காலைத் தேனீர் – கவிஞர் றியாஸ் குரானா

நண்பர் றியாஸ் குரானாவின் கவிதைகள் ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு அர்த்த தளத்திற்கு இட்டுச்செல்லும் வல்லமை பொருந்தியவை. சமீபத்தில் அவருடைய வலைதளத்தில் (http : maatrupirathi.blogspot.com) கீழ்க்கண்ட கவிதையை படித்து மிகவும் ரசித்தேன். 

காலைத் தேனீர்

றியாஸ் குரானா

காலாவதியாகிப்போன நாளொன்றின்
காலைப் பொழுதிற்காக
காத்திருக்கிறேன்.

கடந்தது மீள வராது

ஆயினும்
நான் சந்தித்தேயாக வேண்டும்

அந்திப் பொழுதிலிருந்து
பின்நோக்கி நடக்கிறேன்

அல்லது சிந்திக்கிறேன்

கொஞ்ச நேரம்
எதுவும் தெரியவேயில்லை

அது எனது பகல் தூக்கம்

பின்னோக்கி வருவதுபோல்
பாவனை செய்தபோதும்
திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்

;காரணம்

கனவில் அவள் தந்த கடிதத்தை
வாங்கிச் செல்கிறாள்

அதுபோல இருந்தது

அதுதான் நிகழ்ந்தது

பின்னோக்கி வரும்போது
தந்தது வாங்கியதாக மாறிவிடும் அல்லவா

மன்னியுங்கள்
மீண்டும் சிந்திக்கலாம்

உச்சி வெயில்

சூட்டை அதிகரிக்கும்
ஆடைகளை உடுத்துகிறேன்

நிலத்தினுள் இறங்கிவிட்ட,
நான் குளித்த நீரையெல்லாம்
கிணற்றுக்குள் ஊற்றுகிறேன்

தலைமயிர்களுக்குள் தங்கிய ஈரமும்
வடித்தெடுக்கப்படுகிறது

சந்தையிலிருந்த மிகவேகமாக
சைக்கிளை பின்நோக்கிச் செலுத்துகிறேன்

எல்லோரும் என்னை அதிசயமாகப் பார்த்தபடி
முன்னோக்கிச் சென்றுகொன்டிருக்கின்றனர்

ஏனெனில், அவர்கள்
கடந்துபோன காலைப்பொழுதை சந்திக்கும்
முயற்ச்சியில் இறங்கவில்லை

முதல்முறை சந்தைக்கு போகும்போது
நானும் அவனும்
அருகருகே பேசிக்கொண்டு போனோம்

இப்போது நாங்கள் தனியே பேசிக்கொண்டு
அவன் முன்னோக்கியும்
நான் பின்நோக்கியும் விரைகிறோம்

சரியாக வீட்டில் வந்து நின்றது

பறவைகளின் ஒலிகள்
வெளியில் பரபரப்பாக இருக்கின்றன

தற்போது காலைப்பொழுது

இனி முன்னோக்கிப் பயணிக்கலாம்

ஆவிபறக்க
தேனீர் அருந்திக் கொண்டிருக்கிறேன்

இந்தத் தேனீரைத்
தவறவிட்டதனால்,

ஒரு பகற்பொழுதை
முன்னோக்கியும் பின்னோக்கியும்
கடந்துசெல்ல வேண்டிவந்தது

இரண்டுமுறை.

நன்றி : றியாஸ் குரானா

சுட்டி : http://maatrupirathi.blogspot.in/2012/03/blog-post.html

அறை முழுதும் அரவங்கள்

சிறுவயதிலிருந்தே நாகசொப்பனம் கண்டு அச்சத்தில் பலமுறை தூக்கம் விழித்திருக்கிறேன். சிறுவயதில் பாம்புக்கனவு வந்து தூக்கத்தில் கத்தினால், என் தாய்க்கு பக்கத்தில் தூங்கக்கிடைக்கும். வாலிபனான பிறகுகூட பாம்புக்கனவுகள் தொடர்ந்தன. இளமையில் காம உணர்ச்சி மிகுந்திருப்பதால் பாம்புக்கனவு வரக்கூடும் என்று சொன்னார்கள். ஒரு ஜோசியன் ஏன் ஜாதகத்தை பார்த்துவிட்டு, "உங்கள் கண்ணுக்கு நாக தரிசனம் அடிக்கடி கிடைத்து கொண்டிருக்கும்" என்றார். அவை கனவு தரிசனங்களா ? அல்லது நிஜ தரிசனங்களா? என்று தெளிவு படுத்தவில்லை. திருமணமான பிறகும் பாம்புகள் கனவில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. இப்போதெல்லாம் பாம்புகள் வருவது வெகுவாக குறைந்துவிட்டது.

சிறுவயதிலும் இளம் வயதிலும் பாம்புகள் கனவில் பயமுறுத்தும். ஆனால் பொதுவாக ஒற்றை பாம்பு தான் வரும். திருமணமான பிறகு வந்த கனவுகளில் பாம்புகள் ஏராளமாக வரும். நானிருக்கும் ஓர் அறையின் எல்லா அறைகலனிலும் ஒவ்வொரு பாம்பும் படமெடுத்து நிற்பது போன்ற கனவுகள். சாதுவாக படமெடுத்து நிற்கும். சாந்த சொருபமாக த்யானத்தில் ஈடுபடுபவை போல தோற்றமளிக்கும். அல்லது என் தூக்கத்தில் வரும் கனவுக்குள் நுழைந்து அவைகள் படமேடுத்தபடியே உறங்குகின்றனவோ? நான் பயத்தில் வியர்த்திருப்பேன். சப்தநாடியும் ஒடுங்கியிருக்கும். கனவிலிருந்து விடுபட்டவுடன், அந்த பாம்புகளின் சாந்தசொருபத்தை இன்னும் கொஞ்சநேரம் பார்த்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றும்.

இப்போதெல்லாம் பாம்புக்கனவுகள் அதிகமாக வருவதில்லை. கடைசியாக வந்த பாம்புக்கனவில், நான் பாம்புகளோடு பேசிக்கொண்டிருப்பது போல வந்தது.

உண்மையாக சொல்லப்போனால், பாம்பை அதன் இயற்கை சூழ்நிலையில் இதுவரை நான் பார்த்ததில்லை. பாம்புப்பண்ணைகளிலும், விலங்குகள் சரணாலயங்களிலும் தூர நின்று பார்த்திருக்கிறேன். இயற்கை சூழ்நிலையில் பார்த்தால் பயந்துபோவேன் என்றுதான் நினைக்கிறேன். இரவு நேரங்களில் கழிவறையில் சிறுநீரோ மலமோ கழிக்கும்போது "பாம்பு இந்த கழிவறையில் நுழைந்தால் என்ன செய்வது?" என்ற சிந்தனை தோன்றி என்னை சில்லிட வைக்கும். நேரிடையாக தோன்றாமல், நினைத்த மாத்திரத்தில் நெஞ்சில் பயமுட்ட வல்ல ஒரே ஜந்து பாம்புதானே!

சில வாரங்களுக்கு முன் தென்னிந்தியாவில் உள்ள சுற்றுலாத்தலமொன்றில் ஐந்து நட்சத்திர ஓட்டலோன்றில் காபி பருகிக்கொண்டிருந்தேன். எனக்கு பக்கத்து மேசையில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த இளம் தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு வயதான மகனுடன் அமர்ந்து உணவு உண்டுகொண்டிருந்தனர். மகன் மேசையைச்சுற்றி ஓடிக்கொண்டு விளையாட்டு காட்டிகொண்டிருந்தான். ஒரு சமயத்தில் கால் தடுக்கி விழப்போனபோது, அவனை தாங்கி நான் பிடித்தேன். பின்னர், நன்றியுணர்ச்சியுடன் என்னை அவர்களுடன் சேர்ந்தமர அழைத்தார்கள்.

ஜிம் வட ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் நகரை சேர்ந்தவர். ஜிம்மின் மனைவி – எலிசபெத்தும் டார்வின் நகரை சார்ந்தவர். அவர்களிருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னர், அவர்கள் நடத்தும் நிறுவனத்தின் கிளையை இந்தியாவில் துவங்கும் நோக்கத்துடன் வந்தனர். இந்தியாவில் ஒரிரு வருடம் வசிக்கும் எண்ணமிருந்தது. சுற்றுலாத்தலத்தையொட்டிய சிறு நகரத்தில் சொகுசு பங்களாவொன்றை வாடகைக்கு எடுத்திருந்தனர்.

பங்களாவின் உரிமையாளர் அந்த வீட்டின் ஒரறையை மட்டும் பூட்டி வைத்திருந்தார். பழைய தட்டுமுட்டு சாமான்களும், பரம்பரை அறைகலன்களும் உள்ளேயிருந்தன. அறைகலன்களோடு குடியிருந்த பாம்புகளைப்பற்றி யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை. ஒரு நாள், சமையலறையில் தேநீர் தயாரிக்க வந்த ஜிம் கேஸ் அடுப்புக்கு கீழ் படுத்திருந்த பாம்பை பார்த்தார். தொலைக்காட்சியில் வரும் வனவிலங்குகள் பற்றிய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் பார்க்கும் ஜிம் படுத்திருந்த பாம்பைக்கண்டு “த்ரில்” ஆனார். ஒரு குச்சியின் உதவியுடன், லாவகமாக பாம்பை எடுத்து, கொல்லைப்புறத்தில் உள்ள மதிலுக்கு வெளியே இருந்த வயல் பகுதிக்குள் எரிந்தார். கிட்டத்தட்ட இரு நாளைக்கு ஒருமுறை பாம்பை எடுத்து வெளியே எறியும் பயிற்சி நடந்தது. சில நாட்களுக்கு பிறகு, படுக்கையறையின் தரையில் ஒரு பாம்பு காணப்பட்டது. அப்பொது, ஜிம்மின் மகன் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தான். எலிசபெத் தோட்டக்காரனை அழைத்து, அந்த பாம்பை அப்புறப்படுத்தினாள்.

பாம்பின் வரவு பெருக ஆரம்பிக்கவே, ஜிம் வீட்டின் உரிமையாளரை அழைத்து பூட்டியிருந்த அறையை திறக்க வைத்தார். திறந்த அறைக்குள், அவர்கள் கண்ட காட்சி படு பயங்கரமாக இருந்ததாம்…..கிட்டத்தட்ட நாற்பது – ஐம்பது நாகங்கள் அந்த அறைக்குள் காணப்பட்டன. வீட்டுக்காரர் வாயடைத்துப்போனாராம்…..பல வருடங்களாக பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த அந்த அறையின் ஃப்ளோரிங்கை மாற்றும் பேச்சு வந்த போதெல்லாம், கஞ்சத்தனப்பட்டு தட்டிக்கழித்து வந்தது மிகப்பெரும் தவறுதானென ஒப்புக்கொண்டார்.

ஜிம்மும் எலிசபெத்தும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்ததன் பிண்ணனி இதுதான். வேறு ஒரு பங்களா கிடைக்கும் வரை தங்கியிருப்பார்கள். ”வீட்டு சாமான்களை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். ”சாமான்களை வேறு வீடு வாடகைக்கு கிடைத்த பிறகே போய் எடுத்து வர வேண்டும்?” என்றார் ஜிம். ”சாமான்களை எடுக்கப்போகும் போதும் பாம்புகள் அங்கு இருக்குமா?” என்று கேட்கலாமென்று பார்த்தேன் ; கேட்கவில்லை.

அன்று இரவு கனவில் மீண்டும் பாம்புகள் விஜயம் செய்யும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பாம்புக்கனவு வரவில்லை. நீண்டதொரு ரயிலில், பெயர் தெரியாத ஒர் இடத்திற்கு போவது போல் கனவு கண்டேன். கனவில் ரயில் பாம்புப்புற்றுகள் நிறைந்த ஒர் இடத்தை தாண்டி சென்றது. பாம்புகளெதுவும் புற்றிலிருந்து எட்டிப்பார்க்கவில்லை.

ஒன்று அறிய ஆசை. நிஜம்மாகவே, பாம்புப்புற்றுகளில் பாம்புகள் வாழ்கின்றனவா?

ஒரு குட்டிக்கதை

புறநகரின் ஆள் அரவமில்லாத மாளிகையொன்றில் அரவங்கள் புகுந்து மொய்த்தன. மாளிகைவாசிகள் குலை நடுங்கி வெளியெறினர். பாம்பு பிடிக்கும் மனிதர்களை கூட்டி வந்தனர். பாம்புகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே நடந்த யுத்தத்தில் ஒவ்வொரு உயிரிழந்த பாம்புக்கும் ஒன்றன் பின் ஒன்றாக பாம்புகள் வந்து கொண்டேயிருந்தன. மனிதர்கள் சோர்வுற்று இறுதியில் அம்மாளிகையை பாம்புகளின் ஆலயமாக ஆக்கினர். ஆலயம் என்றாலும் பக்தர்களெல்லாரும் தூர நின்றே தரிசிப்பார்கள். பின்னர் புராணக்கதைகள் புனையப்பட்டு அவ்வாலயம் பெயரும் புகழும் பெற்றது.

மாளிகையையொட்டி பூ விற்கும் கடைகள், அர்ச்சனை தட்டு விற்பவர்கள், பக்தர்களின் உடைமைகளை பாதுகாப்பவர்கள் என்று பலருக்கும் வயிறு நிறைந்தது. நெரிசல் அதிகமாகி, வெளிச்சம் அதிகமாகி… பாம்புகள் ஆலயத்தை விட்டு அகன்றன. ஆலயத்தின் வாசலில் சில பாம்புகள் உயிரை விட்டன. தூர நின்று வழிபடும் பக்தர்களோ பாம்புகள் இல்லாத ஆலயத்தில் பாம்புகள் இருப்பதாக எண்ணி பாம்புத்தெய்வங்களை வழிபடுகின்றனர்.

பாம்பில்லாததோர் இடத்தை ஆலயமாக தொழுவது பகுத்தறிவன்று என்று சொல்லி ஒரு சாரார் கொடிபிடித்தனர். அவர்கள் குரலோங்க பாம்பாலயத்தை தொழுவது நின்றது. மாளிகை வாசிகளின் வழித்தோன்றல்கள் திரும்பி வந்து புனருத்தாரணம் செய்து வசிக்கத்துவங்கினர். வீட்டின் பின்னே ஒளிந்திருந்த குட்டிப்பாம்பை வளர்த்தனர். அங்கு இப்போது பாம்புகளின் சரணாலயம் இருக்கிறது. நூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் அங்கு வேலை செய்கின்றனர். இப்போது அந்த மாளிகையில் பாம்புகள் – மனிதர்கள் இருவரும் வாழ்கின்றனர்.

+++++

என்னை மிகவும் கவர்ந்த பாம்பு பற்றிய கவிதையொன்றை கீழே தருகின்றேன்.

கவிதையின் தலைப்பு : பேட்டி***

எழுதியவர் : எம் டி முத்துகுமாரசாமி

கிடா விழுங்கும் மலைப்பாம்பல்ல
நான் என அறிய
வீசினால் தண்ணீர்
அடித்தால் செத்தது
தாண்டினால் பழுது
கக்கினால் ரத்தினம்
கடித்தால் விடம்
சுருட்டினால்
பைந்நாகப் பாய்
விரித்தால்
சிவலிங்கக் குடை
தரிசித்தால்
தன் வாலைத் தானே கவ்வுமிது.

*** “நீர் அளைதல்”கவிதை தொகுதியிலிருந்து.

கவிதை தொகுதியைதரவிறக்க : https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0BzHCwqQ3UxT7ZDNmYjQ1YzctNTk1Ni00MjMyLThkODktNGNmOTYyYjMyMGNi&hl=en_US

அத்தி பூத்தது

யாரோ எழுப்பிவிட்டது போல ஆறு மணிக்கே எழுந்துவிட்டேன். வார நாட்களில் கூட ஏழரை அல்லது எட்டு மணிக்கு குறைவாக எழும்பிய ஞாபகம் இல்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்பதறைக்கு முன்னர் எழுந்ததாக சரித்திரமே இல்லை. இன்று என்னவோ சீக்கிரம் விழித்துவிட்டேன்.

இயற்கையின் அழைப்பு வரும்போது தூக்கத்திலிருந்து எழுந்து சிறுநீர் கழித்து பின்னர் படுக்கைக்கு திரும்பி தொடர்ந்து தூங்குதல் நிறைய நாள் நடந்திருக்கிறது. இன்றும் அப்படிதான் நினைத்தேன். சிறுநீர் கழித்தவுடன், என்ன தோன்றியதோ பற்பசையையும் பிரஷ்ஷையும் எடுத்து பல் துலக்கினேன். பல் துலக்கிவிட்டேனென்றால், அந்த நாள் துவங்கிவிட்டது என்று அர்த்தம்.

மனைவி போர்வையால் முகத்தை மூடி உறங்கிக்கொண்டிருக்கிறாள். குழந்தைகள் அவர்களின் அறையில் தூங்கிக்கொண்டிருந்தார்கள். கைத்தொலைபேசியில் மின்னஞ்சல்கள் ஏதாவது வந்திருக்கிறதாவென பார்த்தேன். ட்விட்டரில் முகம் தெரியாத நண்பர்களுக்கு காலை வணக்கம் சொன்னேன். அப்புறம் என்ன செய்வது என்று தெரியவில்லை. இதற்குத்தான், தினமும் சீக்கிரம் எழுந்து பயிற்சி இருக்கவேண்டும்.

இன்று புத்தாண்டின் முதல் நாள். வாழ்த்து சொல்கிறேன் பேர்வழியென்று மனைவியை எழுப்பலாமா என்று யோசித்தேன். அதற்கு வாய்ப்பு இல்லை. நள்ளிரவு வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்பார்த்துவிட்டு “ஹாப்பி நியு இயர்” சொல்லிவிட்டுதான் தூங்கினோம்.

குழந்தைகளை எழுப்பினால், இன்று பள்ளி லீவு பின்னர் ஏன் சீக்கிரம் எழுந்துகொள்ளவேண்டும் என்று கடுப்புடன் ஒரு லாஜிக் சொல்லிவிட்டு போர்வை இழுத்து போர்த்திக்கொள்வார்கள்.

வீட்டின் நிசப்தத்தை தொலைக்காட்சியை போட்டு குலைக்க எனக்கு மனமில்லை. இத்தனை ”அதிகாலை” யாருக்கும் தொலைபேசியில் பேசி பழக்கமில்லை. தொலைபேசியில் நண்பர்களுக்கு “ஹாப்பி நியு இயர்” சொல்ல மதியம் 12மணி வரை காத்திருக்கவேண்டும்.

யோசனையை நிறுத்தும்படி, ஒரு கைத்தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. இவ்வளவு சீக்கிரம் யார் போன் செய்கிறார்கள்? என் அம்மாதான் பேசினாள். அவளின் பிறந்த நாள் வாழ்த்துகளை தூங்கும் குரலில் பேசி ஏற்றுக்கொண்டே பழக்கமாகிப்போன எனக்கு, இன்று விழிப்புடன் பேசுவது த்ரில்லாக இருந்தது. “ஏண்டா ரொம்ப நாளாக போன் செய்யவில்லை” என்ற வழக்கமான பாட்டை பாடினாள், “வேலைப்பளு தான் காரணம்” என்று சொன்னேன். புத்தாண்டின் முதற்பொய்.

போனை வைத்த பிறகு, பொய் சொன்ன பாரத்தோடு இருந்தேன். பின்னர், பாதி படித்து வைத்திருந்த நாவலை படிக்க முயன்றேன். முடியவில்லை. நாவல் படிப்பது என்றால், இரவுத்தூக்கத்துக்கு முன்னர் என்று ஆகிவிட்டது. மற்ற நேரங்களில் எதுவும் படிப்பது இல்லை.

எட்டு மணிவாக்கில் மனைவி எழுந்திருப்பாள். பின்னர், காபி கிடைக்கும். குழந்தைகள் எழுவார்கள். அவர்களுடன் கொஞ்ச நேரம். பின்னர், தொலைக்காட்சி உயிர் பெறும். செய்தித்தாள்களின் பக்கங்கல் புரட்டப்படும். குளிக்காமலேயே மதியவுணவு. பின்னர் குளியல். அதற்குள், சாயந்திரமாகிவிடும். யோசிக்கும்போது, ஒரு மிஷின் மாதிரி, ஒரே மாதிரி என் ஞாயிற்றுக்கிழமைகள்.

இன்றாவது, சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல இயங்காமல், பிரக்ஞையோடு ஏதாவது உருப்படியானவற்றை செய்யவேண்டும். அம்மாவிடம் பொய் சொல்லி புத்தாண்டின் முதல் தினத்தை துவங்கியாயிற்று. இல்லை. போக்கை விரும்பும்வகையில் மாற்றிக்கொள்ளும் ஆற்றல் என்னிடமிருக்கிறது. என்ன செய்யலாம்?

ஹும்ம்ம்….என் மனைவி எழுவதற்குமுன்னர், காபிக்கு டிகாக்‌ஷன் போட்டு வைக்கப்போகிறேன்…..

புத்தாண்டு வாழ்த்துகள்!……….

நண்பனின் மரணம்

மும்பையில் என் நண்பன் – நினாத் – உயிரிழந்துவிட்டான். பூனாவிலிருந்து இன்னொரு நண்பன் போன் செய்துசொன்னான். எதாவது வம்புக்காக மட்டும் போன் செய்து கொஞ்சம் "போர்"அடிக்கும் பூனா நண்பனின் தொலைபேசி அழைப்பை நிறைய நேரம் எடுக்காமல் இருந்திருக்கிறேன். இன்று நான் அப்படி செய்யவில்லை. எடுக்காமல் விட்டிருக்கலாமோ? இல்லை இன்று என்றில்லை, நினாத் (Ninad) தின் மரணச்செய்தி எப்போது எட்டியிருந்தாலும், இன்றைய மாலையில் எனக்குள் ஏற்படுத்திய அதே அதிர்ச்சியை மாறாமல் தந்திருக்கும்.

இறக்கும் வயதல்ல நினாத்துக்கு. 35 வயதுதான் ஆகியிருக்கும். அவனின் அழகான சிரிப்பு அவனது இம்மியளவு கூட தீங்கற்ற மனப்பாங்கை பிரதிபலிக்கும். களங்கமற்ற குழந்தை மனதுதான் அவனுக்கு என்பது மிகையில்லாத வருணனை. அவனை தெரிந்தவர்கள் எல்லாரும் இதை ஒப்புக்கொள்வார்கள்.

ஐந்து வருடங்கள் நானும் நினாதும் சேர்ந்து ஒரே நிறுவனத்தில் பணி புரிந்தோம். கல்லூரியிலிருந்து வெளிவந்து வேலையில் சேர்ந்த வாலிபனாக அவனை நான் அறிவேன். நிறுவனத்தில் திடீரென்று பெருந்தலைகள் வேலையை விட்டபோது, நாங்கள் இருவரும் ஒரே அணியில் இணைந்து இரவு பகல் என பேரார்வத்துடன் பொறுப்புடன் பணிபுரிந்த தினங்கள் எனக்கு ஞாபகமிருக்கிறது.

நிறுவனத்தலைவர் மேல் அவ்வப்பொழுது எழும் வெறுப்பை இருவரும் மதியவுணவு சேர்ந்து உட்கொள்ளும்போது பகிர்ந்துகொள்வது வழக்கம். அப்போதெல்லாம், நினாத் புன்னகை வழிய "நீ சொல்லு…நாளைக்கே இருவரும் சேர்ந்தே வேலையை ரிசைன் பண்ணிவிடுவோம்" என்று சொல்வான். அப்போது அவன் திருமணமாகாத பிரம்மச்சாரி. எனக்கோ இருகுழந்தைகள் பிறந்திருந்தன. எனவே இந்த சம்பாஷணை ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே என்று இருவருமே அறிந்திருந்தோம். வேடிக்கை என்னவென்றால், அவன் நகைச்சுவைக்காக சொன்னது உண்மையாகவே நடந்தது. ஜூலை 2008 இல் எங்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் வேறு நல்ல வேலை கிடைத்தது. எனக்கு தில்லியில். அவனுக்கு பெங்களூரில். ஒரேசமயத்தில் ராஜினாமா கடிதத்தை தந்தபோது, "என்ன பேசிவைத்துக்கொண்டு ராஜினாமா செய்கிறீர்களா?" என்று நிறுவனத்தலைவர் கேட்டார். அறையிலிருந்து வெளிவந்ததும், நானும் அவனும் சேர்ந்து பலநிமிடங்கள் சிரித்தோம்.

நாங்கள் வேலை மாறிய பிறகு எங்கள் தொடர்பு இன்னும் வலுப்பட்டது. எங்கள் புதுவேலைகளின் அவஸ்தைகள், போராட்டங்கள் எல்லாம் நீண்ட தொலபேசியுரையாடல்களில் பரிமாறிக்கொண்டிருப்போம். முன்று வருடங்கள் முன்னர் அவனின் திருமணம் நடந்தது. அலுவலகப்பணி தொடர்பாக ஓர் அயல்நாட்டு விஜயம் மேற்கொண்டதால், அவனுடைய திருமணத்துக்கு போகமுடியவில்லை. பின்னர் அவனுடைய நிறுவனம் அவனை மும்பைக்கு இடமாற்றம் செய்யச்சொன்னது. அலுவலகப்பணிக்காக எப்போது மும்பை சென்றாலும், நினாதும் நானும் எங்களுடைய வாடிக்கையான காபி ஷாப்பில் மணி நேரங்கள் உட்கார்ந்து அரட்டை அடிப்பது வழக்கம். கடைசியாக அவனை சந்தித்தது அக்டோபர் 2010 இல். அவனுடைய இரண்டு மாதக்குழந்தை -ஆரவ்-வை தூக்கிக் கொஞ்சியதை இப்போது நினைக்கும்போது நெஞ்சுக்குழியில் இனம்புரியா சங்கடம்.

நண்பா, உனக்கேன் அவசரம் ! வாழ்வை நகைச்சுவை, ரசனை, கும்மாளம் என்று வாழத்தெரிந்த உனக்கு, இவ்வளவு சீக்கிரமாக உலக வாழ்வை நீங்கும் அவசரம் ஏன்? பக்தி (நினாத்தின் இளம் மனைவி) யையும் ஆரவ்-வை யும் நினைத்தால், உன் மரணத்தின் மேல் கண்ணீரோடு, கோபமும் சேர்ந்து வருகிறது. கொடூரமான மரணத்தின் செயல் முறைகளை புரிந்துகொள்ளமுடியவில்லை.

சிரிக்க முடியுமான்னு பாருங்க

‎”அந்த எழுத்தாளர் எழுதறது ஒண்ணும் புரிய மாட்டேங்குதே, ஏன்?”

“Facebook-ல ஸ்டேடஸ் மெசேஜ் போட்டு எழுதப்பழகினாரு இல்லையா…அதனால..”

+++++

பஸ்ஸில் பயணி நடத்துனரிடம் : “விடுதியில் வண்டி நின்னப்போ சீட்டில் கழட்டி வச்ச செருப்ப யாரோ திருடிட்டு போயிட்டாங்க”
நடத்துனர் : “செருப்ப கழட்டிட்டு ஏன்யா பஸ்-லேர்ந்து இறங்கினிங்க?”

பயணி : “கல்யாணத்துல அடிச்ச செருப்புக்கு கைப்பையுமா கூட கெடைக்கும். கால்-ல போட்டுகிட்டுதான் செருப்பு தைக்கறவர் கிட்ட போயி வித்துட்டு வந்தேன்”

+++++

கையில் சிறு பெட்டியுடன் ரயிலில் ஏறினார் அவர். வண்டி லேசாக நகர ஆரம்பித்த பிறகுதான், தாம் தவறான ரயிலில் ஏறியிருக்கிறோம் என்பது புரிந்தது. உடனே பெட்டியை ஜன்னலிலிருந்து எரிந்து விட்டு,அவர்
படியிலிருந்து குதிக்கத் தயாரானார். அப்போது ரயிலுக்குள்ளிருந்த பிச்சைக்காரன் ஒருவன் அவரை ரயிலுக்குள்ளே இழுத்து விடுகிறான்.

பிச்சைக்காரன்: “இங்கேயே விழுந்தா உயிர் போகாதுயா..ரயில் போலீஸ் காப்பாற்றி, ஜெயிலுக்குள்ள வச்சுடும்”

பிரமுகர் மலங்க மலங்க விழித்து “பெட்டி..பெட்டி” என்று கத்தினார்.

பிச்சைக்காரன் : “யோவ்..நீ சாகவே இல்லன்னா சவபெட்டியெல்லாம் தேவைபடாதுய்யா”

பிரமுகர் : ஐயோ..பெட்டில பத்துலட்சம் ரூபா இருக்குதே”

பிச்சைக்காரன் : “தற்கொலை பண்ணிகரதுக்கு முன்னால உயில் எழுதி வச்சிட்டு வரலையா? பசங்க சண்டை போட்டுக்கபோறாங்க”

பிரமுகருக்கு மார்வலி வந்துவிட, மயக்கம் போட்டு விழுந்தார்.

பிச்சைக்காரன் : “முன்ஜாக்கிரதையான ஆளுய்யா..குதிச்சாலும்
தப்பிசுருவோம்னு தூக்க மாத்திரைய ஏற்கெனவே முழுங்கியிருக்கான்யா”

+++++

பையன் : “சேவல் கூவும், மயில் அகவும் – னு புத்தகத்துல சொல்லி
இருக்கு…ஆனா அப்பா கத்துவாரு அப்படின்னு எழுதலையே?”

அம்மா : “அப்படின்னா குரங்கு கத்தும்-னு போட்டிருக்கும் பாரு

+++++

“ஊருக்கு போகலாம்னு பஸ் பிடிக்க கெளம்பினா, பாதைல பூனை குறுக்கே போகுது சார்!..அதனாலே வீட்டுக்கே திரும்பி வந்துட்டேன்”
“அந்த பூனைக்கும் போன காரியம் ஆகலே…”
“என்ன கிண்டலா? ”
“உங்களை தாண்டி நாலடி போனதும், கிரிக்கெட் பால் பட்டு இறந்து போனதைத்தான் என் திண்ணைலர்ந்து மத்தியானம் பார்த்தேனே…சந்தைக்கு போகலாம்னு பார்த்தேன்..உங்களை பார்த்துட்டேன்…ஒங்களோட சேர்ந்தே வீட்டுக்கு திரும்பிப்போயிடறேன்”

+++++

“கொடுத்த கடன் திரும்பி வரலன்னா, என்ன பண்றது?”
“திரும்பி வந்தா என்ன பண்ணுவீங்க?”
“பணத்தை safe-ஆ வங்கி-ல போட்டுட்டு ஹாய்-யா மறந்துட வேண்டியது தான்”
“அதே மாதிரி, வராத கடனை வங்கி-ல போடாமலேயே மறந்துடுங்க…ஹாய்யா இருப்பிங்க”

+++++