Blog

  • மருகும் முருகன் – மாதவன் நாராயணன்

    PERUMAL_MURUGA_2265940f

    சிறப்புப் பதிவு : மாதவன் நாராயணன்

    ‘யாமிருக்க பயமேன்?’ என்ற ஆறுதற்சொற்களுக்கு மேல் வேலேந்தி நிற்கும் முருகன் படம் தொங்கும் தமிழ்நாட்டில் இன்று எழுத்தாளர் பெருமாள் முருகன் ‘மதம்’ பிடித்த யானைகளின் கால்களில் சிக்கித் தவிக்கிறார் ; ஓடி மறைகிறார்!

    நக்கீரனும் பொய்யாமொழிப்புலவனும் வாழ்ந்த பூமி! நாத்திகமும் ஓங்கி, சைவமும் தழைத்து, .ராமானுஜர் வகுத்த வழியில் வைணவம் சாதிச் சுவர்களையெல்லாம் தாண்டி அந்தணரையும் மற்ற வகுப்பினரையும் இணைத்துச் செழித்த நாடு !

    மீசைக்கார பாரதி சாதிகள் இல்லையென்று உரைத்தான்! தமிழும் இனிமையும் இடையறாமல் சேர்ந்தே இருந்தது – தினத்தந்தி மொழியில் சொல்லப்போனால் -தெரிந்ததே! ஆனால் வாய்மைக்கும் பட்டிமன்றத்துக்கும் பெயர் பெற்ற நாடு தமிழ் நாடு என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டால் பெருமை ஓங்கும். பண்பாடும், நவீன எண்ணங்களும் சேர்ந்து செழிக்கும் நாள் எப்போது வரும்?

    நந்தனார் பாடலை பாடிப் போற்றும் தமிழ்நாட்டில் பகுத்தறிவும் போஷாக்குடன் வளர்ந்திருக்கிறது.

    இதே தருணத்தில் சாதிக் கொடுமையின் புது அவதாரத்தையும் கொஞ்சம் கவனித்தாக வேண்டியிருக்கிறது. மேல்சாதி, கீழ் சாதி என்று சொன்னது போய், இடைச் சாதிச் சக்திகளாக மூன்றாவது சாதிக் குழுக்கள் எண்ணிக்கையின் பலத்தில் ஜனநாயகத்திற்கொரு வக்கிர வடிவம் தந்து புதுப் புட்டியில் பழைய கள்ளை ஊற்றி போதை பெருக்கெடுத்து ஆடுகின்றன. தாகூர் சொன்ன விசாலமான நோக்கு என்று வருமோ?

    குறுகிய மனப்பான்மை என்றால் என்ன என்று கேள்வி கேட்ட மரபு தமிழருடையது. சமீப காலத்திய இறக்குமதி செய்யப்பட்ட சித்தாந்தங்கள் தமிழ் நாட்டிற்கு அவசியமா என்ற கேள்வி எழுகிறது. சிவபெருமானிடமே வாதாடிய நக்கீரன் தோன்றிய தமிழ்நாட்டில் ஒர் எழுத்தாளரை இங்ஙனம் இம்சைப்படுத்துவது நியாயமா? நகைச்சுவை நாயகர் வடிவேலு பாணியில் சொன்னால் : இது தேவையா?

  • பழைய வருடத்தை எரித்தல்

    முகநூல் நண்பரொருவர் இன்று காலை Naomi Shihab Nye எழுதிய Burning the old year என்ற அருமையான கவிதையொன்றை பகிர்ந்திருந்தார். 

    burning-bush

    பழைய வருடத்தை எரித்தல்

    வினாடிகளில்

    கடிதங்கள் தம்மைத்தாமே

    விழுங்கிக் கொண்டன

    ஒளிபுகும் காகிதங்களில் எழுதி

    தாழ்ப்பாளில்

    நண்பர்கள் தொங்கவிட்ட

    குறிப்புகள்

    விட்டிற்பூச்சிகளின் இறக்கைகள் படபடக்கும்

    சத்தத்துடன் வதங்கி

    காற்றுடன் மணம் புரிந்து கொண்டன

    வருடத்தின் பெரும் பகுதிகள்

    எளிதில் எரியக் கூடியவை –

    காய்கறிகளின் பட்டியல்,

    பாதிக் கவிதைகள்,

    ஆரஞ்சு நிறத்தில் சுழலும் தினங்களின் சுடர்கள் –

    வெகு சிலவே கற்கள்

    ஏற்கெனவே இருந்த ஒன்று

    திடீரென இல்லாமல் ஆகும் போது

    இன்மை கூவலிடுகிறது ;

    கொண்டாடுகிறது ;

    காலியிடம் விடுகின்றது ;

    சின்னஞ்சிறு எண்களுடன்

    நான் மீண்டும் துவங்குகிறேன்.

    விரைவு நடனம்,

    இலைகளின் நஷ்டங்களின் கலைப்பு ;

    நான் செய்யாத விஷயங்கள் மட்டும்

    சுவாலை அணைந்த பின்

    சடசடவென வெடிக்கும்

    –    நவோமி ஷிஹாப் நை (Naomi Shihab Nye)

    Naomi

  • அமைதியின் சத்தம் அல்லது பலரின் ஒற்றைக் குரல்

    Thanks The Hindu

    பெருமிதமா? நெகிழ்வா? எழும் உணர்வை துல்லியமாக வரையறுக்க இயலவில்லை. கைலாஷ் சத்யார்த்தி – யூசஃப்சாய் மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட நிகழ்வை தொலைக்காட்சியில் காண்கையில் ஏற்பட்ட உணர்வை எப்படி சொல்வது?

    ராஹத் ஃபதே அலி கான் தன் தந்தையின் அமர கவாலி “அல்லாஹூ அல்லாஹூ” வை மண்மணம் கமழ பாடுகையில் மனவெழுச்சி தணிந்து சமநிலையடைந்தது போலிருந்தது. நோபல் பரிசுக்குழுவின் தலைவர் பரிசு பெறும் இரட்டையரைப் பற்றிய அறிமுகவுரையைத் துவக்கினார். மஹாத்மா காந்தியின் மேற்கோள் ஒன்றோடு முடித்தார்.  “நான் ஏற்கும் ஒரே கொடுங்கோலன் என்னுள் கேட்கும் அசைவிலாத உட்குரல் தான்” (“The only tyrant I accept is the still, small voice within me.”) “தத்தம் உட்குரலைக் கேட்ட” இருவருக்கும் மெடல்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சான்றிதழை அருகில் நின்றிருந்தவரிடம் சற்று நேரத்துக்கென கொடுத்துவிட்டு மெடலை உயர்த்திப் பிடித்தார் மலாலா. சத்யார்த்தியையும் உயர்த்திப் பிடிக்கச் சொன்னார். கை தட்டல் சில நிமிடங்களுக்கு நீடித்தது.

    பரிசளிப்புக்குப் பிறகு ஓர் இசை இடைவேளை. சரோத் கலைஞன் அம்ஜத் அலி கான் தன் புதல்வர்கள் இருவருடன் சேர்ந்து “அமைதிக்கான ராகம்” என்ற இசை மீட்டினார்.

    கைலாஷ் சத்யார்த்தி தன் உரையை முதலில் இந்தியில் தொடங்கினார். பிறகு ஆங்கிலத்தில் தொடர்ந்தார். பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென ஒரு பக்கம் ‘மிஸ்’ ஆவதைக் கவனித்தார். சில வினாடிகளுக்கு அவருள் ஒரு பதற்றம். சில வினாடிகள் தாம். “மாநாடுகளில் உரையாற்றுவதன் வாயிலாகவோ, தூர நின்று கொடுக்கும் பரிந்துரைகளினாலோ பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துவிடப்போவதில்லை…..நண்பர்களே, இப்போது என் பிரச்னை என் உரையின் ஒரு பக்கம் எனக்கு கிடைக்காமல் இருப்பது தான்” என்று சொல்லவும் ஆங்காங்கு மெலிதான நகைப்பொலிகள் எழுந்தன. நிகழ்ச்சிப் பொறுப்பாளர் சிறிது நேரத்தில் ஒரு தாளை அவரிடம் கொடுத்ததும் “இதற்கு முன்னர் வேறொரு நோபல் இது மாதிரி நிகழ்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை…நான் ஏற்கெனவே சொன்னது மாதிரி இன்று என்னென்னவோ நடக்கிறது….தைரியமிக்க ஓர் இளம் பாகிஸ்தானிய பெண் ஒர் இந்தியத் தந்தையையும், ஒர் இந்தியத் தந்தை ஒரு பாகிஸ்தானிய மகளையும் சந்தித்த நாளல்லவா இது!” என்று சத்யார்த்தி பேசினார். கருணையை உலகமயமாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். உரையை முடிக்கும் தறுவாயில் பார்வையாளர்களை கண்களை மூடிக் கொண்டு இருதயப் பகுதியைத் தொட்டுக் கொள்ளச் சொன்னார். “உங்களுள் இருக்கும் குழந்தையை உணருங்கள்…அது சொல்வதைக் கேட்க முயலுங்கள்….அக்குழந்தை சொல்வதைக் கேளுங்கள்….” பிரகதாரண்யக உபநிஷத்தில் வரும் இறவா வரிகளுடன் தன் உரையை முடித்துக் கொண்டார்.

    “அசதோமா சத் கமய

    தமசோமா ஜ்யோதிர் கமய

    ம்ருத்யோர்மா அம்ருதம் கமய”

    பாகிஸ்தானியப் பெண் பேசத் தொடங்கும் முன்னர் எல்லை காந்தி பாச்சா கானின் புத்திரர் கனி கானின் கவிதைகளை சர்தார்அலி டக்கர் பாடினார். பஷ்தோ பெண்ணான மலாலா கவிதைகளை புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

    பின்னர், மலாலா பேசத் தொடங்கினார்.  ‘பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானீர் ரஹீம்’ என்று புனித குரானின் சொற்களோடு துவங்கினார். தன் சிறகுகளைக் கட்டிப் போடாத தாய்-தந்தையருக்கு நன்றி செலுத்தினார், கல்வி மறுக்கப்படும் ஆறு கோடி சிறுமிகளின் பிரதிநிதியாக இப்பரிசை ஏற்பதாகக் கூறினார். பாகிஸ்தானின் ஸ்வாத் பிரதேசத்தில் பள்ளி சென்ற போது அவருடன் படித்த அவடைய நண்பர்களும் விழாவிற்கு வந்திருந்தனர். தீவிரவாதிகளால் மலாலாவுடன் சேர்த்து சுடப்பட்ட அவருடைய தோழிகள் – ஷாசியாவும் கைநாத்தும் – பார்வையாளர்களில் இருந்தனர். போகோ அராம் என்னும் தீவிரவாத கும்பலின் பயங்கரவாதத்துக்கு தினம் தினம் பலியாகிக் கொண்டிருக்கும் வடக்கு நைஜீரியப் பெண்களில் ஒருவரான ஆமினாவும், பெண் கல்விக்காக சிரியாவில் போராடி இன்று ஜோர்டானில் அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மேசோன் என்பவரும் நோபல் பரிசு நிகழ்வுக்கு வந்திருந்தனர். அந்நால்வரும் மலாலா உரையின் போது ஆர்வத்துடன் கை தட்டியவாறும் கைத் தொலைபேசியில் புகைப்படங்கள் எடுத்தவாறும் இருந்தனர்.

    “நான் என் கதையை சொல்வது அது வித்தியாசமானது என்பதால் இல்லை ; அது வித்தியாசமானதாக இல்லை என்பதால்.

    இது பல பெண் குழந்தைகளின் கதை.

    நான் அவர்களின் கதைகளையும் சொல்கிறேன்.

    அணிந்திருக்கும் காலணியின் உயரத்தையும் சேர்த்து ஐந்தடி இரண்டங்குல உயரமான ஒற்றைப் பெண்ணாக நான் தோற்றமளித்தாலும். என் குரல் தனிக்குரலன்று. பலரின் குரல்கள் என்னுள் ஒலிக்கின்றன.

    நான் மலாலா. நான் ஷாசியாவும்.

    நான் ஆமினா

    நான் மேசோன்”

    மலாலா உரையை முடித்து தன் இருக்கைக்குச் செல்லும் வரை அவையோர் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். தன் இருக்கையை அடைந்ததும் மார்பில் தன் வலது கரத்தை வைத்து அவையோரின் கரவொலியை பணிவுடன் ஏற்றுக் கொண்டு உட்காரலாம் என்று மலாலா இருக்கையில் அமர எத்தனிக்கையிலும் கரவொலி நிற்கவில்லை. மலாலாவின் கை அவர் மார்பில் பதிந்தவாறே இருந்தது.

    இரு நாடுகள் ; ஒர் இந்து ; ஒரு முஸ்லீம் ; அறுபது வயது ஆண் ; பதினேழு வயது சிறுமி ; வித்தியாசங்கள் அர்த்தமிழந்து மனிதம் என்னும் ஓருணர்வில் கலப்பதற்கான சாத்தியத்தின் சிறு மங்கலான மினுக்கொளியை இந்நிகழ்வில் காண முடிந்தது.

    கைலாஷ் சத்யார்த்தியின் நோபல் பரிசு ஏற்புரை

    மலாலாவின் நோபல் பரிசு ஏற்புரை

  • நஞ்சு

    ??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

    சிறு தளிர்கள்
    உதிர்ந்து விழுந்தன
    மொட்டுகள்
    மூச்சுத் திணறி வாடிப்போயின
    வேர் வழி
    உருவிலா நஞ்சு பரவி
    மரம் தள்ளாடிற்று
    ஒரு மரம் அழித்து
    தரை வழி அடுத்த மரத்துக்குத் தாவி
    அதி விரைவில்
    எதிர்காலத்தின் வனமொன்றை அழித்தது
    கருத்தின் வடிவிலும்
    கொள்கையின் வடிவிலும்
    தீவிரம் என்னும் உடையணிந்து
    வாதம் எனும் மகுடியூதி
    மூளைகளை தூக்கநடனத்தில் ஆழ்த்தி
    விழித்திருப்போரின் உடலை நீலம் பாரிக்க வைத்து
    நஞ்சு இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது.

  • சுட்டுணர்வு

    சில வாரங்களுக்கு முன்னர் நான் வலைப்பதிவிட்ட “தர்மகீர்த்தியின் பரிசோதனை”  கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டது ; அதில் வரும் pure sensation எனும் கலைச்சொல்லை தூய உணர்ச்சி என்ற உரிச்சொல்லாக மொழி பெயர்த்திருந்தேன். தூய உணர்ச்சி என்னும் சொல் முழுமையான திருப்தியை ஏற்படுத்தவில்லை. கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்து அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். பிறகு கட்டுரையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி சிந்திக்க சரியான நேரம் அமையவில்லை.

    நேற்று ஒரு முகநூல் உரையாடலின் போது மணிமேகலையின் 29-ம் அத்தியாயத்தில் ஒன்றைத் தேட வேண்டியிருந்தது. எதையோ தேடும் போது முன்னர் தேடிக் கிடைக்காது போன பொருள் கண்ணுக்குத் தட்டுப்படுமே அது மாதிரி கீழ்க்கண்ட வரிகள் என் பார்வையில் பட்டன.

    ஆதி சினேந்திர னளவை யிரண்டே

    ஏதமில் பிரத்தியங் கருத்தள வென்னச்

    சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி

    விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்

    மற்றவை யனுமா னத்துமடை யும்மென    (29 : 47-51)

    “ஒரு பொருளின் பொருண்மை மட்டும் கண்டுணரும் உணர்வை காட்சியளவை என்று மேற்கொண்டு பிறராற் கொள்ளப்படும் பெயர், சாதி, குணம், தொழில் என்பவை கருத்தளவையிலும் அடங்கும் என அவற்றை இலக்கண மேற்கொள்ளாது நீக்கி விட்டனர்”

    – ஔவை.துரைசாமிப் பிள்ளை உரை

    Pure sensation என்ற சொற்றொடரை சுட்டுணர்வு என்று மொழி பெயர்த்திருக்க வேண்டும் ; மணிமேகலை ஆசிரியர் வேறோர் இடத்திலும் சுட்டுணர்வை வரையறுத்திருக்கிறார்.

    “சுட்டுணர் வெனப்படுவது ஏனைப் பொருளுண்மை மாத்திரை காண்டல்” (26 : 61-62)

    சுட்டுணர்வு நிர்விகற்ப காட்சி ; நாம சாதிக் குணக்கிரியையின் வைத்து உணரும் உணர்வு சவிகற்பக் காட்சி. இவற்றை முறையே இந்திரிய ஞானம் என்றும் விசிட்ட ஞானமென்றும் கூறுவர். திக்நாகர் நாம சாதி முதலியவற்றை “பஞ்சவித கற்பனை” என்று குறிப்பிடுகிறார். சுட்டுணர்வென்பது சவிகற்ப காட்டிக்கு அடிப்படை ; சுட்டுணர்வு சவிகற்ப காட்சிக்கு வித்திடாவிடின் அது குறையுடையதாகும். இக்குறையை தருக்கவியல் நூலார் “பிரமாணாபாசங்கள்” எட்டனுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.

  • கரணிய மெத்த சுத்தம்

    Trees

    சாவத்தியில் புத்தர் தங்கியிருந்த போது ஆற்றிய பேருரைகளைக் கேட்ட பிக்‌ஷுக்களின் குழுவொன்று பிக்‌ஷுக்களின் மரபுப்படி மழைக்காலத்தில் வனத்துக்கு சென்று தங்க முடிவு செய்தனர். காட்டு மரங்களின் தேவதைகளுக்கு காட்டில் பிக்‌ஷுக்கள் வந்து தங்குதல் பிடிக்கவில்லை. ஆதலால் பிக்‌ஷுக்களைத் துரத்த இரவு நேரத்தில் பலவகையிலும் பயமுறுத்தும் காட்சிகளை உண்டு பண்ணி துன்புறுத்தினர். பிக்‌ஷுக்கள் இதைப்பற்றி புத்தரிடம் சென்று முறையிட்ட போது, “கரணிய மெத்த சுத்தம்” (KARANIYA METTA SUTTA — THE DISCOURSE ON LOVING-KINDNESS) என்னும் பாலி சூத்திரத்தை அவர்களுக்கு போதித்தருளினார். இந்த சூத்திரத்தை சுத்தத்தை உச்சரித்து வருமாறும் இது அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினார். பிக்‌ஷுக்கள் வனத்திற்கு திரும்பிய பிறகு இச்சூத்திரத்தை பயிற்சி செய்து வரலாயினர். பிக்‌ஷுக்களின் பயிற்சி மர தேவதைகளினுள் மனமாற்றத்தை உண்டாக்கிற்று. பிக்‌ஷுக்களின் இதயத்துள் எழுந்த அன்பெண்ணத்தின் விளைவாக தேவதைகள் இளகின. பிக்‌ஷுக்கள் அங்கேயே தங்கி அமைதியாக தியானப்பயிற்சிகளில் ஈடுபட அனுமதித்தன.

    பாலி நெறிமுறை நூல்களில் இரு இடங்களில் இச்சூத்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. சுத்தநிபாதத்திலும் குத்தகபத்தயாவிலும் இச்சூத்திரம் இடம் பெறுகிறது. தேரவாதத்தில் சொல்லப்படும் நான்கு பிரம்மவிஹாரத்தில் மெத்த (அன்பெண்ணம்) வும் ஒன்றாகும் ; சக-மனித ஒற்றுமையுணர்வை, தியானத்திற்கான  மனக்குவியத்தை வளர்ப்பதற்காக இச்சூத்திரத்தின் வாசிப்பு பரிந்துரைக்கப் படுகிறது. பின் வந்த பௌத்த நெறி முறைகளில் மெத்த பத்து பாரமிதைகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

    தேரவாத பௌத்த வழிபாட்டு முறைகளில் மெத்தா சுத்தத்தின் வாசிப்பு பிரபலம் ; இந்த சூத்திரத்துக்கு பயம் நீக்கும் சக்தியிருக்கிறதென்ற நம்பிக்கை பௌத்த சமயத்தில் பரவலாகக் காணப்படுகிறது.

    தனிஸ்ஸாரோ பிக்குவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம் கீழே –

    குறிக்கோள் திறமுடையோரில்
    அமைதி நிலைக்குள் நுழையும் எண்ணமுடையோர்
    இதைச் செய்தல் அவசியம் ;
    இயலுமையுடன் இருத்தல்,
    நேர்க்குணம் மிக்கவராய்,
    எளிதில் போதனையேற்கத்தக்கவராய்,
    மென்மையானவராய்,
    அகந்தையற்றவராய்,
    சிற்சில கடமைகளுடன்,
    இலேசாக வாழ்ந்து,
    அமைதியான குணங்களுடன்,
    தலை சிறந்து,
    எளிமையானவனாய்,
    ஆதரவாளர்களின் எண்ணிக்கை மேல் பேராசையின்றி.
    ஞானியர் ஒறுக்கும்
    சிறு செயலையும்
    செய்யாமலிரு

    சிந்தி: இளைப்பில் மகிழ்ச்சி கொள்ளட்டும் ;
    அனைத்துயிரும் தம் இதயத்துள் மகிழ்வாயிருக்கட்டும்.
    உயிர்கள் எத்தன்மையாய் இருப்பினும்,
    வலியுள்ளோரும் நலிவுற்றோரும், விதிவிலக்கின்றி
    நீளமானதும், பெரிதாக இருப்பதும்
    நடுத்தரவடிவினதும், குட்டையானதும்
    நுட்பமானதும், வெளிப்படையானதும்
    காண்பதும், காணப்பெறாததும்
    அருகிருப்பதும், தள்ளியிருப்பதும்
    பிறந்ததும், பிறப்பை நாடுவதும்

    அனைத்துயிரும் தம் இதயத்துள் மகிழ்வாயிருக்கட்டும்.
    ஒருவரும் அடுத்தவரை ஏமாற்ற வேண்டாம்
    அல்லது எங்கும் யாரையும் வெறுக்க வேண்டாம்
    அல்லது கோபத்தாலோ, எரிச்சலாலோ
    அடுத்தவர் துயருற நினைக்க வேண்டாம்

    தன் மகவை, ஒரே மகவைக் காக்கும் பொருட்டு
    தன் உயிரைப் பணயம் வைக்கும் தாயொருத்தியைப் போல்
    அனைத்துயிர்கள் குறித்தும்
    எல்லையிலா இதயத்தை வளர்த்துக் கொள்.

    முழுப் பிரபஞ்சத்தின் மீதான நல்லெண்ணவுணர்வுடன்
    எல்லையில்லா இதயத்தை வளர்த்துக் கொள்.
    மேலே, கீழே, எல்லா பக்கங்களிலும்
    தடையில்லாமல், பகைமை அல்லது வெறுப்பின்றி
    நின்று கொண்டோ, நடந்தவாறோ,
    அமர்ந்து கொண்டோ, அல்லது படுத்துக் கொண்டோ,
    ஒருவன் விழிப்புடனிருக்கும் வரை
    கவனத்துடனிருக்கும் தீர்மானம் கொள்ள வேண்டும்.

    இதுவே
    இங்கு, இப்போது
    உன்னத இருத்தல்
    என்றழைக்கப்படும்.

    தவறான கருத்துகளுக்கிடம் கொடாமல்
    ஒழுக்கத்துடன், முழுமையான தரிசனத்துடன்
    புலனின்ப ஆசைகளை முறியடித்த
    ஒருவன்
    கருப்ப அறைக்குள்
    மறுபடி உறங்குவதில்லை

  • மரம் வெட்டும் திருவிழா

    மரம் வெட்டும் திருவிழா

    காலனியில் இன்று

    இனிப்பு விநியோகம்

    முன்வாசலில் நின்ற

    வயதான மரங்கள்

    வெட்டப்பட்டு

    கட்டிட பால்கனிகளில்

    வெளிச்சம் பாய்ந்த மகிழ்ச்சியில் ;

    கலைந்த கூடோன்றுள்

    கிடந்த பறவை முட்டைகளை

    வீசியெறிந்து விளையாடி

    குழந்தைகள் குதூகலிப்பதை

    மரங்களின் இடத்தடையின்றி

    நகர்ந்த வாகனங்களின்

    உறுமலில் எழுந்த புகையை சுவாசித்தவாறு

    சுழலும் சங்கிலி-இரம்பமிடும் சத்தத்தின் பின்னணியில்

    பால்கனிக்காரர்கள்

    கண்டு களித்தார்கள்

    மரண தினத்தை

    கொண்டாடும் மரபு

    மரம் மரணித்த அன்றும்

    மாறாமல் தொடர்ந்தது

    ​@ studiothirdeye.com

    செயல்முறை

    சிந்தனைப்பாத்திரத்தில்

    நிரம்பி வழிந்த சொற்கள்

    காகிதப் பக்கங்களில் ஒட்டிக் கொண்டு

    பின்னர்

    வாசிப்பின் உஷ்ணத்தில்

    எண்ணங்களாக ஆவியாகி

    இன்னொரு சிந்தனைப் பாத்திரத்துள்

    புகுந்து கொண்டன

  • தர்மகீர்த்தியின் பரிசோதனை

    buddhist_logic_large

    Buddhist Logic என்ற இரண்டு புத்தக நூலை இரு வருடங்களுக்கு முன்னர் வாங்கினேன். படிக்காவிட்டாலும் சில புத்தகங்களை நம்முடன் வைத்திருப்பதே ஒரு பெருமிதத்தை கொடுக்கும். ஒவ்வொரு முறையும் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்பது, சில பத்திகளைப் படிப்பது என்று இந்நூலுடனான தொடர்பை துவக்க (பிரம்ம!) பிரயத்தனம் செய்து வந்தேன். அடர்த்தியான தருக்கவியல் தத்துவங்களை விரிவாகப் பேசும் இந்நூலுக்குள் என்னால் நுழைய முடியவில்லை. பௌத்த தத்துவவியல் வரலாற்றைப் பேசும் முதல் அத்தியாயம் படிப்பதற்கு எளிதாக இருந்தது.

    யோகசார பௌத்தத்தின் தத்துவ நூல்களைப் பற்றி விளக்கும் நூல் இது. பிற்கால பௌத்தத்தின் முக்கிய நூல்களான பிரமாண சமுச்சய (ஆசிரியர் : திக்நாகர் – கி.பி 5-6ம் நூற்றாண்டு), பிரமாண வர்த்திக காரிகா (ஆசிரியர் : தர்மகீர்த்தி – கி.பி 7ம் நூற்றாண்டு – சுமத்ராவின் இளவரசரான இவர் நாலந்தாவிற்கு வந்து “செட்டில்” ஆனவர் என்று சொல்லப்படுகிறது.), மூல மத்யாதம காரிக விருத்தி (ஆசிரியர் : சந்திரகீர்த்தி – கி.பி 7ம் நூற்றாண்டு – இவர் நாகார்ஜுனரின் சிஷ்யர் என்று சொல்லப்படுகிறது) ஆகிய நூல்களின் பொருளுரைகள், மேற்சொன்ன நூல்களினுடைய ஆசிரியர்களின் பிற்காலச் சீடர்கள் உரைத்த தெளிவுரைகள் – இவற்றைப் பற்றி Buddhist Logic விளக்கிப் பேசுகிறது. பௌத்த தருக்கவியல் மரபின் அம்சங்களை வரிசைப்படுத்தி விவரிக்கிறது. Stcherbatsky என்னும் இரஷ்யப் பேராசிரியரால் எழுதப்பட்ட மிக முக்கியமான இரட்டைப் புத்தகம் இது. உலகெங்கும் தத்துவம் படிக்கும் மாணவர்களால் வாசிக்கப்படும் புத்தகம். உலகின் பல்கலைக்கழகங்கள் பல இப்புத்தகத்தை பாட நூலாக அறிவித்துள்ளன. 1932-இல் எழுதப்பட்ட இந்நூலில் சொல்லப்பட்டிருப்பவை கொஞ்சம் காலாவதியானவை என்று சில பௌத்த தத்துவவியலார் கருதுகின்றனர் என்று இணையத்தில் படித்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். கான்ட்-டின் தத்துவப் பார்வையின் வழியாக பௌத்த தத்துவத்தை அவர் அணுகியிருக்கிறார் என்பது டேவிட் லாய் என்பவரின் புகார்.

    வழக்கத்துக்கு மாறாக ஒரு நாள் அதிகாலை நாலரைக்கு தூக்கம் விலகிச் சென்றது. படுக்கைக்கு மிக அருகில் இருந்த முதலாம் பாகத்தை கையிலெடுத்தேன். புத்தக கிரிக்கெட் விளையாடுவது மாதிரி குறிப்பான நோக்கமற்று ஒரு பக்கத்தை பிரித்தேன்.

    +++++

    Dharmakirti_25139

    தர்மகீர்த்தியின் பரிசோதனை

    (Buddhist Logic, Volume 1, page 150-153)

    இந்த ஒற்றைக் கணம் ஒரு சுத்தமான உணர்வு தானே, அதன் அனுமானமான கணித வரைபடப்-புள்ளியானது ஒரு வெறும் மரபு என்பதைப் போல்? ஒரு புறப்பொருளின் தூண்டுதலால் அது உற்பத்தி செய்யப்பட்டாலும், ஒரு குணத்தையும் தன் இயல்பில் கொண்டிராத ஒரு பொருளிலிருந்து எழுவதனால், அது யதார்த்தம் என்று கருதப்படலாகுமா? கற்பனை அல்லது ஆக்கபூர்வ உறுப்பின் அடிச்சுவடுகள் முழுதும் உரித்தெடுக்கப்பட்ட ஒன்றாக அது கருதப்படுகிறது. ஆனாலும் அது வெறும் கற்பனை மட்டும் தானே? இந்த வினாக்கள் இந்தியாவில் மட்டும் எழுப்பப்பட்ட ஒன்றல்ல என்பது எல்லாரும் அறிந்தது. கணித வரைபடப்புள்ளி பற்றிய கேள்விக்கு அளித்த பதிலையே பௌத்தர்கள் இக்கேள்விக்கும் அளித்தார்கள். ஒற்றைக் கணம் என்பது ஒர் உருவமாகப் குறிக்கத்தக்கதன்று. ;  அதை “அறிவின் வாயிலாக அடைதல்” சாத்தியமில்லை. அதாவது, அனுபவ ரீதியாக உண்மையானதன்று. ஆனால் மற்றெல்லாவற்றிற்கும் மெய்ம்மையை நல்கக் கூடிய மூலம் அது. உண்மையான மற்றும் நிலையான அறிவிற்கான முன்நிபந்தனை அது. செயலறிவிற்கு அப்பாற்பட்டது ஆனால் அது பொருண்மை சாராததும் அன்று. “வானிலிருக்கும் மலர்” அன்று.

    நையாயிகர்களின் கடவுளைப் போன்றோ, சாங்கியர்களின் பிராகிருதியைப் போன்றோ, வைசேஷிகர்களின் பொதுமைகளைப் போன்றோ அல்லது இவ்வெல்லா மரபுகளின் ஆன்மாவைப் போன்றோ இது பொருண்மை சாரா உட்பொருளன்று. தன்னிலை ஆய்வின் துணை கொண்டு இந்த கணத்தின் யதார்த்தத்தை தர்மகீர்த்தி நிரூபிக்க விழைகிறார். பொருண்மை சாரா உட்பொருட்கள் பொருண்மையற்றவை ஏனெனில் அவை யதார்த்தப் புள்ளி கலக்காத, புலனால் உணரப்படாத, சுத்தமான கற்பிதங்கள். “இடம், காலம் மற்றும் புலன்களால் கண்டுணரும் தன்மை – இவற்றின் வாயிலாக அடையும் தன்மையற்றவை” ஆனால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அனுபவ யதார்த்தத்திலும் அனுபவ அறிவிலும் செய்யப்படும் ஒவ்வொரு செய்கையிலும் இந்த கணம் (இந்தப் புள்ளி) என்னும் உணர்வு இருக்கிறது. இதை நாம் தன்னிலை ஆய்வின் வாயிலாக மறைமுகமாக நிரூபிக்கலாம். (“ப்ரத்யக்‌ஷம் கல்பனாபோதம் பிரத்யக்‌ஷனைவ சித்யதி” – இவை தர்மகீர்த்தியின் சொற்கள் – பிரமாண வர்த்திகாவில் வருபவை). தர்மகீர்த்தி சொல்கிறார் : “அந்த உணர்வு படைப்பாக்க கற்பனையிலிருந்து வேறு பட்டது – ஒரு தற்சோதனை வாயிலாக நிறுபணமாகக் கூடியது. ஓர் உருவம் என்பது உச்சரிக்கப்படக் கூடியது (ஒரு பெயரின் வாயிலாக). {“விகல்போ நாம சம்ஸ்ரயா”}. நாம் ஒரு வண்ண இணைப்பை உற்றுப் பார்க்கத் தொடங்குகிறோம். பிற பொருட்களின் மீதான சிந்தனையை அகற்றி, நம்முடைய பிரக்ஞையை ஒரு கட்டிறுக்க நிலைக்கு சுருக்கிவிடுகையில் (மயக்க நிலை எய்தியதைப் போன்று), நாம் அடையும் நிலை தூய உணர்ச்சி (Pure Sensation) நிலை. அந்நிலையிலிருந்து விழித்து நாம் மீண்டும் சிந்திக்கத் தொடங்குகையில் வண்ணப்பட்டையொன்றை நாம் நோக்கிக் கொண்டிருந்த உணர்வை ஞாபக பூர்வமாக உணர்கிறோம். ஆனால் நாம் அந்த தூய உணர்ச்சி நிலையில் தோய்ந்திருந்த போது அந்த வண்ணப்பட்டையை நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை (இதற்கு என்ன பெயரிடுவது!) நாம் கவனிக்கவில்லை. ஏனென்றால் அது தூய உணர்ச்சி”

    M.H.Bergson முன்மொழிந்த சோதனையோடு தர்மகீர்த்தியின் சோதனையும் வகையில் பொருந்திப் போவது ஒரு குறிப்பிடத்தக்க தற்செயலேயாகும். பிரெஞ்சு தத்துவாசிரியர் சொல்கிறார் : “ நான் என் கண்களை மூடிக் கொள்ளப் போகிறேன் ; செவிகளை அடைத்துக் கொள்ளப் போகிறேன் ; எல்லாப் புலனுணர்வுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப் போகிறேன்…என் புலனறிவு நின்று விட்டது. பொருண்மைப் பிரபஞ்சம் அமைதியில் மூழ்கிவிட்டது. என் சமீபத்திய இறந்த காலம் வரையிலான என் நினைவுகளை என்னால் நீக்கிக் கொள்ள முடிகிறது. என் உடல் பற்றிய பிரக்ஞை தவிர நிகழ்காலப் பிரக்ஞையை வறுமையாக்கி மிகவும் சிறிதாக்கிக் கொள்கிறேன்.” “தீவிரமான வறுமை நிலைக்குள்ளாக்கப்பட்ட பிரக்ஞை” என்பது தர்மகீர்த்தியின் நிகழும் கணம் அல்லது “தூய உணர்ச்சி நிலை” யைத் தவிர வேறொன்றுமில்லை. இன்மை என்னும் கருத்தியல் போலியானது (“Creative Evolution” – by M H Bergson) என்பதை நிரூபிப்பதற்கு பெர்க்சன் இந்த சோதனையைப் பயன் படுத்திக் கொண்டார்.  பௌத்தர்களும் அதே குறிக்கோளுக்காக இச்சோதனையைப் பயன் படுத்திக் கொண்டனர். ஆனால் அதே சமயத்தில் அனுபவ யதார்த்தத்துக்கும் அனுபவ அறிவிற்கும் குறைந்த பட்ச எல்லையே உண்டு என்பதற்கும் இதுவே நிரூபணம்.

    கமலசீலர் (கி.பி எட்டாம் நூற்றாண்டு ; நாலந்தா மகாவிகாரத்தில் இருந்தவர் ; பின்னர் திபெத் சென்றார் ; சாந்திசீலரோடு சேர்த்தே கமலசீலரைக் குறிப்பிடுவது திபெத்தில் ஐதீகம்) இதே சோதனையை கீழ்க்கண்ட வரிகளில் குறிப்பிடுவார். “முதற் கணத்தில் ஒரு பொருள் அறியப்படும் போது, அது தூய உணர்ச்சியால் தோற்றுவிக்கப்பட்ட  பிரக்ஞை நிலையில் அதன் முழுமையான, குறிப்பிட்ட தன்மையில் தோற்றமளிக்கிறது. பெயர் சொல்லி விளக்கத்தக்க உள்ளீடோன்றையும் அது தன்னகத்தே கொண்டிருக்கவில்லை. பின்னொரு சமயத்தில் அதே பொருள் கவனத்துடன் உற்று நோக்கப்படும் போது, கவனம் சிதறி அப்பொருளின் மரபுவழிப் பெயரில் படிந்து போய் விடுகிறது. பெயர் அடையாளத்துடன் கவனிக்கப்பட்ட பிறகு அப்பொருளின் நீடித்த இருப்பு மற்றும் இன்ன பிற காரணிகள் கவனத்தில் எழும். அதற்குப் பிறகு அதன் மீது நம் புலனுணர்வு-பூர்வ தீர்ப்பை வழங்கி விடுவோம். முன்னர் கவனத்துடன் நோக்கப்பட்டு பெயர் வாயிலாக அறியப்பட்ட பொருள் பற்றி எண்ணுகையிலோ அல்லது மீண்டும் காணும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதோ அப்பொருள் இன்மையற்றதாகி நினைவில் இருக்கும் பொருளாகவே ஆகிறது (ஏனெனில் அக்கணத்தில் அப்பொருள் புலன்களால் கண்டு கொள்ளப் படாமல், நம் முந்தைய புரிதலின் நினைவு வாயிலாக இடும் தீர்ப்பாகவே கொள்ளப்படும்) மனோநிலைகளுக்கிடையீடான தொடர்ச்சி என்று இங்கு கூறப்படுவதற்கு எங்கே நிறுவல்? நம் கவனம் ஒரு செயலில் தோய்ந்திருக்கையில், தகுதியால் வேறுபடாவொன்றின் மாறாத முன்னிலையை நம்மால் அறிய முடிகிறது. நிலைத்திருக்கும் பொருள் என்னும் எண்ணத் தோற்றம் மேற்சொன்ன மாதிரியாக எழுவதால், கவனிப்பவரின் கவனம் ஒன்றில் ஈடுபட்டிருக்கும் போது, வேறொரு பொருளில் கவனத்தை குவிக்கும் போது, கவனிக்கப்படும் பொருளினால் அவன் கவனம் நிறைந்திருக்கும் போது, அவன் முன்னால் இருக்கும் பொருளை (பொருளின் உள்ளீட்டை) அவன் பார்த்தாலும் அவனுடைய கவனம் பார்க்கும் பொருளின் மரபுவழிப் பெயரிலிருந்து விலகியிருப்பதனால், அங்கு (அச்சமயத்தில்) முதற் கணத்தில் (ஒவ்வொர் உணர்தலின்) ஒரு மெலிய, தகுதியொன்றுமிலாத உணர்வு. (“சர்வ உபாதி விவிக்த வஸ்து மாத்ர தர்சனம்”). இது இப்படியிராவிடில், எல்லா பிரக்ஞை பூர்வ நிலைகளும் பெயர் குறிக்கும் தகுதிகள் நிரம்பிய பொருட்களையே காணும் இயல்பு கொண்டதாக இருப்பின், கவனமற்ற மனத்தினன் ஒருவன்  நோக்கும் போது ஒரு வெறுமையான, ஒரு பண்புமற்ற பொருளையே எப்படி பார்க்கிறான்?”

    அபிதர்மசூத்ரத்திலிருந்து திக்நாகர் கிட்டத்தட்ட இதே முடிவைத் தரும்  மேற்கோள் ஒன்றைத் தருகிறார் (பிரமாண சமுச்சய விருத்தி – பிரமாண சமுச்சய-விற்கு திக்நாகரே எழுதிய உரை) :

    “ஒரு நீல வண்ணத் துண்டின் மேல் தியானிப்பில் ஈடுபட்டிருப்பவன், நீலத்தை புலன்களால் உணர்கிறான். ஆனால் அவனுக்கு அது நீலம் என்று தெரியாது. பொருளைப் பற்றி அது பொருள் என்று அவனுக்கு தெரியும் ; ஆனால் எத்தகைய பொருள் என்று அவனுக்கு தெரியாது”

    பின் வந்த ஆசிரியர்கள் பலராலும் இது மேற்கோளாக காட்டப்பட்டிருக்கிறது. தூய உணர்ச்சி பற்றிய கருத்துகளை திக்நாகர் சர்வாஸ்திவாதிகளின் படைப்புகளிலிருந்து பெற்றிருக்கக் கூடும் என்று எண்ண இடமிருக்கிறது.

     

  • ஏரி – கவிஞர் சல்மா

    ஸல்மா

    ஏரி
    ஏங்கிக் கருமையுற்ற முகத்தோடு
    ஏரி சலனமற்றிருக்கிறது
    சில நாட்களுக்கு முன்
    தயக்கமின்றி உன்னிடமிருந்து
    காலியான மதுக்கோப்பைகளை
    விட்டெறிந்திருந்தாய் அதில்
    மறுக்காமல் பெற்றுக்கொண்டது
    ஏரி
    பிறகொரு நாள்
    நீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக்
    கழுவிச் சாம்பலையும் கரைத்தாய்
    நேற்றுகூடக்
    கசந்துபோன நம் உறவினை
    இகழ்ந்து எச்சில் துப்பினாய்
    தண்ணீரில்
    எந்தக் காலமொன்றில்லாமல்
    எல்லாக் காலங்களிலும்
    உன் கழிவுகளைக் கொட்டி
    உன்னைச் சுத்தப்படுத்தியிருக்கிறாய்
    இன்று இதில் எதையும்
    நினைவுறுத்தாது
    உன் தாகம் தணிக்கத் தயாராகிறாய்
    உன் அசுத்தங்களை
    அடித்துக் கொண்டுபோக
    இது நதியில்லை
    ஏரி
    சலனமற்றுத் தேங்கிய நீர்
    பத்திரமாய்ப் பாதுகாக்கும்
    ஏதொன்றும் தொலைந்துபோகாமல்
    எனது வண்ணத்துப் பூச்சிகள்
    அறைச் சுவரில்
    நான் விட்டுச் சென்ற
    எனது வண்ணத்துப் பூச்சிகள்
    தமது பசை உதிர்ந்து
    பறந்து சென்றிருக்கலாம்
    நான் திரும்புவதற்குள்
     

    பாதைகள்

     அலமாரியில்
    அறைச் சுவரில்
    சுழலும் மின்விசிறியில்
    மோதித் தெறிக்கும் வெளவால்
    பல்லாயிரம் மைல்களுக்கப்பாலிருந்து
    கடலின் நீலத்தையும்
    மலைகளின் கூட்டங்களையும்
    கடந்து வரும் பறவைகள்
    இதுவரை
    தொலைத்ததில்லை
    தம் வழியை
     
    பிறழ்வு
    நான் பார்த்தறியாத
    உலகைக்
    குற்றவுணர்வுகளின் சங்கடங்களின்றி
    எனக்குத் திறந்துவிடும்
    உன் ஆர்வத்தில் தொடங்கிற்று
    நமது உறவின் முதலாவது பிசகு
    வெகுவான பிரயாசைகளுக்கும்
    மூச்சு முட்டல்களுக்கும் பிறகே
    உருவாக்குவேன்
    துளியளவு ஆட்சேபணையை
    வாழ்வின் எழுதப்படாத ஒழுங்குகளைக்
    காதோரத்தில் கிசுகிசுத்துக்கொண்டேயிருக்கும்
    அசரீரிகள்
    இன்றைய உணவை
    இக்காலத்தின் எனது உடைகளை
    அவற்றின் வேலைப்பாடுகளை
    இன்னும் என் உடலில் மறைக்கப்பட
    வேண்டிய அவயவங்களை
    காலில் சுற்றி வீழ்த்தும்
    கண்ணுக்குப் புலப்படாத வேலிகள்
    அச்சுறுத்தித் திருப்பும் என் சுவடுகளை
    தன் வழக்கமான சுற்றுப் பாதைக்கு
    இந்த இருப்பின் தடங்களை
    நாளையும் சரிபார்க்கவென மட்டுமே
    அஸ்தமிக்கும் இந்தப் பொழுது
    யாரோ எப்போதோ சமைத்த சாரமற்ற
    நேற்றைய உணவின்
    விதியிலிருந்து விலகி
    கூடு தேடிச் செல்லும் பறவைகளுக்கு
    இந்த வெற்றுப் படுக்கைகளை
    தந்துவிட்டு
    வெட்டவெளியொன்றில்
    தூங்க ஓரிடம் தேடினால் என்ன?
    இன்று
    ஒரு நாளைக்கேனும்
    இந்த சங்கடங்கள் தன்னால்தானென
    நம்மில் ஒருவர்
    பொறுப்பேற்றால் என்ன
    அல்லது
    நம்மில் ஒருவர் இங்கிருந்து தப்பிச் செல்ல
    இன்னொருவர் உதவினால் என்ன
    இதில் ஏதும் இல்லையெனில்
    ஏதேனும் வழியொன்றைத்
    தேட முயல்வோம்
    இந்த இரவை விடியாமல் செய்ய
    காலப் பதிவு

    விபத்திலிருந்து மீண்ட நாளின் உடை

    நாம் சந்தித்துக் கனிந்திருந்த
    வேளையில் பகிர்ந்திருந்த உணவு
    நெருங்கியவரின் மரணச் செய்தி
    வந்து சேர்க்கையில்
    என் கண்களைக் கடந்த
    சிவப்பு வண்ணக் கார்
    நகர்வதில்லை காலம்
    படிந்து உறைகிறது
    ஒவ்வொன்றின் மீதும்
     (இக்கவிதைகளை வலையேற்ற அனுமதித்த கவிஞர் சல்மாவுக்கு எனது நன்றிகள்)
  • ஹைதர்

     

    சிறப்புப் பதிவு : மாதவன் நாராயணன்

    Haider_Poster

    காஷ்மீர் ஓர் அரை-விதவை. சமவெளியுமல்லாத மலையுமல்லாத ஒரு பள்ளத்தாக்கு. இது ஒரு நாடு என்று சிந்திக்கும் சிலர் வசிக்கிற ஒரு மாநிலம். துள்ளலான நாட்டார் உச்சரிப்புக்கும்  உறவிலாத வேறோர் அதிகார பூர்வ மொழியின் பகட்டான இலக்கணத்துக்கும் நடுவில் தள்ளாடும் மொழி. சைவத்திலும் சூஃபியிலும் தோய்ந்த, இறக்குமதி செய்யப்பட்ட தீவிரவாத எண்ணங்களால் பாதிப்புறும் பரந்த கலாச்சாரம்.

    தடுமாற்றம் நிரந்தர இயல்பு இங்கே ; இருப்பதா? இல்லாமற் போவதா? நான் இருக்கிறேனா அல்லது இல்லையா? ஹாம்லெட்டை விடப் பொருத்தமான உருவகம் இதற்கு இருக்குக் கூடுமா? அல்லது எண்ணற்ற அடுக்குகளாய் விரியக்கூடிய நேசங்கள், கோபம் மற்றும் மனத்தடுமாற்றம் கொண்ட அவன் அன்னையா? அல்லது தந்தை, சகோதரன் மற்றும் காதலன் இவர்களுக்கிடையே சிக்கிச்சுழலும் தேவதை அனைய அவனின் காதலியா? 1947 இன் பின்பனிக்காலத்தில் காஷ்மீரின் பெண்களையும் குடிமக்களையும் பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்ட சூறையாடும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காக்க இந்தியத் துருப்புகள் விரைந்தன. அப்போது இந்தியத் துருப்புகளின் உச்ச தளபதியாக இருந்தவர் ஜெனரல் மௌன்ட்பேட்டன் என்பது ஒரு தொலைந்த முரண் ; அவரே நேருவின் மேல் – இந்திய வரலாற்றின் மேல் – ஜம்மு-காஷ்மீரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வழியாக பொது வாக்கெடுப்பு எனும் வலிமிக்க திட்டத்தை திணித்தவர். காயங்கள் இன்னும் ஆறவில்லை ; ஹாம்லெட்டைப் போல ஹைதர் போல மனங்கள் குழப்பத்தில் தள்ளாடுகின்றன.

    இங்கிலாந்தின் மிகப்பெரிய இலக்கிய ஆளுமை புனைந்த ஆங்கிலக் கதைப்பாத்திரத்தை கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார் விஷால் பரத்வாஜ் ; ஆங்கிலேயர்களின் தாக்கம் படிந்த வரலாற்றின் மீது அழுத்தமாய்ப் பதிந்த ராணுவ காலடித்தடங்களை அழித்துக் கொள்ள விழையும் சாம்பல் நிறமான மந்தார நிலப்பரப்புகளையும் மயங்க வைக்கும் பனியையும் இலையிலா மரங்களையும் ஆழமான படிமமாக்கியிருக்கிறார் விஷால்.

    Haider-Shraddha-Kapoor

    ஹைதர் ஒரு கவிஞன் ; எளிதில் பாதிப்படைபவன் ; அன்னையின் மேல் வெறிப்பற்று கொண்டிருப்பவன் ; அதே நேரம் கடமையின் அழைப்பை மறுக்காத, அதன் காரணமாக ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் சிக்கிக் கொண்ட மருத்துவர்-தந்தையால் பேணப்பட்டவன். உயிர் பிழைத்தல், இலட்சியம் மற்றும் குழப்பம் – இவற்றின் கலவையில் பின்னப்பட்ட பாத்திரங்கள் உலவும் கிராமிய இல்லங்கள், படகுவீடுகள், குறுகலான சந்துகள் நிரம்பிய சூழலில்  துரோகம் – நிஜமோ கற்பிதமோ – ஒர் இயல்பான பிண்ணனி ; பழிவாங்கல் ஒர் இயல்பான விளைவு.

    இந்தக் கொடூரமான சோகத்தை அதற்கேயுரிய கருப்பு நகைச்சுவையுடனும் பாலிவுட்டின் நிறங்களுடனும் சொல்ல படைப்பாற்றலும் கலைத்திறனும் தேவைப்படுகிறது. ஷேக்ஸ்பியரின் நகைச்சுவையை தாராளமாகப் பயன்படுத்தி விஷால் பின் – நவீனத்துவ உணர்வை தந்திருக்கிறார்.

    குடும்பக் கதையை அரசியல் உருவகமாக மாற்றிச் சொல்லும் ஒரு திருமணப் பாட்டு படத்தில் வருகிறது. இரட்டை சல்மான்கான் இரசிகர்கள் மறை-உளவாளிகளாக வருகிறார்கள்.  இவ்விரண்டு அம்சங்கள் தவிர ஹைதர் காஷ்மீரை பட்டகத்தின் மேல் பட்டுச்சிதறும் ஒளி வண்ணங்களாக காட்டுகிறது. ஒவ்வொரு வண்ணத்தின் பின் ஒளிந்திருக்கும் உண்மைகளை நம்மால் முழுமையாக அறிய முடியாமற் போகலாம். ஹைதர் காஷ்மீரை பன்முக பட்டகப் பார்வையாக நம்முன் வைக்கிறது – மனிதம், ஆவணம், பால், தத்துவம், கலை, அரசியல் மற்றும் தாய்மை.

    ஷாஹித் கபூர் தன் வாழ்நாளின் முக்கியமான பாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார். எல்லா நடிகர்களுமே திரைப்படத்துக்கு நம்பகத்தன்மையை நல்குகிறார்கள். கொந்தளிப்பான தாய் பாத்திரத்தில் தபு ; சில்லறை இலட்சியங்களுக்கும், தெருக்கோடித் தரமான காதலுக்கும் இடையில் அல்லாடும் வில்லத்தனம் கொண்ட சித்தப்பா பாத்திரத்தில் கேகே மேனன் ; ஹைதரின் மருத்துவர்-தந்தை டாக்டர் ஹிலால் மீர்-ஆக நரேந்திர ஜா ; பிந்தைய கால தந்தையின் ஆவியாக சிறப்புத் தோற்றத்தில் இர்ஃபான் கான்.

    ஒல்லியான, தேவதையாக, அன்பான பாத்திரத்தில் ஷ்ரத்தா கபூர் – கஷ்டப்படுத்தும் பேச்சு நடை கொண்டு ஒரு புதிய முகம் எத்தனை ஆழத்தை எளிமையை காட்ட முடியும்?

    காஷ்மீரின் கம்பிகளாலான நாட்டு வாத்தியங்கள் எழுப்பும் அச்சமூட்டும் இசையும், பதற்றமான பள்ளத்தாக்கின் தனித்து விடப்பட்ட அழகை பதிவு செய்யும் ஒளிப்பதிவும் நனவிலியுடன் பேசுகின்றன ; எதையும் தீர்மானிக்கவியலாத, காயப்பட்ட இளவரசனின் உருவகத்தை மேம்படுத்துகின்றன.

    அடிப்படையாக அந்திமயங்கிருள் கருப்பொருளான ஹைதரில் கறுப்பு – வெள்ளை சித்தரிப்பை எதிர்பார்ப்போர் படத்தை கடுமையாக விமர்சிக்கக்கூடும். இந்திய ராணுவத்தின் கடினமான நிலையையும் குடிமக்களைக் காக்க ராணுவம் மேற்கொண்ட காஷ்மீர்  தலையீட்டின் வரலாற்று நுட்பங்களையும் ஹைதர் தெளிவாகச் சித்தரிக்கிறது. இராணுவக் கண்காணிப்பில் உள்ள பிரதேசத்தின் மனிதச் சிக்கல்களைப் பற்றியும் பேசவும் தவறவில்லை.

    ஷேக்ஸ்பியர் வகைமைத் திரைப்படங்களில் விஷாலுக்கு இது ஹேட்ரிக் ; மக்பூல் என்ற மக்பெத் ஒர் உத்தேசமான ஆனால் நம்பிக்கையான துவக்கம். ஓத்தெல்லோவாக ஓம்காரா ஒரு சூத்திரமாக வளர்ந்தது. ஹாம்லெட்டாக ஹைதர் ஒரு பரிபூரணத்தை எட்டியிருக்கிறது.

    துப்பாக்கிகளும் கல்லறைகளும் ஒரு வாழும் துக்கத்தை எதிரொலிக்கையில், பாத்திரங்கள் கனமாக நம் நெஞ்சுள் தொங்குகின்றன ; அரை-விதவைப் பள்ளத்தாக்கில் நண்பகலின் மூடுபனி போல், வானில் வட்டமிடும் கழுகுகளின் குரல்களின் பிண்ணனியில் வீழும் பனித்துளி போல கண்ணில் சொட்டும் கண்ணீர். அமைதியான் ஜீலம் நதியின் சலசலப்பைப் போல், இயக்குனரின் செய்தி நம்மை வந்தடைகிறது ; நீ விடுதலை (azaadi) பெற வேண்டியது பழி வாங்கும் (inteqam) உன் எண்ணத்திடமிருந்து தான்.
    Official-Haider-movie-trailer-gains-YouTube-success

    (நண்பர் மாதவன் நாராயணன் ஹிந்துஸ்தான் டைம்ஸில் எடிட்டராகப் பணி புரிகிறார். பத்தியாளரும் கூட. ட்வீட்டர் சமூக தளத்தில் மிகப் பிரபலம். அவரின் ட்வீட்டர் ஹேன்டில் : @Madversity )