Category: Uncategorized

  • ஐக்கியமும் எதிர்ப்பும்

    From Waris to Heer – நாவலை வாசித்து முடித்ததும் என்னுள் எழுந்த வினா ஒன்று தான் – மத ரீதியாக பிளவுபட்ட ஒரு பண்பாடு பஞ்சாபி மொழிக் காவிய நூலொன்றினால் மீண்டும் ஒன்றிணைந்துவிடக் கூடுமா? நூல்கள் என்றும் இத்தகைய மந்திரங்களை நிகழ்த்தியதில்லை. ஆனால் வினாவின் கற்பனையில் லயித்திருப்பது ஒன்றும் புதிதில்லையே!

    சீக்கிய சமய நூல்களைச் சரி பார்த்து தொகுத்ததில் வரலாற்றுப் பங்களித்தவர் பாய் மணி சிங். சீக்கிய மதத்தின் கடைசி குரு – குரு கோபிந்த் சிங் – அவர்களின் பால்யத் தோழர். லாகூர் நகரில் முகலாயர்களின் பிரதிநிதியாக இருந்த ஸகாரியா கான் பாய் மணி சிங்-கை சிறைப்பிடிக்கிறான். பொதுமக்கள் முன் நிறுத்தப்பட்டு ஒவ்வொரு பாகமாக பாய் மணி சிங் – கின் அவயங்கள் வெட்டியெறியப்படுகின்றன. அடுத்து வந்த பிற வருடங்களில் “ஹீர் ராஞ்சா” காதல் காவியத்தை பஞ்சாபி மொழியில் எழுதப்போகிற வாரிஸ் ஷா இளைஞனாக பாய் மணி சிங்-கின் கொடூர மரணத்தை லாகூரின் வீதியொன்றில் கண்ணுறும் காட்சியிலிருந்து நாவல் துவங்குகிறது.

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து சீக்கிய போராளிக் குழுக்கள் (ஒன்றிணைந்த) பஞ்சாப் கிராமங்களின், நகரங்களின் மீது கொரில்லா தாக்குதல்களை நடத்தத் தொடங்கின. பஞ்சாப் மீதான முகலாயர்களின் பிடி ஆட்டம் கண்டது. மராத்தியர்கள் ஆட்சி தில்லியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஆப்கானிய மன்னன் நாதிர் ஷா இந்துஸ்தான் மீது படையெடுத்து வர வேண்டும் என்ற எண்ணம் இஸ்லாமிய அறிவுஜீவிகளுக்கு மத்தியில் பலப்பட்டு வந்தது. முகலாயர்கள் “நல்ல முஸ்லிம்களாக” இல்லாதது தான் இந்துஸ்தானில் முஸ்லிம்களின் ஆட்சி பலவீனமடைந்ததற்கு காரணமாக சொல்லப்பட்டு வந்தது. இந்த அறிவுஜீவிகள் “சூஃபி ஞானி” ஷா வலியுல்லாவின் கருத்துகளை துணைக்கழைத்துக் கொண்டனர். மராத்தியர்களின் அரசியல் வளர்ச்சியை அறவே வெறுத்தார் ஷா வலியுல்லா. இஸ்லாமியரல்லாதவரின் சமய ஊர்வலங்களை விழாக்களை தடை செய்ய வேண்டும் என்று முகலாய மன்னர் அஹ்மத் ஷாவுக்குப் பரிந்துரைத்தார். அவரின் கருத்துக்களுக்கு எதிரும் புதிருமாக பஞ்சாபின் அறிவுஜீவிகளுக்கு நடுவே உரையாடல்கள் நிகழ்ந்தன. இதனை மூன்று பாத்திரங்களுக்கிடையிலான உரையாடலாக பதிவு செய்கிறார் நாவலாசிரியர் ஹரூன் காலித்.

    கசூர் நகரில் உள்ள ஒரு மத்ரஸாவில் ஒன்றாகப் படிக்கும் மூன்று மாணவர்கள் – வாரிஸ், உமர், அஃப்தாப். வாரிஸ் தான் ஹீர் ராஞ்சா காவியத்தை பிற்காலத்தில் இயற்றப்போகிறவர். அஃப்தாப் இஸ்லாமிய பெயரை வைத்துக்கொண்டு படிக்கும் இந்து மாணவன். ஷா வலியுல்லாவின் புத்தகங்களை வாசித்த அஃப்தாப் வாரீஸிடம் சில கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளை அளிக்க முயல்கிறான்.

    “பாபா ஃபரித் கஞ்ஜ் பற்றி ஷா வலியுல்லா என்ன சொல்வார்? பாபா ஃபரித் கவ்வாலி பாடினார். தமால் (நடனம்) ஆடினார். பாடும் ஆடும் மரபுகள் எங்கிருந்து வந்தன? இந்து பஜனைக்கும் கவ்வாலிக்கும் இடையில் உள்ள தொடர்பு விளங்கவில்லையா? தமாலுக்கும் சிவ தாண்டவத்துக்கும் உள்ள தொடர்பும் இதே போலத்தானே? இந்த நடைமுறைகளை புது சமயத்தின் மொழியில் விவரிப்பதன் வழியாகவும் புறச்சமயங்களின் நடைமுறைகளை உட்புகுத்தியதன் வாயிலாகவும் சமயத்தைக் கெடுத்தார்களா என்ன சிஷ்டிகள்1? பாபா ஃபரித் தூய முஸ்லீம் இல்லையென்றும் தூய இஸ்லாத்தைப் பின்பற்றாதவர் என்றும் ஷா வலியுல்லா தைரியமாகச் சொல்வாரா?”

    வாரீஸின் பதில் – “பாபா ஃபரீதைப் பற்றி ஷா வலியுல்லா அப்படிச் சொல்ல மாட்டார். ஆனால் பாபா ஃபரீதும் பிற சூஃபி குருமார்களும் புறச்சமயத்தின் நடைமுறைகளை இரவல் பெற வேண்டியிருந்தது என்பார். ஏனெனில் துணைக்கண்டத்துக்கு அந்தக் காலகட்டத்தில் இஸ்லாம் புதிது. உள்ளூர் ஜனங்களுக்கு இஸ்லாத்தைப் புரிய வைக்க உள்ளூர் சமயத்தின் சின்னங்களை அந்த சூபிக்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இப்போதோ துணைக்கண்டத்தில் இஸ்லாம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டு விட்டது எனவே புறச்சமயங்களின் நடைமுறைகளை உதறித்தள்ளுவதில் ஓர் இழப்பும் இல்லை என்று ஷா வலியுல்லா சொல்வார்”

    அஃப்தாப் சொல்கிறான் – “ஆம். அவர் மறுகண்டுபிடிப்புச் செய்ய விழையும் மூல சமயத்தை தேடிக் கண்டுபிடித்தல் சாத்தியமில்லை என்பதை நீ ஒப்புக்கொள்ள மாட்டாயா? பதினெட்டாம் நூற்றாண்டு தில்லியின் சொந்த அனுபவங்களால் மூலச் செய்தியின் கண்ணோட்டம் கறை படிய வாய்ப்புள்ளதல்லவா? நீ கூறிய படி பாபா ஃபரித் புதிய மதத்தை அக்கால மக்களுக்கு போதிக்க நேர்கையில் அவர்களின் ஆன்மீக மொழியைப் பேச வேண்டியிருந்தது. இந்த ஆன்மீக மொழியை புறச்சமயத்திடமிருந்து அவர் இரவல் பெற வேண்டியிருந்தது.”

    அஃப்தாபின் கருத்துப்படி ஒரு மதத்தின் அசல் சாரத்தை மீள்-கண்டுபிடிப்பது சிரமம். ஏனெனில் இது போதகரின் சொந்த அனுபவங்களால் சூழமைவினால் வடிவமைக்கப்படுகிறது. எது தூய்மை எது கலப்படம் என்ற ஆராய்ச்சி உறுதியான முடிவை என்றும் தரப்போவதில்லை!

    “பஞ்சாபியத்”-தின் சாரம் ஒன்றிணைந்த கலாச்சாரம். அது தப்பிப்பிழைத்தவாறே தன் பயணத்தை வரலாற்றுப்பாதையில் தொடர்கிறது. அதற்கு நிறையவே தடங்கல்களும் இடைஞ்சல்களும் விளைந்த வண்ணமுள்ளன. ஆனால் இல்லாமல் ஆகிவிட்டதொன்றல்ல அது. புல்லே ஷா-வின் காஃபி2 வடிவச்செய்யுட்களில் அது இன்னமும் உயிருடன் இருக்கிறது. இந்த பஞ்சாபி சூபியின் மனித நேய உணர்வு மிக்க பாடல்கள் ஊர் தோறும் பாடப்பட்டாலும் ஆச்சாரவாதிகளின் ஏளனத்துக்கு அவர் உள்ளானார். மத அதிகார சக்திகள் லாகூர் நகரத்தின் ஸ்திரத்தன்மைக்கு அவர் ஓர் அச்சுறுத்தல் என்று கதை கட்டின. பல வருடங்களுக்கு லாகூர் நகருக்கு வராதபடி புல்லே ஷா மீது தடை விதிக்கப்பட்டது.

    ஷா இனாயத் காத்ரி எனும் சூபியைக் கண்டதும் ஆடினார் புல்லே ஷா. கஞ்சரி என்னும் நாட்டியக்காரியின் வீட்டில் தங்கி அவர் கற்றுக் கொண்ட தமால், ஷா இனாயத் மீதான அன்புப்பெருக்கில் அவரை மீறி வெளிப்பட்டது. அவரின் உதட்டிலிருந்து கவ்வாலி பிறக்கிறது.

    “என் ராஞ்சாவின் பெயரை அழைத்து அழைத்து

    நானே ராஞ்சாவாகிவிட்டேன்

    என்னை ராஞ்சாவென்றழை

    நான் இனி ஹீர் இல்லை”

    புல்லே ஷாவின் சமகாலத்தவர் வாரிஸ் ஷா என்று நாவலில் கூறப்படுகிறது. ஹீர் – ராஞ்சா கதையை வாரிஸ் ஷா-வுக்கு முன்னம் – அதாவது அக்பர் ஆண்ட காலத்திலேயே – தாமோதர் என்பவர் செய்யுள் வடிவில் எழுதிவிட்டார். எனினும் வாரிஸ் ஷா எழுதிய ஹீர் ராஞ்சா அடைந்த பிரபலம் மகத்தானது. வாரிஸ் ஷாவின் ஹீர்-ராஞ்சா பஞ்சாபி இலக்கியத்தில் ஒரு தலைசிறந்த படைப்பாக கருதப்படுகிறது. அதன் பாடல் அழகும் மொழியின் பயன்பாடும் தத்துவ ஆழமும் பஞ்சாபி இலக்கிய, கலாச்சார பாரம்பரியத்தின் மைல்கல்லாக நிலைநாட்டியுள்ளன.

    புல்லே ஷா போல ஹீர் ராஞ்சா கதையும் பஞ்சாபியத்தின் அணையாச் சுடர். ஒரு தொன்மக் கதை அல்லது நாட்டார் கதை எப்படி ஒரு மாகாணக் கலாச்சாரத்தின் அடையாளமாகும்?

    மத எல்லைகளைத் தாண்டி, இந்து, முஸ்லீம் மற்றும் சீக்கிய மரபுகள் இணைந்து வாழும் பஞ்சாபின் ஒத்திசைவான கலாச்சாரத்தை இந்தக் கதை பிரதிபலிக்கிறது. ராஞ்சாவின் பாத்திரப் படைப்பு பகவான் கிருஷ்ணரையொட்டி அமைந்துள்ளது. ராஞ்சா மாடு மேய்க்கிறான். கண்ணனுக்கு கோபிகைகள் போல ஹீரின் தோழிகளனைவருடனும் அவன் ஓடி விளையாடுகிறான். கண்ணனுடைய கோபிகைகள் போலவே ஹீரின் தோழிகள் அனைவரும் ராஞ்சாவைக் காதலிக்கின்றனர். ஆனால் அவனோ ஹீரை மட்டுமே காதலிக்கிறான். ராதையின் அச்சுஅசலானவள் ஹீர்.

    ஹீர் – ராஞ்சாவின் காதல் பெரும்பாலும் தெய்வீக இணைப்புக்கான, மனித ஆன்மாவின் ஏக்கத்திற்கான ஓர் உருவகமாக பார்க்கப்படுகிறது. சூஃபித்துவம், சீக்கிய மதம் மற்றும் பக்தி இயக்கங்களின் ஆன்மீக மரபுகளுடன் எதிரொலிக்கும் ஒரு கருப்பொருள் இது.

    18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வாரிஸ் ஷாவின் ஹீர்-ராஞ்சாவின் பதிப்பு சூஃபி தத்துவத்தில் ஆழமாக ஊன்றியுள்ளது. அலைந்து திரியும் ஃபகீர் (சூஃபி துறவி) – ஆக சித்தரிக்கப்படும் ராஞ்சா இறையுடன் கூடுதலைத் தேடும் ஆன்மாவின் ஆன்மீகப் பயணத்தைக் குறிக்கிறான். காதல், துன்பம் மற்றும் தெய்வீகக் கூடல் போன்ற சூஃபி இலட்சியங்களை உள்ளடக்கிய கதையாக ஹீர் ராஞ்சா விளங்குகிறது.

    ஹீர்-ராஞ்சாவில் வரும் தடைசெய்யப்பட்ட காதல், சமூக எதிர்ப்பு மற்றும் தியாகம் ஆகிய கருப்பொருள்கள் உலகளாவியவை. மத, கலாச்சார பிளவுகளைத் தாண்டி அனைவரின் கருத்தையும் ஈர்ப்பவை. சமூக விதிமுறைகளுக்கு எதிரான காதலர்களின் போராட்டம் – சுதந்திரம், அடையாளம் மற்றும் சத்தியத்திற்கான பரந்த மனித தேடலைச் சுட்டுவதுமாகவும் உள்ளது.

    சாதி பிளவுகள், கடுமையான ஆணாதிக்க விதிமுறைகள் போன்ற ஒடுக்குமுறை சமூக கட்டமைப்புகளுக்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாக இந்த கதையை வாசிக்க முடிகிறது. பஞ்சாபில் புழங்கும் பெரும்பாலான நாட்டுப்புறக் கதைகள் அதிகாரத்தின் விமர்சனங்களாக செயல்படுகின்றன. அவற்றுள் ஹீர் ராஞ்சா தொன்மக்கதை முக்கிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

    ஹரூன் காலித் தனது எழுத்து நிறத்தால் பஞ்சாபியத்தின் ஓவியத்தை சில புதிய உத்திகளைக்கொண்டு வரைந்துள்ளார். சித்திரத்தின் பன்முகத்தன்மையை நிகழ்த்திக்காட்டுகிறது ஹரூன் காலித்தின் நாவல். கம்பனின் வாழ்க்கைக் கதையையும் ராமாயணத்தையும் இணைத்து ஒரே கதையாக எழுதுவது போன்ற ஓர் உத்தியை இந்நாவலில் கையாண்டுள்ளார். ஒன்று வரலாற்று நாவல், இன்னொன்று பஞ்சாப் மண்ணின் புகழ் பெற்ற காதல் கதை. ராமாயணத்தின் ஒவ்வோர் அத்தியாயத்தையும் அந்த அத்தியாயத்தில் தோன்றும் ஒவ்வொரு பாத்திரத்தின் கண்ணோட்டத்திலும் சொல்வதாகக் கொண்டால் விளையக் கூடிய அற்புதத்தை ஹீர் – ராஞ்சா காவியத்தின் மறுகூறலில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் ஹரூன். செனாப் நதிக் கரையில் நடந்த ஒரு காதல் தொன்மத்தின் முதல் அங்கத்தை செனாப் நதியே கூறுகிறது. கவிதை மொழியும் வரலாற்றுக்குறிப்புகளும் வளமான வாசிப்பனுபவத்தை நமக்கு நல்குகிறது.

    பெரும்பான்மைவாதத்தின் குரல் ஓங்கும்போது அதனை மட்டுப்படுத்தும் பொறுப்பு பெரும்பான்மை சமூகத்தின் அங்கத்தினர்களினுடையது. பெரும்பான்மைவாதத்தால் சிறுபான்மையின் கழுத்து கவ்வப்படும் போது பெரும்பான்மை சமூகத்தினுடைய தாராளவாதிகளின் கைகள் உதவிக்கு வர வேண்டும் என்று உறைக்கத்தக்க விதத்தில் கதையில் ஒரு சம்பவம் சொல்கிறது. ஹரூன் காலித் அவ்வரிகளைத் தம் நாட்டு பெரும்பான்மையர்களுக்கு அறிவுறுத்துவதற்காக எழுதியிருக்கக் கூடும். எல்லையின் இரு புறங்களுக்கும் அறிவுரை பொருந்தும் – புல்லே ஷாவின், வாரிஸ் ஷா-வின் கவிதைகளைப் போலவே!

    From Waris to Heer

    Author : Haroon Khalid

    Publisher : Penguin Random House India

    Price : Rs 499/-

    நன்றி : கனலி

    1. சிஷ்டிகள் இஸ்லாத்தின் முக்கியமான சூஃபிகளின் வரிசையைக் குறிக்கிறது. ஆன்மீகம், அன்பு, சகிப்புத் தன்மை மற்றும் திறந்த உள்ளம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தவர்கள் சிஷ்டிகள். 10ம் நூற்றாண்டில் நவீன ஆப்கானிஸ்தானின் ஹேரத் நகருக்கருகில் உள்ள சிஷ்ட் என்ற இடத்தில் உருவான சூஃபி மரபு என்பதால் சிஷ்டி என்று அடையாளப் பெயர் இந்த சூஃபி குருக்களின் வரிசைக்கு சேர்ந்துவிட்டது. அஜ்மீரின் மொய்னுதின் சிஷ்டி போன்றவர்களால் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் சிஷ்டி வரிசை பிரபலமடைந்தது. உலகளாவிய அன்பின் செய்தியை ஊக்குவிப்பதற்காக அறியப்படுபவர்கள் சிஷ்டிகள். மத, கலாசார எல்லைகளை மீறுபவர்கள். தொண்டு, மனிதக்குலத்திற்கான சேவை, தன்னலமற்ற பக்தி ஆகியவற்றை வலியுறுத்துபவர்கள். “கவ்வாலி” (சூஃபி பக்தி இசை) அவர்களின் ஆன்மீக நடைமுறைகளில் குறிப்பிடத்தக்கப் பங்கை வகிக்கிறது. ↩︎
    2. காஃபி என்பது இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக பஞ்சாப், சிந்த் பகுதிகளில் உருவான சூஃபி பக்தி கவிதை மற்றும் இசையின் ஒரு வடிவமாகும். இது பொதுவாகப் பஞ்சாபி, சிந்தி, சிராய்கி மொழிகளில் எழுதப்பட்டது. காஃபி செய்யுள்களும் கீதங்களும் தெய்வீக அன்பின் கருப்பொருட்களைக் கையாள்பவை. கடவுளுடன் ஒன்றிணைவதற்கான ஏக்கம் இவ்வடிவக் கவிதைகளில் அதிகம் வெளிப்படும். பாபா பரீத், ஷா ஹுசைன், ஷா அப்துல் லத்தீப் பிட்டாய், புல்லே ஷா போன்ற பெருங்கவிஞர்கள் காஃபி வடிவத்தைத் தமது கவிதைகளின் வடிவமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ↩︎
  • That’s the question

    சக-அலுவலர் தந்த அறிமுகத்தில் என்னுடைய கார் ஓட்டுனராக ஒரு மாதம் முன் வேலையில் சேர்ந்தார் வீரையா (உண்மையான பெயர் இல்லை). தும்கூரைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்து கிட்டத்தட்ட அனாதையைப் போல வளர்ந்தவர். பதினாறு வயதிலேயே வேலைக்கு வந்துவிட்டதாகச் சொன்னார். நன்றாக பாதுகாப்பாக வாகனத்தைச் செலுத்துகிறார். வேலைக்கு வருவதில் தாமதிப்பதில்லை. பெங்களுரின் சந்து-பொந்து அனைத்தையும் அறிந்தவராக இருக்கிறார். கசப்பான அனுபவம் எதுவும் அவருடன் நிகழவில்லை. இன்று ஒரு சம்பவம் நடந்தது. இது ஏற்கனவே நடந்த ஓர் உரையாடலின் தொடர்ச்சி எனலாம். பத்து நாட்களுக்கு முன் இந்திரா நகர் போகும் வழியில் எம் எஸ் பால்யா என்னும் இடத்தைக் கடந்து போக வேண்டியிருந்தது. பெங்களூரில் இருப்பவர்கள் அனைவரும் அந்தப் பகுதி ஒரு குறிப்பிட்ட மதச்சாரார் வசிக்கும் இடம் என்று அறிவார்கள். அந்தப் பகுதியைக் கடக்கும்போது வீரையா அண்டைய நாட்டின் பெயரைக் குறிப்பிட்டு அந்த நாட்டைக் கடந்து கொண்டிருக்கிறோம் என்றார். எனக்கு சுர்-ரென்று கோபம் தலைக்கேறியது. “அவன் வசிக்க உன் வீட்டை வாடகைக்குத் தர நீ தயாராக இல்லாதபோது அவன் எங்கு போய் வசிப்பான்? உன்னை நேபாளத்துக்காரன் என்று சொன்னால் நீ ஒத்துக் கொள்வாயா?” என்று ஒரு பிடி பிடித்தேன். “சாரி சார், தெரியாம பேசிட்டேன். நானுண்டு என் வேலையுண்டு என்று இருப்பவன் நான்” என்று தாழ்ந்த குரலில் பேசினார். நானும் அவ்விஷயத்தை அதோடு விட்டுவிட்டேன். இன்று காலை அலுவலகம் செல்லும் போது ரஹ்மானின் இசையில் “ஜிக்ர்” எனும் பாடலைக் காரில் ஒலிக்க விட்டேன். “அல்லாஹு” என்ற கோஷத்துடன் பாடல் தொடங்கிற்று. மனதை இளக வைத்து பக்தியுணர்வை கிளர்த்தும் அபாரமாக கீதம் அது. இப்பாடலை பல வருடங்களாக அடிக்கடி கேட்டு வருகிறேன். “ஹப்பிரப்பி ஜல்லல்லா” என்று குழுவினரின் குரல் ஒலிக்கத் தொடங்கியதும், காரைச் செலுத்திக் கொண்டிருந்த வீரையா சின்ன “இயர் போனை” எடுத்து இரண்டு காதுகளிலும் அணிந்து கொண்டார். அவர் தனியாக ப்ளூ டூத்தில் மொபைல் வாயிலாக வேறு ஏதேனும் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று முதலில் நினைத்தேன். நான் கேட்கும் பாடலின் “வால்யூமை” அதிகமாக வைத்திருந்தேன். இந்த சத்தத்தில் ப்ளூ டூத்தில் ஒலிக்கும் பாடல் அவர் காதில் விழுமா என்ற கேள்வி எழுந்தது. “ஜிக்ர்” பாடல் முடிவடைந்ததும் “ஓம் சிவோஹம்” என்ற “நான் கடவுள்” படப்பாடல் ஒலித்தது. “ஹரஹர ருத்ராயா” என்று சுலோகப் பகுதி தொடங்கியதும் தனது காதில் இருந்த இயர் போன்களைக் கழட்டினார் வீரையா. அதனை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்ததும் ஓர் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தார். “நான் போட்ட பாடல் புடிக்கலைன்னு காதுல இயர் போனைச் செருகிக்கிட்டியா?” என்று கேட்டேன். “நீங்க முன்னாடி வச்ச பாட்டு எனக்குப் புரியலை..அதனாலத்தான்…” என்றார். “ஓ அப்ப சமஸ்கிருதமும் தமிழும் நல்லா புரியுமா உங்களுக்கு?” என்று கேலியாகக் கேட்டேன். என்னுள் எழுந்த உணர்வை அருவெறுப்பு என்றுதான் வர்ணிக்க முடியும். இசைக்கும் மத வெறுப்பின் ஆடையா? எங்கு வந்து சேர்ந்திருக்கிறேன்? லதாவின் “பாயோஜி மைனே ராம் ரதன் தன் பாயோ” என்ற பஜனையை வைக்கும் போதெல்லாம் மெய் சிலிர்த்துப் போகும் எனது பழைய ஓட்டுனர் அலி ஞாபகத்துக்கு வந்தான். கான்பூர் நகரத்தில் பிறந்தவன். அவன் பெரிய தாத்தா ஐம்பதுகளில் பாகிஸ்தானுக்குச் சென்று செட்டில் ஆனதால் அவனுடைய அப்பா கடைசி வரை பெரியப்பாவுடன் பேசாமலேயே இருந்தார் என்று பெருமையுடன் அடிக்கடி சொல்லிக் கொள்பவன். அவன் எங்கே? வீரையா எங்கே? மாலையில் அலுவலகத்திலிருந்து வீடு வரை ஓட்டிக் கொண்டு வந்த வீரையாவிடம் எதுவும் பேசவில்லை. நாளை வேலைக்கு வரவில்லை என்றும் ஒரு நாள் லீவு வேண்டும் என்று சாவியைத் தரும் போது சொன்னார். நான் தலையை மட்டும் ஆட்டினேன். எந்தப் பிரச்னையும் தராத ஓட்டுனர் என்று பேசாமல் இருப்பதா? அல்லது என் காரில் நான் ஒலிக்கவிடும் பாடல்கள் அவருக்குப் பிடிக்கவில்லை என்பதால் வேறு வேலை தேடிக் கொள் என்று கரிசனத்துடன் நடந்து கொள்வதா? Thats the question!

  • பனித்திணைக் கவிதைகள் – ஶ்ரீவள்ளி



    பனி நூறு
    பனி ஆறு

    அவள் கூற்று

    நள்ளிரவில் முதுபனியில்
    உடல்தளர்ந்த பழுப்புக் கரடி
    கொல்லைக் கதவைத் தட்டுகிறது
    மின் திரையில் தெரிகிறது
    உனக்காக இல்லை, கரடியே
    கூடத்தில் பரிமாறியிருக்கும்
    ஸ்ட்ராபெர்ரி பழக்கொத்து
    காக்க வைத்தவன் இன்னும் வரவில்லை
    சிசிடிவி காமிரா
    வருங்காலத்தைக் காட்டுவதில்லை
    எப்போதுமே
    திறக்கச் சந்தர்ப்பம் தராத
    இந்த வாசற்கதவு எதற்காக?

    (பாடியவர்: ஸ்ரீவள்ளி)


    பனி நூறு
    பனி ஏழு

    தோழி கூற்று

    முந்தைய நாள் பெய்த பனிப் பொழிவில்
    குழந்தைகள் ஆடினர்
    பொம்மை செய்தனர்
    கை கால் உடலோடு
    யாரும் பார்க்காதபோது
    அது உயிர்த்திருக்க வேண்டும்
    இன்று இளம் வெயில்
    பாதிக் கை காணோம்
    பாதிக் கால் சரிந்துவிட்டது
    ஒரு பக்கம் காது இல்லை
    அதன் முன் மண்டியிட்டு
    அவள் இறைஞ்சுகிறாள்
    நினைவூட்டக் கேட்கிறாள்
    அவன் தந்த வாக்குறுதியை
    மூளிச் சிலை என்றாலும்
    அது பனியின் தெய்வம்
    பிற நிலங்களின் தெய்வங்களைப் போல
    அதுவும் பேசுவதில்லை

    (பாடியவர்: ஸ்ரீவள்ளி)

    —————————————————————

    Journey to the west என்ற சீன மொழியின் நாவல் ஒன்றை எழுதியவரின் பெயர் உண்டு. யார் அவர், அவர் அடையாளம் போன்ற எந்த தகவலும் இன்றில்லை. அலியும் நிமோவும் நாவலை எழுதியவரின் பெயர் குர்பான் சையத். விசித்திரமான பெயர் கொண்ட இந்த ஆசிரியர் யார் என்று நாவல் வெளிவந்து நூறாண்டுகளாகியும் கண்டுபிடிக்கப்படவில்லை. யார் ஆசிரியர் என அறியப்பட முடியவில்லை என்பது முக்கியமில்லை. இரண்டு நாவல்களும் இன்றளவும் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் முக்கியம். முகமிலாத ஒருவர் இலக்கியப் படைப்புகள் எழுதுவதில் உள்ள சௌகர்யம் அவரின் அடையாளம் சார்ந்த தகவல்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லாததால் வாசகரை உறுத்தாது. ஶ்ரீவள்ளி-யைப் பொறுத்த மட்டில் கவிதைகள் மட்டுமே அவரின் அடையாளம். அடையாளம் சார்ந்த குறுகிய எல்லைக்குள் உலவும் கட்டாயமேதுமில்லை ஶ்ரீவள்ளிக்கு. விரிந்து கொண்டே போகும் வானம் ஶ்ரீவள்ளி. “பல நிறங்கள் உண்டு பனி ரோஜாவுக்கு” என்று கவியெழுதும் ஶ்ரீவள்ளி உருவமற்று இருப்பது புதிரன்று. இந்தப் பாணியில், பெயரற்று ஆனால் இந்த வகைமையில் பிறழாது பின்னர் ஸ்ரீவள்ளியின் பெயரில் எதிர்காலத்தில் கவிதைகள் எழுதப்படலாம் – உமர் கயாம் பெயரில் நமக்கு கிடைத்திருக்கும் பல ருபாயியாத்கள் பிற்காலத்தில் முகமறியா அடையாளமில்லா பிறர் எழுதியவை என்று நமக்குத் தெரிய வந்தது போல்.

  • நாலடிப் பிரபஞ்சம்

    ருபையாத் அல்லது ருபாயியாத் உமர் கய்யாம் எழுதினார். மஸ்னவி ரூமி எழுதினார். ருபாயியாத், மஸ்னவி – இரண்டும் நூலின் அல்லது தொகுப்பின் தலைப்பு என்றே பொதுவாகக் கொள்ளப்படுகிறது. ருபாயியாத் என்றாலே உமர் கய்யாம் எழுதியது என்று நானும் பல வருடங்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். ருபாயியாத் என்பது யாப்பு வடிவம் என்று எனக்குத் தெரிந்தது சில வருடங்களுக்கு முன்னரே. ரூமியும் ருபாயியாத் எழுதியிருக்கிறார் என்னும் தகவலும் பின்னர்தான் தெரியவந்தது. 


    சீர்மை பதிப்பகம்
    பக். 324
    ரூ. 520

    சீர்மை பதிப்பகம் “ரூமியின் ருபாயியாத்” தமிழாக்க நூலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஸூபித்துவம் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் தொடர்ந்து இயங்கிவரும் ரமீஸ் பிலாலி “ரூமியின் ருபாயியாத்”களை பார்சி மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்துள்ளார்.  

    நூலில் நானூறுக்கும் மேற்பட்ட கவிதைகள். தொடர்ச்சியற்ற கவிதைகள். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வோர் அறை. ஒவ்வோர் அறையும் மிகப் பிரம்மாண்டமானது. அறையின் சிறு பகுதியின் தரிசனத்தை மட்டுமே பகிர்வதாகவே அதன் விவரிப்பு இருக்க முடியும். பிரபஞ்சத்தின் மொத்த அனுபவத்தை எப்படி நம்மால் வடித்திட முடியும்? நூலின் பின்னட்டையில் ரூமி  பிரபஞ்ச மகாகவி என்று வர்ணிக்கப்படுகிறார். ஒவ்வொரு துளியிலும் கடல் உள்ளது என்பார்கள். ஒவ்வொரு கவிதையிலும் பிரபஞ்சம்.

    மஸ்னவித் தொகுப்புக்கும் ருபாயியாத் தொகுப்புக்கும் யாப்பு வடிவம் என்பதற்கு மேலாக ஏதேனும்  வித்தியாசங்கள் உள்ளதா என்பதை அறிய ஆர்வமாய் இருந்தது. ரூமியை ஆங்கில மொழிபெயர்ப்புகள் வாயிலாகவே அறிந்தவன் நான். ஒரு சாதாரண கவிதை வாசிப்பாளனின் அணுகுமுறையில் ரூமியை அணுகுபவனாகவே இருக்கிறேன். 

    ரமீஸ் பிலாலியின் மொழியாக்கத்தில் ரூமியின் ருபாயியாத்-துக்கு அறிமுகப்படும் வாசகன், என்னைப் போலவே, The Essential Rumi – என்னும் ஆங்கில மொழியாக்கம் வாயிலாக ருமியின் உலகத்துக்கு அறிமுகமானவனாக இருப்பான் என்பது என் யூகம். கஜினி மாமூதால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்து இளைஞன், அல்லது யாரை மணப்பது என்ற சிக்கலுக்கு குழந்தைகளுடன் விளையாடும் ஷைக்’கிடம் ஆலோசனை கேட்கும் இளைஞன் போன்ற எண்ணற்ற கதைக்கருப்பொருட்களுக்கு கவிதை நிறம் பூசி உலகின் கூட்டு நினைவில் நிரந்தரமாக நிலைத்து நிற்பவர் ரூமி. 

    மஸ்னவி – நிறைய கதைகளைப் பேசுகிறது. உலகக்கவிஞர் என்னும் அவருடைய புகழ் மஸ்னவியின் கதை கூறும் தன்மையிலிருந்தே எழுகிறது என்பது என் எண்ணம். கறுப்பு யானைகளின், கருங்கூந்தலின், கவிதைகளை நாம் வாசிக்கும் போது எழும் விறுவிறுப்பு, கதை வடிவத்தில் உள்நுழைந்து படிமங்களாக உலவி குறியீட்டுத் தன்மைக்கு இட்டுச் செல்லும் மாயம் ரூமியின் தனித்துவம். இதனைப் பிற கவிஞர்கள் செய்யவில்லை என்று கூற வரவில்லை. ஆனால் ரூமியின் வல்லமை தனித்துவமிக்கது. இன்று நவீன உலகத்தின் வாசகனின் மனதிலும் எதிரொலிக்கத் தக்கதாய் உள்ளது.

    ஒரு கதைப் பின்ணனி. அது சமய மரபிலிருந்து பெற்ற தொன்மக் கதையாக இருக்கலாம், அல்லது ஏதேனும் வரலாற்று நிகழ்வாக இருக்கலாம். அதை அப்படியே எடுத்துக் கையாளாமல் அதனை மறு ஆக்கம் செய்து மறு கூரலாகக் கவிதையைத் துவக்குவார். அதன் சூழலை செயல்திறனோடு பயன்படுத்திக் கொண்டு கவிதையைச் செறிவாக்குவார். இறுக்கமில்லாமல் அனைத்து திசையிலும் சிதறும் கவித்துவத்தை அழகியலை கருப்பொருளோடு நேர்த்தியாகச் சேர்க்கும் தருணம் அவருடைய மஸ்னவி கவிதைகளின் உச்சம். 

    மஸ்னவி தரும் அனுபவத்தை ருபாயியாத் தரும் அனுபவத்தோடு ஒப்பிட முயல்கிறேன். உதாரணத்துக்கு ரூமியின் ஒரு ருபாயீ-யை (ருபாயியாத் பன்மை, ருபாயீ ஒருமை) ஆராய்வோம். 

    ஈரானிய அமெரிக்க எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளர் ஸரா ஹோஷ்மண்டு பார்சியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ருபாயீ ஒன்று கீழ் வருவது –

    I asked you for one kiss, you gave me six.

    What teacher taught you, that you’re such an expert?

    You’re so deep a source of goodness, so kind

    That you’ve set the world free a thousand times.    (Zara Hoshmand, #1993)

    மஸ்னவியின் அடிப்படைத் தன்மையான கதைப் பின்னணி இருக்கிறதா? இருக்கிறது. கதை சொல்லி ஓர் அனுபவத்தைப் பெறுகிறார். அதற்குப் பின்னர், பெற்ற அனுபவம் குறித்து அனுபவத்தை ஏற்படுத்தித் தந்தவரிடம் அல்லது அனுபவத்தில் பங்கு பெற்றவரிடம் தன் மகிழ்ச்சியை வார்த்தையால் பகிர விழைகிறார். அதன் மறுவிளக்கத்தை வாசகர்களிடமே விட்டுவிடலாம்!

    மேற்சொன்ன கவிதையை ரமீஸ் பிலாலி பின் வருமாறு தமிழாக்கம் செய்கிறார் –

    ஒன்றுதான் கேட்டேன்

    ஆறு முத்தங்கள் தந்தாய்

    இத்துணைத் திறமை காட்ட

    யாரின் மாணவன் நீ?

    எத்துணைக் கச்சிதமாய் அமைந்துள்ளது

    நன்மையும் கருணையும் உன்னில்!

    உலகம் உன்னால்

    ஆயிரம் விடுதலைகள்

    அடைந்துவிட்டது

    (பக்கம் 266, 410.(#1993))

    முன்றாம், நான்காம் அடிகளை “காதலரின் விளையாட்டுத்தனம்” தொனிக்க தமிழ்ப்படுத்தியிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது. ஆனால், ரமீஸ் பார்சி மொழி தெரிந்தவர்.  சரிபார்க்கும் நோக்கத்துக்காக ஒரு துணையாக மட்டுமே ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை பயன்படுத்திக் கொண்டதாகச் சொல்கிறார். முன்னுரையில் அவர் கூறுவது – “பார்சி மூலத்துடன் ஒப்பு நோக்கும் போது ஏ.ஜெ.ஆர்பெர்ரி, ஸரா ஹோஷ்மண்டு ஆகியோரின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு பல இடங்களில் சரியாக இல்லை என்பதை உணர்ந்தேன். அத்தகு இடங்களில் எல்லாம் மூலத்தின் சொற்கள் தரும் வெளிச்சத்திலேயே என் தமிழாக்கம் அமையுமாறு பார்த்துக் கொண்டேன்.” (பக்கம் 11).

    இன்னுமொரு ருபாயீயை ஆராய்வோம்!

    உன்னை நினைவுகூர்ந்தால்

    அந்த நினைவின் நடுவில் 

    நீயே இருக்கிறாய்

    பேச வாய் திறந்தால்

    அந்தத் திறப்பினில்

    நீயே இருக்கிறாய்

    களிப்படைகிறேன் எனில்

    என் களிப்பின் ரகசியமாய் 

    நீயே இருக்கிறாய்

    சாக்குப்போக்கு 

    தேடுகிறேன்

    அதைக் கற்பிக்கும்

    ஆசானாய்

    நீயே இருக்கிறாய்  

    (பக்கம் 265, 409.(#1992))

    இதுவும் முன்பு மேற்கோள் காட்டிய கவிதை போலவே ஒலிக்கிறது. சிலேடைக் கவி போல ஒலிக்கும் இக்கவிதையின் உள்ளுறை பொருள் – சூபிஸத்தின் இறைவனை நினைவுகூர்தல் (Dhikr) – என்னும் தியானச்சடங்கை விவரிக்கிறது. கடவுளை நினை, அவன் நாமத்தை உச்சரி, கடவுளின் உள்ளார்ந்த ஞானத்தில் லயித்திரு, சாக்குபோக்கு சொல்லாதே

    கதைப் பின்னணி இதில் காணப்படுகிறதா? சற்று யோசித்தால் இதன் கதைப் பின்னணி நமக்குப் புரிந்து விடுகிறது. நேரடியான பொருள் தமிழ்ச்சங்க இலக்கிய வகைமையாகிய “அகம்” எனும் வகைமையில் வரும் என்பதால் கதைப் பின்னணியைக் குறிப்பால் பின்னிவிட முடிகிறது!

    உன் வேதனையின் 

    எரிச்சலிடமிருந்து

    ஒரு தகனம் தேடுகிறேன்

    உன் வாசலின் 

    புழுதியிலிருந்து

    ஒரு கம்பளம் தேடுகிறேன்

    துயரங்கள் அடைந்துவிட்டேன்

    போதும்போதும் என்ற அளவு

    உன் சகவாசத்தில் இப்போது

    மகிழ்ச்சியைத் தேடுகிறேன்.

    (பக்கம் 182, 245 (#1133))

    “அனைத்து கட்டுப்பாட்டையும் தாண்டிய ஆற்றலான காதல் ஒரு தீ, காலிபே!

    அதனை இஷ்டப்படி அணைக்கவோ மூட்டவோ முடியாது” – என்கிறார் மிர்ஸா காலிப்

    வேதனையின் எரிச்சலிலிருந்து விடுபெற தகனம் ஏன் வேண்டுகிறான் கவிதை சொல்லி? காதலின் ஏழு நிலைகளில் கடைசி நிலையான “மௌத்” (அழிவு – சுயத்தின் குறியீட்டு அழிவு) அடைவதற்கு முன்னம் – போற்றுதல், வழிபாடு, பித்து – இவற்றை அனுபவிக்க வேண்டாமா? புழுதியிலிருந்து அவன் ஏன் கம்பளம் வேண்டுகிறான்? வழிபாட்டின் குறியீடா கம்பளம்? சகவாசம் (companionship) -தான் கவிதை சொல்லியின் இறுதி இலக்கா? அவன் கம்பளத்தினூடே வேண்டுவது சகவாசம் – இறைவனுடனான சகவாசம். ரூமியின் ருபாயியாத்தும் மஸ்னவி போல கதையனுபவத்தினூடே எழும் கவித்துவத்தை வாசகனுக்கு நல்குகிறது.

    ருபாயியாத் எனும்போது உமர் கய்யாமோடு ஒப்பிடும் ஆர்வமும் மேலெழுகிறது. பொதுவாக நோக்குகையில் போகத்தைக் கருப்பொருளாக அதிகம் கையாளும் உமர் கய்யாம் தனது கவிதைகளில் அதிகம் சிந்தித்தது – அழிவு, இறப்பு, அர்த்தமிகு வாழ்க்கை வாழும் வழிமுறைகள், நிலையாத்தன்மை, தற்காலிகத்தன்மை.

    இதற்கு மாறாக, ரூமியின் கவிதைகள் தெய்வீக, மறைஞானக் கருப்பொருட்களைக் கையாள்கின்றன. காதலரை வர்ணிக்கின்றன. கவிஞரே ஒரு காதலராக இக்கவிதைகளில் பேசுகிறார். காதல் வயப்பட்ட காதலர் தான் காதலிப்பவரை வர்ணிப்பது போல ரூமியின் ருபாயியாத்துகள் ஒலிக்கின்றன. ரூமியின் கவிதைகளில் காதலிக்கப்படுபவர் இறையாகவே அர்த்தங்கொள்ளப்படுகிறார்.

    சீர்மை வெளியிட்டுள்ள ரூமியின் ருபாயியாத் நேரடியாக பார்சி மூலத்திலிருந்து தமிழ்ப்படுத்தப்பட்டுள்ள அரியத்தொகுப்பு. அடிக்குறிப்புகள் அளிக்கும் விளக்கம் கவிதையைப் பொருள் கோடலில் மிகவும் உதவுகிறது. பார்சி மூலத்தின் தமிழ் transliteration-ஐயும் நூலில் இணைத்துள்ளது தமிழ் வாசிப்புப் பரப்புக்கு மொழிபெயர்ப்பாளரின் முக்கியப்பங்களிப்பு. “என் ஒவ்வொரு அங்கத்திலும் காதலியின் அடையாளம் உள்ளது” (பக்கம் 101) என்று ரூமியார் சொல்லுவது போல மொழிபெயர்ப்பாளரின் ஒவ்வொரு வரியிலும் (முன்னுரை முதற்கொண்டு) பிரபஞ்சக்கவி மீதான வியப்பை மேலதிகம் உயர்த்தும் மெனக்கெடல் நமக்கு உணரக் கிடைக்கின்றது.  

    நன்றி : காலச்சுவடு

  • (சங்கியின்) தோல்வி நிலையென நினைத்தால்

    (அனுபவப்பகிரல் – அரசியல்)

    நேற்று வாட்ஸ்-அப்பில் ஒரு பார்வர்டு வந்தது. “வெற்றி பெற்றவர்கள் தோல்வியுற்றவர்கள் போன்று கவலையுறுதலும் தோல்வியுற்றவர்கள் வெற்றி பெற்றவர்கள் போன்று குதுகலிப்பதும் என விசித்திரமான முடிவைத் தந்துள்ளது இந்த தேர்தல்”

    அப்போது நான் நம்பவில்லை! பாஜக தானே ஆளப்போகிறது பிறகென்ன அதன் ஆதரவாளர்களுக்கு துக்கம்? கூட்டாட்சி என்ன புதிதா? அடல் பிஹாரி வாஜ்பாயி ஒரு கூட்டாட்சியைத் தானே தலைமை தாங்கினார்? ஆனால் இது அத்தனை நேரான விஷயமில்லை ; பல நுணுக்கங்கள் பொதிந்தது என்பது இன்று மதியம் தெளிந்தேன்.

    தலையைப் பிளக்கும் வெயிலில் போகலாமா வேண்டாமா என்று யோசித்து சென்றாக வேண்டிய சூழலில் அந்த வாடிக்கையாளர் நிறுவனத்துக்கு இன்று மதியம் சென்றேன். அவர் பெயர் விக்ரம் (உண்மைப் பெயரல்ல). நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். லக்னோ நகரைச் சொந்தவூராகக் கொண்டவராதலால் இயல்பாகவே அவருக்கு நகைச்சுவை வருகிறது என்பது என் எண்ணம். ஆனால் இன்று மதியம் அவரைச் சந்தித்தபோது ஒரு வித மனப்பாரத்துடன் பேசினார்.

    மீட்டிங் அறைக்குள் அவர் வந்ததும் சில நிமிடங்களுக்கு ஒன்றுமே பேசவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பவர் போல எங்கோ நோக்கிக் கொண்டிருந்தார். நான் லேசாக கனைத்தேன். கண் விழித்தவர் போல ஓர் உலர் புன்னகையை வீசினார்.

    “எப்படி இருக்கீங்க” என்று கேட்டேன்.

    “என்ன சொல்றது….” என்று ஆரம்பித்தவர் மீண்டும் அமைதியானார். ஓரிரு நிமிடங்கள் கழித்து “சொல்றதுக்கொண்ணுமில்ல” என்றார்.

    “ஏன் ஏதேனும் பிரசினையா?”

    “இந்த தேசமே பிரச்னை…பாருங்க ஒரு நல்ல கட்சியைத் தோற்க வச்சிருக்காங்க இந்நாட்டு மக்கள்”

    காங்கிரஸ் அனுதாபியாக அவர் இருக்கக்கூடும் என்பதால் வருத்தத்தில் இருக்கிறார் என்று நினைத்தேன்.

    “அழகா ராமர் கோயில் கட்டித் தந்த கட்சிக்கு ஓட்டளிக்க வக்கில்ல….நன்றி கெட்ட உபி மக்கள்.”

    பொதுவாக வாடிக்கையாளர்களுடன் அரசியல் குறித்துப் பேசுவதில்லை. வியாபாரத்தை அது பாதிக்கும் என்ற பழைய எண்ணம் கொண்டவன். எனவே அலுவலக நண்பர்களிடமோ வியாபாரத் தொடர்புகளுடனோ என் அரசியல் குறித்த எண்ணங்களைச் சற்றும் பகிர்வதில்லை. விக்ரம் பேசுவதை தடுத்து நிறுத்தும் நோக்குடன் “சென்ற வாரம் நான் அனுப்பி வைத்த சாம்பிள் வந்து சேர்ந்ததா?” என்று உப்பு பெறாத கேள்வியை முன் வைத்தேன். அவரோ என் கேள்வியைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

    “சாலைகள், ரயில்கள், என எந்த அரசாங்கம் இது மாதிரி செஞ்சிருக்கு…அதுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டாமா?..தேர்தல் நாளில் குல்லு, மணாலி என்று விடுமுறையில் சென்று விடுவது…..தாடி வைத்து குல்லா போட்டவர்கள் அனைவரும் காலை ஏழு மணிக்கே வந்து குத்தோ குத்து என்று எதிர்க்கட்சிக்கு குத்திவிட்டு சென்றிருக்கிறார்கள்..’நம் ஆட்களோ’ தண்ணியடிச்சுகிட்டு ஓட்டல் ரூமில் படுத்துக் கிடந்திருக்கிறார்கள்”

    “சார், அதான் மோதி வந்துட்டாரே….பின்ன என்ன கவலை?” அவருக்கு ஆறுதல் அளிக்கும் என்று சொன்னால் அவர் மனச்சிக்கல் அதிகமானது போல் இன்னும் சத்தமாகப் பேசலானார்

    “நானூறுக்கு மேல் என்று அந்த மனுஷன் கேட்டாரில்ல…அவருக்கு வாக்களிக்கிறது நம் கடமைன்னு தெரிய வேண்டாம்? தப்பு அந்த மனுஷன் மேல….ஆர் எஸ் எஸ் அடிப்படைகளின் படி ஆட்சி செய்யாமல் ஏழைகளுக்கு வீடு தருகிறேன் என்று முஸ்லீம்களுக்கு (அவர் உபயோகித்த உரிச்சொல்லை இங்கு நான் பயன்படுத்த முடியாது) வீடு கட்டிக் கொடுத்த ஆட்சிக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்! எதிர்க் கட்சிகளுக்கு பயந்துகிட்டே ஆண்டால் எவன் ஓட்டு போடுவான்?”

    இவர் என்ன சொல்கிறார்? தான் ஆதரிக்கும் கட்சியை விமர்சிக்கிறாரோ என்று எண்ணினேன். அவர் ஆழ்ந்த வேதனையில் இருக்கிறார் என்று உடன் புரிந்து போனது.

    “அதாரிடேரியனாக ஆளத்தானே 2019இல் ஓட்டளித்தோம்! அந்தப் பிரக்ஞை இல்லாமல் இலவசங்களை அறிவித்துக் கொண்டே போனால்….ஏழைகள் பாழைகள் என்று கூவிக் கொண்டே போனால்…சரியில்லை…எதுவும் சரியில்லை” என்று சொல்லி நிறுத்தினார். அவர் சம நிலைக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கை பூத்தது. ஆனால் அப்பொது நான் ஒரு தவறைச் செய்தேன். “ஆமாம் சார், சமூக நீதிக்காக ஏதாவது பங்களித்திருக்கலாம்” என்றேன். அவர் என்னை மேலுங்கீழும் பார்த்தார்.

    “சமூக நீதியா! அந்த வெண்ணெயல்லாம் எதிர்க்கட்சிங்க தானே பேசும்? ராமர் கோயில் கட்டிக் கொடுத்தவருக்கு எத்தனை செய்யணும்….அவரைத் தோற்கடிச்சிருக்காங்களே!” – விக்ரம் முகத்தைத் திருப்பிக் கொண்டார். சுவர்ப் பக்கமாகத் திரும்பி கண்ணீர் வடிக்கிறாரோ! மேசையில் இருந்த டிஷ்யுவை வேகமாக எடுத்து சுவரைப் பார்த்துக் கொண்டே முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

    எனக்கோ குற்றவுணர்ச்சி! அவரை எப்படி சமாதானப்படுத்துவது! தண்ணீர்ப் பாட்டிலை அவர் பக்கம் தள்ளினேன். தேவையில்லை என்பது போல சைகை செய்துவிட்டு குரலைக் கனைத்துக் கொண்டார்.

    “வீர சாவர்க்கர் சொன்னார் – எனக்கு ஆங்கிலேயர்கள் மீது பயமில்லை, முஸ்லீம்கள் மீது பயமில்லை, இந்துக்கள் மீது தான் பயம். இந்து மதத்தை மதிக்காத இந்துக்களிடமிருந்து தான் இந்து மதத்தைக் காக்க வேண்டும் – நாயுடு, குமார் என்று மொள்ளைமாரிங்களோட சேர்ந்து மோதி ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருப்பது யாரால…இந்துக்களால” என்று முழங்கிய போது அவர் சற்று தெளிவடைந்தது போலத் தெரிந்தார்.

    நான் என் மடிக்கணினியைத் திறந்தேன். அவர் கவனத்தை திசைதிருப்பி எப்படியேனும் பேச வேண்டிய வியாபார விஷயத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும்!

    “800 ஆண்டுகள் முகலாயர்களின் கீழ், பின்னர் 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் கீழ் அடிமைகளாக இருந்திருந்து அடிமைகளாகவே இருக்கப் பழகி விட்டோம்”

    “ஓ…தலித்துகளைச் சொல்லுகிறீர்களா,,,,ஆமாம் சாதீய சமூகத்தில்” – என்று நான் ஏதோ சொல்லி வைக்க, யாக குண்டத்தில் சுள்ளிகளை அள்ளிப் போட்டு விட்டால் பெரிதாகப் பற்றிக் கொள்ளும் தீ போல தன் வார்த்தைகளை உக்கிரமாக வீசினார் –

    “இந்த கெட்ட வார்த்தைகளை காங்கிரஸ் போன்ற குடும்பக் கட்சிகள் மக்களிடையே பழக்கிவிட்டு…..ராகுல் கையில் அந்தச் சிவப்பு நிற அட்டை கொண்ட புத்தகத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு குத்தோ குத்துன்னு குத்தியிருக்காங்க….அயோத்தியில் கூட பாஜகவை தோக்கடிச்சா அடுக்குமா…அந்தக் கோயில் வந்தது யாரால….அந்த மகானுபாவர் கட்டிக் கொடுத்திருக்காட்டி முட்டி போட்டு தொழுகைதான் பண்ண வேண்டியிருந்திருக்கும்”

    விக்ரமின் சீனியர் முகுல் சரியாக அந்நேரமாக அறைக்குள் நுழைந்தார். பேசுபொருள் மாறிவிடும் வாய்ப்புகள் பிரகாசமாயிற்று.

    “அனுப்பிய சாம்பிள் குறித்து” என்று நான் பேச யத்தனித்த என்னை “ஒரு நிமிஷம் கணேஷ்” என்று கூறி மீண்டும் தடுத்தார் விக்ரம்.

    “நேற்றைய டிபாகிள் பத்தித் தான் கணேஷ்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன்”

    “பேசிப் பயன் என்ன….பதினைஞ்சு சீட் ஜெயிச்சுட்டு 240 சீட் ஜெயிச்ச கட்சிகிட்ட உள்நாட்டு விவகாரம், சபாநாயகர், துணை பிரதம மந்திரி என்று பட்டியல் கொடுக்கும் கட்சிகளுடன் காலந்தள்ள வேண்டிய இக்கட்டுக்கு இந்நாட்டு மக்கள் தள்ளிவிட்டு விட்டனர்” – இது முகுல்.

    “குமாரை கூட்டணிக்குள் மோதி தானே இழுத்துகிட்டு வந்தாரு?” என்று அப்பாவித்தனமாகச் சொன்னேன்.

    “இந்தக் கண்றாவிக்காகத் தான் 273 சீட்டுகளை கூட்டணியில்லாமலேயே தலைவர் வென்றிருக்கணும்…அங்கே கோட்டை விட்டுட்டு நாயுடு, குமார் இருவர் கிட்டயும் கையேந்தி நின்னா?”

    காதுகளில் இருந்து ஏதோ வழிவது போல இருந்தது. அதைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். “எக்ஸ்க்யூஸ் மீ” என்று சொல்லி அறைக்குள்ளிருந்து வெளியே வந்து பர்ஸில் வைத்திருந்த பஞ்சை எடுத்து இரண்டாகப் பிரித்து காதுக்கொன்றாக அவற்றை வைத்து அடைத்துக் கொண்டு அறைக்குத் திரும்பினேன்.

    இப்போது முகுல் கண்களில் கண்ணீர்! விக்ரம் டிஷ்யூ பேப்பரால் முகுலின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார். காதுகளில் பஞ்சடைந்திருந்ததால் ஒருவருக்கொருவர் என்ன ஆறுதல் சொல்லிக் கொண்டனர் என்பதைக் கேட்க முடியவில்லை.

  • பகவத் கீதையும் பவுத்தமும்

    பகவத் துதியை ஒரு கருத்தியலாக முன் வைத்த நூல் பகவத் கீதை. இதனை பக்தி மார்க்கம் என்று வகைப்படுத்துகிறது பகவத் கீதை. இதே நூலில் வலியுறுத்தப்படும் ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் – இரண்டையும் சேர்த்து வீடு – பேறடைய மூன்று மார்க்கங்களைத் தொகுத்தது கீதை. பவுத்தத்தின் மும்மணிகள் – புத்தம், தம்மம், சங்கம் போலவே ஏற்கனவே இருந்த ஞானம், கர்மம் – ஆகிய இரண்டோடு “பக்தி” என்ற ஒன்றை இணைத்தது வைதீக மதம். “பகவத் கீதையின் கருத்துக்கள் களவாடப்பட்டவை” என்ற பொருளில் யாரோ ஒருவர் பேசிய குறுங்-காணொளியை ஓரிரு தினங்கள் முன் கேட்டபோது “களவாடல்” என்று எப்படிக் கூற முடியும் என்ற கேள்வி எழுந்தது. பவுத்தத்தின் எழுச்சிக்கு வைதீக மதத்தின் எதிர்வினை என்றுதான் இதைச் சொல்ல முடியும்.

    பவுத்தம் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் சமூகத்தின் உயரடுக்கு வர்க்கங்களையும் ராஜரீக விஷயங்களில் சம்பந்தப்பட்டிருந்த க்ஷத்திரியர்களையும் அது அதிகம் ஈர்த்தது. இவ்விரண்டு குழுக்களின் ஆதரவில் அது வரை தழைத்து வந்திருந்த வைதீக மற்றும் சாதாரணர்களின் ‘இந்து’ மதம் தம்முடைய ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கக் கூடும். இக்கால கட்டத்தில் பவுத்தத்தின் மீதான பல்வேறு “ஆத்திக எதிர்வினைகளை” – விலங்குப்பலியை தடை செய்தல், சாதிக்கட்டுப்பாடுகளை இறுக்குதல், ‘இந்து’ சமயத்தின் மிகசச்செயல் திறன் மிக்க ஆயுதமான “உட்கிரகித்தல்” போன்றவைகளை – ‘இந்து’ மதம் கைக்கொண்டது. புத்தரை விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக உள்ளிழுக்க முயன்றது. புத்தர் விஷ்ணுவின் அவதாரமானதற்கு சொல்லப்படும் காரணம் – “தவறான போதனையால் எதிரிகளை தவறாக வழிநடத்தி அவர்களை பாவக்குழியில் தள்ளவே ; இதற்காகவே வேத யாகங்களை ஒழிப்பை புத்தர் பேசினார்.” “ஒன்பதாவது அவதாரம்” எனும் அடிப்படையில் புத்தர் பற்றிய புராணக்கதைகளுக்கு சீரழிந்த பவுத்தம் எந்த ஆட்சேபனையும் அளிக்காத காலகட்டங்களில் தம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் புத்தரின் வழிபாட்டை பவுத்த உபாசகர்கள் மேற்கொள்ள வைதீக மதம் அரை மனதுடன் சம்மதித்ததும் பின்னர் நடந்தது.

    “பகவத் கீதையின்” கருத்துக்கள் “பவுத்தத்திலிருந்து” பெறப்பட்டவையா என்ற கேள்விக்கு வருவோம். கீதையில் வரும் அர்ஜுனனின் தடுமாற்றத்தை (அதாவது, யுத்தம், அதனால் எழக்கூடிய விளைவுகளின் பாதிப்பு – கர்மா அல்லது செயலின்மை ஆகியவற்றின் வாயிலாக புனிதமான சாதிக் கடமையை மீறுதல்) பல க்ஷத்திரியர்கள் மற்றும் உயரடுக்கு வர்க்கங்கள் அக்கால கட்டத்தில் எதிர்கொண்டிருக்கக் கூடிய சூழலின் உருவகமாக பார்க்க முடியும். கர்ம மார்க்கம் (அதாவது வர்ணம் அல்லது சாதி சார்ந்த கர்மம்) மற்றும் வைதிக அமைப்பின் குறியீடாக கிருஷ்ணர் போதிக்கும் “செயலாற்று” என்னும் அறிவுரையைக் கருத முடியும். “செயலற்று” இருப்பது பவுத்தத்தின் லட்சியமான துறவறத்தைக் (Monastic Withdrawal) குறிப்பதாகக் கொள்ளலாம்.

    அர்ஜுனன் (பவுத்தப்பாதையில் சென்ற க்ஷத்திரியர்கள் மற்றும் பிற உயர் வர்க்கத்தினர்) செயலற்ற தன்மையைத் (பௌத்தம்) தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக செய்ய வேண்டிய வர்ணக் கடமைகளை அணுகுவதற்கான ஒரு புதிய வழியை கிருஷ்ணர் (பிரம்மம்) முன்வைக்கிறார். தனிப்பட்ட ஆசை அல்லது உள்நோக்கத்துடன் செய்யப்படும் செயல்கள் மட்டுமே கர்மாவைப் பாதிக்கும் என்றும் கிருஷ்ணர் கூறுகிறார். மற்ற எல்லா செயல்களும் (எ.கா. வர்ணக் கடமையின் காரணமாக மட்டுமே செய்யப்படும் கருமங்கள்) ஒருவருடைய கர்மாவை பாதிக்காது. அடிப்படையில் இது பிந்தைய வகை செயலின்மைக்கு (“Monastic Withdrawal”) ஒத்ததானதாக ஆக்குகிறது.

    குறைந்த தத்துவ நாட்டம் கொண்டவர்கள் பௌத்தத்தால் பெரிதும் ஈர்க்கப்படவில்லை என்பதைக் கண்டுகொண்ட வைதிகர்கள் மதத்துக்குள் உணர்ச்சிக் காரணியை நியாயப்படுத்தும் விதமாக பக்தி மார்க்கத்தின் கருத்தியலை, அதன் சிறப்பை கீதையில் விவரிக்கின்றனர்.

    சுருக்கமாக சொல்லப்போனால், பகவத் கீதையில் வரும் பக்தி-மார்க்கக் கொள்கையின் வளர்ச்சியை பௌத்தத்திற்கு வைதீகர்கள் தந்த எதிர்வினையாகப் பார்க்க முடியும். மேலும், பௌத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், பொதுவாக பண்டைய பிராமணியத்தினால் மிகவும் அதிருப்தி அடைந்தவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய பண்டைய இந்தியாவின் சமூக உயரடுக்கிற்கு விரும்பத்தக்கதான ஒரு பிரபல மதமாக முறைப்படுத்தியதில் பகவத் கீதை பெரும்பங்காற்றியிருக்கிறது எனலாம். .

    பகவத் கீதைக்கும் பௌத்தத்துக்கும் என்ன தொடர்பு? வைதீக சமய நூலுக்கும் பௌத்தத்தின் அடிப்படைச் சிந்தனைக்கும் என்ன ஒற்றுமை இருக்க முடியும்? ஆத்மன்/பிரம்மம் கருப்பொருள் பகவத் கீதையின் அடிப்படை. இரண்டையும் மறுக்கும் அனாத்ம தத்துவம் பௌத்தம். ஆச்சாரிய நாகார்ஜுனர் இயற்றிய நூலான “சதுஸ்தவா”-வில் ஒரு செய்யுள் வரும்.

    “பகவானே, உம்மிடம் சிந்தனையில்லை, பாகுபாடில்லை, நோக்கங்களில்லை, எனினும் உயிரினங்களின் நன்மைக்காக ஒரு புத்தரின் பணியை இவ்வுலகில் பற்றின்றி செய்கிறீர்.” – சதுஸ்தவா (நாகார்ஜுனர்)

    கிட்டத்தட்ட இதே போன்ற கருத்து போல் ஒலிக்கும் பகவத் கீதையின் வசனம் ஒன்றுண்டு.

    “மூவுலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை ஏதுமில்லை. எனக்குத் தேவையோ, நான் அடைய வேண்டியதோ ஏதுமில்லை. இருந்தும் நான் விதிக்கப்பட்ட கடமைகளில் ஈடுபட்டுள்ளேன்” என்ற கீதையின் சுலோகம் (பகவத் கீதை – 3:22).

    ஒரே பொருள் கொண்ட வசனங்கள் இரண்டும். ஆனால் கோட்பாட்டுப் பின்னணியில் பொருத்தும் போது அர்த்தம் மாறுபடுகின்றது.

    நாகார்ஜுனரின் கருத்துப்படி – எதற்கும் சார்பற்ற சுயம் இல்லை. அனைத்தும் மற்றவற்றைச் சார்ந்தே உள்ளன. மாயை அல்லது பிரமையே உலகின் அனைத்து பொருட்களும். சாரமில்லை. நிரந்தர இருத்தல் எதற்கும் எவர்க்கும் இல்லை. எல்லாமே அநித்தியம். இவ்வுண்மையை உணர்ந்து நிர்வாண நிலையில் இருக்கும் புத்தருக்கு சிந்தனையோ, பாகுபாடோ, பற்றோ, கடமையோ, தேவைகளோ, நோக்கங்களோ எதுவும் இருக்காது. கடமையில் ஈடுபடுபவர் போல தோற்றமே நான் காண்பது. அனைத்தும் சூன்யம்.

    இப்போது மேல்சொன்ன சதுஸ்தவாவின் செய்யுளை படித்துப்பார்த்தால் நாகார்ஜுனர் என்ன சொல்ல வருகிறார் என்பது விளங்கும்.

    கீதையில் பேசுபவன் கடவுள், அவதாரம், பிரம்மமே அவன், அவன் நிலையானவன், அழிவற்றவன், மூலகாரணம் அவனே, அவனுக்கு காரணங்கள் எதுவும் இல்லை, மூவுலகையும் படைத்து, காத்து, அழித்து, மீண்டும் படைப்பவனுக்கு அடைய என்ன இருக்கிறது? ஆனாலும் அவன் கடமையில் ஈடுபடுகிறான். அர்ஜுனனுக்கு ரதமோட்டுகிறான். அவனே கடமை புரியும் போது க்ஷத்திரியனாக போர் புரியும் கடமை கொண்ட அர்ஜுனன் மனந்தளரலாமா? மயக்கமுறலாமா? உணர்ச்சியற்ற சாந்த நிலை அவனுக்கானதில்லை. அவனுக்கு விதிக்கப்பட்ட போரை அவன் புரிந்துதானாக வேண்டும்.

    சதுஸ்தவா-வின் இந்தச் செய்யுளைத் தழுவி பகவத் கீதையின் ஆசிரியர் எழுதினாரா அல்லது நாகார்ஜுனர் பகவத் கீதையை வாசித்துவிட்டு இந்தச் செய்யுளை இயற்றினாரா என்ற தகவல் தெரியாத வரை யாரைப் பார்த்து யார் எழுதினார்கள் என்பது பற்றி எப்படி தீர்ப்பு சொல்வது?

    இரண்டு தத்துவங்களும் பல நூற்றாண்டுகளாக வாதிட்டும் விவாதம் செய்தும் உரையாடியபடியே இருந்தன. தத்துவ நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளாமல் வடிவங்கள், தொன்மங்கள், முறைகள் என அனைத்தையும் இரு மரபுகளும் கொடுத்தல் வாங்கல் செய்திருக்கின்றன. காப்பியங்களைக் கூட இரு சமய இலக்கியங்கள் பகிர்ந்துகொண்டுள்ளன. மணிமேகலை, புத்தசரிதா எனும் காப்பியங்களில் வரும் இராமாயண, மகாபாரத குறிப்புகளை உதாரணமாகக் கூறலாம்.

    பகவத் கீதையில் “நிர்வாணா” எனும் பௌத்த கலைச்சொல் இரண்டு இடங்களில் உபயோகிக்கப்படுகின்றன.

    “பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்திலேனும் இதில் நிலைகொள்வோன் பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.” (2-72, மொழிபெயர்ப்பு : மகாகவி பாரதி)

    தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.

    *இருமைகளை (*நன்மை – தீமை; குளிர் – சூடு; இன்பம் – துன்பம் என எல்லாப் பொருள்களைப் பற்றி நிற்கும் இரட்டை நிலைகள்) வெட்டிவிட்டுத் தம்மைத்தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சியெய்தும் ரிஷிகள் பாவங்களொழிந்து பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.

    விருப்பமும், சினமும் தவிர்ந்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது. (5-24/25/26, மொழிபெயர்ப்பு : மகாகவி பாரதி)

    “நிர்வாணா” என்ற பவுத்த கலைச்சொல் இங்கு கடன் வாங்கப்பட்டுள்ளது. அக்கால பவுத்தர்களை குழப்பும் எண்ணத்துடன் இது செய்யப்பட்டிருக்கலாம். பவுத்தத்திற்கு முந்தைய வேதக் கருத்தியலான “பிரம்மம்” எனும் மீப்பொருண்மையியல் முழுமையுடன் பவுத்த நிர்வாண நிலை இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு கலைச்சொற்களின் பொருளையும் தெரிந்தோர்இந்தச்சூழலமைவில் எப்படி பொருள் கொள்ளப்பட வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி கூறுகிறார் : “பவுத்தர்களின் நிர்வாணம் ஷுன்யதா ; கீதை சொல்லும் நிர்வாணம் சாந்தி ; பிரம்மத்துள் ஒன்றாதல் எனும் பொருளில் பிரம்ம-நிர்வாணம் என்று கீதை சொல்கிறது.”

    அதெப்படி பவுத்த கலைச்சொல்லை இந்து சமய நூலில் சேர்க்கலாம் என்போர்க்கு தெவிஜ்ஜ சுத்தத்தை உதாரணம் காட்டலாம்.

    பிராமண இளைஞனுக்கு தம்மத்தை போதிக்கும் ததாகதர் வேத பாரம்பரியத்தின் கலைச்சொல்லைப் பயன்ப்டுத்துவதைப் பாருங்கள் :-

    “நீ சொல்வதைப் போல பிக்கு கோபத்திலிருந்து விடுபட்டவர், தீமையிலிருந்து விடுபட்டவர், மனத்தில் தூய்மையானவர், தனக்குத் தானே எஜமானர்; பிரம்மாவும் கோபத்திலிருந்து விடுபட்டவர், தீமையிலிருந்து விடுபட்டவர், மனத்தில் தூய்மையானவர், அவருக்கு அவரே எஜமானர். அது போல, கோபம் இல்லாதவனாகவும், தீமை இல்லாதவனாகவும், மனத்தூய்மை உடையவனாகவும், தன்னைத் தானே எஜமானனாகவும் கொண்ட பிக்கு, மரணத்திற்குப் பிறகு, உடலைக் கரைத்து, அதே பிரம்மாவுடன் ஐக்கியமாக வேண்டும், அத்தகைய நிலை எல்லா வழிகளிலும் சாத்தியம்”

    பகவத் கீதை கருத்துகளைக் களவாடிற்று! திக்க நிகாயம் கருத்துகளைக் களவாடிற்று என்பதெல்லாம் மடத்தனம். ஒரே கலாசார நிலத்தில் விளைந்த வாதமுறைகளை, கூறுமுறைகளை இரு பெரும் மரபுகளும் எடுத்தாண்டன என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

  • ‘இது காடு;நகரமல்ல’

    கான்டர் எனப்படும் திறந்த லாரியில் ஏறி வனத்துக்குள் சென்றோம். எங்களது லாரியில் பத்து-பன்னிரண்டு சுற்றுலாப்பயணிகள் இருந்தனர். மூன்றுமணி நேரம் தேடினோம். நீர்நிலைகளுக்கருகே காத்திருந்தோம். குரங்குகளும் மான்களும் இடும் எச்சரிக்கை ஒலிக்குப் பின்னர், ஒலி வந்த திசையில் காத்திருந்தோம். புலிகளின் பாதச்சுவடுகளைத் தேடினோம். ஈரப்பதமாக இருந்த இடத்தில் அதன் காலடித் தடங்களைப் பார்த்தோம். இரண்டு நாட்களுக்கு முன்னர் புலி அங்கு உலவிய தடம் அது என்றார், வாகனத்தைச் செலுத்திய முன்னாள் ராணுவ வீரர். அந்தத் தடம் பெண் புலியினுடையதாக இருக்கலாம் என்றும் சொன்னார். ஆண்புலியின் தடம் பெண்புலியின் தடத்தைவிடப் பெரிதாக இருக்கும் என்றார்.

    வாகன ஓட்டியுடன் ஒரு நடத்துநரும் இருந்தார். சஃபாரி நடத்துநரின் பெயர் என்னவென்று கேட்க மறந்துவிட்டேன். நேர்த்தியான ஆங்கிலத்தில் (லேசாக எட்டிப் பார்த்த ராஜஸ்தானி கொச்சை மொழியில்) பேசினார். வேளாண்மைத் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருந்த அவருக்கு தர்தி என்ற பெயர் பொருத்தமாக இருக்கும்.

    ஓரிடத்தில் வண்டியை நிறுத்திப் புலி தென்படுகிறதாவென நோக்கிக்கொண்டிருந்தோம். சுல்தானாவின் பகுதியில் வண்டியை நிறுத்தியிருப்பதாக தர்தி சொன்னார். சுல்தானா இளம் பெண்புலி. சமீபத்தில் மூன்று குட்டிகளை ஈன்றிருக்கிறது.

    வேறோர் இடத்தில் நாங்கள் காத்திருந்தபோது சுல்தானாவின் சகோதரி நூரியின் பகுதியை அடைந்திருந்தோம். நூரிக்கும் சுல்தானாவுக்கும் அன்னை உண்டு. அதன் பெயர் நூர். நூர் முதுமையை எட்டிவிட்டதாம். அதற்குப் பதினாறு வயதாகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம் – இரண்டாம் குட்டி நூரி அன்னை நூரைத் துரத்தி அன்னையின் பிரதேசத்தைக் கைப்பற்றிக்கொண்டதுதான்.

    வாழும் பெருங்காட்டில் தனக்கென ஒரு பகுதியை நிர்ணயித்துக் கொண்டு தனித்து வாழும் புலி ஒரு தனிமை விரும்பியாகும். அன்னை, குட்டி எனத் தம் உறவு அனைத்திலிருந்தும் விலகி நிற்கும் பிராணி. குட்டிகள் தாயிடம் இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் இருக்கும். அதன் பின்னர், குட்டி அன்னையைத் துரத்திவிடும் அல்லது தாய் குட்டியைத் துரத்திவிடும். தானிருக்கும் பிரதேசம் தன்னுடையதாய் மட்டும் இருக்க வேண்டும் என்று கருதுவது புலிகளின் மரபணுவில் உள்ளது. மரத்தின் மீது பற்குறிகளைப் பதிப்பது, மலம் – மூத்திரம் போன்றவற்றால் குறிப்பது எனத் தன்னுடைய பிரதேசத்தை வரையறை செய்யும். பெண் புலி, மரங்களின் மீது தன் மூத்திரத்தைத் தடவி அதன் வாசனையைப் பரப்புவதன் மூலம் ஆண் புலிகளைப் புணர்வதற்கென அழைக்கும்.

    புள்ளிமான்களும் கலைமான்களும் ஏராளமாய்ச் சுற்றித்திரிந்துகொண்டிருந்தன. வடஇந்தியச் சமவெளி சாம்பர் மந்திகளும் நிறைய கண்ணில் பட்டன. மானுக்கும் மந்திக்கும் இருந்த நட்புறவைப் பற்றி அதிகம் குறிப்பிட்டார் தர்தி. மரத்தின் மேல் உட்கார்ந்திருக்கும் மந்தி, புலியின் நடமாட்டம் இருந்தால் உடனடியாகச் சத்தம் கொடுக்குமாம். மரத்தினடியில் மேய்ந்து கொண்டிருக்கும் மான்கள் மந்தியின் சத்தத்தைக் கேட்டவுடன் ஓடத் தொடங்கிவிடுமாம். காட்டு பெர்ரி மரங்களில் பழுத்திருக்கும் அதன் பழங்களைத் தரையில் வீசியெறிந்து மான் நண்பர்களுக்குத் தின்னத் தருமாம்.

    இன்னோர் இடத்தில் காத்திருந்தபோது பாசி படிந்திருந்த நீர் நிலைக்கருகே இருந்த சேற்று மண்ணில் புரண்டு கொண்டிருந்தது கறுப்பு நிறமுள்ள ஓர் ஆண் கலைமான். அதற்குப் பக்கத்தில் இருந்த பாறாங்கல்லில் இரண்டடி நீளமான வெளிறிப் போன முதலையொன்று சூரியக் குளியல் எடுத்துக் கொண்டிருந்தது. குளிர்காலத்தில் உறக்க நிலைக்குச் சென்றுவிடும் பாம்புகள்போல, முதலைகள் குளிர்காலத்தில் சூரிய வெளிச்சத்தில் நாட்கணக்கில் படுத்துக்கிடக்குமாம்.

    புள்ளிமான்களைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. நாங்கள் புலியின் வரவுக்காக ஏங்கி மான்களை ஆபத்துக்குள்ளாக்குகிறோமோ என்ற குற்றவுணர்வுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். வயது முதிர்ந்த ஆண் கலைமான்தான் புலிக்குப் பிடித்தமான இரை என்றார் தர்தி. ஓர் ஆண் கலைமானை வேட்டையாடினால் நான்கு நாட்களுக்குப் புலி மீண்டும் வேட்டைக்குச் செல்ல வேண்டியதிருக்காதாம். தர்தி இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் சரியாக ஒரு கறுப்புக் கலைமான் எங்கள் வாகனத்துக்கு மிக அருகில் நின்றிருந்தது. அதன் கொம்புகள் நன்கு முதிர்ந்திருந்தன. நீட்டிக்கொண்டிருந்த மரக்கிளைகளைத் தன் கொம்புகளால் வளைத்துக் கடந்துசெல்லத் தொடங்கியது. கொம்புகள் உடைந்துபோய்விடுமோ என்று நான் பயப்பட்டேன். உடைந்தாலும் கொம்பு மீண்டும் வளரும் என்றார் தர்தி.

    மான்களை எளிதில் புலிகள் வேட்டையாடிவிட்டால் காட்டில் மான்களின் எண்ணிக்கை குறைந்துவிடாதா என்ற குழந்தைத்தனமான கேள்வியைத் தர்தியிடம் கேட்டேன். உணவுச்சங்கிலியெனும் பெருங்கருத்தின் மிகச் சிறு அறிமுகத்தை எனக்களித்தார் தர்தி. 1700 கிலோ சதுர மீட்டர் பரப்பளவுகொண்ட ரண்தம்போர் காட்டில் 75 முதல் 80 புலிகள் வாழ்கின்றன. இருபது சதுர கிலோ மீட்டருக்கு ஒரு புலி. வேட்டையாடும் ஒவ்வொரு தடவையும் புலி வெற்றிபெறும் எனில் மான்களோ பிற மிருகங்களோ எஞ்சியிராது. அப்படி இரைகள் அனைத்தும் மடிந்துவிட்டால் புலிகள் எப்படி உயிர் வாழும்? Bio-diversityயை நிலைநிறுத்துவதில் இயற்கையாற்றும் பங்கை விவரித்தார் தர்தி. பத்துமுறை முயன்று ஒரு வெற்றியும் பெறாமல் இரையில்லாமல் குகைக்குப் பட்டினியுடன் திரும்பும் புலி பற்றிப் படித்த ஒரு சிறுகதை நினைவில் வந்தது. அதன் தலைப்பு ஞாபகமில்லை. வேட்டையாட வரும் மிருகத்திடமிருந்து காத்துக்கொள்ள சாது மிருகங்களுக்கு இயற்கை அளித்திருக்கும் வெகுமதிகள் அவற்றைப் பலமுறை காப்பாற்றிவிடுகின்றன. பசியுடன் பதற்றத்தையும் சுமந்து திரியும் புலியை எளிதில் கற்பனைசெய்துகொள்ள முடிந்தது. புலியின் வேட்டையில் சிக்கி உயிர்துறக்கும் மானைத் தூரத்திலிருந்து பார்க்கும் பிற மான்களுக்கும் பதற்றம் தொற்றலாம்.

    கோரைப்புற்கள் அசைவதான பரபரப்பு ஏற்பட்டது. கேன்டர்களும் ஜிப்ஸிக்களும் ஒரே இடத்தில் நின்றன. “அங்கு தெரிகிறது அங்கு தெரிகிறது” எனும் சத்தங்கள்! கண்ணை வெறித்துக்கொண்டு சொன்ன திசையில் நோக்கினேன். புற்கள் அசைவது தெரிந்தது. பிராணி கண்ணில் படவில்லை. பக்கத்து கான்டரில் இருந்த அயல் நாட்டுச் சுற்றுலாப்பயணி பைனாகுலரை வைத்து உற்றுநோக்கிக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் திருப்தியில்லை; புன்னகையில்லை. புலி தெரிந்திருந்தால் ஒரு புன்னகை மலர்ந்திருக்கலாம். ஜிப்ஸி வாகனங்கள் நகர்ந்தன. எங்கள் ஓட்டுநருக்கு அங்கிருந்து கிளம்ப மனசு வரவில்லை. “அந்தக் கோரைப்புல்லுக்குப் பின்னால் நிச்சயம் புலிக்குட்டி இருக்கிறது” என்கிறார் ஓட்டுநர். ஐந்து நிமிடங்களாயின. கோரைப்புல்லில் இருந்து எதுவும் வெளியே வரவில்லை. ஏமாற்றத்துடன் நகர்ந்தது எங்களது வாகனம்.

    காட்டுக்கு நடுவே மலசலம் கழிக்க சில அறைகள் கட்டப்பட்டிருந்தன. அதற்கருகே வாகனங்கள் சில நிமிடங்கள் நின்றபோது பறவைகள் வந்து பயணிகளின் கைகளிலும் தரைகளிலும் அமர்ந்து விளையாட்டுக் காட்டின. அழகான அடர்-மஞ்சள் நிறப் பட்டையுடன் பறவைகள் பார்க்க மிக வசீகரமாக இருந்தன. என் தலைமீது வந்தமர்ந்த ஒரு பறவை நான் தலைகுனிந்தபோது முதுகில் முத்தமிடுவது போன்று குத்திவிட்டுப் போனது. அதனை உள்ளூரில் புலிப்பறவை என்று அழைப்பார்கள் என்றார் தர்தி. காக்கை இனத்தைச் சார்ந்த புலிப்பறவையின் ஆங்கிலப்பெயர் -ரூஃபஸ் ட்ரீபி.

    இலேசாக இருட்டத் தொடங்கிற்று. புலிகள் பகல்-தூக்கத்திலிருந்து விழித்து உலாவத் தொடங்கும் நேரம். சிறிய நீர்நிலைக்கருகே காத்திருந்தோம். மாமிச உணவுண்ணும் பெரும்பாலான மிருகங்கள் பொதுவாக இரவில் உலவுபவை. மான் போன்று தாவரவகைகளைத் தின்னும் விலங்குகள் சாயங்காலப் பொழுதுகளில் தூங்கச் செல்பவை எனும் சுவாரசியமான பார்வையைப் பகிர்ந்தார் தர்தி.

    புலிகள் தலைகாட்டுவதாயில்லை. வண்டியைத் திருப்பிக் காட்டுப்பகுதி எண் ஒன்றை நீங்கும் தறுவாயில் கிட்டத்தட்ட முந்நூறு மீட்டர் தொலைவில் மாலைச் சூரியனின் ஒளியில் மஞ்சள் தோல் மின்ன எங்களுக்கு முதுகு காட்டிச் சென்றுகொண்டிருந்தது அம்மிருகம். மற்றவர் சொல்லாமலிருந்தால் அதைப் புலி என்று நான் எண்ணுவதற்கே வாய்ப்பு அதிகம். “அதோ பாருங்கள் சிறுத்தை!” என்றார். சிறுத்தையின் தோல்களில் புலிபோன்ற வரிகள் இருக்காது. புலியை விடச் சற்றுப் பலங்குறைந்த மிருகம். புலியைப் பார்க்காத ஏமாற்றத்துடன் திரும்பிக்கொண்டிருந்ததாலோ என்னமோ “சிறுத்தைகளைப் பார்ப்பது புலிகளைப் பார்ப்பதைவிட அபூர்வம்” என்றார் தர்தி.

    ரண்தம்போர் தேசியப்பூங்காவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 114. புலிகளின் எண்ணிக்கையைவிட அதிகம். புலிகளைக் காட்டிலும் சிறுத்தைகள் கண்ணில் தென்படாமல் இருப்பதில் தேர்ந்தவை.

    “புலியைப் பார்க்கப் போனேன். சிறுத்தை பார்த்து வந்தேன்” என்று முனகிக்கொண்டிருந்தபோது கான்டர், தேசியப் பூங்காவின் வாயிலை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தது. எங்களுக்கு முன் சென்றுகொண்டிருந்த ஜிப்ஸியில் இருந்த இளம்பெண்ணொருத்தி சிப்ஸ் பாக்கெட்டைத் தூக்கியெறிந்தாள். எங்களது வண்டியின் ஓட்டுநர் – முன்னாள் ராணுவ வீரர் உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தினார். “அம்மா, அக்கா”க்களைச் சேர்த்துச் சில வினைச்சொற்களை உச்சரித்தவாறே அந்த பிளாஸ்டிக் பாக்கெட்டைப் பொறுக்கியெடுத்தார். “இது காடு… மிருகங்கள் வாழும் பகுதி… நகரமல்ல” என்று கத்திச் சொன்னார்.

    நன்றி : காலச்சுவடு

  • Kashmir’s Transition to Islam – by Ishaq Khan – விமர்சனம்

    வரலாற்று மூலங்களைத் திறந்த மனதுடன் அதே சமயம் விமர்சன பூர்வமாக அணுகுதல் அதிமுக்கியம். இல்லையேல் வெறும் விவாதமாக முடிந்துவிடக்கூடும். கருத்து நிலைகளுக்கேற்றவாறு சாயும் அணுகுமுறை வரலாற்றாளர்களின் பலவீனமாகக் கருதப்படும். என்னுடைய பார்வையில், இஷாக் கான் அவர்களின் Kashmir’s Transition to Islam ஒரு பலவீனமான நூல் என்றே சொல்வேன்.

    இஷாக் கான் இரண்டு பார்வைகளை முன் வைக்கிறார். (1) Syncretism – அதாவது சமயங்களின் சேர்ந்தியங்குதல் – எனும் கருத்தை அவர் நிராகரிக்கிறார். இஸ்லாம் கஷ்மீரின் புராதன கலாசார அம்சங்களை ஏற்றுக் கொண்டதை மாறும் முறை என்று வர்ணிக்கிறார். இஸ்லாமின் இறுதி இலக்கு “ஷரியா” எனப்படும் இஸ்லாமிய உயர் கொள்கைகளே என்கிறார். (2) நந்த் ரிஷியும் அவருக்குப் பின் வந்த ரிஷிகளும் கஷ்மீரியத் என்ற அடையாளத்தை இஸ்லாத்தின் அடிப்படைச் சித்திரத்தின் பின்ணனியில் வரைய வந்தவர்கள்.

    இரண்டு பார்வைகளும் பிரச்னைக்குரியவை. கஷ்மீர தேசியவாதத்தின் அடிப்படை முழுவதையும் “இஸ்லாம்” எனும் ஒற்றை அடையாளத்தில் சுருக்க நினைத்த குழுக்களின் குரல் வலுத்த (“அயல் நாட்டு உதவியுடன் வலுக்க வைக்கப்பட்ட”) தொண்ணூறுகளில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் – கஷ்மீரக் கலாசாரத்தின் சிறப்பியல்பு என்று கஷ்மீரின் தற்கால சாதாரண நபர்களும் பெருமிதங்கொள்ளும் ஒன்றை மறுக்கிறது. சமயங்களின் ஒருங்கிணைவு என்ற ஒன்றும் இல்லை. பிராமணர்களின் சாதீயத்தால் பாதிக்கப்பட்ட வெகுஜனங்கள் இஸ்லாமைத் தழுவுதலுக்குச் சலுகையாக அவர்களின் முந்தைய கலாசாரத்தின் அம்சங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டன. இது இறுதியானதில்லை. கஷ்மீரில் இஸ்லாம் மாறும் தன்மையதாக இருக்கிறது. எனவே, சமயங்களின் ஒருங்கிணைவு இலக்கில்லை. இதற்கான தரவுகளை ஆசிரியர் தெளிவாகத் தரவில்லை. நந்த் ரிஷி-யின் பாடல்களில் இருக்கும் இந்து, பௌத்த அடையாளங்களை அவரின் ஆரம்ப காலச் சிந்தனை என்று சுருக்கிவிடும் இஷாக் கான், லல்லா எனும் சைவ சித்தரை முழுவதுமாக இஸ்லாத்தில் பொருத்திக் கொள்கிறார்.

    கங்கைச் சமவெளியில் சாதீய கொடுமைகளுக்கு எதிராக பக்தி இயக்கம் பரவி பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இஸ்லாத்தின் பரவலை கட்டுப்படுத்தியது என்பதை ஏற்கும் இஷாக் கான், கஷ்மீரில் பக்தி இயக்கம் தோல்வியுற்றது என்று கூறும்போது இஸ்லாம் பிராமணரல்லாத வெகுஜனங்களை அரவணைத்துக் கொண்டதுதான் என்று எளிதில் கூறி விடுகிறார். இதே நிலைமை கங்கைச் சமவெளியில் ஏன் கை கூடவில்லை என்ற கேள்விக்கு பதிலேதும் சொல்லாமலேயே சென்று விடுகிறார் இஷாக் கான்.

    சுல்தான் சிக்கந்தர் இந்துக் கோயில்களை அழித்ததைப் பதிவு செய்யும் ராஜதரங்கிணி நூல் மீது ஆசிரியருக்கு ஏனோ மனத்தாங்கல்! இஸ்லாமிய அரசர்களை காலரீதியாக பெரும்பான்மையான இடங்களில் தெளிவுடன் பதிவு செய்யும் ராஜதரங்கிணியின் விடுபடல்களுக்கு காரணம் கற்பித்தல் எந்த அளவுக்கு வரலாற்று அணுகுமுறை எனத் தெரியவில்லை? சுல்தான் சிக்கந்தரின் சிலை உடைப்புகளுக்கான பழியை புதிதாக மதம் மாறிய முன்னாள் பிராமணர் சுக பட்டர் மீது பழியைப் போடுகிறது ராஜதரங்கிணி! புது இஸ்லாமியராக தமது விசுவாசத்தை நிரூபிக்க சுக பட்டர் செய்த கொடுமைகள் என்று பதிவு செய்யும் ராஜ தரங்கிணி – மீர் அலி சைய்யத் ஹம்தானி-பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதற்கு காரணமாக ராஜ தரங்கிணியின் பிராமண ஆசிரியர்களினுடைய மனச்சாய்வு என்கிறார் இஷாக் கான். ஆனால் சைய்யத் ஹம்தானியின் புதல்வர் – முகம்மது ஹம்தானி கஷ்மீருக்கு வந்து, சுல்தானுடைய சபையின் அங்கமாக இருந்ததை ஜோனராஜா (ராஜ தரங்கிணியின் ஆசிரியர்களுள் ஒருவர்) கூறுவதை மேற்கோள் காட்டுகிறார்.

    லல்லா குறித்தும் ராஜ தரங்கிணி மௌனம் சாதிப்பதை சதி என்ற நோக்கில் நோக்குகிறார் இஷாக் கான். லல்லா குறித்து வரலாற்று ரீதியாக நமக்கு அறியத்தருபவை இஸ்லாமியர்களின் குறிப்புகளே என்பது உண்மைதான். இந்த கூற்று ஒன்றை வைத்துக் கொண்டு லல்லாவை இஸ்லாமுக்கு நெருக்கமானவர் என்று புத்தகம் முழுதும் கூறிச் செல்கிறார். 17ம் நூற்றாண்டின் இஸ்லாமிய குறிப்பாளர்கள் ஹைதர் மாலிக் சதுரா, ஹஸன் பின் அலி கஷ்மீரி போன்றவர்களும் லல்லா பற்றி எதுவும் சொல்லவில்லை. அதைப் பற்றி இஷாக் கான் வாய் திறக்கவில்லை.

    லல்லாவை இஸ்லாமுக்கு நெருக்கமானவர் என்று காட்டுவதற்கு அவர் தரும் ஆதாரங்கள் தொன்மங்களின் அடிப்படையிலானவை. தொன்மங்களைக் கேள்விக்குட்படுத்தவேயில்லை இஷாக் கான். முகம்மது ஹம்தானியை குருவாகக் கொண்டிருந்தவர் என்ற இஸ்லாமியர்களின் தொன்மக்கதையை ஐயமின்றி ஏற்றுக் கொண்டுவிடும் இஷாக் கான் ஶ்ரீ காந்த சித்தர் என்பவரை லல்லேஸ்வரியின் குருவாகக் கூறும் இந்துக்களின் தொன்மங்களை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்.

    லல்லாவின் கருத்துகளைத் தமக்கிஷ்டமான வகையில் வளைத்துக் கொள்ளும் இயல்பும் நூல் முழுக்கக் காணக்கிடைக்கிறது. உதாரணத்திற்கு, பக்கம் 75இல் கீழ்க்கண்ட லல்லாவின் வாக்- மேற்கோள் காட்டப்படுகிறது –

    “வெட்கத்தின் தளைகளை உடைத்தெறிவது எப்போது?
    ஏளனத்தை கேலியை அலட்சியம் செய்வது எப்போது?
    தகுதியின் உடைகளை நிராகரிப்பது எப்போது?
    என் மனதை ஆசைகள் தாக்கிக் கொண்டிருந்தால்”

    இஷாக் கான் அவர்களுக்கு மேற்சொன்ன வாக் – லல்லா வாழ்ந்த காலத்தின் சமூக வேற்றுமைகளை விவரிக்கிறதாம்!

    இன்னொரு உதாரணம் – பக்கம் 74

    “சிவன், எங்குமுள்ள, அனைத்திலும் உறைகிறான்
    எனவே, இந்துவையும், முஸ்லீமையும் பிரித்துப் பார்க்காதீர்
    ஞானமுண்டெனில் உம்மை அறிக
    பிரபுவின் உண்மை ஞானம் அதுவே”

    இஷாக் கானின் கருத்துப்படி மேற்சொன்ன வாக் பிராமணர்களைத் தாக்குகிறதாம்! சடங்கியல்கள் மட்டுமே அறியாமையைத் தெளிவிக்காது – என்ற கருத்து உபனிடத காலப் பழசு என்பதை இஷாக் கான் அறியாதவர் போலிருக்கிறது.

    புழங்கும் தொன்மக் கதைகளின்படி, தன்னுடைய மானசீக குருவாக வரித்துக் கொண்ட லல்லாவை அவதாரம் என்கிறார் நூருத்தின் எனும் நந்த் ரிஷி தன்னுடைய ஒரு பாடலில் –

    “பத்மன்புராவின் அந்த லல்லா
    திருப்தியடையும் வரை தெய்வீக அமுதைக் குடித்தவள்
    எங்களுக்கு அவதாரம் அவள்
    கடவுளே, அதே ஆன்மீக ஆற்றலை எனக்கும் அளித்தருள்!” – பக்கம் 77

    அதே பக்கத்தில் இஷாக் கான் கூறுவது –

    “That Lalla, as an ardent lover of Siva, succeeded in reviving Saivism is an argument belied by the very silence of our Saivite chroniclers and poets of her near-contemporary and later times. What is, however, of significance to remember from the viewpoint of social history is the historical dimension of her elevation to avatar by a devout Muslim like Nuruddin”

    இந்தப் பத்தியில் வெளிப்படும் முரண்களைப் பாருங்கள்! சைவத்தின் மறுமலர்ச்சியில் லல்லா வெற்றி பெறவில்லை என்று உறுதிபடக் கூறும் இஷாக் கான் அதற்களிக்கும் ஆதாரம் அவளின் சமகாலக் குறிப்பாளர்கள் அவளைப் பதிவு செய்யாததைக் குறிப்பிடுவது! அவளை “அவதாரம்” என்று நூருத்தின் எனும் ஆசாரமான முஸ்லீம் புகழ்வது சமூக வரலாற்றுப் பரிமாணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இஷாக் கான் ஜிலேபி சுற்றுவதைத் தான் கஷ்மீர சமூகவியலாளர்கள் “Syncretism” என்கிறார்கள்.

    நந்த் ரிஷி இஸ்லாமிய சூபி என்பதற்கு மறு கருத்தில்லை. ஆனால், இரண்டாம் தலைமுறை இஸ்லாமியர் என்ற முறையில் அவருடைய தந்தையின் முதல் மதத்தின் தொப்புள் கொடி உறவு அவரின் கவிதைகளில் வெளிப்படுவதை “ஆரம்பகாலம்” என்று கூறுவது நந்த் ரிஷியின் சமயச்சேர்ந்தியல் இலக்கை மறுப்பதாகும். கால வரிசை அடிப்படையிலான நந்த் ரிஷியின் பாடல்கள் தொகுப்பு இன்று வரை வெளிவரவில்லை எனும் போது தமது ஊகத்தை ஒரு வரலாறாக கட்டமைப்பது பிழையான அணுகுமுறை.

  • கண் திற

    ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும் – எம் டி முத்துக்குமாரஸ்வாமி
    தமிழ்வெளி வெளியீடு

    குளிரூட்டப்பட்ட காருக்குள் மேற்கத்திய இசையில் லயித்து மதுவருந்தியபடி, பெண்ணொருத்தியின் அங்கங்களை, சிணுங்கல்களை கற்பனையில் ஏற்றிக் கொண்டு கண் மூடிப் பயணம் செய்கிறான். உமது திருச்சட்டத்தில் உள்ள அற்புதங்களை நான் காண என் கண்களைத் திற. – என்கிறது ஒரு விவிலிய வசனம். உடலின் ஒளியாகிய கண் மூடிக்கிடக்கும்போது எதைக் காணவியலும்? 

    ஓட்டைக்கண்ணைத் திறந்து ஜன்னல் வழிப் பார்க்கிறபோது அவன் காணும் காட்சி அவனுள் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிடுகிறது. ஜன்னல் வழி அவன் பார்க்கும் முதியவனின் முகம் அவனுடைய முகத்தை ஒத்திருக்கிறது. அவன் பார்ப்பது அவனுடைய பிரதிபலிப்பவையேவா? சில வினாடிகளுக்கு முன்னர் போதையுணர்வில் ஆழ்ந்திருந்த அவனை புரட்டிப்போடும் அந்த ஜன்னல் வழி தெரியும் உருவம் நிஜமா, அல்லது அவன் கற்பனை செய்து கொள்ளும் அவனுடைய பிரதிபலிப்பா? 

    ஒரு கணத்தில் அவன் தன்னைப் பற்றிய தற்சோதனையில் ஈடுபட்டிருக்கக் கூடுமா? அதற்கான ஒரு சங்கேதமும் அந்தத் தருணத்துக்கு முன் கவிதையில் சித்திரிக்கப்படவில்லை. தீடீர் பெருமாற்றம் நிகழ ஒரு நொடி போதும் என்ற கருத்தை கவிதை சொல்ல வருகிறது என்றுதான் மேல் நோக்காகத் தோன்றுகிறது.

    ஆனால், கவிதை சொல்ல வருவது அதனை மட்டுமில்லை என்பதற்கான பல வாசிப்புச் சாத்தியங்களை இக்கவிதை தன்னகத்தே கொண்டுள்ளது. 

    கவிதையின் வரும் சில முக்கியக் குறிச்சொற்களைப் பார்ப்போம்.

    நகரத்தின் பொறி

    முகத்தின் முதிய சாயல்

    அழியும் தற்போதம்

    தன்னழிவு

    இறுதி ஊர்வலம்

    சாவு நடனம்

    ஓட்டைக் கண்பார்வை

    எலிப்பொறியில் சிக்கிக் கொள்ளும் எலிக்கு அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை நினைத்து ஏற்படும் கிலியுணர்வைத் தான் நகரத்தின் பொறி நமக்குள் தோற்றுவித்துக் கொண்டே இருக்கிறது. ஓர் இருத்தலியல் சிக்கலின் குறியீடாகப் போக்குவரத்து நெரிசல் கவிதையின் ஆரம்பத்தில் நிகழ்கிறது. கார் நகராமல் அந்த நெரிசலில் காத்திருக்கும். காருக்குள்ளிருக்கும் பயணி நிலைமையின் உதவியற்ற தன்மையை மறுப்பவன் போல “ஜோஷுவா பெல்லின் வாசிப்பில் சாய்க்கோவ்ஸ்கியின் வயலின் இசையை கன்சர்ட்டோ சிங்கிள் மால்ட் விஸ்கியுடன்” உள்ளிறக்கிக் கொண்டிருக்கிறான்.

    கார் ஜன்னலுக்கப்புறம் தீடீரென்று வெகுஅருகே வந்து உள்ளே நோக்கும் உருவங்கள் பொதுவாகவே திடுக்கிட வைக்கும். இங்கோ இசையும், மதுவும் பெண் சிந்தனையும் அளைய ஓட்டைக் கண் திறந்து பார்த்தவுடன் தோன்றும் திடுக்கிடல் தடாலென அவனுள் மாற்றத்தை நிகழ்த்திவிடுகிறது. அவன் பார்க்கும் கிழ உருவம் அவனுடய முகத்தின் முதிய சாயல் என்பதாக இருந்தது என்ற குறிப்பு கவிதையில் உள்ளது. யாசகம் செய்யும் பிச்சைக்காரக் கிழவனுடனான உருவ ஒற்றுமையாக அதைப் பார்த்தாலும், மதுவின் போதையில் ஆழ்ந்திருந்தவன் ஓட்டைக் கண்ணைத் திறந்து புறம் நோக்கினானா, அல்லது தன்னுள் நோக்கினானா?

    ஒருவனுடைய தற்போதம், அதாவது தன்னினைவு அல்லது ஆணவம் எப்போது அழியும்? போதையுணர்வில் அவனுடைய தற்போதம் நீங்க வாய்ப்பு உண்டெனினும், அப்போதையுணர்விலிருந்து அவன் நீங்க அவனுக்கு மனம் வந்திருக்குமா என்பது சந்தேகம். அழியும் தற்போதம் அகத்தினுள் தன்னுடைய முகத்தின் முதிய சாயலைத் தரிசித்ததனால் விளைந்தது என்பதாகப் பொருள் கொள்ள கவிதை வாய்ப்பளிக்கிறது.

    தன்னழிவு என்றால் என்ன? பொதுவாக எதிர்மறைச் சொல்லாக கருதப்படும் பதம் – தன்னழிவு. தற்கொலை, தீக்குளிப்பு முதலான செயல்கள், சுயவதை என்பன போன்றவற்றைத் தன்னழிவு என்ற சொல்லால் குறிப்பர். இக்கவிதையில் சுயத்தின் அழிவு என்பதான அர்த்தத்தில் வாசிக்க இடமிருக்கிறது. மேட்டிமை அடையாளங்களை உடனடியாக இழந்து (யாரோ ஒருவரின்) இறுதி ஊர்வலத்தில் அவன் தன்னை மறந்து நாக்கைத் துருத்திக் கொண்டு சாவு நடனம் ஆடியதில் அவன் இழந்தது எதை? அந்தத் தன்னழிவு தன்னை அழித்துக் கொண்டதைக் குறிக்கிறதா? அல்லது சுயத்தின் அழிப்பைக் குறிக்கிறதா?

    “உள், அகநிலை சுயம் மற்றும் வெளி உலகிற்கு இடையே”யான பாலமாக நீண்ட காலமாகவே கண்களைக் கருப்பொருளாகக் கொண்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.  கவனம், உண்மை, தெளிவு, ஒளி, பார்வை, தீர்க்கதரிசனம், விழிப்புணர்வு மற்றும் அவதானிப்பு ஆகிய    கருத்துக்களை நனவில் பரப்பும் கற்பனையைத் தூண்டுவதற்கு முயற்சிக்கும் கலைஞர்களுக்கு கண் ஒரு சரியான அடையாளமாகத் திகழ்கிறது. “பொய்க் கண்ணாடி” என்ற மிகப் புகழ் பெற்ற கண்ணோவியம் ஒன்று உண்டு.  ஓர் உயிர்ப்பில்லா கண். அதற்கு புருவமில்லை. அதன் கண்மணி கடுங்கருப்பு நிறத்தில் இருக்கிறது. அதற்கு மாறாக கருவிழி மேகம் பரவிய நீல வானம். உயிர்ப்பற்ற ஒரு கண்ணில் சுதந்திர வானம் தெரிந்தாலும் அதை ரசிக்கவோ உத்வேகம் கொள்ளவோ முடியுமா?  முதல் உலகப் போரை அசை போடும் ஓவியர் போரில் சிக்கிய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த பார்வையாளனின் உயிரற்ற சித்தரிப்பைப் பயன் படுத்திக் கொள்ளுகிறார். பயத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாளை அந்தக் கண் நோக்கும்போதும் அது உயிரற்றுக் கிடக்கிறது. 

    ஜன்னலில் தெரிந்த அவனுடைய முகத்தின் முதிய சாயல் கொண்ட உருவம் வெறித்து நோக்கிய இவனுடைய கண் பொய்க்கண்ணாடியா? ஓட்டைக் கண் திறந்ததும் பொறியிலிருந்து தப்பி சுதந்திரமாக ஓடும் எலி போல சாவின் நடனத்தில் பங்கு பெறுகிறான் காரில் இருந்தவன். இம்மாறுதல் அவன் கார் ஜன்னல் வழி ஒட்டைக் கண் திறந்ததனால் சாத்தியமாயிற்று. இருத்தலியல் பயம் படிந்து உயிர்ப்பில்லாத மூடிய ஓட்டைக் கண் பார்வை சற்று திறந்ததும் அங்குமிங்கும் மேகம் பரவிய நீல வானத்தின் உண்மையான தரிசனம் கிட்டி வாழ்வின் உயிர்ப்பைத் தழுவிக் கொள்ளும் முயற்சியில் இறங்கினான் காருக்குள்ளிருந்தவன். அடுத்தவரின் இறப்பில் கலந்துகொண்டு சாவு நடனம் ஆடுகிறான். மேற்கத்திய இசை, வசதி, பெண் சுகம் – இவ்வனைத்தும் தப்பித்தல்கள். வாழ்வின் நிகழ்வில் முழுமையாக இருத்தலே இருத்தலியல் தவிப்பின் உண்மையான ஆற்றுப்படுத்தல்கள் என்று Moral of the story பாணியில் எழுதி விடுதல் போல இக்குறிப்பை முடித்துவிடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், கவிதையின் அர்த்த அடுக்கை மேலும் விரிவாக்குகிறது இன்னுமொரு வினா. நெரிசல் மிக்க சாலையில் இறப்பு ஊர்வலம் செல்கிறது. யாசகம் கேட்கும் முதியவர் கார் ஜன்னலைத் தட்டிப் பிச்சை கேட்பது போல் இருக்கிறது. ஆனால் அம்முதியவர் காருக்குள்ளிருக்கும் இவனை வெளியே அழைப்பது போலவும் உடன் அவர் அழைப்பை ஏற்று அவன் வெளிச் சென்றது போலவும் உள்ளது. இறுதி ஊர்வலத்தில் செல்லும் பிணம், இவன் முகத்தின் சாயல் கொண்ட அந்த முதியவர், காருக்குள் இருந்து இறங்கி சாவு நடனமாடும் இவன் – மூவரும் ஒருவரோ?

  • தீயை நோக்குதல்

    திருநெடுங்கோதை – தொகுப்பிலிருந்து – பரமேசுவரி – யாவரும் பதிப்பகம்

    உணர்வு, மாற்றம், அழிவு, புதுப்பித்தல் முதலான கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்த, இலக்கிய நடைமுறைகளில் நெருப்பு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. கருப்பொருளாக உவமையாக நெருப்பு பன்னெடுங்காலமாக கவிதைகளில் உலவி வந்திருக்கிறது. சமய இலக்கியங்களிலும் நெருப்பு முக்கியமான அந்தஸ்தைக் கொண்டிருந்தது.

    ரிக் வேதத்தில் வரும் ஒரு துதிப்பாடலில் இப்படி வருகிறது : 

    “யாகங்களின் பிரதான ஆசாரியனும், தெய்வீகமானவனும், பூசாரியாக காணிக்கைகளை  (தெய்வங்களுக்கு) சமர்ப்பிப்பவனும், பெரும் செல்வத்தை உடையவனுமான அக்னியை ஏத்துகிறேன்.”

    வேத உபடநிடதங்களை மொழியாக்கம் செய்ய முயன்ற பாரதியார் அதற்கென வகுத்துக்கொண்ட வடிவத்தை வசனகவிதை என்று அழைத்தார். தீயைப் பற்றிய ஒரு வசன கவிதையில் விரிவான அக்னி சடங்கில் இடப்படுவனவற்றை குறிப்பிட்டு நன்கு எரியுமாறு தீக்குப் பணிக்கிறார்.  

    தீயின் இயல்பே ஒளி. 

    தீ எரிக. 

    அதனிடத்தே நெய் பொழிகின்றோம். 

    தீ எரிக. 

    அதனிடத்தே தசை பொழிகின்றோம். 

    தீ எரிக

    அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம் 

    தீ எரிக. 

    அதற்கு வேள்வி செய்கின்றோம். 

    தீ எரிக. 

    வைதீக சமயத்தின் தீ வேள்விகளை தினமும் புரியும் ஆயிரம் பிராமணர்களை பௌத்த நெறியைத் தழுவ வைத்த பிறகு அவர்களுக்கு என்ன போதிப்பது என்று யோசித்த ததாகதர் அவர்களின் வேள்வித்தீயையே கருப்பொருளாக வைத்து புத்ததம்மத்தை விளக்குகிறார். அவரின் ஞானக்கண்ணில் சம்சார உலகே தீப்பிடித்து எரிகிறது. எரிவதை ஞானப்பார்வையில் நோக்கி சம்சார உலகின் இயல்பை விவரிக்கும் “ஆதித்த பரியாய சுத்தத்தை”க் கூறுகிறார். இது பாலி நெறிமுறையின் மிக முக்கியமான சுத்தம். இந்த சுத்தத்தின் வரிகளைத் தம் புகழ்பெற்ற கவிதையில் குறிப்பாகப் பயன்படுத்தும் கவிஞர் டி எஸ் எலியட் – கிறித்துவத்தின் மலைப் பிரசங்கத்துக்கு ஒப்பானது – என்கிறார்.

    “துறவிகளே, அனைத்தும் எரிகின்றன. என்னவெல்லாம் எரிகின்றன? கண் எரிகிறது. வடிவங்கள் எரிகின்றன. கண்ணின் உணர்வு எரிகிறது. கண்களின் தொடர்பு எரிகிறது. மேலும் கண்ணில் உள்ள தொடர்பைச் சார்ந்து எழுவது எதுவாக இருந்தாலும் – இன்பமாகவோ, துன்பமாகவோ அல்லது இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ – அதுவும் எரிகிறது, எதில் எரிகிறது கண்? மோக நெருப்பால், வெறுப்பின் நெருப்பால், மாயையின் நெருப்பால்,  நான் உங்களுக்குச் சொல்வது,  பிறப்பின், முதுமையின்,  மரணத்தின், துக்கங்களின், புலம்பல்களின், வலிகளின், துயரங்களின் மற்றும் விரக்திகளின் நெருப்பால்.

    “காது எரிகிறது, ஒலிகள் எரிகின்றன …

    “மூக்கு எரிகிறது, நறுமணம் எரிகிறது …

    “நாக்கு எரிகிறது, சுவைகள் எரிகின்றன …

    “உடல் எரிகிறது, தொட்டுணரக்கூடிய உணர்வுகள் எரிகின்றன …

    “புத்தி எரியும். யோசனைகள் எரியும். புத்தியில் உணர்வு எரியும். புத்தியில் தொடர்பு எரியும். மேலும் புத்தியின் தொடர்பைச் சார்ந்து எழும் அனைத்தும் – இன்பமாகவோ, துன்பமாகவோ அல்லது இன்பமாகவோ இல்லை. வலி – அதுவும் எரியும், எதில் எரிகிறது? பேரார்வத்தின் நெருப்பால், வெறுப்பின் நெருப்பால், மாயையின் நெருப்பால், நான் உங்களுக்குச் சொல்வது,  பிறப்பின், முதுமையின்,  மரணத்தின், துக்கங்களின், புலம்பல்களின், வலிகளின், துயரங்களின் மற்றும் விரக்திகளின் நெருப்பால்.”

    நோக்குமிடமெல்லாம் தீ! எனவே தான், பட்டினத்தார் பாடுகிறார் :-

    முன்னை இட்ட தீ முப்புரத்திலே 

    பின்னை இட்ட தீ தென் இலங்கையில் 

    அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே 

    யானும் இட்ட தீ மூள்க மூள்கவே 

    எப்போதெல்லாம் எரியும் நெருப்பு நோக்கப்படுகிறது?  – சமைக்கையில், கொண்டாட்டகாலங்களில் ஏற்றப்படும் விளக்குகளில், முகாம்களில் பற்றவைக்கப்படும் கேம்ப் பயர்-களில், குளிரின்போது வாழ்விடங்களை  வெம்மைப்படுத்த தீ மூட்டப்படுகையில், உலோகத்தை உருக்குதல் போன்ற தொழில் துறை செய்முறைகளில், மதநிகழ்வுகளில் செய்யப்படும் சடங்குகளில், பண்டிகைக்கால ஒளிக்காட்சிகளில், காட்டுத்தீ முதலான விபத்துகளில், தீப்பந்தங்களில் – இது போன்று பல்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு சூழல்களில் நெருப்பு கவனிக்கப்படுகிறது. 

    பக்தியுடன் அல்லது பயத்துடன் அல்லது பற்றற்று பார்க்கப்படும் தீ போலில்லை – கவிஞர் பரமேசுவரி “தீயின் அழிபசி” கவிதையில் வரும் தீ. கவிதைசொல்லி தீயை ஓர் அழகான பொருளைப் பார்ப்பது போல ரசிக்கிறார். அழகின் நிமித்தம் தீயை நோக்குவது ஒரு புதுக்கூறு. 

    கவிதை சொல்லி வீட்டின் கூரையில் அவராகவே தீ வைத்துவிட்டு அது எரிவதை ரசனையுடன் நோக்கிக் கொண்டிருக்கிறார். “நான் அங்கேதான் அமர்ந்திருக்கிறேன்” என்று சொல்கிறார். முதலில் அதை வாசித்தபோது தற்கொலை நிகழ்வை மரணத்தை விருப்பத்துடன் தழுவிக் கொள்ளும் முயற்சி போலத் தொனிக்கிறது, ஆனால், நல்ல வேளை “ஓரமாய் அமர்ந்து” எனப் பின்வரும் வரிகளில் குறிப்பிட்டுவிட்டதால், தற்கொலை இல்லை என்று நிம்மதியடைகிறோம். 

    ‘ஒன்றைப்பற்றி ஒன்று 

    மெல்ல மெல்ல மேலேறிக் 

    கவ்வும் அழகை வியந்திருந்தேன்”

    ஒரு கை இன்னொரு கையைப் பற்றி மேலேறும் நூறு கைகளின் நடனம்!

    கொழுந்துகளின் நாட்டியம், அழலின் ஆட்டம், தழலின் வெப்பம் – அனைத்தையும் கண்ணெடுக்காது ரசிக்கிறார் கவிதைசொல்லி – தழலின் வெப்பத்தை எப்படி கண்ணால் காண முடியும் என்ற கேள்வி எழுகிறது. உணரத்தானே முடியும்!

    தழல் அடங்கிவிடுகிறது. கவிதைசொல்லி அங்கிருந்து நகர்வதாயில்லை. ஒன்றும் இலாமல் அனைத்தையும் தின்று தீர்த்த தீயின் பசி அத்தனை அழகாயிருந்ததாம்!

    பரமேசுவரியின் இந்தக் கவிதையை வாசித்த பிறகு ராபர்ட் ப்ராஸ்ட் எழுதிய புகழ் பெற்ற ஆங்கிலக் கவிதை – தீயும் பனியும் ஞாபகத்துக்கு வந்தது. உலகம் அழியப்போகும் நாளை அக்கவிதையில் கற்பனை செய்கிறார் கவிஞர். உலகம் தீயால் அழியும் என்று சிலர் எண்ணுகின்றனர். வேறு சிலரோ பனியால் அழியும் இவ்வுலகு என்கின்றனர். ஆசைகளைச் சுவைத்தவன் என்பதால் தீயால் அழியும் என்பவர் கட்சியில் தானிருப்பதாகச் சொல்கிறார் கவிதைசொல்லி. ஆனால் இவ்வுலகம் இருமுறை அழியும் என்றிருக்குமானால் போதுமான அளவுக்கு வெறுப்பு பற்றி அறிந்தவன் என்பதால் பனியினால் இவ்வுலகம் அழிவதும் பொருத்தமாக இருக்கும் என்கிறார் கவிதைசொல்லி. ஆசையை நெருப்பாக உவமிக்கும் ராபர்ட் ப்ராஸ்ட் போலவே எண்ணற்ற கவிஞர்கள் தீயை ஆசைக்கு உருவகமாக்கியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்திலும் இதற்கு உதாரணம் உண்டு.

    அற்புதத் திருவந்தாதியில் சிவ பெருமான் இருக்கும் இடமாக காரைக்காலம்மையார் சொல்லும் சுடுகாட்டில் ஒரு பேய் இருந்தது. அதனால் சிவனேயென்று இருக்க முடியவில்லை.  ஒரு கள்ளிப் புதரின் நடுவில் படுத்துக் கொண்டிருந்த பேய் சும்மா இராமல், எரிகின்ற சிதைக்கட்டையை எடுத்து அதில் படிந்திருந்த மையை எடுத்து கண்ணில் மையாகப் பூசி அழகாக உணர்ந்தது. சில வினாடிகள் தாம்! சிதைக்கட்டையின் தீப்பொறி அதன் கண்ணில் பட்டுவிடுகிறது. சூடு பொறுக்க முடியாமல் சினக்கிறது. சத்தம் போட்டு அலறுகிறது. அங்கும் இங்கும் துள்ளிக் குதிக்கிறது. தீயை அணைக்க முயல்கிறது. இத்தகைய காட்டில் இருக்கிறானாம் எம்பெருமான் என்கிறார் காரைக்காலம்மையார். ​​ 

    யார் அந்த பேய் ? ஆசையுள்ளோர் அந்தப் பேய். இந்த உலகம் தான் சுடுகாடு. ஒவ்வோர் ஆசையும் ஒவ்வொரு கொள்ளிக் கட்டை. அனுபவிக்கும் போது முதலில் கொஞ்ச நேரம் இனிமையாக இருக்கும். அப்புறம், சூடு தாங்காமல் எரியும். எதை வேண்டும் என்று எடுத்தோமோ அதையே வேண்டாம் என்று தூக்கி ஏறிய நினைக்கிறோம்.

    கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்

    கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை

    விள்ளவெழுதி வெடுவெடென்ன

    நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்

    துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்சுட்டிட 

    முற்றுஞ் சுளிந்து பூழ்தி

    அள்ளி அவிக்க நின்றாடும்

    எங்கள்அப்பனிடந் திரு ஆலங்காடே

    “தீயின் அழிபசி” கவிதையில் வரும் கவிதைசொல்லி பதற்றமோ சினமோ கொள்ளவில்லை. மாறாக, அமைதியாய் தீ எரிவதை நோக்குகிறார். அவரே சொல்வது போல அது “அத்தனை அழகாக இருந்தது”. எரிந்து போனது அவர் வாழ்ந்த வீடாகக்கூட இருந்திருக்கலாம்! அவருடைய உடமைகள் எல்லாம் அழிந்து போயிருக்கலாம். ஆதித்த பரியாய சுத்தத்தில் புத்தர் விளக்கிய சம்சார உலகின் வெறுமையை உணர்ந்து அமைதிக்குள் புகுந்த தேரியின் மனநிலையை கவிதைசொல்லி “தீயின் அழிபசி” கவிதையில் பிரதிபலிப்பதாக நாம் வாசிக்கலாம். தேரிகதாவில் தேரி ஸுஜாதா கூறுவது போல் –

    தூசியற்ற, மரணமில்லாத,

    உண்மையான தர்மத்தை அறிந்து,

    நான் வெளியே சென்றேன்,

    வீட்டிலிருந்து விலகி வீடற்றவள் ஆனேன்.