை அளிப்பதில்லை.”
    இதற்கு முன்னர் ராகவன் தான் எழுதியவற்றை பு.பெ.எ-விடம் கொடுத்து நேரம் கிடைக்குமானால் படிக்குமாறு பணிவுடன் பலமுறை வேண்டியிருக்கிறான். அவர் ஒரு முறை கூட அவன் எழுத்தைப் பற்றிய கருத்தை சொன்னதில்லை. அவனும் “படித்தீர்களா?” என்று பிறகு அவரை கேட்டதில்லை. அவருடைய ரசனையின் உயரத்தை தன்னுடைய படைப்புகள் எட்டியிருக்காத காரணத்தால்தான் அவர் எதுவும் சொல்வதில்லை என்று அவன் நினைத்துக் கொள்வான்.

    பு.பெ.எ அலமாரியிலிருந்து ஒரு கோப்பை எடுத்தார். அதற்குள் ராகவன் அவருக்கு வாசிக்க தந்திருந்த அவனுடைய படைப்புகளின் பிரதிகள் இருந்தன. அவற்றை வாசித்ததன் அடையாளமாக காகிதங்கள் முழுதும் திருத்தங்களும் குறிப்புகளும் இருந்தன. கோப்பினை ராகவனிடம் தந்தார்.

    “என்னுடைய திருத்தங்களும் ஆலோசனைகளும் ஒரு தேர்ந்த எழுத்தாளனாக ஆக்கும் என்று ஒரு உத்திரவாதமும் இல்லை. ஏனென்றால், நானொரு நல்ல எழுத்தாளன் என்று இன்றுவரை நான் ஒரு நாளும் எண்ணிக்கொண்டதில்லை. அந்த எண்ணம் தான் என்னுடைய ஒவ்வொரு படைப்பின் பின்னும் அயராத உழைப்பை போட தூண்டுகோளாக அமைகிறது”

    “வாரமொரு முறை ஒரு நாவல், நாளுக்கொரு கட்டுரை, மணிக்கொரு கவிதை என்று உற்பத்தியின் அளவு முக்கியமல்ல ; படைப்பின் தரமே அளவுகோல்.”

    ராகவனுக்கு இன்னொரு எழுத்தாளரை தெரியும். பழக்கமுண்டு. அவர் இவன் வீட்டுக்கு கூட ஒரு முறை வந்திருக்கிறார். அவர் சினிமா புகழ் எழுத்தாளர் (சி.பு.எ). ஒவ்வொரு முறையும் அவர் ராகவன் வசிக்கும் நகரத்துக்கு வருவதற்கு முன்னர் மின்னஞ்சல் அனுப்புவது வழக்கம். இவனும் அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று அவரைப் போய் பார்ப்பான். அவருடனான சம்பாஷணைகள் எல்லாமே ஒற்றை வழிப்பாதைகள் தான். அவர் மட்டுமே பேசுவார். இவன் கேட்டுக் கொள்வான். சி.பு.எ பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார். சி.பு.எ-வை சந்திக்கப் போகும் போது ராகவன் கூடவே அவருக்கு பிடித்த பிராண்ட் “விஸ்கி”யை வாங்கிப் போவான். இரவு அவருக்கு டின்னரும் வாங்கித் தருவான்.
    சி.பு.எ-வுக்கு பலமுறை தன் படைப்புகளை மின்னஞ்சல் செய்திருக்கிறான். அம்மின்னஞ்சல்கள் தனக்கு கிட்டியதாக அவர் ஒரு தடவை கூட காட்டிக்கொண்டதில்லை. ”சத்தம்” சிறுகதையை அனுப்பு முன்னர் தொலைபேசியில் பேசினான். அவர் “அனுப்பி வைங்க ; கண்டிப்பா படிக்கிறேன்” என்று சொன்னார். மின்னஞ்சல் அனுப்பி பல நாட்கள் ஆன பின்னாலும், சி.பு.எ ஒரு சாஸ்திரத்துக்காகவென்றாவது ராகவன் எழுதிய சிறுகதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

    சி.பு.எ எழுதி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த திரைப்படத்தை பற்றி ஒரு நாள் உரையாடிக் கொண்டிருக்கும் திடீரென்று சி.பு.எ கேட்டார்.

    “இலக்கிய கதைகள் எழுதுவது மட்டும் தான் உனது இலட்சியமா?”

    ”நானும் பத்து வருடம் முன்னர் வரை வெறித்தனமாக இலக்கிய நாவல்களை எழுதிக் குவித்துக் கொண்டிருந்தேன். இன்று என்னை இலக்கியத்தில் இருந்து மசாலாவுக்கு போனவன் என்று ஏளனமாக என்னை பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். இன்று சினிமாவில் சூப்பர் ஸ்டார்களுக்கு பஞ்ச் டயலாக் எழுதுகிறேன். இலக்கிய பரவ்ச நிலையை என் எழுத்துகள் இன்று தராமல் இருக்கலாம். ஆனால் என் எழுத்து இன்று எனக்கு நாலு பைசா சம்பாதித்து தருகிறது.”

    “இலக்கிய விழாவில் கைதட்டு விழும். ஆனால் விழா முடிந்த பிறகு பசியோடு நீ படுக்கைக்கு செல்வதைப் பற்றி யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.”

    “நல்லதொரு உத்தியோகத்தில் நீ இருக்கிறாய். மேலும் காசு எப்படி சேர்ப்பது என்று பார். வேண்டுமானால் என்னுடைய உதவியாளனாக சேர்ந்து கொள். என்னுடைய ஸ்கிரிப்டை சரி பார்ப்பது, திருத்தி தருவது மாதிரி இதர வேலைகள்….இதற்காக நான் இருக்கும் ஊருக்கு வந்து தங்க வேண்டும் என்பதில்லை. நீ வீட்டில் இருந்த படியே செய்யலாம்”

    +++++
    Water falls in Glass2
    ஒரு நாள் என்னுடைய உயர் அதிகாரி – பிராந்திய விற்பனை மேலாளர் – என் நகருக்கு வந்து திடீரென்று போன் செய்தார். ”இன்னும் இரண்டு மணி நேரத்தில் வருகிறேன். பிசினஸ் செண்டரில் சந்திப்போம். உன்னுடைய அணியில் உள்ளவர் எல்லோரையும் இந்த சந்திப்பிற்கு வரச்சொல்” என்றார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஓரளவிற்கு எனக்கு தெரிந்தே இருந்தது. மார்ச் 31 முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன. விற்பனை இலக்கை எங்கள் அணி எட்டவில்லை. இலக்கின் 65% சதவிகித விற்பனையையே நாங்கள் முழுமை செய்திருந்தோம். இந்த மோசமான முடிவுகளுக்கு பல காரணங்கள். கடினமான முயற்சியின்மை அதில் ஒன்று நிச்சயமாக அல்ல. எனக்கு கீழ் வேலை செய்யும் விற்பனை பிரதிநிதிகள் பழுத்த அனுபவமும் நல்ல தொடர்புகளும் உள்ளவர்கள். என் கீழ் ஐந்தாறு வருடங்களாக வேலை செய்பவர்கள். எங்கள் அணி உறுப்பினர்களுக்கு நடுவில் நல்ல புரிதல் இருந்தது. ஆனால் எனக்கு தெரியும். இன்று எதுவும் கேட்கப்பட மாட்டாது. அணியில் உள்ளவர்களின் முந்தைய வருட செயல்பாடுகளை, உண்மையான உழைப்பை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்புகள் வழங்கப்படும். இதற்கு அப்பீலெல்லாம் கிடையாது.

    பிசினஸ் செண்டர் ஷாப்பிங் மாலின் இரண்டாம் மாடியில் இருந்தது. இரண்டாம் மாடியின் பால்கனியில் நின்றபடி மாலின் லாபியை பார்க்க முடியும். மேலாளர் வர தாமதமானது. மூன்று விற்பனைப் பிரதிநிதிகளும் புகைப்பதற்காக ஷாப்பிங் மாலின் பின்புறம் சென்றிருந்தார்கள். வார நாட்களில் ஷாப்பிங் மாலில் மக்கள் அலை மோதுவதில்லை.

    லாபி ஏரியாவில் ஒரு நெடிய கண்ணாடிக் குழாய்க்குள் சிறைப்படுத்தப்பட்ட செயற்கை நீரருவி ஒன்றை அமைத்திருந்தார்கள். நீர் கம்பிகளாக கண்ணாடிக் குழாயின் மேல் பகுதியிலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. நீண்ட நேர்க் கோடுகளாக நீர் விழுவதற்காக கண்ணாடிக் குழாய்க்குள் சிறு சிறு குழாய்கள் பொருத்தப் பட்டிருந்தன. வெளிப்புற கண்ணாடிக்குழாயின் கீழ்ப்பகுதி தரையைத் தொட்ட இடத்தை சுற்றி ஒரு தொட்டியில் நீர் நிரம்பியிருந்தது. தொட்டியில் ஆரஞ்சு நிற மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. தொட்டியில் வந்து விழும் நீர் ரீ-சர்குலேட் ஆகி, மேலிருந்து மீண்டும் நீர்க்கம்பிகளாக கீழே விழுந்து ஒர் அருவி போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. சத்தம் மிகையாக இருந்தது, வார இறுதி நாட்களில் வரும் கூட்டத்தின் சத்தத்தோடு கண்ணாடி அருவியின் சத்தமும் சேர்ந்து கொண்டால் ராட்சச சத்தமாகத்தான் இருக்கும்.
    எதிர்பார்த்த படியே பிராந்திய விற்பனை மேலாளருடனான சந்திப்பு கசப்பான ஒன்றாகவே இருந்தது.

    “சந்தை நிலவரம் சரியில்லை என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது”

    “போன வருடமும் 85% சதவிகித விற்பனையையே செய்தீர்கள்…இந்த வருடம் படு மோசம்”

    ”உங்கள் அணியின் மேலும் உங்களின் தலைமை மேலும் எனக்கு நம்பிக்கை போய் விட்டது”

    “போன வருடமாவது 50% சதவிகித போனசை ரிலீஸ் செய்தோம், இம்முறை அதுவும் கிடையாது. உங்களுக்கும் உங்கள் அணியில் உள்ளவர்களுக்கும் போனசை ரத்து பண்ணுகிறேன்”

    “அதிருப்தி கொண்டு ஒரிருவர் ராஜினாமா செய்யக்கூடும். அது பற்றி கவலையில்லை. மோசமான வேலை வாய்ப்பு சந்தையில் அவ்வளவு எளிதில் இன்னொரு நல்ல வேலை கிடைத்து விடுமா,,,என்ன?”

    என் அணி உறுப்பினர்களின் முகங்களில் வாட்டம் படிந்திருந்தது. நான் ஏதாவது ஆறுதல் வார்த்தை சொல்லுவேன் என்ற எதிர்பார்ப்பில் என்னைப் பார்த்தார்கள்.

    செயற்கை அருவி திடீரென நின்றிருந்தது. தொட்டிக்குள் ஒருவர் இறங்கி நின்று எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தார். ஆரஞ்சு நிற மீன்கள் எங்கே? கொஞ்சம் தள்ளி ஒரு ஜாடிக்குள் ஆரஞ்சு மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. அருவி நின்றிருந்ததால் சத்தம் அடியோடு குறைந்திருந்தது. ஒரு சில கடைக்காரர்கள் ஏழு மணிக்கே கடைகளை அடைத்துவிட்டிருந்தனர்.

    +++++

    கிருஷ்ணமனோ என்ற பெயருடன் ப்ளாகுகளில் ஒருவர் பின்னூட்டம் போடுவார், ராகவனின் ஆரம்ப கால சிறுகதைகளை தன் வலைப்பூவில் இடும் போது கிருஷ்ணமனோ தொடர்ச்சியாக பின்னூட்டமிட்டு வந்தார். கதைகளின் குறைநிறைகளை நேர்மறையான நோக்குடன் சுட்டிக் காட்டுவார். ராகவன் அவருடன் மின்னஞ்சலில் தொடர்பில் இருந்தான்.

    “நாம் சொல்வது சரியா தவறா என்பது பிரச்சினையில்லை. நாம் சொல்ல வந்ததை எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் விஷயம். அதை வாசகர்கள் அவரவர் அளவில் புரிந்து கொள்வார்கள், அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதற்கில்லை. நம் கவலை நமக்கு, அவர்கள் கவலை அவர்களுக்கு. தொடர்ந்து எழுதுங்கள், சரி தவறுகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், நீங்கள் சொல்ல வருவதை அதற்குத் தகுந்த மொழியில் சொல்லுங்கள் – எதிர்காலம் தன் சரி தவறுகளை உங்கள் பார்வையைக் கொண்டு தீர்மானிக்கக் கூடும்”

    “நீரளவே ஆகுமாம் நீராம்பல்னு என்னவோ சொல்லுவாங்க. உங்க எழுத்தில் இல்லாத இலக்கியம் எந்த இதழிலும் இல்லை.
    தொடர்ந்து எழுதுங்க, நிறைய இடத்தில் எழுதுங்க
    இந்த வருஷ முடிவுல ஒரு நாலு அல்லது அஞ்சு கதை/ கவிதைகளாவது அடுத்த வருஷ முடிவிலும் நினைத்துப் பார்க்கும் வகையில் இருக்கணும். நிறைய சோதனை முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.”

    “தடங்கலில்லாமல் நல்ல தமிழில் அழகாகச் சொல்லப்பட்ட கதை. ஒரேயொரு திருத்தம். ஆரம்பத்தில் பல பெயர்கள் முதல் இரண்டு பத்திகளில் வருகின்றன. அவை குழப்பத்தை கொடுத்தன. அவை கதைக்கு தேவையில்லை.”

    “ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி படிப்பார்கள், அதனால் கருத்து வேறுபடலாம். என் கருத்து – பின் குறிப்பு தேவையில்லை. சில சிறு சிறு மாற்றங்கள், சொற்களில் வாக்கிய அமைப்பில், தேவைப்படலாம்.”

    “உண்மையில் நீங்கள் எழுத எடுத்துக் கொண்ட விஷயம் மிகவும் முக்கியமானது. இதை ஒரு கட்டுரையாக எழுதினால்கூட நன்றாக வரும். ஆனால் கதையாக வரும்போது இன்னும் சில விஷயங்கள் தேவைப்படுகின்றன.
    கொஞ்சம் சிரமம் பார்க்காமல், ஒரு புறக் காரணத்தால் internal conflict, பின்னர் அதன் resolution என்று எழுத முடியுமா? இதை எல்லாம் உரக்கச் சொல்ல வேண்டாம், ஒரு undercurrentஆக இந்த விஷயங்கள் கதையில் பேசப்பட வேண்டும். இரண்டாம் வாசிப்பிலாவது அது வாசகனுக்குப் புரிய வேண்டும்.”

    “அழியாச் சுடர்கள் என்ற தளத்தில் அண்மையில் பதிக்கப்பட்ட பத்து கதைகளின் துவக்கங்களைப் பாருங்கள்.

    கதையின் மையப் பிரச்சினை

    முக்கிய கதாபாத்திரங்களின் குணம்

    அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்த தொனி (உணர்ச்சிகள்)

    எவ்வளவு இயல்பாக துவக்கப் பத்தியைத் தொடர்ந்து விரிந்து கொண்டே போகின்றன!”

    பல மின்னஞ்சல் பரிமாற்றங்கள்…தொலைபேசி உரையாடல்கள். கிருஷ்ணமனோ தொடர்ந்து ராகவனை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.

    +++++

    என் அணியில் இருப்பவர்களை ஒரு நாள் என் இல்லம் அழைத்து இரவு விருந்தளித்தேன். எங்களின் போனஸ்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. எனக்கு கிடைக்காமல் போனதை விட என் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கும் போனஸ் கட் செய்யப்பட்டது என்னுள் பலத்த வேதனையையும் வெறுப்பையும் அளித்தது. என் வேண்டுகோள்களை மேனேஜ்மெண்ட் மறுதளித்தது. “இந்த சப்ஜெக்ட்-இல் மேலும் ஏதும் பேச வேண்டாம்” என்று மேலாளர் சொல்லிவிட்டார்.
    நான் ராஜினாமா செய்யலாம் என்றிருக்கிறேன் என்று என் அணிக்காரர்களுக்கு சொன்னவுடன் அவர்கள் அதிர்ச்சியாயினர்.

    “எதுக்கு சார் இந்த அதீதமான முடிவு?” என்றார்கள். ஆனால் என் உணர்வை புரிந்து கொண்டனர்.
    என் அணியில் வேலை பார்த்தவர்களில் ஒருவன் – மணீஷ். பணமுள்ளவன். சில நாட்களாகவே சொந்தமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். நான் என் வேலையை துறந்தவுடன் மணிஷ் என்னை தன் மாமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான். என்னுடைய வழிகாட்டுதலில் மணீஷின் மாமா உணவுப்பொருள் வினியோகிக்கும் வியாபாரம் தொடங்கினார். மணீஷ் தன் வேலையை விட்டுவிட்டு மாமாவின் நிறுவனத்தில் இயக்குனராக ஆனான். மணீஷும் அவன் மாமாவும் என்னையும் மூன்றாவது கூட்டாளியாக சேருமாறு கேட்டனர். நான் மறுத்தேன்.

    “நான் ஒரு பகுதி நேர ஆலோசகனாக மட்டும் இருக்கிறேன். அதற்குரிய ஊதியம் மட்டும் வழங்கினால் போதும். என் நீண்ட நாள் கனவு ஒன்று இருக்கிறது. அதை தீவிரமாக பின் தொடரலாம் என்று எண்ணுகிறேன்”

    மணீஷின் நிறுவனத்தின் அலுவலகம் ஷாப்பிங் மாலுக்குள்ளேயே இருந்தது. அமைதியான வார நாட்களின் முதல் பாதியில் மட்டும் அலுவலகம் செல்கிறேன். பல வருடம் முன்னர் ஹோட்டல் அறையில் கேட்ட அருவி சத்தம் மாதிரி, கண்ணாடி அருவியின் சத்தத்தை என் அலுவலக அறையில் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

    +++++

    கிருஷ்ணமனோ ஒரு நாள் போன் செய்தார். புதிதாக இணைய இலக்கிய இதழ் ஒன்று நடத்த திட்டம் தீட்டியிருப்பதாக சொன்னார். ஒரிரு மாதங்கள் கழித்து “எழுத்து மலர்கள்” என்ற இணைய இதழ் தொடங்கப்பட்டது. ராகவனின் சிறுகதைகள் “எழுத்து மலர்களில்” தொடர்ந்து வெளிவந்தன. மு.ராகவன் என்ற பெயரை மாற்றி “முனி” என்ற பெயரில் ராகவனின் கதைகள் பிரசுரிக்கப்பட்டன. சீக்கிரமே ”எழுத்து மலர்கள்” புத்தகங்கள் பதிப்பிட ஆரம்பித்தது. எழுத்து மலர்கள் வெளியிட்ட முதல் புத்தகம் – முனி எழுதிய சிறுகதைத் தொகுதி. சிறுகதைத் தொகுதியில் இருந்த முதல் கதையின் தலைப்பே தொகுதியின் தலைப்பானது – “சத்தம்”

    +++++

    கிருஷ்ணமனோ ”சத்தம்” சிறுகதைத் தொகுதியின் முதல் காப்பியை குரியரில் அனுப்பி வைத்தார். மணிஷின் அலுவலகத்திற்கே அதை அனுப்பி வைக்குமாறு கிருஷ்ணமனோவிற்கு சொல்லியிருந்தேன். யாரோ ஒரு பிரபல எழுத்தாளரைப் பிடித்து மதிப்புரை வாங்கி வெளியிடப் போவதாக கிருஷ்ணமனோ முன்னரே சொல்லியிருந்தார். எனவே ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். ஒரு மதிப்புரையல்ல : இரண்டு மதிப்புரைகள் போடப் பட்டிருந்தன. எழுதியிருந்தவர்கள் : பு.பெ.எ-வும் சி.பு.எ-வும்

    0000
    Water Falls in Glass3

    நன்றி : வல்லமை.காம் (http://www.vallamai.com/literature/short-stories/29795/)

  • பாரதி கவிதைகள்

    போன வருடம் ஒரு கட்டுரையில் “பாரதி மாயை” என்ற சொற்றொடரை முதல் முறையாகப் படித்தேன். அப்போது பாரதியின் ”மாயையைப் பழித்தல்” என்ற கவிதையின் கீழ்க்கண்ட வரி என் நெஞ்சில் ஓடிற்று :-

    “உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?”

    எனக்கும் பாரதிக்குமிடையிலான உறவு எப்போது தொடங்கியது? கையடக்க ”பாரதியார் கவிதைகள்” புத்தகம் அன்பளிப்பாக கிடைத்தபோதுதான் என்று நினைக்கிறேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்புத்தகம் கிடைத்தவுடன் நான் புத்தகத்தைப் பிரித்து படித்த முதல் பாடல் என்ன என்று எனக்கு இன்னும் நன்றாக ஞாபகமிருக்கிறது.

    “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்”

    எங்கள் வீட்டின் பின்புறம் துணி துவைக்கும் கல் ஒன்று இருந்தது. என் அன்னையார் என்றும் அக்கல்லை துணி துவைக்கப் பயன்படுத்தியது கிடையாது. ஈரமே ஆகாமல், உட்கார ஏதுவாக இருக்கும். வீட்டின் பின்புறம் யாரும் இல்லாதபோது துணி துவைக்கும் கல் ஆசனத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு ஒரு வித கர்வத்துடன் பாரதியின் கவிதைகளை சத்தம் போட்டு படிப்பது வழக்கமாகி விட்டது.

    “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே” என்று ஒரு நாள் பாடிக் கொண்டிருந்தேன். ”என்ன சத்தம் அங்கே?” என்று வீட்டின் பின்புறச் சந்திலிருந்து ஒரு குரல் கேட்டது. நான், “யாரு கேக்கறது?” என்று கேட்டுவிட்டு என் உரத்த வாசிப்பை சற்று நிறுத்தினேன். கிணற்றுக்குப் பின்னால் உயரமாக வளர்ந்து நிற்கும் தென்னை மரத்தின் கீற்றுகள் அசைந்து இனிமையான ஒலியெழுப்பின. ”பாடம் படிக்கிறிங்களா தம்பீ?” என்று மீண்டும் அந்த குரல். பழக்கப்பட்ட குரலாக தெரிந்தது. ஆனால் யாருடைய குரல் என்று என்னால் ஊகிக்க இயலவில்லை. ”இல்லை…பாடம் இல்லை…பாரதி பாடல் படிச்சுக்கிட்டு இருக்கேன்” என்றேன். “அப்படியா….” என்று சொல்லி விட்டு அக்குரல் பாடத் துவங்கியது.

    “தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்து மாரி! கேடதனை நீக்கிடுவாய், கேட்ட வரந்தருவாய்”

    முத்துசாமியின் குரல். எங்கள் காலனியின் தோட்டக்காரன். பின்புறச் சந்தில் இயற்கையின் அழைப்புக்கு பதிலளித்துக் கொண்டிருந்தான். கையில் புகையும் பீடி. வாயில் பாரதி பாட்டு.

    ஒருநாள் மாலை எங்கள் வீட்டு முன்புறத் தோட்டத்தில் ”வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே” படித்தவாறு அமர்ந்திருந்தேன்.

    “ஒற்றைக் குடும்பந் தனிலே – பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை; மற்றைக் கருமங்கள் செய்தே – மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை ஏவல்கள் செய்பவர் மக்கள் – இவர் யாவரும் ஓர் குலமன்றோ மேவி அனைவரும் ஒன்றாய் – நல்ல வீடு நடத்துதல் கண்டோம்”

    ஒரு பந்து வந்து புத்தகம் மீது விழுந்தது. கையடக்கப் புத்தகம் தவறி தரையில் எகிர்ந்தது. அட்டை கழண்டு வந்துவிட்டது. பக்கத்து மாளிகை வீட்டின் தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த என் நண்பன் – மணிகண்டன், மதிற்சுவரின் மேலிருந்து எட்டிப் பார்த்து “பாலை எடுத்துக் குடுடா” என்ற ஆணையிட்டான். “தர மாட்டேன் போடா!” என்று திரும்பக் கத்தினேன். “பால் இன்னும் ஒரு நிமிஷத்துல என் கைக்கு வராட்டி உன் கையில் இருக்கும் புக்கை தூக்கி சாக்கடையில் போட்டு விடுவேன்” மணிகண்டன் சொன்னதைக் கேட்டவுடன் என் கோபம் எல்லை மீறி பக்கத்து வீட்டுக்கு போனேன். நானும் மணிகண்டனும் ஆக்ரோஷமான சண்டையில் ஈடுபட்டோம். மணிகண்டன் வாயில் “பொன்மொழிகள்” கொப்பளித்தவாறு இருந்தன. நான் அவன் கன்னத்தில் இரண்டு முறை அறைந்து விட்டேன். அவன் என்னை எத்தனை முறை அறைந்தான் என்று நினைவில்லை. மண்ணில் உருண்டு புரண்டோம். மற்ற நண்பர்களுக்கு நல்ல கேளிக்கையாக இருந்தது. மணிகண்டனின் தந்தை வந்து எங்களை விலக்கினார். திண்ணையில் கிடந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்து கிழிந்து வந்திருந்த அட்டையை ஒட்ட முயற்சித்தேன். மணிகண்டன் மட்டுமல்ல, மற்ற பிற நண்பர்களும் என்னைச் சீண்ட நினைக்கும்போது, பாரதியைப் பற்றி ஏதாவது சொல்லி என்னைக் கோபப்படுத்துவார்கள். கோபம் மீறி அழுதும் இருக்கிறேன். அப்படி ஒரு கண்முடித்தனமான பித்து. வளரும் வயதில் சினிமா நடிகர்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் மேல் இருக்கும் பக்தி மாதிரி. என் சொந்த அண்ணன் ஒரு முறை செய்த சீண்டலில் கேவிக் கேவி அழுது தொண்டை வலி ஏற்பட்ட கதையும் உண்டு. தண்டனையாக என் அண்ணனிடம் பல நாட்கள் பேசாமல் இருந்தேன்.

    “உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ? – நன்னெஞ்சே! தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனோமோ? – நன்னெஞ்சே!”

    என் தந்தைக்கு தெரிந்த ஒருவர் இல்லறம் துறந்தவர். கதிர்காமத்தைச் சேர்ந்தவர். எங்கள் ஊரை ஒட்டி ஓடும் காவிரியின் கிளை நதி ஒன்றின் கரையில் குடிசை போட்டு வசித்திருந்தார். அவருடைய குடிலுக்கு ஒரு நாள் என் தந்தையுடன் சென்றிருந்தேன். பாரதியார் கவிதைகள் மேலிருந்த என் காதலைப் பற்றி பெருமையுடன் அவரிடம் என் தந்தை சொன்னார். ”பாரதியார் எழுதியதில் உனக்குப் பிடித்ததொன்றை சொல்” என்று என்னைக் கேட்டார்.

    “எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய் விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் – பண்ணியதோர் சக்தியே நம்மைச் சமைத்ததுகாண் நூறாண்டு பக்தியுடன் வாழும் படிக்கு”

    இது என்ன பா என்று தெரியுமா உனக்கு?”

    அதெல்லாம் தெரியாது… ஆனால் இவ்வரிகள் பிடிக்கும்”

    “இது வெண்பா. இதை சங்கராபரண ராகத்தில் பாடினால் பொருத்தமாக இருக்கும்” என்று புன்னகைத்தார். விடைபெறும்போது சுவாமி சித்பவானந்தரின் கீதை உரைப் புத்தகத்தை எனக்கு பரிசளித்தார் அந்தப் பெரியவர். பள்ளியில் போட்டிகள் எதிலும் பங்கு கொண்டதில்லை. எனவே பரிசு எதுவும் கிடைத்ததில்லை. முதன்முதலில் எனக்குக் கிடைத்த அந்தப் பரிசையும் பாரதி கவிதைதான் பெற்றுத் தந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த பரிசுப் புத்தகம் தொலைந்து விட்டது.

    “வேத வானில் விளங்கி ‘அறஞ்செய்மின், சாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின் தீத கற்றுமின்’ என்று திசையெலாம் மோத நித்தம் இடித்து முழங்கியே ………………………………………………………………………………… மலர்ச் செங்கணாய நின் பதமலர் சிந்திப்பாம்”

    பாரதியார் கவிதைகள் புத்தகத்தை சதா கையில் சுமந்த வண்ணம் அலைந்து திரிந்த நாட்கள் மறைந்து, பாரதியின் கருத்துகளை மனதில் சுமக்கும் இளைஞனானேன். பாரதியின் பல பாடல்கள் மனப்பாடம். யாராவது பாரதியைப் பற்றி பேசினால் “என் சொந்தக்காரரைப் பற்றி இவர் எப்படி பேசலாம்?” என்பது மாதிரி பாரதியை சொந்தம் கொண்டாடிய தருணங்கள் பல உண்டு.

    “வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா; வரிசையுடன் எழுதிவைக்க வகையும் இல்லை ஞாயிற்றை சங்கிலியால் அளக்க லாமோ? ஞானகுரு புகழினை நாம்வகுக்க லாமோ?”

    கல்லூரி முடிந்து வேலை செல்லத் துவங்கியபிறகு பாரதியுடனான பிணைப்பு புறவுலகுக்கு அவ்வளவாக தெரியாவண்ணம் வைத்துக் கொண்டேன். மனக்குழப்பம் ஏற்படுகின்ற பொழுதுகளில் மட்டும் பாரதியின் கவிதைகள் மருந்து சாப்பிடுவது போல படிப்பேன். எதிர்காலம் பற்றிய பயம் ஏற்படுகிறபோதெல்லாம், மனந்தளர்வுறும் பொழுதுகளில் எல்லாம், கீழ்க்கண்ட வரிகளை மந்திரம் போல் உச்சரிப்பேன் :-

    “சொல் ஒன்று வேண்டும் தேவ சக்திகளை நம்முளே நிலை பெறச் செய்யும் சொல் வேண்டும்”

    “தெளிவுறவே அறிந்திடுதல் ; தெளிவுதர மொழிந்திடுதல் ; சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்; கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல், இங்கிவையெல்லாம் நீ அருளும் தொழில்களன்றோ?”

    பேச்சிலராக இருந்த நாட்களில் பாரதி வெறும் புகைப்படமாக நான் தங்கிய அறைகளில் தொங்கிக் கிடந்தார். நெடுநாளாய் பத்திரமாய் வைத்திருந்த கையடக்கப் பிரதி எங்கோ தொலைந்து போனது. இன்னொரு பிரதியெதுவும் வாங்கவில்லை. பாரதியுடனான உறவு உறைந்து போய்விட்டதென்று நினைத்துக் கொண்டிருந்தேன். “பாரதி மாயை” என்ற சொற்றொடரை படித்ததும் என்னுள் பழைய நினைவுகள் புத்துயிர் பெற்றன. கட்டுரையாசிரியருக்கு நன்றி செலுத்த வேண்டும். பாரதியின் கவிதைகளில் சில கவிதைகள் மட்டுமே நல்ல கவிதைகள்; மற்றவையெல்லாம் சாதாரணமான கவிதைகள்தாம் என்று அவர் வாதாடினார். பாரதியைக் கொண்டாட அவருடைய இலக்கிய அந்தஸ்து முக்கியமில்லை என்ற கொள்கைக்கு வந்துவிட்டவன் நான். சோர்வுற்ற நெஞ்சுக்கு மருந்தளிக்கும் வரிகளைத் தருபவர் மகாகவியா இல்லையா என்பது முக்கியமில்லை. வாழ்வுப் பயணத்தின் வழி நெடுக தன்னுடைய ஜீவவரிகளால் முன்னேறும் உந்துதலைத் தந்து கொண்டிருக்கும் பாரதி, மிகச்சிறந்த கவிஞராக இல்லாது போகட்டும். எனக்கு கவலையில்லை.

    “பிழைக்கும் வழி சொல்ல வேண்டுமென்றாலொரு பேச்சினிலே சொல்லு வான் உழைக்கும் வழி வினை யாளும்வழிபயன் உண்ணும் வழியுரைப் பான் அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல் அரைநொடிக் குள்வரு வான் மழைக்குக் குடை பசி நேரத் துணவென்றான் வாழ்வினுக் கெங்கள் கண்ணன்”

    கடந்த ஒரு வருடத்தில் பாரதியுடனான தொடர்பு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒர் இலக்கிய மன்றத்தில் உரையாடும் வாய்ப்பு முதல்முறையாக எனக்கு கிடைத்தபோது மேடைபயம் வாட்டியது. உரையைத் தொடங்கும்போது பாரதியின் மந்திரம் ஒன்றோடுதான் தொடங்கினேன்.

    “பயமெனும் பேய்தனை அடித்தோம் பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்”

    பாரதி மாயை” விடாது வளர்ந்து வருகிறது. அடுத்த தலைமுறையையும் விடவில்லை. தில்லியில் வசிப்பதால் என் மூத்த மகள் பூஜாவுக்கு பாரதி கவிதை மட்டுமல்ல தமிழே தொலைதூரம்தான். கோடை விடுமுறை ப்ராஜெக்ட் வொர்க்கில் சுதந்திர போராட்ட வீரர் ஒருவரை பாத்திரமாக வைத்து காமிக்ஸ் தயாரிக்க வேண்டியிருந்தது. அவளாகவே ஒருவருடைய துணையுமில்லாமல் தயாரித்த காமிக்ஸின் நாயகனாக வருவது சாக்‌ஷாத் நம்ம தலைப்பா கட்டு பாரதிதான். o

    “மந்திரங் கூறுவோம். உண்மையே தெய்வம் கவலையற்றிருத்தலே வீடு. களியே அமிழ்தம். பயன்வருஞ் செய்கையே அறமாம். அச்சமே நரகம். அதனைச் சுட்டு நல்லதை நம்பி நல்லதே செய்க”

    நன்றி : ஆம்னிபஸ் வலைதளம் (http://omnibus.sasariri.com/2012/12/blog-post_11.html?spref=fb)