Category: Translations

  • பிச்சைக்காரர்கள்————————-

    அந்தக் குவியலில் இருந்ததை
    நீ அறிந்திருக்கவில்லை
    அது பிச்சைக்காரர்களைக் கொண்டிருப்பதாய்
    ஒரு பார்வையாளன் கண்டான்
    அவர்கள் தமது உள்ளங்கைகளின்
    வெற்றிடத்தை விற்கிறார்கள்

    பார்வையாளனுக்கு அவர்கள்
    அழுக்கு படிந்த தமது வாயை காண்பிக்கிறார்கள்;
    அவர்களைத் தின்று கொண்டிருக்கும் சொறிவகையை
    (அவனால் முடியக்கூடிய) பார்வைக்களிக்கிறார்கள்

    அவர்களின் திரிந்த பார்வையில்
    அவனின் அந்நிய முகம் கோணுகிறது;
    தங்களின் சேர்க்கையில் அவர்கள் மகிழ்கிறார்கள்,
    அவன் பேசுகையில் அவர்கள் உமிழ்கின்றனர்.

    – Rainer Maria Rilke

    தமிழாக்கம் : அடியேன்

  • சிறு கல்லுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி – எமிலி டிக்கின்ஸன்

    சாலையில் தனித்து அலைந்து திரியும்
    இந்தச் சிறு கல்லுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி!
    தொழிற்கள் குறித்து கவலையின்றி,
    அவசரங்களைக் கண்டு பயப்படாமல் !
    அதன் தனிமப்பழுப்பு நிற உடையைத்தான்
    கடந்து செல்லும் இப்பிரபஞ்சமும் அணிந்துள்ளது.
    சூரியனைப் போல சுதந்திரமாக,
    இணைந்தோ அல்லது தனியே ஒளிர்ந்தோ,
    சாதாரண எளிமையில்
    முழுமையான ஆணையை நிறைவேற்றுகிறது


    எமிலி டிக்கின்ஸன்

  • ஆன்மாவைப் பற்றி

    இப்னு சினா-வின் அராபிய மொழிக் கவிதை(ஆங்கிலம் வழியே தமிழ் adaptation : அடியேன்).

    மேலிருந்து இங்கு வந்து இறங்கியது,
    அந்த விவரிக்கவியலா பரலோகப் புறா

    இந்த பாழடைந்த உலகின் அடையாளக் கம்பங்களுக்கும் வாசஸ்தலங்களுக்கும் நடுவில்
    தனது பழைய வீட்டை, அதன் அமைதியை நினைத்து அழுகிறது

    அடர்ந்த வலைகள் அதைத் தடுத்து நிறுத்துகின்றன
    கூண்டோ வலிமையானது!

    அதன் வீடு நோக்கிய பறத்தலின் நேரம் நெருங்கும் வரை,
    உயர்ந்த விசாலமான வானத்தைத் தேடுவதிலிருந்து
    அது முடக்கப்பட்டுள்ளது.

    அதன் பரந்த கோளத்திற்குத் திரும்ப வேண்டிய நேரம் இது,

    திரை விலக்கப்பட்டு, மகிழ்ச்சியுடன் முணுமுணுத்தவாறு
    விழித்திருக்கும் கண்களால் காண முடியாதவற்றை நோட்டம் விடுகிறது

    புகழ்க்கீதம் பாடி உயரங்களுக்குத் திரும்புகிறது
    உலகில் இருந்தவரை மறைக்கப்பட்டவைகளை உணர்ந்தவாறே திரும்பினாலும் அதன் உடையில் கறைகள் எதுவும் எஞ்சியிருக்கவில்லை.

    இத்தனை உயரத்தில் இருந்து அது ஏன் அவ்வாறு வீசப்பட்டது
    இருண்ட, மந்தமான, ஆழ்ந்த அடித்தளப் பள்ளத்திற்கு?

    ரம்ஜான்போஸ்ட் : 3/3/2025

  • வொஹு மனோ-வின் தூய்மை

    இனத்தின் தூய்மைக்கு
    மாறாக
    மனத்தின் தூய்மையையே
    நான் விரும்புகிறேன்

    அஹுரா மஸ்டாவின்
    அருளை இழப்பதைவிட
    மனிதர்களின் கோபத்தை
    எதிர்கொள்வது மேல்
    உலகம் முழுவதும்
    நாம் கண்டுபிடித்துவரும்
    பண்டைய நாகரிகங்கள்
    மனத்தின் தூய்மைக்கு
    நேரடி சாட்சி

    மனம் ஒரு வலைப்பின்னல்
    திரும்பத்திரும்ப
    ஒவ்வொரு வினாடியும்
    குறுக்கும் நெடுக்குமாக எண்ணங்கள்
    நல்ல எண்ணங்களை
    உலவ விடுங்கள்
    கெட்ட எண்ணங்களின்
    சுழற்சி இல்லாது போகட்டும்

    வெறுக்கத்தக்க எண்ணங்களில்
    எதிர்மறை உணர்ச்சிகளில்
    மனத் தூய்மை வீணாகியிருந்தால்
    ஒருபோதும்
    பண்டைய நாகரிகங்கள்
    கண்டுபிடிக்கப்பட்டிரா!


    Copyright ©2008 Farida Bamji

    Translation in Tamil : by the blogger

  • ஷிண்டோ

    சோகம் நம்மை
    ஆட்கொள்ளுகையில்
    நினைவுகளின், கவனத்தின்
    சின்ன சாகசங்களால்
    நாம் சில கணங்கட்கு
    காக்கப்படுகிறோம்:
    கனியின் சுவை, நீரின் சுவை
    கனவு நமக்குத் திரும்பித்தரும் முகம்,
    நவம்பர் மாதத்துவக்கத்தின் மல்லிகைகள்,
    திசைகாட்டியின் முடிவிலாத் தாபம்,
    தொலைந்துவிட்டதாய் நினைத்த புத்தகம்,
    லத்தின மொழிப் பாவகையின் சீர்,
    வீட்டைத் திறக்கும் சிறு சாவி,
    சந்தனம் அல்லது நூலகத்தின் வாசனை,
    ஒரு நிழற்சாலையின் பழமையான பெயர்,
    வரைபடத்தின் நிறங்கள்,
    சற்றும் எதிர்பாராத சொல்வரலாறு,
    மெருகேற்றிய நகம்,
    நாம் எதிர்பார்த்திருந்த சந்திப்பு,
    பனிரெண்டு முறை இருளில் கேட்கும் மணியோசை,
    நாம் எதிர்பார்க்காத உடல்வலி.
    எண்பது லட்சம் ஷிண்டோ தெய்வங்கள்
    நம் பூமியில் பயணித்தவண்ணம் இருக்கின்றன
    பணிவான அத்தெய்வங்கள் நம்மைத் தொட வருகின்றன
    தொடுகி்ன்றன, பின் சுற்றித் திரிகின்றன.

    - போர்ஹேஸ்

    (Translated from the English translation by Paul Weinfield)

  • பொருத்தம் பார்த்த குருவி – யஸுனாரி கவாபாடா

    —-

    சுய மகிழ்வுத் தனிமைக்கு நெடுங்காலமாய்ப் பழக்கப்பட்டுவிட்ட அவன் மற்றவர்களுக்குத் தன்னைத் தரும் அழகியலுக்காக ஏங்கத் தொடங்கினான். “தியாகம்” என்னும் சொல்லின் பெரும்பொருள் அவனுக்குத் தெளிவாயிற்று. மானுடம் என்னும் உயிரியின் வாழ்க்கையை கடந்த காலத்திலிருந்து எதிர் காலத்துக்கு எடுத்துச் செல்லும் ஒரே நோக்கம் கொண்ட ஒற்றை விதையாக தன்னுடைய சிறிய தன்மையை உணர்வதில் அவன் திருப்தியடையத் துவங்கினான். தாவரங்கள் தனிமங்கள் போன்ற பல்வேறு வகையினங்களுடன் சேர்த்து மனித இனம் என்பது இந்தப் பிரபஞ்சத்தில் மிதந்துலவும் ஒற்றைப் பரந்த உயிரமைப்பின் ஒரு சின்னத் தூண் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்ற எண்ணத்தின் மீதும், பிற விலங்குகள் மற்றும் தாவரங்களை விட அதிக விலைமதிப்பு ஏதும் அதற்கில்லை என்ற எண்ணத்தின் மீதுங்கூட அனுதாபங்கொள்ளத் தொடங்கினான்.

    “சரி”

    அவனுடைய மூத்த உறவினள் ஒரு வெள்ளி நாணயத்தைக் கண்ணாடி நிலையின் மேல் சுண்டினாள். பின், அதை தன் உள்ளங்கைக்குக் கீழ் அமிழ்த்திப் பிடித்துக் கொண்டு, தீவிரமான முகபாவத்துடன் அவனை உற்று நோக்கினாள். மந்தமான மனச்சோர்வான பார்வையை அவளின் வெள்ளைக் கரத்தின் மீது பதித்தான். “பூ” என்றான்.

    “பூ? இதற்கு முன் முதலில் நீ முடிவெடுக்க வேண்டும். பூ விழுந்தால் அந்தப் பெண்ணை மணந்து கொள்வாயா?”

    “மணக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம்”

    “ஆ….தலை!”

    “அப்படியா”

    “இது என்ன முட்டாள்தனமாக பதில்?”

    அவனுடைய உறவினள் சத்தம் போட்டுச் சிரித்தாள். அந்தப் பெண்ணின் புகைப்படத்தை கீழே எறிந்துவிட்டு அந்த அறையிலிருந்து எழுந்து சென்று விட்டாள். அவள் அதிகம் சிரிக்கக் கூடியவள். அவளின் தெளிவான சிரிக்கும் குரல் வெகு நேரம் ஒலித்தது. இது அவ்வீட்டு ஆண்களினுள் ஒரு விசித்திரமான விதத்தில் செவிவழிப் பொறாமையைக் கிளப்பியது.

    புகைப்படத்தை பொறுக்கியெடுத்து அவன் அந்தப் பெண்ணைப் பார்த்தான். இந்தப் பெண்ணை மணப்பது நல்லது என்று எண்ணினான். இந்த அளவு அவனால் நேசத்தை உணர முடிகிறதென்றால், தங்கள் தலைவிதியை மூத்த சகோதரர்களிடமும் தந்தைகளிடமும் ஒப்படைத்துவிட்டு அவனை மணக்க ஜப்பானில் நிறைய பெண்கள் தயாராக இருக்க வேண்டும். அது எத்தனை அழகான விஷயம் என்று அவன் எண்ணினான். அசிங்கம் என்பது தான் மட்டுமே…எண்ணத்திரியை இழந்தான், ஏனெனில் அற்பமான சுய பிரக்ஞை அவனுக்கு விழிப்புணர்வைத் தந்தது.

    “சரியாகச் சொன்னால், திருமணத் துணையைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு லாட்டரி மாதிரி. ஒரு நாணயத்தைச் சுண்டி முடிவெடுப்பது போன்றது” – அவனுடைய உறவுக்காரப் பெண் இதைச் சொன்னபோது, அவளுடைய உள்ளங்கைக்குள் இருக்கும் வெள்ளி நாணயத்திடம் தன் தலைவிதியை ஒப்படைப்பதில் அவன் உற்சாகமாகக் கூட உணர்ந்தான். ஆனால், அவள் அவனை வெறுமனே கேலி செய்கிறாள் என்பதை விளங்கிக்கொண்ட பின்னர், வராண்டாவின் விளிம்பில் இருந்த குட்டி ஏரியின் மீது அவன் தன் தனிமைப் பார்வையைத் திருப்பினான்.

    என்னுடைய மனைவியாக வேண்டியவள் வேறொருத்தியாக இருப்பாளென்றால், அவளின் முகம் நீரில் பிரதிபலிக்கட்டும் என்று ஏரியிடம் பிரார்த்தித்தான். கால, வெளியூடாக காண முடியும் என்று அவன் நம்பினான். அந்த அளவுக்கு அவன் தனிமையில் இருந்தான்.

    நீரின் மேற்பரப்பை உன்னிப்பாகப் பார்த்தபோது, கடவுள் எறிந்த கூர்மையான கருங்கல் ஒன்று அவனது பார்வைத் துறையில் சரிந்தது. இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்த ஒரு ஜோடிக் குருவிகள் கூரையிலிருந்து நீரில் விழுந்தன.

    “இது இப்படித்தானோ!” என்று முணுமுணுத்தான்.

    நீரின் மேற்பரப்பில் சலசலப்பு பரவி மீண்டும் அமைதி படர்ந்தது. மிக ஆர்வத்துடன் ஏரியை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். நீரின் அமைதியான மேற்பரப்பைப் போல அவனது இதயம் ஒரு கண்ணாடியாக ஆனது. திடீரென்று ஓர் ஒற்றைக் குருவியின் பிம்பம் அதில் தெரிந்தது. அந்தக் குருவி பாடியது. பாட்டின் அர்த்தம் இது தான்:

    “குழப்பத்தில் தொலைந்திருக்கும் உங்களுக்கு உங்களின் மனைவியாகப் போகும் பெண்ணின் உருவத்தை நான் காட்டினாலும் ஒரு வேளை நீங்கள் நம்பாமல் போகலாம். அதனால், உங்களின் அடுத்த பிறப்பில் உங்களின் மனைவியாகப் போகும் பெண்ணின் பிம்பத்தைக் காட்டுகிறேன்.”

    அவன் குருவியிடம் பேசினான், “குருவியே உனக்கு நன்றி. குருவியாக மறு பிறப்பெடுத்து அடுத்த ஜென்மத்தில் உன்னை நான் மணப்பேன் என்றால், இதோ இந்தப் பெண்ணையே இவ்வுலகில் மணந்துகொள்கிறேன். ஒருவன் அவனுடைய அடுத்த பிறப்பின் தலைவிதியைப் பார்த்துவிட்டான் என்றால், இப்பிறப்பின் இவ்வுலகில் அவன் இழக்கப்போவது எதுவுமில்லை. என் அடுத்த உலகின் அன்பான அழகான மனைவி எனக்கு இவ்வுலகில் எனக்கான திருமண முடிவை எடுத்திருக்கிறாள்”

    புகைப்படத்தில் இருக்கும் பெண்ணுக்கு தெளிவான மனதின் வாழ்த்துகளுடன் அவன் கடவுளின் பெருந்தன்மையை உணர்ந்தான்.


    யசுனாரி கவாபாடாவின் “உள்ளங்கைக் கதைகள்” தொகுப்பிலிருந்து

    ஆங்கிலம் வழி தமிழாக்கம் – கணேஷ் வெங்கட்ராமன்

  • மகாகருணை என்னும் தியானம்

    எனக்கு மிகவும் பிடித்த திக் நியட் ஹான் கவிதை. இக்கவிதையை வாசிக்கும் போது லோட்டஸ் சூத்ரா நம் நினைவில் வராமல் போகாது. அதில் வரும் ததாகதர் உரை போன்று ஒலிக்கிறது இந்தக் கவிதை. இந்தக் கவிதை வரிகளை கருணை பற்றிய தியானத்திற்கான காட்சி ஊக்கியாக மறைந்த ஜென் மாஸ்டரின் சீடர்கள் பயன்படுத்துவார்களாம்.


    இன்றிரவு முழு நிலவு என்பதனால்
    நட்சத்திரங்களை நம் பிரார்த்தனையில் அழைப்போம்
    பளீரென்ற ஒற்றைக் குவிய மனத்தினூடே
    தியானத்தின் ஆற்றல்
    இப்பிரபஞ்சத்தை அசைத்துக் கொண்டிருக்கிறது.

    அனைத்து வாழும் உயிர்களும்
    இன்றிரவு இங்கு குழுமியுள்ளன
    அச்சத்தின் சமுத்திரத்தினுள்
    இப்பூமி மூழ்குதலைக் காண்பதற்கு

    நடுஇரவு மணிச்சத்தம் ஒலித்தவுடன்
    பத்து திசைகளிலும் அனைவரும் தம் கைகளை பிணைத்து
    மகாகருணை எனும் தியானத்திற்குள் நுழைவர்

    வாழ்வின் காயங்களைத் துடைக்கும்
    தூய நீரைப் போன்று
    இதயத்திலிருந்து கருணை சுரக்கிறது

    மன மலையின் உயரங்களிலிருந்து
    புத்துயிர் தரும் தண்ணீர்
    அருவியாகப் பொழிந்து
    நெல் வயல்கள் ஆரஞ்சுப் புதர்கள் வழியே
    பாய்ந்து செல்லும்

    விஷப்பாம்பொன்று
    இவ்வமுதத்தின் ஒரு துளியை
    ஒரு புல் தாளின் நுனியிலிருந்து பருகுகிறது
    அதன் நாவிலிருந்து
    விஷம் மறைந்துவிடுகிறது

    மாரனின் அம்புகள்
    வாசமிகு மலர்களாக மாற்றம் கொள்கின்றன

    நோய் நீக்கும் நீரின்
    அற்புதச் செயல் திறன் –
    புதிரான பரிமாற்றம்!
    ஒரு குழந்தை அந்தப் பாம்பை
    அதன் கள்ளங்கபடமற்ற கரங்களில் ஏந்துகிறது

    புராதன தோட்டத்தில்
    இலைகள் இன்னும் பச்சை
    பனி மீது சிரிக்கும்
    மின்னும் கதிரொளி
    இன்னமும்
    புனிதவூற்றின்
    கிழக்கு நோக்கிய பாய்ச்சல்

    அவலோகிதனின் கையிலிருக்கும்
    சிறு கிளையோ
    அல்லது என் இதயமோ
    நோய் தீர்க்கும் நீர் ஒன்றே

    இன்றிரவு
    அனைத்து ஆயுதங்களும்
    நம் காலடியில் வந்து வீழும்
    தூசாக மாறும்

    ஒரு மலர்
    இரு மலர்கள்
    ஒரு கோடி மலர்கள்
    பச்சை வயல்களில் தோன்றும்

    என் பரிசுத்தக் குழந்தையின் இதழ் சிரிப்புடன்
    மீட்பின் வாயில் திறக்கும்

    திக் நியத் ஹான் – 1967

  • காலம் அவர்களை மாற்றிவிடுமுன் – கவாஃபி



    பிரிந்தபோது இருவருக்கும் மிக வருத்தம்
    இருவருமே அதை நாடவில்லை
    நிலவிய சூழல்தான் காரணம்
    பிழைத்தலுக்கான அவசியம் ஒருவரை
    வெகுதூரம் துரத்தியிருந்தது
    – அமெரிக்காவுக்கோ கனடாவுக்கோ
    அவர்களின் காதல் முன்பு போலிருக்கவில்லை
    ஈர்ப்பு மெதுவாக குறைந்து கொண்டு வந்தது
    ஈர்ப்பு வெகுவாக குறைந்தும் விட்டது
    எனினும், பிரிவிற்கு அது காரணமில்லை
    சூழல்தான் காரணம்- ஒரு வேளை
    அவர்களின் உணர்வு முழுக்க மறையுமுன்
    காலம் அவர்களை முழுதாக மாற்றிவிடுமுன்

    ஊழானது கலைஞனாகத் தோன்றி
    இருவரையும் பிரித்திருக்கலாம்
    ஒருவருக்கு மற்றவர் என்றுமே
    இருபத்தி நான்கு வயது அழகான இளம் வாலிபராகவே நினைவில் நிற்கவேண்டுமென்பதற்காக

  • ஞானியும் குடிகாரனும் – ரூமி

    ஓர் அச்சில் சுழலுமிப்பிரபஞ்சம்
    மேசையைச் சுற்றிச்சுழலட்டும் என் ஆன்மா
    ஒரு பிச்சைக்காரனைப்போல்
    நீள்வட்டத்தில் சுழலும் கோளைப்போல்
    அநாதியாய்
    சுதந்திரமாய்

    ராணியும் யானையும் கூர்மையாய் நகரும்
    சதுரங்கப்பலகையில்
    எனினும் உண்மையில் ராஜாவை மையங்கொண்டு
    வட்டமிடுகின்றன அவை

    காதல் உனது மையமெனில்
    உன் விரல்களில் மோதிரமிடப்படும்

    அந்திப் பூச்சியினுள்
    ஏதோவொன்று தீயினால் பண்ணப்பட்டுள்ளது

    ஞானியொருவன்
    தூய இன்மையின்
    அழிக்கும் முனையைத் தொடுகிறான்

    குடிகாரனொருவன்
    சிறுநீர் கழிப்பதை
    பாவமன்னிப்பாகக் கருதுகிறான்
    பிரபுவே, என்னிடமிருந்து
    அசுத்தங்களை எடுத்துவிடுங்கள்

    பிரபு பதிலளித்தார்
    முதலில் அசுத்தத்தின் இயல்பினைப்
    புரிந்துகொள்
    உனது சாவி வளைந்திருந்தால்
    பூட்டு திறக்காது

    நான் அமைதியானேன்
    அரசன் ஷம்ஸ் வந்து விட்டான்
    எப்போதும் நான் மூடும்போது அவன் திறக்கிறான்

  • கி மு 15-3-44

    பிரம்மாண்டம் ஜாக்கிரதை ஓ மனமே
    உன் இலட்சியங்களை விஞ்ச முடியாவிடில்
    தயக்கங்கலந்த முன்னெச்சரிக்கையுடன்
    அவற்றைப் பின்தொடர்
    முன்னகர்ந்து செல்லச்செல்ல
    மேலதிக விசாரணையும் கவனமும்
    உள்ளவனாய் நீ இருக்கவேண்டும்
    இறுதியில் ஜூலியஸ் சீஸரைப் போன்று
    உச்சியை அடையும்போதோ
    அத்தகைய புகழ்மிக்க மனிதனொருவனின்
    இடத்தை நீ பெறும்போதோ
    தமது பரிவாரங்கள் புடை சூழும் தலைவனைப் போன்று –
    தெருவில் செல்லும் சமயங்களில்
    அதிவிழிப்புடனிருத்தல் மிக அவசியம்
    சந்தர்ப்பவசமாக கும்பலிலிருந்து வெளிப்பட்டு
    கையில் கடிதத்துடன் அர்டெமிடோரஸ் உன்னை அணுகி
    "இக்கடிதத்தை உடனே படியுங்கள்
    உங்களை பாதிக்கும்
    தீவிர விஷயங்கள் இதில் உள்ளன" என்கையில்
    நிற்காமலிராதே
    காரியங்களையோ உரைகளையோ
    ஒத்திவைக்கத் தவறாதே
    உன்னை கும்பிட்டு தலைவணங்குபவர்களிடமிருந்து
    தலை திருப்பாமல் இருந்துவிடாதே
    – அவர்களை பின்னர் சந்தித்துக் கொள்ளலாம் !
    அமைச்சரவை கூட காத்திருக்கட்டும்
    உடனுக்குடன்
    அர்டெமிடோரஸின் எழுத்தை
    நீ வாசித்தேயாக வேண்டும்

    ( The ides of March – by Constantin Cawafy)