பட்டுப்போன மரமொன்று
பரம சிவன் போல் தெரிந்தது
உயரமான மரத்தின்
இரு புறத்திலும்
இரு கரங்களென
பெருங்கிளைகள்
மேல் நோக்கி வளைந்த
இடப்புற கிளையின்
இறுதியில் பிரிந்துயர்ந்திருக்கும்
திரிசூலக் கிளைகள்
முன் நோக்கி வளைந்து
கண்ணில் படா தண்டத்தின் பிரிவில்
தொங்கும் கையென
வலப்புறக் கிளை
தண்டின் உச்சியில்
உருண்டைச் சிரத்தை நினைவு படுத்தும்
கொத்தான கிளைகள்
பறவைகள் காலி செய்துவிட்டுப் போன
கூடுகள்
சிரப்பாகத்திற்குக் கீழ்
சுற்றியிருந்தது ஒரு கொம்பு வீரியன்
சிவனே என்று
இருந்த மரத்தின் தலையில்
ஆகாய கங்கை வந்தமர்ந்து
கூடுகளில்
நீர் நிரம்பி வழிந்து
வேர்களை ஈரப்படுத்தவும்….
மரமெங்கும்
இலைகள் துளிர்த்தன
சிவனுருவை இழந்தது சிவமரம்
மரத்தடியில்
யானை வடிவத்தில்
கல்லொன்று முளைத்தது
அழகு மயிலொன்று
அன்றாடம் புழங்கியது
புதருக்குள்
குடிபெயர்ந்த கொம்பு வீரியன்
மறைவில் நின்று
தினமும் மயிலை பார்த்தது
சிவமரம்
Comments
2 responses to “சிவமரம்”
-
வணக்கம்…
http://jeevanathigal.blogspot.com/2013/07/blog-post_14.html மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…
தொடர வாழ்த்துக்கள்…
-
மிக்க நன்றி தனபாலன்

Leave a comment