Category: Poems
-
மாயை – ராம் சின்னப்பயல்
நண்பர் ராம் எழுதிய கவிதையொன்றை வல்லினம் இதழில் வாசித்தேன். கவிதைகள், நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் இசை விமர்சனங்கள் என்று எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பத்துறைப் பணியில் இருக்கும் இந்த இளைஞர் பல உயரங்களை தொடப் போகிறார். ராமின் அனுமதியுடன் கவிதையை இங்கு இடுகிறேன்.
மாயை
எந்த மனநிலையிலிருப்பினும்
ஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது,
இன்று எவ்வளவு விட்டேற்றியாயிருப்பினும்
ஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது,
எதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும்
வெகு உயரே பறக்கும் ஒரு பறவை
என்னை அவதானிக்கவைத்துவிடுகிறது,
மனம் போன போக்கில்
எங்கு சென்றாலும் எதோ ஒன்று
என் அனுமதியின்றி நடந்து கொண்டுதானிருக்கிறது.இப்படியாகவே இருக்கும்
என்னைத்தொடர்ந்தும்
உற்றுநோக்கி கவனித்துக் கொண்டிருப்பவனுக்கு
ஒரு காட்சியாகவே
எப்போதும் நான்
இருந்துகொண்டுதானிருக்கிறேன்.நன்றி : வல்லினம்
-
முற்றுப்புள்ளி

Acknowledgement : http://openfileblog.blogspot.in/2011/05/john-latham-full-stop.html
“சொற்ஜாலங்கள் கவிதை இல்லைகடைசி வரி திருப்பங்கள் கவிதை இல்லை
புதிர்கள் கவிதை இல்லை
பிரகடனங்கள் கவிதை இல்லை
முழக்கங்கள் கவிதை இல்லை
பிரச்சாரங்கள் கவிதை இல்லை
வசனங்கள் கவிதை இல்லை”
எழுதிய எல்லாவற்றையும்
கிழித்துப் போட்டு விட்டு
வெண் தாளொன்றை
எடுத்து தயாராக வைத்துக்கொண்டு
”எது கவிதை இல்லை என்பது புரிந்தது;
ஆனால் எது கவிதை என்பதைச் சொல்வீரா?”
என்று கேட்ட போது
மௌனமே பதிலாய்க் கிடைத்தது.
வெண் தாளில்
ஒரு கறுப்பு புள்ளி மட்டும் வைத்து
எழுதுகோலை மூடி வைத்தேன்.
-
நீலக்குடை

@ Ben Kelley வித விதமான
கவலைகள்
படைப்பூக்கமிழக்காமல்
ஒன்றன் பின் ஒன்றாக
தோன்றிய வண்ணம்
சங்கிலியை
அறுத்தெறிந்து
ஓரிரு மகிழ்ச்சியை
உளத்துள் புகுத்துவதில் வெற்றி கொண்டு
உவகை தலை தூக்குகையில்
அதீத மகிழ்ச்சி
அபாயம் தரும்
என்று உள்ளுணர்வு சொல்ல
மீண்டும் கவலைக்குள் ஆழ்ந்தேன்
இனி அபாயமில்லை
என்ற நிம்மதியுணர்வை
அடையாளம் காணாமல்
முழுநேரக் கவலையில்
என்னை புதைத்துக் கொண்டேன்
+++++
என் கண்ணீர்த்துளிகளை
மழைத் துளிகள்
மறைத்து விடுதல்
சவுகர்யம்.
நதி உற்பத்தியாகும்
இடத்தை மலைகளும்
குகைகளும்
மறைத்திருக்குமாம்
என் கண்ணீர் நதிக்கு இந்த நீலக்குடை
சாலையோரக் குட்டைகளில்
சேரும் என் கண்ணிரின் வெள்ளத்தை
யாரும் அருந்தப் போவதில்லை
என்ற ஆறுதல் எனக்கு
குடை, ஆகாயம்,
மழை, மழை நீர்க்குட்டை, நீல நிறம் –
இவைகள்
எனக்கு உற்ற தோழர்கள்
எனக்கென்ன கவலை
மழை நிற்கும் வரை !
கவலையின்றி
அழுது கொண்டிருக்கலாம்.
+++++
-
அடுக்குகள்
கணிதத்தில்
முற்றொருமைகளில் வரும்
அடுக்குகளின் விதிகளை
மகளுக்கு
கற்றுவிக்கும் முயற்சியில் தோற்று
துவண்டு ஓய்ந்தேன்.
“அடுக்குகளை கூட்டினால் மதிப்பு பெருகும்.
அடுக்குகளை கழித்தால் மதிப்பு குறையும்
அடுக்குகளை வகுக்க மேலடுக்குகளிலிருந்து
கீழடுக்குகளை கழிக்க வேண்டும்”
ஆறாம் வகுப்பு மாணவிக்கு
சமூகவியல் நியதிகள் புரியுமா
என்ற கேள்வி கூடவா
கணிதப் புத்தக ஆசிரியர்களுக்கு தோன்றியிராது?
-
ஓய்வு பெற்ற கதை எழுத்தாளரின் கவிதை முயற்சி
இன்னும் இருக்கிறது
வாசலில் சில செருப்புகள்
மோகத்தைக் கொன்று விடு
விலை போகாத எனது 3 கதைகளின்
தலைப்புகளை
மாற்றி எழுதிப் பார்த்தேன்
சில செருப்புகள்
இன்னும் வாசலில் இருக்கிறது
கொன்றுவிடு மோகத்தை!
வேறு மாதிரி மாற்றிப் பார்த்தேன்
வாசலில் கொன்றுவிடு மோகத்தை
இன்னும் சில செருப்புகள் இருக்கிறது
வேற்றுமை உருபை மாற்றி
இன்னொரு சொல்லையும் சேர்க்கலாமா?
என்னுடைய கதையின் தலைப்புகள் தானே!
யாரைக் கேட்க வேண்டும்?
வாசலில் இன்னும் இருக்கும் சில செருப்புகளால் அடிப்பர்
மோகத்தை கொன்று விடு
“எழுத்து” என்ற சொல்
தொக்கி நிற்பதாகக் கொள்ளுங்கள் என்ற
அடிக்குறிப்பு போட்டு விடலாமா என்று யோசித்தேன். -
பண்டிகை காட்சிகள்

நிறைவு என்ற பதத்துக்கு
நிறைய என்று பொருள் கொண்டு
கொண்டாடப்படும் பண்டிகைகளின் போது
நிறைய வகைகளில் “நிறைய”..
“கொஞ்சம் நிறைய” “நிறைய நிறைய”
“சென்ற வருடத்தை விட நிறைய”
“மைத்துனரின் வீட்டை விட நிறைய”
என!
கொஞ்சமிருப்பவரும்
“நிறைய” காண்பிப்பதற்கு
நிறைய கடன்களைப் பெற
நிறைய விழாக்கால வங்கித் திட்டங்களும்.
அந்தஸ்தை நிரூபிக்க
நிறைய பரிசுகள் !
நிறைய உடைகள் !
நிறைய இனிப்புகள் !
நிறைய விருந்துகள் !
நிறைய வாழ்த்தட்டைகள் !
நிறைய மனநிறைவும் இருக்கும்
நண்பனொருவன் தன் குடும்பத்தை
வெளிநாடு அழைத்துச் சென்று
வெண்பனி சூழ்ந்த
பயணியர் விடுதிக்குள்
கொண்டாடியதாய் கேள்விப்படும் வரை ! -

நோயாளி
அமைதியை குலைத்து
அறைக்குள் நுழைந்த இசையை
விரட்டியடிக்க முடியாமல்
தட்டுத்தடுமாறி
காதை பொத்திக்கொண்டேன்
இசை இப்போது தென்படவில்லை.
இசை கண்ணுக்கு தெரியாமல்
எங்காவது ஒளிந்திருக்கக்கூடும் என்று
காதிலிருந்து கைகளை எடுக்கவில்லை
கை வலிக்கத் துவங்கியபோது
இரு கைகளை தொங்கப்போட்டு
வலியை துரத்தினேன்.
இசை
அவ்விடத்திலிருந்து
ஏற்கெனவே
விலகிச் சென்றிருக்கலாமென
எண்ணிக்கொண்டு
மீண்டும் உறக்கத்தை
தேடும் முயற்சியில் இறங்கினேன்


