Category: Poems

  • பிரதிபலிப்பு


    மிருகக் காட்சி சாலையின்

    முகப்பில்

    கம்பீரமாக

    தசைகள் புடைக்க

    மிடுக்குடன்

    வீரமாக உறுமுவது போல

    நிற்கும் சிங்கத்தின் சிலை.

    கூண்டுக்குள்

    பிடறி எலும்பு தெரிய

    ரோமம் உதிர்ந்து

    பாவப் பட்ட பார்வையுடன்

    தரையில் போடப்பட்ட காய்ந்த புற்களை

    நக்கிக் கொண்டிருக்கும்

    நிஜச் சிங்கம்.

  • தொடர்பு

    வெகு காலமாக
    புரட்டப்படாத
    புத்தகத்தின் பக்கங்களுக்குள்
    கிடந்தது இலை
    பச்சை மங்கி
    வெண்மைப் பட்டுப் போன
    ஆனால் வடிவம் குன்றா
    அந்த இலையில்
    வாசம் தொலைந்திருந்தது
    பழைய புத்தகத்தின்
    வாசனையை விரும்பி முகர்கையில்
    இலையின் வாசமும்
    சேர்ந்து வந்தது.
    இலை கிடந்த பக்கத்தில்
    காணாமல் போயிருந்த
    எழுத்துகள் சில
    இலையில் பதிந்திருந்தன

  • வட்டம்

    சிதறிய
    மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு
    ஓடி வந்த நாயொன்றின் மேல்
    கல் வீசப்பட
    அது வள்ளென்று குரைத்தவாறு
    கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத
    ஜாடியின் உள்ளிருந்து விழுந்து
    சிதறிய
    மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு
    ஓடி வந்த நாயொன்றின் மேல்
    கல் வீசப்பட
    அது வள்ளென்று குரைத்தவாறு
    கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத
    ஜாடியின் உள்ளிருந்து விழுந்து
    சிதறிய
    மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு………
    ஆரம்பம் எது முடிவெது
    என்ற குழப்பத்தில்
    ரங்கராட்டினம் போல்
    ஒரு வட்டத்தில் இலக்கின்றி
    சுழன்று கொண்டிருந்த அது என்ன?
    எண்ணவோட்ட்மா? நினைவுப்பெருக்கா?.

    சுழன்று கொண்டிருந்த எண்ணத்தை
    அல்லது நினைவை
    நேர்படுத்துவதற்காய்
    இன்னொரு தளத்தில்
    செலுத்தும் போது
    இயந்திரக் கோளாறு
    காரணமாக
    விமானம் தரையிறங்குவதாக
    அறிவிப்பு.
    தரை தட்டும் முன்னர்
    நீர் தட்டியது.
    தலைகீழ் “ட” வடிவில்
    விமானத்தின் சிறகுகள் வளைந்து
    துடுப்பு போல இயங்கின
    மூழ்காத விமானம்
    நீரில் பேருந்தாக
    அசுர வேகத்தில்,
    வட்டப் பாதையில் ஓடியது
    வட்டத்திலிருந்து குதிக்காமல்
    கரையை அடைதல் சாத்தியமா?
    பதற்றத்துடன் நகர்ந்த
    காலத்துளிகளில்
    மாமிசத்துண்டுகளை திண்ண வந்து
    அடிபட்ட நாயின் அவஸ்தையுடனும்
    கண்ணாடி ஜாடியுள்ளிருந்து
    விழுந்த மாமிசத் துண்டுகள் போல
    எல்லா திக்குகளில் சிதறியும்
    ஒய்வற்று சுற்றியது.

    சடக்கென விழித்தெழுந்தது உடல் பிரக்ஞை.
    அடிவயிற்றில் ஒர் இறுக்கம்.
    கழிப்பறை சென்று
    விசையுடன் வெளிவரும் குழாய் நீரென
    சிறுநீரை கழித்து ஆசுவாசமடைந்த பின்னர்
    உறக்கத்தை நிம்மதியாய் தொடர்கையில்
    உடல்பிரக்ஞை மீண்டும் மாயமாய் மறைந்து
    சுழற்சிக்குள் நுழைந்து
    வண்ணத்துப்பூச்சி உருவில்
    ஒவ்வொரு மலராக
    உட்கார்ந்து உட்கார்ந்து
    நீள்வட்டப் பூப்பாதையில்
    போய்க் கொண்டிருந்தது..

    நன்றி : நவீன விருட்சம் (http://navinavirutcham.blogspot.in/2012/11/v-ganesh.html)

  • சாம்பல் நிறம்

    யதார்த்தத்தின் நிறம்.
    இருட்டு, வெளிச்சம் – இவற்றின்
    கலவை.
    களைத்துப் போன வானம்
    போர்த்திக்கொள்ளும் அமைதி.
    ஒளிரும் பகலை
    தன் கைகளால் தாழடைக்கும்
    இரவின் நிழல்.
    இளம் கருநிறச்சாயலில்
    மெல்ல கட்டவிழும் பதாகை.
    கனிந்த, முதிர்ந்த இசைக்குள் ஐக்கியமாகப் போகும்
    இளம் சுருதி.
    அதிரப் போகும் இடி மற்றும்
    பெய்யப் போகும் மழைக்கான அறிகுறி.
    சொற்களின் செயல்களின் நிறம்.
    கறுப்புமின்றி வெளுப்புமின்றி
    இரண்டுக்கும் நடுவிலான
    சாம்பல் நிறம் ; ஒப்புதலின் நிறம்.

    (பேராசிரியர் மாலதி மாதுர் எழுதிய ஆங்கில கவிதை – “Grey”- யின் தழுவல்)

    நன்றி : மாற்றுப்பிரதி (http://maatrupirathi.blogspot.in/2012/10/blog-post_9.html)

  • காதல் காலமும் காலமான காதலும்

    அவளின் உதடுகள் மூடியிருந்தும்

    அவள் சிரிப்பு காணக் கிடைக்கிறது.

    விழிகள் திறந்திருக்கின்றனவே !

    உறங்குகையிலும்

    அவளின் சிரிப்பு தொடருமோ

    என்றறிய ஆவல்

    எனது ஆவலை அவள் அறிந்தாளில்லை.

    தோள் தருகிறேன்

    தோழி தன் கவலைகளை சொல்லி அழ

    மனப்பாரம் தீர்ந்தவுடன்

    நன்றி சொல்லி நகர்ந்து விடும் தோழி.

    மனதை பாரமாக்கி சென்று விடுகிறாள்

    பாரத்தை இறக்கி வைத்தால்

    தோழி தொலைந்து போய் விடுவாளோ?

    அலை புரளும் குழல்கள் – அவற்றை

    ஒதுக்கி விடும் விரல்கள்

    நெருங்கி வரும் பார்வை – அது

    அணியுமொரு போர்வை

    முத்துப் பல் வரிசை – கண்டு

    தர நினைப்பேன் பரிசை

    நட்பிற்கு ஒர் எல்லை – அதை

    தாண்ட இயலா தொல்லை.

    +++++

    சில வருடம் போன பின்னர்

    பெற்றோர் பார்த்த பெண்ணாய்

    அவளே வந்தாள்

    அவள் உறக்கம் காண

    அவள் கவலைகளை கேட்க

    இன்றெனக்கு பொறுமையில்லை

    என் வீட்டுக் கடன் அடைக்கும்

    அவளின் பொறுப்பிருக்கிறதே!

    அமெரிக்கா ப்ராஜெக்டில்

    அவளை நிலைத்திருக்கச் சொன்னேன்.

    மூன்று வருடம் கழித்து

    எனக்கும் அமெரிக்கா வர

    சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நானும்

    ஸ்கைப் இருக்க பயமேன்

    என்று அவளும் பேசிக் கொண்டிருந்தோம்.

  • வாயிற்காவலன் – 2

    இளைப்பாறும் மனது
    களித்திருந்தது.
    உல்லாசமான கற்பனைகளில்
    திளைத்திருந்தது.
    புறவுலகில் வரப்போகும்
    காட்சிகளாக சிலவற்றை
    முன்னரே தன் கற்பனையில்
    விரித்துரைத்து தனக்கே சொல்லிக்கொள்ளும்
    விளையாட்டு அதற்கு
    விருப்பமான விளையாட்டு.
    முன்னறிவிப்பின்றி
    மனதின் தட்பவெப்பம்
    மாறியது
    சிறு காற்றழுத்த
    தாழ்வு மண்டலம்
    சூள் கொண்டது.
    அது பெரிதாகும் அபாயமிருந்தது.
    கற்பனைக் காட்சிகள்
    மோசமான நிகழ்வுகளுக்கு
    மாறும் வகையில்
    திரைக்கதை மாற்றத்துக்கு
    உள்ளாகிக் கொண்டிருந்தன.
    பயவுணர்ச்சி பரவி
    நரம்புக் குழாய்களிலிருந்து
    சில ரசாயன திரவங்கள்
    சுரக்கத் துவங்கின.
    காட்சிகளை உறையச் செய்யுமாறும்
    எழுப்பும் ஒலிகளை நிறுத்துமாறும்
    மனதுக்கு ஆணையிட்டேன்.
    ஆழமாக சுவாசிக்குமாறு
    மூளை கட்டளை பிறப்பித்தது.
    சுவாசப்பைக்குள்
    பதுங்கியிருந்து
    மனதை தன் ஏவலுக்கு
    ஆட்படுத்தி
    அச்சவுணர்ச்சிகளை
    உள்புகுத்தி
    வேடிக்கை பார்த்த
    பழைய சுவாசத்தை
    துரத்தியனுப்பினேன்.
    புது மூச்சு
    உள் நிரப்பி
    வெளியெடுத்து..
    மீண்டும்
    வேறு மூச்சை
    உள் செலுத்தி
    நுரையீரல் விழிப்புடன்
    செயல்பட்டது.
    சீரான
    சுவாசத்தை கவனித்துக் கொண்டே
    இதயத்தின்
    மௌனமான துடிப்பை
    கேட்டவாறிருந்தேன்.
    அசைவற்று கிடந்த மனதிடம்
    எண்ணங்களின் உற்பத்தியை
    மீண்டும் துவக்கிக்கொள்ளலாம் என்றேன்.
    மனதின் காட்சிகளும்
    உரையாடல்களும்
    தொடர்ந்தன.
    என் கவனிப்பு தொடர்கிறது
    மனவெளியில்
    பயவுணர்ச்சியைக் கிளப்பும்
    சிறு சலனங்கள்
    எங்காவது உருவாகிறதா
    என்று கவனித்துக் கொண்டிருக்கிறேன்

  • மூன்றில் ஒன்று

    சிந்தனை

    படைப்பின் முதற்மட்டம்.

    சொற்கள்

    அடுத்து வருவன.

    சொல்பவை எல்லாம்

    சிந்தனையின் வெளிப்பாடே!

    சொற்களின் இயக்க நிலை

    சிந்தனையை விட வலிமை வாய்ந்தன.

    சொற்கள்

    படைப்பின் இரண்டாம் மட்டம்.

    அடுத்து வருவது

    செய்கை.

    செய்கைகள் என்பன நகரும் சொற்கள்.

    சொற்கள் என்பன சிந்தனையின் வெளிப்பாடு.

    சிந்தனை என்பது வடிவப்படுத்தப்பட்ட யோசனை.

    யோசனை என்பது ஆற்றல்களின் கூடல்.

    ஆற்றல் என்பது சக்திகளின் எழுச்சி

    சக்தி என்பது மூலகங்களின் உள்ளிருப்பு

    மூலகங்கள் என்பன

    கடவுளின் துகற்கள் –

    எல்லாவற்றின் பகுதிகள் ;

    எல்லாமுமாய் இருக்கும் பொருட்கள்.

    ஆரம்பம் கடவுள்

    இறுதி செய்கை

    செய்கை என்பது

    கடவுளை ஆக்குதல் ;

    கடவுட்தன்மையை அனுபவித்தலும் கூட !

    (Translation of an Excerpt from the Book – Conversations with God Book one – written by Neale Donald Walsch)

  • ஐன்ஸ்டைனின் உலகு

    காகிதத்தில்
    வரையப்பட்டிருந்தவை.
    நேர்கோடுகள் தாம்!
    ஐயமில்லை.
    தரையால் ஈர்க்கப்பட்டு
    விழுந்தன
    அக்கோடுகள் !
    இப்போது
    அவைகள்
    தம் நேர்த்தன்மையை இழந்து
    வளை கோடுகளாகியிருந்தன.
    +++++
    நம் மனதில் உறையும்
    முழுமையான
    உட்பொருட்களின்
    நிழல்களே
    நாம் புறவுலகில்
    உணரும் பொருட்கள்
    என்றுரைத்தான் பிளேட்டோ.
    +++++
    புறவுலகத்தின் ஏதொவோர் இயக்கத்தை
    வரைபடத்தில்
    குறித்தால்
    அருவமாக (abstract) மாறும்.
    பருண்மை துறந்து
    கணிதவுலகத்தில் நுழைந்து
    விடுதலை பெறும்
    +++++
    மூன்று பரிமாண உருவங்களும் நிகழ்வுகளும்
    காலவெளி என்றொரு
    நான்காவது பரிமாணத்துடன் சேர்ந்து
    கணிதச்சித்திரங்களாகி உலவும்.
    எண்ணிலடங்கா பரிமாணங்களை
    உருவாக்கி,
    வரைபடமாக்க
    மனத்திரை மட்டும் போதும் ;
    அவற்றிற்கொத்த
    எதிரிணையை
    புறவுலகில் காணமுடியாவிடிலும்
    என்ன?
    நிரூபணங்களை
    பின்வரும் சந்ததிகள் தேடி
    பிளேட்டோ சொன்னதை உண்மையாக்குவார்கள்.

    .

  • சார்பியல் : ஒரு வரைபட கையேடு

    (RELATIVITY : A GRAPHIC GUIDE என்ற புத்தகத்தின் சில பக்கங்களை படிக்கும் போது வந்த தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. புத்தகத்தை மார்பில் மடித்து வைத்தவாறே உறங்கிய போது கண்ட கனவில் பின் வரும் வரிகளை யாரோ படித்தார்கள்)

    இடம் காலம் என்ற

    இரட்டை தொடர்ச்சிகள்

    பிரக்ஞை என்றொரு

    மறைபொருளின்

    நூல் பொம்மைகள்

    நரைத்த மீசை

    இரைந்த முடி கொண்ட

    இயற்பியல் மேதை

    உணர்ந்து சொன்னான்.

    +++++

    சுவரில் சாய்ந்து

    அமர்ந்த படி உறங்கியபோது

    அண்ட வெளியில்

    பறந்தேன்.

    சட்டைப்பையிலிருந்து

    விடுபட்ட

    என் எழுதுகோலும்

    நிலையான சித்திரம் போல்

    என்னுடன் சேர்ந்து பறந்தது.

    வெகு நேரமாகியது தரையைத்தொட.

    குப்புறவிழுந்த நான்

    எழச்சிரமப்பட்டேன்.

    அறை உருள ஆரம்பித்தபோது

    ஒரு மூலையிலிருந்து

    எதிர் மூலையில் போய் விழுந்தேனாம்

    சில வினாடிகளில் நடந்தேறியதாம்.

    உருண்ட அறையிலிருந்து

    என்னை மீட்டவர்கள் சொன்னார்கள்.

    வெகு நேரமாக பறந்து கொண்டிருந்தேனே!

    சில வினாடிகள் மட்டும் கழிந்தன

    என்பது எங்ஙனம் சாத்தியம்?

    இடங்களின் தூரமும்

    கால அளவைகளும்

    வெவ்வேறு யதார்த்த தளங்களில்

    வேறுபடும் எனில்

    யதார்த்தம் என்பதே பிரக்ஞை தானோ?

    +++++

    அறை உருளுதல்

    எப்படி சாத்தியம் என்று

    விழித்தவுடன் வினவப்போகும்

    உனக்கு ஒரு சமிக்ஞை !

    RELATIVITY : A GRAPHIC GUIDE

    கட்டிலுக்கு பக்கத்தில்

    தரையில் விழுந்து கிடக்கும்.

  • முதல் மலர்


    கிளை நட்டு

    நீரூற்றி

    களை பிடுங்கி

    மருந்தடித்து

    பாட்டு பாடி

    பொறுமை காத்து……

    வெகு நாளுக்குப் பிறகு

    பூத்த மலரை

    கையில் ஏந்தி பார்க்கையில்

    இரு இதழ்கள் அளவு குறைந்தும்

    ஒரிதழ் அளவு பெரிதுமாய் நீண்டு

    விகாரமாக இருந்தது.

    எனினும்

    என் மலரை

    பெருமையுடன் சட்டையில் குத்திக்கொண்டேன்.