Blog

  • பெண்ணியவாதி தெய்வம் – தாரா

    (இன்று சரஸ்வதி பூஜை. இவ்வலைப்பதிவின் இருநூறாவது இடுகை இது. பௌத்த சமயத்தின் சரஸ்வதியான தாராவைப் பற்றிய இக்கட்டுரை இருநூறாவது பதிவாக வருகிறது பிப்ரவரி 2010இல் வலையில் எழுதத் தொடங்கிய போது இருநூறாவது பதிவு வரை போகும் என்று சற்றும் நினைக்கவில்லை. தொடர்ச்சியாக யாரேனும் இடுகைகளை வாசித்து வருகிறார்களா என்று தெரியவில்லை. எனினும் விளையாட்டுத்தனம் கலக்காத சீரிய பதிவுகளையே இடுவது என்ற உறுதியிலிருந்து விலகாமல் இன்று வரை முயன்று வருகிறேன்.)

    Green_Tara,_Kumbm,_Gyantse,_Tibet,_1993

    தாரை வழிபாடு முதலில் எந்த மரபில் தோன்றியது என்பதில் ஆய்வாளர்களுக்கு நடுவில் ஒருமித்த கருத்து இல்லை. சக்தி வழிபாட்டு மரபுகளிலிருந்து ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட இந்து மதத்துள்ளும், பௌத்த சமயத்துள்ளும் நுழைந்திருக்கலாம் என்பது பெரும்பாலோரின் கருத்து. இந்து புராணங்களில் வரும் துர்கையின் ஒரு வடிவமாக தாரை தேவி வழிபாடு தோன்றியிருக்கக் கூடும் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்.

    மூல பௌத்தத்தில் பெண் தெய்வங்கள் இருந்ததில்லை. மகாயான பௌத்தம் பிரபலமாகத் தொடங்கிய முதல்-இரண்டாம் நூற்றாண்டுகளில் பெண் தெய்வங்கள் பௌத்த சமயத்துள் நுழைந்திருக்கலாம் என்றும் கருத இடமுள்ளது. மிகவும் பழைமையான நூலான பிரஜ்னபாரமித சூத்திரத்தில் தான் முதன்முதலில் பிரஜ்னபாரமிதா என்கிற பெண் தெய்வத்தின் பெயர் குறிப்பிடப்படுகிறது. இந்நூல் சமஸ்கிருத மூலத்தில் இருந்து கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சீன மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளன. பௌத்தத்தில் பெண்மைக் கொள்கை “பிரஜ்னபாரமிதா” என்கிற பெண் தெய்வத்தின் வடிவத்தில் முதன்முதலாகத் தோன்றியது. தெளிவான ஞானமெனும் கருணையின் வெளிப்பாடாக தாரா  பௌத்தத்தில் வருவது பிற்காலத்தில் தான். (கி.பி 5-8ம் நூற்றாண்டு). மிகப்பழைமையானதும், மிகத் தெளிவாக அடையாளம் காணக்கூடியதுமான தாராவின் உருவம் (கி.பி 7ம் நூற்றாண்டு) நமக்கு எல்லோரா மலைக்குகை எண் 6 இல் காணக் கிடைக்கிறது. இந்தியாவின் வட-கிழக்குப் பிராந்தியங்களை ஆண்ட பால் வம்சத்தின் ஆட்சியின் போது தாரை வழிபாடு மிகவும் பரவலாகத் தொடங்கியது. தாந்த்ரீக பௌத்தம் பிரபலமடைந்த பால் வம்ச ஆட்சியின் போது தான் தாரா வழிபாடு வஜ்ராயன பௌத்தத்திலும் கலந்தது. பத்மசம்பவர் தாரா தேவியையொட்டிய வழிபாட்டு நடைமுறைகளை திபெத்துக்கு கொண்டு சென்றார். காலப்போக்கில் “அனைத்து புத்தர்களின் தாய்” என்று தாரா  வணங்கப்பட்டாள் ; “தெய்வத்தாய்” என்னும் வேத மற்றும் வரலாற்றுக்காலத்துக்கும் பண்டைய கருத்தியலின் எதிரொலியாக இதை எண்ணலாம்.

    தெய்வம், புத்தர் மற்றும் போதிசத்துவர் – எவ்வாறாக கருதப்பட்டாலும் , திபெத், நேபால், மங்கோலியா, பூட்டான் ஆகிய நாடுகளில் தாரை வழிபாடு மிகப் பிரபலம் ; உலகெங்கிலும் உள்ள பௌத்த சமூகங்களில் தாரை தொடர்ந்து வழிபடப்படுகிறாள்.  தாரை வழிபாட்டில் பச்சைத் தாராவும் வெள்ளைத் தாராவும் மிகப் பிரபலமான வடிவங்கள். அச்சம் போக்கும் தெய்வமாக பச்சைத் தாரா விளங்குகிறாள் ; நீண்ட ஆயுள் தரும் தெய்வமாக வெள்ளைத் தாரா இருக்கிறாள்.

    ஒரு போதிசத்துவராக தாராவின் தோற்றத்தைப் பற்றி பல பௌத்த தொன்மங்கள் பேசுகின்றன. பெண்ணியத்தின் முதல் பிரதிநிதி தாரா என்று சொல்லும் ஒரு தொன்மக்கதை இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பெண்ணியவாதிகளுள் அதிர்வை ஏற்படுத்தலாம்.

    +++++

    Tara Ellora Cave 6

    பல லட்சம் ஆண்டுகட்கு முன் இன்னோர் உலகத்தில் ஓர் இளவரசி வாழ்ந்து வந்தாள். அவள் பெயர் யேஷே தாவா. பல யுகங்களாக அவ்வுலகத்தில் வாழ்ந்த ஒரு புத்தருக்கு அவள் காணிக்கைகள் வழங்கி வந்தாள். அந்த புத்தரின் பெயர் தோன்யோ த்ரூபா. அவளுக்கு போதிசித்தம் (போதிசத்துவரின் மனோ-ஹ்ருதயம்) பற்றிய முக்கிய போதனை ஒன்றை த்ரூபா அளிக்கிறார், போதனை பெற்ற இளவரசியை சில துறவிகள் அணுகி அவள் அடைந்த சாதனையின் பலனாக அடுத்த பிறவியில் ஆணாகப் பிறக்கும் பிரார்த்தனை செய்யும் படி ஆலோசனை சொல்கிறார்கள். அப்போது தான் ஆன்மீகத்தின் அடுத்த நிலைகளை அவள் அடைய இயலும் என்றும் சொல்கிறார்கள். “பலவீனமான சிந்தனை கொண்ட உலகத்தோரே ஞானத்தை எட்ட பாலியல் வேற்றுமையை ஒரு தடையாகக் கருதுவர்” என்று சொல்லி அத்துறவிகளின் பேச்சை மறுதளித்தாள். பெண் ரூபத்தில் உயிர்களின் தொண்டாற்ற விழைவோர் குறைவாகவே இருப்பதை எண்ணி வருத்தமடைகிறாள். பிறவிகளை முடிவதற்கு முன்னர் எல்லாப் பிறவிகளிலும் பெண்ணாகவே பிறக்க உறுதி பூணுகிறாள். பின்னர் பத்தாயிரம் ஆண்டுகள் அவள் தியானத்தில் ஈடுபடுகிறாள். அவளின் தியானம் பல்லாயிரக் கணக்கான உயிர்களை சம்சாரத்திலிருந்து விடுவிக்கிறது. இதை உணர்ந்து த்ரூபா புத்தர் “இனி வரப் போகிற பல்வேறு உலக அமைப்புகளில் உயர்ந்த போதியின் அடையாளமாக நீ பெண் கடவுள் தாராவாக வெளிப்படுவாய்” என்று அவளுக்குச் சொல்கிறார்.

    +++++

    கருணை இயக்கம் என்னும் தலைப்பில் 1989-இல் கலிஃபோர்னியாவில் நிகழ்ந்த மாநாட்டில் வணக்கத்துக்குரிய தலாய் லாமா தாரா பற்றிப் பேசினார்.

    “தாராவின் தொடர்பு கொண்ட உண்மையான பெண்ணிய இயக்கமொன்று பௌத்தத்தில் இருக்கிறது. போதிசித்தத்தின் அடிப்படையும் போதிசத்வனின் உறுதியும் கொண்டு முழு விழிப்பு நிலை எனும் இலக்கை அவள் நோக்கினாள். மிகக் குறைவான பெண்களே புத்த நிலையை அடைந்த தகவல் அவளை பாதித்தது. “ஒரு பெண்ணாக நான் போதிசித்தத்தைக் கைக் கொண்டேன். என் எல்லாப் பிறப்புகளிலுல் ஒரு பெண்ணாகவே பிறக்க உறுதி கொள்கிறேன். என் இறுதிப் பிறப்பில் நான் ஒரு புத்த நிலையை ஒரு பெண்ணாகவே எய்துவேன்” என்று அவள் சபதம் பூண்டாள்”

    +++++

    பௌத்த கொள்கைகளின் உருவகமாக இருக்கும் தாரா பெண் பௌத்த-நடைமுறையாளர்களை ஈர்க்கும் தன்மை உடையவளாக இருக்கிறாள். போதிசத்துவனாக தாராவின் வெளிப்பாடு பெண்களையும் தன் குடைக்குள் ஒருங்கிணைத்து அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமயமாக விரிவடைய மகாயான பௌத்தத்தின் முயற்சியாகக் கொள்ளலாம்.

  • குண்டூசி

    brass_pins_large

    நான் உட்கார்ந்திருந்த இருக்கையின் மெத்தை மீது யாரோ சில குண்டூசிகளை தலைகீழாக குத்தி வைத்திருக்கிறார்கள். தெரியாமல் உட்கார்ந்து விட்டேன். சுருக் சுருக்கென குத்திக் கொண்டிருந்தது. ரிசப்ஷனில் அந்த இருக்கையைத் தவிர வேறு இருக்கைகள் காலியாக இல்லை. எழுந்து நின்று கொண்டேன். வேலையில்லாதவர்கள் யாரோ இந்த வேலையை செய்திருக்க வேண்டும். உட்காரும் இருக்கையில் தலைகீழாக குண்டூசியை குத்தி வைத்தவர்களின் எண்ணப் போக்கு என்னவாக இருக்கும்? நான் அவஸ்தை பொறுக்காமல் எழுந்து நிற்பதை குத்தியவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனரோ!

    ரிசப்ஷனையும் உள்ளிருக்கும் ஹாலையும் கண்ணாடிச் சுவர் பிரித்தது ;  உள்ளே இருபது முப்பது பேர் தத்தம் இருக்கையில் உட்கார்ந்து வேலையில் ஆழ்ந்திருந்தனர் அல்லது வேலை செய்வது போல் நடித்துக் கொண்டிருந்தனர். வாடிக்கையாளர் ஒருவரை சந்திப்பதற்காக அந்த அலுவலகத்திற்கு வந்திருக்கிறேன். ஏறத்தாழ ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

    யாரைப் பார்க்க வந்தேனோ அவர் அமைதியாகப் பேசும் மனநிலையில் இருந்ததாக தெரியவில்லை. போனில் யாரையோ கத்தினார். பின்னர் அறைக்குள் நுழைந்த சக-ஊழியர் ஒருவரின் மேல் சத்தம் போட்டார். . நான்கைந்து நாட்களாக சவரம் செய்யாமல் முளைத்திருந்த முட்தாடியை அடிக்கடி தடவி விட்டுக் கொண்டிருந்தார். தன் உருவத்தை சாந்தமாக வைத்துக் கொள்ள அரும்பாடு பட்டார். நான் சொல்வதை சில நொடிகள் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தவரின் கவனத்தை போனில் வந்த குறுஞ்செய்தியொன்று சிதறடித்தது. அடுத்த நிமிடம் நான் மீண்டும் ரிசப்ஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அவர் தன் மேலதிகாரியைப் பார்த்து விட்டு வரும் வரை காத்திருக்குமாறு பணிக்கப்பட்டேன்.

    ரிசப்ஷனில் காத்திருப்போரின் எண்ணிகை கூடியது மாதிரி இருந்தது. ஏற்கெனவே மற்ற இருக்கைகளில் இருந்தவர்கள் இன்னும் உட்கார்ந்திருந்தார்கள்.  குண்டூசி இருக்கையின் விளிம்பில் ஓர் இளைஞன் பதற்றத்துடன் பல்லைக் கடித்தவாறு அமர்ந்திருந்தான். நேர் முகத்திற்கு வந்திருப்பான் என்று நினைத்துக் கொண்டேன்.

    பத்து நிமிடங்கள் கழித்து அவர் வரவேற்பறைக்கு வந்தார். நான் இன்னும் அவருக்காக காத்திருந்தது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது போல் தோன்றியது. சலித்துக் கொள்பவர் போல அவர் பார்வை இருந்தது.

    அதே அறைக்குள் மீண்டும் சென்றேன். அவர் மேஜையின் மேல் குவிந்திருந்த காகிதங்களின் உயரம் அதிகமாகியிருந்தது. மேலாக இருந்த ஒரு சில காகிதங்களில் கையெழுத்திடலானார். ஏற்கெனவே நான் அவருக்கு சொன்னவற்றை அவரிடம் மீண்டும் சொல்ல வேண்டியதாயிற்று. ஒரிடத்தில் என்னை நிறுத்தினார். முதல் முறையாக அவர் முகத்தில் சிறு புன்னகை. நான் சொன்ன ஏதோ ஒன்று அவர் கவனத்தை கவர்ந்திருக்க வேண்டும். அடுத்த நிமிடம் அவர் என்னை தன் உயர் அதிகாரியிடம் அழைத்துச் சென்றார். சந்திப்பு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்கு தொடர்ந்தது.

    அடுத்த நாள் நான் என் அதிகாரியை அழைத்துக் கொண்டு அதே அலுவலகத்திற்குச் சென்றேன். முந்தைய நாள் குண்டூசி குத்தப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்தேன். குண்டூசிகளை யாரோ எடுத்து உட்கார ஏதுவாய் செய்திருந்தார்கள்.

    ++++++

    பல மாதங்களுக்குப் பிறகு அதே வாடிக்கையாளர் அலுவலகத்தின் வரவேற்பறை சுத்தமாக மாறியிருந்தது. ஜன்னல் ஏசிக்கு பதிலாக அறையின் உயரத்தில் அறை ஏசி பொருத்தப்பட்டிருந்தது. இருக்கைகள் எல்லாம் மாற்றப்பட்டிருந்தன. கண்களுக்கு குளிர்ச்சியாக வரவேற்பறை சுவர்கள் புது வர்ணம் பூண்டிருந்தன.  வரவேற்புப் பெண்ணின் பின் புறமாக இருந்த கண்ணாடிச்சுவரில் புது டிசைன் அமைக்கப்பட்டிருந்தது. முன்னாள் குண்டூசி இருக்கை இருந்த இடத்தில் இப்போது வெறோர் இருக்கை. குளிர் பானம் வழங்கப்பட்டது. அதைக் குடித்து முடிக்குமுன்னரே உள்ளே செல்ல அழைப்பு வந்தது.

    அவர் மேஜை துடைத்து வைத்தது போன்று இருந்தது. காகிதங்கள் குறைவாக இருந்தன. நான் பேசியதை விட அவர் தான் அதிகமாகப் பேசினார் பேச்சுக்கு நடுவில் கொஞ்சம் வெப்பம் அதிகமாக உணர்ந்தேன். ஏசி சரியாக வேலை செய்யவில்லையோ என்று எண்ணிக் கொண்டிருந்த போது மின்சாரம் போனது. அறை இருட்டில் மூழ்கியது. அவர் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு வியர்க்கத் தொடங்கியது.

    அவருக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. முதல் முறையாக அவரைப் பார்க்க வந்த போது இருந்த உதவியற்ற நிலைக்கு திரும்பியது போல் உணர்ந்தேன்.

    அடுத்த நாள் அதிகாரியை அழைத்துக் கொண்டு வந்த போதும் அலுவலகத்தில் மின்சாரம் திரும்பியிருக்கவில்லை.  பேட்டரி விளக்கின் ஒளியில் உரையாடினோம். என் அதிகாரி பேசத்தொடங்கியதும் அறையில் அமைதி நிரம்பியது. வாடிக்கையாளரின் உதட்டில் டிரேட் மார்க் சிறு புன்னகை தாண்டவமாடத் தொடங்கிய போது எங்களுக்கெல்லாம் தேநீர் பருகத் தரப்பட்டது.

    அதிகாரியின் சமயோசிதம் இல்லாவிடில் வாடிக்கையாளரை அமைதிப்படுத்த முடிந்திருக்குமா என்பது சந்தேகமே! அவர் துணையின்றி என்னால் என்ன செய்து விட முடியும்? சுய-ஐயத்துடன் வரவேற்பறை வாயிலாக வாசலை நோக்கி சென்ற போது மின்சாரம் திரும்ப வந்து அவ்வலுவலகத்தின் அறைகள் ஒளியில் குளித்தன.

    +++++

    இன்னும் சில காலத்துக்குப் பிறகு தேங்கிக் கிடந்த சில சிறு சிக்கல்களைப் பேசித் தீர்ப்பதற்காக அந்த அலுவலகத்துக்கு சென்ற போது முட்தாடி அதிகாரி இன்னொரு அதிகாரியை அறிமுகப்படுத்தி வைத்தார். புதியவர் ஒரு புள்ளி முடி கூடத் தெரியாமல் முகத்தை சுத்தமாக மழித்திருந்தார். அவர் உதட்டில் புன்னகை நிரந்தரமாக ஒட்ட வைத்தது போலத் தெரிந்தது. அதற்குப் பின் புதியவரை சந்திக்கச் சென்ற போதெல்லாம் அவர் என்னைத் தனியே சந்திக்கவில்லை. மற்ற நிறுவனத்தின் விற்பனையாளர்களையும் சேர்த்தழைத்து சந்திப்பதை அவர் பழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு பட்டி மன்றத்தில் பங்கு பெற்று தன் கட்சி வாதத்தை முன்வைக்கும் உணர்வே ஒவ்வொரு சந்திப்பிலும் எனக்கு ஏற்பட்டது. முட்தாடிக்காரர் போல நெற்றி சுழிக்கும் பழக்கம் அவரிடம் அறவே கிடையாது.

    மேஜையில் ஒரு காகிதம் கூட இல்லாமல் இருக்கும். ஒரே ஒரு குண்டூசிக் கூடு நிரம்பி வழியும். அதிலிருந்து ஒரு குண்டூசியை எடுத்து பல் குத்திக் கொண்டே இருப்பார். அவர் குண்டூசியை பக்கத்தில் கிடக்கும் குப்பைக் கூடைக்குள் எறிந்தார் என்றால் சந்திப்பு சில நொடிகளில் முடிவடையப் போகிறது என்று அர்த்தம்.

    முட்தாடிக்காரரின் சமயத்தில் இருந்தது போல் அடிக்கடி சென்று சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்படவில்லை. மற்ற நிறுவன விற்பனைப் பிரதிநிதிகள் உள்ளே நுழைந்து விட்டார்கள் என்று என் அதிகாரி கவலைப் பட்டுக் கொண்டே இருப்பார். ஒரு நாள் அவரையும் கூட்டிக் கொண்டு சென்றேன். வரவேற்பறைக்கு வந்து எங்களைத் தன் அறைக்குள் கூட்டிக் கொண்டு போனார் குண்டூசியால் பல் குத்துபவர். அன்று எங்களோடு இன்னும் இரண்டு மூன்று நிறுவனப் பிரதிநிதிகளும் சேர்ந்து கொண்டனர். இசை நாற்காலி விளையாடுவது போன்று மாற்றி மாற்றி ஒவ்வொருவரிடமும் உரையாடினார். என் அதிகாரி திக்குமுக்காடினார். ஒரு முகமான உரையாடல்களுக்கு மட்டும் பழக்கப்பட்ட அவருக்கு இது முற்றிலும் புதிதான அனுபவமாக இருந்தது.

    வரவேற்பறை ஏசியைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். தற்காலிகமாக புழுக்கம் அதிகமாகத் தெரிந்தது. என் அதிகாரி முகம் கழுவும் அறைக்கு சென்று திரும்புவதற்கு நேரம் பிடித்தது.

    ++++++

    சில மாதங்களில் என் அதிகாரி வேலையை விட்டு சென்று விட்டார், எங்கு போய்ச் சேர்ந்திருக்கிறார் என்ற தகவல் எங்களுக்கெல்லாம் தெரியாமல் இருந்தது. குண்டூசி பல் குத்துபவரின் நிறுவன அலுவலகத்துக்கு நான் அழைக்கப்பட்டு பல நாட்கள் மாதங்கள் ஆயின. புதிதாக வேலையில் சேர்ந்த என் புது அதிகாரிக்கு எப்படியேனும் அந்த அலுவலகத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகப்படுத்தப்பட வேண்டும் என்ற துடிப்பு அதிகமாக இருந்தது. குண்டூசியால் பல் குத்துபவர் தொலைபேசியில் இனிமையாகப் பேசினார் ; ஆனால் சந்திக்க நேரம் கொடுக்காமல் இருந்தார். ஒரு நாள்  முன்னறிவிப்பில்லாமல் நானும் என் புது அதிகாரியும் அவரைப் பார்க்கச் சென்றோம். குண்டூசியால் பல் குத்துபவரின் பக்கத்தில் இன்னொருவரும் உட்கார்ந்திருந்தார். என் மாஜி-அதிகாரி. ஓரிரு நிமிடங்களுக்கு ஓர் அசாதாரணமான மௌனம். என் மாஜி-அதிகாரி தான் இனிமேல் அந்நிறுவனத்தின் தொடர்பாம். எதிர்கால வியாபார வாய்ப்பு பற்றிய முடிவுகள் எல்லாம் என் மாஜி அதிகாரி தான் எடுப்பாராம். என் புது அதிகாரி அச்சந்திப்பின் போது இயல்புக்கு மாறாக சங்கடத்துடன் நெளிந்து கொண்டிருந்தார். சந்திப்பு சீக்கிரமே முடிந்து விட்டது. பல் குத்துபவருடனான கடைசி சந்திப்பின் போது மிகவும் படபடப்புடன் இருந்த என் முன்னாள் அதிகாரியின் வழக்கமான உடல் மொழியை அன்று காண முடியவில்லை. அவருடன் சில வருடங்கள் சேர்ந்து வேலை பார்த்திருந்தாலும், அன்று போல் என்றும் அவர் அவ்வளவு சிரித்துப் பேசி நான் பார்த்ததில்லை. பாவம் புது அதிகாரி! வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே நிறுவனம் முக்கியமான ஒரு வாடிக்கையாளரை இழக்கும் படி ஆகி விட்டது.

    +++++

    அதிகாரிகள் வருவதும் போவதுமாக இருக்கின்றனர். எல்லா இடங்களிலும். வாடிக்கையாளருடனான உறவு எப்படி தொடங்குகிறது? எப்படி முடிகிறது? என்பதைக் கணிப்பது மிகக்கடினம். ஒரு விற்பனையாளனான நான் எந்த வாடிக்கையாளருடனான உறவிலும் நிரந்தரமாக என்னைப் பிணைத்துக் கொண்டு விடுவதில்லை. புது வாடிக்கையாளரைப் பெறுவதில் துவக்க முயற்சிகள் ஒரு புறம் இருந்தாலும் புறச் சூழ்நிலைகள் தான் பெரும்பங்கு வகிக்கின்றன. எங்களுடன் வியாபார உறவைத் துண்டித்துக் கொண்ட நிறுவனத்தின் தேவைகள் அதிகரிக்கலாம் ; அவர்களுடைய தற்போதைய சப்ளையர்களின் தரம் குறையலாம் அல்லது அவர்கள் திவாலாகலாம். மூலப் பொருள் தட்டுப்பாடு உண்டாகி மற்ற சப்ளையர்கள் திண்டாடுகையில் எங்கள் நிறுவனத்திடம் மூலப் பொருள் சரக்கு மிதமிஞ்சி இருக்கலாம். மற்ற சப்ளையர்கள் அதிரடியாய் முன்னறிவிப்பின்றி விலைகளை ஏற்றலாம். என் மாஜி-அதிகாரி வேலை விட்டு நீங்கிச் செல்லலாம் அல்லது நீக்கப்படலாம். புதிதாக வரும் அதிகாரிக்கு புது சப்ளையரை கொண்டு வந்து தன் திறமையைக் காட்டும் உந்துதல் வரலாம். எண்ணற்ற சாத்தியக்கூறுகள்!

    ஒற்றைக் குண்டூசியால் ஒரு காகிதத்தில் ஓட்டைகள் போட்டுக் கொண்டு நேரங் கழித்துக் கொண்டிருக்கையில் புதிதாகச் சேர்ந்த என் அதிகாரியின் சீட்டைக் கிழித்துவிட்டார்கள் என்ற சேதி என் காதை எட்டியது. வேலையில் சேர்ந்து குறுகிய காலமே ஆனாலும் அவருடைய உத்வேகமும் செயலாற்றலும் நிறுவனத்தின் உள் சூழலை ஓரளவு மாற்றியிருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்த எங்களுக்கு இந்த வேலை நீக்கச் செய்தி அதிர்ச்சி தந்தது. பத்து பனிரெண்டு வருடங்களாக நாற்காலி தேய்ப்பான்களாக மட்டுமே இயங்கி வரும் பிற உயர் அதிகாரிகளை அவருடைய மூர்க்கமான வேகம்  நிலைகுலைய வைத்திருக்கும். என்ன காரணம் சொல்லி அவரை விலக்கினார்கள் என்று யாருக்கும் தெரியப் போவதில்லை. ஒரு மாதத்துக்குள் வேறொருவரை பணி நியமனம் செய்து விட்டார்கள். அவர் இன்னும் பணியில் சேரவில்லை.

    என் மாஜி-அதிகாரிக்கு ஒரு நாள் மீண்டும் பாசம் துளிர்த்தது. பழைய சப்ளையரை மீண்டும் முயலுமாறு இப்போது இயக்குனராகிவிட்ட குண்டூசியால் பல் குத்துபவரின் அறிவுறுத்தலின் படி  சந்திக்கக் கூப்பிடுவதாகச் சொன்னார். இந்த தொலைபேசி அழைப்பை சாத்தியமாக்கிய காரணி எதுவாக இருக்கும்? விரைவில் தெரிந்துவிடும். வேலையில் சேரப் போகும் என் புது அதிகாரிக்கு நல்ல அதிர்ஷ்டம் என்று எண்ணிக் கொண்டு அதே வரவேற்பறையில் காத்துக் கொண்டிருக்கையில் சப்ளையர் ஒருவர் எழுதுபொருட்களை ரிசப்ஷனிஸ்ட் மேஜையில் குவித்துக் கொண்டிருந்தார். குண்டூசி டப்பாவொன்றை தவறுதலாக மேஜையின் விளிம்பில் வைத்து விட அது கீழே விழுந்து மூடி உடைந்து வரவேற்பறை எங்கும் குண்டூசிகளாய்ச் சிதறின.

    நன்றி : பதாகை

  • உனக்கு ஒருத்தன் கிண்டில் வாங்கித் தந்தது ஒரு தப்பாய்யா? – நட்பாஸ்

    சிறப்புப்பதிவு – நட்பாஸ்

    சுள்ளிகளை ஆங்கிலத்தில் சில சமயம் கிண்ட்லிங் என்று சொல்கிறார்கள்- கிண்டில் என்ற ஆங்கிலச் சொல்லின் நேர்பொருள் கொளுத்துதல் என்று கொள்ளலாம் (“செம செம செம #எரிதழலில் பொன்னியின் செல்வன்”, தனித்தமிழார்வல டிவீட்).

    அமேசான் நிறுவனம் தான் தயாரித்த மின்னூல் வாசிப்புக் கருவிக்கு கிண்டில் என்ற பெயரைப் பரிசீலித்தபோது, இந்த அர்த்தம் வரும் என்று தெரிந்தேதான் இதைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்- அண்மையில் வெளிவந்த அமேசான் சிங்கிள் ஒன்றின் பெயர், I Murdered My Library http://www.amazon.com/gp/product/B00K6JO15A/ (28 பக்கங்கள், இந்திய விலையில் ரூ. 180). விலையையும் தலைப்பையும்விட இந்த ஒற்றைக்கட்டுரையின் முகப்பு அட்டைதான் நம்மை மிரட்டுவதாக இருக்கிறது – http://media.boingboing.net/wp-content/uploads/2014/08/81qANfgNiuL._SL1500_.jpg .

    நான் படித்த வினோதமான விமரிசனங்களில் ஒன்று The Inglorious Basterds என்ற படத்துக்கு எழுதப்பட்டிருந்தது. படத்தின் இறுதியில் திரையரங்கு உரிமையாள நாயகி தன் உதவியாளோடு தியேட்டர் கிடங்கிலுள்ள திரைப்படங்களின் பிலிம் ரோல்களைக் கொளுத்தி நாஜி தலைவர்கள் அத்தனை போரையும் பூண்டோடு அழிப்பதாக வரும். இது தொடர்பாக அந்தக் கட்டுரையாளர், தியேட்டர் ஓனரும் காமிரா ஆபரேட்டருமாகச் சேர்ந்து அத்தனை திரைப்படங்களையும் கொளுத்துவதாகக் கதை எழுத சினிமாவின் அழகியலை அறிந்த எவருக்கும் மனம் வராது என்று சொல்லி, இந்தப் படம் குறித்து டாரண்டினோவை என்னதான் புகழ்ந்தாலும் அடிப்படையில் அவரது அழகியல் மூர்க்கத்தனமானது என்று எழுதியிருப்பார். என்னடா இதெல்லாம் மிகையான விமரிசனமாக இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டே அதைப் படித்தேன். ஆனால் இப்படி ஒரு கருவி, அதைத் தயாரித்த நிறுவனம் இப்படி ஒரு அட்டைப்படம் போட்டு, ‘என் நூலகத்தைக் கொன்றேன்’ என்ற தலைப்பு வைத்த மின்னூலை விற்பதைப் பார்க்கும்போது, இதிலெல்லாம் விஷயம் இருக்குமோ என்று தோன்றுகிறது.

    அருங்காட்சியகத்தில் உள்ள எகிப்திய பாப்பிரஸ் ரோல்களை எரிப்பதாகவோ, குழந்தைகளை எரிப்பதாகவோ படம் எடுத்தால், என்ன ஒரு மோசமான கற்பனை என்று சொல்வோம் அல்லவா? எதற்கு எதை விலை கொடுப்பது என்று ஒரு அளவுமுறை இருக்கிறது, நாம் எதை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதுதான் அந்தப் பரிமாற்றத்தின் மதிப்பைத் தீர்மானிக்கிறது.

    இங்கு, நம்பி கிருஷ்ணன் சொல்வனத்தில் எழுதிய ஒரு கட்டுரையைச் சுட்டுகிறேன் – வாசிப்பின் லட்டைட்டிய இன்பங்கள் http://solvanam.com/?p=34377 . “ஆல்பர்டோ மங்க்வெல் போலந்து நூலகத்தில் இருந்த ஒரு நூலகர் பற்றி எழுதுகிறார். யூதப் புத்தகங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நாட்களில் அந்த நூலகர் தினமும் சில புத்தகங்களாக ஒரு வண்டியில் மறைத்துச் சென்று காப்பாற்றினாராம். அந்தப் புத்தகங்களைப் படிக்க எவரும் பிழைத்திருக்கப் போவதில்லை என்று தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்தார் என்றால் இதை நினைவைக் காக்கும் ஒரு செயல் என்றுதான் சொல்ல வேண்டும். பண்டைய கப்பாலியர்கள் சொற்படி, இந்த உலகம் நாம் வாசிப்பதால் இருப்பதில்லை, நம்மால் வாசிக்கப்படும் சாத்தியத்தில்தான் உருக்கொள்கிறது”.

     

    Amazon_Kindle_Paperwhite_2013_35827154_09

    காகித நூல்களுக்கு மின்னூல்கள் மாற்றாக முடியுமா? அச்சுக்கு இருக்கும் பருண்மை டிஜிடல் பிம்பங்களுக்கு உண்டா? புத்தகங்களுக்கு எதிராக கிண்டிலை உருவாக்கி (“எரிதழல்”) இன்று எழுத்தாளர்களுக்கு எதிராக வாசகர்களை ஏவத் துவங்கியுள்ள அமேசானை இன்னும் கொடிய சாத்தானாக்க வேண்டுமென்றால், மின்னூல்களின் உலகம் ஆவிகளின் உலகம் என்று சொல்லலாம்: காகித நூல்களுக்கு எதிரான நெருப்பின் சுள்ளிகள் என்று சொல்வதைவிட சிதைகள் என்றுதான் கிண்டிலைச் சொல்ல வேண்டும். இந்தச் சாத்தான் ஒவ்வொரு கணத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். உங்களுக்கு உரியவையாக இருந்தாலும் இந்த மின்னூல்கள் எப்போது வேண்டுமானலும் அமேசான் ஆணையின் பேரில் ஒட்டுமொத்தமாக மறையலாம். என்னிடமுள்ள காகித நூல்களைக் கொளுத்தினால் அதன் சாம்பல்களில் உள்ள எழுத்துகள் என்னைக் குற்றம் சொல்லும். அமேசானுக்கு அந்தக் கவலையில்லை.

    ஒரு நூலகத்தின் கொள்ளளவு இருந்தாலும் மின்னூல் வாசிப்புக் கருவிகள் நினைவற்றவை, நினைவுக்கு எதிரானவை. கிண்டில் வாசிப்புக்கு மூர்ச்சைக்குரிய கூறுகள் உண்டு. மயக்க நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் உள்ள வேறுபாடு நினைவின்மை அல்ல, காலமின்மை. விழிப்பு நிலையில் முக்காலமும் உணர்ந்தவர்களாய் இருக்கும் நாம், மயக்க நிலையில் ஏககாலத்தில் இருக்கிறோம்- நிகழ்வோடே பயணிக்கிறோம், அதன் எல்லைகள் நம்மை சுவீகரித்துக் கொள்கின்றன. மின்னூல் வாசிப்பதைப் பட்டியலிட்டு சீராகச் செய்பவர்களுக்கு ஒழிவு கிடைக்கும் பொழுதுகளைக் கிண்டில் கைப்பற்றிக் கொள்கிறது.

    காகித நூல்களை வாசிப்பதைவிட மின்னூல்களை வாசிப்பது எளிதாக இருக்கிறது, வசீகரமாகவும் இருக்கிறது. நம் கிண்டிலில் நமக்கான ஒரு நூலகத்தை உருவாக்கி, ஒரு புத்தகம் மாற்றி இன்னொன்று என்று படித்துக் கொண்டே போக முடிகிறது. ஆபிசுக்கு டிபன் பாக்சுடன் புத்தகத்தை எடுத்து வைக்கும் பழக்கம் கொண்ட நான் இப்போது, கிண்டிலை பாண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஏராளமான புத்தகங்கள் வரிசையாய் வெவ்வேறு போல்டர்களில் காத்திருக்கையில், இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தால்தான் அடுத்ததைப் படிக்க முடியுமா என்று அங்கலாய்ப்பாக இருக்கிறது, அந்த அடுத்த புத்தகமும்கூட பதிலுக்கு, “இவன் எப்போடா நம் பக்கம் வருவான்,” என்று என்னை வாசித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் தப்பில்லை. கிண்டிலைத் தொட்டுப் பார்க்கும்போது எனக்கான ஒன்று அதனுள் காத்துக் கொண்டிருப்பதுபோல்தான் இருக்கிறது.

    ஆனால் ஒரு மிகப்பெரிய சிக்கல், மின்னூலைப் புரட்டிப் பார்க்க முடியவில்லை. இது ஒரு சாதாரண விஷயமாகத் தெரியலாம். ஆனால் நியாயமாக யோசித்துப் பார்த்தால், முதல் பக்கத்தில் துவங்கி கடைசி பக்கத்தில் முடியும் ரயில் பயணமல்ல வாசிப்பு. ஒரு புத்தகத்தை அட்டை முதல் அட்டை வரை படித்து முடித்தபின், முன்னும் பின்னும் சென்று பக்கங்களுக்கு இடையிலுள்ள இணைப்புகளையும் விலகல்களையும் அலையும்போதுதான் உண்மையான வாசிப்பு துவங்குகிறது. இதனால்தான் சில புத்தகங்களை மீண்டும் மீண்டும் பல பத்தாண்டுகளாகப் படித்துக் கொண்டிருக்கிறோம். புரட்டிப் பார்க்கும்போதுதான் விருப்பப் பகுதிகள் நம் மனதில் மேலும் உறுதியான வடிவம் பெறுகின்றன, கவனிக்காமல் விடப்பட்ட விஷயங்களின் முக்கியத்துவம் புலன்படத் துவங்குகிறது. ஒவ்வொரு வாசிப்பிலும், காசுவலான ஐந்து நிமிட அரையார்வ புரட்டலிலும்கூட, அந்த நூல் மேலும் துலக்கம் பெற்று முழுமையை நோக்கி ஒரு சிறு அளவு பயணிக்கிறது.

    நாவல்களையும் சிறுகதைகளையும் யாரும் இப்போதெல்லாம் அதிக அளவில் படிப்பதில்லையே என்ற கேள்விக்கு அசோகமித்திரன் ஒரு பேட்டியில், ஒவ்வொரு காலமும் தனக்குத் தேவையான கலை வடிவத்துக்குதான் ஆதரவு கொடுக்கும் என்றார். நீங்க நல்லா எழுதறீங்க என்ற காரணத்துக்காக உங்களை ஒருத்தர் படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களுக்கு மட்டுமில்லை, டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர் எல்லாருக்கும் இதான் கதி.

    சமகாலம் என்பது என்னவோ வெயில் மழை மாதிரி ஆகாயத்திலிருந்து கவிந்து விழுவதல்ல. நாம் உருவாக்கும் கருவிகள்தான் நம் காலமாகின்றன. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தி பரபரப்பாக அடிப்பட்டது. 2002ஆம் ஆண்டுக்குப்பின் ஜெராக்ஸ் கம்பெனி தயாரித்த ஒவ்வொரு கருவியிலும் நாம் நகலெடுக்கும் ஆவணங்களைப் பதிவு செய்து பாதுகாக்கும் ஹார்ட் டிரைவ் ஒன்று இருக்கிறது என்பதுதான் அது. இது எதுக்கு என்று நாம் கேட்கலாம். ஹார்ட் டிரைவ் அவசியப்படும்போது கூடவே இந்த வசதியும் இருந்துவிட்டுப் போகட்டும், காசா பணமா என்பதால் இந்த வசதி.

    இணையத்தில் தகவல்கள் சும்மா போய் வந்து கொண்டிருக்கின்றன, எடுத்துப் பார்ப்பது சாத்தியம் என்னும்போது செய்தால் என்ன என்று செய்து பார்ப்பதால்தான் நாம் இன்று ஒவ்வொரு நிமிடமும் உளவு பார்க்கப்பட ஒப்புக் கொண்டிருக்கிறோம்- அரசாங்கம் சும்மா இருந்தாலும் உங்கள் போன் கம்பெனி, அதன் சர்வீஸ் புரோவைடர், ஆன்டிராய்ட் எனில் கூகுள் நிறுவனம், நீங்கள் பயன்படுத்தும் செயலிகளை எழுதிய கம்பெனிகள் உங்களைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

    எவ்வளவு சுலபமாக நம் கருவிகளின் திறன்கள் நம் காலத்தைத் தீர்மானிக்கின்றன என்பது ஆச்சரியம்தான். யாரும் ஏதோ திட்டம் போட்டு இன்றைய உளவுச் சமூகத்தை உருவாக்கவில்லை. எப்போதும்போல் கருவிகள் கரணங்களாகின்றன. சைபர் ஸ்பேஸில் செலுத்தப்படும்போது நாம் கண்காணிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.

    எனவே இது இருபத்து நான்கு மணி நேர உளவின் காலம், மின்னூல்களின் காலம், எந்திரங்களின் காலம், அந்தரங்க வாசிப்பும், அச்சுநூல்களும் புத்தக அலமாரிகளும் காலாவதியாகிவிட்டன- இந்தப் புலம்பல்களால் பயனில்லை என்று சொல்லலாம். இதுதான் நம் எதிர்காலமாகவும் இருக்கலாம். ஆனால் அதற்காக நம் இழப்புகளுக்காக வருந்தாமல் இருக்க முடியுமா? நாம் இழப்பது அறிதலின் பருண்மக் கூறுகளில் ஒன்று மட்டுமல்ல, நம் அக விகாசத்தின் அவசியத் தன்மையையும் அல்லவா இழக்கிறோம்.

    ஆம், நாம் வாசித்ததைப் புரட்டிப் பார்க்க முடியவில்லை என்றால் நமக்குச் சிந்திக்க வழியில்லை என்றுதான் பொருள். அச்சுப்பிரதிக்கு மின்பிம்பங்கள் மாற்று என்றால் அங்கு மெய்ம்மையில் ஓர் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. காகிதநூல்கள் இருக்கும் இடத்தில் கிண்டிலை வைத்துப் பார்ப்பது, அமேசானே சொல்வதுபோல், நூலகத்தில் நெருப்பு வைப்பது போன்றது. மின்னூல்தான் எதிர்காலம் என்பவர்களுக்கு இதில் இழப்பு எதுவும் தெரியாது. சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுப்பவர்கள்தான் உளவு பார்க்கப்படுவதை அநாகரிக அத்துமீறலாக நினைப்பார்கள், நல்ல எழுத்தை மதிக்கத் தெரியாதவர்கள்தான் எழுத்தாளனைவிட வாசகன் முக்கியம் என்பார்கள், யோசிக்க வேண்டிய தேவை இல்லாதவர்கள்தான் பல பத்தாண்டுகளாக புரட்டிப் புரட்டிப் படித்துக் கொண்டிருப்பதில் உள்ள தேடல் பற்றி ஒரு உள்ளுணர்வும் இல்லாமல், வாரம் ஒரு புத்தகம் டவுண்லோட் செய்து அதை அட்டை முதல் அட்டை வரை வாசித்து ஒரு போல்டரில் புதைத்துப் போட்டுவிட்டு அடுத்த புத்தகத்தைப் படித்துக் கொண்டு ரயில், பஸ், கவுண்டர் வரிசை என்று அடுத்தடுத்து போய்க் கொண்டே இருப்பார்கள்.

    உன்னை ப்பற்றி தெரியாமல் எவனோ உனக்கு ஓசியில் கிண்டில் கொடுத்தால், அதில் புரட்டிப் பார்த்து படிக்க முடியவில்லை என்பதற்கு இவ்வளவு பெரிய வியாக்கியாயனமா என்று நீங்கள் கேட்கக்கூடும். நியாயமான கேள்விதான், ஆனால் கிண்டிலில் ஒரு புத்தகம் படித்துவிட்டு ஆம்னிபஸ் பதிவு எழுத முயற்சித்துப் பாருங்கள், அப்போதுதான் நான் சொல்லும் கஷ்டம் புரியும். எண்ணற்ற புத்தகங்கள் காத்திருக்கின்றன, ஆனால் எதுவும் ஒரு பதிவு தேற்றப் பயன்படாது என்பதை உணரும்போது நானே தேவலை, நீங்கள் இதைவிட மோசமாகப் பேசுவீர்கள். ​

     
    நட்பாஸ் அவர்களின் வலைதள முகவரி : http://livelyplanet.wordpress.com
  • ஆபுத்திரன் – 4

    புண்ணியராசன் தன் பெருந்தேவியோடு சோலைக்கு வந்தான். அங்கிருந்த தருமசாவகன் என்னும் முனிவனை வணங்கி அறமும் பாவமும் அநித்தியப் பொருட்களின் வகைகளும் நித்தியப் பொருட்களின் வகைகளும், பிறப்பு முதலான துக்கமும், செல்கின்ற உயிர் புகுகின்ற இடமும், பேதைமை முதலிய பன்னிரெண்டின் தோற்றமும், அவற்றிலிருந்து நீங்கும் வழிவகையும், ஆசிரியன் புத்தனின் இயல்பும் தருமசாவகனிடமிருந்து அமைதி பெறக் கேட்டுக் கொண்டான். “மகளிருள் தனக்கிணையில்லாத பேரழ்குடையாளாய் கண்களில் இயங்கியும் காமத்துடன் இயங்காமலும் அழகிய கையிற் பிச்சைப் பாத்திரத்தைக் கொண்டு அறவுரை கேட்கின்ற இம்மங்கை யார்? என்று தருமசாவகனை வினவினான். “சம்புத் தீவில் இவளுக்கிணையானவர் யாரும் இலர் ; கிள்ளி வளவனோடு நட்பு கொள்ளுதலை வேண்டி கலத்தில் ஏறி காவிரியின் பக்கத்தில் இருக்கும் புகார் நகரை அடைந்த போது நான் சந்தித்த அறவண முனிவன் ஒரு பெண்ணின் பிறப்பைப் பற்றி எனக்கு சொன்னான் என்று நான் உனக்கு நான் முன்னரே சொல்லியிருக்கிறேன்” என்று தருமசாவகன் சொன்னான்.

    “அவளே இந்நங்கை ; அப்பெரிய நகரிலிருந்து இங்கி வந்திருக்கிறாள்” என்று தரும சாவகன் சொல்லவும் இடையில் மணிமேகலை பேச ஆரம்பித்தாள். “உனது கையிலிருந்த அமுதசுரபியே என் கையில் வந்தடைந்தது. மிகப் பெரும் செல்வத்தினால் நீ மயங்கியிருக்கிறாய் என்று நீ அறிந்திருக்க மாட்டாய். உனது முற்பிறப்பினைப் பற்றி நீ அறிந்திலாயேனும் பசுவின் வயிற்றில் உதித்த இப்பிறப்பினையுப் பற்றியும் நீ அறியாமல் இருக்கிறாயே! மணிபல்லவம் சென்று புத்தபீடிகையை வலம் வந்தாலன்றி பற்றுதலை ஏற்படுத்தும் பிறவியின் தன்மையை நீ அறிவது சாத்தியமில்லை. நீ அங்கு வருவாயாக!” என்று மணங்கமழ் மாலையணிந்த மன்னவன் முன்னர்க் கூறி இளங்கொடியான மணிமேகலை வானோடு எழுந்தாள்.

    கதிரவன் மேற்றிசையில் சென்று வீழ்வதற்கு முன்னர் மேகங்களில் இருந்து இறங்கி வளைந்த அலைகள் உலாவுகின்ற பூக்கள் மணம் வீசுகின்ற அடைகரையெங்குஞ் சென்று மணிபல்லவத்தை வலம் வந்து பற்றற்ற பெருந்தவனாம் புத்தனது பீடிகையை மணிமேகலைக் கண்டு வணங்கினாள். அவ்வழகிய தூய பீடிகையின் குற்றமற்ற சாட்சியானது தனது பிறப்பை அவளுக்கு அறிவித்தது. காயங்கரை என்னும் பேராற்றின் அடைகரையிலுள்ள வஞ்சனையற்ற பெருந்தவனாகிய பிரமதருமன் திருவடிகளை வணங்கி, அறங்கேட்டு அடியிணை பணிந்து துதிக்கலானாள் மணிமேகலை.

    “அரசனுடன் அவந்தி நகரஞ் சென்றடைவோர் அனைவர்க்கும் விலங்கினமும் நரகவாசிகளும் பேய்களுமாகத் தோற்றுவிக்கும் ; கலக்கம் தரும் துன்பத்தைத் தரும் தீவினைகளை நீக்கினால் வானவரும் மக்களும் பிரமரும் ஆவீர். ஆதலால் நல்வினைகளை மறவாது பாதுகாத்திடுவீர். பேரறிவுடையோனும் அனைத்தையும் வழுவின்றி உணர்ந்தோனுமாகிய ஒருவன் உலகினை உய்விக்க உதித்தருள்வான். அந்நாளிலே அவனுடைய அறமொழிகளைக் கேட்டோரையன்றி துன்பந்தரும் பிறவியினின்று தப்புவோர் எவரும் இல்லை ; ஆதலால் பிறரால் தடுக்கமுடியாத கூற்றுவன் வருவதற்கு முன்னரே அறம்புரியுமாறு விளங்க எடுத்துரைத்து நாவே குறுந்தடியாக வாயாகிய பறையை அறைந்தீர். அவ்வற மொழிகளைக் கேட்டு யாமும் நும் திருவடிகளை வணங்கித் துதிக்க நீர் எங்கட்குத் துன்பம் தரும் மொழிகளைக் கூறியருளினீர் ஆகலின் புத்தன் தோன்றுதற்கு முன்னரே இப்பீடிகையை இந்திரன் இங்கு வைத்த காரணமும் பெருமை மிக்க இப்பீடிகை யாக்கையினின்றும் உயிர் நீங்கி மறைந்த எனது முற்பிறப்பினை உணர்த்துதற்கு காரணமும் என்னவென்று யான் வணங்குவது! எல்லாமறிந்த இறைவனைத் தவிர வேறெவரையும் அப்பீடிகை தன்மீது தாங்காது ; அப்பீடம் அறவோன் அடியிணையைத் தாங்கிய பின்னரேயன்றி இந்திரன் அதனை வணங்கான். அவ்விண்ணவன் புத்தனை அறிந்து கொள்ளும் பொருட்டு இயற்றி பிறந்தோர்களுடைய பழம் பிறப்பின் செய்தியை இத்தரும பீடிகை உணர்த்துக என ஆணை தந்தனன் ஆகலின் நின் பிறவியையும் மயக்கமறக்காட்டும் என்று எடுத்துக் கூறியதாகிய அன்றுரைத்த நுமது வாய்மொழி எனக்கு இன்று கூறினாற்போன்றது”

    இவ்வாறு துதித்த வண்ணம் மணிமேகலை இப்படியிருக்க, புண்ணியராசனும் அச்சோலையை விட்டு நகரத்துள் சென்றான். தாதை முனிவனாகவும் தாய் பசுவாகவும் வந்த பிறவியையும், தவமுனிவன் திருவருளாற் குடலாகிய தொடர்மாலையாற் சுற்றப்படாமல் பசுவின் வயிற்றினுள் பொன் தகட்டினாலான ஒரு முட்டைக்குள் அடங்கிய அற்புதத்தையும், மக்கட்பேறில்லாத பூமிசந்திரன் முனிவரின் அருளால் தன்னைக் கொணர்ந்த திறத்தினையும், ஆராய்ந்த வளையல்களை அணிந்தவளாகிய அமரசுந்தரி என்கிற தாயிடமிருந்து கேட்டறிந்து மிக்க துன்பத்தையடைந்து சென்ற பிறப்பின்கண் தாய் செய்ததனையும் இப்பிறப்பின் இயல்பினையும் எண்ணி வருந்தி அரசாட்சியில் வெறுப்புற்று துறத்தற்குத் துணிந்து தன் கருத்தைச் சொன்னான். அதனைக் கேட்ட சனமித்திரன் என்னும் அமைச்சன் “அரசே, பூமிசந்திரன் நின்னைப் பெறுவதன்முன் இந்நாட்டில் பன்னீராண்டு மழைவளம் சுரந்து வறுமை மிக்கது ; அதனால் எல்லா உயிர்களும் வருந்தின; அப்பொழுது காய்கின்ற கோடையில் கார் தோன்றியது போல நீ தோன்றினாய்; தோன்றிய பின் இந்நாட்டில் வானம் பொய்யாது ; மண் வளம் குறையாது; உயிர்கள் உறுபசி அறியா ; இனி நீ நீங்குவாயாயின் உயிர்களெல்லாம் தாயைப் பிரிந்த குழவிபோலக் கூவாநிற்கும். இத்தகைய உலகைக் காவாமல் உனது பயனையே விரும்பிச் செல்லுதல் தகுதியன்று ; புத்ததேவன் அருளிய அறமும் இதுவன்று” என்று கூறினான். அதைக் கேட்ட அரசன் “மணிபல்லவம் சென்று வலங்கொள்ள வேண்டும் என்று எனக்குண்டான வேட்கை தணித்தற்கரியது. ஆதலால் ஒரு மாதம் இந்நகரை என்னிடத்தில் நீ இருந்து மேற்பார்வை செய்வாயாக” என்றான். நாவாய் ஏறி மணிபல்லவம் அடைந்தான். புண்ணியராசனுக்காக காத்திருந்த மணிமேகலை அவனை பீடிகைக்கு அழைத்துச் சென்றாள். “முற்பிறப்பைக் காட்டும் தரும பீடிகை இது ; இதைக் காண்பாயாக” என்று சொன்னாள். வேந்தன் பீடிகையை வலம் வந்து துதித்தான். உயரிய மணிகளாலிழைக்கப்பட்ட அப்பீடிகை மன்னனுக்கு அவனின் முற்பிறப்பை கையிலெடுத்துக் காண்போருடைய முகத்தைத் தெளிவாகக் காண்பிக்கும் குற்றமற்ற கண்ணாடி போல எடுத்துக் காட்டியது.

    “என்பிறப் பறிந்தே னென்னிடர் தீர்ந்தேன்

    தென்றமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்

    மாரி நடுநாள் வயிறுகாய் பசியால்

    ஆரிரு ளஞ்சா தம்பல மணைந்தாங்கு

    இரந்தூண் வாழ்க்கை யென்பாள் வந்தோர்க்கு

    அருந்தூண் காணா தழுங்குவேன் கையின்

    நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது

    ஏடா வழிய லெழுந்திது கொள்கென

    அமுத சுரபி யங்கையிற் றந்தென்

    பவமறு வித்த வானோர் பாவாய்

    உணர்விற் றோன்றி உரைபொரு ளுணர்த்தும்

    அணிதிக ழவிரொளி மடந்தை நின்னடி

    தேவ ராயினும் பிரம ராயினும்

    நாமாக கழூஉ நலங்கிளர் திருந்தடி

    பிறந்த பிறவிகள் பேணுத லல்லது

    மறந்து வாழேன் மடந்தையென் றேத்தி (25 : 139-153)

    “என் பிறப்பறிந்தேன் ; என் இடுக்கண்களிலிருந்து நீங்கினேன்” என்று வியப்புற்றுத் தனக்குப் பழம்பிறப்பில் அமுதசுரபியென்னும் பாத்திரத்தையளித்த சிந்தா தேவியை நினைத்து துதித்தான். பின்னர் மணிமேகலையோடு தீவின் தென்மேற்கே சென்று கோமுகிக் கரையில் ஒரு புன்னை மரத்தின் நிழலிலே இருந்தான். ஆபுத்திரனோடு மணிமேகலை வந்திருப்பதை அறிந்து கொண்டு காவல் தெய்வமாகிய தீவதிலகை அவர்களருகே வந்து “ஆருயிர் மருந்தினைக் கையில் ஏந்தி உயிர்களின் பெருந்துயரினைப் போக்கிய பெரியோய்! அக்காலத்தில் மறந்து உன்னை இத்தீவிலேயே விட்டு விட்டு கப்பலேறிச் சென்று பின்பு நின்னை நினைத்து மீண்டு வந்து நீ இங்கு இறந்திருத்தலையறிந்து உடனே தம்முயிரை நீத்த ஒன்பது செட்டிகளின் உடல் எலும்புகள் இவை. இவற்றைப் பார். அவர்களுடன் வந்திருந்த சேவகர்களும் இவர்கள் இறந்தார்களே என்று அவர்களும் தம்மை மாய்த்துக் கொண்டனர். அவர்களுடைய எலும்புகள் இவை. அலைகள் தொகுத்த மணலால் மூடப்பட்டுப் புன்னை நிழலின் கீழ் உனது பழைய உடம்பு இருந்ததனைக் காண்” என்றாள். அதற்குப் பின் மணி மேகலையை நோக்கி காவிரிப்பூம்பட்டினத்தை கடல் கொண்டுவிட்டது என்ற செய்தியைக் கூறத்தொடங்கினாள். புண்ணியராசனின் காதில் எதுவும் விழவில்லை. புன்னை மர நிழலடியும் இருந்த மணலைத் தோண்ட ஆரம்பித்தான். அங்கே அவனுக்கு கிடைத்த தன் முன் – ஜென்ம உடலை மூடியிருந்த எலும்புகளைப் பார்த்தான். அவற்றைக் கண்டு கண்ணீர் மல்கினான். அதைக் கண்ட மணி மேகலை “நீ ஏன் துன்பமுற்றாய்? உனது நாட்டிலிருந்து உன்னை இங்கு அழைத்துக் கொண்டு வந்தது உன்னுடைய முற்பிறப்பை உனக்கு உணர்த்தின் உன் பெயரை என்றும் நிலைநிறுத்தவேயாம். உலகத்தை ஆளும் அரசர் தாமே அருளறத்தை மேற்கொண்டால் உலகில் குற்றமெல்லாம் அற்றுவிடுமன்றோ? அறமெனப்படுவது யாதெனில் உயிர்களுக்கு உணவையும் உடையையும் உறையுளையும் வழங்குவதே ; இதனையன்றி வேறில்லை” என்று சொல்லித் தேற்றினாள்.

    விடைபெறுமுன் புண்ணியராசன் சொல்கின்றான் :-

    “என்னாட் டாயினும் பிறர்நாட் டாயினும்

    நன்னுத லுரைத்த நல்லறஞ் செய்கேன்

    என்பிறப் புணர்த்தி யென்னைநீ படைத்தனை

    நின்றிறம் நீங்க லாற்றேன் யான்….” (25 : 231-235)

    (ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை)

    உரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை

  • ஆபுத்திரன் – 3

    உதயகுமரனை விஞ்சையன் கொன்று விடுகிறான் ;  அதற்குக் காரணமானவள் என்று மணிமேகலை சிறையிடப்படுகிறாள் ;  பின் இராசமாதேவி அன்பு காட்டுபவள் போல் நடித்து வஞ்சிக்க தன்னுடன் மணிமேகலையை தங்க வைத்துக் கொள்கிறாள். மயக்க மருந்தூட்டுதல், காட்டுமிராண்டி இளைஞன் ஒருவனை தீங்கிழைக்க ஏவுதல், பொய்ந்நோய் சொல்லி புழுக்கறையில் அடைவித்தல் என மணிமேகலைக்கிழைக்கப்பட்ட ஒவ்வொரு இன்னலிலிருந்தும் துன்பமின்றி இருந்தாள். இராசமாதேவி வியந்து நிற்கையில் மணிமேகலை அவளுக்கு தான் முன்பிறவி பற்றிய ஞானம் கொண்டவள் என்பதை தெரிவிக்கிறாள்.

    “உடற்கழு தனையோ வுயிர்க்கழு தனையோ

    உடற்கழு தனையே லுன்மகன்  றன்னை

    எடுத்துப் புறங்காட் டிட்டனர்  யாரே

    உயிர்க்கழு தனையே லுயிர்புகும் புக்கில்

    செயப்பாட்டு வினையாற் றெரிந்துணர் வரியது

    அவ்வுயிர்க் கன்பினை யாயி னாய்தொடி

    எவ்வுயிர்க் காயினு மிரங்கல் வேண்டும்”       (23 : 74 – 79)

    அவள் வாழ்வில் அதுவரை நடந்தவற்றை இராணிக்குச் சொன்னாள். உதயகுமாரனுக்கும் தனக்கும் இருந்த முன்பிறவித் தொடர்பை விளக்கினாள். பஞ்ச சீலத்தை இராணிக்கு போதிக்கிறாள். செய்த தவற்றைப் பொறுக்க வேண்டும் என்று சொல்லி இராணி வணங்கினாள். மணிமேகலை அதைப் பொறுக்காமல் “என் கணவனின் தாயாக இருந்ததோடு மட்டுமல்லாமல் இத்தேசத்து மன்னனின் தேவியாகவும் நீங்கள் இருக்கிறீர்கள் ; எனவே என்னை நீங்கள் வணங்குதல் சரியாகாது” என்று சொல்கிறாள். (சிறை விடு காதை)

    மணிமேகலை இராசமாதேவியின் அரண்மனையில் இருக்கிறாள் என்று மாதவி கேள்விப்பட்டு, அவளும் சுதமதியும் அறவண அடிகளைச் சென்று அதைப் பற்றி சொல்கிறார்கள். அறவண அடிகள் இராசமாதேவியின் அரண்மனைக்குச் சென்று சந்திக்கிறார், மரியாதைகளுடன் அவரை வரவேற்ற இராணிக்கு வாழ்வின் நிலையாமையை விளக்கி பேதைமை முதலான பன்னிரு நிதானங்களை அறிவுறுத்தினார்.

    “தேவி கேளாய் செயதவ யாக்கையின்

    மேவினே னாயினும் வீழ்கதிர் போன்றேன்

    பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார்

    இறந்தா ரென்கை யியல்பே யிதுகேள்

    பேதைமை செய்கை யுணர்வே யருவுரு

    வாயி லூறே நுகர்வே வேட்கை

    பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்

    இற்றென வகுத்த இயல்பீ ராறும்

    பிறந்தோ ரறியிற் பெரும்பே றரிகுவர்

    அறியா ராயி னாழ்நர கறிகுவர்”                             (24 : 101 – 110)

     

    அருகில் நின்றிருந்த மணி மேகலையிடம் “நீ பிற அறங்களைப் பற்றி அறிந்தவுடன் உனக்கு இதைப் பற்றி விளக்கமாக உரைப்பேன்” என்று சொல்கிறார்.

    அறவண அடிகள் விடை பெறும் சமயத்து அவரை வணங்கி மணிமேகலை அங்கு குழுமியிருந்த மாதவி, சுதமதி மற்றும் இராசமாதேவி ஆகியோரை நோக்கி “இச்சான்றோர் சொன்ன நன்மொழிகளை மறவாது அவர் கூறியவாறே ஒழுகுமின்; யான் இந்நகரிலிருப்பேனாயின் உதயகுமரன் மரணம் காரணமாக என்னைப் பற்றி தவறாகப் பேசுவர்; இனி நான் இங்கிருந்து செல்வதே சிறந்தது. இனி ஆபுத்திரனாடடைந்து பின்பு மணிபல்லவமடைந்து புத்தபீடிகையைத் தரிசனம் செய்து யாங்கணுஞ்சென்று நல்லறம் செய்து கொண்டிருப்பேன் ; எனக்கு இடரேற்படுமோ என்று நீங்கள் இரங்க வேண்டாம்” என்று சொன்னாள். அவர்களிடமிருந்து விடை பெற்று சூரியன் மறைந்த மாலைப் பொழுதில் சம்பாபதியையும் கந்திற்பாவையையும் துதித்து வணங்கி, மேக மார்க்கமாக பறந்து சென்று இந்திரனுடைய வழித்தோன்றலாகிய புண்ணியராசனது நகர்ப்புறத்திலுள்ள ஒரு பூஞ்சோலையில் இறங்கினாள். அங்கிருந்த முனிவனொருவனை வணங்கி “இந்நகரின் பெயர் யாது? இதனையாளும் அரசன் யார்?” என்று கேட்டாள். “இதன் பெயர் நாகபுரம். இதனையாள்பவன் பூமிசந்திரன் மகனாகிய புண்ணியராசன் என்பான். இவன் பிறந்த நாள் தொட்டு இந்நாட்டில் மழை பிழைத்தறியாது ; மண்ணும் மரங்களும் பல வளங்களை அளிக்கும் ; உயிர்களுக்கு ஒரு நோயும் இல்லை” என்று அம்முனிவன் அரசன் பெருமையைக் கூறினான்.

     

    உரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை

  • ஆபுத்திரன் – 2

    ஒரு நாள் ஆபுத்திரன் நள்ளிரவில் துயின்று கொண்டிருக்கையில் சிலர் அவனை எழுப்பி “வருத்தும் பெரும் பசி வயிற்றினை வாட்டுகிறது” என்று சொல்லித் தொழுதனர். அதனைக் கேட்ட ஆபுத்திரன் அவர்கள் பசியைப் போக்கும் வழியறியாமல் திகைத்தான். வருத்தமுற்றான். அக்கணம் அவன் தங்கியிருந்த கலை கோயிலில் குடி கொண்டுள்ள சிந்தா தேவி அவன் முன்னம் பிரசன்னமானாள். அவள் கையில் ஓர் அழகிய அட்சயப் பாத்திரம் இருந்தது. அதனை அவனிடம் கொடுத்து “இதனைக் கொள்க; நாடெல்லாம் வறுமை யுற்றாலும் இவ்வோடு வறுமையுறாது; எவ்வளவு கொடுப்பினும் இதில் உணவு குறையாதிருக்கும்” என்றுரைத்தாள். அதனைப் பெற்று ஆபுத்திரன் மகிழ்ச்சியுற்று சிந்தா தேவியைப் பரவிப் பணிந்தான்.

    “சிந்தா தேவி! செழுங்கலை நியமத்து

    நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்!

    வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி

    ஏனோ ருற்ற இடர் களைவாயெனத்

    தான்தொழு தேத்தித் தலைவியை வணங்கி”                  (14 : 17-21)

    அன்று முதல் அவன் எல்லோருக்கும் உணவளிப்பவனானான். அவனை எந்நேரமும் மக்கள் சூழ்ந்திருந்தனர். விலங்குகளும் பறவைகளும் கூட அவனைப் பிரிவின்றி சூழலாயின. அவனின் அறத்தின் மிகுதி தேவராஜன் இந்திரனை பாதித்தது. அவன் வெண்ணிறக் கம்பளமாகிய இருக்கையை நடுங்கச் செய்தது. நடை தளர்ந்து கைத்தடியை ஊன்றிய முதிய பிராமணன் உருக்கொண்டு ஆபுத்திரன் முன் தோன்றினான். “நான் இந்திரன். உனைக் காண உன்முன் வந்தேன். நின் எண்ணம் யாது? உனது தானத்திலாகிய மிக்க பயனை கொள்வாயாக” என்றுரைத்தான். இந்திரன் சொன்னதைக் கேட்ட ஆபுத்திரன் விலாவெலும்பு ஒடியும் படி சிரித்தான்.

    “காணத்தக்க அழகின் சிறப்பினையுடைய நும் கடவுளர் இவ்வுலகிற் செய்த நல்வினையின் பயனை அவ்வுலகில் நுகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அறம் புரியும் எளிய மக்களைப் பாதுகாப்போர், நல்ல தவங்களைச் செய்வோர், பற்றுகளைக் களையும் முயற்சியில் ஈடுபடுவோர் ஆகியோர் யாரும் இல்லாத விண்ணோருலகின் தலைவனே! வருந்தி வந்தோருடைய அரும்பசியைப் போக்கி அவர் தம் இனிய முகத்தைக் காணுமாறு செய்யும் என் தெய்வக் கடிஞை (பாத்திரம்) ஒன்றே போதும் ; நின்பாற் பெறத்தக்கது ஏதும் இல்லை” என்று இந்திரனை மதியாதுரைத்தான்.

    “ஈண்டுச் செய்வினை ஆண்டுநுகர்ந் திருத்தல்

    காண்தகு சிறப்பின்நும் கடவுள ரல்லது

    அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர்

    நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர்

    யாவரும் இல்லாத் தேவர்நன் னாட்டுக்

    கிறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே

    வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர்

    திருந்துமுகங் காட்டுமென் தெய்வக் கடிஞை

    உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ

    பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ

    யாவையீங் களிப்பன தேவர்கோன்…..”              (14 : 40-48)

    ஆபுத்திரன் சொன்னதைக் கேட்டதும் இந்திரன் வெகுண்டான் ; உலகில் பசித்தோரே இல்லையெனும் படிச் செய்வேன் என்று நினைத்துக் கொண்டான். எங்கும் மழை பெய்வித்து வளங்கொழிக்கச் செய்தான். அதனால் பசித்தோர் இல்லாதராயினர்.

    ஆபுத்திரன் மதுரையிலிருந்து நீங்கி பசித்தோரைத் தேடி அலையலானான். ஊர்ஊராகச் சென்று “உண்போர் யாரேனும் உண்டா?” என்று வினவினான். அதைக் கேட்டவர்கள் எல்லாம் செல்வக் களிப்பால் அவனை இகழ்ந்தனர். மற்றவர் உண்ண பெரும் ஆவல் கொண்ட ஆபுத்திரனை தேடுபவர் யாருமில்லாததால் தனியனாய்த் திரிந்தான். மரக்கலத்தில் இருந்து திரும்பிய சிலர் “சாவக நாட்டில் மழையின்மை காரணமாக உணவின்றிப் பலர் மடிகின்றனர்” என்று சொல்கின்றனர்.  இந்திரன் ஆணையினால் உண்போரைப் பெறாமல், கன்னியாகவே காலங் கழித்த குமரிப் பெண் மாதிரி பயனற்றுப் போன கடிஞையை ஏந்திக் கொண்டு சாவகம் செல்வதென தீர்மானித்தான் ஆபுத்திரன். காற்று மிகுத்து கடலின் கலக்கத்தால் பாயை மணிபல்லவத் தீவில் இறக்கி கப்பல் ஒரு நாள் தங்கியது. ஆபுத்திரன் அங்கு இறங்கினான். இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் கப்பலில் ஏறினான் என்று நினைத்து அன்றிரவே பாய் உயர்த்தி கலம் கடலில் சென்றது. மரக்கலம் சென்ற பின்னர் ஆபுத்திரன் மிக்க துன்பத்தையடைந்தான். மணி பல்லவத்தில் வாழ்பவர்கள் ஒருவரும் இல்லாமையால் பல்லுயிரைப் பாதுகாக்கும் பெருமை பொருந்திய இந்த பாத்திரத்தை வறிதே வைத்துக் கொண்டு என் உயிரைக் காப்பதை யான் பொறுக்கிலேன் ; இப்பாத்திரத்தைப் பெற்றுப் பல உயிர்களைக் காக்குமாறு முற்பிறவியில் செய்த தவம் என்னை நீங்கியதால் ஒப்பற்ற துயரில் வீழலுற்றேன்.ஏற்போர் இல்லாத இவ்விடத்தில் இப்பாத்திரத்தை யான் சுமத்தலால் விளையும் பயன் யாது என்றெண்ணியவனாய் கடிஞையை வணங்கி “ஒராண்டுக்கு ஒருமுறை வெளிவருவாயாக” என்று சொல்லி கோமுகி என்னும் பொய்கையில் விட்டான். அருளறத்தை மேற்கொண்டு உயிர்களைப் பாதுகாப்போர் உளராயின் அவர் கைகளுக்குச் செல்லட்டும் என்று கூறி உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பானாயினன். அப்போது அங்கு சென்ற நான் (அறவண அடிகள்) “நீ யாது துன்பமுற்றனை?” என்று கேட்டேன். அவன் நிகழ்ந்தவற்றையெல்லாம் எனக்குச் சொல்லிவிட்டு, மணிபல்லவத்துல் உயிர் விட்டு பல்லுயிர்களைப் பாதுகாக்கும் எண்ணத்துடன் சாவக நாட்டரசனின் பசுவின் வயிற்றில் உதித்தான்.

     

    “குணதிசைத் தோன்றிக் காரிருள் சீத்துக்

    குடதிசைச் சென்ற ஞாயிறு போல

    மணிபல் லவத்திடை மன்னுடம் பிட்டுத்

    தணியா மன்னுயிர் தாங்குங் கருத்தொடு

    சாவக மாளுந் தலைத்தாள் வேந்தன்

    ஆவயிற் றுதித்தனன்……”                     (14 : 99-104)

     

    (பாத்திர மரபு கூறிய காதை)

     

    உரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை

  • ஆபுத்திரன் – 1

    வாரணாசி வாழ் அந்தணன் ஒருவனின் ஒழுக்கங் கெட்ட மனைவி சூல் கொண்டு பிழைக்கு பயந்து தென் திசை குமரி நோக்கிப் பயணமானாள். வழியில் மகவொன்றை ஈன்று இரக்கமின்றி பெற்ற இடத்திலேயே போட்டு விட்டுச் சென்றாள். அழுத குழந்தைக்கு பசுவொன்று ஏழு நாட்கள் வரை பால் சொறிந்து காத்தது. பூதி என்னும் பார்ப்பனன் ஒருவன் குழந்தையை கண்டெடுத்து வீட்டுக் எடுத்துச் சென்றான். குழந்தைப் பேறிலாத பூதி தம்பதியர் அளவிலா உவகை கொண்டனர். குழந்தைக்கு ஆபூத்திரன் என்று பெயரிடப்பட்டது. பூதியின் வீட்டில் வளர்ந்த ஆபுத்திரன் மறைகள் கற்று அந்தணர்க்கு பொருந்துவன அனைத்தும் கற்று தேர்ந்தான்.

    ஒரு நாள் ஒரு மறையவன் வீட்டினுள் சென்றவன் ஊனுண்ணுதலைக் கருதுகின்ற வேள்விச்சாலையில் பசுவின் கொம்பின் கண் சுற்றப்பட்டு மூச்செறிந்துகொண்டிருந்ததைப் பார்க்க நேரிடுகிறது. பசு படும் துயரைப் பார்க்க அவனால் முடியவில்லை. இரவு வரும் வரை காத்திருந்து பிறகு திருட்டுத் தனமாக வேள்விச்சாலைக்குள் நுழைந்து பசுவை விடுவிக்கையில் அவன் கையும் களவுமாகப் பிடிபட்டு விடுகிறான். பசுவை அவன் திருட விழைந்தானென்றெண்ணி ஜனங்கள் அவனை நையப்புடைத்துவிடுகின்றனர். அவன் எவ்வளவு அரற்றியும் அவன் சொன்னதை கேட்டார்களில்லை.

    இதற்கு நடுவில் ஆபுத்திரன் விடுவித்த பசுவானது அங்கு நின்றிருந்த பார்ப்பனத்தி ஒருத்தியை முட்டி மோதி தாக்கி, பின்னர் காடு நோக்கி விரைந்தோடியது.

    ஆபுத்திரன் அங்கு நின்றிருப்போரிடம் கூறலானான் :

    “நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்

    விடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்

    பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால்

    அறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்

    இதனோடு வந்த செற்றம் என்னை”        (13 : 50-55)

    ஆபுத்திரன் சொன்னதைக் கேட்டதும் அவர்கள் “நீ வேத விதியை அறியாமல் வேள்வியை இகழ்கின்றாய் ; எனவே பசுவின் மகனாக இருப்பதற்கு நீ பொருத்தமானவனே” என்று இகழ்ந்துரைக்கிறார்கள். மனம் தளராமல் ஆபுத்திரன் மேலும் உரைக்கிறான் :

    “ஆன்மகன் அசலன்; மான்மகன் சிருங்கி

    புலிமகன் விரிஞ்சி; புரையோர் போற்றும்

    நரிமகன் அல்லனோ கேச கம்பளன்?

    ஈங்கிவர் நுங்குலத்து இருடி கணங்களென்று

    ஓங்குயர் பெருஞ்சிறப் புரைத்தலும் உண்டால்

    ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ?”   (13 : 63-68)

    நின்றிருந்த சனங்கள் ஆபுத்திரன் சொல்வதை பொருட்படுத்தாமல் இகழ்ந்த வண்ணம் இருக்கிறார்கள். அம்மறையவர்களுள் ஒருவன் “இவனின் குடிப்பிறப்பை நானறிவேன்” என்று ஆபுத்திரனின் கதையை எடுத்துரைக்கிறான். அவன் குமரிக்கரைக்கு சென்ற போது அங்கு சந்தித்த சாலி என்ற பெண்ணைப் பற்றி சொல்லலானான்.

    சாலி வாரணாசியில் தன் கணவனுடன் வாழ்ந்து வந்தாள். அந்தணர்க்குத் தகாத இயல்புடன் ஒழுகி காவலின் எல்லையைக் கடந்து கணவனை அவமதித்தாள். அச்சமுடைமையால் கெடுதலுற்ற மக்களுடன் தென் திசைக் குமரியில் நீராடும் பொருட்டு பயணமானாள். பொன் தேரினை உடைய பாண்டியனது கொற்கை நகரத்தில் ஆயர்களுடைய இருப்பிடத்தில் ஈன்ற சிறு குழவிக்கு இரங்காமல் கண் காணாத தோட்டத்தில் போட்டு விட்டு வந்ததாக தன் கதையை சாலி சொன்னதாக அவ்வந்தணன் சொன்னான். “இவ்வித தீவினை புரிந்த எனக்கு மோட்சமுண்டா?” என்று துன்பமுற்று அழுத சாலியின் மகன் தான் ஆபுத்திரன் என்றும் அவன் தீண்டத் தகாதவன் என்றும் அறிவித்தான்.

    ஆபுத்திரன் அதனைக் கேட்ட பின்னர் பெரிதாகச் சிரித்தான். “பெரிய மறையுணர்ந்த அந்தணர்கள் வந்த மரபினைச் சொல்கிறேன். கேளுங்கள். பழமறை முதல்வனான பிரமனுக்கு தெய்வக் கணிகையாகிய திலோத்தமையினிடமாக முன்பு தோன்றிய காதற் சிறுவரல்லரோ அரிய மறை முனிவர்களாகிய அந்தணர் இருவரும் (வசிட்டன் மற்றும் அகத்தியன்). இது இங்ஙனமிருக்க சாலி செய்தது எங்ஙனம் தவறாகும்?” என்று நான்மறை அந்தணரைப் பார்த்து மேலும் சிரிக்கலானான்.

    தந்தையாகிய பூதியும் ஆபுத்திரனை தன் வீட்டிலிருந்து நீக்கினான். பசுவைக் கவர்ந்த திருடன் எனும் பட்டம் அவனுக்கு முன்னால் அவன் செல்லும் கிராமத்தில் எல்லாம் பரவியிருந்தது. அவன் நீட்டிய பிச்சைப் பாத்திரத்தில் கற்களே விழுந்தன. பெருஞ் செல்வர் வாழும், தெற்கின் கண் இருக்கும் மதுரையைச் சென்றடைந்தான். சிந்தாதேவியின் அழகிய கோயில் வாயிலிலுள்ள அம்பலப் பீடிகையில் தங்கியிருந்தான்.

    மதுரை மாநகரில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி, வீதிகளெல்லாம் அலைந்து, பணக்காரர்களின் மாடங்களெல்லாம் திரிந்து, கண் பார்வையற்றோர், காது கேளாதோர், முடவர், பாதுகாப்பற்றோர், நோயால் துன்புறுவோர் ஆகிய அனைவரையும் அழைத்து ஒருங்கு உண்ணச் செய்து, பின் மிஞ்சியதை தான் உண்டும், பிச்சைப் பாத்திரத்தையே தலையணையாக வைத்து உறங்கியும் வாழ்ந்து வந்தான் ஆபுத்திரன்.

     

    (ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை)

     

    உரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை

     

  • அர்ஜுனன் காதல்கள் – சுபத்திரை

    Jagannath Pantheon
    Jagannath Pantheon

    வான் வெளியைப் போர்த்தி
    பூமியில் இரவாக்கி
    சிறு சிறு துளைகளில்
    வெண்தாரகைகள் வைத்து
    உயிர்களுக்கு நித்ரை தருகிறாள்
    பறவைகளைப் பள்ளியெழுச்சி
    பாடவைத்து இருள் போக்குகிறாள்
    மகாமாயையை ஏவி
    யோகமாயை
    நடத்தும் அளவிலா விளையாட்டு
    இரவும் பகலும் அனவரதமும்

    +++++

    ஒருமுறை
    நித்ரையில் உலகத்தோரை ஆழ்த்தி
    கருவொன்றை மாற்றி
    தன்னைப் புகுத்திக் கொண்டு
    சிசுவாய் வெளிப்பட்டு
    காற்றாய் மறைந்து
    அசரீரியாகி……

    +++++

    இன்னொரு முறை
    சுபத்திரையாகத் தோன்றி
    ஒற்றைப் பார்வையில்
    அர்ஜுனனை வசீகரித்து பித்தாக்கி
    சன்னியாச வேடமிடத் தூண்டி
    அண்ணன் கண்ணனின் சம்மதம் பெற வைத்து
    ரதமொன்றில் ஓட்டிச்செல்லும் எண்ணம் தந்து….

    இயக்கப்படுகிறோம் என்ற எண்ணம் மூளா
    ஓயா இயக்கம்
    திரௌபதியின் மௌன அங்கீகாரம்
    அபிமன்யுவெனும் வீர மகனின் பிறப்பு
    புத்திர சோகம்
    மாயை அருள்பவள்
    மாயைக்குட்பட்டாள்

    +++++

    இன்னொரு முறை
    யோக மாயை
    வெள்ளை யானையை
    கருவாய்த் தாங்கி
    சித்தார்த்தனைப் பெற்றெடுத்தாள்

    மகாமாயையுடன் தொடர்பு விலகாமல்
    பிடியில் சிக்காமல்
    நடு வழியில் நடந்து சித்தார்த்தன்
    தர்மச்சக்கரத்தைச் சுழற்றி புத்தனானான்

    +++++

    “மகாமாயை கொண்டு உன்னை இயக்கிய
    யோக மாயையை நான் இயக்கினேன்
    என்னை நீ இயக்குகிறாய்”
    கண்ணன் சிரிக்கிறான்

     

     

    நன்றி : பதாகை

  • அர்ஜுனன் காதல்கள் – உலூபி

    @ Dolls of India
    @ Dolls of India

    வளைந்தோடும் நதியின் கரையில்
    நீராடும் பார்த்தனின்
    இரு கால்களைச் சுற்றி வந்ததொரு நீள்நாகம்.
    வெட்கத்துடன் முத்தமிடும் இளங்காதலியாய்
    அது பாதத்தை தீண்டிடவும்
    நதியின் ஆழத்திற்கு இழுக்கப்பட்டான்.
    ஒளி ஊடுருவும் மாளிகையின்
    அறையில் விழித்தான்
    வெளியே நாற்புறமும்
    மீன்களும்
    நீர்ப்பாம்புகளும் நீந்திக் கொண்டிருந்தன
    பார்த்தனின் முன் எரிகுண்டம் ;
    நெய்யிட்டு
    தீ வளர்த்தான்.
    அதன் உக்கிரத்துடன் போட்டியிட்டது
    அருகிருந்த பாம்பின் கண்களில்
    படர்ந்திருந்த இச்சைத்தீ.
    கணத்துக்கொரு தரம் வடிவமாற்றம்
    பாம்பு
    பெண்
    பாம்புப்பெண்
    தீச்சடங்கு முடியவும்
    “இது சாட்சி” என்ற சங்கல்பத்துடன்
    பார்த்தனை நோக்கினாள்
    திரௌபதியும் யுதிஷ்டிரனும்
    இணைந்திருந்த அறையினுள்
    விபத்தெனவே நுழைந்ததனால்
    விதித்துக் கொண்ட வனவாசம் ;
    கவர்ந்திழுக்கும்
    சர்ப்பப்பெண்ணுடன்
    கூடுதல் முறையாகுமா?
    பாம்புப்பெண்
    அவனின் மனதோடு மௌனமாய்ப் பேசினாள்
    “சாபமில்லை ; மூத்தோர் சொல்லில்லை
    உமக்கு நீரே வழங்கிக்கொண்ட
    வனவாசத்தில்
    உம் மேல் ஆசையுற்று அணுகுபவளைக்
    கூடுதலில் பாவமில்லை”
    மாலையென காலடியில் சுருண்டது சர்ப்பம்
    மானிடப் பெண்ணாக எழுந்து
    இதழ் குவித்து நெருங்கினாள்
    அர்ஜுனன்
    காமநோய் தீர்க்கும் வைத்தியனானான்.
    நதியின் உயிரினங்கள்
    அறையின் திரையாகின

    oOo

    பின்னொருநாளில்
    நதிக்கரை மேடொன்றில்
    வலியுடன் கண் விழித்தான்
    விஷ பாணம் தாக்கி
    புண்ணான அவனுடலை
    பாம்புப்பெண்
    நாவால் வருடினாள்
    சற்றருகே ஒரு வாலிபன்
    வில்லும் அம்புமாய்
    பின்னே ஒரு வெள்ளைக் குதிரை
    யாரிவன் என்னைப் போல்?
    எங்கிருக்கிறோம்?
    கனவிலா? நனவிலா?
    உடலெங்கும் பாம்பு
    ஊர்ந்து வைத்தியம் பார்த்தது
    சலசலக்கும் நதியில்
    முதலைகள் மூன்று நீந்திச் சென்றன.
    இவைகளை முன்னர் சந்தித்திருக்கிறோமோ?
    இறந்தகால நிகழ்வுகளும்
    நிகழ்கால பிரக்ஞையும்
    ஒன்றிணைந்து குழம்பாகி
    வேறுபாடு காணவியலா கலவையாயின

    oOo

    “விஷமற்ற பாம்பினங்களில்
    நான் அனந்தன் ;
    ஆயிரம் பிரபஞ்சங்கள்
    கடுகளவில் என் தலையில் சுழலுகின்றன”
    கண்ணன் சிரிக்கிறான்

     

    நன்றி : பதாகை

  • அர்ஜுனன் காதல்கள் – உத்திரை

    Brihannala with Uttara (@ Ashok Roy)
    Brihannala with Uttara (@ Ashok Roy)

    அப்பா இருந்தார்
    அம்மா இருந்தாள்
    அண்ணன்மார் இருந்தனர்
    நானும் இருந்தேன்…
    இருந்தேனா?
    கண்ணாடியின் பிம்பத்திடமும்
    நிழற்பிரதிமையிடமும்
    பேசிக் காலங்கழித்திருந்தேன்.
    தென்றலாய் நுழைந்த
    பிருகன்னளை என்னுள்
    ஆனந்தத்தை வீசினா…..
    விகுதிக் குழப்பங்கள்
    நெருடவில்லை!

    +++++

    மிருதுவான கரங்கள்
    கடிவாளத்தை எவ்வாறு ஏந்தும்?
    அங்கம் அசைத்து
    அபிநயம் புரிபவனா குதிரையோட்டி?
    பிருகன்னளை ஆடவனாயிருக்கக்கூடுமா?
    பயந்தோடிய உத்தரகுமாரனுக்கு
    பதிலாக போரிட்டு கௌரவர்களை துரத்தினவன்
    அவனே தானா?
    சைராந்தரி சொல் கேட்டது பிழையோ?

    +++++

    உத்திரையின் நித்திரையில்
    தோன்றிட்ட கனவுக்குள்
    அர்ஜூனனின் கைப்பற்றி
    நடமிட்டாள் உத்திரை.

    +++++

    நனவுலகில்
    கைபிடித்ததோ வேறோர் இளங்கரம்
    பழைய நண்பனுக்கு புது வேடம்
    அர்ஜூன குமாரன் புல்லிய போது
    துளிர்த்த நீர்த்திரை மேல் இமைத்திரை
    அர்ஜுனனாகிய பிருகன்னளையின்
    புன்னகை தழுவிய முகம் மனக்கண்ணில்

    ++++++

    கணவனின் உடலைச் சாம்பலாக்கிய
    சிதைத் தீயின் கரங்கள் வாவென்றழைத்தன
    வயிற்றுச்சிசுவின் எடை
    அழுத்தியது
    குலுங்கியழுத அர்ஜுனனை
    நோக்கி நின்றாள்
    அடுத்த வேடத்துக்குள் நுழைகிறானோ?
    அர்ஜுனனின் பார்வையெல்லைக்குள்
    புலப்படா வேலியொன்றின் பின்
    நிரந்தரமாய் நின்றிருந்தாள் உத்திரை

    +++++

    “குரு,தோழன், மாமன், தந்தை
    மாறும் காலங்கள், மாறும் வேடங்கள்
    உன்னுள் மாறாமல் இருக்கும்
    என்னை உணர் அர்ஜூனா”
    கண்ணன் சிரிக்கிறான்.

     

    நன்றி : பதாகை (ஜூலை 20)