வட்டம்

சிதறிய
மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு
ஓடி வந்த நாயொன்றின் மேல்
கல் வீசப்பட
அது வள்ளென்று குரைத்தவாறு
கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத
ஜாடியின் உள்ளிருந்து விழுந்து
சிதறிய
மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு
ஓடி வந்த நாயொன்றின் மேல்
கல் வீசப்பட
அது வள்ளென்று குரைத்தவாறு
கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத
ஜாடியின் உள்ளிருந்து விழுந்து
சிதறிய
மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு………
ஆரம்பம் எது முடிவெது
என்ற குழப்பத்தில்
ரங்கராட்டினம் போல்
ஒரு வட்டத்தில் இலக்கின்றி
சுழன்று கொண்டிருந்த அது என்ன?
எண்ணவோட்ட்மா? நினைவுப்பெருக்கா?.

சுழன்று கொண்டிருந்த எண்ணத்தை
அல்லது நினைவை
நேர்படுத்துவதற்காய்
இன்னொரு தளத்தில்
செலுத்தும் போது
இயந்திரக் கோளாறு
காரணமாக
விமானம் தரையிறங்குவதாக
அறிவிப்பு.
தரை தட்டும் முன்னர்
நீர் தட்டியது.
தலைகீழ் “ட” வடிவில்
விமானத்தின் சிறகுகள் வளைந்து
துடுப்பு போல இயங்கின
மூழ்காத விமானம்
நீரில் பேருந்தாக
அசுர வேகத்தில்,
வட்டப் பாதையில் ஓடியது
வட்டத்திலிருந்து குதிக்காமல்
கரையை அடைதல் சாத்தியமா?
பதற்றத்துடன் நகர்ந்த
காலத்துளிகளில்
மாமிசத்துண்டுகளை திண்ண வந்து
அடிபட்ட நாயின் அவஸ்தையுடனும்
கண்ணாடி ஜாடியுள்ளிருந்து
விழுந்த மாமிசத் துண்டுகள் போல
எல்லா திக்குகளில் சிதறியும்
ஒய்வற்று சுற்றியது.

சடக்கென விழித்தெழுந்தது உடல் பிரக்ஞை.
அடிவயிற்றில் ஒர் இறுக்கம்.
கழிப்பறை சென்று
விசையுடன் வெளிவரும் குழாய் நீரென
சிறுநீரை கழித்து ஆசுவாசமடைந்த பின்னர்
உறக்கத்தை நிம்மதியாய் தொடர்கையில்
உடல்பிரக்ஞை மீண்டும் மாயமாய் மறைந்து
சுழற்சிக்குள் நுழைந்து
வண்ணத்துப்பூச்சி உருவில்
ஒவ்வொரு மலராக
உட்கார்ந்து உட்கார்ந்து
நீள்வட்டப் பூப்பாதையில்
போய்க் கொண்டிருந்தது..

நன்றி : நவீன விருட்சம் (http://navinavirutcham.blogspot.in/2012/11/v-ganesh.html)

Comments

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.