Author: Ganesh Venkatraman

  • குறுங்கதைகள்

    பழக்கம் எனும் மகாசக்தி

    பாதிப் படித்து தலை திருப்பி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. என் படுக்கைக்குப் பக்கத்தில் இவ்வாறு சிதறிக் கிடந்த புத்தகங்களையெல்லாம் “ஷெல்ஃபில்” மனைவி எடுத்துவைத்துவிட்ட தினத்தன்று தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். படுக்கையின் விளிம்பில் கரையாக இருந்த புத்தகங்களின் இழப்புணர்வு தாளாமல் சில புத்தகங்களை மீண்டும் வெளியில் எடுத்து படுக்கைக்கருகே வைத்து கண்ணை மூடிப் படுத்துக் கொண்டேன்.

    +++++

    நட்பு

    நண்பர்களின் தொடர்பில் இருப்பதில்லை என்ற குற்றவுணர்வு வாட்டுவதாக நினைத்து அதை சீர் செய்யும் நடவடிக்கையை எடுக்க நெடுநேரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நண்பனும் என் நினைவில் வரவில்லை. அவர்கள் நினைவிலும் நான் வராமல் இருக்கக்கூடும் என்ற எண்ணம் அளித்த ஆறுதலில் குற்றவுணர்வு கரைந்து போனது.

    +++++

    பூனைக்கு வந்த காலம்

    சில உயர்அதிகாரிகளின் நிலை பாவமாய் இருக்கும். நன்கு அதிகாரம் பண்ணி நம்மை கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவருக்கும் மேலான ஓர் அதிகாரி நம்மை அழைத்து நம் வேலையைப் பற்றிப் பாராட்டிப் பேசும் போது அருகில் இருக்கும் நம் அதிகாரியின் முகம் ரசிக்கத் தக்க ஹாஸ்யக்காரனின் பாவத்தில் காணப்படும். போன வாரம் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தது. பாவ்லா காட்டியவாறே இத்தனை மாதங்களாக அவர் செய்து வந்த ஒரு பணி எதிர்பாராதவிதமாக கைமாறி எனக்களிக்கப்பட்டது. “இனிமேல் நீயும் சீனியர் மேனேஜ்மென்டின் ஒர் அங்கம்” என்று சொல்லி அவர் கைகுலுக்குகையில் “தயவுசெய்து என்னை மேலே போட்டுக் கொடுத்துவிடாதே” என்று சொன்னது அவர் உடல்மொழி.

    +++++

    திருப்தி

    என் நண்பர் ஒருவரிடம் ஏதாவது ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு அதைப் பற்றிச் சொன்னால் உடனே தானும் அதைப் பார்த்துவிட்டதாகச் சொல்லுவார். அதில் நடித்த நடிகர் பெயரைச்சொல்லி அவரின் நடிப்பை குறை சொன்னால் உடனே மறுப்பு சொல்வார் நண்பர். தேர்ந்த விமர்சகர் போல “அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது ;  கொடுக்கப்பட்ட ‘ரோலை’ திருப்தியா செஞ்சுருக்காரு” என்பார். நடிகர் பண்ணிய ‘ரோல்’ என்ன என்று நானும் அவரைக் கேட்பதில்லை ; அவரும் சொல்வதில்லை.

    ——-

    பாத்திரத்தில் நிலைத்திருத்தல்

    பெரிய பொய்களை அழகிய வார்த்தைகளுக்குள் அடக்கி கண்களை உருட்டியபடி பேசிக் கொண்டிருந்த அதிகாரியை விரலை லேசாக உயர்த்தி தடுத்து நிறுத்திய வாடிக்கையாளரின் பிரதிநிதி – நல்லா பேசுறிங்க ஆனா என்னால் நம்ப முடியல – என்றார். பொய்களுக்கு எந்த வடிவம் கொடுப்பது என்று புரியாமல் விழித்த அதிகாரி என்னை நோக்கினார். உண்மையை மறைமுகமாக பாதி மறைத்துச் சொல்லும் முயற்சியில் நான் பேசத் தொடங்குவதற்குள் பிரதிநிதி இடைமறித்து – மேல சொல்லுங்க உங்க பொய்ய வச்சு உங்க நிறுவனத்தை எடை போடமாட்டேன் – என்றார். அதிகாரி தப்பித்தோம் பிழைத்தோம் என விடுவிடென்று மின்னல் வேகத்தில் பிரசன்டேஷனை ஓட்டிமுடித்து மடிக்கணினியை மூடினார். வாடிக்கையாளரின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவுடன்  – இது மாதிரி மூஞ்சி முன்னால பேசுறவங்களே பெட்டர் – என்று அதிகாரி என்னிடம் சொன்னபோது – மீட்டிங் முடிஞ்சிருச்சி, இன்னும் எதுக்கு ஸேல்ஸ் பிட்ச் மோட்லயே இருக்கீங்க – என்று கேட்கத் தோன்றிற்று. ஆனால் அப்படிச் சொல்லாமல் – சரியாச் சொன்னீங்க – என்று சொல்லி நானும் பாத்திரத்திலேயே தொடர்ந்து இருந்தேன்.


    —–

    சிலேடை

    போராடும் ஒரு நடிகர் எந்த வேடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார் ; பழுத்த அனுபவஸ்தர்களான மூத்த கார்ப்பரேட் அதிகாரிகளும் எந்த பணியையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். இயக்குனர்களின் வழிநடத்தலின்படி பூணும் கோமாளி வேடமும் இதில் அடக்கம்.

    —–

    எழுதிப்பார்த்த போது…

    அனுபவப் பகிர்வு எளிது. படித்துப் புரிந்து கொண்டதையும் அறிந்துகொண்டதையும் பகிர்தலும் எளிது. புரியாததையும் அறியாததையும் பகிர்தல் அவசியமில்லாதது. தொடர்புறுத்தல் வாயிலாக பெறப்படும் இணைவுகள், வாசிப்பின் நினைவு கூறல்கள், உரிய வடிவம் குறித்த பிரக்ஞை, நிகழ்வுகள் குறித்த தனிப்பட்ட பார்வைகள், கூரிய கவனிப்பு ஆகிய கூறுகள் மனப்பயிற்சியினால் அடையக்கூடியவை. சரியான புரிந்துணர்வை எய்துங்காலை சொற்கள் தம்மைத்தாமே உருப்பெருக்கிக் கொள்ளும். தமக்கான உண்மைகளை எழுதுதலோ பிறருக்கான உண்மைகளை எழுதுதலோ இரண்டுமே அடிப்படையில் ஒன்று என்ற தெளிதல் கைவந்துவிட்டால்  எல்லைகளற்ற எங்கும் பரந்த மைதானத்தில்  எழுத்தோட்டம் நிரந்தரமாய் நிகழ்ந்தவாறிருக்கும். (ஒரு ஃப்லோல வந்தது ; சீரியஸா எடுத்துக்கப்படாது)

  • சமீபத்தில் ரசித்தவை

    Taxi Driver

    Taxi Driver

    மிகவும் கொண்டாடப்படும் ஸ்கார்ஸீசியின் படம் – Taxi Driver. பார்த்து முடித்த பின் என்னை நானே கேட்டுக் கொண்டேன். அப்படி என்ன இருக்கிறது இப்படத்தில்? மீண்டுமொரு முறை பார்த்த பிறகு விளங்கியது….டாக்ஸி ட்ரைவர் ட்ராவிஸ் (ராபர்ட் டி நீரோ) கண்கள் வழி இப்படத்தை பார்க்க வேண்டும். அதற்காக சிரமப்பட வேண்டியதில்லை. காமிரா ட்ராவிஸின் கண்ணோட்டத்தின் மேல் மிக்க அனுதாபம் காட்டிய படியே படம் நெடுக பயணிக்கிறது. முதல் காட்சியில் டாக்ஸியின் ட்ரைவர் இருக்கையின் கண்ணோட்டத்தில், முன் கண்ணாடி வழியாக படத்தின் காமிரா இயங்குகிறதல்லவா? அது போலவே முழுக்க முழுக்க அவன் கண்ணோட்டத்திலேயே ”டாக்ஸி ட்ரைவர்” படமாக்கப்பட்டிருக்கிறது. அவன் போகும் சாலைகள் எல்லாம் குப்பை கூளங்களாக இருக்கின்றன. நகரமெங்கும் விலை மாதர்கள் சாலையோரங்களில் குழுமிய வண்ணம் இருக்கிறார்கள். ஒரு பெண் தோழியை சினிமா அழைத்துச் செல்லலாம் என்றால் கூட நீலத்திரைப் படம் தான் நியூயார்க் நகரில் திரையிடப்படுகிறது. அவன் சந்திக்கும் அரசியல்வாதிக்கு அவன் சொல்லும் பிரசினைகள் பற்றிக் கேட்பதில் ஆர்வம் இருப்பதில்லை. இத்தனையையும் விடுங்கள். ஓர் இள வயது விலைமாதுவை அவன் விடுவிக்கப்பார்க்கிறான். அந்தப் பெண்ணுக்கு அதில் இஷ்டமில்லை. எத்தனை கொடூரமான உலகம் இது! இதைச் சரி செய்தாக வேண்டும்! ஓர் ஆயுதக் கிடங்கையே உடைகளுக்கு நடுவில் மறைத்து வைத்துக் கொண்டு உலவ வேண்டும். அந்த இளம் வயது விலை மாதுவின் ”பிம்ப்”பை, அவள் அடிக்கடி செல்லும் விடுதியின் முதலாளியை, அவளின் வாடிக்கையாளர்களை….எல்லோரையும் போட்டுத் தள்ள வேண்டும்….விடுதியில் நடக்கும் “ஷுட் அவுட்டில்” அவன் இறந்தானா பிழைத்தானா என்பது தெரியவில்லை. ஆனால் அவன் மீண்டும் டாக்ஸி ஓட்டும் காட்சி வருகிறது. இம்முறை டாக்ஸியின் முன் கண்ணாடி ஈரமாகாமல் சுத்தமாக இருக்கிறது. அவன் நீலப்படத்துக்கு அழைத்துச் சென்ற தோழி அவன் டாக்ஸியில் பயணிக்கிறாள். அவள் கொடுத்த பணத்தை ஏற்றுக் கொள்ளாமல் அவன் டாக்ஸியை ஓட்டிச் செல்கிறான். அவன் இறந்திருந்தானென்றால் கடைசிக் காட்சி அவன் மனதின் கனவாக இருந்திருக்கும். அவன் விழைந்திருக்கக் கூடிய மீட்பின் காட்சிகளாக இருக்கலாம் அவை. அவன் இறக்காமல் இருந்திருந்தால் அவன் இப்போது “நார்மல்” ஆகி விட்டான். தனிமைவயப்படுதலின், பிறருடன் சமூகத் தொடர்பு வைத்துக் கொள்ளும் திறம் இல்லாமையின் விளைவுகள் மீண்டும் அவனுள் எழக்கூடும்.

    Bridge on the River Kwai

    The Bridge on the River Kwai

    The Bridge on the River Kwai  திரைப்படத்தின் முதன்மைப் பாத்திரம் – கர்னல் நிக்கல்ஸன். ராணுவ ஆஃபீசர்கள் போர்க்கைதிகளாக இருக்கும்போது அவர்களை உடலுழைப்பில் ஈடுபடுத்தலாகாது என்ற ஜெனீவா மாநாட்டு விதிமுறைகளை மீற இடங்கொடுக்காதிருக்கும் பாத்திரம். ஜப்பானிய ராணுவ கர்னல் சைடோ கர்னல் நிக்கல்ஸனை ஓர் இரும்புக் குடிசைக்குள் அடைக்கிறார். பாலத்தை கட்டி முடித்தல் நிக்கல்ஸனின் உதவியில்லாமல் சாத்தியமில்லை என்றறிந்த பின்னர் நிக்கல்ஸனின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு எப்படியேனும் பாலத்தைக் கட்டிக் கொடுக்குமாறு வேண்டுகிறார் சைடோ. நிக்கல்ஸனின்  தலைமையில் அர்ப்பணிப்புடன் செயல்திறத்துடன் போர்க்கைதிகளால் பாலம் செவ்வனே கட்டி முடிக்கப்படுகிறது. இதற்கு நடுவே, பாலத்தை உடைப்பதற்காக ஓர் அணி கூட்டணிப் படைகளால் ரகசியமாக அனுப்பி வைக்கப்படுகின்றது. பாலத்தை உடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு பாலத்தை முதல் ரயில் கடந்து போகும் தருணத்திற்காக காத்திருக்கின்றனர். இதற்குள், கர்னல் நிக்கல்ஸன் ஏதோ சதித்திட்டம் நடப்பதாக உணர்ந்து அதைக் கண்டுபிடிப்பதற்காக வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி நடக்க அவர் பின்னால் சைடோவும் பின் தொடர்ந்து வருகிறார். கட்டுப்பாடும், கடமையுணர்வும், பெருமிதமும் மிக்க நிக்கல்ஸன் தான் எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்தவராய் பாலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வே மேலோங்கியவராய் சதித்திட்டத்தை கிட்டத்தட்ட வெளிப்படுத்திவிடும் படத்தின் உச்சகட்டம் பாத்திரங்களின் அவற்றின் நோக்கங்களின் ஊடாட்டமாக விரிகிறது. இறுதியில் பாத்திரங்கள் தத்தம் தன்மையில் நிலைத்தனவாய் வெறும் நிகழ்வுகளின் வரிசையாக படம் அபத்தமாக முடிவடையும் போது பால-உடைப்பை மறைந்திருந்து மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் கிளிப்டன் சொல்லும் வசனம் மிகப் பொருத்தம் – “Madness! … Madness!”

  • என்ன முடிவு!

     

     

    எங்கிருந்தாய் இதுவரை?

    விடையற்ற வினாவின்  

    சுவாரஸ்யம் விரியும்   

     

    இது சரியா?

    விடை தேடும் பிரயத்தனம்  

    விடுதலே மிகச்சரி  

     

    எங்கு செல்கிறோம்?

    இலக்குகள் தொலைத்து  

    நிகழ்வுகள்  லயித்து  

    வினாக்களில் திளைக்கிறோம்

     

    என்ன முடிவு?

    வினாக்குறி விலகி  

    வியப்புக்குறி விழுந்து  

    விடை  நிகழும்  

  • மழைநீர்ச்சுவை

    அரட்டை கச்சேரி
    முடிய
    நள்ளிரவானது
    முன்னறிவிப்பின்றி
    கொட்டியது மழை
    ஐந்து நிமிட
    நடைத் தொலைவில் வீடு
    ஸ்லிப்பர் தூக்கியிறைத்து
    தோற்றுவித்த நீரூற்று பின் வர
    வேகமாய் நடந்தேன்
    தலையை நனைத்த நீர்
    உதட்டில் பட்டு
    உப்புக்கரித்தது
    வீட்டை அடைந்து
    தலை துவட்டி
    வழிந்த துளிகளும்
    உப்புகரித்தன
    களைந்த சட்டையை
    பிழிகையில் உருவாகியதோர்
    அறைக் குட்டை
    அரட்டையில்
    வயது என்னவென்று கேட்ட நண்பரிடம் சொன்ன பொய்யின்
    எண்ணுரு வடிவில்
    உப்புக்கறையுடன்
    வற்றிப் போனதந்த குட்டை
    என் மூச்சிரைச்சல் நிற்கும் முன்னமே

  • இபா-வின் மதிப்புரை

    இபா தன்னுடைய வலைதளத்தில் என் சிறுகதை தொகுப்பு – “டைசுங் நகரில் புத்தர் கோயிலுக்கு” மதிப்புரை எழுதியிருக்கிறார். முதுபெரும் எழுத்தாளருக்கு என் நன்றிகள்.  என் கால்கள் தரையில் மேவாமல் சற்று அந்தரத்திலேயே நிற்கின்றன.

    டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்

     

    EEPAA

    டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்

  • மோகமும் முக்தியும்

    Rab2

    ஒரு கலைப்படைப்பை ரசிப்பதோ கணிப்பதோ அதை நாம் புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்கிறது. புரிந்து கொள்ளும் விதம் மாறும் போது அப்படைப்பை பற்றிய நம் முந்தைய கணிப்பும் மாறும். இதன் செயல் முறை விளக்கம் ஒன்று சமீபத்தில் நடந்தேறியது. 2008-இல் பார்த்த திரைப்படம். பார்த்துவிட்டு பொருளற்ற பொழுதுபோக்குப் படம்  என்று நான் பொருட்படுத்தாமல் விட்டுவிட்ட படம். மீசை மாற்றினால் ஆளே மாறிவிடுகிறானாக்கும்! நாயகிக்கு இரண்டு பேரும் ஒருவர் தான் என்று புரிந்து கொள்ளமுடியவில்லையாக்கும்! காதுல பூ! என்று குறை சொல்லிக் கொண்டே rab ne bana di jodi படத்தை பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து வெளியே வந்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

    2009 இலிருந்து பஞ்சாபி பண்பாடு, இலக்கியம், ஆன்மீகம் மற்றும் வரலாறு பற்றிய சில புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. சுஃபி இஸ்லாம் பற்றி இத்ரிஸ் ஷா எழுதிய புத்தகங்கள், புல்ஹே ஷாவின் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள், சீக்கியர்களின் புனித கிரந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள சுபி மகானின்  பாடல்கள் போன்றவையும்  அறியக் கிடைத்தன.

    இரண்டொரு மாதங்கள் முன்னம் 2008 இல் பார்த்த  rab ne bana di jodi திரைப்படம் பற்றி நினைத்துக்கொண்டிருந்த போது “உருவகக்காதல் வழி தெய்வக் காதலைச் சொல்லும் படம்” என்று அப்படத்தை புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் மின்னல் வெட்டாக தோன்றி மறைந்தது. படத்தை இன்னொரு முறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்தப் புரிதலை சரி பார்த்து விட முடியும் என்றிருந்தேன். அந்த வாய்ப்பு நேற்று அமைந்தது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்.

    +++++

    எதிர்பாராத விபத்தில் காதலித்தவர் இறந்து போதல், திருமணம் நின்று விட்ட அதிர்ச்சியில் மரணப்படுக்கையில் தந்தை என ஒன்றன் பின் ஒன்றாக வாழ்க்கையின் அதிர்வுகளில் தனிமைப் பட்டுப் போன தானி (அனுஷ்கா ஷர்மா) தந்தையின் கடைசி ஆசைக்கிணங்கி சுரி (ஷாரூக் கான்) யைத் திருமணம் செய்து கொள்கிறாள். சுரி நல்லவன். சாதாரண வாழ்க்கை வாழ்பவன். அவன் ஹீரோ இல்லை. தூர நின்று அவளுக்கு வேண்டியதைச் செய்து பரிவு காட்டுகிறான். சுரிக்கு அவள் மேல் காதல். ஏனென்று கேட்டால் அவனுக்கு தானியின் முகத்தில் rabb (இறைவன்) தெரிகிறார். தானி அவன் உலகுக்குள் வந்த பிறகு இறைவனைக் கண்டால் தோன்றும் பரவச நிலையைப் போன்ற ஓர் ஆனந்த உணர்வை அவன் அடைகிறான். அவளுக்கு அவன் மீது காதல் இல்லை. அவனிடம் அன்பைக் காட்ட தன்னிடம் அன்புணர்வேதும் எஞ்சியிருக்கவில்லை என்று தானி சொல்கிறாள். சிறிது காலம் காத்திருந்தால் தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு பழைய தானியை அழித்துக் கொண்டு ஒரு புதிய மனுஷியாய் அவனுடைய மனைவியாய் வலம் வருவேன் என்கிறாள். சுரி காதலிப்பதோ பழைய தானியை ; அவள் ஏன் மாற வேண்டும்? அவள் மாறாமல் முன்னம் அவளுள் இருந்த உற்சாகத்துடன் வளைய வர வேண்டும் என்று விரும்புகிறான் சுரி. அவள் மேல் தனக்கிருக்கும் அன்பை பிரியத்தை வார்த்தைகளால் காட்டாமல் ஒரு விளையாட்டில் சுரி ஈடுபடுகிறான். தன்னுடைய முடியை திருத்திக் கொண்டு, இருக்கமான கால்சட்டை மாட்டிக் கொண்டு தானி நடனம் கற்றுக் கொள்ளும் இடத்துக்கு ராஜ் என்கிற பெயரில் செல்கிறான். உயிர் நண்பன் பாபியின் சலூனில் ராஜின் மேக்-அப்பை போட்டுக்கொள்கிறான். சுரியின் மனசாட்சி போல கூடவே இருந்து துணையாகவும் அவனுடைய நெஞ்சின் குரல் போன்றும் வருபவன்  பாபி (வினய் பாடக்). சுரியின் குணங்கள் எதுவும் இல்லாமல் ஒரு Macho personality யாக, ஆட்டமும் உல்லாசமும் கேளிக்கையுமாக  தானியிடம் நட்பு கொள்கிறான். நட்பு வளர்கிறது. ராஜ் தான் சுரி என்ற உண்மை தானிக்கு தெரியவிடாமல் அவன் நாடகம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் ராஜ் அவளிடம் தான் காதலை தெரிவிக்கிறான். தானி சஞ்சலமுறுகிறாள். ராஜின் காதலை ஏற்பதா? அல்லது கணவர் சுரியுடனேயே இருப்பதா என்ற  குழப்பம்! படம் நெடுக மூன்று முறை பொற்கோயில் வருகிறது. அங்குதான் வள் குழப்பத்துக்கு விடை கிடைக்கிறது. பொற்கோயிலின் குளத்துக்கருகே இறைவனை பிரார்த்தனை செய்தவாறு மூடியிருக்கையில் சுரியின் முகத்தில் இறை தெரிவதாக உணர்கிறாள். அவளை அழைத்துப் போவதற்காக வரும் ராஜிடம் “உன்னுடன் ஓடினால் சுரியிடமிருந்து சென்று விடலாம் ; ஆனால் இறைவனிடமிருந்து சென்றுவிட முடியுமா? சுரியின் முகத்தில் எனக்கு இறைவன் தெரிகிறான்” என்று சொல்கிறாள். படத்தின் இறுதிக்காட்சியில்  தானியிடம் சேர்ந்து ஆடுவதற்காக அழைக்கப்படும் ராஜின் இடத்தில் இப்போது சுரி. தானியிடம் சேர்ந்து சுரி ஆடுகிறான். தானிக்கு எல்லாம் தெளிவாகிறது.

    அன்பின் சமயமே இறைவனின் ஒரே சமயம் என்னும் பொருள் படும்மத்தபி இஷ்க்என்ற கருதுகோள் பாரசீக இலக்கியத்தில் நான்காம் நூற்றாண்டிலிருந்தே வலியுறுத்தப்பட்டு வந்தது. இரு வகை அன்பு அல்லது காதல் பற்றி பேசின சுபி இலக்கியங்கள்இஷ்க்ஹகிகி மற்றும் இஷ்க்மஜாஸி. முன்னது இறை மேல் கொண்ட காதல், பின்னது பிற உயிர்கள் மேல் கொண்ட காதல். பக்திக்காதலை அலசிய சுபி ஞானிகள் மனிதர்களின் பிற உயிர்களின் காதலை இறைக்காதலின் படிமமாக்கிக் கொண்டார்கள்.  கண்ணுக்கெட்டா இறைவனை கொடூரக் காதலி எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டார்கள் ;  காதலை வருத்தம் தரும் நோய் என வர்ணித்தார்கள். “ப்யார் ஏக் தர்த்” – “காதல் ஒரு வலிஎன்று தானி பல இடங்களில்  கூறுவதை படத்தில் பார்க்கலாம்.     

    தெய்வீகத்தைப் பேசுகையில் அழகை (“ஜமால்) காதலியின் முக்கியமானதொரு வெளிப்பாடாக சுபி ஞானிகள் சித்தரித்தார்கள். இது ஒரு பித்து நிலை. இந்த நிலையில் சில மனிதர்களை அவர்கள் தெய்வீகத்தின் மறுவடிவமாக ஏற்றிப் பார்க்கவும் செய்தார்கள். இஸ்லாமிய இறையியல் மறுக்கின்றஅவதாரம்என்ற நோக்கில் அவர்கள்  பார்க்கவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

    சுபி ஞானியின் பித்த நிலையை சித்தரிப்பாக சுரியின் முகத்தில் இறையைக் காண்பதாக தானி உணர்வதைக் கொள்ளலாம். இறைக்காதலை நாடும் சுபி தத்துவத்தின் படிமமாக மனிதக் காதலாகிய ராஜுடனான காதலை   நிராகரித்து இறைக்காதலின் படிமமாகிய சுரியுடனான காதலை உறுதி செய்யும் தானியின் இறுதித் தேர்வாகக் காண முடியும்.

    புல்ஹே ஷா, வாரிஸ் ஷா போன்ற சுஃபிக் கவிஞர்களால் ஞானிகளால் செறிவுற்றது பஞ்சாபி இலக்கியம். சுபிக் கருத்துகளின் தாக்கம்  சீக்கிய சமயத்திலும் விரவியிருக்கிறது. சுபியின் அடிப்படைக்  கருத்தான உண்மை ஒன்றே என்பதை குரு நானக் சீக்கியர்களின் புனிதச் சின்னமான “ஓர் ஓங்காரம்” என்ற எழுத்திலக்கத்தில் பதிவு செய்கிறார். சுபிக்களைப் போன்றே சீக்கியர்களின் வழிபாடும் இசையையொட்டியே அமைந்திருக்கிறது. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த செவ்வியல் பஞ்சாபி இலக்கியத்தின் முன்னோடியும் சுபி ஞானியுமாகிய பாபா பரீத்-தின் 112 ஈரடிகளை 4 செய்யுட்களை சீக்கிய மதத்தின் ஐந்தாம் குரு – குரு அர்ஜன் – புனித கிரந்தத்தின் அங்கமாக்கியதும் சுபி இஸ்லாமுடன் சீக்கிய மதத்துடனான நெருங்கிய கருத்தியல் தொடர்பைக் காட்டுகிறது.

    Rab ne bana di  jodi – படத்தில் பொற்கோயில் மூன்று இடங்களில் வருவதாக முன்னரே சொன்னேன். சலூன் காட்சிகள் அனைத்திலும் சுவரில்  தொங்கும் குருநானக்-கின் திருவுருவம் பின்னணியாக இருக்கிறது.

    பஞ்சாபி இலக்கியத்தின் ஷேக்ஸ்பியர் என்று கருதப்படும் வாரிஸ் ஷா சொன்னார்  :- “தெய்வக் காதலை சந்திக்கும் ஆத்மா என்ற இந்த ஒட்டுமொத்தக் குறிப்பு பெரும் ஞானத்தின் அடிப்படையில் சமைக்கப்பட்டிருக்கிறது” (Eh rooh qalboot da zikr sara nal aqal de mel bulaya ee)   

    தெய்வக்காதலை மனிதக்காதலிலிருந்து பிரித்துப் பார்க்கும் கண்ணை இன்னும் பெற்றிராத தானி வெறும் மீசையை மட்டும் எடுத்து விட்டு ராஜ்-ஆக மாறும் சுரியைக் கண்டு பிடிக்காமல் இருப்பது கதையின் நிகழ்த்து அம்சம்  என்பதை படத்தை முதல் முறை பார்த்த அன்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    என்னைப் பொறுத்த வரையில், இரண்டு – மூன்று காட்சிகளை நீக்கியிருந்தால் இந்தப்படம் இன்னும் சிறப்புற்றிருக்கும். சுமோ பயில்வானுடன் சுரி பொருட்காட்சியில் சண்டையிட்டு தானியைக் கவர நினைப்பது, பிறகு, தானி “Macho” அல்ல தான் நாடுவது என்று தெளிவுபடுத்துவது, இறுதியாக ஜப்பானில் தேனிலவு கொண்டாட சென்று வந்ததாக சுரி கொடுக்கும் நகைச்சுவை வர்ணனைகள் – இவையெல்லாம் தேவையற்ற காட்சிகள். ஜப்பான் சுற்றுலாவை விளம்பரம் செய்வதற்காக  ஸ்க்ரிப்ட்டை நீர்க்கச் செய்திருக்கவேண்டாம்!

    Rab ne

  • மரக்கோயில்

    IMG_2559
    Ta Prohm (an ancient Buddhist temple, nearer to Angkor Wat Complex in Cambodia, built during the reign of  Jayavarman VII). The major sequences of the Angelina Jolie starrer Lara Croft : Tomb Rider was shot here.  This temple is known among the tourists as Tomb Rider Temple.

    கோயிலில் இருந்த மரம்   

    தனக்குள் கோயிலை அடக்கி வளர்கிறது   

    பாம்பென வேர்கள் படர்ந்து  

    இறுகின சன்னிதிகள்

    காலியான சந்நிதானத்துள்

    பிரதிஷ்டை கொள்ள வேண்டி

    ஓடின வேரின் கீழ் நின்று

    புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்

    மரங்கள் கோயில்களுக்குள் புகுந்து

    கடவுளாகி மறைந்த பின்னர்

    சட்டகத்துள் வைத்து தொங்க விட

     

  • “எதற்காக எழுதுகிறேன்?”

    எதற்காக எழுதுகிறேன்?”

    நாயகன் திரைப்படத்தில் வேலு நாயக்கரின் பேரன் அவரிடம் “நீங்க நல்லவரா கெட்டவரா” என்று கேட்பானல்லவா? அப்போது வேலு நாயக்கர் சொன்னது போல “தெரியலியேப்பா” என்று தான் நான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

    இதற்கு முன்னரும் இந்த கேள்வி என்னுடைய சில நண்பர்களால் கேட்கப்பட்டது. ஒருவன் “என்ன அல்டெர்னெடிவ் கேரியரா?” என்று கேட்டான். “கேரியர்” என்றால் ஒற்றை ரூபாயாவது சம்பாதித்திருக்க வேண்டும். “எழுதறேன்னு சொல்லிட்டு ஒன்னோட வெட்டிச் செலவு தான் அதிகமாயிருக்கு!” என்று திருமதியார் சில முறை புலம்பி இருக்கிறார்.

    “ஆத்ம திருப்தி” என்ற ஒன்றா ? என்னுடைய எழுத்தில் எனக்கு திருப்தி கிட்ட வேண்டுமென்றால் பல தசாப்தங்கள் பிடிக்கும். இல்லை அவ்வளவு நிச்சயமாக சொல்லி விட முடியாது. “திருப்தி” என்பது நம் கையில் கிடைக்காமல், நழுவித் தப்பித்துப் போய்க் கொண்டிருக்கும் ஒன்று என்றுதான் நான் கருதுகிறேன்.

    “புகழ் பெற வேண்டும்” என்ற ஆசையா? ஆரம்ப காலத்தில் அப்படி இருந்திருக்கலாம்! முப்பது வருடங்களாக கடும் உழைப்பின் உதவியால் எழுத்துத்திறத்தின் உச்சியை என்றோ எட்டிவிட்ட சில எழுத்தாள நண்பர்கள் இன்னும் புகழடையாமல் இருப்பதைப் பார்க்கும் போது “புகழ்” என்ற ஒன்று கானல் நீர்த் தன்மையது என்பது விளங்குகிறது. ஒருவன் புகழை அடைவதற்கென சில ஆளுமை சார்ந்த குணாதிசயங்கள் தேவைப்படுகின்றன என்று எனக்கு தோன்றுகிறது. இணைய காலத்தில், சரியான நபர்களின் கண்ணில் பட்டு, விருப்பக் குறிகளும் கமெண்டுகளும் பெற்று சில கணங்களுக்குள் தற்காலிக ‘புகழை’ யார் வேண்டுமானாலும் அடைந்து விடலாம். ஜனத் தொடர்பு மூலோபாயங்களால் (கூகுள் மொழிபெயர்ப்பு நிரலியில் இன்று என்கண்ணில் பட்ட சொல்!) சில வாரங்களுக்கு சில மாதங்களுக்கு அல்லது சில வருடங்களுக்கு என “புகழில்” நிலை நிறுத்த வைக்கும்  ஜனத் தொடர்பு முகவர்கள் இருக்கிறார்கள். “புகழ்” என்பது வாங்கக் கூடிய பொருளாகிவிட்டது.

    “நான் மக்களுக்கு சில கருத்துகளைச் சொல்ல வேண்டும்” என்ற இலட்சியம்?…இந்த வாக்கியத்தைப் படிக்கும் போது யாரேனும் ஒருவருக்கு சிரிப்பு வராவிடில் அவரின் தமிழ் அரைகுறை என்று அர்த்தம்!

    பணம், திருப்தி, புகழ், இலட்சியம் – இவைகளெல்லாம் ஒருவரை எழுதத் தூண்டுகின்றன என்று உறுதியாக சொல்ல முடியாது. இறையருள், வரப்பிரசாதம் – என்றெல்லாம் சொல்லப்படும் விஷயங்களும் தொன்மங்கள் மட்டுமே.

    கவிதை எழுதுவதற்கும் ஒரு புது வாடிக்கையாளரைப் பிடிப்பதற்கும் அல்லது சிறுகதை எழுதுவதற்கும் மாதாந்திர விற்பனை இலக்குகளை அடைவதற்கும் அல்லது நாவல் எழுதுவதற்கும் இரண்டு வருடங்களில் விற்பனையை இரட்டிப்பாக்குவதற்கும்  அடிப்படையில் அதிக வித்தியாசங்கள் இல்லை. திறன்,  ஆர்வம் – இவற்றைப் பொறுத்தே சாதனைகள் அமைகின்றன.

    சலிப்பு அல்லது அலுப்பு? என்னைப் பொறுத்தவரை என்னை எழுத வைத்த காரணிகளில் (மற்ற காரணிகள் என்ன என்று கேட்டு விடாதீர்கள்) மிக முக்கியமானவை இவைதான். பல வருடங்களாக விற்பனைத் துறையில் ஈடுபட்டிருப்பதாலோ என்னவோ என்னை விட்டு நான் தூரமாகப் போகிறேன் என்ற எண்ணம் அடிக்கடி என்னை படுத்திக் கொண்டிருந்தது. அந்த எண்ணத்தை  நான் சலிப்பு  என்று தான் பெயரிடுவேன். இயங்கி வரும் துறையில் நான் கண்ட அபத்தங்கள் மற்றும் பாசாங்குத்தனங்கள் – இவைகள் தாம் அந்த சலிப்பை எனக்கு தந்ததாய் புரிந்து கொண்டேன். அந்த அபத்தங்களையும் பாசாங்குத்தனங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்ற உந்துதல் தான் என்னை எழுத்தை நோக்கித் தள்ளியது என்று சொல்லலாம்.

    மொழியை காதலிப்பவனுக்கு எழுத்தே “Orgasm” – என்று டிவிட்டரில் யாரோ எழுதியிருந்தார்கள்! உந்துதல், மொழி வாயிலாக எண்ணத்தை வெளிப்படுத்துவதில் கிட்டும் ஆனந்தம் – இவ்விரண்டுமே  எழுத்தின் அடிப்படை கட்டுமானத் தொகுதிகள்.

    அபத்தங்கள், பாசாங்குத்தனங்கள் – இவற்றை மட்டுமே எழுதுதல் எழுத்தை புலம்பல்களாக மாற்றிவிடுகின்றன என்பதை சீக்கிரமே புரிந்து கொண்டேன். புலம்பல் தன்மையை மீறிய ஒன்றை – ஒரு செய்தியை உணர்வை – பகிர்வதும் நல்ல எழுத்தின் இலக்கணம் எனப்  புரிந்தது. அந்தப் பகிரல் நீதிக்கதையின் தொனியில் கூறப்படாமல் அழகியல் துணை கொண்டு நுட்பத்துடன் கூறப்படவேண்டும். பகிரப்படும் செய்தி அல்லது உணர்வு மனிதநேயத்தை வலுவூட்டுவதாக இருக்க வேண்டும் ; சார்பு மற்றும் பாரபட்சங்களை விலக்கியதாகவும் இருக்க வேண்டும். இவையெல்லாம் நான் எழுதத் தொடங்கிய பிறகு கற்றுக்கொண்டவை.

    அடுத்தவரின் பார்வையில் ஒரு விஷயத்தைப் பார்ப்பது என்பது பயிற்சியின் பாற்பட்டது என்று எழுத ஆரம்பித்த பின் விளங்கியது. என்னுள்ளில் இருக்கும்  வலுவான விருப்பு வெறுப்புகளைக் களைவதில் எழுதும் பழக்கம் எனக்கு உதவி செய்கிறது.

    இதுவரை நான் எழுதியவற்றில் அதிகமும் பயணங்கள் பற்றிய கதைகள். பயணங்கள் தொடரும். பயணத்தின்  முடிவிலக்கு என்று ஏதும் கிடையாது. பயணத்தின் சுவையை அனுபவித்தலே நாம் அறிய வேண்டியது.

    நன்றி : பதாகை

  • புதுசு – கொஞ்சம் பழசு – ரொம்ப பழசு

    fan-6

    ஃபேன்

    பாலிவுட் தனம் கலந்திருந்தாலும் “Fan” ஒரு டெம்ப்லேட்-டில் அடங்கும் படமல்ல. படத்தின் பல்வேறு காட்சிகள் அற்புதமாக கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. சுருக்கங்கள் தோன்றிய கண்ணுக்குக் கீழான சதைப்பகுதியை தடவிப்பார்த்துவிட்டு “நட்சத்திரம்” என்னும் கட்டுக்கதையை நிகழ்த்துவதற்காய் மேடையை அணுகுதல், இரசிகர்கள் ஒருவரும் இல்லா அரங்கை மேடையிலிருந்து காணும் காட்சி, மேடம் டூசாடில் ஆர்யனின் பொம்மைக்கருகே கௌரவ் செய்யும் குழப்பத்தை சல்மான் கான் பொம்மை பார்த்துக் கொண்டிருப்பதாக காட்டுதல் என்று பல உதாரணங்கள். கௌரவ் – ஆர்யன் பாத்திரங்களுக்கிடையிலான உடல் மொழி வித்தியாசத்தை நுணுக்கமாக வெளிப்படுத்தி மீண்டும் “ஃபார்முக்கு” வந்திருக்கிறார் ஷாருக். இரசிகனிடமிருந்து தள்ளி ஓடும் நட்சத்திரம் ; இறுதியில் இரசிகனுடன் கட்டிடத்தின் விளிம்பில் தொங்கும் நட்சத்திரம். இரசிகன் மரணமடைந்ததும் நட்சத்திரத்தின் தொழில் வாழ்க்கை முடிந்து போவதாக காட்டியிருந்தால் நட்சத்திரம் – இரசிகன் இடையிலான இயங்கியலை சித்தரிக்கும் உருவகமாக அமைந்திருக்கும்.  பாலிவுட் ரகத்திலான  லண்டன், டுப்ரோனிக் நிகழ்வுகளை மாற்றி திரைக்கதையை வேறு மாதிரி செய்திருந்தால் “Fan” சிறப்பான படமாக இருந்திருக்கும்.

    1427865764_birdman-final-scene

    பேர்ட் மேன்

    நிக்கொலாய் கோகோல் 1836 இல் எழுதிய ரஷ்யச் சிறுகதை “மூக்கு” மிகப் பிரசித்தமானது. அரசாங்க அதிகாரி காவலோவ்-வுடைய மூக்கு ஒருநாள் காணாமல் போய் விடுகிறது. அது அவனுக்கு திரும்பக் கிடைத்தாலும் அவன் முகத்தில் பொருந்தாத அளவுக்கு அதன் அளவு பெரிதாகப் போய்விட்டது. பிறகு எப்படியோ மூக்கு அவன் முகத்தில் பொருந்திவிடுகிறது. இழந்து போன முக்கியத்துவம் திரும்பக் கிடைத்த நிம்மதி! கோகோலின் இந்தச் சிறுகதையின் பாதிப்பில் ஜப்பானிய சிறுகதை எழுத்தாளர் ர்யுனொசுகெ அகுடகவா “மூக்கு” என்ற தலைப்பில்  ஒரு சிறுகதை எழுதினார். அகுடகவா யார்?  இவர் எழுதிய இரண்டு சிறுகதைகளைப் பின்னிப் புனைந்து  திரைக்கதையாக்கித்  தான் அகிரா குரோசவா “ரஷமோனை” உருவாக்கி உலகப்புகழ் பெற்றுக் கொண்டார்.   கோகோலின் மூக்கு சிறுகதையில் வரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜார் மன்னராட்சிக் கால அரசாங்க அதிகாரியின் இடத்தை அகுடகவாவின் கதையில் மத்திய கால ஜப்பானின் பௌத்த மடாலய பிக்கு ஒருவர் நிரப்பி இருப்பார். அவர் மூக்கு விகாரமாக மிக நீளமாய் வளர்ந்திருக்கும். அதிகாரமும் கருவமும் மிகுந்த பிக்கு தன் மூக்கை சரி செய்து விட மிகவும் பிரயத்தனப்படுவார். அவருடைய உதவியாளன் ஒருவன் அசுர சிகிச்சை ஒன்றை செய்யும் போதும் அதை பொறுத்துக் கொள்வார். சிகிச்சைக்குப் பின்னால் அவர் மூக்கு சுருங்கி சரியாகிவிடும். எனினும் பிக்கு விகாரமாக இருந்த மூக்கை “மிஸ்” செய்வார். நல்ல வேளையாக அவர் மூக்கு தானாகவே பழையது மாதிரி ஆகி விடும். அதிகாரம் மற்றும் சமூக அந்தஸ்து – இவற்றின் அடையாளமாக இச்சிறுகதைகளில்குறிக்கப்படும் மூக்கு என்னும் படிமம் அலேஹான்றோ இன்யாரிட்டு இயக்கிய “Bird Man” படத்தின் இறுதியில் சுயமதிப்பின் குறியீடாக வருகிறது. தத்ருபமாக நடிக்கும் முயற்சியில் நாடகத்தின் இறுதிக்காட்சியில் உண்மை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு நடிக்கும் ரிக்கன் பாத்திரம் (நடிகர் மைக்கேல் கீட்டன் நடித்திருப்பார்) மூக்கை இழந்து விடும். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவனுக்கு மூக்கு திரும்பக் கிடைத்துவிடும். முகக்கட்டை அவிழ்த்து விட்டு கண்ணாடியில் தன் மூக்கை நோக்குவான் ரிக்கன். புதிதாக முளைத்த மூக்கை நோக்குவது போல அவன் பார்வையில் ஒரு பெருமிதம். அறையின் ஜன்னல் வழியாக வெளிக்குதித்து பறவை மனிதனாக அவன் பறந்ததற்கு அவன் புது மூக்கு தான் காரணமோ! கருடன் மூக்கு என்று சிறுவயதில் என்னைக் கேலி செய்த நண்பர்கள் என் நினைவில் வந்து போனார்கள்.

    Ugetsu

    உகேட்சு

    குரோசவாவின் சமகால இயக்குனர் மிசொகுச்சி. குரோசவாவின் “ரஷமோனைப்” போலவே மிசொகுச்சியின் “உகேட்சு”வும் மேலை நாட்டு திரைப்பட ரசிகர்களுக்கிடையே ஜப்பானிய திரைப்படங்களை பிரபலப்படுத்தியது. மௌனத்திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுவந்த 1923 இல் தன் திரைப்பட வாழ்வை துவக்கியவர் மிசொகுச்சி. தனது 58ம் வயதில் அவர் இறக்கும் போது கிட்டத்தட்ட 75 திரைப்படங்களை அவர் இயக்கியிருந்தார். குரோசவா, யசுஜிரோ ஒசு – இவர்களோடு சேர்த்து மிசொகுச்சியும் ஜப்பானிய சினிமாவின் மும்மூர்த்திகளில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். அகினாரி என்னும் ஜப்பானிய எழுத்தாளரின் “உகேட்சு” எனும் நாவலின் ஒரு பகுதியே  உகேட்சு திரைப்படத்தின் அடிப்படை. மத்திய கால ஜப்பானில் நடப்பதாக சித்தரிக்கப்படும் நிகழ்வுகள் மக்கள் படும் அல்லலைப் பேசுவதாக இருக்கிறது ; வரலாற்று நிகழ்வுகளை மிகுபுனைவாக சித்தரிக்கும் பழக்கம் இல்லாதவர் மிசொகுச்சி. படத்தில் வரும் இரு ஆண் பாத்திரங்களின் பொறுப்பற்ற சாகசவுணர்வு அவர் தம் மனைவியருக்கு எத்தகைய கஷ்டங்களை ஏற்படுத்தின என்பது தான் கதை முடிச்சு. நிலப்பிரபுத்துவ உலகின் வாழ்க்கை எத்துனை துன்பகரமானது என்பதை உகேட்சு காட்சிப்படுத்துகிறது. அதனாலேயே கதையின் ஆண் பாத்திரங்கள்  சில்லறைத் தனமாக  கனவுகளில் தம்மை அமிழ்த்திக்கொண்டு துன்பகரமான வாழ்வில் இருந்து தப்பிக்க வழி தேடுகிறார்கள். பெண் பாத்திரங்கள் ஜாக்கிரதையுணர்வுள்ளவர்களாக இருக்கிறார்கள். போர்க்காலத்தில் வியாபாரம் செய்து பொருள் குவிப்பேன் என்று அடம் பிடிக்கும் கதையின் நாயகன் கென்ஜூரோ மனைவியை குழந்தையை கிராமத்தில் விட்டுவிட்டு நகர சந்தையில் கடை விரிக்கிறான். சந்தைக்கு வரும் ஒரு பணக்காரப் பெண்ணினால் கவரப்படுகிறான். அவளுடன் குடும்பம் நடத்துகிறான். பணக்கார மாது வகாஸா – வாக ரஷமோனில்  பெண் பாத்திரமாக நடித்த மச்சிகோ க்யோ நடித்திருக்கிறார். வகாஸா ஒர் ஆவி. இது புரிபட கென்ஜூரோவுக்கு சில காலம் ஆகிறது.  பேயிடமிருந்து தப்பி திரும்பி வரும் கென்ஜூரோவுக்கு கிராமத்தில் ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. அதிர்ச்சி வெளிப்படும்  கதையின் முடிவு கென்ஜூரோவின் பிராயச்சித்தமாக அமைந்து நம்மை நெகிழ்விக்கிறது.

    டோபே எனும் பாத்திரம் சமுராய் ஆகும் கனவில் மனைவியை நட்டாற்றில் விட்டுவிட்டு, சிரிப்பு போலிஸ் கணக்காய் ஒரு விபத்தென சமுராய் அந்தஸ்தை அடைந்து, பெருமிதத்துடன் தன் பரிவாரம் புடை சூழ ஒரு கெய்ஷா வீட்டுக்கு செல்ல அங்கு தன்  மனைவியை ஒரு கெய்ஷாவாக சந்திக்கும் கட்டம் நம்மை நெகிழ்விக்கும் இன்னோர் உச்சம்.  இச்சம்பவம் மிசொகுச்சியின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த ஒரு சோக சம்பவத்தின் தாக்கம் என்று சொல்கிறார்கள்.

    தச்சராக வேலை பார்த்த மிசொகுச்சியின் தந்தையின் சில பொறுப்பற்ற வியாபார முயற்சிகளால் வறுமைக்கு தள்ளப்பட்டது  அவரின் குடும்பம். அதன் காரணமாக மிசொகுச்சியின் சகோதரியை மிசொகுச்சியின் தந்தை ஒரு கெய்ஷாவுக்கு “தத்து” கொடுத்துவிட்டார். அந்த வலி மிசொகுச்சியின் வாழ்நாள் முழுதும் அவரிடம் எஞ்சியிருந்தது. அவர் தன்னுடைய  பல படங்களில் கெய்ஷா ‘தீம்’ஐ சித்தரித்ததன் காரணம் இது தான் என்று சொல்லப்படுகிறது.

    best-kenji-mizoguchi-films
    கென்ஜி மிசொகுச்சி

     

  • முதல் புத்தகம்

    சில இணைய இதழ்களில் வெளிவந்து பின்னர் இந்த வலைதளத்தில் வலையேற்றிய 23 சிறுகதைகளை காலச்சுவடு நிறுவனம் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது.

    பக்கங்கள் : 208
    விலை : ரூ 190

     

    Book Cover