Blog

  • விரியும் காட்சி

    ஜூலியோ கொர்த்தசாரின் “blow-up” சிறுகதை குறித்து

    சிறுவயதில், அதாவது மூன்றாம் அல்லது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது,  ஒரு முறை என் குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு பயணமான போது நான் கண்ட காட்சி என் நினைவில் இன்னும் இருக்கிறது. அந்தப் பயணத்தை நான்  மறக்காமல் இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் புளிமுட்டைகள் போல் அடைந்தவாறு பயணம் செய்தது. கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம். பஸ்சில் ஏறும்போது “இந்த பஸ் போகட்டும் ; வேறு பஸ்சில் போகலாம் “ என்று என் மூத்த அண்ணன் சொன்னார். ஆனால் யாரும் கேட்கவில்லை. முட்டி மோதிக்கொண்டு எல்லோரும் ஏறினார்கள். என் அம்மா முன் வாயில் வழியாக பஸ்சில் ஏறினார். நாங்களெல்லாம் பின் வழியாக. என்னால் முதல் படியிலிருந்து இரண்டாவது படிக்கு முன்னேற முடியவில்லை. கண்டக்டர் என்னை பஸ்சுக்குள் இழுத்துவிட்டார்.

    இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தன. ஏற்கெனவே பல பேர் நின்றிருந்தனர். பஸ்சின் நடுப்பாகம் வரை முக்கி முக்கி முன்னேறினேன். வலப்புறம் ஜன்னல் இருக்கையொன்றில் அமர்ந்திருந்த பெரியவர் “வா தம்பி” என்று அழைத்தார். இருக்கைகளுக்குள் நுழைந்து பெரியவரின் மடியில் உட்கார்ந்து கொண்டேன். வெள்ளை ஜிப்பாவும் வெள்ளை வெட்டியும் அணிந்திருந்தார். நெற்றியில் விபூதிப்பட்டையும் சந்தனப் போட்டும் இட்டிருந்தார். நரைத்த மீசையின் ஒரு சில முடிகளை அவரின் விரல்கள் நீவிய வண்ணம் இருந்தன. “ஓவர் லோடு ஏத்தறான் பாரு” என்று சலித்துக் கொண்டார். என் தாய், தந்தை, சகோதரர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பஸ்சில் எல்லோரும் ஏறியிருப்பார்களா என்ற ஐயம் அவ்வப்போது வந்து என் பயவுணர்வை அதிகப்படுத்தியவாறிருந்தது. மனதில் “முருகா முருகா” என்று உச்சரித்துக் கொண்டிருந்தேன். பஸ் நகர ஆரம்பித்து கொஞ்ச தூரம் போனதும் பழகிவிட்டது. பயம் இல்லை. பெரியவர் தன்  பாக்கெட்டிலிருந்து பிளாஸ்டிக் காகிதம் சுற்றிய மிட்டாய் ஒன்றைக் கொடுத்தார். புளிப்பு ஆரஞ்சு மிட்டாய். ஆரஞ்சு மிட்டாயை மெல்லுகையில் நாக்கின் பின்பகுதி சற்று உலர்ந்து போகும். தாகமெடுக்கும். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் நான் மெல்லத் தொடங்கினேன். என் தம்பியின் தலை இரண்டு வரிசை முன்னதாக தெரிந்தது. அப்பா பின் வரிசைகளுக்கருகே நின்று கொண்டிருப்பார். கூட்டம் குறைந்ததும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் எங்கு உட்கார்ந்திருக்கின்றனர் என்று தெரிந்து விடும் என்ற சிந்தனை சுமைத்தணிவை ஏற்படுத்தியது.

    பஸ் வாலாஜாபாத் டவுனுக்குள் நுழையும் போது பெரியவரின் மாடியிலிருந்து இறங்கி, அவர் காலுக்கு நடுவே நின்று கொண்டேன். “பரவாயில்லே தம்பி…உட்கார்ந்துக்கோ” என்றார். பஸ் ஸ்டாண்டுக்கு மிக அருகே  முன்னும் பின்னுமாக  பஸ்கள். என் பார்வை கடைகளையும் சாலையில் நகரும் மனிதர்களையும் வாகனங்களையும் நோக்கிக் கொண்டிருந்தது. எதிரில் ஒரு வீதி கடை வீதியுடன் இணைந்தது. அந்த வீதியில் அவ்வளவாக போக்குவரத்து இல்லை. தார் ரோட்டின் இரு மருங்கிலும் சாக்கடைகளுக்கு முன்னர் மண் தரை. ஜல்லிக் கற்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தன. அப்போது தான் அந்தக் காட்சியைப் பார்த்தேன். ஒரு சிறுவன் முஷ்டிக்குள் ஏதோவொன்றை இறுக்கிக் கொண்டு தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தான். அவன் முன்னால்  வந்த மாட்டின் பின்புறத்தை கிள்ளியதும் மாடு ஒதுங்கி அவனுக்கு வழிவிட்டது. அந்த பையன் அரை நிஜார் அணிந்திருந்தான். சட்டை அணியவில்லை. இரு பட்டிகள் அவன் அரை நிஜாரை தாங்கிப் பிடித்தன. சிறுவனின் முகத்தில் பவுடரா அல்லது சுண்ணாம்புப் பொடியா தெரியவில்லை. முகத்தில் திட்டுத்திட்டாக வெண்மை. அவன் தனியே ஓடிக்கொண்டிருக்கவில்லை. அவனை யாரோ துரத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் கவனிக்க சில வினாடிகள் பிடித்தன. அவனை துரத்துபவர் ஒரு  முதியவர். அவர் ஓட்டத்தில் முதுமை தெரியவில்லை. ஓர் இளைஞனின் வேகம் அவர் கால்களில். வேட்டி அணிந்திருந்தார். அவரும் சட்டை அணியவில்லை. வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். அவர் தலைமுடி செம்பட்டை நிறத்தினதாக இருந்தது. அவர் ஏதோ கத்திக்கொண்டே வந்தார். பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைவதற்காக காத்து நின்றிருந்த பஸ்களின் ஹார்ன்  சத்தம் காரணமாக துரத்துபவர் என்ன கத்தினார் என்று எனக்கு கேட்கவில்லை. தள்ளு வண்டிக்காரன் ஒருவன் இடையில் வந்ததால் பையன் ஓடும் வேகத்தை குறைக்க வேண்டியதாய் போயிற்று. செம்பட்டை முடிக்காரர் மிகவும் நெருங்கிவிட்டார். பையனின் தோள் பட்டியை பிடித்திழுத்தார். பையன் அவரிடமிருந்து சில தப்படிகள் தள்ளி ஓடினான். ஆனால் துரத்தி வந்தவர் மிக அருகில் வந்து விட்டார். பையனின் முதுகில் கையை வைத்து தள்ளினார். பையன் தொபுக்கடீறேன்று தரையில் விழுந்தான். சாலையோரத்தில் குவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் மேல் தான் பையன் விழுந்திருக்க வேண்டும். அவனுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நான் கவனிக்கவில்லை. தள்ளிவிட்ட செம்பட்டை முடிக்காரர் ஓரு  சலனமுமின்றி, எதுவுமே நடக்காதது போல  முதுகைத் திருப்பிக் கொண்டு  எந்த திசையிலிருந்து ஓடி வந்தாரோ அந்த திசை நோக்கி திரும்பி நடக்கலானார். அதற்குள் என் பஸ் நகர்ந்து வாலாஜா பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்துவிட்டது.

    பஸ்சில் இருக்கும் வேறு யாரும் சிறுவன் தள்ளிவிடப்படும் காட்சியை பார்க்கவில்லை என்று தோன்றியது. என்னை மடியில் உட்கார வைத்துக் கொண்டிருந்த பெரியவரும் பார்க்கவில்லையென்றே தோன்றியது. ரோட்டுக்கு நடுவில் எல்லோருக்கும் மத்தியில் நடந்த நிகழ்ச்சியை எப்படி பார்க்காமல் இருந்திருக்க முடியும். ஸ்தலத்தை விட்டு பஸ் நகர்ந்த பிறகு அங்கு என்ன நடந்திருக்கும்? சிறுவனுக்கு என்ன ஆயிற்று? ரத்தக் காயம் பட்டிருக்குமா? ஜல்லிக் கல் அவன் கண்ணை பதம் பார்த்திருக்குமா? ஒரு பலமான கல்லின் மேல் அவன் தலை மோதியிருக்குமா? அந்த ஆள் அப்படி ஏன் சிறுவனை மூர்க்கமாக தள்ளி விட வேண்டும்? யார் அந்த ஆள்? அந்த சிறுவன் என்ன பண்ணினான்? அவரிடமிருந்து சிறுவன் ஏதாவது திருடினானா? வன்முறைக் காட்சி என் மனதில் ஏற்படுத்திய அதிர்விலிருந்து எளிதில் மீளக் கூடியதாய் இல்லை. யாரோ துரத்திக் கொண்டு வருவது மாதிரியான கெட்ட கனவுகள், சிறுவனின் இடத்தில் என்னை கற்பனை கொண்டு சிறுவன் பட்டிருக்கக் கூடிய வலியை கற்பனை செய்து பார்த்தல் என்றவாறெல்லாம் என் கண்ணில் கண்ட காட்சியை வாழ்ந்து கொண்டிருந்தேன்.

    நாற்பது வருடங்களுக்குப் பின்னர் இன்று அக்காட்சியை நினைத்துப் பார்த்து தருக்க பூர்வ கற்பனையுடன்  காட்சியின் சூழலை பகுத்தாய்ந்து விரித்துக் கூறிவிட முடியும். ஆனால் அது வெறும் கற்பனையாக மட்டுமே இருக்கும். அந்த வயதில் எனக்கிருந்த முதிர்ச்சியில்  காட்சி என்னுள் ஏற்படுத்திய உணர்வலைகள் என்னைப் பொறுத்தவரையில் மட்டுமான நிஜம். கிண்டியில் வந்து நான் இறங்கும்  போது பிற பயணிகளும் என்னுடைய குடும்பத்தாரும் அவரவருக்கான யதார்த்தத்தில் தோய்ந்து  ஒரு பொது யதார்த்த உலகில் இருப்பதான  கற்பிதத்துடன் இறங்கியிருப்பார்கள்.           

    காட்சிகள் நம்முள் உச்ச பட்ச தாக்கத்தை உண்டு பண்ண வல்லன. காட்சிகளின் பொருள்படுத்தல் காட்சிக்கு முன்னதான சம்பவங்களின், பின்னதான சம்பவங்களின் பாற்பட்டது. காட்சி சார்ந்த சூழல் பற்றிய அறிதல் இல்லாமல் போகும் பொழுது நம்முள் வெவ்வேறு உணர்வு நிலைகள்  தோன்றியவாறு  இருக்கின்றன. அளவற்ற ஊகங்கள் வாயிலாகவும் அறிவார்ந்த ஆனால் போதிய தகவல்கள் இல்லாத பகுப்பாய்வுகள் வாயிலாகவும், அக்காட்சியைக் கண்ட போது நமக்கிருந்த மனநிலை நம்முள் எழுப்புவித்த உணர்வுகள் வாயிலாகவும், அக்காட்சி நெடுநாள் நம் மனக்கண்ணிலிருந்து நீங்காமல் இருக்கிறது. காலப்போக்கில் அக்காட்சியை நாம் மறந்துவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அது நினைவில் திரும்ப வரும் போது ஒரு சில நிமிடங்களுக்காவது முன்னர் ஏற்படுத்திய அதே தாக்கத்தை அதே உணர்வலைகளை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. காட்சியைக் கண்ட காலத்திற்குப் பிறகு நம் அனுபவ அறிவு எவ்வளவு முதிர்ந்திருந்தாலும் காட்சியின் பிண்ணனி பற்றிய அறியாமை ஒரு வித இயலாமைக்குள் நம்மைத் தள்ளி விடுவதை உணராமல் இருக்க முடிவதில்லை.

    +++++

    ஜூலியோ கொர்த்தசார் எழுதிய “Blow-up” சிறுகதையை நண்பர் ஒருவர் பரிந்துரைத்தார். முதன்முறை படித்த போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரி இருந்தது. சரியாகப் புரியவில்லை. ஆனாலும் கதை மேலும் படிக்கும் படி என்னைத் தூண்டியது. இரண்டாம் முறை படித்தேன். இணையத்தில் “Blow-up’ பற்றிக் கிடைத்த “reader”-களையும் வாசித்தேன். அவைகள் உதவிகரமாக இருக்கவில்லை.   நான்காவது வாசிப்பில் கதைப்பிரதியுடனான உறவு நெருக்கமானது. முழுமையான புரிதலை எட்டினேன் என்று சொல்ல முடியாது.  “முழுமையான  புரிதல் என்பதே ஒரு கற்பிதம் ; யதார்த்தம் பன்மைத் தன்மை பூண்டு பலவாறாக பிரிந்து கிடக்கிறது. ஒற்றைத் தன்மையும் தெளிவும் அதற்கில்லை” – இதைத்தான் கதை சொல்கிறதோ?

    வாலாஜாவின் வீதியொன்றில் ஒரு சிறுவன் தள்ளிவிடப்படும் காட்சி முதிரா மனநிலையில் என்னுள் ஏற்படுத்திய கொந்தளிப்பு மாதிரி கதைசொல்லி மிக்கேலுக்கும் நிகழ்கிறது. கொந்தளிப்பு அவன் கண்ணுற்ற சம்பவத்தாலா என்பது தெளிவாக கதையில் கூறப்படவில்லை. மிக்கேல் சம்பவத்தை  கண்ணுற்ற நாள் வேறு ; அவன் அதை நமக்கு சொல்லும் நாள் வேறு. இரண்டு நாட்களுக்குமிடையில் ஒரு மாத இடைவெளி இருக்கலாம் என்ற குறிப்பு கதையில் வருகிறது.  மிக்கேல்   தான் புகைப்படமெடுத்து என்லார்ஜ் செய்த ஒரு ஸ்டில்லைப் பார்த்துக் கொண்டே சம்பவத்தை விரித்துக் சொல்லும்  பாங்கில் அவனுக்கிருக்கும்   மனக்குழப்பம் வாசகரால் உணரத்தக்கதாய் இருக்கிறது. மிக்கேல் மூன்றாம் மனிதனின் கண்ணோட்டத்திலும் தன்மை நோக்கிலும் மாற்றி மாற்றி கதையைக் சொல்கிறான்.  ஒரு மாத இடைவெளியில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஏதோ நடந்திருக்க வேண்டும் – ஒரு விபத்து அல்லது வேறு ஏதோ ஒன்று காரணமாக மிக்கேலின் மனம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. அவன் சொல்லும் சம்பவத்துக்கும் அவன் மனக்குழப்பத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.

    ஒரு ஞாயிற்றுகிழமை காலை பாரீஸ் நகரில் இருக்கும் பூங்காவுக்கு கால்நடையாகச் செல்லும் மிக்கேல் அங்கே ஒரு சம்பவத்தை காண நேரிடுகிறது. மாது ஒருத்தி ஒரு  இளம் வாலிபனைப்   படுக்க அழைக்கும் காட்சி போல மிக்கேலுக்கு தெரிகிறது. முதலில் அங்கு நடப்பதை ஆர்வத்துடன் உற்று நோக்குகிறான். கையில் கொண்டு வந்த காமிராவையும் தயார் நிலையில் வைத்துக்கொள்கிறான். சாவித்துளையினூடாக குளியலறையை உற்று நோக்குபவனின் மனநிலைதான் அவனிடம். சம்பவம் நிகழுகையில் அவன் மனநிலை மாறுகிறது. அதை அவன் காட்சியின் மாற்றத்தோடு சம்பந்தப்படுத்திக் கொள்கிறான். வலிமையான அந்தஸ்தில் எளிமையானவற்றின் மேல் எடுத்துக் கொள்ளப்படும் உரிமைகள் சுரண்டல் என்றே கருதப்படும் என்கிறான் மிக்கேல். புகைப்படக் கருவியில்  அங்கு நிகழ்வதைப் படம் பிடிக்கும் போது ஏற்படும் “க்ளிக்” சத்தத்தைக் கேட்டவுடன் மாது சுதாரித்துக் கொள்கிறாள். கோபப்பார்வையுடன் மிக்கேலுடன் சண்டை போடுவதற்காக அவனை நெருங்குகிறாள். இவற்றையெல்லாம் காருக்குள் செய்தித்தாளொன்றை வாசித்தவாறு ஓர் ஆள் பார்த்துக் கொண்டிருக்கிறார். மிக்கேல் புகைப்படம் எடுக்குமுன்னரே அவரைக் கவனித்திருந்தாலும் கேமராவின் குவியத்தில் காரையும் அந்த ஆளையும் நிரப்பவில்லை. தன்னைப் போலவே பூங்காவின் காதற்காட்சிகளை பார்க்கும் ஒருவர் என்றே காரில் இருப்பவரைப் பற்றி மிக்கேல் எண்ணுகிறான். மாது மிக்கேலுடன் சண்டையிடும் நேரத்தில் காரிலிருந்து இறங்கி மிக்கேலை நோக்கி கார்க்காரரும் வருகிறார். அனுமதியில்லாமல் ஃபோட்டோ எடுத்தது தவறு என்று வாக்குவாதம் செய்கிறாள் மாது. இதற்குள் மாதுவின் வற்புறுத்தலுக்கு ஆளாகியிருந்த இளைஞன் “விட்டால் போதும்” என்பது மாதிரி அங்கிருந்து ஓடிவிடுகிறான்.  இளைஞனின் ஓட்டம் மிக்கேலுக்கு  திருப்தி தருகிறது. இளைஞனை தாம் காப்பாற்றிவிட்டோம் என்ற உவகை அவனுள்.

    மேற்கண்ட பத்தியில் உள்ளது போல மிக்கேலின் விவரிப்பு அத்தனை தெளிவாக இல்லை. விவரிப்பின் நடுவில் மேகங்கள் செல்வதையும் புறாக்கள் பறந்து செல்வதையும் குறிப்பிட்ட வண்ணம் இருக்கிறான். புறாக்கள் எங்கு பறக்கின்றன? அவன் பூங்காவில் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி மாதுவும் இளைஞனும் நின்றிருந்த மரத்தடிக்கு மேலே பரந்திருந்த ஆகாயத்திலா? ஒரு மாதம் கழித்து மிக்கேல் மொழிபெயர்ப்பு வேலையில்  மூழ்கியிருக்கும் போது மிக்கேலின் அறை ஜன்னலுக்கு வெளியே விரியும் வானத்திலா? “என்லார்ஜ்” செய்த புகைப்படம் உயிர்பெற்று அதில் தெரியும் வானத்தில் பறக்கும் புறாக்களா அவை?

    பெரிய “போஸ்டர்” அளவிற்கு “என்லார்ஜ்” செய்த பூங்கா சம்பவப் புகைப்படம் மிக்கேலின் அறையில்  தொங்குகிறது. ஒரு கடினமான “ஸ்பானிய” வார்த்தைக்குப் பொருத்தமான பிரெஞ்ச் மொழியாக்கத்தை யோசிக்கையில் அவன் கவனம் சிதறி “போஸ்டர்” புகைப்படத்தின் மேல் பதிகிறது.

    “புகைப்படத்தில் இருப்பவர்கள் தம் எதிர்காலத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். நான் ஐந்தாம் மட்டத்தில் இருந்த  ஓர் அறையில் இன்னொரு காலத்தின் கைதியாய்  இருந்தேன். அவர்கள் யாரென்று நான் அறிந்திருக்கவில்லை. அந்த மாது, அந்த மனிதன், அந்தப் பையன். அவர்கள் என் கேமராவின் கண்கள் படம் பிடித்த உறைந்த, இடையீடு செய்யவியலா  உருவங்கள் மட்டுமே” என்று மிக்கேல் நிர்க்கதியான மனநிலையில் கூறுகிறான்.

    காட்சி விரிகிறது. மிக்கேலின் முந்தைய விவரிப்பில் இல்லாத காட்சிகள் ஓடுகின்றன. புகைப்படத்தில் காட்சிகள் திரைப்படகாட்சிகள் போன்று ஓடுதல் கற்பனையா? அல்லது ஒரு மாத இடைவெளியில் மிக்கேலுக்கு ஏற்பட்ட ஏதோவோர் அதிர்ச்சியில்  குழம்பிப் போன  மன நிலையா? மேகங்களும் புறாக்களும் கதை நெடுக பறந்து கொண்டிருத்தல் யதார்த்தத்தை தாண்டி வெகுதூரம்  மிக்கேல் வந்து விட்டதை சுட்டுகிறதோ? மிக்கேல் புகைப்படத்தினுள் பிரவேசிக்கிறான்.

    அரைகுறை அணைப்பில் இருப்பதாக முந்தைய விவரிப்பில் சொல்லப்பட்ட மாது வாலிபனை மயக்குவது போல் இப்போது தோன்றவில்லை. அவளின் பார்வை காருக்குள் இருப்பவரின் மேல் படிந்திருப்பதை மிக்கேல் கவனிக்கிறான். அவர் ஏவியதால்  தான்  வாலிபனுடன் அவள் ஏதோ பேசுகிறாளோ? அவர் எதற்காக மாதுவை வாலிபனிடம் எவியிருப்பார்? மிக்கேலின் கேமராவின் “க்ளிக்” சத்தம் கேட்டவுடன் இந்த முறை அவனை நோக்கி வருவது அந்த மாது அல்ல. காரில் இருப்பவர். அவர் அருகில் வரும் போது மிக்கேல் அதிர்ந்து போகிறான். அவரின் கண்கள் மறைந்து கருங்குழியாகத் தெரிகிறது. கறுத்துப் போன அவரின் நாக்கு அசைகிறது. உருவங்கள் மறைந்து காட்சி கருங்குழம்பாகி….மிக்கேல் கண்களை மூடிக் கொள்கிறான்.

    பார்க்கும் விழைவு  மேலிட காட்சியைப் உற்றுப் பார்க்கத்  துவங்கிய மிக்கேல் விவரிப்பின் முடிவில் பார்ப்பதில் உவப்பில்லாதவனாகிறான். அவன் எதைப் பார்த்தான்? அவன் பார்த்ததை தெளிவாக சொல்ல முடியாமல் போனதன் காரணமென்ன? அவனால் சொல்ல முடியாது என்பதல்ல. அவன் ஒரு மொழிபெயர்ப்பாளன். மொழி அவன் வசப்படும். எனினும் இரண்டு விவரிப்பிற்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகளை எப்படி விளக்குவது? புறாக்கள் பறந்த வண்ணம்,  மேகங்கள் மிதந்த வண்ணம் இருக்கின்றன.

    பனி கவிந்த சாலையில் தெரியும் வாகன முன்விளக்குகள் உமிழும் ஒளிக்கற்றை கோடுகளாகப்  பிரிவதைப் போன்று  காட்சி இரு வேறு விதத்தில் பொருள் கொள்ளப்பட எது காரணம்? மிக்கேலின் மாறும் மனநிலையா? மன நிலை குழம்பிக் கிடப்பது தான் காரணமா? உறுதியாகக் சொல்லிவிட முடியாது. எதையோ பார்த்து விட்டு அதை ஜீரணிக்காமல் போனதன் விளைவாகவும் இருக்கலாம். முதல் விவரிப்பில் காரில் உட்கார்ந்திருந்தவர் பற்றி அதிகம் பேசப்படாமல், இரண்டாம் விவரிப்பில் அவரைப் பற்றி எதிர் மறையான சித்தரிப்பு வருகிறது. சாத்தானின் குறியீடாக அவர் கண்களும் நாக்கும் சித்தரிக்கப்படுகின்றன. “blow – up” என்ற ஆங்கில மொழிபெயர்ப்புக்கதையின் ஸ்பானிய மூலத்தின் தலைப்பு “Las babas del diablo”. இதன் அர்த்தம் “சாத்தானின் உமிழ்நீர்”. இதில் சாத்தான் யார்? புகைப்படத்தின் ஓரத்தில் தெரியும் காருக்குள் செய்தித்தாளுக்குப் பின்னால் உட்கார்ந்திருப்பவரா? அல்லது பெரிதாக்கப்பட்ட புகைப்படமா?

    பலவித, இணையான யதார்த்தங்களின் சாத்தியக்கூறை சிறுகதை பேசுகிறது. அந்த யதார்த்தம் உண்மையாக இருக்கலாம் அல்லது புனைவாக இருக்கலாம். கொர்த்தசாரின் புகழ் மிக்க சிறுகதைகள் எல்லாவற்றிலும் இந்த கருப்பொருள் காணப்படுவதாக சில இணையக்கட்டுரைகள் தெரிவித்தன. போட்டோவுக்குள்   உருவங்கள் நகர்வதை சித்தரித்தல் “முதன்மையான” யதார்த்தத்தின் சார்பின்றி ஒரு மாற்று யதார்த்தம் இருக்கிறது என்ற கருவை எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளலாம்.  இந்த மாற்று யதார்த்தத்தில் அவனும் அவனுடைய கேமராவும் பங்கு பெற்றிருக்கின்றன. இதில்  சமமுக்கியத்துவம் பெறும் இன்னோர் அம்சம்  மிக்கேலின் கண் முன்னம் நடந்த சம்பவத்தின் இருவிதமான பொருள் கொள்ளல். உதாரணமாக, ஒரே சமயத்தில் கவர்ச்சிக்காரி தன் முயற்சியில் வெல்வதாகவும் தோற்பதாகவும் மிக்கேல் அர்த்தப்படுத்திக் கொள்கிறான். இவ்வாறு குறைந்த பட்சம் இரண்டு வெவ்வேறு யதார்த்தங்களை (அதில் ஒன்று கற்பனையே என்றாலும்!) மிக்கேல் நிறுவிவிடுகிறான்.  ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தியக்கூறை, ஒன்றுக்கு மேர்ப்பட்டதான “உண்மையை” பரிந்துரைப்பதன் வாயிலாக, தருக்கபூர்வமாக நாம் நினைப்பது போல,  “உண்மையான” யதார்த்தம் என்பதை நிலைநிறுத்துதல் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதை கொர்த்தஸார் எடுத்துக் காட்டுகிறார். வாலாஜாவில் நடந்த நிகழ்வில் தனித்தனி யதார்த்தங்களில்  மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற குறிப்பு கிட்டியதைப் போல அதே மனிதன் பல்வேறு யதார்த்த நிலைகளில் இருப்பதற்கான சாத்தியக்கூறை “blow-up” எனக்கு சொற்களால் படம் பிடித்துக் காட்டியது.

    நன்றி : பதாகை

  • காணாமல் போனவன்

    யார் கண்ணிலும் படாத படி காணாமல் போய் விட வேண்டும் என்று பல முறை எனக்கு தோன்றியிருக்கிறது. முன்னர் இல்லாத வகையில் இம்முறை எண்ணத்தின் தீவிரம் அதிகமாய் இருந்தது. அதைச் செயல் படுத்தாமல் இருக்க முடியாது என்று தோன்றிற்று. என் இதயத்துக்கு நெருக்கமானவர்களின் பார்வையில் நான் படுவது நின்று போய் சில காலம் ஆகியிருக்கிறது. நான் தான் அதை உணராமலேயே இருந்திருக்கிறேன். மற்றவர்கள் கண்ணில் காணாமல் போனதும் என் மனப்பரப்பில் நிம்மதி பரவிற்று. நிம்மதி மட்டுமல்ல. அசாதாரண சுகமும். இதற்கு முன்னர் உணர்ந்திராத இலேசான தன்மையையும் அடைந்தேன்.

    என் தம்பி சதா பத்தாம் வகுப்பில் தோல்வியுற்று வீட்டில் இருந்து ஓடிய பிறகு அவன் ஒரு ஹீரோவாக ஆனான். சிறுவயதில் கடைசி பென்ச் நண்பர்களின் சகவாசத்தில் படிக்காமல் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமல் திரிந்து வந்தான் அவன். “அவிழ்த்து விட்ட கழுதை” “உதவாக்கறை” என்றேல்லாம் பட்டப் பெயர்கள் தாங்கி உலவினான். ஒருநாள் அவன் வீட்டிலிருந்து விலகி எங்கோ சென்று விட்டான். அவன் காணாமல் போனதும் வீட்டில் எல்லோரும் கவலைப்பட்டனர். ஊரெங்கும் அவனைத் தேடி நானும் என் தந்தையாரும் அலைந்தோம். தெரிந்த நண்பர்கள் எல்லோரிடமும் விசாரித்தோம். “பையனைக் கரித்து கொட்டியே வீட்டை விட்டு துரத்தியடிச்சுட்டீங்களே!” என்று அம்மா அப்பாவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நாள் கழித்து கோயம்புத்தூர் அத்தையிடமிருந்து கடிதம் வந்தது. (பதினைந்து பைசா தபாலட்டையில் கோழிக்கிறுக்கலான கையெழுத்தில்!) சதா ஒரு வாரம் அவர்கள் வீட்டில் வந்து விட்டு போனானாம். ஊருக்கு நலமுடன் திரும்பினானா என்று கேட்டு எழுதியிருந்தார்கள். தொடர்ந்து இது மாதிரி உறவினர்களிடமிருந்து கடிதங்கள் வந்த வண்ணம் இருந்தன. ஹைதராபாத் மாமா, ஜபல்பூர் பெரியப்பா, சென்னை பெரிய தாத்தா – இவர்களெல்லாம் கடிதம் எழுதினார்கள். வீட்டுக்கு வரும் கடிதங்கள் எல்லாம் “சதா இப்போது எந்த ஊரில் இருக்கிறான்?” என்பதை அறியும் ஆவலில் வாசிக்கப்பட்டன. சதா பற்றிய தகவல் வருவது நின்ற போதும் கவலையுணர்ச்சி ஏதும் எஞ்சியிருக்கவில்லை. பல வருடங்கள் கழித்து ரிஷி-முனி மாதிரி காடான தாடியுடனும் கூடவே ஒரு மணிப்பூர்க் காரியுடனும் வந்து என்னை சந்தித்தான். நான் அப்போது தான் பம்பாயில் குடியேறியிருந்தேன். என்னை விட நான்கு வருடங்கள் சின்னவனான சதா அந்த மணிப்பூர்க்காரியை “உன்னுடைய பாபி” என்று அறிமுகப்படுத்தினான். அவனுக்கு அப்போது ”பாபி” வந்திருக்கவில்லை. ஒரு காகிதத்துள் பொடியை போட்டுச் சுருட்டி சிகரெட்டாக புகைத்தான் சதா. அவன் பாதி புகைத்துவிட்டு அவளிடம் தருவான். அவளும் புகைப்பாள். சதாவும் மணிப்பூர்க்காரியும் இரண்டு – மூன்று நாட்கள் என்னுடன் தங்கியிருந்தார்கள். வீட்டை விட்டு ஓடிப்போன சதா இப்போதெல்லாம் பற்றி யாரும் கேட்பதில்லை. இந்தியாவின் ஒரு மூலையில் எங்கோ மணிப்பூர்க்காரியுடன் அவன் சுற்றிக் கொண்டிருப்பான் என்ற நம்பிக்கை குடும்பத்தில் இன்றளவும் நிலவுகிறது.

    சொந்தங்கள் விலகி தூரமாய்ப் போவது மாதிரி தான் காணாமல் போவதும். கொஞ்ச நேரம் தேடப்படுவோம். பின்னர் காணாமல் போன உண்மையை எல்லோரும் ஜீரணித்ததும் தேடுதல் கை விடப்படும். பாதிப்புக்குள்ளான நெருங்கிய உறவுகள் தத்தம் வாழ்க்கையைத் தொடர்ந்துவிடுவார்கள். மரணத்திற்கும் காணாமல் போதலுக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிலுமே உடம்பு இருப்பதில்லை. சிலரது நினைவுகளில் காணாமல் போனவர் நிறைந்திருக்கலாம். தான் விட்டுச்சென்ற வாழ்க்கையை எண்ணி காணாமல் போனவர் மருகாத வரை, மற்றவர்களின் நினைவுகளில் வருதலும் வராமல் இருத்தலும் அவருக்கு என்ன நட்டத்தை ஏற்படுத்தி விடக்கூடும்?

    வர்ஷா என்னைத் தேடுவாளா? எப்படித் தேடுவாள்? அவள் பக்க உறவு என்று யாரும் இல்லை. அவளை வளர்த்த பெரியப்பா குடும்பம் வெளிநாட்டில் இருக்கிறது. கிட்டத்தட்ட அனாதை போலத்தான். தர்மேஷ் என்னைத் தேடி அலைகிறானோ? காவல் நிலையத்து நடைமுறைகளைச் செய்து தருவது அவனுக்கு மிக எளிதாக இருக்கும். அவனே ஒரு போலீஸ் காரன் என்பதால். என் பக்கத்து ஃப்ளாட்டில் இருந்தான். ஒரு காலத்தில் என் நெருங்கிய நண்பனாக இருந்தவன். இப்போதெல்லாம் அப்படி இல்லை. அவன் வர்ஷாவுடன் பேசும் சமயங்களில் ஐந்தடி ஏழங்குல உயரமான நான் அவன் கண்களுக்கு காணாமல் போய் விடுகிறேன்.

    நான் எங்கிருக்கிறேன் என்பதை அவர்கள் இருவராலும் கண்டு பிடிக்கவே முடியாது. அவர்கள் தேடிக் கண்டுபிடிக்க முடியா தொலைவுக்குச் சென்று விடுவேன். அசைக்க முடியா நம்பிக்கை எனக்குள் வந்திருந்தது. இது வரை அப்படி நான் உணர்ந்ததில்லை. சுய ஐயம் நிரம்பிய மனிதனாய் இத்தனை காலமாய் உலவி வந்தேன். ஓர் இயந்திரம் போல. இயங்கிக் கொண்டிருத்தல் மட்டுமே எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்றெண்ணிக் கொண்டிருந்தேன். வர்ஷாவின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வது, என் ஆறு வயது மகன் மகேஷை வளர்த்து பெரிய ஆளாக்குவது – இவ்விரண்டையும் தவிர வேறெதுவும் என் இலக்காக இருக்கவில்லை. வர்ஷாவின் அபிலாஷைகள் என்ன என்பதை எவ்வளவு புரிந்து வைத்திருந்தேன் என்பது என்பது வேறு விஷயம். நம் குடும்பம், சிறு தேவைகள், சின்ன திருப்திகள் என்ற நடுத்தர குடும்ப அளவுகோலில் அளக்கப்பட்ட விழைவுகள் தாம் அவளுள் ஆரம்ப காலத்தில் இருந்தன. எது அவளை மாற்றியது? பம்பாய் எனும் ராட்சத நகரமா? அதன் இயந்திரத்தனமான ஓட்டமா? அல்லது என்னுடைய ஓட்டமா? பொருளியல் பகட்டு அல்லது சமூக அந்தஸ்து என்கிற மாயவலையில் அவள் சூழ்ந்திருக்கிறாள் என்ற என் கணிப்பு சரியா எனப் புரியவில்லை. என் கணிப்பு உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அவள் தரப்பு நியாயம் எனக்குப் புரியாமல் இல்லை. பெரியப்பா குடும்பத்தினரால் ஒரு வேலைக்காரி போல நடத்தப்பட்ட வாழ்க்கை ; இளம் வயதிலேயே தாய்-தந்தையரை இழந்தது என கிட்டத்தட்ட அனாதை போல் வளர்ந்த ஒருத்தி பாதுகாப்பின்மையில் தத்தளிப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை. அவளுடைய பாதுகாப்பின்மையை என்னால் ஏன் போக்க முடியவில்லை என்ற கேள்விக்கு என்னிடம் ஒரு விடையும் இல்லை. அவளிடம் என்னை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்ற தூண்டுதலை என்னால் கடைசி வரை களைந்தெறிய முடியாமல் போனது தான் எங்களுடைய விலகலை வேகப்படுத்தியதோ?. நான் அவளுக்கு ஏற்றவன் என்பதை நிலைநிறுத்த வேண்டும் என்ற ஒரே இச்சை அவள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஓர் இயந்திரமாய் என்னை மாற்றியிருந்தது. புதுப் புது வேலைகளாக மாறிய வண்ணம் இருந்தேன். நெடுங்காலம் வேலை பார்த்த பம்பாய் நிறுவனத்தில் வழங்கப்பட்ட சம்பளம் போதவில்லையெனச் சொல்லிக் கொண்டிருந்தாள். அதிக சம்பளத்துக்காக அடிக்கடி வேலை மாற்றம் செய்து கொண்டேன். கோஹ்லாப்பூரில் ஒரு பால் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை செய்தேன். குடும்பம் பம்பாயிலேயே இருந்தது. பின்னர் நாசிக்கில் சமையற் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனத்தில் இரண்டு வருடம். மாதம் ஒரு முறையோ அல்லது இரு மாதங்களுக்கொரு முறையோ என்றுதான் பம்பாய் வந்து குடும்பத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    வர்ஷா என்றால் மழை. சிறு வயதிலிருந்தே கண்டிப்பும் கட்டிறுக்கமுமாக வளர்க்கப்பட்ட எனக்கு என் வாழ்வின் மழையாக அவள் வந்தாள். அவளுள் நான் ஆனந்தமாக நனைந்த நாட்கள் உண்டு. ஆனால் அவளிடமிருந்து வெகு தொலைவு வந்து விட்ட எண்ணத்தை கோஹ்லாப்பூர் – நாசிக் தினங்கள் என்னுள் தோற்றுவித்தன. பம்பாய் வரும் நாட்களில் மகேஷும் என்னிடமிருந்து விலகிப் போவதை கவனித்திருந்தேன். மகேஷுடனான தூரத்தை நீக்கி விட வேண்டும் என்ற உந்துதல் அதிகமாயிற்று. ஆனால் நாசிக் வேலையைத் தூக்கி எறியும் தைரியம் வரவில்லை. என் பழைய பம்பாய் நிறுவனத்தை மீண்டும் அணுகி வேலை கேட்டேன். சம்பளத்தில் சமரசம் செய்து கொண்டேன். வர்ஷாவுக்கு சம்பள விஷயம் அவ்வளவு திருப்தி தரவில்லை. “நீங்க சரியான ஏமாளியா இருக்கீங்க. இப்போ பம்பாய்ல ஒண்ணா சேர்ந்து இருக்கறதா முக்கியம். செலவுகள் அதிகரிச்சுகிட்டே போகுதே அது உங்களுக்குத் தெரியலியா?” ஒரு சராசரி இல்லறத்தலைவியின் புலம்பல்களாக அதை எடுத்துக் கொண்டாலும் நான் பம்பாய் வராமல் இருப்பதைத்தான் இவள் விரும்புகிறாளோ என்ற சந்தேகம் பேயாக என்னுள் ஒட்டிக்கொண்டது.

    சொன்னதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே நாசிக் வேலையிலிருந்து “ரிலீவ்” ஆகி தங்கியிருந்த அறையைக் காலி செய்துவிட்டு பம்பாய்க்குப் புறப்பட்ட மாலை! பேருந்தில் ஏறியதும் மழை பெய்ய ஆரம்பித்தது. வீடியோ டெக்கில் “ஏக் தூஜே கேலியே” படம் போட்டுக் கொண்டிருந்தார்கள். விதவையாக வரும் சந்தியா என்கிற பாத்திரம் வாசு என்கிற பாத்திரத்துக்கு நடனம் பயில்வித்துக் கொண்டிருந்தது. பஸ்சுக்கு வெளியே நான்கு மணிக்கு இருக்க வேண்டிய வெளிச்சம் தொலைந்து போயிருந்தது. பேருந்து ஓர் இருட்டான அறைக்குள் நுழைந்து விட்டதோ என்னும்படி மேகங்களின் கருமை பகலை இருட்டாக்கியிருந்தது. மனதில் அளைந்த இனம் புரியா பயவுணர்வு! அதற்கான வெளிப்படையான காரணத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை. சொந்த வீட்டுக்குச் செல்லும் போது ஏற்படும் உற்சாகம் பல மாதங்களாக என்னுள் இல்லாமல் போனதை அதற்கு முன்னர் கூட அவதானித்ததுண்டு. உற்சாகமின்மை பயவுணர்வாக மாறிவிட்டதோ? ”பயமும் ஓர் எண்ணமாகத் தான் நம்முள்ளில் இருக்கிறது. எண்ணத்தை மாற்று ; உணர்வு மாறிவிடும்.” என்று சுய-உரையாடலில் ஈடுபட்டேன். கை முஷ்டியை இறுக்கிக் கொண்டேன்.

    குரூரமான க்ளைமாக்ஸுடன் படம் முடிவடைந்ததும் பஸ்ஸில் கொஞ்சம் அமைதி. கஸாரா காட்-டை பஸ் கடந்து பஸ் சமவெளியில் இறங்கியது. பாதையில் மழை ஈரம் கொஞ்சமும் இல்லை. கணவாயின் அந்தப் புறம் பெய்த மழை இந்தப் புறம் இல்லை. ஈரத்தின் சுவடின்றி மண் காய்ந்து கிடந்தது. ஒரே நிலப்பரப்பு. ஆனாலும் ஓரிடத்தில் மழை. வேறோரிடத்தில் மழையில்லை. எந்த இடத்தில் ஈரத்தரை முடிந்து ஈரமற்ற தரை தொடங்கியது என்பதைக் கவனிக்கவில்லை. பயண மும்முரத்தில் பாதையைக் கவனிக்காமல் விட்டது என் யதார்த்ததை பிரதிபலித்தது. வர்ஷாவுடனான என் வாழ்க்கையிலும் எப்போது ஈரம் விலகியது?

    செம்பூரில் வந்திறங்கிய போது ரொம்ப நேரமாகிவிட்டது. இரண்டொரு ஆட்டோ ரிக்‌ஷாக்காரர்களுக்கு முலுண்ட் வரை செல்ல மனமில்லை. ஆட்டோ கிடைத்து வீடு வந்து சேர்ந்த போது காம்ப்ளெக்ஸின் எல்லா ஃப்ளாட்டுகளிலும் லைட்கள் அணைக்கப்பட்டு காரிருளில் மூழ்கியிருந்தன. வாட்ச்மேன்கள் கேபினில் மட்டும் சின்ன பேட்டரி லைட் ஒளிர்ந்தது. இரண்டு கூர்க்காக்களும் விழித்திருந்தனர். ”லிஃப்ட் ரிப்பேர் சார்…உங்க ஃப்ளொர்ல இருக்கற தர்மேஷ் சாப் அணைச்சு வச்சிருக்க சொல்லியிருக்கார்” என்றான் ஒருவன். பின்னர் இன்னொருவனைப் பார்த்து “ஆறாம் ஃப்ளோர்ல லைட் எரியுதா பாரு” என்று சொன்னான். இருவரும் கேலிப் புன்னைகை புரிந்தது போல் தெரிந்தது. ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. வெளிச்சம் குறைவாக இருந்தது. கூர்க்காக்களின் புன்னகை ஒரு பிரமையாக இருக்கலாம்!.

    படியேற வேண்டியதாயிற்று. கையில் இருந்த லக்கேஜ்கள் கனத்தன. தர்மேஷின் அபார்ட்மெண்ட் கதவு திறந்து கிடந்தது. அவன் எப்போதுமே ஃப்ளாட்டின் கதவை திறந்து போட்டுக் கொண்டு தான் தூங்குவான். ஏன் அப்படி என்று கேட்டால் ”போலீஸ்காரன் வீட்டுக்கு எந்த திருடன் வர்றான்னு பார்க்கறேன்” என்று பதில் சொல்வான். தர்மேஷ் ஃப்ளாட்டைத் தொட்டடுத்த என் ஃப்ளாட்டின் பஸ்ஸரை அழுத்தியதும் உடனடி கதவு திறந்தது. ஏதோ கதவுக்குப் பின்னாலேயே இத்தனை நேரம் தயாராய் நின்றிருந்த மாதிரி!

    ஹால் விளக்கு போடப்படவில்லை. வர்ஷாவை இது வரை காணாத ரூபத்தில் கண்டேன். குட்டையான பாவாடை அணிந்திருந்தாள். அவள் அணிந்திருந்த பாவாடை கால்மூட்டைத் தொடவில்லை. என்னுடைய பழைய சட்டை ஒன்றை அணிந்திருந்தாள். புடைவையைத் தவிர வேறோர் உடையை அவள் அணிந்து பார்த்திராத எனக்கு ‘என் முன்னால் நிற்பது வர்ஷாவா இல்லை ; வேறு யாரோ மோகினியா’ என்ற எண்ணம் ஓடியது. பரபரப்பு உள்ளோடும் மனவெழுச்சியோடு ஃபளாட்டுக்குள் நுழைந்தேன். எப்போதும் படிய வாரி, பின்னிய கூந்தலுடன் இருப்பவள் அன்றிரவு குழலைக் கலைத்து விட்டிருந்தாள். பஸ் பயணத்தில் முகர்ந்த மழையின் வாசம் ஞாபகத்துக்கு வந்தது.

    “வரப்போறீங்கன்னு முன்னாடியே சொன்னா என்ன? ஒண்ணும் சாப்பிடறதுக்கு இல்ல….படுங்க…காலையில பாக்கலாம்” – குரலில் கடுமை தெறித்தது.

    அவள் ஒற்றைக் காலில் கொலுசு அணிந்திருந்தாள். இதுவும் புதிது. படுக்கையறையில் என்னிடமிருந்து கொஞ்சம் தள்ளி படுத்தாள். எங்கிருந்தோ ஜன்னலில் வந்த ஒளியில்….ஒளியா அல்லது இருட்டு பழகி விட்டதா…தெரியவில்லை…அவளின் சலவைக் கல் போன்ற வழவழு கால்கள் மின்னின. விரலால் அவள் கால்களை வருடும் ஆசை முளைவிட்டது. அவளிடம் பேச்சு கொடுத்தேன்.

    “மகேஷ் எங்க…காணல”

    “தர்மேஷ் வீட்டுல விளையாடிட்டிருந்தான்…அங்கயே படுத்துக் தூங்கிட்டான்….தர்மேஷ் அங்கயே தூங்கட்டும்னுட்டார்….”

    அவள் கவர்ச்சி என்னுள் ஏற்படுத்திய மயக்க நிலை என் சிந்தனையை ஊமையாக்கியது. சில நிமிடங்கள் தாம். திடுக்கென ஒரு கரு நிறப் போர்வையை எடுத்து உச்சி முதல் பாதம் வரை மூடிக் கொண்டாள். நடுநிசியின் அமைதியில் கீழே கேட்டுக்கருகே வாட்ச்மேன்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

    எட்டு மணி லோக்கலில் ஜனக்கடலுக்கு நடுவே நின்ற படி பயணம் செய்தேன். என் பழைய நண்பர்கள் – வைர-குரியர் படேல் பாயும் கூட்டுறவு வங்கியொன்றில் காசாளராக வேலை செய்யும் ஆரேகரும் என் கண்ணில் பட்டார்கள். என்னைப் பார்த்து கையாட்டி அவர்கள் உட்கார்ந்திருந்த கடைசி வரி இருக்கைகளுக்கருகே வரச் சொன்னார்கள். நான் தலையாட்டி “இங்கேயே நின்று கொள்கிறேன்” என்பது போல சைகை செய்தேன். வி டி ஸ்டேஷன் வந்ததும் அவர்கள் இறங்குவதற்கு முன்னமே இறங்கிச் சென்றேன். வேலையில் சேர இன்னும் ஒரு வாரம் இருந்தது. எனினும் கூட்டம் அலை மோதும் காலை எட்டு மணி ரயிலேறி “டவுனுக்கு” வருவதற்கு என்ன காரணம்? ”ஏதோ ஃபார்மாலிடிக்காக என்னை வரச் சொல்லியிருக்கிறார்கள்?” என்று பொய் சொன்னதும் “வீட்டிலேயே இருங்களேன். இன்னிக்கும் வெளியில் போகணுமா?” என்று வர்ஷா கேட்கவில்லை. முந்தைய வாரம் நண்பர்களுடன் ‘டவுனுக்குப்’ போன போது அக்பரல்லிஸுக்குப் பக்கத்தில் இருந்த ஓர் ஆடையகத்தில் உடை வாங்கியதாகவும் அதன் உயரத்தைக் குறைப்பதற்கென்று தைக்கக் கொடுத்திருப்பதாகவும், அதே ஆடையகத்துக்குப் போய் வாங்கி வருமாறும் ஒரு டோக்கனை என்னிடம் தந்தாள். வி டி ஸ்டேஷனுக்கு வெளியே டி என் ரோட்டின் இடப்புற நடைமேடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடித்துக் கொண்டும் மோதிக் கொண்டும் மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். நான் சாலைக்குள் இறங்கி ஓரமாக நடந்தேன். நியூ எம்பயர் தியேட்டரில் ஒன்பது மணிக்கே டிக்கெட் வாங்குவதற்காக மக்கள் காத்திருந்தனர். தியேட்டர் முகப்பில் இருந்த போஸ்டரில் அமிதாப்பச்சனின் இரு கைகளிலும் விலங்கிடப்பட்டிருந்தன. ஆக்ரோஷப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். போலீஸ் சீருடையிட்ட ப்ரான் கம்பீரமாய் நின்றிருந்தார். பம்பாய்க்கே உரித்தான காற்றின் வாசமும் ஈரப்பதமும் என் நாசியையும் சருமத்தையும் ஊடுருவின. காதணிகள் விற்பவர்கள், தர்பூசணிப் பழத்தையும் அன்னாசிப் பழத்தையும் வெட்டி துண்டுகளாக விற்பவர்கள், பழைய புத்தகக்காரர்கள் எல்லோரும் அதிசுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். ஃப்ளோரா ஃபவுண்டெனுக்கு வலப்புறம் இருந்த சாலையில் திரும்பி அக்பரல்லிஸ் பல்துறை அங்காடிக்கு இரண்டு கடைகள் தள்ளி இருந்த ஆடையகத்தை அடைந்தேன். டோக்கனைச் சரிபார்த்து திருத்திய ஆடையை என்னிடம் கொடுத்தார் கடைக்காரர். கூடவே துணிக்கான வவுச்சரையும் கொடுத்தார். வவுச்சருடன் பணம் செலுத்தியதற்கான கடனட்டை விற்பனை ரசிது “பின்” செய்யப்பட்டிருந்தது. வர்ஷாவிடம் கடனட்டை கிடையாது. கடனட்டைக்குச் சொந்தக்காரரின் பெயர் விற்பனை ரசீதில் ‘இம்ப்ரிண்ட்” செய்யப்பட்டிருந்தது. தர்மேஷ் வி கோரே.

    என் கால்கள் இலக்கின்றி நடந்தன. தெற்கு பம்பாயில் அன்று என் கால்கள் படாத இடம் இல்லை என்று சொல்லலாம். கேட்வே ஆஃப் இந்தியாவில் கடல் சற்று தள்ளிப் போயிருந்தது. லியோபோல்ட் கஃபேயில் வழக்கமாகக் காணப்படும் கூட்டம் இல்லை. கொலாபாவின் செருப்பு கடைகள், காலாகோடாவுக்கருகே வீதியின் இரு புறங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்கள், ஓட்டல் பிரெசிடெண்டின் வாசலில் காத்திருந்த கருப்பு-மஞ்சள் டாக்ஸிகள், ஒபெராய் ஓட்டலுக்கு வெளியே நின்றிருந்த சுற்றுலா பயணிகள், அரபிக்கடலோரத்தில் போடப்பட்ட பாறைகள், கைகளைப் பின்னிக்கொண்டும் தோள்களை உரசிக்கொண்டும் கடற்கரைச்சுவரில் உட்கார்ந்திருந்த ஜோடிகள், பிஸ்ஸா – ஆன் – தி – பே உணவகத்துக்கு வெளியே போடப்பட்டிருந்த இருக்கைகள் – கடந்து போகும் சித்திரங்களாக எல்லாம் நகர்ந்து கொண்டிருந்தன. நியூ எம்பயரில் ஓடும் திரைப்படமே ஈராஸ் தியேட்டரிலும் ஓடியது. காலியா. ஈராஸ் தியேட்டரை ஒட்டிய சிற்றுண்டி நிலையத்தில் கிஷோர் குமாரின் குரலில் “ஜஹான் தெரி யெ நஸர் ஹே” என்ற பாடல் அதிக கனபரிமாணத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. சர்ச்-கேட்டுக்குப் போகும் சப்-வேயில் இருந்த மருந்துக் கடையில் நுழைந்தேன். பின்னர் ஜன சமுத்திரத்தில் ஒரு புள்ளியாகக் காணாமல் போனேன்.

    +++++

    மற்றவர்கள் கண்ணுக்குப் படாமல் வர்ஷாவின் வாழ்க்கையில் நிகழ்வதை அறிய ஆவல் என்னைத் தூண்டவும், மீண்டும் நான் வாழ்ந்த வீட்டுக்குச் சென்று பார்க்க முடிவு செய்தேன். எண்ண ரூபமாய் அங்கு அலைந்து திரிவதில் என்ன தடை ஏற்படப் போகிறது? ஆறாம் ஃப்ளோரை அடைந்தேன். தர்மேஷ் ஃப்ளாட், என் பழைய ப்ளாட் – இரண்டின் கதவுகளும் திறந்து கிடந்தன. தர்மேஷ் வீட்டில் மகேஷ் இருக்கிறானா என்று பார்த்தேன். இல்லை. என் வீட்டின் ஹால் காலியாகஇருந்தது. அன்று வி டி போன போது நான் எடுத்துச் சென்றிருந்த தோல் கைப்பை ஜன்னல் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்தது. திறந்திருந்த ஜிப்பர் வழி நோக்கினேன். உடை, ரசீது, மருந்துக் கடையில் வாங்கிய மாத்திரைப் புட்டி எல்லாம் இருந்தன. புட்டி காலி. ஒரு மாத்திரை கூட மிச்சமில்லை. அறையில் ஊதுபத்தி நெடி. சுவரில் என் உருவம் தாங்கிய சட்டகத்துக்கு மாலை போடப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் மாலை. படுக்கையறையில் வர்ஷா அழும் சத்தம் கேட்டது. கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். அவள் அடிக்கடி அணியும் பச்சை நிறச் சேலை. அடர் சிவப்பு நிற ரவிக்கை. ரவிக்கைச் சட்டையின் கை முழங்கை வரை நீண்டிருந்தது. கட்டிலுக்கருகே தர்மேஷ் நின்றிருந்தான். அவன் கை அவள் உச்சந்தலை முடியை மென்மையாக வருடிக் கொண்டிருந்தது. அவள் தன் முகத்தை அவன் இடுப்பில் புதைத்தவாறு அழுது கொண்டிருந்தாள். கணவாய்க்கு ஒரு புறத்தில் பெய்த மழையில் கணவாயின் மறுபுறம் நனையவில்லை. மற்றவர்கள் கண்ணுக்கு மட்டும் காணாமல் போயிருந்த நான் எனக்கும் காணாமல் போகும் சமயம் வந்து விட்டது. ஊதுபத்திப் புகைக்குள் புகுந்து காணாமல் போனேன்.

    +++++

    கருங்கற்கள் குவியலின் மேல் சாய்ந்த படி கண்ணயர்ந்திருந்தேன். முதுகுப் புறம் சில கற்களின் கூர்மையான முனைகள் குத்தின. கண்களைத் திறந்தேன். சமிக்ஞை கோளாறின் காரணமாக கௌஹாத்தி செல்லும் ரயில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நின்றிருந்தது. ரெய்ப்பூர் நகரம் தாண்டி ஏறத்தாழ ஐம்பது கிலோமீட்டர் தூரம் கடந்திருந்தது. என்னைப் போலவே பொது வகுப்பில் அமர்ந்திருந்த வேறு பயணிகளு ரயிலிலிருந்து இறங்கியிருந்தனர். கிழவி ஒருத்தி கொய்யாப்பழத் துண்டுகளைக் கூவி விற்றுக் கொண்டிருந்தாள். ஒரு சின்னப் பையன் தண்ணீர் விற்றுக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து ஐந்து பைசாவுக்கு ஒரு கோப்பை தண்ணீர் வாங்கி முகம் கழுவிக் கொண்டேன். ரயில் இப்போதைக்கு கிளம்பாது போலிருந்தது. அந்த ரயிலை விட்டுவிடுவது என்று முடிவு செய்தேன். தண்டவாளத்தை ஒட்டிய வயலில் மெதுவாக இறங்கினேன். வரப்பு வழியாக நடந்து ஒரு கிராமத்தை அடைந்தேன். கிராமத்தினுள் மூடிக்கிடந்த தபாலாபீஸைக் கடக்கையில் எனக்கு சதாவின் ஞாபகம் வந்தது. அவன் போய்ச் சென்று தங்கிய இடங்களிலிருந்தெல்லாம் எங்கள் உறவினர்கள் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்கள். வர்ஷாவுக்கு கடிதம் போட்டு என் நலத்தைத் தெரிவிக்கும் வாய்ப்பை நான் யாருக்கும் கொடுக்கவில்லை.

    நன்றி : சொல்வனம்

  • வருடம் முடிகிறது

    சக்கரவாளம் கட்டுரைத் தொடர் இருபத்தியெட்டு இடுகைகளுடன் நிற்கிறது. கடும் அலுவலகப் பணிச்சுமை காரணமாக தவிர்க்க முடியாத இடைவெளி ஏற்பட்டுவிட்டது. கட்டுரைத்தொடரை மே மாதத்துக்குள் எழுதி முடித்துவிட வேண்டும்! பார்ப்போம் நடக்கிறதா என்று!

    இவ்வலையில் பதியப்பட்டிருந்த இருபது சிறுகதைகளை நீக்கி விட்டேன். அச்சிறுகதைகளை  எல்லாம் ஒரு தொகுதியாக காலச்சுவடு நிறுவனம் வெளியிடவிருக்கிறது. தொகுதியின் தலைப்பு – டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில். அச்சிடப்பட்டவுடன் புத்தகத்தின் முகப்புப் பக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

    இவ்வருடம் இரண்டே இரண்டு சிறுகதைகள் தான் எழுதினேன். வரும் வருடத்தில்  அதிக எண்ணிக்கையிலான சிறுகதைகள் எழுத வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.

    இரண்டு நண்பர்களுக்கு என் நன்றியை நான் அவசியம் தெரிவிக்க வேண்டும் –  நட்பாஸ் மற்றும் ஸ்ரீதர் – என் கட்டுரைகள் பற்றியும் கதைகள் பற்றியும் தம் கருத்துகளைப் பகிர்பவர்கள். மின்னஞ்சல் வாயிலாக அடிக்கடி அவர்களை தொந்தரவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். சலிப்பு காட்டாமல் ஒவ்வொரு முறையும் படைப்பு பற்றிய குறை-நிறைகளை சொல்லுவார்கள். அவர்களின் மாறாத ஊக்கம் தான் என் முதல் சிறுகதைத் தொகுதி வரை என்னை வழி நடத்தியிருக்கிறது. இத்தனைக்கும் இருவரையும் நான் சந்தித்தது கிடையாது. 2016 – இல் இவ்விரு நண்பர்களையும் சந்தித்து விட வேண்டும்.

    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

     

    Capture

  • மேகங்களுக்கு அப்பால் நீல வானம்

    ஹரி பார்த்திக்கு சொன்னது :

    “இன்று காலை தில்லியிலிருந்து கிளம்பிய போது சுசிதாவும் அதே விமானத்தில் வருகிறாள் என்று எனக்கு தெரியாது. இருவரும் சேர்ந்து ஒரே தொழிற் கண்காட்சிக்கு செல்கிறோம் என்றாலும் சுசிதா என்னுடன் பயணம் செய்ய மாட்டாள் என்று தெரியும். நானும் என் பயண விவரங்களை அவளுக்கு தெரிவிக்கவில்லை. கண்காட்சித் திடலுக்கு வந்த பின்னர் போனில் தொடர்புகொள்வதாக சொல்லிவிட்டேன்.

    நேர்முகத்துக்குப் பிறகு பணியமர்த்தப்படும் தகுதி சுசிதாவுக்கில்லை என்று நாம்இருவருமே பரிந்துரைத்தோம். ஆனால் நேர்முகமே கண்  துடைப்பு என்று நமக்கு பின்னால் புரிந்தது. உயர் அதிகாரி நம் பரிந்துரையை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பணியில் நியமித்ததோடு மட்டுமின்றி சுசிதாவுடைய வேலையின்  மேற்பார்வைப் பொறுப்பையும்  நான் மறுதலித்தும் என் தலையில்  திணித்தார். மேற்பார்வை எல்லாம் சும்மா பேச்சுக்காக ! அதிகாரப் படிநிலையும் இல்லை. ஒன்றும் இல்லை. சுசிதா மணிக்கணக்கில் அதிகாரியின் அறையே பழியென்று கிடக்கிறாள். மருந்துக்கும் கூட அலுவல் சம்பந்தப்பட்ட ஓர் ஆலோசனைக்கும் அவள் என்னிடம் வருவதில்லை. சொல்லப்போனால் நான் அதைப்பற்றி கவலையும் படவில்லை.

    பாதுகாப்பு பரிசோதனை முடித்து புறப்பாட்டு அழைப்புக்காக காத்திருந்தேன். அதிகாலை பொழுதின் தூக்கக்கலக்கத்தை காபி குடித்து முறிக்க முயன்று கொண்டிருந்தேன். “ஹை ஹரி” என்று யாரோ என் தோளைத் தட்டினார்கள். திரும்பிப்பார்த்தால் சில வருடங்களுக்கு முன்னர் நான் டேனிஸ்கோவில் வேலை பார்த்த நாட்களில் என்னுடன் வேலை பார்த்த ஆதித்யா. அவன் இப்போது டி எஸ் எம்-மில் பெரிய பொறுப்பில் பணி புரிகிறான். பெரிதாக அனுபவமோ விஷய ஞானமோ இல்லாதிருந்தும், சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்கும் அதிர்ஷ்டம் அவனுக்கிருந்தது. என்னை விட மூன்று மடங்கு சம்பளம் வாங்குகிறான். பெரிய மனித தோரணை அவனுடைய உடல்மொழியில் மட்டுமில்லாமல் அவன் வாய்மொழியிலும் ஒட்டியிருந்தது.

    நல விசாரிப்புகள், வணிகக் கிசுகிசுக்கள் என வழக்கமான விஷயங்களைப் பரிமாறிக்கொண்ட பிறகு ஆதித்யா சுசிதா நம் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருப்பதைப் பற்றி கேட்டான். நான் சிறிது துணுக்குற்றேன். இவனுக்கு எப்படி அவளைத் தெரியும்? அவள் உணவுத்தொழிற்துறைக்கு புதிதாயிற்றே! என் சிந்தனையைப் படித்துவிட்டவன் மாதிரி சுசிதாவை அவன் எப்படி அறிவான் என்பதற்கு விளக்கம் கொடுத்தான். சுசிதாவின் கணவர் ஆதித்யாவின் குடும்ப நண்பராம். நான் அதிகம் எதுவும் சொல்லவில்லை. “ஆம் சுசிதாவின் என் அணியில் தான் இருக்கிறாள். சேர்ந்து இரு மாதங்கள் ஆகின்றன. எப்படி வேலை செய்கிறார் என்பது போகப்போகத் தான் தெரியும்.”

    ஆதித்யாவும் நான் பயணம் செய்யவிருந்த விமானத்தில் மும்பை வருகிறானாம். இருவரும் சேர்ந்தே விமானம் ஏறினோம். எனக்கு இரு வரிசை முன்னர் ஒரு ஜன்னலோர இருக்கையில் ஆதித்யா அமர்ந்தான். அவனுக்கு பக்கத்துக்கு இருக்கை கொஞ்ச நேரம் காலியாக இருந்தது. எல்லோரும் ஏறிய பிறகு கடைசியாக விமானத்துள் சுசிதா நுழைந்தாள். நான் உட்கார்ந்திருந்ததை அவள் கவனித்ததாக தெரியவில்லை. ஆதித்யாவைப் பார்த்ததும் புன்னகை பூத்தவாறே அவனுடைய பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

    என் பார்வை அவர்கள் மீதே இருந்தது. ஒருவர் மீது  ஒருவர் இழைந்த வண்ணம் அவர்கள் நெருக்கமாய் பயணித்ததை கண்ட போது இரு குடும்ப நண்பர்களின் பரிச்சயம் போல இருக்கவில்லை. சுசிதா ஆதித்யாவின் தோள் மீது சிரத்தை புதைத்துக் கொண்டாள். தன் கரத்தை ஆதித்யாவின் கரத்தோடு கோர்த்துக் கொண்டாள். கொஞ்ச நேரத்துக்கு ஆதியாவின் கரங்கள் சுசிதாவின் தோள்களின் மேல் இருந்த மாதிரியும் இருந்தது.

    என்னை சந்தித்ததை ஆதித்யா நிச்சயம் சொல்லியிருப்பான். சுசிதா ஒருமுறை கூட தன் முகத்தை திருப்பி பின் வரிசைகளை பார்க்கவில்லை. பாத்ரூம் செல்வது மாதிரி நடந்து அவர்களைக் கடக்கும் போது அவர்கள் இருவரையும் கைத்தொலைபேசியின் காமிராவில் சிறைப்படுத்திவிடலாமா என்ற குழந்தைத்தனமான எண்ணம் தோன்றி மறைந்தது.

    விமானம் தரையை தொட்டு கதவுகள் திறக்கப்பட்டனவோ இல்லையோ சுசிதா அவசர அவசரமாக முன்புறம் சென்று முதலாம் வரிசையில் உட்கார்ந்தவர்கள் இறங்கும் முன்னர் இறங்க சென்று விட்டாள். நான் மெதுவாக இறங்கி ‘கோச்சில்’ ஏறி டெர்மினலை அடைந்தேன். பயணப் பேட்டிக்காக நான் காத்திருந்த போது ‘ஹலோ சார்’ என்ற படி சுசிதா அருகே வந்தாள்.

    சற்று தள்ளி நின்றிருந்த ஆதித்யா “ஸீ யூ” என்று என்னுடன் கை குலுக்க  அருகே வரவும், சுசிதா தற்செயலான சந்திப்பைப் போல “ஆதித்யா சார் நீங்களா? மும்பைல? பார்த்து எத்தனை நாளாச்சு ? ஒரு வருஷத்துக்கு மேலாச்சு!  முடியெல்லாம் கூட கொட்டிப் போயிடிச்சு…” என்று சொல்லி பல்வரிசையை காட்டினாள். என் பெட்டி பெல்ட்டில் வரவும் அதை எடுத்துக் கொண்டேன். “என்ன சுசிதா, ஆதித்யாவுக்கு முடி கொட்டிடுச்சுன்னு இப்பதான் தெரிஞ்சுதா ? ஒன்றரை மணிநேரமா அவர் பக்கத்துல உக்கார்ந்த போது பார்க்கலியா?” என்று நக்கலாகச்  சொன்னேன். இருவரும் சில கணங்களுக்கு அசட்டுப் புன்னகை புரிந்தவாறு நின்றிருந்தார்கள். ஆதித்யா அவ்விடத்திலிருந்து அகன்றான்.

    விமான நிலையத்துக்கு வெளியே கருப்பு-மஞ்சள் டாக்சியைப் பிடித்து கோரேகாவ்ன்-இல் இருக்கும் தேசிய பொருட்காட்சி மையத்துக்கு செல்லும் வழியெல்லாம் சுசிதா ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவளின் முகபாவம் எப்படி இருந்தது என்றும் தெரியவில்லை. அவள் முன் சீட்டில் ஓட்டுனருக்குப பக்கத்திலும் நான் பின் சீட்டிலும் உட்கார்ந்திருந்தோம்.”

    பார்த்தி சொல்கிறான் :

    “சுசிதாவும் ஹரியும் பொருட்காட்சி மையத்துக்கு வருவதற்கு முன்னரே நானும் இன்னொரு சக-ஊழியரும் சாவடியைத் தயார் செய்து வைத்திருந்தோம். ஹரி வந்ததும் வராததுமாக என்னை காலை சிற்றுண்டி சாப்பிட அழைத்தான். பொருட்காட்சி மையத்துக்கு வெளியே இருந்த ஓர் உடுப்பி ஓட்டலில் இட்லி சாப்பிட்டோம். ஹரி விமானப் பயண அனுபவத்தைக் சொன்னதும் உரக்க சிரித்தோம். கிண்டலும் கேலியுமாக பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் தெரிவு செய்யாத சுசிதாவை உயர் அதிகாரி நியமித்ததை ஒரு வித கசப்புணர்வுடன் சகித்துக் கொண்டிருந்த எனக்கு  ஹரி சொன்ன  சம்பவம் மலிவான மகிழ்வுணர்வை ஏற்படுத்திற்று.   புறச்செருகல்கள், இடைச்செருகல்கள், ஊகங்கள், மூர்க்கமான கற்பனைகள் என்று ஹரி சம்பவத்துக்கு கண்ணும்  காதும் இட்டு ஒரு கதாகாலட்சேபனை செய்பவன் போல் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்தேன்.”

    சுசிதா பார்த்திக்கு சொன்னது :

    “பெண்களைக்  குறைவாக எடை போடுபவர்களை சந்திப்பது எனக்கொன்றும் புதிதல்ல. பெண்களை கையாலாகாதவர்கள் என்று நினைக்கும் மனப்போக்கு எல்லா ஆண்களிடமும் துளியேனும் இருக்கிறது. ஹரியிடம் அது கொட்டிக்கிடந்தது. அவனுடன் வேலை பார்த்த ஒரு நாளும் நான் வசதியாக உணர்ந்ததில்லை. என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக அவன் பேசி வந்தது என் காதில்  எட்டாமல் இல்லை. ஆனாலும் கண்ணியக் குறைவிலாமல் பேசியும். முடிந்த வரை மூத்த ஊழியருக்கு காட்டவேண்டிய மரியாதையுணர்வுடனும் பழகி வந்ததை ஹரி பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அவனுக்கு என் மேலிருந்த  வெறுப்பு அவனுடைய நிதானவுணர்ச்சியை இழந்த சம்பவம் ஒன்று சென்ற வருடம் நடந்தது.

    உங்களுக்கு ஞாபகம் இருக்கும்! போன வருடம் மும்பையில் ஒரு பொருட்காட்சியில் பங்கு கொண்டோமே, அப்போது நானும் ஹரியும் ஒரே விமானத்தில் வந்தோம். அதற்கு அடுத்த நாள் நான் உங்களிடம் அது பற்றி ஹரி ஏதும் சொன்னானா  என்று கேட்டேன். நீங்கள் ‘எதுவும் சொல்லவில்லை’ என்று சொன்னீர்கள். ஹரியும் அதே விமானத்தில் பயணம் செய்யப்போகிறான் என்று உண்மையில் எனக்கு தெரியாது.

    டி எஸ்  எம்-மில் வேலை பார்க்கும் என் நண்பர் ஆதித்யாவை ஒரு முறை உங்களுக்கு அறிமுகம் செய்தி வைத்தேனில்லையா? நான் வேலை பார்த்த முதல் நிறுவனத்தில் அவர் என் அதிகாரியாக இருந்தார். நான் பிறந்து வளர்ந்த ஹரித்வார் தான் அவருக்கும் சொந்த ஊர். நாங்கள் நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் முன்னதாக ஆதித்யாவுடன் போனில் பேசுகையில் நாங்களிருவரும் ஒரே விமானத்தில் மும்பை செல்லப்போகிறோம் என்று தெரிந்தது. இருவரும் பக்கத்து இருக்கைகளில் உட்காரும் படியாக இருக்கைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.

    நான்கு வரிசை தள்ளி ஹரி உட்கார்ந்திருக்கிறான் என்று ஆதித்யா எனக்கு சொன்னார். அதற்குள் விமானம் கிளம்பி விட்டதால் டெர்மினலில் ஹரியை சந்திக்கலாம் என்று விட்டுவிட்டேன். ஹரியுடன் அவர் நடத்திய உரையாடல் பற்றியும் ஆதித்யா என்னிடம் சொன்னார்.

    ஹரிக்கு நானும் ஆதித்யாவும் நண்பர்கள் என்று தெரியாது. ஒரு முன்னாள் சக-ஊழியர் என்ற அடிப்படையில் ஹரி மனந்திறந்து என்னைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதை ஆதித்யாவிடம் பிட்டு வைத்து விட்டான்.

    ‘விற்பனை முன்னனுபவமும் இல்லை ; உணவுத்துறை நிறுவனத்தில் பணி  புரிந்ததும் இல்லை. வாடிக்கையாளரிடம் எப்படிப் பேசுவது என்ற இங்கிதமும் தெரியவில்லை. இவளைப் பார்த்துக்கொள் என்று என் தலையில் கட்டி விட்டார் என் உயர் அதிகாரி. பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறாள் என்றால் தனக்கு கீழ் வைத்துக் கொள்வது தானே. ஒன்றை ஒத்துக் கொள்ள வேண்டும். கவர்ச்சியான உடை அணியும் திறமை அவளிடம் இருக்கிறது’

    ஒரு செக்சிஸ்டின் வக்கிரம் மற்றும்  சமநிலைப் பார்வையுடன்  ஒருவரைக் கணிக்கும் திறமையற்று தோல்வியடைந்த ஒரு மேலாளரின் மனநிலை – இரண்டும்  கலந்த கருத்தை என் நண்பரிடமே பகிர்ந்து கொண்ட ஒரு முட்டாள் அவன். ஆதித்யா பகிர்ந்து கொண்ட விஷயம் என்னுள் சினத்தை உண்டு பண்ணிற்று. தேர்ந்தெடுத்த கெட்ட வார்த்தை உரிச்சொற்களால் ஹரிக்கு என் மனதில் அர்ச்சனை செய்தேன். என் முக வாட்டத்தை கண்ட ஆதித்யா ஆறுதல் தரும் வார்த்தைகளால் ஹரியின் அசட்டுத்தனத்தை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டார். சிறிது சமாதானமடைந்ததும் எங்கள் பேச்சு வேறு திசைகளில் திரும்பிவிட்டது.

    டெர்மினலில் பெட்டிகளை சேகரிக்கும் பெல்ட்டுக்கருகில் ஹரியை சந்தித்தேன். ஹரியிடமிருந்து விடை பெற்றுக்கொள்ள அந்த சமயம் அங்கு வந்த ஆதித்யாவையும் அங்கு எதேச்சையாய் சந்தித்ததைப் போல காட்டிக்கொண்டேன். எத்தனை கோபமிருந்தாலும் கண்ணியமாக தன்  தலையை காப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்பை நானே அவனுக்கு வழங்கினேன். என்னுடைய நாகரிக நடத்தையை அவன் புரிந்து கொள்வான் என்ற எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஏனென்றால் நாகரிகம் தெரிந்தவர்களால் தான் அதை புரிந்து கொள்ளமுடியும்.

    டாக்சியில் கொரேகாவ்ன் போகும் போதும் என் எரிச்சலை வெளிக்காட்டாமல் சாதாரணமாக பேசினேன். ஆதித்யாவுக்கு வயதான தோற்றம் வந்துவிட்டது எனவும் வழுக்கைக் கோடு இன்னும் மேலேறிச்  சென்றுவிட்டது எனவும் சொல்லிக் கொண்டு வந்தான். அவன் பேசுவதை கேட்பதில் ஆர்வமில்லை என்றாலும் சிரிப்பது போல் பாவனை செய்தேன்.”

    பார்த்தி சொல்கிறான் :

    ஆறு மாதம் முன்பு, ஹரி வேலையை ராஜினாமா செய்து விட்டு செல்லும் முன்பு, உடுப்பி ஓட்டலில் ஹரி சொன்ன கதையை கேட்டு உரக்க சிரித்தது எனக்கு ஞாபகம் வந்தது. சுசிதா விவரித்த சம்பவத்தில் டாக்சியில் அவள் சிரித்துக் கொண்டே வந்ததற்கும் நான் சிரித்துக்கொண்டே ஹரி சொன்னதை கேட்டதற்கும் வித்தியாசம் இருக்கிறதா? ஆறு மாதத்தில் ஏற்பட்ட படிநிலை மட்ட மாறுதல்கள் இன்று நிறுவனத்தில் என்னை உயர் அதிகாரியாக ஆக்கியிருக்கிறது. அதன் காரணமாக வாடிக்கையாளரொருவரை  காண்பதற்காக சுசிதாவுடன் ருத்ரபூர் செல்லுகையில் நடந்த உரையாடலின் போது விமான சம்பவத்தின் இன்னொரு கோணம் எனக்கு தெரிய வந்தது. இதே சம்பவத்தைப் பற்றி ஆதித்யா என்ன சொல்லக்கூடும்? ஆதித்யா எனக்கு தெரிந்தவரில்லை. அவர் கோணம் எனக்கு தெரிய வாய்ப்பேயில்லை.

    அவசர அவசரமாக ஹரி சிற்றுண்டிக்காக என்னை வெளியே அழைத்துக் சென்றதும், அதே பொருட்காட்சியின் போது  ‘ஹரி ஏதேனும் சொன்னாரா?’ என்று சுசிதா என்னிடம் கேட்டதும், சுசிதாவுடனான  உரையாடலின்  வழியை கற்பிதமான முக்கியத்துவத்தைக் கொண்டு நானே அடைத்துவிட்டதும், மாதங்கள் கழிந்த பின்னர் ஹரி நிறுவனத்தில் இல்லாது போன பின்னர் சுசிதாவின் கோணம் எனக்கு தெரிய வருவதும் என விமான சம்பவம் தறுவாய், சூழல் மாற்றங்களுக்கிடையில் புதுப்புது  நிறங்களுடன், புதுப்புது அர்த்தங்களுடன்  வெப்ப நீரூற்றைப்போல் கொந்தளித்தவாறிருக்கிறது.

    பார்த்தி பின்னொரு சமயம் ஒரு வலைதளத்தில் வாசித்தது :

    என் தோழி S-இன் வரவுக்காக விமான நிலையத்தில் காத்திருந்தேன். அதிகாலை புறப்படும் விமானத்தில் நான் மும்பை செல்கிறேன். S-ம் மும்பை செல்கிறாள். அவள்  செல்வது தன் நிறுவனம் பங்கு கொள்ளும் கண்காட்சியில் கலந்து கொள்ளச் செல்கிறாள். நான் மும்பை செல்கிறேன் என்று சொன்ன போது S-இன் கணவர் எனக்கு S மும்பை செல்லும் விஷயத்தை தெரியப்படுத்தினார். S-ம் நானும் பக்கத்து இருக்கைகளில் உட்காருமாறு  முன்பதிவும் செய்து கொடுத்தார்.

    ’நான் கிளம்ப தாமதமாகிவிட்டது ; நீ செக்-இன் செய்து கொள் ; சிறிது நேரத்தில் அங்கு வந்து சேருகிறேன்’ என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். விமான நிலையத்துக்கு வந்து செக்-இன் செய்துவிட்டு பாதுகாப்பு பரிசோதனைக்கான வரிசையில் எனக்கு முன்னதாக H நின்றிருந்தான் ; H என் பழைய பரிச்சயம்.  சில வருடங்கள் முன்னால் நானும் H -ம்  ஒரே நிறுவனத்தில் வேலை செய்திருந்தோம். அவன் கொஞ்சம் குண்டாக கொழுகொழுவென்று இருந்தான். அவன் அங்கவளைவுகளை  அவன் வித்தியாசமாக நினைக்காத படி பார்த்துக்கொண்டே சில நிமிடங்களுக்கு பேசிக் கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன்னர் என் வாழ்வில் நடந்தேறிய அதிரடி நிகழ்வுகளைப் பற்றி அவன் இன்னும் கேள்விப் படவில்லை போலும். கேள்விப் பட்டிருந்தால் என்னைப் பார்த்தும் பார்க்காதவன் போல் கடந்து சென்றிருக்கலாம்.

    “அலமாரியில்  இருப்பவர்கள்”  என்ற ஆங்கிலச் சொற்றொடர் எத்துனை பொருத்தமானது. இருண்ட அலமாரிக்குள் தாழ் போட்டுக்கொண்டு மூச்சுத் திணறியபடி பல ஆண்டுகள் இருந்துவிட்டேன். நடுவில் பெற்றோரின் வற்புறுத்தலை தட்ட முடியாமல் திருமணம் செய்து கொண்டேன். முதல் வருடம் ஒரு மாதிரி சமாளித்தேன். மனைவி ஒரு வித்தியாசத்தையும் கண்டு பிடிக்கவில்லை. அவளுக்கு பாலுறவில் விருப்பம் குறைவாக இருந்தது அல்லது நானாகவே அப்படி நினைத்துக் கொண்டேன். ஆடவர்கள் மேல் ஈர்ப்பு இருந்தாலும் திருமண உறவில் இருந்தவரை ஒழுக்கம் பிறழாமல் பற்றுறுதியுடனேயே இருந்து வந்தேன். இரண்டாவது வருடம் இடைவெளி பெருக ஆரம்பித்தது. விவாகரத்து கேட்டாள். விலகிக் கொண்டோம். விவாகரத்து பெறும் சமயத்திலும் என் (முன்னாள்) மனைவிக்கு என் பாலியல் சார்பு பற்றிய ஐயம் தோன்றவில்லை என்றே எண்ணுகிறேன். மனைவியே கண்டு பிடிக்க முடியாமல் போன போது கூட சேர்ந்து வேலை செய்த நண்பர்கள் எப்படி கண்டு பிடித்திருக்க முடியும்!

    நிலையான துணை இல்லாமல் காலத்தை கழிப்பது  சொல்லொணா அவஸ்தையை உண்டு பண்ணிற்று. வறண்ட பாலைவனத்தில் பயணிப்பவனுக்கு எப்போதாவது பருகக் கிடைக்கும் நீரைப் போல இரண்டு – மூன்று தற்காலிக உறவுகள் ; ஆனால் எதுவும் நிலைக்கவில்லை. விரக்தி அதிகமான ஒரு நாளில், விளைவுகள் பற்றி யோசிக்காமல், நிதானமிழந்த தருணத்தில் ஒரு விபத்து நடந்தது. என் அலுவலகத்தில் வேலை செய்யும் இளைஞனின் பின் பாகத்தை அவன் சம்மதமில்லாமல் தொட்டு விடவும் பிரச்னை வெடித்தது. நடந்த சம்பவத்துக்கு எல்லோர் முன்னிலையிலும் அந்த இளைஞனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.  பாலியல் சிறுபான்மையரின் உரிமைகள் பற்றிய பிரக்ஞை சிறிதேனும் இல்லாத இந்திய நிறுவனச் சூழல் ; முகத்துக்குப் பின்  கேலி செய்யும் சக ஊழியர்கள் ; அனுதாபம் காட்டிக் கொண்டே உள்ளூர மகிழும் மேலதிகாரிகள். நல்ல வேளை, அடிப்படையில் என் நிறுவனம் சர்வ தேச நிறுவனம். விஷயம் தலைமை அலுவலகத்தை எட்டியது. ‘ஹோமொபோபிக்’ மனோபாவங்கள் வெற்றி பெறா வண்ணம் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு மாத கட்டாய விடுமுறையில் இருந்த நான் கவுரவத்துடன் பணியில் திரும்பச் சேர்த்துக்கொள்ளப்பட்டேன்.

    H சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தான். அவன் வேலை செய்யும் நிறுவனத்தைச் சொல்லவும் எனக்கு ஆச்சர்யம். S வேலை செய்யும் அதே நிறுவனம். S -ஐப் பற்றி விசாரித்தேன். அவனும் அவளும் ஒரே அணியில் வேலை செய்வதாகச் சொன்னான்.

    அவன் போர்டிங் கேட்டுக்குச்  சென்ற பிறகு S இன் வரவுக்காக காத்திருந்தேன். எப்போதும் போல் அன்ன நடை போட்டு தாமதமாக வந்தாள். விமானத்துள் சென்று நாங்கள் அமர்ந்தவுடன் H அதே விமானத்தில் வந்திருக்கிறான் என்று சொன்னேன். பின் வரிசையில் எங்கேனும் உட்கார்ந்திருப்பான் என்று  சொன்னேன். அவள் ஆர்வம் காட்டவில்லை. ”தூக்கம் வருகிறது ; இறங்கும் போது சந்தித்துக் கொள்ளலாம்” என்று சொன்னாள். விமானம் பறக்குமுன்னரே தூங்கிப் போனாள்.

    சில நிமிடங்களில் அவள் தலையை என் தோள்களில் சாய்த்துக் கொண்டாள். அவள் வலக்கையை  என் தொடைப்பகுதியில் போட்டுக் கொண்டு அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.  டியோடரண்ட்-டின் வாசத்தை முகர முடிந்தது. அவளின் மார்புகள் அளவாக விம்மின. அவள் வலக்கையால்  என் இடக்கையை இறுக்கப் பற்றிக் கொண்டாள். பல வருடங்களாகக் செய்யாத ஒன்றை அப்போது நான்  செய்தேன். அவள் கையை விலக்கிக் கொண்டு  அவள் முதுகுப் புறத்தை தொட்டேன். திருமண வாழ்க்கையின் துவக்க காலம் ஞாபகத்தில் வந்தது. ஒரு வருட தாம்பத்ய வாழ்க்கையில் என்னுடைய ‘ஓரியெண்டஷனை’ என் மனைவி கண்டு பிடிக்க முடியாது போன காரணம் எனக்கு புரிந்தது. அவள் கழுத்துப் புறத்தை வருடிக்கொண்டிருந்தேன். ஒரு சமயம் என் வலக்கை அவளின் கூந்தலை தடவியது.  குற்றவுணர்வும்  ஆனந்தவுணர்வும் ஒரு சேரப் போட்டியிட்டன. அதுவரை என்னைப் பற்றி நானே அறிந்திராத ஓர் அம்சத்தை அறிய வைத்தன.

    “என் கணவரின் வடிவான பின் பாகத்தை நோட்டமிடாதே” என்று என் கன்னத்தை கிள்ளியிருக்கிறாள் ; தன் இரு கைகளால் இதமாக என் தோள்களுக்கு மசாஜ் செய்திருக்கிறாள் ; டிஸ்கோ-க்களில் என்னுடன் சேர்ந்து  குதியாட்டம் போட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் தோன்றிராத உணர்வு அன்று அந்த விமானப்பயணத்தில் என்னுள் எழுந்தது. ஆனந்தவுணர்வு சரி-தவறு என்ற சமூக அளவுகோல்களுக்குள் அடங்காது என்பதை பல வருடங்களுக்கு முன்னாலேயே உணர்ந்த எனக்கு ஆனந்தானுபவத்தின் இன்னொரு புது கால்வாய் அந்த ஆகாய விமானப் பயணத்தின் போது திறந்தது.

    விமானம் தரையிறங்கத்  தொடங்கியதும் S விழித்துக் கொண்டாள். விமானம் தரை தொட்டதும் ‘பை’ சொல்லிவிட்டு வேகமாக முன்னாள் சென்று முதலாவதாக விமானத்திலிருந்து இறங்கிச் சென்றாள். H-ஐ தவிர்க்கிறாளோ?   ‘டெர்மினலை’ அடைந்த நான் என் ‘லக்கேஜ்’க்காக வெகுநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. என்னுடைய ‘லக்கேஜும்’ H-ன் ’லக்கேஜும்’ கடைசியாக வந்தன. Hம் நானும் ‘லக்கேஜ்’ வந்தபிறகும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். S-ஐ அவன் விமானத்தில் பார்க்கவில்லை என்று தோன்றியது. S விமான நிலையத்துக்கு வெளியே எனக்காகவோ H -க்காகவோ காத்திருக்கவில்லை.    என்னைத் தவிர்க்கிறாளோ? நான் S-ஐ சந்தித்தது அன்றே கடைசி.

    பார்த்தி சொல்கிறான் :

    வலைத்தளத்தில் எழுதுபவரின் பெயர் என்னவென்று தெரியவில்லை. அது ஆதித்யாவாக இருக்க சாத்தியமேயில்லை. ஏனெனில் உத்தராகண்ட் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இந்திக்காரன் ஆதித்யா தமிழில் எப்படி எழுத முடியும்? வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பாராட்டு கடிதம் எழுதி. பதில் வந்தால் கடிதத்தின் இறுதியில் எந்தப் பெயரில் ஒப்பம் இடப்பட்டிருக்கிறது என்று பார்த்து விடலாம். அது எனக்கு முக்கியமாகப் படவில்லை.  யாரோ எழுதிய கற்பனைக் கதை இது என்றே  கொண்டாலும், சில வருடங்களுக்கு முன்னர் இரு விதமாகக்  கேள்விப்பட்ட ஒரே சம்பவத்தின் நீட்சியாகவே எனக்கு தோன்றியது. ஹரியும் சுசிதாவும் என் தொடர்பில் இல்லை. ஆதித்யாவை நான் அறிந்ததில்லை. இம்மூவரின் அனுபவத்தில் ஒரு நேரடிப் பாத்திரமாக நான் பங்கு பெறவில்லை. ஒவ்வொருவரின் பார்வையிலும் சொல்லப்பட்ட  அனுபவ விவரணைகளை  (கற்பனையான மூன்றாவது விவரணையையும் சேர்த்து!) ஆணாதிக்க மனோபாவத்தில் தொடங்கி பெண் மைய நோக்கு வழியாக வேற்றுமை தாண்டிய அன்புணர்வு நோக்கிய என் உருவகப் பயணத்தின்  விவரணைகளாக எடுத்துக் கொண்டேன்.

    நன்றி : வல்லினம்

  • ஔரங்கசீப் சாலை

    aurangzeb-road_647_082815051544

    தெருப் பெயர்கள் மாற்றப்பட்டு
    வரலாற்றின் பக்கங்கள் அழிக்கப்பட்டு
    பொது மனதின் பிம்பங்கள் துடைக்கப்பட்டு
    கற்பனையான இறந்த காலத்தின் சித்திரங்கள் வரையப்பட்டு….
    +++++
    தேடிப் போகும் வீடு இன்னும் கிடைக்கவில்லை
    இணைய வரைபடத்தின் புதுப்பதிப்பை இன்னும் தரவிறக்கவில்லை
    குறைவான தகவல் வேகம் தாமதப்படுத்துகிறது
    தேடிப் போகும் மனிதர்களின் பெயர்களும் மாறியிருக்கக் கூடுமா?
    +++++
    கல்லறையிலிருந்து எழுந்து
    வாளேந்தி வடக்கு நோக்கி சென்றதும்
    இன்னொரு கல்லறையிலிருந்து குதித்து
    குதூகலமாய் வடக்கு நோக்கி சென்றதும்
    நடுவழியில் சந்தித்துக் கொண்டன
    ஒன்றின் ஆவேசமும்
    இன்னொன்றின் உவகையும்
    ஒரு தெருவின் பெயர் மாற்றம் பற்றியதென
    இரண்டும் புரிந்து கொண்டபோது
    பெயரற்ற ஒரு காட்டுக்கிடையே இருந்த
    ஓர் இடுகாட்டை அடைந்திருந்தன
    திறந்திருந்த இரு குழிகளுக்குள் இறங்கி
    இளைப்பாற கண் மூடியவை
    பெயர் தெரியா காற்றடித்து
    பெயர் தெரியா மணல் மூடி
    பெயர் தெரியாமல் மறைந்து போயின

  • நகர்ந்த ஸ்தம்பங்கள்

    வைசாலியில் உள்ள அசோக ஸ்தம்பம்
    வைசாலியில் உள்ள அசோக ஸ்தம்பம்

    அசோகர் என்ற ஒருவர் இருந்தாரா அல்லது வெறும் தொன்மக்கதைகளில் சித்தரிக்கப்படும் பாத்திரமா என்ற ஐயம் துவக்க கால பிரிட்டிஷ்-இந்திய வரலாற்றறிஞர்களிடையே இருந்து வந்தது. “அசோகாவதானம்” என்னும் இரண்டாம் நூற்றாண்டு சம்ஸ்கிருத நூலொன்றும்,  இலங்கையின் நாளாகமங்களான  – தீபவம்சம், மகாவம்சம் – இரண்டும் புராணக்கதையின் மிகைப்படுத்தல்களோடு அசோகரின் வாழ்க்கை சம்பவங்களை சித்தரிக்கின்றன. ஒரு நாடகீயமான பாத்திரம் போன்று கலிங்கப் பெரும் போரை நிகழ்த்தி பின்னர் போரை வெறுத்து பௌத்த நெறிமுறையின் படி தேசத்தை ஆண்டு வந்தவர் என்றவாறு மேற்சொன்ன பௌத்த இலக்கியங்களில் அசோகர் பற்றிய குறிப்புகள்  வந்தாலும் அசோகரின் ஆட்சி பற்றிய உறுதியான வரலாற்றுப் பதிவுகள் கிடைக்காமலேயே இருந்தன. அசோக சக்கரவர்த்தியைப் பற்றிய தொன்மச் செய்திகளே ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளாக உலவி வந்தன.

    James Prinsep என்னும் ஆங்கிலேயர் தில்லியில் இருக்கும் ஒரு ஸ்தம்பத்தில் பொறிக்கப்பட்டிருந்த பிராமி வடிவ எழுத்துகளைப் புரிந்துகொண்டது ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. “தேவனாம்பிய” (தெய்வங்களுக்கு பிரியமானவன்) “பியதஸ்சி” (மக்களை அன்புடன் கருதுபவன்) போன்ற பட்டப்பெயர்கள் தில்லி ஸ்தம்பத்தில் மட்டுமில்லாமல் வேறு ஸ்தம்பங்களிலும் பொறிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    19ம் நூற்றாண்டில் துணைக்கண்டம்  முழுமையும் (இந்தியா, நேபால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்) அசோகரின் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. ஸ்தம்பங்களிலும், கற்பாறைகளிலும், குகைச்சுவர்களிலும் பொறிக்கப்பட்ட  அரசாணைகள், பிரகடனங்கள் எல்லாம்  அசோகரின் சீர்திருத்தங்களையும் கொள்கைகளையும் குடிமக்களுக்கு வழங்கிய அறிவுரைகளையும் நவீன உலகிற்கு பறை சாற்றின. நன்னெறிகளின் அடித்தளத்தில் ஒரு பேரரசை நிறுவிய ஆற்றல் மிகு பேரரசரின் நுண்ணறிவை இக்கல்வெட்டுகள் நமக்கு அறியத்தந்தன. இந்திய வரலாற்றின் மிகப் பழமையான, குறிப்பிடத்தக்க நீளமான, முழுதும் புரிந்து கொள்ளப் பட்ட கல்வெட்டுகள் அசோகர் காலத்தவை தாம்!

    அசோகரின் கலைத்திட்டங்களுள் முதன்மையானவை மௌரியப் பேரரசு முழுமையும் அவர் நிறுவிய தூண் சாசனங்கள். 40 முதல் 50 அடி உயரத்தினதாய் வான் நோக்கிய தூண்கள். அவைகள் இரண்டு வித கற்களிலிருந்து சமைக்கப்பட்டவை – தூணின் நடுக்கம்பத்திற்கு ஒன்று ; தூண் சிகரத்திற்கு இன்னொன்று. நடுக்கம்பம் ஒற்றைக் கல்லிலிருந்து வெட்டப்பட்டதாக இருக்கும். மதுராவிலும் காசிக்கு முப்பது கிலோ மீட்டர் தெற்கில் இருக்கும் சுனார் பகுதியிலிருந்தும் இருந்த சுரங்கங்களில் வெட்டப்பட்டு தூண்கள் நிறுவப்பட்ட இடங்களுக்கு தள்ளிச் செல்லப்படும். ஒவ்வொரு தூணும் கிட்டத்தட்ட 50 டன் எடை கொண்டவை. இன்று 19 தூண்களே எஞ்சியிருக்கின்றன ; அவற்றிலும் பல உடைந்த துண்டுகளாகிவிட்டன.

    பௌத்த சமயக் கொள்கைகளை அடிக்கோடிட்டுக் காட்டும் பொருட்டு நிறுவப்பட்ட தூண்களின் சிகரத்தில்  விலங்குகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பௌத்த சமயத்தின் பரவலான சின்னமாக இருக்கும் தாமரை மலரை தலைகீழாக்கி அதன் மேல் விலங்குகளின் சிலை அமைக்கப்பட்டிருக்கும் ; சிங்கம் அல்லது நின்ற நிலை அல்லது உட்கார்ந்த நிலையில் மாடு.

    சில ஸ்தம்பங்களில் சமர்ப்பண கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தேதிகள் குறிப்பிடப்பட்டு அசோகர்  புரவலர் என்ற தகவலும் அவற்றில் இருக்கும் பிராமி எழுத்தே கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் மேற்குப்பகுதியில் காணப்பட்ட கல்வெட்டுகளில் சமஸ்கிருதத்துக்கு தொடர்புடைய எழுத்து வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதிகளில் உள்ள ஸ்தம்பங்களின் கல்வெட்டுகள் அசோகர் காலத்து மகதி மொழியில் செதுக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட ஸ்தம்பத்தில் அரமைக் மற்றும் கிரேக்க மொழிகளில் செதுக்கப்பட்டுள்ளது. தன் முடியரசின் பல்வேறு பண்பாட்டு, இனக்  குழுக்களைச்  சென்றடைய அசோகர்  விழைந்ததின் பிரதிபலிப்பாக இதைக் கொள்ளலாம். சில கல்வெட்டுகள் மதச் சார்பற்றவையாக இருக்கின்றன. கலிங்கப்  பேரழிவிற்கு அசோகர் மன்னிப்பு கேட்கிறார் ; மக்களின் நலமே தன்  குறிக்கோள் என்று உறுதி கூறுகிறார். சில கல்வெட்டுகள் அசோகர் மக்களுக்கு செய்த நன்மைகளை புகழ்ந்து கூறும் முகமாக செதுக்கப்பட்டுள்ளன.

    அசோகர் ஸ்தம்பங்கள் பிற்காலத்தில் வந்த சில பேரரசர்களின் கவனத்தை கவர்ந்தன. புராதன கௌஷம்பி நகரத்தில் நிறுவப்பட்ட ஸ்தம்பம் இன்று அலஹாபாத்தில் திரிவேணி சங்கமத்துக்கு அருகில் முகலாயப் பேரரசர் அக்பர் கட்டிய கோட்டைக்குள் காணப்படுகிறது. கௌஷம்பியில் இருந்த தூணின் சிகரமாய் இருந்த விலங்குச் சிலை தூணின் அலஹாபாத்  நகர்வுக்கு முன்னர் அகற்றப்பட்டிருக்கலாம்.  அலகாபாத் ஸ்தம்பத்தில் பிராமி எழுத்தில் அசோகரின்  கல்வெட்டில்  கி மு 232ம் ஆண்டின் தேதியிடப்பட்டிருக்கிறது. அதே ஸ்தம்பத்தில் குப்தவம்சப் பேரரசர் சமுத்திரகுப்தர் கி பி 375 இல் குப்தர் கால பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் தான் பெற்ற வெற்றிகளைப் பற்றி பெருமிதத்துடன் பேசுகிறார். அதே ஸ்தம்பத்தில் பாரசீக மொழியில் முகலாயப் பேரரசர் ஜஹாங்கிரும் ஒரு கல்வெட்டை பதிந்திருக்கிறார்.

    அலஹாபாதின் அசோகா ஸ்தம்பம் போல், தில்லியில் இருக்கும் இரண்டு அசோக ஸ்தம்பங்களும் முறையே மீரட் மற்றும் அம்பாலாவில் இருந்து இடம் பெயர்ந்தவை. 14ம் நூற்றாண்டில் தில்லியை ஆண்ட பெரோஸ் ஷா துக்ளக் என்கிற  சுல்தானால் நகர்த்தப்பட்டவை. இவ்விரண்டு ஸ்தம்பங்களிலும் சிகரம் இல்லை.

    ஆப்கானிய நகரம் காண்டஹாரில் எழுப்பப்பட்ட ஸ்தம்பம் இன்று காபூலில் இருக்கும் தேசிய மியுசியத்தினுள் இருக்கிறது. இந்த ஸ்தம்பத்தில் தான் அரமைக், கிரேக்க மொழிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

    சாரனாத்தின் அசோக ஸ்தம்பத்தை அலங்கரித்த நான்கு சிங்கங்களின் சிகரம் அதிமுக்கியமானது. நம்  தேசியச் சின்னம் கூட. ஒற்றைத் தொகுதியான பளபளப்பூட்டப்பட்ட மணற் பாறையில் செதுக்கப்பட்டது. நான்கு ஆசிய சிங்கங்கள் பின்னுக்குப் பின்னாக நிற்பதை சித்தரிக்கிறது. ஒரு வட்டச்சட்டத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கின்றன அந்த சிங்கச்சிலைகள். வட்டச்சட்டத்தைச்  சுற்றி செதுக்கப்பட்ட யானை, ஓடும் குதிரை, மாடு, சிங்கம் – இவற்றுக்கிடையிடையே 24 ஆரங்களையுடைய  சக்கரங்கள். எல்லாம் மணி வடிவ தலைகீழ்த் தாமரையின் மேல் வைக்கப்பட்டுள்ளன.

    பௌத்த நெறியின் குறியீடாக சிங்கச் சின்னத்தை பார்க்க முடியும். பௌத்த மரபுகளில் சிங்கத்தை புத்தரின் குறியீடாக சித்தரிப்பது வழக்கம். நான்கு சிங்கங்கள் நான்கு  திசைகளில் நோக்குவது சம முக்கியத்துவம் கொண்ட நான்கு விஷயங்களைக் குறிப்பதாகக் கருதலாம். அவைகளை  நால்வகை வாய்மைகள் (Four Noble Truths ) என்றும் சொல்லலாம்  வட்டச்சட்டத்தில் காணப்படும் நான்கு விலங்குகளுக்கும் குறியீட்டர்த்தம் உண்டு. புத்தரின் தாய் புத்தரைக் கருவுற்ற போது அவர் வயிற்றுக்குள் யானை நுழைந்ததைப் போல கனவு கண்டாள் ; யானை புத்தரின் பிறப்பைக் குறிக்கிறது. புத்தரின் இளமைப்பருவத்தை மாடு குறிக்கிறது. மனைவியை விட்டு விலகி புத்தர் தேடலில் ஈடுபட்டதை குறிப்பது ஓடும் குதிரை. நிர்வாண நிலையை புத்தர் எய்தியதை குறிப்பது சிங்கம். புத்தர் போதித்த தர்மத்தை சக்கரம் குறிக்கிறது.

    +++++

    மார்ச் மாதத்தில் ஒரு நாள்  பின் மதியம்  சாரநாத் சிதிலங்களைக் காணச் சென்றேன் ;   உடைந்து கிடந்த அசோகா ஸ்தம்பத்தை மூடிய கண்ணாடி அறைக்குள் பூட்டி வைத்திருக்கிறார்கள். அசோகர் சிங்கங்கள் மெருகு குலையாத பளபளப்புடன் சாரநாத் மியுசியத்தினுள் இருக்கிறது. ஸ்தம்பத்தின் மேல் சிங்கச்சின்னத்தையும் அதன் மேல் ஒரு காலத்தில் இருந்த தர்ம சக்கரத்தையும் என் மனக்கண் முன்னால்  தோற்றுவித்தேன். சிதிலங்கள் மறைந்து அசோகர் ஸ்தம்பத்துக்கு பின்னிருந்த மூல கந்த குடி விகாரமும் வளாகத்தில் இருந்த மற்ற விகாரஙகளும் அவற்றுக்கெல்லாம் பின்னணியில் இருந்த தமேக் ஸ்துபமும் (இப்போது தரை மட்டமாகியிருக்கும்) தர்ம ராஜிக ஸ்தூபமும் என பல நூற்றாண்டுகளுக்கு முன்னதான காட்சிகள் உயிர் பெற்றன. இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னம் நினைவுக்காட்சிகள் நகர்ந்த போது விகாரைகள் ஸ்தம்பங்கள் ஏதுமில்லை. பசுமையான காட்டுக்கு நடுவே  மான்கள் துள்ளிக் குதித்தாடின. கால வரிசையில்லாமல் காட்சிகள் மாறிக் கொண்டேயிருந்தன. வேறொரு காட்சியில் துருக்கிய தளபதியொருவனின் படைகளால் வளாகத்தில் இருந்த சைத்யங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. புத்தர் சிலைகள் அருவங்களாக்கப்பட்டன. காலத்தின் இன்னோர் அசைவில் தமேக் ஸ்துபத்திலிருந்து உருவப்பட்ட செங்கற்களின் பொதி  கழுதைகளின் மேல் ஏற்றப்பட்டு காசி நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டன.  ஒருமுறை பொதியினுள் கிடைத்த புத்தரினுடைய தியானக் கூழாங்கல்லொன்று  குப்பையெனக்  கருதப்பட்டு நதிக்குள் எரியப்பட்டது. பின்னொரு காட்சியில் கன்னிங்ஹாம் பிரபு தமேக் ஸ்தூபத்தினுள் இறங்கி அதன் சுவர்களுக்குள் பொறிக்கப்பட்டிருந்த ‘யெ தம்ம ஹேதுப்ப பவ’ என்னும்  பாலி சுலோகத்தை வாசிக்க முயன்று கொண்டிருந்தார்.

    சுற்றுலா பயணிகளுக்கான இருக்கையில் அமர்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்த இளஞ்ஜோடியொன்றை  சீருடையிட்ட காவலாளி  ஒருவன் அங்கிருந்து விரட்டிக் கொண்டிருந்த சத்தம் நிகழ்காலத்துக்கு அழைத்து வந்தது.  மண் தரையில் பரவியிருந்த என்னை விட நான்கு மடங்கு நெடிய என் நிழலை நோக்கியவாறு  வெகு நேரம் அங்கே நின்றிருந்தேன்.

  • ஜப்பான் ஜுரம்

    high-and-low_592x299

    மூன்று மாதங்களுக்கு முன்னர் பலவீனமானதொரு தருணத்தில் அகிரா குரோசவாவின் ஐந்து படங்கள் அடங்கிய பேக் ஒன்றை ஒரு கடையில் வாங்கித் தொலைத்துவிட்டேன். தினம் ஒரு படம் என்று ஐந்து நாட்களில் ஐந்து படங்கள். இணையத்தில் எங்காவது குரொசவாவின் வேறு படங்கள் கிடைக்குமா என்று தேடிப் பார்த்து தோல்வியடைந்தேன். அமேசானில் வேறு மூன்று திரைப்படங்கள் அடங்கிய பேக் ஒன்று, தனித்தனியாக இரண்டு டிவிடிக்கள் என மேலும் ஐந்து படங்கள் வாங்கினேன்….ஹ்ம்ம் குரொசவாவின் மொத்தம் பத்து படங்கள்! ( Drunken Angel, High and Low, Seven Samurai, Yojimbo, Red Beard, Ikiru, Rashomon, Throne of Blood, Ran & Kagemusha)

    அவர் முப்பது படங்கள் இயக்கியிருக்கிறாராம். எப்படியாவது – சஞ்ஜூரோ, ஸ்கேன்டல், Bad sleeps well மற்றும் Hidden Fortress ஆகிய படங்களையும் தேடிப் பிடித்து பார்த்து விட வேண்டும்.

    Mifune

    குரோசவாவின் அமர படைப்புகளின் மாறா அங்கமான மறைந்த நடிகர் டோஷிரோ மிஃபுனேவுக்கு இரசிகர் மன்றங்கள் இருக்கின்றனவா? அப்படி இருந்தால் ஆயுள் உறுப்பினராக மாறலாம் என்ற எண்ணம் இருக்கிறது.

    andha_naal

    Rashomon effect – ஐக் கருவாகக் கொண்ட படமான “அந்தநாள்” முக்கியமான தமிழ்த் திரைப்படங்களில் ஒன்று. ரஷமோன் ஜுரத்தில் இருந்து விடுபட முடியாமல் அந்த நாள் படத்தையும் யூ ட்யூபில் கண்டு களித்தேன். கதையின் ஆரம்பத்தில் கொல்லப்படும் ராஜன் பாத்திரமாக வரும் சிவாஜி பணத்தை எண்ணி பெட்டிக்குள் வைக்கும் காட்சி பலமுறை வருவதும், கதையின் அனைத்துப் பாத்திரங்களினாலும் அவர் சுட்டுக் கொல்லப்படுவதும் என்று ரஷமோன் effect இன் அனைத்து உத்திகளும் செம்மையாகக் கையாளப்பட்டுள்ள படம். ஒரு வித்தியாசம். ரஷமோனில் சொல்லப்படும் வாக்குமூலங்கள் முக்கால் வாசி மெய்யும் மீதி narcissm-மும் ஆக இருக்கும்.  வாக்குமூலம் அளிப்பவர்கள் தம்மைப் பற்றிய உயர்வான மதிப்பீட்டில் சொல்லப்படும் வாக்குமூலங்களாக இருக்கும். அந்தநாளில் சொல்லப்படும் வாக்குமூலங்கள் எளிமையானவை. நடந்த சம்பவங்களின் மறு கூறலாகவும் “யார் கொன்றிருப்பார்கள்?” என்ற ஊகத்தின் வெளிப்பாடாகவும் மட்டுமே “அந்தநாளின்” வாக்குமூலங்கள் இருக்கின்றன. ஒரு கட்டத்தில் ஒரு noir படமாக அந்தநாள் சுருங்கிவிடுகிறது. ராஜன் கொலையுண்டிருப்பதைப் பார்த்த சின்னையா போலீஸுக்குச் சொல்ல வேகவேகமாக மூச்சிரைக்க ஓடி வரும் காட்சியில் டைட்டில்கள் காட்டப்படுகின்றன. ரஷமோனின் விறகுவெட்டி காட்டுக்குள் பிணத்தைக் கண்ட அதிர்ச்சியில் வாயு வேகமாய் ஓடும் காட்சியில் டைட்டிலை ஓட்டாமல் காட்சிப்படுத்திய அகிரா குரோசவாவின் படைப்புச் சுதந்திரம் ‘அந்தநாள்’ இயக்குனருக்கு கிடைக்கவில்லையோ? வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள், சிஐடி சிவானந்தத்தின் (ஜாவர் சீதாராமன்) ஹீரோயிசம் மற்றும் போலீஸ்காரர்களை “caricature”களாக சித்தரித்தல் என்று தமிழ்சினிமாவின் அனைத்து கூறுகளும் ‘அந்தநாளில்’ காணக்கிடைக்கின்றன.

    Akutagawa

    ரஷமோன் திரைப்படத்தின் மூலக்கதை அகுடகவாவின் புகழ் பெற்ற In the Grove என்னும் சிறுகதை. அகுடகவாவின் இன்னொரு சிறுகதை “ரஷமோன்”. ஆனால் அந்த கதை முற்றிலும் வேறானது. அக்கதை நிகழும் இடமான ரஷமோன் என்னும் நகர எல்லைக் கதவைப் பின்புலமாகப் பயன் படுத்திக் கொண்டார் குரோசவா. ர்யுனோசுகே அகுடகவா ஜப்பானிய சிறுகதைகளின் தந்தை என்று கொண்டாடப்படுகிறார். பாரதியைப் போல், புதுமைப்பித்தனைப் போல் இளம் வயதிலேயே இயற்கை எய்திவிட்டவர். மனநோய் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

    நவீன ஜப்பானிய இலக்கியத்தின் இரு முன்னோடிகளான – சொஸேகி மற்றும் அகுடகவா – இருவரும் ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஐரோப்பாவின் நவீன இலக்கியங்களின் பரிச்சயம் இருவருக்கும் இருந்தது. ஜப்பானிய உரைநடை மற்றும் சிறுகதை வடிவத்துக்கு இவ்விரு இலக்கியவாதிகளும் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

    rashomon and seventeen other stories

    ஒரு பாதையில் நடக்கத் தொடங்கி புதுப்பாதையொன்றை கண்டு பிடிப்பதைப் போல அகுடகவா என்னும் மகத்தான சிறுகதை எழுத்தாளரின் அறிமுகம் குரோசவாவின் ரஷமோன் திரைப்படம் வாயிலாக கிடைத்தது. Rashamon and seventeen other stories என்ற சிறுகதைத் தொகுப்பின் கின்டில் பிரதியை அமேசானில் வாங்கினேன். முரகாமியின் ஜப்பானிய நாவல்களின் ஆங்கில மொழி பெயர்ப்பாளரான Jay Rubin அகுடகவாவின் புகழ்பெற்ற பதினெட்டு சிறுகதைகளை மொழிபெயர்த்து தொகுத்திருக்கிறார். இத்தொகுப்பில் அகுடகவா பற்றி முரகாமி எழுதிய அறிமுகக் கட்டுரையும் இடம் பெற்றிருக்கிறது. அகுடகவாவின் சிறுகதைகளில் படிமங்களும், தனித்தன்மையான அழகியலும் மூர்க்கமான நகைச்சுவையும் நிரம்பி வழிகின்றன. A must read for literature lovers.

  • ரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்

    Rashomon

    “என்னால் படைப்புக்குள் நுழைய முடியவில்லை” என்ற வாக்கியத்தை நாம் கேட்டிருக்கிறோம். படைப்புக்குள் நுழைதல் என்றால் அப்படைப்பின் பாத்திரங்களுக்கு நடுவில் பாத்திரங்கள் உலவும் சூழலில், கண்ணுக்குத் தெரியாமல், வேவு பார்ப்பவனைப் போன்று கலந்து நிற்றலைக் குறிக்கும். பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கில் மிதந்து செல்லும் இலை மேல் எறும்பாக வாசகன் / பார்வையாளன் தன்னை உணர்தலைக் குறிக்கும்.

    ரஷமோன் திரைப்படத்தில் விறகுவெட்டி விடுவிடுவென்று நடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்தடையும் முதற்காட்சி யதார்த்தத்திலிருந்து உண்மையைத் தேடி விரையும் மனித விழைவின் படிமம். சூரியனை நோக்கிய படி வேகமாக நகரும் காமிரா ; சுர்ரென்று வயிற்றைப் பிரட்டும் இசை ; விறகுவெட்டியின் மூச்சு முட்டும் சத்தம். பிரயாணத் தொப்பி, பட்டுப் பை, துண்டான கயிற்றுத் துணி, ரத்தினம் பதித்த கத்தி என்று ஆங்காங்கு காட்டுக்குள் விழுந்து கிடக்கும் பொருட்கள். படைப்புக்குள் எளிதில் நாம் நுழைந்து விட முடிகிறது.

    ரஷமோன் கதை சொல்லுதலைப் பற்றிய கதை. கதை முடிவற்றது ;. முடிவு இல்லை என்கிற தெளிவே கதை. காட்டில் நடந்த ஒரு கொடுமையான சம்பவம் பற்றிய வழக்கில் சம்பந்தப்பட்ட இரு சாட்சிகள் விசாரணைகள் முடிந்த பின்னர் நகர எல்லைக் கதவுக்கடியில் மழைக்கு ஒதுங்குகிறார்கள். அவர்கள் கேட்ட வாக்குமூலங்களின் நம்பகமிலாத் தன்மையைப் பற்றி அவர்கள் உரையாடுதலிலிருந்து கதை தொடங்குகிறது.

    மூன்று வாக்கு மூலங்கள். இதில் முரண் என்னவென்றால் மூவருமே கொலையைச் செய்தவர்கள் தாமே என்று ஒப்புக் கொள்கிறார்கள். மூவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டவர். ஆவியாக ஓர் ஊடகத்தின் உடம்பில் புகுந்து தன் தற்கொலை வாக்குமூலத்தை அவர் அளிக்கிறார். மூன்று வாக்குமூலத்திலும் கவனிக்கத் தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. வாக்குமூலத்தை அளிப்பவர் தன்னைப் பற்றி மட்டும் சாதகமான வெளிச்சத்தில் காண்பித்துக் கொள்வது.

    நிஜமும் நினைவும் இணைந்து நடத்தும் நிழல் கூத்தை படம் நெடுக நாம் காண்கிறோம். ஒவ்வொருவரும் தம் கண்ணோட்டத்தில் நடந்தது என்ன என்பதை அணுகுகிறார்கள். நடந்ததை கண்ணால் கண்ட ஒரே சாட்சியான விறகு வெட்டியின் கூற்றையும் சேர்த்து நான்கு கண்ணோட்டத்தில் ஒரு நிகழ்வு பற்றி பேசப்படுகிறது. என்றாலும், இறுதியில் கிடைக்கும் சித்திரம் தெளிவற்றதாகவே இருக்கிறது. படம் முழுக்க வரும் பாத்திரங்களின் முகம் போல நிழலும் ஒளியும் படர்ந்த குழப்பமான சித்திரமே நம் மனதில் விரிகிறது. இலைகளின் நிழலாட்டத்தில் அரை வெளிச்சத்தில் காட்சிகள் நகர்கின்றன. முழுமையான வெளிச்சம் என்ற ஒன்று எங்கும் காணக்கூடியதாய் இல்லை. கண்ணோட்டம் மாத்திரமே யதார்த்தத்தை அணுகும் உத்தியா? அல்லது கண்ணோட்டமே யதார்த்தமா?

    அலங்காரங்கள் இல்லாமல் ஒருவன் தன்னைப் பற்றிப் பேசுதல் சாத்தியமா என்னும் ஆழமான கேள்வியை எழுப்புகிறது ரஷமோன். சுயம் என்ற ஒன்று இருக்கும் வரையிலும் உண்மையைத் தேடும் முயற்சி அபத்தமானதாகவே இருக்க முடியும் என்ற கருதுகோளை நம்முன் வைக்கிறது ரஷமோன். உண்மையை யதார்த்தத்தின் பின்புலத்தில் தேடத்தொடங்குகையில் தற்சார்பான விளக்கங்களின் பாதையிலேயே நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

    உறைய வைக்கும் சிரிப்புடன் உடல் மொழியுடன் வழிப்பறி கொள்ளைக்காரனாக வரும் டோஷிரோ மிஃபுனே (அகிரா குரோசவாவின் ‘ஆஸ்தான கலைஞன்’), கொள்ளைக்காரனால் கயிற்றால் கட்டிபோடப்பட்டு நிராதரவான கணவனாக வரும் மசாயூகி மோரி, கொள்ளைக்காரனால் வன்புணரப்படும் மனைவியாக வரும் மச்சிகோ க்யோ – மூன்று கலைஞர்களும் மூன்று ஃப்ளாஷ் பேக்கிலும் தம் நடிப்பில் வேறுபட்ட பரிமாணங்களை கொண்டு வந்து பிரமிப்பூட்டுகிறார்கள். கொள்ளைக்காரனின் ஃப்ளாஷ்பேக்கில் மனைவியுடன் பிரயாணம் செய்யும் சமுராயிடம் தந்திரமாகப் பேசி காட்டுக்குள் அழைத்துச் சென்று கட்டிப்போட்டுவிட்டு ஒரு புதருக்குள்ளிருந்து சமுராய்யின் மனைவியை காமம் மேலிட பார்க்கும் காட்சியில் நம்மை உறைய வைக்கிறார் மிஃபுனே. மனைவி சொல்லும் ‘கதையில்’ ஏளனமாகப் பார்க்கும் கணவனின் பார்வை தாளாமல் பித்துப் பிடித்தவர் போல் ஆக்ரோஷம் ததும்ப நடிக்கும் காட்சியில் மச்சிகோ நடிப்பின் உயரத்தை தொடுகிறார். சமுராய்யின் ஆவி ஓர் ஊடகத்தினுள் உட்புகுந்து வாக்குமூலம் அளிக்கும் காட்சி மயிர் கூச்செறிய வைக்கிறது.

    தன் எல்லா படங்களிலும் மழையை படமாக்காமல் குரோசவா இருந்ததில்லை. ரஷமோனிலும் மழைக் காட்சி இருக்கிறது. கதையின் முக்கியப்பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. ரஷமோன் வாயிலில் விறகுவெட்டியும், துறவியும் கதைகளை சொல்லும் போது மழை பெய்கிறது. ஜப்பானிய திரைப்பட மேதை இரு மாறுபட்ட யதார்த்த வெளிகளை வெயில்-மழை என்று இருமைகளாகச் சித்தரித்திருக்கிறார்.

    அகிரா குரோசவா ஆசாரமான பௌத்தர் இல்லை. ஆனால் அவர் படங்களில் பௌத்த சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன. ரஷமோன் சொல்லும் மையக் கருத்து பௌத்தத்தின் மூலக் கருத்தை ஆமோதிக்கிறது – அனுபவங்களின் நிச்சயமின்மை. கதையில் சொல்லப்படும் நான்கு கதைகளும் ஒன்றுதான், ஆனாலும் முற்றிலும் மாறுபட்டவை. கதைகளின் சுருக்கம் ஒன்றுதான். ஆனால் அக்கதைகளின் விவரங்கள் தாம் அவைகளெல்லாம் வெவ்வேறு கதைகள் என்கிற பாவனையை உண்டு பண்ணுகின்றன. மயக்கமா அல்லது வன்புணர்ச்சியா? சமுராய்யை கொன்றது கொள்ளைக்காரனா? அல்லது மனைவியா? அல்லது சமுராய் வாளை வயிற்றுக்குள் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டானா? எந்த கதை உண்மை? உண்மையில் என்ன நடந்தது? யார் பொய் சொல்லுகிறார்கள்? பல வினாக்கள். பல வித மாறுபாடுகள். மேலோட்டமான மாறுபாடுகளை ஒதுக்கி விடலாம். அவைகள் முக்கியமானவைகள் அல்ல. அவைகள் மாறுபட்ட தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன. அவ்வளவே.

    திரைப்படம் முடிவடையும் தருணங்களில் தனியாக விடப்பட்ட குழந்தையின் அங்கியை வழிபோக்கன் திருடுகிறான். ஆறு குழந்தைகளின் தந்தையான ஏழை விறகுவெட்டியோ ஏழாவது குழந்தையாக அந்த அனாதை குழந்தையை தன்னுடன் எடுத்துப் போகிறான். பல்வேறு உயிர்களாக, பல்வேறு குணாதிசயங்களுடன் நம் எல்லோருடைய வாழ்வும் ஒன்றுடன் ஒன்றாக பின்னிப் பிணைந்திருக்கிறது என்பது பௌத்த சிந்தனை. இப்பிணைப்பை துண்டித்தலோ இந்த பிணைப்பிலிருந்து விடுபடுதலோ சாத்தியமில்லை. மாறுபாடுகளை ஒதுக்கி பிணைப்பின் ஒன்றிணைந்த தன்மையை சிந்தித்தலையே ரஷமோன் பேசுகிறது.

    நன்றி : பதாகை

  • மண்ட்டோவும் ஜி நாகராஜனும் – ஒரு பார்வை

    bitter-fruit-the-very-best-of-saadat-hasan-manto-400x400-imad9tgszgavcbjz

    முதலில் எனக்கு அறிமுகமானவர் மண்ட்டோ. காலித் ஹசனின் ஆங்கில மொழிபெயர்ப்பு வாயிலாகத்தான் மண்ட்டோவின் உலகு எனக்கு அறிமுகமானது. டோபா டெக் சிங் – சிறுகதைதான் நான் படித்த முதல் மண்ட்டோ படைப்பு. அந்தச் சிறுகதையை வாசிப்பதற்கு முன், இந்தி மொழி நாடகமாக டோபா டேக் சிங்-கை காணும் சந்தர்ப்பம் அமைந்திருந்தது. மனநல மருத்துவமனையை இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் அரசியல் வக்கிரங்களின் படிமமாக மாற்றிய கச்சிதமான சிறுகதை அது. நகைச்சுவை, யதார்த்தம், நகைமுரண், வரலாற்றுச் சோகம் மற்றும் துன்பியல் – மானுட வலியின் பல அடுக்குகளையும் அழகாய்ச் சொன்ன அற்புதச் சிறுகதை. டோபா டேக் சிங் பானையின் ஒரு சோறு. பிரிவினைக்கால வன்முறை நிகழ்வுகளின் அடிப்படையில் மண்ட்டோ எழுதிய “திற”, “சில்லிட்டுப் போன சதைப் பண்டம்” “டிட்வாலின் நாய்” “மோஸல்” முதலான சிறுகதைகள் பெரிதும் பேசப்படுபவை.

    ஜி.நாகராஜன் மண்ட்டோவுக்குப் பிறகுதான் எனக்கு அறிமுகமானார். 2012- தில்லி புத்தக விழாவில் ஜி நாகராஜனின் முழு ஆக்கங்கள் (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) என்ற நூலை வாங்கினேன். அவருடைய எல்லா சிறுகதைகளையும் படித்து விட்டேன் என்று சொல்ல முடியாது. அவர் எழுதிய இரண்டு நாவல்களையும் – ”நாளை மற்றுமொரு நாளே” மற்றும் “குறத்தி முடுக்கு” – உடனே வாசித்து முடித்தேன். இக்கால பெரிய எழுத்தாளர்கள் யானைக்கால் சைஸில் எழுதும் நாவல்களின் பக்க எண்ணிக்கையைப் பார்த்தால் நாகராஜன் எழுதியவற்றை குறுநாவல்கள் என்றே குறிப்பிட வேண்டும்

    பம்பாய் நகரில் (இன்றைய மும்பை – உயிரோடு இருந்திருந்தால் இப்பெயர் மாற்றத்தை மண்ட்டோ நிச்சயம் எதிர்த்திருப்பார்), பல வருடங்கள் கதை-வசனகர்த்தாவாக “பாலிவுட்டில்” பணியாற்றிய மண்ட்டோ 1948 இல் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார். 1948-ல் பாகிஸ்தான் சென்ற பிறகு அவர் எழுதிய பெரும்பாலான கதைகள் பிரிவினை கால வன்முறைகள், இரு பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட இணைக்கவொண்ணா இடைவெளிகள், எது தன் சொந்த நாடு என்ற ஆறாக் குழப்பம் – இவற்றையே பேசின.

    ஜலியான்வாலாபாக் படுகொலைகளின் மற்றும் பகத்சிங்கின் உயிர்த்தியாகத்தின் விளைவாக பஞ்சாப் மாகாணமெங்கும் தேசியவாதத் தீ பரவிய காலத்தில் இளைஞனாக இருந்த மண்ட்டோ, அப்போது எழுதத் தொடங்கியபோது லட்சியவாதக் கனவுகளில் தோய்ந்த கதைகள் எழுதினார் (”இது 1919இல் நடந்தது”, “தமாஷா”).

    பின்னர் பம்பாய்க்கு வேலை தேடி வந்த நாட்களில் அவர் எழுத்து யதார்த்தத்தை நோக்கி நகரத் தொடங்கியது. அவருடைய கதைகள் முப்பதுகளின், நாற்பதுகளின் பம்பாய் நகர வாழ்க்கையைப் பதிவு செய்தன. தெருவோரத்தில் வசிப்பவர்கள், பாலியல் தொழிலாளர்கள், குதிரைவண்டி ஓட்டுபவர்கள், காசு வாங்கும் போலீஸ்காரர்கள், பாலியல் தரகர்கள் என்று சமூகத்தின் விளிம்பு நிலை மக்களே அவர் கதைகளில் அதிகம் உலவினர்.

    “கருப்பு சல்வார்’ சிறுகதையில் வரும் பாலியல் தொழிலாளி சுல்தானாவின் தொழில் நன்றாகச் செல்வதில்லை. மொகரம் விழாவுக்காக கருப்பு சல்வார் வாங்க முடியுமா என்பது அவள் கவலை. “ஒரு பெண்ணின் வாழ்க்கை” என்ற சிறுகதையில் சௌகந்தி என்ற பாலியல் தொழிலாளியிடமிருந்து அவள் காதலன் பணம் திருடுகிறான். அவளிடம் வரும் ஒரு புது வாடிக்கையாளர் தன் முகம் கூட காட்டாமல் அவளைப் பார்த்து விட்டு திடுதிப்பென நிராகரித்துச் சென்றவுடன் சௌகந்தி மிகவும் கடுப்படைகிறாள். பணம் திருடும் காதலன் அந்த சமயம் பார்த்து வரவும் அவனுக்கு நல்ல “டோஸ்” கிடைக்கிறது. காதலனைத் துரத்தியடிக்கிறாள். பிறகு காவலுக்கிருக்கும் ஆண் நாயின் மேல் கையைப் போட்டுக் கொண்டு தூங்கப் போகிறாள். “சாம்ராஜ்யத்தின் முடிவு” கதையில் வரும் ப்ளாட்ஃபார்மில் தூங்கி வளர்ந்த இளைஞன் மன்மோகன்; “வெளிச்சமான ஓர் அறை” கதையிலும் “சிராஜ்” கதையிலும் வரும் விலைமாது நாயகிகள், என மண்ட்டோவின் கதையுலகம் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வனுபவத்தைக் கரிசனத்துடன் உற்று நோக்குகிறது. மேட்டிமையின் சிறு அடையாளம்கூட அவரின் எந்தவோர் கதையிலும் தென்படுவதில்லை.

    ஜி நாகராஜன் எழுத்தில் வரும் கதைமாந்தர்களும் மண்ட்டோவின் பம்பாய் காலக் கதை மாந்தரைப் போலவே இருக்கின்றனர்- விலை மாதர்கள், ரௌடிகள், பிச்சைக்காரர்கள் என்று. அவர்கள் வாழ்க்கை சின்னத்தனங்கள் நிரம்பியது; துணிச்சல் நிறைந்தது; நோய்களுக்கு வசமாகக் கூடியது; சமூகத்தின் பார்வையில் அவமானவுணர்வை தோற்றுவிக்கத்தக்கது. எனினும் ஜி நாகராஜன் ”நாளை மற்றுமொரு நாளே” நாவலின் முகப்பில் சொல்வது போல, “அவனது அடுத்த நாளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாம். ஏனெனில் அவனுக்கும் – நம்மில் பலரைப் போலவே – நாளை மற்றுமொரு நாளே”

    பாத்திரப் படைப்புகளும் கதைச் சூழல்களும் மட்டுமல்லாது இருவரின் எழுத்துகளும் பயபக்தியற்ற, ஒளிவுமறைவிலாத நேர்மையான சமுக நோக்கைக் கொண்டிருந்தன. மண்ட்டோ தனக்கேயுரிய வறண்ட நகைச்சுவையுடன், கடவுள் பிரார்த்தனை என்ற குறிப்பில் இப்படி எழுதுகிறார்.

    “அன்புள்ள இறைவனே……………………. சாதத் ஹசன் மண்ட்டோவை உன்னிடம் அழைத்துக் கொள்ளுமாறு மன்றாடி வேண்டிக் கொள்கிறோம். அவனை உன்னோடு அழைத்துக்கொள். நறுமணங்களில் இருந்து விலகி, தூய்மையற்றதைத் தேடி ஓடுகிறான். பிரகாசமான சூரிய ஒளியை வெறுத்து குழப்பமான இருண்ட பாதைகளைத் தேர்ந்தெடுக்கிறான். நிர்வாணத்தையும் அவமானமற்ற உணர்வுகளையும் கண்டு பிரமித்துப் போகும் அவன் நாணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து அலட்சியப்படுத்துகிறான். இனிமையானதை வெறுத்து கசப்பான பழத்தை ருசி பார்க்க தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான். குடும்பப் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத அவன், வேசிகளோடு இருக்கும்போது ஏழாவது சொர்க்கத்தில் இருக்கிறான். தெளிந்த நீரோட்டத்தின் பக்கம் போகாதவன், சகதியில் நடக்க விரும்புகிறான்…… பாவங்களால் கருமையாக்கப்பட்டிருக்கும் முகங்களை அக்கறை கொண்டு கழுவியபின் உண்மையான முகங்களைப் பார்க்க விரும்புகிறான்.”

    குறத்தி முடுக்கு நாவலின் ஆரம்பத்தில் ஜி நாகராஜன் என் வருத்தம் என்ற சிறு தலைப்பில் எழுதுவதாவது :

    “நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால், “இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?” என்று வேண்டுமானால் கேளுங்கள்; ”இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?” என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்”

    மேற்கண்ட வரிகளில் மண்ட்டோவின் தொனி தென்படுகிறது அல்லவா?

    பரத்தையர் பற்றி ஜி நாகராஜன் எழுதிய குறிப்பிலும் சமூகம் கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வைத் தாண்டி அவர்களுள் ஒரு தெய்வீக உணர்வைத் தரிசிக்க முடிகிறது என்று சொல்கிறார்.

    “அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத்தானே ஒப்படைத்துக் கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது. சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்து கொள்ள முடியும்”

    தோற்றங்களுக்கு அப்பாற்பட்ட மனித அக்கறையுணர்வு இருவரின் படைப்புகளுக்கும் நடுவில் இருக்கும் பொதுப்புள்ளி எனலாம்.

    வடிவ சிக்கனத்துடன் சிற்சில பத்திகளில் மண்ட்டோ தீட்டியிருக்கும் சொற்சித்திரங்கள் (sketches) தேசப்பிரிவினை கட்டவிழ்த்து விட்ட சோகம் ததும்பிய பெருங்கொடுமைகளை நம் மனக்கண்ணுள் கொண்டுவருவன. ஆழமான நகைமுரணும் உருக்கமும் மிக்க மண்ட்டோவின் சொற்சித்திரங்களைப் போன்று ஜி நாகராஜனும் நிமிஷக் கதைகள் என்ற வடிவ சோதனை முயற்சி செய்திருக்கிறார். நாகராஜனின் நிமிஷக் கதைகள் மண்ட்டோவின் சொற்சித்திரங்களைப் போல் உருக்கமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மண்ட்டோவின் நகைமுரண் கொஞ்சமும் குறையாமல் ஜி நாகராஜனின் நிமிஷக் கதைகளிலும் இருக்கிறது.

    1955 இல் மண்ட்டோ இறந்து போய் இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் ஜி நாகராஜன் எழுதத் தொடங்கியிருக்கிறார். மண்ட்டோவின் எழுத்தை அவர் கேள்விப்பட்டிருக்கலாம்; ஆனால் படித்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. மண்ட்டோவின் படைப்புகள் 1987இல் தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக 1981 இலேயே ஜி நாகராஜன் காலமாகிவிட்டார்.

    கதாநாயகர்கள் ”பஞ்ச் டயலாக்” சொல்வது போல தன் எழுத்தில் “பொன்மொழிகள்” இல்லை என்று கவலைப்பட்ட நண்பருக்காக பிரத்யேகமாக பகடி கலந்த “பொன்மொழிகள்” என்ற கட்டுரையொன்றை எழுதினார் ஜி நாகராஜன். அவர் எழுதிய பொன்மொழிகளில் ஒன்று – “தனிமனிதர்களை மதிக்கத் தெரியாதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள்”. மண்ட்டோ, நாகராஜன் – இருவர் எழுத்தும் தனி மனிதர்களை மதித்த எழுத்து என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

    நூல்கள்
    (1) Bitter Fruit – The very Best of Saadat Hasan Manto – Edited & Translated by Khalid Hassan – Penguin Books – 2008 Edition

    (2) மண்ட்டோ படைப்புகள் – தொகுப்பு & தமிழாக்கம் : ராமாநுஜம் – நிழல் வெளியீடு – பதிப்பு : 2008

    (3) ஜி.நாகராஜன் ஆக்கங்கள் – தொகுப்பாசிரியர் : ராஜமார்த்தாண்டன் – காலச்சுவடு பதிப்பகம் : 2011

    g-nagaraajan-aakkangal-215x315

    நன்றி : பதாகை

    நசீருத்தின் ஷா-வின் குரலில் “டோபா டேக் சிங்” சிறுகதையை கேட்கலாம்.

  • கொலைகாரனுக்கும் கொலையுண்டவனுக்கும் பொதுவான மாயை – தேவ்தத் பட்டநாயக்

    பாண்டவர்கள் யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்தின் முடிவில் சிறப்பு மரியாதை அளிக்க கிருஷ்ணனை அழைத்தனர். இதனால் தனக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதாக நினைத்த சிசுபாலன், கிருஷ்ணனைத் திட்ட ஆரம்பித்தான். எல்லாரும் கோபப்பட்டார்கள், ஆனால் கிருஷ்ணன் கோபப்படவில்லை. அத்தனையையும் அவன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். இருந்தாலும், நூறாவது வசைக்குப் பின், கிருஷ்ணன் கூர்மையான தன் சக்கரத்தை வீசியெறிந்து சிசுபாலன் தலையைத் துண்டித்தான். காரணம், மன்னிப்பின் எல்லையைக் கடந்து விட்டான் சிசுபாலன்.
     
    சார்லி ஹெப்டோ, பகடிகளைத் தாங்கி வரும் பிரஞ்சு மொழி வார இதழ். அது கார்ட்டூன்களைப் பதிப்பித்தது- ஆத்திரமூட்டும் கேலிச்சித்திரங்கள். அவற்றை இதுவரை நான் பார்த்தது இல்லை. அங்கு பணிபுரிபவர்களை யாரும் கொல்லாமல் இருந்திருந்தால், நான் பார்த்திருக்கவே மாட்டேன். ஆனால் அதற்குப்பின் சார்லி ஓர் ஆளாகியது, பலியாள் ஆனது, கருத்துச் சுதந்திரத்துக்கான போராட்டத் தியாகியானது. கொலையைக் கண்டித்து நாமும் ஹீரோக்கள் ஆனோம். நாங்களும் சார்லிக்கள்தான் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு பாரிஸில் பல லட்சக்கணக்கானவர்கள் ஊர்வலம் போனார்கள்.
     
    சார்லியின் கொலைகாரர்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளூம் இடத்தில் ஊர்வலம் நடக்குமா? அது அனுமதிக்கப்படுமா? யார் அந்தக் கொலைகாரர்கள்? முஸ்லிம்களா, கெட்ட முஸ்லிம்களா, பைத்தியக்கார முஸ்லிம்களா, இசுலாமியர்களாக அல்லாத முஸ்லிம்களா? பெஷாவரின் பள்ளிச் சிறுவர்கள் மீதான தாக்குதல் போலவே, இதையும் தலையங்கங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. பெஷாவரில் பலியானவர்கள் கொலை செய்யத் தூண்டவில்லை; பெற்றோர்கள் வேண்டுமானால் செய்திருக்கலாம்.
     
    சார்லி விஷயத்தில் தூண்டுதல் இதுதான்: தங்கள் இறைத்தூதர் அவமதிக்கப்பட்டதாக, எனவே இசுலாமும் அவமதிக்கப்பட்டதாக, அவர்கள் நினைத்தார்கள். எனினும் சார்லியோ, “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்!” என்ற கோஷத்துக்குப் பேர் போன மண்ணின் சட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இசுலாமும் சகோதரத்துவம் பேசுகிறது (அரபி மொழியில், உம்மா), சமத்துவமும் பேசுகிறது. ஆனால் அந்த அளவுக்கு சுதந்திரத்தைப் பேசுவதில்லை. இசுலாம் என்றால் கீழ்ப்படிதல் என்றுதான் பொருள்- அமைதியை ஏற்படுத்தும் இறைவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிதல்.
     
    அளவைக்கு உட்பட்டதைக் கையாளுதல்
     
    சமத்துவத்திலும், தங்களுக்கே உரிய வகையிலான சுதந்திரத்திலும் நம்பிக்கை கொண்டிருக்கும் இந்த இரு சகோதரர்கள் ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்வது என்று தீர்மானித்தார்கள். ஒருவர் உணர்வுகளையும், மற்றவர் உடல்களையும். உணர்வுகளின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு அளவைகள் கிடையாது. உடல்கள் மீதான வன்முறையைக் கணக்கெடுக்க முடியும். அதனால் பின்னது நிரூபிக்கப்படக்கூடிய குற்றமாகிறது; அதிலும் குறிப்பாக, நம்பிக்கையை மட்டுமே சார்ந்த, சமயம் போன்ற ஒன்றை நோக்கி ஏவப்படும் உணர்வுபூர்வமான வன்முறை விஷயத்தில், உடல்களின் மீதான வன்முறையே பெரியதொரு குற்றமாகிறது.
     
    இதுதான் பிரச்சினை: கணக்கெடுத்தல்- அறிவியலின், புறவயப்பட்ட பார்வையின் கால்கோள். 
     
    எதை நம்மால் கணக்கெடுக்க முடியுமோ, அதை நம்மால் கையாள முடியும். ஆனால், அளவைக்கு அப்பாற்பட்டதை என்ன செய்ய? அது முக்கியமா என்ன? உணர்வுகளை அளந்து பார்க்க முடியாது. மனதை அளந்து பார்க்க முடியாது, எனவேதான் தீவிர அறிவியலாளர்கள் உளவியலையும் இயங்குமுறை அறிவியலையும் போலி அறிவியல்கள் என்று சொல்கின்றனர். கடவுளை அளந்து பார்க்க முடியாது. எனவே, விஞ்ஞானியைப் பொறுத்தவரை, கடவுள் மெய்யல்ல, நம்பிக்கை என்று வேண்டுமானால் சொல்லலாம். இது முஸ்லிம்களுக்கு எரிச்சலாக இருக்கிறது, அவர்களைப் பொறுத்தவரை கடவுள் இருப்பது உண்மை. அளந்து பார்க்கக்கூடிய உண்மையாக இல்லாமல் இருக்கலாம், ஆனாலும்கூட உண்மைதான். இது அகவயப்பட்ட உண்மை. என் உண்மை. அது முக்கியமா இல்லையா?  
     
    அகவயப்பட்ட உண்மையை நாம் எங்கு வைத்து பேச முடியும்: மெய் என்றா புனைவு என்றா? சிலர் தங்களுக்கு என்று “கருத்துச் சுதந்திரம்” என்பதை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், வேறு சிலர் தங்களுக்கு என்று, “ஒரு கடவுள், மெய்யான ஒரே கடவுள்” எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டுமே அகவயப்பட்ட உண்மைகள். இவை நம் யதார்த்தத்துக்கு வடிவம் தருகின்றன. இவை முக்கியமாக இருக்கின்றன. ஆனால் நமக்குத்தான் இவற்றை எங்கு வைத்துப் புரிந்து கொள்வது என்பது தெரியாது. ஏன் என்றால், இவற்றை அளந்து பார்க்க முடியாது.  
     
    சார்லியின் கேலிச்சித்திரங்கள் முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்படுத்திய காயத்தை நம்மால் கணக்கெடுக்க முடியாது. முஸ்லிம் சமுதாயத்தின் கூருணர்வுகள், அல்லது மிகையான கூருணர்வுகள் எவ்வளவு என்று நம்மால் மதிப்பிட முடியாது. ஆனால், கொலைகாரர்களின் செயல்களால் ஏற்பட்ட விளைவுகளைக் கணக்கெடுக்க முடியும். எனவே, நாம் சுலபமாய் வன்முறையைக் கண்டனம் செய்ய முடியும். காயப்படுத்தியது, கோபப்படுத்தியது, அவமானப்படுத்தியது என்பதே ஒரு சிலருக்கு துப்பாக்கிகளைத் தூக்கப் போதுமானதாக இருந்தது என்பது அளந்து பார்க்க முடியாத அனுமானம், நம்பிக்கை. பகுத்தறிவு பேசும் நாத்திகனுக்கு நம்பிக்கை என்பது கேலிக்குரிய விஷயம். 
     
    புத்திஜீவி தன் சொற்களால் காயப்படுத்த முடியும். போர்வீரன் தன் ஆயுதங்களால் காயப்படுத்த முடியும். முன்னது ஏற்புடையதாய் உள்ள, ஏன் ஊக்குவிப்பும் அளிக்கப்படும், உலகில் நாம் வாழ்கிறோம்,  பின்னது அப்படியல்ல. உலகளாவிய கிராமத்தில் பாவிக்கப்படும் நவ-பார்ப்பனியம் இது. சிந்திக்கத் தெரிந்தவர்களும் பேசத் தெரிந்தவர்களும், அடிப்பவர்களையும் கொலை செய்பவர்களையும்விட உயர்ந்தவர்கள்- சொல்லம்புகளால் ஏற்பட்ட காயங்கள் ஆழமானவையாகவும், நீண்டகால தாக்கம் கொண்டவையாகவும், ஆறாவடுவாய் எக்காலத்துக்கும் புண்படுத்துபவையாகவும் இருந்தாலும் இது இப்படிதான். அகிம்சையைக் கடைபிடித்த சாது காந்தி, இவ்வாறே மூர்க்க வன்முறையாளன் கோட்சேவுக்கு எதிராய் நிறுத்தப்படுகிறார். புத்திஜீவியான எனக்கு, கோபத்தைத் தூண்டும் உரிமை இருக்கிறது; ஆனால் வன்முறையை மட்டுமே அறிந்த, நாகரிகமற்ற உனக்கு, கோபப்படும் உரிமை கிடையாது, உனக்குத் தெரிந்த ஒரே வழியில் பதில் சொல்லும் உரிமை கிடையாது. அப்படியே உனக்கு கோபம் வந்தாலும், நீ என் மொழியில்தான் பேச வேண்டும், உன் மொழியில் அல்ல, மூளையைக் கொண்டு, உடல் வலுவைக் கொண்டல்ல- ஏனெனில் மூளையே உயர்ந்தது. புத்திஜீவி பிராமணன் நான்தான் விதிகளை வரைகிறேன். உனக்கு இது புரிகிறதா?
     
    அகிம்சையே புதுக்கடவுள், உண்மையான ஒரே கடவுள். நாம் வன்முறை என்று சொல்லும்போது, உடலையும் உடைமையையும் தாக்கும் நாகரிகமற்றவனின் வன்முறையை மட்டுமே பேசுகிறோம். புத்திஜீவிகளாய் உள்ள உயர்ந்தோர் ஏற்படுத்தும் மனக்காயங்கள் வன்முறையாய்க் கருதப்படுவதில்லை. எனவே  புத்திஜீவிகள் என்ற வகையில் இந்து சமயத்தைத் திரைப்படங்களில் (ராஜ்குமார் ஹிரானியும் ஆமிர் கானும் எடுத்த பிகே), புத்தகங்களில் (வெண்டி டோனிகரின் “இந்துகள்: ஒரு மாற்று வரலாறு) கேலி செய்ய நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டுமென்றோ, புத்தகங்களைக் கூழாக்க வேண்டுமென்றோ போராடுபவர்கள் மூர்க்கர்கள், நாகரிகமற்றவர்கள், வன்முறையாளர்கள், குடிமைச் சமூகச் சொல்லாடலின் எதிரிகள். சார்லி கொலைகாரர்கள் அளவுக்கு மோசமில்லை, ஆனால் இவர்களும் அந்தப் பாதையில் போவதாகத்தான் தெரிகிறது.
     
    சிந்தனையாளனின் இடம்
     
    விவாதங்களை, ரத்தம் சிந்தாத மூர்க்கப் போர்களாய், உளப் போர்களாய்க் காண நாம் மறுக்கிறோம். பட்டிமன்றங்களைப் போர்க்களங்களாக நாம் பார்ப்பதில்லை. உளச் சித்திரவதை என்பது மெய்யல்ல, அது ஒரு கருத்துருவாக்கம் மட்டுமே என்று சொல்லப்படுகிறது, அதை மதிப்பிட முடியாது, எனவே நிருபிக்க முடியாது. தன் மனைவியின் மனதைச் சித்திரவதைக்கு உள்ளாக்கும் கணவனைக் கைது செய்யவே முடியாது; மனைவியை அடிக்கும் கணவனைப் பிடித்து விடலாம். நாம்  பின்னதைப் புரிந்துணர்வோடு பார்க்கிறோம், ஆனால் முன்னதைப் பொருட்படுத்துவதில்லை (அவள் ஓவர் சென்சிடிவாக இருக்கிறாள் என்று சமாதானம் சொல்கிறோம்). உளச்சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட மனைவி தன் கணவனைக் கொலை செய்தால், அவளுக்குதான் சிறைத்தண்டனை அளிப்போம், கணவனுக்கு அல்ல. அவளது குற்றத்தை நிருபிக்க முடியும், அவனது குற்றத்துக்கு எதுவும் செய்ய முடியாது.
     
    சிந்தனையாளன் வினையாற்றுவதில்லை என்று சொல்கிறோம். எனவே, சிந்தனையாளனால் தூண்டப்பட்ட கொலைகள் கண்டுகொள்ளப்படாமல் போகின்றன. உடலின் மொழி மட்டுமே அறிந்த நாகரிகமற்றவன் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும்போது, சிந்தனையாளன்- வன்முறைக்கு வித்திட்டவன்-, சிரித்துக் கொண்டிருக்கிறான். உள்ளத்தின் மீது தொடுக்கப்பட்ட போர் இரக்கமற்ற துல்லியத்துடன் தொடர்கிறது.
     
    மாயை என்பதன் வேர்ச்சொல் சமஸ்கிருதத்தில் மா, மதிப்பிடு, என்பதாகும். நாம் அதை காட்சிப்பிழை அல்லது பிரமை என்று புரிந்து கொள்கிறோம். ஆனால், சரியாகச் சொன்னால், மதிப்பீடுகளை கொண்டு கட்டமைக்கப்பட்ட உலகம் என்றுதான் பொருட்படும். இவ்வாறாகவே, அறிவியல் புலம், பகுத்தறிவின் பாற்பட்ட புலம், மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்த உலகம், மாயை. இது நல்லதுமில்லை, கெட்டதுமில்லை. இது ஒரு தீர்ப்பல்ல. இது ஓர் அவதானிப்பு. அளவைகளால் அமைந்த உலகம் தனக்குப் புலப்படுவதை மட்டுமே கூர்ந்து நோக்கும், புலன்களுக்கு அப்பாற்பட்டவற்றைக் காணும் பார்வையை இழக்கும். மதிப்பீட்டு உண்மையை முழுமையற்ற மெய்யெனக் கருதாமல், முழுமெய்யெனக் கொள்ளும். 
     
    இறைத்தூதரைத் தார்மிக அறவுணர்வுடன் கெக்கலித்துக் கேலி செய்பவர்கள் மாயையில் இருக்கின்றனர். அதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு கோபப்படுபவர்களும் மாயையில் இருக்கின்றனர். கொலைகாரன் மாயையில் இருக்கிறான், கொலையுண்டவனும் மாயையில் இருக்கிறான். இவர்களில் ஒருவனை பலியுண்டவனாகவும் மற்றவனைக் கொடியவனாகவும் கருதுபவர்களும் மாயையில் இருக்கின்றனர். நாம் அனைவரும் நம்மால் உருவாக்கப்பட்ட யதார்த்தங்களில் கட்டுண்டிருக்கிறோம்; சிலர், அளவைகள் அடிப்படையிலும் சிலர் மதிப்பீடுகளைப் பொருட்படுத்தாமலும் வாழ்கிறோம். ஒவ்வொருவரும் பிறரை நிராகரிப்பதில் ஆவலாய் இருக்கிறோம், அவர்களை ஒன்றுமில்லாமல் செய்யப் பார்க்கிறோம்: மாற்றான் நாகரிகமற்றவனாக, கல்வி கற்பிக்கப்படவேண்டியவனாக இருக்கிறான். கொலை செய்யப்பட வேண்டிய புத்திஜீவியாகவும் மாற்றான் இருக்கிறான்.
     
    அடிப்படையில், மாயையே நம்மை மதிப்பிடச் செய்கிறது. ஏனெனில், நாம் அளவிடும்போது, எது பெரிது எது சிறிது என்றும் எது மேல் எது கீழ் என்றும் எது சரி எது தவறு என்றும் எது முக்கியம் எது முக்கியமில்லை என்றும் யோசிக்கிறோம். வெவ்வேறு அளவைகள் வெவ்வேறு மதிப்பீடுகளுக்குக கொண்டு செல்கின்றன. தான் ஒரு ஹீரோ என்றும் தியாகி என்றும் வெண்டி டோனிகர் நம்புகிறார், தன் எழுத்தைக் கொண்டு சபால்டர்ன் இந்தியனுக்காக அவர் போராடுவதாய் நம்புகிறார். அவர் சனாதன தர்மத்தை வேண்டுமென்றே பிழையாய் புரிந்துகொள்வதை எதிர்க்கும் ஹீரோ என்று தீனநாத் பத்ரா நம்புகிறார். பிகே தடை செய்யப்பட வேண்டும் என்று கோரும் உரிமை தனக்கு உள்ளது என்று பாபா ராம்தேவ் எண்ணுகிறார். நாம் நினைத்த மாதிரியே, கருத்துச் சுதந்திரம், பகுத்தறிவு என்று பதில் சொல்லிக் கொண்டு, அந்தத் திரைப்படத்தைத் தயாரித்தவர்கள் சிரித்தபடியே சில்லறையை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். எல்லாரும் தத்தம் மாயையில் சரியாகவே இருக்கின்றனர்.
     
    ஒவ்வொரு வினைக்கும் விளைவுண்டு. விளைவுகள் நல்லவையாக இருக்கலாம், அல்லது தீயவையாக இருக்கலாம் – ஆனால்  பின்னோக்கியே அதை அறிய முடியும். புத்தொளிக் காலமே காலனியக் காலமாகவும் இருந்தது. உலக யுத்தங்கள் முதல் உறைபனி யுத்தங்கள் வரை, இருபதாம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான யுத்தங்கள், சமயச் சார்பற்றவை. வன்முறையற்ற சிந்தனை, வன்முறையற்ற சொற்களாய் வெளிப்பட்டு வன்முறைச் செயலுக்குக் காரணமாகிறது. கனியை அளவிட முடியும், விதையை அளந்தறிய முடியாது. வித்து வேறு கனி வேறு என்றும், எண்ணம் வேறு செயல் வேறு என்றும் பிரித்துப் பார்ப்பது வினையையும் எதிர்வினையையும் பிரித்துப் பார்ப்பது போன்றது. இதன் விளைவாய் தவறான புரிதலுக்கு வருகிறோம், தவறான தீர்வுகளை அளிக்கிறோம். கொலைகாரன் கருத்தை அழிப்பதில்லை. கருத்து மேலும் பல கொலைகாரர்களை உருவாக்குகிறது. 
     
    வழியோடு போவது வழியோடே வரும். வன்முறைக்கு எதிரான வெஞ்சினம் கேலிச்சித்திரங்களுக்கு எதிரான வெஞ்சினத்தை வளர்க்கிறது. இந்து தத்துவம் (இந்துத்வ தத்துவமல்ல), இதை கர்மவினை என்று அழைக்கிறது. வன்முறையற்ற வெஞ்சினத்தையோ வன்முறைப் போராட்டங்களையோ கைவிட்டு இந்தச் சுழலை உடைக்கும் விருப்பம் நமக்கில்லை. மாயை, கர்மவினை போன்ற கருத்துருவாக்கங்கள் செயலூக்கத்தைப் பாழாக்குவதால் மேலைமயமாக்கப்பட்ட மனதை அவை கோபப்படுத்துகின்றன: தங்கள் அளவீட்டுக் கருவிகளைக் கொண்டு இந்த உலகைக் காப்பாற்றுவதில் தீர்மானமாக இருப்பவர்கள், மானுட நிலை குறித்த இந்த நுட்பமான அவதானிப்பை, ‘விதி விட்ட வழி என்று இருத்தல்’ என நிராகரிக்கின்றனர். 
     
    முன்னொரு பிறவியில் சிசுபாலன், வைகுந்தக் கதவுகளின் காவலன் ஜெயனாக இருந்தான். சனகாதி ரிஷிகளை அனுமதிக்க மறுத்ததால் கோபித்து, அவன் விஷ்ணுவை விட்டு தொலைவில், பூமியில் பிறக்கக் கடவான், என்று சபித்தனர் ரிஷிகள். தன் வேலையைத்தான் செய்ததாக வாதாடினான் காவல்கார ஜெயன். ஆனால் சாபம் விலகவில்லை, ஜெயன் சிசுபாலனாய்ப் பிறந்தான். விஷ்ணு அவனுக்கு மோட்சம் அளிப்பதாக வாக்கு கொடுத்திருந்தார், தான் பூமியை விட்டுச் சீக்கிரம் செல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் சிசுபாலன், வைதலைக் கொண்டே வாழ்த்தும் விபரீத பக்தியில் ஈடுபட்டான். எனவே அவன் கிருஷ்ணனை ஏசினான், கிருஷ்ணன்தான் விஷ்ணு என்பதையும் தன் ஏச்சு கிருஷ்ணனை வினையாற்றச் செய்யும் என்பதையும் அவன் நன்றாகவே அறிந்திருந்தான். மன்னிப்புக்கு ஓர் எல்லையுண்டு. ஆனால் அன்புக்கு எல்லைகள் இருக்க முடியாது.
     
     
    (Devdutt Pattanaik writes and lectures on mythology in modern times. Visit: www.devdutt.com )
     

    தமிழாக்கம் – நட்பாஸ்