Blog

  • The Door Keeper 2

    The resting mind
    was happy.
    It was soaking
    merrily in imagination.
    To explain to itself
    in its imagination
    scenes to come
    in the outside world
    is its favourite game.
    Without prior notice,
    the mind’s climate
    changed.
    A small depression
    was formed.
    There was the danger
    of its enlargement.
    To turn towards
    disastrous consequences,
    changes came
    into the screenplay.
    Fear spread
    and chemicals
    started to secrete
    from nerves.
    I instructed the mind
    to freeze the action
    and stop making noises.
    Take deep breaths,
    the brain ordered.
    I drove away
    the stale breath
    that lurked
    inside the lungs
    making the mind
    subservient
    to its command,
    thrust in feelings of fear
    and watched.
    Fresh breath
    filled in,
    expelled,
    new breath
    inhaled again,
    the lungs acted
    with alertness.
    Observing
    regular breathing,
    I was listening
    to the silent
    beat of the heart.
    I told the motionless mind
    to start the thinking process
    again.
    Scenes of the mind
    and conversations
    continued.
    My observation continues.
    I am observing
    if tiny disturbances
    which set of
    the feeling of fear
    in the mindspace
    are forming anywhere.

     

    Translated by Sri N Vatsa

    To read the original –> https://hemgan.blog/2012/06/10/வாயிற்காவலன்-2-2/

  • ஏழு முப்பத்தாறு

    அவள் மிக நிதானமாக  தன் உடைகளைக் களைந்து கொண்டிருந்தாள். படுக்கையறையின் விளக்கு பளிச்சென எரிந்து கொண்டிருந்தது. பீரோவில் பதிக்கப்பட்டிருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்று தன் உடலைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். அவன்  தயாராக இருந்தான். அவனுடைய வேகத்தை உதாசீனப்படுத்துபவள் போல் தன் கூந்தலால் தன் மார்பை மூடிக்கொண்டு கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிம்பத்தின் அழகை பருகியபடி நின்றிருந்தாள். மெள்ள அவனருகில் வந்து அவள் படுத்துக் கொண்ட அடுத்த வினாடி ஆடு மேயும் புல் தரையானாள். அவன் அவள் மேல் இயங்கினான். இரவு நேர அமைதியிலும் விரையும் உணர்வை அவனால் நிறுத்த முடிவதில்லை. சதாசர்வ வினாடியும் அவனுள் ரயில் ஓடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. மெதுவாக நிதானமாக காரியத்தில் லயித்து செய்வதன் மகிழ்ச்சியை கைவிட்டு வருடங்களாகிவிட்டன. அவளின் அதிஅற்புதமான உடலின் கீழ்ப்புறத்தில் முகம் பதித்து கொண்டிருந்தாலும் செய்கையில் லயிக்காமல் கவனம் அளைந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட  வேண்டிய அலுவலகப்பணி போல் பதற்றம் படர்ந்ததோர், அர்த்தமற்ற வேகம் அவனுடைய பிரசன்னத்தை உறிஞ்சியது.

    அவள் நிதானமாக தன் இரு கைகளை நகர்த்தி தலைக்கு மேல் வைத்துக் கொண்டாள். பிறகு சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை  கையில் வைத்துக் கொண்டு தன் முக பிம்பத்தை விதவிதமாக புன்னகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள். இடப்புறம் இருந்த ஒரு கண்ணாடிப்பேழையிலிருந்து ஒரு தின்பண்டத்தை எடுத்து வாயில் போட்டுச் சவைத்துக்  கொண்டிருந்தாள். அவன் உச்சத்துக்குப் போவது போல் தெரிந்த சமயத்தில் மட்டும் லேசாக அவள் கவனம் சிதறியது. ஒரேயொரு முறை “ஹ்ம்” என்று முனகினாள். அவள் முனகும் சத்தம் அவன் காதில் விழுந்ததும் சிறு மகிழ்ச்சி அவனுள். பின்னர் கடமையை முடித்த உணர்வில் தன் கட்டுப்பாட்டை சிறிது இழக்கும் சுதந்திரம் கிட்டிவிட்டதாக எண்ணி பரவசத்தை ஒரு நொடி அனுபவித்து விட்டு அவளின் வலப்புறம் வந்து விழுந்தான். சுவாசம் இரைந்தது. அவன் மெல்லிய தொந்தி மேலும் கீழுமாக விம்மியது. கழுத்தில் வியர்வை அருவி. அயர்ந்து கண்ணை மூடினான்  

    +++++

    ஊதுபத்தி முத்தமிட்டதும் பட்டாசுத் திரியின் நீளத்தைக் குறைத்துக் கொண்டு தீக்கனல் நகர்வது போல் உஸ்-ஸென ஒரு சத்தம் கேட்டது. கனகம் மறைந்து கொண்டிருந்தாள். கால்விரல்கள் தொடங்கி ஒவ்வொரு அங்கமாக அவள் மறைந்து கொண்டிருந்தாள். அவள் கண்கள் அகல விரிந்த வண்ணம் அவனை நோக்கி எள்ளி நகையாடுவது போல் அவனைப்பார்த்தன. அவன் “கனகம்..கனகம்” என்று கூவினான். அவள் சிரம் மட்டும் மறைவதற்கு மிச்சம். “சிவா…சென்று வருகிறேன்” என்று சொன்னாள். “எங்கே செல்கிறாய் கனகம்?” என்று கத்தினான். “அப்பா வீட்டுக்கு…நாசிக் செல்கிறேன்..என்னைத் தேடாதீர்கள்”. கனகம் மறைவதை சிவாவால் தடுக்க முடியவில்லை.

    வேட்டியை அணிந்து படுக்கையறை கதவை திறந்து முன்னறைக்கு வந்தான். விரிக்கப்பட்ட பாய் மேல் படுத்துக் கொண்டிருந்த அவன் வாரிசுகளையும் காணவில்லை.    

    ஏழு முப்பத்தியாறு மணிக்கு முதலாம் பிளாட்பார்மிலிருந்து புறப்பட்டு சி எஸ் டி செல்லும் ஸ்லோ வண்டி தான் அவன் நிரந்தரமாய் பயணம் செய்யும் மும்பை லோக்கல். புளி முட்டையென அடைந்தபடி பயணம் செய்யும் மும்பைகர்களுக்கு ஜன்னலோர இருக்கை ஒரு சிம்மாசனம் மாதிரி. அவனுக்கு இன்று சிம்மாசனம். வழக்கமாய் அவனுடன் பயணம் செய்யும் சுபா அன்று வரவில்லை. அவள் உட்காரும் ஜன்னலோர இருக்கையில் இன்று சிவா அமர்ந்து கொண்டான். அவன் உட்காரும் இடத்தில் பருமனான பீகார்க்காரர். “சுனியேகா…ஹம் கா கெஹ்ரெ ஹெய்ன்!” என்று யாருடனோ போனில் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். உரையாடலை முடித்தவுடன் அழுத்தமாக உரசி அவனை அரைக்க ஆரம்பித்தார். எல்லாம் சில நிமிடங்களுக்குத்தான். ரயில் கிளம்பி வேகம் பிடித்ததும் எத்தனை அசவுகர்யத்திலும் அவரவர் உட்கார்ந்திருக்கும் அல்லது நின்றிருக்கும் இடத்தை சுற்றி கண் தெரியா வட்டத்துக்குள் அடங்கிவிடுவர்.

    சுபா அன்று ஏன் வரவில்லை? அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்கப் போவது பற்றி முன்னதாகவே அவள் சொல்லிவிடுவாள். இருவரும் சேர்ந்து பயணம் செய்ய ஆரம்பித்த நாளிலிருந்து ஒரே ஒரு முறை மட்டும் அவள் சொல்லவில்லை. அப்போது அவள் தொடர்ந்து ஏழு-எட்டு நாட்கள் வரவில்லை. திரும்பி வந்த போது கணவன் ரிதேஷை மருத்துவமனையில் சேர்த்திருந்தது என்று சொன்னாள். அவன் அதிகம் அதைப்பற்றி துருவித்துருவி கேட்கவில்லை. குடும்ப விஷயங்களை பற்றி அதிகம் விசாரிக்காத அவனின் குணம் அவளுக்கு ரொம்பவும் பிடித்ததாக அவள் அடிக்கடி சொல்வாள்.

    ரிதேஷ் சிவாவுக்கும் சிநேகிதன். பல வருடங்களாக நண்பர்கள். மும்பை வந்த புதிதில் ஒரே அறையில் தங்கிய நாட்களிலிருந்தான நட்பு. சுபாவை ரிதேஷின் திருமணத்திற்குப் பிறகே அறிவான். ஆனால் சிவாவின் தோழி என்று ஆனதெல்லாம் அண்மைய தினங்களில் தான். அதற்கு முன்னர் நண்பனின் மனைவி என்ற மரியாதையான தூரத்தில் தான் பழக்கம். விபத்தாக ஒரு நாள் அவளை ஏழு முப்பத்தியாறு லோக்கலில் சந்திக்க நேர்ந்தது. இதே மாதிரியான விபத்துச் சந்திப்பு தொடர்ந்து மூன்று முறை நிகழ்ந்தது. அதற்குப் பின்னர் அவர்களின் சந்திப்புகள் விபத்தாக இல்லாமல் திட்டமிட்டே தொடர்ந்தன. சுபா அவனுக்காக குறிப்பிட்ட இடத்தில் காத்திருப்பாள். வண்டி பிளாட்பாரத்துக்கு வந்த பின்னர் முட்டியடித்து ஏறி சுபாவுக்காக ஜன்னலோர இருக்கையை பிடித்து வைப்பான் சிவா. எதிரெதிர் சீட்டிலோ அல்லது பக்கத்திலோ உட்கார்ந்து கொள்வார்கள். எதிர் சீட்டை விட பக்கத்தில் உட்கார்ந்த நாட்கள் அதிகம். மாலையில் வேலை நேரம் முடிந்ததும் இருவரும் சேர்ந்தே வருவார்கள் என்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பும் லோக்கல் என்றில்லாமல் எந்த நேரம் அவர்கள் சி எஸ் டி வருகிறார்களோ அதைப் பொறுத்து இரயிலை பிடிப்பார்கள்.

    மழை கொட்டும் நாட்களில் கூட இருவரும் ஒரே இரயிலில் தான் சேர்ந்து பயணிப்பார்கள். அப்படியான ஒரு மழை நாளில் நகரம் நீரில் மூழ்கிய போது சிவாவும் சுபாவும் தத்தம் அலுவலகத்திலேயே தங்கியிருக்க வேண்டியதாயிற்று. அன்றிரவு அவர்கள் இருவரும் தென்மும்பை முழுக்க மகிழ்ச்சியாய் காலாற நடந்தார்கள். கேட் வே ஆப் இந்தியாவில் சற்று நேரம் கடலைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். இரவு பனிரெண்டு மணிக்கு முன்னதாக தத்தம் அலுவலகத்துக்கு திரும்பினர். அடுத்த நாள் மதியம் ரயில்கள் ஒடத் தொடங்கியதும் இருவரும் சேர்ந்து தானே திரும்பினர். ரிதேஷ் கார் எடுத்துக் கொண்டு வந்து தானே ஸ்டேஷனுக்கு வெளியே காத்திருந்தபடியால் சுபா வெளியேறி பத்து நிமிடங்களுக்குப் பின்பு சிவா ஸ்டேஷனுக்கு வெளியே வந்தான். பெருமழை நாளிரவு காற்றாட அவர்கள் தென்மும்பையை வலம் வந்தபோது சுபா சில நிமிடங்களுக்கு தன் கையை அவனுடைய கையுடன் கோர்த்துக் கொண்டு நடந்ததை அடிக்கடி நினைத்துப் பார்த்து பரவசமடைவான்.

    சிவாவின் மனைவி கனகத்துக்கு சுபாவைக் கண்டால் சுத்தமாகப் பிடிக்காது. ரிதேஷும் சுபாவும் அவன் வீட்டுக்கு வருவது சில வருடங்கள் முன்னர் நின்றுவிட்டது. சிவாவுக்கு இரண்டாம் குழந்தை பிறந்த போது சுபா நடந்து கொண்ட விதம் விசித்திரமாயிருந்தது. இரண்டாம் குழந்தைக்கு கர்ப்பமானதை பற்றி ஏன் தனக்கு தெரிவிக்கவில்லை என்று கனகத்தை கடிந்து கொண்டாள். இரண்டு தோழிகள் செல்லமாய் கோபித்துக் கொள்வது போல இருக்கவில்லை அது. சிவாவும் ரிதேஷும் தான் நண்பர்கள். கனகத்துக்கும் சுபாவுக்கும் நட்பெல்லாம் கிடையாது. கணவர்கள் நண்பர்கள் என்பதால் ஒரு தொடர்பு. அவ்வளவே. “தனக்கு இன்னும் குழந்தை பொறக்கலையேன்னு ஒரு பொறாமை” என்று கனகம் சிவா காதில் முணுமுணுத்தது அநேகமாக ரிதேஷ் – சுபா காதில் விழுந்திருக்கும். அதனாலோ என்னமோ சுபாவும் ரிதேஷும் சிவா வீட்டுக்கு வந்தது அன்றே கடைசி.

    இரு குடும்பங்களுக்கிடையிலான தூரம் சுபா மற்றும் சிவாவுக்கிடையிலான ரகசிய நட்புக்கு ஏதுவாக இருந்தது. “என்ன! ரயிலில் மட்டும் சந்தித்துக் கொள்ளும் அளவுக்குச் சுருங்கிவிட்டது நம் நட்பு” என்று அவ்வப்போது குறைப்பட்டுக் கொள்வது போல் சொல்வாள். “ஆனாலும் இது எனக்கு பிடித்து தான் இருக்கு” என்று அவன் தன் தோளால் இடிப்பாள்.

    சில நாட்கள் அவள் வாய் பேசாமலேயே பயணிப்பாள். என்ன ஆச்சு என்று அவன் கேட்டால் பதில் ஏதும் சொல்ல மாட்டாள். அவள் கண்கள் பனித்தது போல் இருக்கும். “ரிதேஷோட சண்டையா?” என்பான். அவள் “ரிதேஷோட என்னிக்கும் சண்டை போட்டது கிடையாது. சாது அவர். கூட தங்கியிருக்கே மாமியார்க் கிழவி தான்” என்று சொல்லி ஜன்னலுக்கு வெளியே பார்வையை பதித்துக் கொள்வாள்.

    தாதர் ஸ்டேஷன் வந்த போது பருமனான பீஹார்க்காரரின் குரட்டையொலி உச்சத்தை எட்டியிருந்தது. தாதர் ஸ்டேஷனில் பாதி கம்பார்ட்மெண்ட் காலியானது. தன்னிருக்கையிலிருந்து சிவா எழுந்து நின்று கொண்டான்.

    சிவா தன் தலைமை அதிகாரியிடம் ஒரு சந்திப்பில் இருந்த போது சுபா எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தாள். அந்த எஸ் எம் எஸ் படிக்கப்படாமலே இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு எஸ் எம் எஸ். போன் அதிர்தலை அப்போது தான் ‘கவனித்தான். அனுப்புனரின் பெயரை பார்த்ததும் அவனுள் ஓர் உற்சாகம். சந்திப்பு முடிவடைந்த பின் சிகரெட் இடைவெளி எடுத்துக் கொள்வதற்காக அலுவலக வாசலுக்கு வந்தான்.

    முதல் எஸ் எம் எஸ் : “ஆஃபிஸ் போயிட்டியா…மாமியாரை கூப்டுகிட்டு அவர் ஹைதராபாத் போயிருக்கார்.. என் நாத்தனார் வீட்டுக்கு…கனகம் நாசிக் போயிட்டதா சொன்னியே, அவள் என்னிக்கு திரும்பறா?…ராத்திரி வீட்டுக்கு சாப்பிட வாயேன்”

    இரண்டாம் எஸ் எம் எஸ் : “என்ன பிசியா? மாமியார்க் கிழவி போன் பண்ணிச்சு…நான் லேடி டாக்டர் கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கேன்..போய்ட்டு வரேன்…ஒரு மணி நேரத்துல திரும்பி வருவேன்”

    சிகரெட் புகைத்து முடித்து விட்டு கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தான். நகைச்சுவை எனும் போர்வையில் நேரடியாகவும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளில் மறைமுகமாகவும் அவன் அவளிடம் பலமுறை வெளிப்படுத்திய விருப்பமும் வேண்டுகோளும் அது தான். இத்தனை நாள் அவற்றையெல்லாம் புறக்கணித்து வந்திருக்கிறாள். இன்று அவளாகவே வீட்டுக்கு அழைக்கிறாள். ரிதேஷும் அவன் அம்மாவும் இதற்கு முன்னர் பலமுறை ஹைதராபாத் சென்றிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அவன் அவள் வீட்டுக்கு வரும் விஷயத்தை பிரஸ்தாபித்தபோது “டோன்ட் டாக் நான்-சென்ஸ்” என்று சொல்லிவிட்டவள் இன்று ஏன் அழைக்கிறாள்? எண்ணங்களை அனுபவமாக மாற்றும் வாய்ப்பா இல்லையேல் பெண்டாட்டி ஊருக்கு சென்றிருப்பதால் தினமும் ஓட்டலில் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்வதற்குப் பதிலாக ஒருநாளாவது வீட்டுச் சாப்பாடு சாப்பிடட்டுமே என்ற கரிசனமா? என்னவும் நடக்கலாம் என்னும் சாத்தியத்தை யோசிக்கையில் அவனுள் ஒரு சிலிர்ப்பு. மொபைல் போனை கையில் வைத்து உருட்டிக் கொண்டே யோசித்தான்.

    ஏழாம் மாடியில் இருந்த பிளாட்டின் மணியை அழுத்தினேன். ஜாளிக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மெயின் கதவு திறந்ததும் அவள் தெரிந்தாள். இடைவரை நீளும் கூந்தலில் அவள் வைத்துக் கொண்டிருந்த மல்லிகைப் பூக்களின் வாசத்தை நுகர்வதாக உணர்ந்தேன். நான் உள்ளே நுழைந்ததும் கதவு சார்த்தப்பட்டது. எனக்கு வியர்த்திருந்தது. ஹாலில் ஏஸி இயங்கும் சத்தம் லேசாக வந்தது. கருப்பு நிற சேலை அணிந்திருந்தாள். வெண்முத்துப் பல் தெரிய புன்னகைத்தாள்.

    கை, கால் அலம்பிக் கொள்ள டவல் கொடுத்தாள். முகம் கழுவி ஈரத்தை துடைக்கும் போது ஒரு கணத்துக்கு நான் எங்கிருக்கிறேன் என்ற கேள்வி எழுந்தது. “க….” என்று வாயைத் திறப்பதற்குள் என் பார்வையில் சுபா தெரிந்தாள். சுபாவுடன் அவள் வீட்டில் தனியாக இருக்கிறோம் என்ற எண்ணம் என்னுள் ஊடுருவியது.

    அவள் எனக்கு சாதம் பரிமாறிக் கொண்டிருக்கிறாள். சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், பாயசம் என்று அமர்க்களமான சமையல். “எதுக்கு இவ்வளவு அயிட்டம்?” என்று சுபாவிடம் கேட்டேன். “முதல் தரம் இல்லையா..அதனால் தான்” என்றாள். அவள் கண்கள் மின்னின. சமையலறை சென்று ஒவ்வொன்றாய் எடுத்து வந்து பரிமாறும் போது அவள் நடையில் இருந்த துள்ளல் கவனிக்கக் கூடியதாய் இருந்தது. “ நீ சாப்பிடலியா?” என்று கேட்டேன். “இல்லை..விரதம்…உப்பில்லாத அயிட்டம் தான் சாப்பிடுவேன்” என்றாள்.

    ரசம் சாப்பிட்ட பிறகு தயிர் பரிமாறவில்லை. தட்டில் சாதத்தை போட்டு தயிருக்கு பதிலாக இளஞ்சூடான பாலை ஊற்றினாள். “உவ்வே…என்ன செய்கிறாய்?” என்று கேட்கிறேன். “ ஏன் பால் சாதம் சின்ன வயசிலே சாப்பிட்டதில்லையாக்கும்?” என்று கேட்டுக் கண்ணடிக்கிறாள். அவள் என்னருகே வந்து தட்டில் சர்க்கரையைத் தூவி தன் கையால் பிசையும் போது அவள் உடல் லேசாக என்னை மோதுகிறது. அவள் புடவையின் தலைப்பு சொருகிய இடுப்பின் வெண்மை என்னை சுண்டியிழுக்கிறது. இரண்டு கவளத்தை எனக்கு ஊட்டி விடுகிறாள். நான் போதும் என்கிறேன். “இன்னும் ஒரு வாய் பால் சாதம் சாப்பிட்டாக வேண்டும்” என்று சொல்லி என் தலையை பிடித்துக் கொண்டு என் வாயில் திணிக்கிறாள். “தட்ஸ் லைக் எ குட் பாய்” என்று சொல்லி சிரிக்கிறாள். தட்டில் எஞ்சியிருந்த பால் சாதத்தை அவள் சாப்பிட்டு முடிக்கிறாள்.

    அவள் பாத்திரங்களை கழுவி முடித்து சமையலறையை துடைத்து முடிக்கும் வரை ஹாலில் காத்திருக்கிறேன். “டீ வி வேணும்னா போட்டுக்குங்க” என்கிறாள். “இல்லை…பரவாயில்லை” என்று சொல்லிவிட்டு சோபாவுக்குப் பக்கத்தில் இருந்த ஏதோவொரு ஆங்கிலப்பத்திரிக்கையையின் பக்கங்களைப்  புரட்டுகிறேன்.

    வெண்ணிற கூந்தல் கொண்ட, உயரமான நடிகை ஒருத்தி ஒற்றை இறகை தன்னிரு கைகளில் ஏந்தி வனப்பு மிக்க தன் முலைகளை  பார்வையாளர்களின் கண்ணில் படாமல் மறைத்தபடி கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருக்கும் அந்த புகைப்படத்தில் பக்கவாட்டில் நின்றிருந்த குட்டையான ஆனால் மிடுக்கான ஒரு நாயகன் நாயகியின் கழுத்தில் முத்தத்தை பதித்துக் கொண்டிருந்தான். அடுத்த பக்கத்தில் வெளியாகியிருந்த படத்தில் அதே நடிகை இம்முறை சிங்காரம் செய்து கொண்டு படுக்கையின் ஒரு தலையணையில் கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள். அந்த தலையணைக்கு இணையான இன்னொரு தலையணையில் அழகான வேலைப்பாடுகள் கொண்ட ஒரு முகமூடி வைக்கப்பட்டிருக்கிறது. மேலை நாடுகளில் வெளியாகியிருந்த ஒரு திரைப்படத்துக்கான விமர்சன கட்டுரையின் அங்கமாக அந்தப் படங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த திரைப்படத்தின் இயக்குனர் படத்தை முடித்துவிட்டு அதன் ரிலீசுக்கு முன்னரே காலமாகியிருந்தார்.

    பாத்திரங்களை தேய்க்கும் சத்தம் வந்து கொண்டிருந்தது. என் முகம் ஆங்கிலப்பத்திரிக்கையின் திரைப்பட விமர்சனக் கட்டுரையின் படங்களில் பதிந்திருக்கிறது. இந்நேரம் சுபா பாத்திரங்ளை தேய்த்து முடித்திருக்க வேண்டுமே….ஐயோ…நேரம் ஓடிக் கொண்டிருக்கிறதே….கையில் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிக்கை ஒரு பாம்பைப் போல என் கைகளில் நெளிந்து கொண்டிருந்தது. சுபாவைப் பார்க்க முடியவில்லை. அவள் சமையலறையிலிருந்து இன்னும் வெளியே வந்தபாடில்லை. “சுபா..சுபா” என்று குரலெழுப்பினேன். அதல பாதாளத்தில் இருந்து ஒலிப்பது மாதிரி ஒலித்த என் குரல் எனக்கே  கேட்கவில்லை. பாத்திரம் தேய்க்கும் ஒலி பூதாகாரமாக வளர்ந்து கொண்டே வந்தது. பத்திரிக்கையை உதறிவிட்டு என் காதை பொத்திக்கொண்டேன்.

    போன் ஒலிக்கிறது. சுபா அழைக்கிறாள். சிவா ஹல்லோ சொன்னதும் சுபாவின் குரல் ஓய்வில்லாமல் ஒலிக்கிறது. “ஹாய்…நேத்து ராத்திரி மாமியாரோட பெரிய சண்டை….ரொம்ப பிடுங்கல் தாங்கல…ஒண்ணு நான் இருக்கணும் இல்லை உங்கம்மா இருக்கணும்னு ரிதேஷ் கிட்ட சொல்லிட்டேன்…பாவம்…எனக்கும் அம்மாவுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு ரொம்ப பாடுபடுகிறான்…ஆனால் என்னை எதிர்த்து அவனால் பேசி விட முடியுமா….கனகம் இன்னும் திரும்பி வரலை தானே?…டின்னர் பிளான் ஓகே தானே?” மூச்சு விடாமல் பேசுகிறாள்.

    “சுபா…கனகத்தோட போன் வந்துது…என் மாமனார் சீரியசா இருக்காராம்…இன்னிக்கி சாயந்திரம் நாசிக் போகணும்”

    “…..”

    “ஹல்லோ…ஹல்லோ”

    லைன் துண்டிக்கப்பட்டுவிட்டது எனப் புரியாமல் சிவா சிறிது நேரம் ஹல்லோ சொல்லிக் கொண்டிருந்தான். ஏன் துண்டித்துவிட்டாள்? நண்பனுடன் வாடிக்கையாகக் கொள்ளும் சிறு பிணக்கா? அல்லது தானழைக்கும் போது பொய்க்காரணம் சொல்லி மறுதலிக்கிறான் என்கிற ஏமாற்றவுணர்வால் தோன்றிய ஆக்ரோஷமா? அவள் திரும்ப போனில் அழைப்பாள் என்ற எதிர்பார்ப்பு நேரமாக ஆக வலுவிழந்து கொண்டே வந்தது. எனினும் ஒரு கடினமான தெரிவைச் செய்ய வேண்டிய ஓர் இக்கட்டான கட்டத்துக்குள் சிக்காமல் வாயில் வந்த பொய்க்காரணம் தன்னைக் காத்தது என்ற தெளிவு அவனுள் நிம்மதியை பிறப்பிக்கச் செய்தது. அத்தெரிவின் அறம் மற்றும் ஒழுக்கப் பரிமாணங்களெல்லாவற்றையும் விட அவனுடைய மறுப்பின் உண்மையான காரணம் என்ன என்பதை அவன் அறிந்தேயிருந்தான். எதிர்பார்ப்புக்கும் அனுபவத்துக்கும் இடையே இருக்கக் கூடிய முரண்…பால் சாதத்தின் எதிர்பார்ப்புச் சுவை அனுபவச் சுவைக்கு மாறாக இருந்தால்….அனுபவத்தின் சுவை வேறாக இருந்து..அது அவனுக்குப் பிடிக்காமல் போய்…இதே முரண் அனுபவம் சுபாவுக்கும் ஏற்பட்டு..நட்பை நிரந்தரமாக இழந்துவிட்டால்….சிறிது நேரம் கழித்து அமைதியாக யோசிக்கும் போது தன்னுடைய முடிவை சுபா நிச்சயம் புரிந்து கொள்வாள் என்று சிவா நம்பினான்.

    அடுத்த நாள் சிவா ஏழு முப்பத்தியாறில் செல்லவில்லை. அன்று அவன் சுபாவின் கண்ணில் படாமல் இருத்தல் சரியாக இருக்கும் என்று எண்ணினான். மூன்றாம் பிளாட்பார்மில் இருந்து கிளம்பும் ஏழு நாற்பத்திரெண்டு விரைவு வண்டியில் ஏறினான்.

    அதற்கடுத்து வந்த நாட்களில் முதல் பிளாட்பார்மில் வழக்கமாக சுபா காத்திருக்கும் இடத்தில் அவன் கண்களில் அவள் தென்படுவதில்லை. ஏழு முப்பத்தியாறில் விபத்துச் சந்திப்புகளும் நிகழ்வதில்லை. தானேயிலும் சரி ; மும்பையிலும் சரி ; சுபா சிவாவின் கண்ணில் படவில்லை. பால் சாதத்தை மன-நாசியில் முகர்ந்தவாறே மனித நெரிசல் மிக்க ஏழு முப்பத்தியாறில் அவன் ரயில் பயணங்கள் தொடர்ந்தன.

    ஒரு நாள் அவன் வீட்டு வாசலை யாரோ தட்டினார்கள். அன்று அவன் அலுவலகம் செல்லவில்லை. நேரத்தை தூங்கிக் கழித்துக் கொண்டிருந்தான். வாசற்கதவை திறந்தவனின் முன்னால் நின்றிருந்தாள் சுபா. அதிர்ச்சியா ஆனந்தமா என்று பகுக்க முடியாத ஓர் உணர்வில் வாயடைத்து நின்றான். அவன்  வாய் திறக்க இயலாதவாறு இருந்தன பின்வந்த சுபாவின் செய்கைகள். கேள்விகள் கேட்கவோ மறுப்பு சொல்லவோ பிணங்கவோ இதுவல்ல நேரம் என்று உணர்ந்தவர்களாய் தாமதிக்காமல் ஒருவரில் ஒருவர் கலக்க ஆரம்பித்தனர். கூடல் நிகழ்வுகள் நேரக்கட்டமைப்புக்கு வெளியே நடந்தன. ரயில் ஓடும் சத்தம் அவனுள் அன்று கேட்கவில்லை. விரைவுணர்வு விடை பெற்றுக் கொண்டது. சுபாவின் கவனம் முகம் பார்க்கும் கண்ணாடியிலோ தின்பண்டம் நிரப்பி வைக்கப்பட்ட பேழையிலோ செல்லவில்லை. பங்கெடுப்பு இருவர் தரப்பிலும் குறைவில்லாமல் இருந்தது. கூடல் நிறைவு பெற்ற பின் சந்தோஷத்தின் உச்சியில் அவனை ஏற்றிச் சென்றதற்கு நன்றி செலுத்துமுகமாக அவளுக்கு இறுதி முத்தம் கொடுத்த போது சுபா கனகமாக மாறியிருந்தாள்.

    +++++

    கனகத்தையே அவன் நோக்கிக் கொண்டிருந்தான்.  புன்னகை நிரந்தரமாக படிந்தது போன்ற பாவனையில் இதழ்களை வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள் கனகம். அப்போது தான் சிவாவுக்கு நேரப்பிரக்ஞை வந்தது. அன்று என்ன கிழமை , இரவா அல்லது பகலா என்ற தெளிவு எதுவும் இல்லாதவனாய். அவன் மேல் படர்ந்திருந்த  கனகத்தின் கரத்தை மெள்ள விலக்கிவிட்டு எழுந்தான்.

    வேட்டியணிந்து படுக்கையறைக் கதவை திறந்து கொண்டு முன்னறைக்கு வந்தான். அவன் வாரிசுகள் இருவரும் பாய்களில் நிம்மதியாய் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். சுவர்க்கடிகாரம் 7.36இல் நின்று போயிருந்தது.     

    (காலச்சுவடு நவம்பர் 18 இதழில் வெளியானது)

  • The Door Keeper

    I saw a doorkeeper
    who made
    the guests wait 
    at the entrance 
    of a crowded eatery
    and let them in
    as the rush became thin.
    Memories that cannot tolerate
    the present state 
    and pass
    without a pause.
    Mull over sufferings
    of the past.
    Think about the future
    and fret.
    Can I get a doorkeeper
    who would stop
    the intrusive memories 
    at the doorstep,
    check and filter through 
    inside?

    English Translation by Sri N Srivatsa

    To read the original : https://hemgan.blog/2012/02/23/வாயிற்காவலன்/


  • நானுந்தான்

    சமகால நிகழ்வுகளைப் பற்றி அதிகம் என் வலையில் எழுதியதில்லை. ஒரே ஒரு முறை எழுதியிருக்கிறேன். நெல்சன் மாண்டேலா காலமான போது எழுதிய பதிவு அது. அதற்கு பலவருடம் முன்னர் என் நெருங்கிய நண்பன் ஒருவன் அகாலமாக இறந்த போது எழுதியது. மாண்டேலா ஓர் ஆதர்சம். அவர் இறப்பை மானிடத்தின் இழப்பாக நோக்கினேன். நண்பனின் மரணம் ஏற்படுத்திய துயர் எழுத்து வடிகாலைத் தேடியது. மாண்டேலா, நண்பன் – இருவரின் மறைவு ஏற்படுத்திய பாதிப்பின் மனத்துயர் போலில்லாமல் இந்த சமகால நிகழ்வு பற்றிய பதிவு எழுதுவதன் நோக்கம் மானசீக குற்றவாளிக் கூண்டில் என்னை நிறுத்தி வைப்பதே.

    சமூக வலைதளங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த பிரச்சனையை மிக அருகில் இருந்து என் அலுவலக சூழலில் கவனித்திருக்கிறேன். அவற்றை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நொய்டாவில் சில வருடங்களுக்கு முன்னால் வேலை பார்த்த சமயத்தில் என் உயர் அதிகாரியினுடைய காரியதரிசியின் அனுபவங்கள், அதே நிறுவனத்தில் ரிசப்ஷனிஸ்ட்டாக இருந்த ஒரு பெண் மேலாண்மை இயக்குனரின் கண்ணில் பட்டு அவரின் உதவியாளராக்கப்பட்டு அதிக சம்பளம் என்ற மகிழ்ச்சி ஒரு வாரம் மட்டுமே நிலைத்து நிற்க கிழிந்த உடைகளுடன் அவள் அழுது கொண்டே ஓடிப் போனதை அனைவரும் பார்த்த நிகழ்வு, மேலும் பல வருடம் முன்னர் புனாவில் வேலை பார்த்த ஒரு குட்டி நிறுவனத்தில் பத்தொன்பது வயது பெண் ஊழியரை தன் காதலி என்று வருவோர் போவோருக்கெல்லாம் சொல்லிக் கொண்டு அவளின் பெயருக்கு களங்கம் விளைவித்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர்….அகமதாபாதில் வேலை பார்த்த நாட்களில் நண்பன் ஒருவன் வேலை பார்த்த நிறுவனத்தில் ஓர் அழகான தமிழ்ப்பெண்ணை தன் சொந்த பண்டமாக உபயோகித்த அந்த நிறுவன முதலாளி…..இத்தகைய நிகழ்வுகள் என் நினைவில் திரும்ப வந்து என்னை இந்நாட்களில் குற்றவுணர்வில் மூழ்கடித்திருக்கின்றன. அமைதி. அதுதான் நான் செய்த குற்றம். தட்டிக் கேட்க முடியா கோழைத்தனம் நம்மை நாம் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை நம்மிடமிருந்து பறித்து விட்டிருக்கிறது. அந்த மீ டு செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் மகளிர் பட்ட வலியை ஆண் வர்க்கத்தின் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் vicarious-ஆக உணர முயல்வார்களா? மேற்சொன்ன படியான நிகழ்வுகள் நடக்குமெனின் அதை கேள்வி கேட்கும் தைரியத்தை ஆண்கள் வளர்த்துக் கொள்வார்களா? வேலையிடத்தில் மகளிரை பாலியல் ரீதியாக நோக்குவதையோ பாலியல் இச்சைகளை பிரஸ்தாபிப்பதையோ அதற்கென அதிகாரத்தை அஸ்திரமாக பயன்படுத்துவதையோ எண்ணிக் கூடப் பார்க்காதவனாக இருப்பேன் என்ற பிரதிக்கினையை ஒவ்வோரு ஆண்மகனும் ஏற்றுக் கொள்வானா? வெறும் வாய்வார்த்தையில் மட்டுமில்லாமல் தன் நடத்தை வாயிலாகவும் பெண்களுக்கு எப்போதும் மரியாதை செலுத்துபவனாக ஆண்கள் இயல்பு மாற்றம் கொள்வார்களா?

    பாலியல் துன்புறுத்தலில் நான் பங்கேற்றிருக்கிறேனா? இந்த கேள்விக்கு பதில் இல்லையென்பதாக இருக்கலாம். ஆனால் அமைதி காத்திருக்கிறேன். இல்லையென்று சொல்ல முடியாது. அன்று காத்த அமைதி என்னையும் அந்த துன்புறுத்தல்களில் பகுதி-பங்கேற்பாளன் ஆக்கியிருக்கிறது. ஆம். குற்றவாளிதான். நானுந்தான்.

  • நசுங்கிய கால் பெருவிரல்

    இரண்டு புற பாறைகள்

    இடைவெளி குறைந்து கொண்டே

    நடுவில் இருக்கும் என்னை

    இறுக்கின.

    மூசசுத் திணறி

    இதயம் துடிதுடித்து

    நசுங்கி மரணிப்பது போல் இருந்த நொடிகளிலும்

    பாறைகள் சிந்திக்குமா என்ற கேள்வி எழுந்தது

    ஒரு பாறை நேரம் ; இன்னொரு பாறை சூழல்

    என்பதாக ஓர் உவமானத்தை யோசித்த போது

    ஒன்று தெளிவானது

    பாறைகளின் சிந்தனை

    என் சிந்தனையன்றோ!

    இல்லையில்லை…பாறைகளே என் சிந்தனையன்றி வேறில்லை

    பலங்கொண்ட புஜங்கொண்டு

    பாறைகளை தள்ளிப் பிளந்தெடுத்து

    கற்களாகப் பிய்த்தெடுத்து ஒவ்வொன்றாக எறியும்

    சிந்தனையைத் தொடங்கிய போது

    பெருமீசை தத்துவாசிரியனின் உருவத்துடன்

    நம்மைக் கொல்லாதிருக்கும் எதுவும்

    நம்மை பலவானாக்கும்

    என்கிற கூற்றைத் தாங்கிய சட்டகப்படம்

    கால் பெருவிரல் மீது விழுந்து

    வலி தாளாமல் நொண்டியடித்த தருணங்களில்

    பாறைகள், புஜங்கள், கற்கள், எறிதல்கள்

    அனைத்தும் மறைந்து

    வலியுணர்வில் குவிந்தது கவனம்

    கவனமும் ஒரு சிந்தனை

    என்ற வாதத்தை பிறகு வைத்துக் கொள்ளலாம்.

  • மனம் கரையும் நேரம்

    நேரம் சரியில்லை என்று சிந்தித்துக் கொண்டிருந்த மனதை யாரோ படித்து விட்டார்கள். ‘களுக்’ என சிரிக்கும் ஓசை. மனம் துணுக்குற்றது.

    ‘யார் சிரித்தது’

    ‘நான் தான் நேரம்’

    ‘நான் நினைத்ததை எப்படி அறிவாய் நீ?’

    ‘உனக்குள்ளேயே இருக்கிறேன் ; உன்னை அறிய மாட்டேனா நான்?’

    ‘எனக்குள் இருக்கிறாயா? இது என்ன நகைச்சுவை?’

    ‘உனக்குள் தான் நான் இருக்கிறேன்…’

    ‘இது எப்படி சாத்தியம்?’

    ‘நடந்தவைகளை எண்ணி குற்றவுணர்வு அடைந்த போதெல்லாம் என்னுடைய நேற்றைய வடிவமாக உன்னுள் நான் இருந்திருக்கிறேன்’

    ‘ம்..’

    ‘வரப்போவனவற்றை எண்ணி நீ பதற்றப்படும் போதெல்லாம் நான் நாளைய வடிவமாக உன்னுள் இருந்திருக்கிறேன்’

    ‘இப்போது எந்த வடிவத்தில் நீ இருக்கிறாய்?’

    ‘இப்போது இருப்பின் வடிவத்தை எய்திக் கொண்டிருக்கிறேன்… …தன்நிலையமைதி உன்னை சூழத் தொடங்கியவுடன் நீ என்னில் கரைந்து இல்லாது போய்விடுவாய் ‘

    சில கணங்களில் கேள்விகள் பதில்கள் எல்லாம் முடிந்து போய் மனமும் நேரமும் சங்கமித்து அடையாளங்களற்று இருப்பில் முழுவதுமாய் கரைந்து போயின.

  • இகீகை

    அலுவலகத்தில் நடக்கவிருந்த டவுன்ஹால் நிகழ்வில் இகீகை என்னும் ஜப்பானிய காட்செப்ட் பற்றி உரையாற்றலாம் என்று அதற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். வாழ்நாள் முழுக்க சலித்துப்போகாமல் ஒரு வேலையை செய்வோமாயின் அது எந்த வேலையாய் இருக்கும்? இந்த வினாவிற்கு விடையளிக்கத் தேவையான எண்ணச்சட்டகத்தை விவரிக்கிறது இகீகை. பதற்றம் மிகுந்த ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருந்தேன். எதற்கெடுத்தாலும் பயம். நிதானமில்லாமல் அவஸ்தைபட்டுக் கொண்டிருந்தது மனம். அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் படபடப்பு. சில சமயம் அழைப்புகளை ஏற்காமல் கூட இருந்திருக்கிறேன். அதிகாரியிடமிருந்து மிரட்டும் மின்னஞ்சல்கள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் விடுமுறை நாட்களில் மின்னஞ்சல்களை பார்க்காமல் இருந்திருக்கிறேன். க்ரோனிக் ஃபடீக் சின்ட்ரோம் மற்றும் அட்ரீனல் ஃபடீக் முதலான வியாதிகளை கற்பனை செய்து கற்பனை செய்து அவை நம்மை பீடித்துவிட்டதோ என்ற பீதியில் இருந்த எனக்கு இகீகை பற்றிய ஒரு நூலில் குகையில் வாழ்ந்த ஆதி மனிதனுக்கும் நவீன காலத்து மனிதனுக்குமிடையேயான ஒரு முக்கிய வித்தியாசம் பற்றி வாசித்தவுடன் என் கண்கள் திறந்தன. குகை வாழ் மனிதன் எந்நேரமும் உயர் ஆபத்து நிலையில் வாழ்ந்தான். குகைக்குள் வன விலங்குகளுக்கு எளிதில் இரையாகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த ஆபத்து கணங்களைத் தவிர பிற கணங்களில் அவன் பதற்றங்கள் ஏதும் இல்லாமலேயே வாழ்ந்தான். ஆபத்துக் காலங்களில் மட்டும் அவன் உடலில் மிக அதிக அளவில் கார்டிசோல் சுரந்து அவனை ஆரோக்கியமாக வைத்திருந்தது. நவீன காலத்தில் மனிதன் எந்நேரமும் ஆன்-லைனில் இருக்கிறான். உள்ளே வரும் செய்திகளை அறிவிக்கும் ஓசைக்கான காத்திருப்பில் எந்நேரமும் இருக்க வேண்டியதாய் இருக்கிறது. தொலைபேசி அழைப்பையும் மின்னஞ்சல் வந்திருக்கும் அறிவிப்பு சமிக்ஞையையும் மூளையானது வேட்டையாடப்படப் போகும் அச்சுறுத்தலோடு தொடர்புபடுத்திக் கொண்டு விடுகிறது. சிறு அளவில் கார்டிசோல் எந்நேரமும் சுரந்த வண்ணமிருக்கிறது. மனோ ரீதியான பல நோய்களுக்கு இதுவே காரணமாகிறது. டவுன் ஹால் சந்திப்பு மிகவும் அறுவையாய் நடந்து முடிந்தது என சக ஊழியர்கள் சொன்னார்கள். ‘பாட்டுக்குப் பாட்டு, அந்தாக்ஷரி மாதிரியான நிகழ்வுகளால் டவுன்ஹாலை நிரம்பியிருக்கலாம். அது என்ன இகீகை…மரண போராக இருந்தது’ என்றார்கள். அவர்களின் இகீகை என்ன என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் போலும்! நான் தான் அதை புத்தக வரிகளிலோ அளைவுறும் சிந்தனைகளிலோ தேடிய வண்ணம் இருக்கிறேன்.

    இகீகை என்றால் என்ன? https://medium.com/thrive-global/ikigai-the-japanese-secret-to-a-long-and-happy-life-might-just-help-you-live-a-more-fulfilling-9871d01992b7

  • கோயில்களை உடைத்தல்

    “இந்து கோயிலை உடைத்துவிட்டார்கள் ; அழித்துவிட்டார்கள்” என்று என்றோ நடந்த தாக்குதல்களை நினைத்து இன்றைய இந்துத்துவர்கள் வேற்று மதத்தவரின் மீது பகைமையுணர்வு கொள்வதும் வெறுப்பு காட்டுவதும் தினம் பார்க்கக்கூடியதாய் இருக்கிறது. உடைந்த கோயில்களை பார்க்கும் போது வருத்தம் ஏற்படுவது இயற்கை. ஆனால் அந்த அழிப்பு நடந்த வரலாற்று காலத்தில் வன்முறை வாழ்வின் அம்சமாக இருந்தது. நில விஸ்தரிப்பை மட்டுமே இலக்காகக் கொண்ட பேரரசர்களின் அணுகுமுறைக்கு நியாயம் கற்பிக்கப்பட்டு வந்தது. கைப்பற்றிய வேறு நாட்டின் பண்பாட்டுச் சின்னங்களை அழித்து தம் சமய, கலாசார சின்னங்களை நிறுவுவது நம் நாட்டில் நடந்ததைப் போலவே உலகெங்கிலும் நடந்தது. இது ஏதோ நமக்கு மட்டும் நடந்தது என்பதான பாவனையில் அன்றைய ஆக்கிரமிப்பாளர்கள் பின்பற்றிய சமயத்தை இன்று பின்பற்றுபவரின் மேல் வெறுப்பை காட்டுவது வேடிக்கையிலும் வேடிக்கை. இந்து சமய உயர் தத்துவங்களின் படி உருவம், வடிவம், பால் என்று எதிலும் அடங்காதது பரம்பொருள். அதனை தியானிக்குமுகமாக அமைக்கப்பட்ட வழிபாட்டு உருவம் அழிக்கப்பட்டால் சமய நம்பிக்கை அழிந்துவிடும் என்பதும் நம் இருப்பு அர்த்தமற்றாகிவிடும் என்பதும் உள்ளீடற்ற வெற்று நம்பிக்கையின் அடிப்படையிலான குறுகிய நோக்கில் சமயத்தை அணுகுவதன் விளைவாக எழுபவை.

    +++++

    இறைஆனந்தத்தின் மனித உருவமாக விளங்கிய ஶ்ரீ ஆனந்தமயி மா அவர்களின் ஆசிரமம் வெளியிட்டு வந்த காலாண்டு ஆன்மீக இதழ் ஆனந்தவர்த்தா. இதன் அனைத்து இதழ்களும் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனந்தவர்த்தாவின் 1969 ஆன் ஆண்டின் மூன்றாம் இதழில் காஷ்மீரத்தின் இந்து புண்ணியத்தலங்கள் பற்றிய கட்டுரையொன்றை வாசித்தேன். இந்த கட்டுரையில் ஶ்ரீ நகரில் இருந்து 9 கி மீ தொலைவில் இருக்கும் பாழடைந்த க்‌ஷீர் பவானி கோயிலுக்கு சுவாமி விவேகானந்தர் சென்றது பற்றி வருகிறது. உள்ளூர் தல புராணத்தின் படி மாதா க்‌ஷீர் பவானி சிலையை இலங்கையில் ராவணன் வழிபட்டு வந்தான்; ராமனால் அவன் கொல்லப்பட்ட பின் விக்கிரகம் இந்த இடத்துக்கு அனுமனால் கொண்டு வரப்பட்டது என்பது ஐதீகம்.

    “சுவாமி விவேகானந்தர் காஷ்மீரில் தங்கியிருந்த நாட்களில் இந்தப் புனிதத் தலத்துக்கு வந்தார். உடைந்த கோயில்களையும் விக்கிரகங்களையும் பார்த்த போது அவர் இதயமுழுதும் கவலையில் ஆழ்ந்தது. அவர் சிந்தனை இவ்வாறு ஓடியது. “நான் மட்டும் அப்போது இருந்திருந்தால் கயவர்கள் இந்தக் கோயில்களை அழிக்கவோ விக்கிரகங்களை உடைக்கவோ விட்டிருக்க மாட்டேன். உயிரைக் கொடுத்தாவது அவைகளை காத்திருப்பேன்” அவர் இவ்வாறு யோசித்த போது வானிலிருந்து ஓர் அசறீரி அவர் காதில் கேட்டது. “மகனே, வேறு சமய நம்பிக்கை கொண்டோர் என் கோயிலுள் நுழைந்து அழித்தனர் என்றால் அதனால் உனக்கென்ன? நான் உன்னை காக்கிறேனா அல்லது நீ என்னை காக்கிறாயா?” விவேகானந்தரின் சிந்தனை மேலும் தொடர்ந்தது. “என்னால் மட்டும் இந்த கோயிலை கட்ட முடியுமானால்…” மீண்டும் அதே குரல் இவ்வாறு சொன்னது “மகனே, நான் நினைத்தால் எண்ணற்ற கோயில்களையும் கோபுரங்களையும் நிறுவி விட முடியும். நான் எண்ணிய கணத்திலேயே ஏழடுக்கு தங்க கோயில் எழும்பிவிடும். எனவே நீ கவலைப்பட வேண்டியதில்லை” இந்த சம்பவத்துக்கு பிறகு வீரச்சாதுவுக்கு வாழ்வின் மீதான பார்வை முழுக்கவும் மாறிப்போனது. அன்று முதல் அன்னையின் மடியில் கிடக்கும் சிறு மழலையாக தம்மை உணரலானார்.”

    பின்குறிப்பு : கல்ஹணரின் ராஜதரங்கிணி நூலில் க்‌ஷீர் பவானி கோயில் பற்றிய குறிப்பு உண்டு.

  • Franz Kafka’s Couriers

    அவர்களுக்கு ஒரு தெரிவு அளிக்கப்பட்டது – அரசர்கள் ஆகலாம் அல்லது அரசர்களுக்குச் செய்தி தெரிவிப்பவர்கள் ஆகலாம். குழந்தைகள் வழக்கமாகத் தேர்ந்தெடுப்பதைப் போல அவர்கள் அனைவரும் செய்திகள் சேகரித்து அவற்றைத் தெரிவிப்பவர்கள் ஆனார்கள். ஆகையால் இந்த உலகைச் சுற்றித் திரிந்தபடி – அரசர்கள் இல்லாது போனபின் – அர்த்தமிழந்து போன தகவல்களை மட்டும் ஒருவருக்கொருவர் சத்தமிட்டுக் கொள்ளும் செய்தி தெரிவிப்பாளர்கள் அவர்கள். இந்தக் கேவலமான வாழ்க்கைக்கு ஒரு முடிவுகட்ட வேண்டுமென்று அவர்களுக்கு விருப்பந்தான் ; என்ன செய்ய? அவர்கள் வரித்துக்கொண்ட சேவைக்கான உறுதிமொழி தான் அவர்களைத் தடுக்கிறது.