Category: Uncategorized

  • ஓ புல்லாவே! நான் யாரென்று நான் அறியேன்!

    Bullehshah_2009
    சூஃபி மரபில் மிக முக்கியமானவராகக் கொண்டாடப்படும் புல்லே ஷா பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பஞ்சாபி சூஃபிக்களில் அவரைப் போன்று பரந்த பிரபலம் பெற்றவர்களும் அதிகமாகக் கொண்டாடப்படுவர்களும் யாருமில்லை ; காஃபி என்னும் பஞ்சாபி கவிதை வடிவத்தில் அவர் எழுதிய கவிதைகளும் பாடல்களும் மிகப் பிரசித்தமானவை. உலகின் மிகச்சிறந்த சூஃபிக்களூள் ஒருவரான புல்லே ஷாவின் சிந்தனைகள் ஜலாலூத்தின் ரூமி மற்றும் டப்ரேஸ் போன்ற சூஃபிக்களின் சிந்தனைகளுக்கு ஒப்பானவை. ஒரு கவிஞராக, புல்லே ஷா பிற பஞ்சாபி சூஃபிக்களிடமிருந்து வேறு பட்டவர் ; தன் கவிதைகளில் உணர்ச்சி பூர்வமான பொது பஞ்சாபி குணங்களை சித்தரிக்காதவர் ; ஜீவனுள்ள, பக்தி நிரம்பிய பஞ்சாபி குணங்களை வலியுறுத்தி எழுதியவர். மரபார்ந்த ஆன்ம சிந்தனை வழி வந்த புல்லே ஷாவின் கவிதைகளில் மறைஞான சொற்றொடர்களும் மனக்கிளர்ச்சிகளும் நிறைந்திருந்தாலும், அவரின் கவிதைகளில் முக்கிய அங்கம் வகிப்பது – அறிவு சார் வேதாந்த சிந்தனையே.

    சில வருடங்களுக்கு முன்னர் ராபி ஷெர் கில் என்ற பாடகர் புல்ஹே ஷாவின் “புல்லா… கீ ஜாணா மை கோன்…” என்ற பிரசித்தமான பாடலை ஜன ரஞ்சக பாப்-இசையாகத் தந்தார். உலக முழுதும் ரசிகர்களின் மனதை ஈர்த்த இப்பாடலை சில நாள் முன்னர் யூ-ட்யூபில் கேட்டு மெய்ம்மறந்து போகையில் இவ்வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. பாகிஸ்தானிய இணைய தளமொன்றில் எனக்கு கிடைத்த ஆங்கில மொழி பெயர்ப்பை கீழ்க்கண்டவாறு தமிழ்ப்படுத்தினேன் :-

    ஓ புல்லாவே! நான் யாரென்று நான் அறியேன்!

    நான் யாரென்று நான் அறியேன்
    நம்பிக்கையுடன் மசூதிக்கு செல்பவனுமல்லன் ;
    நம்பிக்கையின்மைக்கு சரணடைபவனுமல்லன் ;
    சுத்தமானவனுமில்லை ; அசுத்தமானவனுமில்லை ;
    மோசஸுமில்லை ; பாரோ-வும் இல்லை ;
    நான் யாரென்று நான் அறியேன்
    வேதப் புத்தகங்களில் இல்லை நான் ;
    போதைப் பொருள்களிலும் இல்லை;
    கெட்டவர்களின் கூட்டாளியாக மதுக்கடையிலும் நான் இல்லை ;
    தூங்கவுமில்லை ; விழித்திருக்கவுமில்லை ;
    நான் யாரென்று நான் அறியேன்
    பாவிகளுக்கு நடுவிலுமில்லை ; புனிதர்களுக்கு நடுவிலுமில்லை ;
    மகிழ்ச்சி மிக்கவனில்லை ; கவலை நிறைந்தவனுமில்லை ;
    நீரைச் சார்ந்தவனில்லை ; பூமியைச் சார்ந்தவனுமில்லை ;
    நான் வாயு இல்லை ; தீயுமில்லை ;
    நான் யாரென்று நான் அறியேன்
    அரேபியாவைச் சேர்ந்தவனில்லை ; லாகூரில் வசிப்பவனுமில்லை ;
    இந்தியனில்லை ; நாக்பூரில் வசிப்பவனுமில்லை ;
    இந்துவோ அல்லது பெஷாவர் வாழ் துருக்கி-இஸ்லாமியனோ இல்லை
    நதௌன் நகரில் இருப்பவனும் இல்லை.
    நான் யாரென்று நான் அறியேன்
    சமயங்களின் ரகசியங்களை அறிந்தவனில்லை நான் ;
    ஆதாம்-ஏவாளுக்குப் பிறந்தவனில்லை நான்;
    எனக்கென்று ஒரு பெயரையும் இட்டுக் கொண்டதில்லை ;
    மண்டியிட்டு தொழுகை புரியும் கூட்டத்தைச் சேர்ந்தவனில்லை ;
    வழிதவறிச் சென்றவர்களின் கூட்டத்தையும் சேர்ந்தவனில்லை ;
    நான் யாரென்று நான் அறியேன்
    தொடக்கத்தில் நான் இருந்தேன் ; இறுதியிலுமிருப்பேன் ;
    ஒன்றைத் தவிர வேறெதையும் அறியாத ஒருவன் நான்
    என்னை விட ஞானி இருப்பானா?
    புல்லா, அறிய முனையத் தக்க வேறொருவன் இருக்கிறானா?

  • தமிழின் நிலை – மகாகவி பாரதியார்

    கல்கத்தாவில் “ஸாஹித்ய பரிஷத்” (இலக்கியச் சங்கம்) என்றொரு சங்கமிருக்கிறது. அதை தென்னாட்டிலிருந்து ஒருவர் சிறிது காலத்திற்கு முன்பு போய் பார்த்து விட்டு வந்து அச் சங்கத்தார் செய்யும் காரியங்களைப்பற்றி “ஹிந்து” பத்திரிகையில் ஒரு விஸ்தீர்ணமான லிகிதம் எழுதியிருக்கிறார்.மேற்படி பரிஷத்தின் நிலைமையையும் காரியங்களையும் அவர் நமது மதுரைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ் நாட்டு “முயற்சிகளுடன் ஒப்பிட்டுக் காட்டி, நம்மவரின் ஊக்கக் குறைவைப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறார். தெலுங்கர்,மலையாளத்தார், கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு வருஷாந்தரப் பெருங்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவற்றால் விளையும் பயன் நமது சங்கத்தாரின் காரியங்களால் தமிழ் நாட்டிற்கு விளையவில்லை. வங்காளத்திலுள்ள ‘ஸாஹித்ய பரிஷத்’தின் நோக்கமென்னவென்றால், ‘எல்லா விதமான உயர்தரப் படிப்புக்களும் வங்காளப் பிள்ளைகளுக்கு வங்காளி பாஷையில் கற்றுக் கொடுக்கும் காலத்தை விரைவில் கொண்டு வந்து விடவேண்டும்’ என்பது ‘விரைவாகவே இந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றிவிடுவார்கள்’ என்பது பல அடையாளங்களினால் நிச்சயமாகத் தோன்றுகிறது என்று அந்த லிகிதக்காரர் சொல்லுகிறார். வங்காளிகளின் விஷயம் இப்படியிருக்க, மைலாப்பூரில் சிறிது காலத்திற்கு முன்னே நடந்த ஸ்ரீ வைஷ்ணவ சபைக் கூட்டத்தில் பெரும்பான்மையோர் இங்கிலீஷ் தெரியாத வைதீக பிராமணராக இருந்தும் அதிலே சில இங்கிலீஷ் உபந்நியாஸங்கள் நடந்ததைஎடுத்துக்காட்டி மேற்படி லிகிதக்காரர் பரிதாபப்படுகிறார். ‘நமது ஜனத் தலைவர்கள் இங்கிலீஷில் யோசிப்பதையும் பேசுவதையும் நிறுத்தினால் ஒழிய நமது பாஷை மேன்மைப்பட இடமில்லை’ என்று அவர் வற்புறுத்திச் சொல்லுகிறார்.

    மேற்படி லிகிதக்காரர், தமது கருத்துக்களை இங்கிலீஷ் பாஷையில் எழுதி வெளியிட்டிருப்பது போலவே தமிழில் எழுதித் தமிழ் பத்திரிகைகளில் பிரசுரப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஸபைகள், ஸங்கங்கள், பொதுக் கூட்டங்கள், வருஷோத்ஸவங்கள், பழஞ்சுவடிகள் சேர்த்து வைத்தல், அவற்றை அச்சிடல் இவையெல்லாம் பாஷைவளர்ச்சிக்கு நல்ல கருவிகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழ் மக்கள் தமது மொழியைமேன்மைப்படுத்த விரும்பினால் அதற்கு முதலாவது செய்யவேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது கால விசேஷத்தால் நமது தேசத்திலே விசாலமான லௌகீக ஞானமும் அதனைப் பிறருக்கு உபயோகப்படும்படி செய்வதற்கு வேண்டிய அவகாசம் பதவி முதலிய ஸௌகரியங்களும் படைத்திருப்பவராகிய இங்கிலீஷ்படித்த வக்கீல்களும், இங்கிலீஷ் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும், தமது நீதி ஸதலங்களையும், பள்ளிக் கூடங்களையும் விட்டு வெளியேறியவுடனே இங்கிலீஷ் “பேச்சை விட்டுத் தாம் தமிழரென்பதை அறிந்து நடக்க வேண்டும். பந்தாடும் போதும், சீட்டாடும் போதும், ஆசாரத் திருத்த ஸபைகளிலும், வர்ணாச்ரம ஸபைகளிலும், எங்கும், எப்போதும், இந்தப் “பண்டிதர்கள்” இங்கிலீஷ் பேசும் வழக்கத்தை நிறுத்தினால், உடனே தேசம் மாறுதலடையும். கூடியவரை, இவர்கள் தமிழெழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் அத்தனை பேரும் தமிழ் பத்திரிகைகளில் லிகிதங்களாகவும், இவர்கள் எழுதுகிற கதைகாவியம், விளையாட்டு வார்த்தை, வினை வார்த்தை, சாஸ்திர விசாரணை, ராஜ்ய நீதி எல்லாவற்றையும் தமிழில் எழுதவேண்டும். தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோர் இப்போது படுங் கஷ்டம் சொல்லுந்தரம் அல்ல. வெளியூர் வர்த்தமானங்களைத் தவிர மற்றபடி எல்லா விஷயங்களும் பத்திராதிபர்கள் தாமே எழுதித் தீரவேண்டியிருக்கிறது.

    வெளியூர்களிலுள்ள “ஜனத்தலைவரும்” ஆங்கில பண்டித”சிகாமணிகளும்” தமிழ்ப் பத்திரிகைகளைச் சரியானபடி கவனிப்பதில்லை. அந்தந்த ஊரில் நடக்கும் பொதுக்காரியங்களையும், அவரவர் மனதில் படும் புதுயோசனைகளையும் தெளிந்த தமிழிலே எழுதி தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அனுப்புதல் மிகவும் ஸுலபமான காரியம். ஜனத்தலைவர்களால் இக்காரியம் செய்ய முடியாத பக்ஷத்தில் பிறருக்குச் சம்பளம் கொடுத்தாவது செய்விக்க வேண்டும்.

    நூலாசிரியர் படும் பாடு
    பத்திராதிபரின் கஷ்டங்கள் அதிகமென்று சொன்னேன். இக்காலத்தில் தமிழ் நூலாசிரியர் படுங் கஷ்டங்களை ஈசனே தீர்த்துவைக்க வேண்டும். உண்மையான கவிதைக்குத் தமிழ் நாட்டில் தக்க மதிப்பில்லை. இங்கிலீஷ் பாஷையிலிருந்து கதைகள் மொழிபெயர்த்துப் போட்டால் பலர் வாங்கி வாசிக்கிறார்கள். அல்லது, இங்கிலீஷ் முறையைத் தழுவி மிகவும் தாழ்ந்த தரத்தில் பலர் புதுநாவல்கள் எழுதுகிறார்கள்; அவர்களுக்குக் கொஞ்சம் லாப மேற்படுகிறது. தமிழில் உண்மையான இலக்கியத் திறமையும் தெய்வ அருளும் பொருந்திய நூல்கள் எழுதுவோர் ஒரு சிலர் தோன்றியிருக்கிறார்கள்; இவர்களுடைய தொழிலை அச்சடிப்பாரில்லை; அச்சிட்டால் வாங்குவாரில்லை. அருமை தெரியாத ஜனங்கள்புதிய வழியில் ஒரு நூலைக் காணும் போது அதில் ரஸ மனுபவிக்க ” வழியில்லை. இங்கிலீஷ் படித்த “ஜனத்தலைவர்” காட்டும் வழியையே மற்றவர்கள் பிரமாணமென்று நினைக்கும்படியான நிலைமையில் தேசம் இருக்கிறது. இந்தப் ‘பிரமாணஸ்தர்கள்’ தமிழ் நூல்களிலே புதுமையும் வியப்பும் காணுவது சாத்தியமில்லை என்ற நிச்சயத்துடனிருக்கிறார்கள். ஆகவே, நூலாசிரியர், தமக்குத் தெய்வம் காட்டிய தொழிலிலே மேன்மேலும் ஆவலுடன் பாடுபட வழியில்லாமல், வேறு தொழில் செய்யப்போய் விடுகிறார்கள்.

    காலம் சென்ற ராஜமையர் புதிதாகத் தமிழ்க் கதை எழுதுவதில் உண்மையான திறமை காட்டியிருக்கிறார். அவருக்குத் தகுந்த சம்மானமில்லை. ஆதலால், அவர் அந்தத் திறமையை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு போக இடமில்லாமல், ஆரம்பத்திலேயே கைவிட்டு, இங்கிலீஷ் மாதப்பத்திரிகை நடத்தப் போய்விட்டார். ஜமீன்தார்கள் மீதும், பிரபுக்கள் மீதும், ‘காமா சோமா’ என்று புகழ்ச்சிப் பாட்டுகள் பாடினால், கொஞ்சம் ஸன்மானம் கிடைக்கிறது. உண்மையான் தொழிலுக்குத் தகுந்த பயன் கிடைக்கவில்லை. மேற்படி ‘பிரமாணஸ்தர்’ தமிழ் மணத்தை விரும்பாமல் இருந்ததால், இந்த நிலைமை உண்டாய் விட்டது. ஆகையால், இங்கிலீஷ் படித்த தமிழ் மக்கள்-முக்கியமாக, வக்கீல்களும் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும் – தமது வாக்கிலும் மனத்திலும் தமிழரசியைக் கொலுவிருக்கும்படி செய்து வணங்கவேண்டு மென்றும், அதுவே இப்போதுள்ள ஸ்திதியில்தமிழ் வளர்ப்புக்கு மூலஸ்தான மாகுமென்றும் அறிக்கையிட்டுக் கொள்ளுகிறேன்.

    பத்திரிக்கைகளின் நிலைமை
    கும்பகர்ணன் தூங்கினானாம். இலங்கையில் சண்டை நடக்கிறது. மூன்று லோகமும் நடுங்குகிறது. “ராமராவண யுத்தத்திற்கு ராமராவண யுத்தமே நிகர்’ என்று முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சண்டையின் அதிர்ச்சியிலே கூட, கும்பகர்ணனுடைய தூக்கம் கலையவில்லை. ஆயிரக்கணக்கான ஆடுமாடுகுதிரைகளின் காலில் கூர்மையான கத்திகளைக் கட்டி அவன் மேலே நடக்கச் சொன்னார்கள்; தூக்கம் கலையவில்லை. ஏழெட்டு மேகங்களை அவன் காதுக்குள்ளே போய் இடியிடிக்கச் சொல்லி ” ராவணன் கட்டளையிட்டானாம்; மேகங்கள் போய் இடித்தனவாம்; கும்பகர்ணன் குறட்டை நிற்கவே யில்லை.

    மேற்படி கும்பகர்ணனைப்போலே சில தேசங்கள் உண்டு. அண்டங்களத்தனையும் இடிந்து விழுந்தாலும் காதுகேட்காத செவிடர் வாழும் தேசங்கள் சிலவுண்டு. அந்த தேசங்களிலே வாஸம் செய்வோர் மஹா பாவிகள். மாதுர் துரோகம், பிதுர் துரோகம், சகோதரத் துரோகம், தெய்வத் துரோகம், சுதேசத் துரோகம் முதலிய பெரிய பாதகங்கள் செய்து சீரழிந்த மானிடர் அப்படிப்பட்ட தேசங்களில் வாழ்கிறார்கள்.

    ஆனால், ஹிந்து தேசம் அப்படி…………….யில்லை! இங்கு தமிழ் நாட்டைப்பற்றி முக்யமாகப் பேச வந்தோம்; தமிழ் நாடு மேற்படி மஹா பாதக ஜாப்தாவைச் சேர்ந்ததன்று, அன்று!

    ராமலிங்க சுவாமிகளும், ‘சுதேசமித்திரன்’ சுப்பிரமணிய அய்யரும், இவர்களைப்போன்ற வேறு சில மகான்களும் தமிழ் நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கினர். ஹிந்து தர்மத்தின் புதுக் கிளர்ச்சிக்கு விவேகாநந்தர் ஆரம்பம் செய்தார். அவரைத் தமிழ் நாடு முதலாவது அங்கீகாரம் செய்துகொண்ட பிறகு தான், வங்கம், மாஹாராஷ்ட்ரம் முதலிய ஹிந்து தேசத்துமாகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.
    பூமண்டல முழுதிலும் பெரிய விழிப்பொன்று வரப் போகிறது. அதற்காதாரமாக ஹிந்துஸ்தானம் கண்ணை விழித்து இருபதாண்டுகளாயின. ஹிந்துஸ்தானத்துக்குள் தமிழ் நாடு முதலாவது கண் விழித்தது. ஆனால், இன்னும் புத்தி சரியாகத் தெளியாமல் கண்ணை விழிப்பதும் கொட்டாவி விடுவதுமாக இருக்கிறது.

    ஒரு தேசத்தின் பொதுப்புத்தியை அளந்து பார்க்க வேண்டுமானால், அதற்கு எத்தனையோ அறிகுறிகள் உண்டு. அந்த தேசத்து ராஜாங்க நிலை, தர்ம ஸ்தாபனங்களின் நிலை, கோயில்களின் நிலை முதலிய எத்தனையோ அடையாளங்களால் ஒரு தேசத்தாரின் பொது ஞானத்தை அளவிடலாம். இவற்றுள்ளே சமாசாரப் பத்திரிகைகளையும் ஓரடையாளமாகக் கருதத்தகும். ஆனால் ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களில் நடக்கும் பத்திரிகைகளுடன் தமிழ்நாட்டுப் பத்திரிகையை ஒப்பிட்டுப் பார்த்து, இவற்றின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு, ‘ஆஹா’ இப்படிப் பட்ட தமிழ் நாடுஎங்கே பிழைக்கப்போகிறது!’ என்று எண்ணி பாழும் நெஞ்சு “உடைந்து போகவேண்டாம். ஏனென்றால், வர்த்தமானப் பத்திரிகை நாமாக உண்டாக்கிய கருவியன்று. பிறரிடமிருந்து கற்றுக்கொண்டதந்திரம்; சென்ற முப்பது வருஷங்களாகத்தான்தெரிந்து கொண்டிருக்கிறோம். இன்னும், சரியாக முதிர்ச்சி அடையவில்லை.தவிரவும், தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் உதவி கிடையாது. பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் எத்தனைக் கெத்தனை மதிப்புக் கொடுக்கிறார்களோ, அத்தனைக்கத்தனை நாட்டில் மதிப்பேறி, அதனால் பத்திரிகைகளுக்கு தகுந்த லாபமுண்டாய், அதிலிருந்து சரியான வித்வான்களின் கூட்டம் யதேஷ்டமாய்ச் சேர்ந்து, அந்தத் தொழில் மேன்மையடைய இடமுண்டாகும்.

    தமிழ்நாட்டில் இப்போது நடைபெறும் ராஜாங்கம் தமிழ் பாஷையில் தேர்ச்சியுடைய தன்று. தமிழ் பாஷையை முதலாக மதிப்பதன்று. ‘தமிழ் முழு நாகரீக முடையதா, இல்லையா’ என்பதைப் பற்றி சந்தேகங்களுடையது; ஆதலால், தமிழ்ப் படிப்பில்லாமலும், தமிழ் மணமில்லாமலும் ஸந்தோஷமடைந்திருக்கும் இயல்புடையது.

    தவிரவும், தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோருக்குச் சரியான திரவிய லாப மில்லாமலிருப்பதற்கு வேறு பல காரணங்களும் உள. அவற்றுள் பத்திராதிபர்களின் அஜாக்கிரதை (சோம்பேறித்தனம்) ஒன்று எனக்கு நாலைந்து முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகள் வருகின்றன. அவற்றுள் ஒன்று வாரப் பத்திரிகை. அது பழுத்த சுதேசீயக் கக்ஷியைச் சேர்ந்தது. ஆனால் தக்கபயிற்சியில்லாதவர்களால் நடத்தப்படுவது. சில தினங்களின் முன்பு அந்தப் பத்திரிகையில் யுத்த சம்பந்தமான தலையங்கம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதில் ருஷியாவில் “போல்ஷெவிக்” என்ற ஒரு மனுஷ்யன் இருப்பதாகவும், அவன் ஒரு கக்ஷி ஏற்படுத்தி நமது நேசக் கக்ஷிக்கு விரோதம் செய்வதாகவும் சொல்லியிருந்தது! அஃது அந்நாட்டில் ராஜ்யப் புரட்சிக் கூட்டங்களில் ஒன்றாகிய’மகிஸிமிஸ்த்’ கக்ஷிக்கு மற்றொரு பெயரென்றும் ஒரு மனுஷ்யனுடைய பெயர் அல்லவென்றும் அந்தப் பத்திராதிபர் தெரிந்து கொள்ளவில்லை. மேலும், அதே பத்திரிகையில் ஒவ்வொரு வியாசத்துக்கும் தமிழ் மகுடத்துக்கு மேலே இங்கிலீஷ்மகுடமொன்று சூட்டியிருக்கிறது. “ருஷியாவின் நிலைமை” “The Situation in Russia, ” “தாய்ப்பாஷையின் மூலமாகக் கல்வி பயிற்றல்” “The Vernaculars as media of instruction.” ஆஹா! நான் மாற்றி எழுதுகிறேன். தமிழைமுதலாவது போட்டு, இங்கிலீஷை பின்னே போட்டேன். அந்தப் பத்திரிகைகளில் அப்படியில்லை. இங்கிலீஷை முன்னே போட்டு, தமிழைக் கீழே போட்டிருக்கிறது. “அமெரிக்கா ஸ்திரீ” பார்த்தாயா? என்னைத் தெரியாமலே என் கை முதலாவது தமிழ் வார்த்தை “எழுதுகிறது “American woman” “அமெரிக்கா ஸ்திரீ”, “Our Mathadhipaties” “நமது மடாதிபதிகள்,” என்று எழுதியிருக்கிறது. காயிதப் பஞ்சமான காலம்; என்ன அநாவசியம் பார்த்தீர்களா?
    இங்கிலாந்தில் வர்த்தமானப் பத்திரிகைகள் ப்ரான்ஸ் தேசத்து மந்திரிகளுடைய உபந்யாசங்களையும் பெரிய சாஸ்திரிமார், பெரிய கைத்தொழில் நிபுணர், த்ரவ்ய சாஸ்திர நிபுணர், ஜனத்திருத்தத் தலைவர் முதலியவர்களின் உபந்யாசங்களையும், பல ப்ரெஞ்சு ராஜாங்க சம்பந்தமான விவகாரங்களையும், ப்ரெஞ்சு பத்திரிகைகளிலிருந்து மொழி பெயர்த்துப் போடுகின்றன. அப்படியே பிரான்ஸ் தேசத்துப் பத்திரிகைகள் ஜெர்மன் பாஷையிலிருந்து பல விஷயங்களை மொழிபெயர்த்து எழுதுகின்றன. ஆனால் அந்த மொழி பெயர்ப்புகளில் ஸ்வபாஷையின் வழக்கங்களையும் பிரயோகங்களையும் கைவிட்டு அன்னிய பாஷையின் வசன நடையைப் பின்பற்றும் வழக்கம் கிடையாது. ஆனால் தமிழ் நாட்டிலோ முழுவதும் தமிழ் நடையைவிட்டு இங்கிலீஷ் நடையில்தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம்காணப்படுகிறது. முதலாவது, நீ எழுதப்போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு.

    பஞ்ச பூதங்களின் இயற்கையைப் பற்றின ஆராய்ச்சிகளிலே, நம்மைக்காட்டிலும் ஐரோப்பியர் முன்னே நிற்பது தெரிந்த விஷயம். ஆதலால் ஐரோப்பாவில் வழங்கும்லௌகிக சாஸ்திரங்களைத் தமிழில் எழுதவேண்டுமென்று பல பண்டிதர் மிகவும் ஆவலோடிருக்கிறார்கள். ஏற்கெனவே, சில பகுதிகளின் ஆரம்பம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது. இந்த முயற்சி மேன்மேல் வளரும்; வளர்ந்து தீரவேண்டும். அந்த சாஸ்திரங்களையெல்லாம் ஏக காலத்திலே தமிழில் எழுதி முடிப்பதற்காக ஒரு பண்டித-சங்கம் ஏற்படக்கூடும். நமது ராஜாக்களுக்கும், ஜெமீன்தார்களுக்கும், செட்டிகளுக்கும் நல்ல புத்தியுண்டாகித் தமிழில் நவீன சாஸ்த்ரம் சேர்ப்பதாகிய காரியத்தை அவர்கள் தக்க பண்டிதர்களின் உதவி கொண்டு, “விரைவில் நிறைவேற்றி மேன்மை பெறக்கூடு.

    அஸ்திவாரக் காரியம்
    இதற்கெல்லாம் முன்னதாகவே பண்டிதர்கள் செய்து வைக்கவேண்டிய அடிப்படைக் காரியம் ஒன்றுண்டு. கூடியவரை சாஸ்த்ர பரிபாஷையை நிச்சயப்படுத்தி வைத்தால், பிறகு மொழிபெயர்ப்புத் தொடங்குவோர்க்கு அதிக சிரமமிராது;ஸங்கடமிராது. பரிபாஷை, ஸங்கேதம், குழூவுக்குறி என்ற மூன்று சொல்லும் ஒரே பொருளைப் பல வகையிலே குறிப்பன; அதாவது, ஒரு கூட்டத்தார் அல்லது ஒரு சாஸ்த்ரக்காரர் விசேஷார்த்தம் தோன்றும்படி உடன்பட்டு வழங்கும் பொதுவழக்கமில்லாத சொல். இங்ஙனம் பரிபாஷையை நிச்சயப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன், சேலத்தில் வக்கீல் ஸ்ரீ சக்ரவர்த்தி ராஜகோபாலாசார்யரும், ஸ்ரீ வெங்கட சுப்பையரும் சேர்ந்து ஒரு மாதப் பத்திரிகையைத் தொடங்கி யிருக்கிறார்கள். இந்தப் பத்திரிகையின் பெயர் ‘தமிழ் சாஸ்த்ர-பரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிகை’. மேற்கண்ட பெயருடன் ஒரு சங்கம் சேலத்தில் ஏற்பட்டிருக்கிறது. அந்த சங்கத்தின் கார்யஸ்தர், அந்த ஊர்க் காலேஜில் ப்ரகிருதி சாஸ்த்ர பண்டிதராகிய ஸ்ரீ ராமநாதய்யர்.
    ‘தமிழில் சாஸ்த்ர பரிபாஷை மாஸப்பத்திரிகை’ என்ற சேலத்துப் பத்திரிகையின் முதலாவது சஞ்சிகை இங்கிலீஷில் வெளிப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலே தமிழில் எழுதாமல் தமிழருக்கு “வேண்டிய இக்காரியத்தை இங்கிலீஷ் பாஷையிலே தொடங்கும்படிநேரிட்டதற்கு ஸ்ரீ ராஜகோபாலாசார்யர் சொல்லும் முகாந்தரங்கள் எனக்கு முழு நியாயமாகத் தோன்றவில்லை. ஆனால் கூடிய சீக்கிரத்தில் தமிழ்ப்பகுதி யொன்று அந்தப் பத்திரிகையில் சேருமென்று தெரிகிறது. அநேகமாக, இரண்டாம் ஸஞ்சிகையிலே தமிழ்ப்பகுதி சேருமென்று கேள்விப்படுகிறேன். அங்ஙனம், தமிழ் சேர்ந்து நடக்கும் சாஸ்த்ரப் பத்திரிகையினால், தமிழ் நாட்டாருக்கு மிகப்பெரிய பயன் விளையுமென்பதில் சந்தேகமில்லை.

    பரிபாஷை சேகரிக்க ஓருபாயம்
    ஸ்ரீீகாசியிலே, ‘நாகரி ப்ரசாரிணி சபையார்’ ஐரோப்பிய ஸங்கேதங்களை யெல்லாம் எளிய ஸம்ஸ்கிருத பதங்களில் போட்டு, மிகப் பெரியதோர் அகராதி உண்டாக்கி வருகிறார்கள். அந்தச் சொற்களை வேண்டியவரை, இயன்றவரை, தேச பாஷைகள்எல்லாவற்றிலும் ஏககாலத்தில் கைக்கொண்டு வழங்கலாம். ஐரோப்பாவில் எல்லா பாஷைகளும் இவ்விதமாகவே லத்தீன், யவன பரிபாஷைகளைக் கைக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு செய்வதால் நமது தேச பாஷைகளில் ஸங்கேத ஒற்றுமை யேற்படும். அதனால் சாஸ்த்ரப் பயிர் தேச முழுவதிலும் வளர்ந்தோங்கி வருதல் எளிதாகும்.

  • மறைந்தார் மடிபா

    Madiba1

    (wwww.gandhitoday.in -இல் இன்று வெளியான என் கட்டுரை – http://www.gandhitoday.in/2013/12/blog-post_7.html)

    குடும்ப உறுப்பினர் ஒருவர் கடைசிப் படுக்கையில் இருக்கிறார் எனும் போது நாம் அடையும் அதே பதற்றம் ஜூன் மாதத்திலிருந்து. நடுவில் ஒரு முறை சமூக தளங்களில் அவர் இறந்து விட்டாரென்ற செய்தி பரவிய போது…அய்யய்யோ அது உண்மையாக இருந்து விடக் கூடாதே என்ற பிரார்த்தனை. உடன் அதனை ட்வீட் செய்த நண்பருக்கு போன் செய்து ‘இது உண்மையா என்று கேட்டேன்?” அவர் “இல்லை…தவறான செய்தி” என்று சொல்லி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

    இன்று காலை எழுந்ததும் இதே போல ஒரு செய்தியை அதே சமூக தளத்தில் கண்ட போது, தொலைக்காட்சியைப் போட்டு அதில் ஓடும் செய்தியைப் பார்த்து உறுதி செய்து கொண்டேன். ஓர் ஒப்பற்ற தலைவரை இழந்த பிறகு இது போன்ற ஒரு தலைவர் இனிமேல் பிறக்கப் போவதில்லை என்ற ஏக்கம் தோன்றி சோகமும் துக்கமும் இரு மடங்காகிவிடுகிறது.

    யார் அவர்? அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? எந்நாட்டவர் இல்லை அவர். அவரை நேரில் பார்த்ததில்லை. இவ்வளவு ஏன் தொலைக்காட்சிகளிலோ வீடியோக்களிலோ அவர் உரையாற்றி கேட்டதில்லை. அவர் எழுதியவற்றை வாசித்ததில்லை.

    Madiba2

    ஒரு முறை ‘Invictus” என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன். மூத்த நடிகர் மார்கன் ஃப்ரிமேன் நெல்சன் மாண்டேலாவாக நடித்திருந்தார். மாண்டேலா தென்னாப்பிரிக்க அதிபர் ஆனவுடன் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் பின்னப்பட்ட திரைக்கதை. மாண்டேலா அதிபராகிவிட்ட படியால் இனி நமக்கெல்லாம் இங்கு வேலையில்லை என்று வேலையை ராஜினாமா செய்து விட்டு அதிபர் மாளிகையை விட்டு வெளியெறும் வெள்ளை அதிகாரிகளிடம் அவர் பேசுகிற காட்சி என்னை எழுந்து உட்காரச் செய்தது. தன்னுடைய மெய்க்காவலர்ப் படையில் முன்னால் (வெள்ளைக்கார) அதிபரின் மெய்க்காவலர்களையும் சேர்த்துக் கொள்கிற காட்சியில் ”மடிபா..என்ன செய்கிறீர்கள்?” என்று அவருடைய நீண்ட நாள் நண்பர் மற்றும் மெய்க்காவலரொருவரும் அவரை கேட்கும் போது ”அவர்கள் திறமை படைத்தவர்கள். கறுப்பு மெய்க்காவலர்களுக்கு தேவையான அனுபவத்தை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.” என்று வெறுப்பைக் களையச்சொல்லும் இடம் மாண்டேலா என்ற மகத்தான மனிதரின் உயர்வை அறியச் செய்தது.

    மடிபா என்ற குலப்பெயரால் தென்னாப்பிரிக்க மக்களால் அன்புடன் அழைக்கபடும் மாண்டேலாவைப் பற்றி நான் படிக்க ஆரம்பித்தது 2009-இல் தான்.

    அதிபர் ஒபாமா ஜூனில் தென்னாப்பிரிக்க விஜயம் மேற்கொண்ட போது அவரின் மருத்துவமனைக்கு சென்று அவரைப் பார்க்கவில்லை. தன் ஆதர்ச நாயகன் என்று ஒபாமா கருதும் சொல்லிக் கொள்ளும் மடிபாவை மரணப்படுக்கையில் காணும் தைரியம் அவருக்கு இல்லாமல் இருந்திருக்கக் கூடும்.
    2010 இல் கால் பந்து உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடப்பதற்கு முக்கியக் காரணம் மாண்டேலாதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதன் ஆரம்ப நாள் நிகழ்வில் உற்சாகமாக கலந்து கொண்ட மாண்டேலா கடைசி நாள் விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்று எல்லோரும் எண்ணினர். ஆரம்ப விழா உற்சவங்களில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாண்டேலாவின் கொள்ளுப் பேத்தி ஜெனினா மாண்டேலா ஒரு மோசமான சாலை விபத்தில் சிக்கி மாண்டு போனார் ; இத்துயரச் சம்பவ துக்கத்திலிருந்த மாண்டேலா இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டாரென்று எல்லோரும் நம்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. வாழ்க்கையை அடுத்தவரின் மதிப்பீடுகள் கொண்டு வாழாத மாண்டேலா கடைசி நாள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். அதுதான் மாண்டேலா!

    இருபத்தியெழு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து அப்போதைய வெள்ளைக்கார ஜனாதிபதி – டி கிளர்க் அவர்களுடன் நீண்ட பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு பின்னர் சுமுகமான ஆட்சி மாற்றங்களுக்கு வழிவகுத்து, வெள்ளை – கறுப்பு இன மக்களின் ஒருங்கிணைந்த பொதுவாழ்வுக்கு அயராது உழைத்த மாண்டேலாவிற்கு நோபல் பரிசு கிடைத்தது ஒன்றும் ஆச்சரியமில்லை. அப்பரிசை ஏற்கும் போது அவர் ஆற்றிய உரை மிக முக்கியமானது.

    அனைத்துலக மானிடச் சமூகத்தின் சுதந்திரம், சமாதானம், மற்றும் மனித கௌரவத்துக்கென எல்லாவற்றையும் தியாகம் செய்தோருக்காக ஆப்பிரிக்காவின் தென்புள்ளியில் ஒரு மகத்தான வெகுமதி தயாராகிக் கொண்டிருக்கிறது ; விலைமதிப்பிலா பரிசு உற்பத்தியாகிக் கொண்டிருக்கிறது.
    இப்பரிசு பணத்தினால் மதிப்பிடப்படுவதன்று. அபூர்வமான உலோகங்களின் நம் முன்னோர்கள் நடந்த மண்ணின் மடியில் புதைந்து கிடக்கும் மதிப்பு வாய்ந்த ரத்தினங்களின் ஒட்டுமொத்த விலையின் வாயிலாகவும் மதிப்பிட முடியாதது; எந்தவொரு சமூகத்திலும் மிகவும் பலவீனமான குடிமகன்களும் மிகச் சிறப்பு வாய்ந்த பொக்கிஷங்களுமான குழந்தைகளின் மகிழ்ச்சியினால் அளவிடப்படுவது அது.

    பட்டினியால் சித்திரவதையுறாமல், நோயால் சூறையாடப்படாமல், மானபங்கம், அறியாமை, சுரண்டல் போன்றவற்றால் அவதியுறாமல், மென்மையான ஆண்டுகளின் கோரிக்கைகளின் கனத்தை மீறும் காரியங்களில் அவர்கள் ஈடுபடும் அவசியமிலாமல் நம் குழந்தைகள் கிராமப்புறங்கள் புல் வெளிகளில் ஆனந்தமாக விளையாட வேண்டும்

    மறத்தலும் மன்னித்தலும் இல்லாமல் இரு புறங்களில் தனித்து இருந்த இரு சமூகங்களின் ஒன்றிணைதல் சாத்தியமில்லை. நிறவெறிச் சட்டங்கள் உடைபட்டு, அதிபரான பிறகு வெள்ளை இனத்தவரின் ஒண்றினைவுக்கு வழிவகுக்கும் பல்வேறு துவக்க முயற்சிகளுக்கு வித்திட்டார் மாண்டேலா. வலிகளின் நினைவுகளில் மூழ்கியிருந்து காயங்களை மறைக்காமல் வைத்திருப்பதில் ஒட்டு மொத்த சமூகத்தின் முன்னேற்றம் தடை படுவதை வாழ்நாளின் கடைசி வரை வலியுறுத்தியவர்.

    இருபத்தியேழு வருடங்கள் அவர் சிறை சென்ற வழக்கின் பப்ளிக் பிராசிக்யூடருடன் பிற்காலத்தில் விருந்துண்டு நட்பு பாராட்டியதும், அவர் சிறை சென்ற காலத்து தென்னாப்பிரிக்க பிரதமரின் விதவை மனைவியுடன் தேநீர் அருந்த பல நூறு கிலோ மீட்டர்கள் அவர் பயணம் செய்ததும் நம் கண் முன்னர் வாழ்ந்த இரண்டாம் காந்தியை நமக்கு அடையாளம் காட்டிய பல்வேறு நிகழ்வுகளில் சில.

    ”மரணம் என்பது தவிர்க்க முடியாதது. ஒரு மனிதன் அவனுடைய மக்களுக்கும் அவனுடைய நாட்டுக்கும் செய்ய வேண்டிய கடமையை செய்துவிட்டதாகக் கருதுவானாயின், அவன் அமைதியான கடைசி துயில் கொள்வான். நான் அத்தகைய முயற்சியை எடுத்ததாக நம்புகிறேன். எனவே நான் நித்திய உறக்கம் கொள்வேன்” என்று அவர் ஒரு முறை எழுதினார்.

    மடிபாவின் நித்திய உறக்கத்தின் இன்றைய துவக்கம் நம் ஒவ்வொருவருக்குள்ளிலும் உறைந்திருக்கும் மாண்டேலாவை வெளிக்கொணரும் துவக்கமாக இருக்கட்டும்.

    Madiba3

  • இந்தோனேசிய அம்பிகை – பிரஜ்னபாரமிதா

    Prajnaparamita_Java_Front

    கிழக்கு ஜாவாவில் தொல்பொருளறிஞர்களால் 19-ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட சிலையொன்று ஜாகர்த்தாவில் உள்ள இந்தோனேசிய தேசிய மியுசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

    புராதன இந்து-பௌத்தக் கலையின் தலை சிறந்த படைப்பாக இந்த ‘பிரஜ்னபாரமிதா” சிலை கருதப்படுகிறது. சாந்த சொரூபமும் தியான தோற்றநிலையும் அமைதியையும் ஞானத்தையும் குறிக்கின்றன ; இதற்கு மாறாக வளமும் நுட்பமும் மிக்க அணிகலன்களும் அலங்காரங்களும் இச்சிலையில் சித்தரிக்கப்படுகின்றன. தேவியின் தன் கூந்தலை ஒரு கிரிடத்துக்குள் அழகாக செருகி வைத்திருக்கிறாள். பத்மாசனத்தில் ஒரு சதுர பீடத்தில் தேவி அமர்ந்திருக்கிறாள். தர்மச்சக்கர முத்ரையை பிடித்துக் கொண்டிருக்கிறாள். அவளின் வலது கை ஒரு நீலத் தாமரையின் மேல் இருக்கிறது ; அந்நீலத் தாமரையின் மீது பிரஜ்னபாரமித சூத்ரப் பனையோலை ஏடு வைக்கப்பட்டிருக்கிறது. தேவியின் உயர்ந்த ஞானநிலையையும் தெய்வீகத்தனமையையும் குறிக்க தலைக்குப் பின்னால் ஒளிவட்டமும் காட்டப்பட்டிருக்கிறது.

    பிரஜ்னபாரமிதா மகாயான பௌத்தத்தின் மையக் கோட்பாடுகளில் ஒன்று. இக்கோட்பாட்டின் புரிதலும் பயிற்சியும் போதிசத்துவ நிலையை அடைவதற்கு மிகவும் இன்றியமையாதன என்பது மகாயான பௌத்தர்களின் நம்பிக்கை. இப்பயிற்சிகளுக்கான வழிமுறைகளும் தத்துவங்களும் பிரஜ்னபாரமிதா என்ற சூத்திர வகைமை நூல்களில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. பிரஜ்னபாரமித சூத்திரங்களின் முக்கியமான சாராம்சம் எல்லாப் பொருட்களும் முழுப்பிரபஞ்சமும் (நம்மையும் சேர்த்து!) வெறும் எண்ணத்தோற்றங்கள் மட்டுமே ; கருத்தாக்ககட்டமைப்புகளேயன்றி வேறொன்றுமில்லை என்பதேயாகும்.

    பிரஜ்னபாரமித கோட்பாடு போதிசத்வதேவியாக (பெண் போதிசத்வர்) உருவகிக்கப்பட்டு பெண் தெய்வ உருவங்கள் சமைக்கப்பட்டன. நாலந்தாவில் கிடைத்த அரும் பொருட்களில் பிரஜ்னபாரமிதா பெண்தெய்வ உருவங்களும் உண்டு. புராதன ஜாவா மற்றும் கம்போடிய கலைகளிலும் பிரஜ்னபாரமிதா பெண் சிலைகள் காணப்படுகின்றன.

    தற்போதைய வங்காளம், பீகார் மற்றும் ஒடிஷா சேர்ந்த ராச்சியத்தை பால் அரசர்களில் ஒருவரான தேவபாலர் (கி.பி.815-854) ஆண்ட போது, ஸ்ரீவிஜய மகாராஜா பாலபுத்ரா நாலந்தாவின் முக்கிய பௌத்த மடாலயம் ஒன்றைக் கட்டினார். அதற்குப் பிறகு ஜாவாவை வந்தடைந்த “அஷ்டசஹஸ்ரிக பிரஜ்னபாரமித சூத்ரத்தின்’ வாயிலாகவே பிரஜ்னபாரமிதா தேவியின் வழிபாடு துவங்கியிருக்கக்கூடும்.

    எட்டாம் நூற்றாண்டில் தாராதேவி வழிபாடு ஜாவாவில் தொடங்கியிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர், மத்திய ஜாவாவில் எட்டாம் நூற்றாண்டில் கலசான் என்ற ஊரில் கட்டப்பட்டதொரு கோயிலில் முதன்முதலாக தாரா என்னும் பெண் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சமயத்தில் தாரா தேவி வழிபாடு மிகப் பிரசித்தமாக இருந்தது. பிரஜ்னபாரமிதாவின் சில செயல்பாடுகளும் பண்புகளும் தாரா தேவியோடு நிறைய ஒத்துப் போகும். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் தாந்திரீக பௌத்தத்திற்கு கீர்த்திநகாரா என்ற அரசனின் ஆதரவு கிட்டவும், சுமத்ராவிலும் கிழக்கு ஜாவாவிலும் பிரஜ்னபாரமிதா சிலைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டன.

    பிரஜ்னபாரமிதாவின் வழிபாடு இன்றளவும் திபெத்திய பௌத்தத்தில் நிலைத்திருக்கிறது. திபெத்திய வஜ்ராயன பௌத்ததில் அவள் ”ஷெராப்க்யி ஃபாரொல்டுசின்மா” என்று அழைக்கப்படுகிறாள். அவள் ‘ஓம் ஆஹ் திஹ் ஹம் ஸ்வா;’ (om ah dhih hum svah) என்ற மந்திரத்தால் வழிபடப்படுகிறாள்.

    Tibetan Prajnaparamita

  • கூகிள் விளம்பரம் : ரியூனியன்

    மனித உணர்வுகளின் நம்பிக்கைகளின்
    முன்னர்
    ஓடி ஒளியும்
    காலமும் எல்லைகளும்

  • தி கான்ஸ்டெண்ட் கார்டனர்

    the-constant-gardener-movie-poster-2005-1020350499

    ஜான் லீகார்ரே (John Le Carre) யின் “The Constant Gardener” நாவல் திரைப்படமாக 2005இல் வெளியானது. நாவலின் தலைப்பே திரைப்படத்துக்கும். எட்டாண்டுகள் முன் வெளியான இத்திரைப்படத்தை நேற்று தொலைக்காட்சியில் பார்த்தேன். தூங்கப் போகலாமா என்று யோசித்துக் கொண்டே சேனல்களை மாற்றிக் கொண்டிருந்த போது ஜீ தொலைக்காட்சியில் இப்படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். நடிகை ரேச்சல் வெய்ஸ் (Rachel Weisz) –க்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற படம் என்று என்று எனக்கு தெரியும். கொஞ்ச நேரம் பார்க்கலாமே என்று துவங்கினேன். இரண்டு மணி வரை படம் முடியும் வரை இருக்கையிலிருந்து எழ முடியவில்லை.

    ரால்ஃப் ஃபீன்ஸ் (Ralph Fienes) எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவர். The English Patient திரைப்படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். கூச்சசுபாவமான ஆர்ப்பாட்டம் காட்டத் தேவையில்லாத பாத்திரங்களில் வெகுவாகப் பொருந்தக் கூடியவர். அதே சமயம் உடல்மொழி மற்றும் முக வெளிப்பாடுகள் வாயிலாக ஒரே பாத்திரத்தின் பல்வேறு பரிமாணங்களை நுட்பமாக வெளிப்படுத்துபவர். முண்ணனி ஹாலிவுட் ஹீரோ நடிகர்களில் அவரைப் போல மிகச்சிலரே வில்லன் பாத்திரங்களில் சோபிக்க முடியும். நேர்மறை கதாநாயகனாக நடிக்கும் பொழுதும் இருண்ட முனைகளை உட்புகுத்தி அப்பாத்திரத்திற்கு நொறுங்கும் தன்மையையும் மனிதத் தன்மையையும் சேர்த்து விடுவார்.

    தி கான்ஸ்டண்ட் கார்டனரிலும் அவருடைய பாத்திரம் மனைவிப் பாத்திரத்தின் மரணத்துக்குப் பிறகு தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கிற கண்ணியமான தூதரக அதிகாரியிலிருந்து காதலின், அதீத உணர்ச்சியின் சுய-சாத்தியப்பாட்டை நிலை நிறுத்தும் பாத்திரமாக மாறுகிறது.

    மனைவி டெஸ்ஸா பாத்திரத்தில் வரும் ரேச்சல் வெய்ஸ் உந்தப்பட்ட, எழுச்சி மிக்க, தடுத்து நிறுத்தவியலா அறப்பணியாளராக பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். துள்ளல் மிகு கண்களுடன் அதிக வயது வித்தியாசமிக்க காதலனிடம் “என்னை உன் காதலியாக அல்லது மனைவியாக,,,இல்லாவிட்டால் வைப்பாட்டியாக…கென்யா கூட்டிச்செல்வாயா?” என்று கேட்கிறார்.

    கென்யாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்காக களப்பணியாளராக வேலை செய்யும் டெஸ்ஸா, ஆப்பிரிக்க நண்பன் ஆர்னால்டோடு சேர்ந்து எய்ட்ஸ் மருந்தை இலவசமாக வினியோகிக்கும் பணியில் இருக்கிறாள். அவர்களிருவரும் சேர்ந்து ஐரோப்பிய மருந்து நிறுவனமொன்று ஒன்றுமறியா ஆப்பிரிக்க ஏழைகளின் மேல் காச நோய்க்கான மருந்தொன்றை பரிசோதனை செய்வதை கண்டு பிடிக்கிறார்கள். பக்க விளைவைத் தரும் அம்மருந்தின் காரணமாக பலரும் மரணமடைகிறார்கள். மரணங்கள் பதிவாவதுமில்லை. மருந்தி பரிசோதனையைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் முழுமூச்சுடன் டெஸ்ஸா இறங்குகிறாள். அவளுக்கு ஆர்னால்ட் பக்கபலமாக இருக்கிறான்.

    வேலை நேரம் போக மற்ற நேரங்களில் எல்லாம் தோட்டத்தை திருத்தும் காரியத்தில் தன்னை அமிழ்த்திக் கொள்ளும் ஜஸ்டின் (ரால்ஃப் ஃபின்ஸ்), டெஸ்ஸாவின் வேலையைப் பற்றியோ நடவடிக்கைகள் பற்றியோ அறியாமல் ஒரு தொலைவை ஏற்படுத்திக் கொண்டுவிடுகிறான். டெஸ்ஸாவின் குழந்தை பிறக்கும் போதே இறந்து விடுகிறது. குழந்தையின் இறப்புக்குப் பிறகு டெஸ்ஸா – ஜஸ்டின் தொலைவு இன்னும் விரிவடைகிறது.

    ஒரு நாள் டெஸ்ஸா கொலை செய்யப்படுகிறாள். ஆர்னால்ட் தான் அவளை கொலை செய்து விட்டான் என்று முதலில் சொல்லப்படுகிறது. ஆர்னால்ட் டெஸ்ஸாவின் காதலன் என்றும் அவதூறு கற்பிக்க முயற்சிகள் நடக்கின்றன. ஆர்னால்டும் டெஸ்ஸா இறந்த நாளன்றே கொல்லப்பட்டது பின்னர் கண்டு பிடிக்கப்படுகிறது.

    மனைவியின் மரணம் ஜஸ்டினுள்ளில் ஆழ்ந்த மாற்றத்தை உண்டு பண்ணுகிறது ; டெஸ்ஸாவின் கொலைப் பிண்ணனி பற்றியும் காரணங்கள் பற்றியும் அறிவதற்கான ஆபத்து நிறைந்ததொரு தேடலில் புகுகிறான்,

    அறப்பணியில் ஈடுபடுவது உள்ளார்ந்த கருணை குணத்தின் காரணமாக இருக்கலாம் ; குற்றவுணர்வாக இருக்கலாம் ; இலாபம் கருதி இருக்கலாம் ; பொது வாழ்வில நற்பெயர் சம்பாதிப்பதற்காக இருக்கலாம். எதுவானாலும் இருக்கட்டும். நன்மையில் முடிந்தால் சரி. ஆனால் பிரச்னை என்னவென்றால் முழுமையான பார்வை கொண்டு பார்த்தாலொழிய அறப்பணி முயற்சிகள் நனமையில் முடிந்ததா என்பதை அறிதல் கடினம். தனிப்பட்ட நபர்களின் அறம் சார்ந்த தொண்டுகள் அதை ஏற்கும் நபரின் மனநிலை, அறப்பணி புரியப்படும் சூழல், அதை ஒழுங்கு படுத்தும் அரசுகளின் போக்குகள், மனப்பான்மைகள் என்று வெவ்வேறு இடைமுகங்கள்! இவ்விடைமுகங்கள் தோற்றுவிக்கும் பல்வேறு விளைவுகள்! இரட்டை வேடம் போடும் உதவி வழங்கும் அரசாங்கங்கள்! சட்டபூர்வ மற்றும் சட்டமீறல் செய்கைகளுக்கிடையேயான எல்லைகளை எளிதில் தாண்டும் இலாப நோக்கு நிறுவனங்கள் ! உதவி பெறும் மக்களின் ஊழல் மிகு உள்ளூர் அரசுகள் மற்றும் நிறுவனங்கள்!

    ஜஸ்டினின் தேடல் சிக்கல் மிகுந்த வலைக்குள் அவனைத் தள்ளி விடுகிறது. சொந்த நாட்டின் பொருளாதார குறிக்கோள்களுக்காக பன்னாட்டு நிறுவன புரியும் அநீதியைத் சுட்டிக்காட்டத் தைரியமில்லாமல் ஊமை நாடகமாடும் தூதரக ஊழியர்கள்! முதலாளிகளுக்கு துணை போகும் அரசு உயர் அதிகாரிகள்! லாபம் ஒன்றை மட்டும் விழைந்து சமூக நலனையும் சர்வ தேச சட்டங்களையும் உடைப்பில் போடும் முதலாளிகள்! வளர்ந்த நாடுகளின் குடிகளின் ’மதிப்பு வாய்ந்த’ உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஆப்பிரிக்க ஏழைகளின் உயிரைக் காவு வாங்கும் சுயநல மருந்து நிறுவனங்கள்! பக்க விளைவைத் தரும் மருந்தை பரிசோதனைக்குட்படுத்தும் நிறுவனத்தின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தாத குற்றவுணர்வில் அறப்பணியில் தன்னைத் தோய்த்து பாவம் கழுவும் விஞ்ஞானிகள்! லஞ்சம் வாங்கி சொந்தக் குடிகளை பலியாக்கும் ஊழல் மருந்துக் கட்டுப்பாடு ஆணையங்கள்! ஜஸ்டின் பல முகங்களை சந்திக்கிறான் ; சில முகமூடிகளையும் அவிழ்த்து அம்பலப்படுத்துகிறான்.

    திரில்லர் பாணியில் கதை வேகமாக நகர்கிறது ; தேடலுக்கு நடுவில் இறந்த மனைவியின் உணர்வுகளின் புரிதல் ஜஸ்டினுக்கு கிட்டுகிறது. டெஸ்ஸா இறந்த ஏரிக்கரையில் டெஸ்ஸாவின் நினைவுகளில் அவன் இருக்கும் போது அவன் கொல்லப்படுகிறான். அவன் கொல்லப்படப்போவது அவனுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தும், தான் கொல்லப்படுவதற்கு ஏதுவாக அவன் கொலையாளிகளுக்காக காத்திருப்பது அக்கொலையை தற்கொலையாக நகர்த்துகிறது. கதையின் முடிவு இந்த த்ரில்லர் படத்தை ஒரு முழுமையான காதற்படமாகவும் ஆக்கிவிடுகிறது.

    ஆப்ரிக்காவை மையப்படுத்தி வெளி வந்த படங்களில் ‘ப்ளட் டயமண்ட்ஸுக்குப்’ பிறகு எனக்கு ’தி கான்ஸ்டண்ட் கார்டனர்’ மிகவும் பிடித்தது. (”ஹோட்டல் ர்வாண்டா” இன்னும் பார்க்கவில்லை!)

    constantgardener1

  • நம்பிக்கையின் நாளைகள் – அ.முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில் வண்டி

    தமிழ்புனைவுகளின் நாயகர்கள் தமிழநாட்டில் இருப்பதாகத்தான் வர வேண்டும் என்று சில காலம் முன்னர் ஒரு மரபே ஏற்பட்டிருந்தது. எண்பதுகளில் ஒரு வாரப்பத்திரிக்கையில் சிவசங்கரி எழுதிய “47 நாட்கள்” என்ற தொடர்கதையை வாசித்திருக்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு மாப்பிள்ளையை மணமுடிக்கிறாள் கதையின் நாயகி. உண்மையில் அயல்நாட்டு மாப்பிள்ளை அவ்வளவு நல்லவன் இல்லை. அவன் நாயகியை கொடுமைப்படுத்துகிறான். இக்கதை பிறகு திரைப்படமாகவும் வந்தது.

    இன்னொருவிதமான அயல் நாட்டுக் கதைகள் வருவதுண்டு. வறுமையில் வாடும் தமிழ்க்குடும்பத்தில் ஒருவர் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து மலேசியாவிலோ அமெரிக்காவிலோ செட்டில் ஆகிவிடுவார்; குடும்பத்தின் வறுமையை வெளிநாட்டு பணம் அனுப்பி போக்குவார். ஆனால் சொந்த வாழ்க்கையில் அவர் தனிமையை அனுபவிப்பார். அவருக்கு அங்கு விவாகரத்து நிகழும் அல்லது அவள் காதலித்த வெள்ளைக்காரப் பெண்ணை இந்தியாவில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினர் ஏற்காமல் போவார்கள். அயல்நாட்டில் நடப்பதாகச் சித்தரிக்கப்படும் கதைகளில் ஒரு பலமான இந்திய இணைப்பு இருக்கும்.

    அறுபதுகளில் எழுதப்பட்ட “புயலில் ஒரு தோணி”யை நான் சமீபத்தில்தான் வாசித்தேன் என்பதை இங்கு பதிவு செய்தாக வேண்டும்.

    அயல்நாட்டுப் பின்புலத்தில் முழுக்க முழுக்க அயல் நாட்டுப் பாத்திரங்கள் ஏன் தமிழ்க்கதைகளில் உலவக் கூடாது?

    amuttulingam_newa

    இனப்பிரச்னையின் காரணமாக உலகெங்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் அத்தகைய கதைகள் தொண்ணூறுகளில் எழுதப்பட காரணமாயினர். அனுபவங்களின் சேகரத்துக்குப் பிறகே அது இலக்கியம் ஆகிறது . இலங்கைத் தமிழர்களின் கூட்டு அனுபவம் தமிழ் இலக்கியத்திற்கு சமகாலப் போர் அவலங்கள், புலம் பெயர் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள், அனுசரிப்புகளையும் பற்றிய புது முன்னோக்கிலான படைப்புகள் வந்தடையக் காரணமானது. உலகமயமாக்கலும் சர்வதேச கண்ணோட்டத்தில் கதைகள் புனையப்பட இன்னொரு காரணம்.
    அ.முத்துலிங்கத்தின் – மகாராஜாவின் ரயில் வண்டி– அருமையான சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் தனிப்பட்ட அழகு கொண்டவை.. சில முக்கியமான சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. மகாராஜாவின் ரயில் வண்டி, தொடக்கம், ஆயுள், விருந்தாளி, கடன், பூர்வீகம், ஐந்தாவது கதிரை ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

    இத்தொகுதியில் உள்ள “நாளை” என்ற சிறுகதை பெயர் சொல்லப்படாத தேசமொன்றில் நிகழும் போரில் பாதிக்கப்பட்ட இரு சகோதரர்கள் பற்றிய சிறுகதை. பாத்திரங்களுக்கு பெயர்கள் தரப்படவில்லை.
    பெரியவர்கள் பாதிக்கப்படும் அனைத்து வகைகளிலும் யுத்தங்கள் சிறுவர்களையும் பாதிக்கின்றன என்றாலும் சிறுவர்கள் வேறுபட்ட வழிகளில் யுத்தங்களினால் அவதியுறுகின்றனர். பராமரிப்பு, புரிதல் மற்றும் அன்பு இவைகளுக்காக சிறுவர்கள் பெரியவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். பெற்றோரின் மரணம் காரணமாகவோ, குடும்பத்தின் ஜீவனத் தேடுதலில் பெற்றோர் தீவிரமாக ஈடுபடும் காரணமாகவோ, மன அழுத்தத்துக்காளான பெற்றோரின் உணர்வு ரீதியான கவனமிழப்பின் காரணமாகவோ பெற்றோர்-சிறுவர்களுக்கிடையான இணைப்பு போர்க்காலங்களில் அறுபடுகிறது.

    பெற்றோரைத் தொலைத்த சிறுவர்கள் தெரிந்த ஒருவரின் அரவணைப்பில் இருக்கலாம் ; அல்லது உறவினர் யாருடனோ இருக்கலாம் ; அல்லது அனாதை விடுதிகளில் இருக்கலாம். குறிப்பிடத்தக்க விகிதத்தில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரியவர்களின் பாதுகாப்பை இழந்துவிடுகின்றனர். புகலிடச் சூழலில் இவர்கள் “துணையற்ற குழந்தைகள்” (unaccompanied children) என்று அழைக்கப்படுகின்றனர்.

    பெரியவனும் சின்னவனும் துணையற்ற குழந்தைகள். ஆனால் அவர்கள் அகதிகள் முகாமில் தங்கியிருக்கவில்லை. இம்முகாம்களிலிருந்து பல மைல்கள் தாண்டி ஒரு கராஜில் வசிக்கின்றனர். பெரியவனுக்கு பதினோரு வயது ; சின்னவனுக்கு ஆறு வயது. தினமும் பல மைல்கள் நடந்து வேறு வேறு முகாம்களுக்கு சென்று உணவு சேகரிக்கிறார்கள்.

    ஒரு முகாமில் உணவு வண்டியின் வருகைக்காக காத்திருக்கின்றனர். சனங்கள் ஒழுங்கின்றி நின்று வரிசையை குலைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    பெரியவனின் தலையில் சின்னவனின் பொறுப்பு. ஒழுங்கற்ற வரிசையில் சின்னவனை நிற்க விடவில்லை. சின்னவன் எங்கே தொலைந்து போய் விடுவானோ என்ற பயம் பெரியவனுக்கு.

    “அந்த தொக்கையான மனுஷி நாலு பிள்ளையையும் இழுத்துக்கொண்டு முன்னேறினாள். அவள் கைகளில் பெரிய பாத்திரங்கள் இருந்தன. அவள் எல்லாவற்றையும் முன் கூட்டியே போதிய ஏற்பாடுகளுடன் வந்திருந்தாள்”

    உணவு சேகரிப்பதற்காக ஒழுங்கற்று திரண்டு நின்றிருந்த சனத்திரளை அதிகாரம் செய்து பழக்கப்பட்ட முகத்துடன் தடித்த உருவங்கொண்ட பெல்ட், தொப்பி, ஓவர்கோட் அணிந்த ஒரு மனிதன் தன் குரலின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். சிறிது நேரம்தான். திரும்பவும் சனவெள்ளம் பெரியவனைத் தள்ள, சின்னவனின் கைப்பிடி தளர, அவன் தள்ளிக் கொண்டு போகப்படுகிறான். சின்னவனை ஓர் அதிகாரி அழைத்து ஒரு கூடாரம் முன்னர் நிறுத்தி வைக்கிறார். அரை மணி நேரம் சின்னவன் அங்கு காத்திருக்கிறான். அந்த அதிகாரி அண்ணனை தம்பியிடம் சேர்த்து வைக்கிறார்.

    இதற்குள் பல புது வரிசைகள் தோன்றியிருக்கின்றன. எல்லோரும் பெரியவர்களாக நின்றிருக்கிறார்கள். சின்னவனை வரிசையில் நிறுத்தாமல் வேலி ஓரத்தில் நிற்க வைத்து. பெரியவன் தன் பார்வையால் சின்னவனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறான்.

    பெரியவனின் கையில் ஒரு நெளிந்த டின் மட்டுமே. அவனிடம் பாத்திரங்கள் இருந்திருந்தால் அவனுக்கு கொஞ்சம் அதிகமாக சூப் கிடைத்திருக்கும். ஒரு மீசைக்காரன் பெரியவன் கையில் இருந்த அடையாள அட்டையைப் பரிசோதித்து, “இது இங்கே செல்லாதே!” என்று சொல்கிறான்.“இனிமேல் வராதே” என்று அறிவுறுத்தப்படுகிறான். இருந்தாலும் அவனுக்கு ரொட்டியும் சூப்பும் வழங்கப்படுகின்றன.

    சூப் ஊற்றுபவரிடம் “ஆழத்தில் இருந்து கலக்கி ஊற்று” என்று கேட்டுக் கொள்கிறான். சின்னவனுக்கு இன்று சூப்பில் இறைச்சித் துண்டு கிடைக்கும் என்று நம்பிக்கை கொடுத்திருந்தான் பெரியவன். ரொட்டி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது; ஒரு பங்கை பெரியவன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறான். மீதி இரு பகுதிகளை இருவரும் உண்கிறார்கள். சூப்பில் அன்றும் இறைச்சித் துண்டு கிடைக்கவில்லை.
    முகாமில் இருந்து திரும்புகையில் நெடுஞ்சாலையெங்கும் ராணுவ வீரர்கள் காணப்படுகிறார்கள். சிகரெட் புகைத்தபடி நின்றிருந்த ஒரு வீரனை பெரியவன் அணுகுகிறான். ராணுவ வீரன் ஒரு சிகரெட்டை எடுத்து வீசுகிறான். பெரியவன் சிகரெட்டை பற்ற வைத்து புகைக்கிறான். சின்னவனுக்கும் புகைக்க ஆசை. பதினோரு வயதுப் பெரியவன் “நீயும் என்னைப் போல பெரியவன் ஆனதும் பிடிக்கலாம். இப்ப நல்ல பிள்ளையாம்” என்று அறிவுரை சொல்லுமிடம் நம் மனதை இலேசாக்குகிறது. சிறு புன்னகையை நம்முள் தோற்றுவிக்கிறது.
    அவர்கள் கராஜை எட்டும்போது ஒரு நாய் வந்து அவர்கள் அருகில் நிற்கிறது. அக்காட்சி போர், பசி, துயர், அவலம் நிறைந்த காட்சிகளுக்கு நடுவே மனித கருணையின் சாத்தியப்பாட்டின் படிமமாக விரிகிறது.
    ”சின்னவன் கையை நீட்டி ‘அதோ, அதோ’ என்று காட்டினான். அந்த நாய் மறுபடி வந்து நின்றது. மெலிந்து எலும்பும் தோலுமாய் இருந்தது. அதுவும் அகதி நாய்தான். பதிவு கார்ட் இல்லாத நாய். நிலத்தை முகர்ந்து பார்த்தபடி தயங்கி தயங்கி வந்தது.

    ‘அண்ணா, அந்த நாய்க்கு ஒரு பேர் வைப்போமா?” என்றான் சின்னவன்.‘வேண்டாம், பேர் வைத்தால் அதுவும் எங்கள் குடும்பம் ஆகிவிடும்’ பையில் இருந்த ரொட்டியை எடுத்து சரி பாதியாகப் பிய்த்து ஒரு பகுதியை அந்த நாயிடம் கொடுத்தான். அது அந்த ரொட்டியை தூக்கிக்கொண்டு நொண்டி நொண்டி ஓடியது’
    கராஜ் பாதுகாப்பாக இருக்கிறது. உள்ளே வாடையும் இருட்டுமாக இருக்கிறது. பழைய கம்பளிகளை விரித்து படுத்துக் கொள்கிறார்கள். காலையில் சின்னவன் அழும்போது அவனுக்குக் கொடுப்பதற்காக, மீதமான ரொட்டியைப் பெரியவன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறான். சின்னவன் தூங்கி விட்டானென பெரியவன் எண்ணிக் கொண்டிருக்கையில் திடீரென ஊர்ந்து வந்து சின்னவன் கட்டிக் கொள்கிறான். சின்னவன் அழுகிறான். “உன்னைவிட்டு ஒரு நாளும் போக மாட்டேன்” என்று பெரியவன் அவனை அணைத்துக் கொள்கிறான். ’துணையற்ற குழந்தைகளான’ இருவரும் வயதில் மிகச் சிறியவர்கள், எனினும் பெரியவனின் முதிர்ச்சி மற்றும் பரிவு இருட்டான கராஜை நம்பிக்கையொளியால் நிறைக்கும் கணம் அது.
    நாளை என்பது இன்னொரு நாளாக இருக்கலாம்.. ஆனால் நம்பிக்கை நாளை இன்றைய நாளைகளைத் தாள உதவும் நன்னாட்களை நிறைக்கலாம். பெரியவன் அடுத்த நாள் பத்து மைல் தொலைவிலிருந்த இன்னொரு முகாமுக்கு செல்லத் திட்டமிடுவதோடு கதை நிறைவு பெறுகிறது.

    “அங்கே கட்டாயம் இறைச்சி கிடைக்கும். அப்படித்தான் அவன் கேள்விப்பட்டிருந்தான்”

    ”மகாராஜாவின் ரயில் வண்டி” மனித உணர்வுகளின் பல நிறங்களை வார்த்தைகளால் படம் பிடிக்கும் அரிய சிறுகதைகளின் சிறப்பான தொகுப்பு.

    மொழி, இனம் தாண்டிய பொதுவான மனிதப் பிரச்சினைகளை, அழகியலைப் பேசவருகையில் பெயரிலா பாத்திரங்கள் பேசுபொருளின் எல்லையற்ற தன்மையை விவரிக்க மிகவும் உகந்தவை என்று இச்சிறுகதைகளை வாசிக்கையில் எனக்கு தோன்றியது.

    “நாளை” சிறுகதை போலவே “தொடக்கம்” சிறுகதையிலும் கதை நிகழும் நாடோ, கதைசொல்லியின் இன அடையாளங்களோ சுட்டப்படுவதில்லை. உலகமயமாகிய வியாபாரச்சூழலில் மும்மாத நிதியறிக்கைகளும், பங்குகளின் விலை வரைபடங்களும் மட்டுமே முக்கியமானவையாகப் போன காலத்தில், காலக்கெடுக்களை சந்திப்பதற்கான ஓட்டங்கள் மட்டுமே சாசுவதம் என்றாகி விட்டபிறகு, உலக மையமே அலுவலகமும் அதில் இருப்பவர்களும் என்று ஆகிவிடுகிறது. உலகத்தை நோக்குவது அலுவலக அறையின் ஜன்னலின் பரப்பளவைச் சார்ந்ததாகவும் ஆகிவிடுகிறது, வெறுமை மிஞ்சி தீரா வேலைப்பளு தரும் அழுத்தத்தில் சலித்துப்போய் கதைசொல்லி திறந்திருந்த அலுவலக ஜன்னலின் வழி நுழைந்து இறந்துபோன பறவையின் சொந்த ஊர், அது எந்தெந்த தேசங்களின் மேல் பறந்தது என்பன போன்ற விவரங்களை இணையத்தில் (”வையவிரிவலை” – ஆசிரியரின் மிக அழகான சொற்பிரயோகம்!) சேகரிக்கிறான். போர்டு ரூமில் முதலாளிகள் அவனுடைய பிரெசெண்டேஷனுக்காக பொறுமையின்றி காத்திருக்கின்றனர். ஆறஅமர பறவை பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டுபோய் போர்ட் மீட்டிங்கில் பறவை பற்றிய சிறு சொற்பொழிவாற்றுகிறான்.

    “ஆயுள்” கதையின் தொடக்கத்தில் “இது காதல் கதையல்ல” என்ற குறிப்பு வாசிக்கக் கிடைக்கிறது. கதையின் கடைசி பத்தி வரை ஒரு காதல் கதை போல நகரும் கதை. இலக்கிலாமல் சதா பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாடோடி வரலாற்றுக்கு முந்திய காலம் அவன் கையிலிருக்கும் பிளாஸ்டிக் குடுவை எல்லாருடைய கவனத்தையும் கவர்கிறது – ஹொன்ஸா கூல் என்கிற ஆதிவாசிப் பெண்ணைத் தவிர.
    நாடோடிக்கு அவள்மேல் ஈர்ப்பு. வழக்கத்திற்கு மாறாக அப்பெண்ணின் கிராமத்திலேயே தங்கிவிடுகிறான். இயற்கை சார்ந்த கிராமவாசிகளின் வாழ்க்கை அவனுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. “என்னை மண்ந்து கொள்வாயா?” என்று அவன் கேட்கும்போது ஹொன்ஸாகூல் அவனை விரட்டிவிடுகிறாள் .நாடோடி அசரவில்லை. ஹோன்சாகூலை திருமணம் செய்துகொள்ளும் ஆசையை தெரிவிக்கிறான். அவருக்கு ,சம்மதம்தான். ஆனால் கிராம மரபுப்படி ஹோன்சாகூலின் சம்மதத்தைப் பெற்றால்தான் திருமணம் சாத்தியம்.

    மழைக்காலம் துவங்கும் அறிகுறி தோன்றவும், அங்கிருந்து கிளம்ப முடிவெடுக்கிறான், போகுமுன்னர் ஹோன்ஸாகூலை மீண்டுமொரு முறை சந்தித்து அவளிடம் பிளாஸ்டிக் குடுவையை நீட்டுகிறான். ஹொன்சாகூல் அவன் தந்த குடுவையின் நேர்த்தியில் மனதைப் பறிகொடுக்கிறாள். “குடுவையை என் ஞாபகமாக வைத்துக் கொள். நான் திரும்பி வந்து உன்னை திருமணம் செய்து கொள்வேன்” என்று நாடோடி சொல்கிறான்.
    இரு வருடங்கள் காத்திருந்தும் நாடோடி திரும்பி வரவில்லை. அவள் கிராமவாசியொருவனை மணக்கிறாள். சீக்கிரமே மணத்தை முறித்துக் கொண்டு விடுகிறாள். அவள் மணமுடித்த கணவன், அவளுடைய தந்தை – ஒவ்வொருவராக இறந்துவிடுகிறார்கள். குடுவை அவளுடைய குடிசையிலேயே கிடக்கிறது. ஒரு நாள் அவளும் இறந்து போனாள். பல வருடங்கள் கடக்கின்றன. குடிசையும் சிதிலமாகி மண்ணோடு மண்ணாகி விடுகிறது. சடலங்களும் மண்ணோடு மண்ணாகின. அந்த குடுவையும் மண்ணில் புதைந்து விடுகிறது. ஆனால் சாகவில்லை. அதன் ஆயுள் நானூறு ஆண்டுகள். நூறு வருடம்தான் கழிந்திருக்கிறது. அது அழிந்துபோக இன்னும் முன்னூறு ஆண்டுகள் இருந்தன. “ஆயுள்” நிச்சயமாக காதல் கதை இல்லை!

    மார்பகப் புற்றுநோயின் காரணமாக மார்பகம் நீக்கப்பட்ட பெண்களின் மனவலியை நுணுக்கமாகச் சொல்லும் அழகிய சிறுகதை – பூர்வீகம். யுக்ரேய்ன் நாட்டின் தலைநகரான கீவ் நகரில் வசிக்கும் அனா என்கிற அன்னலட்சுமி சேரகோவ் ”பூர்வீகம் தேடுவதை இனி விட்டுவிட வேண்டும். இன்னும் நூறு வருடங்களில் எல்லோரும் ஒரே இனம்தான்” என்று சொல்லிக்கொண்டே வைன் குடிப்பாள். அவள் அதிகம் குடித்து நிதானமிழக்கவும், கதைசொல்லியும் மற்றவர்களும் அவளை அழைத்துக்கொண்டு அவளுடைய ஓட்டல் அறையில் விடுவார்கள். அப்போது கண்ணகி போன்று தன்னிரு மார்பையும் கழட்டி அவர்கள் மீது அனா வீசுவாள். பஞ்சு போன்ற அவளின் மார்பகங்களின் ரகசியம் கதைசொல்லிக்கு ஆறு மாதம் கழித்து அனாவின் மரணச்செய்தியைப் படிக்கும்போதுதான் தெரிய வருகிறது.

    தம்பதிகளுக்கிடையே ஏற்படும் சுவையான பாலியல் அரசியலை அழகுறச் சொல்லும் ”ஐந்தாவது கதிரை”

    வெளிப்பூச்சில் அதி நவீனமாக வளைய வரும் குடும்ப அங்கத்தினர்களின் உண்மையான வண்டவாளம் இரவில் தெரிய வரும் “மகாராஜாவின் ரயில் வண்டி” சிறுகதையின் கதைசொல்லி எல்லாவற்றையும் பார்த்து துல்லியமாகப் பகிர்ந்து கொண்டாலும் அந்நிகழ்வுகளை அவன் எவ்வளவு புரிந்து கொண்டான் என்பதை நாம் அறிய மாட்டோம். ரோஸலின் என்கிற பதின்பருவ அழகி வாயைத் திறந்தால் பொய்! தான் படிக்கும் பள்ளியைப் பற்றிக் கூட அளந்து விடும் பகட்டு ! கதை சொல்லிக்கோ அவளின் பெயரை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவாள் என்று கேட்கவில்லையே என்ற ஏக்கம். கதை சொல்லிக்கு பல வருடங்களுக்குப் பிறகு யூகமாகப் புரிந்தாலும், நீள் சதுர பிஸ்கட்டை சாப்பிடும் போதெல்லாம் (ரோஸலின் வாசித்த) கிட்டாரின் மணம் வருவதை இன்னும் தவிர்க்க முடியாமல் இருக்கிறது.

    மகாராஜாவின் ரயில் வண்டி சிறுகதைத் தொகுதியை வாங்கி இரண்டு வருடங்களாகிவிட்டன. புதுப்புத்தகங்களை முகர்ந்தால் ஒரு மணம் வரும் ;புத்தகங்களை முகர்ந்து பார்க்கும் பழக்கமுள்ள எனக்கு இரண்டு வருடங்கள் முன்னர் வாங்கிய இப்புத்தகத்தில் இருந்து இன்னும் வாசனை வந்து கொண்டேயிருக்கிறது என்று தோன்றுகிறது. நீங்களும் வாங்கி முகர்ந்து பார்க்கலாம்!

    புத்தகம் : மகாராஜாவின் ரயில் வண்டி
    ஆசிரியர் : அ.முத்துலிங்கம்
    வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

    நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=29293)

  • தாகூர் பைத்தியம்

    rabindranath_tagore_03

    இளைஞனாக பாரதிப் பித்து பிடித்தலைந்த நாட்கள் இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றன. இப்போது நடு வயதில் வேறொரு பித்து பிடித்தாட்டுகின்றது.

    குரு தேவரின் Hungry stones சிறுகதையை ஒரு விபத்தாக படிக்க நேர்ந்தது. இரண்டாம் காதல் என்று தான் இவ்விபத்தை வர்ணிக்க வேண்டும்! 1910இல் மேக்மில்லன் நிறுவனம் சர்வதேச பதிப்பாக வெளியிட்ட Hungry Stones and other stories  சிறுகதைத் தொகுதியில்  ரவீந்திரரின் முக்கியமான சில சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. வங்க மொழி மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களின் பெயரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதில்லே என்று சொல்ல வைக்கும்! சி.எஃப்.ஆண்ட்ரூஸ், சகோதரி நிவேதிதா (முதல் குருநாதர் பாரதியாரின் ஆன்மீக குரு!) போன்றோர்….The Victory என்ற ஒரு சிறுகதை ரவீந்திரர் ஆங்கிலத்திலேயே எழுதியது. தொகுதியில் ஒவ்வொரு கதையும் முத்து! Hungry Stones சிறுகதை படிக்க படிக்க பேரின்பம்! நெஞ்சை உருக வைக்கும் காபூலிவாலா சிறுகதையும் இத்தொகுதியில் உள்ளது.

    அதற்கப்புறம் ரவீந்திரரின் பல சிறுகதைகளைப் படித்தேன். சமீபத்தில் படித்தது Broken Nest (‘Nashtaanir’). புகழ் பெற்ற இக்குறுநாவலை ஒரே அமர்வில் நான் வாசித்து முடித்த போது இரவு பனிரெண்டு. இரவு முழுதும் புரண்டு புரண்டு படுத்தேன். தூங்கவேயில்லை. சிந்தனையை புரட்டி போட்ட நாவல். இந்நாவலை சத்யஜித்ரே ‘சாருலதா’ என்ற பெயரில் படமாக்கியிருப்பதாக அறிந்தேன். அந்தப் படத்தைப் பார்த்தால் என்ன அவஸ்தையாகுமோ தெரியவில்லை. கோரா, கைரெபாய்ரெ, சதுரங்கா – இந்த நாவல்களையும் விரைவில் படித்து முடித்து விட வேண்டும். தாகூரை வாசிக்காமல் நாற்பது வருடங்களை வீணாகக் கழித்து விட்டேன்.

    ஆங்கில மொழிபெயர்ப்புகளே வாசகரை பித்துப்பிடிக்க வைக்கும் போது பெங்காலியில் குரு தேவரின் நூல்களைப் படித்தால்……பெங்காலி நண்பர்கள் வெறித்தனமாக ரவீந்திரரைக் கொண்டாடுவது கொஞ்சமும் ஆச்சரியம் தரும் விஷயமில்லை!

    ரவீந்திரரின் கதையொன்றின் தமிழ் மொழிபெயர்ப்புக்கான சுட்டியொன்றை கீழே தருகிறேன்……மொழிபெயர்ப்பாளர் யார் தெரியுமா? சாதாரணப்பட்டவர் இல்லீங்க……முதல் பத்தியில ஒருத்தர சொன்னேன் இல்லியா…அவரேதான்…..

    https://docs.google.com/file/d/0B7SRknDGRb6JZ1g4aTJ3NFZIejQ/edit?usp=sharing

     

    hungry-stones-and-other-stories-400x400-imadgcfqdengz8jd

  • கச்சாமி – ஷோபா சக்தியின் சிறுகதை – ஒரு மதிப்புரை

    தத்துவங்களின் குறியீடாக விக்கிரகங்கள் உருவாக்கப்படுகின்றன. தத்துவங்களை ஆழமாக தியானிக்கும் பொருட்டு உருவான மதங்கள் சிந்திக்கும் பயிற்சியில்லாத சாமானியர்களுக்காக விக்கிரகங்களை படைத்துக்கொண்டன. “புத்தரைத் தேடாதே ; புத்த நிலையைத் தேடு” என்று முழங்கினார் புத்தர். ஆனால் தேரவாத பௌத்தத்திலிருந்து கிளைத்த பல்வேறு பௌத்த பிரிவுகள் புத்தரை ஆசானாக குருவாக மனிதராக மட்டும் எண்ணாமல் பரமனாகவும் ஆக்கின. பிரம்மாண்ட புத்தர் சிலைகள் காந்தாரத்தில் உருவாகத் தொடங்கின. பின்னர் பௌத்த உலகெங்கும் புத்தர் சிலைகள், விக்கிரகங்கள் பல்கிப் பெருகின. தியான நிலைப் புத்தர், பரி நிர்வாண நிலையில் புத்தர், பொன்னால் செய்யப்பட்ட புத்தர், புத்தரின் முன் பிறவிகள் என்று புனையப்பட்ட ஜாதகக் கதைகளின் ஒவ்வொரு நாயகனின் உருவிலும் புத்தர், என்று புத்தரின் திருவுருவங்கள் விகாரைகளிலும், ஸ்தூபங்களிலும், ஓவியங்களிலும் புத்தகங்களிலும் சித்தரிக்கப்படலாயின.

    முதலில் சமூகக் குறியீடுகளாகப் புரிந்து கொள்ளப்பட்டு, பின்னர் அரசியல் குறியீடுகளாகவும் இனக் குறியீடுகளாகவும் சமயக் குறியீடுகள் செயல்படுகின்றன என்பது கண்கூடு. காவியங்களினால், தத்துவநூல்களினால், காலகாலமாக நிற்கும் சிலைகளினால், பொது நினைவுகளில் அமைதியாக நிறுவப்படும் இக்குறியீடுகள், சமன் சிந்தனையற்ற மனங்களில் பெருமிதம், கர்வம், மேட்டிமைத்தனம் முதலான உணர்ச்சிகளை எழுப்ப வல்லனவாகின்றன. சிறுபான்மையினராய் இருக்கும் வேற்று நம்பிக்கையுடையோரின் மேல் அடையாள வன்முறையை திணிக்கும் சாதனங்களாகவும் பெரும்பான்மை சமூகத்தினரின் உபயோகத்துக்குள்ளாகின்றன.

    இலக்கியத்தில் குறியீடுகளை பயன் படுத்துதல் ஓர் உத்தி; சொல்ல வந்த கருத்தை பூடகமாக சொல்வதற்கும், வாசக அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் அவை ஏற்றவை. சக்தி வாய்ந்த படிமங்கள் சித்தரிக்கப்படும் சிறுகதைகள் வாசகரின் நினைவுகளில் நெடுங்காலம் தங்கும். மிகவும் பேசப்படும் சிறுகதைகளில் குறியீடுகளின் தக்க, பயனுறுதி மிக்க பயன்பாடு இன்றியமையாத அங்கமாயுள்ளது.

    shoba_shakthi

    ஷோபா சக்தியின் கச்சாமி (http://www.shobasakthi.com/shobasakthi/?p=1081) சிறுகதையினூடே புத்தர் வருகிறார் – கெய்லாவின் முதுகில் வரையப்பட்ட tattoo-வாக, நிலத்தில் கண்டெடுக்கப்பட்டு பின்னர் உடைத்து புதைக்கப்படும் புராதன சிலையாக, புளியங்குளத்தில் இன்னும் பிரசன்னமாகாத புத்தராக. ஒவ்வோர் இடத்திலும் புத்தரின் படிமம் நம்முள் வெவ்வேறு உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.

    கதை சொல்லியும் அவருடைய தோழியும் இலங்கையில் சுற்றுலா செல்கிறார்கள். தோழி தன் முதுகில் புத்தர் தியானம் செய்யும் சித்திரமொன்றை tattoo – குத்திக்கொண்டிருக்கிறாள். அது தெரியும் வண்ணம் உடை அணிந்திருந்ததால் போலீஸ் காரர்கள் விசாரிக்கிறார்கள். “புத்தரின் உருவத்தை உடலில் பச்சை குத்துவது தண்டனைக்குரிய குற்றம்” என்று அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கதை சொல்லியை அவனுடைய பூர்வீக கிராமத்துக்கு அழைத்து செல்வதாய் சொல்லியிருந்த தோழிக்கு ஏமாற்றவுணர்ச்சியில் ஆத்திரம் ; கோபம் மேலிட பிரச்னையை முடிவு செய்ய இலங்கையை விட்டு இருபத்தி நான்கு மணி நேரத்தில் வெளியேற முடிவு செய்கிறார்கள்.

    கதை சொல்லி இனப்பிரச்னையின் காரணமாக புலம் பெயர்ந்தவர்களில் ஒருவன். தான் ஆறு ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்குச் செல்லும் வழித்தடத்தை கண்டிக்கருகே அவன் காண்கிறான். அவன் ஏன் சிறை செய்யப்பட்டான் என்ற காரணம் சொல்லப்படவில்லை. கடந்தகால நினைவுகள் ஒரு சிறைவாசமாக அவன் மனதை பாரமாக அழுத்துவதை சொல்வதாக இதைக் கொள்ளலாம்.

    முன்னதாக வியட்நாமிலிருந்து இலங்கை செல்லும் எண்ணம் கதை சொல்லிக்கு வருகிறது ; காலியாகப் போய்விட்ட சொந்த ஊரில் தங்குவதற்கென்று ஓர் உறவினர் கூட இல்லாமல் போய் சந்திப்பதற்கென ஒருவரும் இல்லாமல் போன பிறகு கடந்த கால கசப்பான நினைவுகளின் வேதனையை தனியாக இருந்து தாங்கிக் கொள்ள இயலாது என்ற காரணத்தினாலோ என்னவோ “நீ என்னை யாழ்ப்பாணம் கூட்டிக் கொண்டு செல்வாயா?” என்று ஒரு சின்னக் குழந்தை போல கெய்லாவிடம் கேட்கிறான்.

    கெய்லாவின் free-spiritedness சம்பவங்கள் வாயிலாக தெளிவுற சொல்லப்படுகின்றன. கட்டுப்பாடுகளை ஏற்காத கிளர்ச்சியை கோபத்தினால் வெளிப்படுத்தும் கெய்லா, காதலன் தன் பூர்வீகத்தை காணாமல் திரும்பக் கூடாது என்ற அக்கறை மேலிட தன்னுடைய tattoo வை அழிக்க தன் முதுகில் ஊற்றிக் கொள்ளும் எரி சாராயம் free-spirit-ஐ வரம்புக்குள் அடக்கி வைக்கும் சட்டத்தின் இரும்புக்கரங்களின் குறியீடு. தோழமையின் பாற்பட்ட தாய்மை கலந்த அன்பின் பரிமாணமாகவும் இதைக் கொள்ளலாம்.

    Tattoo அழிந்து கருத்துப்போயிருந்த கெய்லாவின் முதுகுப்புற காயம் கதைசொல்லியின் மனதில் ஒரு பழைய நினைவைக் கிளறுகிறது. மலையகத் தமிழர்களை வன்னிக்காட்டுப் பகுதிகளில் குடியேற்றுவதற்கான இயக்கத்தில் கதை சொல்லி பங்கு பெற்ற போது நிகழ்ந்த சம்பவம். கதை சொல்லியும் அவனுடைய நண்பர்களும் செல்வா நகர் என்ற புது காலனியை சமைப்பதற்காக ஒரு நாள் குழி தோண்டிக் கொண்டிருந்த போது புத்தர் சிலையொன்று தட்டுப் படுகிறது. புத்தர் சிலை அவ்விடத்தில் கிடைத்தது என்று தெரிந்தால் வன்னி மண் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்பதை மறுப்பார்கள். பிக்குக்கள் வழிபாடுகளுக்கும், தொல்பொருளியலார் ஆய்வுகளுக்கும் வந்து குவிவார்கள் என்று சொல்லி பாதிரியார் ஒருவர் அச்சிலையை உடைத்து விடுமாறு ஆலோசனை கூறுகிறார்.

    புத்தரைக் கீழே போட்டுவிட்டு, நான் அலவாங்கால் முதல் அடியை புத்தரின் மார்பில் இறக்கினேன். சிலையிலிருந்து ‘கிலுங் கிலுங்‘ எனச் சில்லறை நாணயங்கள் குலுங்குவது போல ஒலி எழுந்தது. அலவாங்கு என் கைகளிலிருந்து துள்ளப் பார்த்தது. ஏதோ நூதனமான கல்லில் சிலையை உருவாக்கியிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். மூன்றாவது அடியில் புத்தரின் மார்பு இரண்டாகப் பிளந்தது. நாங்கள் மூவரும் ஆள்மாறி ஆளாக அடித்து அந்தச் சிலையைத் தூள் தூளாக்கினோம். ஒவ்வொரு அடிக்கும் ‘கிலுங் கிலுங்‘ என்ற ஒலி எழுந்துகொண்டேயிருந்தது. சிலையைச் சல்லிக் கற்களாகச் சிதைத்தோம். அந்தக் கற்களைகாட்டின் எல்லாத் திசைகளிலும் சில்லஞ் சில்லமாகக் குழிதோண்டிப் புதைத்தோம்

    பெரும்பான்மையரின் நோக்கின்படி வரலாறுகள் திரிக்கப்படுவதையும் அதனால் எழும் அச்சங்களின் பொருட்டு அதே வரலாறு இருட்டடிப்புக்குள்ளாக்கப்படுவதையும் மிக அழகாக எடுத்துக் கூறும் பகுதி இது. வரலாற்று உண்மைகள் ஏற்றுக் கொள்ளப்படும்போது அவை முரண்பட்டிருக்கும் இரு தரப்பினரையும் சுத்திகரித்துப் பிணைக்கிறதென்றால், உண்மைகள் குறித்த பெருமிதங்களும் அச்சங்களும் இருவரையும் பொய்மையால் பிணிக்கின்றன.

    கதை சொல்லியும் கெய்லாவும் பயணம் செய்யும் பஸ் புளியங்குளத்தருகே செல்வா நகருக்கருகில் நிற்கிறது. கதை சொல்லி தூங்குவதைப் போல கண்ணை இறுக மூடி தலை கவிழ்ந்திருக்கிறான். பேருந்துக்கு வெளியே “இந்த இடத்தில் புத்தர் சிலையொன்றை நிர்மாணிக்கப் போகிறோம் ; தானம் செய்யுங்கள்” என்று யாரோ உண்டியல் குலுக்குகிறார்கள். ஏற்கெனவே உடைத்தெறியப் பட்ட பழைய புத்தர் சிலை புதைந்திருந்த இடத்தில் ஒரு புதிய சிலை வரவிருக்கிறது ; அதற்கு முன்னரே சிங்களக் குரல்கள் வந்து விட்டதை கண்ணை மூடியவாறே கதை சொல்லி கேட்கிறான்..

    பஸ் நகரத் தொடங்கியவுடன் கெய்லா கதை சொல்லியில் தோள்களில் ஆதுரமாய சாய்ந்து கொள்ள, அவளின் காயத்தை அன்புடன் வருடி விடுகையில் கதைசொல்லியின் உள்ளங் கைகளில் புத்தர் இருந்தார் என்று சொல்லி கவித்துவமாக முடிகிறது கதை.

    +++++

    ஒரு ஜென் குட்டிக் கதை – கரிய மூக்கு புத்தர்

    ஒரு பெண் புத்தத் துறவி தன்னொளி பெறுவதற்காக அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். அவள் தங்கத்தால் வெகு அழகாக புத்தச் சிலை ஒன்றினைச் செய்தாள். எங்கு சென்றாலும் அந்தச் சிலையைக் கூடவே எடுத்துச் செல்வாள்.

    நாட்கள் கடந்தன. அப்படியே நடந்து கொண்டிருந்தவள், அமைதியான ஆனால் இயற்கை அழகுடன் இருந்த ஒரு கிராமத்திற்கு வந்தாள். அங்கு இருந்த சிறிய புத்தக் கோயிலை மிகவும் பிடித்து விட்டது. அங்கேயே வசிப்பது என முடிவெடுத்தாள். அந்தச் சிறிய கோயிலில் பல புத்தர் சிலைகள் இருந்தன.

    தன்னுடைய தங்கச்சிலைக்கு நறுமணப் பொருட்களை (சாம்பிராணி, ஊதுவத்தி) எற்றி வைக்க ஆசைப் பட்டாள். ஆனால் அந்த சின்னக் கோயிலில் இருந்த மற்ற புத்த விக்கிரங்களுக்கு தன்னுடைய நறுமணப் பொருட்கள் செல்லக் கூடாது என முடிவெடுத்தவள், அதற்காக ஒரு கூம்பு வடிவினால் ஆன புனல் ஒன்றினைத் தயாரித்தாள். சாம்பிராணி ஏற்றியதும், அது அவளுடைய புத்த விக்கிரத்திற்கு மட்டுமே போகும்படி செய்தாள். சாம்பிராணியும் புத்தரின் முகத்திற்கு அருகில் மட்டுமே சென்றது. ஆனால் கொஞ்ச நாட்களில் தங்க புத்தரின் மூக்கு கறுத்துப் போய் மிகவும் அசிங்கமாகிவிட்டது

  • காவியக் கவிஞர் – பகுதி 1

    ”மனதின் சாராம்சம் நிரந்தரமான தூய்மையை கொண்டதாக இருந்தாலும், அறியாமையின் தாக்கம் சூழல்-சார் மனதை சாத்தியமாக்குகிறது. சூழல் சார்ந்ததாக இருந்தாலும், மனம் நிரந்தரமானது ; மாசுமறுவற்றது ; சுத்தமானது ; மாற்றங்களுக்கு உட்படாதது. அதனுடைய மூல இயல்பு பிரத்யேகத்தன்மையில்லாமல் இருப்பதால், பல்வேறு முறையிலான இருப்பை எங்கும் சிருஷ்டி செய்தவாறு இருந்தாலும், அது தனக்குள் ஒரு மாற்றமுமிலாமல் தன்னை உணர்கிறது.

    விஷயங்களின் ஒட்டுமொத்தத்தின் ஒற்றைத் தன்மை ஏற்கப்படாத போது, பிரத்யேகத்தன்மையுடன் கூடிய அறியாமை எழுகிறது ; சூழல்-சார் மனதின் எல்லா நிலைகளும் வளர்கிறது. இக்கோட்பாட்டின் முக்கியத்துவம் ஆழமானது ; புத்தர்களைத் தவிர யாராலும் புரிந்து கொள்ள இயலாதது.” (more…)