Category: Poems

  • மனக்கற்பனையின் வலை

    அலுவல் ரீதியான குழப்பங்கள் தூங்க விடாமல் செய்தன. மூன்று மணிக்கே எழுந்து விட்டேன். குழப்பங்களுக்கு திடத் தன்மை இல்லை என்ற எண்ணத்தை விதைத்து சற்று அமைதியாய் அமர்ந்திருந்தேன். குழப்பம் எங்கிருந்து தொடங்குகிறது? என்ற கேள்வியை எழுப்பி முடிச்சை அவிழ்க்க முயன்றேன். நிறைய முடிச்சுகள். ஒரு வலைக்குள் அமர்ந்திருக்கிறோம்! இந்த வலையில் பல்லாயிரம் முடிச்சுகள். என்னுள் இருந்த மிலரேபா கண் விழித்தார்.

    —-

    லட்சியம் என்பது வெறுமை
    அது பல காரணகாரியங்களைச் சார்ந்த, அறிய முடியாத எதிர்காலத்தில் என்றோ நிகழத்தக்க ஒரு நிழல்.
    அதை அடைய வேண்டுமெனும் பேராசை, இப்போதே உன் சுமையை அதிகப்படுத்த வேண்டாம்.
    உன் நரம்புகளுக்குள் எதிர்பார்ப்பின் ரத்தத்தை பாய்ச்சிவிடாதே.
    நரம்புத் திசுக்களைச் சுற்றி ரத்தம் ஓடுவது இயற்கை;
    ஆனால் நரம்பிழைக்குள் ரத்தம் ஓடுவது இயற்கையல்ல.

    லட்சியம் என்பது கற்பனை
    கற்பனை நிகழ்ந்துவிடும் என்ற உறுதி
    அதன் ஈர்ப்பில் லயித்திருப்பது! –
    அடுத்த வார விருந்துக்கு
    இப்போது பட்டினி கிடப்பது

    போட்டி ஒரு கற்பனை
    யார் மீது,
    எதன் மீது,
    போட்டி?

    தான் நடக்கும் பாதையில்
    யாரோ வந்துவிடுவார்கள் எனும் அதீத பீதி,
    இன்னொரு பாதையில் நடப்பவரைத்
    தள்ளிவிடும் எண்ணம் —
    நம் கற்பனையில் மட்டுமே உள்ளது போட்டியுணர்வு!

    நம் இலக்கை நாம் அடைவதும்,
    அவன் இலக்கை அவன் அடைவதும்
    போட்டியுணர்வின் அடிப்படையில் தான் என எண்ணுதல் —
    மணற்பரப்பில் தெரியும் நீர்க்காட்சி மேலான தாகம்!

    எதிர்காலத்தின்
    ஏதோ ஒரு புள்ளியைப்
    பிடித்துத் தொங்கிக் கொண்டிருத்தல் —
    கனவு ஆப்பிளின்
    கற்பனைச் சுவைபார்த்தல்.

    போர்வைக்குள் தூக்கம்
    கனவு வலைக்குள் இயக்கம்
    கொத்த வரும் பாம்பிலிருந்து தப்புதல் சுலபம்
    போர்வையை விலக்கி கண்விழித்தல்
    பாம்பை இல்லாமல் ஆக்கி விடும்.

  • புனித முரண்பாடு

    கையில் ஒளிந்த சீட்டு,
    இதயங்களை உடைக்கும் ஒளிர்வு,
    கூடுதல் நேரத்தில் அடித்த கால்பந்திலக்கு,
    வஞ்சகனின் வெள்ளி நாவு,
    துறவியின் காலைப் பிரார்த்தனை,
    நிறுவனத் தலைவனின் கரும் லட்சியம்,
    தாயின் கடுமையான அன்பு –
    இவ்வனைத்திலும் இருப்பவன் நானே!
    சிறப்பு என்பது என் சாயல் –
    தங்கத்தில் எழுதப்பட்டாலும்
    நிழலில் செதுக்கப்பட்டாலும்

    கோயில்களில் என்னைத் தேடுகிறாயா? கூர்ந்து பார்—
    ஒவ்வொரு பிரகாசமான விஷயத்தின் பின்னிருக்கும் பிரகாசம்
    வெற்றியாளரின் நெஞ்சில் நிறையும் வெற்றி
    இவ்வுலகையே வளைக்கும் எஃகுத் தீர்மானம் – அனைத்தும் நானே

    ஊழல் என நீ அழைப்பதிலும்,
    பிரகாசமாய் எரியும் என் சக்தி.
    திசையைத் தேர்வது – உள்ளது உன்னிடம்

    (கீதையின் பத்தாம் அத்தியாயத்தில் வரும் முப்பத்தியாறாம் செய்யுளை வாசித்தவுடன்)

  • மத்திய கிழக்கு

    வானொலி அலைகளினூடே
    பதின்பருவத்தில்
    என் பிரக்ஞையில் நுழைந்தது
    மத்திய கிழக்கு

    ஏற்றுமதி வாடிக்கையாளனின்
    அலுவலகத்தில் சிறையுண்ட அனுபவம்
    ஏமனில் நிகழ்ந்தது

    வேலையிலிருந்து துரத்தி
    என் வலிமையை சோதித்தது
    ஷார்ஜா ஒரு முறை

    பையில் நிறைந்திருந்த
    திர்ஹம்களை
    மேஜையில் கொட்டி
    சரக்கு எப்போது வரும்
    என்று வினவிய ஜோர்டான் காரன்
    பலமுறை எனை அழைத்து
    என் வேலை குறித்து கேட்ட கரிசனம்

    கதார்க்காரனின்
    தாராள மனதை உணரக் கிடைத்தது
    தம்மாம் செல்லும்
    பஹரைனின் கடற்பாலத்தில்

    கூடப்பயணஞ் செய்த
    கோழிக்கோட்டு பெண்ணொருத்தி
    அபுதாபிக்காரனை கைபிடித்த
    கதையைக் கேட்டது
    ஒமானிய விமானத்தில்

    என் முறை வந்தபோதும்
    என்னை கவனிக்காமல்
    ரஸ் அல் கெய்மாக்காரனை
    கவனித்துவிட்டுப் பின்னர்
    எந்த ஐஸ்க்ரீம் வேணும்
    என்று எதியோப்பிய விற்பனைப் பெண் கேட்டது
    துபாய் மாலில்

    பல நிற அனுபவப் பரிசினை
    எனக்கு நல்கிய மத்தியக் கிழக்கு
    நாவல்களில்
    கவிதைகளில்
    சமய இலக்கியங்களில்
    இன்னமும் தொடர்பில் இருக்கிறது

    முகப்புச் செய்தி
    வாயிலாக அதை அறிய
    எனக்கு விருப்பமில்லையென
    எத்தனை முறை சொன்னாலும்
    அதற்குப் புரிவதில்லை

  • ஆன்மாவைப் பற்றி

    இப்னு சினா-வின் அராபிய மொழிக் கவிதை(ஆங்கிலம் வழியே தமிழ் adaptation : அடியேன்).

    மேலிருந்து இங்கு வந்து இறங்கியது,
    அந்த விவரிக்கவியலா பரலோகப் புறா

    இந்த பாழடைந்த உலகின் அடையாளக் கம்பங்களுக்கும் வாசஸ்தலங்களுக்கும் நடுவில்
    தனது பழைய வீட்டை, அதன் அமைதியை நினைத்து அழுகிறது

    அடர்ந்த வலைகள் அதைத் தடுத்து நிறுத்துகின்றன
    கூண்டோ வலிமையானது!

    அதன் வீடு நோக்கிய பறத்தலின் நேரம் நெருங்கும் வரை,
    உயர்ந்த விசாலமான வானத்தைத் தேடுவதிலிருந்து
    அது முடக்கப்பட்டுள்ளது.

    அதன் பரந்த கோளத்திற்குத் திரும்ப வேண்டிய நேரம் இது,

    திரை விலக்கப்பட்டு, மகிழ்ச்சியுடன் முணுமுணுத்தவாறு
    விழித்திருக்கும் கண்களால் காண முடியாதவற்றை நோட்டம் விடுகிறது

    புகழ்க்கீதம் பாடி உயரங்களுக்குத் திரும்புகிறது
    உலகில் இருந்தவரை மறைக்கப்பட்டவைகளை உணர்ந்தவாறே திரும்பினாலும் அதன் உடையில் கறைகள் எதுவும் எஞ்சியிருக்கவில்லை.

    இத்தனை உயரத்தில் இருந்து அது ஏன் அவ்வாறு வீசப்பட்டது
    இருண்ட, மந்தமான, ஆழ்ந்த அடித்தளப் பள்ளத்திற்கு?

    ரம்ஜான்போஸ்ட் : 3/3/2025

  • வயதும் காலமும்

    சின்ன வயதில்
    எதிர்காலத் தேடல்
    முது வயதில்
    பழங்காலத்தை நாடல்

    முன்னோக்கி ஓடும் இளமை
    பின்னோக்கித் தாவ முயன்று
    நிகழ் காலத்தின் சுவரில் மோதி
    ஊமைக்காயமுறும் முதுமை

  • வயதும் காலமும்

    சின்ன வயதில்
    எதிர்காலத் தேடல்
    முது வயதில்
    பழங்காலத்தை நாடல்

    முன்னோக்கி ஓடும் இளமை –
    பின்னோக்கித் தாவ முயன்று
    நிகழ் காலத்தின் சுவரில் மோதி
    ஊமைக்காயமுறும் முதுமை

  • பனித்திணைக் கவிதைகள் – ஶ்ரீவள்ளி



    பனி நூறு
    பனி ஆறு

    அவள் கூற்று

    நள்ளிரவில் முதுபனியில்
    உடல்தளர்ந்த பழுப்புக் கரடி
    கொல்லைக் கதவைத் தட்டுகிறது
    மின் திரையில் தெரிகிறது
    உனக்காக இல்லை, கரடியே
    கூடத்தில் பரிமாறியிருக்கும்
    ஸ்ட்ராபெர்ரி பழக்கொத்து
    காக்க வைத்தவன் இன்னும் வரவில்லை
    சிசிடிவி காமிரா
    வருங்காலத்தைக் காட்டுவதில்லை
    எப்போதுமே
    திறக்கச் சந்தர்ப்பம் தராத
    இந்த வாசற்கதவு எதற்காக?

    (பாடியவர்: ஸ்ரீவள்ளி)


    பனி நூறு
    பனி ஏழு

    தோழி கூற்று

    முந்தைய நாள் பெய்த பனிப் பொழிவில்
    குழந்தைகள் ஆடினர்
    பொம்மை செய்தனர்
    கை கால் உடலோடு
    யாரும் பார்க்காதபோது
    அது உயிர்த்திருக்க வேண்டும்
    இன்று இளம் வெயில்
    பாதிக் கை காணோம்
    பாதிக் கால் சரிந்துவிட்டது
    ஒரு பக்கம் காது இல்லை
    அதன் முன் மண்டியிட்டு
    அவள் இறைஞ்சுகிறாள்
    நினைவூட்டக் கேட்கிறாள்
    அவன் தந்த வாக்குறுதியை
    மூளிச் சிலை என்றாலும்
    அது பனியின் தெய்வம்
    பிற நிலங்களின் தெய்வங்களைப் போல
    அதுவும் பேசுவதில்லை

    (பாடியவர்: ஸ்ரீவள்ளி)

    —————————————————————

    Journey to the west என்ற சீன மொழியின் நாவல் ஒன்றை எழுதியவரின் பெயர் உண்டு. யார் அவர், அவர் அடையாளம் போன்ற எந்த தகவலும் இன்றில்லை. அலியும் நிமோவும் நாவலை எழுதியவரின் பெயர் குர்பான் சையத். விசித்திரமான பெயர் கொண்ட இந்த ஆசிரியர் யார் என்று நாவல் வெளிவந்து நூறாண்டுகளாகியும் கண்டுபிடிக்கப்படவில்லை. யார் ஆசிரியர் என அறியப்பட முடியவில்லை என்பது முக்கியமில்லை. இரண்டு நாவல்களும் இன்றளவும் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் முக்கியம். முகமிலாத ஒருவர் இலக்கியப் படைப்புகள் எழுதுவதில் உள்ள சௌகர்யம் அவரின் அடையாளம் சார்ந்த தகவல்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லாததால் வாசகரை உறுத்தாது. ஶ்ரீவள்ளி-யைப் பொறுத்த மட்டில் கவிதைகள் மட்டுமே அவரின் அடையாளம். அடையாளம் சார்ந்த குறுகிய எல்லைக்குள் உலவும் கட்டாயமேதுமில்லை ஶ்ரீவள்ளிக்கு. விரிந்து கொண்டே போகும் வானம் ஶ்ரீவள்ளி. “பல நிறங்கள் உண்டு பனி ரோஜாவுக்கு” என்று கவியெழுதும் ஶ்ரீவள்ளி உருவமற்று இருப்பது புதிரன்று. இந்தப் பாணியில், பெயரற்று ஆனால் இந்த வகைமையில் பிறழாது பின்னர் ஸ்ரீவள்ளியின் பெயரில் எதிர்காலத்தில் கவிதைகள் எழுதப்படலாம் – உமர் கயாம் பெயரில் நமக்கு கிடைத்திருக்கும் பல ருபாயியாத்கள் பிற்காலத்தில் முகமறியா அடையாளமில்லா பிறர் எழுதியவை என்று நமக்குத் தெரிய வந்தது போல்.

  • ஷிண்டோ

    சோகம் நம்மை
    ஆட்கொள்ளுகையில்
    நினைவுகளின், கவனத்தின்
    சின்ன சாகசங்களால்
    நாம் சில கணங்கட்கு
    காக்கப்படுகிறோம்:
    கனியின் சுவை, நீரின் சுவை
    கனவு நமக்குத் திரும்பித்தரும் முகம்,
    நவம்பர் மாதத்துவக்கத்தின் மல்லிகைகள்,
    திசைகாட்டியின் முடிவிலாத் தாபம்,
    தொலைந்துவிட்டதாய் நினைத்த புத்தகம்,
    லத்தின மொழிப் பாவகையின் சீர்,
    வீட்டைத் திறக்கும் சிறு சாவி,
    சந்தனம் அல்லது நூலகத்தின் வாசனை,
    ஒரு நிழற்சாலையின் பழமையான பெயர்,
    வரைபடத்தின் நிறங்கள்,
    சற்றும் எதிர்பாராத சொல்வரலாறு,
    மெருகேற்றிய நகம்,
    நாம் எதிர்பார்த்திருந்த சந்திப்பு,
    பனிரெண்டு முறை இருளில் கேட்கும் மணியோசை,
    நாம் எதிர்பார்க்காத உடல்வலி.
    எண்பது லட்சம் ஷிண்டோ தெய்வங்கள்
    நம் பூமியில் பயணித்தவண்ணம் இருக்கின்றன
    பணிவான அத்தெய்வங்கள் நம்மைத் தொட வருகின்றன
    தொடுகி்ன்றன, பின் சுற்றித் திரிகின்றன.

    - போர்ஹேஸ்

    (Translated from the English translation by Paul Weinfield)

  • இந்தியா எனக்கு என்ன?

    இந்தியா எனக்கு என்ன?

    – நொடிக்கு நொடி மாறும் அழகிய ஓவியம்
    – சிறு குறை கொண்ட என் மகன்
    – தொடர் வெற்றி காணும் என் மகள்
    – பல சத்தங்களை எதிரொலிக்கும் பள்ளத்தாக்கு
    – தாகங்கொண்ட நெஞ்சில் வந்து வீழும் ஒரு துளி
    – சாலையோர வாக்குவாதம்
    – ஒவ்வொரு வரியும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட கவிதை
    – முன்னூறாயிரம் கடவுளர் உறையும் பிரதேசம்
    – சில சமயம் விமர்சனத்துக்குள்ளாகும் பிரதி
    – மேடு பள்ளங்களாலான அழகிய மலைப்பாதை
    – பெரும்பாறைகளைத் தாவி நகரும் காட்டாறு
    – நெடிதுயர்ந்த கோபுரத்தின் துளைகளில் ஒதுங்கி நிற்கும் பறவைக் கூட்டம்
    – பிரகாரச் சுவர்களில் வீசும் புராதன வாசனை
    – நகர நதிக்கரையில் தேங்கும் மாசு நுரை
    – ரூஃப் டாப்பிலிருந்து தெரியும் குடிசைக் கடல்
    – பணி நிலையங்களின் கீபோர்ட் கீச்சு
    – ராம் – ரஹீமீன் ஊடல்களும் கூடல்களும் நிறைந்த முடிவற்ற நாடகம்
    – குல்லாக்களின் டர்பன்களின் நிறம் படிந்த நெற்றிகளின் டிசைன் கலவை
    – வித்தியாசங்களுக்கு பெயரளித்து கூறு செய்யப்பட்டு நடக்கும் அணிவகுப்பு.
    – இன்னும் நிறைய…..
    மிக முக்கியமாக என் சுவாசம்

    அனைவர்க்கும் குடியரசு தின நல் வாழ்த்துகள்

  • ஞானியும் குடிகாரனும் – ரூமி

    ஓர் அச்சில் சுழலுமிப்பிரபஞ்சம்
    மேசையைச் சுற்றிச்சுழலட்டும் என் ஆன்மா
    ஒரு பிச்சைக்காரனைப்போல்
    நீள்வட்டத்தில் சுழலும் கோளைப்போல்
    அநாதியாய்
    சுதந்திரமாய்

    ராணியும் யானையும் கூர்மையாய் நகரும்
    சதுரங்கப்பலகையில்
    எனினும் உண்மையில் ராஜாவை மையங்கொண்டு
    வட்டமிடுகின்றன அவை

    காதல் உனது மையமெனில்
    உன் விரல்களில் மோதிரமிடப்படும்

    அந்திப் பூச்சியினுள்
    ஏதோவொன்று தீயினால் பண்ணப்பட்டுள்ளது

    ஞானியொருவன்
    தூய இன்மையின்
    அழிக்கும் முனையைத் தொடுகிறான்

    குடிகாரனொருவன்
    சிறுநீர் கழிப்பதை
    பாவமன்னிப்பாகக் கருதுகிறான்
    பிரபுவே, என்னிடமிருந்து
    அசுத்தங்களை எடுத்துவிடுங்கள்

    பிரபு பதிலளித்தார்
    முதலில் அசுத்தத்தின் இயல்பினைப்
    புரிந்துகொள்
    உனது சாவி வளைந்திருந்தால்
    பூட்டு திறக்காது

    நான் அமைதியானேன்
    அரசன் ஷம்ஸ் வந்து விட்டான்
    எப்போதும் நான் மூடும்போது அவன் திறக்கிறான்